Friday 31 July 2009

மறதி ஒரு வியாதி

நான் காசிநாதன் வந்து இருக்கேன், என்னை தெரியுதா உன் பால்ய தோழன் கல்யாணம் ஆகி போனவன் தான் அதற்கப்புறம் இந்த ஊருக்கு வரவே இல்லை என்னை தெரியுதா என்னை பாரு' 70 வயது காசிநாதன் தனது நண்பர் பூமிநாதனிடம் 45 வருடங்கள் கழித்து தன்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார்.

பூமிநாதன் 'எதையெல்லாம் எடுத்துட்டு போறாங்க, எதையெல்லாம் சொல்லிட்டு போறாங்க' என்றார்.

காசிநாதனை தனியாய் பூமிநாதன் மகன் சின்னச்சாமி அழைத்துச் சென்றார்.

'அப்பாக்கு நினைவு போய் மூணு வருசம் ஆச்சி பசிச்சா சாப்பிடவும், வெளியில வந்தா போகவுமா இருக்கார், யாரையும் அடையாளம் தெரியல வர்வங்களை போறவங்களை பார்க்கிறார், இப்போ பேசறதையே பேசறார். இவர் தான்னு அறிமுகப்படுத்தினா தலையை ஆட்டுறார் அப்புறமா வந்தவங்க திரும்பி வந்தாக் கூட யாருன்னு தெரிய மாட்டேங்குது சுத்தமா நினைவு இல்லை'

காசிநாதன் யோசித்தார்.

'டாக்டர்கிட்ட காமிச்சீங்களா என்ன சொன்னாங்க எப்ப இருந்து இப்படி ஆச்சு'

'அம்மா இறந்த மறு நிமிடமே தன்னோட நினைவை இழந்துட்டார், டாக்டர்ங்க அல்சைமெர் நோய்னு சொல்றாங்க வயசானவங்களுக்கு அதிகம் வர வாய்ப்பு இருக்காம் இதை எப்படி தீர்க்கிறதுன்னு தெரியலை அம்மாதான் நினைவுன்னு வாழ்ந்தவர்' என மனம் கரைந்தான் சின்னசாமி.

காசிநாதன் தனது இளம் வயது கதையை சொன்னார்.

'உங்க அப்பா மட்டும் இல்லைன்னா நான் இன்னைக்கு இந்த அளவுக்கு நல்லா வந்து இருக்க மாட்டேன், நான் நல்லா படிக்கிறேன்னுட்டு தான் படிக்காம அவர் வீட்டுல இருந்து பணம் வாங்கி என்னை படிக்க வைச்சார், கல்யாணத்தைக் கூட அவர்தான் என் வீட்டிலயும் பொண்ணு வீட்டிலயும் பேசி சம்மதம் வாங்கி முடிச்சி வைச்சார், நான் வேலை நிமித்தமா வெளியூர் போய் அப்புறம் அங்கேயே செட்டில் ஆகி இந்த மண் பக்கம் வரலை, யார் இவரை பாத்துகிறது இப்போ'

'நானும் என் பொண்ஜாதியும் தான். ஒ அவரா நீங்க நினைவு இருக்கறப்ப, அப்பா உங்களைப் பத்தி விசாரிப்பார் எங்கயும் யாருக்கும் தெரியல, எப்படி இருக்கானோனு சொல்லிக்கிட்டே இருப்பார், நீங்க எப்படி இத்தனை வருசம் கழிச்சி பார்க்க வந்து இருக்கீங்க' என்றான் சின்னசாமி.

சின்னசாமி கேட்ட கேள்வியில் தனக்கும் இந்த நோய் நோயாய் இத்தனை நாளாய் இல்லையெனினும் இருந்து இருக்கிறது என்று எண்ணி 'பூமி' என ஓடிச்சென்று காசிநாதன் பூமிநாதனைக் கட்டிக்கொண்டு கதறினார், காலம் கடந்து நன்றி நினைத்து...

நன்றி மறப்பவரை விடவா இந்த அல்சைமெர் நோய் கொடியது?

இந்த அல்சைமெர் நோயானது நமது மூளையில் ஏபி - 42 என்னும் புரோட்டினானது ஒழுங்காக மடிய முடியாமல் அரைகுறையாய் மடிந்து பீட்டா சீட்டுகளைப் போன்று படிந்து பின்னர் பைபர்களாக மாறி படிமமாய் படிவதால் நினைவானது இழக்கப்படுகிறது. இதற்கு அலுமினியம், இரும்பு போன்ற 3 சார்ஜ்கள் கொண்டவைகளால் இருக்கலாம் என மருத்துவம் தெரிவிக்கிறது ஆனால் உறுதிபடுத்த முடியவில்லை.

ஏ பி - 42 புரோட்டினை தனியாய் நரம்பு செல்களுடன் சேர்த்து செய்த ஆராய்ச்சியில் அந்த நரம்புகள் செல்கள் மடிந்தன, ஆதலினால் இந்த புரோட்டின் இவ்வாறு ஆகாமல் எப்படி காக்கலாம் எப்படி திருப்பலாம் என மருத்துவம் முயல்கிறது.

ஒருவேளை ஆராய்ச்சி வெற்றி பெற்றால் பூமிநாதன் நினைவு திரும்பி காசிநாதனை இனம் கண்டு காசிநாதனின் புகழ்மிக்க வாழ்க்கையினை கண்டு பெருமிதம் அடையலாம். பலன் எதிர்பாராமல் செய்த உதவியல்லவா!

----முற்றும்----

ஏ(எ)துங்க மகிழ்ச்சியான வாழ்க்கை - 3

ஒருவர் தங்களுடைய மனக்குறைகளைச் சொல்லும்போது அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பது குறித்து வருத்தப்படுவதை விட அவரது மனக்குறைகளைச் சொல்லி முடிக்கும்வரை அமைதியாக கேட்போம். இங்கே நீதிபதியாக இருப்பதை விட ஆறுதலான நபராகவே காட்சி அளிப்போம். அதன்காரணமாகவே அங்கே மனக்குறைகள் நீக்கப்பட்டு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வித்திடுகிறோம்.

காலப்போக்கில் நம்மைச் செலுத்துவது குறித்து ஒரு அறிஞர் சொன்னதை நினைவில் வைத்துக்கொள்வோம். இறந்த மீன் ஒன்றுதான் தண்ணீர் போன போக்கில் போகும், உயிர் வாழும் மீன் தண்ணீர் செல்லும் திசையை எதிர்த்துக் கூட நீச்சல் போடும் வல்லமை உடையது. அதனதன் பாட்டுக்கு போவோம் என்கிற மனப்பான்மையைக் கைவிட்டு விடுவதன் மூலம் மகிழ்ச்சி நிலையாய் நிற்கும் வாழ்க்கையை வாழ இயலும். அதே வேளையில் உணர்ச்சியுள்ள மனிதனுக்கு எல்லா உணர்வும் பொது என்பதை நினைவில் நிறுத்துவோம்.

நான் உண்மையாக மட்டுமே இருப்பேன் என மொத்த மகிழ்ச்சியையும் தொலைத்துவிட வேண்டாம். பல வேளைகளில் எது உண்மை எது பொய் என எவராலும் அத்தனை எளிதாக நிர்ணயித்துவிட முடிவதில்லை. மொத்தத்தில் பாகுபாடு பார்க்கும் எண்ணத்தினாலேயே மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது எட்டாத ஒன்றாக இருக்கிறது.

விவேகாநந்தரின் கூற்றினை நினைவில் நிறுத்துவோம், ஒரு கல் அதன் அளவில் கல்லே! அதை ஆராய்பவரின் கண்ணுக்குக் கல் பலவித கோணங்களை பெற்றுக்கொள்வது போல் தோற்றமளிக்கிறது. ஒரு பொருளின் தனித்தன்மையை எந்த ஒரு ஆராய்ச்சியினாலும் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாது, அந்த பொருள் அதன் தனித்தன்மையை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும்போதே இழந்துவிடுகிறது.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முக்கியம் தேவையோ தேவையற்றதோ விளக்கங்களைச் சொல்லி விளங்கப்படுத்திக்கொண்டிருப்பது அல்ல, விளக்கங்களை ஏற்றுக்கொள்வதுடன் தேவையோ தேவையற்றதோ விசயங்களைச் சலிப்பற்று செய்துகொண்டு வாழ்ந்திருப்பதேயாகும். எப்பொழுது ஒன்றை மறுக்க ஆரம்பிக்கிறோமோ அப்பொழுதே மகிழ்ச்சிக்குத் தடை விதிக்கிறோம். மறுக்காமல் மாற்றுவழி ஒன்றைத் தேடுவதே மகிழ்ச்சிக்கானப் பாதையாகும்.

பச்சோந்தியைக் குறை கூற வேண்டாம். பச்சோந்தியாக உயிரினங்கள் இல்லாது போயிருந்தால் உலகத்தில் ஏற்பட்டச் சூழ்நிலை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு மரபணுக்களில் மாற்றம் ஏற்படுத்தி இன்றைய மனிதன் நிலைக்கு உயிரினங்கள் முன்னேறியிருக்க வாய்ப்பு இல்லை. எல்லா உயிரினங்களும் போராடுவதையே மகிழ்ச்சியாகக் கொண்டிருக்கிறது. போராட்டத்துக்குப் பின்னர் மகிழ்ச்சியாக காலத்தைச் செலவழிக்கிறது. டார்வினின் தத்துவப்படி சூழ்நிலை, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வாழும் உயிரினங்களே வாழ்க்கையில் வெற்றி கொள்கின்றன அதன் சந்ததிகள் வளர்ச்சியடைகின்றன.

மகிழ்ச்சியைப் பற்றி எழுதத் தொடங்கி கவலைகளையே முன்னிறுத்திக் கொண்டிருப்பது போன்றுச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் ஏதுங்க மகிழ்ச்சி? எனவேத் தேவையின்றி ஆராய்ந்து கொண்டிருப்பதை விட ஒருவருக்கொருவர் உதவியுடன் இருப்பதே மகிழ்ச்சியான வாழ்க்கையாகக் கருதப்படுகிறது.

கவிதை காலப்போக்கில் இலக்கணங்களை இழந்துவிடுமா?

கவிதைக்கான இலக்கணங்கள் என்ன எனத் தெளிந்துகொண்டால் இழப்பும், இழப்பாகாது இருப்பதும் அறியத்தகும். 'வெறும் வார்த்தைகள்' என தமிழ் இலக்கணம் ஏதும் அறியாமல், தெரிந்து கொள்ளவும் முயற்சிக்காமல் ஒரு கவிதைப் புத்தகம் வெளியிடும் நிலைக்கு வந்துவிட்ட எனக்கு இந்தக் கேள்வியைப் பார்த்ததும் கவிதை என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திற்கும் புதிய இலக்கணங்களை வரையறுத்துக் கொண்டது என சொல்லத் தோன்றுகிறது, ஆனால் அது ஒப்புக்கொள்ளக் கூடிய விசயமல்ல.

வாழ்க்கை என்றால் இப்படித்தான் என ஒரு இலக்கணம் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கணம் வைத்துக்கொண்டு வாழ்வதைப் போல கவிதைக்கு என இலக்கணங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கணம் என ஆகிப்போனதில் அதிசயமில்லை. ஆனால் உண்மையிலேயே கவிதைக்கு இலக்கணம் அவசியமா? அவசியம், அநாவசியம் என்பது எழுதுபவரைப் பொருத்து அமைகிறது எனும் நிலைக்கு கவிதைத் தள்ளப்பட்டுவிட்டது. மருத்துவர் தொழிலை ஒரு பொறியியல் படித்தவர் செய்வது போல! எவர் எத்தொழில் வேண்டுமெனில் செய்யலாம் எனில் எதற்கு முறையான படிப்பு என வந்தது? இது இருக்கட்டும்.

கவிதை என்றால் என்ன எனக் கேட்டால்

நீ பேசும் வார்த்தையெல்லாம் கவிதை - அட
நீ பேசாத வார்த்தைகளும் கவிதை

என எழுதும் வல்லமையை கவிதை என்று சொல்லிக்கொண்டால் எல்லாமே கவிதைதான்! எல்லாமே கவிதை எனும்போது அதற்கு ஏது இலக்கணம்!

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை கவிதைக்கான இலக்கணம் என்று கூறி

உள்ளத் துள்ளது கவிதை
இன்ப உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்
உண்மை தெரிந்துரைப்பது கவிதை

என பாடியிருப்பது பலருக்குத் தெரிந்திருந்தால் தாங்கள் எழுதும் பலவிசயங்களை கவிதை எனச் சொல்லமாட்டார்கள். எழுத்துக்கும் வார்த்தைக்கும் இலக்கணம் உண்டு அதுபோல கவிதைக்கும் இருக்கிறது. 'நாளை நான் சாப்பிட்டேன்' எனச் சொன்னால் ''நாளை நான் சாப்பிடுவேன்' எனச் சொல்லித் திருத்தலாம். கவிதையில் எது சரி, எது சரியில்லை என யார் சொல்லித் திருத்துவது.

செய்யுள் வடிவாக இருந்த தமிழ் மொழிக்கு தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என இலக்கணம் வகுத்தது. 'யாப்பெருங்கலக் காரிகை' கவிதைக்குரிய இலக்கணம் பற்றி எடுத்தியம்புகிறது. எதுகை, மோனை, சீர், அணி, அடி, தொடை, தளை, குற்றியலுகரம், குற்றியலிகரம், அளபெடை என பலவகையான விசயங்களை அறிந்து வைத்துக்கொண்டே கவிதை எழுத வேண்டுமெனில் இவையெல்லாம் இல்லாது எழுதப்பட்டவைகள் எல்லாம் வெறும் வார்த்தைகளே எனத் தைரியமாகச் சொல்லலாம்! கவிதையில் இனிமையைத் தருவது எதுகையும் மோனையும் எனச் சொல்வார்கள். எதுகையையும் மோனையையும் மட்டுமே வைத்து எழுதப்பட்டவை இலக்கணம் உள்ள கவிதை என்பது எப்படி சொல்ல இயலும்.

அறிஞர் அண்ணா எழுத ஆரம்பித்துச் சொல்கிறார்

பாடுகிறான் அண்ணன் ஓர் கவிதை என்று
பரிவாலே எண்ணிடாதீர் உடன் பிறந்தாரே!
சீர் அறியேன், அணி அறியேன், சிந்தை உந்தும்
செய்தி தனைத் தெரிவித்தேன்; ஆசையாலே.

இதுதான் உண்மை. தமிழ் இலக்கணம் ஏந்தி வருவதே கவிதை. ஆனால் நாங்கள் எழுதுவது கவிதை இல்லை, எழுதுவது புதுக்கவிதை எனச் சொல்லி எழுதினார்கள்.

//'கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத் தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர். ( அல்குர்ஆன், 26:224-226)//

//கவிதையில் உண்மை இருக்க வேண்டும். கவிதை என்ற பெயரில் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுப் பொய்யையும் புனைச் சுருட்டையும் சேர்த்து இட்டுக்கட்டக்கூடாது. கவிதையின் இலக்கணம் அதன் ஒவ்வொரு வாசகத்திலும் உண்மை பொதிந்திருக்க வேண்டும். இதையே இஸ்லாம் விரும்புகின்றது. புனைவுக் கவிதைகளில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கும் கவிஞனின் வயிறு கவிதையால் நிறைந்திருப்பதைவிட சீழ் சலத்தால் நிறைந்திருப்பது எவ்வளவோ மேல் என்ற கருத்தைச் சொல்லிக் கண்டிக்கிறது இஸ்லாம். அவ்வாறான கவிதைகளையும், கவிஞர்களையும் விட்டு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும்'' நன்றி: சத்தியமார்க்கம் இணையதளம்.//

//கவிதை, மனிதர்களுடைய வாழ்வில் ஏற்படும் இன்ப, துன்பங்களையும் அனுபவங்களையும் நன்கு எடுத்துக்காட்டுகின்றது; மேற்கண்ட அனுபவத்தால் ஏற்படும் சுவைகளையும் உண்மையான உணர்ச்சியோடும், இயல்பான தன்மையோடும் எடுத்து இயம்புகின்றது. எனவே கவிதையில் கருத்து, கருத்துக்கு உயிரூட்டும் உணர்ச்சி, கற்பனைச் செழுமை, பொருள் புலப்பாடுக்குரிய ஏற்ற வடிவம் ஆகிய நான்கும் இன்றியமையாதவைகளாகும். நன்றி: (டாக்டர்.சி.பாலசுப்பிரமணியன்)//

//சோகமோ, வீரமோ, காமமோ, காதலோ, எந்த உணர்ச்சியாக இருந்த போதிலும் கூட அது நல்ல உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு, வார்த்தைகளால் வடிவமைப்பதுதான் கவிதை. எனக்கு தெரிந்து கவிதைக்கு இலக்கணம் வரையறுக்கப்படக்கூடாது. கவிதைக்கு இலக்கணமே இல்லை என்கிற போது, கவிதை என்பதற்கு என்ன இலக்கணம் என்று கேட்பது இன்னும் பிற்போக்காக அமையும். எனவே கவிதை என்பது காலந்தோறும் மாறிக் கொண்டே வருகிற விஷயம். நன்றி: வைரமுத்து//

காலப்போக்கில் கவிதைக்கு இலக்கணமே தேவையில்லை என சமுதாயம் அறிவுறுத்தப்பட்டது. உண்மையில் கவிதை தமிழ் இலக்கண வடிவத்தைத் தொலைக்கவில்லை. இழக்கப் போவதுவமில்லை. எழுதுபவர்கள் இழந்துவிட்டார்கள், தொலைத்துவிட்டார்கள். கற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். கவிதை எழுதத் தெரியாது போனார்கள். எனவே இவர்கள் எழுதுவதை இனிமேலாவது கவிதை எனச் சொல்லாமல் இருந்தாலே போதும். ஆக இழப்பு நமக்குத்தானேயன்றி தமிழ் கவிதைக்கு அல்ல. மேலும் செய்யுள், பா போன்றவை கவிதை வடிவம் கொண்டதாக கருதுபவர்களும் உண்டு. செய்யுள் பா போன்றவைகள் கவிதைக்கான இலக்கணம் இருந்ததை மறுக்க இயலாது. இது தமிழ் மொழிக்கும் பொருந்தும்.

பல விசயங்களைத் தொலைத்து நிற்கும் சமுதாயமாகவே எல்லா விசயங்களிலும் மாற்றம் என மாறிக்கொண்டேயிருக்கிறோம். இந்த மாற்றம் அழிவின் பாதைக்கா? ஆக்கப் பாதைக்கா? என்பதை நாளைய சமூகம் குறித்துக்கொள்ளட்டும்!


எதுங்க மகிழ்ச்சியான வாழ்க்கை? - 2

எப்படி மகிழ்ச்சியாய் இருப்பது எனும் சிந்தனையிலேயே பலரின் பொழுதுகள் கவலையாகவேப் போகிறது. இணையதளங்களில், வலைப்பூக்களில் எல்லாம் பார்த்தீர்களேயானால் மகிழ்ச்சியாய் இருக்க முப்பது வழிகள் என வரிசையாகச் சொல்லப்பட்டு இருக்கும். அதைப் படிப்பவர்கள் மனதில் 'அடப்பாவிகளா, இத்தனையும் எப்படி ஞாபகம் வைச்சிட்டு செய்றது' என்கிற கவலைப் பிறக்கும்.

நாம் என வரும்போதே நமது உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள், நம் மண், நம் தேசம், எதிர் மண், எதிர் தேசம் என எல்லாமே அடங்கிவிடும். ஒரு விசயம் நடப்பது குறித்து 'எனக்கென்ன வந்துவிட்டது' என வாய் சொல்லும்; ஆனால் மனம் அதனையேச் சுற்றிக்கொண்டு வரும்.

'கவலை இல்லாத மனிதன்' எனும் திரைப்படத்தை எடுத்துவிட்டு, அந்த திரைப்படம் படுதோல்வி அடைந்துவிட்டதால் கண்ணதாசன் அந்த கவலையிலிருந்து மீள பலநாட்கள் ஆகிவிட்டது எனக் குறிப்பிட்டு இருந்ததைப் படித்தபோது கவலையில்லாமல் இருக்க வேண்டும் எனும் முனைப்பே பலருக்கு கவலையைத் தந்துவிடுகிறது போலத் தெரிகிறது.

ஒருவரிடம் சென்று உங்களுக்கு வியாதி இருக்கிறதா எனக் கேட்டார் ஒரு நபர். அதற்கு ஆம் எனக்கு வியாதி இருக்கிறது எனச் சிரித்துக் கொண்டேச் சொன்னார் அவர். என்னது வியாதி இருக்கிறது எனச் சிரித்துக் கொண்டேச் சொல்கிறீர்கள், வியாதி வந்தால் விரைவில் செத்துப் போவீர்களே என கவலையுடன் அந்த நபர் சொல்ல, வியாதியில்லாதவனும்தான் விரைவாகச் செத்துப் போகிறான் எனச் சிரித்தார் அவர்.

பிறக்கும்போதே எப்படியும் ஒருநாளேனும் ஒருநாள் இறந்துவிடுவோம் என்கிற அடிப்படை உணர்வு கூட இல்லாமல் எப்படி மனிதர்களால் வாழ முடிகிறது. அடிப்படை உணர்வும் உண்டு, அதற்கான கவலையும் உண்டு.

தங்களது வாழ்க்கையினை ஒரு தினமேனும் வெறுக்காத மனிதர்கள் என இந்த உலகில் இருக்கவே இயலாது. 'என்னது இப்படியொரு அற்பத்தனமான விசயத்துக்காக உயிரைப் போக்கிட்டார்' என அசாத்தியமாகப் பேசும் மனிதர்கள் அதே அற்பத்தனமான விசயத்துக்காகக் கவலைப்படாமல் இருப்பதில்லை.

'வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல் தருவேன்' என்கிற வாசகத்தைப் பார்க்கும்போதெல்லாம், நமது துன்பத்திற்கு நாமே காரணம் என்கிற எண்ணம் ஏன் மனிதர்களுக்கு இல்லாமல் போனது, பிறிதொருவர் தீர்த்து வைப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஏன் ஏற்பட்டது. ''சாய்வதற்கு ஒரு தோள்/தோழன்/தோழி வேண்டும்'' என்கிற மனப்பக்குவம் உடையவர்களாகவே மனிதர்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கினார்கள். அங்கேதான் மகிழ்ச்சியைத் தொலைக்கவும் செய்தார்கள்.

Thursday 30 July 2009

இனிய உறவுகள்

'அம்மா ! அம்மா...........'
அழுகையுடன் ஓடி வந்தான் பத்து வயது சிறுவன் அன்பு.

அழுகையை கண்ட அம்மா
'என்ன......... என்ன ஆச்சு '
என அடுப்பங்களையில் இருந்து ஓடி வந்தாள்.

'என்னோட காரை எடுத்துட்டு சீராம் தர மாட்றான்மா'

'ஓ.......
உனக்கும் அவனுக்கும் மூணு நாளா இதே வேளையாப் போச்சு.
இதுக்கா அழுவாங்க
இரு வாங்கி தரேன்'

'காரை தாப்பா'
அம்மா எட்டு வயது சீராமிடம் கேட்க
தர மனம் இல்லாவிட்டாலும்
புரிந்து கொண்டு அவனும் தந்துவிட்டான்.

காரை பெற்றுக் கொண்ட சந்தோசத்தில் அன்புவின் அழுகை மறந்தே போனது.

சீராம் வெகு நேரமாக ஏக்கத்தோடு அன்புவின் காரை பார்த்துக் கொண்டே இருந்தான்.

ஆனாலும் இந்த முறை சிறீராமுக்கு அன்புவின் காரை பறிக்கத் தோணவில்லை.

மாறாக இம்முறை அன்புவிடம் சிறீராம்
'நான் கொஞ்சம் விளையாடிட்டு தரட்டா'
என்று கேட்டான்.

'இந்தா
அஞ்சு நிமிசத்தில தந்துரனும்'

சரியென வாங்கி விளையாடிய அன்பு
ஐந்து நிமிடம் முன்னராகவே சிறீராமின் காரை திருப்பிக் கொடுத்து விட்டு
வீட்டுக்கு போவதாக கூறி வந்துவிட்டான்.

'அம்மா எதுக்குமா சீராம் என் காரையே பறிக்கிறான்?'

அன்புவின் மனதுக்குள் எழுந்த வினாவுக்கு
அவன் அம்மாவிடம் விடை தேடினான்.

'அவனுக்கு அவங்க வீட்டுல கார் வாங்கி தர காசு இல்லப்பா'

அன்பு மெளனமாக திரும்பி சிறீராம் சென்ற திசையை நோக்கி பார்வையை செலுத்தினான்.

அவன் பார்வையில் சிறீராம் தென்படவில்லை.

மனதுக்குள் எதையோ நினைத்தவனாய்
அவன் அறைக்குள் நுழைந்தான்.

தனது வீட்டில் இருந்த தேவைக்கு அதிகமான நல்ல கார்கள் எல்லாம் அவன் கண்ணில் பட்டது.

தனது தேவைக்கு அதிகமான கார்களையும் , கூடவே தான் படித்த மூன்றாம் வகுப்பு புத்தகங்களையும் கையிலெடுத்துக் கொண்டு வெளியேறினான்.

'எங்க கடையில போடப் போறியா'

'இல்லம்மா சீராமுக்கு தரப் போறேன்'
என்றவாறு சிறீராமின் குடிசையை நோக்கி நடந்தான்.

அன்புவின் அம்மாவின் மனது
பேருக்கேத்த புள்ள என்று பெருமைப்பட்டது.

அவளும் அவனோடு சேர்ந்தே நடந்தாள்.
அன்பு அம்மாவோடு சிறீராமை தேடிச் செல்லும் போது
சீராம் தன் குடிசை வீட்டின் முற்றத்தில் அம்மாவுடன் சேர்ந்து முற்றத்து மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டு இருந்தான்.

அன்பு
அம்மாவின் உதவியுடன் புத்தகங்கள் கார்கள் எல்லாம் கொண்டு வந்து சீராமிடம் தந்தான்.

அவற்றில் புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டான் சீராம்.

'கார் வேணாம்?'

ஊகும்!
வேண்டாம் என்று தலையாட்டினான்.

வீட்டில் இருந்த மோர் கொண்டு வந்து அவர்களுக்கு தந்தார் சீராம் அம்மா.

அம்மாவுடன் திரும்பும் போது தான் கொண்டு சென்ற கார்களுடனே திரும்பினான் அன்பு.

மறுநாள் இருவரும் சேர்ந்தே விளையாடினார்கள்.

இம்முறை சீராமுக்கும் சேர்த்து கார் எடுத்துச் சென்றான் அன்பு.

முற்றும்

எதுங்க மகிழ்ச்சியான வாழ்க்கை? - 1

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது அவரவர் மகிழ்ச்சியாக இருப்பது.

நான் என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்குக் காரணம் பிறரது கஷ்டங்களை முன்னிறுத்த மாட்டேன். மேலும் அடுத்தவர் கஷ்டங்கள் குறித்து அநாவசியமாக கஷ்டப்பட்டுக் கொண்டும் இருக்கமாட்டேன். தீர்க்க முடிந்தால் தீர்ப்பேன், இல்லையெனில் எனது மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வேன்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுபவன் இல்லை நான், வாடிய பயிரைக் கண்டபோது தண்ணீர் ஊற்றி மகிழ்ந்திருப்பவனே நான்.

மகிழ்ச்சியாய் இருப்பது என்பது மனிதர்களுக்கு இயலாத காரியமாக இருக்கிறது. ஏதாவது ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய கவலையில் மனிதர்கள் தங்கள் பொழுதுகளை இழந்துவிடுகிறார்கள்.

நகைச்சுவையாகச் சொல்வார்கள், ''பிரச்சினைகளே எனக்கு இல்லையே, என்ன வாழ்க்கை இது'' என கவலைப்பட்டுக் கொண்டிருந்தாராம் ஒருவர்.

மகிழ்ச்சியாக இருக்கனும்னா சன்னியாசம் போ என குடும்பஸ்தர்களைச் சொல்வது போல, மகிழ்ச்சியாக இருக்கனும்னா குடும்பஸ்தனா போ என சன்னியாசிகளும் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அக்கரை இக்கரை எனும் அக்கறை அனைத்து மனிதர்களுக்கும் உண்டு.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது இதுதான் என சில விசயங்களை வரையறுப்பது என்பது தவறாகவே முடியும். எதிலும் ஆரம்பத்தைப் பார்க்காதே முடிவைப் பார் என வட்டார மொழி ஒன்று வழக்கத்தில் உண்டு.

உண்டியலுல காசு போடறுதுக்குப் பதிலா?! என்னாது!

கோவிலுக்கு எனப் பணத்தைச் செலவழிக்கிறோம், மக்களை மறந்துவிட்டோம், முக்கியமற்ற செய்திகளை நாளேடுகள் வெளியிடுகின்றன எனும் செய்திக்கு என்னுள் எழுந்த வினாக்கள் இவை.

1. நாம் குடியிருக்கும் வீடு மூன்று குடும்பங்களுக்கு தங்க வைத்துக் கொள்வதற்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக பண வசதியின்றி வீடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு வாடகை வாங்காமல் வீட்டில் தங்க வைத்திடும் தைரியம் எவர்க்கேனும் உண்டா? (எனக்கு இல்லை!)

2. கடவுளைப் பற்றி காராசாரமாக விவாதிக்கும் நாம் நமது குடும்பத்தில் நடக்கின்ற விசயங்களை (உண்டியல் போடுவது முதற்கொண்டு அனைத்து விசயங்களைச் சொல்கிறேன்) நம்மால் தடுத்த நிறுத்த இயலுமா? (என்னால் இயலாது காரணம் நம்பிக்கை கொண்டவர்களை புண்படுத்தும் பழக்கம் என்னிடம் இல்லை).

3. எதற்கெடுத்தாலும் ஆலயங்கள், வருமானம் என பேசுகிறோமே இப்படியெல்லாம் நடக்கிறதே என அலுத்துக் கொள்கிறோமே, நமது வீட்டில் நாம் சாப்பிடும் சாப்பாடுடன் இன்னும் பலருக்கு சாப்பாடு போட்டு அவர்களை வாழ்வில் முன்னேற வழிவகுக்கும் திறமை இருந்தும் நாம் செய்கிறோமா? (நான் செய்வது இல்லை, செய்ய வேண்டிய அவசியமும் இல்லை)

4. நாளிதழ்களின் பணி அவர்களுக்கு வருமானம் வேண்டும் அதன் காரணமாக பிரபலங்களை, மக்கள் கவரும் விசயங்களை (எதுவேண்டுமெனினும்) வெளியிட்டு கொள்கின்றன, ஆனால் இப்படி வெளியிடுகிறார்கள் என புறக்கணிக்கும் சக்தி உண்டா? ஓசிப் பேப்பராவது படிக்கிறோமே? (இங்கு ஓசி பேப்பர்கள் அதிகம் வெளியிடப்படுகிறது)

5. சமூக நலத்திட்டம் , சமூக நலத்திட்டம் என பேசும் நாம், நமது வீட்டினைச் சுத்தமாக நமது எண்ணங்களை சுத்தமாக வைத்து கொள்கிறோமா? சரி கோவில்களுக்கு வந்த பணத்தில் தான் கோவில்களுக்கு செலவழிக்கிறார்கள், நிதி என கேட்டு வந்தால் தராமல் இருந்து விடுங்கள், யாரும் வற்புறுத்தி எந்த கோவிலும் வருமானம் சேர்த்துக் கொண்டதாய் இல்லை. நமது வீட்டை அலங்காரப்படுத்தும் பணத்தில் தெருக்களை சீரமைக்கும் சக்தி நமக்கு உண்டா?

6. அறநிலையத் துறை மட்டும்தானா அடித்தட்டு மனிதர்களின் வளர்ச்சிக்குத் தடை? பணக்காரனாக நாம் இருந்தால் அடித்தட்டு மனிதரின் நிலை குறித்து கவலைப் படக் கூட நேரம் இருக்காது காரணம் இன்னும் பணம் வேண்டும் என்ற ஆசை. நமது தேவைகள் பெரும் தேவைகளாக இருக்கும்.

7. மடாபதிகளும் ஆத்திகர்களும் மக்கள் இல்லையா? அவர்களை இப்படி ஒதுக்கி வைத்துப் பார்ப்பதே பெரும் குற்றமாகத் தெரியவில்லையா? இதுவும் ஒருவகையில் தீண்டத்தகாமையைச் சார்ந்தது.

8.நிரூபிக்கப்படாத கடவுள்? நாளை நாம் யார் என்பதை இந்த உலகம் மறந்து போகும் நம்மை எப்படி நிரூபிப்பது? ஆண்டாண்டு காலமாய் வழக்கத்தில் வந்து கொண்டு இருக்கும் அந்த ஒன்று இல்லாததாய் இருப்பினும் இருப்பதாய் உணர்வினை உரச வைக்கிறதே அதனை எதிர்க்கிறோம் என பேசுவது முரண்பாடாகத் தெரியவில்லையா? இல்லாமல் போகப் போகும் நமக்கு நாம் எவ்வளவு செலவு செய்கிறோம்? இதனை நியாயப்படுத்தினால் அதுவும் நியாயம் தான். ஆதங்கப்படுவதே நமக்கு வாடிக்கையாய் போய்விட்டது, முடிந்ததை செய்து அதன் மூலம் திருப்தி அடைவதுதான் வாழ்க்கை என்னும் ஒரு சின்ன தத்துவம் கூட நம்மால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை என்னும் பட்சத்தில் நமது பேச்சுக்கள் வியப்பைத் தரும்?

9. ஏழைக்கு உணவு தருதல் அல்ல வாழ்க்கை முறை, ஏழையை உணவு உற்பத்தி பண்ணச் சொல்லி அதன் மூலம் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதுதான் வாழ்க்கை முறை.

10. பணம் பணம் பணம் இதுதானே மூல காரணம், இதனை அழிக்க முடியுமா நம்மால்? இதனை ஒழிக்க முடியும் எனில் கடவுளை உணர்வது பற்றி உரைக்கிறேன். அப்படி முடியாது எனில் தயவு செய்து கடவுள்களை இம்சிக்காதீர்கள், பேதம் பார்க்காதீர்கள். காரணம் நமது மனித இனத்தை மதிக்கத் தெரியாத, மனம் குறுகிப் போன மனிதர்கள் நாம் என்பதை மறந்து போகாதீர்கள்.

Wednesday 29 July 2009

புத்தகம் வாங்கலையோ புத்தகம் - நான் கூவி விற்கும் பொருள் அல்ல!

ஒரு நாவல் எழுதி வெளியிடுவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல என்பதை உணர வைக்கும் சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். அன்புக்குரிய நண்பர் கிரி அவர்கள் என்னிடம் புத்தகம் அச்சடித்துத் தரும்போது சொன்னது இதுதான் 'வரவரைக்கும் லாபம்னு நினைக்க வேண்டியதுதான்'. அவரிடம் ஏன் நீங்கள் உங்கள் படைப்புகளை அச்சடித்து வெளியிடக்கூடாது என சொல்லும்போதெல்லாம் சிரித்துக்கொண்டே 'நம்மதை யார் படிப்பா, நாமளே படிச்சிக்கிற வேண்டியதுதான்' என்பார். இவரின் தன்னடக்கம் கண்டு வியந்து இருக்கிறேன். அவரது படைப்புகள் அனைத்தும் தரமிக்கவை என்பதில் எனக்கு எந்தவித ஐயமுமில்லை. ஆனால் 'தரம் வேண்டும் அல்லவா' என்பார். அவர் அன்று சொன்னது எனது நுனிப்புல் நாவலுக்கு எத்தனையோ பொருந்திப் போய்விட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது.

நுனிப்புல் தரம் உடையதா இல்லையா என்பதை வாசகர்களும் விற்பனையாளர்களுமே தீர்மானிக்கக்கூடும். அப்படிப்பட்ட தீர்மானம் என்னவென்பதை விமர்சனங்கள் மூலம் என்னால் யூகித்துக்கொள்ள முடியாமல் போனாலும் பலர் விமர்சனம் பண்ணாமலிருப்பது குறித்து ஒரு நண்பரிடம் நான் கேட்டபோது அவர் குறிப்பிட்டது இதுதான் 'உங்களை மனம் வருத்தம் அடையச் செய்ய வேண்டாம்னு நினைக்கிறாங்க'. நானும் மனதில் நினைத்துக்கொண்டேன் இதில் என்ன மனவருத்தம் அடைய வேண்டியிருக்கிறது என. விமர்சனங்கள் குறித்தோ விற்பனை குறித்தோ அத்தனை பெரிதாக கவலை கொள்ளவில்லை. ஆனால் பிறருக்கு சிரமம் தருவதே எனக்குப் பெரிய கவலையாக இருந்து வந்துள்ளது என்பதை அடிக்கடி குறிப்பிட்டு இருக்கிறேன்.

நண்பர் கிரி அவர்களை மிகவும் தொந்தரவு செய்துவிட்டேன் என்றே இன்றும் கருதுகின்றேன். முத்தமிழ்மன்ற பதிப்பகம் என அச்சிட்டது முதல் அவருக்கு நான் தந்த சிரமம் சற்று அதிகமே. ஆனால் அவர் பெருந்தன்மையுடன் இதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்லும்போதெல்லாம் இப்படியும் சகிப்புதன்மையுள்ள மனிதர்கள் இருப்பார்களா என வியந்து போனதுண்டு. எனது உறவினர் ஒருவரிடம் புத்தக விற்பனை குறித்து பேசி இருந்தேன், ஆனால் அவர் பல காரணங்களால் சில மாதங்கள் கழித்து முடியாது என கூற அனைத்து புத்தகங்களும் கிரி அவர்களிடமே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. அவருக்கு மேலும் சிரமம்தான். சிரமமாக கருத வேண்டாம் என கூறிவிட்டார்.

புத்தகம் விற்றால் நல்லதுதான், விற்பனையாகாவிட்டாலும் பரவாயில்லை இதுகுறித்து பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன். இலண்டனில் சில கடைகளிடம் கொடுத்து இருந்தேன், ஆனால் அதுகுறித்து எந்த ஒரு விளம்பரமும் பண்ணவில்லை. ஒரு நண்பர் 15 புத்தகங்கள் வேண்டுமென வாங்கிச் சென்றார். கடைகளில் அனைத்து புத்தகங்களும் விற்பனையாகி உள்ளது. அப்படி விற்பனைக்கு வந்த புத்தகம் வாங்கி படித்த ஒருவர் நூலைப் பற்றி வெகுவாக பாராட்டியது இன்னும் மனதில் உள்ளது. ஒவ்வொரு பகுதியாக என்னிடம் பேசினார். ஏனோ எழுதித்தாருங்கள் என கேட்கத் தோன்றவில்லை. காரணம் நான் கேட்டவர்கள் அவர்களது சொந்த அலுவல்கள் காரணமாக எழுதித் தர தாமதம் ஆனதே காரணம். எதற்காக வீண் சிரமம் தருவானேன் என இருந்துவிட்டேன். தமிழ் ஆசிரியை ஒருவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் 'ஒரு பேப்பர்' பத்திரிக்கைக்கு விமர்சனம் எழுதி இருக்கிறேன், பல விசயங்கள் குறித்து வைத்திருக்கிறேன், தருகிறேன் என்பார். குளோனிங் பற்றி எழுதியது தேவையில்லை என்றே இப்போதும் சொல்வார். இப்படி நுனிப்புல் தந்த மகிழ்ச்சி அதிகமே.

நுனிப்புல் பற்றிய விற்பனை குறித்து நான் முத்தமிழ்மன்றத்தில் எழுதியபோது அதைப்பார்த்த தம்பி செல்வமுரளி என்னிடம் உதவி புரிவதாக சொன்னார். முத்தமிழ்மன்றத்தில் அது குறித்து சில பதிவுகளும் இட்டார். அவரது உதவும் மனப்பான்மை குறித்து வியந்து போனதுண்டு. நுனிப்புல் வடிவமைப்பு செய்து நமது மன்ற நண்பர்களின் வலைப்பூவில் இடம்பெற யோசனை சொன்னார். அவரது யோசனைப்படி நான் கேட்டக்கொண்டதற்கிணங்க நண்பர்கள் அற்புதகவிஞர், காகிதர், விமல், சுதா அண்ணா, வடுவூர் குமார், சகோதரி பத்மஜா என பலர் அவர்களது வலைப்பூவில் நுனிப்புல் விளம்பரம்தனை வைத்தனர். அவர்களுக்கெல்லாம் சாதாரணமாக நன்றி என சொல்லி செல்ல முடியாதுதான். இப்படி நுனிப்புல் விற்பனையே தனது பணி என எடுத்துக்கொண்டார் தம்பி முரளி.

பலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அறிவியல் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப சொன்னார். சுஜாதா அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய சில தினத்தில் சுஜாதா அவர்கள் மரணமடைந்தது என்னை அதிர்ச்சியுறச் செய்தது. ஆனால் தளர்ச்சியடையச் செய்யவில்லை. ஆழி பதிப்பகம் செந்தில் அவர்களின், கனியன் அவர்கள் குறிப்பிடுவது போல, 'நறுக்' விமர்சனம் குறித்தும் எந்தவித சலனமுமில்லை. சிரித்துக்கொண்டே கதையின் தலைப்பே நுனிப்புல் என கிரி அவர்களிடம் சொன்னதுண்டு.

இப்படி தம்பி முரளி சில மாதங்களாகவே நுனிப்புல் விற்பனைக்காக மிகவும் முயற்சித்தார். இதில் விவேக் தம்பியையும் குறிப்பிட்டாக வேண்டும். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் நுனிப்புல் புத்தகங்களை நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ஆனால் நன்றி என மட்டும் சொல்வது சரிதானா எனத் தெரியவில்லை. முத்தமிழ்மன்றம் என்ற ஒரு நிழலில் அறிமுகம் இல்லாத நபர்களுக்கும் எத்தனை அன்புடன் உதவி புரிகிறார்கள் என எண்ணும்போதே வியந்து போகின்றேன்.

நுனிப்புல் விற்பனை குறித்து ஒரு புத்தக வெளியீட்டாளரிடம் தம்பி முரளி பேசி இருக்கிறார். அவர்களும் வாருங்கள் என சொல்லி இருக்கிறார்கள். சேலத்தில் ஒரு விளம்பர அட்டையை பேருந்து நிலைய கடைக்காக செய்து தந்து இருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். தம்பி முரளியும் சென்று இருக்கிறார். இவ்வாறு பல முறை சென்று இருக்கிறார். அங்கே அவர்கள் தம்பி முரளியை சற்று அவமரியாதையாகவே நடத்தி இருக்கிறார்கள். வா என சொல்வது, பின்னர் எதுவும் சொல்லாமல் அனுப்புவது. இப்படியே நடந்து இருக்கிறது. அதே வேளையில் கோவையிலும் ஒரு நண்பரிடம் புத்தகம் விற்பனை குறித்து பேசியிருக்கிறார்.

இப்படி நடந்து கொண்டிருக்க புத்தக வெளியீட்டாளர் இம்முறை அழைத்து இருக்கிறார்கள். தம்பி முரளியும் ஆவலுடன் சென்று இருக்கிறார். ஆனால் இம்முறை சற்று கூடுதலாகவே அவமானப்படுத்தியிருக்கிறார்கள், ஏளனப்பார்வையுடன். நுனிப்புல்லினால் அவருக்கு இந்த அவமானம் ஏற்பட்டுள்ளது, என்ன காரணம் என யோசிக்கையில் நம்மிடம் இருக்கும் பொருள் தரமிக்கதாக இல்லை என்பதால் தான் என்பதை உணர்ந்திருக்கிறார். எனக்கு இந்த விசயம் தெரியவந்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது. என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ஏன் நீங்கள் புத்தகம் வெளியிட்டு பிறரை சிரமப்படுத்துகிறீர்கள் என. ஒரு தரமான எழுத்தை எழுதி வெளியிட வேண்டாமா என உரிமையுடன் கேட்டுக்கொண்டார். நுனிப்புல் புத்தக விற்பனை பற்றி கவலை வேண்டாம், ஆனால் பாகம் இரண்டு மிகவும் நேர்த்தியாக அனைவரையும் கவரும் வண்ணம் வரவேண்டும் அதற்காக நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இப்படி எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி நுனிப்புல் விற்பனைக்கு பாடுபட்டு வரும் தம்பி முரளிக்கு நுனிப்புல்லினால் ஏற்பட்ட அவமானம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இனிமேல் புத்தகங்கள் வெளியிட மாட்டீர்கள்தானே என யாராவது கேட்டால் எனது பதில் புத்தக வெளியீடு தொடரும். எனது குழந்தைகால கனவை பணத்திற்காகவோ புகழுக்காகவோ தூக்கி எறியத் தயாராக இல்லை. கருவிலே தரிக்கும் குழந்தையை நோய் உடைய குழந்தையா, நோய் அற்ற குழந்தையா என கருவை வெளியே உருவாக்கி வைத்து அலசி ஆராய்ந்து பின்னர் கரு தரித்து சந்தோசிக்கும் வாழ்க்கை எனக்கு வேண்டாம். பிறக்கும் குழந்தை பிறர் பார்வைக்கு ஊனமாக தெரிந்தாலும் எனது பார்வைக்கு அது அற்புத குழந்தைதான். முடிந்தவரை குழந்தையை நலமுடன் வாழ வழி செய்வேன். அதுபோன்றே எனது படைப்புகளும், என்னால் முடிந்தவரை சிறந்த முறையில் கொண்டுவர முயற்சி செய்வேன்.

கறைபட்டு விட்டதாய் கலங்குவாயோ நுனிப்புல்லே
முளைவிட்ட மகிழ்ச்சியில் முடங்குவாயோ நுனிப்புல்லே
கன்றுதன் தாயோடு தந்தையோடு உண்ணுகையில் நுனிப்புல்லே
அன்றுதான் நீ பிறந்ததன் அர்த்தமடி நுனிப்புல்லே!

எழுதிய நாள் மே 31, 2008

யாவும் நீ

வெகுவிரைவில் 'வெறும் வார்த்தைகள்' எனும் எனது 'கவிதையெனும் வார்த்தைகள் தொகுப்பு' வெளியிடப்பட இருக்கிறது. அதில் முதல் கவிதையாய் அமர்ந்திருக்கும் கவிதைதான் இது.


படைப்பின் ரகசியம் படைப்பவன் உனக்கே வெளிச்சம்
இயற்கைதான் நீ என்று செயற்கையாய் சொல்லிவிட்டு
செயலற்று நிற்பது எம்மில் பெரும் அச்சம்!

உறங்குகையில் உயிர் நிற்கும் இடமேது
உணர்வில்லா நிலையில் கூட
உன்னை மட்டும் உணர்தலுக்கு நிகரேது!

இல்லை நீயென சொல்லுதற்கு சொல்லை தந்துவிட்டு
எல்லையில்லா அண்டவெளியில் மறைந்து நின்று
காத்து அருள்கின்றாயோ அறிவதற்கு!

ஒன்றுமில்லா உலகம் என்று காரியங்கள் பல வைத்து
மனம் வென்று வருபவற்கு காத்து இருப்பாய்
அன்போடு அரவணைக்கும் அன்னையாய் நீ!

அறியாமையில் உள்ளம் அவதிபட்டு அழுகையில்
காணமுடியாமல் மனதில் கவலைபட்டு கரைகையில்
உன்னை எம்மில் வைத்து இருந்து விளையாடுவாய் நீ!

எல்லாம் சிறப்பும் தந்து எழில்மிகு உலகில்
யாவும் நீயாக இருக்கின்ற உன்னை
மறந்து வாழும் வாழ்க்கை கொண்டால்
"நன்றி கெட்டவர் ஆவோமே யாம்" இறைவா!
நலம் தரும் எமது தெய்வம் நீ!
நம்பினோம் உம்மை, உலகை காத்து அருள்வாய்!

பகவத் கீதையைத் தீண்டியபோது - 2 (தர்மம், அதர்மம்)

தர்மமும் அதர்மமும்:

பகவான் கிருஷ்ணர் எதனை தர்மம் என்கிறார்? எதனை அதர்மம் என்கிறார்? அதர்மம் தலைதூக்கும்போது வருகிறேன் என்கிறார்? அதர்மத்திற்கு என்ன வரையறை வைத்து உள்ளார்?

பிறரை துன்புறுத்தும் தீயவர்களை அழிக்கவும் வருவதாக சொல்கிறார். யார் யாரை துன்புறுத்துகிறார்கள்? எது துன்பம் எனச் சொல்கிறார் கிருஷ்ணர்? துன்பத்தின் வரையறை என எதை வைத்து உள்ளார்? அவனையே நினைத்துக் கொண்டு இருக்க வருமோ இன்னல்? கலக்கம் கொள்ள வைப்பவனும் அவனே, கலக்கம் கலைய வைப்பவனும் அவனே என்று இருக்கும்போது எதற்கு இதுபோன்று பேசுகிறான்?

தர்மம் என்பது பற்றியும், அதர்மம் என்பது பற்றியும் அறியத்தரப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் என்பதில் எப்படி மனிதன் உட்படாமல் போனான்? இறைவனை உணர்ந்து கொள்ளும் நிலை கொண்டமையாலா? இல்லை, மனிதன் தவிர்த்து அனைத்தும் இறை உணரும் தன்மை அற்றதலா?

தர்மம் என்பது வரையறுக்கப்படாத விதியாக இருக்கும்பட்சத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அதன் நிலையானது மாறும். தர்மம் என்பது பொதுவான ஒன்று. அதனை அவர் அவருக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டால் அது தர்மம் ஆகாது, அதே வேளையில் தர்மத்தை கடைப்பிடிக்கவில்லை என்பதற்காக அது அதர்மமும் ஆகாது. இதில் ஒரு முக்கியமான விசயம் என்னவெனில் தர்மம் என்பதை யாருமே இதுவரை அறிந்தது இல்லை, அறியத்தரப்பட்டதும் இல்லை. அவரவர் தனக்கேற்றப்படி வகுத்துக் கொண்டதால்தான் தர்மம் தள்ளாடுகிறது. இறைவன் என்ற ஒரு உண்மையானது எப்படி இருட்டடிக்கப்பட்டு உள்ளதோ அதே போல்தான் இந்த தர்மமும். எப்பொழுது ஒருவர் உண்மையை உணர்கிறாரோ அவர் தர்மம்தனை உணர்வார் என்பது மட்டுமே உண்மை.

ஒரு உயிர், நல்லுயிராய் வாழ வழி வகுக்க வேண்டிய உண்மைதான் உண்மையாகச் சொல்லப்படவில்லை எனவே எது தர்மம் என்பது எனக்கு இதுவரைக்கும் தெரியாது. தர்மம் எதுவென தெரியாத பட்சத்தில் அதர்மம் எப்படித் தெரியும்?

இப்பொழுது தர்மம் என்பது ஒன்றே என தர்மம், அதர்மம் எனும் இருநிலைகளை ஒன்றாய் சொன்னதால் பின்னர் ஏன் அதர்மம்தனை பிரித்து வைத்து பார்க்கிறான் அவன்? தர்மமும் அதர்மும் ஒன்றே என்றல்லவா சொல்ல வேண்டும்!

தர்மம், அதர்மத்தைப் பிரித்து உணர, உண்மையாக இருக்கச் சொல்கிறான்! உண்மை நிலை என்னவென்று உணராத/உணர தடையாய் இருக்கும் அரக்க எண்ணங்களை எரிக்கச் சொல்கிறான்! அனைத்தும் அதன் அதன் பொருட்டு நன்றாகவே உள்ளது, தர்மமாக உள்ளது என்னும் பட்சத்தில் இது சற்று இடர்ப்பாடான விசயம்தான்.

உண்மைதான் இறைவன், உண்மைதான் தர்மம்
உண்மை ஒழுங்காக உரைக்கப்படவில்லை என்பதே அதர்மம்!