Thursday 2 July 2009

கேள்வியும் பதிலும் - 2

2) உங்கள் குழந்தை தமிழ் கற்றுக் கொள்ள மறுத்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

மிகவும் நல்ல கேள்வி. எனது ஆசை என்னவாக இருந்தது எனில் என்னால் எனது சிறு வயது ஆசையான நாவல் எழுத முடியாமல் போவதைக் கண்டு மனம் கலங்கியது. எனது மகன் மாபெரும் நாவலாசிரியனாக வரவேண்டும் (தமிழில் தான்) என அவனுக்கு கல்கி என பெயர் சூட்டினேன். யாருக்கும் அப்பெயர் பிடிக்கவில்லை. பின்னர் நவீன் என சூட்டினேன். காரணம் நவீன் என்றால் புதியது என பொருள்படும். புதிய இராதாகிருஷ்ணனாய் அவன் வரட்டும் என்ற எண்ணம்தான்.

அப்படிப்பட்ட எண்ணம் கொண்டு இருக்கையில் இருப்பது இலண்டனில், எப்படி தமிழ் கற்றுக் கொள்வது? தமிழ் பள்ளிக்கு அனுப்பி வைத்தோம். தமிழ் ஒருநாள்தான் கற்று வருகிறான். சில நேரங்களில் தமிழ் பள்ளி பிடிக்கவில்லை என அவன் சொல்லும்போது, நான் அவனிடம் பிடிக்கவில்லையெனில் விட்டுவிடு எனச் சொல்வேன். அவனோ இல்லை நான் படிக்கிறேன் என படித்து வருகிறான். நிச்சயம் தமிழ் என்னைவிட நன்றாக கற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை இருக்கிறது. எதையும் நிர்பந்தப்படுத்துவது இல்லை. இது செய் என சொல்வதோடு சரி, அவனாக விருப்பப்பட்டால் ஒழிய நான் புகுத்துவது இல்லை. கடவுள் கிருபையால் தமிழ் அவனுக்குப் பிடித்து இருக்கிறது. அவன் தமிழ் பாடும்போது (சங்கீதம், மிருதங்கம் பயின்று வருகிறான்) மிகவும் சிரிப்பாக இருக்கும், பெருமையாக இருக்கும்.

ஆக தமிழ் கற்றுக் கொள்ள மறுத்து இருந்தால் கஷ்டமாக இருந்து இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். இருந்தாலும் 'அவனுக்கு விதித்தபடி நடக்கிறான்' என ஆண்டவன்மேல் பாரத்தை போட்டுவிட்டு போய் இருப்பேனோ என்னவோ? இப்பொழுதுதானே படித்துக் கொண்டு இருக்கிறான், இறைவன் அருள்புரிவான் என் நம்புகிறேன்.

(தொடரும்)

No comments: