Tuesday 30 March 2010

யாரு நல்லவங்க? யாரு கெட்டவங்க?

இந்த வலைப்பக்கம் வந்ததும் வந்தேன், ஏதாவது ஒரு விஷயத்தை எழுதிட்டு இருக்கிறதுக்கு எப்படியெல்லாம் உதவி செய்றாங்க. எத்தனை விதமான தொடர் பதிவுகள். ஆச்சரியம் தருது. பல பதிவுகளுக்கு எழுத நினைச்சி இருக்கேன். நான் பொதுவா தமிழ்மணத்துல இருந்துதான் பல பதிவுகளை தேடி பிடிச்சி படிக்கிறது. அப்பப்போ தமிழிஷ் தமிழ் 10 பாக்குற வழக்கம் உண்டு. பின் தொடர்கிறேனு நூத்து ரெண்டு வலைப்பக்கங்களை நான் சேர்த்து வைச்சிருந்தாலும் உண்மையா பின் தொடருறது என்னவோ கொஞ்சம் தான். ஒவ்வொருத்தரும் எழுதறதை படிக்க இப்போ பாக்கிற வேலையை விட்டுரனும், அதோடு மட்டுமா குடும்பம் பிள்ளைக எல்லாரையும் மறந்துரனும். அவ்வளவு பேரு எழுதுறாங்க.

ஒரே விஷயத்தை ஒவ்வொருத்தர் பார்வையிலும் படிக்க நல்லாத்தான் இருக்கு. எல்லாரையும் நல்லவங்கதானு நம்பி ஏமாந்து போறதை விட எல்லாரும் அவங்க அவங்க அளவுல நல்லவங்கன்னு நினைச்சிட்டு பழகிட்டு போகலாம். ஆனாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

நான் பழகினவங்க எல்லாரும் நல்லவங்கதான். எனக்கு என்னைப் பொருத்தவரை நான் எப்படி ஒருத்தர்கிட்ட நடந்துகிறேனோ அதுபோலவே அவங்களும் என்கிட்டே நடந்துக்குவாங்கனு எனக்கு ரொம்பவே நம்பிக்கை இருக்கு. ஒரு சில எழுத்துகளை படிக்கும் போது எழுதுரத மட்டும் செய்வோம்னு மனசு கிடந்தது அடிச்சிக்குது. ஆனாலும் ஏதாவது பதிவை படிச்சா மனசில நினைக்கிறத எழுத வேண்டி வந்துருது. நாம எழுதுறதை சரியா புரிஞ்சிக்கிட்டு இருப்பாங்கனு மனசுல நினைக்க முடியறதில்ல. எதுக்குன்னா எழுதுனவங்க மனசை புரிஞ்சா நாம படிச்சி மறு மொழி போடுறோம்?

எழுத்துக்கள் ஒரு மனிசரோட குண நலத்தை சொல்லுமானு தெரியல. சொந்த உறவுகள்கிட்ட சில காரணங்களால பகை பாராட்டும் நாம எழுத்துக்கள் மூலம் பழகினவங்களோட எப்பவுமே நட்பு பாராட்டுவோம்னு தெரியாது. ஏதாவது மன கசப்புகள் வரத்தான் செய்யும். எனக்கே சிலரது எழுத்துகள் பிடிக்கிறது இல்ல இருந்தாலும் எழுதினவங்க பார்வையிலும், என் பார்வையிலும் அந்த எழுதப்பட்ட விஷயத்தை பார்த்துட்டு அத்தோட விட்டுருவேன், எனக்கு பிடிக்காததை எழுதிட்டாங்கன்னு எழுதுரவங்களை வெறுக்க முடியுமா? எதை எழுதினாலும் அந்த எழுத்துல என்ன இருக்குன்னு ஒரு பார்வை பாக்குற பழக்கம் இருக்கு.

இப்படியே இருந்தாலும் தெரியாத்தனமா சிலரது எழுத்துல ஒரு பிடிப்பு வந்துரத்தான் செய்யுது. அது தப்புன்னு சொல்ல முடியாது. அப்படியே நட்பு வட்டம் அப்படி இப்படினு வளரத்தான் செய்யுது. இப்போ அமைப்பு அது இதுன்னு ஆரம்பிக்கிறாங்க. ரொம்ப நல்ல விசயம் தான். ஒரு சிறந்த அமைப்பா கொண்டு வரணும்னு முன்னமே வேண்டுகோள் விட்டுட்டேன். ஆனா அந்த அமைப்பில இப்போதைக்கு சேர வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். வெளியில இருந்து ஆதரவு தரதுதான் என்னோட முடிவு. உண்மையிலே சொல்றேன் அமைப்பின் நோக்கம் எதுவுமே எனக்குப் புரியல. உள்நாட்டுல இருக்கிறவங்களுக்கு அது சரியா இருக்கும், எனக்கு சரிப்பட்டு வராது. எழுதுறது என்னோட தொழில் இல்ல! எழுதினா மட்டுமே வலைப்பதிவர் அப்படிங்கிற தகுதி கிடைக்குது, சந்தோசம் தான்.

சக வலைப்பதிவருக்கு என்ன மரியாதை இருக்கு? ஒருத்தருக்கு ஒருத்தர் எப்படியெல்லாம் மாத்தி மாத்தி தனிப்பட்ட அளவுல தாக்கி எழுதறாங்க. அதை படிக்க்கும் போது ஒரு எச்சரிக்கை உணர்வு வந்து போறது என்னவோ உண்மைதான்.

உலகத்துல யாரு நல்லவங்க? யாரு கெட்டவங்கனு கேட்டா என்ன பதில் சொல்ல முடியும்? யாருமே நல்லவங்க இல்லை, யாருமே கெட்டவங்க இல்லைன்னு சொன்னாலும் என்ன செய்ய முடியும். ஒவ்வொருத்தரும் மாறி மாறி நடந்துக்கிறாங்க அதுதான் உலகம், இதுல எழுதுறவங்க மட்டும் நல்லவங்களாகவே இருக்கனும்னு எந்த ஊர் நியாயம்னு கேட்டாலும் ஒரு வரைமுறை இருக்கத்தான் செய்கிறது எதற்கும்.

எழுத்து ஒரு போதை. அந்த எழுத்து தரும் போதையில் எதுவும் தெளிவாகத் தெரிவதில்லை. இலக்குகள் இல்லாத பயணமும், குறிக்கோள் இல்லாத எழுத்துகளும் ஒரு போதும் காலத்திற்கு பயன் தரும்படி நிற்பதில்லை.

இதோ நான் விபரீதமான எழுத்துகளில் இருந்து என்னை விடுவித்து கொள்ள முடிவு செய்து விட்டேன். எங்கேனும் தென்படாவிட்டலும் இதோ இங்கே எப்போதும் தென்பட்டு கொண்டுதான் இருப்பேன். யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்க என்பதில் சரி பாதியாய் மனிதர்கள் இங்கும் அங்கும் என அலைந்து கொண்டிருக்கிறார்கள், ஓரிடத்தில் எவரும் நின்று இளைப்பாறுவதில்லை.

Monday 29 March 2010

ரௌத்ரம் படத்துக்கு பாட்டு எழுத சொன்னான்

இசையில ஆர்வம இருக்குற ஒரு பையனை நான் பார்த்தேன், அவனை இசை அமைப்பாளர் ஒருத்தர் அவர் இசை அமைக்கிற படத்துக்கு ஒரு பாட்டு எழுத சொல்லி கேட்டு இருந்துருக்காரு, அவனும் எழுதி தரேன்னு சொல்லி இருந்துருக்கான்.

அவன் இவன் அப்படின்னு வர ஒரு பாட்டை என்கிட்டே போட்டு காமிச்சான். இது போல எழுதனும்னு சொன்னான். நா கவிதை எழுதுவேன் பாட்டு என்னடா பாட்டு, சந்தம் கொடுடானு சொன்னேன். அவன் சந்தா கொடுக்க சொல்றான்னு நினைச்சிருப்பான் போல. இல்ல வரிய வெட்டி வெட்டி பதினாலு வரி வேணும். அதை நான் அனுப்பி சரியானு கேட்கணும்னு சொல்லிட்டான்.

சரிடா எழுதி தரேன் அப்படின்னு பதினாலு வரி எழுதி கொடுத்தேன். அதுல ஒரு நாலு வரி எழுதினதை பார்த்துட்டு பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிட்டான். உன் அறிவியல் புத்தி உன்னை விட்டு போகாதானு கேட்காத குறைதான். நானே எழுதி அனுப்பி வைக்கிறேன்னு போய்ட்டான். ஒரு வாய்ப்பை நழுவ விட்டுட்டோமேனு வருத்தமா இருக்கு. மத்த வரிகளை எல்லாம் பாத்து இசை அமைப்பாளர் என்ன சொல்வாரோன்னு ஒரு பயம் வேற.

அவன் சிரிச்ச வரிகளை மட்டும் எழுதுறேன்.

ஆஸ்டிராய்டுகளை எரிப்பான்
கோமெட்டுகளை உடைப்பான்
சூரியனை எரிப்பான்
நெருப்பின் தலைவன் அவன்

பூமியை பிளந்து
மேக்மாவை மேனியில் பூசியவன்
ரௌத்ரம் ரௌத்ரம்
சொல்லும் இவன் சரித்திரம் சரித்திரம்

முத நாலு வரிதான் அவனை அப்படி சிரிக்க வைச்சது. தமிழ் படத்துக்கு பாட்டு எழுத இலக்கியம் மட்டுமே படிக்கனுமா என்ன.

ஒரு காதல் பாட்டும் கேட்டான், போடா முதல இதுக்கு ஓ கே வாங்கிட்டு வானு அனுப்பிட்டேன். நானும் பாடலாசிரியர் ஆகிருவேனு கனவு காண ஆரம்பிச்சிட்டேன். அரைகுற ஆராய்ச்சியாளர், வெறும் எழுத்தாளர், இப்போ பாடலாசிரியர்... ம்ம்ம்.

Sunday 28 March 2010

ஆண்டிகள் சேர்ந்து கட்டிய மடம்

எனக்கு இந்த கதையைப் பத்தி முத முத எப்பத் தெரியும்னா நாங்க இங்க ஒரு அமைப்பை உருவாக்க ஜனவரி மாசம் திட்டம் போட்டோம். அதாவது ஊருல இருக்கிற அதாவது தென்மாவட்டங்கள்ல இருக்கிற கிராமத்து பகுதிகளுக்கு நலத்திட்டம் செய்யனும்னு. ஆரம்பிக்கிறப்பவே என் மாமா மகன் சொன்னான், ஆண்டிகளல்லாம் சேர்ந்து கட்டிய மடம் போல ஆகிரக்கூடாதுனு, அப்பதான் என்னனு கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். சாமிகளா, தமிழ்வலைப்பதிவர் குழுமத்தை அதுமாதிரி ஆக்கிப்பூடாதிங்கனு சொல்லத்தான் இந்த பதிவு.

எப்படி ஒரு அமைப்பு ஆரம்பித்தோம்னு சொல்றேன் கேளுங்க. சமூக சேவை செய்ற நினைப்புள்ளவங்களா உறவினர்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வந்தோம், சரி எப்படித்தான் ஆரம்பிக்கிறதுனு ஒரு திட்டம். இலண்டன் ஸ்ரீவைஷ்ணவ டிரஸ்ட் அப்படினு ஒரு பெயரை மனசில நினைச்சிக்கிட்டு ஒரு ஹோட்டலுல பதினாலு பேரு குழுமியிருந்தோம். எனக்கு அன்னைக்குனு பாத்து வாந்தியும், காய்ச்சலுமா வந்து சேர்ந்தது அந்த நாராயணன் புண்ணியமோ என்னவோ!

மிகவும் நேர்த்தியா லேப்டாப் சகிதமா என்னோட சொந்த அண்ணன் பல திட்டங்களோட வந்தாரு. மைக் எல்லாம் பிடிச்சி யாரும் பேசல. உங்களுக்கு ஏன் இப்படி ஒரு அமைப்பு ஆரம்பிக்கனும்னு விருப்பம், உங்க நோக்கம் என்னனு ஒவ்வொருத்தரா சொல்ல சொன்னாரு. எல்லாரும் ஊருல இருக்கறவங்களக்கு பொதுவா வயதானவர்கள், கல்வி உதவிக்கு நிற்பவர்கள், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு நாம உதவுனும், அதை தனிப்பட்ட மனிசரா செய்றதை விட சேர்ந்து செஞ்சா நல்லாருக்கும், மேலும் வியாபார நோக்கமும் இருக்கனும், அந்த வியாபார நோக்கத்தின் மூலம் வர பணத்தை ஊருக்கு தந்து உதவனும், சுற்றுலா போகனும் அப்படினு ஒவ்வொருத்தரும் ஒரு கனவை சொன்னோம். தலைவர், உபதலைவர், பொருளாளர், செயலாளர் அப்படினு ஒரு மனதா தேர்ந்தெடுத்தோம், அவங்க ரெண்டு வருசத்துக்குத்தான் பதவில இருப்பாங்க, அப்புறம் புது ஆளுக, முதல இருந்தவங்க இருக்க முடியாது. அப்படியே சுற்று சுற்றி வரும். நல்லாதான் இருந்தது. எல்லாரும் இலண்டன் ஸ்ரீவைஷ்ணவ டிரஸ்ட் னு முடிவு பண்ணி பஜ்ஜி, சிக்கன் (வைஷ்ணவம்னா அசைவத்தை நிறுத்துங்க சாமிகளானு ஒரு சத்தம் கேட்டது ) சமோசா, கொகோ கோலா அப்படினு கூட்டம் முடிஞ்சிப் போச்சு. என்னாலதான் எதுவுமே சாப்பிட முடியல. நான் எந்த பதவியும் எடுத்துக்கல, ஏன்னா அந்த நாராயணன் புண்ணியமோ என்னவோ.

பெயரை எல்லாம் பதிவு செய்யனும்னு ஒரு நிர்வாகம் ஆரம்பிக்க முடிவு பண்ணியாச்சு. தைல முடிச்சிரலாம்னு பாத்தோம். ஆனா இன்னமும் நிர்வாகம் பதிவு செய்யலை, பேசினப்பவோ இது உடனடி விசயம் இல்ல, ஐந்தாண்டு திட்டம்னு தெளிவா இருந்தோம், ஒவ்வொருத்தரும் அத்தனை பிஸி. இதுல சமூக சேவைக்கு நேரம் ஒதுக்கறது அத்தனை சுலபமா என்ன. ஏன்னா கூடியிருந்த பதினாலு பேருல எட்டு பேரு முன்னமே மகாலக்ஷ்மி கோவில் நிர்வாகத்தில் இருந்தவங்கதான், அவங்கங்களுக்கு கடுமையான வேலைப்பளு மத்த இதர காரியங்களால, விலகிப் போனவங்கதேன். நான் அந்த கோவிலுல சேர்மனு, செயலாளர், அப்படி இப்படினு பதவி வகிச்சிருக்கேன், அப்புறம் எனக்கு நாராயணனா ரொம்பப் பிரியம். எனக்கு இப்படி ஒன்னா புதுசா ஆரம்பிச்சி செய்றதுக்கு அந்த கோவில் மூலமா செய்யலாமேனு ஒரு ஆதங்கம் எப்பவும் இருக்கு, ஆனா நிலமை அத்தனை சுலபமா இல்லனு தெரிஞ்சதலா புதுசா ஆரம்பிச்சே செய்வோம்னு இவங்களோட இறங்கிட்டேன்.

ஒரு குழு ஆரம்பிச்சி செய்றது ஒன்னு ஈசி இல்ல, என்னமோ ஆரம்பிச்சோம், அதைச் செஞ்சோம், இதைச் செஞ்சோம்னு இருக்கறது பேரு குழு இல்ல, ஒரு தெளிவான, திட்டமிட்ட தைரியமான மனசு வேணும். எப்பவும் கொள்கை விலகாத உறுதி வேணும். அதெல்லாம் நம்ம மக்களுக்கு இருக்கானு நம்மளையே கேட்டுப் பார்த்தாக்க நல்லாவே புரியும்.

பதிவு பண்றதாக்கான பேப்பர் வேலை எல்லாம் ஜரூரா நடந்துக்கிட்டுதான் இருக்கு, என்ன பதினாலு பேரு கையெழுத்துப் போடுறதுக்கு ஒரு மாசம் ஆகிப்போச்சு ;) அட ஒன்னு சொல்ல மறந்துட்டேனே, கூட்டத்துக்கு வந்த ஒருத்தரு எனக்குப் பிடிக்கலனு விலகிக்கிறேனு சொன்னாரு நாங்களும் சரினு சொல்லிட்டோம். அதுக்கு பதிலா இன்னொருத்தரு வந்து சேர்ந்துருக்காரு. அப்புறம் ஸ்ரீவைஷ்ணவனு சுருக்க வேணாம்னு வேற பேர முடிவு பண்ணிட்டோம், அதுக்கு நாங்க எடுத்துக்கிட்ட நாளு கணக்கு என்னவோ சரியா சொன்னா மூணு வாரம். பொறுமையா எதையும் செய்யனும்னுங்கிற பக்குவம் முதல வேணும். சோ காட்டுறதுக்கு ஒரு குழுவோ அமைப்போ ஆரம்பிக்கக்கூடாது, சரிதானே நான் சொல்றது.

குழு ஆரம்பிக்க முன்னாடி நாங்க பேசிக்கிட்டது என்னவோ இதுதான், ஒருமித்த கருத்தில்லாத எவரையும் நிர்வாக குழுவில் சேர்ப்பதில்லை, ஆனால் அவர்கள் நன்கொடை தந்தால் வாங்கிக்கொள்வோம். எவரேனும் எதிராகப் போனால் பொங்கலும் சுண்டலும் தந்து மரியாதையாக அனுப்பி விடுவோம், மேலும் பணம் கொடுப்பவர்களுக்கு பொங்கலும் சுண்டலும் நிச்சயம் உண்டு. அப்படி இப்படினு நகைச்சுவையா ஆரம்பிச்சோம், இப்ப நடக்கறதைப் பாத்தா ஒன்னுமே ஆகாது போலனுதான் நினைப்பாங்க ஆனா எங்க கனவை இந்த குழுவை வெற்றிகரமாக நடத்தி நிச்சயம் நிறைவேத்துவோம்னுங்கிற நினைப்பு எங்களுக்கு இருக்கு என்ன கொஞ்ச நாளு ஆகலாம், அதுக்காக உடனே அவசரப்பட்டு அது இதுனு எழுதிப்பூடாதிங்கண்ணே, நாலு சுவத்துக்கல நல்லா பேசி ஒரு முடிவுக்கு வந்தப்பறம் பதிவை எழுதுங்கண்ணே, இந்த விசயத்துல மட்டும் மனசுல தோணுனதை பதிவுல எழுதறதை நிறுத்திட்டு ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டினத போல இல்லாம ஒரு அட்டகாசமான அமைப்பை கொண்டு வாங்கண்ணேனு எல்லாரையும் கேட்டுக்கிறேன். எங்கனாச்சும் தப்பா எழுதி இருந்தா வருத்தம் தெரிவிச்சிக்கிறேண்ணே. அடுத்தவங்களை அனுசரிச்சி ஒருத்தொருக்கொருத்தர் விட்டுக்கொடுத்துப் போற பழக்கத்தை முதல கையில் எடுங்கண்ணே.

ஊருல இருந்து இருந்தா உங்களையெல்லாம் வைச்சி ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்க மாட்டேன். (இப்படி வெட்டி சவாடலெல்லம் வேண்டாம்ணே). அப்புறம் ஒன்னு கவனத்துல வைச்சிக்கோங்கண்ணே, ஆரம்பிக்கிறப்போ அப்படி இப்படினு தான் இருக்கும், ஒரு தெளிவான நோக்கம் இருந்துட்டா அசைக்க முடியாதுண்ணே. நான் தான் ராசா னு இருக்கிற பதிவுலகத்துல நாங்கதான் சேவகர்களுனு சொல்லிப் பாருங்கண்ணே, தமிழ் வலைப்பதிவர்கள், இணைய பதிவர்கள் அப்படிங்கிற பவர்னு பளிச்சினு இருக்கும்.

Friday 26 March 2010

புத்தகங்கள்











தமிழ் அலை பதிப்பகம், 1, காவலர் குறுந்தெரு, ஆலந்தூர் சாலை, சைதாப்பேட்டை, சென்னை - 15, தொடர்புக்கு: இஷாக் 978 621 8777



நயினார் பதிப்பகம்,  அகநாழிகை பொன். வாசுதேவன் 999 454 1010

Thursday 25 March 2010

நானும் மதங்களைத் திட்டவா?!

எனக்குத் தெரிந்த மதங்கள் என இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம், புத்த மதம் மட்டுமே. எனக்கு யூதர்கள் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்ததுண்டு. மேலும் யூதர்கள், ஹிட்லர் போன்ற விபரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமெனும் ஆவல் இதுவரை வந்தது இல்லை. இனிமேலும் வந்தாலும் வந்து தொலையும். இந்த இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம் கொண்டுள்ள புனித நூல்கள் எனக் கருதப்படும் முறையே பகவத் கீதை, பைபிள், திருக்குரான் என எதையுமே அதன் வடிவில் முழுமையாகப் படித்தது இல்லை. அதன் காரணமாக இதுவரை எதையும் இழந்து விட்டதாக கருதவும் இல்லை. மதங்கள் எத்தனைதான் இருக்கின்றன எனத் தேடிப் பார்த்ததில் இருபது மதங்கள் சம்பந்தபட்டவை இருப்பதாக தெரிந்து கொண்டேன். அப்போதுதான் எனக்குத் தெரிந்திருந்த ஜெயின், சீக்கிய மதம் எல்லாம் மதங்கள் என நினைவுக்கு வந்திருந்தது. மேலும் மதங்கள் என்றால் என்ன என முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அதுகுறித்து முழு விளக்கங்கள் வழக்கம்போல விக்கிபீடியாவில் தென்படுகிறது.

மதம் என்றால் என்ன? மதக் கோட்பாடுகள் என்றால் என்ன என்பதை ஒருவர் முழுமையாகத் தெரிந்து கொண்டால் மட்டுமே மதங்கள் குறித்த பார்வையானது முழுமை பெறும். ஆனால் நம்மில் பலர் என்ன செய்து கொண்டிருக்கிறோம் நமக்குக் கிடைக்கும் விசயங்களின் அடிப்படையில், அவ்வப்போது ஏற்படும் சில பிரச்சினைகளின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம், நமது ஆதங்கங்கள் நமது சிந்திக்கும் திறனைக் கட்டுப்படுத்திவிடுகிறது. மொத்தமாகவே மதங்கள் பொல்லாதவை, மதங்களை பின்பற்றும் மனிதர்கள் பொல்லாதவர்கள் எனும் பார்வையை ஏற்படுத்திக் கொள்கிறோம். ஒரு சமூகத்திற்கு ஏற்படும் அவலங்களுக்கு அந்த சமூகத்தைச் சார்ந்த மனிதர்களும், அந்த சமூகத்தைச் சுற்றியுள்ள காரணிகளுமே முழு பொறுப்பாக முடியும் என்பதை தெரிந்து கொள்ள ஆராய்ச்சி பட்டம் பெற வேண்டிய அவசியம் இல்லை. அந்த சமூகத்தைச் சுற்றியுள்ள காரணிகள் என முழு பங்கு வகிப்பது மதங்களே என பட்டிமன்ற தீர்ப்பு வழங்குவது போல பார்வை இருப்பதை கண்டு வருத்தமாகத்தான் இருக்கிறது.

அண்ணல் காந்தி ஒரு கோவிலுக்குச் சென்றாராம், அங்கே கோவில் களை இழந்து காணப்பட்டதாம், கோவில் வியாபாரக்கூடமாக இருப்பதைக் கண்டு அண்ணல் மிகவும் வருந்தினாராம். அதற்கடுத்து அந்தக் கோவிலுக்கு அண்ணல் காந்தி போகாமல் இருந்தாரா என்றால் அதுதான் இல்லை, அந்த கோவிலுக்கு பலமுறை சென்று இருக்கிறார். இப்போது அங்கே வியாபாரம் நடக்கிறது என்பது எந்த வகையில் ஒரு தனி மனிதனின் இறைவன் சம்பந்தபட்ட வேண்டுதலுக்குத் தொல்லை தருகிறது. நம்மை பொருள் வாங்கச் சொல்லி நச்சரிக்கும் போது நமக்கு எரிச்சலாக வருகிறது. கோவிலின் வாசலில் அமர்ந்து நம்மிடம் கையேந்தும் போது நமக்கு வேதனையாக இருக்கிறது. அவர்களின் இதுபோன்ற நிலைமைக்கு காரணம் அந்த கோவில் இருப்பதால்தான் என்றால் சற்றே சிந்தித்துப் பாருங்கள். ஏனெனில் இந்த பூமி இருப்பதால்தான் கோவில் வந்தது என நினைத்து இந்த பூமியையே அழிக்க முயற்சித்துவிட வேண்டாம். ஆனால் அதைத்தான் பெரும்பாலோனோர் மறைமுக செய்து கொண்டு வருகிறோம். மேலும் நமக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதைத்தானே நாம் செய்து கொண்டு வருகிறோம், அதுமட்டுமின்றி நமது தேவைக்காக நமக்கு விருப்பம் இல்லாததையும் நாம் செய்யத் தயங்கமாட்டோம் என்பதும் உலகம் அறிந்த விசயம்.

தீவிரவாதத்திற்குத் தொடர்புடைய மதம் என இஸ்லாமைச் சொன்னபோது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. சில மனிதர்களின் செயல்பாட்டால் ஒரு மதம் இன்னலுக்கு உள்ளாவது எத்தனை கொடுமை. சைவம் தாக்கிய சமணம் என சொல்லும்போது ஒரு வரலாற்று நிகழ்வு மதத்திற்கே பெரும் இழக்காக அல்லவா அமைந்து போகிறது. தேவர்கள், அசுரர்கள் என பிரிவினையில் எத்தனை அவதாரங்கள் தான் வந்து போனது. அன்பினால் அனைவரையும் குணப்படுத்துகிறேன், அனைவரது பாவங்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என ஒருவர் சொன்னபோது இவருக்கு என்ன அக்கறை என்றுதானே பார்க்கத் தோன்றுகிறது. என் பாவங்களுக்கு நானே காரணன் எனும் எண்ணம் எப்போது ஒவ்வொருவரிடமும் எழவில்லையே அதுவரை எந்தவொரு நிலையும் மாறப்போவது இல்லை.

நமக்கு கிறிஸ்துவ நண்பர்கள் பலர் உண்டு, இந்து நண்பர்கள் பலர் உண்டு, முஸ்லீம் நண்பர்கள் பலர் உண்டு எனச் சொல்வதில் என்ன பெருமை இருந்து விடப் போகிறது. நமக்கு வாய்த்த நண்பர்கள் நல்ல நண்பர்களா, நாம் நல்ல நண்பராக நமக்கு வாய்த்த நண்பர்களிடம் இருக்கிறோமா என்பதில்தானே நமது அக்கறை இருக்க வேண்டும், பெருமைபட்டுக் கொள்ள வேண்டும். இந்த மதத்தின் சாயம் பூசப்பட்டதால் மட்டுமல்ல, மதத்தின் சாயம் பூசப்படாதபோதும் கூட நண்பர்கள் என எவரையேனும் ஏற்றுக்கொள்வது பெரும் சிரமமான காரியமாகத்தான் நமக்கு இருக்கிறது. எவரைத்தான் நம்பிக்கையின் பேரில் இந்த உலகில் நம்பி வாழ்வது, நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறார்கள், அந்த நம்பிக்கையினால் மட்டுமே அழிந்து கிடப்போர்கள் எண்ணிக்கை இவ்வுலகில் அதிகம். இதற்கு மதம் மட்டுமே எப்படி பொறுப்பாக முடியும்? கடவுள் காப்பாத்துவார் எனும் நம்பிக்கை இருக்கிறவர்கள் எவரேனும் படிக்காமல் இருக்கிறார்களா? வேலைக்குப் போகாமல் இருக்கிறார்களா? அவரவர் அவரவருக்குத் தெரிந்த காரியங்களைத்தானே செய்து வருகிறார்கள். இதில் மதங்களின் செயல்பாடு என்பது எப்படி ஒரு தனி மனிதனுக்குத் தொல்லையாக முடியும்.

சாமியார்கள் பற்றி பெரும் விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகிறது, இங்கே குறிப்பிடப்போகும் விசயம் என்னவெனில் சாமியார்கள் மட்டுமா ஏமாற்றுகிறார்கள், ஏதாவது ஒருவகையில் சக நண்பரை, தந்தையை, தாயை, சகோதரியை, சகோதரனை, மனைவியை, முதலாளியை, தொழிலாளியை என உறவுகளையே ஏமாற்றி வாழும் வாழ்க்கைதானே நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏன் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றிக்கொண்டிருப்பதை நாம் சகித்துக் கொண்டு வாழ்கிறோமே, ஏமாற்று வேலையைச் செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதி ஒருவர் மக்களை ஏமாற்றும் நயவஞ்சகர்களை பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்காது என்கிறார், நல்லதொரு செய்தி என்றே ஆமாம் ஆமாம் என தலையாட்டிச் செல்லும் மனிதக் கூட்டங்களாகத்தானே நாம் இருக்கிறோம். இதை வள்ளுவர் அழகாகச் சொல்வார் மக்கள் அல்ல மாக்கள் என! ஒரு தனிமனிதனின் கேலிக்கூத்துக்கெல்லாம் ஒரு சமயமோ, மதமோ பொறுப்பாக முடியாது என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். கருத்துகளாலும், செயல்களாலும் கவரப்படுபவர்கள் அதன் வலியை பொறுத்துக் கொள்ளும் வலிமை பெற்றுக்கொள்ள வேண்டும். யாரோ என சொன்னப்பட்ட கருத்துக்கு எத்தனை மரியாதை இருக்கிறது இந்த உலகில், ஆனால் இவர் சொன்னார், அவர் சொன்னார் உடனே ஆஹா ஓஹோ என பாராட்டும் மனப்பக்குவம் எந்த மதம் கற்றுத் தந்தது.

மேலும் ஒரு விசயம் மட்டும் எனக்குத் தெளிவாகவே புரியவில்லை. மனிதம் மனிதம் என்று சொல்லித் திரிகிறோமே மனிதம் என்றால் என்ன என்பதை இதுவரை எவரேனும் தெள்ளத் தெளிவாக தெளிந்து வைத்திருக்கிறோமா என்றால் என்னைப் பொருத்தவரை நிச்சயமாக இல்லை என என்னால் சொல்ல இயலும்.

இந்து மதத்தைத் திட்டுகிறீர்களே, ஏன் இஸ்லாம் மதத்தைத் திட்டிப் பாருங்களேன் என சண்டையை மூட்டிவிடும் எண்ணம் பலருக்கு இருக்கிறது என்பதை அறிந்த போது மிகவும் கவலையாகத்தான் இருந்தது. ஏன் இஸ்லாம் மதத்தைத் திட்டக்கூடாது என ஏதாவது சட்டம் இருக்கிறதா?  வேதநூல் என ஒரு கதையையே எழுதி வைத்து இருக்கிறேன், ஆனால் அந்த கதையின் நுட்பம் பலருக்குப் புரியாது. இந்து மதத்தில் கூறப்படும் அவதாரங்கள் எல்லாம் மனிதர்களே என்றுதான் என்னளவில் ஏற்றுக்கொண்டு இருக்கிறேன். இறந்து போன என் தாயை தெய்வம் என கொண்டாடும் அளவுக்கு எனது எண்ணம் ஒன்றும் மழுங்கிப் போய்விடவில்லை. ஆனால் தாய் என்கிற மரியாதை, அன்பு எல்லாம் நிறையவே உண்டு. புத்தர் எனும் மனிதர் சொன்ன கருத்துகள் பிடித்திருக்கிறது என்பதற்காக என்னை பெளத்தனாக்கிக் கொள்ளும் ஆசை என்னிடம் இல்லை. என் முன்னோர்களை நினைத்து கண்ணீர் விட்டுவிடும் அளவுக்கு மனதளவில் நான் ஒரு கோழைதான்.

பெரியோர்களின் ஆசிர்வாதம் என சொல்வார்கள், அதற்காக அல்ல, பிறரின் மனம் புண்படும்படியாய் நடக்கக்கூடாது என்பதில் தான் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். இயேசு கிறிஸ்துவை ஒரு மனிதன் எனச் சொல்ல எனக்கு எவரும் தைரியம் தரத் தேவையும் இல்லை. இத்தனை காலம் மனிதர்களின் மனதில் நிலைத்துவிட்ட அந்த மனிதனை பாராட்டித்தான் ஆகவேண்டிய கட்டாயம் எதுவும் எனக்கு இல்லை.

இறைவன் மிகப்பெரியவன், இறைவனே எல்லாம் என்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. மனிதனே மிகப் பெரியவன், இல்லையெனில் தனது சிந்தனையை சொல்ல இறைவனுக்கு மனித அவதாரங்களும், மனித தூதர்களும் அல்லவாத் தேவைப்பட்டார்கள். அவரவர் காரண காரியங்களுக்கு அவரவரே பொறுப்பு என்பதில் உறுதியாக இருக்கிறேன். பிறரின் உணர்வுகளை மதிக்கும் பொருட்டு நடந்து கொள்வதுதான் மனிதம் என்கிற காரணத்தினாலேயே மனிதம் மீறிச் செயல்படுவோர்களை காணும்போதெல்லாம் நம்மில் பலருக்கு வெறுப்பும் எரிச்சலும் வந்து சேர்கிறது. இது போன்று பல விசயங்கள் கேள்விப்படும்போது எனக்குள் நகைப்புதான் வருகிறது, ஏனெனில் பல நேரங்களில் மனிதம் மீறியச் செயல்களை நாமும் செய்து விடுகிறோம். வேதநூல் மனிதம் மீறிய செயல், எனது பல கட்டுரைகள் மனிதம் மீறிய செயல். பிறர் உணர்வுகளை எங்கேயாவது ஒருவிதத்தில் புண்படுத்தி இருப்பேன், இது தெரிந்தே செய்தது அல்ல, எனது எண்ணங்கள் எவரேனும் ஒருவரை புண்படுத்திவிடும் என்பதை அறிந்தே வைத்திருக்கிறேன், ஏனெனில் வாழ்க்கையில் ஒரே விதமான மனிதர்களை நான் இதுவரை சந்தித்ததே இல்லை.

ஒரு இசைத்தட்டு வெளிவந்தது, அதை இசை அமைத்தவர் வேறு, ஆனால் இசைத்தவர் எனப் பெயரிட்டப்பட்டவர் வேறு. பெயரிடப்பட்டவர் பிரபலமானவர் என்பதற்காகவே அந்த இசைத்தட்டு மிகவும் விற்பனையாகிப் போனது. ஏமாற்றப்பட்டுவிட்டோம் என கூக்குரல் இட்டார்கள். இப்பொது சொல்லுங்கள் இசை கேட்டு வாங்கும் பழக்கம் உடையவர்களாக இருந்தால் மக்கள் ஏமாறுவார்களா? தானாக ஏமாந்து போவார்களாம், ஐயோ ஏமாற்றப்பட்டு விட்டேனே என புலம்புவார்களாம். பரிதாபப்படுவதா எனத் தெரியவில்லை. ஏனெனில் பிறரின் மேல் கொள்ளும் பரிதாபம் அவர்களுக்கு ஒரு வித தூண்டுகோலாகவே முடியும். புனிதநூல்கள் அப்படி என்னதான் சொல்லித் திரிகின்றன என ஆங்காங்கேப் படித்தால் மிகவும் எரிச்சலாக இருக்கிறது. 

2012ல் உலகம் அழியப் போகிறதாமே, அதையும் பைபிளில் எழுதி இருக்கிறதாமே என என்னிடம் கேட்கப்பட்டபோது எனக்கு எரிச்சலாக இருந்தது. இப்படித்தான் 2000த்தில் உலகம் அழியப் போவதாக பைபிளில் சொல்லப்பட்டு இருப்பதாகச் சொல்லித் திரிந்தார்கள். உலகம் அழிவதில்லை, உலகம் மாறுபாடு கொள்கிறது என அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள் என சொன்னால் எவருக்குப் புரியப் போகிறது. அறிவியலின் யுரேனியத்தின் மதிப்பீட்டின் படி இந்த உலகம் பதின்மூன்று பில்லியன் ஆண்டுகள் முன்னால் பெரு வெடிப்புக் கொள்கையின் மூலம் காலம் கொண்டு தொடங்கியது என்பதை படித்தபோதும் என்னால் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இன்றைய காலகட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை வைத்து ஒன்றை தீர்மானிப்பது என்பது எனக்கு அத்தனை செளகரியமாக இல்லை.

எதற்கெடுத்தாலும் இதோ திருக்குரானில் எழுதி இருக்கிறது பாருங்கள். அறிவியல் அனைத்தையும் மிகவும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இதோ கரு உருவாவது பற்றி கூட எழுதி இருக்கிறது, பெரு வெடிப்புக் கொள்கை பற்றியும் எழுதி இருக்கிறது என அறிவியலுடன் இஸ்லாமை இணைத்துப் பார்ப்பதில் பலருக்கு பலவிதமான சந்தோசம். இதில் பல ஆராய்ச்சியாளர்கள் வேறு, ஆமாம், ஆமாம் திருக்குரானில் அப்படியே சொல்லி இருக்கிறது என சான்றிதழ்கள் வேறு. இறைவனையும், மனிதனையும் தனித்தனியே பார்க்கிறதாம் இஸ்லாம். நானும் தான் இறைவனை தனியாக வைத்துப் பார்க்கிறேன், அதற்காக நான் என்ன முஸ்லீமா?! ஒரு தனி மனிதனின் சிந்தனையை இறைவனின் சிந்தனை என எப்போது முலாம் பூசுகிறோமோ அப்போதே தெரிந்து கொள்ள வேண்டியதுதான் இறைவன் வேறு மனிதன் வேறு என்பதை ஒழுங்காகச் சொல்லவில்லை என. இதற்காக கடவுள் என்றே ஒரு பெரும் கவிதையை வடித்து வைத்திருந்தேன். அந்த கவிதையை முடிக்கும் போது இதை எழுதியது நான் அல்ல என கடவுள் சொல்வதாகவே அமைத்து இருந்தேன்.

இஸ்லாம் மட்டுமா அறிவியல் பேசுகிறது, இந்து மதமும் அறிவியல் பேசுகிறது என உதாரணங்கள் காட்டுவார்கள். பார்வதியின் மகன் விநாயகர் உருவான கதை தெரியுமா? தனது உடம்பிலிருந்த அழுக்கை நீக்கியே விநாயகர் உருவாக்கினாராம் பார்வதி. இதையே இப்போது ஸ்டெம் செல் எனும் தத்துவத்தில் அடக்கலாம் என்கிறார்கள். மேலும் விநாயகரின் தலையானது யானை தலை என்பது என அனைவரும் அறிவார்கள். அதையும் அறிவியலின் உறுப்பு மாற்று சிகிச்சையின் முன்னோடி என கதை சொல்லலாமா? புஷ்பக விமானம், திரிசங்கு உலகம் என புராணங்கள் பேசும், வேதங்கள் சொல்லும் பல விசயங்களை அறிவியலுடன் இணைத்தேப் பேசலாம். நோய் தீர்க்கும் ஜெபக்கூட்டங்கள் பற்றி என்ன சொல்வது, ஒரு நோய் அதன் தன்மையைப் பொருத்து மாறுபாடு அடையும். அறிவியலில் ஆச்சரியத்தக்க நிகழ்வு என சொல்வார்கள், அதையே ஜெபக்கூட்டங்கள் செய்வதாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு மனிதருக்கு பிறர் நோய் தீர்க்கும் சக்தி என்பது குறித்து ஒரு கட்டுரையே எழுதி இருக்கிறேன். இப்படி தனிமனித சிந்தனைகளை எல்லாம் புனிதநூல்களில் எழுதப்பட்ட விசயங்களை இன்று நடைபெறுகின்ற விசயத்திற்கு ஒப்புமைப்படுத்தி பேசுவதன் மூலம் புனித நூல்கள் களங்கம் அடைகின்றனவேயன்றி பெருமை கொள்வதாகத் தெரியவில்லை.

இப்படித்தான் இந்த மதங்களை எல்லாம் ஒழித்துவிட்டு ஒரு புதிய கொள்கைகள் உருவாக்க வேண்டும் என சொன்னபோது மத ஒழிப்பு எப்போதுமே நடைபெற வாய்ப்பில்லை என்பதுதான் முற்றிலும் உண்மையாகிப் போனது. அக்பரின் தீன் இலாஹி என்னவானது? கடவுள் இல்லை எனச் சொன்ன புத்தரே கடவுளாகிய பரிதாபம் நிகழ்ந்தேறியது இந்த பூமியில் தான் என சொல்வார்கள். மேலும் நமது கொள்கைகள் கூட பின்னாளில் மதம் எனும் சாயம் பூசப்பட்டு விடும் அபாயம் மிகவும் அதிகமாகவே உள்ளது. மனிதர்கள் தொடங்கிய காலத்திலிருந்தே பிரிவுகளும், பிரிவினைகளும் தவிர்க்க முடியாததாகிப் போய்விட்டன. தீபாவளியோடு ரம்ஜான் கிறிஸ்துமஸ் என ஒரே ஒரு விழாவாக கொண்டாட இயலாத மக்கள் வெறும் இனிப்புகளால் ஒற்றுமைச் சொல்லித் திரிவார்கள். நானும் புன்னகை புரிந்து கொண்டு போவேன்.

எனக்கு மதங்களைத் திட்ட இயலாது, ஏனெனில் மனிதர்களை அல்லவாத் திட்டி தீர்க்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. சக மனிதர்களை அன்புடன் பாவிக்காத எவருமே தன்னை நாத்திகர் என்றோ ஆத்திகர் என்றோ சொல்லித் திரிய வேண்டிய அவசியம் இல்லை, சக மனிதரை அன்புடன் பார்க்காதவர்கள் அனைவருமே மாக்கள் எனத் திட்டிவிடத்தான் தோன்றுகிறது, அட என்னைத் திட்டுவது போல் அல்லவா இருக்கிறது.

Wednesday 24 March 2010

இல்லாத பிரச்சினையை எப்படி உருவாக்கினேன்?

அடிப்படை அறிவு 

மேற்குறிப்பிட்ட இந்த பதிவுதனை ஒருவேளை நீங்கள் படித்து இருந்தால் மட்டுமே மேற்கொண்டு படியுங்கள். ஏனெனில் அப்பொழுதுதான் என்ன சொல்ல வருகிறேன் என ஓரளவுக்குப் புரியும். என் மேல் கோபம் கோபமாகத்தான் வந்து கொண்டிருந்தது. ஒருமுறை எனில் மன்னித்துவிடலாம், ஆனால் இதையேத் தொடர்ந்து செய்து வரும்போது ஏன் இது போன்று நடந்து கொள்கிறேன் எனும் கோபம் பொறுத்துக் கொள்ளக்கூடியதுதான். இதைச் சொல்லும் போதே நான் முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த பொட்டிப்புரம் எனும் கிராமத்துக்கு அருகில் வாழ்ந்த தாத்தா ஒருவர் பாடிய 'கோபம் ஏனய்யா, நாம சாவது நிசமய்யா' எனும் பாடல் நினைவுக்கு வந்து தொலைகிறது.

சரி ஒரு விஷயத்தை பற்றிய பிரச்சினை என வரும்போது அதற்கான காரணிகள் என்னவாக இருக்கும் என அலசிக்கொள்வது என்பது எத்தனை சுலபமான செயலாக இருக்க வேண்டியது. ஆனால் பல வேளைகளில் நாம் என்ன செய்கிறோம்? ஒரு சுலபமான விசயத்தைப் பற்றிய அறிவை சிந்திக்காமல் என்னவோ ஏதோ என பதறி விடுகிறோம். எங்கள் ஊர் உப்புநக்கி பாட்டி கூட செத்துப் போகும் முன்னர் இதை பலருக்குச் சொல்லி இருப்பார்கள். 'பதறிய காரியம் சிதறிப் போகும்' என.

எவருக்குத்தான் பழமொழியின் மேல் அக்கறை இருக்கப் போகிறது. இது இயந்திர உலகம், ஓடிக்கொண்டே தான் இருக்க வேண்டும், நின்று சிந்தித்துக் கொள்வதில் நேரம் செலவழிக்கக் கூடாது என்றே அனைவருக்கும் நினைவு இருக்கும். ஆனால் நாம் செலவழிக்கும் நேரங்களைப் பார்க்கும் போது பல நேரங்கள் பயனில்லாத வகையில் செலவாகிக் கொண்டேதான் இருக்கும். கோபம் கோபமாக வருகிறது என்று சொன்னாலும் மனதில் எனது அறியாமை விலகிக் கொண்டதை நினைக்கும் போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

இப்பொழுது விசயத்துக்கு வருவோம். முதலில் அந்த பதிவில் குறிப்பிட்ட இணையதளம் பற்றியது. முதல் பக்கத்துக்கு உதவி பக்கம் என ஒன்றை இணைக்க வேண்டும், ஆனால் நான் செய்த முறையில் உதவி பக்கம் என்னால் இணைக்கவே முடியவில்லை. சரி என சம்பந்தபட்டவர்களை அணுகினேன். அவர்களும் சொன்னார்கள் எல்லாம் சரியாகவே இருக்கிறது இதோ ஒரு உதவிப்பக்கம் இணைத்து காட்டுகிறேன் என இணைத்து காண்பித்தார்கள். எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. சரி என நானும் இணைத்துப் பார்த்தேன். இணையவே இல்லை. அது சரி, எப்படி இணைப்பது எனத் தெரிந்தால் தானே இணைப்பது.

ஏதேனும் வேறு வழியில் இணைக்கிறார்களோ என நினைத்து, துணைப் பக்கம் எப்படி இணைப்பது எனச் சொல்லித் தாருங்கள் என அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டு வைத்தேன். இதோ இதைப் பார்த்துத் தெரிந்து கொள் என ஒரு படம் அனுப்பினார்கள். எனக்கு எங்கள் ஊர் ஆசிரியர்கள் நினைவுக்கு வந்து போனார்கள். இந்நேரம் பக்கத்தில் அமர்ந்து இப்படி செய்யனும், அப்படி செய்யனும் என அருமையாய் சொல்லித் தந்து இருப்பார்கள். நானும் ஆவலுடன் அதை கற்று இருந்திருப்பேன். ஆனால் அவர்கள் அனுப்பிய படத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை, இப்படித்தானே செய்தோம், ஆனால் செய்ய இயலவில்லையே தோன்றியது. அவர்கள் இணைத்து இருந்த உதவிப் பக்கத்தை வேறொரு பக்கத்துக்கு மாற்றிப் பார்த்தேன். அட, மாறியது. கற்றுக்கொண்டேன். ஓ இவ்வளவுதானா என மனம் சொன்னது. இல்லாத பிரச்சினையை எப்படியடா உருவாக்கினாய் எனக் கேட்டுக் கொண்டேன்.

அது மட்டுமல்ல, மற்றொரு பிரச்சினையையும் அவர்களிடம் சொல்லி இருந்தேன். அதாவது எடிட்டர் பொத்தான்கள் தொலைந்து போகிறது என. அதற்கு அவர்கள் ஒருபோதும் பதில் சொல்லவில்லை, சொன்ன பதில் என்னவோ எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது மட்டுமே. ஸ்கிரீன் ஸாட் எடுத்து அனுப்பச் சொன்னார்கள். நானும் அனுப்பினேன். அதைப் பார்த்த பின்பும் ஒரு பதிலும் சொல்ல வில்லை. எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்றார்கள். எனக்கு வருத்தமாகப் போய்விட்டது. அதெப்படி உங்களுக்கு மட்டும் நன்றாக இருக்கிறது என கேட்டே விட்டேன். இதுவரை பதில் அளித்த ஆண்கள் சரியாகச் சொல்லவே இல்லை. ஒரு பெண்மணி பதில் அனுப்பினார், ஒழுங்காக உனது பிரச்சினை என்னவென சொல் அப்பொழுதுதான் உனக்கு என்னால் உதவ இயலும், மேலும் தேவையெனில் இந்த உதவிகளை படி என ஒரு இணைப்பு தந்து இருந்தார். எனக்கு பெண்கள் என்றாலே ஒருவித பயம் தொற்றிக்கொள்ளும், ஏனெனில் அவர்கள் அறிவுக்கூர்மை வாய்ந்தவர்கள். அந்த இணைப்பை படித்துப் பார்த்தேன். அப்பொழுதுதான் எழுதி இருந்தது, மொஜில்லா, நெருப்பு நரி, இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் மட்டுமே இந்த எடிட்டர் பொத்தான்கள் வேலை செய்யும் என இருந்தது. எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. நான் உபயோகித்ததோ கூகிள் குரோம். உடனே இண்டெர்நெட் எக்ஸ்ஃப்ளோரரில் சரி செய்து பார்த்தேன், அட ஒரு பிரச்சினையும் இல்லாமல்தான் இருந்தது.

இல்லாத பிரச்சினையை இப்படியும் உருவாக்கிக் கொண்டேன், ஆனால் அவர்களிடம் ஒன்று மட்டும் சொல்ல நினைத்துக் கொண்டேன், கூகிள் குரோம் ல் எடிட்டர் பொத்தான் வேலை செய்யும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என. மேலும் எவரேனும் இதுபோன்ற பிரச்சினை என வந்தால் என்ன உபயோகிக்கிறீர்கள் எனும் கேள்வியையும் எழுப்புங்கள் என.

இப்படித்தான் ஒருமுறை தமிழ்மணத்தில் பதிவு இணைக்க இயலவில்லை என நினைத்து உடனடியாக ஒரு பதிவு எழுத பல பதில்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு அளித்தது, அதைப்போலவே முன் சொன்ன பதிவின் மூலம் ஒரு ஆராய்ச்சியாளரின் உதவியும் கிடைக்க இருக்கிறது.

பிரச்சினைகள் என நமக்குள்ளே மூழ்கிக் கொண்டிராமல் வெளியேயும் எட்டிப் பார்க்கச் சொல்கிறது எனது எண்ணங்கள், உலகில் உதவும் எண்ணம் கொண்டவர்கள் மிகவும் அதிகமாகவே இருக்கிறார்கள் என்பது எனக்கு எப்பொழுதும் நினைவில் இருக்கிறது.

தனிமனித கவலைகள், கனவுகள் யாவும் சமுதாய கவலைகள், கனவுகள் ஆகட்டும். அப்பொழுதாவது சமுதாயம் விழித்துக் கொள்ளும் நிலை வரும்.

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை 10


ஒரு தனிமத்தை பிரித்தெடுப்பது என்பது அந்த தனிமத்தின் வினைத்தன்மையை பொருத்தது என அறிவோம். ஒரு தனிமம் தன்னிடமிருந்து எலக்ட்ரான்களை இழக்கும்போது பெரும் தன்மையும், எலக்ட்ரான்களை பெறும்போது பெறும் தன்மையும் வைத்தே அதனை பிரித்தெடுக்க முனைந்தார்கள். இதனை எலக்ட்ரோலைசிஸ் எனச் சொல்வார்கள். மின்சார வேதிப் பகுபாடு எனலாம்.

தனிமங்களைப் பிரித்தெடுக்கும் முன்னர் இருமல் பற்றிய கருத்தரங்கு பற்றி இங்கே குறிப்பிடுகிறேன். இருமல் பற்றிய கருத்தரங்கு மூன்று தினங்கள் நடந்தது. நூற்றுக்கும் குறைவாகவே கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் இந்த கருத்தரங்கு நடந்தது. 

ஒருவருக்கு இருமல் ஏன் வருகிறது? எதனால் வருகிறது? அதை எப்படி தடுப்பது என்பது குறித்து ஆராய்ச்சிகளைப் பேசினார்கள். இருமல் நமது உடலுக்கு ஒரு தடுப்புச் சாதனம் அதை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும் என ஒருவர் கேட்டார். இருமல் தடுப்புச் சாதனம்தான் ஆனால் அதுவே ஒருவருக்குத் தொடர்ந்து வரும்போது எவ்வளவு அவதி என்பதை இருமினால்தான் தெரியும் என்றார் அதற்கு பதில் அளித்தவர். 

பேசினால் இருமல் வருகிறது, சிரித்தால் இருமல் வருகிறது, வெயிலில் நின்றால் இருமல் வருகிறது, குளிர் அடித்தால் இருமல் வருகிறது. இப்படி சகலத்துக்கும் இருமல் வருகிறது இதைத் தடுக்க வழி இல்லையா என ஆராய்ச்சியாளர்கள் பேசியதைப் பார்க்கும்போது இன்னும் நிறைய தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்றுதான் பட்டது. ஆனால் இருமல் எதனால் ஏற்படுகிறது என மூளையில் ஏற்படும் மாற்றங்களை படம்பிடித்து போடும் அளவிற்கு ஆராய்ச்சி முன்னேறி இருப்பது வியத்தகு சாதனையே. 

மத்திய நரம்பு மண்டலமா, சுற்றியுள்ள நரம்பு மண்டலமா இருமலுக்கு காரணம் எனப் பார்க்கும்போது இரண்டும்தான் என பதில் அளித்தார்கள். பல சுவாரஸ்யமான தகவலுடன் கருத்தரங்கு நடைபெற்றது. இருமலுக்கு என ஒரே ஒரு மருந்துதான் இதுவரை வெளிவந்து உள்ளது. அதுவும் அந்த மருந்து ஒரு செடியிலிருந்து பிரித்தெடுத்து இருக்கிறார்கள். குவெய்ஃபெனசின் என அந்த மருந்தின் பெயர். இதுதான் இருமலுக்கு என அங்கீகரிக்கப்பட்ட மருந்து. மற்றதெல்லாம் அலர்ஜியை கட்டுப்படுத்தக்கூடியவையே. பல மருந்துகள் ஆராய்ச்சிநிலையிலே இன்னும் இருக்கின்றன என்பது வருந்ததக்க விசயம். 

எனது ஆராய்ச்சியை பற்றி எழுதும்போது இது குறித்து மிக விளக்கமாக எழுதுகிறேன். ஏனெனில் நான் முதன்முதலில் எடு்த்துக்கொண்ட ஆராய்ச்சியும் இப்போது செய்து வரும் ஆராய்ச்சிக்கும் அதிக தொடர்பு உண்டு. 

மின்பகுப்பு முறையானது சில தனிமங்களை பிரித்தெடுக்க உதவுகிறது. பொதுவாக மின்பகுப்பு முறையில் புரட்டான்களும், எலக்ட்ரான்களும் சுதந்திரமாக வலம் வர வேண்டும். அப்படியில்லாதபட்சத்தில் பிரித்தெடுப்பது என்பது இயலாத ஒன்று. 

மின்பகுப்பு முறைக்கு உட்படுத்தப்படும் தனிமம் எலக்ட்ரான்களை இழக்க தயாராக இருக்க வேண்டும். நேரணுக்கள், எதிரணுக்கள் அவசியம். அதைப்போல நேரணுக்களைப் பெற எதிர் மின்கடத்தி, எதிரணுக்களைப் பெற நேர் மின்கடத்தி அவசியமாகிறது. 

மின்சாரத்தைப் பாய்ச்சும்போது தனிமமானது தன்னிலை இழக்க வேண்டும். பொதுவாக தண்ணீரில் அந்த பொருளை கரைத்து இருக்க வேண்டும் அல்லது உருகிய நிலையில் இருக்க வேண்டும். திடப்பொருளாக இருக்கும்பட்சத்தில் எலக்ட்ரான்கள் சுதந்திரமாக இருப்பது கடினமாகும். 

உதாரணத்திற்கு அலுமினியம் எடுத்துக்கொள்வோம். இது பாக்ஸைட்டாக கிடைக்கிறது. அதாவது அலுமினியம் ஆக்ஸைடாக பூமியிலிருந்து கிடைக்கிறது. இதில் அலுமினியம் நேரணுக்கள் கொண்டது. ஆக்ஸிஜன் எதிரணுக்கள் கொண்டது. இந்த பாக்ஸைடிலிருந்து அலுமினியத்தை பிரிக்க அப்படியே உபயோகிக்க இயலாது, காரணம் வெப்பநிலை மிகவும் அதிகமாகும். மேலும் இந்த பாக்ஸைட்டுடன் வேறு சில பொருட்கள் கலந்து இருக்கும். அவைகளை கரைத்தல் முறை மூலம் நீக்கலாம். பாக்ஸைட்டை பிற கலப்பட பொருட்களிலிருந்து நீக்கிவிட்டு அதனுடன் கிரையோலைட் எனப்படும் பொருளை கலக்க வேண்டும். இப்போது பாக்ஸைட் 900 டிகிரியிலே உருக ஆரம்பிக்கும். இதற்கு முன்னர் 2000 டிகிரி வேண்டும். 

இந்த நிலையை அடைந்தவுடன் இதனை மின்பகுப்பு பானையில் போட்டு மின்கடத்திகளை இணைக்க வேண்டும். மின்சாரம் பாய்ச்சியவுடன் பாக்ஸைடிலிருந்து அலுமினியம் நேர் சக்தியுடனும், ஆக்ஸிஜன் எதிர் சக்தியுடனும் பிரிகிறது அவ்வாறு பிரிந்து நேர் சக்தி எதிர் மின் கடத்திக்கும், எதிர் சக்தி நேர் மின் கடத்திக்கும் செல்கிறது. கார்பன் மின்கடத்தியாக உபயோகிக்கப்படுகிறது. ஆக்ஸிஜன் கார்பனுடன் சேர்ந்து கரியமில வாயுவாக மாறிவிடுவதால் அந்த மின்கடத்தியை அடிக்கடி மாற்றுவது அவசியமாகும். இவ்வாறு அலுமினியம் பிரித்தெடுக்கப்படுகிறது. 


ஒரு வேதியியல் வினை என்பது அத்தனை எளிதான விசயமல்ல என்பதை மீண்டும் நிரூபிக்கும் முறையாக சில வேதியியல் வினைகளை மேற்கொண்டதில் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த வேதிவினையை சில காரணங்களால் இங்கு எழுதி விளக்கமுடியாத நிலை. இந்த ஒருங்கிணைந்த மூலக்கூறுகள் மருந்துகளாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இவைகளை இப்போது மறைத்து வைக்க வேண்டிய கட்டாயம். 

வேதியியல் வினைக்கு வருவோம். 

1. இரண்டு வெவ்வேறு தொடக்க மூலக்கூறுகள். சிறு மாற்றம் மட்டுமே ஒரு மூலக்கூறுக்கும் மற்றொரு மூலக்கூறுக்கும்.

2. இந்த இரண்டு மூலக்கூறும் வினைபுரியக்கூடிய காரணிகள் ஒன்றுதான். அந்த காரணிகளில் எந்த மாற்றமுமில்லை.

3. எல்லா சூழலும் ஒன்றாக இருக்க ஒரு மூலக்கூறு மட்டுமே நினைத்தபடி வினைபுரிந்தது, மற்றொரு மூலக்கூறு வேறு விதமாக வினைபுரிந்தது. 

இப்படி சிறு மாற்றங்களே கொண்ட மூலக்கூறு வினைபுரியும் தன்மை மட்டும் வேறுபாடன்றி, நமது உடலில் அவை செயல்படும் முறையும் வித்தியாசமாக இருப்பது வியப்புக்குரியதுதான். 

மேலும் இப்பொழுதெல்லாம் தொழில் நுட்ப முன்னேற்றத்தால், முன்னர் போல் இந்த வியாதிக்கு இந்த மூலக்கூறு சரியாக இருக்கும் என உட்கார்ந்து யோசிக்க வேண்டியதெல்லாம் இல்லை. கணினியில், வியாதிக்கு காரணமான ரிசெப்டார் (receptor) எதுவென கொடுத்தால் அந்த ரிசெப்டாரில் சென்று உட்காரும் மூலக்கூறுகள் என பல மூலக்கூறுகளை தந்துவிடுகிறது. ஆனாலும் ஒரு மருந்தை உருவாக்குவது என்பது இன்னும் அத்தனை எளிதான காரியமாகவே இல்லை! விரைவில் அதற்கான வழியை கண்டுபிடிப்போம். 

வேதியியலை விளங்கிக் கொள்ளவே முடிவதில்லை. சில நேரங்களில் மிகவும் மனதை தளர்வடையச் செய்துவிடும். ஒரு ஒருங்கிணைந்த மூலக்கூறினை உருவாக்கிவிட்டோம் என இறுமாந்து இருந்துவிடமுடியாதுதான். ஒரு ஒருங்கிணைந்த மூலக்கூறினை உருவாக்கி அந்த மூலக்கூறு சரிதானா என ஆதாரத்துடன் காண்பிக்க வேண்டும். 

நிறை மட்டும் எத்தனை புரோட்டான் உள்ளது என ஆராய வேண்டும். அவை சரியாக இருந்தால் ஓரளவு நம்பிக்கை கொள்ளலாம். ஆனால் அதற்கு மேலாக அந்த மூலக்கூறில் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், குளோரின் என அனைத்தும் சரியான விகிதத்தில் அமைந்திருக்க வேண்டும். இவை சரியாக அமைந்திருந்தால் மட்டுமே அந்த மூலக்கூறு மிகவும் தூய்மையான ஒன்றாக கருத முடியும். 

இப்படி ஒருமுறை ஒரு மூலக்கூறினை உருவாக்கி ஆராய்ந்தபோது சம்பந்தமே இல்லாமல் இருந்தது. செய்முறை எல்லாம் சரி செய்து பார்த்தபின்னரும் இந்த விசயம் ஆச்சரியமாக இருந்தது. இந்த பணியை செய்தவரிடம் கேட்டபொழுது அவர்களும் மிகச்சரியே, மூலக்கூறில் தான் பிரச்சினை என்றார்கள். 

சில நாட்கள் பின்னர் அதே மூலக்கூறினை அனுப்பியபோது மிகச் சரியான விகிதத்தில் இருந்தது. நான் முதலில் அனுப்பியதுதான் என்ன என கண்டுபிடிக்கவே இயலவில்லை. அவர்கள் தவறு செய்யவில்லை எனவும் சொல்லிவிட்டார்கள். 

ஒரு ஒருங்கிணைந்த மூலக்கூறு உருவாக்குவது என்பது இந்த பணியில் இருப்போர்க்கு மிகவும் எளிதாக இருக்கக்கூடும். சில வேளைகளில் மிகவும் கடினமானதாகவே இருக்கிறது. 

முன்னர் சொன்னதுபோல இத்தனை சிரமம் பட்டு செய்தாலும் பல்லாயிரம் மூலக்கூறுகளில் ஒரு மூலக்கூறு மட்டுமே நாம் எதிர்பார்க்கும் பலன் தருகிறது என்பது மருத்துவ உலகிற்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் போராட்டம் தான். 

ஒரு மருந்தைக் கண்டுபிடிப்பது குறித்து ஆய்வகம் இல்லாத அந்த காலத்தில் என்ன முறையைக் கண்டுபிடித்தார்கள் எனத் தெரியவைல்லை. ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் உண்மையிலேயே நோய் தீர்க்கும் மருந்தாக இருந்ததுதான் மிகவும் ஆச்சரியம். முன்னோர்கள் சொன்னது என்றே வைத்துக்கொள்வோம், முன்னோர்களுக்கு யார் சொன்னது என கேள்வி வந்து சேரும். தேடித் தேடி அலுத்துப் போயிருப்பார்கள் தான்.

ஆய்வகம் இல்லாத சூழ்நிலையினால் மொத்தமாக சாற்றினைப் பிழிந்து அப்படியே உபயோகித்த வழக்கம்தான் இருந்து வந்தது. அதுவும் ஒன்றை மட்டும் தராமல் பிற செடி இனங்களையும் அரைத்து தரும் வழக்கம் இருந்தது. இப்படி ஒன்றோடு ஒன்று இணைவதால் என்ன விளைவுகள் வந்தது, என்ன நேர்ந்தது என எவரேனும் ஒருவேளை எழுதி இருக்கலாம். மருத்துவம் எழுதிய நமது போகர் சித்தர் போல. போகர் சித்தர் எழுதியதாக நான் கேள்விபட்டதுதான் உண்டு. ஆனால் இதுவரை அவர் எழுதியதைப் படித்தது கூட இல்லை என்பதே உண்மையான விசயமாகும். 

நாளடைவில் பாட்டி வைத்தியம் என சொல்லும் அளவிற்கு மிகவும் பிரசித்தி பெற்று இருந்தது இந்த வைத்திய முறைகள். அதுவும் தலை வலித்தால் என்ன பண்ணுவார்களாம் எனில், தலையில் பக்கவாட்டில் ஒரு ஓட்டை போடுவார்களாம். இதுதான் அறுவை சிகிச்சைக்கான முதல் படி. ஏதாவது வெட்டு பட்டால் அதை சுற்றி இலைகள் வைத்துக் கட்டுபோடுவதுதான் வழக்கமாக இருந்தது. மாவுக் கட்டு தெரியாத கிராமவாசி இருக்க முடியாது. பின்னர் உடலைக் கூறுபோட்டு என்ன இருக்கிறது எனப் பார்க்கத் தொடங்கிய காலமும் உண்டு. 

இப்படி மொத்த மருத்துவமும் உள்ள செடியை முதன்முதலாகப் பிரித்து எடுத்துப் பார்க்க ஆசை வந்தது. எப்படி மருந்து உருவானது என்பது ஒரு பெரிய கதைதான். இப்படி செடிகள் தரும் மருந்து என்ன என நினைத்தபோதுதான் ஒரு எண்ணம் உதயமானது. 

அந்த செடியை காயவைத்தார்கள். பொடியாக்கினார்கள். தண்ணீரிலும் பிற ரசாயனங்களிலும் மூழ்க வைத்தார்கள். இந்த முறைதான் ஒரு மூலக்கூறினைப் பிரித்தெடுக்க வைத்த வழியாகும்.

Tuesday 23 March 2010

அடிப்படை அறிவு

எனக்கும் ஒரு கனவு இருந்துச்சிங்க, எப்படியாவது ஒரு இணைய தளம் ஆரம்பிச்சிரனும்னு ஒரு தீராத ஏக்கமாத்தாங்க அந்த கனவு. இயற்பியல், வேதியியல், உயிரியல் அப்படினு எல்லா அறிவியலையும் ஆங்கிலத்தில எழுதி படிப்புக்கு உதவக்கூடிய இணையதளமா மாத்திரலாம்னு ஒரே கனவு. போன வருசம் ஆரம்பிச்சேன்.

ஒரு வருசம் மேல ஓடிப் போச்சு, இன்னமும் அப்படியேதான் அந்த இணையதளம் ஒரு வளர்ச்சியும் அடையாம இருக்கு. உருப்படியா ஒரு விசயத்தைச் செய்யனும்னா ஒன்னு ஆளு வைச்சி வேலை செய்யனும், இல்லைன்னா சுயமா விசயங்கள் கத்துக்கிட்டே ஒரு செயலை செய்யனும். நான் ரெண்டாவது கட்டத்துக்கு டிக் பண்ணினதால பெரிய தலைவலியாத்தான் போச்சு. யார்கிட்டயும் போய் உதவினு கேட்டாலும், மத்தவங்க வந்து செய்றதுக்கு அவங்களுக்கு நேரமும் இருக்கனும்.

முத முத எழுதினப்போ நல்லாத்தான் இருந்துச்சு, அப்படியே தொடர்ந்து செஞ்சிருக்கலாம் ஆனா அதுல முழு கவனமும் செலுத்தாம திடீரு திடீருனு போய் மாத்தம் செஞ்சதால ஒரு முறை என்னவோ பண்ண போய் இப்போ ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்குது.

சைட் பில்டருல ஏகப்பட்ட குளறுபடியா இருக்கு. ஹெச் டி எம் எல் ஐ என்ன பண்ணினோ தெரியலை எடிட்டர் வருது அப்புறம் ஓடிப் போயிருது. இப்படியே போனாக்கா கடைசியில ஒன்னுமே எழுத முடியாமத்தான் போயிரும்னு ஒரு பயம் வேற வந்துருச்சு.

இனிமே அடிப்படை அறிவை வளர்த்துட்டு செய்யலாம்னு பார்த்தா நாளுதான் ஓடிட்டே இருக்கு, சம்பந்தபட்டவங்ககிட்ட ஒரு மெயில் அனுப்பி இருக்கேன், போன தடவை சொன்னப்போ எங்ககிட்ட சொல்லுங்க நாங்க சேர்க்கிறோம்னு சொன்னாங்க, ஒவ்வொரு தடவையும் அப்படி செய்ய முடியுங்களா? இதோ இப்படி பிளாக்ல எழுதறது எத்தனை ஈசியா இருக்கு, இதுக்கு எனக்கு ஏதுங்க அடிப்படை அறிவு. ஆனாலும் எத்தனையோ டெம்ப்ளேட் மாத்தி மாத்தி ஏதோதோ செஞ்சி இந்த ப்ளாக்ல விளையாடினேன், ஆனா அந்த இணையதளத்தில மட்டும் ஒன்னுமே செய்ய முடியலை.

வெறும் கனவோடு மட்டுமே இருக்கு அந்த இணையதளம். கண்ட்ரோல் பேனல் பாஸ்வேர்டு வேற அடிக்கடி மறந்து போகுது. ஒரு இணையதளத்தை எப்படி சிறப்பா வடிவமைக்கிறதுனு தமிழுல யாரச்சும் பாடம் நடத்துவாங்களானு பாத்துட்டே இருக்கிறேன், கனவு நனவாகிரும்.

http://www.remainforever.co.uk இதுதான் இணையதளம்

Friday 19 March 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 9

வேதியியல் பாடம் மிகவும் சிரமம் என பல மாணவர்கள் கருதுகிறார்கள். இங்கிலாந்து நாட்டில் மருத்துவ படிப்பிற்கு மிகவும் முக்கியமாக வேதியியல் பாடம் கருதப்படுகிறது. உயிரியில் பாடம் ஒரு வருடம் படித்தால் கூட போதும், ஆனால் வேதியியல் பாடம் இரண்டு வருடம் படிக்க வேண்டும். கொஞ்சம் கற்பனையுடன்  படிக்கத் தொடங்கி விட்டால் எல்லாம் மிகவும் எளிதாகிவிடும். ஆனால் அடிப்படை அறிவினை முறையாக கற்றுக்கொள்ளாமல் நாம் பயிலும்போது சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். 

எனக்கு அத்தனை ஆழமாக வேதியியல் ஒன்றும் தெரியாது, வேதியியல் மட்டுமா எந்த ஒரு விசயமும் எனக்கு சரிவரத் தெரியாது. தேர்வுக்கு படித்து, தேர்வில் தோற்றுப் போய்விடக்கூடாதே என்ற அச்சத்தில் படித்து தெரிந்து கொண்டேன் எனச் சொல்லலாம், புரிந்து கொண்டேன் எனச் சொல்ல முடியாது. வேதியியல் வினையானது நடக்க ஒரு மூலக்கூறு உடைய வேண்டும், உடைந்தவுடன் மற்றொன்றுடன் இணைந்து புதியதாக ஒரு மூலக்கூறு உருவாக வேண்டும். இது அத்தனை எளிதில் புத்தகத்தில் இருப்பது போன்று நடைபெறுவதில்லை. 

நான் புதிதாக ஆராய்ச்சிக்கூடத்தில் வந்து இணைந்ததும் எனது ஆய்வுக்கூடத்தில் என்னிடம் ஒரு மூலக்கூறினை உருவாக்கச் சொன்னார்கள். அந்த கடைசி மூலக்கூறினை அடைய பத்து பாதைகள் கடக்க வேண்டும். ஒவ்வொரு பாதையிலும் ஒரு மூலக்கூறு கிடைக்கும், அதில் மாற்றம் செய்து அடுத்த மூலக்கூறு, அதற்கடுத்து அதில் மாற்றம் செய்து என கடைசியில் இந்த மூலக்கூறினை பெற வேண்டும். என்ன ஆச்சரியம் அழகாக அந்த மூலக்கூறினை உருவாக்கி விட்டேன். இது அந்த ஆய்வுக்கூடத்தில் மற்றவர்களால் முன்னரே செய்ததுதான். எனவே மிகவும் எளிதாக இருந்தது. இதை என்னைச் செய்ய சொன்னதன் காரணம், நான் மருந்தாக்கியல் மட்டுமே படித்திருந்தேன், மருத்துவ வேதியியல் தனிப்பட்ட முறையில் செய்தது இல்லை, ஆதலால் எனக்கு வேதியியல் முறை அனுபவப்படட்டும் என செய்யச் சொன்னார்கள். 

பின்னர் இந்தியாவில் பெங்களூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஆய்வுக்கூடத்தால் செய்யப்பட்ட மூலக்கூறினை நான் எனது ஆராய்ச்சிக்காக செய்ய வேண்டும். இதுதான் எனது முதல் பணி. நான் கொடுக்கப்பட்ட முறைப்படி செய்தேன், ஆனால் நான் உருவாக்கின மூலக்கூறும், அவர்கள் உருவாக்கியதாக கூறப்பட்ட மூலக்கூறும் வெவ்வேறாகவே இருந்தது. பலமுறை மாற்றங்கள் செய்தும் ஒரே மாதிரியாக வரவே இல்லை. ஆய்வுக்கூடத்தில் இருந்த சிறந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூட முயற்சி செய்து பார்த்தார், ஆனால் நான் உருவாக்கியதைப் போலவே அவரும் உருவாக்கியதும் அப்படியே அந்த மூலக்கூறினை வைத்துக் கொண்டோம். இதுவரை அந்த மூலக்கூறினை யாருமே உருவாக்காமல் இருந்ததால் நான் அந்த மூலக்கூற்றுக்கு பார்வரைன் என பெயரிட்டேன். துரதிருஷ்டம் அந்த மூலக்கூறு மருந்தாகும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. பார்வரைன் முடங்கிப் போனது. ஆராய்ச்சிக் கட்டுரையில் சொல்லப்பட்டு இருப்பதை போல எளிதாக செய்யலாம் என நினைத்த எனக்கு அந்த மூலக்கூறு அற்புதமான பாடம் சொல்லிக் கொடுத்தது. எனது ஆராய்ச்சிக்கான பொறுமையை கற்றுத் தந்த முதல் மூலக்கூறு அதுதான். எனவே வேதியியல் படிப்பதற்கும் செய்முறைக்கும் வித்தியாசப்படும். தெரிந்து கொண்ட அறிவினை கொண்டு முயற்சிகள் செய்தால் முடியலாம். இந்தியா ஆய்வுக்கூடத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் பதில் அளிக்க சற்றும் முயற்சிக்கவில்லை. எனவே அந்த மூலக்கூறினை உருவாக்கும் எண்ணம்தனை கைவிட்டு விட்டோம். 

இந்த கதை இங்கு எதற்கு என்றால் எப்படி ஒரு வேதியியல் வினையானது நடைபெறுகிறது, அதற்கான காரணிகள் எவை என்பது குறித்துப் பார்க்கப் போகிறோம். 



ஒரு வேதி வினையானது நிகழ்வதற்கு தேவையான காரணிகள் எனப் பார்த்தால், சாதாரணமாக ஒரு வேதி வினையானது எங்கும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. உதாரணமாக ஆக்ஸிஜன் தனித்து இருப்பதில்லை, மற்றொரு ஆக்ஸிஜனுடன் இணைந்து ஒரு மூலக்கூறாக மாறிவிடுகிறது. இதைப் போன்று வாயுவில் இருக்கும் நைட்ரஜனும் அவ்வாறே, ஹைட்ரஜனும் அவ்வாறே. இதற்காக எந்தவொரு குடுவையும் தேவையில்லை. 

பூமியானது சூரியனிலிருந்து பிரிந்து நீள்வட்டத்தில் சுற்றி வந்து கொண்டு இருந்தபோது பில்லியன் காலங்களுக்கு மீத்தேனும் அம்மோனியாவும் அதிக அளவில் இருந்ததாக அறிவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எரிமலை குழம்புகள் வெளிப்படும் போது இந்த அம்மோனியா அதிக அளவில் உருவாகிறது. ஒரு வேதியியல் வினையினை பார்ப்போம். இங்கு நான் குறிப்பிட போவது எழுத்துருவிலான வேதியியல் வினைதான். மூலக்கூறு கொண்டு பின்னர் எழுதலாம்.

ஹைட்ரஜன் + நைட்ரஜன் -----------> அம்மோனியா 
                                              <-----------

(அம்புக்குறி பாதியாகத்தான் இருக்க வேண்டும்) 

இதுதான் வேதியியல் வினை. இங்கே மூன்று பங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு நைட்ரஜனும் வினைபுரிந்து இரண்டு பங்கு அம்மோனியா உருவாகிறது. இந்த வினையானது நடக்கும்போது வெளிவினையாதல் வெப்பம் அதிகரிகரிக்கிறது. அதாவது வெப்பத்தை இந்த வினையானது உண்டு பண்ணுகிறது. இந்த வினையானது அவ்வாறு நடக்கட்டும் என இருந்தோம் எனில் பல நாட்கள் ஆகலாம். 

ஆனால் அம்மோனியாவை உடனடியாக உருவாக்க வேண்டும் எனில் அதிக வெப்பத்தினையும், அதிக அழுத்தத்தையும் நாம் இந்த வேதியியல் வினைக்குத் தர வேண்டும். மேலும் வினையூக்கி இருந்தால் இன்னும் வேதி வினையானது வேகமாகச் செல்லும். ஆனால் வெப்பத்தை அதிகரித்தால் லீ சாட்லியர் தத்துவப்படி வெளிவினையாதல் வெப்பம் தரும் வேதியியல் வினையானது முன்னோக்கி செல்லாது பின்னோக்கி செல்லும். பின்னர் எப்படி வேகமாக அம்மோனியா உருவாகும்? ஆனால் வெப்பம்தனை அதிகரித்தால் அம்மோனியா வேகமாக உருவாகிறது. இது எதனால் எனில் சுழல் முறை. ஹைட்ரஜனும் நைட்ரஜனும் 100% அம்மோனியா தரும். ஆனால் 10% அம்மோனியா மட்டுமே மிஞ்சும், மீதி 90% ஹைட்ரஜன், நைட்ரஜனாக திரும்பி விடும். ஆனால் இவ்வாறு திரும்பத் திரும்ப நடந்து இறுதியில் 100% அம்மோனியா கிடைத்துவிடும். இந்த வழி முறையானது மிக வேகமாக நடைபெறும். ஆக ஒரு வேதிவினையானது நடைபெற வெப்பம், அழுத்தம், மூலக்கூறு அளவு, வினையூக்கி என காரணிகள் மிகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது மட்டுமல்லாது மேலும் பல விசயங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக விளக்கமாக பார்ப்போம். இந்த வினைக்கு ஹேபர் (அறிவியலார் பெயர்) முறை எனப்படும். 



மூலக்கூறுகள் வினைபுரிவதற்கு சக்தி தேவைப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு மூலக்கூறும் அதற்கென மிகவும் குறைந்த பட்சம் சக்தியை வினைபுரிவதற்கு அடைய வேண்டும். அப்படி அந்த சக்தியை அடையாத பட்சத்தில் எந்த ஒரு வினையும் நடைபெற வாய்ப்பு குறைவு. 

மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும்போது வினையானது ஏற்படுகிறது. ஆனால் அவ்வாறு மோதும்போது குறிப்பிட்ட அளவான சக்தி வெளிப்படவில்லையெனில் வினையானது நிகழ்வதில்லை. பொதுவாக இந்த ''மோதல்'' வேதியியல் வினையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உதாரணத்திற்கு மூலக்கூறுகளின் அளவினை அதிகரிக்கும்போது அந்த மூலக்கூறுகள் மோதிக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன. இடப்பரப்பளவானது குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த மோதல் அதிகமாக நடைபெறும்.

அதே போல் வெப்பநிலையை அதிகரிக்கும் போது மூலக்கூறுகள் சக்தியினை அதிகம் பெற்று அதிர்வடைந்து மற்ற மூலக்கூறுகளுடன் மோதும் வாய்ப்பானது அதிகரிக்கிறது. இதே போல் வினையூக்கிகளும் மூலக்கூறுகள் மோதுவதற்கான காரணியாக முன்னர் சொன்னது போல் இடப்பரப்பளவு குறைவாக இருப்பதால் வினை நடக்க ஏதுவாகிறது. வினையூக்கியானது மூலக்கூறுகளை தனது பரப்பில் அமரச் செய்யும் வகையில் இருக்கும், அவ்வாறு மூலக்கூறுகள் வந்து அமர்ந்து ஒன்றுக்கு ஒன்று வினைபுரிந்து புதியதாய் உருவாகும் மூலக்கூறுகள் அந்த வினையூக்கியை விட்டு வெளியேறும் வண்ணம் வடிவமைப்பு கொண்டு இருக்கும், எனவே இந்த வினையூக்கியானது வினைக்கு மட்டும் உதவியதோடு இருந்துவிட்டு தன்னில் எந்த ஒரு மாற்றத்தையும் அடைவதில்லை எனலாம். 

அழுத்தம் பற்றியதும் இதுவே. அழுத்தம் அதிகரிக்கும்போது மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று நெருங்கும் வாய்ப்பு அதிகம். 



பொதுவாக வேதியியல் வினைகள் நடைபெற ஒரு மூலக்கூறு எலக்ட்ரானைத் தர தயாராக இருக்க வேண்டும், மற்றொரு மூலக்கூறு எலக்ட்ரானை பெறத் தயாராக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் வேதியியல் வினை நடைபெற வாய்ப்பு இல்லாமல் போய்விடும். எலக்ட்ரான்கள் இழப்பைப் பொருத்தும், பெறுவது பொருத்தும் வேதிவினையானது விரைவாகவோ, மெதுவாகவோ நடைபெறும்.

இதன்படி உலோகங்கள் அனைத்தும் எத்தனை வேகமாக வினைபுரியக்கூடிய தன்மை உடையவை என அறிந்து வைத்து இருக்கிறார்கள். அதன்படி பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் கார்பன் துத்தநாகம், இரும்பு, அலுமினியம், தாமிரம், சில்வர் என அதிக வினைபுரிதல் தன்மையிலிருந்து வரிசையாக செல்கிறது, இதில் தங்கம் வினைபுரிதல் இல்லை. 

எனவே அதிகமாக வினைபுரியும் தன்மையுடைய உலோகங்களைப் பிரிப்பது மிகவும் சற்று சிரமமான காரணம். உலோகங்களைப் பிரித்தெடுக்கும் முறையில் கார்பன் கொண்டு பிரிக்கும் முறையும், மின்சாரம் கொண்டு பிரிக்கும் முறையும் அதிகபட்சமாக உபயோகிக்கப்படுகிறது. 

Thursday 18 March 2010

தரையில் கிடந்த இருபதாயிரம் ரூபாய்

சுய மதிப்பீடு மெதுவாக விரிவடைந்து கொண்டே சென்று கொண்டிருந்தது. ஒரு இளைஞன் மிகவும் நன்றாகப் படித்தவன். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு என ஒவ்வொரு தேர்விலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வந்தான். ஆனால் அவனுக்கு இருக்கும் ஒரு சிறிய பிரச்சினை என்னவெனில் பேசுவது. எவரேனும் கேள்வி கேட்டால் அதற்கு உரிய பதிலைத் தராமல் சுற்றி வளைத்து விளக்கம் சொல்வதையே பழகி இருந்தான். இப்படி இருந்த இளைஞனின் குடும்பமோ மிகவும் ஏழ்மையானது.

அந்த இளைஞனின் தந்தையும், தாயும் கூலி வேலைக்கு விவசாயம் பார்ப்பவர்கள். எப்படியாவது மகனை நன்றாகப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என எதிர்பார்ப்பும் கனவும் அவர்களுக்கு நிறையவே இருந்தது. அவர்களின் கனவினை நிறைவேற்றும் பொருட்டு அந்த இளைஞனும் நன்றாகவே படித்து கல்லூரியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வு அடைந்தான். அவனது குடும்பச் சூழல் காரணமாக அவனால் மருத்துவருக்கோ, பொறியியல் வல்லுநருக்கோ படிக்க இயலவில்லை.

வேலை எனத் தேடிச் சென்றபோதுதான் அவனுக்குள் இருந்த அந்த பேசும் பிரச்சினை பெரிதாகத் தெரிந்தது. எந்த ஒரு நிறுவனமும் அவனை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. மிகவும் மனமுடைந்தவனாகவே தாய் தந்தையருடன் விவசாய கூலி வேலை செய்து கொண்டிருந்தான். இவ்வளவு படிக்க வைத்தும் இப்படி விவசாய வேலை செய்கிறானே, இதை இவனை சிறுவனாக இருந்தபோதே செய்யச் சொல்லி இருக்கலாமே என பெற்றோர்கள் மனம் நொந்தனர்.

வேலைக்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருந்தான், அப்போதுதான் அவனுக்கு ஒன்று புரிந்தது. தான் பேசுவதை சரி செய்ய வேண்டுமென ஒரு முறை ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் ஒருவர் அவனுக்குச் சொன்னதும் எப்படி சரி செய்வது என மிகவும் முயற்சி செய்து தன்னை ஒரு தெளிவு படுத்திக் கொண்டான். தன்னில் இருக்கும் குறைகளை நாம் தெரிந்து கொள்வது என்பது பல வேளைகளில் எளிதாக நடப்பதில்லை, அதன் காரணமாக பிறர் ஒருவர் நமது குறைகளைச் சுட்டிக்காட்டும் போது உடனே உதாசீனப்படுத்தாமல் என்ன ஏதுவென சில மணித்துளிகள் செலவிட்டு சரிபார்த்துக் கொள்வதன் மூலம் எதுவும் நாம் இழந்துவிடப் போவதில்லை.

மேலும் சில நேர்முகத் தேர்வுகளுக்குப் போனான், ஆனால் அவன் அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ அவனுக்கு வேலை கிடைத்தபாடில்லை. வீட்டில் வறுமையின் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டேதான் போனது. இப்படியாக இருந்தபோது அந்த இளைஞன் சாலையில் நடந்து கொண்டிருந்த போது வழியில்

ஒருநாள் ஒரு ரூபாய் தாளினைப் பார்த்தான்.

மற்றொரு நாள் ஒரு ஐநூறு ரூபாய் தாளினைக் கண்டான்.

மற்றொரு முறை இருபதாயிரம் ரூபாய் கட்டுகளைப் பார்த்தான்.

ஒவ்வொரு முறையும் அந்த பணம் தனை பார்த்தபோது அவன் செய்தது என்னவாக இருக்கும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடலாம்.

இப்பொழுது சுயமதிப்பீடு என்பது எத்தனை வலிமையானது என்பது உங்களுக்கேப் புரியும். இதே சூழல் வந்தால் அப்போது எப்படி நடந்து இருப்பீர்கள் என்பதை அந்த நேரத்தில் மட்டுமே உங்களால் தீர்மானிக்க முடியும் என நீங்கள் இருந்துவிடாதீர்கள், மேலும் இது ஒரு கற்பனையான விசயம் தானே எனவும் கற்பனையாக பதிலை உருவாக்க வேண்டாம். உண்மையிலேயே அப்படி ஒரு சூழல் வந்தால் என்ன செய்வீர்கள் என்று மட்டுமே நீங்கள் சிந்திக்க வேண்டும். மேலும் நீங்கள் அந்த பணம் தனை கண்டெடுக்கும் போதெல்லாம் எவரும் உங்களை கண்காணிக்கவும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது சிந்தித்து வைத்துக் கொண்டுவிட்டு மேற்கொண்டு படியுங்கள். 

இப்படித்தான் நான் ஒரு முறையல்ல பலமுறை கடைக்காரர் தவறுதலாக பணம் தந்தபோது அவரிடம் சென்று திரும்பிக் கொடுத்துவிட்டு தவறுதலாக கொடுத்து விட்டீர்கள், கொஞ்சம் கவனமாக இருங்கள் என சொல்லியே வந்து இருக்கிறேன். இதை கேள்விபட்ட பலர் 'சரியான ஏமாளியாக' இருக்கிறாயே என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். நான் ஏமாளியாக இருந்தால் கூட பரவாயில்லை, பிறர் என்னால் ஏமாளியாக இருக்க வேண்டாம் என்பதுதான் எனது எண்ணம்.

இதே போன்று சாலையில் பணம் இருந்தால் (இதுவரை அதிக தொகை பார்த்தது இல்லை, மிஞ்சிப் போனால் ஒரு ஒரு பென்ஸ், ஐந்து பென்ஸ் அவ்வளவுதான்) அதை எடுக்காமலேச் சென்று இருக்கிறேன், கவனக்குறைவோ, குறைந்த பணமோ என்கிற உதாசீனம் என்றெல்லாம் இல்லை. ஏன் எடுக்க வேண்டும் என்கிற மனப்பான்மையே. ஆனால் சுயமதிப்பீடு சொல்லித் தரும் பாடம் மிகவும் அசாத்தியமானது.

அது சரி ஒவ்வொரு முறையும் அந்த பணம்தனை பார்த்தபோது என்னதான் செய்வதாக சிந்தித்து இருந்தீர்கள்.

ஒரு ரூபாய் தாள் தானே என பையில் வைத்துக் கொள்ளவில்லை அந்த இளைஞன். பணத்தை எடுத்தான் நேராக அவனுக்குத் தெரிந்த மிகவும் நல்ல திறமையான ஒரு தொண்டு நிறுவனத்திடம் அந்த பணத்தைச் சேர்த்தான். அதே போலவே ஐநூறு ரூபாயையும், இருபதாயிரம் ரூபாயையும் கொண்டு போய் அதே தொண்டு நிறுவனத்திடம் கொடுத்தான்.

இங்கே அவன் அந்த பணத்தை காவல் நிலையத்தாரிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஒருவிதத்தில் முறை என்றிருந்தாலும், அந்த பணமானது காவல் அதிகாரிகளால் பங்கு போடப்பட்டுவிடும் எனும் ஒருவித அச்ச உணர்வு அவனுக்கு இருந்திருக்கலாம். மேலும் பணம் தொலைத்தவர் காவல் அதிகாரிகளிடம் புகார் தந்தாலும் அந்த பணம் காவல் அதிகாரிகளிடம் கிடைத்தாலும் அவர்கள் உரிய முறையில் அந்த பணத்தைச் சேர்ப்பார்களா என்பது தெரியாது எனவும் அவன் நினைத்து இருக்கலாம். எனவே அவன் சமயோசிதமாக தொண்டு நிறுவனத்திடம் சேர்த்தது சரியே என்கிறார்கள் சுயமதிப்பீடு பற்றி சொல்பவர்கள். இது சரிதானா என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள், மேலும் காவல் அதிகாரிகளைத் தவறாக சித்தரிக்க வேண்டுமெனும் எண்ணம் இந்த எழுத்துக்கும் இல்லை என்பதையும் குறித்துக் கொள்கிறேன்.

இதே போன்ற ஒரு கேள்வி அவனின் நேர்முகத் தேர்வு ஒன்றில் கேட்கப்பட்டபோது தான் செய்ததை சொன்னதும் அவனது நேர்மையை பாராட்டி அவனுக்கு வேலையும் தரப்பட்டது. வேலையில் நேர்மை மிக மிக அவசியம் என்பதை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோமா?

Tuesday 16 March 2010

சுய மதிப்பீடு

எப்படியெல்லாம் வாழ வேண்டும், எதையெல்லாம் செய்ய வேண்டும் எனும் ஒரு கனவு எல்லோரிடத்திலும் இருந்து கொண்டேதான் இருக்கும். அந்த கனவினை நனவாக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டாலும் அந்த முயற்சியானது ஒரு வெற்றியாக அமைந்துவிடாத வண்ணம் ஏதேனும் ஒன்று தடையாக இருந்து வருவது போல நமக்குத் தெரிந்து கொண்டிருக்கும். அந்த தடையை ஏற்படுத்துபவர் வேறு எவரும் அல்ல, நாம் தான் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா?

நீங்கள் எப்படியோ, எனக்குத் தெரியாது, ஆனால் நான் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன். அறிந்து வைத்திருந்தால் மட்டுமே வெற்றிக்கான பாதை எளிதாக கிடைத்து விடுமா? அறிந்து வைத்திருப்பதை செயல்படுத்துவதில் தானே ஒரு வெற்றியினை நிச்சயப்படுத்திக் கொள்ள இயலும். இந்த செயல்படுத்துவது என்பது அத்தனை எளிதாக இருப்பதில்லை என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கிறோமா?

இப்படித்தான் சென்ற வாரம் வாழ்வில் முன்னேற்றம் காண்பது எப்படி எனும் நிகழ்வில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். இரண்டு தினங்கள் நடந்தது அந்த நிகழ்வு. அந்த நிகழ்வானது பல விசயங்களை புரிய வைத்தது. வேலை செய்யும் போது அந்த வேலை குறித்தும், மேலும் இந்த வேலை போய்விட்டால் அடுத்த வேலை உடனே கிடைக்க எத்தனை தூரம் ஒருவர் தயாராக இருக்கிறார் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வுதான் அது.

ஒருவருக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்று ஆரம்பிக்கிறது சுய மதிப்பீடின் தொடக்கம். எனக்குத் தெரிந்த மொழிகள் என ஓரளவுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரிந்த ஆங்கிலம், தமிழ், பேச மட்டுமே தெரிந்த தமிழ் கலந்த தெலுங்கு என அத்துடன் நின்று போனது. கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். உலகில் உள்ள மொழிகளில் இது மட்டும் தானா எனக்குத் தெரிந்தது என்பதை நினைத்து பார்த்த நாட்களில் அதுவும் ஒரு நாள் கணக்காகத்தான் தெரிந்தது. இலக்கணம் வரை கற்றுக் கொண்ட ஹிந்தி மொழி தொலைத்தேன், பல வார்த்தைகள் பேச தெரிந்த பெங்காலி மொழியையும் தொலைத்து இருந்தேன். வேறு மொழிகள் படி என அறிவுறுத்தப்பட்ட போது ஸ்பானிஸும், ப்ரெஞ்சும் படிக்க வேண்டுமென ஆவலுடன் தொடங்க நினைத்து தொடங்காமலேயே போனதும் நினைவுக்கு வந்தது. கடகடவென ஆண்டுகள் உருண்டோடி போனது. இனியும் ஆண்டுகள் உருண்டோடிவிடும்.

இதுவரை வாழ்க்கையில் என்ன சாதித்து இருக்கிறாய் என சுய மதிப்பீடு தொடர்ந்த போது கல்யாணம் பண்ணி இருக்கிறேன், ஒரு குழந்தைக்கு தந்தையாக இருக்கிறேன் என சொன்னால் எல்லாருமே விழுந்து விழுந்து சிரிக்கத்தான் செய்வார்கள், ஆனால் ஒரு மனிதர் சாதனையாளாராக வேண்டுமெனில் தானிருக்கும் குடும்பம் முதலில் ஒரு கட்டுகோப்பாக உள்ளதாகவும், குடும்பமானது மிகவும் அருமையாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது என்பதில் தான் இருக்கிறது வாழ்க்கையின் சாதனை. வேலையையும், குடும்பத்தையும் எத்தனை பேர் சரிவர நிர்வகித்து நம்மில் வருகிறோம்?

ஒரு முறை 'பொழுது போக்கு நேரம் கொல்லும்' என்கிற ஒரு சிறு கட்டுரையை எழுதி இருந்தேன், அப்போது நான் குறிப்பிட்டது என்னவெனில் முதல் தர வேலை எது நமது என்பதை நாம் தீர்மானித்துக் கொள்வது அவசியமாகும் என்பதுதான் அந்த கட்டுரையின் நோக்கம். இப்பொழுது மீண்டும் அதே சிந்தனையை புரட்டிப் பார்க்கிறேன். எனது முதல் தர வேலை என்பது திறம்பட ஆய்வு செய்து அந்த ஆராய்ச்சியின் மூலம் சமுதாயத்திற்கு பலன் கிடைக்கும்படியோ அல்லது என் பின் வரும் சந்ததியினர் எனது ஆராய்ச்சியை ஒரு முன் மாதிரியாக வைத்துக் கொண்டு அதன்படி அவர்கள் செயல்பட்டு சமுதாயத்துக்கு பயன் தருவது என வைத்துக் கொள்ளலாம். அந்த ஆராய்ச்சி காலகட்டங்கள் என பதின்மூன்று வருட காலங்களை பின்னோக்கிப் பார்க்கிறேன்.

திரும்பிப் பார்க்காதே என்றுதான் மனம் சொல்கிறது, நான் எனது ஆராய்ச்சியில் சாதனை புரிந்ததாக சில குறிப்புகள் ஆங்காங்கே தென்பட்டுக் கொண்டிருந்தாலும் என்னளவில் ஆராய்ச்சியில் ஒரு தோல்வியாளனாகவே என்னை காண்கிறேன். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக என்னில் ஒரு எழுத்தாளன் மட்டுமே வளரத் தொடங்கி இருந்திருக்கிறான், ஆராய்ச்சியாளன் அதனால் பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறான் என்பதை நினைக்கும் போது நடுக்கமாக இருக்கிறது. எனது கனவு நசுக்கப்படும் அபாயம் அதிகமாகவே இருக்கிறது. குழந்தை கால எழுத்து கனவு, இளைஞன் கால ஆராய்ச்சி கனவினை கொஞ்சம் கொஞ்சமாக மென்று கொண்டிருக்கிறது. நான் எழுத்துக்காக செலவிட்ட நேரங்கள் என நினைக்கும் போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இதோ இந்த நேரமும் சேர்த்துத்தான்.

ஒரு தெளிவான மனநிலை இருக்குமெனில், ஒரு குறிக்கோள் நோக்கிய பயணம் வெற்றி பெற வேண்டுமெனில் தினமும் சுய மதிப்பீடு அவசியம். இன்றைய நாள் எப்படி கழிந்தது என்பதை எவர் ஒருவர் அன்றைய தினமே சுய மதிப்பீடு செய்து கொண்டு செயல்படுகிறாரோ அப்பொழுதே அவரது வாழ்வில் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகள் வெகு வலிமையாக கட்டப்பட்டு விடுகின்றன. நம்மில் பலர் அவ்வாறு செய்கிறோமோ?

ஒன்றை எழுதி அதன் மூலம் பெரும் மகிழ்ச்சியை விட ஒரு ஆராய்ச்சி செய்து அதன் மூலம் கிடைக்கும் விடைகளே பெரு மகிழ்ச்சியை எனக்குத் தந்திருக்கின்றன. எழுத்தை மொத்தமாக விட்டுவிட்டு பல மாதங்கள் இருந்திருக்கிறேன், ஆனாலும் எனக்குள் இருக்கும் ஒரு எழுத்துத் தன்மை என்னை எழுதச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டுமென்பது தவறுதான் இங்கே, ஏனெனில் ஆராய்ச்சி பொருள் ஆதாரம் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு செயல்படுவது, அதற்கு பலன் இருந்தே தீரும். ஒரு எழுத்து சமூக நலனை கொண்டு வந்துவிட முடியாது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். எழுதுபவர்கள் இது எத்துனை தூரம் உண்மை என்பதை தன்னைத் தானே கேள்வி கேட்டு கொள்ளட்டும்.

நுனிப்புல் நாவலை வெளியிட்டபோது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி எத்தனை ஆராய்ச்சி புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறாய் என்பதுதான். ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறேன் என சொன்னபோது, ஆராய்ச்சி புத்தகங்கள் பற்றி கேட்டேன் என்றார். அதிர்ச்சியாகத்தான் இன்னும் இருக்கிறது, இதுவரை ஒரு ஆராய்ச்சி புத்தகம் கூட எழுதவில்லை. தலைப்பு வைக்கப்பட்டதோடு ஒரு புத்தகம் கிடப்பில் அப்படியே இருக்கிறது. அதற்குள் வெறும் வார்த்தைகள் எனும் கவிதைத் தொகுப்பு வெளிவந்து விட்டது, 'தொலைக்கப்பட்ட தேடல்கள்' வெளி வர செய்ய வேண்டும் எனும் முனைப்பு இருந்தது, ஆனால் சுயமதிப்பீடு செய்து பார்த்த பின்னர் அதை இப்போதைக்கு அப்படியே விட்டுவிடலாம் என எண்ணம் வந்துவிட்டது.

நம்மில் பலர் 'போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்கப்பா' எனச் சொல்வதை பலமுறை வாசித்து இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் தோணும், ஏன் புள்ளை குட்டிகளை படிக்க வைப்பதோடு இந்த எழுத்து காரியத்தையும் தொடர்ந்து செய்தால் தவறா என. உண்மைதான், எழுத்து என்பது என்னைப் பொருத்தவரை கடைசி நிலையில் இருக்க வேண்டிய ஒன்று, ஏனெனில் எனது கனவுகளில் இது ஒரு கடைசி கனவு தான். ஒரு நாவல் எழுதப் போய் பல கதைகள் எழுதிய நிலைமை எப்படி வர வைத்தேன் என நினைத்துப் பார்க்கும் போது என்னை ஆராய்ச்சியில் முன்னேற தடை செய்தது நான்தான் என்பதை நான் வெளியில் சொன்னால் எவருமே நம்பவும் மாட்டார்கள். வெளி உலகப் பார்வைக்கும், என்னை வேலையில் அமர்த்தி இருக்கும் நபர்களுக்கும் நான் ஆராய்ச்சியில் செய்திருப்பது அதிகமாகவே தோணலாம், ஆனால் எனக்கு மிகவும் குறைவாகவேத் தெரிகிறது.

எழுத்து மூலம் பலருடன் பழகிய பின்னர் நாம் தொடந்து எழுதாமல் விட்டுவிட்டால், பிறர் எழுதியதைப் படிக்காமலோ, பதில் சொல்லாமலோ விட்டுவிட்டால் அவர்கள் என்ன நினைப்பார்களோ எனும் எண்ணம் நம்மில் எழுமெனில் நாம் மிகப்பெரும் தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் எப்போதாவது உணர்ந்தது உண்டா? நான் உணர்ந்து இருக்கிறேன். முக்கிய வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு எழுத்து நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் எழுதிக் கொண்டிருந்தோமெனில் நம்மை நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதில் உடன்படுவீர்கள் என்றே நம்புகிறேன்.

சுயக்கட்டுபாடு இல்லாத எவராலும் வாழ்வில் திருப்தி அடைய முடியாது. எழுத்துக்கும், என் வாழ்வுக்கும் ஒரு சுயக்கட்டுபாடு என்பதை ஒருபோதும் நான் முன்னிறுத்தியது இல்லை. ஒரு விசயத்தை உறுதியாகச் செய்ய வேண்டுமென முடிவெடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன, அவ்வாறு செய்தல் முறையா என ஆய்ந்தறிந்து ஒரு உறுதி மேற்கொண்டால் நிச்சயம் அந்த உறுதியில் வெற்றி பெறலாம்.

எனது கனவு எழுத்தாளன் ஆவதில் இல்லை, ஒரு நல்ல ஆராய்ச்சியாளன் ஆவதில் இருக்கிறது என்பதை மீண்டும் எனக்குள் உறுதி செய்து கொள்கிறேன்.

Sunday 14 March 2010

கதை - டிவிடி விமர்சனம்

நாய்குட்டி படத்தோட விமர்சனம் மிச்சமிருக்கிறதால அதைப்பட்டி சொல்லிருவோம். நாய்க்குட்டி படத்துல விபச்சாரத்துக்கு போற பொண்ணுகளை தன்னோட சைக்கிள் ரிக்ஷாவில கூட்டிட்டு போய் விடற நாய்குட்டி பேரு வைச்சிக்கிறவருதான் படத்துல ஹீரோ. கூட்டிட்டுப் போய் ஆட்டோ, பணம்னு வளர்ந்துராரு. இப்படி அவர் வேலை செய்றப்போ அவர் பாக்குற காட்சிகள், காதலி அப்படினு படத்துலஅதிகம். ஒரு நண்பன் இந்த நாய்குட்டியை தப்பா புரிஞ்சிக்கிட்டதால அந்த நண்பனால இந்த நாய்குட்டி ஏமாத்தப்படறாரு, அந்த நண்பனால கடைசில இந்த நாய்குட்டி உயிர் பரிதாபமா போயிருது, இப்படிப்பட்ட நல்லவன் சாக காரணமாயிட்டனு அந்த நண்பனோட காதலி அந்த நண்பனை என்ன பண்றானு பல விசயங்களை சொல்லிட்டுப் போயிருக்கு நாய்குட்டியோட வாழ்க்கை. இவ்வளதான் கதை. வித்தியாசமாத்தான் இருந்திச்சி. 

ஆனா இதையெல்லாம் தாண்டி ஒரு படம் பார்க்க வேண்டி வந்திருந்திச்சி. அந்த படத்தோட தலைப்பே கதை. படம் பாத்துட்டு இருக்கறப்போ எனக்கும் ஒரு மாதிரியாத்தான் இருந்திச்சி. ஏன்னா படம் ஒரு எழுத்தாளரைப் பத்தியது. படம் பாத்துட்டே இருந்தப்போ நமக்கு இப்படி ஒரு நிலைம வந்துரக்கூடாது சாமினு கடவுளை வேண்டிட்டே இருந்தேன். எப்படி ஒரு எழுத்தாளர் தத்ரூபா ஒரு கதைய எழுதுறாருனு காட்டுறாக. தான் எழுதற கதையில தன்னோடமனைவியவே கதைபாத்திரமா மாத்தி அவருக்கு தொல்லை தரக்கூடிய எழுத்தாளாரா வலம் வராரு. 

வாழ்க்கையில கண்டதை, பார்த்ததை எப்படி எழுதற எல்லாருமே தன்னோட சொந்த சரக்கு மாதிரி எழுதி தள்ளிட்டு இருக்காங்கனு மனசில நினைச்சிக்கிட்டேன். சொந்த அனுபவங்கள கதைனு போர்வையில எழுதற ஆளுகளையும் இந்த படம் நினைவுக்கு கொண்டு வந்துச்சு. மனநிலை பாதிக்கப்படற அளவுக்கு ஒரு எழுத்து வெறி கொண்டு போகுதுனு பார்க்கறப்போ ஊருல உலாவுற பல எழுத்தாளர் சிகாமணிகள் கண்ணுக்கு வந்து போனாங்க. 

தன்னை நிலைநிறுத்திக்க எப்படியெல்லாம் வேஷம் போட்டுத் திரியறாகனு நினைச்சப்போ இந்த படம் கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு. எழுத்தாளர் ரொம்பவும் உச்சத்துக்கேப் போயிராரு. காமம் பத்தியெல்லாம் தன்னோட சொந்த விசயங்களை எழுதினத படிச்ச மனைவி துடிச்சிப் போயிருரா. மனைவியோட கருவை கலைக்க திட்டம் தீட்டி அதையும் செய்து ஒரு புத்தகமா அதைப் பத்தி எழுதி கொண்டாடும் வெறித்தனம் பிடிச்சவரா இருக்காரு இந்த எழுத்தாளரு. இதைப் பார்த்ததும் ரொம்ப பயமாத்தான் இருந்திச்சி. அட பாவிகளா, இப்படியெல்லாமா புகழ், பணம் பேருக்காக வெறி பிடிச்சி திரிவாங்கனு. 

பயம் இந்த படம் கொடுத்தது இல்ல, இந்த எழுத்தாளர போலவே நேத்து ஒன்னு பேசிட்டு , இன்னைக்கு ஒன்னு பேசிட்டு திரியற எழுத்தாளருக பலரு மனசுல வட்டமிட்டு போனதுதான் பயம் கொடுத்துச்சு. படம் பாத்துட்டே இருக்கறப்போ நானு எழுதன கதையெல்லாம் என்னைப் பாத்து சிரிச்சிச்சு. நாளிதழுல படிச்ச விசயத்த கதையா மாத்தி எழுதன நிலைம, இன்னொரு கதையை தழுவி நானு எழுதன கதைனு எனக்கு ஒருமாதிரிதான் இருந்துச்சு. 

இது மட்டுமில்லாம நகைச்சுவைனு ஒரு பகுதிக்கு அடுத்தவங்க எழுதுன கதையை தன் கதைனு பேரை மட்டும் மாத்தி திரியும் ஒருத்தரும் படத்துல வராரு. இதைப் பார்த்தப்போ ஒரு வலைப்பூவுல படிச்ச கதை திருடன எழுத்தாளருனு ஒருத்தரை பத்தி எழுதிருந்த விசயம்தான் நினைவுக்கு வந்துச்சு. அதே மாதிரி 'மறு பதிப்பு' அப்படினு நானு எழுதன ஒரு கதையும் ஞாபகத்துல வந்து தொலைஞ்சிச்சி. அடுத்தவங்க எழுத்தை அப்படியே எழுதி பேரு வாங்கனும்னு எதுக்கு திரியறாங்கனு நினைக்கிறப்போ, எழுத்தை மட்டுமில்ல அடுத்தவங்க வாழ்க்கையவே திருடி வாழற மனுசங்க மனசுக்கு வந்தாக. 

இப்படியே படம் பாத்துட்டே போனா ஒரு கட்டம் திணற வைக்குது. அட கண்றாவி, இப்படியெல்லாமா, எழுதறதுக்கா ஒரு மனுசன் தன்னை தரம் தாழ்த்திக்குவானு தோணுச்சி. நாட்டு நடப்ப நினைச்சா இதெல்லாம் ஒன்னுமில்லைனு நினைக்கவும் தோணுச்சி. அப்படி போகுது கதை. படத்து சான்றிதழுல 'வயது வந்தவருக்கு' மட்டும்னு போட்டதால இளைய தலைமுறை பாதிக்கப்படக்கூடாதுனு நினைச்சிக்கிட்டாங்கனு நினைச்சிக்கிட்டேன். 

படத்தோட கடைசி கட்டம் தான் ஒரு நிமிசம் ஐயா சாமினு சொல்ல வைச்சது. படத்துல வர மனைவி எரிச்சல கிளப்புரா. ஏன் நம்மூரு பொண்ணுக எல்லாம் இப்படி அடைச்சி வைச்சமாதிரி இருக்காகனு கடுப்பா இருக்கு. புருசன்னா அவன் என்ன செஞ்சாலும் சரினு ஏத்துட்டு வாழற அடிமைப்பட்ட வாழ்க்கைய பொண்ணுக வாழறத நினைக்கறச்சே கோவம் கோவமா வருது. ஓங்கி அறையற புருசன அம்மி எடுத்து அப்படியே கொன்னு போட்டு போனாத்தான் குறைஞ்சா போகப்போகுது தோணுது. 

வாழ்க்கையெல்லாம் அன்பே இல்லாம சத்தம் போட்டே வாழற புருசனைக்கூட தூக்கி வைச்சி ஆடற அந்த தாம்பத்ய உறவோட உன்னதம் எனக்குத்தான் தெரியாமப் போச்சு போலனு நினைச்சிக்கிட்டு இருக்கறப்போ கதைய முடிச்சவிதம் அந்த மனைவிய ஓங்கி அறை விடலாமானு தோணுச்சு. ஆனா காதலுனு ஒன்னு இருக்கே அதோட வலிமையும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்ய வைச்சிச்சி. காதலு எப்படியெல்லாம் ஒருத்தரை நடக்க வைக்குது. ஆனா இது காதலுனு சொல்றத விட காதல் வெறி, கட்டுக்குள்ள சிக்கிக்கிட்டு விலக முடியாத வலினு ஒவ்வொரு உசுரும் இந்த உலகத்துல போராடற வாழ்க்கையில இந்த கதை தலைப்பு வைச்ச படம் கதை இல்ல, ஏதோ ஒரு மூலையில நடந்துக்கிட்டு இருக்கற ஒரு கொடூரம். அவ்ளதேன். 

Saturday 13 March 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 8


அடுத்ததாக எப்படி ஒரு மூலக்கூறினை எழுதுவது? தண்ணீர் என்றால் H2 O என அறிவோம். அது போன்று ஓவ்வொரு மூலக்கூறு எழுதும்போது அதனுடைய விதியை பின்பற்றி எழுதினால் எளிதாக முடியும். 


உதாரணமாக சோடியம் தன்னால் ஒரு எலக்ட்ரான் மட்டுமே இழக்க முடியும் எளிதாக ஆக குளோரினுடன் இணையும்போது NaCl என எழுதிவிடலாம், ஆனால் இரண்டாவது குழுவில் உள்ள கால்சியத்துடன் குளோரின் இணைவதை CaCl என எழுதினால் தவறாகிவிடும். காரணம் கால்சியம் தனது வெளிவட்ட ஆர்பிட்டாலில் இரண்டு எலக்ட்ரான்கள் இழக்கும் தன்மை உடையது. எனவே இரண்டு குளோரின்கள் தேவைப்படும் ஆக CaCl2 என எழுதுவதே சரியாகும். இது போன்று சோடியம் ஆக்ஸிஜனுடன் இணையும் போது Na2O எனவும் கால்சியம் ஆக்ஸிஜனுடன் இணையும் போது CaO எனவும் எழுத வேண்டும்.

ஆக்ஸிஜனேற்ற எண்களை நினைவு கொள்வது மிகவும் சுலபம். முதலில் ஒரு அணுவானது எந்த நிலையில் நிலை பெற்று உள்ளது என்பதை எண்ணத்தில் கொள்ள வேண்டும். குரூப் 1 என்றால் +1 குரூப் 2 என்றால் +2 என செல்லும். டி பிளாக்கில் இருக்கும் அணுக்கள் பல ஆக்ஸிஜனேற்ற எண்களைப் பெற்று இருக்கும் என்பதால் அதனை மட்டும் தனியாய் பார்ப்போம். 


நமக்கு மிகவும் தேவையான உபயோகப்படுகிற மூலக்கூறுகளைப் பார்த்து விடுவோம். அதாவது பி பிளாக்கில் உள்ள அணுக்கள் குறிப்பாக ஆக்ஸிஜன் இரண்டு எலக்ட்ரான்களை பெறுவதால் பூர்த்தி நிலை அடைவதால் -2 என எண்ணை பெறுகிறது. நைட்ரஜன் இருவித நிலையை கொண்டு உள்ளது. 


இப்படி அணுக்களில் உள்ள எலக்ட்ரான்களைப் பொருத்து அதனுடைய மூலக்கூறுகள் வடிவமைப்பை பெற்றுக் கொள்கின்றன. இந்த வடிவமைப்புகள் சில வட்டத்திற்குள் அமைந்துவிடுவதால் அதிக வேறுபாடுகள் என காண்பது அரிது. இவை எளிமையான மூலக்கூறுகளுக்கு மட்டுமே என கருதுகிறேன். எப்படி வடிவமைப்பை கொண்டுள்ளது என்பதை பார்க்கும் முன்னர் சில ஆக்ஸிஜனேற்ற விதிவிலக்குகளையும் பார்த்து விடலாம்.

உதாரணமாக H2O2 இதில் பார்த்தோமானால் 


O = 2x-1 = -2 
H = 2x1 = 2


என இருந்தால் தான் இது முழுமை பெற்ற ஒரு மூலக்கூறுவாக இருக்க முடியும், ஆனால் H தன்னிடம் ஒரு எலக்ட்ரான் மட்டுமே பெற்று உள்ளது.


முழுமை பெறுவது என்பது s2p6 என்ற அமைப்பை பொறுத்தது எனச் சொல்வார்கள். ஆக்ஸிஜனுக்கு 2 எலக்ட்ரான்கள் தேவை. ஹைட்ரஜனுக்கு 1 எலக்ட்ரான் தேவை , எனவே நீர் மூலக்கூறில் ஆக்ஸிஜன் இரு எலக்ட்ரான்களை ஒவ்வொரு எலக்ட்ரான்கள் கொண்டுள்ள ஹைட்ரஜனுடன் பரிமாறிக்கொண்டு, தானும் முழுமை பெற்று, ஹைட்ரஜனும் முழுமை பெறுகிறது.


ஆக்ஸிஜன் - அணு எண் 8 2, 2,4 (2வேண்டும் முழுமை பெற)
ஹைட்ரஜன் - அணு எண் 1 1 (1 வேண்டும் முழுமை பெற)

மேலும் ஒரு உதாரணம் NaH

இது என்னவெனில் Na +1 அமைப்பு கொண்டது, H +1 அமைப்பு கொண்டது, இப்படி +1+1 எழுதினால் கூட்டுத்தொகை +2 ஆக வரும், எனவே NaH+2 என எழுதினால் மட்டுமே முறை, ஆனால் இது மூலக்கூறு, எனவே NaH என்றுதான் எழுத வேண்டும். எனவே ஆக்ஸிஜனேற்ற எண்கள் இப்படி அமைகிறது.

Na = +1
H = -1

இனி அமைப்புகள் பற்றி பார்க்கும்முன்னர் எப்படி எலக்ட்ரான்கள் அணி வகுத்துக் கொள்கின்றன என்பதை பார்த்துவிடுவோம். 

H-O-O-H இப்படித்தான் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மூலக்கூறு வாய்ப்பாடு அமைகிறது. இதில் எப்படி ஹைட்ரஜன் இரண்டு எலக்ட்ரான்கள் தருவது போல் அமைய முடியும் என்று பார்த்தால் சற்று கடினம்தான். ஆனால் இந்த மூலக்கூறு மிகவும் நிலைத்தன்மையுடையது அல்ல. ஒரு மூலக்கூறு என எடுத்துக் கொண்டால் மொத்த ஆக்ஸிஜனேற்ற தன்மையானது 0 வாகத்தான் இருக்கும்.

தண்ணீர் மூலக்கூறினை எப்படி எழுதுவது என்பது அறிவோம். H-O-H ஆனால் இங்கு குறிப்பிட்டது போன்று இப்படி 180 டிகிரியில் நேராக இந்த ஹைட்ரஜன் இணைந்து இருப்பதில்லை. காரணம் ஆக்ஸிஜனில் உள்ள நான்கு சுதந்திர எலக்ட்ரான்கள். பொதுவாக எலக்ட்ரான்கள் மற்ற எலக்ட்ரான்களைக் கண்டதும் விலகி ஓடும் தன்மை உடையது. அப்படி இந்த சுதந்திர எலக்ட்ரான்கள் கொண்ட ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் எலக்ட்ரான்களை சற்று விலக்கம் அடையச் செய்கிறது. ஆதலினால் இப்படி நேர்கோட்டில் அமையாமல் சற்று வளைவாக தண்ணீர் மூலக்கூறு அமைகிறது.

O
H H

இணைப்புக் கோடு அமைய உதவும் எலக்ட்ரான்கள் அதிகமாக மற்ற எலக்ட்ரான்களை தள்ளி விடுவதில்லை. சுதந்திர எலக்ட்ரான்கள் மட்டுமே அதிக அளவில் மற்ற எலக்ட்ரான்களை தள்ளிவிடும் ஆற்றல் உடையது. உதாரணமாக போரான் டிரைகுளோரைடு மற்றும் அம்மோனியாவைக் காணலாம். போரானில் சுதந்திர எலக்ட்ரான்கள் இல்லை எனவே அவை முக்கோண வடிவில் குளோரின்கள் இணைந்து காணப்படுகிறது.

Cl

B

Cl Cl

ஆனால் அம்மோனியாவில் நைட்ரஜன் சுதந்திர எலக்ட்ரான்கள் பெற்று இருக்கும் காரணத்தால் இது போன்று அமையாமல் சற்று வித்தியாசமாக அமைகிறது. இதற்கு காரணம் முன்னரே சொன்னது தான்.

N
H H
H

இதுவே கார்பனாக இருக்கும் பட்சத்தில் சுதந்திர எலக்ட்ரான்கள் இல்லாத காரணத்தால் நான்முகனாக காட்சி தருகிறது. இதனை டெட்ராஹெட்ரல் என்பார்கள். மீத்தேன் வாயுவின் அமைப்பு இது.

H

C
H H
H

இந்த அமைப்பின் கோணம் அவ்வளவு வித்தியாசப்படுவதில்லை. போரான் 120, நைட்ரஜன் 107 மற்றும் கார்பன் 104. அப்படிப் பார்க்கப் போனால் எலக்ட்ரான்கள் அத்தனை பலம் கொண்டு தள்ளி விடுவதில்லை என்றுதான் தோன்றும். ஆனால் தண்ணீர் மூலக்கூறில் நிலைமை வேறு. எனவே இரண்டு இரட்டை சுதந்திர எலக்ட்ரான்கள் இருந்தால் விலக்கும் தன்மை சற்று அதிகமே.

இதனால் என்ன பெரிய பிரச்சினை என எண்ணினால் இருக்கிறது. ஒரு மூலக்கூறினை உருவாக்கும்போது அது எப்படி எந்த அமைப்பை பெற்றால் ஒரு ரிசெப்டாரில் சென்று உட்கார முடியும் என பல அரிய விசயங்கள் இருக்கிறது. அதைப் பொருத்தே ஒரு மூலக்கூறு மருந்தாக மாறக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது. எனவே எல்லா மூலக்கூறுகளும் மருத்துவ குணம் பெற்று இருப்பதில்லை.

ஒரு சிறு மாற்றம் செய்தால் போதும் ஒன்றுமில்லா மூலக்கூறு மருந்தாகும் அதைப் போல ஒரு மாற்றம் செய்தால் மருந்தாகும் மூலக்கூறு ஒன்றுமில்லாமல் போகும். இயற்கையைப் போல் மருத்துவ குணம் வாய்ந்த மிகவும் சிரமமான மூலக்கூறுகளை இரசாயன கூடத்தில் செய்ய இயலுவதில்லை. சில தனிமங்கள் மூலக்கூறில் அமைந்து இருப்பதைப் பார்த்தால் எப்படி இதெல்லாம் சாத்தியம் என எண்ணும் அளவிற்கு பல மூலக்கூறுகள் இருக்கத்தான் செய்கிறது. சர்வ சாதாரணமாக இது போன்ற மூலக்கூறுகளை உருவாக்கிட இயற்கை தானாக தேர்ந்தெடுத்த முறை என நாம் நினைத்துக்கொண்டால் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். 


Friday 12 March 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 7

பல விஞ்ஞானிகள் கூடிய சபை ஒன்றுக்கு சென்றபோது எத்தனை பேர் ஒரு நோய் குறித்து பல வகைகளில் சிந்தித்து அந்த நோயைப் போக்க முயற்சி செய்கிறார்கள் என பார்த்தபோது வியந்து போனேன். இதனை அப்படியே ஒருவரிடம் சொன்ன போது ஆமாம் செல்லமுடியாத இடத்திற்கு அனைவரும் பல பாதைகளை தேர்ந்தெடுத்துச் செல்கிறார்கள் என்றார். ஒரு நிமிடம் மெளனமாகிப் போனேன். அப்படியென்றால் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? 

நோயைத் தீர்ப்பது என்பது தலையாய கடமையல்லவா? அதற்காக எவ்வளவு பணம் செலவாகிறது, எத்தனை பேருடைய உழைப்பு இருக்கிறது! யோசித்துப் பார்த்ததில் ஒன்று மட்டும் தெரிந்தது. இன்ன காரணம்தான் இப்படி ஏற்படுகிறது என்பது மட்டும் எவருக்கும் சரியாகப் புலப்படவில்லை. ஒருவேளை இதனால் இருக்கலாமோ? இதன் மூலமாக இப்படி நடந்து இருக்கலாம் என எண்ணிக்கொண்டே அதனை அடிப்படையாக கொண்டே ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நோயிற்கும் ஒவ்வொரு நோயுடன் தொடர்பு இருக்கிறது. ஒன்றை நாம் சரிசெய்யும் பொழுது அது மறுபடியும் வராமல் இருக்க வேண்டும் ஆனால் அப்படியிருப்பது இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அனைத்து நோயிற்கும் மூலம் ஒன்று தான் என வைத்துக் கொண்டு சிந்தனை செய்வோம்! இது குறித்து ஒரு பெரும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே உண்டு. ஆனால் கதை எழுதுவது போல் இது அவ்வளவு எளிதான விசயம் அல்லவே. 

வேதியியலைப் பற்றி விவரித்துக் கொண்டு இருக்கும்போது இதனை எழுதுவதன் நோக்கம் தனித்தனி தனிமங்களின் கூட்டமைப்பே மூலக்கூறுகள்! அவைதான் நமது உடலில் ஏற்படும் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படை. அதனுடைய நுணுக்கம் தெரிந்துவிட்டால் எல்லாம் புரிந்துவிடும். அப்படியென்றால் இதுவரை நுணுக்கம் தெரிந்து கொள்ளப்படவில்லையா? என்றால் புரிந்து கொள்ளப்படவில்லை எனச் சொல்லலாம். இத்தனை சிக்கலான கட்டமைப்பு எப்படி உருவானது என சிந்திப்பதிலேயே பல காலங்கள் கழிந்து போனது. இனியும் கழிந்து கொண்டு இருக்கிறது. 



தனிமங்கள் தனிமங்களாகவே தனியாக இருந்து இருந்தால் இன்று இந்த உயிர் வாழும் தன்மை என்று ஒன்று வந்து இருக்க முடியாது என்பது அறிந்ததுதான். தனித்து ஆக்ஸிஜன் இருந்து இருந்தால் இன்று நாம் சுவாசிப்பது காற்றாக இருக்க முடியாது. ஆக்ஸிஜன் மற்றொரு ஆக்ஸிஜனுடன் இணைந்து ஒரு மூலக்கூறாக இருப்பதன் காரணம் நிலைத்தன்மை என்னும் வேதியியல் தத்துவம். தனித்தன்மையானது அனைத்துக்கும் பொருந்துமா என்றால் இல்லை என்றுதான் கூறமுடியும். ஹீலியம், ஆர்கன் போன்ற வாயுக்கள் தனித்தே இருக்கிறது காரணம் அவை நிலைத்தன்மை அடைய மற்றொரு தனிமத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. ஆக நிலைத்தன்மை மிகவும் முக்கியமா என்று பார்த்தால் இந்த தனிமங்களை எல்லாம் ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும் காரணம் நிலைபாடுடைய உலோகங்கள் பொதுவாக தனித்தே காணப்படுகின்றன. நிலைத்தன்மை என்பது என்ன என்றால் s2 p6 அதாவது s அறையில் இரண்டு எலக்ட்ரான்களும் p அறையில் ஆறு எலக்ட்ரான்களும் கடைசி ஆர்பிட்டாலில் இருக்க வேண்டும். 

உதாரணமாக ஹைட்ரஜன் எடுத்துக்கொண்டால் அதனுடைய அணு எண் 1 இந்த ஹைட்ரஜன் வேறு ஒரு ஹைட்ரஜனுடன் இணைந்து வெளிவட்ட ஆர்பிட்டாலில் இரண்டு எலக்ட்ரான்கள் என பூர்த்தி நிலை அடைகிறது. இங்கு இரண்டு எலக்ட்ரான்கள் தான் அதிகபட்சம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே s2 என்னும் நிலைப்பாடு வந்தடைகிறது. 

இது போல ஆக்ஸிஜனின் அணு எண் 8. அதனுடைய வெளிவட்ட ஆர்பிட்டாலில் 6 எலக்ட்ரான்கள் இருக்கும். வேறு ஆக்ஸிஜனுடன் இணைந்து எட்டு எலக்ட்ரான்கள் என பூர்த்தி நிலை அடைந்துவிடும். 

இந்த ஆக்ஸிஜனுக்கு தேவையான இரண்டு எலக்ட்ரான்களை ஹைட்ரஜன் ஒவ்வொரு தனிமமாக இருந்து வழங்கி அது நீராக மாறுகிறது. இது எப்படி எல்லாம் நடைபெறுகிறது என பின்னர் பார்ப்போம். 

ஹைட்ரஜன் தனியாகவும் சேர்ந்தும். 



ஆக்ஸிஜன் தனியாக 


ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் இணைந்த பின்னர்


ஒரு தனிமமானது எலக்ட்ரான்களை இழக்கும்போது அது நேர்தன்மை அடைகிறது. ஒரு தனிமமானது எலக்ட்ரான்களை பெறும்போது அது எதிர்தன்மை அடைகிறது. எலக்ட்ரான்களின் பரிமாற்றத்தால் மட்டுமே ஒரு மூலக்கூறு உருவாகிறது. இப்படி மூலக்கூறுகள் உருவாக அணுக்களின் பிணைப்பு இருவகையில் நடைபெறுகிறது. இதனை இப்படி இப்பொழுது சுருக்கி வைத்துக் கொள்வோம். 

மிகவும் யோசிக்க வேண்டிய விசயம், ஒரு தனிமமானது புரோட்டானை இழந்துவிட்டால் அந்த தனிமம் அந்த தனிமமாகவே இருக்க முடியாது! ஆகவே தான் புரோட்டான் கடவுளின் துகள் என கருதப்படுகிறது. ஒரே ஒரு புரோட்டான் கொண்டுள்ள ஹைட்ரஜனை புரோட்டான் இழக்கச் செய்தால் என்ன கிடைக்குமோ?, ஆனால் அந்த தனிமம் ஹைட்ரஜனாக இருக்க முடியாது. இதில் கதிரியக்கமுள்ள தனிமங்கள் பற்றி பின்னர் பார்ப்போம். 

எலக்ட்ரான்கள் பரிமாற்றம் எப்படி எனப் பார்ப்போம். 

சோடியம் 11 எலக்ட்ரான்கள் கொண்டது, இப்பொழுது ஒரு எலக்ட்ரான் இழந்து சோடியம் + ஆகிறது. 

குளோரின் 17 எலக்ட்ரான்கள் கொண்டது, இப்பொழுது ஒரு எலக்ட்ரானை பெற்று குளோரின் - ஆகிறது. 

அப்படி ஏற்பட்ட பின்னர் இந்த நேர்தன்மையும் எதிர்தன்மையும் கொண்ட பிடிப்பினால் இந்த மூலக்கூறு உருவாகிறது. 

அதே வேளையில் மேலே குறிப்பிட்ட படங்களைப் போல் எலக்ட்ரான்களை ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து நிலைத்தன்மை அடைந்து மூலக்கூறு உருவாகிறது. இது ஆர்பிட்டால் பொருத்து பலமான பலமற்ற பிணைப்பு உருவாகிறது. 

(தொடரும்)