Tuesday 30 June 2015

அடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை ஹனுமலர்

அடியார்க்கெல்லாம் கதையின் முதல் இருபது பக்கங்கள் மிகவும் மெதுவாகவும் அத்தனை சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது. நான் ஒரு இந்து இல்லை என்பதாலோ இந்து கலாச்சாரம் பற்றி அறிந்தது இல்லை என்பதாலோ எனது ஆன்மாவைத் தொடவில்லை. எனக்குப் புரியாத காரணத்தினால் பக்தி பாடல்களை எல்லாம் வாசிக்காமல் தாவினேன்.

ஈஸ்வரி கதையில்  வரத் தொடங்கியதும் கதையை மிகவும் சுவராஸ்யத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன். காதல் கடவுளை வெல்லுமா என அறிந்து கொள்ள பேராவலுடன் இருந்தேன். முடிவில் நான் எண்ணியது போல காதல் சிவனை வென்றது என சொல்லலாமா?

கதிரேசனுக்கும் ஈஸ்வரிக்கும் இடையிலான காதல் மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்களின் பரஸ்பர புரிதல் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது அதிலும் குறிப்பாக ஈஸ்வரி. அவளுக்கு தனது கணவன் மீது பொறாமையோ சந்தேகமே வரவில்லை. அது உண்மையான பரிபூரண காதல். காதல்தான் எல்லாம். அந்த பகுதி எல்லாம் அதியற்புதமாக இருந்தது.

மதுசூதனன், வைஷ்ணவி தொடக்கத்தில் இருந்தே அவர்களுக்குள் காதல் அத்தனை இல்லை. அதற்கு மதுசூதனின் பிடிவாதமே காரணம். மதுசூதனின் கதை முடிவு அவனது பாழான வாழ்வு குறித்து சொல்லி இருந்து இருக்கலாம்.

கதிரேசன் மற்றும் வைஷ்ணவியின் நட்பு பிரமாதம். கதிரேசன் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, அவன் வைஷ்ணவியிடம் பேசும் பாங்கு, வைஷ்ணவியை நடத்தும் முறை என்னை கவர்ந்தது. கதையில் சில வார்த்தைகள், சில விசயங்கள் புரியாமல் இருந்தது. முடிவில் காதல் தான் எல்லாம். காதல் இருந்தால் வாழ்வு இருக்கும். காதல் அதிசக்தி வாய்ந்தது.

நன்றி

ஹனுமலர்
மலேசியா


Thursday 25 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 8

பகுதி 7 

8. நினைவுகள்

திருமால், அவரது மனைவி யோகலட்சுமி, மகன் தீபக், மகள் தீபா என அனைவரும் வந்தார்கள். பாரதியையும், கிருத்திகாவையும் நன்றாக நினைவு இருந்தது.

''ரொம்ப நேரமா காத்து இருக்கீங்களா?''

''இல்லை சார்''

''சரி உள்ளே வாங்க''

வீட்டினுள் நுழைந்ததும் அவர்களை அமரச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குச் சென்றார் யோகலட்சுமி. தாங்கள் வாங்கி வந்த பழங்களை எடுத்துத் தந்தார்கள். தீபக் வாங்கிக்கொண்டு நன்றி சொன்னான். அவனது பேச்சு அத்தனை இனிமையாக இருந்தது.

''என்ன பாரதி, என்ன விஷயம் சொல்லுங்க''

''பெருமாள் தாத்தா பிறந்துட்டார், ரெட்டக்குழந்தைக, தாயும் சேயும் சுகமாக இருக்காங்க''

''ரொம்ப சந்தோசம், கேட்கவே மனசு மகிழ்ச்சியா இருக்கு''

''முக்காலமும் உங்களுக்குத் தெரியும் தானே''

அப்போது நீர்மோர் கொண்டு வந்து வைத்தார் யோகலட்சுமி.

''அக்கா, நீங்கதானே சொன்னீங்க, சாருக்கு முக்காலமும் தெரியும்னு''

கிருத்திகா சொன்னதும் யோகலட்சுமி சிரித்தவண்ணம் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார். பாரதி சாத்திரம்பட்டி சென்ற விசயம்தனை சுருக்கமாக சொன்னாள்.

''எனக்கு அப்படி எல்லாம் ஒண்ணும்  தெரியாது. முக்காலம் பற்றிய கலை சொல்லித்தாங்கனு குழந்தைகள் கேட்பாங்க, நான் சும்மா சரினு  சொல்வேன். மற்றபடி எனக்கு எக்காலமும் தெரியாது''

''மாதவிக்கு எல்லாம் தெரியுதே''

''அப்போ நீங்க அதை மாதவிகிட்டதான் கேட்கணும். என்கிட்டே கேட்டா எப்படி? பெருமாள் தாத்தா பிறந்தார்னு சொன்னது நீங்க, அவர் எப்படி பிறக்க முடியும். இறந்தவர் பிறப்பது இல்லை. நினைவுகளுடனே மனிதர்கள் இறந்து போவார்கள். டிமென்சியா நோய் பற்றி நீங்க படிச்சி இருப்பீங்கதானே. ஒரு மனிசனோட மூளைகளில் ஏற்படும் பாதிப்பு நினைவு, மொழி செயல்பாடு என எல்லாத்தையும் சிதைச்சிரும். அப்படி இருக்கறப்ப ஒரு மனிசன் இறந்துட்டா அவனது செல்களின் மூலம் நினைவுகளை திரும்ப கொண்டு வர முடியும் அப்படிங்கிறது முடியாத காரியம். இப்போ இனி வரும் காலங்களில் என்ன நடக்கும்னு யூகிச்சி சொல்லக்கூடிய திறன்கள் என்கிட்டே இருக்குறமாதிரி தெரியலை. மாதவிக்கு அப்படி ஒரு சக்தி இருக்கும்னா அது ஆச்சரியம்தான்''

''மெடிக்கல் பத்தி எல்லாம் பேசறீங்க, நீங்க என்ன படிச்சி இருக்கீங்க'' பாரதியின் ஆர்வம் அதிகம் ஆனது.

''நான் பத்தாவது வரைதான் படிச்சி இருக்கேன். மேற்கொண்டு படிக்க எனக்கு விருப்பம் இல்லை. இவளும் பத்தாவது வரைதான் படிச்சி இருக்கா. ஆனா இப்போ பல குழந்தைகளைப் படிக்க வைக்கிற திருப்தி இருக்கு. நினைவு வைச்சிக்கிற செல்கள் பத்தி உங்க அபிப்ராயம் என்ன''

தீபக், தீபா ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தார்கள். கிருத்திகா அவளை கவனித்த வண்ணம் அமர்ந்து இருந்தாள். திருமால் என்ன பேசுகிறார் என அந்த சிறு குழந்தைகளின் கவனிப்பு கிருத்திகாவிற்கு ஆச்சரியம் தருவதாக அமைந்து இருந்தது. பாரதிதான் பதில் சொன்னாள்.

''நம்ம உடலில் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும் செல்கள் நினைவுத்தன்மை கொண்டவைகள். ஒரு வேக்சீன் போட்டம்னா, அவை நமது உடலில் உள்ள செல்களைத் தூண்டி ஆண்டிபாடீஸ் உண்டாக்கும் அப்படியே நினைவு செல்கள் உண்டாக்கும். அது மட்டுமில்லாம திருப்பி அதே நோய் வந்து தாக்கினா அதை சரியாக கணிச்சி நம்மை பாதுகாக்கும்.''

''அந்த செல்களின் பணி  அது. இப்போ கருவை உண்டாக்கும் செல்கள் எல்லா செயல்களை தன்னகத்தே வைத்து இருக்கும்போது தாய் தந்தை நினைவுகளை சுமந்து வருதா''

பாரதிக்கு அந்த கேள்வி சற்று குழப்பமாக இருந்தது. நினைவுகளை சுமந்து வருமா என தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். தீபக் என்ற யோகலட்சுமியின் குரல் கேட்டு தீபக் சமையல் அறைக்கு சென்றான்.
அவனைத் தொடர்ந்து தீபாவும் சென்றாள்.

''வாய்ப்பு இல்லை'' பாரதி சட்டென முடித்தாள்.

''அப்படின்னா பெருமாள் தாத்தா நினைவுகளுடன் வலம்  வரமாட்டார். அந்த குழந்தைகள் சாதாரண குழந்தைகள்தான். ஆனா உங்களுக்கு வாசன் எல்லோருக்கும் அது பெருமாள் தாத்தா. உங்கள் எண்ணங்களை அந்த குழந்தைகள் மீது திணிக்கப் பார்ப்பீங்க''

பாரதி மிகவும் அமைதியானாள். தீபக், தீபா குடித்த வண்ணம் எங்கே அமர்ந்து இருந்தார்களோ அங்கே அமர்ந்து இருந்தார்கள்.

''மாதவி, உங்களைப் பார்க்க கிருத்திகாவை என்னிடம் கூப்பிட்டு போகச்  சொன்னாள்''

''என்ன காரணம் என நீங்க கேட்டு இருக்கலாமே''

''என்ன காரணம்னு நீங்க சொல்லுங்க''

''எதற்கும் ஒரு துணையாக இருக்கட்டுமேனு இருக்கலாம். எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மனிதர்கள் அப்படின்னு ஜோசியர்கள், நாடி பார்ப்பவர்கள். மை தடவி சொல்பவர்கள், குறி பார்ப்பவர்கள், ரேகை பார்ப்பவர்கள் அப்படின்னு நிறைய பேர் இந்த உலகத்தில் இருக்காங்க. அவர்களுக்கு அது வேலை. ஒரு சிலர் சொல்வது நடக்கிறது அப்படின்னு நம்பும் மனிதர்கள் இப்போ மட்டுமில்லை எப்பவுமே உண்டு, இப்போ அதிகமாகிட்டே வராங்க. அதுமாதிரி எதிர்காலம் சொல்றது மாதிரி நான் இருப்பேன்னு நீங்க நினைச்சா என்னை மன்னிக்கனும் எனக்கு அப்படிப்பட்ட ஞானம் அறிவு சிந்தனை எதுவுமே இல்லை.

மாதவிகிட்ட நான் இதுவரை ஒரே ஒருமுறைதான் பேசி இருக்கேன். அதுவும் திருமலைக்குப் போகறப்பபார்த்துப் பேசியதோடு சரி. ரொம்ப அறிவான பொண்ணு. ஆனா நீங்க சொல்றமாதிரி முக்காலமும் உணர்ந்த பெண் மாதிரி எனக்குத் தோணலை. எதேச்சையாக அவங்க சொல்றதுக்கு நீங்க அர்த்தம் கண்டுபிடிச்சி அந்த பொண்ணுக்கு எல்லாம் தெரிஞ்சி இருக்கும்னு நம்புறீங்க''

''நீங்க சொன்னதுதான் சார் உண்மை, இவதான் தேவை இல்லாம மாதவியை கடவுள் ரேஞ்சுக்கு பேசுறா''

கிருத்திகா பட்டென சொன்னதும் திருமால் சிரித்தார். அப்போது பலகாரங்கள் கொண்டு வந்து வைத்தார் யோகலட்சுமி.

''அக்கா, அதுக்குள்ளே பண்ணிட்டீங்களா, கடையில் வாங்க மாட்டீங்களா''

''இல்லைம்மா, இதெல்லாம் சின்ன சின்ன வேலைகள்தானே''

''நான் கடவுள் ரேஞ்சுக்கு எல்லாம் மாதவியைப் பத்தி பேசலை. ஆனா அவளுக்கு சில விசயங்கள் முன்கூட்டியே தெரியுது. அவள்கிட்ட பழகினப்ப எனக்கு எதுவும் தெரியலை. ஆனா அவ பேசறதை வைச்சிப் பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது. அவளுக்கு பல விசயங்கள் தெரியுது''

''பாரதி, நீங்க கிருத்திகா பேச்சு கேளுங்க. நம்முடைய செல்களுக்கு எப்படி சரியா கால் உண்டாக்கணும், கை உண்டாக்கணும்னு தெரியும். எல்லா குண  நலன்கள் கொண்ட செல்கள் எப்படி மற்ற குணநலன்களை மறைச்சி ஒன்றை மட்டும் உருவாக்க துணிகிறது''

பாரதிக்கு இது சற்று ஆச்சரியமாக இருந்தது. இப்படி எல்லாம் இவர் எங்கு சென்று படித்தார் என்றே கேட்க வேண்டும் போலிருந்தது. கிருத்திகா குறுக்கிட்டாள்.

''எல்லாமே கருவில் சேர்த்து வைக்கப்பட்டது. அது திட்டமிட்டபடி வெளிப்படுகிறது. இதை ஆர்கநோஜெநிசிஸ் அப்படின்னு சொல்வாங்க. நாங்க அதை எல்லாம் படிக்கிறது இல்லை. எங்க மருத்துவத்தில் எப்படி என்ன நோய் இதுமாதிரி படிப்போம். இவதான் ஜெனிடிக்ஸ் எல்லாம் படிக்கணும்னு ஆர் என் ஏ எல்லாம் படிச்சிட்டு இருப்பா. எனக்கு ஒரு டாக்டர் ஆனா போதும்''

''கிருத்தி, ஆர் என் ஏ  பத்தி இப்போ எதுக்கு? நான் இன்னும் அதுபத்தி வாசிக்கலை, உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க''

''இப்போ ஆண்  பெண் இணைந்து உண்டாகிற கரு ஒரு குழந்தையா மாறும்போது இருவரின் விசயங்களை கொண்டு வருது. ஆனா பெருமாள் தாத்தா உருவான கரு அப்படி இல்லை. விஷ்ணுப்பிரியன் ஏதோ  பண்ணிதான் அந்த செல்களை அவர் ஒரு குழந்தையா உருவாக வழி பண்ணி இருக்கார். எனக்கும் தெரியலை பாரதி. இப்பவாச்சும் நம்புங்க எனக்கு முக்காலம் மட்டுமில்லை இக்காலமும் தெரியாது.''

கிருத்திகா என்ன நினைத்தாள் எனத் தெரியவில்லை. அங்கிருந்த பலகாரங்கள் சாப்பிட்டு முடித்தவள் இதற்கு மேல் நமக்கு என்ன வேலை என்பதுபோல பாரதியைப் பார்த்தாள். பாரதிக்கு திருமாலிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது. இவருக்கு இப்படி இத்தனை விசயங்கள் தெரிகிறது.

மனிதர்களுக்கு தனிப்பட்ட ஆர்வம் என்று ஒன்று உண்டு. மனதில் ஒன்றை நிறுத்திக்கொள்ளும் தொடர்ந்து கொள்ளும் ஆசை அது. ஒரு சிலர் அதிலேயே ஊறி இருப்பார்கள். அதைத் தவிர வேறு எதையும் எண்ணிப் பார்க்கமாட்டார்கள். சிலருக்கு பல விசயங்களில் ஆர்வம் இருக்கும். பல்வேறு விசயங்களில் ஆர்வம் கொண்டவர்கள் அவர்களது சிந்தனையை குறிப்பிட்ட வழியில் செலுத்தினால் மட்டுமே ஒன்றில் சாதனை பண்ண இயலும். திருமால் பல்வேறு விசயங்களில் ஆர்வம் கொண்டு இருப்பவராகவே தென்பட்டது.

''போவோமாயா''

''இரு கிருத்தி, கொஞ்ச நேரம் இருக்கலாம்''

''சாப்பாடு தயாராகிக் கொண்டு இருக்கு, சாப்பிட்டே போங்க, வேற எதுவும் கேட்கணுமா?''

''உங்ககிட்ட பேசிட்டே இருக்கலாம் போல இருக்கு, வார வாரம் ஏதேனும் ஒரு நேரம் தந்தா உங்களை வந்து பார்க்கிறேன்''

''ஆசிரமத்திற்கு வார வாரம் வாங்க, நான் பெரும்பாலும் அங்கதான் இருப்பேன்.

பாரதிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது மாதவியிடம் இருந்து போன்  வந்தது. வாசனுக்கு என்ன நேர இருந்தது, குளத்தூரில் என்ன நடந்தது என எல்லா விசயங்களையும் சொன்னவள் கிருத்திகா நான் சாதாரண பொண்ணுனு  சொன்னாளா அதுக்குத்தான் அவளை கூப்பிட்டு போக சொன்னேன். நீ முன்ன பார்த்த திருமால் வேற இப்போ பார்த்த  திருமால் வேறனு  தெரிஞ்சிகிட்டியா என்ற அவளது சொல் கேட்டு அப்படியே போனை திருமாலிடம் எதுவும் சொல்லாமல் கொடுத்தாள்.

''எப்படிமா என்கிட்டே போன் வந்ததுன்னு கண்டுபிடிச்ச, நல்லா இருக்கேன்மா. சாத்திரம்பட்டி போனதாக கேள்விபட்டேன்''

மறுமுனையில் மாதவி என்ன சொல்கிறாள் என பாரதிக்கு கேட்கவில்லை. ஆனால் போன்  கைமாறியது எப்படி அவள் அறிந்தாள்  என ஆச்சரியம் கொண்டாள்.

''மெடிக்கல் படிக்கிற பொண்ணுகதானே, நிறைய சந்தேகம் இருக்கத்தான் செய்யும். நீ பண்ணப்போற மூளை ஆராய்ச்சிக்கு எனது வாழ்த்துகள். பாரதிகிட்ட இப்பதான் சொல்லிட்டு இருந்தேன் உன்னோட ஒரே ஒரு தரம் தான் பேசினேன்னு''

பாரதிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. மாதவி குறித்து சற்று எரிச்சல் உண்டாகத் தொடங்கியது. எதற்கு தன்னிடம் அவள் குறித்த விசயங்களைச் சொல்ல மறுக்கிறாள் எனும் கோபத்தின் வெளிப்பாடு அது.

''சரிமா, பாரதிகிட்ட கொடுக்கிறேன், நீ சொன்னமாதிரி பாரதி முகம் கோபமாகத்தான் மாறிக்கிட்டு வருது''

அந்த வார்த்தைகள் பாரதியை மேலும் ஆத்திரமூட்டியது. தன்னை கட்டுபாட்டில் வைத்துக் கொண்டாள்.

''சரி மாதவி, அப்புறம் பேசறேன்''

எதுவும் பேசாமல் துண்டித்தாள். அதற்கு மேல் எதுவும் பேச விரும்பாதவளாய் பாரதி தென்பட்டாள். கிருத்திகாதான் பாரதியை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றாள். பாரதியின் கண்கள் குளமாகின. கிருத்திகா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் பாரதி கேட்பதாக இல்லை. மாதவியின் செயல்கள் தனக்கு எரிச்சல் அளிப்பதாக அழுகையின் ஊடே சொன்னாள்.

''என்னை எவளோனு அவ நினைகிறதால என்கிட்ட கூட சொல்லமாட்டேன் அப்படின்னு அடம் பிடிக்கிறா, அப்படி சொல்லாட்டியும் பரவாயில்லை எதுக்கு இப்படி பூடகமாகவே பேசணும். என்னை வெறுப்பேத்த இப்படி பண்றா. அங்க என்னோட பெரியம்மா முன்னமே வந்து இருக்கக்கூடாதா மாதவினு சொல்றாங்க. இவளுக்கு அப்படி ஏதேனும் தெரிஞ்சி இருந்தா எங்க பெரியப்பாவை எதுக்கு இப்படி தனியே தவிக்க விடனும்''

''விடுயா, அதைப் பத்தி எதுவும் நினைக்காதே. வா, சாப்பிட்டு கிளம்புவோம், சார் பார்த்தா தப்பா நினைப்பார். சொன்ன கேளுயா''

''இல்லை கிருத்தி, லீவு வரப்ப நேரா மாதவியை சந்திச்சி பேசணும். அவ என்னதான் மனசில நினைச்சிட்டு இருக்கா''

''சரிய்யா இப்பா வாய்யா போகலாம்''

பாரதியின் மனம் துடிதுடித்துக் கொண்டு இருந்தது.

(தொடரும்) 

Wednesday 24 June 2015

வெட்டித் தருணங்கள் - 4 (டிவிட்டர் உலகம்)

பகுதி - 3   இனி... கதையில் வருவன எவரையும் குறிப்பிடுவன அல்ல. உங்களை குறிப்பிடுவதாக நீங்களாக நினைத்தால் ஒன்று மாறிக்கொள்ளுங்கள், கதையை மாற்ற இயலாது. 

4. ''நன்மையையும் தீமையும் கலந்த ஓர் நிழல் உலகம்''

ஒரு மாதம் நன்றாக கவனித்தேன். நிறைய படித்த மேதாவிகள் கண்ணுக்குத் தென்பட்டார்கள். அந்த ஒரு மாதத்தில் நான் அமைதியாக கவனித்தபோது ஒவ்வொருவனும் கேவலமாக நடந்து கொண்டதை இங்கே எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. அப்போது நான் எதுவுமே எழுதாமல் இருந்தேன். ட்விட்டரில் டைம் லைன். நேரடி தகவல் தொடர்பு என இருவகை இருந்தது. இதில் என்னைப் பின்தொடர்ந்த ஒருத்தி என்னிடம் நேரடி தகவல் மூலம் படு கேவலமாக பேசினாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவளின் நோக்கம் ஒரு விலைமகளை விட கேவலமாக இருந்தது. இவள் எல்லாம் படித்ததற்கு செத்துப் போயிருக்கலாம் என்றே எண்ணினேன். எனது ஆசைகளைத்  தூண்டி சபலம் கொள்ளும் கயமைத்தனம் அது. நல்லவேளையாக நான் எதுவும் திரும்பி பேசாமல் இருந்தபோதுதான் ஒரு உண்மை தெரியவந்தது. அது என்னவெனில் பேக் ஐடி எனும் மடத்தனம்.

அது என்னவென கேட்கிறீர்களா, அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணின் பெயர் கொண்டு அற்பத்தனமாக நம்மிடம் நடந்து கொள்வான். எனக்கு என் தலைவர் விஜய் பற்றியே பெருமை பேச நினைத்தேன். ஆனால் இப்படி ஒரு கேவலமான எண்ணம் கொண்ட கொடிய மிருகங்கள் நடமாடும் தளம்  ட்விட்டர் என எனக்குத் தெரியவில்லை. டிவிட்டருடன் சேர்த்து பேஸ்புக் திறந்து வைத்தேன். அதில் தானத்தலைவர் தங்கத்தலைவர் இளைய தளபதி விஜய் அவர்களின் படத்தை வைத்து கொண்டேன். ஒவ்வொரு பாடலாக அதில் எழுதுவது அப்போது வழக்கமாக்கி கொண்டேன்.

இந்த ட்விட்டரின் டைம் லைனில் பெண்ணின் கணவன், பிள்ளை, அம்மா அப்பா என கேவலப்படுத்தி எழுதும் கூட்டம் கண்டேன். ஹாஷ்  டாக் அதாவது எழுதி உலக அளவில் ட்ரென்டு  ஆக்குவது என இருந்தது தெரிய வந்தது. முதலில் =vijaysuperstar என ட்ரெண்டு பண்ணினேன். என்னைக் கண்டு பல விஜய் ரசிகர்கள் பின் தொடர்ந்தார்கள். அஜீத் ரசிகர்களின் மனம் என்னைக் கண்டு பொங்கியது. சிலர் என்னை அசிங்க அசிங்கமாக பேசினர் . நானும் அசிங்கம் அசிங்கமாக பேசி வைத்தேன். நான் எதற்கும் சளைத்தவன் அல்ல என என்னைக் கண்டு மிரள வேண்டும் என திட்டமிட்டேன். நிறைய தத்துவங்கள் எல்லாம் அதில் வலம்  வந்தன. அதில் சாக்கடை கல் பன்றி யானை கூட்டாஞ்சோறு கறிவேப்பிலை என்றெல்லாம் வெளியில் கேள்விப்பட்ட விஷயத்தை எழுதி  தான் பெரிய சிந்தனை முத்துக்களாக காட்டிக்கொண்டார்கள். தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்ளும் கயமைத்தனம் கூட்டம் ஒன்று இருந்தது.

இவர்களில் எவரேனும் நல்லவர் கண்ணுக்குத் தென்பட மாட்டாரா என நினைத்தபோது ஒரு பெண் பழகினாள். ட்விட்டரில் 140  எழுத்துகள் மேல் எழுத இயலாது. நேரடி தகவல் பண்ணாமல் டைம் லைனில் எழுதினாள்.

''உன் பேரு என்ன?''

''விஜயபாண்டி, உன் பேரு என்ன?''

''தாமரைச்செல்வி, நீ எந்த ஊரு?''

''மதுரை, நீ எந்த ஊரு?''

''மதுரை''

''மதுரையில் எங்க?''

''மேலமாசி வீதி''

''நானும் மேலமாசி வீதி''

''மேலமாசி வீதியில் எங்க?''

அவ்வளவுதான். அத்துடன் அவளுடன்  பேசுவது நின்று போனது. அதற்கடுத்து அவளது ஐடி என்பார்கள் அதை காணவில்லை. என்னவென அறிந்து கொண்டபோது டீஆக்டிவேட் அதாவது ட்விட்டர் கணக்கை மூடிவிடுவது. ஆனால் தினமும் தானைத்தலைவர் விஜய் அவர்களை கேவலப்படுத்தி எழுதும் கூட்டம் அதிகரித்து வந்தது. எதற்கு எடுத்தாலும் தலைவர் விஜய் அவர்களை பேசிய கூட்டம் மிரளும்படி எனது நடவடிக்கை இருந்தது.

அப்போதுதான் ஒரு பெண் பச்சை பச்சையாக டைம் லைனில் எழுதினாள். அருவருக்க வைக்கும் வார்த்தைகள். அவளது செயல்களைப் போற்றிப் பாட ஒரு கூட்டம் உருவாகியது. ஆண்கள்தான் பச்சையாக எழுத வேண்டுமா என அந்த பெண் எழுதியதை ஆதரிக்கும் கூட்டம். ஆனால் அந்த பெண் பெண்ணல்ல ஆண் என்றே பலர் சொல்லிக்கொண்டார்கள்.

முகம் மறைத்த சுதந்திரம் வக்கிரம் என்ற வார்த்தை ட்விட்டர் கற்றுத் தந்தது. வக்கிரம் நிறைந்த கூட்டம் ஒன்று இருந்தது. இணையம் ஒரு ஆபத்தானது இந்த ட்விட்டர் கொடியது என எனக்குள் எண்ணம் தோன்றியது.

அப்போது திடீரென் வேறொரு பெண் வந்து பேசினாள்.

''உன் பேரு என்ன?''

''விஜயபாண்டி, உன் பேரு என்ன?''

''சுந்தரி, உன் ஊரு என்ன?''

''மதுரை, மேலமாசி வீதி,உனக்கு''

''திருச்சி, சுப்பிரமணியபுரம்''

எனக்கு இவள்தான் தாமரைச்செல்வி என ஒரு சந்தேகம் வந்தது. சரி என அவளது நேரடி தகவல் சென்று நீதானே தாமரைச் செல்வி என்றேன். யார் எது என சமாளித்து பேசியதால் பேசாமல் விட்டுவிட்டேன்.

தினமும் அஜீத் விஜய் சண்டை. அதோடு ராஜா ரகுமான் சண்டை. அதையும் தாண்டி ஆத்திக நாத்திக சண்டை. இந்த எல்லா சண்டைகளிலும் நான் பங்கேற்று கொண்டு இருந்தேன். விஜயபாண்டி என்றாலே வந்துட்டாண்டா என சொல்லும் அளவுக்கு இருந்தது. எனக்கு பெண் ரசிகைகள் ஆதரவு அதிகம் இருந்தது. இதில் பெண்கள் சேர்ந்து சரிக்கு சரியாக எழுதினார்கள். நான்கே மாதத்தில் ஐந்தாயிரம் பேர் பின்தொடர்ந்தனர். நான் இருநூறு மேல் எவரையும் பின்பற்றாமல் இருந்தேன்.

ஆனால் டாக், டைம்லைன் , லிஸ்ட் என பிறரின் எழுதுவதை படித்து கண்டமானிக்கு எழுதினேன். அப்போது ஒழுக்க சிகாமணிகள் இப்படி எழுதினால் க்ரைம் பாயும் க்ரைம் ஆயும் என்றார்கள். என்னை பேசியவனை திருத்தப் பாருங்கடா என சொன்னதும் ஒதுங்கினார்கள். நான் சட்டத்திற்கு புறம்பாக எழுத ஏதும் அங்கு இல்லை.

அங்கொன்று இங்கொன்று பார்க்கையில் பெண்ணியவாதிகள் என சிலர் சொல்லிக்கொண்டு அலைந்தார்கள். இந்த பெண்ணியவாதிகள் எல்லாம் பெண்ணியவியாதிகள் என குற்றம் சொல்லப்பட்டு இருந்தது. அதிலும் என்னை அட்டென்சன் சீக்கர் என ஒரு முத்திரை குத்தினார்கள்.

நான் டிவிட்டரில் பேஸ்புக்கில் இருப்பது எனது கல்லூரியில் தெரிய ஆரம்பித்தது. சிவகுமார் என்னை குறி வைத்து தாக்க ஆரம்பித்து இருந்தான். ஆனால் நாள்பட நாள்பட நான் சுந்தரி மீது காதல் கொள்ள ஆரம்பித்தேன். பத்து நாட்கள் தினமும் அவளுடன்  ஒரு அரை அரை மணி நேரம் நேரடி தகவலில் பேசினேன். ஒருநாள் சுந்தரி என்னிடம் நேரடி தகவலில் பேசியபோது

''நான் அஜீத் ரசிகை''

''செருப்பால அடி, ஒழுங்கா விஜய் ரசிகையா மாறு, இல்லை என்கிட்டே பேசாதே''

''போடா நாயே, நீ அஜீத் ரசிகனா மாறு, இல்லை என்கிட்டே பேசாதே''

''யாரடி நாய்னு சொன்ன''

''உங்கப்பனையா சொன்னேன், நான் பொண்ணே இல்லை''

எனக்குத் தூக்கிவாரி போட்டது. டிவிட்டரில் ப்ளாக் என்று ஒரு வசதி  உண்டு. பிடிக்கவில்லை எனில் ப்ளாக் பண்ணிவிடலாம். அவள் அதாவது அவன் என்னை ப்ளாக் பண்ணினான். அப்போதுதான் பல அஜீத் ராஜா ரசிகர்கள் என்னை ப்ளாக் பண்ணி இருந்தது என தெரிய வந்தது. எல்லா அஜீத் ரசிகர்களை ராஜா ரசிகர்களை ப்ளாக் பண்ணினேன். அப்போது சண்டை போட முடியாமல் இருந்தது.

ஒரு நல்லவன் ஐடி தொடங்க அப்போதுதான் யோசித்தேன். ஆனால் இந்த நல்லவன் ஐடி எனது விஜய் கொண்டை வெளியே தெரியாமல் எப்படி மறைப்பது என திட்டம் போட்டேன்.

தினமும் எப்படியும் ஒரு நான்கு மணி நேரம் டிவிட்டரில் இருந்து வந்தேன். இனிமேல் நல்லவன் ஐடிக்கு இரண்டு  மணி நேரம் விஜய் ஐடிக்கு இரண்டு மணி நேரம் என முடிவு செய்தேன்.

நல்லவன் ஐடிக்கு சில சுவாரஸ்யமான நபர்கள் சிக்கினார்கள். நான்தான் விஜயபாண்டி என்பது தெரியாமல் இருக்க சுகுமார் என்ற பெயர் வைத்து சுகுமார்@supersukku எனத் தொடங்கினேன்.

(தொடரும்) 

Tuesday 23 June 2015

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? இன குழுக்கள்

 முந்தைய பகுதி 

மனிதர்கள் இனக்குழுக்களாக அன்றைய நாளில் வசித்து வந்தார்கள். பொதுவாக அரசர் அவருக்கு கீழ் ஒரு கூட்டம் என இருந்த காரணத்தினால் அரசரின் மனப்போக்குப்படியே இந்த இனக்குழுக்கள் செயல்பட்டன. இனக்குழுக்களின் தலைமை அந்த இனத்தின் வளர்ச்சி மற்றும் அழிவுக்கு காரணமாக அமைந்தது. 

இஸ்ரேலிய மக்கள் என அழைக்கப்பட்டதன்  காரணம் இஸ்ரேலின் மகன்கள், இஸ்ரேலின் குழந்தைகள் என்ற அடிப்படை என அறியப்படுகிறது. இந்த இஸ்ரேலிய மக்கள்தான் யூதர்கள், சமாரிட்டன்கள், ஹீப்ரூக்கள் என பிரிந்தார்கள். இங்குதான் இனக்குழு தலையெடுக்கிறது. யூதர்களுக்கு என சில பழக்கவழக்கங்கள் அவர்களது வாழ்க்கை முறை என உண்டாக்கும்போது அதில் ஈடுபாடு கொள்ள இயலாத மக்கள் அதில் இருந்து தனித்து வெளியேறுகிறார்கள். எப்படி நமது நாட்டில் தமிழர்கள், கன்னடர்கள், மலையாளிகள் தெலுங்கர்கள் என பிரிந்து இருந்தாலும் இந்தியர்கள் என சொல்லிக்கொள்வது போல அன்றைய நாளில் இந்த சமரிட்டன்கள் தங்களை யூதர்கள் என ஒருபோதும் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை மாறாக தங்களை இஸ்ரேலிய மக்கள் என சொல்லிக்கொள்ள தயங்கியது இல்லை. 

யூதர்கள் பின்பற்றியதுதான் ஜூடாயிசம். இந்த ஜூடாயிசம் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருந்தாலும் மூவாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. யூதர்களின் மதம், தத்துவ வாழ்க்கை, கலாச்சாரம் என அனைத்தையும் விளக்குவதுதான் ஜூடாயிசம். யூதர்களாக பிறந்தால் அவர்கள் ஜூடாயிசம்தனை பின்பற்றி ஆக வேண்டும் எனும் நிர்பந்தம் இருந்து வந்தது. இந்து மதம் தனில் பிறந்தால் இந்துக்கள். முஸ்லீம் மதத்தில் பிறந்தால் முஸ்லீம்கள், கிறிஸ்துவம் தனில் பிறந்தால் கிறிஸ்துவர்கள் என்றே பார்க்கப்பட்டு வருகிறது. பிறப்பால் இவர் என்ற ஒரு இனம் தொன்று தொட்டு பின்பற்ற படுகிறது. 

ஒவ்வொரு குழந்தையும் சுதந்திரமற்ற குழந்தைதான். மதம்,  சாதி, இனம், பெயர் என திணிக்கப்பட்டு குழந்தைகள் சுதந்திரமர்றுப் பிறக்கின்றன. இப்படி பிறக்கும் குழந்தைகள் அந்த இனத்தில் இணைக்கப்பட்டு வேறு வழியின்றி அதை பின்பற்றும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இந்த ஜூடாயிசம் தான் கிறிஸ்துவம், முஸ்லீம் எல்லாம் உருவாக பெரும் காரணமாக இருந்தது. இதனுடைய கருத்துகளின் தாக்கங்கள் பின்பற்றப்பட்டன. எப்போதும் இந்த இனக்குழுக்களிடம் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். எதையும் உறுதியாக நம்பமாட்டார்கள். 

தங்களுக்கு என்று வரைமுறையை தனி நபரோ சில நபர்களோ  வைத்து எழுதினாலும் அதை பின்பற்றி செல்லாமல் அதை நம்பவும் மாட்டார்கள். இப்படி எல்லா இன குழுக்களில் இருக்கத்தான் செய்கிறது. ஒரு உதாரணத்திற்கு விடுதலைப்புலிகள் என்பது தமிழ் இனத்தில் ஒரு இனம். எதற்கு அப்படி குறிப்பிடுகிறோம் எனில் தமிழர்களை தீவிரவாதிகள் என சொல்லாமல் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என அடையாளம் காட்டிய வரலாறு சமீபத்திய ஒன்றுதான். போராளிகள் என்ற ஒரு இனக்குழு இன்றைய காலகட்டத்தில் தீவிரவாத இனக்குழு. 

இன்றைய சூழல் போலவே அன்றைய சூழலில் இந்த யூதர்கள் இனக்குழு இருந்தது. ஒரு இனத்தின் பற்றிய வரலாறு செவிவழி, கல்வெட்டு, புத்தகங்கள் மூலம் வழி வழியாக சொல்லப்பட்டு வரும். அன்றைய சூழலில் நம்ப இயலாத ஒன்றை அழிக்கவே முற்படுவார்கள். நமக்கு கிடைத்திருக்கும் செய்திகள் எல்லாம் எத்தனை உண்மை என தெரியாது. ஆனால் எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்கள், இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள் என்பதின் மூலம் முற்றிலும் கதை என எதையும் ஒதுக்கிவிட இயலாது. இன்றும் 14மில்லியன் யூதர்கள் உலகில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. 

யூதர்களின் வரலாறு குறித்து தொல்பொருள் ஆராய்ச்சிக்கும் பைபிளில் குறிப்பிட்டு இருப்பதற்கும் பல வேறுபாடுகள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இப்போது இதைப் பற்றி எழுதும்போது யார் பாபிலோனியர்கள், யார் அஷ்ஸ்ரீயர்கள் என எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டு வந்து இருப்பது தெரியும். அந்த பகுதியில் வாழ்ந்த பல இனக்குழுக்கள் ஒவ்வொரு பெயர் கொண்டு தங்களை அடையாளப்படுத்தியதோடு தங்களது திறமையை, தங்களது நிலையை நிலைநாட்டிட பெரும் போராட்டங்களை செய்து கொண்டு இருந்தன. இந்த போர் முறைகளால் மனிதம் தோற்றதுதான் உண்மையான வரலாறு. 

இது குறித்து மனம் போன போக்கில் எல்லாம் எழுத முடியாத விசயங்கள் என்பதுதான் இப்போதைக்கு பெரிய போராட்டமாக இருக்கிறது. 

(தொடரும்) 

மனைவியின் வாரிசு ( சிறுகதை )


                                                     மனைவியின் வாரிசு ( சிறுகதை )

இதோ நச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன். எப்போது அடுத்த குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் சொல் என கேட்கும்போதெல்லாம் இதுவரைப் பெற்றுக் கொண்டது போதாதா என்றே பதில் அளித்துக்  கொண்டு இருந்தாள்.

''நாலுதானே பெத்து இருக்கோம், இன்னும் ஒன்னே ஒன்னு பெத்துக்கிரலாம்''

''ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுக, போதாதா. ஊரு உலகத்தில் நம்மளைப் பத்தி என்ன பேசுறாங்க தெரியுமா?''

''எவன் என்ன பேசினா என்ன, அவனா வந்து நம்ம வீட்டில உலை வைக்கிறான்''

''நீங்க என்ன சொன்னாலும் சரி, என்னால இன்னொரு புள்ளைப்  பெத்துக்க முடியாது, இதுகளை சமாளிக்கவே எனக்கு சீவன் போதலை. இதுல இன்னொன்னு வேறயா''

''அந்த காலத்தில...''

''வாயை மூடுங்க, போதும் உங்க அந்த காலப் புராணம், ஆசை வார்த்தை சொல்லி சொல்லி அதை வாங்கித்தாரேன் இதை வாங்கித்தாரேன் சொல்லி புள்ளைக வாங்கித் தந்ததுதான் மிச்சம். மூத்தவனுக்கு இன்னும் ரண்டு வருஷம் போனா கல்யாணம், இந்த லட்சணத்தில இன்னொன்னு கேட்குதா''

''நீ என்ன வேணும்னா சொல்லு, எனக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை. எனக்கு உடனே ஒரு புள்ளை  நீ பெத்து தரனும்''

''குடும்ப கட்டுபாடுனு  ஒன்னு இருக்கே அதை எல்லாம் பண்ணித் தொலைக்கக்கூடாதானு போகிற இடத்தில பேசுறாளுக, மானம் போகுது''

''நாம பேசாம ரஷ்யா போயிரலாம், அங்கன நிறைய புள்ளைக  பெத்தா வரிவிலக்கு எல்லாம் இருக்கும். வேற ஒன்னும் செய்வோமா நாம பேசாம மதம் மாறிட்டா என்ன''

''புள்ளை  பெக்கிரதுக்கு யாராச்சும் மதம் மாறுவாகளா''

''கல்யாணம் பண்ணுறதுக்கு மதம் மாறுற ஆளுகனு  ஊருல பேச்சு இருக்கு, அது எல்லாம் இப்ப எதுக்கு, எனக்கு இன்னொரு புள்ளை  வேணும்''

''நான் வீட்டுக்கு இனிமே தினமும் தூரம்''

''கிறுக்கச்சி  மாதிரி பேசித் தொலையாத அப்புறம் இன்னொரு புள்ளைப்  பெத்துக்க வேற ஒருத்தியைத்தான் நான் தேடணும்''

''ச்சீ என்னப்  பேச்சு பேசறீங்க, இதெல்லாம் மானங்கெட்ட பொழப்பு, பேசாம தள்ளிப்படுங்க, நாம பேசறது யாருக்காச்சும் கேட்கப்போகுது, ரெண்டாமவன் சொல்றான் இன்னொரு பிள்ளை பெத்துக்கம்மா இல்லைன்னா எனக்கு ஒரு நாய்க்குட்டி வாங்கிக்கொடுனு சொல்றான். குழந்தைக பொம்மைன்னு நினைச்சிட்டான்''

''அவன் கேட்டத நாம நிறைவேத்தி வைக்க வேணாமா சொன்னா கேளு. இதுதான் கடைசி''

''நீங்க மொத பிள்ளையில் இருந்த இப்ப நாலாம் பிள்ளை வரைக்கும் இதேதான் சொன்னீங்க. எதுக்கு இப்படி வம்பு பண்றீங்க''

''அப்ப நான் வேற ஒருத்தியைத் தேட வேண்டியதுதான்''

''இன்னொருதடவை அப்படி பேசினீங்க, அப்புறம் கொலை பண்ணக்கூட தயங்கமாட்டேன். சொல்லிட்டேன். பேசாம படுத்துத் தொலைங்க. எப்பப்பாரு பிள்ளை பிள்ளைனுட்டு''

வழக்கம் போல நன்றாகத் திட்டு வாங்கி உறங்கினேன். காலையில் எழுந்ததும் வீடு பரபரப்பாக இருந்தது. பெரியவன் முதற்கொண்டு சிறியவள் வரை பள்ளி கல்லூரி என இங்கும் அங்கும் அலைமோதிக் கொண்டு இருந்தார்கள். இவர்களை எல்லாம் ஒழுங்கு பண்ணி வியர்க்க விறுவிறுக்க  வேலை செய்து கொண்டு இருந்தாள்.

''மாமா, பெரியவனுக்கு ஒரு நூறு ரூபா கொடுங்க. சின்னவளுக்கு ஒரு ஐம்பது கொடுங்க, நேத்தே கேட்க மறந்துட்டேன்''

இப்படி இவள் ஆடி ஓடி உழைத்து எத்தனை வருடங்கள் கழிந்து விட்டன. இன்று விடுமுறை போட்டு இருந்தேன். எப்படியும் அடுத்த பிள்ளை தயாராக வழி செய்ய வேண்டும் என.

''இன்னைக்கு வேலைக்குப் போகலையாங்க''

''போகலை, அசதியா இருக்கு''

''அப்படினா ரண்டாமவனை ஸ்கூல்க்கு போய்  விட்டு வாங்க''

''நீ ரெடியா இரு''

''எங்கேயும் வெளியில கூப்பிட்டுப் போறீங்களா''

''இல்லை, அடுத்த பிள்ளைக்கு...''

''அப்பா, அம்மாவை எப்போதுமே தொந்தரவு பண்ணிட்டேதான் இருப்பிங்களா''

பெரியவள் வந்து சத்தம் போட்டுப் போனாள்.

''கேட்டுக்கோங்க, பிள்ளைக வளர்ந்துட்டாங்க''

ரண்டாமவனையும் சின்னவளையும் அழைத்துப் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். நானும் அவளும் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினோம். சப்பாத்திதான் செய்து இருந்தாள்.

அவளது சிறு வயது காலங்கள் எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தாள் அதைக் கேட்டுக்கொண்டு இருந்த நான் என்னையும் அறியாமல் முகம் மலர்ந்தேன்.

கொலுசுகள் வாங்கிட்டு வரலாமா என்றவுடன் எதுவும் மறுப்பு சொல்லாமல் வா போகலாம் என கொலுசுகள் வாங்கி கொண்டு வந்து வீட்டில் அமர்ந்தோம். காலையிலேயே மதிய சாதம் சமைத்துவிட்டதால் அதிக வேலை இல்லை. ஒவ்வொரு அறையாக சென்று மகன்கள்  மகள்களின் அறைகளை சுத்தம் செய்தாள். எல்லா துணிகளை ஒழுங்கா மடித்து வைத்தாள்.

''பிள்ளை பெறலாம் வா''

''நீங்க வேலைக்குப் போங்க, நொய்  நொய்யுனுட்டு''

''நான் ஒரு கனவு நேத்து கண்டேன்''

''என்ன கனவு''

''அது வந்து ஒரு பொண்ணு இருவத்தி அஞ்சி வயசு இருக்கும், என்கிட்டே வந்து உங்களோட ஒரு புள்ளை பெத்துக்கிட்டா எனக்கு சாகா வரம் கிடைக்கும். அதோட மட்டுமில்லாம அந்த பையன் இந்த உலகத்தையே ஆளும் வல்லமை கொண்டு இருப்பான். உங்களுக்கும் சாகா வரம் கிடைக்கும்னு  சொல்ல, எனக்கு கல்யாணம் ஆகிருச்சி, குழந்தைக இருக்காங்கனு சொன்னேன். அதுக்கு அந்த பொண்ணு அது எல்லாம் தெரியும். அவங்களுக்கும் சாகா வரம் கிடைக்க ஏற்பாடு பண்றேன். எனக்கு உங்க குழந்தைதான் வேணும் அப்படின்னு அடம் பிடிச்சிச்சி. வேற யாருமே உலகத்தில வேணாம் அப்படின்னு சொல்ல எனக்கு என்ன ரோதனையாப் போச்சுனு  அதெல்லாம் முடியாது, என்னோட பொண்டாட்டிக்கு துரோகம் பண்ண மாட்டேன் அப்படின்னு சொன்னேன்''

''அப்புறம் என்ன ஆச்சுங்க''

''பாத்தியா நான் உனக்கு கனவுல கூட துரோகம் செய்யலை''

''மீதி கதை என்ன ஆச்சுன்னு சொல்லுங்க''

''பாவிபுள்ள நான் குழந்தை தரமுடியாதுன்னு சொன்னதும் செத்துப் போச்சு''

''ஹாஹாஹா ஹாஹாஹா நீங்க ரொம்ப குறும்புங்க''

'சரி வா நாம...''

''இப்படி எல்லாம் உங்களுக்கு ஒரு நினைப்பு உண்மையிலே இருந்து இருக்கு அதுதான கனவு வந்துருக்கு''

அந்த வார்த்தைகள் கேட்டு நான் சற்று மிரண்டேன்.

 ''இல்லை அந்த பொண்ணு உன்னோட வாரிசா வர நினைச்சி இருக்கும்''

''உங்களுக்கு மதியம் சோறு கிடையாது, பட்டினியா கிடங்க''

இப்போதெல்லாம் நான் கனவு கண்டதாக எந்த ஒரு கதையும் அவளிடம் சொல்வதே இல்லை.

(முற்றும்)

பின்குறிப்பு: சிறுகதை என குறிப்பிட்டு இருப்பதால் உங்க சொந்த அனுபவமோ என எவரேனும் என்னைப் பார்த்து கேட்டீங்க அப்புறம் உங்களுக்கு சோறு கிடையாது, தண்ணி கிடையாது.






Sunday 21 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 7

பகுதி - 6  

7 வஞ்சகர்கள் நிறைந்த உலகம்

பெரியவரிடம் வாசன் சாரங்கனிடம் சென்று எதுவும் விசாரிக்க வேண்டாம் என சொன்னான். பெரியவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி வேண்டாம் என சம்மதம் சொல்லிவிட்டார். முத்துராசு தான் இந்த உலகம் வஞ்சகர்களால் நிறைந்தது என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருந்தார். பெரியவர் சற்று அதட்டியதும் அமைதி ஆனார்.

இந்த உலகம் வஞ்சகர்களால் மட்டுமே நிறைந்தது என குறிப்பிட இயலாது. ஒவ்வொரு மனிதரும் தனது வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ள தனது சந்ததிகள் நிலைநிறுத்த போராடிக்கொண்டு இருக்கிறார்கள். தனிப்பட்ட நலன் என்று ஒன்று இல்லாமல் இல்லை.

பெரியவர் வாசனிடம் சற்று எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார். வாசன் நாம் எதுவும் தவறு செய்யவில்லை என சொன்னபோது முத்துராசு அவர்களை அடித்து விரட்டியது அபாயகரமானது என்றே குறிப்பிட்டார்.

வாசன் தோட்டத்திற்கு செல்லும் வழியில் மாதவி வாசனிடம் பேசினாள்.

''மாமா நீங்க பாதுகாப்பாக இருங்க, எந்த நேரத்தில் என்ன நடக்கும்னு தெரியாது''

''என்ன சொல்ற மாதவி''

''உங்க உயிருக்கு ஆபத்து இருக்கு மாமா''

''மாதவி...''

''நீங்க வீட்டுல இருங்க, இன்னைக்கு எங்கையும் போக வேணாம்''

''ம்ம் சரி மாதவி, எந்த வீட்டில் இருந்தாலும் சரிதானே''

''ம்ம்''

முத்துராசுவிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்காமல் தான் தோட்டம் செல்வதாக சென்றார். வாசன் சற்று கோபமாக சொன்னதும் சரி தம்பி நான் வீடு போறேன் என போனவர் வாசன் சற்று மறைந்ததும் தோட்டம் நோக்கி சென்றார். வாசன் நேராக கேசவன் வீட்டிற்குப் போனான்.

''எப்படி இருக்க பூங்கோதை''

''நல்லா இருக்கேண்ணா''

''பையனுங்க என்ன பண்றாங்க''

''இப்போதான் தூங்கினாங்க''

''கேசவன் எங்க''

''மாரிமுத்து தோட்டம் போறேன்னு போனார்ணா, நான் போய் காபி கொண்டு வரேன்ணா''

''வேணாம் பூங்கோதை, நெகாதம் செடி வாடிப்போனது பத்திக் கேள்விப்பட்டதான''

''ஆமாணா, ரோகிணி  கூட போன் பண்ணிக் கேட்டா. எனக்கும் ஆச்சரியமா இருக்குணா''

''மேற்கொண்டு படிக்கலையா பூங்கோதை''

''இல்லைணா, இவங்களை வளர்த்துப் பெரியவங்க ஆக்கணும், பெருமாள் தாத்தா அவரோட முந்தைய நினைவுகளோட இருப்பாராண்ணா''

''உனக்கு குழந்தைகளில ஏதேனும் வித்தியாசம் தெரியுதா பூங்கோதை''

''அண்ணா ஒரு நிமிஷம் காபி போட்டு வரேன். மோராவது குடிங்க''

''ம்ம்''

வாசன் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தைகளைப் பார்த்தான். அதில் இரு குழந்தை விழித்துப் பார்த்தது. அதே பெருமாள் தாத்தாவின் கண்கள். இரண்டு கைகளையும் வாசனை நோக்கி நீட்டியது. வாசன் கைகளை நீட்டினான். அவனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டது. வாசன் விடுவிக்க முயன்றான். குழந்தை சிரித்தது. வாசன் ஆச்சரியம் அடைந்தான். பூங்கோதை அங்கே வந்து கொண்டு இருந்தாள். குழந்தை கைகளை விடுத்து கண்ணை மூடியது.

''காபி''

''பூங்கோதை, நீ இந்த குழந்தைகளில் எதுவுமே வித்தியாசம் பார்க்கலையா''

''இல்லண்ணா''

''பெருமாள் தாத்தா...''

''என்னண்ணா, நீங்க எதுவும் பார்த்தீங்களா''

''என்னோட கையை இறுகப் பிடிச்சான்''

''அண்ணா''

''பூங்கோதை, பெருமாள் தாத்தா கரு தான் இரண்டாக பிரிந்து இரட்டை குழந்தையாகப் பிறந்து இருக்கு, உனக்கும் கேசவனுக்கும் உருவான கரு எதுவும் இல்லை''

''அண்ணா, டாக்டர் விஷ்ணுப்பிரியன் அப்படி சொன்னாரா''

''மாதவிதான் சொன்னா''

வாசன் மாதவிக்கு போன்  பண்ணி அங்கு என்ன நடந்தது என சொல்லிக்கொண்டு இருந்தபோது கேசவன் வீட்டிற்குள் வந்தான்.

''மாப்பிள்ளை நீ இங்கதான் இருக்கியா''

''என்னாச்சு''

''முத்துராசுவை மூணு பேரு வெட்டிக்கொல்ல வந்தானுங்க, மாரிமுத்து நான், வீரப்பசாமி, வேல்முருகன் எல்லாம் அந்த நேரத்தில நம்ம பெரியவர் தோட்டம் வழியா வந்தோம். பெரிய கலவரம் ஆகிருச்சி. அடிச்சி அவனுகளை போலிஸ் ஸ்டேசனுக்கு கொண்டுப் போயிட்டு இருக்கோம். நீ வீட்டுக்குப் போயிட்டன்னு ராசு மாமா சொன்னார். கொஞ்சம் பணம் எடுக்கத்தான் வந்தேன், நீ இங்கேயே இரு. உன்னை கொல்லத்தான்  வந்து இருக்கானுங்க மாப்பிள்ளை''

''நானும் வரேன்''

''சொன்னா கேளு மாப்பிளை''

வாசனுக்கு வியர்த்துக் கொட்டியது. யார் இந்த மனிதர்கள். முத்துராசு சொன்னது போல வஞ்சம் நிறைந்த மனிதர்கள். முத்துராசு எதற்கு தோட்டம் போனார் என்றே வாசன் யோசித்தான். வாசன் தனது வீடு நோக்கி நடந்தான்.

கேசவனும் பிறரும் அவர்கள் மூவரையும் காவல் நிலையத்தில் கொண்டு சேர்த்தார்கள். அவர்களை விசாரித்தபோது சாரங்கன்  பெயரைச் சொன்னார்கள். பெரியவர் மிகவும் கோபம் கொண்டவர் ஆனார். சாரங்கனுக்கு அழைத்து பேசியபோது விநாயகம் நீ தேவையில்லாம பேசறதை நிறுத்து எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.

காவல் அதிகாரிகள் சாரங்கன் வீடு சென்றார்கள். சாரங்கனிடம் விசாரித்தபோது தான் அவ்வாறு செய்ய சொல்லவில்லை என அடம்பிடித்தார். அவர்கள் தப்பிக்க தன்னை சொல்வதாக சொன்னார். காவல் அதிகாரிகள் எச்சரிக்கை செய்துவிட்டு திரும்பினார்கள்.

''சாரங்கா, என்ன இது''

''நான் நிலம் விலை பேச சொன்னேன். ஆனா கொல்ல  சொல்லலை''

அதற்கு மேல் அங்கிருக்க விருப்பம் இன்றி வீடு திரும்பினார். இரவெல்லாம் பெரியவருக்கு யோசனையாக இருந்தது.

குழந்தைப் பிடித்த தனது கைகளைப் பார்த்துக் கொண்டான் வாசன்

(தொடரும்)


Sunday 14 June 2015

நமது திண்ணை ஜூன் மாத இணைய சிற்றிதழ்

விளம்பரம் இல்லை என்றால் ஒரு பொருளைப் பற்றிய விசயம் அறிந்து கொள்ள இயலாது என்பதுதான் இந்த உலகம் அறிந்த உண்மை. விளம்பரங்கள் இல்லாத காரணத்தினால் பல விசயங்கள் மக்களைச்  சென்று அடையவில்லை. அதே விளம்பரங்கள் மக்களை வெறுப்பேற்று விடுகின்றன.

நமது திண்ணை இந்த ஜூன் மாத சிற்றிதழ் விளம்பரமே இல்லாமல் வெளிவந்தது. இன்றைய காலத்தில் போராட்டங்கள் விளம்பர யுக்தியாக மாறி வருகிறது. வளர்ந்து வரும் இணைய இதழுக்கு போதிய ஆதரவு மிகவும் அவசியம், அப்படி இல்லாதபட்சத்தில் ஒருவித வெறுமை தோன்றும்.

சுஷீமா அம்மா அவர்களின் ஸ்ரீராமானுஜர் தொடர் மிகவும் அருமையாக இருக்கிறது. ஒரு பிராமணன் சாதி இல்லை என்று சொன்னால் சாதிக்கு எதிராகப் போராடினால் அவரை சமூகம் தலையில் வைத்துக் கொண்டாடாது என்பதுதான் இந்த தொடர் மூலம் நான் உணர்ந்து கொண்டது. நிறைய விசயங்களை அறிந்து கொள்ளும் வண்ணம் இந்த தொடர் அமைவது மிகவும் சிறப்பு.

ஒரு சிறிய பறவை குறித்த பாடல் பரவசம் உமாகிரிஷ் அவர்களின் பார்வையில் மிகவும் பரவசமாக இருக்கிறது இந்த பாடல் எனது விருப்பப்பாடலும் கூட. பொதுவாக கவிஞர்கள்  என்ன மனநிலையில் எதை கற்பனை பண்ணி எழுதுவார்கள் என தெரியாதபோது இதுபோன்று விளக்கம் சொல்லும் பார்வை வெகு சுவாரஸ்யமாகவே இருக்கிறது, இதை இசைக்கும் சேர்த்துக் குறிப்பிடலாம்.

நிஷா அவர்களின் வெட்கம் மற்றும் மரணம் கவிதை ஒரு பெண்ணின் மனநிலையை வெகு சிறப்பாக விவரிக்கிறது. வார்த்தைகள் மிகவும் சரளமாக வந்து இருப்பதே நமக்கு பயணம் செய்ய ஏதுவாக  இருக்கிறது.

நச்சுனு சிரிங்க என்பதை நச்சுனு சிந்திக்க எனும் வகையில் அமைந்து இருக்கிறது. அதுவும் சதுரம் வட்டம் குறித்து திட்டுவது வெகு சிறப்பு. ஒவ்வொரு போட்டோக்களும் ஒரு கதை சொல்லும் வண்ணம் அமைந்து இருக்கிறது. எனது போட்டோ வரவில்லையே என ஆதங்கப்படும் அளவுக்கு இந்த பகுதி அமைந்து இருப்பது வெகு சிறப்பு.

கனல் கத்தியின் பச்சை உலகம் அருமை. ட்விட்டரில் எழுதப்படும் ஒவ்வொருவரின் எழுத்தை சிறப்பிக்கும் வண்ணம் இங்கு சேர்க்கப்பட்டு அழகுப் பார்க்கப்படுகிறது. ஓவியம் இன்னும் சிறப்பாக இந்த இதழில் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என்பது எனது எண்ணம்.

ஒரு கடலோர கிராமத்தின் கதை நல்லதொரு நாவல் என நம்பிக்கை கொண்டு வாங்கலாம். கார்த்திக் அவர்களின் இந்த நூல் குறித்த விமர்சனம் சிறப்பு. குருடன் பார்த்த யானை. நல்ல உவமை.

ஸ்ரீ அவர்களின் கோடைகால வெயிலும் ஆரோக்கியமும் கட்டுரை மிகவும் அவசியமான ஒன்று. மிகவும் பயனுள்ள கட்டுரை. இவர் ஒரு மருத்துவர் என்பதால் இந்த நமது திண்ணை சிற்றிதழில் மருத்துவ குறிப்புகள் நோய் குறிப்புகள் குறித்து தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது விருப்பம். நமது இணைய இதழின் ஆசிரியர் இது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

திண்ணைப் பாடகர் இன்னும் கேட்கவில்லை. மழலைப் பட்டாளங்கள் வெகு சிறப்பு. வழக்கம் போல நண்பர் ரவி அவர்களின் கொத்தவரைக்காய் புதுவிதம். சமைத்தால்தானே இது எல்லாம் தெரியும். டெல்லி கணேஷ் பற்றிய பல விபரங்கள் சிறப்பாகவே இருந்தது. ஆன்டீராய்ட் பற்றிய நாகராஜ் அவர்களின் குறிப்புகள் பலருக்கு உதவும். இறுதியில் ஆசிரியரின் சுருளிராஜன் பற்றிய தகவல்கள்.

இம்முறை சில பிரச்சினைகளைத் தாண்டி வெளிவந்து இருக்கிறது. இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு இன்னும் பல அரிய  விசயங்களுடன் இந்த நமது திண்ணை இதழ் சிறப்பாகத் தொடர வேண்டும்.

நன்றி.

Thursday 11 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 6

நுனிப்புல் பாகம் 3 - 5

6. இருவழிப் பாதை

பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்கும். இறப்பு என்று ஒன்று இருந்தால் பிறப்பு ஒன்று இருக்கும். ஆனால் இதுவரை எவரது இறப்புமே மீண்டும் ஒரு  பிறப்பாக வந்தது என நிரூபிக்கப்படவில்லை. தனது முன் ஜென்ம வினை என்று சொல்கிறார்கள், தான் முன் ஜென்மத்தில் இது போன்று இருந்ததாக ஒரு சிலர் குறிப்பிட்டு இருப்பதை நிரூபிக்க வழி ஒன்றும் இல்லை.

பாரதி வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ணியவாறு யோசித்துக் கொண்டு இருந்தாள். இந்த திருமாலுக்கு எப்படி முக்காலமும் தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற யோசனை அவளில் ஓடிக்கொண்டு இருந்தது. கிருத்திகா உடன் வந்தால் நன்றாகவே இருக்கும் என எண்ணினாள். ஒரு முறை வாசன் கூட மாதவி முக்காலமும் அறிந்தவள் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறாள். இதை எல்லாம் மாதவியிடத்து  கேட்டு ஊர்ஜிதம் பண்ணிட தோணவில்லை.

சாத்திரம்பட்டிக்குச்  சென்றபோது நாச்சியார் அம்மாள் முன்னமே வந்து இருக்கலாமே மாதவி என்று சொன்னபோது பாரதிக்குப் புரியாமல் தான் இருந்தது. அதுகுறித்து இதுவரை என்ன ஏது  என விசாரிக்கத் தோணவில்லை.

மாதவியை அழைத்துப் பேசலாம் என எண்ணினாள், அதற்குள் பாரதியின் போன்  ஒலித்தது. நாம் எவரை மனதார நினைக்கிறோமோ அவர் நமக்கு உடனடியாக ஏதேனும் ஒரு ரூபத்தில் காட்சி தருவார் என்ற நம்பிக்கை மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம் தான். போனினை  எடுத்தாள்.

''என்ன பாரதி, என்னைப் பத்தி நினைச்சிட்டு இருந்தியா?, எதையும் நிறைய யோசிக்காத, சுந்தரன் எப்படி இருக்கான்''

''மாதவி, உன்னைப்பத்தி நினைச்சிட்டு இருந்தேனு எப்படி உனக்குத் தெரியும்''

''ஒரு யூகத்தில் சொன்னதுதான், உண்மையிலேயே என்னைப் பத்திதான் நினைச்சிட்டு இருந்தியா, இல்லை திருமால் பத்தி கூடவா?''

''மாதவி, உனக்கு முக்காலமும் தெரியுமா''

''எக்காலமும் எனக்குத் தெரியாது பாரதி, சும்மா வாசன் மாமாதான் எனக்கு எல்லாம் தெரியும்னு சொல்லிட்டு இருப்பாரு. அப்படித்  தெரிஞ்சி இருந்தா எதுக்கு நான் மெடிசின் படிக்கப் போறேன். பேசாம ஒரு ஜோசியம் பார்க்கிற வேலையை எடுத்து இருக்கமாட்டேன். உட்கார்ந்த இடத்திலேயே நல்ல சம்பளம். யாரோ பிரச்சினைக்கு ஏதோ  ஒரு பரிகாரம். எந்தக் கவலையும் இல்லை பாரு. அப்படியே மாதவியம்மன் அப்படின்னு ஒரு சின்ன கோவில் கட்டி ஊரு உலகம் எல்லாம் தெரிஞ்சிருக்கமாட்டேன்''

''மாதவி, நீ கிண்டல் பண்றேன்னு தெரியுது, ஆனா அவங்கவங்க வேலை அவங்கவங்களுக்கு கஷ்டம். ஒருவேளை யாருமே ஜோசியம் பார்க்க வரலைன்னா, சாமி கும்பிட வரலைன்னா உன்னோட நிலை கஷ்டம்தானே.''

''எல்லாம் எனக்குத் தெரிஞ்சி இருக்கறப்ப அப்படி ஒரு கஷ்டம் ஏன்  வரும், சொல்லு பாரதி''

''மாதவி, உனக்கு இந்த உலகத்தில் நடக்கிறது நடந்தது நடக்கப்போறது எல்லாம் தெரியுமா''

''எதுவுமே தெரியாது பாரதி. சும்மா எதேச்சையா போன்  பண்ணினேன் அதுவும் நீ சுந்தரன் விஷயம் சொன்னதில் இருந்து எனக்கு ஒரே யோசனையா இருக்கு. அவன் உன்னை கேலி கிண்டல் பண்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு''

''பார்த்தியா, உனக்கு எல்லாம் தெரியும். அவன் என்னை கேலி கிண்டல் பண்ணினான்''

''அவன்கிட்ட நான் பேசிக்கிறேன். நீ ஒண்ணும்  அவனை  சொல்லாத''

''மாதவி, சாத்திரம்பட்டி பத்தி கொஞ்சம் சொல்றியா''

''எனக்கு என்ன தெரியும், நீயும்தான் கூட வந்த, உனக்கு விஷயம் தெரியுமா நம்ம ஊருல அதான் எங்க குளத்தூர்ல சின்னப் பிரச்சினை. ரெண்டு பேரை அடிச்சிட்டாங்க. எனக்கு என்னமோ அது பெரிய கலவரத்தில போய்  முடியும்னு தோணுது. வாசன் மாமாகிட்ட எச்சரிச்சி வைக்கணும்''

''யாரு சொன்னாங்க இதை''

''என்னோட அம்மாதான்''

''பொய் எல்லாம் பேசுவியா மாதவி''

''தாராளமா  பேசுவேன், பொய் தேவையெனில் உண்மையாகும். சுந்தரன் கிட்ட நான் பேசிக்கிறேன். நீ திருமாலைப் பார்க்கறப்போ கூட கிருத்திகா இல்லைன்னா அருண் இவங்களோட போ. அவரு இந்தவாட்டி உக்கிரமான நிலையில் இருப்பார். சாந்தரூபம்னு நினைச்சியில! அப்புறம் முக்கியமான ஒண்ணு சும்மா ஆர் என் ஏ னு  இருக்காம  ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் பத்தி நிறைய படி''

''எனக்கு உண்மை தெரிஞ்சிருச்சி. வாசன் சொன்னது மாதிரி உனக்கு எல்லாமே தெரியும். நீ தெரியாத மாதிரி நடிக்கிற. திருமால் ஐயா உக்கிரமான நிலை அப்படின்னு உனக்கு எப்படித் தெரியும். அவர் மட்டும் அப்படி இருக்கட்டும். ஆமா அது எப்படி நீ இது படினு  சொல்ற''

''மறந்துட்டியா, நீதான் ஆர் என் ஏ  உலகம் எல்லாம் சொல்லி இருக்க. நீ போய்ட்டு வந்துட்டு பேசு''

''ம்ம்''

இந்த மாதவி புரியாத புதிராக தென்பட்டாள். சாதாரணமாகவே தென்படும் இவளில் எப்படி இத்தனை ஆற்றல் இருக்க இயலும். அதுவும் ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் பத்தி சொல்கிறாள். ஆர் என் ஏ தன்னை டி என் ஏ வாக மாற்றும் வல்லமை இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ்க்கு உண்டு. ஒற்றையாகவோ, இரட்டையாகவோ மாற்றி வைக்கும். இந்த வினையூக்கி மட்டும் இல்லையெனில் எய்ட்ஸ் போன்ற வியாதிகள் உருவாகி இருக்கவே இருக்காது.

வாசனின் வைரஸ் கவிதைப் போல இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் தான் உயிரின் மூலமாக இருக்கக் கூடுமோ. முதலில் ஆர் என் ஏ  உருவாகி  அதில் இருந்து டி என் ஏ உருவாகி பின்னர் டி என் ஏ  மூலம் ஆர் என் ஏ உருவாக்கி இந்த உயிரினங்கள் இருந்து இருக்குமோ.

பாரதியை நட்சத்திரங்களை எண்ண  விடாமல் யோசனை பண்ண வைத்துவிட்டாள்  மாதவி. இந்த உலகில் எதுவுமே முன்னோக்கி சென்றது பின்னோக்கி வராது என பாரதி நினைக்கும்போதே கடல் அலைகள் பற்றிய எண்ணம் வந்து சேர்ந்தது.

கிருத்திகாவிடம் மீண்டும் போன்  பண்ணி கேட்டபோது திருமாலைப் பார்க்க உடன் வருகிறேன் என்று சொன்னாள். அன்று இரவு அம்மாவிடம் அப்பாவிடம் சொன்னபோது எதுக்கும் அருண் நீயும் போயிட்டு வா என்று சொன்னார்கள். அருண் மறுபதில் சொல்லாமல் சரி என்றான். பாரதிக்கு சற்று பயமாக இருந்தது. கிருத்திகா வருகிறாள் என்று சொன்னதும்தான் அருண் நான் எதுக்கு என ஒதுங்கிக் கொண்டான்.

இந்த மாதவி பற்றி அறிய தேவகிதான் சரியான வழி என பாரதி யோசித்துக் கொண்டே அன்று உறங்கினாள். கனவில் மாதவிதான் பலமுறை வந்து போனாள். என்றுமே கனவில் வராத மாதவி இன்று மட்டும் ஏன்  என்றே உறக்கத்தின் ஊடே விழித்த வண்ணம் இருந்தாள் . திருமால் ஐயாவைப் பார்த்துதான் ஆக வேண்டுமா எனும் எண்ணம் வேறு வந்து சேர்ந்தது. என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றே எண்ணவும்  செய்தாள்.

ஒரு வார்த்தை கூட தன்னிடம் மாதவி கனவில் பேசவில்லை என்று எண்ணினாள்  பாரதி. கிருத்திகாவும் பாரதியும் திருமாலைச் சந்திக்கப் போனார்கள்.

முதலில் வந்தபோது என்ன நிலையோ அதே நிலை. திருமால் வருவார் என வீட்டின் வெளியில் இம்முறை காத்து இருந்தார்கள்.

(தொடரும்)




Friday 5 June 2015

தமிழ் மின்னிதழ் -2 கடும் கண்டனங்கள்

தமிழ் மின்னிதழ் -2  தரவு இறக்கிக் கொள்ள இங்கே அழுத்தவும்

20. சான்டல்வுட்டின் டாரன்டீனோ  - அதிஷா

இவர் நன்றாக எழுதக்கூடியவர், விமர்சனம் பண்ணக்கூடியவர் என்பது அறிந்து இருக்கிறேன். சில வலைப்பதிவுகள் படித்து இருக்கிறேன். எனது புத்தக வெளியீட்டுக்கு நன்றியுரை சொன்னவர். இம்முறை கூட இவரை சந்திக்க இயலாமல் போனது.

சற்றும் எதிர்பாராத கட்டுரை எனலாம். கன்னட திரையுலகப் பார்வை குறித்து எழுதி இருக்கிறார். சான்டல்வுட் என்றால் கன்னட திரையுலகம் என்று இந்த தமிழ் மின்னிதழ் படித்துதான் அறிந்து கொண்டேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகம் போல கன்னட திரையுலகம் அத்தனை பிரசித்தி பெற்றது இல்லை என்றே பலரும் அறிவார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மலையாளம், தெலுங்கு என ஓரிரு படங்களே பார்த்து இருக்கிறேன். இதுவரை கன்னடம் பார்த்தது கிடையாது. அந்த திரையுலகில் நடக்கும் அதிசயங்களை விவரிக்கிறார் கட்டுரையாளர். லூசியா ஒரு என்ற படம் கன்னடப்படம் என்று கூடத் தெரியாமலே இருந்து இருக்கிறேன். இவர் விவரிக்கும் படங்களைப் பார்த்தால் கன்னட திரையுலகம் ஒரு கதை நிறைந்த மலையாள திரையுலகம் போல இருக்கும் என எண்ணலாம். 'உளிடவரு கண்டன்டே' சிம்பிள் ஆகி ஒந்த் லவ் ஸ்டோரி' படங்கள் குறித்த பார்வை சிறப்பு. டாரன்டீனோ போல உளிடவரு கண்டன்டே அமைக்கப்பட்டு எனும் ஒப்பீடல் அவரது படங்கள் பார்த்தவருக்கு மட்டும் புரியும்.

21. கொஞ்சம் மெய் நிறைய பொய் - யுவகிருஷ்ணா

இவரையும் ஓரளவுக்கு  இவரது எழுத்துகள் எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றன. இவரது எழுத்துகள் மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டவர் என்றே அறிந்து இருக்கிறேன்.

சற்றும் எதிர்பாராத எழுத்துதான். இவர்கள் இருவரும் வேறு ஏதோ  எழுதி இருப்பார்கள் என எதிர்பார்த்தது எனது தவறுதான். ஆனால் எழுதிய விஷயங்கள்  மிகவும் நன்மைத் தரக்கூடியவை. மெய் நிகரி எனும் ஒரு புத்தக விமர்சனம் இது. முதல் சில பகுதிகளை வாசித்தபோது எதுவும் தொடர்பற்ற ஒன்றாக இருக்கிறதே என எண்ண  கதைக்குள் கொண்டு செல்கிறார். ஒரு கதைக்கான களம் இருந்தால் போதும், அது இப்படித்தான் எழுத வேண்டும் எனும் அமைப்பை இன்றைய எழுத்தாளர்கள் உடைத்து வருகிறார்கள் என்பதற்கு இந்த நூல் உதாரணமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இப்படித்தான் எழுத வேண்டும் என்றில்லை. நாவல் ஒன்று எழுதியபோது இந்தப் போக்கினை மட்டுமே கடைப்பிடிக்கிறேன். எவருக்கு உறவுகள் பற்றிய விசயங்கள் அவசியம், தொழில் சார்ந்த விஷயங்களை  கதை மூலம் சொல்ல வேண்டும். எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் குறிப்பிட்டது போல மிகவும் துணிச்சலாக உண்மை எழுதும் நபர்கள் வேண்டும். மெய்நிகரி நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நாவல் என்றே அறிய முடிகிறது.

22. அபயம் - ஹரன் பிரசன்னா

இவரும் நூல் மூலம் சிறிது பழக்கம். நிறைய விளம்பரங்கள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் எனக்குத்தான் புத்தகங்கள் குறித்த அக்கறை இல்லாமல் போய்விட்டது. அப்படியே இவரது தொடர்பும் இப்போது இல்லை.

வித்தியாசமான கதைக்களம். கண்கள் குறித்து விவரிக்கப்பட்டு ஒரு குற்ற உணர்வுடன் தகிக்கும் கதைநாயகன் குறித்த கதை இது. மிகவும் சுவராஸ்யமாக இருந்தது.

23. மோடி முட்டிகள் - அராத்து

இந்த கட்டுரை அதிர்ச்சித் தரக்கூடிய வகையில் இருந்தது. கற்பழிப்பு குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது. ஒரு சமூகத்தில் நடக்கும் இழிநிலைகள், பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் என விவரித்துக் கொண்டே போக அடுத்து என்ன படிக்கிறோம் என்றே எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அவசியமா என்று கேட்டால் அது அப்படித்தான் என்று சொல்லக்கூடிய மனநிலையில்தான் இருக்கிறார்கள். வழக்கத்தில் சொல்லப்படும் விஷயங்கள் என அப்படியே எழுத்தில் வைக்கிறார். இது வாசிப்பவர்களுக்கு எத்தகைய எண்ணத்தைத்  தரும் என அறுதியிட்டு சொல்ல இயலாது. எனக்கோ இப்படித்தான் தமிழில் எழுதி ஆக வேண்டுமா என்றே இருந்தது. எழுதியவரை அல்லது இந்த இதழின் ஆசிரியரை குறைபடுவதில் பிரயோசனமில்லை. ஆனால் இப்படித்தான் பேசுகிறார்கள் என சொல்லும்போது முட்டாள்கள் குறித்து முட்டாள்தனமாக எழுதித்தான் ஆக வேண்டும் என்றால் எழுத வேண்டியது  இல்லை. ஆனால் அப்படித்தான் எழுதுவேன் என்பவர்களை ஒன்றும் சொல்ல இயலாது. இது ஒரு கலாச்சார சீர்கேடு என குறைப்பட்டு  கொள்ள வேண்டியது இல்லை. குடிகார எழுத்தாளர்கள் அதிகரித்து விட்டார்கள். குடிகார சிந்தனையாளர்கள் தமிழில் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள். இலக்கியம் என இதை எல்லாம் இனி வரும் சமூகம் ஏற்றுக்கொள்ளும் போல. அதற்காக கடும் கண்டனங்களை இந்த கட்டுரைக்குத் தெரிவித்துக் கொள்ளலாம். எவரேனும் இந்த கட்டுரையை வாசித்துப் பார்த்தால் ஒழுக்கமற்றவன் ஒழுக்கம் சொல்வது போல தென்படும். இது தமிழ் எழுத்துக்கான விமர்சனம் மற்றும் எனது எழுத்து நிலை வேறு எனும் பார்வையில் வைக்கப்படும் விமர்சனம். அவ்வளவுதான்.

24. சாலையோரம் - பிரபாகரன்

பிரமாதம். ஒரு கவிஞரின் பார்வையில் எல்லாம் கவித்துவமாகத் தெரியும் என்பதற்கு இந்த கவிதை சாட்சி. மிகவும் அழகாக பல நிகழ்வுகளை படம் பிடித்து நமக்குத் தந்து இருக்கிறார்.

25. ஆம் ஆத்மி - கொடுங்கனவாகும் கற்பனை - தமிழில் சைபர் சிம்மன்

ஒரு கடிதம் மூலம் ஆம் ஆத்மி குறித்து பல விசயங்கள் அறிய நேர்ந்தது. சற்று அயர்ச்சியாகவும் இருந்தது.

நன்றி மற்றும் வணக்கம்.

இந்த தமிழ் மின்னிதழ் மிகவும் சிறப்பாக இருந்தது என்றால் மிகையாகாது. திருஷ்டி பொட்டு  மீது ஆசிரியருக்கு அக்கறை கிடையாதுதான். ஆனால் எப்படியேனும் ஒரு கட்டுரை அப்படி வந்து அமைந்து விடுகிறது.

முற்றும்

Wednesday 3 June 2015

தமிழ் மின்னிதழ் - 2 லீனா மணிமேகலை ஆண்டாளின் தோழிகள்

கவிதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் எனக்குத் தெரியாது. எதற்கும் நீங்கள் இங்கே கவிதை என எழுதப்பட்டு இருக்கும் பகுதியில் சென்று பார்த்தால் நான் சொல்வதன் உண்மை என்னவென அறிந்து கொள்வீர்கள். கவிதை எனக்கு எழுதத் தெரியாது என தமிழ் இலக்கியம் அறிந்த ஒருவர் சொன்னதால் வெறும் வார்த்தைகள் என தலைப்பிட்டே கவிதைத் தொகுப்பு வெளியிட்டேன். அப்படி இருக்கும்பட்சத்தில் கவிதைகளைப் படித்து உள்வாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதா என்றுத் தெரியாமல் பல கவிதைகளைப் போற்றி பாராட்டி வருகிறேன். இந்த தமிழ் மின்னிதழில் லீனா மணிமேகலை கவிதைகள் என சில வாசித்தேன். இவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். கேள்விப்பட்டதோடு அப்படியே இருக்கட்டும். சர்ச்ச்சைக்குரியவர்கள் இவ்வுலகில் அதிகம் கவனம் ஈர்த்துவிடுகிறார்கள். பிறர் சொல்லத் தயங்குவதை சொல்பவர்கள் மக்களால் கவனிக்கப்படுகிறார்கள்.

10. லீனா மணிமேகலை கவிதைகள்

நட்சத்திர தூசி.

நீ எனக்கு யாரடா! இந்த கவிதையை எப்படி வேண்டுமெனினும் சிலாகித்துக் கொள்ளுங்கள். ஒரு அன்னியோன்யமான அன்பை சொல்லிக்கொண்டு இருக்கிறது. திரைச்சீலை அன்பை விலக்குவதில்லை. கவிதைத்துவம் என்பது இதுதான். வார்த்தைகளில் காட்சி அமைப்பு ஏற்படுத்தி விடுவது.

அடுத்து இதுவும் ஒரு நிலை சொல்லிச் செல்கிறது. இடைவெளி குறித்தும் ஆயுள் ஒரு இரண்டக  நிலை. திரையரங்கு இருளில் இருந்து காட்சிப்படுத்தபடுகிறது. பூச்சியின் ரீங்காரம் என திரை இரைச்சல் என நிறைய யோசித்தோ யோசிக்காமலோ கவிதை வரிகள் வந்து விடுகின்றன.

11. குவியொளி - மகி

ஒரு விஷயத்தை ஒரு வார்த்தையில் சொல்ல இயலும். ஒரு வாக்கியமாக சொல்ல இயலும். ஒரு கதையாக சொல்ல இயலும். ஆத்திசூடி எழுதப்பட்ட வரலாறு சுவாரஸ்யம். அதுபோல ஒரு வாக்கியமாக பல குவிந்து இங்கே ஆயிரம் கதைகள் சொல்லிக்கொண்டு இருக்கிறது. உடன்பாடு, உடன்படு.

12. ச. முத்துவேல் கவிதைகள்

இங்கே குறிப்பிடப்பட்டு இருக்கும் கவிதைகள் மிகவும் ஆழ்ந்த விசயங்களைச் சொல்லிச் செல்கின்றன. இரும்புக்கரம் என்பது ஒரு ஆதிக்க சக்தியின் வெறியாட்டத்தை கவிதை விளக்கம் சொல்கிறது. சில வரிகள் அதன் வீரியத்தை உணர்த்தும் வண்ணம் எழுதி இருப்பது சிறப்பு. காதலிப்பது சற்று வித்தியாச கோணம். கலவி உரையாடல்கள் சற்று வித்தியாசம்தான். தலைப்புக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று இருப்பினும் நல்ல கவிதைதான்.

13. மணிவண்ணன் - சமூகப் புரட்சியின் கலைஞன்  முரளிகண்ணன்

ஒருவரைப் பற்றி எப்படி எழுத வேண்டும் எனக்கேட்டால் இப்படித்தான் எழுத வேண்டும் என இந்த கட்டுரையை தைரியமாகக் குறிப்பிடலாம். இத்தனை விரிவாக இத்தனைத் தெளிவாக சொல்லப்பட்டு இருப்பதற்கு நன்றிகள். எனக்கு மணிவண்ணன் அவர்களை மிகவும் பிடிக்கும். அமைதிப்படை படம் பார்த்தபோது வியந்தது உண்டு. எனக்கு ஒரு படைப்பாளியாக அவர் இருந்து இருக்க வேண்டும் என்றே எண்ணியது உண்டு. அவரின் அரசியல் நிலைப்பாடு, எண்ணம் என பல விசயங்கள் அறிய முடிந்தது.

14. நிழலோவியம் - புதியவன்

ரசித்து மகிழலாம். தெளிவாக இருக்கிறது.

15. அப்பா - செந்தில்சிபி

அப்பாவுக்கு நான் எதுவுமே செய்யலை. கொள்ளி  மட்டும் தான் வைச்சேன். அப்பா பற்றி எழுதிக் கொண்டே இருந்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அழகிய உணர்வுகளை அற்புதமாக படம் பிடித்து இருக்கிறார். அவரது வாழ்க்கையை சொன்னதில் இருந்து செந்தில் சார் வாழ்வும் அறிய முடிகிறது. மிகவும் நேசித்த பதிவு.

16. ராஜா சந்திரசேகர் கவிதைகள்.

கவிதை என்றால் இவரது கவிதைதான் அதி அற்புதம் என சொல்லலாம். எழுத்தாளர் நர்சிம் அவர்கள் குறிப்பிட்ட கவிஞர் இவர்தான் என்றே நினைக்கிறேன். இவரது கவிதைகள் பல வாசித்து இருக்கிறேன். தீட்டப்பட்ட வைரம் போல ஜொலி ஜொலிக்கும். முதல் கவிதை ஒரு நிமிடம் நம்மை அப்படியே நிலைகுத்தி இருக்கச் செய்யும். ஏம்மா இப்படி செஞ்சிட்ட? பிரமாதம் குறுங்கவிதைகள்.

17. நா ராஜூ கவிதைகள்

வார்த்தைகளுடன் பயணித்துக் கொண்டே இருக்கலாம். இந்த விளையாட்டு எனக்குப் பிடித்து இருந்தது. சில வார்த்தைகள் இலக்கியத்தன்மையைத் தந்துவிடும் வல்லமை கொண்டவை. தமிழுக்கு உண்டான சிறப்பு. இவரது கவிதைகளில் ஆழமான சிந்தனைகளை கண்டு கொண்டது போல் இருந்தது.

18. ஆண்டாளின் தோழிகள் - சங்கர் கிருஷ்ணன்.

பிரமாதம். திருப்பாவை குறித்து எத்தனை அனுபவித்து எழுதி இருக்கிறார். ஏதோ  பாடல் என்று நான் இருக்க ஒவ்வொரு பாடலுக்கும் இருக்கும் ஒரு கதையை அழகாக சொல்லி இருக்கிறார். நாலாயிர திவ்விய பிரபந்தம் பற்றிய பார்வை வெகு சிறப்பு. நிறைய ரசித்து மீண்டும் மீண்டும் வாசித்த பதிவு இது.

(தொடரும்)

நுனிப்புல் பாகம் 3 - 5

பகுதி - 4

5. வாசனின் விவசாயம் 

வாசன் பெரியவரை சந்திக்கச்  சென்றான். அவரிடம் சாத்திரம்பட்டி பற்றி கேட்டுக்கொள்ள அதிக ஆர்வம் இருந்தது. இருப்பினும் அதை கேட்க வேண்டாம் என முடிவு செய்தான். பெரியவரின் வீட்டில் வேறு இருவர் அமர்ந்து இருந்தார்கள். உள்ளே செல்வதா, வேண்டாமா என முடிவு செய்வதற்குள் பெரியவர் வாசனை அழைத்தார். 

''வாசா உள்ளே வாப்பா''

அழைத்தபின்னர் செல்லாமல் இருப்பது சரியில்லை என உள்ளே சென்றான் வாசன். அங்கிருந்த அந்த வேறு இரண்டு  நபர்கள் வாசன் அப்படிங்கிறது நீதானா என்பது போல பார்த்தார்கள். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டு அங்கிருந்த ஒரு நாற்காலியில் வாசன் அமர்ந்தான். 

''தம்பி, என்ன வேலை பார்க்கிறீங்க''

நல்ல முறுக்கலான மீசை வைத்து பார்ப்பதற்கு முரட்டுத்தோற்றம் கொண்ட நடுத்தர வயது மிக்க ஒருவர் கேட்டார். 

''விவசாயம் பார்க்கிறேன்''

''விவசாயமா, தம்பிக்கு படிப்பு ஏறலையோ?''

அந்த கேள்வியை வாசன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. புன்முறுவல் செய்தான். அதற்குள் பெரியவர் குறுக்கிட்டார். 

''ரொம்ப நல்லா படிக்கிற பையன், பன்னிரண்டாவதுல கூட ஆயிரத்து நூறு மார்க்கு. விவசாயம் மட்டுமே பார்ப்பேன் அப்படின்னு முடிவு பண்ணிட்டார்''

''யாருயா இவனுக்கு பொண்ணு கொடுப்பா''

மெல்லிய தேகம் கொண்ட சற்றே வயதான மற்றொரு நபர் சொன்னதைக் கேட்டு வாசன் மேலும் சிரித்துக் கொண்டான். 

''பொண்ணு எல்லாம் நிச்சயம் பண்ற அளவுல இருக்கு. அதுவும் டாக்டர் படிக்கிற பொண்ணு'' 

பெரியவர் சொன்னதும்தான் தாமதம் இருவரும் கலகலவென சிரித்தார்கள். 

''பொருந்தாத மாட்டைப் பூட்டினா வெள்ளாமை வீடு வந்து சேராது. படிக்காத இவனுக்கு டாக்டர் பொண்ணு, அந்த பொண்ணு கொடுக்கிற இளிச்சவாயன் யாருன்னு பார்க்கணுமே''

சிரிப்பை நிறுத்தி இப்படி உதிர்த்த வார்த்தைகள் அவரைப்போலவே சற்று முரட்டுத்தனமாக இருந்தது. 

''இந்த ஊரில ஒரு டிராக்டர் காணோம், எல்லாம் மாட்டு உழவுதானா, மாட்டுப்பயக  இருக்கிற ஊருல மாடுதான் உழவு போல''

அவர்கள் நிறுத்தாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள். வாசனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. 

''ஐயா, நான் கிளம்புறேன், பிறகு பேசலாம்''

வாசன் சொல்லிக்கொண்டு கிளம்பும் முன்னர் பெரியவர் அந்த இருவரையும் வீட்டைவிட்டு வெளியேப் போகச் சொன்னார். 

''தராதரம் தெரியாம உங்களை இங்க உட்கார வைச்சிப் பேசினேனே அது என்னோட தப்பு. இந்த வாசன் தான் ஊர்த்தலைவர். நீங்க என்ன வியாபாரம் பார்க்க நினைச்சாலும் இவரோட அனுமதி இல்லாம பண்ணக்கூடாது. உங்க புத்தி எல்லாம் சரியில்லை. கிளம்புங்க''

பெரியவரின் சற்று கோபமான குரல் கண்டு அவர்கள் ஏதும் திடுக்கிடவில்லை. 

''அப்படி யாரு இருக்கானு கேட்கத்தான் கேட்டோம். இவர் இப்படியே விவசாயம் பண்ணினா டாக்டர் பொண்ணு விவசாயம் பார்க்குமா, இல்லை இவரோட பிள்ளைகதான்  விவசாயம் பாக்குமா. டாக்டர் பிள்ளைக மாடு மேய்க்கிறத உங்க ஊருல ஏத்துக்குவாங்கள. ரொம்ப கோபபட்டு பேசுறீரு. ஏன்டா வாசு நீ இத்தனை மார்க்கு வாங்கி ஒரு டாக்டர், எஞ்சின்னீர் படிக்காம இப்படி வேகாத  வெயிலுல விவசாயம் பாக்கற, உனக்கு புத்தி ஏதும் கழண்டு கீழ விழுந்துருச்சா, ஒரு அம்பது ஏக்கர் நிலத்தை இந்த ஊருல வளைச்சி போட்டுரலாம்னு தான் வந்தோம். நீ அனுமதி கொடுக்கலன்னா என்ன ஊருல இருக்கவங்ககிட்ட பேசி வாங்கிக்கிறோம்''

பெரியவர் எழுந்தார். 

''இங்க யாரும் உங்களுக்கு நிலம் தர மாட்டாங்க, நீங்க கிளம்பிப் போகலாம்''

''உங்களைப் பார்க்கச் சொன்னாங்கனு வந்தா, மரியாதை இல்லாமல் நடந்துக்கிறீரு. இதே ஊருக்குள்ள  நாங்க வரத்தான் போறோம். உங்களை என்ன பண்றோம்னு பாரு. வாடா போலாம்''

அவர்கள் இருவரும் எதுவும் சொல்லாமல் வெளியேறினார்கள். வாசன் அவர்களை பின்தொடர்ந்து சென்றான். 

''உங்களுக்கு என்னப்  பிரச்சினை''

''ஒரு பிரச்சினையும் இல்லை. உன்னப் போல முட்டாப்பயக எல்லாம் விவசாயம் பாக்கத்தான் லாயக்கு. நீ எல்லாம் எப்படிடா ஊர்த்தலைவர் ஆன. உனக்குப் படிப்பு வரலைதானே. ஆயிரம் இரண்டாயிரம் மார்க்குன்னு பொய் சொல்றியா''

அந்த நேரம் பார்த்து முத்துராசு அங்கே வர அவர்கள் பேசியது அவர் காதில் விழ சரியாக இருந்தது. என்ன நினைத்தார் எனத் தெரியவில்லை. அங்கிருந்த ஒரு கட்டையை எடுத்து அவர்கள் இருவரையும் சரமாரியாக அடி அடித்தார். வாசன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்குள் அங்கே கூட்டம் கூடியது. என்ன ஏது  என விசாரிக்காமல் அவர்கள் இருவரையும் பலமாகத் தாக்கினார்கள். வாசன் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. 

''இவனுங்க ஊர் ஊராப் போய்  ஆளை ஏமாத்துற கூட்டம், திருட்டுப் பயல்க''

''என்ன அண்ணே சொல்றீங்க''

''டேய் அவனுகளை அந்த மரத்தில கட்டிப்போடு, தோலை உரிச்சிருறேன். இவனுக பத்தி உனக்குத் தெரியாது. இவனுக கூட்டம் பெரிசு''

சத்தம் கேட்டு பெரியவர் வெளியே வந்துப் பார்த்தார். 

''என்ன காரியம் பண்ணி இருக்கீங்க, யார் இப்படி இவங்களை அடிச்சது. முத்துராசு எதுக்கு இப்படி எல்லாம் பண்ணி வைச்சிருக்க''

''ஐயா, இவனுக பொல்லாதவனுக. ஊருக்குள்ள குடியேறி அந்த ஊரையே உலையில் போட்டுருவானுக''

''அப்படி எங்க நடந்திச்சி. உனக்கு எப்படி விபரம் தெரியும்''

''நீங்க சாரங்கன் கிட்ட பேசிப் பாருங்க ஐயா''

''அவன்கிட்டயா?''

''ஆமாயா, சாரங்கனை கூப்பிட்டு பேசுங்க''

முத்துராசு சொன்னது கேட்டு பெரியவர் குழப்பம் கொண்டார். அதற்குள் வாசன் அவர்கள் இருவரிடம் பேசி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருந்தான். 

''எங்களை அடிச்ச இந்த ஊரை கொளுத்தாம விடமாட்டோம்'' என வலியின் ஊடே அவர்கள் பேசியது முத்துராசுவிற்கு பெரும் எரிச்சல் உண்டாக்கியது. அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து முரட்டுத்தோற்றம் கொண்டவரின் வாயில் சரியாக எறிந்தார். வாசன் அதிர்ச்சி அடைந்தான். 

''அண்ணே, போலிஸ் கேஸ் ஆகிரப்போதுண்ணே, விடுண்ணே''

''ராசு, என்ன பழக்கம் இது. கொஞ்சம் கூட மரியாதை இல்லாம. நாங்க எல்லாம் இங்க நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா'' பெரியவர் சற்று கோபமாகவே கண்டித்தார். 

''ஐயா, நீங்க இப்படி வரவங்க எல்லாரையும் மன்னிச்சி அனுப்புங்க, அவனுக இப்படியே வந்து வந்து போகட்டும். அன்னைக்கு அப்படித்தான் திருட வந்தவங்களை மன்னிச்சி அனுப்பினீங்க''

''ராசு''

பெரியவர் சப்தம் இட்டதும் முத்துராசு அமைதி ஆனார். 

''இங்க நடந்தது எல்லாம் உங்களை எச்சரிக்கத்தான். மற்றபடி உங்க மேல எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. ராசு, இவங்களை கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்குப் போ''

அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். வாசன் தான் அவர்களை அழைத்துச் செல்வதாக அவர்களை அழைத்தான். அவர்கள் தாங்களாகவே செல்வதாக தடுமாறிச் சென்றார்கள். கூட்டம் அங்கிருந்து கலைந்தது. 

முத்துராசு தோட்டம் செல்வதாக கூறிக்கொண்டு அவர்களை வேறு வழி சென்று மடக்கினார். 

''பழி வாங்கணும்னு  இந்தப் பக்கம் இனிமே வந்த, நான் என்ன பண்ணுவேன்னு இப்ப காட்டினது விட பலமடங்கு இருக்கும். நீ நாராயணபுரத்தில பண்ணினது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா. சாரங்கன்கிட்ட சொல்லி வை. உன் கூட்டத்து ஆளுக எவனாச்சும் இந்த ஊருல குடி இருக்க வந்து குடி கெடுக்க நினைச்சான், நான் மனுசனா இருக்கமாட்டேன்''

எதுவும் சொல்லாமல் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். 

வாசன் தன்  தோட்ட  வேலைகள் முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான். வாசனுக்கு விவசாயம் பார்ப்பது அத்தனை தவறான காரியமா என யோசிக்க வேண்டும் போல் இருந்தது. என் பிள்ளைகள் விவசாயம் பார்ப்பார்களா? இந்த சுந்தரன் விவசாயம் பார்க்காமல் வெளியூர் போய் விட்டானே. மாதவி எதற்கு மருத்துவம் படிக்கச் செல்ல வேண்டும். 

ஊரில் விவசாயம் பார்த்த கொஞ்சம் சிலரில் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்களாகவே  அவனுக்குத் தெரிந்து கொண்டு இருந்தது. கிராமங்கள் விவசாயம் நம்பி இருக்கிறது. விவசாயம் மழையை நம்பி இருக்கிறது. ஆனால் இந்த நிலத்தை எல்லாம் விலைக்கு வாங்கி அதில் தொழிற்சாலை எழுப்ப, வீடுகள் கட்டி விற்க ஒரு கூட்டம் இன்று அடி வாங்கியவர்களைப் போல அலைந்து கொண்டு இருக்கிறது. 

முத்தையா தனது நிலங்களை எல்லாம் விற்றுவிட்டு தனது பிள்ளைகளிடம் சென்று இருக்கப்போவதாக நேற்றுதான் மந்தையில் கூறிக்கொண்டு இருந்தார். இவரிடம் அதிகம் பணம் கொடுத்து அந்த நிலத்தை இவர்கள் கையகப்படுத்திக் கொண்டால் என்ன ஆவது என வாசன் யோசித்தான். அடிபட்டு போனவர்கள் நிச்சயம் திரும்புவார்கள். 

''என்ன யோசனை, மந்தையில் இன்னைக்கு என்ன பெரிய கலாட்டாவா. அந்த முத்துராசு கையை வைச்சிட்டு சும்மா இருக்கமாட்டானா''

தனது அப்பாவின் குரல் கேட்டு எழுந்தான் வாசன். 

''கிராமத்து நிலத்தை வாங்கி, அதில வீடு கட்டுற கூட்டம் பிரச்சினைப்பா''

''நானும் இப்பதான் கேள்விபடறேன். நீ அதை நினைச்சி வருத்தப்படாதே''

அப்பாவின் ஆறுதல் வார்த்தைகள் வாசனுக்கு இதமாக இருந்தன. அப்போது முத்துராசு வாசனை அழைக்க வந்தார். 

''வாசா, வா நாம போய்  அந்த சாரங்கனை என்ன ஏதுனு  விசாரிச்சிட்டு வருவோம்''

''இப்ப வேணாம்ணே, அவர்தானு  நமக்கு எப்படி தெரியும்''

''சொன்னாக் கேளு, பெரியவர்தான் உன்னை கூப்பிட்டு வரச்சொன்னார்''

வாசனுக்கு சாரங்கனை சந்திக்கப் போவதா வேண்டாமா என யோசனையாக இருந்தது. 

(தொடரும்)