Friday 26 December 2014

கண்டு தாழிட்டேன் - 2

அவனைக் கொன்றுவிட மனம் துடித்தது. அன்றே வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். என்னை இரு என சொல்ல எவருக்குமே தைரியம் இல்லை. எனக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது. எவரேனும் நமக்குத் தேவைப்படுவார்கள் என்றுதானே நாம் கொடுமைகளை பொறுத்துக் கொள்கிறோம். கோபமாக வெளியேறினேன். வீட்டுக்கு வந்ததும் அப்பா கடுமையாகவே சத்தம் போட்டார். இதுக்குனு வேலைய விடுவியாம்மா, சுத்த அறிவுகெட்ட ஜென்மம் நீ என்றார். உங்களுக்கு ரொம்ப அறிவு, திட்டுறாராம் திட்டு. நீ செஞ்சது சரிதான் உனக்காச்சும் தைரியம் இருக்கே என்றார் அம்மா. காவ்யாவிற்கு போன் செய்தேன். அடியேய் உன்னைப்பத்தி கேவலமா பேஸ்புக்ல ஒருத்தன் எழுதி இருக்கான். நீ ஒரு வேசினு வேற எவனு தெரியலைடி. அந்த கௌதமன்தான் பண்ணி இருப்பான். ஏன்டீ? அவனை ஓங்கி ஒரு அறைவிட்டேன் அந்த கடுப்பில் பண்ணி இருப்பான் என்றேன். உன்ட்ட என்னடி சொன்னேன், பேசாம ஒதுங்கிப் போயிருக்கலாம்ல என்றாள். சரிடீ என சொல்லிவிட்டு போலிஸிடம் புகார் சொன்னேன். இனி வேலை தேட வேண்டும். சிறிது நேரத்தில் கௌதமன் போன் செய்தான். அந்த பேஸ்புக் ரிமூவ் பண்ணிட்டேன். புகாரை வாபஸ் வாங்கு என்றான். இணைப்புதனை துண்டித்தேன் இச்சமூகத்தில் மன்னிப்பு கிடைக்கும் என்ற தைரியம் பாவம் செய்யத் தூண்டுகிறது. சாவட்டும்.

எனது இன்னொரு தோழி சியாமளினி மூலம் வேறு ஒரு வேலை நான்கே நாட்களில் கிடைத்தது. காவ்யா அவளது எண்ணை மாற்றி இருந்தாள். எனக்கு புது எண் தரவில்லை . கௌதமன் என் மீது பெரும் வெறியில் இருந்து இருக்க வேண்டும் அவனை பலர் பேஸ்புக்கில் காறித்துப்பி விடும்படி ஒரு காரியம் செய்து இருந்தேன் தண்டனை தந்த திருப்தி எனக்குள் இருந்தது. ஆம்பள பசங்க அப்படித்தான் என சில பெண்களின் சப்பைக்கட்டு வேறு. வலி தாங்கிப் பழகியவர்கள். கௌதமன் வேலையை ரிசைன் பண்ணியதாக தகவல் வந்தது. அவன் வேறு எங்கேனும் சென்று திருந்தினால் சரி என இருந்தேன். முதல் நாள். புது வேலை. ஐ ஆம் ஶ்ரீதர் என வந்து நின்றவனைப் பார்த்ததும் என் கண்கள் காதல் கொள்ளத்துடித்தன. யுவர் ப்ரொஜக்ட் லீடர் காயத்ரி லெட் மீ இன்ட்ரடியூஸ் அவர் கொலீக்ஸ் டூ யூ. தேன் ஒலி ஒவ்வொருவராக அறிமுகம் முடிந்தது எனது இருக்கையில் அமர்ந்தேன். பெரிய அலுவலகம் எல்லாம் கிடையாது. ஆரம்பித்து ஒரு மூன்று வருடங்கள் ஆகி இருந்தது. எட்டு பேர் கொண்ட வேலை இடம். ஆண்கள் மூன்று பெண்கள் ஐந்து. மேலும் பத்து பேர் வீட்டில் இருந்து வேலை செய்வார்கள். மொத்தம் 18 பேர் மட்டுமே. சியாமளினி பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. என்னைவிட பேரழகு. சிறு வயதிலிருந்து தோழி. அவள் ஒரு டாக்டர். மாதம் ஒரு முறை சந்திக்கும் வழக்கம் உண்டு. அவளிடம் நிறைய பேசுவதுண்டு. எங்கள் வீட்டு குடும்ப டாக்டர். அப்பா அம்மாவுக்கு ஏதேனும் என்றால் அவள்தான். வயது 24. மாநிறம். நல்ல உயரம்.

அவளுக்கு ஒரு காதலன் உண்டு பெயர் டாக்டர் சியாமளன். இருவரும் ஒரே கிளினிக்கில் வேலை பார்த்தனர் சியாமளனின் நண்பரின் கம்பெனிதான் நான் வேலைக்கு சேர்ந்து இருப்பது. நல்ல சம்பளம். நல்ல மனிதர்கள். ஆனால் ஶ்ரீதர்?! கௌதமன் போல இருப்பானோ என சந்தேகம் வந்தது. அடுத்தநாள் கோவிலுக்கு சென்று இருந்தேன். இந்த கோவிலுக்குப் போனதே இல்லை. அந்த கோவிலில் வயதான அம்மாவுடன் ஶ்ரீதர் நின்று இருந்தார். என்னைப் பார்த்தவுடன் வணக்கம் சொன்னார். நானும் வணக்கம் வைத்தேன். தலை நிறைய மல்லிகைப்பூ நீல வண்ண சேலை என நான் ஜொலித்தேன். அம்மா, இவங்க காயத்ரி என சொல்ல அந்த அம்மா லேசாக சிரித்தார். @radhavenkat2: இந்த கோவிலுக்குத்தான் வருவீங்களா? என்றார் ஶ்ரீதர். இல்லை சார், இதுதான் முதல் தடவை. நம்ம கம்பெனிக்கு வந்ததால தெரிஞ்சது என்றேன். நல்ல சாமி என சொல்லிவிட்டு கும்பிட்டு வாங்க என்றார். அந்தம்மா கணவனை இழந்தவர் என்பதானா அடையாளம் இருந்தது.
சாமியை வணங்கினேன். கோவிலை சுற்றி வந்தபோது ஶ்ரீதர் அங்குதான் நின்றார். என்ன சார் இன்னும் இங்கேயே நிற்கறீங்க என்றேன். இன்னும் கொஞ்ச நேரம் தான் என்றார். வரேன்மா என சொல்லி நடந்தேன்.

சியாமளினியை அன்று சந்தித்து பேசினேன். கௌதமன் காவ்யா ரகுராமன் குறித்து சொன்னதும் அவளின் ஒரே வார்த்தை தான் பதில். உலகம். நீ தப்பு பண்ணி இருக்கியா என்ற என் கேள்விக்கு இல்லை என்றே சொன்னாள். சியாமளன் அத்தனை நல்லவரா என்றேன். சிரித்தாள். உடல் மீதில் ஆசை எல்லோருக்கும் இல்லை. என்ற பதில் எனக்குப் பிடித்து இருந்தது. கௌதமன் மீது நான் கொண்டது உடல் மீதான காதல். ஶ்ரீதர் மீது கொள்ளத்துடிப்பது மனம் மீதான காதல். காயத்ரி  எல்லா ஆண்களும் மோசம் கிடையாது சின்ன சின்ன சபலம் இருக்கும், ஆனா அறிவுள்ளவங்க அதை கட்டுபடுத்திருவாங்க சந்தேகப்படு, எல்லாரையும் இல்ல என்றாள். சியாமளனின் அறையை எட்டிப் பார்த்தேன் எனக்கொரு சியாமளன் வேண்டும் என நினைத்தேன் அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழியில் கௌதமனைப் பார்த்து விலகி நடந்தேன். காயத்ரி நில்லுடி என அசிங்க அசிங்கமாக பேசினான். வேடிக்கைப் பார்த்தவர்கள் அதிகம். நான் நிற்காமல் நடந்தேன். சில நிமிடத்தில் போலீஸ் வந்தது. கௌதமனை அடித்து உதைத்தார்கள். சிலர் திருந்த முனைவதே இல்லை. பெண்ணை கேவலமாகப் பேசும் கொடிய நாக்கு தானாக அறுந்து விழவேண்டும் என எனது வேண்டுதல் பலித்துவிடுவதில்லை என்றபோதும் வேண்டிக்கொண்டேன் வாழ்வை இயல்பு இயல்பற்றது என பிரித்துக்கொள்ளலாம். இயல்பாக இருப்பது கடினம். இருக்கிறதை விட இல்லாத ஒன்றின் மீது அதிகப்பற்று வரும் அதை அடைய மனம் போராடும் அந்த போராட்டம் வலியாக உருவெடுக்கும். வலி மரணத்தை உண்டுபண்ணும். (தொடரும்) 

Monday 22 December 2014

கண்டு தாழிட்டேன் - 1

அவள் திட்டிக்கொண்டே இருந்தாள். எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஏன்டீ உனக்கு அவனைப் பிடிச்சா காதலி, என்னை எதுக்கு காதலிக்க வேணாம்னு சொல்ற என கொஞ்சம் அதிகமாகவே சத்தம் போட்டுவிட்டேன். அந்த மூஞ்சிய எவன் லவ் பண்ணுவான், அவன் சரியில்லை அதனால்தான் சொல்றேன். சும்மா கத்தாதே என்றாள். உன் மூஞ்சிய விட அவன் நல்லா மூக்கு முழியுமாத்தான் இருக்கான், உனக்கு பொறாமை அவன் உன்னை கண்டுக்கலைனு என நான் சொன்னதும் உன்னைத் திருத்த முடியாதுடி என என்னைத் திட்டிவிட்டுப் போனாள். என் பெயர் காயத்ரி. வயது 23. மென்பொருள் வேலை. அதோ போகிறாளே அவள் காவ்யா வயது 23. அதே வேலை.

ஒரே கல்லூரியில் படித்தோம் என்பதுதான் எங்களுக்கான நட்பு. நான் பேரழகி, அவள் கொஞ்சம் பேரழகி. எனக்கு திமிர் அதிகம். அவளுக்கு கொஞ்சம் திமிர். கல்லூரியில் அவள் ரகுராமை காதலித்தாள். முதல் வருடத்திலேயே காதல். ஆனால் கடைசி வருடத்தில் காதல் கைகூடவில்லை. என்னையும் சிலர் காதலித்தார்கள் அந்த ரகுராம் என்னை காதலிப்பதாக மூன்றாம் வருட இறுதியில் சொன்னதை நான் காவ்யாவிடம் சொன்னதால் அதற்குப்பின் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது  நான் ரகுராமை உடனடியாக நிராகரித்தேன். என்னை முதலில் காதலிக்க வக்கில்லாதவன் எதற்கு என்னை இரண்டாவதாக காதலிக்க வேண்டும். காவ்யா கசந்தாளோ?

காவ்யா அவனோடு சண்டை போடாத நாளே கிடையாது. அதிலிருந்து இந்த காதல் பையன் எல்லாம் வெறுக்கத் தொடங்கி இருந்தாள். நான் முதன் முதலில் காதல் என மனதில் உணர்ந்தது இதோ இந்த கௌதமன் தான். என்னை விட ஒரு வயது மூத்தவன். இங்குதான் வேலை. பார்த்தவுடன் என் மனம் பற்றிக்கொண்டது. இந்த காவ்யாவை அவன் காதலிக்கக்கூடாது என நான்தான் வலியப் போய் கைகொடுத்து என் காதலை கண்களால் வெளிப்படுத்தினேன். அட்டகாசமான முகம் கட்டான உடல். வசீகரித்தான். காவ்யா காதலித்து விடக்கூடாது என அவளிடம் கௌதமனை நான் காதலிப்பதாக முதலில் சொன்னபோது சிரித்தாள். இருவரும் வேலைக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிறது

கௌதமன் இரண்டு வருடங்களாக இங்கே வேலை செய்கிறான். ஆறு மாதங்கள் சும்மா இருந்தவள் என்னை காதலிக்கக்கூடாது என சொல்ல என்ன காரணம் என யோசித்தேன். ஆனால் அவளை பொறாமைப் பிடித்தவள் என திட்டிவிட்டேன் கோபமாகப் போய்விட்டாள். அன்று கௌதமனை சந்தித்தேன். கௌதம் டிட் யூ ஸ்பீக் டூ காவ்யா? என்றேன். நோ என்றான். எனக்கும் அவனுக்குமான காதல் வேலை இடத்துக்குத் தெரியாது. வேலையில் இருப்பவர்கள் யாரும் கௌதமனை குறை சொன்னது இல்லை. இந்த காவ்யா!

என்ன வார்த்தை சொல்லிவிட்டாள். அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவே இல்லை கௌதமன் என்னை மட்டுமே காதலிக்கிறானா என எப்படி உறுதி செய்வது? குழப்பம் கண்களைச் சுற்றியது. அடுத்தநாள் கௌதமனிடம் எதேச்சையாகத்தான் கேட்டேன். ஆர் யூ சஸ்பிசியஸ்? என்றான் வேறு கேட்க மனமே இல்லை நோ ஜஸ்ட் என சொன்னேன். அன்று இரவு கௌதமன் எனது மொபைலுக்கு அழைத்தான். ஒய் டிட் யூ ஆஸ்க் மீ தெட் என்றான். ஒண்ணுமில்லை என சொன்னாலும் அவன் விடுவதாக இல்லை, காவ்யா நீ நல்லவன் இல்லை என சொன்னதாக சொன்னாள் என்றேன். அசிங்கமாக காவ்யாவைத் திட்டிவிட்டு டோன்ட் லிஸன் டூ கெர் என வைத்துவிட்டான். காவ்யாவை அவன் தகாத வார்த்தை சொன்னது எனக்கு வலித்தது. காவ்யாவிற்கு போன் செய்தேன் என்னடி கௌதமன் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா என்றேன். நீ அவனை காதலிக்காதே என்றாள். ஏன்டீ இப்படி மொட்டையா சொல்ற, ரகுராமன் மாதிரி நடந்துகிட்டானா என்றேன். அவன் பேச்சையே பேசாத, நீ காதலிக்காத, அவனை விட்டு விலகிருடி என அவள் சொன்னதும் எரிச்சலை உண்டுபண்ணியது அவன் நல்லவனில்லையெனில் என்ன காரணம் சொல்லித்தொலைத்தால் என்ன என மனதில் எண்ணிக்கொண்டு போனை வைத்தேன்

அடுத்தநாள் கௌதமன் என்னோடு பேசவில்லை. என்னைத் தவிர்த்தான், நான் தவித்தேன். சொல்லுடி எதுக்கு காதலிக்க வேணாம்னு சொல்ற என மதியம் கேட்டேன். விளக்கம் சொல்ல முடியாதுடி, அவன் நல்லவனில்லை என்றாள். இனி காவ்யாவிடம் கேட்கவே கூடாது என முடிவு செய்தேன். கௌதமன் அன்று மாலையில் என்னிடம் காவ்யாவைப் பற்றி படு கேவலமாக பேசினான். அவனை செருப்பால் அடிக்க வேண்டும் போலிருந்தது ஆனாலும் உள்ளுக்குள் சந்தோசமாக இருந்தது. அவளது நட்பு பற்றிய அக்கறை எனக்கு பெரிதில்லை. கௌதமன் எனக்கு மட்டும் எனும் என் திமிர் தாண்டவம் ஆடியது. அவளது ரகுராமன் பற்றிய காதலை சொன்னதும் காவ்யாவை சகட்டுமேனிக்குத் திட்ட ஒய் ஆர் யூ சோ ஆங்கிரி  ஆன் கெர் என்றேன். சீ இஸ் எ யூசர் லெட் அஸ் நாட் டாக் அபவுட் தெட் எனத் திட்டினான். அவன் கரம் பற்றினேன். சீ இஸ் மை க்ளோஸ் ப்ரண்ட் என்றேன். சட் அப் நவ் என்றான். அதிர்ந்தேன். அவளைப் பற்றி பேசினாலே எரிந்து விழுந்தான். அன்றோடு காவ்யா பற்றி பேசுவதை நிறுத்தி இருந்தேன். காவ்யாவிடம் கௌதமனைப் பற்றி பேசுவதும் இல்லை. சில மாதங்கள் போனது. காவ்யா வேறு வேலை தேடிச் சென்றாள். என்னடி என்னாச்சு எனக் கேட்டபோது சிலமாதங்கள் முன்னரே கௌதமன் தன்னிடம் தவறாக பலமுறை நடக்க முயன்றான் நான் மறுத்துவிட்டேன் உன்னை எச்சரித்தேன். நீதான் அவனது காதல் வலையில் வீழ்ந்து என்மீது பொறாமை கொண்டாய். நான் எங்கே உண்மையை சொல்லி விடுவேனோ என மிரட்டினான். பயந்து வேலையை விட்டுப்போவது போல அவனிடம் சொல்லிவிட்டு வேறு வேலைக்குச் செல்கிறேன். நீ ஒரு ஓட்டவாய், அன்று சொல்லி இருந்தால் அவனது சட்டையைப் பிடிப்பாய்.

என் நிலை என்ன ஆவது? நீ ஆண்களிடத்தில் எச்சரிக்கையாகவே இரு. அந்த ரகுராமன் நான் காதலிப்பதை சாதகமாக்கிக் கொண்டு என்னை அடைய முயற்சித்தான், முட்டாள், நான் மறுத்ததும் உன்னிடம் காதலை சொல்லி இருக்கிறான், நீ என்னிடம் உளறிவிட்டாய். அவனோடு தினமும் சண்டையிட்டேன். என் காதலை அவன் ஏற்கவில்லை. அவனைப் பற்றி அன்று உன்னிடம் சொல்ல மனமில்லை. ஒரே கல்லூரி. இங்கு வந்தால் இந்த கௌதமனின் பார்வை என் மீதே இருந்தது. காமுகப் பார்வைடி அது. நீயோ முந்திக்கொண்டு காதலிப்பதாக சொன்னபோது சிரித்தேன். உன்னை அடைய நினைத்தானாடி? என்றாள். கண்களில் நீர்்நிறைய ஆம் கேட்டான்டி முடியாதுன்னேன்

அதான் என்கிட்ட கேட்டு இருக்கான். நம்மைப் பார்த்தா எப்படிடீ இந்த பசங்களுக்கு இருக்கும்? என பொரிந்து தள்ளிவிட்டாள். சில விசயங்களை பேசாது போனது எத்தனை தவறு என காவ்யாவிடம் சொன்னேன். இல்லடி நீ என்னை நம்பற சூழலில் இல்லை. என் மேல உனக்கு நட்பு இருந்தாலும் நமக்கே உரித்தான பொறாமை உன்னோட திமிர் உனக்குத் தந்தது. நீயும் வேற வேலை தேடு, இனி நாம பிரிஞ்சிரலாம் என்றாள். அவனை நம்பாதே. அவள் கண்களில் கண்ணீர் இருந்தது. எனக்கு அவனை நம்பாதே. எனக்கு கை கால்கள் உதறல் எடுத்தது அன்று என் அப்பாவிடம் நேரடியாகவே கேட்டேன். ஏன்ப்பா பையனுங்க எல்லாம் இப்படித்தானா? என ரகுராமன் கௌதமன் கதையை சொன்ன மறுகணம் சில லூசுக அப்படித்தான்மா என்றார் நாமதான் கவனமாக இருக்கணும் என்றவரிடம் சரிப்பா என அம்மாவிடம் போய் அதே கதையை சொன்னேன் எடுபட்ட பயல்க பொட்டபிள்ளைக வாழ்க்கையோட விளையாடறதே பொழப்பா வைச்சிட்டுத் திரியறாணுங்க எனத் திட்டினார். ஆண்கள் மோசமானவர்களா? ஒரு ரகு ஒரு கௌதமன். வேறு யார் என யோசிக்கையில் வாழ்வில் கண்ட ஆண்கள் சிலரின் நடவடிக்கைகள்   அபத்தமாகத் தெரிந்தது. புரியாமல் இருந்து இருக்கிறேன். வெட்கமே இல்லாத சீவன்கள்.

கௌதமனிடம் ஒன்றும் சொல்லாமல் இருக்க இயலவில்லை. அங்கிருந்த பெண்கள் சிலரிடம் கௌதமனைக் குறித்து கேட்டபோது டோன்ட் டாக் நான்சென்ஸ் எனத் திட்டி  விட்டதோடு என்னைப் பற்றி அவனிடம் சொல்லிவிட்டார்கள்்எனக்கு தாங்க முடியாத எரிச்சல் எல்லாம் அவனிடம் சொல்ல வெலவெலத்துப் போனான் ஐ ஆம் நாட் தெம் என அவனை ஓங்கி அனைவர் முன்னிலையில் அறைந்தேன். திஸ் இஸ் பார் காவ்யா எனச் சொன்னதும் யூ என கையை ஓங்கினான். அங்கிருந்த பெண்கள் சிலரது முகம் மகிழ்ச்சி களை கொண்டது. இப் யூ டச் மீ, யூ வில் பி டெட் என்றேன். அவமானத்தில் வெளியே ஓடினான். எனக்கு ஏமாற்றப்பட்ட ஆங்காரம். (தொடரும்)




Thursday 11 December 2014

வெட்டித் தருணங்கள் - 2

அன்று நிறைய கனவு கண்டேன். எனக்கான ஒரு லேப்டாப். இரவு முழுக்க விழித்து இருந்தேன். அடுத்தநாள் நானும் என் அப்பாவும் கடைக்குப் போனோம். விதவிதமாக லேப்டாப் வைத்து இருந்தார்கள்.

"எதுனு தெரியுமா?"

"டோசிபா ஸ்டேடிலைட்"

"அப்ப போய் எடு, எதுக்கு பிராக்கு பாக்குற"

எனக்கு எதை தேர்ந்தெடுப்பது என சற்று குழப்பம் அடைந்தேன். நண்பன் சொன்னதை நம்பலாமா என புரியாமல் திகைத்தேன்

"என்ன மசமசனு நிற்கிற"

"இதோ எடுத்துட்டு வாரேன்"

அங்கே இருந்த விற்பனை பையனிடம் மேலும்  விசாரித்து சரியாக ரூபாய் 30000க்கு ஒரு லேப்டாப் வாங்கினேன்.

"எனக்கு ஒரு நல்ல போன் வேணும்பா"

"இந்த போன் நல்லாதான இருக்கு"

"நிறைய ஆப்ஸ் இதில இல்லை"

இது உடையட்டும், வேற வாங்கலாம்"

லேப்டாப் வாங்கிய கையோடு நேராக மாரியம்மன் கோவிலுக்குப் போனேன். லேப்டாப் பூஜை பண்ண இல்லை. என்னிடம் சவால் விட்டவன் அங்கு இருந்தான், அவனுக்கு காட்டவே சென்றேன். வீடு வந்ததும் லேப்டாப் திறந்தேன். புதிய உலகம் எனக்கானது. இரண்டு அக்காக்கள், வேண்டாம்
.
இன்டர்நெட் கனெக்‌ஷனுக்கு போன் பண்ணி சொன்னேன். டாடா மெமரி கார்டு வாங்க சொன்னார்கள். எனக்கு வீட்டில் இணைப்பு வேண்டும் என அடம்பிடித்தே போன் செய்தேன். இன்னும் சில நாட்களில் இணைப்பு தருகிறோம் என சொன்னார்கள்.

சிவகுமாருக்கு போன் செய்தேன்.

"டேய் லேப்டாப் வாங்கிட்டேன்டா"

"என்ன லேப்டாப்"

"டோசிபா"

"இன்டர்நெட்?"

"ஏர்டெல்"

"பேஸ்புக், ட்விட்டர், ப்ளாக் அப்புறம் இன்ஸ்டாக்ராம் எல்லாம் ஆரம்பிடா"

"அதெல்லாம் எதுக்குடா"

"நீ வெளி உலக ஆட்களோட பழக வேணாமா? உங்க வீட்டுல யார்கிட்டயும் இல்லையா?"

"இல்லைடா"

"இன்னைக்குத்தான லேப்டாப் வாங்கி இருக்க, ஒண்ணொன்னா சொல்றேன். மொபைலே காலேஜுக்கு வந்தப்பறம் வாங்கி இருக்க"

"கிண்டல் பண்ணாத"

"நாளைக்கு லிங்கா பார்க்க வாடா"

"என் தலைவன் படம் மட்டுமே பார்ப்பேனு உனக்குத் தெரியாதா?"

"யாரு அணிலா?"

"அப்பா வரார்,பிறகு பேசறேன்டா"

அப்பா ஒன்றும் வரவில்லை. அந்த நாயை செருப்பால் அடிக்க வேண்டும் போலிருந்தது. சிவகுமார் நாய் கல்லூரியில் பழக்கம். பெரிய பணக்காரன். எல்லோரிடம் திமிராக பேசுவான். கத்தி படம் வெற்றி பெற்றது அவனுக்கு வயிற்றெரிச்சல். தான் யாருக்கும் ரசிகன் இல்லைனு சொல்வான். மடையன், அணிலாம். நாளை அவனை வயிற்றில் ஓங்கி குத்து விட வேண்டும்.

(தொடரும்)

Monday 8 December 2014

நிலத்திற்கடியில் வாயுத்தொல்லை - மீத்தேன்

பூமி உருவானபோது பூமியில் ஹைட்ரஜனும் ஹீலியமும், மீத்தேனும், அம்மோனியாவும், நீராவியும் கொஞ்சம் நைட்ரஜனும், கரியமிலவாயும் நிறைந்தே இருந்தன. சிறிது காலங்களில் ஹைட்ரஜனும், ஹீலியமும் பூமியின் வளிமண்டலத்தில் இருந்து நிறைய வெளியேறிப் போனது.

விண்வெளி கற்கள், கோமெட்கள் எல்லாம் தண்ணீர், அம்மோனியா, மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு இன்னும் பிற வாயுக்களை பூமியில் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டு இருந்தன. கொதிநிலையில் இருந்த பூமி சற்று குளிர்ச்சி அடையத் தொடங்கிய காலம் அது.

மீத்தேன்  நீராவியுடன் இணைந்து வேதிவினை புரிந்து வளிமண்டலத்தில் நிறைய கரியமில வாயுவை, ஹைட்ரஜனை உண்டாக்கியது. பூமியில் அப்போதெல்லாம் நிறைய எரிமலைக் குழம்புகள் வெடித்துச் சிதறும். அப்படி வெடித்துச் சிதறிய எரிமலைக் குழம்புகளாலும் கரியமில வாயு, பூமியின் வளிமண்டலத்தில் அதிகம் ஆனது. இதெல்லாம் நடந்தது கிட்டத்தட்ட நான்கு பில்லியன் ஆண்டுகள் முன்னர்.

நாட்கள் ஆக ஆக நீராவி குளிர்ந்து நீர் ஆனது. நிறைய மழை பெய்து கடல் உருவானது. அப்படி உருவான கடலில் இந்த அம்மோனியாவும், கரியமில வாயுவும் மூழ்கி புதிய மூலக்கூறுகள் உருவாகின. கிட்டத்தட்ட மூன்றரை பில்லியன் ஆண்டுகள் முன்னர் பாக்டீரியாக்கள் உருவானதாக சொல்லப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் வளிமண்டலத்தில் மீத்தேன், அம்மோனியா கரியமிலவாயு எல்லாம் கணிசமான அளவில் குறைந்து போயின. இந்த பாக்டீரியக்களில் சில கரியமில வாயுவையும் ஹைட்ரஜனையும்  இணைத்து மீத்தேன் மற்றும் தண்ணீர் உண்டாக்கியது. இந்த வேதிவினை இந்த பூமியில் முன்னரே வேறு விதமாக நடந்தது என்றே குறிப்பிட்டு இருந்தோம். எந்த மீத்தேன் அதிக வெப்பத்தினால் நீராவியுடன் இணைந்து கரியமில வாயு, ஹைட்ரஜன் உண்டு பண்ணியதோ அதே மீத்தேனை இந்த பாக்டீரியாக்கள் உண்டு பண்ணிக் கொண்டு இருந்தன. அப்போது ஆக்சிஜன் குறைவாக இருந்த காலம்.

பின்னர்  நாட்கள் நகர நகர நைட்ரஜன் வளிமண்டலத்தை ஆக்கிரமித்து கொண்டது. அதற்குப் பின்னர் பாக்டீரியா, பாசி, தாவரங்கள் எல்லாம் கரியமில வாயு உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடத் தொடங்கிய காலம் வந்ததும் கரியமில வாயு நமது வளிமண்டலத்தில் முற்றிலும் குறைந்து போனது. ஆக்சிஜன் நமது வளிமண்டலத்தில் நிறையத் தொடங்கியது. அதிக குளிர்ச்சி ஏற்பட கொஞ்ச நஞ்சமிருந்த மீத்தேன் எல்லாம் வளிமண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டு பனிக்கட்டி வடிவத்தில் மீத்தேன் உருமாறிக் கொண்டது.

இந்த பூமியில் ஆக்சிஜன் 30 சதவிகிதம் இருந்த காலம் உண்டு. அதற்குப் பின்னர் ஒரு மோசமான விளைவுகளால் ஆக்சிஜன் 12 சதவிகிதமாக குறைந்து கரியமில வாயு அதிகரிக்க நிறைய உயிரினங்கள் இறந்து போயின. பின்னர் இந்த தாவரங்களின் உதவியால் ஆக்சிஜன் தற்போது 21 சதவிகிதமும், கரியமில வாயு 0.04 சதவிகிதமும் நைட்ரஜன் 78 சதவிகிதமும் மற்ற வாயுக்கள் ஒரு சதவிகிதமும் உள்ளது. நாமும் சிறப்பாக வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் இந்த மீத்தேன், கரியமில வாயு எல்லாம் எங்கே போயின? எவரேனும் வெளியில் இருந்து வந்து திருடிப் போனார்களா என்றால் அதுதான் இல்லை. எல்லாமே இந்த பூமியில் பதுங்கிக் கொண்டு இருக்கிறது.

இந்த பூமி பாறைகளால் ஆனது. அந்த பாறைகளுக்குள்  இந்த வாயுக்கள் சிக்கிக் கொண்டு இருக்கின்றன. நிலக்கரி வடிவில் இந்த வாயுக்கள் ஒளிந்து கொண்டன. மனிதனுக்கு நிறைய அறிவு வேலை செய்ய ஆரம்பிக்கத் தொடங்கியதுதான் பெரிய பிரச்சினை.

நிலக்கரியாக மாறி இருந்த இவைகள் எல்லாம் நாம் இந்த நிலக்கரியை எரிக்கத் தொடங்கியதும் வெளியேறத் தொடங்கின. கரியமிலவாயு, மீத்தேன், நைட்ரஜன் ஆக்சைடு பெருமளவில் வெளி வந்தன. நமது தேவை அதிகரிக்க அதிகரிக்க இந்த வாயுக்களின் அளவை நமது வளிமண்டலத்தில் நிரப்பிக் கொண்டு வருகிறோம்.

இந்த பூமியின் வெப்பநிலையை மாற்றக்கூடிய வாயுக்கள் என கரியமில வாயுவும், மீத்தேனும் என குறிப்பில் ஏற்றி வைத்துவிட்டார்கள். இந்த மீத்தேன் அதிலும் வெப்பநிலையை 23 மடங்கு கரியமில வாயுவை விட அதிகரிக்கும் சக்தி கொண்டது என கண்டறிந்து உள்ளார்கள்.

மீத்தேன்? கொடுமையானதா? நச்சு வாயு என்றெல்லாம் எவரும் இதனை குறிப்பிடவில்லை. ஆனால் நச்சுத்தன்மை வேறு வழியில் உண்டு பண்ணக்கூடியது. மீத்தேன் ஹைட்ரோகார்பன் வகையறாவை சேர்ந்தது. நிறைய சேர்க்கப்பட்ட கழிவுகள், அரிசி உபயோகிக்கும் நிலங்கள், மாட்டு சாணங்கள் என இந்த மீத்தேன் நீக்கமற நிறைந்து இருக்கிறது. பெட்ரோல், டீசல், கெரசின் போன்ற வகையில் மீத்தேன் ஒன்று. எப்படி பெட்ரோல், டீசல் எரிவாயுவாக பயன்படுகிறதோ அதைப்போல இந்த மீத்தேன் எரிவாயுவாக பயன்படக்கூடியது. எரிக்கும் போது பெட்ரோல், டீசலை விட இந்த மீத்தேன் அதிக அளவில் கரியமில வாயுவை வளிமண்டலத்தில் சேர்ப்பதில்லைதான். ஆனால் இதுவெல்லாம் போக பாறைகளுக்குள் இந்த மீத்தேன் பதுங்கி இருக்கிறது. நிலக்கரிச்  சுரங்கத்தின் பெரும் சவால் இந்த மீத்தேன். உலகில் இந்த மீத்தேன் வாயுவை வெளியேற்றியே பின்னரே நிலக்கரி எடுப்பது வழக்கம்.

இந்த மீத்தேனால் வேறு என்னதான் பிரச்சினை?

1. இந்த மீத்தேன் வெடித்து சிதற வைக்கும் வல்லமை கொண்டது. எளிதில் தீப்பற்றக் கூடியது.
2. இந்த மீத்தேன் தண்ணீரில் கலந்து கலப்படம் உண்டு பண்ணினால் மரணத்தை கூட உண்டுபண்ணும்.
3. இந்த மீத்தேன் அதிக அளவில் வெளியேறினால் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் விபரீத விளைவுகள்  ஏற்படும். மனிதர்களுக்கு தலைவலி மயக்கம் போன்றவை ஏற்படும்.
4. இந்த மீத்தேன் பூமியை வெப்பம் அடைய செய்யும், காலநிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தும்.
5.இந்த மீத்தேன் கடல் வாழ் உயிரினங்களுக்கும் கேடு தரக்கூடியது.
6.இந்த மீத்தேன் கார்பனை உள்ளே வெளியே என மாற்றும் வல்லமை கொண்டதால் தாவரங்களுக்கும், தாவரங்கள் வளரும் நிலங்களுக்கும் பிரச்சினை உண்டுபண்ணக் கூடியது.

மீத்தேன் ஆக்சிஜனை மெல்ல மெல்ல மென்று விழுங்கினால் என்ன ஆகும் என ஆக்சிஜன் சுவாசித்து வாழும் நமக்குச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

இப்போது ஒரு விவசாய நிலம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அங்கே நிலத்திற்கு பல அடி தூரத்தில் கிரானைட் கற்கள் இருக்கின்றன. எவருக்கும் இந்த கிரானைட் கற்கள் விபரம் தெரியாது. ஒருமுறை கிணறு வெட்ட அந்த நிலத்தை தோண்ட உள்ளே கிரானைட் கல் இருப்பது தெரிய வருகிறது என வைத்துக் கொள்வோம். விவசாய நிலம் வைத்திருப்பவர் என்ன செய்வார்? அந்த நிலத்தை எல்லாம் தோண்டி கிரானைட் கல் எடுக்கவே முற்படுவார். ஆக அங்கே விவசாய நிலம் இனி கிரானைட் பூமியாக மாறும். அதோடு சுற்றுப்புறம் எல்லாம் மாசுதன்மை அடையும்.

இதே பிரச்சினைதான் இப்போது தமிழகத்தில் பெருமளவில் மீத்தேன் பிரச்சினை குறித்து பேசப்பட்டு வருகிறது. மீத்தேன் மூலம் எரிவாயு நமக்கு கிடைக்கும். எவர் இல்லை என்று சொன்னது. ஆனால் அப்படி மீத்தேன் வாயுவை எடுக்கும் இடமானது எப்படிப்பட்ட இடமாக இருக்க வேண்டும் என்பதில் அரசுக்கு அக்கறை வேண்டாமா? என்பதே மக்களின் உள்ளக் குமுறல்.

எதற்கு எடுத்தாலும் மக்கள் போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டால் மக்கள் தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்றே அரசு கேட்கிறது. முதலில் பாதுகாப்பு அவசியம். கல்குவாரிகள், மணல் லாரிகள் என பூமியை சுரண்டித் திண்ணும்  தொழில் முதலைகளின் வயிற்றுப் பசிக்கு ஏழைகளின் பாமர மக்களின் வயிற்றில் வயலில் அடிக்கத்தான் வேண்டுமா? இந்த தொழில் முதலைகளின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

பரந்த சாலைகள் வேண்டும் என பல விவசாய நிலங்கள் பறிபோயின. அதாவது ஒரு எல்கையோடு நின்று போனது. எவரும் நிலத்தைத் தோண்டி சாலை போடவில்லை.கட்டிடங்கள் எழுப்பி இன்னும் பல விவசாய நிலங்கள் பறிபோயின. நிலக்கரி சுரங்கங்களுக்கென இன்னும் பல நிலங்கள் பறிபோயின.
இப்போது இந்த மீத்தேன் வாயு.

மீத்தேன் வாயுவை எடுக்கும்போது 1 சதவிகித மீத்தேன் கூட வளிமண்டலத்தில் கசிந்தால் அதன் விளைவு விபரீதம் என்கிறார்கள். மீத்தேன் வளிமண்டலத்தில் கசிவதை தடுத்த நிறுத்த வேண்டும் என பல நாடுகள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் வேளையில் மீத்தேன் இருக்கிறதா என ஒரு நாடு அதுவும் விளைநிலங்கள் அருகில் திட்டம் தீட்டுவது என்னிடம் தங்க ஊசி இருக்கிறது, கண்ணில் குத்திக் கொள்கிறேன், அது தங்கம் கண்ணை ஒன்றும் செய்யாது என சொல்வது போல் இருக்கிறது.

ஒரு விஷயத்தை செயல்படுத்தும் முன்னர் அது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது கிடையாது. பெரிய அளவில் பேசி முடிவு எடுக்க வேண்டியது. அதன் பின்னர் மக்களை மிரட்டி அதை சாதிக்க வேண்டியது. கூடங்குளம் அணு உற்பத்தி முதற்கொண்டு மக்களின் பலவீனத்தினை தனக்கு பலமாக அரசு பயன்படுத்தி வருகிறது.

பூமிக்குள் எப்படி செய்வார்கள், என்ன செய்வார்கள் என்பதெல்லாம் பாமர மக்களுக்கு புரியாது. புரியவும் வேண்டாம். போபாலில் விஷ வாயு தாக்கி இறந்தவர்கள் அதிகம். ஈவு இரக்கமற்ற தன்மையில் நடந்து கொள்ளும் அதிகாரிகள். ஒரு பாலத்தை ஒழுங்காக கட்டத் தெரியாத பொறியியல் வல்லுநர்கள்.

மக்கள் போராடுவார்கள். பின்னர் அடங்கிப் போய்விடுவார்கள். நமது திட்டம் செயல்படும் எனவும் பணம் தந்தே அடிமைபடுத்தி விடலாம் எனவும் எண்ணம் கொண்டு இருப்போர் பலர்.

Natural gas comprises 95% of methane என நமது வாயை மூடிவிடவே எல்லா முயற்சிகளும் நடக்கும். இந்த பூமி எல்லா பிரச்சினைகளையும் சமாளித்தே வந்து இருக்கிறது. காவேரியும் சமாளிக்கும், சமாளிக்கட்டும்.



Friday 5 December 2014

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 23

பகுதி 22  இங்கே

அன்று இரவும் கோரனைத்  தேடி சென்றேன். அவனும் அவனது அப்பாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

''இனி அவனை ஒன்னும் பண்ண வேண்டாம், ஊரை விட்டே ஓடிட்டான்ல அது போதும்''

''ம்ம்''

''நாளைக்கு காலேஜுக்குப் போ''

''முருகேசு இருக்கான்''

''அவன் கிடக்கான், அவன் கிட்ட எதுவும் சொல்லிக்கிற வேணாம்''

''ம்ம்''

இனி அங்கே நிற்பதில்லை என வீடு நோக்கி நடந்தேன். கோரன் எதுக்கு ஆசிரியரை கொல்ல  முயற்சிக்க வேண்டும், ஆசிரியர் எதற்கு ஊரை விட்டே ஓட வேண்டும் எனும் கேள்விகளுடன் வீடு சேர்ந்தேன்.

''காயூ, வாத்தியாருக்கும் கோரன் குடும்பத்திற்கும் ஏதோ  தகராறு இருக்கு போல''

''அதுக்கு என்ன இப்போ, நீ கோரனை  பத்தி பேசறது நிறுத்து, நான் படிக்கணும்''

''படி, உன்னை யாரு பிடிச்சிட்டு இருக்கா''

''ஏன்  பிடிச்சித்தான் பாரேன்''

''கத்துவ, அதானே''

''பிடிக்கிறதுக்கு எல்லாம் யாரும் கத்தமாட்டாங்க''

''உன் அக்காவைப் பார்க்க போலாமா''

''எதுக்கு இப்ப பேச்சை மாத்துற, உனக்கு அவளைப் பார்க்க ஆசை. அப்படித்தானே''

''அவளை எதுக்குப் பார்க்கணும், எனக்கு உன்னைத்தவிர வேறு யாரையும் பார்க்க விருப்பம் இல்லை''

''சும்மா சொல்லாதே''

''நிசமாவே இல்லை, உன் அக்காவைப் பார்த்துட்டு வரலாம்னு தான் சொன்னேன்''

''சரி போலாம்''

காயத்ரிக்கு கோரன் பற்றிய பேச்சு பிடிக்காமலே இருந்தது. அடுத்த நாள் கல்லூரிக்குப் போனோம். கோரன் வந்து இருந்தான்.

''கோரன் உன்கிட்ட பேசணும்''

''தேவை இல்லை''

விறுவிறுவென கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்குச்  சென்றான். சிறிது நேரம் அங்கிருந்தவன் வெளியில் வந்தான்.

''கோரன் நில்லு''

''உயிரோட நீ இருக்கணுமா  வேணாமா?''

''என்ன ஆச்சு உனக்கு''

''என்னோட விசயத்தில தலையிடாதே''

''நீ எதுக்கு இப்படி நடந்துக்கிற''

கத்தியை எடுத்துக் காட்டினான். நான் மிரண்டு போனேன்.

''ஒரே சொருகு, குலை வெளியே வந்துரும்''

நான் அங்கிருந்து நகன்றேன். அவன் கல்லூரியில் இருந்து வெளியே போனான். நான் கல்லூரி முதல்வர் அலுவலகம் சென்றேன்.

''கோரன் எதுக்கு வந்தான்''

'' வேலையை விட்டுப் போன பொரபுசர் பத்தி விசாரிச்சான், தெரியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன்''

அவரிடம் மேற்கொண்டு கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என சொன்னார்.

எனக்கு வகுப்பில் அவன் அருகில் சில நாட்களாக இல்லாதது ஒரு மாதிரி இன்றும் இருந்தது. அவன் இருந்தால் ஏதேனும் சொல்லிக்கொண்டு இருப்பான்.

திடீரென கோரன் வகுப்பில் நுழைந்தான்.

''முருகேசு, வெளியே வாடா''

வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்த ஆசிரியர் அவனை நோக்கி நீ உள்ள வர வேண்டியது தானே என்றார். உன் வேலையை மட்டும் பாரு என அவரை நோக்கி கத்தியவன் என்னை நோக்கி வாடா என கத்தினான். நான் பேசாமல் அமர்ந்து இருந்தேன்.

வகுப்பில் இருந்த சில மாணவர்கள் எழுந்து வேகமாக அவனை மடக்கிப் பிடித்து அவன் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்தார்கள். அந்த கத்தியை வாங்கிய சோபன் கோரனை  நோக்கி இதுதான் நீ படிக்கிற லட்சணமா எனக் கேட்டான். ஆமாம், ஒரு வாத்தியார் ஒழுங்கா இல்லைன்னா அப்படித்தான் ஆகும், எனக்கு என்ன நடந்தது தெரியுமா?

மொத்த வகுப்பும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியது. கோரன் தன கதையை சொல்ல ஆரம்பித்தான்

(தொடரும்)


Wednesday 26 November 2014

திருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 3

சனிக்கிழமை வந்தது. எனக்கு எழவேப் பிடிக்கவில்லை. என்னவொரு கொடுமை.  கல்யாண வீடு போல அம்மா மாற்றிக்கொண்டு இருந்தார். புது சேலை  உடுத்த செய்து முடித்த பலகாரங்கள் என அன்று ஒரு பொம்மையாக செயல்பட்டேன். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்தார்கள் அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை படித்து என்ன பிரயோசனம்? என்று எனக்குள் உண்டான மனநிகழ்வு என்னை அவ்வப்போது தின்று கொண்டிருந்தது. வந்து அமர்ந்தார்கள். அப்போது அவனைப் பார்த்தேன். இவனா எனக்கு கணவன் என்று எனக்குள் எழுந்த கேள்வி இன்னும் அதிர்ச்சியை தந்தது.

 பொண்ணை வரச்சொல்லுங்க என்ற சம்பிரதாயம் எல்லாம் இல்லை. நானும் பலகாரங்களுடன் சென்று அமர்ந்தேன். உன் அப்பா எல்லா விபரமும் சொன்னார். உன்னை எங்களுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு அதான் உன்னை பொண்ணு பார்க்க வந்தோம் என்றார். என் பையன் கூட கல்யாணம் பிடிக்காதுனு உன் அப்பாகிட்ட சொல்லி இருந்தேன். உன்னோட போட்டோ பார்த்ததும் மனசு மாறிட்டான் என்றவரிடம் எனக்கு கல்யாணம் பிடிக்கலை என்றேன். அப்பா  முகம் பார்க்க எனக்கு தெம்பில்லை எனக்கு அவனைப் பிடிக்கவே இல்லை. அவன் நான் சொன்னதும் ஹேய் என துள்ளி எழுந்தான் மகிழ்ச்சியுடன். 

வாங்க போகலாம் என்றே அழைத்தான். இருப்பா என அதட்டினார் அவனின் அப்பா அப்படியே அமர்ந்தான் இங்க பாரும்மா இப்படி பேசாத என தொடங்கி எனக்கு தரப்பட்ட அறிவுரையில் எனக்கு வெறுப்பு அதிகமாகியது எப்போ கல்யாண தேதி என்றார் அப்பா. அதிர்ந்தேன். வர்ற 4ம் தேதி என்றார் அவனின் அப்பா. அவன் ஏதும் பேசாமல் இருந்தான். எனக்கு பையனைப் பிடிக்கலை என நேரடியாகவே சொல்ல இயலாமல் தவித்தேன். ஏன் அப்பா?! என் பார்வைக்கு வலிமை இல்லை. அப்பா சொன்னார் பிடிச்சி கல்யாணம் பண்றவங்க எல்லாம் கடைசி வரைக்கும் சேர்ந்தா இருக்காங்க? என்ற கேள்வி என்னை பலவீனமாக்கியது. இதோ இவ கூட என்னைப் பிடிக்கலைனு சொன்னா, கூட சேர்ந்து வாழலை என அம்மாவை காட்டினார். எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. நானும்தான் இதோ இவ பண்ணாத அழிச்சாட்டியமா? என்று அவன் அப்பா சொன்னதும் எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது. 

அப்பா நீங்களா இப்படி? அம்மாவை அடிமைப்படுத்தியதோடு அடுத்தவர் முன் அவமானப்படுத்துவது என்றே கேட்க துடித்தேன். அம்மாவும் முதல பிடிக்கலை அப்புறம் இவரே உலகம்னு ஆகிருச்சி என்றதும் அவனின் அம்மாவும் அதே பல்லவி பாடினார். எனக்கு இந்த திருமணம் பிடிக்காமல் போனது இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம், வேறு வழியின்றி எதனையும் ஏற்றுக்கொள்வது. இப்படி கூட மனிதர்கள் இருக்க இயலுமா? என்ற எனது கேள்விக்கு அப்போதே பதில் சொன்னேன். என்னால் கல்யாணம் பண்ண இயலாது என்று தீர்மானமாக எழுந்தேன். அவனும் திருமணம் பண்ண இயலாது என எழுந்தான். அப்படியே வெளியே சென்றான். இந்த கல்யாணம் நடக்கும் என அவனின் அப்பா சொல்லி சென்றார். என்னை அவமானப்படுத்திட்டல்ல என அப்பா என்னை அடிக்க வந்தார் ஏன்டீ இப்படி கேவலப்படுத்தற என அம்மா பங்குக்கு சத்தம் போட்டார் எனக்கு கல்யாணமே வேண்டாம் என சொல்லி பார்த்தேன் நீ கேட்கலை என அழுதேன். அப்புறம் ஏன்டீ சம்மதிச்ச என்றார் அம்மா. திட்டம்போட்டு கேவலப்படுத்திட்ட என்ற அப்பா குரலில் வேதனை தெரிந்தது. எனக்கு அவனைப் பிடிக்கலை என்றேன். வேற யாராச்சும் பாருங்க, அவனுக்கே என்னைப் பிடிக்கலை என்றேன். நீ கல்யாணம் பண்ணு, இல்லைன்னா எக்கேடு கெட்டுப் போ என அப்பா சொன்னது எனக்கு நிறைய வலித்தது. 

அப்பா என்னால உங்களை மாதிரி வாழ முடியல என்ற எனது நிலையை எப்படி சொல்வது, அம்மா என்னால் எப்படி உன் வாழ்க்கை வாழ இயலும். அம்மாவிடம் நிறைய அழுது எல்லாம் புலம்பினேன் எக்கேடு கெட்டுப் போ என்றார் அம்மா. வீட்டில் அன்றிலிருந்து திருமணப்பேச்சு எடுக்கவே இல்லை. என் தோழி என்னிடம் போன் பண்ணி சொன்ன விசயம் எனக்கு ஆச்சரியம் தந்தது சில நாட்களில் ஊருக்கு வந்தவள் இதோ இவனே என் காதலன் என ரமணனை காட்டினாள் என்னால் நம்ப இயலவில்லை. ரமணன் என்னைப் பார்த்து சிரித்தான். அவளது வீட்டில் ஏற்றுக்கொண்டது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. எப்படி இப்படி வாழ இயலும்?

எனக்கு இந்த திருமணம் என்பதெல்லாம் பிடிக்கவே இல்லை. எல்லோரும் திட்டினார்கள். கல்யாணமற்ற வாழ்வு முழுமை பெறாது என்றே சொன்னார்கள். தோழியின் திருமணம் வந்தது. உலகில் திருமணம் என்பது என்னவென எனக்குப் புரியவே இல்லை. வாழ்த்து சொல்லி வீடு வந்தேன். நல்ல வரன் வந்து இருப்பதாக அப்பா சில மாதங்கள் கழித்து சொன்னார். வீடு வந்து பெண் பார்க்கும் படலம் முடிந்தது. இரு வீட்டார் சம்மதம் சொன்னார்கள். எனக்கு சம்மதமே இல்லை. கல்யாணம் முடிந்து ஒரே வருடத்தில் ஒரு பெண் குழந்தை. என் கதையை அவள் செய்ய மறுத்த திருமணத்திற்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

திருமணத்தை வெறுக்கும் பெண்களே நீங்கள் எப்படி என சொல்லிவிட்டுப் போங்கள். (முற்றும்)

Friday 21 November 2014

வெட்டித் தருணங்கள் - 1

முன்னுரை :

இது ஒரு நிழல் அல்ல, நிஜமும் அல்ல. இந்த கதையில் வருபவர்கள் என் கற்பனையில் உதித்தவர்கள் அல்ல. அன்றாடம் இவர்களுடன் எழுத்து மூலம் மட்டுமே பழகி இருக்கிறேன் என சொல்லவும் முடியாது. இருப்பினும் திடீரென இவர்களை எல்லாம் கதை மாந்தர்கள் ஆக்கினால் என்ன என எனக்குத்  தோணியது. அதன் விளைவாக இந்த நாவல் எழுதத் தொடங்கினேன். எவரேனும் இந்த கதைப் பாத்திரம் நான்தானா என என்னிடம் கேட்பீர்களேயானால் எனக்குத் தெரியாது.

கதைக்கான கரு என்னவாக இருக்கும் என்றே நான் யோசனை செய்யாமல் எழுதத் தொடங்கிய கதை இது. எப்போது பார்த்தாலும் அன்புதனை மையமாக வைத்தே எழுதி முடித்தாகிவிட்டது. கதை எழுதி முடிக்கும் முன்னரே எழுதிய முன்னுரையும் இதுதான்.

அன்புடன்
இராதாகிருஷ்ணன்
--------------------------------------------------------------------------------------------------------------------
1.

''அம்மா எனக்கு ஒரு லேப்டாப் வாங்கித் தருவியா?''

''காசுக்கு எங்கடா போறது?''

''அப்பாட்ட கேளுமா''

எனது ஆசையை அம்மாவிடம் சொல்லிவைத்தேன். அம்மா எரிச்சலாக என்னைப் பார்த்தார்கள். இப்போதுதான் பொறியியல் துறையில் முதலாம் வருடம் சேர்ந்து இருக்கிறேன். எனது வீட்டில் இருந்து அரை மணி நேரத்தில் கல்லூரிக்கு சென்று விடலாம். முதல் நாள் கல்லூரியில் நிறைய பேர் கைகளில் விலை உயர்ந்த மொபைல் போன்கள்  வைத்து இருந்தார்கள். எனக்கு ஒரு பாடாவதி போன் அப்பா வாங்கி தந்து இருந்தார். என்னை எப்படியாவது மருத்துவர்  ஆக்கிட வேண்டும் என அப்பாவும் அம்மாவும் போராடினார்கள். நான் பொறியியல் துறைக்குத்தான் போவேன் என அடம் பிடித்தேன். நான் நினைத்ததுதான் நடந்தது.

என்னுடன் உடன் பிறந்தவர்கள் மூன்று அக்காக்கள். பையன் வேண்டும் என வேண்டி பிறந்தவன் நான். ஒரு அக்காவிற்கு மட்டும் திருமணம் முடிந்துவிட்டது. அவர்களைப் பற்றி எல்லாம் எனக்கு இப்போது பேச விருப்பம் இல்லை.

என்னை கொக்கு போகுது பாரு என கேலி பண்ணாதவர்கள் எவருமே எனது ஊரில் இல்லை. நானும் ஆமா நான் கொக்குதான் என சைக்கிளில் பறந்து செல்வேன். சிலரை அடித்து துவைத்து இருக்கிறேன். இருந்தாலும் போடா கொக்கு எலும்பு உடையப்போகுது என கேலி பேசுவார்கள்.

நான் விஜய் ரசிகன். எனக்கு கமல் அஜீத் ரஜினி விக்ரம் சூர்யா ஆர்யா எல்லாம் கொஞ்சம் கூடப் பிடிக்காது. நான் பத்தாவது படிக்கும்போது விஜய் குறித்து கேலி பேசியவனை பல்லை பெயர்த்து இருக்கிறேன். என்னை கேலி பேசியவர்களை விட விஜயை கேலி பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள இயலாது. இதோ என் கையை பாருங்கள். இளைய தளபதி விஜய் என பச்சை குத்தி இருக்கிறேன். நீங்களும் குத்திக் கொள்ளுங்கள். வேறு எவர் ரசிகராக நீங்கள் இருந்தாலும் என்னிடம் விஜய் பற்றி மட்டுமே அதுவும் மிகவும் உயர்வாக பேச வேண்டும், இல்லை என்றால் என்னிடம் பேசக்கூடாது.

நான் ஏ  ஆர் ரகுமானின் பரம விசிறி. என்னமோ இளையராஜாவாம், என் அப்பா இளையராஜா குறித்து நிறைய பெருமை பேசுவார். இளையராஜா பாட்டு கேட்டால்தான் தூக்கம் வரும் என சொல்வார். நான் ரகுமான் பாட்டு கேட்டுதான் தூங்குவேன். இளையராஜா பாடல் என்றால் எனக்கு அறவேப் பிடிக்காது என்றில்லை, பிடிக்காது.

மற்றொன்று நான் பெரியாரின் தீவிர விசிறியும் கூட. பெரியாரின் கொள்கைகளை பதினோராம் வகுப்பில் படிக்க ஆரம்பித்தேன். அன்றிலிருந்து கோவிலுக்கு செல்வதை தவிர்த்தேன். இருந்தாலும் வம்படியாக கோவிலுக்கு அம்மா அழைத்துப் போவார்கள். அங்கு வரும் இளம் பெண்களை சைட் அடிப்பது என்  வழக்கம். என் அக்காக்கள் என்னடா பார்வை அங்க என திட்டுவார்கள். அந்த பொண்ணு அழகா இருக்காக்கா எனும் எனது வெள்ளேந்தி பேச்சு வீட்டில் அப்பாவிடம் அவ்வப்போது மொத்துகள் பெற்றுத் தரும். அதனால்தான் எனக்கு அவர்கள் குறித்து பேச விருப்பம் இல்லை. சதிகார அக்காக்கள்.

எனக்கு இந்த மதம் சாதி எல்லாம் அறவேப் பிடிக்காது. அதனால் நாங்கள் எந்த ஆளுங்க என நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

''என்னடா லேப்டாப் கேட்டியாமே''

''ஆமாம்பா''

''எவ்வளவுடா ஆகும்''

''ஒரு முப்பதாயிரம் ஆகும்பா, லேப்டாப் வசதியா இருக்கும்பா''

''சரிடா வாங்கித்தாரேன்''

அப்பாவின் பழக்கம் இதுதான். தனது பிள்ளைகளுக்கு என எதுவும் குறை வைக்கமாட்டார். எனது பிறந்தநாள் 23 மார்ச். குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வருடம் தவறாமல் நீங்கள் எனக்கு வாழ்த்து சொல்லவேண்டும்.

''பள்ளிக்கூடத்தில தந்த லேப்டாப் மாதிரி இதை பண்ணின, கொன்னுருவேன்''

''இல்லைப்பா, பத்திரமா பாத்துக்குவேன்''

''பொண்ணுகளுக்கு வாங்கித் தராம இவனுக்கு மட்டும் என்ன பவிசு''

''விடுடீ, ஆசைப்படுதாம்ல, அவக கேட்கலைல''

எனக்கு சந்தோசம் பொங்கியது. எனது ஊர் திருநெல்வேலி பக்கம். கிராமத்தின் பெயர் எல்லாம் உங்களுக்கு சொல்லமாட்டேன். நீங்கள் என்னைத் தேடி வந்துவிட்டால் நான் என்ன பண்ணுவது. அதனால் திருநெல்வேலி போதும்.

லேப்டாப் எந்த பிராண்ட் வாங்கலாம் என யோசித்தேன். என்ன வாங்கலாம் சொல்லுங்க?

(தொடரும்)



Thursday 20 November 2014

திருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 2

ஒரு மணி நேரத்தில் அம்மா என்னை எழுப்பினார். இப்ப தலைவலி எப்படி இருக்கிறது என்றவரிடம் பரவாயில்லைமா என்றபடி எழுந்தேன். சீக்கிரம் கிளம்பு என்றவரிடம் நாளைக்குப் போகலாம்மா என்றதும் நாளைக்கு எனக்கு வேற வேலை இருக்கு நீ கிளம்பு என்றார். முகம் கழுவி கிளம்பினேன். சிலர் தம்பதிகளாக சிலர் குழந்தைகளுடன் திருமணமானவர்கள் நிறைய கண்ணில் பட்டார்கள். முதலில் சேலை கடைக்குப் போனார் அம்மா. சனிக்கிழமைக்குத் தேவையானதை வாங்கினார் அம்மா. தலைவலி மீண்டும் தலையெடுத்தது.

வீட்டிற்கு வந்தபோது இரவு 9 மணி, அப்பா வந்து இருந்தார். நான் தலைவலி என சொல்லிவிட்டு நேராக தூங்கப் போய்விட்டேன். இரவு ஒரு மணி இருக்கும். என்னோட தோழி ஒருத்தி அழைத்தாள், தூக்க கலக்கத்தில் என்னடி என்றேன். பணம் கொஞ்சம் வேணும்டி நாளைக்கு பத்து மணிக்கு உன் ஆபிஸ் பக்கம் வரேன் என்றவளின் குரலில் பதட்டமும் நடுக்கமும் தெரிந்தது. என்னடி பிரச்சினை எவ்வளவு வேணும் என்றேன். பத்தாயிரம் வேணும், காலையில் எல்லா விபரங்கள் சொல்கிறேன் என போனை வைத்துவிட்டாள்.

தூங்க முயற்சித்து என்ன காரணம் என தெரியாமல் தூங்காமல் தவித்தேன். எப்படி தூங்கினேன் என தெரியாது.அம்மா என்னை எழுப்பிவிட்ட பின்னர் அவசரம் அவசரமாக கிளம்பி ஏடிஎமில் பணம் எடுத்துக்கொண்டு அலுவலகம் போனேன். பத்து மணிக்கு அவள் வந்து இருந்தாள். என்னடி இப்படி படபடப்பா இருக்க என்றதும் வீட்டுல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்க என்னக்கு பிடிக்கலைன்னு சொன்னேன், கேட்கமாட்றாங்க அதான் மதுரைக்கு போறேன், போயிட்டு விபரம் சொல்றேன் என பணத்தை வாங்கிக்கொண்டு எனது கைகளை  பிடித்துக் கொண்டாள். அவள் எனது பேச்சை கேட்கும் மனநிலையில் இல்லை. அவளது வலி எனக்குள்ளும் இருந்தது. ஆனால் என் அப்பாவை நினைக்கையில் எனக்கு அழுகை வந்தது. மிகவும் கண்டிப்பானவர்.என்னிடம் நீ தைரியம் மிக்கவள் என பிறர் சொன்னது பொய் என்றே தோணியது. என் தோழியின் தைரியம் குறித்து எனக்கு பொறாமையாகவும் இருந்தது. சரியாக நாலு மணிக்கெல்லாம் அவள் அழைத்தாள். ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்க ஏற்பாடு பண்ணிட்டேன், இந்தா வேற நம்பரு யாருட்டயும் தராதே என்றவள் நன்றி சொல்லி வைத்தாள். நீ பண்றது தப்பு என அவளிடம் சொல்லும் முன்னர் அவள் எண்கள் தந்து கொண்டிருந்தாள். எழுதி வைத்தேன். எனக்கு அன்று இரவு விபரீத ஆசை தோணியது.

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த அம்மா அப்பாவிடம் யாரு மாப்பிள்ளை என்றேன். சனிக்கிழமை வரப்ப பார்த்துக்கிரலாம் என்றார் அப்பா. அம்மாவை தனியாக அழைத்துக் கேட்டால் எனக்கு தெரியாதுடி, ஏன்டி பறக்கிற ரெண்டு நாளு தானே பொறு  என்றார். அங்கே என்ன சத்தம் என அப்பா சத்தம் போட்டார். மாப்பிள்ளை யாருன்னு கேட்கிறா என்றார் அம்மா. அம்மா நாடகம் பார்க்கப் போனார் நான் ஏமாற்றத்துடன் மாடிக்கு போனேன்.

திருமணம் குறித்த கனவுகள் எனக்கு கொஞ்சம் கூட இல்லை. எனக்கு ஆண்கள் குறித்து எவ்வித வெறுப்பும் இல்லை. எனக்கு சுதந்திரமாக இருக்கப் பிடித்தும் முடியாமல் போனது கூட காரணமாக இருக்கலாம். ஆனால் இப்போதைய நிலையில் இருந்து எப்படி தப்பிப்பது என எனக்குத் தெரியவில்லை. எப்படிபட்டவர் எனினும் ஏற்று வாழத்தான் வேண்டுமா என்பது எனக்கு புதிது அல்ல. அம்மா, அப்பாவை மீறி எதுவுமே செய்வதில்லை. என்னால் அப்படி இருக்க இயலுமா என்றால் இதோ தடுமாறிக்கொண்டு இருக்கிறேன். அன்புக்குரிய அப்பா எதற்கு இப்படி நடந்து கொள்கிறார் என எனக்கு சத்தியமாகப் புரியவில்லை. அப்பா தூங்கும் முன்னர் அவரிடம் பேச ஆவல் கொண்டேன். மணி பன்னிரண்டு தாண்டியது. அம்மா அங்கேயே உறங்கிக்கொண்டு இருந்தார். அம்மா அப்பா இல்லாமல் தனியாக சென்று தூங்கியது இல்லை. தொலைகாட்சி அணைக்கப்பட்டது. எழுந்திரி என அப்பா சொன்னதும் அம்மா எழுந்து தூங்க வந்தார்கள். என்னம்மா தூங்கலையா என்றார் அப்பா.

கல்யாணம் வேணாம்பா என்று நான் சொன்ன பார்வையில் எனது உடல் கொண்ட நடுக்கத்திற்கு என்ன உவமை சொல்வது. உடனே போம்மா தூங்கு என்றார். என்னுடன் படித்த நண்பர்கள் தோழிகள் அதில் காதல் சொன்ன சிலர் என் நினைவுக்கு வந்து போனார்கள். என்னோட காதலை உதாசீனப்படுத்துறல என அழுத ரமணன் முகம் என் கண் முன்னால் வந்தது. கல்யாணம் பண்ண முடியாது நீ வேணா காதலி என்றே சொன்னாலும் அவன் கேட்கவில்லை. வேறு எவரையாவது காதலித்து திருமணம் பண்ணுவேன் என சவால் விட்டுப் போனான். அவனுக்குள் அப்போது ஏற்பட்ட வலி எனக்கு ஏற்பட்டுக்கொண்டு இருந்தது. வலி அடக்கிப் பழகிக் கொண்டு இருந்தேன்.

தோழியின் பெற்றோர்கள் நான் வேலைக்கு செல்லும் முன்னரே என்னை தேடி வந்து விட்டார்கள். தங்கள்  மகள் குறித்து கேட்டார்கள். எனக்கு பொய் சொல்ல விருப்பமில்லை. அவர்கள் இருவரிடம் என் தோழியின் மனம் குறித்து சொல்லி வேலை தேட மதுரை சென்று இருப்பதாக சொல்லி வைத்தேன். பாதகத்தி பிடிக்கலைன்னா சொல்ல வேண்டியதுதானே, நல்லவேளை அவளோட நம்பர் வேலை செய்யலை வேற நம்பர் இருந்தா கொடு பேசணும் என்றார்கள். ஆபிஸ்ல இருக்கு தரேன் என எனது நம்பரை அவர்களிடம் தந்து வைத்தேன்.

விபரம் கேட்ட அம்மாவிடம் எல்லா கதையும் சொன்னேன். நீ ஏண்டீ ஓடலை என அம்மா கேட்டபோது என் விழிகளை என்னால் நம்பவே இயலவில்லை. அம்மா? ஆமாம்டி நீ எதுக்கு ஓடலை  என்றபோது அப்பா அங்கு வந்து நின்றார். யாரு எதுக்கு ஓடினா என அப்பா கேட்டதும் அம்மா எல்லா கதையும் சொனனர். அப்பா பார்த்த பார்வையில் நடுநடுங்கிப் போனேன். நான் பெத்த பிள்ளைடி  எப்படி ஓடுவா என கர்ஜித்து வெளியில் சென்றார். அம்மா என்னிடம் எதற்கு தோழியை தடுக்கவில்லை என என கேட்டபோது பதில் சொல்ல இயலாமல் தவித்தேன். இதுதான் நீ பழகினதுக்கு அர்த்தமா என்றபோது எனக்குப் பிடிக்காத கல்யாணத்தை எதுக்கு பண்ணி வைக்கிற என்றேன். அது வேற இது வேற. ஒழுங்கா அந்த புள்ளைய வீடு வந்து சேர சொல்லு என்றார். வேலைக்கு வந்து தோழியிடம் விபரம் சொன்னேன். ஏன்டி  இப்படி பண்ணின  என்றவளிடம் நீ ஊருக்கு வா என்றேன்.

அதற்கு அவள் அவங்க என்னை கொன்னு போட்டுருவாங்க என புலம்பினாள். நம்பரை தொலைச்சிட்டேன் என பொய் சொல்லு என்றவளின் குரல் உடைந்து இருந்தது. அவளுக்கு அக்கா அண்ணன் தம்பி உண்டு. இழப்பு கடினம் எனினும் தாங்கிக் கொள்ளக்கூடும். அவளது அம்மா எனக்கு அழைத்தார். அவள் நம்பர் மாறிவிட்டது அழைத்தால் சொல்கிறேன் என பொய் சொன்னேன்.

சனிக்கிழமை வந்தது. (தொடரும்) 

Thursday 13 November 2014

திருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 1

எனக்கு கல்யாணம் வேண்டாம் என அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். கல்யாணம் பண்ணாமல் பெண்ணால் வாழ இயலாது என்றார் அம்மா. இயலும் என்றேன். ஒழுங்கா சொன்னபடி கேளு என அம்மா திட்ட ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நெருங்கிய பள்ளித்தோழிகள், கல்லூரித்தோழிகளில் ஒரு திருமணம் இன்னும் சில மாதங்களில்  நடைபெற இருக்கிறது. அதை அம்மா காரணம் காட்ட ஆரம்பித்து இருந்தார்கள். அப்பா ஏதும் சொல்லாமல் இருந்தது எனக்கு ஒரு மன ஆறுதல்.

எனக்கு வயது 23தான் ஆகிறது. முதுநிலை படிப்பு முடித்து நல்லதொரு வேலையில் இருக்கிறேன். என்னிடம் சென்ற வருடம் ஒருவன் என்னை மிகவும் விரும்புவதாக சொன்னான். விரும்பிக்கொண்டிரு, திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றேன். நீ அழகாக இருக்கிறாய் என்பதற்காக எனது பார்வையை குறை சொல்லாதே என திட்டிவிட்டான். சிலமுறை முயற்சி செய்தான். எனது பிடிவாத குணம் அவனை என்மீது பிடிமானமில்லாமல் செய்தது.

கல்யாணம் பண்ணும் ஆசையில்தான் பலரும் காதலிக்கவே விரும்புகிறார்கள் என்பதுதான் எனக்குத் தெரிந்தது. அன்று வேலை முடித்து வீடு திரும்பினேன். வழக்கம்போல காபி, பலகாரம் அம்மா செய்து கொடுத்தார்கள். நம்ம வம்சம் விருத்தி அடைய வேணாமா, பெத்தது ஒண்ணே ஒண்ணு  என்றார் அம்மா. ஏம்மா நீங்க பெத்துக்கோங்க அவளுக்கோ, அவனுக்கோ கல்யாணம் பண்ணி வம்சம் விருத்தி பண்ணுங்க என நான் சொன்னது அம்மாவுக்கு சற்று வலித்திருக்க வேண்டும். ஏன்டீ இப்படித்தான் நீ பேச கத்துக்கிட்டயா என அம்மா அடுக்களைக்குப் போய்விட்டார். பாதி சாப்பிட்ட பலகாரத்தை விட்டுவிட்டு அடுக்களைக்குப் போனேன். அம்மா கோபத்துடன் இருந்தார்கள். எனக்கு கல்யாணம் பிடிக்கலைம்மா என்றேன். இங்க பாரு, நீ என்னைக்கு கல்யாணம்னு முடிவு பண்றியோ அன்னைக்கு என்கிட்டே பேசு என அம்மா சொன்னதும் சரிம்மா என வந்துவிட்டேன்.

அன்று இரவு அப்பா என்னை அழைத்தார். இந்த சனிக்கிழமை உன்னை பொண்ணு பார்க்க வராங்க, எங்கயும் போகாத என கண்டிப்புடன் சொன்னார். அப்பா என்றேன். எதுவும் பேச வேண்டாம் என சொன்னவரை  விட்டுவிட்டு அம்மாவை முறைத்துப் பார்த்தேன். அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி. அன்று நிறைய அழுதேன். என்னால் அப்பாவை எதிர்த்துப் பேச இயலாது. எனது ஆசைகளுக்கு குறுக்கே நிற்காத அப்பா இன்று மட்டும் எப்படி? எனது வீங்கியிருந்த கண்கள் என் இரவின் அழுகையை பறைசாற்றிக் கொண்டு இருந்தது. என்னடி அழுதயா என்ற அம்மாவிடம் நீ சந்தோசமாக இருக்கேதானம்மா என் சாப்பிட்டுவிட்டே கிளம்பினேன். சீக்கிரம் வா, கடைக்குப் போகணும் என்ற அம்மாவின் குரல் எனக்கு ஏன்  கேட்டதோ?

என்னடி ஒருமாதிரி இருக்க என்ற அலுவலக தோழியின் கேள்விக்கு அழுதுவிடுவேன் போலிருந்தது. என்னை பொண்ணு பார்க்க வராங்க என்றேன். அதுக்கு ஏன்டீ  கவலைப்படற என்றவளுக்கு வேறேதும் பதில் சொல்ல தோணவில்லை. மனம் வேலையில் லயிக்கவில்லை. நிறைய தவறுகள் அன்று நடந்தது. தலைவலி வேறு வந்து சேர்ந்தது. சில மணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அனைவரும் வாழ்த்து சொல்ல ஆரம்பித்து இருந்தார்கள். அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன். ஒருமணி நேரம் முன்னதாக விடுப்பு எடுத்து வீடு வந்து சேர்ந்தேன். அம்மா எனக்காக காத்து இருந்தார். அதே காபி அதே பலகாரம், அம்மா தலைவலிக்குது என்றேன். உடனே காபியை எடுத்து போய்விட்டு சுக்கு காபி போட்டு வந்தார். அம்மா நான் கொஞ்சம் தூங்குகிறேன் என்றேன். கடைக்குப் போகணும்னு சொன்னேனே என்றவரிடம் ஒரு மணி நேரம் என சொல்லி தூங்கப் போனேன்.

(தொடரும்)


Thursday 6 November 2014

குறையொன்றுமில்லை - திரைக்காவியம்

ஒரு திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும், எப்படி எடுக்கக் கூடாது என்பது பற்றி எல்லாம் எனக்கு உண்மையிலேயே தெரியாது. ஆனால் எப்படி ஒரு திரைப்படத்தை ரசிக்க வேண்டும் என எனக்கு நன்றாகத் தெரியும். தமிழ் படங்களில் பாடல்களை வெறுத்து ஒதுக்கும் நான் இந்த படத்தில் பாடல்களை, பாடல்களை படம் எடுத்த விதம் தனை சற்று உன்னிப்பாகவே கவனித்தேன். பாடலாசிரியருக்கும், இசை அமைப்பாளருக்கும், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கும்  என் உளம் கனிந்த வாழ்த்துக்கள். வெகு பிரமாதம். ஒரே ஒரு பாடல் மட்டும் எல்லாம் நடந்து முடிவது போல வழக்கமான சினிமா இருக்கத்தான் செய்கிறது. எனினும்...

படம் ஆரம்பித்து படம் முடியும் வரை ஏதோ ஒன்று வெகுவாக நெருடிக்கொண்டே இருந்தது. சில படங்களின் பாதிப்பு வெகுவாகவே என்னுள் ஏற்படும். பல வருடங்கள் பின்னர் நான் பார்த்த படங்களில் இந்த குறையொன்றுமில்லை படம் என்னுள் பாதிப்பு ஏற்படுத்திய படங்களில் ஒன்று. தமிழ் படங்களில் வணிகத்தை முன்னிறுத்தி ஆறு பாடல்கள் நான்கு சண்டைகள் எனும் கட்டமைப்பை உடைத்து இதுபோன்ற படங்கள் அத்திப்பூத்தாற்போல் வந்து சேர்கின்றன.

இந்த படத்தின் கரு எப்படியோ அதே நிலைதான் இந்த படத்தின் உண்மையான நிலையும். தயாரிப்பாளர்கள் இந்த படத்தை அதிக விலை கொடுத்து விற்க முற்பட்டு இருந்தாலும் எந்தவொரு விநியோகஸ்தர்களும் படம் நல்லா இருக்கு ஆனால் ஓடுமானு தெரியலை என சொல்லி இருப்பார்கள். இப்போதெல்லாம் படம் பல நாட்கள் ஓடும் வழக்கம்தனை  தமிழ் திரையுலகம் மறந்து கொண்டு இருக்கிறது. படம் வெளியான மூன்றே நாட்களில் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். வணிக வெற்றி தான் ஒரு படத்தின் வெற்றி என தமிழ் திரையுலகம் தலையில் வைத்து கொண்டாட தொடங்கிய காலம் எப்போதும் மாறப்போவதில்லை.

ஸ்டார் வேல்யூ என்பதுதான் தமிழ் திரையுலகின் சாபக்கேடு. 'பெரிய' நடிகர்கள் 'பெரிய' இயக்குனர்கள் என தமிழ் திரையுலகம் போற்றி களித்திருக்கட்டும். நல்லதுதான். அதே வேளையில் இது போன்ற திரைக்காவியங்களை தமிழ் திரையுலகம் புறக்கணிக்கக் கூடாது. அவ்வப்போது அருமையான படங்களை வெளியிடும் இயக்குனர்களை தயாரிப்பாளார்களை உற்சாகமூட்டும் அளவிற்கேனும் அவர்களுக்கு வருவாய் கிடைத்தாலே போதும்.

இந்த படத்தின் திரைக்கதை ஒரு நாவலை போல பயணிக்கிறது. ஒரு புத்தகம் வாசிக்கும் வாசகன் பக்கங்களை வேகமாக புரட்டிவிட நினைக்காத புத்தகம் போல சினிமாவிற்கு எனும் யுக்தியோடு திரைக்கதை அமைந்து இருக்கிறது. படம் நிதானமாகவே நகர்கிறது. அவசர உலகில் சாப்பிடுவதற்கே அள்ளிப்போட்டு கொண்டு ஓடும் மனநிலை கொண்ட மக்கள் மத்தியில் நிதானம் எல்லாம் எப்போது வரப்போகிறது. எதிலும் ஒரு அவசரம், எதிலும் புரிதலின்மை என வாழ்க்கை கழிந்து கொண்டு இருக்கிறது.

விவசாயம் அதன் மூலம் அந்த மக்கள் அடையும் தன்னிறைவு தாண்டிய ஒரு நிலையை குறையின்றி சொல்ல முற்பட்டு இருக்கிறார் கார்த்திக் ரவி. வாழ்த்துக்கள். படத்தில் அடுத்தவர்களை கேலி பேசி அடி கொடுத்து அடி வாங்கி எனும் கோமாளித்தனமற்ற நகைச்சுவை காட்சிகள் ஆங்காங்கே புன்னகையை வரவழைத்து போகிறது. வறட்டு பிடிவாதம் முரட்டு பிடிவாதம், புதுமைக்கு செல்லும் தயக்கம் என யதார்த்த வாழ்வை மிகவும் அழகாகவே படம் பிடித்து இருக்கிறார்கள்.

எனது கிராமத்தில் எனது தாத்தா கடை ஒன்று இருக்கிறது. அங்குதான் வத்தல், பருத்தி என சென்று விவசாயிகள் கூலியாட்கள் கொண்டு போடுவார்கள். அவர்களுக்கு தாத்தா ஒரு விலை நிர்ணயம் செய்வார். ஓரளவு எல்லாம் சேர்ந்தபின்னர் மாட்டு வண்டி, டிராக்டர் என விருதுநகருக்கு அவ்வளவும் கொண்டு சென்று ஒரு கமிசன் மண்டியில் கொண்டு சேர்ப்பார். அங்கே கமிசன்காரர் ஒரு விலை நிர்ணயம் செய்வார். பின்னர் அங்கிருந்து அவை வெவ்வேறு இடங்களுக்கு செல்லும். இப்போதும் கூட கிராமத்தில் விளைபவைகள் எல்லாம் அருகில் உள்ள நகரங்களுக்கு நேரடியாக கொண்டு சென்று விற்று வரும் வழக்கமே உள்ளது. ஒரு மூட்டை கத்தரிக்காய் இவ்வளவு விலை எனபது போன்று நிர்ணயம் செய்யப்படும்.

பெரிய விவசாய குடும்பத்தில் பிறந்தாலும் எனது விவசாய பணி என்பது நீர் பாய்ச்சுவது, வேலையாட்களுக்கு சாப்பாடு கொண்டு செல்வது என்பதோடு முடிந்தது. மற்றபடி இதுவரை இந்த வியாபார நுணுக்கம் எல்லாம் சென்று நேரடியாக பார்த்தது இல்லை. எங்கள் ஊரில் இன்னும் விவசாயம் நடந்து கொண்டு இருக்கிறது. ஆட்கள் தான் கிடைக்கமாட்டேன்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு போதிய பணம் இல்லாத காரணத்தினால் அவர்கள் வாழ்க்கையை சீரமைக்க முடியவில்லை என்றாலும் குடிப்பழக்கங்கள் புகைப்பழக்கங்கள் சீரழித்து விடுகின்றன. முறையாக விவசாயம் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் ஆனால் விவசாயம் என்பது வானம் பார்த்த பூமி. மழை பொய்த்தால் எல்லாம் பொய்க்கும். எப்படி விலங்குகள் தங்களுக்கு தேவையானதை சேகரித்து கொள்கிறதோ அது போல மழை இல்லாமலும் வரும் விவசாயம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

கதைநாயகன் கதைநாயகி என படத்தின் காதல் காட்சிகள் அட! முதலிலேயே கதைநாயகனின் குண நலன்களை ஒரு காதல் காட்சியில் சொல்லி விடுகிறார்கள். புதிய விஷயத்தை சாதிக்க நினைக்கும் எவருடைய குணமும் அப்படித்தான் இருக்கும். இந்த உலகில் எதையும் சாதிக்க வேண்டும் எனில் திறமை மட்டும் போதாது எவரேனும் அதை ஊக்குவித்தால் மட்டுமே இயலும். மிக இயல்பாக ஒரு திரைப்படம் செல்கிறது. நமது கனவுதனை வேறு ஒருவர் காண இயலாவிட்டாலும் நமது கனவுக்கு சரி என சொல்ல ஒருவர் போதும்.

படத்தில் பர்மிங்க்ஹாம் நகரம், லண்டன் நகரம் எல்லாம் கதைநாயகியின் தயவால் வந்து போகிறது. இந்த நகரங்களின் ஒளிப்பெருக்கை விட தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தின் ரம்யமான காட்சிகள் மனதை வருடிச் செல்கின்றன. கிராம வளர்ச்சி என சில வருடங்கள் முன்னர் ஒரு சிறுகதை எழுதி இருந்தேன். அந்த கதையின் நாயகன் கிராமத்திற்கு சென்று மருத்துவ பயிற்சி பெற வேண்டும். அந்த கதையை நினைவுபடுத்துவது போல இந்த கதைநாயகியின் மருத்துவ சேவை. அதையொட்டிய விவசாயிகள் கடன் பட்டு படும் தொல்லைகள் தற்கொலைகள், கதாநாயகனின் நண்பனின் தங்கை கல்யாணம் பண்ண இயலாது என நினைத்து தற்கொலை பண்ண முயலும் காட்சி என விவசாயியின் துயரம். புதிய விஷயம் நமக்கு சரிப்பட்டு வருமா என யோசிக்கும் ஊர்க்காரர்கள்.

பணத்தை தந்தால் என்ன பண்ணுவீர்கள் என மிகவும் இயல்பாக எடுக்கப்பட்ட காட்சிகள். புதிய விஷயத்தை கொண்டு வர பெரிய நிறுவனங்கள் லாப கணக்குதனை மனதில் வைத்து புறம் தள்ளும் முயற்சிகள் என ஒரு யதார்த்தமான சூழலை இந்த படம் சொல்லிச்செல்கிறது. இப்போதெல்லாம் நிறைய தமிழ் குறும்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த படம் தமிழ் குறும்படங்களின் ஒரு நீட்சி என சொல்லலாம். ஒரு சமூகம் முன்னேற எவரெவர் தடை இருப்பார்கள் என அழகாகவே சித்தரித்து இருக்கிறார்கள்.

ஜிகர்தண்டா, அஞ்சான், கத்தி, பூஜை போன்ற படங்கள் மத்தியில் இது போன்ற படங்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பது வெகு கடினம். அடுத்தவர் கவலையை படுவதற்கு நமக்கே நேரம் கிடையாது என்பதுடன் அல்லாமல் சினிமா ஒரு பொழுதுபோக்கு அதில் இப்படி எல்லாம் எடுத்தால் எவர் பார்ப்பார்கள் என்கிற மனப்பக்குவமும் இருக்கத்தான் செய்யும். தமிழில் இது போன்ற படங்கள் எல்லாம் விருதுக்குரிய படங்கள் என ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் இதுபோன்ற படங்கள் நிச்சயம் தொடர்ந்து வெளிவர வேண்டும்.

படம் முழுக்க காதல் ததும்பி வழிகிறது, அத்தோடு உணர்வுப்பூர்வமான காட்சிகளும். குறையொன்றுமில்லை மிகவும் சிறப்பான தமிழ் சினிமா. இந்த திரைப்பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Wednesday 5 November 2014

கனவில் வந்தனையோ ஆண்டாள்

ஆண்டாளின் வார்த்தைகள் மீது ஒரு தீராத ஆசை. அதிலும் எற்றைக்கும் என வரிகள் வாசிக்க ஆரம்பித்தால் அப்படியே ஒரு தனி அறையில் சென்று அமரத் தோணும். 

இந்த ஆண்டாள் மீது இத்தனை ஆசை வர காரணம் அவள் கொண்ட அந்த பரந்தாமன் காதல் தான்.  ஒரு மாட வீதி தென்படுகிறது. அந்த மாட வீதியில் கூரைப்பட்டு சேலை உடுத்திய வண்ணம் ஆண்டாள் வந்தாள். அவளிடம் என்னை காதலிக்க கூடாதா என்று கேட்டேன். என்னை உன்னால் காதலிக்க முடியுமா யோசி என்றாள். 

நண்பர்களிடம் ஆண்டாள் காதல் குறித்து பெருங்கவலை கொண்டு இருந்தேன். எல்லோரும் ஆண்டாளை பைத்தியம் என்றார்கள் என்னால் அப்படி சொல்ல இயலவில்லை. பெரியாழ்வாரிடம் சென்று உங்கள் பெண்ணை எனக்கு மணம் முடித்து தாருங்கள் என கேட்டேன். மானிடனுக்கு வாக்கப்படமாட்டேன் என சொல்லிவிட்டாளே என்றார். 

மற்றொரு நாள் ஆண்டாளை சந்தித்தபோது நீ கொண்டிருக்கும் காதல் மாயையானது அறிந்து கொள் என்றேன். நான் காண்பவை உன் கண்களுக்கு தெரியாது என்றாள். பெரியாழ்வாரிடம் சென்று நீங்கள் ஆண்டாளை சரியாக வளர்க்கவில்லை, இதுவே ஒரு தாய் இருந்து இருந்தால் இப்படியாகுமா என்றேன். வேதனையுற்றார். 

என் பெற்றோர்களிடம் ஆண்டாள் குறித்து என் துயரத்தை சொன்னால் அந்த பொண்ணு வாங்கி வந்த வரம் என்றார்கள். என்னால் ஏற்க முடியவில்லை. ஆண்டாளின் தோழிகளிடம் சென்று என் ஆசையை கூறினேன். அந்த தோழிகள் எல்லாம் என்னை ஏளனமாக பார்த்தார்கள். அவள் காதல் உனக்கு இளப்பமா என்றார்கள். 

ஒருநாள் திருவில்லிபுத்தூர் கோவில் வாசலில் நிறு இருந்தபோது ஆண்டாள் வந்தாள் .சிலையாக நிற்பதுதான் உன் காதலனா என்றேன், உயிராக என்னுள் வசிப்பவன் என்றாள். எவரேனும் ஆண்டாளுக்கு அவள் கொண்ட காதல் முறையற்றது என் எடுத்து சொல்லமாட்டார்களா என ஏங்கி  தவித்த எனக்கு நான்தான் முறையற்றவன் என்றார்கள். 

ஆண்டாளின் பிடிவாதமான போக்கு என்னுள் பெரும் அச்சத்தை விளைவித்தது. ஆண்டாளிடம் என் மனக்குமுறல்கள் சொல்லி முடித்தேன். . நாராயணனே பறைதருவான் என்றாள் . பெரியாழ்வாரிடம் நீங்களாவது எடுத்து சொல்லுங்கள் என மன்றாடினேன். ஸ்ரீரங்கத்து ரெங்கமன்னார் மாப்பிள்ளை என்றார். 

ஆண்டாளிடம் சென்று, ஆண்டாள் அந்த நாராயணனை மணம்  முடிக்க நீ மானிட பிறவி கொண்டது பிழை அல்லவா? ஒரு பரமாத்மாவை உன் காதலுக்காக ஜீவாத்மாவாக்கிட நீ துணிந்தது குற்றம் என்றேன். 

என் வார்த்தைகள் கேட்டு வெகுண்டெழுந்தாள். என் காதலை பழித்து கூற உனக்கு என்ன யோக்யதை இருக்கிறது, போ முதலில் காதலித்து பார் என்றாள்  

எந்திரிடா இன்னைக்கு பொண்ணு பார்க்க போகணும் என அம்மா என்னை எழுப்பிக் கொண்டு இருந்தார். 

நீ மட்டும் இன்றும் மாறாத ஆச்சரியம்

Tuesday 4 November 2014

கதைத் திருடன்

அன்புக்குரிய மதுசூதனபெருமாள்

எனதருமை நண்பா
எப்படி இருக்கின்றாய்
என்னை உனக்கு இன்னமும்
நினைவு இருக்கிறதா?

இரண்டு மாதங்கள் முன்னர்
இருள்  ஒன்றை பொருட்படுத்தாது
இரண்டு மணி நேரம்
சாலைகளின் பயம் கடந்து
நிறையவே சிந்தித்த கதை ஒன்றை
உன்னிடம் கொண்டு வந்தேன்
எந்த மண்டபத்தில் எழுதி
வாங்கி வந்தாய் என்றே
ஏளனமாக என்னைக் கேட்டாய்

படித்துப் பார் என சொல்லிவிட்டு
கதை எப்படி என்றே உன்னிடம்
கருத்து ஒன்றை கேட்டேன்
குப்பையில் தூக்கிப் போடு
என என் மனதை நீயும்
கசக்கி எறிந்தாய்

பழக்கமான நீயே இப்படி
சொன்னபிறகு எவரிடம்
இந்த கதையை கொண்டு
காண்பிப்பது என உன்னிடமே
இருளோடு மனம் இருள
விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்

அடுத்த ஒரு அற்புதமான சிந்தனை
என புதிய கதை ஒன்றை
எழுதி உன்னிடம் தந்தேன்
எந்த மண்டபத்தில் என்ற
அதே கேள்வியும் குப்பை என்ற
அதே பதிலும் நீ சொன்னாய்

மனம் உடைந்து உன்னிடமே
அந்த கதையையும் ஒப்படைத்து வந்தேன்
இன்னுமொரு கதை சிந்திக்க
இரவு பகல் பாராது முற்பட்டேன்
நீ நன்றாக இருக்கிறது
என சொல்லும்வரை என் முயற்சி
முடங்குவதில்லை உறுதி கொண்டேன்

உன்னை வந்து பார்த்த
மூன்றாவது வாரத்தில்
என் வீட்டு கோபாலன்
எப்போதும் போல என்னிடம் ஒரு
வார இதழ் கொண்டு வந்து
தந்துவிட்டு போனான்
அதில் வந்த கதை ஒன்றை
வாசிக்கையில் உன் பெயர் போட்டு இருந்தது
நான் எழுதி நீ குப்பை
என்று ஒதுக்கிய கதை

கோபாலன் மறுவாரம் வந்து
தந்துவிட்டு போன வார இதழில்
அதில் வந்த கதை
நான் எழுதி நீ குப்பை என
ஒதுக்கிய இரண்டாவது கதை
உன் பெயர் போட்டு

பெற்ற பிள்ளையை
தாயின் அனுமதியின்றி
தத்து கொடுத்தது போல
வார இதழில்
என் கதைகளில் உன் பெயர் கண்டு 
பரிதவித்து போனேன்

அன்றே புதிய கதையுடன்
உன்னை சந்தித்தேன்
நீயும் வழக்கம் போல கேள்வியும்
நிராகரிப்பும் செய்தாய்
வார இதழ்கள் காட்டி
என்ன இது என்றேன்
எனது கதை தான்
எனக்கான புனைப்பெயர்
உனது பெயர் என்றாய்
மன்னித்துவிடு என நீ
என்னிடம் மன்றாடினாய்
பழகிய பழக்கத்திற்கு
பரிதவிப்புடன் நானும்
வீடு வந்து சேர்ந்தேன்


இந்த முறையும் நீ குப்பை
என நிராகரித்த கதையை
நானே அதே வார இதழுக்கு
உனது பெயர் பொறித்து
அனுப்பி வைத்தேன்
முகவரி மாற்றிய விபரம் குறித்து


கோபாலன்
வார வாரம் என்னிடம்
உன் பெயர் பொறித்த
குப்பை கதை சுமந்து
வரும் வார இதழுடன்
வந்து போகிறான்
அதில் உனக்கான பெயரும் பணமும்
எனக்கான அங்கீகரிக்கப்பட்ட
சின்னதொரு திருப்தியும்

அன்புடன்
சீனிவாசபெருமாள்

Thursday 23 October 2014

பாரதி' யார்? - வேடிக்கை மனிதனா நீ

'நல்லதோர் வீணை செய்தே' என்ற வரிகளை கேட்டதும் எப்படி இருக்கும் என எழுத்தில் வைக்க முடிவதில்லை. ஆம், இந்த வரிகளுக்கு சொந்தகாரர் மகாகவி பாரதியார் தான். மகாகவியின் கவிதைகள் மட்டுமே தெரிந்த நமக்கு அவரின் வாழ்க்கை பற்றி தெரிவதில்லை, தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.

பொது நலத்திற்காக தன்னை அர்பணித்து கொள்பவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பது என்னவோ உண்மை. மகாகவி பாரதியாரின் வாழ்க்கை குறித்து பலருக்குத் தெரிந்து இருக்காது.

''பாரதி கஞ்சா அடிப்பார்'' என்று சொன்ன நண்பனை நான் கோபத்துடன் பார்த்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. பாரதியின் வரிகளில் நான் வாழ்ந்து வந்து இருக்கிறேன். ''சென்றதினி மீளாது மூடரே'' என்பது எனக்கு அத்தனை பிரியம். பாரதியின் கவிதை வரிகளை ரசித்து ரசித்து பழகிய நான் பாரதியை ஒருபோதும் தவறாக நினைத்தது இல்லை, நினைக்கப்போவதும் இல்லை.

காதல் வரிகளில் கூட பாரதியை போல எந்த ஒரு கவிஞனும் எழுத முடிவதில்லை. ''காற்று வெளியிடை கண்ணம்மா'' என்பதை விட எனக்கு ''நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா'' கொள்ளைப்பிரியம். எத்தனை கவிதைகள். அதுவும் ''காக்கைச் சிறகினிலே நந்தலாலா'' பாடிக்கொண்டே இருக்கலாம்.

இந்த பாரதி கஞ்சா அடிப்பார் என்று கேள்விப்பட்ட தினம் முதல் எனக்கு அதுகுறித்து அக்கறை இருந்தது இல்லை. ஆனால் பாரதி குறித்து தேடி தேடி படித்த விசயங்கள் பல உண்டு. பாரதியார் குறித்து படம் வந்தபோது பாரதியாரின் பெருமை சிதைந்து போகாமல் பார்த்துக் கொண்டார்கள்.

எனக்கு பாரதியாரின் வாழ்க்கையை குறித்து எவரிடமும் பேசப் பிடிப்பது இல்லை. அவரது கவிதைகள் எனக்கு போதுமானதாக இருந்தது.

''அக்கினி குஞ்சொன்று'' பற்றி இங்கே எழுதி இருக்கிறேன். பாரதியாருடன் நண்பராக வாழ்ந்து இருக்கலாமோ என்ற ஆசை எனக்குள் எப்போதும் இருப்பது உண்டு. ''வேடிக்கை மனிதன் என'' எத்தனை பேர் இதனை பாடி இருப்பார்கள்.

-------

பாரதி குறித்து ஓ சோமசுந்தரம் இப்படி எழுதுகிறார். ''படைப்பாளிகள் சில பொருட்களை உபயோகிப்பார்கள், அதில் பாரதியை பற்றி இங்கே எடுத்துக்கொள்கிறேன்''. கவிஞர்கள் , படைப்பாளிகள் அவர்களது படைப்புகளால் இறவா தன்மை அடைகிறார்கள். அதில் பலர் ஆல்ஹகால் போன்ற போதைப் பொருள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். அறிவார்ந்த தன்மைக்கும், இப்படி பொருட்கள் எடுத்துக் கொள்வதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான சுப்பிரமணி பாரதியாரின் வாழ்க்கையை இங்கே பார்க்க இருக்கிறோம். பாரதியாரின் கவிதையில் என்னதான் இல்லை? பாரதியாரின் தந்தை சின்னசாமி ஐயர் எட்டயபுர அவையில் முக்கிய நபராக இருந்தார். பாரதி எனும் பட்டம் கவிதைகளால் தமிழ்ப்புலமையால் கிடைத்தது.

பாரதியின் தந்தை இறந்த பின்னர் அரசவை ராஜாவுக்கு பாரதியின் மீது பற்று உண்டாகியது. இந்த ராஜா தான் பாரதிக்கு போதைப் பொருள் பழக்கத்தை உண்டுபண்ணியவர். அவர் கொடுத்த பூரநதி லேகியம் கஞ்சா போன்ற பொருட்களை கொண்டது. இதை நீ அருந்தினால் உனக்கு நல்ல பலம் வரும். ஆனால் இதை நம்பி பாரதி தொடர்ந்தாரா என தெரியாது. ஆனால் இதுதான் பாரதிக்கு முதன் முதலில் கொடுக்கப்பட்ட போதைப் பொருள்.

அரசவை ராஜா பாரதியை வாரணாசிக்கு அனுப்பி சமஸ்கிருதம், ஆங்கிலம் என புலமை பெற உதவி செய்தார். அரசவையில் இருந்து விலகி மதுரையில் ஆசிரியராக பணியாற்றி சென்னை சென்று சுதேசமித்திரன் நாளிதழ் சேர்ந்து  பின்னர் இந்தியா பத்திரிகை என ஆரம்பித்து அதில் தனது கவிதைகள் வெளியிட்டார். பாரதியின் வ உ சி உடன் பழக்கமும் வ உ சியின் சுதேசி இயக்கம் அதனால் வ உ சி அடைந்த துயரம் பாரதியை வெகுவாக பாதித்தது.

பாலகங்காதர திலகருடன் இணைந்து பணியாற்றி அதன் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகளால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் (1908-1918) பாரதியார் பாண்டிசேரியில் இருந்தார். பெரும்பாலான கவிதைகள் பாஞ்சாலி சபதம் முதற்கொண்டு பக்தி பாடல்கள் கிருஷ்ணர் முருகர் சக்தி பாடல்கள் எல்லாம் அங்கே இயற்றப்பட்டன.

பாரதியாரின் பாண்டிசேரியில் உள்ள ஒரு சாமியாருடன் ஏற்பட்ட பழக்கம் மிகவும் சுவாரஸ்யமானது. பாரதியாரின் விடுதலை போராட்ட வேட்கையும் தமிழ் இலக்கியமும் மற்றும் இந்த சாமியார் பழக்கம் பாரதியாரை இந்த போதை உலகத்தில் மீண்டும் தள்ளி இருக்கலாம். அவரது இந்த சாமியாருடன் பழக்கமே பல பக்தி பாடல்கள் எழுத காரணமானது. அந்த சாமியாரும், பாரதியாரும் போதை பொருட்களை உபயோகப்படுத்தினர். சில வருடங்கள் போதை பொருட்கள் உபயோகத்தை நிறுத்தி இருந்த பாரதியார் 1911 ம் ஆண்டு போதை பொருட்களை மீண்டும் பாரதியார் உபயோகித்ததை பாண்டிசேரியில் கண்டு வ. ராமசாமி மிகவும் வருத்தம் கொண்டார். நடுஇரவு மருந்து, சாமக்கிரிகை,  என பாரதியார் அங்கே உள்ள வேலையாளை வாங்கி வர சொல்வார். ஆனால் பாரதியார் மீதான மரியாதையில் எதுவும் சொல்லவில்லை. இந்த சாமியார் தெருவில் படுத்து கிடப்பது, நாய்களுடன் சண்டை போடுவது போதை பொருட்கள் உட்கொள்வது  என்றே அவரது வாழ்வு இருந்து இருக்கிறது.

கடைசி மூன்று வருடங்கள் 1918-1921 பாரதியார் சென்னையில் தனது வாழ்நாளை செலவழித்தார். மகாத்மாவின் அகிம்சை செய்கை மகாகவியை புண்படுத்தியது. வ உ சி மகாத்மாவின் வழி பின்பற்ற பாரதி விடுதலை போராட்டத்தை ஒரு கட்டத்தில் கைவிடும் நிலைக்குப் போனார். பாரதியார் நிறைய போதை பொருட்கள் உபயோகித்த கால கட்டம் இதுதான். குள்ளசாமி சாமியாருடன் பாரதியை சென்னையில் கண்ட வ உ சி தன்னால் நம்ப இயலவில்லை. இது பாரதி தானா என்றே சந்தேகம் எழுந்தது. பொலிவிழந்து பாரதியார் காணப்பட்டார்.

வ உ சி , பாரதியாரும் அந்த குள்ளசாமி சாமியாரும் ஒரு பானத்தை அருந்திய பின்னர் அவர்களின் பேச்சு சத்தமாகவும் சுறுசுறுப்பாக உண்டுபண்ணியது கண்டார். வ உ சி என்ன என கேட்டார். அது என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும் மருந்து என்றே பாரதியார் பதில் அளித்தார். அடுத்த நாள் பாரதியார் அதை அருந்த, வ உ சி புரிந்து கொண்டார். மண்டயம் நண்பர் பாரதியாரின் நடவடிக்கையில் உள்ள மாற்றத்தை கண்டார். இந்த மூன்று வருடங்களில் பாரதியாரின் உடல்நிலை பெரிதும் மோசமாகியது.

கடைசி காலத்தில்  பண கஷ்டம் வந்தபோது எட்டயபுரம் ராஜாவிடம் கேட்க அவர் உதவ மறுத்துவிட்டார். ஜூலை 1921ல் யானை அவரை தூக்கி வீசியது. அங்கே இருந்த ஒருவர் அவரை காப்பாற்றினார். எந்த ஒரு மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் செப்டெம்பர் மாதம் பாரதியார் மரணம் அடைந்தார்.

ஓபியம், கஞ்சா பெருமளவில் அப்போது உபயோகிக்கப்பட்டது. பெதடின், ஹெராயின், மார்பின் கொடீன் போன்ற பொருட்கள் பின்னர் இவை இடங்களை பிடித்துக் கொண்டன. பாரதியாரின் மரணம் அவரது போதை பழக்கத்தால் ஏற்பட்டது என்பதை பலரால் ஏற்றுக்கொள்ள இயலாது. கண்ணதாசனுக்கு பெதடின் பழக்கம் இருந்தது என்பது பலருக்கு தெரியும். அவரது மரணம் கூட இந்த பெதடின் ஏற்படுத்தியதுதான். பல படைப்பாளிகள் குடிகார சிகாமணிகள்தான்.

பாரதியின் ''மோகத்தை கொன்று விடு'' என்பது  தன்னால் போதை பொருளை விட முடியாத நிலையில் கதறி அழுத  கவிதையாக கூட இருக்கலாம். பாரதிக்கு நல்ல நண்பர்கள்  வாய்க்காமல் போனார்கள். போதைப் பொருளுக்கு போதை மனதுக்கு அடிமையாகிவிட்டால் நல்ல நண்பர்கள் விலகிப் போவார்கள்.

பாரதி நீ மகாகவி
அப்படியே உன்னை
இவ்வுலகம் போற்றி மகிழட்டும்.  

போதை பொருட்கள் என்ன செய்யும் என்பதை படிக்க இங்கு பாருங்கள்.  

Wednesday 8 October 2014

எட்டப்பர்களும் விசுவாசிகளும் கொண்ட தமிழகம்

''நம்ம பையன் தான், அஞ்சு வயசில இருந்து நம்ம தோடத்தில வேலை பாக்கிறான். ஒரு வார்த்தை எதிர்த்து பேசமாட்டான், இப்ப கல்யாண வயசு வந்திருச்சி, அதான்  உன்  வீட்டு பொண்ணை இவனுக்கு கட்டி வைக்கலாம்னு மனசில தோணிச்சி, நீ என்ன சொல்ற''

''ஏன்டா உன் பொண்ணை அவனுக்கு கட்டி வைக்கிறது, ரொம்ப பகுமானமா அவனை கூட்டிட்டு இங்க வந்துட்ட, என் பொண்ணு என்ன அத்தனை இளக்காரமா போச்சாடா உனக்கு''

''விருப்பமில்லைன்னா விட்டுரு''

சோலையூர் கிராமத்து பண்ணை ராசு  பாலையூர் கிராமத்து பண்ணை முத்துவிடம் அவமானப்பட்டுத் திரும்பியது போல நினைத்துக் கொண்டார்.

''ஐயா, அவரை தீர்த்துருவோம்யா''

''எதுக்கு, உனக்கு பொண்ணு கொடுக்காத காரணத்துக்கா''

''உங்களை மட்டு மருவாதி இல்லாம பேசினதுக்குயா ''

''நாளைக்குள்ள  அவனை நம்ம தோட்டத்தில புதைச்சிரு''

''சரிங்கய்யா''

-----------------------

''காலையில பாலையூர் பண்ணை வீட்டுக்கு போயிருந்தோம்டா, அந்த பன்னிகிட்ட நம்ம பண்ணை எனக்கு பொண்ணு கேட்டாருடா, ஆனா அவன் மட்டு மருவாதை இல்லாம பேசிட்டான்டா, நம்ம பண்ணை அவரை தோட்டத்தில புதைக்க சொல்லிட்டாருடா''

''தனியாகவா இதை பண்ண போறடா''

''ஆமாடா''

''எத்தனை மணிக்குடா''

''ராத்திரி பன்னிரண்டு மணிக்குடா''

''கவனமா இருடா''

''இங்கே இருந்து இன்னைக்கு பத்து  மணிக்கு கிளம்பி போனா சரியா இருக்கும்டா''

''சரிடா''

எட்டுபாண்டியிடம் இந்த விஷயத்தை  மதியமே சொல்லிவைத்தான் சோலையூர் பண்ணை ராசுவின் விசுவாசி கோவிந்தன். கோவிந்தன் எட்டுபாண்டியிடம் எல்லா விசயங்களும் சொல்லும் வழக்கமுண்டு. இருவரும் ஒரு சோடுதான், ஆனால் தனக்கென ஒரு சிறு நிலத்தில் மட்டுமே வேலை பார்ப்பவன் எட்டுபாண்டி.
-------------------------

''பண்ணையார் இருக்குறாங்களா''

''என் பேரு எட்டுபாண்டி, சோலையூரில் இருந்து வரேன், ஐயாவைப் பார்க்கணும்''

''இருக்காரு, உள்ளே போங்க''

''ஐயா நான் சோலையூர் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்''

''என்ன விஷயம்''

''உங்களை இன்னைக்கு நைட்டு பன்னிரண்டு மணிக்கு எங்கூரு பண்ணை கொலை பண்ண திட்டமிட்டு இருக்காரு''

''என்ன சொல்ற நீ''

''நீங்க அவர் உங்களை கொல்றதுக்கு முன்னால அவரை ஒரு பத்தேகால் மணிக்கு கொன்னு போட்டுட்டா உங்களுக்கு உயிர் பாதுகாப்பு''

''அவ்வளவு தூரத்திற்கு துணிஞ்சிட்டானா அவன், சரி நீ போ, ஆனா இந்த விஷயத்தை வெளியில சொன்ன நீ உயிரோட இருக்கமாட்ட''

''நான் வெளியூர் போறேன் ஐயா, நாளன்னைக்கு தான் ஊருக்கு வருவேன்''

---------------------

''சுடுதண்ணி இங்க வாடா''

''சொல்லுங்கய்யா''

''சோலையூர் பண்ணையை இன்னைக்கு நைட்டு போட்டுத் தள்ளிரு, பத்தே கால் மணிக்கு,''

''சரிங்கய்யா''

---------------------

மணி இரவு பத்து.

''ஐயா, பத்திரமா இருங்க ஐயா, நான் என் வேலையை முடிச்சிட்டு வந்துருறேன்''

''கோவிந்தா, நீ பண்ணினதுக்கு எந்த ஆதாரமும் இல்லாம பாத்துக்க''

''சரிங்கய்யா''

---------------------

மணி இரவு பத்தேகால்

''ஐயா, ஐயா''

''என்ன கோவிந்தா அதுக்குள்ளார திரும்பி வந்துட்ட, எதுவும் மறந்துட்டியா''

''நான் கோவிந்தன் இல்லை, நான் பாலையூர் பண்ணையார் விசுவாசி சுடுதண்ணி''

''நீ எதுக்குடா இங்க வந்த...''

பண்ணை ராசுவின் கழுத்தில் கத்தி இறங்கியது. கதவைச் சாத்திவிட்டு பண்ணை ராசுவை தூக்கிக்கொண்டு பாலையூர் கிளம்பினான் சுடுதண்ணி.

----------------------

மணி இரவு பன்னிரண்டு

''ஐயா''

''சுடுதண்ணி போன காரியம் கச்சிதமா முடிஞ்சதா...''

பண்ணை முத்துவின் கழுத்தில் கத்தி இறங்கியது. கதவைச் சாத்திவிட்டு பண்ணை முத்துவை தூக்கிக்கொண்டு சோலையூர் கிளம்பினான் கோவிந்தன்.

------------------------

மறுநாள் காலை சோலையூர் பாலையூர் சோகத்தில் மூழ்கியது. கோவிந்தன் அழுதபடி இருந்தான். காவல் அதிகாரிகள் சுடுதண்ணியை கைது செய்தார்கள். எட்டுபாண்டியை காவல் அதிகாரிகள் தேட ஆரம்பித்து தகவல் சொல்ல சொல்லி இருந்தார்கள்''

இரண்டு நாட்கள் கழித்து ஊருக்குள் இரவில் வந்தான் எட்டுபாண்டி.

''கோவிந்தா, நம்ம பண்ணைக்கு என்னடா ஆச்சு''

''எங்கடா போயிருந்த''

''மதுரைக்கு''

''எதுக்குடா போயிருந்த''

''அக்கா, ஒரு பொண்ணு பார்த்து இருந்தாங்க''

''சொல்லுடா, நீதானடா பாலையூருக்கு தகவல் சொன்னது''

''இல்லைடா''

எட்டுபாண்டியின் கழுத்தில் கத்தி இறங்கியது.

------------------------

''எட்டுபாண்டியை எவனோ கொன்னுட்டாங்கே சார்''

கோவிந்தன் காவல் நிலையத்தில் புகார் தந்து கொண்டிருந்தான்.




Saturday 4 October 2014

அம்மா நான் சமைக்கிறேன்

ஏன்டா இப்படி உட்காந்துட்டு இருக்கே வந்து சாப்பிட்டு போ அம்மாவின் குரல் கேட்டது.

எனக்கு சாப்பாடு வேண்டாம்மா, அப்புறம் வந்து நான் சாப்பிடுறேன் என நான் மறுப்பு தெரிவித்தது அம்மாவுக்கு சங்கடமாக இருந்து இருக்கும்.

ஏன்டா இப்படி பண்ற, அப்படி என்ன தலை போற விசயம், உனக்காகத்தான் இவ்வளவு அவசரமா செஞ்சேன். இப்படி சாப்பிடாம போனா என்னடா அர்த்தம்.

அம்மா வந்து சாப்பிடுறேன் என அவசரமாக கிளம்பினேன். அம்மா அடுப்பங்கரையில் இருந்து எட்டி வந்து பார்த்தார். அவரது முகத்தில் கோபத்தை விட சோகம் இழையோடிக் கொண்டு இருந்தது. சரி கொடும்மா என வேக வேகமாக நாலு வாய் சாதம் அள்ளிப்போட்டேன். மெதுவா சாப்பிடுடா, விக்கிக்கிற போகுது.

அடுப்பங்கரையில் பெரும்பாலும் அம்மாவின் பொழுது கழியும். காலை சாப்பாடு, மதிய சாப்பாடு இரவு சாப்பாடு என அம்மா தினமும் சமைத்துக் கொண்டே இருப்பார். விறகு எரியும் அடுப்பில் அவரும் எரிந்து கொண்டு இருப்பார். அம்மாவுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைப்பேன் ஆனால் எனது அவசரம் எதுவும் செய்ய விடாது. எனக்கு சமைக்கத் தெரியாது. சாப்பிட மட்டுமே தெரியும். அதுவும் எனக்கு அம்மா தட்டில் சாப்பாடு எடுத்து வைத்தால் தான் நான் சாப்பிடுவேன். மறு சோறு வாங்கும் பழக்கம் இல்லை என்பதால் அம்மா நிறையவே சாப்பாடு எடுத்து வைப்பார்கள். நான் சாப்பிட்டால் தான் அவரது பசி அடங்கும்.

என்னடா விஷயம் எனும் அம்மாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என யோசிக்கும் முன்னரே ரகுராமை பார்க்கப்போறேன் என பொய் சொன்னேன். எதுவும் வேலை விசயமா என்று அம்மாவின் அடுத்த கேள்விக்கு என்னால் பதில் யோசிக்க  முடியவில்லை. வரசொல்லி இருந்தான்மா என சமாளித்து கிளம்பினேன்.

நான் சென்றபோது எதிர்பார்ப்புடன்  நின்று கொண்டிருந்தாள். என்னடா இவ்வளவு லேட்டு? வீட்டில சொன்னியா இல்லையா? எங்க அப்பாவும் அம்மாவும் நீ வேலைக்கு சேராம உன்னை கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஒரு காலுல நிக்கிறாங்க. எப்படா நீ வேலைக்கு போவ? எப்படா என்னை கல்யாணம் பண்ணுவ? என சோகமாக கேட்டாள். இப்போது பாவ்யாவின் ஊர் நகரம், எனது ஊர் இப்போதும் கிராமம்.

இன்னும் இல்லை பாவ்யா, எப்படி சொல்றதுன்னு தெரியலை. அப்பாவை நினைச்சாதான் பயமா இருக்கு என்றதும் பயப்படாதடா என்றாள்

இன்னும் ஒரு வாரத்தில் வேலை கிடைச்சிரும். அப்புறம் அப்பாகிட்ட நம்மளை பத்தி சொல்லிட்டு முடிவு சொல்றேன்.

எத்தனை வாரமா இதை சொல்லிட்டு இருக்க, எத்தனை இன்டர்வியூடா? டேய் நான் சாம்பாதிக் கிறேன்ல,  நீ சமைச்சி போடுடா  உனக்கு அதில என்னடா சிரமம். எனக்கு நீ சீக்கிரம் சொல்லு, உன்னைத்தவிர எனக்கு வேறு எவனோடயும் கல்யாணம் ஆகாது. மனசில வைச்சிக்கோ. இந்தா பணம், உன் அம்மாவோட பிறந்தநாளுக்கு சேலை வாங்கனும்னு சொன்னியே, இப்ப எனக்கு வேற வேலை இருக்கு. நாளைக்கு வந்தா கடையில வாங்கித்தாரேன். என் அம்மாவுக்கு தன்னோட பிறந்தநாள் எப்போது எத்தனை வயது என்று கூட தெரியாது.

பணத்தைக் கொடு, நானே போயி வாங்கிக்கிறேன்.

நல்ல பார்டர் போட்டது வாங்கிக்கொடு. நான் என்னோட வீட்டில சொல்லி சமாளிக்கிறேன். மனசு போட்டு குழப்பிக்காதே. சேலை வாங்கியதும் உன் அம்மாவோட ஒரு ரவிக்கை கொண்டு வா, அந்த சேலைக்கு ரவிக்கை தச்சி தரேன்.

அவள் செல்லும் பாதையை பார்த்துக் கொண்டே நின்றேன். சின்ன வயசு காதல். எனக்கு ஒன்று என்றால் துடிதுடித்து போவாள். என் மீது அவளுக்கு அத்தனை பிரியம். அவள் தைரியமாக அவளுடைய காதலை அவளது வீட்டில் சொல்லிவிட்டாள். எனக்கோ இந்த வேலையை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.

கடைக்கு செல்வதற்குமுன் ரகுராமை பார்த்துவிட்டு செல்லலாம் என சென்றேன்.

உனக்கு அடுத்த வாரம் வேலை ஆர்டர் வந்துரும். எல்லாம் சரி பண்ணிட்டேன். சந்தோசமா இரு.

நிசமாவா?

என் மேல உனக்கு நம்பிக்கையே இல்லைல. அடுத்த வாரம் வந்து பேசு என சொல்லிவிட்டு போனான்.

கடையில் சென்று சேலை  வாங்கினேன். அம்மாவுக்கு முதன் முதலில் வாங்கும் சேலை அதுவும் அவள் கொடுத்த பணத்தில். சேலையை வாங்கிக்கொண்டு வீட்டில் அம்மாவுக்குத் தெரியாமல் மறைத்து வைத்தேன்.

அம்மா எனக்கு அடுத்த வாரம் வேலை கிடைச்சிரும்னு ரகுராமன் சொன்னான்.

அம்மாவுக்கு சந்தோசமாக இருந்தது. இந்த தடவையாச்சும் உனக்கு வேலை கிடைக்கணும். அப்பாவுக்கும் முடியலைடா.

அம்மா நான் சமைக்கட்டுமா என அம்மாவிடம் கேட்டேன். அதற்கு அம்மா சிரித்துக் கொண்டே என்னடா இப்படி ஒரு விபரீத ஆசை.

வரப்போற பொண்ணுக்கு சமைக்கத் தெரியலைன்னா என்னம்மா பண்றது.

கல்யாணம் பண்ணிட்டா என்னை விட்டு போயிருவியாடா?

இல்லைம்மா, வேலைக்குப் போற பொண்ணு வந்தா நீதானம்மா சமைக்கணும், உன் வாழ்க்கை சமைச்சே கழிஞ்சிரும்

எனக்கு சமைக்கிறது, தோட்டம் போறதை விட்டா வேறு என்னடா தெரியும்? ஏன்டா பொண்ணு பார்த்துட்டியாடா?

அது வந்துமா...

அதான்டா பார்த்தேன். என்னைக்குமில்லாம சமைக்கிறது பத்தி பேசறன்னு

அம்மா, நம்ம ஊருல இருந்தாங்க பாவ்யா குடும்பம் அந்த  பொண்ணைதான் சின்ன வயசில இருந்து விரும்பறேன் அவளும் விரும்புறா அவங்க வீட்டில சொல்லிட்டா எனக்கு வேலை கிடைச்சா பேசலாம்னு அவங்க  வீட்டில சொல்லிட்டாங்க. அவ வேலைக்கு போறா உனக்கு வேலை கிடைக்கலைன்னா என்னடா நான் சம்பாதிக்கிறேன் நீ சமைச்சி போடுன்னு இன்னைக்கு சொன்னா.

அப்படினா நீ ரகுராமனை பார்க்கப் போகலை.

ரகுராமனைப் பார்த்துட்டுதான் வந்தேன்மா.

சபாஷ். அப்பாவின் வார்த்தையை கேட்டு திடுக்கிட்டு திரும்பினேன்.

சிவகாமி, நீ இவனுக்கு சமையல் கத்துக்கொடு, வரப்போற பொண்டாட்டிக்கு சமைச்சிப் போடட்டும்.

அப்பா அது வந்து...

நீ வேலை தேடு அப்புறமா அந்த பொண்ணு பத்தி பேசு என அப்பா சொல்லிவிட்டு போய்விட்டார்.

அம்மா, உனக்கு அப்பா கூடமாட சமைக்க உதவியே பண்ணினது இல்லையிலம்மா

ஏன்டா இப்படி, உன்னோட அக்காக்களே எனக்கு உதவி பண்ணினது இல்லை. நான் சமைச்சாத்தான் எனக்கு திருப்தி, உங்களுக்கு திருப்தி.

அடுத்த நாள் ஒரு ரவிக்கையை எடுத்து சென்று பாவ்யாவிடம் சேலையுடன் தந்தேன். நல்ல செலக்ஷ்சன்டா என்றாள். அப்பாவின் சம்மதம் என்னை ரகுராமனை தினமும் பார்த்து வர செய்தது. எனது நச்சரிப்பு தாங்காமல் நாளைக்கு வா என சொல்லி அனுப்பினான்.

அம்மாவின் ஐம்பாதவது பிறந்தநாளுக்கு  இன்னும் நான்கு நாள் மட்டுமே இருந்தது. பாவ்யாதான் எனக்கு ஒரு யோசனை சொன்னாள்

டேய் உன்னோட அம்மாவோட பிறந்தநாளை சூப்பரா செஞ்சா என்னடா?

பணத்துக்கு எங்க போவேன்?

என்கிட்டே இருக்குடா. உங்க அம்மாவோட நெருங்கிய தோழிகள் எல்லாரையும் கூப்பிடுவோம் உங்க அம்மாவுக்கு தெரியாம சர்ப்ரைசா வைப்போம்டா.

என் அம்மா ஊரை விட்டே வரமாட்டாங்க.

உன் வீட்டிலேயே வைப்போம்டா. நீயும் நானும் சமைக்கிறோம்டா. சரி என சொல்லிவிட்டு வந்தேன்.

ரகுராமனை சென்று பார்த்தேன். ரகுராமன் இந்தா வேலை ஆர்டர் என கையில் கொடுத்தான். அவன் கையை பிடித்து வணங்கினேன். எங்க வீட்டுக்கு இந்த சனிக்கிழமை விருந்துக்கு வந்துரு என சொன்னேன்.

அம்மாவின் நெருங்கிய தோழிகள் என நான்கு பேரில் இரண்டு பேர் ஊரில் இருந்தார்கள். மற்ற இரண்டு பேர் வேறு ஊரில் இருந்தார்கள். அவர்களை குடும்பத்தோடு வரச்சொல்லி இருந்தேன். அக்காக்கள், சித்தப்பா, சித்தி பெரியப்பா பெரியம்மா என நிறைய பேரை அழைத்துவிட்டேன். எனக்கு வேலை கிடைத்த சந்தோசத்தினை கொண்டாட நானே சமைக்க இருப்பதாக சொன்னேன். அம்மாவுக்கோ ஆச்சரியம்.

எங்கடா சமைக்க கத்துக்கிட்ட?

அந்த பொண்ணு  அன்னைக்கு வந்து சமைக்கிறேன்னு சொல்லி இருக்காம்மா.

இந்தாடா பணம் என அப்பா தந்தார்.

இரண்டு தினங்கள் கழிந்தது. பாவ்யா என்னை வரச்சொல்லி இருந்தாள்.

என்னடா உங்க அப்பா எங்க வீட்டுக்கு வந்துருந்தார்டா. உன்னோட வேலை கிடைச்ச விருந்துக்கு எங்களை எல்லாம் வரச்சொல்லி இருந்தார்டா.

அம்மாவின் பிறந்த தினம் அன்றுதான் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தேன். முன்னிரவே அம்மாவிடம் நாளை எனது நாள் என சொல்லி வைத்தேன்.  காலையில் எழுந்து கூட்டிப் பெருக்கி வாசல் தெளித்தேன். பாவ்யா அதிகாலை வந்து விட்டாள். அவளே கோலம் போட்டாள். 

நான் முதன் முதலில் வியந்த ஓவியம் கோலம்.

நானும் அவளும் சமைக்க ஆரம்பித்தோம். அம்மா உதவி செய்ய வந்தார்கள். அம்மா நீங்கள் இன்று ஓய்வு எடுக்கும் நாள் என சொல்லி வைத்தேன். நிறைய பேரு சாப்பிட வராங்கடா. ஏம்மா நீ நல்லா சமைப்பியா?

சாப்பிட்டுட்டு சொல்லுங்கத்தே என்றாள்.

சமையல் தயாராகி முடிந்தது. அம்மா வந்து ருசி பார்த்துவிட்டு பிரமாதம்டா என்றார்கள். உன் கைக்கு தங்க வளையல் போடணும்மா என்றார் அம்மா. அக்காக்கள் சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து சேர்ந்தார்கள். பாவ்யாவின் அப்பா அம்மாவும் வந்து இருந்தார்கள்.

ரகுராமனும் வந்து இருந்தான். எல்லோரும் அமர்ந்து இருக்க பாவ்யா என் அம்மாவை சாமி அறைக்கு அழைத்து சென்றாள். நானும் உடன் சென்று புது சேலையை ரவிக்கையை தந்தேன். அம்மா உனக்கு இன்னைக்கு ஐம்பாதவது பிறந்தநாள் அதனால்தான் இவ்வளவு ஏற்பாடும், பாவ்யாவோட யோசனை என்றேன்.

அம்மாவுக்கு இது எல்லாம் பழக்கம் இல்லை. பாவ்யா கேட்டுக்கொண்டதால் சிறிது நேரத்தில் புது சேலை ரவிக்கை அணிந்து வந்தார். அம்மாவின் ஐம்பாவது பிறந்தநாள் குறித்து அனைவருக்கும் சொன்னேன். அப்பா மெய்மறந்து நின்றார். அம்மா வெட்கம் கொண்டார்.

வேலை கிடைச்சிருக்குன்னு சொல்லி அம்மாவுக்கு சமைச்சி போட்டியா என எல்லோரும் அம்மாவை வாழ்த்திவிட்டு சாப்பிட்டுச் சென்றார்கள். அத்தனை பேரும் சாப்பாடு குறித்தும் அம்மாவின் பிறந்தநாள் குறித்தும் பேசினார்கள். அம்மாவுக்கு பெருமிதமாக இருந்தது.

------------------

எந்தவொரு பிறந்தநாளையும் கொண்டாடாமல் பிள்ளைகளுக்காக வாழ்ந்து முடித்துவிடும், தனது வாழ்க்கையை மட்டுமே முக்கியமாக்கி அம்மாவை மறந்து போகும் பிள்ளைகள் கொண்ட அம்மாக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். பாவ்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.









Wednesday 24 September 2014

கற்றறிந்த கயவர்கள்

ஒருவன்  தனது நண்பனிடம் சொல்லி தான் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி பரப்ப சொல்கிறான். அந்த நண்பனோ வற்புறுத்தலின் பேரில் அவனது நண்பன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தியை வெளியிடுகிறான். இதைப் படிக்கும் நபர்கள் சிலர் பதறுகிறார்கள். அவரவருக்கு எவ்வளவு வேலை இருக்கும், அதை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு செல்பேசியில் அழைக்கிறார்கள். அந்த செல்பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இதெல்லாம் ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் நடந்து இருக்கும். அதில் ஒரு சிலர் இப்படி நடந்து இருக்காது எனவும் சொல்கிறார்கள். எனக்கோ என்னை அறியாமல் ஒருவித படபடப்பு. எங்கள் ஊரில் எப்போதோ தற்கொலை செய்து கொண்ட அத்தனை நபர்களும் கண் முன் வந்து போகிறார்கள். இத்தனைக்கும் இந்த செய்தி வெளியிட சொல்லும் நபர் அவ்வப்போது நல்ல நல்ல விசயங்கள் எழுதக்கூடியவர்.

திடீரென் எழுத சொன்ன நபரே வந்து உண்மையை வெளியிடுகிறார். எனக்கு கோபம் அதுதான் அப்படி எழுத சொன்னேன். கோபம் வந்தால் மௌனமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் இப்படித்தான் அடுத்தவரை வருத்தம் கொள்ள வைக்கத் தோன்றும். அடப்பாவி, சே என உலகம் இது. என்ன உள்ளம் இது என்றே அந்த இடத்தை கடந்து போய்விடுகிறேன்.

இருப்பினும் அதனால் ஏற்பட்ட அந்த சில நிமிட மன அதிர்வுகளை அவன் உணர்ந்து கொள்ளப் போவதில்லை. எனக்கும் அவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, எழுத்துக்கு எழுதுவதோடு சரி. முகம் தெரியாத மனிதர்களுடன் என்ன அத்தனை பிடிமானம் வேண்டி கிடக்கிறது என எண்ணியபோது நல்லவரோ கெட்டவரோ ஒரு மனிதரின் மரண செய்தி எல்லோரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிடும். நாம் சாதாரண மனிதர்கள், ஞானிகள் அல்ல என்றே எழுத தோணியது. எவரேனும் அடிபட்டு கிடந்தால் கண்ணை திருப்பிக் கொள்ளும் உலகம் அல்ல இது. பதறிக்கொண்டு ஓடும் பாரதம் இன்னும் உள்ளது.

இணையம் என்பது எத்தனை அபாயகரமானது என்பது பலர் உயிருடன் இருக்கும்போதே இறந்து போனதாக செய்தி வெளியிடும் வக்கிரம் எண்ணம் கொண்டது.

மனிதர்களின் மரணம் என்பது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. மறுபிறப்பு என்பதெல்லாம் இருக்கட்டும். உடல் உறுப்புகளே வெட்டப்பட்ட பின்னர் மறுபிறப்பு எடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

இப்படி மரண நிகழ்வுகள் தொடர்பாக பல வதந்தி விசயங்கள் இந்த கற்றறிந்த கயவர்களால் பரப்பபடுகின்றன. இது ஒருவகையான மன வியாதி. இப்படி எத்தனையோ மனோ வியாதிகளுடன் பலர் இணையத்தில் வலம் வருகின்றனர். சிலரின் மனவியாதிக்கு பலர் அவஸ்தைபடுவதுதான் இந்த இணைய உலகம் கற்று தந்தது. 

போதும் உங்கள் வக்கிர விளையாட்டு கற்றறிந்த கயவர்களே. 


Sunday 21 September 2014

தமிழக திரையரங்குகள் (தியேட்டர்கள்)

இந்தியாவில் சில நாட்கள் - 11

சினிமா உயிர் மூச்சு என மொழி உயிர் மூச்சு என்பதை இடம்பெயரச் செய்துவிடும் அளவிற்கு தமிழகத்தில் சினிமா மோகம் நிறையவே உண்டு. எங்கள் கிராமத்தில் எல்லாம் சினிமா கொட்டகை எல்லாம் இல்லை. ஒன்று விருதுநகர் செல்ல வேண்டும் அல்லது அருப்புகோட்டை செல்ல வேண்டும். எனக்கு விபரம் தெரிந்து சிறு வயதில் விருதுநகர் சென்று திரைப்படம் பார்ப்பதுதான் வழக்கம்.

விழாக்காலங்களில் எங்கள் ஊரில் வெள்ளை திரை கட்டி சினிமா காட்டுவார்கள். அதுவும் எம்ஜிஆர் சிவாஜி படங்கள் அப்போது நிறைய. புழுதியில் அமர்ந்து அப்படியே உறங்கி என சினிமா பார்ப்பது ஒரு அருமையான தருணங்கள். அதுமட்டுமல்லாது மில் எனும் பக்கத்து ஊரில் அவ்வப்போது போடப்படும் படத்திற்காக கம்மாய் கரை தாண்டி சென்று பார்த்துவிட்டு நடு இரவில் மயானக்கரை தாண்டி வருவது எல்லாம் ஒரு சிலிர்ப்பான அனுபவங்கள்.

விருதுநகரில் ராஜலட்சுமி, அப்சரா, அமிர்தராஜ், சென்ட்ரல் இன்னும் சில தியேட்டர்கள். சென்ட்ரலில் அமிர்தராஜில் கட்டை இருக்கைகள் என்றே நினைக்கிறேன். ராஜலட்சுமி அப்சரா புதிய தியேட்டர்கள். இருக்கைகள் நன்றாக இருக்கும்.  ஐந்தாம் திருவிழா காலங்களில் சினிமா ஒரு அங்கம். இப்படி ஒருமுறை விருதுநகர் சென்று திரைப்படம் பார்த்துவிட்டு மழை பெய்ததால் சைக்கிளில் மண்பிடித்து கண்மாய் வழி வழியாக வீடு செல்ல முடியாமல் நாங்கள் நான்கு பேர் மல்லாங்கிணர் சென்று அங்கிருந்த தெரிந்த மருத்துவர் வீட்டில் சென்று தங்கினோம். அப்போது எல்லாம் வீடுகளில் தொலைபேசி இல்லை. தபால் அலுவலக வீடு மாமா வீட்டில் மட்டும் தொலைபேசி இருக்கும். அவர்களுக்குத்தான் எல்லா தகவல்களும் வந்து சேரும். நாங்களும் அவர்களுக்கு தகவல் சொல்லி நாங்கள் காலை வருகிறோம் வீட்டில் சொல்லிவிடுங்கள் என சொல்லி வைத்தோம்.

எங்கள் காலம், அவர் வீட்டில் சொல்ல மறந்து போனார். எங்களை இரவு ஆகியும் காணாமல் தேட ஆரம்பித்துவிட்டார்கள். மல்லாங்கிணர் டிராக்டர் மூலம் வந்து சேர நாங்கள் இருக்கும் இடம் அறிந்து பின்னர் அழைத்துச் சென்றார்கள். அந்த மாமாவுக்கு அடுத்த நாள் நல்ல திட்டு விழுந்தது. பின்னர் அருப்புக்கோட்டையில் படித்தபோது ஹாஸ்டலில் இருந்து சுவர் ஏறி சென்று படம் பார்த்த நண்பர்கள் பிடிபட்டு அடி வாங்கிய நிகழ்வுகள். மகாராணி, லட்சுமி தியேட்டர்கள் பரவாயில்லாத ரகம். எனக்கு ரஜினி படமே போதும் என்று இருக்கும். அதிகம் படம் எல்லாம் பார்ப்பது இல்லை. மதுரையில் படித்தபோது ரஜினி கமல் ரசிகர்கள் சண்டைகள் எல்லாம் எனக்கு வியப்பாக இருந்தது. எப்படி இப்படி இருக்கிறார்கள் என! எனக்கு படிப்பு மட்டுமே முக்கியமாக இருந்தது. இருப்பினும் கமல் ரசிகருடன் அவ்வப்போது ரஜினி கமல் பார்க்க சென்று விடுவது உண்டு.

மதுரையில் சினிப்ரியா, மினிப்ரியா என சில தியேட்டர்கள். ஆரப்பாளையம் அருகே சில தியேட்டர்கள். எல்லாம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். எப்போது படத்திற்கு கூப்பிட்டாலும் தலைவர் படம் வரட்டும் என சொல்லி எனது சினிமா ஆசையை காட்டுவேன். என்னை தனியாகவே விட்டுவிட்டு அவர்கள் படத்திற்கு செல்வார்கள். ஒத்தக்கடையில் ஒரு தியேட்டர். என்னை வலுக்கட்டாயமாக படத்திற்கு அழைத்து சென்றார்கள். என் வாழ்வில் முதன் முதலில் என்ன பார்க்கிறோம் என தெரியாமல் பார்த்த படம் அதுவாகத்தான் இருக்கும். குளியல் அறையில் பெண் என திடீரென ஒரு காட்சி வந்தது. என் நண்பன் என் அருகில் மாப்பிள்ளை அதுதான் அது என்றான். எது என்றேன் எதுவும் புரியாமல். அன்று முதல் என்னை சாமியார் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டான். வாழ்வில் அனுபவிக்க வேண்டியது நிறைய என்றார்கள். எனக்கு அந்த அந்த காலத்தில் அனுபவித்தால் போதாதா, இப்போது படிப்பு மட்டும் தானே என்றே சொன்னது உண்டு. அந்த தியேட்டர் கட்டை இருக்கை தான்.

சென்னையில் ஒரு வருடம் இருந்தபோது சில தியேட்டர்கள் போனது உண்டு. தியேட்டர்கள் நன்றாகவே இருக்கும். இப்படி எனது வாழ்வில் தியேட்டர்கள் மிகவும் குறைந்த பங்கே வகுத்து இருக்கின்றன அதுவும் ரஜினி, கமல், மணிரத்தினம் புண்ணியத்தில்.

இந்த முறை அருப்புகோட்டை தியேட்டர் ஒன்றில் அஞ்சான் படம் பார்க்க சென்று இருந்தோம். இருக்கைகள் கிழித்து எறியப்பட்டு இருந்தன. வெத்தலை எச்சில்கள் துப்பப்பட்டு இருந்தன. ஏசி என சொல்லிவிட்டு காத்தாடி சுற்றிக்கொண்டு இருந்தது. உள்ளே வெக்கையில் குளித்துக்கொண்டு இருந்தோம். படம் பார்க்கவே மனம் இல்லை. எப்படா படம் முடியும் வீடு போவோம் என இருந்தது. இதற்கு எங்கள் ஊர் மண்ணில் அமர்ந்து பார்த்தால் காற்றாவது நன்றாக வரும். இப்படி தியேட்டர் வைத்து இருந்தால் எப்படி மக்கள் படம் பார்க்க போவார்கள். சும்மா தியேட்டருக்கு வந்து பாருங்க பாருங்க என கத்தும் தியேட்டர் அதிபர்கள் கிராமப்புற தியேட்டர்களில் அக்கறை செலுத்துவது நல்லது, அப்படி இல்லையெனில் பேசாமல் திருமண மண்டபங்கள் கட்டிவிட்டுப் போகலாம். தியேட்டரில் படம் பார்க்க செல்பவர்கள் கொஞ்சம் கூட பொறுப்புணர்வு இல்லாமல் எச்சில் துப்புவது, இருக்கையை கிழிப்பது என நாகரிகமற்ற மனிதர்கள் மீதும் அதிக வெறுப்பு வந்தது. இவர்களுக்கு எல்லாம் கட்டை இருக்கைகள் தான் லாயக்கு.

சென்னையில் ஒரு தியேட்டர் போனோம். ஒரே இடத்தில் அங்கே கிட்டத்தட்ட பல திரையரங்குகள். அருப்புக்கோட்டையில் டிக்கெட் விலை நூறு ரூபாய், இங்கே நூற்றி இருபது ரூபாய். மிகவும் சுத்தமாக அருமையாக பராமரித்து இருந்தார்கள். மிகவும் உல்லாசமாக படம் பார்க்க முடிந்தது. எல்லா வசதிகளும் நகரங்களில் ஏற்படுத்தி கிராமப்புறங்கள் எல்லாம் கைவிடப்பட்டுவிட்டன போலவே காட்சி தந்தது. இருக்கைகள் வசதி எல்லாம் வெகு சிறப்பு. அதற்காக அருப்புகோட்டையில் இருந்து சென்னை வந்து படம் பார்த்தா செல்ல முடியும்?

திருட்டு விசிடி, படத்திருட்டு என எத்தனையோ விசயங்கள் சினிமாவை அழித்துக் கொண்டு இருக்கிறது என்பதை விட பராமரிக்கப்படாத திரையரங்குகள் கூட திரைப்படங்களை அழித்து விடும் தான்.

திரையரங்குகள் நாம் செல்லும் விருந்தினர் வீடு போல. போர்க்களம் செல்வது போலவா திரையரங்குக்கு செல்வது? திரையரங்குகள் பாதுகாக்கப்படுவது நல்ல சினிமாவை பாதுகாப்பது போலத்தான். கிராமப்புறத்து ரசிகர்கள் கவனத்தில் கொள்வார்களா?

(தொடரும்) 

Wednesday 17 September 2014

கேரள கடற்கரையில் ஓமனக்குட்டி

இந்தியாவில் சில நாட்கள் - 10

மலையாளம் என்றால் அது ஒருவகையான கிளுகிளுப்புதான். ஓமனே இந்தாளு எந்தா பறையிது என்ற வசனங்களும் கேரளா நாட்டு இளம்பெண்கள் குறித்த குறிப்புகளும் மலையாளப்படம் என்றால் இடைச்சேர்க்கைகளும் நிலவில் கூட நாயர் டீக்கடைகளும் என மலையாளம் கிளுகிளுப்புதான்.

கோவா செல்ல வேண்டும் எனும் திட்டம் அதிக விலையினால் தள்ளிப்போட்டுவிட்டு கேரளா செல்லலாம் என திட்டமிட்டோம். இந்தியா வரும் போதெல்லாம் கேரளா ஒரு இடம் பெற்று விடுகிறது. சென்ற இரண்டுமுறை படகுப்பயணம், படகு வீடு என கழித்தாகிவிட்டது. இந்த முறை கேரளா கடற்கரை செல்வோம் என செராய் கடற்கரை கொச்சின் நகர் அருகில் தெரிவு செய்தோம்.

கம்பம் வழியாக செல்வோம் என முடிவு செய்து கம்பத்தில் உள்ள உறவினர் வீடு சென்று அடைந்தோம். அப்போது மணி மதியம் ஒன்று. இரண்டு மணி போல கிளம்பி ஆறு மணிக்கு எல்லாம் செராய் கடற்கரை செல்வோம் என பயணித்தோம். மலைப்பாதை.

வாகனம் மிகவும் மெதுவாக பயணிக்கிறது. சாலையில் மலை விழுந்த சுவடுகள். பாதையை கூகிள் வழிகாட்டிக்கொண்டே வருகிறது. மலை என்பதால் அவ்வப்போது கூகிள் வழிகாட்டி தொலைந்து போகிறது. இப்படியாக மிகவும் குறுகிய பாதையில் பயணம். போகிறோம் போகிறோம் வழி வந்தபாடில்லை.

ஓரிடத்தில் வேறுபக்கம் திரும்பி சென்றிட அது மிகவும் கரடுமுரடான பாதை. அந்த பாதையில் செல்லும் வாகனம் மட்டுமே பயணிக்க இயலும். விழித்தோம். அப்போது ஒரு வாகனத்தில் வந்தவர்கள் எங்கள் வாகனத்தை நிறுத்த சொல்லி மலையாளத்தில் பேசினார்கள். குடித்து சிவந்து இருந்த கண்கள். வண்டியை நிறுத்து என என்ஜினை நிறுத்த சொல்லி எங்கே போகணும் என கொஞ்சம் கரடு முரடாகவே பேசினார்கள். என்ன கொடுமை இது என எண்ணிக்கொண்டே அவர்கள் கேட்பதற்கு பதில் சொல்ல மனம் மாறியவர்கள் செல்லுமிடத்திற்கு வழி சொன்னார்கள். அப்பாடா என நிம்மதியும் அங்கே இருந்து தப்பித்தால் போதும் என இருந்தது.

அங்கிருந்து திரும்பி மீண்டும் முக்கிய சாலையை அடைந்தபோதுதான் பெருமூச்சு வந்தது. அங்கே எல்லாம் வீடுகள் கட்டி குடியிருக்கும் மக்கள் வியப்பு அளித்தார்கள்.

ஒருவழியாய் செராய் கடற்கரை ஹோட்டல் அடைந்தபோது மணி ஒன்பது ஆகி இருந்தது. ஹோட்டல் நன்றாகத்தான் இருந்தது. இரவு சாப்பாடு அங்கேயே கிடைத்தது. ஹோட்டல் எதிரில் கடற்கரை. அலைகளின் ஆர்ப்பரிக்கும் சப்தம். இரவு கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்து இருந்தார்கள். அன்று தங்கிவிட்டு அடுத்தநாள் குருவாயூர் சென்றோம்.

அங்கே கோபுர தரிசனம் மட்டுமே. உள்ளே எல்லாம் செல்லவில்லை. ஓரிடத்தில் இருந்து ஓரிடம் செல்ல எத்தனை நேரம். குருவாயூர் பிரமாண்டமாக இருந்தது. மீண்டும் ஹோட்டல் வந்தோம். வந்ததும் போவதுமாக இருக்கிறதே என நினைத்தார்கள். கடற்கரையில் அன்று விளையாடினோம். முகம் அறிமுகமற்ற மனிதர்கள். சந்தோசத்தை இந்த கடற்கரை எப்படி மனதில் விதைத்துவிட்டு போகிறது.

திடீரென ஒரு அலை வந்து எங்களை தள்ளாட செய்தது. தப்பித்தோம் என ஹோட்டல் வந்ததும் மீண்டும் ஒருநாள் இருப்போம் என ஹோட்டலில் கேட்டோம். சரி காலையில் சொல்கிறோம் என சொன்னார்கள். காலையில் சரி என சொன்னதும் அங்கிருந்து நேராக கொச்சின் நகரம் சென்றோம். கொச்சினில் இருந்து ஹோட்டல் 24 கி.மீ எத்தனை நேரம். சாலை ஒன்றும் பிரமாதமாக இல்லை. சென்னை சில்க்ஸ் சென்றபோது அங்கே நிறைய மலையாள பெண்கள். அதில் நமது தமிழ்நாட்டு பையன்கள் கூட இருந்தார்கள். எவ்வித சங்கோஜமின்றி அந்த பெண்கள் பேசியது ஆச்சர்யம் இல்லை தான். எனக்குத்தான் என்ன பேசுவது என தெரியவில்லை.

யார், என்ன விபரம் கேட்டவர்கள் சோட்டனிக்கரை பகவதி அம்மன் சென்று வாருங்கள் என சொன்னார்கள். எந்தா பகவதி அம்மே. யேசுதாஸ் குரலில் ஒரு பாடலில் சோட்டனிக்கரை பகவதி அம்மன் பாட்டு கேட்டு இருந்தது நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து சோட்டனிக்கரை சென்றபோது இரவு  ஆகிவிட்டது.

கோவில்கள் எல்லாம் ஒரே மாதிரி இருந்தது. இந்த கோவில்கள் வட இந்திய புத்த மத பாணியில் அமைந்து இருந்தது. நமது கோபுர அமைப்பு எல்லாம் இல்லை. உள்ளே சென்றால் ஒரே அலறல் சத்தம். பெண்கள் சிவனே சிவனே என சப்தம் மீறிய ஆண்களின் சிவனே சிவனே சப்தம்.

நானும் அங்கே சென்று நின்றேன். திடீரென் எனது வலது கையில் ஒரு பெண்ணின் கூந்தல் விரிந்த தலை முட்டியது. திடுக்கிட்டு விட்டேன். அந்த பெண்ணை இருவர் பிடித்து இருந்தார்கள்.

பேய் இங்கே விரட்டுவார்கள் என சொன்னார்கள். அடப்பாவிகளா என் மீது அந்த ஓமனக்குட்டி மோதி மோகினி என்னுள் சென்றுவிடுமோ என அருகில் இருந்தவர் அச்சம் கொண்டார்கள். மோதப்பட்ட கை ஆடியது. இப்படித்தான் மனப்பிரமை பிடித்து ஐயோ என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என அலறி நோய்வாய்படுபவர்கள் அதிகம்.

இறைவனை தவிர அவதாரங்களை கூட நான் நம்புவதில்லை என்பதால் இதெல்லாம் ஒரு விசயமா என சொல்லிவைத்தேன். சில மணிநேரங்கள் என்னை மோகினியாக்க பார்த்தார்கள். எந்தா பகவதி அம்மே இந்த பிள்ளையை சோதிக்கினு என எண்ணிக்கொண்டு ஹோட்டல் வந்தோம். மீண்டும் இரவில் கடற்கரை சென்றோம். அங்கே இரண்டு காதலர்கள் தனியாய் அமர்ந்து இருந்தார்கள். அலைகளை அந்த இரவில் ரசித்துக்கொண்டு இருந்தார்கள். அவள் பேசியது அலையோடு கலந்து கொண்டு இருந்தது.

அந்த இரவில் கடற்கரை கடந்தோம் அந்த காதலர்களையும். கூட்டமாக எங்கேனும் தென்படுகிறார்களா என பாதுகாவலர் பார்த்துவிட்டே எங்களை வெளியில் அனுப்பினார். பாரதியின் வரிகள் தான் எத்தனை சுகமானவை. கேரளா ஒரு இனிய மாநிலம்.

(தொடரும்) 

Monday 15 September 2014

மாணிக்கவாசகரும் கோவில் கோபுரங்களும்

இந்தியாவில் சில நாட்கள் - 9

எனக்கு மாணிக்கவாசகர் மீது ஒரு தனிப்பிரியம் உண்டு. அவரது திருவாசகம் எனக்கு நிறையவே பிடிக்கும். எல்லாவற்றையும் வாசித்து முடித்து விட வேண்டுமென ஆவல் எழுந்தது. அப்படி வாசித்தபோது உருவானதுதான் அடியார்க்கெல்லாம் அடியார் எனும் நாவல்.

நரிகள் பரிகள், பிட்டுக்கு மண் சுமந்தது என பல கதைகள் படித்தாலும் அவர் பிறப்பிடம் பற்றி எல்லாம் அக்கறை தோணவில்லை. திருவாதவூர் எனும் ஊர் தான் அவர் பிறந்தது என அறிந்தபோது அது எங்கே இருக்கிறது என தேடுகையில் மதுரை அருகே அதுவும் திருமோகூர் வழி என சொன்னதும் ஆச்சர்யமாக இருந்தது.

நான்கு வருடங்கள் உத்தங்குடியில் படித்தபோது ஒத்தக்கடையில் சென்று அவ்வப்போது சாப்பிட்டு சனி தோறும் திருமோகூர் வரை சென்று வந்த நான் திருவாதவூர் சென்றதே இல்லை. இத்தனைக்கும் திருவாதவூர் பேருந்தில் தான் திருமோகூர் சென்று இருந்து இருப்பேன்.

எனக்கு இந்த திருவாதவூர் பற்றி பெரும் அக்கறை அப்போது இல்லைதான். இந்த முறை இந்தியா சென்றபோது திருமோகூர், திருவாதவூர் சென்று வர வேண்டும் என நினைத்து இருந்தேன்.

விடுமுறை நாட்கள் நெருங்கி முடிய திருவாதவூர் செல்ல முடியாதோ எனும் எண்ணம் மேலிட்டது. திருவரங்கம் சென்று அங்கே கோவில் பணிகள் பல பார்த்து, திருவரங்கமே மாறிப்போன ஆச்சர்யம் மறையாமல் திருவாதவூர் அடுத்த நாள் சென்றோம்.

திருமோகூர் கடந்து திருவாதவூர் சென்றபோது மணி பன்னிரண்டு. கோவில் நடை சாத்திவிட்டார்கள். மீண்டும் 4 மணிக்கு தான் திறப்போம் என சொன்னதும் கோபுரம் பார்த்து வணங்கிவிட்டு அங்கிருந்து மாணிக்கவாசகர் பிறந்த இடம் சென்றோம். அங்கே கோவில் கட்டப்பட்டு இருந்தது.

பூசாரி படுத்து இருந்தார், நாங்கள் சென்றதும் கதவை திறந்து தீபம் காட்டினார். அங்கே மாணிக்கவாசகர் குறித்தும் சிவபெருமான் குறித்தும் எழுதியதைப் படித்து பார்த்துவிட்டு பூசாரியிடம் மாணிக்கவாசகரின் உறவினர்கள் இன்னும் உண்டா என கேட்க அவரும் ஆச்சரியப்படாமல் இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் நடந்தது இப்போ இல்லை என்றார். எனது கிராமம் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் இப்போது அந்த கிராமத்தில் இல்லை, எனக்கு நெருங்கிய உறவினர்கள் எல்லாம் கிராமத்தை விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இருநூறு ஆண்டுகள் பின்னர் அந்த கிராமத்தில் என் உறவினர்கள் எவர் என எவரேனும் தேடி சென்றால் இதே பதில் கிடைக்கும்.

மாணிக்கவாசகரை பற்றி பிரமித்துவிட்டு திருமோகூர் வந்தோம், அங்கேயும் கோவில் மூடி இருந்தது. கோபுர தரிசனம் பார்த்துவிட்டு திரும்பினோம். நான் அடிக்கடி சொல்லும் கோபுரங்கள் தரிசித்தால் போதும் கடவுள் எங்கும் இருக்கிறார் என்பது. ஆனால் கோவிலுக்குள் செல்லாமல் வருவது சற்று இடைஞ்சல்தான்.

எதற்கு திருவாதவூர் செல்ல இத்தனை ஆசை கொண்டேன் என்றால் எல்லாம் அந்த மாணிக்கவாசகருக்குத்தான். சிவனும், விஷ்ணுவும் நினைத்துக்கொண்டார்கள் போல என் அடியாரை நீ வணங்கினால் என்னை வணங்குவதுபோல என.

அடியார்க்கெல்லாம் அடியார் கதையை விரைவில் முடித்துவிடுவேன் மாணிக்கவாசகர் துணையுடன்.

(தொடரும்)

Monday 8 September 2014

திருவரங்கனும் கோடி ரூபாயும்

இந்தியாவில் சில நாட்கள் - 8

எனக்கு ஶ்ரீரங்கம் மிகவும் பிடிக்கும். அங்கே இருக்கும் ஶ்ரீரங்கநாதனை இன்னும் பிடிக்கும். ஆண்டாளுக்குப் பிடித்த ஶ்ரீரங்கன் அல்லவா. காவிரி, மாம்பழ சாலை, திருவானைக்கோவில் என அத்தனை ஆசை. அங்கேயே தங்கி ஶ்ரீரங்கனை மட்டுமே சேவித்து வாழ்ந்து விட முதுமை ஆசை உண்டு.

சனிக்கிழமை ஶ்ரீரங்கனை காண கிளம்பினோம். திருப்பதியை காண திட்டமிடாத காரணத்தால் ஶ்ரீரங்கம் போயே ஆக வேண்டும் என சென்றோம். திருச்சியை அடைந்தபோது மணி 1.15 இனி நடை சாத்தப்பட்டு இருக்கும் என உறவினர்களை திருச்சியில் பார்த்துவிட்டு ஶ்ரீரங்கம் அஅடைந்தபோது மணி மாலை 4. கூட்டம் அதிகமாக இருந்தது. சற்று முன்வரை கூட்டம் இல்லை என சொன்னார்கள். ரூபாய் 50, 100 என வரிசை அதோடு நியாய வரிசை.

வாய்ப்புதனை பயன்படுத்தும் வசதி. 250 ரூபாய் வரிசை நின்றோம். அதுவே சற்று கூட்டம் தான். அவசரமாக சென்றுவர ஒரு வழி. ஓரிடத்திற்கு நடந்து போகலாம், சைக்கிள், மோட்டார் வாகனம் என பல உண்டு. அவரவர் விருப்பத்திற்கேற்ப, வசதிகேற்ப ஒன்றை பயன்படுத்துவோம் ஆனால் அதை எவரும் திட்டுவதில்லை. இறைவழிபாடு மட்டும் விதிவிலக்கு. எனக்கு பணம் கொடுத்து போவது குறித்து தர்மசங்கடமில்லை. சென்றோம். சிறிது நேரம் நன்றாக வணங்கிச் செல்ல அனுமதி தந்தார்கள்

இறைவன், பணம். கோவில் சுற்றி முடிக்க முடிக்க பணம் மட்டுமே பிரதானம். ஆனால் ஶ்ரீரங்கனே கதி என பணம் எல்லாம். பொருட்டல்ல என வாழ்பவரும் உண்டு. லண்டனில் கட்டும் கோவிலுக்கு வழி கொடு என வேண்டுதல்.

ஶ்ரீரங்கத்தில் எனது கனவில் சென்ற வருடம் வந்து பின் சிலநாளில் இறந்து போன சின்ன அத்தை குறித்து விசாரிக்கப்போனோம். இரண்டு வருடங்கள் முன்னர் என்னை திருமணத்தில் சந்தித்த அந்த அத்தை பாகவதர் போல நாமத்துடன் நான் இருந்தது கண்டு வீட்டுக்கு வந்து சொல்லி இருக்கிறார். அந்த வீட்டில் முருகனுக்கு கூட நாமத்தை இட்ட படம் இன்னும் உண்டு. பெரிய அத்தையிடம் பல வருடங்கள் முன் ஒருவர் கேட்க பாற்கடலை கடைந்தபோது ராமத்தை இடாதோர் எவர் என சொல்ல அவர் அமைதி ஆனாராம்.

மீண்டும் திருச்சி. மக்கள் கூட்டம், இம்முறை கடைகளில். ஒருவழியாக இரவு 11 மணி ஊர் வந்தோம். இரு தினங்கள் பின் சென்னைக்கு கிளம்பி வர ஶ்ரீரங்கத்தில் உள்ள ஒரு அண்ணன் திடீரென அழைத்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செக் உள்ளது, ஒருவர் தருகிறேன் என்றார். லண்டனில் உபயோகிக்கலாம், சரி என்றால் சென்னைக்கு வரச் சொல்கிறேன். அவர் ஆசையை கெடுப்பானேன் என சரி என்றேன். உண்மையா பொய்யா என கேட்டு சொல்கிறேன் என்றபோதே எனக்குப் புரிந்தது

அவரவே இல்லை.  இன்னும் மனிதர்கள் நம்பிக்கொண்டே இருக்கிறார்கள் இறைவன் முதற்கொண்டு இலவசமாக எவரேனும் உதவுவார்கள் என. இது பொருள் உலகம்

(தொடரும்)

Tuesday 2 September 2014

கிளி ஜோசியம்

இந்தியாவில் இனி சில நாட்கள் - 7

சென்றமுறை இந்தியா வந்தபோது கிளி ஜோசியம் பார்க்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி சுற்றி வந்தும் ஒரு கிளி ஜோசியரும் தென்படவில்லை. இம்முறையாவது கிளி ஜோசியம் பார்த்திட வேண்டுமென மதுரை வந்தோம்.

அதிசயமாக ஒரு கிளி ஜோதிடர் அமர்ந்து இருந்தார். ஆள் பார்க்க தாடி வைத்து, குங்கும பொட்டு இட்டு நன்றாக இருந்தார். இருபது ரூபாய் என வணிகம் பேசினார். எனக்குத் தெரிந்து நான் கிளி ஜோதிடம் பார்தது வருடங்கள் பல உருண்டோடி விட்டது. நெல்மணி போட கிளி வந்து ஒவ்வொரு சீட்டாக எடுத்துப் போட்டுவிட்டு ஒரு சீட்டு எடுத்துத்தரும். அதை வைத்து நிறைய விசயங்கள் முன்னர் சொல்லும் வழக்கம் உண்டு. இருபது வருடங்கள் முன்னர்
 நடந்தது இப்போது அப்படியே இருக்குமென எண்ணி அமர்ந்தேன்.

பெயர் சொன்னேன். பெயர் சொன்னதும் கிளி வந்தது. ஒரே சீட்டு எடுத்துக்கொடுத்துவிட்டுப் போனது. பார்த்தால் வெங்கடாசலபதி. இரண்டே வாக்கியங்கள் சொல்லிவிட்டு ஒரு சீட்டு எடுத்துத் தாருங்கள் என என்னை கிளி ஆக்கினார். ராமர், சீதை, லட்சுமணர் பட்டாபிஷேக படம். இரு வாக்கியங்கள் சொல்லி முடித்தார். இப்படியாக ஐந்து பேர் பார்த்தோம். கிளி ஒரு சீட்டு. இரண்டு வாக்கிய பலன். அவரவர் ஒரு சீட்டு, இரண்டு வாக்கிய பலன்கள். நூறு ரூபாய் காணிக்கை வைங்க கை ரேகை பார்க்கலாம் என்றார். நான் கை காட்டி அமர்ந்தவுடன் சில வரிகள் சொன்னார். இருபது ரூபாய்
 மட்டுமே வைக்க கையை மூடுங்க, ஒரு விரல் காட்டுங்க என்றார். ஆள்காட்டி விரல் காட்டினேன். இரு வாக்கியங்கள் சொல்லி முடித்தார். கிளி ஜோதிடம் முதல் அவர் சொன்ன விசயங்களில் சில தவறுகள் இருந்தன. சுட்டிக்காட்ட மனமின்றி எனது மொபைலில் முக அட்டைப்படமாக இருந்த வெங்கடாசலபதி படத்தை காட்டி எனது விபரம் சொல்லி நகர்ந்தேன். கை எடுத்து வணங்கினார்.

அடுத்த தெருவில் ஐந்து கிளி ஜோதிடர்கள் வரிசையாக அமர்ந்து இருந்தார்கள். குறி பார்க்கும் பெண் ஒருவர். வாங்க யோகமான முகம், தெய்வாம்சம்
என்றே அந்த பெண் சொன்னார்கள். எல்லோரையும் கடந்து போகும் போது அடுத்தவர்களின் வாழ்க்கை குறித்து சொல்லும் தகுதி உள்ளவர்களாக பிறர் இவர்களை நினைக்க, தங்களை அவர்கள் நினைக்க எனக்கோ இவர்களது வாழ்க்கை குறித்து இப்படி வாழ்க்கையை முடக்கிக் கொண்டார்களே எனும் எண்ணம் மட்டும் சுற்றி சுற்றி வந்தது.

(தொடரும்)

Wednesday 27 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் - 6

சிறிது நேர காத்திருப்புக்கு பின்னர் tablet device தந்தார்கள். மன நிம்மதியாக இருந்தது. நேராக அகநாழிகை புத்தக அங்காடிக்கு சென்று பொன்.வாசுதேவன் அவர்களை சந்தித்தேன். பல புத்தகங்கள் தந்தார். ஒரு வாரத்திற்குள் நுனிப்புல் பாகம் 2 அச்சில் ஏற்றப்பட்டு வந்து இருந்தது.

சிறப்பாக இருந்தது. சிறிது நேரம் அவருடன் உரையாடிவிட்டு கிளம்பினேன். மாலை 4.15 மணிக்கு விமானம். உறவினர் ஒருவர் வீடு செல்லும் முன்னர் வெகு நேரம் ஆனது. பழக்கப்பட்ட சென்னை. பழகிப்போன சென்னை. விமானத்தை தவற விட்டு விடுவோம் எனும் அச்சம் வேறு. சென்னை சாலையில் செல்லும் வாகனங்கள் இன்னமும் வியப்பூட்டுகின்றன. எத்தனை லாவகம். சரியான நேரத்தில் விமான நிலையம் வந்தோம். இந்தியா போன்ற ஒரு சிறப்பான நாடு நான் இதுவரை கண்டதே இல்லை. வசதிகள் அற்றபோதும் வாழ்ந்து காட்டிய எனது முப்பாட்டனார் எனக்கு தெய்வங்கள் தான். நாடு விட்டு நாடு போனாலும் நாட்டின் குடியுரிமையை மாற்றினாலும் ஊரின் மண் எப்போதும் மகிழ்ச்சி தரும் அதோடு மழையும் வரும். மழை வந்தது.

ஊழல், இத்யாதிகள் என குறைகள் சொல்லி சலித்துப் போகும் மக்கள் வாழும் பூமி. இங்கே இருக்கும் ஒருவித நிம்மதி பிறந்தபோது வந்தது. உறவுகள் ஒதுங்கிக் கொண்டார்கள் என்பதற்கு நானும் காரணம். இதோ என் எண், அழையுங்கள் என உங்களுக்கு தந்தது இல்லை. புத்தக வெளியீடு இம்முறை செப்டம்பர் 6 அன்று நடைபெற இருக்கிறது. அகநாழிகை வாசு அவர்களுக்கு மீண்டும் நன்றிகள்

ஒரு வாரம் மட்டுமே எனது ஊரில் இருந்தேன். சந்தித்தவரை நன்றாக பேசிய மக்கள். மன கஷ்டங்கள் இருக்கும். மன கஷ்டமாகவும் இருக்கும். எடுத்துக்கொண்ட வாழ்க்கை முறை அப்படி. இந்தியா என் தேசம்

(தொடரும்)

Tuesday 26 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் - 5

கோவில், உறவினர் அடுத்த நாள் பார்க்கலாம் என அன்று Sentosa Island போக முடிவு செய்தோம். முதலில் இங்குதான் ஹோட்டல் பார்த்தோம், பின்னர் எதற்கு என மனம் மாறி சிங்கப்பூரில் தங்க முடிவு செய்தோம்.

ஹோட்டலில் இருந்து அரை மணி நேரத்தில் அந்த தீவு அடைந்தோம். மிகவும் அருமையான தீவு. பல இடங்கள் சுற்றிப் பார்த்து மகிழும் வண்ணம் அமைந்து இருந்தது. சிங்கப்பூர் பெயர்க்காரணம் அறிந்து கொண்டேன். சிங்கம் ஒன்று அந்த தீவில் இருந்து சிங்கப்பூரை கண்காணித்து பாதுகாப்பதாக ஒரு கதை உண்டு. வீராச்சாமி என்பவர் பெயர் கூட அந்த கதையில் உண்டு. வீராச்சாமி சாலை ஒன்று சிங்கப்பூரில் உண்டு. சிங்கப்பூரா என்றே முன்னர் அழைக்கப்பட்டது என்பது அந்த நாட்டு வரலாறு. சிங்கப்பூர் தான் சிங்கப்பூரின் தலைநகரம். சிங்கம் ஒன்றின் வடிவமைப்பு. சிங்கத்தின் தலை மீன் உடல் கொண்ட உருவம் அது. மீன் அவதாரம், சிங்க அவதாரம். இது குறித்து நிறையப் படித்து பின்னர் எழுதலாம் என விட்டுவிடுகிறேன்.

அங்கிருந்து ஹோட்டல் வந்தோம். சென்னையில் இருந்து பதில் இல்லை. இரவு night safari சென்றோம். அரை மணி நேரம் tram வண்டியில் சுற்றி காண்பித்தார்கள். பல விலங்குகள். ஒரு யானை வணக்கம் காட்டி வரவேற்றது. சிங்கப்பூர் மற்றும் Sentosa தீவுக்கு ஒரு cable car இணைப்பு உண்டு. மலைகள் மரங்கள் என பார்த்த போது அத்தனை பேரின்பமாக இருந்தது. அங்கேயும் விலங்குகள் இருக்கக்கூடும்.

இரவு ஒரு மணிக்கு ஹோட்டல் வந்தோம். சென்னை ஹோட்டலில் இருந்து மின்னஞ்சல் வந்து இருந்தது. Please collect your tablet device by showing your identity when you return from Singapore on Saturday morning என இருந்தது. உலகில் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திருட்டு என்பது தனது தேவைக்காக செய்யப்படுவது. தனது தேவை இருந்தும் திருடாமல் வாழ்வது ஒழுக்க நெறிமுறை எனப்படுகிறது. அடுத்த நாள் கோவில் சுற்றினோம். முருகன் கோவில்கள். மாலை Chinatown நடந்தே சுற்றினோம். சிங்கப்பூர் அற்புதமான நாடு/நகரம். மிகவும் பிடித்து இருந்தது. அன்று இரவு உறவினர்கள் பார்க்க சென்றோம். 45 வருடத்தின் முந்தைய வாழ்க்கை வரலாறு பேசிக் கொண்டார்கள். சிங்கப்பூர் முற்றிலும் மாறிப்போனது, எதுவும் கண்டுபிடிக்க இயலவில்லை என்பதே பேச்சு. உறவினர்கள்களை பார்த்து முடித்தபோது இரவு ஒரு மணி. மற்றொரு உறவினர் வீட்டுக்கு செல்ல இயலவில்லை. அங்கிருந்து marina bay செல்லலாம் என காரை ஓட்டிட சுற்றி சுற்றி வந்தது. வழிகாட்டி எல்லா நேரமும் வழிகாட்டாது என ஹோட்டல் வந்தோம். இரவு மூன்று மணி. மொத்த சிங்கப்பூரை காரில் சுற்றி விட்டோம்.

எங்கு ஹோட்டல் எடுக்க நினைத்தோமோ அங்கேதான் உறவினர்கள் எனது மாமனார் மாமியார் இருந்த இடம் இருந்தது. மத்திய நகரத்தை விட்டு தள்ளி இருக்கிறது என நினைத்து அங்கே தங்கவில்லை. கொஞ்ச நேரத்தில் மலேசியா சென்று விடலாம் என்பது போல் இருந்தது. அடுத்த நாள் marina bayவுக்கு வழிகாட்டியை நம்பாமல் வழி பார்த்து சென்றேன். பிரமாண்டம். மூன்று wheel chair எடுத்துக்கொண்டு பெற்றவர்களுக்கு சுற்றிக்காட்டினோம். உலகில் ஆச்சரியங்கள் நிறையவே உண்டு. தாவரங்கள் உலகின் பேரதிசயங்கள்.

இருபது நிமிடங்களில் விமான நிலையம் வந்து அடைந்தோம். மனதில் சிங்கப்பூர் நிறையவே நிறைந்து போனது. கார் தந்தவர் காரில் எல்லாம் சரியாக இருக்கிறது என பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் கிளம்பினார். திருப்திகரமான பயணம் முடிவுக்கு வந்தது. மீண்டும் செல்ல வேண்டும் எனும் ஆவல் தந்த நாடு அது.

சென்னையில் வந்து இறங்கினோம். இரவு 11 மணி. சிங்கப்பூரில்  எளிதாக இடம் கண்டுபிடிக்க முடிந்தது. செல்லும் நாடுகளில் இந்தியா ஒன்று மட்டுமே நான் வாகனம் ஓட்டாத நாடாக இருக்கப்போகிறது. அந்த இரவில் தட்டுத்தடுமாறி ஹோட்டல் வந்தோம். அடுத்த நாள் காலை tablet device தொலைத்த ஹோட்டல் சென்றோம். காத்திருக்கச் சொன்னார்கள்

( தொடரும்)

Monday 25 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் - 4

சென்னையில் தங்கி இருந்த ஹோட்டலுக்கு tablet device தொலைந்த விசயத்தை உடனடியாக மின்னஞ்சல் செய்தேன். நான் அதிகம் உபயோகிக்காத ஒன்று என்பதால் தொலைந்து போனது குறித்து அத்தனை கவலை இல்லை. மனைவி சொன்னார், கிடைக்கும் எனில் கிடைக்கும் என! Data roaming, SIM card change எல்லாம் இல்லை என்பதால் சிங்கப்பூர் ஹோட்டல் விட்டு வெளியேறினால் மின்னஞ்சல் பார்க்க வழி இல்லை. மறுநாள் காலை வரை சென்னையில் இருந்து எவ்வித பதில் இல்லை.

சிங்கப்பூரில் ஒரு கோவில்தனை நடந்து பார்க்க சென்றோம். மாரியம்மன் கோவில் ஹோட்டலுக்கு அருகில் இருந்தது. வழிபட்டு முடிக்க, வழிகாட்டிதனை ஹோட்டலில் தந்து இருப்பதாக சொன்னார், அப்பாடா என இருந்தது. அதனை வந்து பெற்றுக்கொள்ள உறவினர் ஒருவர் எப்போது வீட்டுக்கு வருகிறீர்கள் என எனது மொபைலுக்கு (roaming இல்லாமல் பேச முடியும்) அழைத்து கேட்க முகவரி வாங்கிக்கொண்டு இப்போதே வருகிறோம் என காரில் சென்று இறங்கினோம். கார் பற்றி, கார் ஓட்டுவது குறித்து ஆச்சரியப்பட்டார். வழிகாட்டி இருக்க வாகனம் தானாக போகும் என்றேன். சிங்கப்பூர் உல்லாசமான ஊர். உறவினர்கள் அன்று முழுவதும் உடன் இருந்தார்கள்.

குப்பை இல்லாத நாடு என பெயர் பெற்ற நாட்டில் சாலையில் குப்பைகள் கண்டேன். இடத்தின் பெயர் Little Indiaவாம். கோமலா விலாஸ் சாப்பாடு. சீனிவாச பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், நகைக் கடை, துணிக்கடை என சிங்கப்பூரில் தமிழர்கள் பலர் கண்டேன், ஆம் கண்டேன். சிங்கப்பூர் என்பது சிங்களத்தின் திரிபு என பகடி செய்தேன். அன்று சுற்றிய அலுப்பில் இரவு பத்து மணி ஹோட்டல்  வந்து சேர்நதோம்.

மின்னஞ்சல் பார்த்தேன். We found a tablet in another room. Send me details எனும்படி ஒரு மெயில் சென்னை ஹோட்டலில் இருந்து வந்தது. விபரங்கள் அனுப்பினேன். அடுத்தநாள் காலை வரை பதில் இல்லை. கோவில் சுற்ற கிளம்பினோம். வாகனம் செலுத்துவது எத்தனை சௌகரியம் அங்கே!

(தொடரும்)