Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Friday 10 January 2020

அசுரனும் தர்பாரும்

திரையரங்கு சென்று படம் பார்ப்பது என்பது அரிதானதால் பார்க்கின்ற அனைத்து தமிழ் திரைப்படங்கள் குறித்து எல்லாம் எழுதுவது என்பது சற்று இடைஞ்சல்தான். அக்டோபர் மாதம் 12ம் தேதி அன்று அசுரன் திரையரங்கு சென்று பார்த்தபோது உடன் வந்தவர்கள் படத்தின் உட்பொருளை புரிந்து கொள்ளமுடியாமல் நிறைய வன்முறையாக இருக்கிறது என்றார்கள். ஆனால் அந்தப் படத்தின் வலியை வாழ்வில் நேரடியாக அனுபவித்தவர்கள் மட்டுமே உணர இயலும். 

ஒடுக்கப்பட்டவர்களின் வலி என்பது அசுரன் போன்ற படைப்புகளின் மூலம் வெளிக்கொண்டு வந்தாலும் சமூகத்தின் மாற்றம் என்பது உடனடியாக நிகழும் நிகழ்வு அல்ல. ஏதேனும் ஒரு வகையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான். பணம் இருப்பவருக்கு, செல்வாக்கு உள்ளவருக்கு அதனால் பெரும் பாதிப்பு இல்லை, ஆனால் அல்லல்படுவது எல்லாம் பிறரால் அடக்கி அடிமைப்படுத்தப்பட்டவர்கள்தான். 

கல்வி என்ற ஒன்றே சமூக மாற்றத்திற்கு வழி என்று சொல்வதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாதது போல படித்தவர்கள்தான் பெரும்பாலும் புத்தியற்று வலம் வருகிறார்கள். இது இந்த உலகத்தின் சாபக்கேடு. படைப்பாளி எப்படியாவது இச்சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு விடாதா எனும் ஏக்கத்தில் வெளிக்கொணரும் படைப்புகளில் வலி அதிகம். இந்தப் படைப்புகள் எல்லாம்  வெறும் கை தட்டல்களுக்கு அல்ல. 

கிராமத்தில் நிலத்தகராறு, வெட்டுக்குத்து, செருப்பை கையில் எடுத்துக் கொண்டு போவது என ஒரு ஒடுக்கப்பட்டச் சமூகத்தினூடே வாழ்ந்து வந்த காரணமோ என்னவோ படைப்பின் ஆழம் நிறையவே பாதித்தது. ஆனால் நகரங்களில் எல்லாம் இப்படி எல்லாம் இருப்பது இல்லை எனும் ஒரு கருத்து உண்டு, அங்கே பணத்தைத் தேடி அலைபவனுக்கு யார் என்ன ஆள் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஓடிக்கொண்டே இருப்பவனுக்கு ஏது பேதம், இருந்தாலும் கிராமத்தில் இருந்து பயணப்பட்ட பலரின் உள்ளுக்குள் விதைக்கப்பட்டு இருக்கும் விஷச்செடி முற்றிலுமாக அழிக்கப்பட்டது இல்லை. இனி வரும் சந்ததிகள் வர்க்க பேதங்கள் பார்க்காமல் அனைவருக்கும் உதவி புரிந்து அன்புடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமே இன்னும் பல வருடங்களுக்கு பெரும் கனவாகவே இருக்கும். மக்கள் திருந்த நினைத்தாலும் குட்டி குட்டித் தலைவர்கள் மக்களை விடுவதாக இல்லை, ஊர் நாட்டாமைகள் உறங்குவதாகவும் இல்லை. 

மிகச் சிறப்பான படைப்பு தந்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள். தனுஷ் ஒரு அற்புதமான நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இசை அருமை. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. 

அதன்பிறகு திரையரங்கு சென்று இன்று பார்த்த படம். தர்பார். ரஜினி என்பதைத் தவிர வேறு என்ன சொல்லிவிட முடியும். படம் ஆரம்பித்ததில் இருந்தே திரையரங்கில் ஆர்ப்பாட்டங்களும், சப்தங்களும் என இருந்தது. ரஜினியின் படங்களை அமைதியாகப் பார்க்கும் வழக்கம் எங்குமே இல்லை போல. இது ஒரு சினிமா எனும் மனநிலையில் இருந்தால் மட்டுமே இது போன்ற படங்களை இரசித்து வர இயலும். படம் வேகமாக முடிந்துவிட்டது எனும் திருப்தியும் நிம்மதியும் இருந்தது. இப்போதெல்லாம் எந்தப் படம் என்றாலும் முழுவதுமாகப் பார்த்து விடுகிறேன். எனக்கு இரசனை குறைந்துவிட்டது என்றில்லை, அப்படி என்னதான் ஒரு படைப்பாளி சொல்ல வருகிறார் எனும் ஆர்வக்கோளாறுதான். இது சினிமா அல்ல, மாபெரும் ஒரு படைப்பு என சுயதம்பட்டம் அடிக்கும் இயக்குநர்கள் நிச்சயம் கொஞ்சமாவது அறிவோடு இருந்தால்தான் நல்லது அப்போதுதான் என்ன மாதிரியான வசனம் எழுதுகிறோம், எந்த மாதிரியான காட்சிகள் அமைக்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இருக்கும். தமிழ் சினிமா காலா, அசுரன், பரியேறும் பெருமாள், நேர் கொண்ட பாதை  போன்ற பாதையில் பயணித்தாலும் பேட்ட, விசுவாசம், பிகில், தர்பார் போன்றவைகளும் தேவையாகத்தான் இருக்கிறது. 

இப்படி பிறரது படைப்புகள் குறித்து எழுதும் போது நாம் எழுதுகின்ற படைப்புகள் குறித்தும் ஒரு குற்ற உணர்வு வராமலும் இல்லை. திருக்குறள் தராத சமூக மாற்றத்தை, இராமானுசர் மகான்கள், பெருந்தலைவர்கள் சொன்ன கருத்துக்களால் உண்டாகாத சமூக மாற்றத்தை கொண்டு வர வேண்டி படைப்பாளிகள் பலர் தங்கள் படைப்புகளில் சுமந்து கொண்டு அலைகின்றார்கள். காலம் என்ற ஒன்றே ஒன்றுதான் அத்தனையையும் புரட்டிப் போடும் பேராற்றல் கொண்டது. காலத்தை மாற்றும் வல்லமை மனித இனத்துக்கு வசப்படட்டும். 

நன்றி. 


Sunday 11 October 2015

வாசகி ஒருவரின் தொலைக்கப்பட்ட தேடல்கள் குறித்த விமர்சனம்


இங்கே இந்த இணைப்பில் வாசகி ஒருவரின் தொலைக்கப்பட்ட தேடல்கள் குறித்த விமர்சனம்    படிக்கவும்

நிறைய நபர்களிடம் இந்த சிறுகதை தொகுப்பை கொடுத்து இருந்தேன். இந்த சிறுகதை தொகுப்பு வெளியிட்டபின் முதல் முதலில் அது குறித்த விமர்சனம் எழுதித் தந்த வாசகி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த விமர்சனம் எனது எழுத்தை பண்படுத்த உதவும் வகையில் அமைந்து இருப்பது வெகு சிறப்பு. அடடா விமர்சனத்திற்கே விமர்சனம் எழுதுவது நல்லது இல்லை என்பதால் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.

Friday 5 June 2015

தமிழ் மின்னிதழ் -2 கடும் கண்டனங்கள்

தமிழ் மின்னிதழ் -2  தரவு இறக்கிக் கொள்ள இங்கே அழுத்தவும்

20. சான்டல்வுட்டின் டாரன்டீனோ  - அதிஷா

இவர் நன்றாக எழுதக்கூடியவர், விமர்சனம் பண்ணக்கூடியவர் என்பது அறிந்து இருக்கிறேன். சில வலைப்பதிவுகள் படித்து இருக்கிறேன். எனது புத்தக வெளியீட்டுக்கு நன்றியுரை சொன்னவர். இம்முறை கூட இவரை சந்திக்க இயலாமல் போனது.

சற்றும் எதிர்பாராத கட்டுரை எனலாம். கன்னட திரையுலகப் பார்வை குறித்து எழுதி இருக்கிறார். சான்டல்வுட் என்றால் கன்னட திரையுலகம் என்று இந்த தமிழ் மின்னிதழ் படித்துதான் அறிந்து கொண்டேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகம் போல கன்னட திரையுலகம் அத்தனை பிரசித்தி பெற்றது இல்லை என்றே பலரும் அறிவார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மலையாளம், தெலுங்கு என ஓரிரு படங்களே பார்த்து இருக்கிறேன். இதுவரை கன்னடம் பார்த்தது கிடையாது. அந்த திரையுலகில் நடக்கும் அதிசயங்களை விவரிக்கிறார் கட்டுரையாளர். லூசியா ஒரு என்ற படம் கன்னடப்படம் என்று கூடத் தெரியாமலே இருந்து இருக்கிறேன். இவர் விவரிக்கும் படங்களைப் பார்த்தால் கன்னட திரையுலகம் ஒரு கதை நிறைந்த மலையாள திரையுலகம் போல இருக்கும் என எண்ணலாம். 'உளிடவரு கண்டன்டே' சிம்பிள் ஆகி ஒந்த் லவ் ஸ்டோரி' படங்கள் குறித்த பார்வை சிறப்பு. டாரன்டீனோ போல உளிடவரு கண்டன்டே அமைக்கப்பட்டு எனும் ஒப்பீடல் அவரது படங்கள் பார்த்தவருக்கு மட்டும் புரியும்.

21. கொஞ்சம் மெய் நிறைய பொய் - யுவகிருஷ்ணா

இவரையும் ஓரளவுக்கு  இவரது எழுத்துகள் எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றன. இவரது எழுத்துகள் மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டவர் என்றே அறிந்து இருக்கிறேன்.

சற்றும் எதிர்பாராத எழுத்துதான். இவர்கள் இருவரும் வேறு ஏதோ  எழுதி இருப்பார்கள் என எதிர்பார்த்தது எனது தவறுதான். ஆனால் எழுதிய விஷயங்கள்  மிகவும் நன்மைத் தரக்கூடியவை. மெய் நிகரி எனும் ஒரு புத்தக விமர்சனம் இது. முதல் சில பகுதிகளை வாசித்தபோது எதுவும் தொடர்பற்ற ஒன்றாக இருக்கிறதே என எண்ண  கதைக்குள் கொண்டு செல்கிறார். ஒரு கதைக்கான களம் இருந்தால் போதும், அது இப்படித்தான் எழுத வேண்டும் எனும் அமைப்பை இன்றைய எழுத்தாளர்கள் உடைத்து வருகிறார்கள் என்பதற்கு இந்த நூல் உதாரணமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இப்படித்தான் எழுத வேண்டும் என்றில்லை. நாவல் ஒன்று எழுதியபோது இந்தப் போக்கினை மட்டுமே கடைப்பிடிக்கிறேன். எவருக்கு உறவுகள் பற்றிய விசயங்கள் அவசியம், தொழில் சார்ந்த விஷயங்களை  கதை மூலம் சொல்ல வேண்டும். எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் குறிப்பிட்டது போல மிகவும் துணிச்சலாக உண்மை எழுதும் நபர்கள் வேண்டும். மெய்நிகரி நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நாவல் என்றே அறிய முடிகிறது.

22. அபயம் - ஹரன் பிரசன்னா

இவரும் நூல் மூலம் சிறிது பழக்கம். நிறைய விளம்பரங்கள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் எனக்குத்தான் புத்தகங்கள் குறித்த அக்கறை இல்லாமல் போய்விட்டது. அப்படியே இவரது தொடர்பும் இப்போது இல்லை.

வித்தியாசமான கதைக்களம். கண்கள் குறித்து விவரிக்கப்பட்டு ஒரு குற்ற உணர்வுடன் தகிக்கும் கதைநாயகன் குறித்த கதை இது. மிகவும் சுவராஸ்யமாக இருந்தது.

23. மோடி முட்டிகள் - அராத்து

இந்த கட்டுரை அதிர்ச்சித் தரக்கூடிய வகையில் இருந்தது. கற்பழிப்பு குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது. ஒரு சமூகத்தில் நடக்கும் இழிநிலைகள், பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் என விவரித்துக் கொண்டே போக அடுத்து என்ன படிக்கிறோம் என்றே எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அவசியமா என்று கேட்டால் அது அப்படித்தான் என்று சொல்லக்கூடிய மனநிலையில்தான் இருக்கிறார்கள். வழக்கத்தில் சொல்லப்படும் விஷயங்கள் என அப்படியே எழுத்தில் வைக்கிறார். இது வாசிப்பவர்களுக்கு எத்தகைய எண்ணத்தைத்  தரும் என அறுதியிட்டு சொல்ல இயலாது. எனக்கோ இப்படித்தான் தமிழில் எழுதி ஆக வேண்டுமா என்றே இருந்தது. எழுதியவரை அல்லது இந்த இதழின் ஆசிரியரை குறைபடுவதில் பிரயோசனமில்லை. ஆனால் இப்படித்தான் பேசுகிறார்கள் என சொல்லும்போது முட்டாள்கள் குறித்து முட்டாள்தனமாக எழுதித்தான் ஆக வேண்டும் என்றால் எழுத வேண்டியது  இல்லை. ஆனால் அப்படித்தான் எழுதுவேன் என்பவர்களை ஒன்றும் சொல்ல இயலாது. இது ஒரு கலாச்சார சீர்கேடு என குறைப்பட்டு  கொள்ள வேண்டியது இல்லை. குடிகார எழுத்தாளர்கள் அதிகரித்து விட்டார்கள். குடிகார சிந்தனையாளர்கள் தமிழில் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள். இலக்கியம் என இதை எல்லாம் இனி வரும் சமூகம் ஏற்றுக்கொள்ளும் போல. அதற்காக கடும் கண்டனங்களை இந்த கட்டுரைக்குத் தெரிவித்துக் கொள்ளலாம். எவரேனும் இந்த கட்டுரையை வாசித்துப் பார்த்தால் ஒழுக்கமற்றவன் ஒழுக்கம் சொல்வது போல தென்படும். இது தமிழ் எழுத்துக்கான விமர்சனம் மற்றும் எனது எழுத்து நிலை வேறு எனும் பார்வையில் வைக்கப்படும் விமர்சனம். அவ்வளவுதான்.

24. சாலையோரம் - பிரபாகரன்

பிரமாதம். ஒரு கவிஞரின் பார்வையில் எல்லாம் கவித்துவமாகத் தெரியும் என்பதற்கு இந்த கவிதை சாட்சி. மிகவும் அழகாக பல நிகழ்வுகளை படம் பிடித்து நமக்குத் தந்து இருக்கிறார்.

25. ஆம் ஆத்மி - கொடுங்கனவாகும் கற்பனை - தமிழில் சைபர் சிம்மன்

ஒரு கடிதம் மூலம் ஆம் ஆத்மி குறித்து பல விசயங்கள் அறிய நேர்ந்தது. சற்று அயர்ச்சியாகவும் இருந்தது.

நன்றி மற்றும் வணக்கம்.

இந்த தமிழ் மின்னிதழ் மிகவும் சிறப்பாக இருந்தது என்றால் மிகையாகாது. திருஷ்டி பொட்டு  மீது ஆசிரியருக்கு அக்கறை கிடையாதுதான். ஆனால் எப்படியேனும் ஒரு கட்டுரை அப்படி வந்து அமைந்து விடுகிறது.

முற்றும்

Monday 24 February 2014

கதிர்வேலனின் வில்லாவில் பிரியாணி

சினிமா பார்ப்பது போன்று ஒரு பொழுதுபோக்கு எதுவுமே இல்லை. அதுவும் பாப்கார்ன் கொறித்துக் கொண்டு ஒரு சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதைகளை ரசிப்பதில் ஒரு அலாதியான பிரியம் இருக்கத்தான் செய்கிறது. இதை பண விரயம் என்றெல்லாம் சொல்லி முடித்து விடமுடியாது. சினிமா எதையோ மக்கள் மனதில் காலம் காலமாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறது. ஆனால் மக்கள், ஆமா இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதாக்கும் என்றே மனபாவத்தில் படங்களை அணுகுகிறார்கள்.

இது கதிர்வேலனின் காதல். ஒரே வரிக்கதை. அப்பாவின் சம்மதத்துடன் தனது காதலியை கரம் பிடித்துவிட  நினைக்கும் காதலன். இப்போது இதை சுற்றி ஒரு திரைக்கதை பின்னப்பட வேண்டும். அவ்வளவே. காதலிக்கு ஒரு கெட்ட நண்பன், காதலியின் அப்பாவுக்கு ஒரு பலமில்லாத எதிரி. காதலுனுக்கு ஒரு நகைச்சுவை நண்பன், ஒரு காதலித்து ஓடிப்போன அக்கா, காதலை எதிர்க்கும் தந்தை. இப்படியாக திரைக்கதை முடித்தாகிவிட்டது. காதலில் ஒரு தவிப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்று. அதை படம் முழுவதும் தெளித்து இருக்கிறார்கள். மனதில் எதுவுமே ஒரு பாதிப்பு ஏற்படுத்தவில்லை. காதல் புளித்துப் போன ஒன்றாகிவிட்டது.

அப்படியே வில்லா பக்கம் போனால் பில்லி சூனியம் இதற்கு ஒரு அறிவியல் பின்னணி, நரபலி என்றெல்லாம் சொல்லி தமிழ் உலகம் இன்னும் மாறவில்லை என்றே சொல்லி முடிக்கிறார்கள். ஓவியத்தில் வரையப்பட்டது எல்லாம் நடக்கிறது என்கிற ஒரு தோரணையை உருவாக்கி இருக்கிறார்கள். திகிலும் இல்லை ஒண்ணுமில்லை. படம் மெதுவாக ஊர்ந்தால் அது இலக்கியத் தரமிக்கது என்றெல்லாம் தமிழ் சினிமா நினைக்க ஆரம்பித்துவிட்டது. அதில் ஒரு காதல். தனது காதலியை தான் மணமுடித்து கொல்ல வேண்டுமே என இறந்து போகும் காதலன், கதைநாயகன். ஆனால் அந்த மணவாளன் வேறு என முடியும் படம். ஒரு சுறுசுறுப்பு வேண்டாம். இது பிட்சா எனும் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லி இருந்தார்கள், பிட்சா படத்தின் முதல் பாக கதை மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. ஆனால் தொடர்ந்து அதுபோன்று தமிழில் சினிமா வர இயல்வதில்லை இதனால் தான் ஜில்லா, ஆரம்பம் போன்ற மசாலா படங்கள் எப்போதும் தமிழில் கொடிகட்டி பறக்கின்றன.

மசாலா படங்கள் கொடி கட்டி பறக்கின்றன என பிரியாணி பக்கம் போனால் அது என்ன கதை என நினைத்து கூட பார்க்க இயலவில்லை. வெஜிடபிள் பிரியாணியா, சிக்கன் பிரியாணியா. சிக்கன் பிரியாணி கதை தான். எதிர்பாராத திருப்பங்கள் கொண்டு மிகவும் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைக்க முயற்சி செய்து இருந்தார்கள். யார் கொலையாளி என்பதை படம் முழுக்கத் தேடவிட்டு இருந்தார்கள். சினிமா என்றால் பொழுதுபோக்குதான். அதை சற்று கனகச்சிதமாகவே இந்த பிரியாணி முடித்து இருந்தது. இந்த காட்சி எதற்கு, அது எப்படி எல்லாம் கேள்விகள் எழுப்பாமல் வாசமிக்க பிரியாணி தான்.

இப்போது தமிழ் சினிமா இதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது. நாங்க எங்க இஷ்டத்துக்கு படம் எடுப்போம், அது எங்களுக்குப் பிடிச்சி இருக்கு. உங்களுக்கு பிடிச்சி இருந்தா எங்க தயாரிப்பாளுருக்கு லாபம் இல்லைன்னா நஷ்டம். மத்தபடி படைப்பாளிக்கு ஒரு படைப்பு எப்பவுமே உசத்திதான். மோசமான படம் என நினைத்தால் தயாரிப்பாளர், இயக்குனர் அந்த படத்தை தயாரிக்க இயக்க முன்வருவாரா, இல்லையே. படைப்புதனை தர வேண்டும், அதில் பணம் பண்ண வேண்டும் என நினைப்பவர்கள் சற்று சிந்திப்பது நலம். எவர் இதை எல்லாம் கருத்தில் கொள்ளப்போகிறார்கள்.

இந்த திரைப்படங்கள் எல்லாம் இணையதளத்தில் கிடைப்பது குறித்து பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். வெளிநாடுகளுக்கு தியேட்டரில் படம் வருகிறதோ இல்லையோ புத்தம் புது காப்பி என டிவிடி கிடைத்துவிடுகிறது. குறிப்பிட்ட சில படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம் என நினைக்கும் மக்களையும் இந்த விமர்சகர்கள், கருத்து சொல்லிகள் படம் வந்த முதல் நாள் அன்றே படத்தை குறித்த கருத்துகளை இணையதளத்தில் தெளித்துவிடுவதால் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று கணிசமாக கூடவோ குறையவோ  செய்கிறது. விமர்சகர்கள் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்கள் என்பது கூட கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

எனவே இனிமேல் தமிழ் சினிமா கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து ஒரு படம் எடுப்பதைவிட குறைந்த பணத்தில் அற்புதமாக படம் படைத்து நகர வேண்டும் என்பதே ஒரு வேண்டுகோள். எவரும் செவிமடுக்க போவதில்லை என்பது வேறு விஷயம். 

Friday 28 October 2011

ஏழாம் அறிவு

ஒரு திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல் அதில் என்ன குறை இருக்கிறது, எதற்கு இப்படி படம் பார்ப்பவர்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள் எனும் சத்தம் தமிழ் திரையுலகில், விமர்சன கூட்டத்தில்  மிகவும் அதிகமாகவே உண்டு. எதுக்குதான் இப்படி பணத்தை செலவழிச்சி குப்பை படம் எடுக்கிறாங்களோ என குறைப்பட்ட படங்கள் தமிழில் அதிகமாகவே உண்டு. நாம் நமது பணத்தை செலவழித்து ஒரு படத்தை மட்டுமல்ல, எந்த ஒரு விசயத்தையுமே செய்யும்போது ஆயிரம் நல்ல விசயங்கள் இருந்தாலும் ஒரு சில கெட்ட விசயங்கள் இருந்தால் அதை தூக்கிப் பிடிப்பதுதான் மனித எண்ணத்தின் இயற்கை. அதைவிட தன் மொழியில், தன்னால் இயலாத ஒன்றை ஒருவர் செய்து காட்டுகிறாரே என்கிற எரிச்சல் நிறைய பேருக்கு தமிழ் உலகில் உண்டு.

எதற்கெடுத்தாலும் இது அங்கே இருந்து காப்பி அடிச்சது, இங்கே இருந்து எடுத்து போட்டது என புலம்பி தள்ளுபவர்கள் மத்தியில் ஒரு திரைப்படம் அது சொல்ல வந்த விசயத்தை விஷமமாக்கி காட்டும் பண்பு நம்மிடம் அதிகமே உண்டு. அதைப்போல ஒருவர் என்ன எழுதுகிறார், என்ன சொல்கிறார் என்பதை பாலானது எப்படி தன்னிடம் இருக்கும் இனிப்பை அமிலமாக்கி தன்னை திரித்து கொள்கிறதோ அதைப்போல தங்களை தாங்களே குற்றம் சொல்லி தமிழர்கள் தலை குனிந்து கொள்கிறார்கள்.

நமது தமிழ் திரையுலகம் மாற வேண்டும், ஆங்கில படங்களுக்கு இணையாக வளர வேண்டும் என்கிற ஒரு கோட்பாடு எல்லாரின் மனதிலும் உண்டு. அதாவது கதை இருக்க வேண்டும், திரைக்கதை சீராக இருக்க வேண்டும் என்பது பலருடைய எண்ணம். ஒரு நல்ல விசயத்தை மிகவும் தெளிவாக சொல்ல வேண்டும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு. தொழில்நுட்பம் அதிகம் இல்லாத காலங்களில் பண்பாடு குறித்த, உறவுகள் குறித்த கதைகள் மக்களின் ரசனையை அதிகம் ஈர்த்தன, சிறந்த கதை அம்சம் உள்ள படங்கள் என பாராட்டப்பட்டன. இன்றும் கூட உறவுகள், காதல், நட்பு பற்றிய படங்கள் சிறந்த திரைக்கதை வடிவத்துடன் வந்தால் மக்களால் நேசிக்கப்படுகின்றன. காதல் இல்லாமல் கதை சொல்ல முடியாது என்பதுதான் நமது தமிழ் திரையுலகம் கண்ட ஒரு வெற்றி படிவம். 

பொதுவாகவே நமது முன்னோர்கள் பற்றிய சிந்தனை நம்மில் மிகவும் குறைவு. அவர்கள் தங்கள் சிந்தனைக்கு எட்டிய விசயங்களை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லி சென்றதால் மூட நம்பிக்கை மடையர்கள் என அவர்கள் திட்டப்பட்டார்கள். இதில் சித்தர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். போதி தர்மர் என்ன பெரிய போதி தர்மர்? புத்த மதம் வேறு நாடுகளில் பரவியது, இந்தியாவில் இல்லாமல் ஒழிந்து போனது. இந்து மதத்தின் கோட்பாடுகளை புத்த மதம் திருடியதுதான் என்பார் பலர். ஆனால் புத்த மதத்தின் மிகவும் மென்மையான கடவுளை எதிர்க்கும் கோட்பாடு உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை. கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என உலகெங்கும் வீரம் பாராட்டியவர்கள் தமிழர்கள் என்பதை பாடப் புத்தகத்தில் கூட வைத்து இருக்கிறார்கள். தமிழர்களின் சிற்ப கலை, நுட்ப கலை என பல விசயங்கள் நம்மால் புறக்கணிக்கப்பட்டு விட்டன. 

புராணங்களில் சொல்லப்பட்ட பல விசயங்கள் நம்மவர்களால் கேலி கூத்தாக்கப்படுவது உண்டு. அதெல்லாம் எப்படி சாத்தியம், இதெல்லாம் எப்படி சாத்தியம் என வெட்டியாக கூவிவிட்டு போய்விடுவார்கள். கூடு விட்டு கூடு பாயும் கலை அறிந்த திருமூலர், சகல மருத்துவங்களையும் சொல்லி சென்ற போகர். இந்த சித்தர்கள் பற்றிய வரலாறு மிகவும் விசித்திரமான, நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கும். நாம் எப்பொழுதும் நம்மை பெருமை படுத்திப் பார்ப்பதில்லை என்பதுதான் இயற்கையாக நடக்க கூடிய விசயம்.

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள், அதாவது பணம், நகை, கலை உட்பட எல்லாம் வெளிநாடுகளில் தான் பெரும் பரவலாகப் பேசப்படுகிறது. தியானத்தை, யோகா பயிற்சி முறையை, எண்களை தந்தது இந்தியாதான் ஆனால் அதை கற்று கொண்டிருப்பது உலகில் உள்ள மக்கள். நாம் பெருமைப்பட்டு கொண்டு நாமும் கற்று சிறக்க வேண்டும். உலகப் பொதுமறை என்பது திருக்குறளுக்கு மட்டுமே கிடைத்த பெருமை, எந்த ஒரு நூலுக்கும், அதுவும் மத நூலுக்கும் கூட அப்படி ஒரு பெருமை கிடையாது. 

தமிழ் பற்றிய பெருமையை தமிழர்கள் நாம் தான் பேச வேண்டும். தம்பட்டம் என்பது வேறு. இப்படியெல்லாம் இருக்கிறது என தன்மையுடன் சொல்வது வேறு.  சமஸ்கிருதம் கற்றுக்கொண்டு சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆங்கிலேயர்களை எவரும் காப்பி அடித்தான் என சொல்லி புலம்புவதில்லை. ஒரு அவதார் படம் வந்தபோது அந்த படத்தின் அடிப்படை கதையம்சம் இந்தியாவில் இருந்துதான் திருடப்பட்டது என்பாரும் உளர். பகவத் கீதை சொல்லும் ஒரு அரிய வாசகம் என ஒரு தமிழரால் எழுதப்பட்ட 'எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது' என்பதுதான் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. 

அடுத்தது, படிச்சவன் எல்லாம் வெளிநாட்டுக்கு போயிடுறான் அப்படின்னு ஒரு பேச்சு. வெளிநாட்டுக்கு போனவங்கள எத்தனை பேரு பெரிய சாதனையாளர்கள் அப்படின்னு பேரு எடுத்து இருக்காங்க. இந்தியாவில வசதி இல்லை, ஊழல் அது இது அப்படின்னு ஒரு பெரிய பட்டியலே உண்டு. எனக்கு தெரிந்து எனது நண்பர்கள் இன்னும் பலர் இந்தியாவில் தான் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். நான் சாதித்ததை விட அவர்கள் நிறையவே சாதித்து இருக்கிறார்கள். வெளிநாடு வேண்டாம் என வாய்ப்பு கிடைத்தும் அதை ஒதுக்கி தள்ளியவர்களை நான் கண்டதுண்டு. அது எதற்கு,  படிக்காதவங்க கூட வெளிநாடுகளில் சென்று வேலை பார்க்கத்தான் செய்கிறார்கள். எல்லாம் பொருளாதார வேறுபாடு. திரை கடலோடி திரவியம் தேடு என சொல்லி வைத்த சமூகம் நமது சமூகம் தான். அதைப்போலவே உலகில் வாழ்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்றார்கள் என்கிறது வரலாறு. இது போன்ற குற்றசாட்டுகளை, நமது மக்களை நாமே மதிப்பது இல்லை என்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் படத்தில் வருவது சகஜமாகிவிட்டது. 

ஐந்து உணர்வுகள் தான் உயிரினங்களுக்கு பொது, அதாவது பார்க்கும் தன்மை, கேட்கும் தன்மை, தொடுதல் உணர்வு, சுவை உணர்வு மற்றும் வாசம் உணர்வு. சில உயிரினங்களுக்கு இந்த உணர்வுகள் சற்று குறைவாகவே இருக்கும். சில உயிரனங்கள், காந்த சக்தி, மின் சக்தி போன்ற வேறு பல சக்திகளை உணரும் தன்மையும் உண்டு என சொல்வார்கள். நாய் ஊளையிடுது, நரி ஊளையிடுது என அதற்கு காரணம் காட்டிய தன்மை நம்மில் உண்டு. மேலும் பல உணர்வுகள் நமது உடலுக்குள் நரம்புகளால் தூண்டப்படுகின்றன என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. அதாவது நமது உடலில் உள்ள உறுப்புகள் எப்படியெல்லாம் வேலை செய்கின்றன என்பது இந்த உணர்வுகளின் அடிப்படையில் தான். நமது மூளை செயல்பாடு நரம்புகள் மட்டும் வேதி பொருட்களினால் நடைபெறுகிறது என்பதுதான் இப்பொழுது நாம் கண்டு கொண்ட ஒரு விசயம். 

இதையெல்லாம் தாண்டி இப்பொழுது மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சி பெருமளவில் நடத்தபடுகிறது. இது மிகவும் அளப்பற்கரிய முன்னேற்றம். எந்த மரபணு எந்த புரதத்தை உருவாக்கும் என்பது வரை நமது அறிவியல் சென்று கொண்டிருக்கிறது. எந்த மரபணு எந்த நோயை உருவாக்கும் என்பது வரை நமது பயணம் செல்கிறது. ஆனால் இது மட்டுமே காரணி அல்ல என்பதும் அறிவியலுக்கு தெரியும். மேலும் ஒன்றை மறந்து விடுகிறார்கள், நமது அறிவு மரபணுக்களில் ஒளிந்திருப்பது இல்லை. எனது தாய்க்கு தெரியாத ஆங்கிலம் எனக்கு தெரியும். எனது தந்தைக்கு புரியாத மொழி எனக்கு புரியும். எனக்கு தெரியாத கலைகள் அவர்களுக்கு தெரியும். இது நரம்புகளின் செயல்பாடு என்கிறார்கள் அறிவியல் வல்லுனர்கள். இந்த கற்று கொள்தல் எல்லாம் மரபு வழியாக செல்வதே இல்லை. எனது தாத்தாவுக்கு தெரிந்த கலை எனக்கும் தெரிந்து இருக்க வேண்டும். இந்த கருத்தில் கொண்ட வேறுபாடுதான் லமார்க் என்பவரை விட டார்வின் பெயர் அதிகம் பேசப்பட்டது.

லமார்க் கொள்கை 'தந்தையின் அறிவு பிள்ளைக்கு செல்லும் என்பது' டார்வின் கொள்கை 'எது உயிர் வாழ பயன் தருகிறதோ அந்த தன்மை மற்ற உயிருக்கு செல்லும் என்பது'  படிக்காமல் ஒருவர் உயிர் வாழ முடியாது என நிலை வந்தால் படிக்கும் தன்மையுள்ள மரபணு உருவாகலாம் என்பதுதான் பரிணாமத்தின் சாரம்சம். ஆனால் இது மட்டும் காரணி அல்ல என்பதை நினைவு கொள்வோம். வாழ்வில் பல விசயங்களை சுருக்கி கொள்ள முடியாது.

உலகில் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று இயற்கை. மற்றொன்று செயற்கை. மொழியில்லா ஒலி எழுப்புவது இயற்கை. மொழியுடன் ஒலி எழுப்பவது செயற்கை, அதாவது கற்று கொள்தல். போதி தர்மனின் ஆய கலைகளும் அவனது பேரனுக்கு செல்வது என்பது எல்லாம் கதை. ஆம் கதை. இது கதை. ஒரு ஊருல ஒரு ராஜாவாம் என சொல்லும் கதையை போல இந்த கதையை கதையாக பார்க்க வேண்டும். அதற்கடுத்து பொதுவாக இன்றைய கால கட்டத்தில் விமானத்தில் ஒரு மசால் பொடி எடுத்து கொண்டு போனால் கூட நாய் மோப்பம் பிடித்துவிடும். அதையெல்லாம் தாண்டிய ஒரு வரத்து போன சிந்தனை இந்த போதி தர்மனை சிதறடித்து விட்டது. போதி தர்மனின் வாழ்க்கை வரலாற்றை சுவாரஸ்யமாக சொல்லி இருந்தாலே இந்த ஏழாம் அறிவு பெரிதளவு பேசப்பட்டிருக்கும், அதைவிட்டுவிட்டு இவரை தெரியுமா என இண்டர்நெட்டிலும், சில பல இடங்களிலும் திருடிவிட்டு நான் தான் இவரை கண்டுபிடித்தேன் என கொடி தூக்குவது கொடுமை. இந்த போதி தர்மனை பற்றி விக்கிபீடியாவில் எழுதியவர் கூட இத்தனை தம்பட்டம் அடித்து கொண்டிருக்க மாட்டார். இன்னும் பல வரலாற்று மனிதர்கள் விக்கிபீடியாவில் இருக்கிறார்கள். பல புத்தகங்களில் குறிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவர் களப்பிரர் காலம் பற்றிய சிந்தனையை கதையில் சொன்னது உண்டு. பல்லவர், சேரர், சோழர், பாண்டியர் என அவர்களது வரலாற்றில் சொல்லப்பட்ட விசயங்கள் பெரும் காவியங்கள் தான். ஒரு தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய இளங்கோ அரச குடும்பத்தில் இருந்தவர்தான். புத்தர் கூட அரசு குடும்பத்தை சேர்ந்தவர்தான். போதி தர்மர். இவரை தெரியுமா? அட அட! இந்த போதி தர்மரை விட சித்த வைத்தியம் எனும் முறை தெரிந்த பல குடும்பங்கள் தமிழகத்தில் உண்டு.

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன். பார்க்கப் போறா, பார்க்கப் போறா, ஐயோ பாத்துட்டா என தன்னை பார்க்காத ஒரு பெண்ணை தான் பார்ப்பதால் தன்னை பார்ப்பாள் என நினைக்கும் செயல்பாடு. அந்த கண்கள் மூலம் பிறரை மயக்கலாம் என்பது பொது விதி. கிறங்கடிக்கும் பார்வை. மயங்க வைக்கும் பார்வை. ஒருவரை நேருக்கு நேராக பல நிமிடங்கள் எங்குமே பார்க்காமல் பார்த்து கொண்டே இருங்கள். அதற்கடுத்து நடக்கும் நிகழ்வுகளை குறித்து கொள்ளுங்கள். காதலால் கசிந்து உருகி, கண்ணீர் மல்கி. சிலரை பார்க்க அச்சம் ஏற்படும். சிலரை பார்க்க சந்தோசம் ஏற்படும். இந்த உணர்வுகளை கண்கள் எப்படி மூளைக்கு கடத்துகிறது? ஒளியின் தன்மையா? டெலிபதி என ஒன்றும் உண்டு. நாம் இங்கு ஒன்றை நினைக்க எங்கோ இருப்பவர் உணர்தல். இப்படி பல மர்மங்கள் அடங்கியது இந்த வாழ்வும், நமது எண்ணங்களும். அதைப் பற்றிய ஆராய்ச்சி உலகில் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில விசயங்கள் புரியாமலே இருக்கின்றன. ஆறாம் அறிவு என்பதே சுத்த மோசம். அதில் ஏழாம் அறிவாம். இருப்பது ஒரு அறிவுதான். அதை எப்படி உபயோகப்படுத்துகிறோம் என்பதில் தான் உள்ளது நமது எண்ணமும் செயல்பாடும்.

ஆறாம் உணர்வு எனும் ஒரு படம் நமது தமிழரால் 'நைட் சியாமளன்' என்பவரால் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர் அந்த படத்தில் வரும் கதை எல்லாம் சாத்தியம் இல்லாத கதை. இறந்தவர்களுடன் பேசுவது, இறந்தவர்களை காண்பது என்பதெல்லாம் கண்கட்டி வித்தை. ஆனால் அந்த கண்கட்டி வித்தையை நம்மில் பலர் உணர்வதாக சொல்வது உண்டு. எனது ஊரே பேய் ஊரு என்றுதான் சொல்லப்பட்டு உண்டு. அந்த கதையின் முடிவு அந்த இயக்குனரை பாராட்ட சொல்லும். சாத்தியம் இல்லாத ஒன்று எனினும் சொல்லப்படும் விதம் பலரை கவர்ந்து விடும்.

எந்திரன் எப்படி ஏமாற்றியதோ அப்படித்தான் பலரும் இந்த ஏழாம் அறிவு பார்த்து ஏமாந்து இருப்பார்கள். சிலரும் பாராட்டி இருப்பார்கள்.

அறிவியல் பக்கம் போக வேண்டும் எனும் ஆர்வத்துடன் பணியாற்றும் தமிழ் இயக்குனர்கள் சற்று திரைக்கதையில் கவனம் செலுத்துவதோடு இல்லாமல் நாலு டான்சு பாட்டு, ஒரு குத்து பாட்டு, ஒரு மெலடி, மூணு சண்டை காட்சி என கழுத்தறுக்காமல் அந்த நேரத்தையெல்லாம் திரைக்கதை அமைப்பில் செலவழித்தால் நலம். பாடல் எல்லாம் கேட்பதற்கு என இசை வடிவமாக மட்டுமே வெளியிடுங்கள். பாடலாசிரியர்கள் பிழைத்துவிட்டு போகட்டும்.

சரி இந்த படத்தோட விமர்சனம் எழுதலைன்னு நீங்க கேட்டா, கஷ்டப்பட்டு பல வருசம் உழைச்சி அட்டகாசமா ஒரு படம் எடுத்திருக்கோம்னு நினைச்சி பெருமைபட்டவங்க கிட்ட போங்கப்பா நீங்களும் உங்க குப்பை சிந்தனையும் அப்படின்னு சொன்னா அவங்களுக்கு வலிக்குமா வலிக்காதா? அது சரி இப்படி எழுதி என்னதான் சொல்ல வரேன்னு நீங்க கேட்டா நான் என்ன பண்றது. 


Friday 7 October 2011

வாகை சூட வா

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் என்ன சொல்வது? படம் வெளியாகி  அனல் குறையாத பட்சத்தில் கொஞ்சம் கூட பிசகு இல்லாமல், தரம் குறையாமல் படத்தினை இணையத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பதோடு இதனால் கணிசமான லாபத்தை படத் தயாரிப்பாளர்கள் முதற்கொண்டு திரையரங்கு முதலாளிகள் என பலரும் இழந்து விடுகிறார்கள்.

அதோடு மட்டுமில்லாமல் திருட்டு குறுந்தகடு என படங்கள் வெகு எளிதாகவே கிடைத்துவிடுகின்றன. இத்தனை இடர்பாடுகளுக்கு இடையில் ஒரு நல்ல திரைப்படம் அதுவும் பெரிய பெரிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என இல்லாமல் உருவாக்கப்படும்போது மக்களுக்கு மத்தியில் நல்ல பெயரை எடுத்தாலும் பெரிய அளவில் வியாபாரம் செய்ய இயலாமல் போவது மிகவும் துரதிர்ஷ்டமானது. இதை தடுக்கும் முயற்சிகள் என மேற்கொண்டாலும் எப்படியாவது இந்த நிகழ்வுகள் நடந்தேறி விடுகின்றன.

இலவசமாக கிடைக்கிறது என்றால் எவருக்குத்தான் கொண்டாட்டம் இருக்காது. மேலும் இலவசம் இலவசம் என பலவற்றை கொடுத்து மனிதர்களை பிச்சைகாரர்களாக்கி வைத்திருக்கும் அரசு எல்லா நாடுகளிலும் அதிகமாகவே இருக்கத்தான் செய்கிறது. பொருளை இலவசமாக கொடுப்பதை விட, கல்வியை இலவசப்படுத்தும் வசதியை உலகில் உள்ள எல்லா நாடுகளும் கொண்டு வர இயலுமா என்றால் அது அத்தனை சாத்தியமில்லை.

கல்வியை கற்பிக்கும் ஆசிரியருக்கு பணம் எங்கிருந்து வரும்? கல்வியை கற்று தரும் பள்ளிக் கூடங்கள் கட்ட பணம் எங்கிருந்து வரும் என ஒட்டு மொத்த தமிழகமும் கல்வியை மாபெரும் வியாபார கூடங்களாக மாற்றி வைத்திருப்பது இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே நடந்து கொண்டுதான் வருகிறது. பணம் இருந்தால் படிப்பு என்றாகிப் போனது. கல்வியா, செல்வமா, வீரமா என கேட்கப்பட்ட நாட்களிலிருந்து ஒன்றில்லாமல் மற்றொன்று நிலைப்பது கடினம் என சொன்னாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிப் போனால் இவ்வுலகம் இல்லை என்பதுதானே நிதர்சனம். இரண்டாயிரம் வருடங்கள் முன்னரே இந்த நிலைமைதான், பொருளிளார்க்கு இவ்வுலகம் இல்லை.

வாகை சூட வா எனும் ஒரு அழகிய தமிழ் திரைப்படம். காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் 'அடிமைபட்டுப் போன மக்கள்'. இந்த மக்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகள். வயிற்றுப் பிழைப்புக்காக வாழும் மக்களிடம் போராட்ட குணம் இருப்பதில்லை, அடிமைபடுத்தபட்டு இருக்கிறோம் என்கிற ஒரு எண்ணம எழுவதில்லை. ஆனால் விசுவாசம் மட்டுமே மிஞ்சி இருக்கும். அத்தகைய விசுவாசத்தினை தனது வசமாக்கி கொள்ளும் முதலாளிகள் மட்டுமே மிச்சம்.

ஒரு திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும், எப்படி எடுக்க கூடாது என்கிற வரைமுறை எல்லாம் எவருக்கு வேண்டும் என்கிற தமிழ் திரைப்பட உலகில் இதுபோன்ற திரைப்படங்கள் அவ்வப்போது தலைகாட்டுவது மிகவும் சிறப்பான விசயம் தான்.

இந்த படத்தை பார்க்கும்போது இது போன்ற கிராமங்கள் இன்னும் இருக்கின்றனவா என்று கேட்டால் ஆமாம் என்று தைரியமாக சொல்லலாம். அங்கொன்று இங்கொன்றுமாக அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருக்கத்தான் செய்கின்றன. படத்தின் காலகட்டம் வேறாக இருந்தாலும் இன்னும் குழந்தை தொழிலாளிகளை சுமந்து கொண்டிருக்கும் கிராமங்கள் மிகவும் அதிகம். எதற்கும் பனியன் விற்கும் தொழிற்சாலை நகரத்திற்கோ, பட்டாசு தொழில் அதிபோகமாக நடக்கும் சிவகாசி சுற்றியுள்ள ஊருக்கோ சென்று வந்தால் தெரியும்.

'காசு வித்து பாத்துராதண்ணே' என ஒரு செங்கல் சுமக்கும் சிறுமியின் ஓலத்தை ஒரு கவிதையில் எழுதியது இன்னமும் ரணமாகவே இருக்கிறது. இப்படி வறுமையில், அறியாமையில் தவிக்கும் குழந்தைகளை நினைக்கும்போது ஒவ்வொரு மனமும் என்னத்த சம்பாதிச்சி சாதிச்சோம் என நினைத்தாலும் திரைப்படம் முடிந்துவிடும்போது எல்லாம் முடிந்தது போலாகி விடுகிறது.

அழகாக கதாபாத்திரங்களை கையாண்டு இருக்கும் இயக்குனரை மிகவும் பாராட்டலாம். பழைய கணக்கு எல்லாம் தொலைந்து போய்விட்டது. விடுகதை, கணக்கு கதை என மிகவும் அதி புத்திசாலிகளாக பலர் அன்றைய காலகட்டத்தில் எவ்வித தொழில் நுட்பம் இன்றி இருந்தது உண்டு. மிகவும் சிந்திக்க வைக்கும் செயல்களை செய்தார்கள். இந்த திரைப்படத்தில் காட்டப்படும் ஒரு வயதான கதாபாத்திரம் போன்ற மனிதர்கள் வாழ்ந்தார்கள், அவர்கள் இன்னமும் எங்கேனும் இருக்க கூடும் அல்லது நாம் தொலைத்து விட்டிருக்க கூடும். அரைக்கால், முக்கால், அரையணா என பல விசயங்கள் நம்மை விட்டு தொலைந்து போனது, நமது கலாச்சாரம் தொலைந்து கொண்டிருப்பதை போல.

நகைச்சுவை என திரைப்படத்தில் தனி கதாபாத்திரம் என வைக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களை விட, எல்லா கதாபாத்திரங்களுக்குள் நகைச்சுவை உண்டு என்று மிகவும் அழகாக சொன்னவிதம் பாராட்டலாம். எப்பொழுதுமே சிறுவர்கள் நடிக்கும் படங்கள் பெரியவர்களின் மனதினை ஒரு ஆட்டு ஆட்டி வைத்துவிட்டு போகும். உளவுரீதியாக நாம் அனைவரும் நமது பாலர் பருவ நிலைக்கு செல்லும் மனநிலை நம்மை சேர்வது உண்டு. நான் சின்னப்பையனா இருந்தப்போ... அந்த நினைவுகள் மிகவும் தாலாட்ட கூடியவை. இப்பொழுது இருக்கும் சிறுவர்களுக்கு அதுவும் குறிப்பாக நகர வாழ் சிறுவர்களுக்கு அந்த அனுபவம் குறைந்து போனதாகவே இருக்கும்.

அறிவாளியாக இருப்பதை விட ஏமாற்றப்படாத வெகுளியாக வாழ்வதில் இருக்கும் சுகம் தனி சுகமே. கதாநாயகன், கதாநாயகி என ஒரு மெல்லிய காதலை சுகமான பாடல் மூலம் வெளிப்படுத்தும் விதம் தனிச்சிறப்பு.

கிராம வளர்ச்சி என ஒரு சிறுகதை எழுதியபோது மனதில் ஏற்பட்ட வலி இந்த திரைப்படத்தினை பார்க்கும் போது வந்து போனது. ஒவ்வொரு படைப்பாளியும் தனக்குள் மாபெரும் ஏக்கத்தினோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனது ஏக்கங்கள் எழுத்து வடிவாகவோ, படங்கள் மூலமாகவோ வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் பிரச்சினைகள் அத்தனை எளிதாக தொலைவதில்லை.

ஊருக்கெல்லாம் பள்ளிகள் கட்டிய காமராசர், படிக்க வா என பசி போக்கிய காமராசர்... இப்பொழுது பெரும்பாலானோர் பணம் கட்டி படிக்க வைக்கிறார்கள் எதை எதையோ தொலைத்துவிட்டு. இதனால் படித்தவர்கள் தங்களையே தொலைத்து விடுகிறார்கள்.

படத்தில் சொல்லப்படும் ஒரு வசனம் 'விவரம் கெட்டவன்' இந்த வாசகத்திற்காகவே தைரியமாக தான் நினைப்பதை செய்ய முடியாத பலர் பயந்து ஒதுங்கிப் போனார்கள்.

படிப்பறிவு அனைவரும் பெறட்டும், படிப்பறிவு என்பது என்ன என்பதை படித்தவர்களும் தெளியட்டும்.

இவ்வுலகம் இருளால் ஆனது, பொருள் எனும் இருளால் ஆனது. இந்த இருள் போக்கவேண்டிய கல்வியும் இருளில் மூழ்கிப் போனதுதான் இவ்வுலகம் கண்ட மாபெரும் துயரம்.

பாராட்டுகள். வாகை சூட வா. அழைத்து கொண்டே இருப்போம். எவரேனும் தென்படுகிறார்களா? 

Thursday 7 October 2010

வம்சம் மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் - எச்சரிக்கை

வம்சம் நன்றாக இருக்கிறது என சொன்னார்கள்.

பாஸ் என்ற பாஸ்கரன் நன்றாக இருக்கிறது என சொன்னார்கள்.

சரி இந்த இரண்டு படத்தையும் பார்த்துவிடலாம் என தீர்மானம் செய்து முதலில் வம்சம் பார்த்தேன்.

வம்சம் துவம்சம். பாஸ் என்ற பாஸ்கரன் எரிச்சல் ஊட்டும் விதமாக இருந்தது, மொத்தத்தில் தமிழ் படங்கள் பார்க்காமல் இருந்துவிடலாம், பிறமொழி படங்கள் நான் பார்ப்பது மிகவும் அரிது, ஆனால் என்னதான் எடுத்து இருக்கிறார்கள் என பார்க்கும் ஆர்வம் தமிழ் படங்கள் பக்கம் அழைத்து சென்றுவிடுகிறது.

வம்சம்,  ஏன் சாமிகளா ஒரு படத்தை இப்படியா எடுக்கிறது? வம்ச பகை. உட்கார்ந்துட்டே இருக்கிறது. சண்டை போடுறது. அப்புறம் வரும் வம்சாவழியினர் பழைய பகைய மறக்கிறது. வம்சம் அம்சமாக இல்லை.

பாஸ் என்ற பாஸ்கரன்

ஊர் சுத்துவாராம். ஒரு வேலையும் செய்ய மாட்டாராம். தன்னோட கொள்கையை மாத்திக்க மாட்டாராம். வெட்டித்தனமா இருக்கிறதுக்கு என்ன கொள்கை பிடிப்பு வேண்டி கிடக்கு. இதுல காதல் மண்ணாங்கட்டி வேற. நகைச்சுவை காட்சிகளால் நகருகிறது படம். நண்பேன்டா என கழுத்தறுப்பு நடக்கிறது. கடைசி காட்சியில்  இயக்குநர் தனது முத்திரையை பதிக்கிறேன் என மொத்த படத்தையும் அடச்சே என சொல்ல வைக்கிறது. பாஸ் கரன் பெயில் கரன் ஆகிப்போனதுதான் மிச்சம்.

தமிழ்பட  இயக்குனர்களுக்கு

1  பணத்தை தேவையில்லாமல் விரயம் செய்யாதீர்கள். நீங்கள் செலவழிக்கும் பணத்தில் ஒரு பகுதி இருந்தால் போதும், விவசாயம் நமது நாட்டில் சீரும் சிறப்புமாக இருக்கும். தயவு செய்து விவசாய தொழில் செய்ய முயற்சியுங்கள்.

2   உங்கள் பண முதலீடு  இல்லை என்பதற்காக இப்படி எல்லாம் படம் எடுத்து தயாரிப்பாளர்களை நோகடிக்காதீர்கள், அதிலும் முக்கியமாக தமிழ் படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்களை வேதனைபடுத்தாதீர்கள்

3  உலக மகா இலக்கியம் படைக்கிறோம் என வீண் சவாடல் விடாதீர்கள். நல்ல நாவல்களை படமாக்க முயற்சியுங்கள்.

4 இனிமேல் ஒரு தமிழ் படம் எடுப்பதாக இருந்தால் தயவு செய்து ஒரு முறைக்கு பல முறை சிந்தியுங்கள்.

5 தமிழ் திரையுலகம் கதைகளை நம்பி இருப்பதில்லை சதைகளை நம்பி இருக்கிறது எனும் அவச்சொல் வேண்டாம்.

6 இன்னும் எழுத இருக்கிறது, இருப்பினும்  எப்படி எங்கள் எழுத்துகளை ஓசியில் படிக்கிறீர்களோ அதுபோல உங்கள் படங்களை ஓசியில் பார்க்க விட்டு தொலையுங்கள்.

Friday 23 July 2010

களவாணி எனும் திருட்டு பயலே

படம் பேரு என்ன சொன்னீங்க? களவாணியா? கலைவாணியா?

களவாணி தான் படத்தோட பேரு. களவாணி பயலுக ஜாஸ்தியா போய்ட்டாங்க போல, அதான் இப்படி எல்லாம் பேரு வைக்க தோணுது.

திருட்டு பயலே அப்படினு படம் எல்லாம் வந்திருக்குதானே?.

ஆமாம், அதுக்கென்ன, களவாணி அப்படிங்கிறது கிராமத்து பாஷை. அதை களவாண்டுட்டான், இதை களவாண்டுட்டான் அப்படினு சொல்வோம்ல. களவாணி பயலுக ஆட்டை திருடிட்டு போய்ட்டானுக அப்படினு சொல்வோம்ல. இப்ப புரியுதா களவாணி தான் படத்தோட பேரு. திருட்டு பயலே படத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.

திருட்டு பயலே அப்படின்னு சொல்றதும் களவாணி அப்படின்னு சொல்றதும் ஒண்ணுதானே?

அதுக்கு என்ன இப்போ? களவாணி அப்படிங்கிறது பொதுபால். திருட்டு பயல அப்படிங்கிறது ஆண்பால். அதிருக்கட்டும், அந்த கதை வேற, இந்த கதை வேற.

களவாணி எப்படி இருக்கு?

களவாணித்தனம் நிறைய இருக்கு. படம் பாத்து முடிச்சப்பறம் என்ன சொல்ல வராக? அப்படினு தோணிச்சி. அப்படியாகுமோ, இப்படியாகுமோ அப்படினு பரபரப்பு ஏற்படுத்தி இருக்காக,  படம் முழுக்க நகைச்சுவையாத் தான் இருக்கு.

நல்லவேளை,  மூட நம்பிக்கையை ஆதரிக்கும் படம் அப்படினு ஒருத்தர் கூட சவாடல் விடக் காணோம்.

என்ன சொல்றீக?

படம் நல்லா இருக்கு. பாருங்க. அதெல்லாம் எதுக்கு. நாம கிண்டிவிடனுமா? நாம நம்பிக்கையில ஊறின ஆளுக.

என்ன விமர்சனம் இப்படி இருக்கு?

களவாணிய நாமளும் களவாட வேண்டாம்னு விட்டுட்டேன். படம் பாருங்க. :)

Friday 2 July 2010

குடிசை - சினிமா விமர்சனம்

இப்படி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் தமிழில் வந்ததே இல்லை. இது போன்று ஒரு திரைப்படம் வருமா என எண்ண வைக்குமளவுக்கு அமைந்து விட்ட இந்த திரைப்படம் தமிழ் திரையுலகின் ஒரு மைல் கல் எனத் தைரியமாகச் சொல்லலாம்.

நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என அனைவருமே புதுமுகங்கள். இவர்கள் அனைவருமே ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான் படத்தின் சிறப்பம்சம்.

தமிழ் திரைப்படங்களில் கதை இல்லை எனும் குறையை தீர்த்து வைத்தப் படம் என சொல்லலாம். மசாலாவாக இருக்கட்டும் என நடிகையர்களை குழுவாக அரைகுறை ஆடையுடன் ஆட விடாமல், யதார்த்தம் இருக்க வேண்டும் என கிழிசல் உடையுடன் திரிபவர்கள் என எவரையும் காட்டாமல் இப்படியும் ஒரு திரைப்படம் எடுக்கலாம் கொஞ்சமும் மசாலா இல்லாமல் மிகவும் அழகாகவே ஒரு திரைப்படம் எடுத்து விட வேண்டும் என துணிந்து படம் எடுத்த இயக்குநர் அவர்களுக்கு ஒரு பாராட்டு.

பாடல்கள் இருக்கிறது. ஆனால் அவை எல்லாம் ஐந்து நிமிட பாடல்கள் என தனி இடம் பெறாமல் படத்தோடு ஒரு சில நிமிடங்கள் என அந்த கிராமத்தில் பாடித் திரிபவர்கள் பாடியதை படமாக்கி இருக்கிறார்கள். இதற்கெனவே பாடலை மிகவும் சிரமப்பட்டு ஆங்கில வார்த்தை கலக்காமல் அழகிய தமிழில் எழுதிய பாடலாசியருக்கு ஒரு பாராட்டு.

இசை. இதைப் பற்றி சொல்லித்தான் ஆக வேண்டும். எத்தனை தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஏதேதோ சொல்கிறார்கள். ஆனால் இந்த இசை அமைப்பாளர் இயற்கையாய் ஏற்படும் ஓசையை மட்டுமே பதிவு செய்து அதை படத்துடன் மிகவும் சாதுர்யமாக இணைத்து இருக்கிறார். கடமுடவன அதிர்வு சத்தங்களோ, காதினை குடையும் இரைச்சல் சத்தங்களோ படத்தில் எங்குமே கேட்க இயலவில்லை. நம்மை சுற்றி ஏற்படும் சப்தங்களையே இசையாக்கி தந்திருக்கும் இசை அமைப்பாளருக்கு ஒரு பாராட்டு.

நடிகர்கள், நடிகைகள் புதுமுகம் எனினும் படத்தின் கதைக்கு அருமையாக ஒத்துப் போகும் அழகிய முக பாவனைகள். முகத்தில் எவ்வித சாயமும் எவரும் பூசவில்லை. இது ஒரு திரைப்படம் என்கிற உணர்வே இல்லாமல் தங்களது வாழ்க்கையை அழகாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். இதில் யார் கதாநாயகன் எனக் கேட்டால் கதைதான் கதாநாயகன் என சந்தோசமாக சொல்லலாம்.

படத் தொகுப்பு செய்தவரையும், ஒளிப்பதிவாளரையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அதிக வெளிச்சம், கும்மிருட்டு, செயற்கை மழை என எதுவுமே இல்லாமல் இயற்கையோடு இணைந்து அந்த அந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். வறண்டு போன பூமி என்பதாலோ என்னவோ மழை காட்சி என படத்தில் இல்லவே இல்லை.

இந்த படமானது அனைத்தும் ஒரே ஒரு முறைதான் எடுக்கப்பட்டதாம். இப்படி நடி, அப்படி நடி என எந்த ஒரு காட்சியும் திரும்ப எடுக்கப்படவே இல்லையாம். இது திரையுலக வரலாற்றில் மாபெரும் சாதனை என சொல்லலாம்.

படம் முழுக்க ஒரு கிராமத்தை வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த கிராமம் மட்டுமே படமாகி இருக்கிறது.

இப்படி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் தமிழில் வந்ததே இல்லை. குடிசைக்கு அலங்காரம் அவசியமில்லை.

இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளும், நன்றிகளும்.

Sunday 25 April 2010

அங்காடித் தெரு - டிவிடி விமர்சனம்

இந்த படத்தைப் பத்தின எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகம்தான். கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி வெயில் அப்படின்னு ஒரு படத்தைப் பார்த்துட்டு அட நம்ம ஊரு அப்படின்னு ஒரு பாசம் வந்து சேர்ந்துச்சு. அதுக்கப்பறம் இப்ப வெயில் படத்தோட கதைய நினைச்சு பார்த்தா முழு கதையும் ஞாபகத்துக்கு வந்து சேர மாட்டேங்குது. இன்னொரு தரம் வெயில் படத்தைப் பார்த்துரனும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா இந்த அங்காடித் தெருவுக்கு அப்படி ஒரு நிலை ஒருபோதும் ஏற்படாது.

அங்காடித் தெரு அங்காடித் தெரு அப்படின்னு சொல்றாங்களே, இந்தப் படத்தைப் பாத்துட்டு பல பேரு மனசு ரொம்ப கனமா உணர்ந்தாங்கன்னு கேள்விபட்டு படம் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு இருந்துச்சி.

ரொம்ப நாளுக்கு முன்ன இப்படித்தான் பொற்காலம்னு பொக்கிஷம்னு ஒரு படத்தை ரொம்ப பொறுமையா பார்த்து முடிச்சேன். நானும் நல்லா இருக்குனு மத்தவங்ககிட்ட சொல்லி வைக்க படத்தை பாத்தவங்க சரியான குப்பைனு சொல்லிட்டாங்க. அப்படி சொன்னாக்கூட பரவாயில்லை, என்ன ரசனை உனக்குன்னு என்னைத் திட்டிட்டாங்க. அப்புறம் கந்தசாமி படத்தை நான் பாக்காம இருந்துட்டேன். மத்தவங்க எல்லாம் கந்தசாமி படத்தைப் பாத்துட்டு ஆஹா ஓகோனு பாராட்டினாங்க. சரி போய் தொலையுதுன்னு கந்தசாமியை ரொம்ப நாளைக்கப்பறம் பாத்து வைச்சேன். அப்ப என்னைய நானே திட்டிக்கிட்டேன். இது மாதிரி ஒரு படத்தை எல்லாம் பார்க்கனுமா சாமினு நினைச்சேன்.

இது போல ஒரு படம் தமிழ் சினிமாவுல வந்ததில்லைன்னு கேள்விபட்டு அதுக்கப்பறம் ஒரு படம் பார்த்தேன். அந்த படத்தோட பேரு உன்னைப் போல் ஒருவன். படம் நிறையவே பிடிச்சி இருந்தது. அப்புறம் தான் தெரிஞ்சது அந்த படத்துக்கு ரொம்ப பேரு சாயம் பூசிட்டாங்கனு. ஒரு படத்தை பாத்துட்டு ஐயோ அம்மான்னு கத்துற வழக்கம் நம்மளை விட்டு ஒருபோதும் மாறாது. அதக்கப்பறம் தமிழ்ப்படம்னு ஒரு படம், தன்னைத்தானே நகைச்சுவையோட விமர்சிக்கிறப்ப உண்மை நிலை தெரிஞ்சி போயிரும். அப்படிதான் இந்த படமும் இருந்துச்சி. நல்லாவே சிரிக்கத் தோணியது. அதுவும் கடைசி கட்டம் படத்தோட வெற்றின்னு சொல்லலாம்.

சரி அங்காடி தெருவுக்கு வருவோம். விருதுநகர் தெருவுல எல்லாம் இந்த அங்காடி அப்படிங்கிற வார்த்தை ரொம்ப பிரபல்யம். தெலுங்குல கூட 'அங்கடி' அப்படினு சொன்னா அது கடையைத்தான் குறிக்கும். அங்காடி அப்படிங்கிறது நல்ல தமிழ் சொல். கடைத் தெரு அப்படிங்கிறத விட அங்காடி தெரு ரொம்பவே நல்லா இருக்கு.

படம் தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் நிஜமான மனிதர்கள் கண்ணுக்கு வந்துட்டே இருந்தாங்க, அதனாலவோ என்னவோ படத்துல ஒரு பிடிப்பு இல்லாம போயிருச்சி. அப்புறம் சொல்வாங்க, ஏழையின் உணர்வினை புரிந்து கொள்ளனும்னா ஏழையாவே இருந்துப் பார்த்தாத்தான் தெரியும்னு. பணத்தோட புரளுரவங்களுக்கு, என்ன பெரிய கஷ்டம்னு மத்தவங்களை ஏளனமாத்தான் பாக்கத் தோணும்.

எங்க ஊருல இருந்து கூட தீப்பெட்டி வேலைக்கு, மண் அள்ளுற வேலைக்கு, பஞ்சு ஆலைக்குனு வேலைக்குப் போய்ட்டு வரவங்களப் பார்க்கறப்போ கஷ்டமாத்தான் இருக்கும். படிச்சி நல்ல வேலைக்குப் போகலாம்னு பார்த்தா இந்த படத்துல வரமாதிரி ஏதாவது ஒரு நிகழ்வு வந்து அவகளை கஷ்டத்திலேதான் வைச்சிருக்கும். 'எங்க பொழப்பு அப்படிதான் ராசா'னு அவங்க சொல்றச்சே 'சே என்ன வாழ்க்கை இது' அப்படினு ஒரு எரிச்சல் வந்துட்டுப் போகும்.

இந்த படத்துல நல்ல நல்ல பாடல்கள் இருந்தாலும் என் வழக்கப்படி பாடல்களை படத்தோட சேர்த்துப் பார்க்கிறது கிடையாது. பாடலை தனியாத்தான் பார்க்கிறது வழக்கம். சில படங்களுல பாடலை தள்ளிவிட்டுட்டுப் பார்த்தா ஏழை பணக்காரன் ஆகியிருப்பாரு. அந்த மாதிரி அசட்டுத்தனம் எல்லாம் இந்த படத்துல இல்லை.

படத்துல கஷ்டப்படறவங்களையும், அடிமைப்படுத்துதலும், பாலியல் தொல்லைக்கு உள்ளாகிற பெண் வர்க்கம்னு காட்டி இருந்தாலும், காதலோட வலியையும், காதலோட வலிமையையும் காட்டி இருந்தது நல்லா இருந்தது. கடைக்குள்ளாறப் போய் பொருள் வாங்கறப்ப எல்லாம் அவங்களும் நம்மளைப் போல மனுசருங்கனு முகம் சிரிச்சி அவங்களோடப் பேசியே பழகிப் போன எனக்கு இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருந்துச்சு. முன்னால இருந்த விசுவாசம் அப்படிங்கிற வார்த்தைக்கு இப்ப எல்லாம் கொடுக்கப்படற அடைமொழி அடிமைப்படுத்துதல், சுரண்டுதல். மத்தவங்களோட பலவீனத்தைப் பயன்படுத்தித் தன்னைத்தானே உயர்த்திக்கிறது ஒரு தனிமனுசனிலிருந்து ஒரு நாட்டு வரைக்கும் இருக்கத்தான் செய்து.

திருவிழா சமயத்துல பொருள் விக்கிறவங்களப் போல அங்காடித் தெருவில பொருள் விக்கிறவங்களோட வாழ்க்கை பார்க்கிறவங்களுக்கு கஷ்டம், ஆனா அப்படி வாழுறவங்களுக்கு வாழ்க்கை ஒருவித போராட்டம். பணம் வைச்சிருக்கிறவங்க காட்டுற பரிதாபம் ஒன்னும் யாரோட வாழ்க்கையையும் உயர்த்தப் போறதில.

இப்படி கஷ்டப்படறவங்க, வாழ்க்கையில நஷ்டபடறவங்களோட வேதனையை படைப்புகளாக எழுதி, படங்களா காட்டி தங்களோட பொழப்பை நடத்துர படைப்பாளிகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் மனசாட்சினு ஒன்னு இருந்தா இந்த நிலையை மாத்துரதுக்கு ஒரு தீர்வு கொண்டு வரட்டும். அது மட்டும் முடியாது, ஏன்னா இவங்களும் ஜோசியக்காரங்க போலதான். உன் வாழ்க்கை இப்படி ஆகும், அப்படி ஆகும்னு சொல்லும் ஜோசியக்காரங்க போல, இதோ இப்படி இருக்கு, அதோ அப்படி இருக்குனு படம் காட்டி ப்ச் கொட்டிட்டு போற கூட்டம். இதுபோன்ற இழிநிலை வலிக்கு நாமளும் காரணம்னு கொஞ்சம் கூட கவலைப்படாம எல்லாம் கர்ம வினைனு கைதட்டிட்டு போற கூட்டத்துல நாமளும் இருக்கோம்னு நினைக்கிறப்போ அதனோட வலி என்னவோ அதிகம் தான்.

Sunday 14 March 2010

கதை - டிவிடி விமர்சனம்

நாய்குட்டி படத்தோட விமர்சனம் மிச்சமிருக்கிறதால அதைப்பட்டி சொல்லிருவோம். நாய்க்குட்டி படத்துல விபச்சாரத்துக்கு போற பொண்ணுகளை தன்னோட சைக்கிள் ரிக்ஷாவில கூட்டிட்டு போய் விடற நாய்குட்டி பேரு வைச்சிக்கிறவருதான் படத்துல ஹீரோ. கூட்டிட்டுப் போய் ஆட்டோ, பணம்னு வளர்ந்துராரு. இப்படி அவர் வேலை செய்றப்போ அவர் பாக்குற காட்சிகள், காதலி அப்படினு படத்துலஅதிகம். ஒரு நண்பன் இந்த நாய்குட்டியை தப்பா புரிஞ்சிக்கிட்டதால அந்த நண்பனால இந்த நாய்குட்டி ஏமாத்தப்படறாரு, அந்த நண்பனால கடைசில இந்த நாய்குட்டி உயிர் பரிதாபமா போயிருது, இப்படிப்பட்ட நல்லவன் சாக காரணமாயிட்டனு அந்த நண்பனோட காதலி அந்த நண்பனை என்ன பண்றானு பல விசயங்களை சொல்லிட்டுப் போயிருக்கு நாய்குட்டியோட வாழ்க்கை. இவ்வளதான் கதை. வித்தியாசமாத்தான் இருந்திச்சி. 

ஆனா இதையெல்லாம் தாண்டி ஒரு படம் பார்க்க வேண்டி வந்திருந்திச்சி. அந்த படத்தோட தலைப்பே கதை. படம் பாத்துட்டு இருக்கறப்போ எனக்கும் ஒரு மாதிரியாத்தான் இருந்திச்சி. ஏன்னா படம் ஒரு எழுத்தாளரைப் பத்தியது. படம் பாத்துட்டே இருந்தப்போ நமக்கு இப்படி ஒரு நிலைம வந்துரக்கூடாது சாமினு கடவுளை வேண்டிட்டே இருந்தேன். எப்படி ஒரு எழுத்தாளர் தத்ரூபா ஒரு கதைய எழுதுறாருனு காட்டுறாக. தான் எழுதற கதையில தன்னோடமனைவியவே கதைபாத்திரமா மாத்தி அவருக்கு தொல்லை தரக்கூடிய எழுத்தாளாரா வலம் வராரு. 

வாழ்க்கையில கண்டதை, பார்த்ததை எப்படி எழுதற எல்லாருமே தன்னோட சொந்த சரக்கு மாதிரி எழுதி தள்ளிட்டு இருக்காங்கனு மனசில நினைச்சிக்கிட்டேன். சொந்த அனுபவங்கள கதைனு போர்வையில எழுதற ஆளுகளையும் இந்த படம் நினைவுக்கு கொண்டு வந்துச்சு. மனநிலை பாதிக்கப்படற அளவுக்கு ஒரு எழுத்து வெறி கொண்டு போகுதுனு பார்க்கறப்போ ஊருல உலாவுற பல எழுத்தாளர் சிகாமணிகள் கண்ணுக்கு வந்து போனாங்க. 

தன்னை நிலைநிறுத்திக்க எப்படியெல்லாம் வேஷம் போட்டுத் திரியறாகனு நினைச்சப்போ இந்த படம் கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு. எழுத்தாளர் ரொம்பவும் உச்சத்துக்கேப் போயிராரு. காமம் பத்தியெல்லாம் தன்னோட சொந்த விசயங்களை எழுதினத படிச்ச மனைவி துடிச்சிப் போயிருரா. மனைவியோட கருவை கலைக்க திட்டம் தீட்டி அதையும் செய்து ஒரு புத்தகமா அதைப் பத்தி எழுதி கொண்டாடும் வெறித்தனம் பிடிச்சவரா இருக்காரு இந்த எழுத்தாளரு. இதைப் பார்த்ததும் ரொம்ப பயமாத்தான் இருந்திச்சி. அட பாவிகளா, இப்படியெல்லாமா புகழ், பணம் பேருக்காக வெறி பிடிச்சி திரிவாங்கனு. 

பயம் இந்த படம் கொடுத்தது இல்ல, இந்த எழுத்தாளர போலவே நேத்து ஒன்னு பேசிட்டு , இன்னைக்கு ஒன்னு பேசிட்டு திரியற எழுத்தாளருக பலரு மனசுல வட்டமிட்டு போனதுதான் பயம் கொடுத்துச்சு. படம் பாத்துட்டே இருக்கறப்போ நானு எழுதன கதையெல்லாம் என்னைப் பாத்து சிரிச்சிச்சு. நாளிதழுல படிச்ச விசயத்த கதையா மாத்தி எழுதன நிலைம, இன்னொரு கதையை தழுவி நானு எழுதன கதைனு எனக்கு ஒருமாதிரிதான் இருந்துச்சு. 

இது மட்டுமில்லாம நகைச்சுவைனு ஒரு பகுதிக்கு அடுத்தவங்க எழுதுன கதையை தன் கதைனு பேரை மட்டும் மாத்தி திரியும் ஒருத்தரும் படத்துல வராரு. இதைப் பார்த்தப்போ ஒரு வலைப்பூவுல படிச்ச கதை திருடன எழுத்தாளருனு ஒருத்தரை பத்தி எழுதிருந்த விசயம்தான் நினைவுக்கு வந்துச்சு. அதே மாதிரி 'மறு பதிப்பு' அப்படினு நானு எழுதன ஒரு கதையும் ஞாபகத்துல வந்து தொலைஞ்சிச்சி. அடுத்தவங்க எழுத்தை அப்படியே எழுதி பேரு வாங்கனும்னு எதுக்கு திரியறாங்கனு நினைக்கிறப்போ, எழுத்தை மட்டுமில்ல அடுத்தவங்க வாழ்க்கையவே திருடி வாழற மனுசங்க மனசுக்கு வந்தாக. 

இப்படியே படம் பாத்துட்டே போனா ஒரு கட்டம் திணற வைக்குது. அட கண்றாவி, இப்படியெல்லாமா, எழுதறதுக்கா ஒரு மனுசன் தன்னை தரம் தாழ்த்திக்குவானு தோணுச்சி. நாட்டு நடப்ப நினைச்சா இதெல்லாம் ஒன்னுமில்லைனு நினைக்கவும் தோணுச்சி. அப்படி போகுது கதை. படத்து சான்றிதழுல 'வயது வந்தவருக்கு' மட்டும்னு போட்டதால இளைய தலைமுறை பாதிக்கப்படக்கூடாதுனு நினைச்சிக்கிட்டாங்கனு நினைச்சிக்கிட்டேன். 

படத்தோட கடைசி கட்டம் தான் ஒரு நிமிசம் ஐயா சாமினு சொல்ல வைச்சது. படத்துல வர மனைவி எரிச்சல கிளப்புரா. ஏன் நம்மூரு பொண்ணுக எல்லாம் இப்படி அடைச்சி வைச்சமாதிரி இருக்காகனு கடுப்பா இருக்கு. புருசன்னா அவன் என்ன செஞ்சாலும் சரினு ஏத்துட்டு வாழற அடிமைப்பட்ட வாழ்க்கைய பொண்ணுக வாழறத நினைக்கறச்சே கோவம் கோவமா வருது. ஓங்கி அறையற புருசன அம்மி எடுத்து அப்படியே கொன்னு போட்டு போனாத்தான் குறைஞ்சா போகப்போகுது தோணுது. 

வாழ்க்கையெல்லாம் அன்பே இல்லாம சத்தம் போட்டே வாழற புருசனைக்கூட தூக்கி வைச்சி ஆடற அந்த தாம்பத்ய உறவோட உன்னதம் எனக்குத்தான் தெரியாமப் போச்சு போலனு நினைச்சிக்கிட்டு இருக்கறப்போ கதைய முடிச்சவிதம் அந்த மனைவிய ஓங்கி அறை விடலாமானு தோணுச்சு. ஆனா காதலுனு ஒன்னு இருக்கே அதோட வலிமையும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்ய வைச்சிச்சி. காதலு எப்படியெல்லாம் ஒருத்தரை நடக்க வைக்குது. ஆனா இது காதலுனு சொல்றத விட காதல் வெறி, கட்டுக்குள்ள சிக்கிக்கிட்டு விலக முடியாத வலினு ஒவ்வொரு உசுரும் இந்த உலகத்துல போராடற வாழ்க்கையில இந்த கதை தலைப்பு வைச்ச படம் கதை இல்ல, ஏதோ ஒரு மூலையில நடந்துக்கிட்டு இருக்கற ஒரு கொடூரம். அவ்ளதேன். 

Wednesday 3 February 2010

ஆயிரத்தில் ஒருவன் - டி.வி.டி விமர்சனம்

வெளிநாட்டில் விற்பது எல்லாம் திருட்டு டி.வி.டி வரிசையில் சேராமல் இருப்பது வரை மிகவும் சந்தோசம்.

Thursday 14 January 2010

வெறும் வார்த்தைகள் - கருத்துரை

தங்களின் "வெறும் வார்த்தைகள்" படித்தேன். முடித்ததும் வெறும் வார்த்தைகளா இவை? என்ற வினா எழுந்தது உண்மை. பதில். இவை வெறும் வார்த்தைகள் அல்ல. பெரும் வார்த்தைகள். மற்றவர்களும் பெற வேண்டிய வார்த்தைகள்.

ஆன்மீகம், அறிவியல், காதல், மனித நேயம், ஜீவகாருண்யம் என்று சொல்ல வந்த வார்த்தைகள் அடக்கத்திலும், ஆற்றலிலும் அடர்த்தி மிக்கவை.

உறங்'குகை'யில் உயிர் நிற்கும் இடமேது
உணர்வில்லா நிலையில் கூட
உன்னை மட்டும் உணர்தலுக்கு நிகரேது.
இல்லை நீயெனச் சொல்லுதற்கு சொல்லைத் தந்து விட்டு
எல்லையிலா அண்டவெளியில் மறைந்து நின்று
காத்து அருளிகின்றாயோ அறிவதற்கு...

இந்த வினாக்கள் மனத்தில் எழுப்பும் அதிர்வலைகளை வார்த்தகளுக்குள் வரையறுத்தல் சிரமம். உறங்குகையில் என்பதைக் கூட இருவிதமாகப் பொருள் கொள்ளத் தூண்டுகிறது. உறங்குதல் என்பது தூக்கம். அதையே பிரித்து (குகையை எண்ணிப்) பார்த்தால் புரியும் பொருளின் தளம் அர்த்தம் பெறுகிறது. சலனமற்ற நீர் வெளியில் வந்து விழும் கூழாங்கல் எழுப்பிச் செல்லும் அலைகளைப் போல் ஞான வட்டம் முடிவிலியாய் விரிந்து கொண்டே போகிறது.

உருவம் இல்லா உன்னோடு
உருவகம் இல்லாத காதல்.

அரூபமான இறைவனைப் போற்ற ரூபங்கள் அவசியமல்ல. அவன் அத்தனை மொழிகளும் தெரிந்தவன். மௌனம் தரும் அடர்த்தியை பேச்சு மொழி தந்து விடாது. காதலின் பால பாடம் மௌனம் தான். அறியாமையை அறிந்து கொள்வது தான் ஆன்மத் தேடலின் ஆதி. இந்தச் சூட்சுமத்தை ஆங்காங்கே பொடி வைத்து வெடி வைத்திருக்கிறீர்கள்.

நிலத்தடியில் புதைந்த விதை. தருணம் வந்ததும் துளிர் விட்டுத் தளிர் விடுவது போல நிச்சயம் பலன் வரும் தங்கள் வார்த்தைகளுக்கு. அதற்கான நம்பிக்கையை நிறையவே விதைத்திருக்கிறீர்கள். வாய்மைக்கும், பொய்மைக்கும் இடையில் உள்ள நுண்ணிய திரையை உரசிப் பார்க்கும் கேள்விகளை நிறையவே எழுப்பியிருக்கிறீர்கள். சில கவிதைகளை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாமே என்று சொல்கிறது வாசக மனம்.

"வெறும் வார்த்தைகள்" மனித மனங்களில் மாற்றத்தைப் பெற்றுத் தரும். அப்போது அவை அட்சர இலட்சம் பெறும்.

எல்லாருக்கும் பொதுவான இறைவனின் ஆசியையும், ஞானத்தையும் அனைவருக்கும் வேண்டியவனாய்.


வெறும் வார்த்தைகள் கவிதைத் தொகுப்பு பெற:

தமிழ் அலை
1, காவலர் குறுந்தெரு,
ஆலந்தூர் சாலை,
சைதாப்பேட்டை
சென்னை ‍ 600 015
தொடர்புக்கு: 00919786218777