Friday 26 November 2010

இல்லத்தரசிகளின் இன்பமயம்

எனக்கேற்ற நண்பரை காணேன் 

தினங்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி வளர்ந்து கொண்டே இருப்பதை போல எனது மகளும் வளர தொடங்கினாள். எப்பொழுது தவழ்வாள், எப்பொழுது பேசுவாள் எனும் எதிர்பார்ப்பு என்னுள் அதிகமாகி கொண்டே போகையில் ஒரு நாள் எனது மனைவி என்னிடம் 'என்னங்க தனி குடித்தனம் போகலாமாங்க' என்றார். 'என்ன ஏதும் பிரச்சினையா' என்று கேட்டேன். 'நமக்குன்னு ஒரு குடும்பம் வந்திருச்சு, இனிமே நாம தனியா இருக்குறதுதான நல்லது' என்றார். எனக்கு புரிந்து போனது. எனது பெற்றோர்கள் ஏதேனும் சொல்லி இருக்க வேண்டும், இல்லையெனில் விளங்காத பாட்டி வந்து ஏதேனும் இவரின் மனம் வலிக்கும்படியாக பேசி இருக்க வேண்டும்.

'யாரும் எதுவும் சொன்னாங்களா' என்றேன். 'இல்லைங்க' என்றார். எத்தனையோ மாறிவிட்டார் எனது மனைவி. ஒரு நாள் கூட என்னுடன் சண்டை போடுவதில்லை. எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஏதேனும் கேட்டு என்னால் இயலாமல் போனால் என்னை நச்சரிப்பதில்லை. எப்போ முடியுதோ அப்போ செஞ்சா போதும் என அமைதியாக இருந்துவிடுவார். அவருடைய இந்த மாற்றத்தை கண்டு நானும் என்னை  மாற்றி கொண்டேன். பரிசீலிக்கிறேன் என சொன்னேன். மறந்துராதீங்க, இனிமே இதை பத்தி பேசமாட்டேன் என சொன்னார்.

என்னுடன் வேலை பார்த்த பெண் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வந்து போவார். மிகவும் சந்தோசமாகவே காணப்பட்டார். அதிக பணம் இருந்தால் நிம்மதி போய்விடும் என்பார்கள். ஆனால் அதிக பணம் அவளிடம் இருக்கும் காரணத்தினால்  அவள் நிம்மதியாக இருப்பதாக சொல்லும்போதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். அவள் புதிய இடத்திற்கு போக இருப்பதாகவும், இனிமேல் தொடர்ந்து வீட்டுக்கு வர இயலாது என சொன்னபோது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. எங்கு செல்வது என்பது பற்றி எதுவும் முடிவு செய்யவில்லை என சொல்லி சென்றார்.

ஒரு சில தினங்களில் வீட்டில் எனது பெற்றோர்களிடம் நான் புதிய வேலைக்கு செல்ல இருப்பதாக சொன்னேன். இப்போ இருக்கிற வேலைக்கு என்ன பிரச்சினை என்றார்கள். பிரச்சினை இல்லை, ஒரே இடத்தில் பல வருடங்கள் வேலை பார்க்கும் மன பக்குவம் எனக்கு இல்லை என சொன்னேன்.  வேலை பார்க்க செல்லும் இடம் அதிக தொலைவு எனவும், அங்கேயே ஒரு வீடு எடுத்து தங்கி வேலை பார்க்க வேண்டும் என சொன்னதும் எனது பெற்றோர்கள் மிகவும் கவலைபட்டார்கள். எனது மனைவியையும் என்னுடன் அழைத்து செல்கிறேன் என சொன்னதும் நிறையவே கவலைபட்டார்கள்.

'பறக்க நினைச்சிட்டீகளோ' என எனது தந்தை சொன்னதோடு நிறுத்தி கொண்டார். நாளும் வந்தது. நாங்கள் கிளம்பினோம், அப்பொழுதுதான் எனக்குள் மனது மிகவும் வலித்தது. 'எங்களோட ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்' என என் அம்மா சொன்னபோது எனக்குள் அழுகை வந்துவிட்டது. மனைவியை பார்த்தேன். அவள் எடுத்த முடிவு தவறோ என அவள் நினைத்து இருக்க கூடும்.

'லீவு கிடைக்கறப்ப எல்லாம் வாங்க' என எங்களை வழியனுப்பிய அவர்களை பார்த்து மனதில் வேண்டிக்கொண்டேன். புதிய வீடு, புதிய மனிதர்கள், புதிய இடம். வேலைக்கு செல்லாத எனது மனைவி மிகவும் சந்தோசமாகவே இருந்தார். தினமும் வேலையை விட்டு வந்ததும் அவருடன் பேசுவதில் எனது பொழுது கழியும். தனியாக இருப்பது கவலையாக இருக்கிறதா என்று கேட்டபோது, இப்பொழுதுதான் இரண்டு மடங்கு என்ன பல மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் அன்பு எனக்கு அதிகமாகவே கிடைக்கிறது. நிறைய ஓய்வு இருக்கிறது. நம் மகளை பார்த்து பார்த்து வளர்க்க முடிகிறது என்றார்.

பாவம் உன் பெற்றோர்கள், என் பெற்றோர்கள், நாளை அவர்களின் நிலை நமக்கும் வரலாம் என சொன்னபோது 'அவர்கள் நிம்மதியாகத்தான் இருக்கிறார்கள், தினமும் இரண்டு வீடுகளுக்கும் நான் அரைமணி நேரம் பேசிவிடுவேன்' என்றார். இந்த வாரம் ஒரு நாள் அங்கு, ஒரு நாள் இங்கு என செல்லலாம் என அவர் சொன்னபோது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

எனது குடும்ப வாழ்க்கை இத்தனை மகிழ்ச்சிகரமாக அமையும் என ஒருபோதும் நான் கனவிலும் நினைத்தது இல்லை. எனது நண்பர்கள், எனக்கு பழக்கமானவர்கள் எல்லாம் தினமும் ஏதேனும் பிரச்சினைகளுடன் இருக்கும்போது வீட்டுக்கு வீடு வாசற்படி என சொல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள். ஆனால் எனது வீட்டுக்கு மட்டும் எப்படி வித்தியாசமான வாசற்படி வந்து சேர்ந்தது.

இருவரின் பெற்றோர்களை பார்த்துவிட்டு வந்தோம். மனதில் நிறைய சந்தோசம் நிறைந்து இருந்தது. ஒருவேளை எனது மனைவிக்கு வேலைக்கு செல்ல நினைத்தால் என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்தேன். அதை அவரிடமும் கேட்டுவிட்டேன். எதற்கு நான் வேலைக்கு செல்ல வேண்டும், எனக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடித்து இருக்கிறது.

குழந்தை கவனிப்பு, வீட்டு கவனிப்பு என மிகவும் நிம்மதியாகவே இருக்கிறது என்றார். இத்தனை படித்தும் வேலைக்கு செல்லவில்லையே எனும் ஏக்கம் இல்லையா? என்றேன். வீட்டில் இருந்தே ஏதேனும் வேலை செய்ய முடிகிறதா என பார்க்கிறேன் என்றார். நல்ல யோசனை. ஏதேனும் முடிந்தால் சொல் என சொன்னேன். அவரின் விருப்பபடி ஒரு கணினி வாங்கினோம். அத்துடன் இணைய இணைப்பும் வாங்கினோம். தினமும் புதிது புதிதாக  பல விசயங்களை என்னுடன் பேச ஆரம்பித்தார்.

வாழ்க்கை எத்தனை இனிமையாக இருக்க கூடும் என மனதில் நினைத்து கொண்டேன். அந்த வார இறுதியில் எனது மாமா மகள், அத்தை, மாமா என மூவரும் எனது மாமா மகளின் திருமண பத்திரிகையுடன் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். பத்திரிகையை பார்த்தபோது எனது பெயர் எல்லாம் போட்டு இருந்தது. பையன் அமெரிக்காவில வேலை பார்க்கிறான், இவளும் கல்யாணம் முடிச்சிட்டு அமெரிக்கா போக போறா என்றார். எப்படி அந்த சம்பந்தம் கிடைச்சது என்றேன். இப்ப இருக்கிற நிலைமையில என்னவென்னவோ நடக்குது என அங்கலாய்த்தார். எனது மாமா மகள் என்னிடம் வந்து 'இண்டர்நெட்டுல பிடிச்சேன் மாமா' என்றார். அப்பொழுது எனக்குள் ஒரு இனம் புரியாத கவலை வந்து தொலைந்தது.

மாமா மகளின் கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. கல்யாணம் நடந்த சில வாரங்களில் அவள் அமெரிக்கா பறந்து போனாள். என்னுடன் வேலை பார்த்த பெண் ஒருமுறை என்னை பார்க்க வந்து இருந்தாள். அவளின் முகத்தில் கவலை குடி கொண்டு இருந்தது. என்ன ஆயிற்று என்றேன். 'பணம் குழந்தையை தருமா?' என்றார். மனம் பக் என்றது.

(தொடரும்)

Thursday 25 November 2010

அடியார்க்கெல்லாம் அடியார் 35

வேகமாகத் திரும்பிய அந்த நபர் மதுசூதனனை நோக்கி ''உன்னை சிவலோகம் அனுப்புதேன், நீயே சிவனைச் சந்திக்கலாம்லே'' என அரிவாளை ஓங்கினார். அப்போது சிலர் ஓடி வந்தார்கள்.

''
என்னை வெட்டட்டும், இடைமறிக்க வேண்டாம்'' என நின்றான் மதுசூதனன். அரிவாளுடன் வந்தவர் கூட்டம் கண்டு ஒருநிமிடம் தடுமாறினார். ''விலகும்லே, அவனை'' என்றார் அந்த நபர். மற்றவர்கள் ஓடி வந்து அந்த நபரைப் பிடித்து அடிக்க ஆரம்பித்தார்கள். அந்த இடத்திலிருந்து விரைந்து ஓடி மறைந்தார் அந்த நபர். 

மதுசூதனனை நோக்கி கூட்டம் ஏற்பாடு செய்த சுப்பிரமணி, ''சாமி நீங்க தங்க ஒரு அறை ஏற்பாடு பண்ணியிருக்கேன், நீங்க இங்கேயே இருக்கலாம். உங்களுடைய பேச்சு மிகவும் நல்லா இருக்கு, என்னுடைய விண்ணப்பத்தை ஏத்துக்கிரனும்'' என்றார். 

மதுசூதனன் சம்மதம் தெரிவித்தான். ''எம் அடியாரும் எம்முடன் இருக்கச் சம்மதம் சொன்னால் மகிழ்வேன்'' என்றான் மதுசூதனன். ''டேய் உன்னை'' என கோபம் கொண்ட கதிரேசன் சினம் அடக்கினான். ''நீதான் எனக்கு அடியார்'' என்றான் மதுசூதனன் மறுபடியும். 

கதிரேசன் ஈஸ்வரியுடன் கிளம்பினான். வைஷ்ணவி மதுசூதனனிடம் '' உன் நிலைமையைப் பார்த்தாயா?'' என்றாள். ''என் மதியின் நுட்பம் எவருக்கும் தெரிவதில்லை'' என்றான் மதுசூதனன். ''நீ மாறிட்டேனு நினைச்சேன்'' என்றாள் வைஷ்ணவி. ''உம்மிடம் யாம் எவ்வித மாற்றமும் கொள்வதில்லை'' என்ற மதுசூதனன் ''செல்லலாமா'' என சற்றுத் தள்ளி நின்றிருந்த சுப்பிரமணியிடம் கூறினான்

மதுசூதனன் தினமும் சிவன் கோவிலில் உரையாற்றத் தொடங்கினான். அவனது உரையைக் கேட்டு அனைவரும் பாராட்டிச் சென்றார்கள்.

ஒரு நாள் இரவு மதுசூதனன் தங்கி இருந்த அறையில் வெளிச்சம் பரவியிருப்பதைக் கண்டு தயங்கிய அந்த நபர் மெதுவாக சன்னல் வழியே எட்டிப்பார்த்தார். மதுசூதனன் தியான நிலையில் அமர்ந்து இருந்தான். அவனை அந்தக் கோலத்தில் கண்டதால் தனது கையில் இருந்த அரிவாளின் மேலிருந்த பலம்தனை சற்று தளரச் செய்தது. மதுசூதனன் கண்களைத் திறப்பதைக் கண்டதும் அறைக் கதவைத் தட்டினார் அந்த நபர். மதுசூதனன் கதவைத் திறந்தான். பக்கத்து அறைக்கதவுகளும் திறந்தது.

அரிவாளுடன் ஒருவர் நிற்பதைக் கண்ட பட்டாச்சாரியர்கள் இருவர் பாய்ந்து வந்து அந்த நபரைப் பிடித்தனர். அந்த நபரின் கையில் இருந்த அரிவாள் கீழே விழுந்தது. ‘’அவரை விட்டுவிடுங்கள், என்ன நினைத்து வந்தாரோ அதைச் செய்துவிட்டுப் போகட்டும்’’ என்றான் மதுசூதனன். ‘’உங்களைக் கொல்ல வந்திருக்கிறான், சும்மா இவனை விடச் சொல்றீகளே’’ என பட்டாச்சாரியர் முணுமுணுத்தார். அந்த நபர் திமிறினார். கால்களை முன்னும் பின்னும் உதைத்தார். ‘’அவரை விடுங்கள்’’ என்றான் மதுசூதனன். 

பட்டாச்சாரியர் ஒருவர் குனிந்து அரிவாளை எடுத்துக் கொண்டார். அந்த நபரை விட்டார்கள், அந்த நபரை உள்ளே அழைத்தான் மதுசூதனன். பட்டாச்சாரியர்கள் காவலுக்கு இருப்பதுபோல் நின்றார்கள். மதுசூதனன் அவர்களை அவர்களுடைய அறைக்குப் போகச் சொன்னான்.

மதுசூதனன் கதவை சாத்தினான். ‘’என்மேல் நீவிர் கொண்ட வெறுப்பிற்கான காரணம் அறியத் தருவீரா’’ என்றான் மதுசூதனன். ‘’நீ பொய் வேசம் போடுதல, சாமிய கும்பிடுறது உண்மையா இருக்கறதுக்குல, இப்ப கூட நீ கருணை காட்டுதேனு நினைக்காதல, அடிச்சே கொன்னு போடுவேன்ல’’ என்றார் அந்த நபர். ‘’செய்துவிட்டுப் போ’’ என்றான் மதுசூதனன். மதுசூதனனை ஓங்கி அறைந்தார் அந்த நபர். சத்தம் கேட்டு பட்டாச்சாரியார்கள் ஓடி வந்தார்கள். மதுசூதனனின் மார்பில் எட்டி உதைத்தார் அந்த நபர். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் எந்த சப்தமும் எழுப்பாமல் அமைதியாய் இருந்தான் மதுசூதனன். பட்டாச்சாரியார்கள் அந்த நபரை பாய்ந்துப் பிடிக்கப் போனார்கள். ‘’இதுதாம்லே உனக்கு கடைசி’’ எனச் சொல்லிவிட்டு அறையைவிட்டு ஓடினார் அந்த நபர். 

மதுசூதனன் எழுந்தான். ‘’வலிக்கிறதா, போலீஸுக்குத் தகவல் சொல்லி அனுப்புவமா’’ என்றார் பட்டாச்சாரியார். எதுவும் வேண்டாம் என சைகையிலேயே சொன்னான் மதுசூதனன்.

பட்டாச்சாரியர்கள் இரவில் நடந்த விசயத்தை கோவில் நிர்வாகியிடம் சொன்னார்கள். அவர் பதறிப்போனார். மதுசூதனனிடம் விபரம் கேட்டார். மதுசூதனன் அமைதியாகவே இருந்தான். காவல்துறைக்குச் செல்வதைத் தவிர்த்தார்கள்

மதுசூதனன் ஒருநாள் கதிரேசனை எதிர்கொண்டான்.''வைஷ்ணவியைப் பொண்ணுப் பார்க்க வந்திருக்காங்க' என்றான் கதிரேசன். அசட்டுப் புன்னகை புரிந்தான் மதுசூதனன். ''என்கூட வைஷ்ணவி வீட்டுக்கு வா'' என்றான் கதிரேசன் மேலும். 

கதிரேசன் முன்னால் நடக்க அவனைப் பின் தொடர்ந்தான் மதுசூதனன். ''என்னை உன்னோட அடியாரா இருக்கச் சொன்னீயே, நீ சிவனுக்கு இன்னுமா அடியார், நீ கோவிலுல ரொம்ப அருமையாப் பேசினனு ஒருநாள் கோவிலுக்குப் போன என் அம்மா ரொம்பச் சந்தோசமாச் சொன்னாங்க, உனக்கு எப்படி இப்படியொரு எண்ணம் வந்தது, நீ வேஷம் போடுறனுதான் நினைச்சிட்டு இருந்தேன் ஆனா நீ எவ்வளவு மாறிட்ட'' என்றான் கதிரேசன். மதுசூதனன் புன்னகை மட்டுமே புரிந்தான்.

வைஷ்ணவி வீட்டினை அடைந்தார்கள். அங்கே மதுசூதனின் மனைவி ருக்மணி இருப்பதை சற்றும் மதுசூதனன் எதிர்பார்க்கவில்லை. ''இவ்வளவுப் படிச்சிட்டு நீ இப்படி ஒரு முடிவுக்கு ஏன் போன, நீ வேலைப்பார்த்துட்டே, குடும்பத்துல இருந்துக்கிட்டு இறைப்பணி ஆற்றலாமே'' என்றார் மதுசூதனனின் பெற்றோர். 

''இனிமேல் நீங்க இங்க இருக்க வேணாம், நான் அவசரப்பட்டுட்டேன்'' என சொன்னார் ருக்மணி. ''மதுசூதனா, என்ன தயங்குற'' எனறாள் வைஷ்ணவி. ''இவள் எம்மோடு என் அடியாராய் தங்கட்டும்'' என்றான் மதுசூதனன். வா என ருக்மணியை தன்னுடன் அழைத்தான் மதுசூதனன். 

''அறிவுகெட்டவனே, உன்னை கொன்னாத்தான் சரியாகும்'' என மதுசூதனின் தந்தை அவனை அடிக்க ஓடினார். ''எம்மை யாம் கொன்று பல மாதங்கள் ஆகிவிட்டது, உமக்கும் சம்மதம் எனில் உமது மனைவியருடன் எமக்கு அடியாராய் நீவிர் இருக்கலாம், எமது அடியாரை வழி மறிக்காதீர்'' என நடந்தான் மதுசூதனன். அவனை பின்தொடர்ந்து நடந்தாள் ருக்மணி.

(தொடரும்)