Thursday 18 November 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 33

வைஷ்ணவியை தனது அறைக்கு அழைத்துச் சென்றாள் ஈஸ்வரி. மனதினை தைரியமாய் வைத்துக்கொள்ளுமாறு அறிவுரைச் சொன்னாள். வைஷ்ணவிக்கு ஈஸ்வரியின் அன்பும், ஆறுதலும் புதுத் தெம்பினைத் தந்து இருந்தது. ''நாம செஞ்ச பாவத்தை எல்லாம் போக்க பாபநாசம் போனா போதும்'' என்றாள் ஈஸ்வரி. ''பாவம்னு எதை சொல்றது, பண்ற காரியமெல்லாம் பாவ காரியம்னு தான் சொல்லி வைச்சிருக்காங்க, பாபநாசம் எல்லாம் போக வேண்டியதுல்ல'' என்றாள் வைஷ்ணவி. ''அந்த ஊருக்கு அதான் அப்படி பேரு வைச்சிருக்காங்க, நாம எல்லாரும் ஒருநாள் போய்ட்டு வருவோம்'' என்றாள் ஈஸ்வரி.

''
சந்தோசமா இரு வைஷ்ணவி'' என்றான் கதிரேசன். ''ம்ம், நீங்க எல்லாம் இருக்கறப்போ எனக்கு என்ன கவலை, சந்தோசமாகவே இருப்பேன்'' என்றாள் வைஷ்ணவி. அன்றைய தினம் கதிரேசனின் வீட்டிலேயே பொழுதைக் கழித்தாள். செல்லாயி வைஷ்ணவியின் மேல் காட்டிய அன்பு வைஷ்ணவி மேலும் சந்தோசம் கொள்ளச் செய்தது. 

நாட்கள் நகர ஆரம்பித்தன. ஒருநாள் வேலைக்குச் சென்று திரும்பிய மதுசூதனனை நோக்கி மிகவும் பயங்கரமாக சத்தம் போட ஆரம்பித்தாள் ருக்மணி. ''விவாகரத்துக்கு தயாரா இருங்கோ'' என்றாள் ருக்மணி. அதிர்ச்சியானான் மதுசூதனன். சத்தம் கேட்டு மதுசூதனனின் பெற்றோர்கள் ருக்மணியைச் சத்தம் போட்டார்கள். அந்த வேளைப் பார்த்து ருக்மணி தனது பெற்றோர்களை வரச் சொல்லி இருக்க அவர்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். ''இதோ இவா ஒரு பொண்ணை காதல் பண்ணி, ஏமாத்திட்டு என்னை கல்யாணம் பண்ணி இருக்கா. நான் ஒரு நல்ல வைணவப் பொண்ணா இருக்கனும்னு ஒரு வருசம் தாம்பத்யமே கூடாதுனு எங்கிட்ட சேலஞ்ச் பண்ணினா, புரியாம நானும் ஒப்புக்கிட்டேன், இனிமே என்னால இவாவோட வாழ முடியாது, பிரிச்சிருங்கோ'' என சத்தமாகவேச் சொன்னாள் ருக்மணி. 

இருவரது பெற்றோர்களும் அதிர்ச்சியில் அப்படியே நின்றார்கள். மதுசூதனனின் உடலெல்லாம் வியர்த்துக் கொட்டத் தொடங்கியது. சப்தநாடிகளும் ஒடுங்கிப் போனவனாய் மறுவார்த்தைப் பேசாது நின்றான். ''என்னை வைணவப் பொண்ணுனு நிரூபிக்கச் சொன்னா, இவா வைணவனானு கேளுங்கோ, இனிமே இவாவோட வாழறது பொய்யான வாழ்க்கையாத்தான் இருக்கும்'' என்றாள் ருக்மணி. ''ரொம்பப் பேசாதே, இவனுக்கு ஆயிரம் பொண்ணு கிடைப்பாங்க, வெளியே போ'' என்றார் மதுசூதனனின் தந்தை. அடுத்த நிமிடமே ''ஆகிறதைப் பாருங்க'' என ருக்மணியை அழைத்துக் கொண்டு அவளது பெற்றோர்கள் வெளியேறினார்கள். 

''
நீ கவலைப்படாதேடா'' என்றார் மதுசூதனனின் தாய். ஆனால் மதுசூதனன் வீட்டை விட்டு வெளியேறினான். அவனைத் தடுத்து நிறுத்த எவ்வளவோ முயற்சித்தார்கள். ''இத்தனை நாள் நீ செஞ்சதெல்லாம் சரினு தான இருந்த இப்போ அவ சொன்னதும் என்னடா ஆச்சு உனக்கு'' என மதுசூதனனின் தாய் சத்தமிட்டார். ஊர் கூடியது. பதில் ஏதும் பேசாமல் நடக்க ஆரம்பித்தான் மதுசூதனன். ''நில்லுடா'' என அவனது தந்தை சத்தமிட்டார். ''பொய்யனாகிப் போனேன் மெய் எடுத்தும் பொய்யனாகிப் போனேன்'' என்று பெற்றோர்களை நோக்கி இருகைகள் கூப்பி வணங்கி சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான். செய்வதறியாது திகைத்து நின்றார்கள் மதுசூதனின் பெற்றோர்கள்.

ஒவ்வொரு ஊராக செல்ல ஆரம்பித்தான். கோவில்களும், குளங்களும் அவனது உறவுகளாகின. சிவன் வேண்டாம் என்றவன் சிவனுக்கு உறவானான். வழியில் கிடைத்ததை உண்டு பசி போக்கினான். வழியில் கஷ்டபடுபவர்களை கண்டு உதவிகள் செய்தான். 

சங்கரன்கோவிலுக்குப் பயணமானான். மதுசூதனனிடம் பணம் வாங்காமலேயே பயணச்சீட்டு கிழித்துக் கொடுத்தார் நடத்துநர். ''டிக்கட்டுக்கு காசு கொடு'' என்றார் பக்கத்தில் இருந்தவர்''சாமிக்கு எதுக்கு காசுசாமிகிட்டதான் ஏது காசு'' என்றார் நடத்துநர். அவர் சிரித்துக்கொண்டே அடுத்த பயணியிடம் சென்றார். மதுசூதனன் கண்களை மூடியவாறு அமர்ந்து இருந்தான். சங்கரன் கோவிலில் சிவன் ஆலயத்தில் மதுசூதனன் பாடினான். 

''
பொய்யனாகிப் போனேன் சிவனே 
பொய்யனாகிப் போனேன்
மெய்யாய் நீயும் வீற்றிருக்க
பொய்யனாகிப் போனேன்
தையல் மனம் தைத்துப்
பொய்யனாகிப் போனேன்
மெய்யில் உயிர் கொண்டது
பொய்யனாகவோ சிவனே''

பாடிய குரல், பரிச்சயப்பட்ட குரல் போல இருப்பதைக் கேட்டு கோவிலுக்கு வந்திருந்த  கதிரேசன் பாடியவனை நோக்கி வந்தான். ''மதுசூதனா'' என்றான் கதிரேசன். கதிரேசனைப் பார்த்ததும் மதுசூதனன் கண்கள் மூடினான். ''என்ன கோலம் இது?'' என்றான் கதிரேசன். கோவிலுக்கு வந்திருந்த வைஷ்ணவி, ஈஸ்வரி, செல்லாயி அங்கே வந்தார்கள். அவர்களை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தான் மதுசூதனன். கதிரேசன் அவனைப் பிடித்து நிறுத்தினான். 

'நில் மதுசூதனா' என்றான் கதிரேசன். பதிலேதும் பேசாமல் நின்றான் மதுசூதனன். ''நீ எதுக்கு இப்படி வேசம் போடுற உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்க?'' என்றான் கதிரேசன். 

''
மனம் நாடியதை மனம் வெறுத்தது; நாடுவது எதுவென கண்டேன்; பொய்யனாகிப் போனதை புரிந்தேன்'' என்றான் மதுசூதனன். கதிரேசனுக்கு மதுசூதனனை ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது. பெரிய ஞானி போல நடந்து கொள்கிறானே என கோபமாக வந்தது. ''ஒழுங்காப் பேசப் போறியா, பல்லை உடைக்கவா'' எனக் கேட்டான் கதிரேசன். 

''
உன்னைச் சிவன் பக்தன் என எண்ணியிருக்க, உன்னுள் விஷம் ஏறிட உதவியது குடும்பமோ, சேர்ந்த குலமோ'' என்றானேப் பார்க்கலாம் மதுசூதனன். கதிரேசன் பளார் என மதுசூதனனை அறைந்தான். மதுசூதனன் சிரித்தான். 

''
உள்ளே எரியும் எரிமலையெல்லாம் வெளித்தூக்கி எறிந்திட, வெளிச்செல்லும் எரிமலையும் உன்மீது வெப்பமின்றி விழுந்து குளிர்ந்தாலன்றி நீயும்தான் சிவனுக்கு அடியார் ஆவாயோ? நானே ஆனேன் சிவனின் அடியார், அந்தச் சிவனுக்கு எம்பெருமான் திருமாலும் அடியார்'' எனச் சிரித்துக்கொண்டேச் சொன்னான் மதுசூதனன். கதிரேசன் மறுமுறை அவனை அடிக்க ஓங்க அவனது கைகளைப் பிடித்து நிறுத்தினாள் ஈஸ்வரி. 

''
என்ன காரியம் பண்றீங்க, உங்க மனசுக்கு ஏத்தமாதிரி அவர் நடந்துக்கிரலைங்கிறதுக்காக உங்க வெறுப்பை ஏன் காட்டுறீங்க, இத்தனை நாள் இல்லாத கோவம் இப்போ ஏன் வர்ரது உங்களுக்கு'' எனக் கேட்டாள் ஈஸ்வரி. 

''
வைஷ்ணவியை ஏமாத்திட்டான், இன்னொரு பொண்ணையும் கல்யாணம் பண்ணி ஏமாத்திட்டான் இப்போ அந்த சிவனுக்கே களங்கம் விளைவிக்கிறமாதிரி அடியாராம் அடியார், அடி வைச்சா எல்லாம் இவனுக்குப் புரியும், என்னை விடு ஈஸ்வரி'' என்றான் கதிரேசன். கணவனின் ஆத்திரம் காண இயலா ஈஸ்வரி சற்று மிரண்டு போனாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வைஷ்ணவி ''இந்த பாவத்தை நாம ஏன் சுமக்கனும், வாங்க'' என அழைத்தாள். 

''
பொய்யனாகிப் போவாய் நீயும், எல்லாம் புறந்தள்ளி என்போல் நீயும் ஆலயங்கள் செல்வாய் இது என் அழையாத அழைப்பு அதுவே நீ கொள்ள் இருக்கும் புதுப்பிழைப்பு'' என்றான் மதுசூதனன். கதிரேசனுக்கு ஆத்திரம் வந்தது. மதுசூதனனை நோக்கிச் சென்றான். அவனது கழுத்தைப் பிடித்து உயர்த்தினான். கூட்டம் கூட ஆரம்பித்தது. 

''
உன்னைப் போல ஊர் ஊரா சிவன் தேடுற அவசியமில்லை எனக்கு'' என கோபமாகச் சொல்ல வைஷ்ணவி கதிரேசனை ''வா கதிரேசா கூட்டம் சேருராங்க'' என வரச் சொன்னாள். ஈஸ்வரி தனது அத்தையைப் பார்த்தாள். அதுவரை பேசாமல் இருந்த செல்லாயி கதிரேசனின் கைகளைத் தட்டி விட்டுவிட்டு மதுசூதனனிடம் '' நீ சாப்பிட்டியாப்பா'' என்றார்.

''
உயிர்கொல்லும் விஷம் உட்கொண்டு உயிர்பிழைக்கும் வித்தை கொண்டோனிடம் என்பசி என்னுயிர் கிள்ளும் வழியை அடைக்கச் சொல்லியா கேட்பேன் இருநாட்கள் விரதமானேன் இன்றே விரதம் போக்குவேன்'' என்றான் மதுசூதனன். சுற்றிப்பார்த்தவர்கள் ''சாமி சாப்பிடலலே, போய் சாமிக்கு ஏதாவது வாங்கியாருங்கலே'' என சொல்லிவிட்டு ''ஏன் தம்பி சாமியோட தகராறு பண்ணுத'' என கதிரேசனை நோக்கியும் அவர் சொன்னார்.

''
இவனா சாமி?'' என சொல்லிவிட்டு கதிரேசன் விலகி நின்று கொண்டான். ''வீட்டுக்கு வாப்பா'' என செல்லாயி மதுசூதனனை அழைத்தார். மதுசூதனன் செல்லாயி பின்னால் நடக்க ஆரம்பித்தான். ''எங்களோட வராதே'' என்றான் கதிரேசன். 

''
அன்னையின் வாக்கினைத் தவறும் நீயும் ஆவாயோ சிவனின் அடியார், நானே சிவனின் அடியார், எம்பெருமான் திருமாலும் சிவனின் அடியார்'' என்றான் மதுசூதனன். ''அவன் பொல்லாதவன்மா, போகச் சொல்லும்மா'' என்றான் கதிரேசன். 

''
வெறுப்பைக் காண வெறுப்பு சுரக்கும்; அன்பைக் கொண்டால் வெறுப்பும் பறக்கும்'' என்றான் மதுசூதனன். ''வைஷ்ணவி இவன் ஏதோ ஒரு படத்தில வேசம் போட்டு இருக்கான், அப்படியே வந்துட்டான், எப்படியெல்லாம் வசனம் பேசறான் பாரு'' என்றான் கதிரேசன். ''அடுத்தவங்களை மதிச்சி நடந்துக்கோங்க'' என கதிரேசனிடம் சொன்னாள் ஈஸ்வரி. அந்த வார்த்தையைக் கேட்டதும் கதிரேசன் மெளனமானான். 

(
தொடரும்)

No comments: