Wednesday 31 August 2011

அஹம் பிரம்மாஸ்மி அப்படின்னா

எதற்கு ஒரு நிகழ்வு நடக்கிறது என்பதற்கான பரிசோதனை ஒன்றை நடத்திப் பார்த்தோமானால் அது நமது எண்ணங்களினால் கட்டப்பட்ட ஒரு விசயம் என ஒதுக்கிவிட இயலவில்லை. அதனையும் தாண்டிய ஒரு உணர்வு ஒன்று இருந்து கொண்டே இருக்கும், அது என்னவென விளக்கவும் இயலாது. அதனை விளங்கிக் கொள்ளும் பொருட்டு நமது முயற்சியில் வெற்றி கிடைத்தால் இந்த 'அஹம் பிரம்மாஸ்மி' வந்து அங்கே நிற்கும்.

ஒரு மனிதன் பிறந்த பின்னர் கடவுளை உணர்கிறாரா? அல்லது மனிதன் பிறக்கும் முன்னரே கடவுளை உணர்ந்து இருக்கிறாரா? அல்லது அந்த மனிதன் இறந்த பின்னரும் கடவுளை உணர்ந்து கொண்டிருக்கிறாரா? 

மேற்குறிப்பிட்ட இந்த மூன்று கேள்விகளை சிந்தித்துப் பார்த்தால் மனிதன் உயிரோடு இருக்கும்போது மட்டுமே கடவுளை உணர்வதாகத்தான் பலரும் அறிவார்கள், பலரும் புரிந்து கொள்வார்கள். ஆனால் 'அஹம் பிரம்மாஸ்மி' எனும் சொல்லானது இந்த மூன்று கேள்விக்கு பதிலாக அனைத்து நிலைகளிலும் கடவுள் உணரப்பட்டு கொண்டேதான் இருக்கிறார் என்பதாகும். 'உணர்வற்ற நிலையிலும் உன்னை உணர்வதற்கு நிகரேது' இதுதான் ஒரு கவிதையில் கடவுள் குறித்தான சிந்தனை எனக்குள் எழுந்தது. 

இதைத்தான் மாணிக்கவாசகர் 'எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்' என்கிறார். இவ்வுலகம் என்பது உயிரினங்களுடன், உயிரற்ற பொருள்களினாலும் ஆனது. ஒரு உயிர் எப்படி படைக்கப்பட்டு இருக்கும், அல்லது உருவாகி இருக்கும் எனப் பார்த்தால் நிச்சயம் உயிரற்ற பொருள் ஒன்றில் தான் இந்த உயிர் இருந்து இருக்க வேண்டும் என இந்த ஒரு விசயத்தை தெளிவுப்படுத்திக் கொண்டோமானால் 'அஹம் பிரம்மாஸ்மி' மிகவும் தெளிவாகும். 

'தோன்றாப் பெருமையனே' என கடவுளை விளிக்கும் பொருட்டு இவ்வுலகில் கடவுள் தோன்றவே இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வேளையில், 'தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்' எனும் வாசகமானது கடவுள் தோன்றவில்லை என்பதை மிகவும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம், அதே வேளையில் கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். அந்த தெளிவு கொண்டுவருவதுதான் 'அஹம் பிரம்மாஸ்மி' 

'அஹம் பிரம்மாஸ்மி' ஒருவர் தன்னைத்தானே கடவுள் என சொல்லிக்கொள்ளும் விதம்தனை அகந்தை என கொள்வோர் உண்டு. காரணம் கடவுள் என்பதற்கான விளக்க நிலைகள் வெவ்வேறு. ஒரு மனிதர் கடவுள் ஆக இயலாது, ஆனால் கடவுள் மனிதரில் இருப்பது என்பதை மாற்ற இயலாதது. இந்த ஒரு தெளிவு கிடைத்துவிட்டால் அதுதான் 'அஹம் பிரம்மாஸ்மி' 

மேலே எழுதிய பல விசயங்கள் தெளிவு தருவது போல் இருக்கும், ஆனால் சில தினங்களில் அந்த தெளிவு தொலைந்து போகும், இதுதான் வாழ்க்கையின் மாபெரும் சூட்சுமம். 'தெளிந்த பின், தெளிந்ததில் தெளிவில்லை என திரும்புவானோ' இந்த வாசகம் ஒரு கதையில் நான் ஒரு கதாபாத்திரத்திற்கு வைத்தது. இது எல்லாருக்கும் பொருந்தி போகக்கூடும்!

ஒரு எழுத்தாளர் எப்பொழுது வெற்றி பெறுகிறார் என்றால் வாசிக்கும் வாசகர் தன்னை அந்த எழுத்தில் தன்னை வைத்து பார்க்கும்போதுதான் என சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே அந்த நிலையானது ஒரு இருள் நிலை தான். ஆனால் வாசகர் தனது மனதில் அந்த அந்த சூழலாகவோ, கதாபாத்திரமாகவோ மாறுகிறார். இங்கே வருவதுதான் 'அஹம் பிரம்மாஸ்மி' . வாசகர் நிச்சயமாக அந்த கதாபாத்திரமாக மாற இயலாது, ஆனால் அந்த கதாபாத்திரம் அந்த வாசகரில் எங்கேனும் ஓரிடத்தில் இருக்கலாம் என்பதுதான் தெளிவு. 

'அஹம் பிரம்மாஸ்மி' இதனை 'நானே கடவுள்' என அர்த்தப்படுத்துவதை விட 'என்னிலும் கடவுள் இருக்கிறார்' என்பதுதான் சரியாக இருக்கும். 

'நானே கதாபாத்திரம்' என ஒரு எழுத்தில் நம்மைப் பார்ப்பதைவிட 'இந்த கதாபாத்திரமும் என்னில் இருக்கிறது' என்பது மிகச் சரியாக இருக்கும்.

'அஹம் பிரம்மாஸ்மி'

Wednesday 17 August 2011

அன்னா ஹசாரேவாம் உஷார்

கடையில போய் வெல்லக்கட்டி வாங்கிட்டு வாப்பா என அம்மா சொல்லும்போதே பத்து பைசாவை சரிகட்ட வேண்டும் என நினைக்கும் பிள்ளைகள் கொண்ட தேசம் இது.

தனக்கு வேலை செய்பவன் கூலி வாங்குவதோடு மட்டுமின்றி கொத்தடிமையாக இருக்க வேண்டும் என நினைக்கும் முதலாளிகள் உள்ள தேசம் இது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என இலவசமாக தருவதுபோல் தந்து பணம் குவிக்கும் வியாபாரிகள் கொண்ட தேசம் இது.

ஆட்சிக்கு வந்த விதமே மக்களுக்கு அடுக்கடுக்காக பணம் தந்துதான், அதை வாங்கி பதுக்கி கொண்ட மக்களா ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்? தான் கொடுப்பதை மட்டுமே வெறுக்கும் மக்கள், தாங்கள் பெரும் போது சிந்திப்பதும் இல்லை.

ஊழல் என்பது இரண்டு பக்கமும் நடப்பது. ஒருவர் கொடுப்பது, மற்றொருவர் வாங்குவது. கொடுப்பவர் இல்லாமல் போனால் வாங்குபவர் எப்படி இருக்க இயலும்?

உண்ணாவிரதம் கூட ஒருவகை ஊழல் தான். ஒன்றை நிலைநாட்ட இன்னொரு விசயத்தை கையாள்வது ஊழல் தான். இத்தனை வருடமாக பாரத தேசத்தில் ஊழல் இல்லாமலா இருந்தது? இப்பொழுது மட்டும் ஊழல் ஊழல் என உரக்க சத்தமிட.

இந்த ஊழலை ஒழிக்க ஒரே வழி உண்டு. அந்த வழி எப்போதும் சாத்தியமும் இல்லை. பத்து ரூபாய் கொடுத்தால் வேலை நடக்கும் என தெரிந்தால் பத்து ரூபாய் தரத்தான் மக்கள் காத்து இருக்கிறார்கள், இந்த வேலை நடக்காவிட்டால் கூட பரவாயில்லை, பணம் தரமாட்டேன் என போகும் மக்கள் வெகு வெகு குறைவு. லஞ்சம் தராதவர்களை இளிச்சவாயர்கள் என பேசும் மக்கள் இருக்கும் வரை லஞ்சம் ஒழியாது.

கிசன் பாபுராவ் ஹசாரே. இவர் அன்னா ஹசாரே என அழைக்கப்படுகிறார். ஊழல் எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்ற ஏப்ரலில் நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஏப்ரல் முதல் தினம் முட்டாள் தினம் என்றால் ஏப்ரல் மாதம் முழுவதுமே முட்டாள் மாதம் தான், அது எதற்கு, முன்னூற்றி அறுபத்து ஐந்து நாட்களும் முட்டாள்கள் தினம்தான் இந்தியாவில். சட்டத்தை போட்டுத்தான் ஒன்றை தடுத்து நிறுத்த வேண்டும் என நினைத்தால் ஓரளவு அவ்விசயம் குறையுமே தவிர, முற்றிலுமாக குறையாது என்பதுதான் நாட்டில் நடந்து வரும் கொலைகளும், குற்றங்களும் காட்டும் சாட்சி. ஊழல் எதிர்ப்பு சட்டம் வலிமை படுத்த வேண்டுமாம்.

உனக்கும் எனக்கும் மட்டும் தெரியட்டும் என ஊழல் நடந்தால் எவர் அதை தடுப்பது, ஆதாரமில்லாமல் நடத்தப்படும் ஊழல்களை எவர் நிறுத்துவது. ஊழல் செய்யாமலே ஊழல் செய்தார் என பொய் குற்றச்சாட்டுகள், ஊழல் செய்தார் என தெரிந்தும் பல வருடமாக நீதிக்குள் சிக்காமல் வளைந்து செல்வது என்பதெல்லாம் எப்படி? அதுதான் இந்திய தேசம். உயரத்திலும் தன்னை காண்பிக்கும், தாழ்வதிலும் தன்னை காண்பிக்கும். முரண் கொண்ட தேசம்.

கிட்டத்தட்ட நாற்பத்தி இரண்டு வருடங்கள் முன்னாள் கொண்டு வரப்பட்ட ஊழலை ஒடுக்கும் சட்டம் இன்னமும் இந்த இந்திய திருநாட்டில் நிறைவேற்றப்பட முடியவில்லையெனில் காரணம் என்ன? திருடர்களிடமே திருடாதே என சொன்னால் எந்த திருட்டு பயல் தான் காது கொடுத்து கேட்பான்.

இந்த அரசு இதை நிறைவேற்ற வில்லையென கூக்குரலிடும் பா ஜ க எனும் பசுத்தோல் போர்த்திய குரங்கு தான் அரசு நடத்திய போது இதை பற்றியே தெரியாதா?  மக்கள் மடையர்களாக இருக்கும் வரை மடையர்கள் ஆட்சியை நடத்தத்தான் செய்வார்கள். கேடு கெட்ட தேசம்.

இந்த மசோதா எத்தனை முறை மாற்றம் செய்யப்பட்டது. திருடுபவனுக்கு தோதாக ஒரு சட்டம் வேண்டுமெனில் அதை எழுதாமலே இருக்கலாமே. அப்படித்தான் பல வருடங்களாக இந்த மசோதா தள்ளப்பட்டு வந்திருக்கிறது. இப்படியொரு மசோதா இருப்பதே பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரவர் வேலை நடக்க வேண்டும் என இருப்பவருக்கு இதெல்லாம் எதற்கு.

சாமான்ய மக்களின் குறைகளை கூறியே தனக்கு குறை இல்லாமல் பார்த்து கொண்ட தலைவர்கள் வளர்ந்து வரும் தேசம் இது. அதோடு மட்டுமின்றி தனக்கு வசதி வேண்டுமெனில் கறை படியாத கைகள் என உரைகள் கூறி , உறைகள் மாட்டி திரியும் மக்கள் கொண்ட தேசம் இது.

அன்னா ஹசாரே, நீங்கள் உண்ணாவிரதம் இருக்க எவரும் உங்களுக்கு பணம் தரவில்லையே? என கேட்கும் நாக்கு கொண்ட பூமி இது.

காசு கொடுத்ததும் கூவும் கூட்டம். காசு கொடுக்காமலே சில நேரங்களில் கூவும்.

அன்னா ஹசாரே, உங்கள் போராட்டம் எல்லாம் சரிதான், அதை அடித்தட்டு மக்களிடம் இருந்து தொடங்குங்கள். உங்கள் கூட்டத்தில் இருப்பவர்களின் மனசாட்சியை தொட்டு கேட்க சொல்லுங்கள்.

தவறு செய்யாத மனிதனே இல்லை என்பதை போல ஊழல் செய்யாத மனிதனே இருக்க இயலாது. இதை நீங்கள் உணர்ந்து போராட்டம் தொடக்குங்கள். மக்களிடம் மாற்றம் இல்லையெனில் அரசு மாறி பிரயோசனம் இல்லை.

இப்படி சிலர்,

''என்னப்பா சொன்ன வேலைய செஞ்சியா?''

''செஞ்சிட்டேன் சார்.''

''இந்தா இருநூறு ரூபா. இருவது ரூபா கூட்டித்தான் கொடுத்திருக்கேன்''.

''இன்னும் கொஞ்சம் அதிகமா கொடுங்க சார்''

''சட்டம் என்ன சொல்லுதுன்னு தெரியும்ல''

''அட போங்க சார், சட்டமும் படிச்ச பட்டமும், கொடுங்க சார்''

இப்படியும் சிலர்,

''ஒரு ஆளா எத்தனை பெரிய வேலை செஞ்சிட்ட, இந்தாப்பா பணம்''

''பணம் எல்லாம் எதுக்கு ஐயா, அது என் கடமை''

''வைச்சிக்கப்பா, உபயோகப்படும்''

''உங்க அன்பு ஒன்னு போதும் சார்''

இந்த ஊழலை ஒழிக்க ஒரே வழி உண்டு. அந்த வழி எப்போதும் சாத்தியமும் இல்லை.

அந்த அன்பின் வழி அனைவருக்குமே வலியாக இருப்பதுதான் இந்த காலத்தின் கட்டாயம்.

Monday 15 August 2011

பெரிய்ய லண்டனு

சின்னஞ்சிறு பருவத்தில் வெளியூர் என்றாலே பெரிய விசயமாக இருந்தது. எட்டு வரை உள்ளூரில் பள்ளி இருந்தாலும், ஆறு படிக்க மூணு மைல் தொலைவு செல்ல முயற்சித்தபோது உள்ளூர் பள்ளி ஆசிரியர்களிடம் வாங்கிய திட்டுகள். அந்த பள்ளி ஆசிரியர்களை உங்க ஊருல இருக்கிற பள்ளிக்கூடத்துல சொல்லி தராம எதுக்கு இங்க சொல்லி தர வாறீங்க என எதிர்த்து பேச முடியாத அடக்கம் எனும் அடக்கப்பட்ட தன்மை. பழைய கால நினைவுகள் பசுமையானவையாம். பட்டுப் போன விசயங்கள் பசுமையாக இருப்பது அதிசயம் தான். 

பம்பரம், செதுக்கு முத்து, கண்ணாமூச்சி, கிரிக்கெட், குண்டு விளையாட்டு என சலிக்காமல் விளையாடித் திரிந்த பொழுதுகளில் வானத்தில் பறந்து செல்லும் பறவைகளை விட விமானங்கள் தந்த ஆச்சர்யம் பெரியவை. வரப்புகளில் பேருந்து ஓட்டியும், சுற்றிய கயிறுக்குள் நின்று கொண்டு ரயில் ஓட்டியும் திரிந்த பொழுதுகளில், காகிதத்தில் செய்யப்படும் விமானமும், கப்பலும் மிகவும் பிரசித்து பெற்றவை. மழையால் தன்னை நிரப்பி கொண்ட சாலையில் மிதந்து செல்லும் கப்பலில், கத்தி கப்பல் தரை தட்டியே நிற்கும். ஓரளவுக்கு மேல் பறக்க முடியாமல் காகித விமானம் படீரென விழும், ஆனால் ஒருபோதும் நொறுங்கியது இல்லை, தொடர்ந்து பறக்க மாட்டேன்கிறதே என மனமும் நொறுங்கிப் போனது இல்லை. 

தொழில் நுட்பம் வளர்ந்த பின்னரும், அந்த தொழில் நுட்பம் நுழைய முடியாத கிராமங்களில் இது போன்ற விசயங்களுக்கு இணை எதுவுமே இல்லை. பிளாஸ்டிக் பொம்மைகளும், பிளாஸ்டிக் கார்களும் வலம் வரும் வீட்டு தரையில் பெற்ற சுகத்தை விட, புழுதியில் புரண்டு, வெயிலில் விறுவிறுத்து பெற்ற சுகம் பன்மடங்கு என ஒப்புமை சொல்வதில் எவ்வித முரணும் இல்லை. அத்தகைய குழந்தை பருவம் மீண்டும் வேண்டுமென்று ஏங்கி தவிக்கும் பல உள்ளங்கள். தொலைந்து போனவை பற்றியே சுத்தி தெரியும் மெல்லிய மனது. 

தாத்தாவையும், பாட்டியையும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றிய கதைகள் கேட்டு, நமது வாழ்க்கை எப்படி அமையுமோ எனும் அச்சம் அவ்வப்போது துளிர் விட்டு இருக்கையில் வேலையே இல்லாமல் வாழ்ந்து முடித்துவிட்ட சிலரையும்,  சீட்டாடியும், குடித்தும் சதா சச்சரவுடன் வாழ்ந்து கொண்டிருந்தபோதும் பிள்ளைகள் பெற்று காலத்தால் நகர்த்தப்படும் வாழ்க்கை பெற்றவர்களை பார்க்கும்போதெல்லாம் அந்த அச்சம் மிச்சம் மீதி என எதுவும் இல்லாமல் ஓடிப் போகும். பேயும் பிசாசும், சாமியும் பூசாரியும் என நடுக்கத்துடன் இருட்டில் கிடந்த வாழ்க்கையில் வெளிச்சமும் வராமல் இருந்தது இல்லை. 

வெளியூர், வெளி மாநிலம் என காலடி வைத்தபோது அனைவரும் மனிதர்கள் என்பதே மறந்து போனது கொடுமை. வெளியூர்க்காரன், வெளி மாநிலத்துகாரன் என இனம் பிரிக்கப்பட்டபோது, உள்ளூரில் சாதியால் பிரிக்கப்பட்ட கொடுமையின் வலியை விட சீரணிக்க முடியாத ஒன்றுதான். பழகி போன விசயங்களில் மனம் பேதம் பார்ப்பது இல்லையாம். பாழாய் போன பின்னரும் பதப்படுத்தி பக்குவபடுத்துவது எதற்கு என இருந்து இருக்கலாம். 

இங்கிலாந்து எனும் ஒரு நாடு என தெரிந்ததை விட லண்டன் எனும் நாடுதான் அதிகம் புழக்கத்தில் இருந்தது. லண்டன், அமெரிக்கா என்றாலே பெரிய விசயங்கள். பெரிய லண்டன் துரை இவரு என அடைமொழி எல்லாம் அதிகமாகவே உபயோகத்தில் இருப்பது உண்டு. 

வெளிநாடு செல்வது என்றாலே வெளி கிரகம் செல்வது போல என்றிருந்த நிலையில் வெளிநாடுகள் பற்றிய கனவுகள், வெளிநாடு என்றால் வர்ணிக்க முடியாத கற்பனைகள் என திரிந்த பொழுதுகளை இப்பொழுது நினைத்து பார்க்கும்போது எட்டாதவரை எதுவுமே பெரிய்ய விசயம் தான். 

குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு, மட மாளிகைகள் எப்பொழுதுமே பெரிய்ய. ஒட்டு போட்ட சட்டை டவுசர்களுக்கு, சூட்டும் கோட்டும் எப்பொழுதுமே பெரிய்ய. கருப்பு நிறங்களை விட வெள்ளை நிறங்கள் பளிச்சென இருப்பதும் பெரிய்ய. இப்படி பெரிய்ய பெரிய்ய என பல விசயங்கள் சிறுமையில் தள்ளாடும் நிலை. 

'பெரிய்ய' என கொட்டாவி விட்டு பார்த்த கண்கள். 'பெரிய்ய....' என இளக்காரமாக ஒன்று எப்போதுமே அவை கிடைக்காத பொழுதில் சொல்ல தோன்றும், அல்லது கிடைத்த பின்னர் சொல்ல தோன்றும். 

பெரிய்ய லண்டனு, ஒரு மண்ணும் இல்லை. ஆனால் பிரிந்து போக வழியும் இல்லை. காகிதம், மணல் தரைகளை விட மிக மிக வெறுமையாய்!

Thursday 4 August 2011

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 3

குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தை பிறந்த நேரத்தை கொண்டு கணிக்கப்படும் ஜோதிடம் எனப்படும் கலை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பது பெருமளவு உண்மைதான். நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பலர் சுவாரஸ்யத்திற்காக ஜோதிடம் பார்ப்பது உண்டு, படிப்பது உண்டு. முக்காலமும் உணர்ந்த முனிவர்களை காட்டும் கண்ணாடி அல்லவா அது! பல நேரங்களில் கண்ணாடி சரிவர காமிப்பது இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.

இந்த ஜோதிடத்தை நம்பி மோசம் போனவர்கள் உண்டு, அதே வேளையில் லாபம் அடைந்தவர்கள் உண்டு. லாபம் அடைந்தவர்கள் பெரும்பாலும் ஜோதிடம் சொல்பவர்கள்தான். இந்த ஜோதிடம் சொல்லும் பாடம் ஒன்றுதான். வாழ்க்கையானது ஒரு நிகழ்தகவு. வாழ்க்கை ஒரு வாய்ப்பு.

சிலருக்கு ஒரே மாதிரியாக, அது நல்லவிதமோ, கெட்ட விதமோ, அல்லது இரண்டு நிலைகளிலும் உட்பட்டோ அமைந்து விடுகிறது. வாழ்க்கை ஒரு சக்கரம். அது சுழன்று கொண்டே இருக்கும் என்கிறார்கள்.

எங்கு தொடங்கியதோ அங்குதான் முடியும் என்பதுதான் முக்காலம் உணர்த்தும் ஒரு செய்தி. இடுகாடோ, சுடுகாடோ எங்கு சுற்றினாலும் இங்குதான் வரவேண்டும் எனும் மொழி வழக்கு உண்டு.

'உன்னை மட்டும் என் வாழ்வில் பார்க்காது இருந்து இருந்தால் எனது வாழ்கை அஸ்தமனமாக போயிருக்க கூடும்'

'இவர் மட்டும் இல்லாது போயிருந்தால் உனது வாழ்க்கை நரகமாகி இருக்க கூடும்'

'இவரால் தான் உனது வாழ்க்கையே இப்படி நரகமாகிப் போனது'

இப்படிப்பட்ட வசனம் பேசும் பலரை நாம் காணலாம். இது போன்ற வரிகளை எல்லாம் சற்று அலசி பார்த்தால் மனிதர்களின் மனம் போடும் கணக்கு மிகவும் தவறாகவே இருக்கிறது!

அடுத்த நொடி என்ன, அடுத்த யுகத்தையே நிர்ணயிக்கும் வல்லமை முனிவர்களிடம் இருந்திருக்கிறது என்கிறது புராணங்கள். அதாவது 'பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது' போல.

அவதாரங்கள் எல்லாம் பார்த்தால் ஒரு தீயவர் படைக்கப்படுவார், அல்லது உருவாகுவார், அந்த தீயவரை, தெய்வம் அவதாரம் எடுத்து திருத்தும் அல்லது பெரும்பாலும் கொல்லும்!

'மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்'

காலை எழுந்தவுடன் ஒரு இயந்திரம் போல் பணியாற்றும் நமது நிலையை பாருங்கள். இரவு வந்ததும் என்ன என்ன செய்தோம் என நினைத்து பாருங்கள். ஒரு நாளுக்கு மற்றொரு நாள் வித்தியாசமாக இருக்கிறதா என எழுதி வைத்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு விசித்திரமா! வாழ்க்கை ஒரு சித்திரமா!

இன்று இதை இதை செய்ய வேண்டும் என பட்டியலிட்டு எதுவுமே செய்ய இயலாது போனால் வாழ்க்கை ஒரு விசித்திரம்.

என்ன செய்ய வேண்டும் என நினைத்து அதையே செய்து முடித்தால் வாழ்க்கை ஒரு சித்திரம்.

கவன குறைவு தான் பல பேராபத்துகளுக்கு காரணம். இது தவறு என்று தெரிந்து செய்யும் குணாதிசயம் உடையவன் மனிதன். முயற்சி என்பதன் அர்த்தம் பல நேரங்களில் தவறாகவே இருக்கிறது. இந்த முயற்சியினை முறையாக செயல்படுத்த தெரியாமல் அழிவுக்கு உட்பட்ட விசயங்கள் பற்பல. அதன் பொருட்டே இந்த உலகம் பொருளாதார சீரழிவுக்கோ, கலாச்சார சீரழிவுக்கோ உட்பட்டு வந்து கொண்டு இருக்கிறது.  என்ன சொல்லி வைத்தார்களாம்! கலியுகம்!

சிந்தனைகளின் வலிமை பற்றி ஒரு பெரும் கருத்து உண்டு. அதாவது ஒரு சிந்தனை வலுப்பெற அதை பின்பற்ற பலர் தேவை. அப்படி இல்லாது போனால் அந்த சிந்தனை அழிந்துவிடும்.

இதில் அந்த சிந்தனை உண்மையா, பொய்யா என்பதை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியம் எல்லாம் தேவை இல்லை. உலகில் உள்ள மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் நம்பினாலே போதும், அது அப்படி அப்படியே பரவி அந்த சிந்தனை வலுப்பெறும் என்பதுதான் காலம் உணர்த்தும் செய்தி.

இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் மக்கள் தொகை எத்தனை?!

இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் மக்களின் சிந்தனை எத்தகையது?!

அப்படியே பெருக்கி கொண்டே போவோம். நான்காயிரம், எட்டாயிரம், பதினாறாயிரம்!

முக்காலம் உணர்ந்த முனிவர்கள் மிகவும் அதிசயிக்க வைக்கத்தான் செய்கிறார்கள்!

(தொடரும்)