Monday 31 May 2010

எழுதி சாதித்தவைகள்

ராமநாதன் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கிறப்பவே நினைச்சேன், எதுனாச்சும் வில்லங்கமா பேசத்தான் செய்வான்னு. என்னைப் பார்த்து 'என்ன எழுதி கிழிச்சிட்டு இருக்க' அப்படினு சொன்னதும்தான் தாமசம் எனக்கு கோவம் வந்துருச்சு.

''உன்னால எழுத முடியலன்னா அதுக்கு என்னை எதுக்கு இப்படி மட்டமா பேசற' அப்படினு சொன்னதோட நில்லாம எழுந்து ஒரு அறை விட்டேன். பதிலுக்கு அவன்  'நீ அடிக்க எல்லாம் தேவை இல்ல,  உன் கூட பழகுனேன்  பாரு, அதுவே நீ  எனக்கு  தரும் பெரிய தண்டனை' அப்படினு சொல்லிட்டு விறுவிறுன்னு போனான்.

என்ன இவன் இப்படி சொல்லிட்டு போறான்னு அவன் பின்னாடியே ஓடிப்போய் இழுத்துட்டு வந்தேன். அவனுக்கு ஒரு காபி ஆத்தி கொடுத்தேன். நான் எழுதி எவ்வளவு சாதிச்சி இருக்கேன் தெரியுமா, என்னை பாத்து என்ன எழுதி கிழிச்சிட்டு இருக்க அப்படினு சொன்னா எனக்கு எத்தனை கோவம் வரும். ''ஆமா அப்படி என்னத்தத்தான் எழுதி கிழிச்ச'' அப்படினு அடி வாங்கினப்பறமும் கேட்டான். இனி சும்மா இருந்தா அவ்வளவுதான்னு என் சாதனையை பட்டியலிட்டேன்.

அ ஆவன்னா எழுதி தமிழ் எழுத கத்துகிட்டேன். ஒவ்வொரு தடவையும் பரீட்சையில் பாஸ் பண்ணினது எக்ஸாம் எழுதித்தான். அது தெரியுமா. நான் நாலாப்பு படிக்கிறப்பவே நாகுல்சாமி அண்ணன்  ஒரு லவ் லெட்டரு எழுதித் தர சொல்லிச்சி, அதை நான் தான் எழுதினேன் அது தெரியுமா. பாம்பேல இருக்கிற பையனுக்கு கடிதாசி எழுத சொல்லி பங்கஜம் அத்தை வந்து நிக்கிறது என்கிட்டதான். ஆறாப்பு படிக்கிறப்ப அம்சமா இருந்த முத்துமாரிக்கு ஒரு லவ் லெட்டர் எழுதித்தான் என் லவ்வை சொன்னேன். உன்னால சொல்ல முடியுமா? அதுக்கும் என்கிட்டதான் வந்து நிற்ப. மரத்துல, கல்லுல, சுவத்துல எங்க ரெண்டு பேரை செதுக்கி வைச்சேன் நீயும் தான் பாத்துட்டு பல்லிளிச்ச.

ஆனந்தவிகடன், குங்குமம், குமுதம், வாரமலர்னு வாசகர் கடிதம் ஒன்னு தவறாம வருமே அது நான் எழுதி அனுப்புனதுதான். எப்படி திட்டி திட்டி எழுதி இருப்பேன், உனக்கு என்ன தெரிய போகுது. அதோட மட்டுமா முதல்வர் அண்ணாச்சிக்கு நம்ம ஊருல இருந்து மனு எழுதி போடறதே நான் எழுதித்தான். அதோடு மட்டுமா ரோடு போட கொடுத்த காசுல எவ்வளவு காசு அமுக்கினான் இசக்கிமுத்து, அவனுக்கு மொட்ட கடிதாசி போட்டது நான் எழுதித்தான். திருவிழா, அரசியலுன்னு வரப்ப நோட்டீசுக்கு எழுதி தரது நான் தான், சுவத்துல எழுதரதும் நான் தான். என்னமோ பேசற.

இப்படி நான் சொல்லிட்டே இருந்தப்ப உஷ் உஷ்னு காபிய உறிஞ்சிகிட்டே இருந்தான். நான் இடையில நிறுத்தினதும் 'ப்பூ இவ்வளவுதானா' அப்படினு சொன்னதும் அவனை அப்படியே சுவத்துல வைச்சி முட்டலாம்னு இருந்திச்சி.

இப்ப என்ன எழுதுறேன்  தெரியுமா, உன்னை மாதிரி எழுத படிக்க தெரியாத முட்டாள்கள் எல்லாம் கட்டாயம் எழுதப் படிக்கனும் அப்படி இல்லைன்னா இவனுகளை சாவடிக்கனும் அப்படினு ஆனந்த விகடனுக்கு, குமுதத்துக்கு  எழுதிட்டு இருக்கேன். போதுமா? அப்படினு நான் சொன்னதும் தான் தாமசம் 'குபுக்'னு சிரிச்சான்.  அதோட விட்டானா 'இங்கிதமே தெரியாம எழுதற உன்னை மாதிரி ஆளுக எல்லாம் எழுத படிக்க தெரிஞ்சும் முட்டாப்பையலுக' அப்படினு சொன்னான். அவனை நல்லா மொத்தினேன். இனிமேலும் இவனை விடக் கூடாதுன்னு அவனை பத்தியும் அவனோட கொழுந்தியா பத்தியும் பம்புசெட்டுல தப்பு தப்பா இன்னைக்கு நைட்டு எழுதிற வேண்டியதுதான். இப்படி என்னவெல்லாமோ எழுதி சாதிச்சிட்டு இருக்கற என்னை பாத்து அவன் இனிமே கேள்வி கேட்பானா?!

Sunday 30 May 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 11

11. ஆராய்ச்சியில் ஏற்பட்ட ஆர்வம்

தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வது அடக்கம் என்றே கருதப்படுகிறது. சில பல வேளைகளில் எனக்குத் தெரியாத விசயங்களை தெரியாது என சொல்லும்போது நான் தன்னடக்கம் நிறைந்தவன் எனவும், நிறை குடம் தழும்பாது எனவும் சொல்லும்போது மனதில் சிரித்துக் கொள்கிறேன். உண்மையிலேயே எனக்கு பல விசயங்கள் தெரியவே தெரியாது, என்னால் அத்தனை எளிதாக எதையும் புரிந்து கொள்ளவும் முடியாது.

ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் விழுந்தால் அதை எடுத்து பல கடி கடித்துவிட்டுத்தான் நான் போயிருப்பேன். நியூட்டன் போல் அந்த ஆப்பிள் ஏன் விழுகிறது என யோசித்துக் கொண்டிருக்கமாட்டேன். எனக்குத் தெரிந்தது அந்த கால கட்டத்தில் அவ்வளவுதான்.

ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே ஆராய்ச்சிக்கு அடிப்படை. ஒரு பதிலோடு உட்கார்ந்துவிடுவதல்ல ஆராய்ச்சி. அந்த பதிலுக்கும் பதில் தேடி செல்வதுதான் ஆராய்ச்சி. அதன் காரணத்தினால் ஆராய்ச்சி எளிதாக முற்றுப் பெறுவதில்லை. இதன் காரணமாகவே பல நோய்களுக்கு வெவ்வேறு விதத்தில் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

எப்பொழுது விதைத்தால் எப்பொழுது அறுவடை செய்யலாம் என கால நிலைகளை அறிந்து விவசாயம் செய்யத் தொடங்கிய விவசாயி ஒரு ஆராய்ச்சியாளர் தான். சூரிய நிழலை வைத்தே காலத்தை கணக்கிட்டவரும் ஆராய்ச்சியாளர்தான். எந்த மண்ணில் எந்த தாதுப் பொருட்கள் கிடைக்கும் என தோண்டி எடுத்தவரும் ஆராய்ச்சியாளர்தான். சமய சூழலுக்கு ஏற்ப கிடைத்த விசயங்களை வைத்து ஒரு புரட்சி ஏற்படுத்தியவரும் ஆராய்ச்சியாளார்தான். இப்படி எல்லா விசயங்களிலும் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் அளப்பரியது.

சிறு வயதிலிருந்து மருத்துவத் துறையில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனும் அளவிலா ஆசை வந்து சேர்ந்தது. அதற்கேற்றபடி நான் படிக்கும் துறையும் அமைந்துவிட மிகவும் வசதியாகப் போனது. ஆனால் முழு அளவில் ஈடுபாடு என்னிடம் இருந்ததா என என்னால் சொல்லத் தெரியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் தமிழ் மீதுதான் தனிப்பற்று இருந்தது. இப்போது கூட சில வேளைகளில் நினைத்துக் கொள்ளத் தோன்றும், தமிழ் பட்டப் படிப்பு படித்து இருந்து இருக்கலாமா என!

முதல் ஆராய்ச்சி என எடுத்துக் கொண்டது ஆஸ்பிரின் எனப்படும் மருந்து எவ்வளவு வேகத்தில் கரையும் என கண்டுபிடிப்பது. நானும் எனது இரு நண்பர்களும் சேர்ந்து செய்தோம். நாங்களே எங்களுடன் படித்த நண்பனின் மருந்து தயாரிக்கும் கம்பெனியில்தான் மாத்திரை உருவாக்கினோம். அந்த வேளையில் ஆசிரியர் சில வாரங்கள் கல்லூரிக்கு வராததால் அவர் சொன்னதற்கு மாறாக நாங்கள் செய்து முடித்து இருந்தோம். சின்ன திட்டுகளோடு முதல் ஆராய்ச்சி முடிந்து போனது.

அதற்கடுத்த ஆராய்ச்சி பாக்டீரியா பற்றியது. ஆன்டிபயாடிக் என இருந்து கொண்டிருக்கும் போது இந்த பாக்டீரியவை ஆன்டிபயாடிக் இல்லாமல் வேறு மருந்துகளாலும் கொல்ல இயலும் என நான்-ஆன்டிபயாடிக் எனும் புது பாதையையே வகுத்து வைத்திருந்தார்கள். இதில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள் என பலரும் இருந்தார்கள். இந்த ஆராய்ச்சிதான் நான் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் செய்தேன். கிட்டத்தட்ட 305 வகையான பாக்டீரியாவை தையோரிடஜின் எனப்படும் மனநிலை பாதிப்புக்கு உபயோகப்படுத்தும் மருந்தினை வைத்து செய்யப்பட ஆராய்ச்சி அது. இந்த மருந்து பாக்டீரியாவை கொல்லத்தான் செய்தது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் கூடத்தான் பாக்டீரியாவை கொல்லும் அதற்காக அதை மருந்தாக குடிக்க முடியுமா என அறிவு எழுந்த இடம் அங்குதான். இருப்பினும் மிகத் தீவிரமாகவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதுநிலைப் பட்டப்படிப்பு படித்ததும், ஆராய்ச்சி பட்டம் பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. 'டாக்டர்' எனப் போட்டுக்கொள்ளவா ஆராய்ச்சி செய்யப் போகிறாய் என நண்பர் ஒருவர் கேலி செய்தபோதிலும் ஆராய்ச்சி பட்டம் பெறுவதே கருத்தில் இருந்தது. இதற்காக இலண்டன் வரும் முன்னர் கொல்கத்தாவிலும், டில்லியிலும் ஆராய்ச்சி பட்டம் பெற இணைந்து பின்னர் தொடராமல் நிறுத்தி விட்டேன். ஒரு கல்லூரியில் வேலைப் பார்த்தபோது அந்த ஒரு வருடத்திலேயே செடிகொடிகளை வைத்து பாக்டீரியாவை கொல்லும் சக்தி இருக்கிறதா என சில மாணவர்களை வைத்து ஆராய்ச்சி செய்தேன். இப்படியான சின்ன சின்ன ஆராய்ச்சி வேட்கை பெரிய ஆராய்ச்சி திட்டமாகி கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்கேனும் எப்படியாவது நிறுத்திவிடலாமா எனும் ஆசையும் வந்து சேர்ந்துவிட்டது.

இலண்டனில் நான் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சி பற்றிய விபரங்களை சற்று விபரமாகவே விரைவில் எழுதுகிறேன்.

(தொடரும்)

அடியார்க்கெல்லாம் அடியார் 14

நீலகண்டனின் வீட்டினுள் நுழைந்த மதுசூதனன் அனைவரையும் கண்டு தயங்கி நின்றான். கதிரேசன் மதுசூதனனை வா மதுசூதனா என அழைத்தான். வந்தது மதுசூதனன் என அறிந்த சிவசங்கரனும், பார்வதியும் அவனுக்கு நன்றி சொன்னார்கள். மதுசூதனன் பதில் நன்றி சொல்லிக்கொண்டான். நீலகண்டனை அவர்கள் அழைத்துச் செல்ல இருப்பதை அறிந்தான் மதுசூதனன். எல்லாம் தயாரான நிலையில் இருந்தது. 

கதிரேசனை வேறு இடம் பார்க்கச் சொல்லி இருந்தார்கள். பார்வதி மிகவும் கண்டிப்பாக இந்த வீட்டினை பரமேஸ்வரனிடம் பேசி வாடகைக்கு விடலாம் என கூறிவிட்டதால் நீலகண்டன் எதுவும் பேசவில்லை. ஈஸ்வரிக்கு கதிரேசனைப் பார்க்கையில் பாபமாக இருந்தது. கதிரேசனும் வேறு வீடு பார்த்துக் கொள்வதாக சொன்னான். 

நீலகண்டன் தனது அறைக்குச் சென்று கிளம்ப தயாரானார். அவர் பின்னாலேயே சென்ற மதுசூதனன் தாத்தா என அழைத்ததும் திரும்பிய அவர் ‘’சொல்லுப்பா’’ என்றார். ‘’உங்களுக்கு போக விருப்பமா?’’ என்றான். ‘’என் பொண்ணு பேச்சை எனக்கு மீற இப்போ விருப்பமில்லை, என் உடல்நிலையை பத்தி இப்பத்தான் ரொம்ப கவலைப்படுறா, கிளம்பிப் போறதுதான் நல்லதுனு மனசுக்குப் படுது, நான் போய் இருக்கிற இடத்திலும் சிவன் இருப்பார், பார்க்கலாம்’’ என்றவர் கிளம்பினார்.


கதிரேசனுக்கு ஈஸ்வரியைப் பார்த்ததில் சந்தோசம் இருந்தாலும் நீலகண்டன் பிரிந்து செல்வது மனதில் பெரும் துயரத்தை தந்து கொண்டிருந்தது. தாத்தா என அழுதுவிட்டான். நீலகண்டனின் கண்களும் கலங்கியது. ‘’அந்த சிவன் தான் இனிமே உனக்கு அடைக்கலம்,  பரமேஸ்வரன்கிட்ட நான் சொல்றேன், தங்க இடம் தருவார்’’ என்றார். அனைவரும் வீட்டிலிருந்து சென்றார்கள். கடைசியாய் சென்ற ஈஸ்வரி கதிரேசனிடம் ‘’தைரியமா இரு’’ என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினாள்.  பரமேஸ்வரன் வீட்டுக்கு அனைவரும் சென்றார்கள். பரமேஸ்வரனிடம் நீலகண்டன் விபரம் சொன்னதும், நான் பாத்துக்குறேன் ஐயா என்றார்.
நீலகண்டனின் வீட்டினை பரமேஸ்வரனிடமே பேசி வாடகைக்கு விட்டு சென்றார்கள். மருத்துவரிடம் சென்று மருத்துவ முடிவுதனை சங்கரன்கோவிலுக்கு அனுப்பச் சொன்னார்கள்.  

கல்லூரியில் காலம் வேகமாக கடந்து கொண்டிருந்தது. வாரம் தவறாமல் ஊருக்குச் சென்று வந்தான் கதிரேசன். ஈஸ்வரி மனதில் நடனமிட்டுக் கொண்டிருந்தாள். மதுசூதனன் ஒருநாள் கதிரேசனிடம் வந்து தான் தன்னுடன் படித்துக் கொண்டு இருக்கும் பெண்ணை காதலிப்பதாக சொன்னான். கதிரேசன் ''அந்தப் பெண்ணுக்குத் தெரியுமா?'' எனக் கேட்டான். ''தெரியும், ஒரு பாடல் பாடினேன், அந்த பெண் காதலுக்கு சம்மதம் சொன்னாள், அவளும் வைணவம், நீ கூடப் பார்த்திருப்ப, பெயர் வைஷ்ணவி. அவள் வைணவம் என முன்னரேத் தெரியும் அதனால்தான் காதலிக்கவேத் தொடங்கினேன்'' என்றான் மதுசூதனன். கதிரேசன் சமயம் பார்த்து காதலிக்கிறியோ என சொல்லி சிரித்தவன் என்ன பாட்டு என்றான். பாடிக் காட்டினான் மதுசூதனன்.
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரேரே ஆயர்தம் கொழுந்தே எண்ணும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே

''ம்ம், அருமையான பாட்டு, நீ சமணசமய வரலாறுப் படிச்சியா?'' என்றான் கதிரேசன். ''உனக்கு என்ன பைத்தியமா எப்பப் பார்த்தாலும் சமண சமயம், சமண சமயம்னுட்டு என்னை தொந்தரவு பண்ணாதே, எனக்கு வைணவம் மட்டும் தான் தெரியும். சமண சமயம் சைவ சமயம் எல்லாம் வெறும் கற்பனை'' என்றவனிடம் ''அன்னைக்கு அன்பும் சிவமும் பாடலைக் காட்டினாய்'' என்றான் கதிரேசன். ''அது அப்போ'' என வேகமாகச் சொன்னான் மதுசூதனன். அதற்கு கதிரேசன் ''நீ எதுக்கும், நீ பாடினியே, இந்த ஆழ்வார் எழுதின பாட்டைப் போய் பாரு, சமண சமயம் கற்பனையா இல்லையானு தெரியும்'' என்றான். ''எனக்கு காதலிக்கவே நேரம் போதலை, சும்மா வெறுப்பேத்தாதே'' என்ற மதுசூதனன் உடனே கிளம்பினான். கதிரேசன் மனதில் ஈஸ்வரி கண்ணை சிமிட்டினாள். மதுசூதனன் சென்றதும் கதிரேசன் பாடினான்.

‘’
தாயாய் நீயிருக்க வேண்டிய என்னை தவிக்கும்
சேயாய் பிறர் பார்க்க விட்டுநின்றாய்
காலம் தொடங்கும் முன்னரே மங்கையும் மனதில்
கோலம் போட்டதன்காரணம் சொல்சிவனே!''

(
தொடரும்)

Saturday 29 May 2010

விளக்குதனில் ஏற்றுங்கள் ஒளி


சனீஷ்வர பகவானுக்கு 
எள் விளக்காய் நான்
எள்ளோடு
என்னில் எண்ணை நிரப்புங்கள்

கார்த்திகை மாதம்
கார்த்திகை தீபமாய்
கவனமாய் என்னை
வீடெல்லாம் நிரப்புங்கள்

என்னை செய்தவருக்கு
வயிறு நிறைந்திட வழி  சொல்லுங்கள்
இன்னும் விற்கபடாமல் இருக்கிறேன்
என்னை வாங்கிச் செல்லுங்கள்!

நுனிப்புல் (பாகம் 2) 5

                               5 சுந்தரனின் காதல் 


கிருத்திகாவும் பாரதியும் பேருந்தில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வில்லிவாக்கம் நிறுத்தம் வந்ததும் இருவரும் இறங்கிக் கொண்டார்கள். எதுவும் சொல்லிக் கொள்ளாமல் கிருத்திகா தனது வீட்டை நோக்கி நடந்தாள்.

‘’கிருத்தி’’

‘’என்னய்யா’’

‘’இந்த விசயத்தை வேற யார்கிட்டயும் சொல்லிக்க வேண்டாம், திருமாலும் அவருடைய மனைவியும் நம்மளைப் பார்க்க வந்தா எங்க வீட்டுக்குக் கூப்பிட்டு வர வேண்டாம், மறந்துராத கிருத்தி’’

‘’புரியுதுய்யா’’

‘’யோகலட்சுமி அக்கா சொன்னது உண்மையா?’’

‘’அப்படித்தான்யா சொன்னாங்க, உன்கிட்ட பொய் பேசுவேனா?’’

‘’வேற எதுவும் அவரைப் பத்தி சொன்னாங்களா?’’

‘’இல்லைய்யா’’

‘’நாளைக்கு படிப்போம், நான் நீ சொன்னதையும் சேர்த்து வாசனுக்கு கடிதம் எழுதி வைச்சிருக்கேன்’’

‘’ம்’’

கிருத்திகா பாரதியிடம் விடைபெற்று கொண்டாள். பாரதி வீட்டினுள் நுழைந்தாள்.

‘’இவ்வளவு நேரமா போய்ட்டு வரதுக்கு பாரதி’’

‘’எதிர்பாரா விதமா நேரமாயிருச்சிம்மா’’

‘’சாப்பிட்டியா?’’

‘’ம்’’

அம்மாவுக்கு பதில் சொல்லிவிட்டு தனது அறையினுள் நுழைந்தாள் பாரதி. வாசனை தொடர்பு கொள்வதா, வேண்டாமா என முடிவெடுக்க முடியாது திணறினாள். ஊரில் இன்று பூங்கோதையின் நிச்சயதார்த்தம் என கூறி இருந்த காரணத்தினால் ஒரு வழியாக நாளை திருமணம் முடிந்த பின்னர் தொடர்பு கொள்ளலாம் என முடிவுக்கு வந்தாள். தான் எடுத்து வைத்திருந்த குறிப்புகளை அனைத்தும் மிகவும் கவனமாக கோர்வையாக எழுதினாள். இதனை வாசனுக்கு அனுப்பி விடுவதுதான் சிறந்தது என கருதினாள். வாசன் இதுகுறித்து மேற்கொண்டு ஏதாவது செய்ய நினைத்தால் அவனே செய்து கொள்ள வேண்டும் என எண்ணினாள்.

திருமால் பற்றிய விபரமும், பெருமாள் தாத்தாவின் சாத்திரம்பட்டி தொடர்பும் எழுதியவள், பெருமாள் தாத்தா எழுதிய கடிதம் காணக் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டாள். கிருத்திகா கூறியதையும் சேர்த்தாள். வாசனுக்கு திருமால் எழுதிய கடிதம்தனை உடன் இணைத்தாள். மிகவும் குறிப்பாக இனிமேல் விபரங்களுக்கு திருமாலை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் என எழுதி, நட்புடன் பாரதி என கையொப்பமிட்டாள். வாசனின் முகவரியை கடிதத்தில் எழுதிவிட்டு கடிதம்தனை பத்திரப்படுத்தினாள்.

மாலை நேரம் தாண்டி இரவு நேரம் வந்தது. பாரதி அவளது அறையில் படித்துக் கொண்டு இருந்தாள். அருண், சேகர் இருவரும் சேர்ந்தே வந்தார்கள். பாரதியின் அறைக்குச் சென்றார் சேகர்.

‘’பாரதி இங்க வாம்மா’’

‘’என்னப்பா’’

‘’சுந்தரன்கிட்ட என்ன சொன்ன நீ’’

‘’இல்லப்பா அப்படி ஒரு முக்கியமான விசயமும் சொல்லலையே’’

‘’நீ அவனை வேலையை விட்டுட்டு குளத்தூர் போகச் சொன்னியாமே, இப்ப உன்கிட்ட கேட்டா ஒண்ணும் சொல்லலைனு சொல்ற, அவன் மனசு வருத்தப்பட்டு வந்து தயங்கி தயங்கி சொல்றான், அதுக்கு மேல எதுவும் கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்றான், என்ன நடக்குது பாரதி’’

‘’ஓ அதுவாப்பா, நேத்து சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்பா, அஷ்டலட்சுமி கோவிலுக்கு வந்து இருந்தான், அப்போ எங்கிட்ட வந்து நம்ம குளத்தூர் பெருமாள் தான் தெய்வம் மற்றதெல்லாம் வெறும் கண்காட்சினு சொன்னான், அதுக்கு நான் அவன்கிட்ட அப்படின்னா என் அப்பாகிட்ட சொல்லிட்டு வேலையை விட்டுட்டு ஊருக்குப் போ அங்க இருக்கற வேலையை செய், மற்ற வேலையெல்லாம் சும்மா, என் அப்பா கேட்டா எந்த காரணமும் சொல்லாதேனு சொன்னேன்பா’’

‘’ஓ இவ்வளவுதானா, நான் என்னமோ ஏதோனு நினைச்சிட்டேன் நீ படிம்மா’’

என பாரதியிடம் சொல்லிவிட்டு சேகர் மாடியிலிருந்து இறங்கி வந்தார். அந்த நேரம் பார்த்து சுந்தரன் வந்து நின்றான். சுந்தரனை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றார் சேகர்.

‘’நீ விளையாட்டுப் பையனா இருக்கியே, பாரதி ஒரு பேச்சுக்கு சொன்னதை உண்மைனு எடுத்துக்கிட்டு ஊருக்குப் போகனும்னு அழாத குறையா வந்த சொன்ன’’

‘’இல்லை சார், அவ ரொம்ப சீரியஸா சொன்னா சார்’’

‘’சரி சரி, அவ சொன்னதுக்காகப் போகனுமா, நீ என்னை நம்பிதான வந்த, நான் சொல்றதை கேட்டு நடந்துக்கோ, தேவையில்லாம மனசை குழப்பிக்காத, உன்னோட திறமைக்கு நல்ல எதிர்காலம் இருக்கு, வீணா சிதறடிச்சிடாதே, நானும்தான் பார்க்கிறேன் நீ ஊருக்குப் போய்ட்டு வந்ததிலிருந்து சுறுசுறுப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்கே, எப்படின்னாலும் சரி, சாதிக்கனும்கிற எண்ணத்தைத் தூக்கிப் போட்டுறாதே’’

சுந்தரன் சேகரின் பேச்சைக் கேட்டதும் மனதில் குடிபுகுந்த பாரதியின் மேலான காதல் ஆட்டம் கொள்ளத் தொடங்கியது. மனம் அச்சம் கொண்டு தவித்தது. வாசனிடம் அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ என வாட்டம் கண்டது, இது குறித்து வாசன் பெரியவரிடம் சொல்லி, பெரியவர் சின்னவரிடம் சொல்லிவிட்டால், அருணுக்குத் தெரிந்துவிட்டால் சுந்தரனின் மனம் பதைபதைத்தது. குழந்தை பருவ, பள்ளி பருவ காதல் பாடாய் படுத்தியது. பாரதியின் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்ற காதல்தான் அவள் விளையாட்டாய் சொன்னதை உண்மையென கருத வைத்து வேலை விட்டுச் செல்லுமளவிற்குத் தூண்டி இருந்தது. தனது செயலின் மடத்தனத்தை எண்ணியவாறே சேகரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அவருடன் சேர்ந்து சாப்பிட அமர்ந்தான். அருண், அம்மாவிடம் கேட்டான்.

‘’பாரதி சாப்பிடலையாம்மா’’

‘’காலை பூரா எங்கோ போய்ட்டு வந்துட்டு இப்போ உட்கார்ந்து படிச்சிட்டு இருக்கா, அவ பிறகு வந்து சாப்பிடுவா’’

சுந்தரனுக்கு சாப்பாடு பரிமாறிய சரோஜா கேட்டார்.

‘’என்ன தம்பி முகம் ஒரு மாதிரியா இருக்கு, உடம்பு சரியில்லையா’’

‘’அது எல்லாம் ஒண்ணுமில்லைம்மா, நல்லாத்தான் இருக்கேன்’’

சேகர் நடந்த விசயம்தனை சுருக்கமாக கூறியதும் சரோஜா மிகவும் பரிதாபப்பட்டார். அருண் கலகலவெனச் சிரித்துவிட்டுச் சொன்னான்.

‘’இன்னும் பயம் விட்டு போகலை போல’’

சுந்தரன் மிகவும் சங்கடமாக உணர்ந்தான். சாப்பிட்டு முடித்ததும் சுந்தரன் தனது வீடு நோக்கி கிளம்பும் முன்னர் சரோஜா அழைத்தார்.

‘’தம்பி எதுவும் மனசில வைச்சிக்காதப்பா, எப்பவும் போல சந்தோசமா இரு, எதுனாலும் எங்கிட்ட கேளுப்பா’’

‘’ம்ம்’’

சுந்தரன் மனதில் முடிவு எடுத்தவனாய் நடந்தான். பாரதியின் அறைக்குச் சென்றான் அருண்.
‘’நீ இனிமே ஏதாவது சுந்தரன் கிட்ட சொன்னா இது ஜோக், இது சீரியஸ் அப்படினு சொல்லிட்டுப் பேசு பாரதி, பாவம் அவன். அவன் வந்தப்பறம் நம்ம கம்பெனியோட முன்னேற்றம் பல மடங்கு பெருகிட்டு இருக்கு நீ ஏதாவது பேசி அவனை ஊருக்கு அனுப்பிராத’’

‘’சரிண்ணா’’

பாரதிக்கு, சுந்தரனை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்படி இப்படி நடந்து கொண்டான் என நினைத்துப் பார்க்கையில், அவனது நடவடிக்கைகள் குறித்து யோசிக்கையில் பாரதி சரியாக ஒரு விசயம்தனை கணித்துக் கொண்டாள். கிருத்திகாவிடம் இது குறித்து பேசினாள். கிருத்திகாவுக்கு சுந்தரன் அத்தனைப் பழக்கமில்லை, ஆனால் சுந்தரனைப் பார்த்தால் மறக்காமல் புன்னகை மட்டும் புரிவாள். சுந்தரனும் மறக்காமல் புன்னகை புரிவான். ‘கனவு வரப் போகுதுய்யா’ என கிண்டலடித்தாள் கிருத்திகா. பாரதி சிரித்தாள். கனவின் வலிமையினை யாரும் உணரப் போவதில்லை.

இரவு சற்று வேகமாகவே உறங்கினாள் பாரதி. கிருத்திகா சொன்னது போலவே கனவும் வந்தது. கனவு பற்றியே நினைத்துக் கொண்டிருந்து இருப்பாளோ? சுந்தரன் மேல் மிகவும் பரிதாபப்பட்டு இருந்து இருப்பாளோ? அந்த கனவில் சுந்தரனை அருண் துரத்தியடிப்பதாக கண்டாள். மனதில் திடமான முடிவினை எடுத்தாள். தன்னால் சுந்தரனுக்கு எவ்வித பாதிப்பும் வரக்கூடாது என கருதினாள்.

பொழுது சற்று வேகமாகவே விடிந்தது. குளத்தூரில் திருமண நாள். கேசவனின் திருமணம் பற்றி வீட்டில் பேசிக் கொண்டார்கள். திருமணத்திற்கு யாராவது ஒருவர் சென்று இருந்து இருக்கலாம் என்றார் சேகர். காலையில் சுந்தரன் வழக்கம்போல் வந்து சாப்பிட்டு விட்டு கிளம்பினான்.

கடைக்குச் சென்று திரும்பிய பாரதி சுந்தரனை வழியில் கண்டாள். சுந்தரன் தலையை குனிந்து கொண்டு விலகி நடக்க ஆரம்பித்தான். பாரதி சுந்தரனை அழைத்துப் பேசினாள்.
‘’உன் மனசுல என்னைப் பத்தி ஏதாவது நினைச்சிக்கிட்டு இருந்தா அதை இப்பவே மறந்துரு’’

‘’அப்படியெல்லாம் இனிமே எதுவும் நினைக்கமாட்டேன்’’

‘’உன்னோட நடவடிக்கைகள் அப்படித்தான் எனக்கு நினைக்கத் தோணுது, உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன்’’

சுந்தரன் இனிமேல் கவலை வேண்டாம் என பாரதியிடம் கூறினான், அப்பொழுது மனதில் வலிதனை உணரத் தொடங்கினான். பின்னர் சுந்தரன் வேலைக்குச் சென்றான். மிக வேக வேகமாக வேலையை முடித்தான். வேலைதனை முடித்துவிட்டு மதிய வேளையில் வாசனிடம் பாரதி காதல் விசயம் பற்றி எதுவும் இனிமேல் பேச வேண்டாம் என்றான். வாசன் பாரதியிடம் இதுகுறித்து பேசுவதாக கூறினான். ஆனால் சுந்தரன் கூறிய விசயங்கள் கேட்டபின்னர், வாசன் இனிமேல் இது குறித்து பேசுவதில்லை என உறுதி அளித்தான். சுந்தரன், தனது காதலுக்கென இருந்த வாசன் எனும் ஒரு உதவி வாசலையும் திறக்கவே முடியாதபடி அடைத்தான். சூரியன் வேறு சுட்டெரித்தது.

(தொடரும்) 

Friday 28 May 2010

நல்லாவே சமைப்பேன்

''இன்னுமா கிளம்பலை'' அம்மா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். ''இதோ ரெடியாயிட்டேன்'' நானும் பதிலுக்கு சத்தம் போட்டேன். ''பொண்ணு தானே பார்க்கப் போறோம், பொண்ணு மாதிரியே சீவி சிங்காரிச்சிட்டு இருக்கானே'' அப்பாவின் முனகல் சத்தம் தெளிவாகத்தான் கேட்டது.

நான் அப்பொழுதுதான் கல்லூரி படிப்பு முடித்து இருந்தேன். வேலைக்கு விண்ணப்பம் செய்து கொண்டிருந்த தருணம். கடந்த வார நேர்முகத் தேர்வில் சிறப்பாக செய்தது போன்ற உணர்வு. ஒரு வாரத்தில் அழைக்கிறேன் என சொல்லி இருந்தார்கள். எப்படியும் அழைத்து விடுவார்கள் என தினமும் எனது மொபைல்தனை மறக்காமல் சார்ஜ் செய்துவிடுவேன். சில பல நேரங்களில் பேட்டரி தீர்ந்து அவசரத்திற்கு கூட மொபைல் உதவாமல் போய்விடுகிறது.

அவசர அவசரமாக மாடியிலிருந்து கீழிறங்கி வந்தேன். அம்மாவும் அப்பாவும் தயாராக இருந்தார்கள். அந்த நேரம் பார்த்து எனது சொந்தக்கார பாட்டி வந்து சேர்ந்தார். ''எங்க மூணு பேருமா கிளம்பிட்டீங்க, நம்ம சொந்த பந்தத்துல இல்லாத பொண்ணுகளா, அதுல ஒரு பொண்ணை கட்டிக்கிற வேண்டியதுதானே, வெளியூர் பொண்ணு கட்டப் போறானாம்'' என பேசியதும் தான் தாமதம், அப்பாவுக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. அந்த பாட்டி நன்றாகத்  திட்டு வாங்கினார்.

எங்கள் உறவினர் எவரும் எங்களுடன் பெண் பார்க்க வர முயற்சிக்கவில்லை. அவரவருக்கு கோபம் மட்டுமே மிஞ்சி இருந்தது. ''என்னங்க ஒரு எட்டு என் அண்ணனை கூப்பிட்டு போவோம்'' என்றார் அம்மா. ''அன்னைக்கு நல்லா வாங்கி கட்டிக்கிட்டது போதாதுன்னு இப்ப வேறயா'' என கோபம் தீராமலே சொன்னார் அப்பா.

பேருந்து நிலையம் நோக்கி நாங்கள் மூவரும் நடந்தோம். எங்கள் எதிரில் வந்த எனது மாமா மகள் ''மாமாவுக்கு பொண்ணு பாக்கப் போறீங்களா அத்தை, நானும் கூட வரட்டுமா, மூணு பேரா  சேர்ந்து ஒரு நல்ல காரியத்துக்கு போகக் கூடாதுல'' என்றாள். ''உங்க அப்பன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வா'' என்றார் என் அம்மா. ''சொல்லிட்டுதான் அத்தை வந்தேன்'' என்றாள் எனது மாமா மகள் முகம்  மலர்ந்தபடியே.

உறவினர்களுக்குள் எந்த பொண்ணும் எடுக்கக் கூடாது என மிகவும் தீவிரமாகவே இருந்தார் எனது அப்பா. அதற்கு அவர் சொல்லும் காரியங்கள் ஆயிரம் ஆயிரம். ஒரு காரணத்தைக் கூட இதுவரை நான் மறுத்துப் பேசியது இல்லை.

பேருந்து   நிலையத்தில் நாங்கள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தோம்.  ''மாமா, பொண்ணு போட்டோ இருக்கா'' என்றாள் எனது மாமா மகள். ''ம்ம்'' என சொல்லியவாறே எடுத்துக் காட்டினேன்.

போன  வாரம் தான் தரகர் எனது சாதகத்திற்கு பொருந்திய சாதகங்கள் என ஐந்து பெண்களின் போட்டோவுடன் அவர்களது விபரங்களையும் தந்து இருந்தார். முதல் போட்டோவை பார்த்ததும் மூக்கும் முழியுமாக இருந்த அந்த பெண் பளிச்சென மனதில் இடம் பெற்றுவிட்டாள், மத்த படங்களை பார்க்க வேண்டாம் என தோன்றினாலும் பார்த்து வைத்தேன். நல்லவிதமாக வேறு எந்த பெண்ணும் எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்த பெண்ணையே என் அப்பா அம்மா சரி என சம்மதம் சொல்லிவிட்டார்கள்.

போட்டோவைப் பார்த்தபடியே ''என்னை மாதிரியே அழகா இருக்காங்க'' என்றாள் மாமா மகள். ஆமாம், அவள் சொல்வதும் உண்மைதான்,  என் மாமா மகள் கொள்ளை அழகு. நன்றாகப் படித்து வருகிறாள். அடுத்த வருடம் கல்லூரி படிப்பை முடித்து விடுவாள். ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்து விடுவாள். இவளது நிலையில் நான் இருந்தால் 'வெயிலுக்குகந்தம்மனுக்கு இந்நேரம் காசு வெட்டி போட்டுருப்பேன், என் மாமா மனம் மாற வேண்டும் என ஏறாத கோவிலுக்கு எல்லாம் ஏறி இருப்பேன், ஆனால் இவளோ தன்னை ஒதுக்கியவன் என்று கூட பார்க்காமல் எனது பெண் பார்க்கும் படலத்துக்கு உடன் வருகிறாளே' எனும் யோசனையில் இருந்தேன். பேருந்து வந்து நின்றது. ''இந்தாங்க மாமா போட்டோ'' என தந்தாள்.

பெண்ணின் வீடு மிகவும் அழகாக இருந்தது. அகர்பத்தியின் நறுமணம் தாலாட்டியது. ''வாங்க வாங்க'' என எனது வருங்கால மாமனாரும், மாமியாரும் வரவேற்றார்கள். அவர்களது உறவினர்கள் என பலர் அங்கே தென்பட்டார்கள். அத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். ''நாங்க மட்டும் தான் வந்தோம்'' என குறிப்பறிந்து சொன்னார் என் அப்பா. ''தரகர் வரலையா'' என்றார் என் வருங்கால  மாமனார். எனது கண்கள் பெண்ணை தேடியது. நாங்கள் நால்வரும் சோபாவில் அமர்ந்தோம். எனது மாமா மகள் என் அம்மாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள், சிரித்த முகமாய் இருந்தாள்.

பலகாரங்கள் என மேசையில் இருந்தது. எடுத்துக்கோங்க என தட்டை காட்டியவர்  ''நாங்க சுத்த சைவம்'' என்றார் என் வருங்கால மாமனார். ''நாங்களும் தான், அதை தரகர் கிட்ட ரொம்ப முக்கியமா சொல்லி இருந்தேன்'' என்றார் என் அப்பா. நான் சைவ உணவு சாப்பிட்டே வளர்ந்தவன். ஆசைக்கு கூட முட்டை சாப்பிட்டது இல்லை. எனக்கு அப்படியொரு கொள்கை பிடிப்பு. பலகாரம் ருசித்த போது ''யார் செஞ்சது'' என்றார் என் அம்மா. அந்த பலகாரம் செய்தது அவளது வருங்கால மருமகளாக இருக்க வேண்டும் எனும் ஆசையாய் கூட இருக்கலாம். ''என் பொண்ணு தான்'' என்றார் என் வருங்கால மாமியார். ''ரொம்ப நல்லா இருக்கு'' என்றாள் என் மாமா மகள்.

அனைவரின் கண்களும் எனது மாமாவின் மகளின் மீது இருந்தது. அங்கிருந்த நடுத்தர வயதான பெண் ஒருவர் ''அடி ஆத்தி எம்புட்டு அழகு'' என்று தனது முகவாய் கட்டையில் கைவைத்து சொன்னவர், பின்னர் தலையில் சொடுக்கிக் கொண்டார். எனது மாமா மகள் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள். அனைவரும் எனது மாமா மகளை எனது சகோதரி என்றே நினைத்து இருக்கக் கூடும் என சொல்ல முடியாது, ஏனெனில் என் அப்பா விலாவாரியாக எங்கள் குடும்பத்தை பற்றி, வெளியில் பெண் எடுப்பதற்கான  காரணங்கள் ஐந்து என தரகரிடம் எழுதிக் கொடுத்து இருந்தார்.

பெண்ணை அழைத்தார்கள். காபியுடன் பெண் வந்தார். எனது மாமா மகள் என்னை பார்த்து அவளது கட்டை விரலை உயர்த்தி காட்டினாள். அவளது முகத்தில் எத்தனை சந்தோசம். அந்த நேரம் பார்த்து எனது மொபைல் ஒலித்தது. எங்கும் எழுந்து செல்லாமல் அங்கிருந்தே பேசினேன். வேலை கிடைச்சிருக்குமே என நீங்கள் நினைத்து இருந்தால் அது சரிதான். எனக்கு வேலை கிடைத்த விசயத்தை என் அப்பா அம்மாவிடம் மெதுவாக சொன்னேன். ''பொண்ணோட ராசி'' என்றார்கள். ''என்  மாமா மகளோட ராசியா'' என்றேன் மெதுவாக சிரித்துக் கொண்டே. என் அப்பா என்னை முறைத்துவிட்டு ''பொண்ணு பார்க்க வந்த நல்ல நேரம், என் பையனுக்கு நல்ல உத்தியோகம் கிடைச்சிருச்சி'' என்றார் சந்தோசத்துடன். அனைவரும் சந்தோசப்பட்டார்கள். எனது மாமா மகளின் முகத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இரண்டு கட்டை விரலை உயர்த்தி காட்டினாள். பெண் வெட்கத்தில் சிரித்தாள்.

ஒவ்வொருவருக்காக காபி தந்தவள் எங்களுக்கும் தந்தாள். போட்டோவைப் பார்த்ததைவிட நேரில் மிகவும் அழகாய் இருந்தாள். காபி அருந்தினோம். எனது மாமா மகள் ரசித்துக் குடித்து கொண்டிருந்தாள். பெண்ணை பார்த்து ''நல்லா சமைப்பியாம்மா'' என்றார் என் அம்மா. ''நல்லாவே சமைப்பேன்'' என்றாள். அவளது குரல் கேட்டதும் எனக்கு ''பேசு இன்னும் பேசு'' என சொல்லத் தோன்றியது. உடனே எழுந்து பெண்ணுடன் தனியாய் பேச வேண்டும் என அனுமதி பெற்று பேசினேன்.

என்னை மிகவும் பிடித்து இருப்பதாக சொன்னாள். எனக்கு மனதில் மிகவும் சந்தோசமாக இருந்தது. வேலைக்கு செல்ல விருப்பமா என்றேன். சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது எல்லாம் வேலைதானே. வேலை செய்யாமல் எவரும் சும்மா இருக்க இயலுமா என இயல்பாக பேசிய அவளது பேச்சில் காதல் கொண்டேன். என் அப்பாவின் விருப்பத்திற்கு ஏற்றவாறே அவர் பெண் பார்த்து வைத்திருக்கிறார் என நினைத்துக் கொண்டேன்.

ஊருக்கு போய் தகவல் சொல்றோம் என சொல்லாமல் அங்கேயே சம்மதம் சொன்னோம். என் மாமா மகள் என் வருங்கால மனைவியை கட்டிப்பிடித்தாள். அத்தனை சந்தோசம் அவளுக்கு.

சந்தோசமாக பேருந்து நிலையத்தில் வந்து நின்றபோது என்னருகில் வந்து  என் மாமா மகள் அதிக சந்தோசத்துடன் சொன்னாள் ''மாமா, என் ரூட் இப்போ கிளியர், தேங்க்ஸ் மாமா'' சிறு வயது காலங்களில் அவளும் நானும் ஓடிபிடித்து விளையாடிய தருணங்கள் நினைவில் ஆடியது.

அவளது செல்பேசி ஒலித்தது. சற்று தள்ளிச்  சென்றுதான் பேசினாள், இருந்தும் எனக்கு கேட்டது.  ''இனி நம்ம காதலுக்கு யாரும் தடையா வரமாட்டாங்கடா, நான் நினைச்ச வேலைக்கு நிச்சயம் போகலாம், இல்லைன்னா இத்தனை படிச்சும் அடுப்படியிலே அடைச்சி வைச்சிருப்பாங்கடா''

எனது வருங்கால மனைவிக்கு வேலைக்கு செல்ல விருப்பம் எனில் முதன் முதலாக எனது அப்பாவின் காரணத்தை எதிர்க்க காரணம் தேடிக் கொண்டிருந்தேன்.

Wednesday 26 May 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 13

மதுசூதனனை உள்ளே அழைத்து அமர வைத்தான் கதிரேசன். என்ன விபரம் எனக் கேட்டபோது விடுதியில் தன்னால் ஒரு பெரிய பிரச்சினை உண்டாகிவிட்டதாகவும், தானே பொறுப்பேற்றுக்கொண்டு விடுதியை விட்டு வெளியேறி வந்ததாகவும் தனது ஊருக்கு தகவல் தந்துவிட்டதாகவும் கூறியவன் தங்குவதற்கு ஒரு இடம் தேட வேண்டும் என்றான். கதிரேசன் நீலகண்டன் எழுந்ததும் கேட்டு சொல்வதாக சொன்னான். ஆனால் மதுசூதனன் தனக்கு வேறு ஒரு இடம் வேண்டும் என்பதில் குறிப்பாய் இருந்தான். 

இருவரும் வெளியே சென்று தேடினர். அப்பொழுது வழியில் வந்த  நாமம் அணிந்த ஒருவரிடம் மதுசூதனன் தனக்கு எங்கேனும் ஒரு வீடு அறை வாடகைக்கு கிடைக்குமா என்று கேட்டான். என்ன விபரம் என கேட்டவரிடம் நான் வைணவன் என ஆரம்பித்து கதையை சொன்னான் மதுசூதனன். நாமம் அணிந்தவர் மதுசூதனனுக்கு தனது வீட்டிலேயே ஒரு அறை ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார். தனது வீட்டு முகவரி தந்துவிட்டு காலையில் வருமாறு சொன்னார். கதிரேசன் மகிழ்ந்தான். உனக்கு மட்டும் தான் இடம் கிடைக்கும்னு நினைச்சியா என சிரித்தான் மதுசூதனன். 

''எங்களோட தங்கி இருந்து இருக்கலாமே, ஏன் நாங்க சைவம்னு யோசிக்கிறியா?'' என்றான் கதிரேசன். ''இல்லை, நானும் சேர்ந்து எதுக்கு தொல்லை தரனும்னுதான் வேறு வீடு பார்க்கச் நினைச்சேன்'' என்றான் மதுசூதனன்.

இத்தனை நாள் சமண சமயம் பற்றி பேசாத கதிரேசன் அன்று சமண சமயத்தைப் பற்றி மதுசூதனனிடம் கூறினான். மதுசூதனன் கோபம் கொண்டவனாய் ''அது எல்லாம் வைணவத்தைப் பத்தி தப்பா சைவர்கள் எழுதியது'' என்றான். அதற்கு கதிரேசன் ''அப்படின்னா சைவத்தைப் பத்தி தப்பா வைணவர்கள் எழுதியதா?'' என்றான். மதுசூதனன் யோசித்தான். ''நீ நல்லாப்படிச்சிப் பாரு வேத மதம்னும், திருஞானசம்பந்தரைப் பத்தியும் கூட அவதூறா எழுதியிருக்காங்க'' என்றான் கதிரேசன். மதுசூதனன் ''ஏன் இப்போ இதைப்பத்தி என்கிட்ட பேசுற,  நானே விடுதியில ஒரு பிரச்சினைக்கு ஆளாகி வந்துருக்கேன், அப்படியிருந்தும்'' என கூறினான். ''இல்லை எனக்கு என்னமோ மொத்த வரலாறு திரிக்கப்பட்டு இருக்குனு மனசுக்கு தோணுது, அதான் உன்கிட்ட சொன்னா நீயும் என்ன ஏதுனு பார்ப்ப'' என்றான் கதிரேசன். ''பார்க்குறேன், ஆனா இப்ப வேணாம், நாளைக்கு நான் சிவநாதன் சாரை வேறப் பார்க்கனும்'' என்றான் மதுசூதனன். கதிரேசன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் விட்டான்.

உறங்கிக் கொண்டிருந்த நீலகண்டன் 'கதிரேசா கதிரேசா' என அழைத்தார். ''தாத்தா'' என்ற கதிரேசன் அவரது அறையில் விளக்கைப் போட்டுப் பார்த்தான். நீலகண்டன் கதிரேசனை அருகில் அழைத்து அவனது தலையில் கையை வைத்தார். அடுத்த சில விநாடிகளில் அவரது கண்கள் அசைய மறுத்தது. ''தாத்தா'' என அலறினான் கதிரேசன். மதுசூதனன்  அறைக்குள் ஓடி வந்தான்.

நீலகண்டனின் உடல் அசைவற்றுப் போனதைக் கண்டு பதறிய கதிரேசன் மதுசூதனனை அவர் அருகில் இருக்கச் சொல்லிவிட்டு மருத்துவரை அழைக்க ஓடினான். நீலகண்டனையேப் பார்த்துக் கொண்டிருந்தான் மதுசூதனன். திருநீறு இன்னும் அழியாமல் அவரது உடலில் ஒட்டி இருந்தது. திருநீறு தாங்கிய நெஞ்சில் தனது கையை வைத்தான் மதுசூதனன். பாடினான். குரல் தழுதழுத்தது.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல்கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

அவரது நெஞ்சில் கையை வைத்து பலமாக அழுத்தியபடியே பாடி முடித்தவன்  ''எம்பெருமானே சிவனே உதவி செய்யீரோ'' என ஓங்கி நெஞ்சை அழுத்தினான். திடுக்கிட்டு விழித்தார் நீலகண்டன். ''தாத்தா'' என அழைத்தான். ''செத்துட்டேன்னு நினைச்சேன், உயிர்ப்பிச்சைப் போட்டியோ'' என மதுசூதனனை படுக்கையிலிருந்தபடியே கைகள் எடுத்து கும்பிட்டார் நீலகண்டன். அவரது கட்டிலின் அருகில் இருந்த புத்தகத்தில் வரிகள் கண்டான் மதுசூதனன்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்,
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்,
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்,
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

அந்த வேளையில் மருத்துவருடன் கதிரேசன் உள்ளே நுழைந்தான். கதிரேசன் நீலகண்டன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டான். நீலகண்டனைப் பரிசோதித்த மருத்துவர்  ''இப்போதைக்கு பயப்படுறமாதிரி ஒண்ணுமில்ல சில பரிசோதனை செய்யனும்'' எனக் கூறிவிட்டு நாளை அதிகாலை நீலகண்டனை மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டு சென்றார். இருவரும் நீலகண்டனின் அறையிலேயே இருந்தார்கள். நீலகண்டன் மேற்கொண்டு பேசாமல் தூக்கம் வருவதாக தூங்கினார்.


''என்ன செய்தாய், எப்படி எழுந்தார்'' எனக் கேட்டான் கதிரேசன். தான் தன் தந்தையிடம் கற்றுக்கொண்ட முதலுதவி செய்தேன் என்றான் மதுசூதனன். மதுசூதனனை கட்டிப்பிடித்தான் கதிரேசன். தூக்கம் கண்களைச் சுழட்ட கட்டிலுக்கு அருகிலேயே உறங்கினார்கள்.

நீலகண்டன் காலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு பூசிக்கொண்டு வழக்கம்போல பூஜை அறையில் அமர்ந்தார். அவருடன் கதிரேசனும் அமர்ந்தான். சிறிது நேரத்தில் மதுசூதனனும் பூஜை அறைக்குள் நுழைந்தான். ''பெருமாளை அங்க வைச்சி நீ பூஜை பண்ணு'' என பூஜை அறையில் ஓரிடம் காட்டினார் நீலகண்டன். 


பூஜைகள் முடிந்து மருத்துவமனைக்குச் சென்றார்கள். அதிகாலையிலேயே நீலகண்டனின் இதயம், இரத்தம் சிறுநீர் என பரிசோதனை தொடங்கியது. கல்லூரிக்குச் செல்லும் வேளை நெருங்கிட மதுசூதனனை கல்லூரிக்குப் போகச் சொன்னான் கதிரேசன். மதுசூதனன் உடனிருப்பதாக சொன்னான். சில நாட்கள் கழித்து வரச் சொன்னார் மருத்துவர். வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்தார் நீலகண்டன். கதிரேசன் சங்கரன்கோவிலுக்கு தகவல் சொன்னான். கல்லூரிக்கு செல்லாமல் அவருடனே இருந்தான்.

மதுசூதனன் புதிய வீட்டிற்கு சென்று தனது பொருட்களை வைத்துவிட்டு மதிய வேளையில் கல்லூரியில் சிவநாதனை சந்தித்தான். சிவநாதன் அவனை கடுமையாக எச்சரித்தார். சாதி மத வேறுபாட்டினை எவரேனும் தூண்டும் வகையில் நடந்தால் கல்லூரியில் இருந்து விலக்கிவிடுவதாக கூறினார். தனது தவறை உணர்ந்த மதுசூதனனுக்கு ஒரு முறை வாய்ப்பளிப்பதாக கூறி அனுப்பினார். கல்லூரியில் மாணவர்கள் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டனர்.

அன்று மாலையில் அனைவரும் சங்கரன்கோவிலில் இருந்து வந்து சேர்ந்தார்கள். நீலகண்டனை அவர்களுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்கள். கதிரேசன் தனித்து தனியாய் நின்றான். மதுசூதனன் அப்பொழுது நீலகண்டனின் வீட்டிற்குள் நுழைந்தான். 


(தொடரும்) 

Friday 21 May 2010

புகைபிடித்தலும், தண்ணி அடித்தலும்

ராமானுசபுரம்னு தமிழ்நாட்டுல தெற்கால இருக்கற ஊருலதான் சின்னசாமி வாழ்ந்து வந்தான்.

சின்ன வயசுல வயக்காட்டுல கூலிக்காக ஓடியாடி வேலை செஞ்சிட்டிருந்த காலத்தில வெங்கடசனோட சேர்ந்து முத முதல தோட்டத்தில மறைஞ்சி நின்னு குடிக்க ஆரம்பிச்ச சிகரெட்டு பழக்கத்தை சின்னசாமி தொடங்கினப்போ அவனுக்கு பதினேழு வயசுதான். அதக்கப்பறம் அந்தப் பழக்கத்தை நிறுத்திக்கவே இல்லை. வெங்கடேசன் படிச்சி பட்டம் வாங்கி திருச்சியில வேலைக்குச் சேர்ந்துட்டான், ஆனா இந்த சின்னசாமி ராமனுசபுரத்தைவிட்டு எங்கயும் போகலை. படிச்சிட்டு இருக்கறப்போ ஊருக்கு எப்பவாச்சும் வர வெங்கடேசன், சின்னசாமிகிட்ட 'சிகரெட் பழக்கத்தை விட்டுடா'னு சொன்னாலும் சின்னசாமி விடுறதா இல்லை.

அதோட விட்டானா சின்னசாமி, இருவது, இருவத்தி ரண்டு வயசுலேயே உடல் அலுப்புக்குனு வயக்காட்டு வேலை முடிஞ்சதும் கொஞ்சம் சாராயம் வாங்கி குடிக்க ஆரம்பிச்சான். அதுவே கொஞ்சம் அதிகப்படியாப் போக ஆரம்பிச்சிருச்சி. குடிக்காம அவனால ஒருநாளும் இருக்க முடியல. இருந்தாலும், குடிச்சிட்டு அவனோட வீட்டுல போய் பேசாம படுத்துக்குவான் சின்னசாமி. ரோட்டுல கத்தறது, கெட்ட கெட்ட வார்த்தை பேசறதுனு எதுவுமே பண்ணமாட்டான் சின்னசாமி.

இப்படி இருந்த சின்னசாமிய, தங்கராசு மக கல்யாணி விரும்பினா. அப்போ சின்னசாமிக்கு வயசு இருவத்தி மூணு இருக்கும், கல்யாணிக்கு பத்தொன்பதுதான் இருக்கும். இந்த காதலு விசயத்தை சின்னசாமிகிட்டயும் அவ சொல்லி வைச்சா. கூடவே ஒரு கட்டளை போட்டுட்டா. 'எப்போ சிகரெட்டையும், குடியையும் விடறியோ அப்பதான் கட்டிக்குவேனு' சொன்னதும் 'சரி சரினு' சொன்ன சின்னசாமிக்கு சாராயம் குடிக்காமலும், சிகரெட்டு பிடிக்காமலும் இருக்க முடியல. கல்யாணியை சின்னசாமிக்கு ரொம்பவேப் பிடிச்சிப் போயிருந்துச்சு. இருந்தும் என்ன செய்ய?

கல்யாணிகிட்ட 'என்னைக் கட்டிக்கோ, கல்யாணத்துக்கப்பறம் மாறிருவேன், உடம்பு வலி அதான் குடிக்கிறேனு' ஒரு நொண்டிச் சாக்கு சொன்னான் சின்னசாமி. அதுக்கு கல்யாணி 'ஏன் நானும்தே காட்டுல மேட்டுல வேலை செய்யலயா, உடம்பு வலிக்குதுனு நா குடிக்கிறேனா' னு ஒரே வெட்டா வெட்டிப் பேசிட்டுப் போயிட்டா.

சின்னசாமி யோசிச்சிப் பார்த்துட்டு ஒரு வாரம் சிகரெட், குடியை விட்டான், ஆனா அவனால அதுக்கு மேல தாக்குப்பிடிக்க முடியல. 'குடிகாரப் பயலுக்கு என் மகளைத் தரமாட்டேனு கல்யாணியோட அப்பா ஒத்த காலுல நின்னுட்டாரு, அதோட அந்த கல்யாணியும் சின்னசாமிகிட்ட இப்படி இருக்க உன்னோட என்னால குடும்பம் நடத்த முடியாதுனு சொல்லிட்டுப் போயிட்டா'

இதனால மனசு உடைஞ்ச சின்னசாமி சிகரெட்டும், சாராயமும் கொஞ்சமா, கொஞ்சமா விட முயற்சி பண்ணினான். சின்னசாமிய 'திருத்திப் புடலாம்' னு கல்யாணிக்கு லேசா கூட நம்பிக்கை வரவேயில்லை. கல்யாணி நினைச்சமாதிரியே மறுபடியும் சின்னசாமி குடிக்க ஆரம்பிச்சிட்டான். 'இனி இந்த போக்கத்தவனை நம்பி புரயோசனமில்லைனு' கல்யாணி அப்பா சொன்னதைக் கேட்டு கல்யாணி வேற கல்யாணம் கட்டிட்டுப் போயிட்டா.

இந்த சின்னசாமிக்கு தன் மேல கோவம் கோவமா வந்துச்சு. என்ன பண்ண? யாருமே பொண்ணு தரமாட்டேனு சொல்லிட்டாங்க. இந்த சின்னசாமியும் கல்யாணி நினைப்புலயே இருந்துருவேனு ஒரு வசனம் பேசினான். அவன் பேசினது வசனமாத்தான் இருந்துச்சினாலும், அப்படியே வாழ ஆரம்பிச்சிட்டான்.

சின்னசாமிக்கு வயசு ஏறிக்கிட்டேப் போக ஆரம்பிச்சிச்சு. சிகரெட்டுல கார்பன் மோனாக்ஸைடுனு ஒரு காத்து இருக்கு. அந்த காத்து நம்ம உடம்புல இருக்கற செல்லுக்கு போகறதினால குறைச்சலான ஆக்ஸிஜன் தான் செல்லுக்கு எல்லாம் கிடைக்கும். அதனால செல் எல்லாம் வலிமை குறைஞ்சி போயிரும். அதோடு மட்டுமா, சிகரெட்டுல டார் னு ஒரு எழவும் இருக்கு, அந்த எழவு புத்து நோய கொண்டு வந்து சேத்துரும். அப்புறம் நிக்கோட்டினு சொல்வாங்க, அதுதான் திரும்ப பிடி, திரும்ப பிடினு வம்பு பண்ணும். இப்படி சிகரெட்டு குடிக்கிறதுனால மூச்சுக்குழாயில இருக்க சின்ன சின்ன இழை போல இருக்க செல் எல்லாம் செயல் இழந்து தூசுகள எல்லாம் பிடிச்சி வைக்காது, அதனால நுரையீரலு வீங்கிரும்.

இதனால சின்னசாமி தளர ஆரம்பிச்சிட்டான். அவனோட வயசு என்னவோ இருவத்தி எட்டுதான். அதோட அவன் குடிச்ச சாராயம் அவனோட கல்லீரலுக்குப் பிரச்சினை தர ஆரம்பிச்சிச்சு. அப்படியும் கூட அவனால அதை நிறுத்த முடியல. சின்னசாமி எப்பப் பார்த்தாலும் இரும ஆரம்பிச்சிட்டான். அதனால அவனுக்கு இருமல் சின்னசாமினு பட்டப்பேரு கூட வைச்சிட்டாங்க. பாவி மனுசன், திருந்தறமாதிரி தெரியல. என்ன பண்ணுவான் சின்னசாமி!

இப்படி அவனோட கதையை கொஞ்ச நாளைக்கு முன்னால பார்க்குல எதேச்சையா என்கிட்ட பேசிட்டிருந்த வெங்கடேசன் ஒருநா சொன்னதும்,  உடனே சின்னசாமியப் போய் பார்க்கனும் போல இருந்திச்சி.

சின்னசாமிகிட்ட  பக்குவமா பேசினேன். சிரிச்சிகிட்டே சொன்னான் சின்னசாமி. 'எல்லாத்தையும் விட்டுறேன்னு'  ஆனா எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் அவன்கிட்ட நிக்கோட்டின் பேட்ஜ் கொடுத்து எல்லாம் சொல்லிட்டு வந்தேன். கொஞ்ச நாளைக்கப்பறம் அதே பார்க்குல வெங்கடேசனை பார்த்தப்ப சொன்னான். சின்னசாமி இப்போ குடிக்கிறது இல்லை, பிடிக்கிறது இல்லைன்னு.

குடிச்சி  கேட்டுப் போன சாம்ராஜ்யம் இருக்கு. குடிக்கிறவங்க, பிடிக்கிறவங்க எல்லாம் கெட்டவங்க இல்லைன்னு வாதாடற கூட்டம் இருக்கு. இவங்களை யாரு கெட்டவங்கனு சொன்னா, அளவுக்கு அதிகமா எதை செஞ்சாலும் உடம்பு கேட்டு போயிரும்னு தானே சொல்றாங்கனு நினைச்சிகிட்டு சின்னசாமியை பார்க்கப் போயிருந்தேன்.

சின்னசாமி என்னைப் பார்த்து கும்பிட்டான். 'என்ன பழக்கமிது'அப்படின்னு சத்தம் போட்டேன். எனக்கு கல்யாணிபோல பொண்ணு கிடைப்பாளானு கேட்டான். எதுக்கு அப்படின்னு கேட்டேன். இப்போதான்ஆம்பளைங்க மாதிரி பொம்பளைங்களும் குடிச்சிட்டும் பிடிச்சிட்டும் இருக்காங்களாமேனு சொன்னான். கலாச்சார சீரழிவு அப்படின்னு என்ன என்னமோ பேசினான் சின்னசாமி. நிக்கோட்டின் பேட்ஜ் வேணுமான்னு கேட்டேன், வேணாம்னுட்டான். இத்தனை வருஷ உத்தியோகத்துல என்னால ஒரு சின்னசாமியைத் தான் திருத்த முடிஞ்சது.

இதை நினைச்சி நான் என்ன தண்ணி அடிக்கவா முடியும், இல்லைன்னா ஊதித்தான் தள்ள முடியுமா? பொழப்பு அத்தவங்க பண்ற வேலை அதுனு கண்ணுல படற சின்னசாமிக்கெல்லாம் நிக்கோட்டின் பேட்ஜ் தந்துக்கிட்டுதான் இருக்கேன். தலையில ஒட்டிக்கோனு தூக்கி வீசிட்டு, புகைய என் முகத்துல ஊதிட்டு போறவங்களப் பாக்குறப்ப மனசு வலிக்கும். அதுக்காக நான் லாட்ஜ் எல்லாம் போடறது இல்ல. வருஷம் ஓடிருச்சி. பத்தோ பதினைஞ்சி சின்னசாமிகளை, ரெண்டோ மூனோ சின்னசாமினிகளை திருத்தினேன். வாழ்ந்துட்டு இருந்தப்ப எனக்கு ஒரு யோசனை வந்துச்சு, சிகரெட், சாராயம் உருவாக்கிறதை நிறுத்தினா என்னனு. எந்த தொழில் அதிபர்களும் என் பேச்சு கேட்கலை. என்ன பண்றது. இந்த வாழ்க்கைன்னாலே அப்படித்தான்.

இந்தாங்க நிகோட்டின் பேட்ஜ். நிகோடின் பற்றி மேலும் அறிய

Thursday 20 May 2010

நுனிப்புல் (பாகம் 2) 4

4 திருமண வைபவம்
தேவகி உறங்கிக்கொண்டு இருந்தாள். பூங்கோதை மீண்டும் மாதவியை எழுப்பினாள். உறக்கம் கலையாதவளாய் விழித்தாள் மாதவி.

‘’என்னங்க பூங்கோதை’’

‘’எனக்கு வாந்தி வரமாதிரி இருக்கு, என்கூட வர முடியுமா’’

மாதவி அவசரமாக எழுந்தாள். பூங்கோதையினை அழைத்துக் கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள். வீட்டில் மின்விளக்குகள் எரிந்து கொண்டு இருந்ததால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்பட வழியின்றிப் போனது.

மாதவி பூங்கோதையின் தலைப்பகுதியினையும், கழுத்துப் பகுதியினையும் தொட்டுப் பார்த்தாள். சூடாக இருந்தது. பூங்கோதை வாந்தி எடுத்தாள்.

‘’அலைச்சல்னால வந்து இருக்கும் பூங்கோதை, யார்கிட்ட ஒண்ணும் சொல்லிக்கிற வேணாம்ங்க பூங்கோதை’’

‘’இது அலைச்சல்னா வந்த வாந்தியோ, என்னவோ மாதவி எனக்கு பயம்மா இருக்கு, தாலி கட்டறப்ப ஏதாவது நடந்திருச்சின்னா என்ன பண்றது மாதவி’’

‘’கவலைப்படாதீங்க பூங்கோதை, மணி இப்போ ஒன்னுதான் ஆகுது, நல்லா தூங்கினா சரியாயிரும், இதுதான முதல் தடவை வாந்தி’’

‘’ம்’’

‘’அலைச்சல்னாலத்தான் இருக்கும்’’

கருவினை கருப்பையில் வைத்து இன்றோடு இரண்டு வாரங்கள்தான் ஆகிறது. கருவினை வைத்ததும், திருவிழா நடந்ததும், கல்யாணப் பேச்சு பேசியதும், திருமணம் நடக்கும் வேகமும் வாரங்கள் பல கடந்துபோல் தெரிகிறது. காலத்தின் வேகம்தனை யாரும் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஆனால் காலம் ஒரே சீரான வேகத்தில்தான் சென்று கொண்டு இருக்கிறது, என்றாவது பூமி தன்னைத் தானே சுற்றும் நாட்களும், சூரியனை சுற்றும் நாட்களும் குறைந்ததாக, அதிகரித்ததாக ஏதேனும் கணக்கு இருக்கிறதா? இல்லை கணக்குப் பார்க்கத் தவறிவிட்டார்களா? பழைய பஞ்சாங்கத்தையேப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று மட்டும் நமக்குச் சொல்லத் தெரிகிறது.

பூங்கோதையை பத்திரமாக அழைத்து வந்து உறங்க வைத்தாள் மாதவி. உறங்க முடியாமல் தவித்தாள் பூங்கோதை. தைரியமான பெண் எனினும் சில நேரங்களில் மனம் சஞ்சலம் தவிர்க்க முடியாததுதான். மாதவி பூங்கோதையில் தலையை தடவிக்கொண்டே சொன்னாள்.



‘’தூக்கம் வரலைங்களா பூங்கோதை, நாளைக்குக் கல்யாணத்துக்கப்பறம் என்ன கவலை, உங்க மனசை புரிஞ்சவர்தான் உங்களுக்கு கணவனா வரப்போறார் அதனால எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிச்சிக்குவார், தைரியமா தூங்குங்க, அப்படியே எது நடந்தாலும் வாசன் மாமா எதுக்கு இருக்கார்’’

வாசனால் என்ன அப்படி செய்து விட முடியும்?, இது பூங்கோதையும் கேசவனும் அவரவர் குடும்பத்தாரும் சம்பந்தபட்ட வாழ்க்கை. இருப்பினும் மாதவியின் அந்த ஆறுதல் மொழி கேட்டபின்னர் பூங்கோதை கண் அயரத் தொடங்கினாள்.

திருமண விழாவிற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்த பின்னர் ஊர் அடங்கி அயர்ந்து இருந்தது. வாசன், பார்த்தசாரதி மற்றும் பலர் மாதவியின் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தனர். சேகர் அய்யாவோ, சுந்தரனோ, அருணோ திருமணத்திற்கு வர இயலாத நிலை என கூறிவிட்டார்கள். சாரங்கன் திருமணத்திற்கு முதல்நாளே வந்திருந்தார், குரு வீட்டில் சாரங்கன் தங்கி இருந்தார். அந்த இரவு நேரத்தில் சாரங்கனிடம், குரு சொன்ன விசயங்கள், சாரங்கனுக்கு விபரீத ஆசையை உருவாக்கியது.

நடு இரவில் வாசன் திடுக்கிட்டு விழித்தான். திருமண முன்னேற்பாடுகளில் திருமால் பற்றி விசாரிக்க வாசன் மறந்தே போனான். திருமால் பற்றிய தகவல்கள் பாரதியிடம் இருந்து வராதது அந்த இரவில் வாசனுக்கு மிகவும் கவலையை அதிகரித்தது. அதுவும் இன்று காலையில் சென்று திருமாலைப் பார்த்து வருவதாக பாரதி நேற்று தகவல் சொல்லி இருந்தாள். இந்த நினைவுகள் வாசனது உறக்கத்தை கலைத்து இருந்தது. விஷ்ணுப்பிரியனின் நடவடிக்கைகளும் வாசனுக்கு ஒருவித அச்சத்தை தர ஆரம்பித்து இருந்தது.

அதிகாலைப் பொழுது விடிந்ததும், அனைவரும் திருமண விழாவிற்கு தயாராகிக் கொண்டு இருந்தனர். வாசன் உறங்காமல் பல வித சிந்தனைகளில் நேரம் போக்கிய பின்னர் திருமண விழாவிற்கு தயாரானான். சற்று அயர்ச்சியாக காணப்பட்டான். வாசன் தனது வீட்டிற்கு சென்று சில விபரங்களை எடுத்துக் கொண்டான். பூங்கோதைக்கு அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள். மாதவியிடம் ஒரு சில விசயங்கள் பேசினான். மாதவி தைரியம் சொன்னாள்.

வாசன் பின்னர் விநாயகம் பெரியவர் வீட்டிற்குச் சென்றான். அங்கு விஷ்ணுப்பிரியன் தங்கவில்லை என்பதை அறிந்தான். ஆனால் இது குறித்து அங்கு அவன் மேலும் பேசவில்லை. விநாயகம் பெரியவர்தான் விசாரித்தார்.

‘’வா வாசா, எல்லா ஏற்பாடுகளும் சரியா இருக்குல்ல, முதல்ல பொண்ணு கோவிலுக்குப் போகட்டும், அப்புறம் மாப்பிள்ளைப் போகட்டும் நீயே முன்ன நின்னு இந்த கல்யாணத்தை நடத்து’’

‘’நீங்களே நடத்தி வைங்க அய்யா’’

நேரம் மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தது. திருமால் குறித்தும் பெரியவரிடம் பேசினான் வாசன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் வாசனது வீட்டில் இருந்து மேள தாளங்களுடன் பூங்கோதை பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். மாதவி பூங்கோதையின் அருகிலேயே இருந்தாள். பூங்கோதை மாதவியின் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

சற்று நேரம் பின்னர் கேசவன் மேள தாளங்களுடன் பெருமால் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். வாசன் கேசவனுடன் இருந்தான். பூங்கோதை கோவிலின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டாள். கேசவன் கோவில் வாசல் அடைந்ததும் பூங்கோதை கோவிலுக்குள் நுழைந்தாள். கோவிலுக்குள் நுழைந்த மறுகணம் பூசாரி சொன்னார்.

‘’தாயா வந்து நிற்கிறியேம்மா’’

இந்த வார்த்தைகள் கேட்ட விஷ்ணுப்பிரியனும் பார்த்தசாரதியும் கேள்வியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். பூங்கோதைக்கு மயக்கம் வருவது போல் இருந்தது.

‘’ஆமாம், தாய்க்கும் தாயானவருக்கு தாயா வந்து நிற்கிறாங்க, நாங்கதான் இந்த உடை அலங்காரம் பண்ணினோம் பூசாரி அய்யா’’

மாதவி பதில் சொன்னதை கேட்டதும் விஷ்ணுப்பிரியன் மனதுக்குள் சிரித்தார். வாசன் இறைவனை வேண்டிக் கொண்டு இருந்தான்.

கேசவன் பூங்கோதையின் இடது பக்கத்தில் வந்து நின்று கொண்டான். கோவிலுக்குள் மிகவும் குறிப்பிட்டவர்களே இருந்தனர். கோவிலுக்கு முன் இடப்பட்ட பந்தலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெருமாளுக்கு தீபாரதனை காட்டப்பட்டது. புதிதாக எழுப்பபட்டிருந்த மண்டபத்தில் இருந்த குழந்தை வடிவ சிலைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. வாசன் தன்னை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டான். வாசனின் உடல் முக பாவனைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்தார் விஷ்ணுப்பிரியன். மாதவி வாசனைப் பார்த்து கண்களால் பேசினாள். வாசனின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. மாதவி பூங்கோதையிடம் பேசிக் கொண்டே இருந்தாள். பூங்கோதையின் கவனமெல்லாம் தான் மயக்க நிலை அடையக்கூடாது என்பதிலும் வாந்தி எடுத்துவிடக் கூடாது என்பதிலும் தான் இருந்தது.

மணப்பெண்ணும், மணமகனும் அமரவைக்கப்பட்டார்கள். அனைவரின் ஆசிர்வாதங்கள் பெறுவதற்காக மஞ்சள் கயிறு மகுடம் சூட்டிக் கொண்டது. அர்ச்சனை செய்திட மங்கலகர வண்ணம் பூசிய அரிசிகள் தரப்பட்டது. பூக்கள் தனது பிரிவை எண்ணி வருந்தாது மலர்ந்து சிரித்துக் கொண்டு இருந்தது. வளர்ந்து இருந்த நெருப்பின் முன்னமாய் வாய்மை வாயடைத்து நின்றது. ஓரிரு மந்திரங்கள் உபசரித்தார் பூசாரி. பெரியவர் நடத்தி வைத்தார். கேசவன் தாலியை கையில் வாங்கினான். தாலியை பூங்கோதையின் கழுத்தில் கட்டாமல் புதிய சிலையை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். மேளத்தின் சப்தம் அதிகரித்தது.

‘’தாலியைக் கட்டுங்க’’

வாசன் கண்கள் சிவக்க ஆரம்பித்தது. முதலில் கைகள் ஆடின, பின்னர் தலையும் உடலும் சேர்ந்து ஆடியது. மாதவி பிரார்த்தனை பண்ண ஆரம்பித்தாள். விஷ்ணுப்பிரியன் மனதில் திட்டம் நிழற்படமாக ஓடியது. பூசாரியின் குரலைக் கேட்ட கேசவன் பூங்கோதையின் கழுத்தில் தாலியைக் கட்டினான். மணமக்களை அனைவரும் வாழ்த்தினார்கள். வாசன் மயங்கி விழுந்தான். பூங்கோதை பயந்து போனாள். மயக்கம் தெளிவிக்கப்பட்ட வாசன் கோவிலினை விட்டு வெளியே வந்து நின்றான். ஊரின் வழக்கப்படி தயார் செய்யப்பட்டு இருந்த திருமண படிவத்தில் வாசன் கையொப்பமிட்டான். மூன்று படிவங்களில் ஒன்றை மணமகளிடமும், ஒன்றை மணமகனிடமும் தந்துவிட்டு மூன்றாவதை கிராமத்திற்கும் என எடுத்துக்கொண்டான். வாசனின் மயக்கம் பற்றி ஊரே பேசியது. முத்துராசு பொன்னுராஜூவிடம் கூறினார்.

‘’வாசுவை அப்படியே உன் பொண்ணு கழுத்துல தாலி கட்டச் சொல்ல வேண்டியதுதான்’’

‘’இரண்டு வருசம் போகட்டும்’’

அப்பொழுது பொன்னுராஜூக்கு ஒரு யோசனை தோன்றியது. வாசனின் பெற்றோர்களிடம் சொன்னார் பொன்னுராஜ். இப்பொழுதா என யோசித்தவர்கள் சரி போய் வரலாம் என மூவரும் திருமணச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு கிளம்பிச் செல்ல ஆயத்தமானார்கள்.

மணமக்கள் கோவிலில் இருந்து வீடு நோக்கி நடந்தார்கள். அப்பொழுது பெரியவர் வாசனை அழைத்தார்.

‘’நீ இப்படி பலவீனமா இருக்கறது நல்லதில்ல, உடம்பைப் பார்த்துக்கோ வாசா, நாம புதன்கிழமை திருவில்லிபுத்தூர் போறோம்’’

‘’உடம்பு நல்லாத்தான் அய்யா இருக்கு, ஆனா மனசுதான் ஆட்டி வைக்குது’’

கூட்டத்துடன் கெட்டி மேளம் கொட்டிச் சிரித்து நகர்ந்தது. கல்யாணச் சாப்பாடு இனிதே நடைபெற்றது. வாயார வாழ்த்தி வயிறார உணவருந்தி திருமணத்திற்கு வந்தவர்கள் விடைபெறத் தொடங்கினர். அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்றவாரே கேசவனின் வீட்டில் மணமக்கள் அமர்ந்து இருந்தனர். கண்டெடுக்கப்பட வேண்டியவைகள் என மணமக்களைத் தேடச் சொன்னார்கள். தொலைத்து விடாத வாழக்கையை இருவரும் தேடிக்கொண்டார்கள். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த வாசன், மாதவியிடம் பேசினான்.

‘’நல்ல வேளை நீ கல்யாணத்துக்கு வந்த’’

‘’மறுபடியும் மயங்கி விழுந்துட்டீங்க மாமா, ஆனா பூங்கோதைக்கு வர இருந்த மயக்கத்தை எப்படி மாமா உடனே மாத்த முடிஞ்சது’’

‘’ம், பேசுவ, அப்படியே அந்த பெருமாள் தாத்தாவை நான் சுமக்கலாம்னு இருக்கேன்’’

‘’அதுக்கு நீங்க தேவையில்லை மாமா, ம், நானும் தேவகியும் இன்னைக்கு சாயந்திரமே கிளம்பறோம் மாமா, முதல்ல எங்க வீட்டுக்குப் போய்ட்டு பிறகு உங்க வீட்டுக்கு வர்றோம்’’
வாசனிடம் கூறிவிட்டு கேசவனிடமும் பூங்கோதையிடமும் விடைபெற்றுக் கொண்டு தேவகியுடன் கிளம்பினாள் மாதவி.

வாசனது பெற்றோர்களும், பொன்னுராஜும் சோலையரசபுரத்திற்கு ஒரு முக்கிய வேலையாகச் செல்வதாக கேசவன் வீட்டிலிருந்த வாசனிடம் வந்து சொல்லிவிட்டு தேவகியையும் மாதவியையும் பாதுகாப்பாக சென்று வருமாறு கூறிவிட்டு சோலையரசபுரம் சென்றார்கள். சிறிது நேரத்தில் கேசவன் வீட்டில் இருந்து வாசன் தனது வீட்டை நோக்கி நடந்தான். வீட்டின் அருகில் சென்றதும், விஷ்ணுப்பிரியன் தனியாய் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். வாசனுக்கு ‘திக்’கென்றது.

(தொடரும்)