Showing posts with label அஷ்ஷிரியர்கள். Show all posts
Showing posts with label அஷ்ஷிரியர்கள். Show all posts

Tuesday 23 June 2015

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? இன குழுக்கள்

 முந்தைய பகுதி 

மனிதர்கள் இனக்குழுக்களாக அன்றைய நாளில் வசித்து வந்தார்கள். பொதுவாக அரசர் அவருக்கு கீழ் ஒரு கூட்டம் என இருந்த காரணத்தினால் அரசரின் மனப்போக்குப்படியே இந்த இனக்குழுக்கள் செயல்பட்டன. இனக்குழுக்களின் தலைமை அந்த இனத்தின் வளர்ச்சி மற்றும் அழிவுக்கு காரணமாக அமைந்தது. 

இஸ்ரேலிய மக்கள் என அழைக்கப்பட்டதன்  காரணம் இஸ்ரேலின் மகன்கள், இஸ்ரேலின் குழந்தைகள் என்ற அடிப்படை என அறியப்படுகிறது. இந்த இஸ்ரேலிய மக்கள்தான் யூதர்கள், சமாரிட்டன்கள், ஹீப்ரூக்கள் என பிரிந்தார்கள். இங்குதான் இனக்குழு தலையெடுக்கிறது. யூதர்களுக்கு என சில பழக்கவழக்கங்கள் அவர்களது வாழ்க்கை முறை என உண்டாக்கும்போது அதில் ஈடுபாடு கொள்ள இயலாத மக்கள் அதில் இருந்து தனித்து வெளியேறுகிறார்கள். எப்படி நமது நாட்டில் தமிழர்கள், கன்னடர்கள், மலையாளிகள் தெலுங்கர்கள் என பிரிந்து இருந்தாலும் இந்தியர்கள் என சொல்லிக்கொள்வது போல அன்றைய நாளில் இந்த சமரிட்டன்கள் தங்களை யூதர்கள் என ஒருபோதும் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை மாறாக தங்களை இஸ்ரேலிய மக்கள் என சொல்லிக்கொள்ள தயங்கியது இல்லை. 

யூதர்கள் பின்பற்றியதுதான் ஜூடாயிசம். இந்த ஜூடாயிசம் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருந்தாலும் மூவாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. யூதர்களின் மதம், தத்துவ வாழ்க்கை, கலாச்சாரம் என அனைத்தையும் விளக்குவதுதான் ஜூடாயிசம். யூதர்களாக பிறந்தால் அவர்கள் ஜூடாயிசம்தனை பின்பற்றி ஆக வேண்டும் எனும் நிர்பந்தம் இருந்து வந்தது. இந்து மதம் தனில் பிறந்தால் இந்துக்கள். முஸ்லீம் மதத்தில் பிறந்தால் முஸ்லீம்கள், கிறிஸ்துவம் தனில் பிறந்தால் கிறிஸ்துவர்கள் என்றே பார்க்கப்பட்டு வருகிறது. பிறப்பால் இவர் என்ற ஒரு இனம் தொன்று தொட்டு பின்பற்ற படுகிறது. 

ஒவ்வொரு குழந்தையும் சுதந்திரமற்ற குழந்தைதான். மதம்,  சாதி, இனம், பெயர் என திணிக்கப்பட்டு குழந்தைகள் சுதந்திரமர்றுப் பிறக்கின்றன. இப்படி பிறக்கும் குழந்தைகள் அந்த இனத்தில் இணைக்கப்பட்டு வேறு வழியின்றி அதை பின்பற்றும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இந்த ஜூடாயிசம் தான் கிறிஸ்துவம், முஸ்லீம் எல்லாம் உருவாக பெரும் காரணமாக இருந்தது. இதனுடைய கருத்துகளின் தாக்கங்கள் பின்பற்றப்பட்டன. எப்போதும் இந்த இனக்குழுக்களிடம் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். எதையும் உறுதியாக நம்பமாட்டார்கள். 

தங்களுக்கு என்று வரைமுறையை தனி நபரோ சில நபர்களோ  வைத்து எழுதினாலும் அதை பின்பற்றி செல்லாமல் அதை நம்பவும் மாட்டார்கள். இப்படி எல்லா இன குழுக்களில் இருக்கத்தான் செய்கிறது. ஒரு உதாரணத்திற்கு விடுதலைப்புலிகள் என்பது தமிழ் இனத்தில் ஒரு இனம். எதற்கு அப்படி குறிப்பிடுகிறோம் எனில் தமிழர்களை தீவிரவாதிகள் என சொல்லாமல் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என அடையாளம் காட்டிய வரலாறு சமீபத்திய ஒன்றுதான். போராளிகள் என்ற ஒரு இனக்குழு இன்றைய காலகட்டத்தில் தீவிரவாத இனக்குழு. 

இன்றைய சூழல் போலவே அன்றைய சூழலில் இந்த யூதர்கள் இனக்குழு இருந்தது. ஒரு இனத்தின் பற்றிய வரலாறு செவிவழி, கல்வெட்டு, புத்தகங்கள் மூலம் வழி வழியாக சொல்லப்பட்டு வரும். அன்றைய சூழலில் நம்ப இயலாத ஒன்றை அழிக்கவே முற்படுவார்கள். நமக்கு கிடைத்திருக்கும் செய்திகள் எல்லாம் எத்தனை உண்மை என தெரியாது. ஆனால் எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்கள், இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள் என்பதின் மூலம் முற்றிலும் கதை என எதையும் ஒதுக்கிவிட இயலாது. இன்றும் 14மில்லியன் யூதர்கள் உலகில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. 

யூதர்களின் வரலாறு குறித்து தொல்பொருள் ஆராய்ச்சிக்கும் பைபிளில் குறிப்பிட்டு இருப்பதற்கும் பல வேறுபாடுகள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இப்போது இதைப் பற்றி எழுதும்போது யார் பாபிலோனியர்கள், யார் அஷ்ஸ்ரீயர்கள் என எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டு வந்து இருப்பது தெரியும். அந்த பகுதியில் வாழ்ந்த பல இனக்குழுக்கள் ஒவ்வொரு பெயர் கொண்டு தங்களை அடையாளப்படுத்தியதோடு தங்களது திறமையை, தங்களது நிலையை நிலைநாட்டிட பெரும் போராட்டங்களை செய்து கொண்டு இருந்தன. இந்த போர் முறைகளால் மனிதம் தோற்றதுதான் உண்மையான வரலாறு. 

இது குறித்து மனம் போன போக்கில் எல்லாம் எழுத முடியாத விசயங்கள் என்பதுதான் இப்போதைக்கு பெரிய போராட்டமாக இருக்கிறது. 

(தொடரும்) 

Thursday 29 January 2015

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - யூதர் உலகம்

முந்தைய பகுதி   சென்ற பதிவுக்கு சில எதிர்ப்புகள்  இருந்தது என்பதால் இந்த தொடரை எழுதுவதை தள்ளிவைக்கவில்லை. அவ்வப்போது எழுதுவதுதான் வாடிக்கை. என்றோ வாழ்ந்து அழிந்தவர்களின் வரலாற்றை அருகில் இருந்து பார்த்தது போல  எழுதப்படும் விசயங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க இயலாது.

எகிப்து, பாபிலோனிய பயணத்தின் போது  இந்த இஸ்ரேல் குறித்து என்னவென பார்க்க ஆவல் பிறந்தது. இன்றைய இஸ்ரேல் குறித்து எழுதப்படும் பார்வை அல்ல இது. மேலும் பைபிளில் குறிப்பிடப்படுவது எல்லாம் அத்தனையும் பொய் புரட்டு என ஒதுக்கி விட இயலாது, அதே வேளையில் எல்லாம் உண்மை எனவும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு சுவாரஸ்ய வாசிப்புதனை முன்னர் எழுதப்பட்டு இருப்பவை தந்து போகின்றன. அதை எடுத்துக்கொண்டு பிரம்மனின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் என இப்போதும் கட்டி அழ வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் ஒன்றின் மீது நம்பிக்கை, தைரியம் இல்லாதவன் எதிரியை பலவீனப்படுத்தும் முறை என ஒன்று உண்டு.

இந்த இஸ்ரேல் முன்னர் எகிப்தியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இறைத்தூதர்கள் என அறியப்பட்டவர்களின் கட்டுபாட்டில் இருந்தது என பைபிள் குறிப்பிடுகிறது. கிட்டத்தட்ட 3035 வருடங்களுக்கு முன்னர் சால் என்பவன் ஒரு பேரரசனாக இருந்தான். இவனைப் பற்றி குறிப்பிடும்போது இவன் ஸ்திரதன்மை  அற்றவனாக இருந்து இருக்கிறான். மன உறுதி அற்றவர்கள் வாழ்க்கையில் சீரழிந்து போவார்கள் என்பதற்கு இவன் ஒரு உதாரணம். அதற்குப் பின்னர் வந்த டேவிட் என்பவன் இந்த இஸ்ரேலிய பேரரசுதனை விரிவாக்கம் செய்தான். இவனது காலத்தில் ஜெருசலம் புனித தலமாக  விளங்கி வந்தது. இவனது மகன் சாலமன் ஒரு மாநிலத்தை பன்னிரண்டு மாவட்டங்களாக பிரித்தான். இவனது காலத்தில் வியாபாரம் பெருகியது. ஜெருசலத்தில் பெரிய கோவில் ஒன்றை கட்டினான் சாலமன்.

பழங்குடியினரை இந்த சாலமன் மிகவும் மோசமாக நடத்தினான் எனும் குற்றச்சாட்டு உண்டு. இந்த காலகட்டத்தில் இஸ்ரேலில் வன்முறைகள் வெறியாட்டம் போட்டன. எப்போது ஒரு மக்களின் உரிமைகளை மறுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும். அது அந்த காலம் என்றல்ல, எந்த காலமும் அப்படித்தான். அஷ்ஷிரியர்கள் இந்த இஸ்ரேலை குறி வைத்து இருந்தார்கள். வட  பகுதியில் ஏற்பட்ட அதிருப்தியை பயன்படுத்தி அஷ்ஷ்ரியர்கள் இஸ்ரேலை தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். இஸ்ரேலின் தென் பகுதி மட்டுமே சாலமன் மற்றும் அவனது மகனின் வசம் இருந்தது. சாலமன் வட  பகுதி மக்களை ஒழுங்காக நடத்தி இருந்தால் இந்த பிரச்சினை வந்து இருக்காது.

இந்த அஷ்ஷிரியர்களை எதிர்த்து வந்தவன் ஹெசக்கியா. பெர்சியன் அரசன் பாபிலோனியாவை கைப்பற்றியதும் யூதர்களை அங்கு அனுமதித்தான். அவர்களுக்கு முழு சுதந்திரம் தரப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்கள் எல்லாம் ஜெருசலத்தில் கட்டப்பட்டன. இஸ்ரேலியர்கள் இதுதான் சமயம் என மத வழிபாடுகளில் மிகவும் ஈடுபாடு கொண்டார்கள். பெர்சியர்களின் தலைமையில் யூதர்கள் பெரும் சமூகமாக உருவானார்கள். இந்த மத சுதந்திரம் எல்லாம் ஒரு முன்னூறு ஆண்டுகள் செழிப்பாக இருந்தது.

கோவில்கள் கட்டுவது என ஒரு கூட்டமும், கோவில்களை இடிப்பது என ஒரு கூட்டமும் அன்றே இருந்து இருக்கின்றன. மேலும் கோவில்கள் மூலம் சேர்க்கப்படும் பொருளை கைப்பற்றி அரசையே மாற்றியவர்கள் இருந்தார்கள். இந்த காலகட்டத்தில் ரோமானியர்கள் இஸ்ரேலில் காலடி எடுத்து வைத்தார்கள். ஒற்றுமையின்மையை பயன்படுத்தி ரோமானியர்கள் ஜெருசலத்தினை கைப்பற்றினார்கள், அதோடு கோவில்களை இடித்து தள்ளினார்கள்.

யூதர்கள் இஸ்ரேலில் இருந்து உலகம் எல்லாம் பரவிய காலம் அது. யூதர்கள் ஜெருசலத்தில் தங்கக்கூடாது என கிட்டத்தட்ட 2125 வருடங்கள் முன்னர் ஒரு அரசர் கொண்டு வந்த சட்டம் யூதர் சமூகத்தை அலங்கோலம் செய்தது. இப்போது நமது இலங்கையை எடுத்துக் கொள்வோம். இலங்கையில் ஒரு கொடுங்கோலன் ஆட்சி செய்தான், தமிழர்களை இலங்கையில் இருக்கவே விடாமல் உலகம் எல்லாம் விரட்டிட செய்தான் என 2025 வருடங்கள் கழித்து படிப்பவனுக்கு அது எல்லாம் உண்மை அல்ல என நினைப்பான் எனில் நாம் கண்டது எல்லாம் பொய்யா?

ஒற்றுமையின்மை, பலமின்மை வாழ்க்கையில் தனி மனிதரை மட்டுமல்ல, ஒரு சமூகத்தையே சீரழித்து விடும்.

(தொடரும்)


Thursday 18 October 2012

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - அஷ்ஷிரியர்கள்

 முன்பகுதி 

அஷ்ஷிரியர்கள் என்பவர்கள் மூலமே ஹிட்டிடேஷ் அழிவுக்கு வந்தது எனினும் ஹிட்டிடேஷ் முழு அழிவுக்கு காரணமானவர்களை வரலாறு அதிகமாக குறித்து வைக்கவில்லை. இந்த அஷ்ஷிரியர்கள் முதன் முதலில் ராணுவ கட்டமைப்பை வரலாற்றில் உருவாக்கியவர்கள் எனலாம். தற்போதைய ஈராக்கிற்கு வடக்கு பகுதியில் இவர்களது அரசமைப்பு இருந்ததாக வரலாறு குறிக்கிறது. இவர்களது இந்த ராணுவ கட்டமைப்பின் மூலம் சுற்றி இருந்த குறும் நாடுகள் எல்லாம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின.

இவைகள் பாபிலோனியன் கலாச்சாரத்தை பெரிதும் பின்பற்றுபவர்களாகவே இருந்து வந்தார்கள். இந்தோ ஆரியன் மற்றும் செமிதீஸ் எனப்படும் மக்கள் இங்கு  வந்தார்கள். அச்சூர் எனப்படும் இடத்தை தலைநகரமாக கொண்டு பல வணிகத்திற்கு வித்திட்ட இடமும் இதுதான். எகிப்து நாட்டுடன் பெரும் வணிக போக்குவரத்து ஏற்பட்டது. தெற்கில் இருந்த பாபிலோனியர்களுடன் பல வேறுபாடுகளுடனே இந்த மக்கள் வளர்ந்து வந்தார்கள். பக்கத்து நாடுகளுடன் போர் புரிவது என தொடங்கி தங்களது எல்கை பரப்பை விரிவாக்கம் செய்யத் தொடங்கினார்கள் இந்த அஷ்ஷிரியர்கள்.

ஒரு எல்கையை பிடித்துவிட்டால் அங்கே இருக்கும் மக்களை தங்கள் பகுதிக்கு கொண்டு சென்று விடுவார்கள். இதன் மூலம் அந்த எல்கை மக்கள் எந்த ஒரு பிரச்சினையும் பண்ண வாய்ப்பிலாமல் செய்து வந்தார்கள். கடல்வாழ் மக்கள், அரமேனியன் எனப்படுபவர்கள் மிகவும் அச்சுறுத்தலாக இருந்தார்கள். மேசபோடோமியா நகரங்களுக்கு இவர்கள் சிம்ம சொப்பனமாக  விளங்கினார்கள். பழைய அஷ்ஷிரியர்கள் இதன் மூலம் சற்று பின் தங்கினார்கள். அதற்கு பின்னர் வந்த அஷ்ஷிரியர்கள் இழந்த இடங்களை மீட்டு மேலும் எல்கையினை விரிவுபடுத்தினார்கள்.

அஷ்ஷிரியர்கள் புயல் போல போரிடுவார்கள். உடைகள் எதுவும் அணியாமல், உடைகள் அணிந்து இருந்தாலும் அதை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு கத்தியை வட்டமாக சுழற்றுவார்கள். அவர்களின் போர் முறை சிங்கம் சினம் கொண்டது போலவே இருக்கும் என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இவர்களின் அரசமைப்பு முறையானது ராஜா, மற்றும் கவர்னர்களை கொண்டது. கவர்னர்கள் சாலை அமைப்பு, ராணுவம், வணிகம் என் எல்லாவற்றையும் மேற்பார்வை செய்வார்கள். ராணுவ அமைப்புக்கு மிகவும் கடுமையான பயிற்சி முறை எல்லாம் தரப்படும். மலைகளில் எல்லாம் சென்று போரிடும் பயிற்சி முறை மேற்கொண்டு இருந்தார்கள். இவர்களுக்கும் கடவுள் உண்டு. பாபிலோனியன், அச்சூர் எனப்படும். ஆனால் மத கட்டுபாடுகளை மக்கள் திணிப்பதை அறவே தவிர்த்தார்கள்.

இவர்கள் போரிட்டதே வணிகத்தை பெருக்கி கொள்ளத்தான் என்பது போல வணிக போக்குவரத்துதனை மிகவும் சிறப்பாக அமைத்து கொண்டார்கள். பல இடங்கள் இவர்களுக்கு கப்பம் கட்டும் இடங்களாக மாறின. வேலைக்காரர்களாக வெற்றி பெற்ற இடங்களில் இருந்து மக்களை இறக்குமதி செய்து கொண்டார்கள். எதிரிகளை மிகவும் துச்சமாகவே மதித்தார்கள். எரிப்பது, வெட்டுவது போன்ற கொடும் தண்டனைகள் வழங்கிய வழக்கம் இவர்களிடம் இருந்தது. இருப்பினும் அஷ்ஷிரியர்கள் மீண்டும் தாழ்வினை அடைந்தார்கள். இவர்களின் கொடுமையான முறை இவர்களுக்கு எதிராக அமைந்தது.

அதற்கு பின்னர் டிக்லாத் பிலேசெர் என்பவர் ராணுவத்தை, அரசு அமைப்பை மிகவும் நெறிபடுத்தினார். உரார்டன்ஸ் எனப்படுபவர்கள் அஷ்ஷிரியர்கள் வணிக போக்குவரத்துக்கு பெரும் தடையாக இருக்க அவர்களை இவர் வென்றது மூலம் மேலும் அஷ்ஷிரியர்கள் தழைக்க ஆரம்பித்தார்கள். இவர் மக்களை பல இடங்களுக்கு இடம் மாற்றம் செய்து ஒரு ஒற்றுமையை உருவாக்கினார் பாபிலோநியர்களையும் இவர் வென்றார். இவருக்கு பின்னர் வந்த சார்கன் என்பவர் எல்கையை மென்மேலும் அதிகரித்தார். இவரின் மகன் தங்களுக்கு எதிராக இருந்த பாபிலோனியாவை முற்றிலுமாகவே அழித்தார். அவருக்கு பின் வந்த இசர்கடன் பாபிலோனியாவை மீண்டும் நிர்மானித்தார்.

இவருக்கு பின்னர் வந்தவர்கள் திறமையற்று போனதால் சைத்தியன்ஸ் மற்றும் சுற்றி இருந்த குறும் நாடுகள் எல்லாம் இந்த அஷ்ஷிரியர்கள் முழுவதுமாக அழிந்து போக காரணமானார்கள். அஷ்ஷிரியர்கள் அற்புதமான நூலகம் ஒன்றை உருவாக்கி இருந்தனர். சுற்றி இருந்த நாடுகள் கொண்ட வெறுப்பு அந்த நூலகத்தையும் அழித்தது. வாழ்க்கையில் சீரழியாமல் இருக்க திறமையானது தொடர்ந்து சந்ததிகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால் போர் மட்டுமே திறமை என்றாகாது. மக்களை தம் வசப்படுத்துவது மூலம் மட்டுமே ஒரு அரசு சாதிக்க முடியாது. மக்களுக்கு வேண்டிய தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

பாபிலோனியர்கள் யார்?

(தொடரும்)