Saturday 28 June 2014

அகவாழ்வு கொண்டனன்

புறவாழ்வு என்றும் அகவாழ்வு என்றும் பிரித்தா வைக்கப்பட்டு இருக்கிறது? நான் சில நேரங்களில் மட்டுமல்ல பல நேரங்களில் என்ன எழுதுகிறேன் என்றே எனக்கு தெரியாது. சட்டென வந்து விழும் சிந்தனைகளை நான் அலசுவதே இல்லை.

 அந்த அந்த நேரத்தில் ஏதோ ஒன்று தோன்றும் அதை அப்படியே எழுதி வைத்துவிடுவேன். பின்னர் எவரேனும் கேட்டால் மட்டுமே அது குறித்து விளக்கம் தர சிந்திப்பேன். எழுதிய எனக்கு தெரியாத பல அர்த்தங்களை பலர் வந்து சொல்லிவிட்டுப் போவார்கள். ஆச்சரியமாக இருக்கும்.

அப்படித்தான் இப்படி எழுதினேன்.

பரபரப்பான உலகத்தில் ஓடித் திரியும் மனிதர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி விரும்புகிறேன். உங்கள் ஆழ்மனதின் ஓசையை கேட்க சற்று நேரம் ஒதுக்குங்கள். 

மேற்சொன்ன விசயத்தில் ஆழ்மனதின் ஓசை என நான் எழுதியது subconscious mind எனும் அர்த்தம் தான். அதாவது தற்போது நாம் அனுபவித்துக் கொண்டு இல்லாத ஒன்றை கூட தனது அனுபவத்தில் இந்த subconscious mind சேகரித்து வைத்து இருக்கும் எனும் நம்பிக்கையே அது. அதாவது இந்த வரிகள் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியது.

நிகழ்காலம் பொற்காலம் எனில் 
கடந்தகாலம் என்ன 
கற்காலமா? 

எந்த ஒரு காலமும் நமக்கு ஏதோ ஒன்றை அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது. நிகழ்காலம் நிகழ்காலம் என எதிர்காலத்தினை நோக்கி நாம் பயணிப்பது நமக்கு புரியாமல் போய் விடுகிறது. நமது தொலைக்கப்பட்ட தேடல்கள் எல்லாம் இந்த ஆழ்மனதில் அடங்கி இருக்கும். ஆழ்மனதின் ஓசை குறித்து கேட்டவருக்கு அடுத்த வரிகள் இப்படி வந்து விழுகிறது.

நம் ஆழ்மனம் நம்முடன் பேசிக்கொண்டே இருக்கும், புற வாழ்வில் ஈடுபாடு கொண்ட நாம் அதை நிராகரித்துக் கொண்டே இருப்போம் அக வாழ்வு மறந்து. 

இங்குதான் எனக்கே தெரியாமல் வந்து விழுந்த வார்த்தைகள் , அகவாழ்வு மறந்து. அகவாழ்வு என்றால் என்ன எனும் கேள்வி எழுந்தபோது திருதிருவென விழித்தது எனது மனம்.

புற வாழ்வு குறித்த சிந்தனை அதிகம் இருக்கும்போது அகவாழ்வு குறித்து என்ன தெரியும். அக வாழ்வு என்பது இரட்டை வாழ்வா என்றெல்லாம் யோசிக்க முடியவில்லை.

அகவாழ்வு என்பது புறவாழ்வு குறித்த சிந்தனை அற்ற ஒன்று 

இவ்வளவுதான் என்னால் யோசிக்க முடிந்தது. புறவாழ்வுதனில் நாம் காணாத ஒன்றை எப்படி அகவாழ்வு தனில் காண இயலும். நிறைய பேர் அக வாழ்வு என்றால் ஏதோ ஆன்மிக சம்பந்தம் உடையது என சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

புறத்தே நடக்கும் விசயங்களின் பாதிப்பு அகத்தே நிகழ்ந்தே தீரும். அகத்தே நிகழும் பாதிப்பு புறத்தே பல சமயங்களில் வெளித் தெரிவதில்லை. 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஓரளவுக்குத்தான் சில விசயங்களை மறைத்து வாழ இயலும். களையான முகம், பொலிவான முகம் எல்லாம் அகத்தில் ஏற்படும் சிந்தனைகளின் நீட்சி.

அகவாழ்வு என்றால் என்ன? எங்கேனும் எவரேனும் எழுதி இருப்பார்கள் என திருடத் தொடங்கிய மனதுக்கு தொல்காப்பியர் வந்து சிக்கினார்.

அகவாழ்வு என்பது காதலில் திளைத்து இருப்பது. 
அகவாழ்வு அறம் நிரம்பிய இல்லறவாழ்வு குறித்த ஒன்று. 

இது நான் சொல்ல வந்த பதில் அல்ல. அப்போதைக்கு அந்த கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் சொன்னது. அவ்வளவே. அகத்திணை புறத்திணை என்றே அன்று பிரித்து வைத்து இருக்கிறார்கள். ஏழு வகை அகத்திணை என்றாலும் ஐந்து வகை அகத்திணை மட்டுமே பாடுபொருளில் வைக்கப்பட்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்தார்கள். இவை அனைத்துமே கற்பு தனை பறைசாற்றும் திணை என்றே சொன்னார்கள்.

காதலித்து இருப்பது தலைவன் தலைவிக்கு மட்டுமே உண்டான ஒரு பண்பு. அப்படிப்பட்ட இருவருக்கும் உண்டான பண்புகளை அவர்கள் அகத்தில் வைத்து போற்றுவார்கள். அது போலவே இல்லற வாழ்வும். அந்த இல்லற வாழ்வில் வேற்று மனிதர்க்கு இடம் இல்லை.

தமிழில் ஒரு பெரிய கலாச்சாரம் உண்டு.

என் உடம்பை நீ தீண்டினாலும் என் மனசில அவருதான் இருக்கார். அதனால நான் கற்புக்கரசி என சொல்வார்கள். மனதில் நீ வேறொருவரை தீண்டினாலே கற்பை இழந்து விடுவாய் என எச்சரிக்கை செய்வார்கள். இதற்கு பரத்தையர்கள் கூட பத்தினிகள் என பாடும் கூட்டம் இருந்தது உண்டு. உடம்பை மட்டுமே தருகிறேன், மனசை இழப்பதில்லை. தொல்காப்பியர் சொன்ன அகவாழ்வுக்கு இது சரி. கற்பு போற்றுதல் என்பன எல்லாம் சரி. ஆனால் நான் குறிப்பிட்ட அகவாழ்வு என்பது அது அல்ல. நான் குறித்த அகவாழ்வு உள்ளுணர்வு கூட அல்ல. நாம் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு நிகழ்வுகளும், மனிதர்களும் இந்த அகவாழ்வில் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நம்முடன் பேச முற்படுகிறார்கள். நாம் அவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு தற்போதைய புற வாழ்வில் ஈடுபாடு கொண்டு மறந்து செயல்படுகிறோம்.

இந்த ஆழ்மனதின் ஓசையை நேரம் இருக்கும்போது சற்று கேட்டுப்பாருங்கள். அங்கே உங்களுடன் பேச முற்பட்டு பேச இயலாமல் போன ஏதோ ஒரு ஜீவன் துடிதுடித்துக் கொண்டு இருக்கலாம்.

புறவாழ்வின் பாதிப்பே அகவாழ்வு. 
அகவாழ்வின் அர்த்தம் தனை 
புறவாழ்வு புரிந்து கொள்ள விடுவதில்லை. 


Thursday 26 June 2014

எதற்கு பெண் குழந்தை வேண்டும்?

 என் தங்கைக்கு வளைகாப்பு எல்லாம் வெகு விமரிசையாக நடத்தி முடித்தோம். ஓராண்டு முன்னர் திருமணம் முடித்து எங்களை விட்டு சென்றவள் இப்போது எங்களுடன் சில மாதங்கள் தங்கி இருக்கப் போகிறாள் எனும் சந்தோசமே எனக்கு அதிகமாக இருந்தது. அண்ணா அண்ணா என எதற்கெடுத்தாலும் என்னை சுற்றி சுற்றி வருவாள். திருமணம் ஆன பின்னர் வாரம் ஒரு முறை போனில் பேசி விடுவாள் அல்லது நான் பேசி விடுவேன். அவ்வப்போது திருவிழா விசேசங்களில் சந்தித்து கொண்டதுடன் சரி.

நானும் தங்கையும் பேசிக் கொண்டு இருந்தோம்.

''என்ன பிள்ளை எனக்கு பிறக்கும் சொல்லுண்ணா''

''உனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்''

''நிசமாவாண்ணா''

''ஆமா, உனக்கு பெண் குழந்தைதான்''

''எப்படிண்ணா இவ்வளவு உறுதியா சொல்ற''

''பிறந்த பிறகு நீயே ஆச்சர்யப்படுவ''

''எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குண்ணா''

நாங்கள் பேசியது என் அம்மாவுக்கு கேட்டுவிட்டது. 

''ஏன்டா ஆம்பளை புள்ளை பிறக்கும்னு சொல்றதை விட்டுட்டு பொட்ட பிள்ளை பிறக்கும்னு சொல்ற''

''என்னமா பெண் குழந்தைன்னா என்ன, என்னை விட தங்கச்சி நல்லா படிச்சி நல்ல உத்தியோகத்தில் இல்லையா''

''அதுக்கு நான் பட்ட பாடு இருக்கே அது எல்லாம் உனக்கு என்ன புரியப் போகுது''

''அண்ணா, அம்மா கூட சண்டை போடாதே''

எனக்கும் அம்மாவுக்கும் ஏதேனும் வாக்குவாதம் வந்தால் அண்ணா அம்மா கூட சண்டை போடாதே என்று மட்டுமே என் தங்கை சொல்வாள். நானும் அதற்கு பின்னர் வாய் திறப்பதே இல்லை. அம்மா திட்டிக் கொண்டே இருப்பார்கள்.

''வாயில என்ன வார்த்தை வருது, பொம்பள பிள்ளையாம் பொம்பள பிள்ளை. வயித்துல நெருப்பு கட்டிட்டே போராடுற வாழ்க்கை''

அம்மாவின் அந்த வாக்கியத்திற்கு பின்னர் அங்கே இருக்க எனக்கு விருப்பமில்லை. வீட்டில் இருந்து வெளியே கிளம்பினேன். வேறு எங்கு போக போகிறேன். எனது காதலி கனகதுர்க்கை தான் எனக்கு எல்லாம்.

''என்ன ஒரு மாதிரி இருக்கே''

''அம்மா இன்னைக்கு திட்டிட்டாங்க''

''என்ன வம்பு இழுத்து வைச்ச''

''என் தங்கச்சிக்கு பெண் குழந்தை பிறக்கும்னு சொன்னேன். அதுக்கு என்னை திட்டினாங்க''

''ஆம்பளை பிள்ளைன்னு சொல்லி வைக்க வேண்டியதுதான எதுக்கு பெண் குழந்தைன்னு சொன்ன இல்லைன்னா சொல்லாம இருக்கலாம்''

''நீயே இப்படி பேசற''

''என் அக்காவுக்கு இப்படித்தான் பெண் குழந்தை பிறக்கும்னு நான் சொல்லி வைக்க என் அம்மா என்கிட்டே சரியாவே பேசறதே இல்லை. அதுவும் பெண் குழந்தை பிறந்ததும் கருநாக்கு காரினு என்னை அம்மா திட்டாத நாளே இல்லை. ஆனா என் அக்காவோட மாமியாருக்கு கொள்ளை சந்தோசம். முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்தா அவங்க குடும்பம் செழிப்பா இருக்கும்னு சொன்னதால அக்காவை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடினாங்க. ஆனா என் அம்மாவுக்கு என் மேல இன்னும் வருத்தம் போன பாடில்லை.''

''பெண் குழந்தைதானே குழந்தைகளில் சிறப்பு''

''எல்லா குழந்தைகளும் சிறப்புதான், ஆனா பெண் குழந்தைகள் இந்த சமூகத்தில் படும் அல்லல்கள் குறித்து அக்கறைப்படும் அம்மாக்கள் பெண் குழந்தை வேண்டாம்னு சொல்லிருவாங்க. மத்தபடி பெண்ணுக்கு பெண் எல்லாம் எதிரி இல்லை. எங்கே தான் பட்ட துயரங்களை தனது மகள், பேத்தி படுவாங்கனு அவங்க கவலை''

''உனக்கு என்ன குழந்தை வேணும்''

''ரெண்டும். பெண் இஷ்டம்''

''ஏன்?''

''அழகு படுத்தலாம். நீ கூட உன் சின்ன வயசு போட்டாவுல தலை சீவி பொட்டு வைச்சி பூ சூடி இருப்ப. எல்லா குழந்தையும் பெண் குழந்தையாக பார்க்கிற மன பக்குவம் தாய் கிட்ட இருந்தாலும் பெண் அப்படின்னா கஷ்டம்னு ஒரு எண்ணம் இருக்கு, கூடவே இருக்க முடியாத துயரம். ஆனாலும் எனக்கு பெண் குழந்தை இஷ்டம்''

''சரி இந்த வரி பாரு. 'நமக்கு பெண் குழந்தை பிறக்கும் என எவராலும் எளிதாக சொல்லிவிட முடியும்' எப்படி இருக்கு? ''

''ம்ம் நல்லா இருக்கு''

''என்ன காரணம் தெரியுமா''

''நாம் இருவரும் ஒரே சிந்தனை கொண்டதால் எனது மரபணு x உனது மரபணு x இணையும் சொல்ற விஷயம் தானே''

''ஆமா, எப்படி கண்டுபிடிச்ச''

''உனக்கு வேற என்னதான் தெரியும்''

''அப்போ ஆண் குழந்தை நமக்கு கிடையாதா''

''கூடலின் போது ஊடலுடன் இருப்போம்''

எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை. எப்போதும் என்னை ஏதேனும் சொல்லி சிரிக்க வைத்துவிடுவாள்.

என் தங்கையின் பிரசவ தினம் வந்தது. என் அம்மா என்னை கடுகடுவென பார்த்தார்கள். நான் சொன்னபடியே பெண் குழந்தை பிறந்தது. என் மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் கொண்டாடினார்கள். என் அம்மா மட்டும் என்னிடம் வந்து கருநாக்கு பயலே என திட்டிவிட்டு போனார்.

''அண்ணா எப்படிண்ணா கரெக்ட்டா சொன்ன''

''அது வந்து இருக்கறதே ரெண்டு குழந்தை. ஒண்ணு பொண்ணு பிறக்கும், இல்லைன்னா ஆணு பிறக்கும்''

''உனக்கு ஏதோ தெரிஞ்சி இருக்குண்ணா''

''சரி என்ன பெயரு மனசில வைச்சிருக்க''

''கனகதுர்க்கை''

''அது என்னோட ஆளு பேரு''

''அதான் அந்த பேரு''

என் தங்கையின் பாசத்தை என்னால் நிறைய புரிந்து கொள்ள முடியும். வீட்டு வேலை என அம்மா தங்கையை மட்டுமே சொன்னாலும் நான் உதவி செய்வதை வழக்கமாக வைத்து இருந்தேன். சமையலில் கூட அம்மாவுக்கு நிறைய உதவி செய்வதுண்டு. தங்கை நன்றாக படிக்க வேண்டும் எனும் அக்கறை எனக்கு நிறைய இருந்தது. அப்பா என்னை சத்தம் போட்டதுண்டு ஆனால் தங்கையை ஒருபோதும் கோபித்துக் கொண்டது இல்லை.

அப்பா என்னிடம் ஒருமுறை சொன்னார். ஒரு பெண் குழந்தையை பெத்துக்காம எந்த மனுசனோட வாழ்க்கையும் பூர்த்தி ஆகாதுடா. எனக்கு அது எப்போதுமே விளங்கியது இல்லை. அம்மாவிடம் சென்று நான் பேச்சு கொடுத்தேன்.

''இப்ப என்னம்மா அடுத்தவாட்டி பையனை பெத்து தந்துர போறா''

''பேசாம போயிரு''

''இல்லம்மா அது வந்து''

''ஒரு புள்ளையோட நிப்பாட்டுற வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கடா, என் எரிச்சலை கிளப்பாத''

''அம்மா தங்கச்சிக்கு பெண் குழந்தைதான் வேணுமாம்''

''நீ போறியா இல்லையா''

அம்மாவின் கோபம் அடங்கவே இல்லை. ஒருநாள் நான் அம்மா அப்பா ராமசாமி தாத்தா உடல் நலன் சரியில்லாமல் இருந்ததால் பார்க்க போயிருந்தோம். பேச முடியாமல் பேசினார்.

''எத்தனைஆம்பளை புள்ளை பெத்தேன், ஒன்னே ஒண்ணு பொம்பள புள்ள. இந்த கடைசி காலத்தில அந்த பிள்ளை தான் எனக்கு கஞ்சி ஊத்தி நல்லது கேட்டது பாக்குது''

அவர் வார்த்தை தடுமாறி வந்து விழுந்தது.

''அப்பா, எதுக்கு அதை எல்லாம் நினைக்கறீங்க'' என அவரது மகள் சொன்னபோது எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. சிறிது நேரம் பேசிவிட்டு வீடு நோக்கி நடந்தோம். அம்மா என்னிடம் அன்றிலிருந்து என்னிடம் கோபம் கொள்வதே இல்லை.

நானும் மனதில் உறுதியுடன் கூடலின் போது ஊடலே வேண்டாம் என கனகதுர்க்கையிடம் சொல்லி  வைத்தேன்.



Wednesday 11 June 2014

நுனிப்புல் - அணிந்துரை கண்ணபிரான் ரவி சங்கர் (KRS)


நுனிப்புல்” = இஃதொரு இலக்கிய வசவு;
அதுவே இப்படைப்பின் பெயரும் கூட!

இப்படைப்பு மட்டுமல்ல..
உலகின் எல்லாப் படைப்பும் நுனிப்புல் தானோ?
இந்த நாவலின் அடிநாதம் முழுக்க ஊடாடுகிறது, இந்தச் சிந்தனை!

நுனிப்புல் மேயாதே-ன்னு சொல்லுறோம்;
நுனிப்புல் என்று சொன்னாலே.. “அரைகுறை, மேலோட்டமான, ஆழமற்ற, ஆய்வுப் போக்கு இல்லாத” என்ற ஓவியத்தையே, நம் மனம் வரைகிறது.
ஆனா, நுனிப் புல்லின் மேன்மையை நாம் அறிவோமா?

நுனிப்புல்லில் தான் பனித்துளி தூங்குகிறது!
அந்தத் தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே!

பனித் துளி போல் நம் வாழ்க்கை;
நம் வாழ்க்கையை வாங்கும் ஏதோவொரு இயற்கைச் சக்தி!

நாம் நுனிப்புல்லில் தான் பனிநீராய்த் தூங்கிக் கொண்டு இருக்கிறோம்;
நாம் மட்டுமா? உலகின் படைப்பினங்கள் அனைத்தும்!
இந்த நுனிப்புல் பனித் தூக்கம் = ஞாலத்தின் இரகசியம்!
இனி யாரையேனும், “நுனிப்புல்லன்” என்று சொல்வீர்களா?:)

நுனிப்புல் நாவலின் ஆசிரியர், திரு. இராதாகிருஷ்ணன் வெங்கிடசாமி;
அவரும் ஒரு நுனிப்புல்லர் தான்-னு சொன்னால், என்னிடம் அவர் சினந்து கொள்ள மாட்டார்-ன்னு நினைக்கிறேன்:)
நுனிப்புல்லில் பனித்துளியாய், ஞாலத்தை நாவல் வழியே நோக்குகிறார்..

திரு. இராதாகிருஷ்ணன் பற்றி நான் அதிகம் அறியேன்; அவர் ட்விட்டர் வாயிலாக ஓர் அறிமுகம் மட்டுமே!
அதனால் அவர் தனிப்பட்ட நம்பிக்கைகள், சாற்றமுறைகள் பற்றிய முன்முடிவு ஏதுமின்றி இந்த நாவலை வாசித்தேன்; கலக்கியுள்ளார் மனிதர்!

இறைமை-உயிர்மை என்பதை மையமாக வைத்து எழுதப்படும் நாவல்கள் மிகவும் குறைவு;
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அவற்றுள் சிகரம்!
நுனிப்புல்லின் கதைக்களமும் அத்தகையதே; ஆனால் அத்துணை அடர்த்தி இல்லாமல், நம் அன்றாட வாழ்க்கையில் கலந்த ஒன்றாய், பலவாய்…

பெரியவர் விநாயகம், வாசன், பாரதி,
மாதவி, கோதை, பெருமாள், திருமால்..
என்று பல பாத்திரங்கள், நம் அன்றாட வாழ்வில் வலம் வருபவர்கள் தான்!
சிலருக்கு அந்த வலம் குறைவு; சிலருக்கு வலம் கூடுதல்; அவ்வளவே!

கதையினூடே கவிதை சொல்வது என்பது மெய்யியல்/ மீபொருண்மை (Metaphysics) நாவல்களுக்கு, “அல்வா” சாப்பிடுவது போல;
இராதாகிருஷ்ணனும் அதையே செய்கிறார்;

“சுருக்கம்” பற்றிய ஆரம்பக் கவிதையே அசத்தல்!
ஏழு சொற்களில் எழுதப்பட்ட திருக்குறளில்
விவரிக்க முடியாச் சுருக்கம்,
பதினைந்து பிள்ளை கொண்ட குடும்பம், ஒரு பிள்ளையோடு ஒடுங்கியது
நிலத்தின் சுருக்கம்,
மனிதனின் மனம் = எதனின் சுருக்கம்?

தரவு கொண்டு விளக்க முடியாததை, உறவு கொண்டு விளக்கி விடும் கவிதை!
சுந்தரன்-பாரதி காதலும், அப்படியொரு பரிமாணமே, இந்த மெய்யியல் நாவலில்!

நாவலின் ஒரு சிறிய குறை: உரையாடல்கள்!
பலரும் உரையாடிக் கொள்வதே இல்லை! ஆசிரியரே, கதை மாந்தர்கள் வழியாகப் பேசி விடுகிறார்..
அது தான் உண்மை எனினும், அப்படி வெளியில் தெரியக் கூடாது என்பதே ஒரு கதைசொல்லியின் வெற்றி!

கதையின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சூடு பிடிக்கிறது!
அதில் உரையாடல்களும் உலா வருகின்றன! இயல்பு நிலை உரையாடல்கள்!

கருவாகி நிக்குற பொண்ணு, வயித்துக்கு, மேல கைய வச்சாப் பொண்ணு, கீழே கைய வச்சா ஆணு”
-போன்ற பாட்டிக் கதைக் குறிப்புக்கள் அறியாமையழகு:)

“Cloning-இல் எந்த Nucleus-ஐ வைக்கிறோமோ, அதே போல் தான் பிறக்கும்!
பெருமாளின் Nucleus பெருமாளாகவே பிறக்கும்”
-போன்றவை நாவலின் ஊடாடு உண்மைகள்!

ஆசிரியர் இராதாகிருஷ்ணன், தன் நொறுங்கிய/ நெருங்கிய தேடல்களையெல்லாம் ஆங்காங்கே தூவுகிறார்;
ஆனால் புல் தூவாமலேயே வளர வல்லது! அதுவே புல்லின் மகிமை!

குளத்தூர் கிராமத்தில் வளரும் இந்த “நுனிப்புல்லை”, நானுமொரு பனிப்புல்லாய் வாழ்த்துகிறேன்!
சிரமம் பாராது, படித்துத் தான் பாருங்களேன்! நுனிப்புல் அழகை உணர்வீர்கள்…

- முருகு பொலிக! அன்புடன்,
Kannabiran Ravi Shankar (KRS)

New York
Jun 9th, 2014


----------------

மிக்க நன்றி தமிழ் பெருந்தகையே 

Tuesday 10 June 2014

பயந்த சுபாவம்

எனக்கு நிறைய கடவுள் பக்தி உண்டு. காலையில் குளித்த பின்னர் திருநீறு அணியாமல் நான் எங்கும் செல்வது இல்லை. மிகவும் பயந்த சுபாவம் எனக்கு உண்டு. ஊருக்குள் குடுகுடுப்பைக்காரர் வந்தாலோ சாட்டையால் தன்னைத்தான் அடித்துக் கொண்டு வருபவர் கண்டாலோ மிகவும் அச்சமாக இருக்கும்.

ஒரு முறை அவளைப் பார்த்தேன். அவளை எனக்குப் பிடித்து போனது. தைரியத்துடன் நீ அழகாக இருக்கிறாய் என சொல்லிவிட்டு என் வீட்டுக்கு ஓடிப்போனேன். மிகவும் பயமாக இருந்தது. என்னடா ஒரு மாதிரியாக இருக்க என அம்மா கேட்டார். ஒன்னுமில்லை என்று சொன்ன என்னைப் பார்த்து வெலவெலத்துப் போயிருக்க, யாரும் திட்டுனாங்க, என்றார். இல்லைம்மா, ஒரு பெண்ணை அழகாக இருக்கனு சொல்லிட்டு வந்துட்டேன், அதான் பயமா இருக்கு. யாருடா அது, இப்ப அதுக்கு எதுக்கு பயப்படற என்னமோ கையப் பிடிச்சி இழுத்தவன் மாதிரி, ஆமா எங்க பார்த்த  என அம்மா கேட்டார்.

கோடாங்கி தாத்தா தெரு என்றேன். பேய் ஓட்ட வந்த பெண்ணாக இருக்கப் போவுது, வா என் கூட என்றார். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. வேணாம்மா, எதுக்கு பிரச்சினை என்றபோதும் என்னை அம்மா வம்பாக இழுத்துக்கொண்டு போனார். கோடாங்கி தாத்தா வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இருந்த அவளை கைகாட்டினேன்.

நீ எந்த ஊரு? யார் மக? என அம்மா கேட்டதும் பழகியவள் போல ஊரு புளியந்தோப்பு சுப்பு சார் மக என்றாள். புதுசா குடி வந்து இருக்கீங்களா? என கேட்டதற்கு இல்லை, என் சித்தி பெண்ணுக்கு பேய் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க அதான் குறி பார்க்க வந்து இருக்கோம். என்றாள். இத்தனை சகஜமாக பேசுகிறாளே என நினைத்தேன்.

ஓஹோ, யாரையாவது லவ்வு பண்ணுதா உன் சித்தி பொண்ணு என அம்மா கேட்டதும், என்னம்மா இப்படி கேள்வி கேட்குற என நான் சொல்லி முடிக்கும் முன்னரே, ஆமா ஒரு பையனோட சுத்துறா என்றாள் அவள். அதானே பார்த்தேன், அவளை அவனுக்கு கட்டி வைச்சா சரியா போயிரும் அதுக்குப் போயி பேயி பிசாசுனுகிட்டு என்றார் அம்மா. சரி என சொல்லிக்கொண்டு கோடாங்கி தாத்தா வீட்டுக்குள் சென்றாள்.

எவடி அவ சொன்னது? என் பிள்ளைக்கு காதல் கல்யாணம் பண்ணிவைக்க அவ யாரு என்றபடி கோடாங்கி தாத்தா வீட்டினுள் இருந்து அவளது சித்தி கத்தியபடி வந்தார். என் அம்மாவை கைகாட்டினாள் அவள். ஏண்டி என ஆரம்பிக்கும் முன்னர் கொஞ்சம் நிதானமாக யோசிங்க என அவரை வீட்டுக்கு அழைத்தார் என் அம்மா. அவர்கள் அனைவரும் அம்மாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வீட்டுக்கு வந்தார்கள்.

அம்மா அவர்களுடன் நிறைய பேசினார். சம்மதம் சொன்னார்கள். அப்போதுதான் சுப்பு சார் இறந்தது எல்லாம் தெரிந்தது. அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. புளியந்தோப்புக்கு தினமும் செல்வதையும் ஆவலுடன்அவளுடன் பேசுவதையும் வழக்கமாக கொண்டு இருந்தேன். அவள் ஒருமுறை அவளுக்கும் பேய் பிடிக்கும் என சொன்னது எனக்கு சிரிப்பாக இருந்தது. என்னை ஊரில் ஒருமாதிரியாக பேச ஆரம்பித்து இருந்தார்கள். என்ன  மாப்ளே புளியந்தோப்புல வேலை என நக்கல் பண்ணினார்கள். பயம் இருந்தாலும் வறட்டு தைரியம் என்னை விடாமல் துரத்தியது. அம்மாவும் கேள்வி பட்டார்கள்.

நேத்து எங்க போன என்றபோது அவளை பார்க்க போனேன் என்றேன். அன்பு இருக்குமிடத்தில் பயம் அற்றுப் போகிறது. அந்த நேரம் வீட்டுக்குள் வந்த அப்பா ஓங்கி என் கன்னத்தில் அறைந்தார். தெருப் பொறுக்கித் தனமா பண்ற என்ற வார்த்தைகள்தான் நிறைய வலி வந்தது. அப்பா நிறையவே பயம் காட்டினார். அம்மாவுக்கும் ஒரு அடி விழுந்தது என அம்மா பிற்பாடு சொன்னார். என் எதிரில் அம்மாவை ஒருநாளும் அப்பா அடித்தது இல்லை. இதுவே முதல் அடி என நினைக்கத் தோணியது.

நான் அவளை சென்று பார்ப்பதை தவிர்த்து இருந்தேன். சில நாட்கள் பின்னர் அம்மா எனும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தால் அவள் நின்று கொண்டிருந்தாள். யாரு என்ன வேணும் என அப்பா குரல் உயர்த்தும் முன்னர் உள்ள வாம்மா, உட்கார் என்றார். புளியந்தோப்பு பெண் என அம்மா அப்பாவிடம் அப்போதுதான் அறிமுகம் பண்ணினார்.

நல்லா இருக்கியாம்மா என்ற அப்பாவின் கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அப்பா வீட்டுக்கு எவர் வந்தாலும் மரியாதை தரும் வழக்கம் கொண்டவர். தவறானவர் எனத் தெரிந்தால் வீட்டுக்கு வெளியில் செமத்தியாக அவருக்கு அடி விழும். அவளுடன் நிறைய பேசினார். சாப்பிட்டு போம்மா என அப்பா சொன்னது கனவோ என்றே நினைத்தேன். அன்று நிறைய சாமி கும்பிட்டேன். அவள் மாலை வரை வீட்டில் இருந்தாள்.

வெளியில் சென்று திரும்பிய எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்ன என அம்மாவிடம் விசாரித்தேன். அவளை பெண் பார்க்க வருவதாகவும், நம்மை பெண் பார்க்க வரச் சொல்வதாகவும் சொன்னார். அப்பாவை நினைச்சா பயமா இருக்குடா என்றார். அப்பா வந்த பின்னர் அம்மா மென்று விழுங்கி எல்லாம் சொன்னார். அப்பா சரிம்மா ஆகட்டும் என்றாரே பார்க்கலாம். என்னால் என்னை நம்பவே முடியவில்லை. அந்த சனிக்கிழமை பெண் பார்க்க சென்றோம். மூத்தவ இவ இருக்க இளையவளுக்கு எப்படி கல்யாணம் பண்றதுன்னு இவளுக்கு அவசர கல்யாணம் என்று சொன்னார்கள். எல்லாம் பேசி முடிவானது. அவர்களும் சம்மதம் சொன்னார்கள்.

எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என எப்படி சொல்வது என தெரியாமல் தவித்தேன். என்ன ஒருமாதிரி இருக்க என அம்மா கேட்டபோது கல்யாணம் இப்ப பண்ணனுமா என யோசிப்பதாக சொன்னேன். என்ன என கேட்டார். அதில்லைம்மா, அழகா இருக்கறதை வைச்சி பேசறதை வைச்சி அவசர முடிவுன்னு யோசிக்கிறேன். அதுவும் நாலு காசு இன்னமும் சேர்த்து வைக்கலை அதான் பயமா இருக்கு என்றேன். அதற்குள் மூன்று மாதத்தில் கல்யாணம் என அப்பா நாள் குறித்து வந்தார்.

இதுவே பெரும் குழப்பம் தந்து கொண்டு இருந்தது.அவளிடம் கல்யாணம் வேண்டாம் என சொன்னால் அவளை வேறு எவருக்கேனும் கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்கள் என்பது பயம் தந்து கொண்டு இருந்தது. அன்று இரவு நான் தொலைந்து போனதால் கல்யாணம் நின்று போனதாக கனவு கண்டேன். அதுவே தீர்வா? ஒருமுறை என் சித்தப்பா மகன் இப்படித்தான் தொலைந்து போனார். தேடி சலித்து விட்டோம். பதினைந்து நாட்கள் பின்னர் வீடு சேர்ந்தார். அவரை எவரோ கடத்தி சென்றுவிட எப்படியோ தப்பித்து கோவை நகரில் ஹோட்டலில் வேலை பார்த்து வீடு சேர்ந்த கதை திகிலூட்டியது. தனியாய் ஆதரவற்று அல்லல் படுவது துயரம் என்றே அன்று அறிந்தேன். அவளை சந்திக்க நினைத்தேன். என் மனதில் உள்ளதை தயங்கி தயங்கி சொன்னேன். கல்யாணம் பண்ணிக்கொண்டு குடும்பம் இல்லாமல் இருப்போம் என்றாள். சரியெனப்பட்டது.

கல்யாணம், பெண் என்றாலே நேர்மறை எண்ணம் கிடையாது போல, அடிமைக்கு வாழ்த்துகள் என்றார்கள். நிறைய அச்சப்பட்டேன். மணநாள் நெருங்கியது. திடீரென அவளது வீட்டில் இருந்து திருமணம் நிறுத்த வேண்டும் என சொன்ன செய்தி அதிர்ச்சி அளித்தது. அப்பா சென்று விசாரித்து வந்தார்கள். நானும் உடன் சென்று இருந்தேன். சித்தியின் பெண் ஓடிப்போன செய்தி அவர்களை நிலைகுலைய செய்தது. அவசரப்பட்டு ஓடிப் போய்ட்டாளே என அவர்கள் அரற்றியது கண்டு அப்பா ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்தார். அப்பா இந்த முறை தனது நண்பர்களிடம் எல்லாம் சொல்லி தேடினார். சித்தப்பா பையனை தேடியது விட இப்போது சுலபமாக இருந்தது.

பையனின் வீடு போர்க்கோலம் பூண்டது. பெரும் சண்டை நடந்தேறியது. அப்பா மட்டும் இல்லை என்றால் ஒரு கொலை அன்று விழுந்து இருக்கும். நான் வீட்டுக்குள் பயத்தில் ஒளிந்து கொண்டேன். சாமி காப்பாத்து என வியர்த்துக் கொட்டிக்கொண்டு இருந்தது. வம்பு பண்ணியவர்களை அனாயசமாக அடித்து வீழ்த்தினார். உங்க குடும்பம், எங்க குடும்பம்தான் பிரச்சினை ஊருல இருக்கிற சல்லிப்பயக உள்ள வந்தா நடக்கறது வேற என அப்பாவின் குரலில் அங்கே இருந்தவர்கள் நடுங்கினார். அப்பாவின் நண்பர்கள் அங்கே எப்படி உடனே வந்தார்கள் என எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

வீட்டுக்குள் ஒளிந்து இருந்த என்னை ஏன்டா அங்க வெட்டு குத்து நடக்குது பொம்பளையாட்டம் உள்ள ஒளிஞ்சி வேடிக்கை பார்க்கிற, உசிரு மேல ஆசை? உன்னை என அறை தரப் போனார். மாமா என அவள் வந்து தடுத்தாள்.தோணுகால் நோக்கி நடந்தோம். அங்கதான் அவங்க இருக்காங்க என்றனர் அப்பாவின் நண்பர்கள். பையனின் குடும்பமும் உடன் வந்தது. அப்பா அவர்களைப் பார்த்து திட்டினார். அப்பாவின் வசவுகள் அவர்களை அழ வைத்தது. காதல்னா தைரியம் தரனும் இப்படி ஓடி ஒளிஞ்சா போதுமா? நானும் தான் அன்னைக்கு காதல் கல்யாணம் பண்ணினேன். அப்பாவின் கதை கேட்டு அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள். எனக்கு உள்ளூர பயம் போனதே இல்லை.

எப்படி ஓடினீங்க, பயமா, தைரியமா.என் அப்பா அவனது குடும்பத்தை சம்மதிக்க வைத்தார். இரண்டு திருமணங்களும் ஒரே நாளில் நடக்கட்டும் என சொல்லிவிட்டு ஏதாவது தப்பு நடந்துச்சி நடக்கறதே வேற என அப்பாவின் கர்ஜனையை கேட்டு ஊரே நடுங்கியது. அப்பா நடந்த சிங்க நடையில் நான் சிறு எலியாய் தெரிந்தேன். இந்த வீரம் குறித்து அறியத் தொடங்கினேன்.

அப்பா, எப்படி வீரனாக இருப்பது என பயத்துடன் கேட்டேன். புறம் பேசுதல், மற்றவரை மட்டம் தட்டுதல், தவறாக நடத்தல் எல்லாம் செய்யாதே. அதுதான் வீரத்துக்கு முதல் படி. உன்னை உயர்வாக நினை என அப்பா சொன்னது பிடித்து இருந்தது. அப்பாவிடம் நெருங்கி பழக பயமாக இருக்கும். வீரனாக முடிவு எடுத்து அய்யனார், கருப்பசாமி என சாமி கும்பிட ஆரம்பித்தேன். அப்பாவின் வரவு செலவு நோட்டு புத்தகம் பார்த்தபோது அதில் ஒரு வாசகம் அன்று கண்ணில் பட்டது. கோழையாய் இருப்பவனே ஏழை.

ஒருமுறை ஊரில் பிரச்சினை வந்தது. அங்கே தப்பு செய்தவர்களை எல்லாம் புரட்டி எடுத்தேன். பின்னர் தான் அது கனவு என தெரிந்தது. மனம் தைரியம் வேணுமெனில் உடல் தைரியம் அவசியம். உடல் உறுதிபட உள்ளம் உறுதிப்பட்டது. நேர்மையாக் இருந்தேன். ஆமாம் இந்த பயத்துக்கு மரபணு உண்டா என தேடினேன். அவளிடம் கேட்டேன். உண்டு என்றாள். நமக்கு உண்டாகும் பயம் யாவும் இந்த மரபணுக்களின் செயலால் வருவது அதை நமது எண்ணத்தால் மாற்ற இயலும் என்றாள்

உயிரினங்களில் பயம் என்பது பாதுகாப்பு காரணி. தன்னை தற்காத்து கொள்ள பயமே முதல், பின்னர் தைரியம் என அறிந்தேன். பயந்த சுபாவங்கள் உடையவர்கள் வாழ்வில் முன்னேற முடிவதில்லை. ஆனால் இந்த சமூகம் பயத்தினால் ஒடுங்கிப் உள்ளது.

பயத்துடனே தனது குடும்பம் பிள்ளைகள் என வாழும் பெரும்பாலான மக்கள் மத்தியில் என் அப்பா வித்தியாசமாக இருந்தார். பயந்த சுபாவத்தை தொலைக்க ஆரம்பித்து இருந்தேன் அவளை கை  பிடித்ததும்.