Thursday 29 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 7

வேனில் இருந்து பொருட்களை இறக்கி எங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்தார்கள். 'அப்பா என்ன நடக்கிறது' என்று கேட்டேன். அவருக்கு இறக்கிற எல்லா சொத்துகளையும் இந்த இருவரின் பெயரில் எழுதி வைத்து விட்டார் என்றார் அப்பா. அதற்குள்ளாகவா, என்றேன். ஆமாம் என்றார். அப்படியெனில் அவர் சாக முடிவு செய்துவிட்டாரா என்றேன் கலக்கத்துடன். தெரியவில்லை என சொல்லிவிட்டு வேன் டிரைவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு வந்தார். காயத்ரி கலக்கத்துடன் இருந்தாள். எதற்கு இந்த கல்லூரிக்கு செல்லவேண்டும், எத்தனையோ பேர் இருக்க காயத்ரி எதற்கு கண்ணில் பட வேண்டும், என்னுடன் பேச வேண்டும், பழக வேண்டும், இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கையில் 'என்ன யோசனை முருகேசு' என்றார் அம்மா. மற்ற அனைவரும் நாற்காலிகளில் அமர்ந்து இருந்தார்கள்.

'நான் இமயமலைக்கு போகப் போறேன், என்னோட வியாபாரம், இந்த பொண்ணுங்க எல்லாத்தையும் தேவேந்திரன் பாத்துகிறேனு சொல்லிட்டார்' என்றார் காயத்ரியின் அப்பா. எனது அப்பாவின் பெயரை சொன்னதும் எனக்கு திடுக்கென இருந்தது. எனது அப்பாவுக்கு என்ன தெரியும் வியாபாரம், விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை உடையவர். கடையில் ஐந்து ரூபாய் பொருள் என்றால் ஆறு ரூபாய் கொடுத்து வியாபாரம் நல்லா பெருகட்டும் என சொல்லிவிட்டு வரக்கூடியவர். இதுவரை எந்த பொருளுக்கும் பேரம் பேசியது இல்லை. இதனால் அம்மா அதிக கோபம் கொள்வது உண்டு. இவர் எப்படி வியாபாரம் செய்வார். கறாராக இல்லாதபட்சத்தில் வியாபாரம் எல்லாம் வீண் என நினைத்து கொண்டு 'சார், எங்க அப்பாவுக்கு வியாபாரம் பண்ண தெரியாது, நீங்க இரண்டு மாசத்தில திரும்பி வரப்ப எல்லாம் தொலைஞ்சி போயிருக்கும்' என்றேன்.

'நான் இரண்டு மாசத்தில திரும்ப வரப்போறதில, திரும்பி வர சில வருசங்கள் ஆகும், எனக்கு இந்த வியாபாரம் திரும்பவும் வேணாம்' என்றார் அவர். 'முருகேசு செத்த இப்படி வா' என அம்மா அழைத்தார். 'நீ பேசாம இரு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்' என்றார் அம்மா. 'என்னம்மா சொல்ற, இதெல்லாம் அப்பாவுக்கு சரிபட்டு வராது, காயத்ரியின் அக்காவை கல்யாணம் பண்ணிக்கொடுக்கணும், எதுக்கும்மா, வீண் சிரமம்' என்றேன். 'சார் நீங்க யோசிச்சி பேசுங்க, இதோ இந்த ரெண்டு பேரு உங்களை நம்பி வந்தவங்க' என்றேன். 'உங்க அப்பா எல்லாம் பாத்துக்குவார்' என்றார் அவர். 'ஒருவேளை எங்க அம்மா செத்து போய், எங்க அப்பாவும் சாக முடிவு பண்ணிட்டா, நாங்க மூணு பேரு எந்த தெருவுல போய் நிற்கிறது' என்றேன். இந்த வார்த்தைகள் எல்லாம் எப்படி என் வாயில் இருந்து வந்தது என யோசித்து முடிக்கும் முன்னர் 'என்ன பேச்சு பேசற நீ, அவரே மனசு உடைஞ்சு போயிருக்கார், அபசகுனமா பேசிட்டு' என அம்மா சில தினங்கள் பின்னர் என் மீது கோபம் கொண்டார். 'அப்படி எதுவும் நடக்காது' என்றார் அப்பா.

'சரி நான் கிளம்புறேன்' என்றார் அவர். இரண்டு பெண்களும் அமைதியாகவே இருந்தார்கள். 'காயத்ரி உங்க அப்பாவை எங்கயும் போக வேணாம்னு சொல்லு' என்றேன். காயத்ரி கலங்கிய கண்களுடன் 'அவர் கேட்கமாட்டார்; எல்லாத்தையும் விபரமா சொல்லிட்டார்' என்றாள். 'சார், நீங்க போக கூடாது சார்' என்றேன். எனது வயதுக்கு மீறிய வார்த்தைகளா, நிலையின் தன்மையை உணர்ந்து வந்ததா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. 'முருகேசு நீ போய் வேலைய பாரு' என அம்மா அதட்டினார். நண்பன் வீட்டிற்கு செல்வதாக  பொய் சொல்லி சேர்த்து வைத்த பணம் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, எனது தொப்பி ஒன்றையும், கண்ணாடி ஒன்றையும் மறைத்து எடுத்து கொண்டு நான் வீட்டை விட்டு வெளியேறினேன். உண்மை மட்டுமே பேச சொன்ன காயத்ரி நினைவில் அப்போது இல்லை. காயத்ரியின் அப்பா வெளியேறும் வரை ஓரிடத்தில் மறைந்து இருந்து காத்து இருந்தேன். அவர் வந்ததும், அவரை பின்தொடர்ந்து சென்றேன். கையில் சின்னதாய் பெட்டி. பேருந்து நிலையத்தில் நின்றார்.


அவர் ஏறிய பேருந்தில் நானும் ஏறினேன். எந்த இறக்கம் என எப்படி தெரிந்து கொள்வது என தெரியாமல் பேருந்து செல்லும் கடைசி நிறுத்தம் கேட்டு டிக்கட் வாங்கினேன். அவர் இறங்கிய இறக்கத்தில் நானும் இறங்கி பின் தொடர்ந்தேன். இமயமலை செல்வதாய் சொன்னவர் இங்கே எதற்கு இறங்கினார் என புரியாமல் இருந்தது. சில தெருக்கள் தாண்டி ஒரு வீட்டிற்கு முன்னர் நின்றார். வீட்டின் கதவு திறந்தது.  உள்ளே சென்றார். எத்தனை மணி நேரம் இப்படியே காத்து இருப்பது என சுற்றும் முற்றும் பார்த்தேன். துப்பறியும் சிம்பு போல் ஆகிவிட்டேனே என மனம் கிடந்து அடித்து கொண்டது. அந்த வீட்டினை நோட்டம் விட்டு கொண்டே இருந்தேன். அரை மணி நேரத்தில் ஒரு பெண்ணுடன் காயத்ரியின் அப்பா வெளியே வந்தார். அந்த பெண்ணின் கையில் பெட்டி. இருவரும் பேசாமல் நடந்து நான் இருக்கும் இடம் தாண்டி சென்றார்கள். அவர்களை பின் தொடர்ந்தேன்.

அவர்கள் பெங்களூர் செல்லும் வாகனத்தில் ஏறினார்கள். என்னால் அதற்கு மேல் பொறுத்து கொள்ள இயலவில்லை. வாகனத்தில் நானும் ஏறி 'சார் இந்த வாகனம் இமயமலை போகாது' என்றேன். 'யார் நீ' என்றார். தொப்பி, கண்ணாடியுடன் யாராய் இருந்தா என்ன என்றேன். கணவனே கண் கண்ட தெய்வம் என இருக்கும் பெண்கள் மத்தியில் மற்றொரு பெண்ணின் கணவனை கூட கணவனே கண் கண்ட தெய்வம் என நினைக்கும் பெண்கள் இருப்பார்களோ என அச்சம் தவிர்த்து தகராறு பண்ணுவதாகவே முடிவு செய்து இனி இவரை சும்மா விடக்கூடாது என நினைத்தேன். 'நீங்க இப்போ வீட்டுக்கு திரும்பலை, போலீசுல சொல்வேன்' என்றேன். வியாபாரியாச்சே அவர். அந்த பெண் 'இந்த சனியனை அடிச்சி விரட்டுங்க' என்றாள்.

நடத்துனரிடம் அவர் புகார் செய்ய, நடத்துனர் என்னை பேருந்தில் இருந்து கீழே வலுக்கட்டாயமாக தள்ளினார். கோபம் கொப்பளித்தது. அந்த நேரம் பார்த்து ஒரு போலிஸ்காரர் வந்தார். அவரிடம் சுருக்கமாக விபரம் சொன்னேன் என்பதைவிட ஒரு பெரிய பொய் சொன்னேன். ஒருவர் தனது மனைவியை கொலைசெய்துவிட்டு வேறொரு பெண்ணுடன் ஓடிப்போக இந்த பேரில் ஏறி அமர்ந்து இருக்கிறார் என்றேன். வந்து போலிஸ் ஸ்டேசன்ல கம்ப்ளைன் கொடு என சொல்லிவிட்டு போய்விட்டார். தொப்பி, கண்ணாடி கழற்றி மறைத்தேன். பெங்களூர் வாகனம் கிளம்பியது. ஒரு கல்லை எடுத்து அவர் அமர்ந்து இருந்த இருக்கையை நோக்கி எறிந்தேன். நான் எடுத்த வேகம், எறிந்த வேகம். எதுவுமே தெரியாதது போல மக்களுடன் மக்களாய் கலந்தேன். பேருந்தின் சத்தத்தையும் தாண்டி 'ஆ' எனும் அலறல் சத்தம் கேட்டது. பேருந்திற்கு எந்த சேதமும் இல்லை என்பதுதான் எனக்கு ஆறுதலாக இருந்தது. பேருந்து நின்றது. பயமற்ற நிலை என்னுள் பரவி இருந்தது. ஒரு கடையில் சென்று நின்று கொண்டு வேடிக்கை பார்க்கும் நபராக மாறி இருந்தேன். சிறிது நேரத்திற்கு பின்னர் பேருந்தில் இருந்து தலையில் கட்டுடன் அவரை இருவர் சேர்ந்து இறக்கினார்கள். அந்த பெண்ணும் உடன் இறங்கினாள். நிலைமை விபரீதம் ஆகி கொண்டு இருப்பது தெரிந்தது. பேருந்து கிளம்பியது.

நான் அருகில் சென்று பார்த்தேன்.  அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். முழித்தவர் விழித்தார். மீண்டும் கண்களை மூடினார். மீண்டும் விழித்தார். அங்கே சுற்றி இருந்தவர்கள் 'ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க' என்றார்கள். கைத்தாங்கலாக பற்றி கொண்டு ஒரு ஆட்டோவில் அவரை ஆஸ்பத்திரிக்கு ஏற்றி கொண்டு சென்றேன். தவறு செய்பவர்கள் எல்லாம் நல்லவர்களாக எப்படி உலகில் நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அந்த கணம் உணர்ந்தேன். ஆஸ்பத்திரி வந்து இறங்கியதும் நீதான தகராறு பண்ணின பையன் என்றார் அந்த பெண். கல்லெடுத்து அடிச்சதும் நான் தான் என்றேன். பயந்து போனார்.

(தொடரும்)


Monday 26 March 2012

மறுபிறப்பு, நட்சத்திரங்கள், புரட்டல்கள்

எனது கிராமத்தில் இருந்து பக்கத்து கிராமத்துக்கு வந்திருந்த ஒரு சாமியாரை பார்க்க சென்றேன். அவர் மிகவும் சாந்தமாக இருந்தார். நீங்கள் எல்லாம் ஒரு சாமியாரா? என்னை முறைத்து பார்த்து கொண்டே இருந்தார். நானும் தான் அவரை முறைத்து பார்த்து கொண்டிருந்தேன்.

அடுத்த ஜன்மத்தில் நீ பறவையாக பிறக்க கடவது என அவர் என்னைப் பார்த்து சொன்னதும் எனக்கு அவர் மீது கடும் கோபம் வந்தது. அவரை நோக்கி நான் நீங்கள் அடுத்த ஜன்மத்தில் மனிதனாகவே பிறக்க கடவது என்றேன்.

எனக்கே சாபம் விடுகிறாயா? உனது சாபம் எல்லாம் பலிக்காது என்றார். அப்படியெனில் நீங்க விடுத்த சாபம் பலிக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்றேன். எனது ஞான கண்களில் தெரிகிறது என்றார்.

வெட்கமாக இல்லை, இதோ அருகில் இருக்கும் எனது கிராமம் உங்கள் கண்ணுக்கே தெரியாது, இதில் எனது அடுத்த பிறப்பு பற்றியெல்லாம் தெரிகிறது எனும் புரட்டல் வேறு என சொன்னதும் சாந்தமாக இருந்த அவர் கோபம் கொப்பளிக்க எழுந்தார். கையில் வைத்திருந்த தண்ணீரை என் மீது தெளித்தார்.

எந்த ஊரில் திருடிய தண்ணீர் என்றேன். அவரை பார்க்க வந்திருந்த பலர் என்னை திட்டினார்கள், சத்தம் போட்டார்கள். அவர்களை நோக்கி சற்று அமைதியாக இருங்கள் என சொன்னேன். எவரும் கேட்கவில்லை. அந்த சாமியார், அவர்களை அமைதி என சொன்னதும் எல்லோரும் அடங்கினார்கள். படித்த முட்டாள்கள் மனிதர்களில் மட்டுமே இருக்கிறார்கள் என நினைத்து கொண்டேன்.

இந்த தண்ணீர் கைலாய மலையில் இருந்து கொண்டு வந்தது என்றார். எப்போது கைலாய மலையில் இருந்து கிளம்பினீர்கள் என்றேன். காலம், நேரம் எல்லாம் எனக்கு இல்லை நான் இந்த நட்சத்திரங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன்னால் தோன்றியவர் என்றார். எனக்கு தலை சுற்றியது.

இந்த நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறுபிறப்பு எடுக்கின்றனவோ அது போலவே மனிதர்கள், விலங்கினங்கள், தாவரங்கள், ஊர்வன, பறப்பன எல்லாம் மறுபிறப்பு எடுக்கின்றன என்றார். நட்சத்திரங்கள் மறுபிறப்பு எடுக்கிறதா? என்றேன். ஆமாம் என்றார். சாமியார் சயின்ஸ் பேசுகிறார் என சைலன்ஸ் ஆனேன் நான்.

இந்த பிரபஞ்சம் உருவாகுவதற்கு முன்னால் நான் தூசியாகவும், துகளாகவும் இருந்தேன். அப்போதெல்லாம் காலமும் இல்லை, நேரமும் இல்லை. தூசியாய், துகளாய் இருந்த நான் இறுக்கமடைந்தபோது என்னுள் வெப்பம், அழுத்தம் எல்லாம் அதிகரித்தன. ஒளியற்று இருந்த நான் ஒலி எழுப்பி, ஒளி கொண்டேன் என்றார். நான் அப்படியே அமர்ந்துவிட்டேன். ஒரு வேளை இவர் ஏதாவது பள்ளி கூடத்தில் ஆசிரியராக இருந்துவிட்டு மாணவர்கள் தொல்லை தாங்காமல் சாமியார் ஆகிவிட்டாரா எனும் ஐயப்பாடு என்னுள் நிலவியது.

அப்படி ஒளி ஒலி கொண்டு இருந்தபோது நான் நட்சத்திரமாக உருவாகினேன். அந்த நட்சத்திரம் தான் இன்று எல்லையற்று விரிந்து கிடக்கும் அனைத்து நட்சத்திரங்களும், அனைத்து உயிர்களும் என்றவர், ஒரு நட்சத்திரத்தில் இருந்து பல்லாயிரம் நட்சத்திரங்கள் மறுபிறப்பு எடுத்து கொண்டே இருப்பது போல ஒரு உயிரில் இருந்து பல்லாயிர மறுபிறப்பு நடைபெற்று கொண்டே இருக்கிறது என்றார். உயிர்கள் எல்லாம் பூமியில் மட்டும் தானே என எனக்கு அவரது தாடியை பிடித்து இழுத்து உலக நடப்புக்கு வா என சத்தம் போட வேண்டும் போல் இருந்தது.

நட்சத்திரங்கள் மறுபிறப்பு எடுத்து வேறொரு நட்சத்திரம் தானே உருவாகிறது என்னை எதற்கு பறவையாக பிறப்பேன் என்றீர்கள் என்றேன். ஒரு நட்சத்திரம் மறு நட்சத்திரம் என்பது போல ஒரு உயிர் மற்றொரு உயிர், இதில் பறவை, மனித செயல்பாடுகள் வேறு என்பது போல நட்சத்திரங்களின் செயல்பாடு வேறு என்றார். நீங்கள் எந்த பள்ளிக்கூடத்து சயின்ஸ் வாத்தியார், பூமியில் மாத்திரம் தானே உயிர்கள் என்றேன்.

புல்லாக இருந்த போதும் சாமியார். நான் ஒவ்வொரு பிறப்பிலும் சாமியார். இந்த அண்ட சாரங்கள் எல்லாவற்றிலும் உயிர்கள் உள்ளது என்றார். உனது கேட்கும் திறன் எப்படி ஒரு அளவுக்குள் சுருங்கியதோ அதைப்போலவே உனது பார்க்கும் திறனும் ஒரு அளவுக்குள் சுருங்கியது. அதனால் தான் தொலைநோக்கி எல்லாம் வைத்து கொண்டு தேடிக்கொண்டு அலைகிறீர்கள் அதுதான் சொன்னேன் எனது ஞான கண்களில் தெரிகிறது நீ பறவையாக பிறப்பாய் என. நீங்கள் சரியான புரட்டல் சாமியார் என்றேன்.

புரட்டல்கள் என்றால் கலவை. இந்த உடல் பல கலவைகளால் ஆனது. இசையில் இந்த புரட்டல்கள் அதிகம் பேசப்படும். ஒவ்வொரு தாளத்திற்கேற்ப இந்த புரட்டல்கள் வேறுபாடு அடையும் என்றார். சலனமே இல்லாத மக்கள் கண்டு நான் சலனப்பட்டேன். நீங்கள் அதிகம் பாவம் செய்வதால் தான் அடிக்கடி பிறப்பு எடுக்கிறீர்கள் என்றேன்.

பாவம் செய்பவர்கள் தான் மறுபிறப்பு எடுப்பதில்லை. ஒரு நட்சத்திரம் தன்னில் இருந்து வேறு நட்சத்திரம் உருவாக்க முடியாத பட்சத்தில் அவை ஒன்றுமில்லாமல் போகும். அது போலவே மறுபிறப்பு எடுக்க முடியாத பிறவிகள் ஒன்றுமில்லாமல் போகும் என்றார்.

எனக்கு அவர் அப்படி சொன்னதும் ஒரு ஆசை வந்தது. அப்படியெனில் என்னை கருட பறவையாக பிறக்க வழி செய்வீர்களா என்றேன். எதற்கு என்றார். நான் ஒவ்வொரு பிறவியிலும் இறைவன் நாராயணனுக்கு பணி செய்யவே விருப்பம் என்றேன்.

சாமியார் சிரித்தார். படித்த முட்டாள்கள் மனிதர்களில் மட்டுமே இருக்கிறார்கள் என்றார்.

எனது மனதை இவர் எப்போது படித்தார்? துணுக்குற்றேன். கட்டிலில் இருந்து விழுந்த வலி இன்னும் போகாமலே இருந்தது.



Friday 23 March 2012

மௌன நிலை

உன்னைக் கண்டேன் உன்னைக் கண்டேன்
உலகம் மறக்கிறதே - துன்ப
உலகம் மறக்கிறதே

உறங்க மாட்டேன் உறங்க மாட்டேன்
மனசு துடிக்கிறதே - மனசு
கிடந்து துடிக்கிறதே

கனவு இல்லை கற்பனை இல்லை
புரிந்து கொள்வேனா
காதல் இன்றே கனிந்தது என்றே
தெரிந்து கொள்வேனா - மனதில்
உவகை கொள்வேனா

ஆசையை துறந்திட
ஆவல் வந்து பிறந்து மடிகிறதே
நேசம் மட்டும் கொண்டேனென்று
நெஞ்சம் சொல்கிறதே - கண்ணில்
தஞ்சம் கொள்கிறதே.

வாழ்வில் மௌனம் தான் எத்தனை அழகு. இந்த மௌனத்தை கடைபிடிக்க எத்தனை துணிவு வேண்டும். எவரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் உடனடியாய் பேச தோன்றும் நிலையை ஒதுக்கிவிடும் இந்த மௌனம் தான் எத்தனை அழகு.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் எனும் பாடலில் வரும் சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை எனும் வரிகள் போல இந்த மௌனத்திற்கு என்ன விலை கொடுத்து விட இயலும். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்றே அர்த்தப்படுத்தபட்டாலும் மௌனம் பேசும் மொழியை அறிந்தவர் எவரேனும் உண்டா.

இந்த மௌனம் என்ன சொல்ல வருகிறது என அவரவர் ஒன்றை நினைக்கத்தான் வாய்ப்பு உண்டு. இறைவன் மௌனியாகவே இதற்காகவே இருக்கிறானோ! நீ போட்டு வைத்த பாதையில் நான் நடந்து செல்வதை பெருமிதமாக நினைக்கிறேன். பாதை எனக்கு சொந்தமானது அல்ல என்றாலும் கூட.

உன்னை கண்டேன் இறைவா
உறங்க மாட்டேன் என மனசு துடிக்கிறது
எங்கே உறங்கினால் நீ கண்ணில் இருந்து
மறைந்து விடுவாய் என்கிற துடிப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

மௌனமாக உன்னிடம் பேசும்போது
எவருமே என்னை எதுவும் நினைப்பதில்லை
உன்னிடம் பேசுவதாக ஊரெல்லாம்
சொல்லிவைத்தால் ஏதேதோ சொல்லிவிடுவார்கள்.

மௌனம் தான் எத்தனை அழகு. என் மனதில் இருப்பதை இந்த மௌனம் ஒருபோதும் வெளியே சொன்னதும் இல்லை. முக பாவனைகளை கூட மறைத்துவிடும் பாக்கியம் மௌனத்திற்கு உண்டு. மௌனம் அவரவர் மனதிற்கேற்ப சம்மதத்திற்கு அறிகுறி.

உன்னைக் கண்டேன் இறைவா இனி உறங்க மாட்டேன். 

Tuesday 20 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 6

வந்த அழுகையை அடக்கிக்கொண்டு 'சார்' என்றேன் மீண்டும். என்ன என்பது போல் அவரது பார்வை சிவந்து இருந்தது. 'சார் நம்ம உயிரை நாமளே எடுத்துகிரதுக்கு எந்த உரிமையும் இல்லை' என்றேன். 'ம்ம்' என்றார். 'வலி பொறுக்க முடியாம இப்படி ஒரு வழி தேடிக்கிறது தப்புதானே சார்' என்றேன். 'ம்ம்' என்றார். வேறு எதுவும் பேசவில்லை. எனக்கு வேறு எதுவும் பேசத் தோணவில்லை. அன்று இரவு தூங்குவதும் விழிப்பதுமாக இருந்தேன். என் அப்பாவும் அவ்வப்போது எழுந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் மட்டும் தூங்கியது போலவே தெரியவில்லை.

காலை எழுந்ததும் அவர் குளித்து தயாரானார். நாங்கள் எங்களது வீட்டில் சென்று குளிக்கலாம் என நினைத்து கொண்டு அவரை எங்கள் வீட்டிற்கு அழைத்தோம். சரி என ஒரு பெட்டியுடன் எங்களுடன் வந்தார். வீட்டில் அம்மாவும், காயத்ரியும் அவளது அக்காவும் எழுந்து இருந்தார்கள். இன்று சனிக்கிழமை என்பதால் விடுமுறை தினமாக இருந்தது அசௌகரியத்தில் சற்று சௌகரியமாக இருந்தது. வீட்டிற்கு வந்தவர் காயத்ரியையும், அவரது அக்கா சுபலட்சுமியையும் பெயர் சொல்லி அழைத்தார். அவர்கள் வந்ததும் வாங்க, வக்கீல் ராமலிங்கத்தை பார்க்கனும் என்றார். நான் புரியாமல் அங்கேயே நின்றேன்.


எனது அப்பா குளித்து முடித்து இருந்தார். நான் அவசர அவசரமாக குளித்தேன். நான் குளித்து வெளியே வருமுன் அவர்கள்  அனைவரும் அங்கே இல்லை. எனது அம்மா மட்டும் இருந்தார். 'எங்கேம்மா அவங்க' என்றேன். வக்கீலைப் பார்க்க போய் இருக்காங்க, உங்க அப்பாவும் கூட போய் இருக்கார். ரொம்ப பாவம் கதிரேசு அந்த பொண்ணுங்க என்றார் அம்மா. 'என்னம்மா என்றேன்' ராத்திரியெல்லாம் தூங்கவே இல்லை, காலையில சாப்பிடறதுக்கு முன்னால இப்படி அவசரமா கிளம்பி போய்டாங்க. வா நீயாவது வந்து சாப்பிடு என்றார் அம்மா. 


வக்கீல் ராமலிங்கம் எங்க இருக்காருன்னு தெரியுமாம்மா என்றேன். எத்தனை ராமலிங்கம் இருப்பாங்களோ என்றார் அம்மா. என்ன ஏது என்று தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் அதிகம் இருந்தது. அப்பாவின் அலைபேசிக்கு அழைத்தேன், அதை வீட்டிலேயே விட்டு போய் இருந்தார். இனி அவர்கள் வரும் வரை காத்து இருக்கவா வேண்டும் என அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு அக்கம் பக்கத்தில் கேட்கலாம் என கிளம்பினேன். வீட்டுல இரு முருகேசு, எங்க போகப் போற, வந்ததும் பேசலாம் என சொன்னார் அம்மா. அம்மாவின் வார்த்தையை மீறுவதற்கு பயமாக இருந்தது. ஒருவேளை நான் வெளியே செல்ல, அம்மாவுக்கு ஏதாவது ஆகிவிட்டால், நினைக்கவே ஈரல், இதயம் எல்லாம் நடுங்கியது. 


'அம்மா, அவர் சாகப்போறதா சொல்லி இருந்தாரும்மா' என்றேன் நான். அம்மா என்னை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். அவர் காயத்ரியோட அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி சாகப்போறதா சொன்னாரும்மா என்றேன் மீண்டும். 'என்னடா பைத்தியகார முடிவா இருக்கு, இந்த பொண்ணுகளை நம்மளை அதுக்குதான் பார்த்துக்க சொன்னாரா. உங்க அப்பாவும் கூட போய் இருக்காரே. உங்க அக்காவுக்கு மாப்பிள்ளை பாத்து கட்டி வைக்கவே போதும் போதும்னு ஆயிருச்சி. இதுல இவர் இப்படி பண்ணிட்டா நம்ம மேல கொலை குத்தம் வந்துறப்போகுது' என்றார் அம்மா. அம்மாவின் பயம் எனது பயத்துடன் தொற்றியது. 


'சத்தியம், நேர்மை, உண்மை, நீதி, தர்மம் எல்லாம் இந்த உலகத்துல இன்னும் இருக்காம்மா' என்றேன். 'அதெல்லாம் எப்பவுமே உலகத்துல இருந்தது இல்லைடா முருகேசு, அவங்க அவங்க வசதிக்கேற்ப அதது மாறும்' என்றார். நான் அம்மாவிடம் பேசிய பொய்கள் என்னை அரித்தன. 'அப்படின்னா நீ நேர்மையா இருந்தது இல்லையாம்மா' என்றேன் நான். அம்மா என்னையவே பார்த்தார். 'இல்லைடா முருகேசு' என்றார். 'ஏன்மா உண்மைய பேசினா நேர்மை தானே' என்றேன் நான். 'பெரிய பெரிய விசயம் எல்லாம் கேட்கற, நம்ம வீட்டுல இருக்கற புத்தகங்களை படி, ஓரளவுக்கு எல்லாம் புரியும்' என்றார். 


மாடி அறைக்கு சென்றேன். புத்தகங்களை தள்ளி தள்ளி பார்த்தேன். தற்கொலையும், விரும்பி சாதலும் என்றொரு புத்தகம் இருந்தது. எடுத்து புரட்டினேன். 'வலி, வேதனை, அவமானங்கள் தாங்க இயலாமல், இதன் காரணமாக வாழப் பிடிக்காமல் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அவல நிலையை மனிதர்கள் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள்' என ஓரிடத்தில் எழுதி இருந்தது. 'ஒருவர் தனது உயிரை மாய்த்து கொள்தல் என்பது கொடிய செயலாகும், ஆனால் யூதனசியா எனப்படும் முறையில் வலி வேதனை உள்ளவர்களின் வாழ்க்கையை மருத்துவர்களே முடித்து வைக்கலாம் எனும் நிலை சில நாடுகளில் நிலவி வருகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். உண்ணாவிரதம் மூலம் ஒருவர் தனது உயிரை மாய்த்து கொள்வது கூட அறிவற்ற செயலாகும். உண்ணாவிரதத்தின் மூலம் அடையும் சாவுக்கும், தற்கொலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு எனினும் இறுதியில் தன்னை தானே மாய்த்தல் என்பது தவறு. கொத்து கொத்தாக மனிதர்கள் போரில் கொல்லப்படுவதும், ஒரு இனம், ஒரு மதம் பிடிக்காமல் அதை சேர்ந்தவர்களை உயிர் துறக்க செய்வதும் கருணை கொலை என்றே கருத சொல்வது மடமையாகும்'.

இதை எல்லாம் வாசித்து கொண்டிருக்கும்போதே நாம் நமது உடலை முறையாக பேணி காக்காமல் நோய் வாய்ப்பட்டு இறப்பது கூட ஒருவகையில் உண்ணாவிரதம் போன்ற சாவுதான் என எண்ணத் தோணியது. அந்த புத்தகத்தில் ஆழ்ந்து படித்தேன். அவ்வப்போது அம்மா என்ன செய்து கொண்டிருக்கிறார் என கீழே சென்று பார்த்து வந்தேன். 'ஓரிடத்தில உட்கார்ந்து படி என அம்மா சொன்னதும், கீழேயே அமர்ந்து படித்தேன். புத்தகத்தில் இறுதியாக 'இந்த புத்தகம் ஒரு மரத்தின் மரணத்தில் ஜனித்திருக்கிறது' என்று முடித்து இருந்தது. எனக்கு அந்த வரிகள் விளங்கவே இல்லை. அம்மாவிடம் கேட்டேன்.

'எல்லாம் கர்ம வினை' என்றார் அம்மா. 'கர்ம வினை அப்படின்னா என்னம்மா' என்றேன். 'நாம செய்ற செயல் பொறுத்தே அதனோட வினை இருக்கும்' என்றார். 'புரியலைம்மா' என்றேன். அந்த புத்தகம் உருவாக காகிதம் வேணும். அந்த காகிதத்துக்கு ஒரு மரம் வெட்டப்பட்டு இருக்கும்'. காகிதம் தேவை இல்லைன்னா, அந்த மரம் காகிதத்துக்காக வெட்டப்பட்டு இருக்காது' என்றார்.

'அப்படின்னா காயத்ரியோட அப்பா சத்தியம் செய்து தராம இருந்து இருந்தா தன்னோட சாவு பத்தி நினைச்சி இருக்க மாட்டாரா' என்றேன் நான். 'தெரியலை முருகேசு' என்றார் என் அம்மா. 'எதுக்கு தெரியலை' என்றேன் நான். 'ஒருவேளை அவரோட மனைவி மேல இருக்கற பாசத்தால,  அவரோட மனைவி இல்லாத உலகம் நமக்கு எதுக்குன்னு நினைக்கலாம்' என்றார். 'அப்படியும் இருக்காங்களா' என்றேன் நான்.

'எப்படியும் இருப்பாங்க' என்றார் என் அம்மா! மதிய வேளை நகர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் இன்னும் காணவில்லை. புத்தகம் எனது நேரங்களை தின்று முடித்து இருந்தது. ஒரு மணி நேரம் பின்னர் அவர்கள் அனைவரும் வந்தார்கள். 'இதை பத்திரமா வீட்டில் வை' என அப்பா எனது அம்மாவிடம் தந்தார். பின்னால் ஒரு வாகனம் பல பொருட்களுடன் வந்து இறங்கியது! எனக்குள் அதிர்ச்சி மின்னலாக இறங்கியது.

(தொடரும்)


Thursday 15 March 2012

குரான் பேசுமா அறிவியல்

ஒரு நூலினை நாம் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு வித எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு நூல் பலரால் போற்றப்பட்டு, பலரால் நம்பப்பட்டு வரும் பட்சத்தில் அந்த நூலில் கூறப்படும் கருத்துகளை மறுத்து பேசுவது என்பது நம்பிக்கையாளர்களின் மனம் நோக செய்வதாகும்.

எத்தனையோ அறிவியல் வல்லுனர்கள், முனிவர்கள் எழுதிய நூல்கள் இருந்தாலும், அதிக மக்களால் அறியப்பட்ட நூல் என்றால் பகவத் கீதை, குரான், பைபிள் என்றே சொல்லலாம். இவை மதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டு இருந்தாலும், வாழ்க்கை முறைகளை சொல்வதாகவே கருதப்பட்டு இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் குரான், பைபிள் போன்ற நூல்கள் தங்களது வலிமையை இழக்கத் தொடங்கின என்றாலும் இன்னமும் இந்த நூல்கள் பலராலும் பின்பற்றப்பட்டு போற்றப்பட்டு வருகின்றன. தாய் வழித் தோன்றல்கள், தந்தை வழித் தோன்றல்கள் போல இந்த நூல்கள் இறைவழித் தோன்றல்கள் என்றே கருதப்பட்டு வருவது இந்த நூல்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

தத்தம் இறைவனை நம்புபவர்கள் இந்த நூல்களை ஒருபோதும் எதிர்த்து பேச முற்படமாட்டார்கள். ஆனால் வெவ்வேறு வழிப்பாதை கொண்டவர்கள் ஒரு கொள்கையின் மீது அவதூறு பேசி தமது கொள்கையே சிறந்தது என தமது வழிப்பாதை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது என்றே பெருமை பட்டு கொள்வார்கள். இதில் பகவத் கீதையை நாம் சற்று தள்ளி வைத்துவிடலாம். இதற்கு காரணம் அந்த நூல் அறிவியல் பேசுகிறது என இதுவரை எவரும் சொன்னதில்லை, பகவத் கீதை யோக நிலைகளை பறைசாற்றும் ஒரு இலக்கியம். அதற்கடுத்து பைபிள், இதுவும் அறிவியல் பேசுவதாக எவரும் சொல்வதில்லை. ஆனால் அவ்வப்போது உலகம் அழிவதாக சொல்வதாக சொல்வார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி குரான் அறிவியல் பேசுவதாக பல அறிவியல் அறிஞர்கள் முதற்கொண்டு படித்து தெளிந்த பலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

குரான் அறிவியல் பேசித்தான் அது இறைவன் சொன்னதாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என நினைக்கும் அளவுக்கு குரானின் நிலை சென்று கொண்டிருப்பது வருத்தத்திற்கு உரியது. குரான் அறிவியல் பேச வேண்டிய நிர்பந்தம் தான் என்ன? அது அறிவியல் நூலா, வாழ்வியல் நூலா? என்று இதுவரை அறிந்தது இல்லை.

முகம்மது நபிகள் படிக்காதவர், அவருக்கு இத்தனை ஞானம் எப்படி வந்திருக்கும், எனவே குரான் இறைவன் சொன்னதுதான் என்று ஒரு வாதம் வேறு. படிக்காதவர்களை இப்படி எல்லாம் இழிவு படுத்தி இருக்க வேண்டாம். அதே படிக்காத நபிகள் தான் நபிகள் வாக்கு என சொல்லி இருப்பதாகவும் இருக்கிறது. படிக்காத ஒருவர் எப்படி அப்படியெல்லாம் அழகிய வாக்குகள் சொல்லமுடிந்தது என எவரேனும் நினைப்பாரில்லை. குரானும், நபிகள் வாக்கும் பிரித்தே கையாளப்பட்டு இருக்கிறது என்பதுதான் வரலாறு. மேலும் படிப்பறிவு என்பது எதை வைத்து சொல்வது என்பதையும் எவரும் அறிந்தாரில்லை. குரான் எழுதப்பட்டதாக சொல்லப்படும் காலகட்டங்களில் அரேபிய நாடுகள் அறிவியலில் செழித்தோங்கி இருந்தன. அதன் விளைவாக கூட சில வசனங்கள் குர்ஆனில் வைக்கப்பட்டு இருக்கலாம், எனினும் குரானின் நோக்கம் அறிவியல் பேசுவதா?

எனது நண்பர் ஒருவர் சொன்னார், குரான் மட்டுமே அறிவியலுக்கு நெருக்கமாக பேசுகிறது என. நான் அவரிடம் கேட்டேன். நீங்கள் குரான் முழுவதும் படித்து விட்டீர்களா என! இல்லை என்றார். ஒரு நூலை அணுகும் முன்னர் வெளிப்படையான மனம் இல்லை என்றால் அந்த நூலில் நாம் தேடுவது இருக்கிறதா என்றுதான் கண்கள் போகும். அப்படி ஒன்று இருந்துவிட்டால் சாதகம் எனில் சாதகமும், பாதகம் எனில் பாதகமும் என நமக்கு வசதிக்கு ஏற்ப நாம் எழுதுவோம்.

ஆனால் மனதை நிர்மூலமாக்குதல் என முன்னோர்கள் சொல்லி வைத்து இருக்கிறார்கள். அதாவது குரான் ஒரு நூல் மட்டுமே. இப்போது முகம்மது நபிகள் ஒரு இறைத்தூதர், அந்த நூல் முகம்மது நபிகளுக்கு இறைவன் சொன்னது என்பதெல்லாம் இரண்டாம் நிலை. இந்த இரண்டாம் நிலை எல்லாம் நாம் அறிந்து கொண்டு அந்த நூலினை அணுகும்போது நமது மனநிலை, ஒன்று இறைவன் மீது நம்பிக்கை உள்ளவராக இருந்தால் நேசத்தோடும், இரண்டாவது இறைவன் மீது நம்பிக்கையற்றவர்களாக இருந்தால் வெறுப்போடும் அணுகத் தோன்றும். இது மனித இயல்பு. எந்த ஒரு முதல் புத்தகமும், எழுதுபவருக்காக வாங்கப்படுவதில்லை. ஆனால் அதற்குப்பினர் அந்த நபரால் எழுதப்படும் புத்தகங்கள் அவருக்காகவே வாங்கப்படும் நிலை ஏற்படுகிறது. ஆனால் அந்த நிலை எல்லாம் குரானுக்கு இல்லை. குரான் நம்பிக்கைகளின் வெளிப்பாடு.

எனக்கு ஒரு நண்பர் அரபு வசனங்கள் கூடிய தமிழ் வசனங்கள் கொண்ட குரான் தந்தார். முதலில் படிக்கும்போது எதற்கு இறைவன் இப்படி நபிகளிடம் சொன்னார், இதை எல்லாம் இறைவன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றே தோணியது. எப்போது மனதை நிர்மூலமாக்குகிறேனோ அப்போது குரான் வாசிக்கிறேன் என நண்பரிடம் சொன்னேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே உங்களால் மனதை இனிமேல் நிர்மூலம் ஆக்க முடியாது. இதை செய்ய வேண்டும் எனும் அணுகுதல் இருக்கும்போது அதை செய்து விட்டோமா என சரி பார்க்க தோன்றும், எனவே மனதை நிர்மூலமாக்குதல் அவசியம் இல்லை. இறைவன் தந்ததாகவே படியுங்கள் என்றார். அந்த மன நிலை இப்போது இருக்கிறது என்றே கருதுகிறேன். அறிவியல் மூலம் மேலும் பல விசயங்கள் அறிந்து கொள்ளவே விருப்பம் உண்டு, அதுபோலவே இந்த குரானும்.

குரான் - இறைவன் தந்தது.


ஆமாம், குரானை எழுத சொன்னவரே இறைவன் சொன்னதாய் சொன்னது. 

Wednesday 14 March 2012

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (4)

பகுதி 3 

நமது உடலில் அமைந்து இருக்கும் இந்த நுரையீரல், மூச்சுக்குழல் என்பதில் எல்லாம் இந்த ஆஸ்த்மா பிரச்சினை பண்ணுவதில்லை என்றில்லை. மூச்சுக்குழல் இரண்டாக பிரிவடைந்து செல்லும் அந்த இருபகுதிகளில் ஏற்படும் இறுக்கமே ஆஸ்த்மாவுக்கு அடிப்படை காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. நாம் சுவாசம் செய்வதற்கு நமது நரம்பு மண்டலம் உறுதுணையாக இருக்கிறது.

நன்றி: கூகிள்

நாம் உடற்பயிற்சி செய்யும்போதோ, ஓடும் போதோ நமது சுவாசம் அதிகரிப்பதற்கு நமது உடலுக்கு தேவையான ஆக்சிஜனை தரவேண்டியே இந்த சுவாசம் வெகுவேகமாக நடைபெறுகிறது. பெரும்பாலோனோர் மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் நமது உடலில் பல விசயங்களை கட்டுபாடுக்குள் கொண்டு வரலாம் என சித்தர்கள் குறிப்பில் உள்ளதாக கூறுகிறார்கள்.

நமது உடலில் உள்ள தசைகள், செல்கள் எல்லாவற்றிற்கும் மிகவும் சீரான முறையில் ஆக்சிஜன் சென்றாலே போதும். தசைகள், செல்கள் எல்லாம் நன்றாக வேலை செய்யும். யோகா பயிற்சி முறைகள் உடலை கட்டுப்பாடாக வைத்திருக்க உதவி புரியும் என்பதில் இருவேறு கருத்தில்லை. இந்த உடற்பயிற்சி குறித்து ஒருவர் நகைச்சுவையாக சொன்னார்.

அதோ அந்த பூங்காவில் நடந்து கொண்டு இருக்கிறார்களே அவர்கள் எல்லாம் இங்கே எப்படி வந்தார்கள் தெரியுமா? என்றார். 


தெரியவில்லை சொல்லுங்கள் என்றார் மற்றொருவர். 


இதோ இந்த கார்களில் தான் வந்தார்கள் என்றார். 

வாழ்க்கையில் சில விசயங்களை எதற்கு செய்கிறோம் என்கிற ஒரு அடிப்படை உணர்வே நமக்கு மறந்து போய்விடுகிறது. நன்றாக மூக்கு முக்க சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்தால் சரியாகிப் போய்விடும் என்பது. மருந்து மாத்திரை இருக்கிறதே என கண்டபடி வாழ்க்கையை அமைத்து கொள்வது. இதை எழுதும் நான் ஒன்றும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இப்படியெல்லாம் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என நினைத்தே பொழுதுகள் கரைந்து போய்விடுகின்றன.

இந்த ஆஸ்த்மா ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என மரபணுக்கள், அலர்ஜி சம்பந்தமான பொருட்கள் என குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொருவரின் நிலையம் வெவ்வேறாகவே இருக்கிறது. இன்னதுதான் என அறுதியிட்டு சொல்லமுடியாத நிலையும் கூட நிலவுகிறது. இது போன்ற இறுக்கத்தை தளர்த்தும் மருந்துகள் என சல்புடமோல் பெரிதாக உபயோகப்படுகிறது.

பிரணாயாமம் எனும் மூச்சு பயிற்சி முறை பெருமளவில் இந்தியாவில் பேசப்படுகிறது. இது குறித்து திருமூலர் எழுதிய பாடல்களை பார்க்கலாம்.
இந்த தலைப்பில் எழுதப்பட்ட பாடல்கள் என பதினான்கு பாடல்கள் தென்படுகின்றன. பாடல்கள் குறிப்பு எழுதப்பட்டே இருக்கிறது. நேரடியாக எதுவும் சொல்லாமல் இருப்பது போன்றே தென்படுகிறது. இதற்காக பிரத்தியோக தமிழை கற்று கொள்தல் அவசியமாகிறது.

பன்னிரண்டானை பகல் இரவுள்ளது
பன்னிரண்டானையை பாகன் அறிந்திலன்
பன்னிரண்டானையை     பாகன் அறிந்தபின்
பன்னிரண்டானைக்கு பகல் இரவு இல்லையே.

என்னது பன்னிரண்டு? இது குறித்து சிலர் சில விளக்கம் சொல்கிறார்கள். நமது உடலில் இருக்கும் காற்றினை எப்படி கையாள்வது என்பது குறித்தே இவரது சிந்தனையெல்லாம் இருக்கிறது.

புறப்படு புக்கு திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

ஹீமோக்ளோபின் எனும் புரதம் நமது உடலில் உள்ள ஆக்சிஜனை எல்லா செல்களுக்க்ம் எடுத்து செல்கிறது. அப்படிபட்ட ஆக்சிஹீமொக்லோபின் சிவப்பு நிறத்திலே இருக்கும். எப்போது ஆக்சிஜன் நீங்குகிறதோ சிறு பச்சை வண்ணம் மாறி விடும். எதற்கு இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் இங்கே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என பார்த்தால் வாய் வழியாக சுவாசித்து அந்த ஆக்சிஜன் எதற்கு ரத்தத்தில் சேரக்கூடாது எனும் சிந்தனை நமக்கு தேவைப்படுகிறது. மேலும் திருமூலர் சொல்கிறார்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றை பிடிக்குங் கணக்கறி வாளரில்லை
காற்றை பிடிக்குங் கணக்கறி வாளர்க்கு
கூற்றை யுதைக்குங் குறியது வாமே

இப்போது ஆஸ்த்மா உடையவர்கள் இந்த கணக்கை எல்லாம் அறிந்து கொண்டால் தீர்வாகி விடுமா என்றால் இதை சொல்வது மிகவும் கடினம். காற்றே உட்புக வழியின்றி போம்போது அங்கே எப்படி எதை பிடித்து நிறுத்துவது?

இந்த உலகில் ஆஸ்த்மாவினால் கிட்டத்தட்ட முன்னூறு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. கிட்டதட்ட 250,000 மக்கள் வருடந்தோறும் உலகில் இறக்கிறார்கள். இந்த ஆஸ்த்மாவிற்கு முறையான சிகிச்சைகள் இல்லையெனினும், மக்கள் தங்கள் வாழ்க்கை முறையின் மூலம் கட்டுபடுத்தலாம் எனவும் ஆய்வு சொல்கிறது.

ஆஸ்த்மாவிற்கான அறிகுறிகள் என மூச்சு இழப்பு, நெஞ்சில் இறுக்கம், தொடர் இருமல் போன்றவை ஆகும். இப்படி வரும்போது உடனடியாக மருந்தினை எடுத்துகொள்வது பயன் தரும். ஆனால் இது போன்ற சூழலில் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லதாகும்.

எந்த ஒரு நோயையும் உதாசீனபடுத்துவது நம்மில் பெரும் அபாயத்தை விளைவிக்கும். தெரிந்தே அந்த தவறை நாம் செய்து கொண்டே வருகிறோம்.

(தொடரும்)




பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 5

'வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் அக்காவின் காதலை எதற்கு தடுத்தீர்கள் என கேட்டேன். அதற்கு அம்மா, அந்த பையனுக்கும், சுபாவுக்கும் சரிப்பட்டு வராதுன்னு தெரிஞ்சிதான் சொன்னேன், அந்த பையனுக்கு அவனுடைய குணத்திற்கு ஏத்தமாதிரி பொண்ணு கிடைக்கனும்னு நினைச்சேன். நம்ம சுபா அவனுக்கு சரிபட்டு வரமாட்டா.

அம்மாவின் இந்த வார்த்தைகள்... நான் எதிர்பார்க்கவே இல்லை. எப்படி அம்மா தீர்மானம் செய்தார். அப்படியெனில் நான், காயத்ரி. காயத்ரிக்கு நான் பொருத்தமா என்றேன். படிக்கிற வயசில என்ன இப்படி ஒரு ஆசை, பழக்கம் வேற, பழக்கத்தை மீறிய வழக்கம் வேற. நீ நாலைஞ்சி வருஷம் கழிச்சி எப்படி இருப்பியோ அப்பத்தான் சொல்லமுடியும். நேத்து வரைக்கும் நீ இருந்தமாதிரி இருந்தா நிச்சயம் நான் உன்னை அந்த பொண்ணுக்கு கட்டி கொடுக்க மாட்டேன். அவ குணத்துக்கு நீ சரிப்பட்டு வந்து இருக்கமாட்ட. இதெல்லாம் பத்தி இப்ப எதுக்கு கவலைப்படற. ஒருத்தரை பிடிச்சி இருந்தா எதுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைப்பு வருது. அம்மாவின் வார்த்தைகளில் கோபம் மறைந்து கொண்டிருந்ததை உணர்ந்தேன். எப்போதாவது வெளிப்பட்டு விடலாம் என்பதால் அமைதியாக இருந்தேன்.

நான் காயத்ரியை பார்க்க நினைச்சதுக்கு காரணமே இத்தனை வருசமா என்னால உன்னை மாத்த முடியலையே, ஆனா ஒரு நாளுல உன்னை மாத்திட்டாளே அப்படிங்கிறதை தெரிஞ்சிக்கத்தான். அவங்க அம்மா, அப்பா கூட காதல் திருமணம் தான். சொந்தகாரங்க எல்லாம் இவங்களை ஒதுக்கி வைச்சிட்டாங்க. எதுக்கு அந்த ஊருல இருக்கணும்னு கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்தவங்கதான். அதிக பேச்சு வார்த்தை எல்லாம் இல்லையாம். அம்மா தொடர்ந்து பேசியதும் நான் அமைதியாகவே இருந்தேன். இங்க பாரு முருகேசு எனக்கு காயத்ரியை ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு. இதே மாதிரி எல்லாருமே எல்லா நேரத்திலும் இருப்பாங்கனு நினைக்காத.

சரிம்மா என சொல்லிவிட்டு அம்மாவுக்கு உதவியாய் சில வேலைகள் செய்தேன். அம்மா சொன்னது மனதில் என்னவோ பண்ணிக்கொண்டு இருந்தது. அதிலும் அந்த ஆசிரியர் சொன்ன விசயம் நெருடலாக இருந்தது. எனது மனம் காயத்ரிக்கு எதற்கு கட்டுப்பட்டது என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை. எனது சந்ததிகளை பெருக்கி கொள்ளவா நான் காயத்ரியை நேசிக்கின்றேன். ஒருவேளை எங்கள் இருவருக்கும் சந்ததிகளே இல்லாமல் போனால் காயத்ரி என்னைவிட்டும், நான் காயத்ரியை விட்டும் பிரிந்து சென்றுவிடுவோமா?

இந்த சின்ன வயதில் இப்படிப்பட்ட விபரீத எண்ணங்கள் எல்லாம் என்னுள் சுற்றி கொண்டிருந்ததை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என நினைத்தேன். அப்போது தொலைபேசி ஒலித்தது. அம்மாதான் எடுத்து பேசினார். எதிர்முனையில் காயத்ரி என்பதை தெரிந்து கொண்டேன். அம்மா பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தேன்.

காயத்ரியோட அப்பா பிசினஸ் டிரிப்பை கேன்சல் பண்ணிட்டு வந்துட்டு இருக்காராம். காயத்ரியோட அம்மா மூச்சு விட கஷ்ட படறாங்களாம். இந்த வியாதிக எல்லாத்துக்கும் ஒரு மருந்து இருக்க கூடாதா என அம்மா வேதனைப்பட்டு கொண்டார். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்பா வந்ததும் இந்த விசயத்தை அம்மா சொன்னார். ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயிருக்கலாமே என அப்பா தனது பங்குக்கு சொன்னார். எத்தனை வருசமா இருக்கு என்றார் மேலும். சின்ன வயசிலே இருந்து இருக்குனு சொன்னாங்க என்றார் அம்மா.

மருந்து மாத்திரை எல்லாம் பக்கத்திலேயே வைச்சிருக்க சொன்னியா என்றார் அப்பா. ம்ம் என்றார் அம்மா. அப்பா பேசியபோது எனக்குள் இனம் புரியாத பயம் வந்து சேர்ந்தது. ஆஸ்த்மாவினால் அவதிப்படுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் அப்பா சொன்னபோது இது மிகவும் ஆபத்தான நோய் போன்ற தோற்றத்தை எனக்கு கொடுத்தது. ஆமா அவங்களுக்கு சொந்தக்காரங்க இல்லையா என்றார் அப்பா.

யாரும் இங்கே இல்லை என அம்மா சொன்னதும் எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. எதற்கு இப்படி பேசறீங்கப்பா என கேட்டுவிட்டேன். என் மனசுக்கு சரியா படலை முருகேசு என்றார் அப்பா. அப்பாவின் முகம் மிகவும் கலங்கி போய் இருந்தது. இரவு பத்து மணி இருக்கும். தொலைபேசி ஒலித்தது. எங்கள் வீட்டுக்கு இப்படியெல்லாம் இரவில் தொலைபேசி வருவது இல்லை.

எனது அறையை விட்டு வெளியே வந்தேன். அம்மா அருகில் இருக்க, அப்பா தொலைபேசியில் பேசியவர் தொலைபேசியை கீழே வைத்துவிட்டு தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டார். என்ன ஆச்சுங்க எனும் அம்மாவின் குரலில் தெரிந்த பதற்றம் எனக்குள் பற்றிக்கொண்டு கை கால்களில் எல்லாம் நடுக்கம் கொடுத்தது. அந்த பொண்ணோட அம்மா இறந்துட்டாங்களாம் என அப்பா சொன்னதும் அம்மா ஓவென அழுதுவிட்டார். நான் இடிந்து போய்விட்டேன். அப்பா எங்களை அவசரமாக கிளம்ப சொன்னார்.

காயத்ரியின் வீட்டினை அடைந்ததும் துக்கம் தொண்டையை அடைத்தது. வேறு சிலரும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். வீட்டிற்குள் சென்றதும் அம்மா அவர்கள் இருவரையும் கட்டிக்கொண்டார்கள். காயத்ரியின் அப்பா வந்தபோது இரவு ஒரு மணி இருக்கும். அவர் காயத்ரியின் அம்மாவை கட்டிபிடித்து அலறிய அலறலில் எனக்கு இந்த உலகம் எல்லாம் வெறுத்து போய்விட்டது.

அன்று இரவெல்லாம் அங்கேயே அழுது கொண்டிருந்தோம். காயத்ரியின் சொந்தக்காரர்கள் என காலையில் சில பேர் வந்து கொண்டிருந்தார்கள். 'என் தங்கச்சி உன்னாலதான் செத்துட்டா' என ஒருவர் காயத்ரியின் அப்பாவை பார்த்து சொன்னபோது நான் நிலைகுலைந்து போனேன். அப்படி சொன்ன அவரை மற்றொருவர் திட்டி கொண்டிருந்தார். தாயை பறி கொடுத்த அந்த நிலையில் இந்த பிரச்சினைகள் காயத்ரியையும் அவளது அக்காவையும் என்ன பாடுபடுத்தும். ஆனால் வந்தவர் விடாமல் காயத்ரியின் அப்பாவை திட்டி கொண்டே இருந்தார். காயத்ரியின் அக்காதான் 'மாமா நீங்க வீட்டை விட்டு வெளியே போங்க' என அழுகையின் ஊடே அவரை சத்தம் போட்டார். 'இவரை வெளியே அனுப்புங்க' என அவர் மீண்டும் சொன்னதும் ஒரு சிலர் அவரைப் பிடித்து வெளியே இழுத்து சென்றார்கள். ஆனால் காயத்ரியின் அப்பா எதுவுமே பதில் பேசாமல் காயத்ரியின் அம்மாவின் முகத்தை பார்த்து கொண்டே இருந்தார். அன்று நடந்த நிகழ்வுகள் என்னை விரக்தியாய் அமர வைத்துவிட்டது.

அப்பா வேலைக்கு லீவு சொல்லிவிட்டார். நான் கல்லூரிக்கு லீவு போட்டேன். காயத்ரியின் அப்பா அதிர்ச்சியில் அமர்ந்து இருக்க, என் அப்பா எல்லா வேலைகளையும் செய்தார். எல்லா காரியங்களையும் அன்றே செய்து முடித்தார்கள். இது எல்லாம் நடந்து கொண்டிருக்க என் அம்மாவை பார்க்கும்போது மனதில் அதிக பயம் வந்து சேர்ந்தது. அம்மாவும் ஒருநாள் இப்படி போய்விட்டால், நினைக்கும்போதே மேலும் அழுகை பீறிட்டு வந்தது. அம்மாவின் அருகில் சென்றேன். அப்பா எதற்கு அப்படி பேசினார் எனும் நினைப்பு சுற்றிக்கொண்டே வந்தது.

வந்திருந்த காயத்ரியின் சொந்தக்காரர்கள் எல்லாம் அன்று இரவே கிளம்பினார்கள். அதுவரை காயத்ரியின் அப்பா ஒரு வார்த்தை பேசவில்லை. மௌனமாகவே இருந்தார். தண்ணீர் குடிக்கவோ, சாப்பிடவோ இல்லை. கண்ணீர் மட்டும் வழிந்தோடி கொண்டிருந்தது. என் அப்பா காயத்ரியின் அப்பா கூட பேச்சு கொடுத்தார். காயத்ரியையும், அவளது அக்காவையும் பார்க்க பாவமாக இருந்தது.

'சார், என் ரெண்டு பொண்ணுகளையும் உங்ககிட்ட ஒப்படைக்கிறேன், பார்த்துக்குவீங்களா' என அவர் சொன்னதும் என் அப்பா 'எதுக்கு சார் அப்படி எல்லாம் பேசறீங்க, மனசு உடைஞ்சிராதீங்க' என அப்பா ஆறுதல் சொன்னார். அதற்கு பின்னர் அப்பாவை ஒரு தனியறைக்கு அழைத்து சென்றார். அரை மணி நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வரவில்லை. காயத்ரியும், அவளது அக்காவும் என் அம்மாவின் மேல் சாய்ந்து இருந்தார்கள். என் அம்மா!

சிறிது நேரம் கழித்து அவர்கள் வெளியே வந்ததும் அப்பா கண்களில் கண்ணீரோடு இருந்தார். அன்று இரவு எங்கள் நால்வரையும் எங்கள் வீட்டிற்கு போக சொன்னார் அப்பா. நானும் உடன் இருக்கிறேன் என சொன்னேன். அம்மா மட்டும் அவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு எங்கள் வீட்டிற்கு சென்றார்.

அப்போது அப்பா என்னை வெளியே அழைத்து சொன்ன விசயம் என்னை உருக்குலைய வைத்தது. காயத்ரியின் அப்பா, காயத்ரியின் அம்மாவிடம் செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில் உயிரை மாய்த்து கொள்ள வேண்டும் என முடிவு எடுத்து விட்டதாகவும், அவரை சமாதனப்படுத்துவதற்குள் மிகவும் கஷ்டமாகிப் போய்விட்டது என்றார் அப்பா. ஆனால் எந்த நேரத்திலும் அந்த முடிவுக்கு போய்விடுவாரோ என அச்சத்தில் தான் இருப்பதாக சொன்னார்.

நான் காயத்ரியின் அப்பாவை பார்க்க வீட்டிற்குள் சென்றேன். அவர், காயத்ரியின் அம்மாவின் படத்தையே பார்த்து கொண்டிருந்தார். 'சார்' என்றேன். திரும்பினார். அவரது சிவந்த கண்கள் என்னை மீண்டும் அழ வைத்தது.

(தொடரும்)

Tuesday 13 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 4

காலையில் விழித்து எழுந்ததும் மீண்டும் போர்வைக்குள் முடங்கி கொள்ள வேண்டும் போல்தான் இருந்தது. ஆனாலும் அம்மாவுக்கு உதவியாய் இருந்திட வேகமாக எழுந்தேன். அம்மா இன்னமும் எழுந்திருக்கவில்லை. வீடெல்லாம் கூட்டி, வாசற்படியை கூட்டினேன். வாசலில் தண்ணீர் தெளித்தேன். அந்த சுகமான காற்று இதமாகத்தான் இருந்தது. அழுக்காக இருந்த ஆடைகள் எல்லாம் வேகமாக அலசி காயப்போட்டேன். பின்னர் வேகமாக குளித்துவிட்டு வீட்டில் இருந்த சாமி அறைக்கு சென்றேன். ஒரு வித்தியாசமான உணர்வு மனதில் சில்லிட்டு போனது. அங்கே அப்படியே அமர்ந்துவிட்டேன். அம்மா வந்து அழைத்த பின்னர் தான் நான் இவ்வுலக்கு மீண்டும் வந்தேன்.

'முருகேசு, நீதானா? இல்லைன்னா அந்த காயத்ரியே உன் ரூபத்தில இங்க வந்துட்டாளா' என்றார். அந்த கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்தது. 'நான் தான் மா' என சொல்லிவிட்டு சாமி அறையை விட்டு எழுந்தேன். 'என்னைக்குமில்லாத திருநாளா ரொம்ப வேலை செஞ்சிருக்கியே, ரொம்ப சந்தோசமா இருக்குடா' என அம்மா சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு நிமிட மாற்றம் என்றெல்லாம் சொல்வார்கள், ஒரு நாள் மாற்றம், மூன்று நாள் மாற்றம், ஒரு மாத மாற்றம், ஒரு வருட மாற்றம் என்றெல்லாம் சொல்வார்கள். மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பார்களாம். ஓரிடத்தில் நிலையாய் மனம் நிற்காதாம். இதைத்தான் மனித மனம் குரங்கு என்றும் பழைய குருடி கதவை திறடி என்றெல்லாம் எழுதி வைத்து இருப்பதாக படித்து இருந்தேன். எனது இந்த மாற்றம் எத்தனை நாளைக்கோ என மனம் கணக்கு போட்டு கொண்டு இருந்தது. வாழ்நாள் வரை இப்படியே வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவை நினைக்கும்போது எதற்கு என்னாலும் முடியாது என நம்பிக்கை வந்தது. பாட புத்தகங்களை புரட்டி கொண்டு இருந்தேன். அம்மா குளித்துவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தார்கள்.

'அம்மா நான் சமைக்க உதவி செய்யட்டுமா' என காய்கறிகள் எடுத்து நறுக்க தொடங்கினேன். அம்மா என்னை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டே இருந்தார். இன்னிக்கு சைவ சாப்பாடு போதும், முட்டை கூட வேண்டாம் என்றேன். அம்மா அசைவம் மிக அரிதாகவே சாப்பிடுவார்கள். எனக்காக, என் அப்பாவுக்காக சமைப்பதோடு சரி. 'முருகேசு நீ போய் படி, நான் செஞ்சிக்கிறேன்' என்றார்கள். அம்மாவை அமர வைத்து சமைத்து பசியாற்ற வைக்க வேண்டும் என எந்த ஒரு பிள்ளையும் நினைத்து இருக்குமா என தெரியவில்லை. வயதான காலத்தில் கூட அம்மாவின் உழைப்பில் பிள்ளை அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருப்பதைத்தான் கண்டிருக்கிறேன். இத்தனை நாள் நான் கூட அப்படித்தான் இருந்தேன். முதன் முதலில் இன்றுதான் சமையல் செய்ய அம்மாவிடம் கற்று கொண்டேன். அம்மா கண்களால் ஒவ்வொன்றாக அளந்தது கண்டு பிரமிப்பாக இருந்தது.

சமையல் செய்து கொண்டிருந்தபோதே ருசி பாரு என கொடுத்தார்கள். எல்லாம் மிக மிக ருசியாக இருந்தது. அம்மா அத்தனை சுவை என்றேன். தானாக உழைத்து அதன் மூலம் வரும் சுகம் என்றுமே அலாதி என்றார் அம்மா. அம்மா நிறைய புத்தகங்கள் வாசிப்பார். வீட்டு வேலை முடிந்ததும் தையல் வேலை செய்வார். மதிய வேளையில் இரண்டு மூன்று மணி நேரம் புத்தகங்களுக்கு என நேரத்தை ஒதுக்கி விடுவார். அம்மாவுக்காகவே அப்பா ஒரு தனி புத்தக அறை வீட்டில் ஒதுக்கி தந்து இருந்தார். அம்மா தான் அடிமைபடுத்தப்பட்டு இருக்கிறோம், தனக்கு சம உரிமை வீட்டில் இல்லை என்றெல்லாம் சத்தம் போட்டது இல்லை. அப்பாவிடம் சத்தம் போட்டால், எங்களிடம் சத்தம் போட்டால் எங்களின் நலன் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிந்தது. நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை அம்மா என்னை சத்தம் போடவே இல்லை.

'அம்மா என்னை நீ திட்டவே இல்லையே' என்றேன். 'முருகேசு நான் திட்டனும்னு நினைச்சா திட்டுறேன்' என்றார். நான் நடந்து கொள்ளும் முறையில் அம்மாவை மிகவும் சந்தோசமாக வைத்து கொள்ளலாம் என்று நினைத்தபோது அளவிலாத சந்தோசம் பெருக்கெடுத்து ஓடியது. அன்று காலையில் நாங்கள் மூவரும் சாப்பிட அமர்ந்தபோது என்னைப்பற்றி அம்மா அப்பாவிடம் மிகவும் பெருமையாக பேசினார். அதைகேட்ட எனது அப்பா நானும் முருகேசு மாதிரி ஆயிருறேன் என சிரித்தார். உங்களுக்கு இன்னொரு காயத்ரியா கிடைக்கபோறா என அம்மா சொன்னதும் நானும் சிரித்து கொண்டேன்.

எத்தனை சுகமான வாழ்க்கை இது. கல்லூரிக்கு கிளம்பினேன். மறக்காமல் அக்கா கல்யாணத்தில் எடுத்த போட்டோ ஒன்றை எடுத்து கொண்டேன். காயத்ரியை எங்க பார்க்கலாம் என கேட்டு வா என அம்மா சொல்லி அனுப்பினார். ஆனால் அன்று காயத்ரி கல்லூரிக்கு வரவில்லை. மனதில் இனம் புரியாத கவலை ஒட்டிக்கொண்டது. காயத்ரியை பற்றி எப்படி விசாரிப்பது என புரியவில்லை. மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு காயத்ரியின் முகவரியை கல்லூரியில் வாங்கினேன். தரமாட்டேன் என முதலில் அடம்பிடித்தவர்கள் பின்னர் கொடுத்தார்கள்.

அந்த மதிய உணவு இடைவேளையில் காயத்ரியின் வீட்டிற்கு சென்றேன். வீட்டின் கதவை தட்டியதும் காயத்ரி வந்துதான் கதவைத் திறந்தாள். 'காயத்ரி என்ன ஆச்சு' என்றேன். 'உள்ளே வா முருகேசு' என அழைத்து சென்றாள். 'அம்மாவுக்கு சுகமில்லை, அதுதான் லீவு போட்டுட்டேன்' என்றாள். என்னைப் பார்த்த காயத்ரியின் அம்மா படுக்கையில் இருந்து எழுந்தார். 'நீங்க படுத்துக்கோங்க அம்மா' என்றேன். 'அம்மாவுக்கு என்ன ஆச்சு, அப்பா எங்கே காயத்ரி' என்றேன். 'அம்மாவுக்கு ஆஸ்த்மா பிரச்சினை, அப்பா பிசினஸ் விசயமா முந்தாநாள் வெளியூர் போனார், வர இரண்டு மூணு நாள் ஆகும், அக்காவுக்கு வேலை இடத்தில லீவு கிடைக்கலை. நேத்து நைட்டு ஆஸ்த்மா கொஞ்சம் சிவியர் ஆயிருச்சி' என்றாள். 'டாக்டர்கிட்ட போகலையா' என்றேன். 'அக்கா வந்ததும் போகணும்' என்றாள். 'அம்மாவை கூப்பிட்டு இப்பவே போவோம்' என்றேன் நான். 'இருக்கட்டும் தம்பி, பிறகு போயிக்கிறோம்' என எழுந்து அமர்ந்தவாறே காயத்ரியின் அம்மா சொன்னார். ஆனால் எனது மனம் கேட்கவில்லை.

அம்மாவுக்கு தொலைபேசி போட்டு முகவரி தந்தேன். அம்மா அடுத்த பதினைந்து நிமிடத்தில் அங்கு வந்தார்கள். 'நீங்க காலேஜுக்கு போங்க' நான் பார்த்துக்கிறேன் என்றார் அம்மா. காயத்ரிக்கு அவளது அம்மாவை விட்டு வர மனம் வரவில்லை. அவள் மிகவும் பயந்து போயிருந்தது அவளது முகத்தில் தெரிந்தது. நான் மட்டும் கலூரிக்கு திரும்பினேன். முதல் பாடம் நடந்து அரைமணி நேரம் ஆன போதிலும் அந்த பாட வகுப்பு ஆசிரியர் உள்ளே அனுமதித்தார். அப்போது ஒரு வாசகம் சொன்னார்.

முப்பது நிமிடம் பாடம் போய்விட்டதே என கவலைப்படுவதை விட இதோ இவனைப்போல பதினைந்து பாடத்தை கற்று கொள்ள ஆர்வம் வேண்டும், ஆனால் இன்று அடுத்த வகுப்பையும் நான் தான் எடுக்க போகிறேன், அதனால் இவன் ஒரு மணி நேர படிப்பை தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்றார்.  வாழ்க்கையை எப்படி எல்லாம் நோக்கலாம் என அவர் சொன்னதில் இருந்து புரிந்தது. நான் 'லேட்டா வந்ததுக்கு மன்னிக்கனும் சார்' என எழுந்து நின்றேன். 'நீ சரியான காரணத்துக்காக லேட்டாக வந்தால் அதற்கு எதற்கு மன்னிப்பு' என அவர் சொன்னதும் வாழ்க்கையில் அடுத்த பாடம் புரிந்தது. 'ஒருவேளை நீ இன்று வராமலே போய் இருந்தால் உனக்குள் ஆர்வம் இருந்தால் எப்படியும் இன்று நான் நடத்திய பாடத்தை உன்னால் கற்று கொள்ள முடியும்' என சொல்லியவர் பாடத்தை தொடர்ந்தார். கல்லூரிகளில் எல்லாம் அனைத்து பாடங்களும் தமிழில் இல்லாமல் இருப்பது சௌகரியமா, அசௌகரியமா என தெரியவில்லை. தமிழில் அத்தனை அழகாக பேசிய அந்த ஆசிரியர் ஆங்கிலத்திலும் அருமையாக பாடம் நடத்த தொடங்கினார்.


'Courtship behaviour in animals results in mating to end up in reproduction. It can be either simple or complex. In simple courtship behaviour, animals may use small number of chemical, visual and/or auditory stimuli. In complex courtship behaviour, it may be involved with two or more individuals that can use several modes of communication.


This courtship behaviour by animals is mainly used to attract a mate. Some use odorous substances such as pheromones, some may dance, so on. This behaviour is also used by the animal species to avoid interbreeding with other species. They use instinct power to achieve this'

அவர் இந்த வரிகளை சொன்னதும் நான் பாடத்தின் குறுக்கே கேள்வி கேட்க கையை உயர்த்தினேன்.

'என்னப்பா சொல்லு' என தமிழில் சொன்னார்.  பாடத்தை ஆங்கிலத்தில் நடத்துவதும் அவர் சாதாரணமாக பேசும் பொது தமிழில் பேசுவதும் எனக்கு பிடித்து இருந்தது. இருப்பினும் நான் தமிழில் கேட்பதா, ஆங்கிலத்தில் கேட்பதா என புரியாமல் தமிழிலேயே கேட்டேன்.

விலங்கினங்கள் என்றால் மனிதர்களையும் குறிக்கும் அல்லவா? அப்படி என்றால் மனிதர்களும், தான் ஒரு துணையை தேடுவது தங்களது சந்ததிகளை பெருக்கி கொள்ளவா? என்றேன். எனது கேள்வி அவரை சில நிமிடங்கள் யோசிக்க வைத்தது.

'Yes absolutely Murugeshu. However we human don't follow our instinct nowadays, although we have common drives and same goals like other animals, we have been moulded by cultural context and we rather follow our customs.

எனது பெயரை சொன்னதும் நான் அதிர்ந்தேன். என்னை எங்கு பார்த்தார், எப்படி எனது பெயர் இவருக்கு தெரியும் என யோசித்து கொண்டிருந்த போதே  'thank you sir' என சொல்லிவிட்டு அமர்ந்தேன். அன்று அவர் நடத்திய பாடம் எல்லாம் எப்படி விலங்கினங்கள், தாவரங்கள் இந்த பூமியில் வாழ வகை செய்து கொண்டன என விவரித்தார். எனக்கு அந்த ஆசிரியரை பிடித்து போனது.

பாடங்களின் ஊடே காயத்ரியின் அம்மாவை பற்றிய நினைவுகள் வந்து போனது. என் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாதபோது நான் இப்படியா இருந்தேன் என நினைக்கும்போது அழுகை வந்தது. மாலை வேளையில் காயத்ரியின் வீட்டை அடைந்தேன். அம்மா அங்குதான் இருந்தார். காயத்ரியின் அக்காவும் வந்து இருந்தார். காயத்ரியின் அம்மா மிகவும் தளர்ச்சியாக காணப்பட்டார்.

'என்னம்மா சொன்னாங்க' என்றேன். 'பயப்படும்படியா ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்கபா' என்றார். அவர்களுக்கு தைரியம் கொடுத்துவிட்டு நாங்கள் வீட்டை விட்டு கிளம்பி போகையில் எனது அம்மாவின் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டு கண்ணீர் விட்டாள் காயத்ரி.

'எதுனாலும் எனக்கு ஒரு போன் போடும்மா, கவலைப்படாதே. நான் காலையில வரேன்' என்றார். என் அம்மாவை கடவுள் என்றே அவர்கள் நினைத்து கொண்டிருக்க கூடும். எனது கண்கள் கலங்கியது. எவரேனும் உதவி என கேட்டு வந்துவிட்டால் அம்மா அடுத்த நிமிடம் என்று கூட பார்க்கமாட்டார். உடனடியாக செய்துவிடுவார். வேறு சாக்கு போக்கு எல்லாம் சொல்வது அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்காது. அதனால் எங்கள் காலனி பகுதியில் இருப்பவர்கள் அம்மாவை 'நிஜ காயத்ரியே இங்க வந்து அவதரிச்சி இருக்கு என்பார்கள்' நாங்கள் ஆறு வருடங்கள் முன்னர் வேறொரு ஊரில் இருந்த போதும் அம்மா இப்படித்தான். அம்மாவின் மீது நான் எரிந்து விழுவேன். உனக்கென கவலை வந்துச்சி என்பேன். யார் எக்கேடு கேட்டு போனால் என்ன என சொல்வேன். அம்மா எப்போதும் ஒன்றே ஒன்றுதான் சொல்வார். 'சாமி இப்போவெல்லாம் இங்கே வராதுடா. நாம தான் சாமியா இருந்து ஒருத்தரை ஒருத்தர் காப்பத்தனும்' என்பார்.

ஒரு ஆட்டோவை பிடித்தோம். 'காயத்ரியை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்குடா' என அம்மா சொன்னதும், அம்மாவின் தோள்களில் சாய்ந்தேன்.

(தொடரும்)

Saturday 10 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 3

அந்த போட்டாவை திருப்பி என்னிடம் தந்துவிட்டு என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அடுக்களைக்கு சென்றுவிட்டார் அம்மா. எனக்கு பகீரென இருந்தது. இந்நேரம் சத்தம் போட்டு பெரும் ரகளையே நடந்து இருக்க வேண்டும். ஆனால் அம்மா எதுவுமே சொல்லவில்லை. நான் எனது நோட்டுகளை எல்லாம் வைத்துவிட்டு அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தேன். உள்ளே சென்ற அம்மா வழக்கம் போல காபியும், ரொட்டியும் கொண்டு வந்து வைத்தார்கள். இதை சாப்பிட்டு முடித்ததும் விளையாட சென்றுவிட்டு இரவு எட்டு மணிக்குத்தான் வீடு திரும்புவேன். ஓடி ஆடி விளையாடும் விளையாட்டு எல்லாம் இல்லை. ஆனால் இன்று எங்கும் செல்ல மனம் விருப்பம் கொள்ளவில்லை.

'அம்மா' என்றேன். 'சொல்லுப்பா' என்றார்கள். 'நான் சொன்னதை எல்லாம் கேட்டு நீ ஒண்ணுமே சொல்லலையே அம்மா' என்றேன். என் அம்மாவின் முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லை. 'பேசும்மா' என்றேன். 'கொஞ்சம் அடுக்களையில வேலை இருக்கு, பத்திரமா விளையாடிட்டு வா' என அம்மா மீண்டும் அடுக்களைக்கு சென்றுவிட்டார். இப்படியொரு நிகழ்வு என் வாழ்வில் நடந்ததே இல்லை. என் அம்மா கோபமோ, சந்தோசமோ அப்படி அப்படியே போட்டுடைத்துவிடுவார். ஆனால் அவர் இன்று நடந்து கொண்ட விதம் என்னால் ரொட்டியை, காபியை தொடக்கூட மனம் இடம் தரவில்லை. அடுக்களைக்கு போன அம்மா திரும்பி வந்தார். 'காபி ஆறிப்போயிரும் முருகேசு, திரும்ப திரும்ப சூடு பண்ணினா காபி நல்லா இருக்காது' என்று சொல்லிவிட்டு போனார். சில நேரங்களில் எதார்த்தமாக சொல்லப்படும் வார்த்தைகள் ரண வேதனைகள் தந்துவிட்டு போகும். அவர் அப்படி சொன்னது எனக்கு ரண வேதனையாக இருந்தது. நான் சொன்ன விசயங்களால் அம்மாவின் உணர்வுகளை தைத்துவிட்டேனோ, கிழித்துவிட்டேனோ என புரியாமல் வழக்கத்திற்கு மாறாக வீட்டில் சில வேலைகள் செய்ய ஆரம்பித்தேன். காபி டம்ளரையும், ரொட்டி தட்டையும் கழுவிக்கொண்டிருந்தேன்.

'அதெல்லாம் இருக்கட்டும், நான் செஞ்சிக்கிறேன். நீ விளையாடிட்டு வா' என அம்மா மீண்டும் வந்து சொல்லிவிட்டு போனார். அவை இரண்டையும் கழுவி தொடைத்து வைத்துவிட்டு அடுக்களைக்கு போன நான் அம்மாவை கட்டிபிடித்தேன். 'என்னை மன்னிச்சிருமா' என்றேன். 'என்ன தப்பு பண்ணின நீ, மன்னிக்க சொல்ற' என்றார். 'என் மேல கோவமே வரலையாம்மா' என்றேன். 'இல்லை முருகேசு, அந்த பொண்ணோட பேரு என்ன' என்றார். 'உன் பேருதான்மா' என்றேன். 'என் பேரா' என்றார். 'ம்' என்றேன். 'சரி நாழியாகுது, விளையாட போ' என்றார். 'இல்லைம்மா நான் விளையாட போகலை, வீட்டு வேலை இருந்தா சொல்லு' என்றேன். அம்மா என்னை பார்த்த பார்வையில் நான் கூனி குறுகிப் போனேன். இத்தனை நாள் இல்லாத அக்கறை இன்று எனக்கு வந்தது என அம்மா நினைத்து இருக்கலாம்.

'தலைவலி என அம்மா அமர்ந்தபோது, மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அழைத்தபோது என அம்மாவினை நிறையவே உதாசீனப்படுத்தி இருக்கிறேன். அந்த எண்ணமெல்லாம் என்னை குற்றுயிராக்கி கொண்டிருந்தது. ஆனால் அதையெல்லாம் நினைத்து என்னை நானே மட்டம் தட்டி கொள்ள வேண்டாம் என முடிவுடன் அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல் வீட்டினை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். 'நான் எல்லாம் செஞ்சிக்கிறேன்' என்றார் அம்மா. அவரின் பேச்சை எதுவும் சட்டை செய்யாமல் நிறைய வேலைகள் அன்று செய்தேன். உடம்பு அத்தனை வலி வலித்தது. அம்மாவுக்கு இப்படித்தான் வலித்து இருக்குமோ? என மாடியில் இருந்து கீழி இறங்கி வந்தேன்.

'அம்மா' என அவரை மீண்டும் கட்டிபிடித்து கொண்டேன். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்ததை கண்டு என்னால் ஒரு கணம் எதுவுமே செய்ய முடியவில்லை. 'என்னம்மா' என்றேன். 'மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு முருகேசு' என்றார். 'காயத்ரிக்கு நான் தேங்க்ஸ் சொன்னேன்னு நாளைக்கு சொல்லு' என்றார். 'உனக்குத்தான்மா நான் நன்றி சொல்லணும்' என்றேன். 'நான் உன் அம்மாடா, எனக்கு போய் நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு' என குளிக்க சென்றுவிட்டார். தினமும் காலையிலும், மாலையிலும் குளிக்கும் வழக்கத்தை அம்மா கடைபிடிப்பார். காய்ச்சல் வந்தாலும் குளிக்காமல் இருக்கமாட்டார். புறச்சுத்தமும், அகச்சுத்தமும் அத்தனை அவசியம் இவ்வுலகுக்கு என எங்கோ படித்து இருக்கிறேன்.

அடுத்து நகர்ந்த ஒவ்வொரு நிமிடமும் எனது வாழ்வில் நடந்த விசயங்கள் நிறையவே நினைவுக்கு வந்தது. இந்த அம்மா மட்டும் இல்லாவிட்டால் நான் இந்நேரம் சின்னாபின்னமாகிப் போயிருப்பேன். என்னை இந்த அளவுக்கு வளர்த்து வந்தது அம்மா தான். எந்த நேரமும் என்னை கண்காணித்து எதை எதை சரியாக செய்ய வேண்டும் என சொல்லித்தந்து படிக்க பிடிக்காத என்னை படிக்க வைத்து எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. இது ஒரு அம்மாவின் கடமை என்று என்னால் புறம் தள்ள இயலவில்லை. பன்னிரண்டாவது வரையே படித்த என் அம்மாவின் கல்வி ஞானம் பெரிது. வாழ்க்கை கற்றுத்தரும் பாடத்தை எவர் ஒருவர் கற்று கொள்கிறாரோ அவரே வாழ்க்கையில் பெரும் சாதனையாளர் ஆகிறார் என மாலை வகுப்பில் ஒரு ஆசிரியர் சொன்ன வாசகம் எனது அம்மாவுக்கு நிறையவே பொருந்தும். அப்பா எப்போதுமே 'அம்மாதான் எல்லாம், சத்தம் போடுறா, திட்டுறா அப்படினுட்டு அவளை வெறுத்துராதே' என என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். என் அம்மாவின் நச்சரிப்பு எனக்கு அதிக எரிச்சல் தந்து இருந்தாலும் அவர் என் அம்மாதானே. அந்த நச்சரிப்புதான் என்னை நன்றாக படிக்க வைத்தது.

அம்மா தான் எல்லாம் செய்கிறாரே என இறுமாந்து இருந்துவிட்டேன். அம்மா செய்யட்டும் எனும் இளக்காரம்! அக்கா கூட அடிக்கடி சொல்வார், அம்மா பாவம் டா, கொஞ்சம் உதவி செய்யக்கூடாதா என. நீ தான் மாடாட்டம் இருக்கியே என்பார். அக்காவின் பேச்சை அத்தனை பெரிதாக காதில் நான் போட்டு கொண்டதில்லை. ஆம்பளை பையனுக்கு அதிகம் செல்லம், பொம்பளை பிள்ளைக்கு கொஞ்சம் செல்லம் என்றெல்லாம் என் அம்மாவோ, அப்பாவோ பார்த்தது இல்லை. எங்கள் இருவரையும் பிரித்து பார்த்ததும் இல்லை. அக்கா நிறையவே சமர்த்து. அம்மா தன்னை சத்தம் போடாமல் பார்த்து கொள்வாள். காதல் என வந்ததும் அதை என் அக்கா அம்மாவிடம் சொல்லி வைக்க, அம்மா தான் அந்த பையன் பற்றி விசாரித்து எல்லாம் தெரிந்த பின்னர் இந்த பையனே வேண்டாம் என பிடிவாதமாக நின்றார். இன்றுவரை எரிச்சல் தந்த இந்த விசயம் இப்போது அம்மாவின் செயல் சரியென்றே நினைக்க வைத்தது.


அம்மா குளித்துவிட்டு சாமி கும்பிட்டு வந்தார். எனது நெற்றியில் திருநீறு வைத்தார். நான் அம்மாவை சாமியாகத்தான் அன்று கும்பிட்டேன்.  அவரது காலில் முதன் முதலில் விழுந்தேன். அம்மா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. 'முருகேசு, என்னடா இது புது பழக்கம் எல்லாம்' என என்னை தொட்டு தூக்கியபோது எனது கண்கள் குளமாகி இருந்தன. அம்மா பதினெட்டு வருட வாழ்க்கையில் பதின்மூன்று வருடம் உனது உணர்வுகளை சிதைத்தே வாழ்ந்து இருக்கிறேனே என மனதில் நினைக்கையில்  அந்த வேதனை கண்களில் நீராகி இருந்தது. 


'நான் காயத்ரியை பார்க்கணும்' என்றார் அம்மா. 'நாளைக்கு கேட்டு சொல்றேன்மா' என்று சொன்னேன். அப்பா வந்தார். அப்பாவிடம் எல்லா விசயங்களையும் அம்மா சொல்லி இருக்க வேண்டும். என்னை அப்பா உச்சி மோர்ந்தார். போட்டாவை கேட்டார். பார்த்தார். யார் அந்த பொண்ணு என்றார். 

அம்மா போல அப்பா காயத்ரியை கவனிக்கவில்லை போல என நினைத்து கொண்டு படத்தில் இருந்த காயத்ரியை காட்டினேன். அவரது முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

எங்கோ எப்போதோ படித்த கவிதை நினைவுக்கு வந்தது. தாயில்லா பிஞ்சுக்கெல்லாம்     அழுதபோதாவது அம்மா வருவாளா! அன்றே மனதில் பெரிய திட்டம் தீட்டினேன்.

(தொடரும்)

Friday 9 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 2

புரையேறிய எனக்கு வேகமாக தண்ணீர் பாட்டில் திறந்து தண்ணீர் தந்தாள்.

'யாரோ நினைக்கிறாங்க' என சொல்லிக்கொண்டே 'உன் பேரு என்ன' என திருப்பி கேட்டேன்.

யார் உன்னை நினைப்பாங்க என்றாள் அவளது பெயரை சொல்லாமல்.

என் அம்மா தான் என சொல்லி வைத்தேன்.

உங்க அம்மா மட்டும் தான் நினைப்பாங்களா என அவள் கேட்டதும் உலகம் கண்ணுக்கு முன் வேகமாக சுழன்றது.

என் பேரு காயத்ரி.

'என் அம்மாவோட பேரு கூட காயத்ரிதான். ஆனா அவங்க ஒரே தொனதொன ரகம். எப்ப பார்த்தாலும் அதை செய், இதை இப்படி செய் அப்படின்னு நச்சரிச்சிட்டே இருப்பாங்க. அதனால எனக்கு எரிச்சலா வரும். நிறைய பொய் சொல்வேன் என் அம்மாகிட்ட. எதுனாலும்னா உடனே விரதம் இருக்க ஆரம்பிச்சிருவாங்க.

இப்படித்தான் என் அக்கா ஒருத்தரை லவ் பண்ணினா. அதெல்லாம் கூடாது, அந்த பையன் சரியில்லை அப்படி இப்படி பாட்டு பாடி என் அக்கா மனசை மாத்தி போன வருஷம் தான் வேற ஒருத்தரோட கல்யாணம் ஆச்சு. இதுல என் அக்கா வேற அட்வைஸ். அம்மா பேச்சை கேட்டு நட, யாரையும் லவ் பண்ணி தொலைச்சிராதேனு. ஆனா என் அப்பா எதையும் கண்டுக்க மாட்டாரு' என சொன்னதும் காயத்ரியின் முகத்தில் சின்ன மாற்றம் தெரிந்ததை கவனித்தேன்.

'அம்மாகிட்ட இனிமே பொய் சொல்லாத. இன்னைக்கு என்ன நடந்துச்சோ எல்லாத்தையும் சொல்லு' என்றதும் 'வகுப்பை விட்டு வெளியே அனுப்பினது, உன்னை பாத்துட்டு இருந்தது எல்லாமா' என்றேன்.

'ஆமா, எல்லாத்தையும் தான். இனிமே அம்மா என்ன சொன்னாலும் உடனே செஞ்சிரு. எந்த அம்மாவும் தன்னோட பிள்ளை நல்லா இருக்கனும்னுதான் நினைப்பாங்க, குட்டிச்சுவரா போகணும்னு நினைக்க மாட்டாங்க. அதனால நீ அவங்க சொன்னா மறுக்காம செய்யி. என்னையவே பாத்துட்டு இருக்காத, படிப்புல கவனம் செலுத்து' என்றாள்.

'அப்ப இனிமே என் கூட சாப்பிட வரமாட்டியா, பேசமாட்டியா' என்றேன்

'அதது அதுபாட்டுக்கு நடக்கும், இனிமே உன் அம்மாகிட்ட பொய் பேசாத. நானும் என் அக்காவும் என்ன நடந்தாலும் எங்க அம்மாகிட்ட சொல்லிருவோம். அப்படித்தான் என் அக்கா எட்டாவது படிக்கையில ஒரு திருட்டு தம் அடிச்சிட்டு இன்னைக்கு திருட்டு தம் அடிச்சேன் அப்படின்னு அம்மாகிட்ட சொல்ல, அடுத்த நாளு ஸ்கூலுக்கு போறப்ப என் அக்கா கையில சார்மினார் சிகரெட்டும், லைட்டரும் எங்க அம்மா கொடுத்தாங்க. அக்கா, அம்மாவை கட்டிபிடிச்சிட்டு அழுதுட்டா. ஒன்னே ஒன்னு எங்க அம்மா சொன்னாங்க. நீங்க தப்பு செஞ்சா உங்களை மட்டும் இல்ல, என்னையும் உங்க அப்பாவையும் சேர்த்துதான் பாதிக்கும், அதே போல நாங்க தப்பு செஞ்சா எங்களை மட்டுமில்ல உங்க ரெண்டு பேரையும் சேர்த்துத்தான் பாதிக்கும்னு. அம்மாகிட்ட மறைக்க வேண்டாம்' என்றாள். அவள் சொன்னதை கேட்டதும் நெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் என் அம்மா!

'அவ்வளவுதான், என் அம்மா சாமி ரூம்ல உக்காந்துட்டு பகவானே என்ன இப்படி செய்ற என அழ ஆரம்பிச்சிருவாங்க' என்றேன்.

'அம்மாகிட்ட பொய் சொல்லாத இனிமே. அவங்களுக்கு ஒரு பாதுகாப்பு, நம்பிக்கை தேவை. தன்னோட பிள்ளை தனக்குத்தான் என்கிற ஒரு அன்பு' என சொன்னாள் காயத்ரி.  பின்னர் வகுப்புக்கு நகர்ந்தோம். அனைவரின் கண்களும் எங்களையே மொய்த்தன. அருகில் இருந்த நண்பனிடம் 'எனக்கு தெரிஞ்ச பொண்ணு, எங்க குடும்பத்துக்கு பழக்கம் என பொய் சொன்னேன். இனி அவன் எல்லாரிடமும் சொல்லிவிடுவான், நாங்கள் பழக எந்த பிரச்சினையும் இருக்காது என்றே கணக்கு செய்தேன்.

அன்றைய மாலை பாட வகுப்புகளில் நான் அவளை பார்க்கவே இல்லை. நன்றாக பாடத்தில் கவனம் செலுத்தினேன். மாலை நாங்கள் பிரிந்து செல்லும்போது 'நான் நாளைக்கு சைவம்' என்றாள் காயத்ரி. 'நானும் சைவம்' என சொல்லிக்கொண்டேன். தனது பையில் இருந்து ஒரு புகைப்படத்தை காட்டி 'இது என் அம்மா, இது என் அப்பா, இது என் அக்கா, இது நான், உன் அம்மாகிட்ட காட்டு' என தந்தாள். 'நானும் போட்டோ கொண்டு வரேன்' என சொல்லி விடைபெற்றேன். அவள் முகம் மிகவும் தெளிவாக இருந்தது.

வீட்டிற்குள் நுழையும் முன்னர் 'இன்னைக்கு காலேஜு எப்படி இருந்துச்சி, என்ன பாடம் நடத்தினார்கள், என பல கேள்விகள் கேட்டு வைத்தார் அம்மா. ஆனால் கடைசியாக ஒரு கேள்வி கேட்பார் என நான் எதிர்பார்க்கவே இல்லை.


'அந்த பொண்ணு வந்து இருந்தாளா'


'எந்த பொண்ணும்மா'


'அதான், காலேஜுல சேரப் போன  நாளு பார்த்துட்டே இருந்தியே'


அம்மாவின் இந்த கேள்வி என்னை பொய் சொல்ல வைக்க தூண்டியது. ஆனால் பொய் சொல்ல மனமில்லாமல் நடந்த அனைத்து விசயங்களையும், காயத்ரி சொன்ன பொய் சொல்லாதே என்ற விசயத்தையும் சொல்லி வைத்தேன்.  அதோடு காயத்ரி கொடுத்த போட்டோவையும் கொடுத்தேன்.


அதைப் பார்த்த அம்மா...


(தொடரும்)



Thursday 8 March 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 1

நான் முதன் முதலாக கல்லூரியில் சேர சென்றபோது எனது கண்ணில் ஒரு பெண் தென்பட்டாள். எத்தனையோ பேர் நடமாடிக் கொண்டிருக்க அவள் மட்டுமே எனது கண்ணில் பட்டாள். ஆனால் அவளிடம் எப்படி பேசுவது என்று ஒரு தயக்கம் மனதில் நிழல் ஆடியது. அருகில் அம்மாவும், அப்பாவும் வேறு இருந்தார்கள். 'கண்ணு எங்கே போகுது?' அம்மா என்னை பார்த்து கேட்டுவிட்டார். 'எங்கேயும் போகலை' என வேண்டா வெறுப்பாக பதில் சொன்னேன். 'ஒழுங்கா படி' என அம்மா அன்பு உத்தரவு போட்டார்.

எத்தனையோ சினிமாவைப் பார்த்து பார்த்து இந்த பார்வை எல்லாம் பழகி போய் இருந்தது. கல்லூரியின் முதல் நாள் வகுப்பு. அதே வகுப்பில் அன்று பார்த்த பெண் வந்து அமர்ந்தாள். எனக்கு மனதில் துள்ளல் அதிகம் ஆகியது. அவளையே பார்த்து கொண்டிருந்தேன். அவள் என்னைப் பார்க்க வேண்டும் எனும் நோக்கம் அதிகமாகவே இருந்தது. ஆனால் கழுதை என்னை பார்க்கவே இல்லை. கழுதை என்றால் அழகு என்று தமிழில் அர்த்தம் என எவரோ சொன்னது பிற்பாடுதான் தெரிந்தது.

என்னை நோக்கி வகுப்பு ஆசிரியர் ஒரு கேள்வியை கேட்டார் என்பதே எனது பக்கத்தில் இருந்த மாணவன் சொல்லித்தான் தெரியும். நானும் சினிமாவில் நடிக்கும் ஹீரோ போல ஆகிவிட்டேன் என நினைக்கும்போது மனதில் வெட்கத்தை விட கர்வம் அதிகமாகவே இருந்தது. முதல் வகுப்பிலேயே வகுப்பை விட்டு வெளியேற்றபட்டேன். கால் கடுக்க வகுப்பின் வெளியில் நின்று கொண்டிருந்தேன். அவள் முகம் தெரியவில்லை. இங்கும் அங்கும் அலைந்து பார்த்தேன், ஆனால் அவள் அமர்ந்து இருந்த இடம் கண்ணுக்கு தென்படவில்லை. ஏகலைவன் போல ஆகிவிட்டேன். வெளியில் நின்று பாடத்தை கற்று கொள்ளலாம் என பாடத்தை கேட்க ஆரம்பித்துவிட்டேன். அம்மா வேறு சொன்னது அடிவயிற்றில் புளியை கரைத்தது, அமிலத்தை வயிற்றில் வளர்த்தது.

அந்த வகுப்பு முடிந்ததும் வெளியில் வந்த ஆசிரியர் என்னை முறைத்து பார்த்துவிட்டு 'உள்ளே போ மூதேவி, இனிமே இப்படி நடந்துகிட்ட உங்க அப்பாவை கூப்பிட்டு வர வேண்டி இருக்கும்' என்றார். ஆனால் அவர் எவர் பெயரையும் அழைத்து பதிவு செய்யவே இல்லை. அப்பாவா, ரொம்ப வசதியாக போய்விட்டதே என நினைத்து கொண்டேன். அம்மா என்றால் அவ்வளவுதான். நான் தொலைந்தேன். இப்படி மனதில் சின்ன பயம் ஒட்டி கொண்டாலும் இதுபோன்ற திரில்லான விசயங்களை செய்ய ஒரு தில் வேண்டும்.

வகுப்புக்குள் சென்றதும் எல்லோரும் என்னை பார்த்து கெக்கே பிக்கே என சிரித்தார்கள். நானும் அவர்களுடன் சிரித்து வைத்தேன். மானம், ரோசம் இருப்பவர்களுக்குத்தான் சுர்ரென்று கோபம் வரும். எனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் அவள் மட்டும் சிரிக்காமல் இருந்தாள். அடுத்த பாட வகுப்புகளில் அவளையே பார்த்து கொண்டிருந்தேன். என்ன பாடம் நடத்தினார்கள் என எனக்கு தெரியாது ஆனால் மதியம் எனது நோட்டினை பார்த்தபோது அவளது அழகிய முகத்தை படங்களாக வரைந்து வைத்து இருந்தேன். கல்லூரி என நினைத்தால் இது ஒரு பள்ளிக்கூடம் போல் அல்லவா இருக்கிறது என மனதில் நொந்து கொண்டேன், ஆனால் எவருமே வரவு பதிவு செய்ய பெயரை கூப்பிடவே இல்லை. அவள் பெயர் தெரிய வாய்ப்பே இல்லாமல் போனது.

மதிய உணவு வேளை வந்தது. 'உன்கிட்ட பேசணும்' என்றாள் அந்த பெண். மனதில் திக்கென்று இருந்தது. எத்தனையோ கவிதைகளை யோசித்து வைத்தேன். ஆனால் ஒரே ஒரு கவிதை மட்டும் நினைவில் நின்றது. கல்லூரியில் நான் கற்றது கல்வி அல்ல, காதல்.

'எதுக்கு என்னை பார்த்துக்கிட்டே இருக்க' என்றாள். 'நான் உன்னைத்தான் பார்த்துக்கிட்டே இருந்தேன்னு உனக்கு எப்படி தெரியும், அப்படின்னா வேற எங்கயோ பார்க்கிற மாதிரி நீ என்னை பார்த்துகிட்டே இருந்தியா' என்றேன். 'இங்க பாரு, தேவையில்லாம பிரச்சினை பண்ணாத, நான் அப்பப்ப பார்க்கறப்ப என்னையவே பார்த்துட்டே இருந்த, பொய் சொல்லாத' என்றாள்.

திக்கென்று இருந்த மனம் திண்டாட தொடங்கியது. 'இனிமே உன்னை பார்க்கலை' என சொல்லிவிட்டு சாப்பிட சென்றேன். நாங்கள் இருவரும் பேசிய வார்த்தைகளில் அன்னியோன்யம் தெரிந்தது. நான் அவளை நீங்க என்றோ அவள் என்னை நீங்க என்றோ சொல்லவே இல்லை.

தனியாக இருந்த ஒரு மரத்தின் கீழே நான் தனியாக சென்று சாப்பிட அமர்ந்ததும் 'என்ன சாப்பாடு' என்றே அவள் வந்து அருகில் அமர்ந்தாள். 'முட்டை, கருவாடு குழம்பு உள்ள சாப்பாடு' என காட்டினேன். அவளும் சிக்கன் சாப்பாடு என காட்டினாள். காலையிலேயே சிக்கன் எல்லாம் உன் வீட்டுல சமைப்பாங்களா' என பெரிய கேள்வியை கேட்டு வைத்தேன். சமைக்க கூடாதா? என ஒரு சிக்கன் துண்டை எனக்கு வைத்தாள். 'உன்னை நான் பார்க்கறதை நீ தப்பா எடுத்துக்கலையே' என்றேன். 'அதைப் பத்தி எல்லாம் பேசாத, சாப்பிடு என்றாள். 'என்னிடம் இருந்த முட்டையை பாதியாக வெட்டி அவளுக்கு தந்தேன்'

'உன் பேரு என்ன?' என்றாள்.

என் பேரு முருகேசு என்றேன். நட்டு கழண்ட கேசு அப்படின்னு வைச்சி இருக்கலாம் என சிரித்தாள்.

'உன் பேரு என்ன' என்றேன்.

'சோகேசு' என்றாள். நான் சிரித்துவிட்டேன், எனக்கு புரை ஏறியது.

(தொடரும்)

Wednesday 7 March 2012

ஜீரோ எழுத்து -3 (ஒண்ணுமில்லை கோட்பாடு)

உலகில் எல்லாவகையான சிந்தனையாளர்கள் உண்டு. ஆனால் இவர்களை ஒரே மாதிரி சிந்திப்பவர்கள், வித்தியாசமாக சிந்திப்பவர்கள் என பிரித்து விடலாம். இதன் காரணமாகவே ஒருவரைப் பற்றி அவரா, அவர் அப்படித்தான் எனும் சிந்தனை கூட நம்மில் வந்துவிடுவது உண்டு. இப்படிப்பட்ட சிந்தனையில் வறட்டு சிந்தனை, தெய்வீகச் சிந்தனை, காதல் சிந்தனை, காம சிந்தனை, வேலை சிந்தனை, வெட்டிவேலை சிந்தனை என பல சிந்தனைகள் அடக்கம்.

நாம் இயங்கி கொண்டே இருக்க வேண்டும். நாம் ஏதும் செய்யாமல் இருந்தால் நமக்குள் விபரீத சிந்தனைகள் எல்லாம் எழும் என்பார்கள். ஏதும் செய்யாமல் எவரேனும் இருக்க இயலுமா? உறங்குதல் கூட ஒரு செயல் என ஆனபின் எப்படி ஏதும் செய்யாமல் எவராலும் இருக்க இயலும்? 'சும்மா இருப்பதே சுகம்' என்றார்கள்.

ஒரு நபரை சந்திக்கிறோம். நாம் அவரிடம் கேட்கிறோம். ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என! அவர் தனது பைகளில் எல்லாம் தேடிப்பார்த்துவிட்டு என்னிடம் ஒன்னும் இல்லை என சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். இப்பொழுது தன்னை எப்படி அவர் மறந்தார் எனும் கேள்வி எழ வேண்டும். ஒரு மனிதரை விடவா அவரிடம் இருக்கும் பொருள்கள் பெரிது? அவர் என்ன சொல்லி இருக்க வேண்டும், என்னைத் தவிர என்னிடம் வேறு பொருட்கள் இல்லை. ஆனால் எவரும் அப்படி சொல்வதில்லை. என்னிடம் ஒன்னும் இல்லை என சொல்வதன் மூலம் அவர் இருக்கிறார் எனும் புரிதல் தானாக வர வேண்டும் என்பதுதான் அந்த பதிலின் அர்த்தம். ஆனால் இந்த உலகம் பொருள்கள் இல்லாத ஒருவரை 'வெறும் பயல்' என்றுதான் பட்டம் சூட்டுகிறது.

எதற்கு இப்படி இருக்கிறாய்?

ஒண்ணுமில்லை.

ஏதாவது பிரச்சனையா?

ஒண்ணுமில்லை.

ஒண்ணுமே இல்லைன்னா எதுக்கு இப்படி இருக்கிறாய்?

அதான் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டேனே.

இப்படி ஒண்ணுமில்லை, மனிதர்களின் வாழ்வில் ஒரு பெரும் அங்கம் வகிக்கிறது. அறிவியல், தத்துவம், இறையியல் எல்லாம் இந்த ஒண்ணுமில்லை கோட்பாடு பற்றி என்ன சொல்கிறது?

அறிவியல் குறிப்பாக இயற்பியல் விதிப்படி இந்த உலகம் ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்து தொடங்கி ஒன்றுமே இல்லாத ஒன்றில் முடிவடையும் என்பதுதான். ஒன்றுமே இல்லாமல் எப்படி ஒன்று இருந்திட முடியும் எனும் போது 'அப்படித்தான், இப்போது என்ன செய்யப்போகிறாய்' என இயற்பியல் விதிகள் நமது சிந்தனைகளை கட்டுப்படுத்த எத்தனிக்கும்போது அங்கே 'ஒண்ணுமே சொல்ல இயலாமல்' போய்விடக்கூடிய வாய்ப்பு மிகவும் அதிகமே. ஆனால் இது ஒரு விதண்டாவாதம் என எவரும் நினைப்பதில்லை, ஏனெனில் இது அறிவியல்.

ஒரு முழு உருவம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். இப்போது அந்த உருவம் இருக்கிறது. இதற்கு முன்னர் அந்த உருவம் எங்கே இருந்தது? எங்கேயும் இல்லை என சொன்னால் நம்மால் நம்ப இயலுமா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது தத்துவம் சொல்லும் ஒண்ணுமில்லை. இப்பொழுது அதே உருவத்தை சின்னாபின்னாமாக்கி தூள் தூளாக்குவோம். நமது கண்ணுக்கே தென்படாத துகள்கள் இப்போது அந்த உருவம் ஆகிவிட்டது. அந்த உருவம் ஒன்றுமே இல்லையா எனில் ஆம் அப்படித்தான் ஆகிவிட்டது. துகள்கள், முடிந்தால் கண்டுபிடித்து கொள் என்கிறது தத்துவம். பிறக்கும் முன்னர் நாம் எப்படி இருந்தோமோ அப்படியே இறந்து பின்னர் ஆகிவிடுவோம் என மிக சர்வசாதாரணமாக சொல்லி செல்கிறது இந்த தத்துவம் சார்ந்த ஒண்ணுமில்லை. இதைத்தான் எதைக்கொண்டு வந்தாய், எதைக் கொண்டு செல்லப்போகிறாய் என பகவத் கீதை பேசுகிறது என ஒரு சிந்தனையாளர் எழுதினார்.

அடுத்ததாக இறையியல் சொல்லும் ஒண்ணுமில்லை. கடவுள் இருக்கிறார். எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார். எவரேனும் தெரிந்து கொண்டனரா என்றால் ஒண்ணுமில்லை என ஆகாயத்தை விளிக்கிறார்கள். இந்த ஒண்ணுமில்லை தன்னை தானே அறிந்து கொள்தல் என பொருள்கொண்டு அதில் இறைவனை அறிவது என்பதுதான் இறையியல் தத்துவம்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் வானத்தில் இருந்து பார்த்தால் பூமியில் உள்ள எல்லாம் ஒரே மாதிரிதான் தெரியுமாம்.  சமநிலை கோட்பாடு என்பதைத்தான் ஒண்ணுமில்லை கோட்பாடு அடைய துடிக்கிறது என்கிறது இந்த அறிவியல், தத்துவம், இறையியல் கோட்பாடுகள்.

சமநிலையை நோக்கிய ஒரு இழுவை என அறிவியலும், சமநிலையை நோக்கிய ஒரு பார்வை என தத்துவம், இறைவனுடன் கலந்து சமநிலை கொள்தல் என இறையியலும் ஒண்ணுமில்லை கோட்பாடு பற்றி குறிக்கிறது.

ஆனால் சம நிலையும், ஒண்ணுமில்லை என்பதும் வெவ்வேறானவை என்பதை இந்த மூன்று பார்வைகளும் பார்க்காமல் விட்டுவிட்டன. எப்படி ஒண்ணுமில்லை சமநிலை ஆக இயலும்? எல்லாம் இருப்பது கூட சமநிலை அடைய முடியும் அல்லவா.

ஒண்ணுமில்லை என்பதெல்லாம் நமது சிந்தனையை கட்டிப்போட சொன்ன ஒரு வழி. எனது தாய் சொன்ன ஒண்ணுமில்லை இன்னும் நினைவில் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. இயற்பியல் விதிகள் அனைத்தையும் தகர்த்துவிடத்தான் ஆசை. ஆனால் இயற்பியல் விதிகளே ஒன்னுமில்லாதபோது இல்லை என சொல்லியபின்னர், இல்லாத விதிகளை எப்படி தகர்ப்பது?

கந்தகம் நிறைந்த மண்ணில் இருந்துதான் உயிரினங்கள் தோன்றின என எவரேனும் சொன்னால் என்ன செய்வீர்கள்? அது உண்மையாக இருக்காது என ஒதுங்கி போய்விடுவீர்களா? அப்படி கந்தகம் நிறைந்த மண் எங்கே இருக்கிறது என தேடித்தான் போவீர்களா?

(தொடரும்)

Sunday 4 March 2012

இறைவனும் இறை உணர்வும் - 4

பகுதி - 3 

'என்ன திடீரென அமைதியாக இருக்கிறாய், உன்னை நினைத்து நாங்கள் வருத்தப்பட்டு கொண்டிருந்தோம்' என்றார் சக தொழிலாளி. 

'இறைவனிடம் மனம் லயிக்கும் போதெல்லாம் இவ்வாறு ஆகிவிடுவேன், எதற்கு இந்த வாழ்க்கை, எதற்கு இந்த போராட்டம், எதற்கு மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள், இந்த உலக வாழ்க்கையில் இருந்து எப்படி தனித்து கொள்தல், வாழ்வின் ஆதாரம், வாழ்க்கையின் இயல்பு, இருப்பு என்பதெல்லாம் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவேன், அதுதான் காரணம்' என்று நான் சொன்னதும் என்னை சக தொழிலாளி வித்தியாசமான பார்வையில் பார்த்தார். 

நான் சொன்னதில் அதுதான் உண்மையா? இந்த உண்மை குறித்தும், உண்மை வேறு, நம்பிக்கை வேறு என்பது குறித்தும் முன்னரே எழுதிவிட்டேன். மீண்டும் அதே இடத்துக்கு செல்ல விருப்பம் இல்லையெனினும் நான் மேற்சொன்ன வாக்கியங்களை திரும்பவும் யோசிக்கிறேன். நான் உண்மையிலே அதற்காகத்தான் அப்படி அமைதியாக இருந்தேனா? இல்லை என்று மட்டுமே தோன்றுகிறது. நான் எதற்காக அமைதியாக இருந்தேன் என்பது குறித்து என்ன சிந்திப்பது, ஆனால் அந்த நேரத்தில் வந்து விழுந்த வார்த்தைகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தன. சமயோசித வார்த்தைகள், எதற்கு பேசுகிறோம், பிறரிடம் பேசி அதன் மூலம் என்ன ஆதாயம் தேட நினைக்கிறோம் என்பதெல்லாம் நினைத்து கொண்டிருக்க சமீபத்தில் நண்பர் ஒருவர் மனப்புழுக்கத்தை இங்கே கொட்டி தீருங்கள் என ஒரு பொது மன்றத்தில் எழுதி வைக்க அதைப் படித்ததும் எனக்கு மூன்றே வாக்கியங்கள் எந்த ஒரு சிந்தனையும் இன்றி வந்து விழுந்தது. 

அற்றதெனினும் உற்றதாய் கேட்டு உவகை கொள்ளச் செய்வான் எம்பெருமான் 
சொற்றொடர் கொண்டு வருவோர் போவோரிடம் சொல்லித்திரிமின்
கற்றதனால் என்ன பயன், நன்று இல்லையெனின் அன்றே மற.

இந்த வாக்கியம் எழுதிய பின்னர் சில நாட்களாக யோசனை. எதற்கு இந்த வாக்கியம் வந்து விழுந்தது. மனிதர்கள் தங்கள் கவலைகளை, தங்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை, துரோகங்களை  பிறரிடம் பரிமாறிக்கொள்ளும் போது ஆறுதலான வார்த்தைகளும், நம்பிக்கை தரும் வார்த்தைகளும் கிடைக்கும் பட்சத்தில் மனிதர்கள் தங்கள் கவலைகளை தூக்கி எறிந்து விட்டு வாழ இயலும் என்கிற தொனியில் தானே நண்பர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இப்படி எல்லாம் சொல்ல வேண்டாம், எம்பெருமானிடம் சொல்லுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என சொல்வதன் அர்த்தம் என்ன எனும் சிந்தனை வலுப்பெற்றது. 

நமது மனது நமது கட்டுபாட்டில் இருக்க வேண்டும். நாம் ஒருவரே நம்மை ஆறுதல் படுத்த முடியும், பிறரது வார்த்தைகள் நமக்கு முள்ளாகவோ, மெத்தையாகவோ இருக்க நம்மால், நமது எண்ணத்தால்  மட்டுமே இயலும். நண்பர்கள் நமக்கு முக்கியம், உறவுகள் முக்கியம். ஆனால், தவறாக எடுத்து கொள்ளாதீர்கள், பெரும்பாலனவர்கள் ஏதாவது ஒரு சூழலில் பிறரை எள்ளி நகையாடும் மனப்போக்கைத்தான் கடைப்பிடித்து வருகிறோம். நகைச்சுவைக்காகவேனும் நாம் பிறரின் செயல்களை நம்மிடம் மதிப்பு கொடுத்து பேசியதை குறிப்பிட்டு கேலி பேசிவிடுவோம். இதனால் தான் இறைவன் என்பவர் இங்கே வருகிறார். 

அற்றதெனினும் உற்றதாய் கேட்டு! இங்கே எனக்கு இந்த இரண்டு வார்த்தைகளில் அற்றது என்பது என்ன பொருள் என தெரியாது. ஆனால் உற்றது என்பதற்கு அற்றது எதிர்பதமாக இருக்கலாம் எனும் ஒரு நினைவில் வந்து விழுந்த வார்த்தைகள் அது. அப்படி இறைவனிடம் நமது குறை நிறைகளை சொல்லும்போது நம்மை உவகை கொள்ள செய்வான். நாம் நம்மை தேற்றி கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு இதன் மூலம் வரும், வர வேண்டும். 'கடவுள் மீது பாரத்தை போட்டுவிடு' என எதற்கு சொன்னார்கள். அவன் நமது பாரத்தை எல்லாம் சுமப்பான் என்றா? இல்லவே இல்லை, நமது பாரம் நம்மில் இருந்து இறங்கி நாம் சுகமாகிவிடுவோம் என்பதை அறிந்தே அப்படி சொன்னார்கள். இது எத்தனை பேருக்கு உண்மையாக நடக்கிறதோ எனக்கு தெரியாது, ஆனால் இறைவனே கதி என நமது பணியை நாம் செய்து கொண்டிருப்பது ஆனந்தத்திலும் ஆனந்தம். 

முதன் முதலில் பேரின்பத் தழுவல்கள் கவிதையை எழுத நினைத்தபோது இப்படித்தான் முதல் கவிதை வரிகள் வந்து விழுந்தது. இப்போதும் யோசித்து பார்க்கிறேன், அந்த கவிதைகள் எல்லாம் எழுதிய தருணத்தில் எனது உணர்வுகள் எல்லாம் எப்படி இருந்தன. அதுதான் இறை உணர்வா என்றெலாம் யோசிக்க இயலவில்லை. 

பொய் சொல்ல நினைத்தபின் இதில்
உண்மை உரைந்திருக்கும் என ஒருவரேனும்
நினைத்து ரசிப்போர் இப்பாரினில் உளரேனெனில் 
உன்னையன்றி வேறு எவர் இறைவா? 

அடுத்து எழுதிய ஐந்தாம் கவிதையில் 

உன்புகழ் பாடிட எண்ண வரம்வேண்டுமென 
கேட்டிட வெகுளியாய் ஒதுங்கி 
படிதாண்டி வந்துன் அருட்கரம் பற்றியதும்
வேண்டுதல் ஏதுமில்லை இறை வா. 

இப்போது நினைத்தால் கூட கண்கள் கலங்குகிறது. எவர் என்னை இப்படியெல்லாம் எழுதச் சொன்னது. எனக்கு என்ன அப்போதைய இந்த எண்ணத் தேவை இருந்தது. மிகவும் மதிப்பிற்குரிய நண்பர் அப்போதே கேட்டார். என்னவா? எண்ணவா? இறை வா!  

இதெல்லாம் நடந்த காலம் என பார்த்தால் இரண்டு மூன்று வருடங்கள் முன்னர் என்றே நினைக்கிறேன். அதற்கு பின்னர் இந்த இறைவன் எனும் பற்றுதல் விட்டு சற்று விலகியது போன்றே ஒரு உணர்வு. உண்மையிலேயே ஒதுங்கியா இருந்தேன்? அல்லது அப்போதும் இதே மன நிலைதானா? அடுத்து சில நாட்கள் பின்னர் எழுதிய கவிதை இப்படித்தான் வந்து இருந்தது. 

பற்றிய கரம்தனை விட்டே தவித்து
சுற்றியே இடங்கள் தேடி கொற்றவன்
தன்புகழ் ஏற்றிட மக்கள் காப்பதுபோல் 
உன்புகழ் ஏற்றிட  ஏதுசெய்தாய்.  

இப்படியெல்லாம் இருந்து கொண்டிருக்க சக தொழிலாளியிடம் பேசிய தினத்தன்று இரவில் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பிற மதத்தினரில் இருந்து ஒரு சிலரை தேர்ந்தெடுத்து அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்க எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதுதான். அதில் சில முஸ்லீம்கள், சில கிருத்துவர்கள் என இருந்தார்கள். இதில் ஒரு முஸ்லீம்  தினமும் மசூதிக்கு சென்று ஐந்துமுறை தொழுகை செய்யக் கூடியவர். மற்றொரு முஸ்லீம்  இந்த தொழுகை எல்லாம் அத்தியாவசியம் இல்லை என கருதக்கூடியவர். இப்படி இருக்க அந்த தொழுகை செய்யக்கூடிய முஸ்லீம்தனை தங்களுடன் வெளியே செல்ல அழைக்கிறார்கள். அவர் செல்லும் இடத்தில் மசூதி எல்லாம் இல்லை. முதலில் மறுக்கிறார், எல்லாரும் வற்புறுத்துகிறார்கள். மற்றொரு முஸ்லீம் கூட 'நீ செய்வது சரியில்லை' என்கிறார். சரி என இறுதியாக தொழுகை செய்யும் முஸ்லீம் வெளியில் செல்ல சம்மதம் சொல்கிறார். ஒரு இடத்துக்கு செல்கிறார்கள். 

அங்கே ஒரு நிகழ்வு நடக்கிறது. அனைவரும் ஆங்காங்கே பேசி கொண்டிருக்க 'தொழுகை நடத்தும் முஸ்லீம்' ஒரு பாயை விரித்து அதன் மீது அமர்ந்து ஒரு திசையை நோக்கி தொழுகை செய்கிறார். இதைக் கண்ட ஒருவர் கண்கள் கலங்குகிறது. இறைவன் மீது எத்தனை அலாதிப் பிரியம் இருந்தால் தன்னுடன் இருப்பவர்களின் மீது மனம் நோகாமல், பயணத்திற்கும் வந்து அதே வேளையில் இறைவனை விடாமல் தொழும் அந்த மனிதரை கண்டு பலரும் நெகிழ்ந்து போகிறார்கள். ஒரு நண்பர் எழுதியது நினைவுக்கு வருகிறது. 'மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார்'. தொழுகை செய்யும் முஸ்லீமிடம் சொல்கிறார்கள். வாழ்க்கையில் பலர் தங்களது கொள்கையில் வறட்டு பிடிவாதம் கொண்டிருப்பதால் பிணக்கங்கள் ஏற்படுகிறது என. 'விட்டு கொடுப்பவர் கெட்டுப் போனதில்லை' என்கிறார்கள். இதே தொழுகை செய்யும் முஸ்லீமை எதற்கு அவர்கள் விட்டு கொடுத்திருக்க கூடாது எனும் எண்ணம் எழலாம். இருப்பினும் இதெல்லாம் தாண்டி அவர் கொண்டிருந்த இறைவன் மீதான பற்று என்னை நிறையவே சிந்திக்க வைத்துவிட்டது. மேலும் ஒரு நிகழ்வில் அந்த மனிதர் சொன்ன எல்லாதரப்பட்ட மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வில் நாம் தவறுகள் செய்வது வாடிக்கை, ஆனால் மன்னித்து நடந்து கொள்ளும் மனப்பான்மை நமக்கு வேண்டும், அதைத்தான் இறைவன் சொல்கிறார் என நினைவு கூர்ந்தது கண்டு இப்படி எல்லாரும் எல்லா நேரங்களிலும் நடந்து கொண்டால் எத்தனை சுகமாக இருக்கும் என்றே நினைக்க தோணியது. மேலும் நிறைய நிகழ்வுகள் மனதில் நிழலாடியது. மீண்டும் இறைவனிடம் நெருங்கி செல்ல இயலுமா என நினைத்து கொண்டிருக்கும்போதே உன்னுள்ளே தான் நான் எப்போதும் இருக்கிறேன் என மனம் கட்டி கொண்ட இறைவனை பற்றி என்ன என்னால் சொல்லிவிட முடியும். 

'தெளிவின் நிலைக்கு சென்றவன் தெளிதல் எளிதில்லை என திரும்பி விடுவானோ' எனும் அச்சம் இனி எனக்குத் தேவையில்லை என்றே கருதுகிறேன். 

(தொடரும்)




Friday 2 March 2012

தேடிக் கொண்ட விசயங்கள் - 5

ஆர் என் ஏ பற்றி குறிப்பிடுவது எனில் நமது எண்ணத்திற்கு வருவது புரதம். இந்த புரதம் நமது உடலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்த எண்ணற்ற புரதங்களை உருவாக்க அமினோஅமிலங்கள் உபயோகப்படுகின்றன. மொத்தம் இருபத்தி இரண்டு அமினோஅமிலங்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த இருபத்தி இரண்டு அமினோமிலங்களில் இருபது அமினோஅமிலங்கள் நமது மரபணு குறிப்புகள் மூலம் சேர்ந்து பலவிதமான புரதங்களை உருவாக்குகின்றன.  இதில் ஒன்பது அமினோ அமிலங்கள் நமது உடல் மூலம் உருவாக்க முடியாத காரணத்தால் அவை உணவு வகையில் இருந்து பெறப்படுகிறது. மற்ற அமினோ அமிலங்கள் நமது உடலில் உருவாக்கப்படுகிறது. உணவுகளில் இருந்து மூலமே பெறப்படும் அமினோ அமிலத்தை 'முக்கியத்துவம் வாய்ந்த அமினோ அமிலங்கள்' என அழைக்கிறார்கள்.

நமது உடலில் வினையூக்கிகள், ரிசெப்டார், சில ஹார்மோன்கள் எல்லாம் இந்த புரதத்தினால் ஆனவையே. அதனால் தான் இந்த புரதம் தனை உடலின் அடிப்படை மூலக்கூறுகள் என்று அழைக்கிறார்கள். அதன் காரணமாகவே புரத சத்து அதிகமுள்ள உணவினையும் நம்மை உட்கொள்ள சொல்கிறார்கள். புரத சத்து உணவை நாம் உண்ணும்போது அந்த புரதம்தனை நேரடியாக நமது செல்கள் உறிஞ்சி கொள்ள முடியாததால் அவை எல்லாம் சிறு அமினோ அமிலங்களாக புரோட்டியேஸ் எனப்படும் வினையூக்கியால் மாற்றப்பட்டு பின்னர் நமது உடல் நமக்கு தேவையான புரதத்தை மாற்றி கொள்கிறது.

அதிகப்படியான அமினோ அமிலங்கள் நமது உடலில் இருந்தாலும் அது ஆபத்துதான். அப்படி அதிகப்படியான அமினோ அமிலங்கள் நமது கல்லீரலில் சென்று அவை உயிர்வினைக்கு உட்பட்டு யூரியாவாக மாற்றம் கொள்கிறது.



இந்த யூரியா நமது உடலில் இருந்து சிறுநீரகம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றபடுகிறது. அப்படி வெளியேற்றபடாத பட்சத்தில் நமது உடலில் விஷத்தன்மை ஏற வாய்ப்பு உள்ளது. ஆர் என் ஏ பற்றி பேச ஆரம்பித்துவிட்டு புரதம், அமினோ அமிலங்கள் பற்றி கூறுவதற்கு காரணம் இருக்கிறது. இந்த அமினோ அமிலங்களை புரதத்தை உருவாக செய்வது ஆர் என் ஏ தான். என்னதான் டி என் ஏ தன்னிடம் எல்லா விசயங்களையும் சேமித்து வைத்தாலும் இந்த ஆர் என் ஏ க்கள் இல்லை என்றால் எந்த ஒரு வேலையும் நடக்காது. இதற்கு முக்கிய காரணம் டி என் ஏ வால் நமது செல்லின் கருவில் இருந்து வெளியேற முடியாது.

அப்படி கருவில் இருந்து வெளியேற முடியாவிட்டால் எப்படி தனக்குள் இருக்கும் சிந்தனைகளை டி என் ஏ வெளியே சொல்ல இயலும்? அதற்காக உருவானதுதான் ஆர் என் ஏ. இந்த புரதம் எல்லாம் ரிபோசொம்ஸ் எனும் செல்லின் ஒரு பகுதியில் நடைபெறுகிறது. இது கருவுக்கு வெளியே இருக்கிறது. எனவே இந்த ஆர் என் ஏவானது டி என் ஏ விடம் இருந்து விசயத்தை பெற்று கொண்டு அதை வெளியே கொண்டு வந்து புரதம் தனை உருவாக்க வழி செய்கிறது. ஒரு ஆர் என் ஏ மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை. ஆர் என் ஏக்கள் ஐந்து வகைப்படும்.

மேசன்ஜெர் ஆர் என் ஏ. இந்த ஆர் என் ஏ தான் டி என் ஏ விடம் இருந்து விசயத்தை பெரும் ஆர் என் ஏ.

டிரான்ஸ்பர் ஆர் என் ஏ. இந்த ஆர் என் ஏ அமினோ அமிலத்தை மெசஞ்சர் ஆர் என் ஏ வில் உள்ள மரபு குறிப்புகளுக்கு ஏற்ப கொண்டு வந்து சேர்ப்பவை.

ரிபோசொம் ஆர் என் ஏ. இவை புரதத்தை உருவாக்க உதவுபவை.

மைக்ரோ ஆர் என் ஏ. ஸ்மால் இண்டர்பிரோன் ஆர் என் ஏ எல்லாம் இருக்கின்றன.

ஆர் என் ஏக்கும் டி என் ஏக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. டி என் ஏ இரட்டை சங்கிலி. ஆர் என் ஏ ஒரு சங்கிலி. ஆர் என் ஏவில் தைமின் பதில் யுராசில் எனும் அமைப்பும், ரிபோஸ் எனும் சர்க்கரையும் உண்டு.

டி என் ஏ வில் உள்ள பல விசயங்களை புறந்தள்ளுவது இந்த ஆர் என் ஏ க்கள். இந்த ஆர் என் ஏ க்கள் முதன் முதலில் உருவாகி அதன் பின்னரே டி என் ஏ உருவாகி இருக்கலாம் என்றே கருதுகிறார்கள். ஆர் என் ஏ வைரஸ் உலகின் முதல் உயிரற்ற செல்.

எப்படி உயிரற்ற ஒன்றிலிருந்து உயிருள்ள ஒன்று உருவாக வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டவே இந்த வைரஸ் இன்னும் உலவி கொண்டிருக்கிறது. உடல் நோய் தருவது வைரஸ் எனும் கிருமி. அதை போலவே கணினி கட்டுப்பாட்டினை செயல் இழக்க செய்வது வைரஸ் என்றே அழைத்தார்கள்.

பாக்டீரியா தரும் நோயிற்கும், வைரஸ் தரும் நோயிற்கும் வித்தியாசம் இருக்கத்தான் இருக்கிறது. வைரஸ் பற்றிய கவிதை என்றோ எழுதியது.

ஒடுக்கப்பட்ட உயிர் 
அடக்கப்பட்ட உயிர் 
தனித்து இருந்தால் மயான நிலை 
ஒன்றினுள் நுழைந்தால் உயிர்த்த நிலை 

மண் துகள்களுக்கு 
விமோசனம் தந்து 
உயிரற்ற பொருளுக்கும் 
உயிர் கொண்ட பொருளுக்கும் 
பாலமும் பகையுமாய் 

ஒற்றை கயிறு ஆர் என் ஏ 
கொண்டு 
இரட்டை கயிறு டி என் ஏ 
திரித்து 
உலக உயிர்களின் வழியானாய் 
உலக உயிர்களுக்கு வலியுமானாய் 

உன்னில் தேடுகிறேன் 
எனக்கான இறைவனை!



(தொடரும்)