Showing posts with label ஆஸ்த்மா. Show all posts
Showing posts with label ஆஸ்த்மா. Show all posts

Wednesday 14 March 2012

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (4)

பகுதி 3 

நமது உடலில் அமைந்து இருக்கும் இந்த நுரையீரல், மூச்சுக்குழல் என்பதில் எல்லாம் இந்த ஆஸ்த்மா பிரச்சினை பண்ணுவதில்லை என்றில்லை. மூச்சுக்குழல் இரண்டாக பிரிவடைந்து செல்லும் அந்த இருபகுதிகளில் ஏற்படும் இறுக்கமே ஆஸ்த்மாவுக்கு அடிப்படை காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. நாம் சுவாசம் செய்வதற்கு நமது நரம்பு மண்டலம் உறுதுணையாக இருக்கிறது.

நன்றி: கூகிள்

நாம் உடற்பயிற்சி செய்யும்போதோ, ஓடும் போதோ நமது சுவாசம் அதிகரிப்பதற்கு நமது உடலுக்கு தேவையான ஆக்சிஜனை தரவேண்டியே இந்த சுவாசம் வெகுவேகமாக நடைபெறுகிறது. பெரும்பாலோனோர் மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் நமது உடலில் பல விசயங்களை கட்டுபாடுக்குள் கொண்டு வரலாம் என சித்தர்கள் குறிப்பில் உள்ளதாக கூறுகிறார்கள்.

நமது உடலில் உள்ள தசைகள், செல்கள் எல்லாவற்றிற்கும் மிகவும் சீரான முறையில் ஆக்சிஜன் சென்றாலே போதும். தசைகள், செல்கள் எல்லாம் நன்றாக வேலை செய்யும். யோகா பயிற்சி முறைகள் உடலை கட்டுப்பாடாக வைத்திருக்க உதவி புரியும் என்பதில் இருவேறு கருத்தில்லை. இந்த உடற்பயிற்சி குறித்து ஒருவர் நகைச்சுவையாக சொன்னார்.

அதோ அந்த பூங்காவில் நடந்து கொண்டு இருக்கிறார்களே அவர்கள் எல்லாம் இங்கே எப்படி வந்தார்கள் தெரியுமா? என்றார். 


தெரியவில்லை சொல்லுங்கள் என்றார் மற்றொருவர். 


இதோ இந்த கார்களில் தான் வந்தார்கள் என்றார். 

வாழ்க்கையில் சில விசயங்களை எதற்கு செய்கிறோம் என்கிற ஒரு அடிப்படை உணர்வே நமக்கு மறந்து போய்விடுகிறது. நன்றாக மூக்கு முக்க சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்தால் சரியாகிப் போய்விடும் என்பது. மருந்து மாத்திரை இருக்கிறதே என கண்டபடி வாழ்க்கையை அமைத்து கொள்வது. இதை எழுதும் நான் ஒன்றும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இப்படியெல்லாம் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என நினைத்தே பொழுதுகள் கரைந்து போய்விடுகின்றன.

இந்த ஆஸ்த்மா ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என மரபணுக்கள், அலர்ஜி சம்பந்தமான பொருட்கள் என குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொருவரின் நிலையம் வெவ்வேறாகவே இருக்கிறது. இன்னதுதான் என அறுதியிட்டு சொல்லமுடியாத நிலையும் கூட நிலவுகிறது. இது போன்ற இறுக்கத்தை தளர்த்தும் மருந்துகள் என சல்புடமோல் பெரிதாக உபயோகப்படுகிறது.

பிரணாயாமம் எனும் மூச்சு பயிற்சி முறை பெருமளவில் இந்தியாவில் பேசப்படுகிறது. இது குறித்து திருமூலர் எழுதிய பாடல்களை பார்க்கலாம்.
இந்த தலைப்பில் எழுதப்பட்ட பாடல்கள் என பதினான்கு பாடல்கள் தென்படுகின்றன. பாடல்கள் குறிப்பு எழுதப்பட்டே இருக்கிறது. நேரடியாக எதுவும் சொல்லாமல் இருப்பது போன்றே தென்படுகிறது. இதற்காக பிரத்தியோக தமிழை கற்று கொள்தல் அவசியமாகிறது.

பன்னிரண்டானை பகல் இரவுள்ளது
பன்னிரண்டானையை பாகன் அறிந்திலன்
பன்னிரண்டானையை     பாகன் அறிந்தபின்
பன்னிரண்டானைக்கு பகல் இரவு இல்லையே.

என்னது பன்னிரண்டு? இது குறித்து சிலர் சில விளக்கம் சொல்கிறார்கள். நமது உடலில் இருக்கும் காற்றினை எப்படி கையாள்வது என்பது குறித்தே இவரது சிந்தனையெல்லாம் இருக்கிறது.

புறப்படு புக்கு திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

ஹீமோக்ளோபின் எனும் புரதம் நமது உடலில் உள்ள ஆக்சிஜனை எல்லா செல்களுக்க்ம் எடுத்து செல்கிறது. அப்படிபட்ட ஆக்சிஹீமொக்லோபின் சிவப்பு நிறத்திலே இருக்கும். எப்போது ஆக்சிஜன் நீங்குகிறதோ சிறு பச்சை வண்ணம் மாறி விடும். எதற்கு இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் இங்கே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என பார்த்தால் வாய் வழியாக சுவாசித்து அந்த ஆக்சிஜன் எதற்கு ரத்தத்தில் சேரக்கூடாது எனும் சிந்தனை நமக்கு தேவைப்படுகிறது. மேலும் திருமூலர் சொல்கிறார்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றை பிடிக்குங் கணக்கறி வாளரில்லை
காற்றை பிடிக்குங் கணக்கறி வாளர்க்கு
கூற்றை யுதைக்குங் குறியது வாமே

இப்போது ஆஸ்த்மா உடையவர்கள் இந்த கணக்கை எல்லாம் அறிந்து கொண்டால் தீர்வாகி விடுமா என்றால் இதை சொல்வது மிகவும் கடினம். காற்றே உட்புக வழியின்றி போம்போது அங்கே எப்படி எதை பிடித்து நிறுத்துவது?

இந்த உலகில் ஆஸ்த்மாவினால் கிட்டத்தட்ட முன்னூறு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. கிட்டதட்ட 250,000 மக்கள் வருடந்தோறும் உலகில் இறக்கிறார்கள். இந்த ஆஸ்த்மாவிற்கு முறையான சிகிச்சைகள் இல்லையெனினும், மக்கள் தங்கள் வாழ்க்கை முறையின் மூலம் கட்டுபடுத்தலாம் எனவும் ஆய்வு சொல்கிறது.

ஆஸ்த்மாவிற்கான அறிகுறிகள் என மூச்சு இழப்பு, நெஞ்சில் இறுக்கம், தொடர் இருமல் போன்றவை ஆகும். இப்படி வரும்போது உடனடியாக மருந்தினை எடுத்துகொள்வது பயன் தரும். ஆனால் இது போன்ற சூழலில் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லதாகும்.

எந்த ஒரு நோயையும் உதாசீனபடுத்துவது நம்மில் பெரும் அபாயத்தை விளைவிக்கும். தெரிந்தே அந்த தவறை நாம் செய்து கொண்டே வருகிறோம்.

(தொடரும்)




Wednesday 19 October 2011

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (3)


சுவாசம் என்பது மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவது. இந்த சுவாசம் ஒரு இயந்திர தன்மையாக இருக்கும்பட்சத்தில் அதிகளவு உபயோகமில்லை. ஆனால் அதே வேளையில் இந்த சுவாசத்தினால் ஒரு வேதிவினை நடைபெறும்போதுதான் இதன் முக்கியத்துவம் மிகவும் மனதில் கொள்ளவேண்டியது. 

மூச்சை அடக்கி வாழும் வாழ்க்கை என்பது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே சாத்தியம். தாவரங்கள் கரியமில வாயுவை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது. நாமோ ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளியிடுகிறோம். 

தாவரத்தின் சுவாசம் இலையின் மூலமாகவே நடைபெறுகிறது. இலையில் இருக்கும் காற்றிடங்கள் இதற்கு உருதுணையாகின்றன. ஸ்டாமோடா எனப்படும் சிறு துளையானது தவாரங்கள் சுவாசிக்க உதவுகின்றன. 

ஒவ்வொரு உயிர் வாழ் இனமும் தனக்குள் வெவ்வேறு உடல் அமைப்பை வைத்துக்கொண்டு சுவாசித்துக் கொண்டு இருக்கின்றன. நமக்கு மூச்சுக்குழல், கிளைக்குழல், சுவாசப்பை என நுரையீரல் அமைப்புடன் சுவாசிக்கின்றோம். இந்த மூச்சுக்குழல், கிளைக்குழல், சுவாசப்பை என பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளே ஆஸ்த்மா போன்ற மூச்சு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் காரணமாகும். 

இந்த அமைப்பானது பஞ்சு போன்று மெருதுவாக இருக்கும். சுவாசப்பைகள் மிகவும் சின்னதாக காணப்படும். இந்த சுவாசப்பைகள் வாயுக்கள் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன. சுவாசப்பைகள் சிறிதாக இருப்பதினாலும், ரத்த நாளங்கள் அதிகளவில் வந்து செல்வதாலும் வாயுக்கள் பரிமாற்றம் மிகவும் சிறப்பாக செய்து கொள்கின்றன. இந்த நுரையீரலும், இருதயமும் இணைந்து பணியாற்றுவதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் தேவையான ஆக்சிஜன் பரிமாற்றமும், கரியமில வாயு வெளியேற்றமும் நடைபெறுகிறது. 

இந்த நுரையீரல் அமைப்பில் இருக்கும் திசுக்கள், நார், சுரக்கும் காரணிகள் என இந்த நுரையீரலை பாதுகாத்து கொள்ளும் வகையில் பல விசயங்கள் அமையப்பெற்று இருக்கின்றன. பொதுவாகவே நமது உடலில் இருக்கும் திசுக்களுக்கு தம்மை தாமே சரி செய்து கொள்ளும் செயல்பாடுகள் உண்டு. சரிசெய்யும் அளவிற்கு விட மிஞ்சும்போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன. 

நமது உடலில் ஏதேனும் உபாதைகள் ஏற்பட்டால் நமது ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் குழுவில் உள்ள நியுட்ரோபில், பெசொபில், எசிநோபில், மேக்ரோபெஜ், மோனோசைட், லிம்போசைட் என்பவை பெருமளவில் உதவிபுரிகின்றன. இவையே நமது உடலில் உள்ள பிரச்சனைகளை சரிகட்டும் நிபுணர்கள். 

இப்படி நாம் இந்த நுரையீரல் அமைப்புடன் சுவாசித்து கொண்டிருக்க, மீன்களோ வேறு சுவாச அமைப்பு பெற்று இருக்கிறது. அவைகளுக்கு இந்த நுரையீரல் அமைப்பு கிடையாது. அதற்கு பதிலாக செதில்கள் மூலம் சுவாசம் அதுவும் நீரில் மட்டுமே சுவாசிக்கும் தன்மை உடையவனாக இருக்கின்றன. தவளைகள் தனது தோள்களின் மூலம் நீரிலும், சிறிய நுரையீரல் அமைப்புடன் நிலையத்திலும் சுவாசிக்கும் தன்மை உடையவனாக இருக்கின்றன. எறும்புகள் போன்றவை எல்லாம் இது எல்லாம் எதற்கு என நேரடியாக காற்றினை தனது செல்களுக்கே அனுப்பி வைத்து விடுகின்றன. இப்படி ஒவ்வொரு உயிரினமும் இப்படி இருக்க ஆஸ்த்மா மனித குலத்திற்கே மட்டும் தானா பிரச்சினை? 

பிரணாயமம் பற்றி நமது முன்னோர்கள் கூறியதை நாம் இப்போது நினைவு கூர்வோம். நமது சுற்றுப்புறம் மிகவும் சுத்தமானதாகவும், நமது சுவாசம் சீராகவும் இருந்தால் நெடுங்காலம் வாழலாம் என்பது அவர்களின் கணிப்பு. அது முற்றிலும் உண்மை. 

விஷம்தனை உண்டு அதிக நாள் உயிர் வாழ்வோர் உண்டோ? சுற்றுப்புற மாசுவினால் நாம் விஷத்தை உள்ளிழுத்து வெளியிட்டு கொண்டிருக்கிறோம்.
நாம் எப்படி மூச்சு விடுகிறோம் என்பதை நாம் உன்னிப்பாக கவனித்து பார்த்தல் அதுவே ஒரு தியானத்திற்கு சமானம். குறிப்பிட்ட நேரத்தில் வலது நாசி புறமாகவும், குறிப்பிட்ட நேரத்தில் இடது நாசி புறமாகவும், சில நேரங்களில் இரண்டு நாசிகள் வழியாக சுவாசம் செய்கிறோம் என எவரேனும் நம்மிடம் வந்து சொன்னால் நமக்கு வேலை அற்றவர்களின் வீண் வேலை என சொல்லத்தான் தோன்றும். ஆனால் எதற்கும் ஒரு நாள் இதற்கென நேரம் செலவிட்டுப் பார்த்தால் சொல்வதில் உள்ள சூட்சுமம் தெரியும். 

நாசியில் இருந்து தொடங்கும் இந்த பயணம் நுரையீரல் வரை சென்று அங்கிருந்து வேறு பயணம் தொடங்குகிறது. நாம் உட்கொள்ளும் உணவானது மூச்சுக்குழல் வழி சென்றிடாது ஒரு மூடி போன்ற அமைப்பு நம்மை பாதுகாத்து வருகிறது. ஏதேனும் மூச்சுக்குழல் வழியாக சென்றுவிட்டால் புரையேறிவிட்டது என இருமல் மூலமாக நாம் அந்த பொருளை வெளியேற்றி விடுகிறோம். இதற்கு எல்லாம் காரணமாக இருப்பது நரம்பியல் மண்டலம் தான். இந்த நரம்பியல் மண்டலம் எல்லா தகவல்களையும் சேகரித்து என்ன செய்வது என்ன செய்யக்கூடாது என ஒரு திட்டவட்டமட்டமாக பணிபுரிந்து வருகிறது. 

நமக்கு பயம் ஏற்பட்டாலோ அல்லது உடற்பயிற்சி செய்தாலோ நமது சுவாசிக்கும் தன்மை அதிகரிக்கிறது. இதற்கு காரணம் நமது திசுக்களுக்கு அதிக அளவில் தேவைப்படும் ஆக்சிஜன். அதோடு மட்டுமல்லாமல் இருதயம் இதற்கென வேகமாக துடிக்கவும் செய்கிறது. அதற்கேற்றாற்போல் நமது சுவாசத்தன்மையும் ஈடு கொடுக்கிறது. 

இப்படிப்பட்ட சகல சௌபாக்கியங்களையும் கொண்டுள்ள நமது நுரையீரல் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தான் என்ன? மூச்சு திணறல் மூலம் அவஸ்தைப்படும் நபர்களின் அனுபவங்கள் சொல்லும் கதைகள் பல. இந்த விசயத்தை குறித்த ஆராய்ச்சிகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன. சுவாசம் இல்லாவிட்டால் சுக வாசம் ஏது?






Wednesday 23 March 2011

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (2)

காற்று வளி மண்டலம். பூமிக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் எனலாம். வாயுக்கள் சில கிரகங்களில் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அந்த வாயுக்கள் எல்லாம் உயிர்கள் தோன்ற வழி வகுக்கவில்லை என எண்ணும்போது ஆச்சர்யம் மட்டுமே மிஞ்சுகிறது. அறிவியல் சொல்படி இந்த பூமி உருவானபோது இங்கே ஆக்சிஜன் தனியாக இல்லை. ஏதோ ஒரு தனிமத்துடன் இணைந்தவண்ணமே இருந்து இருக்கிறது. கரியமில வாயு தன்மையில் இந்த ஆக்சிஜன் கலந்து இருக்கிறது. மேலும்  நீர் கோமெட்டினால் பூமியில் கொட்டப்பட்டு இருக்கிறது. அந்த நீரில் ஆக்சிஜன் ஹைட்ரஜனுடன் கலந்து இருக்கிறது.

தனியே தனிமமாக இல்லாத ஆக்சிஜன், ஆனால் உயிர்கள் எப்படி உருவானது என பார்க்கும்போது பாக்டீரியாவை சொல்கிறார்கள். இவ்வுலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் (?)சுவாசிக்கின்றன. ஏதோ ஒரு வகையில் அதன் உடல் அமைப்புகள் அவ்வாறு இருக்கிறது. இந்த சுவாசத்தின் முக்கிய பணி என்னவெனில் அந்த உயிரினத்திற்கு தேவையான சக்தியை வழங்குவது மட்டுமே.

தானாக உணவை தயாரிக்க தெரிந்த பாக்டீரியாக்கள், தாவரங்கள் எல்லாம் சுவாசம் செய்து கொண்டுதான் இருக்கின்றன. மூச்சை உள்ளிழுத்து விடுதல் மூலம் மட்டும் ஒரு உயிரினம் வாழ்ந்து விடுவதில்லை. செல்களில் இருக்கும் மைட்டோகான்றியாவில் நடைபெறும் வேதிவினையே ஒரு உயிரினம் வாழ  வழி வகுக்கிறது.

உள்ளிழுக்கப்பட்ட காற்றில் இருக்கும் வாயுக்கள் அளவும், வெளிவிடப்படும் காற்றில் இருக்கும் வாயுக்கள் அளவும், ஏன் ஈரப்பதமும் வித்தியாசபடுகிறது.

உள்ளிழுக்கும் காற்றில் இருக்கும் வாயுக்கள் அளவு ஆக்சிஜன் 21% , நைட்ரஜன் 78% கார்பன் ஆக்சைடு 0.04% ஆர்கன் மற்றும் இதர வாயுக்கள் 1% அதோடு குறைந்த ஈரப்பதம் என அறியப்படுகிறது. அதுவே வெளியிடப்படும் காற்றில் உள்ள வாயுக்கள் அளவு ஆக்சிஜன் 16% , நைட்ரஜன் 78% கார்பன் ஆக்சைடு 4% ஆர்கன் மற்றும் இதர வாயுக்கள் 1% அதோடு அதிக  ஈரப்பதம் என அறியப்படுகிறது. 

இந்த நைட்ரஜன் நீரில் மூழ்கி செல்பவர்களுக்கு ஆஸ்த்மா வரவழைக்கும் சக்தி உடையதாக குறிப்பிடுகிறார்கள். 

(தொடரும்)