Tuesday 13 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 29

சுபத்ராவை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று அவளது வீட்டிற்கு சென்றேன். வாடகை வீடு கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனை கடினமாக இல்லை. சுபத்ரா பற்றி கேட்டதும் மாடியினை காட்டினார்கள். பின்னர் சிறிது நேரம் யோசித்துவிட்டு அவர்களே சென்று சுபத்ராவை அழைத்து வந்தார்கள். என்னைப் பார்த்ததும் சுபத்ரா முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. என்னோட நண்பர் தான் என அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு என்னை அவள் தங்கி இருக்கும் மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

''சுபா, என் மீது கோபமா?''

''இல்லைடா, நான் உன் மேல சின்ன வயசில இருந்து ஆசை வைச்சது என்னமோ உண்மைதான். அது காதல்னு இன்னைக்கு வரைக்கும் நம்புறேன். இந்த ஊருக்கு வந்ததே உன்னைப் பார்க்கணும் பேசணும்னு தான். ஆனால் எல்லாம் தலைகீழா இருக்கு. கோரன் மூலம் உன்னை மிரட்டி கூட பார்த்தேன். எப்ப என்னை நீ வீட்டை விட்டு வெளியே அனுப்புனியோ அப்பவே நீ வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்டா.

முயற்சி செஞ்சிட்டு முடியலைன்னு செத்துரக்கூடாதுனு எங்கம்மா அடிக்கடி சொல்லும். ஆனா உன்கிட்ட என்னால முயற்சி கூட செய்ய முடியலை. ஏன்டா என்னை நீ எப்படி மறந்த? எத்தனை ஆசையா என்னோட பழகின பேசின, எப்படிடா உன்னால முடிஞ்சது. இனிமே உன் வழியில நான் குறுக்கே வரலை. நீ என்னைப் பார்க்கறது பேசறது எல்லாம் நிறுத்திக்கோ. இதுவே நம்ம கடைசி சந்திப்பா இருக்கட்டும். நான் இனிமே உன்கூட பேசவோ பழகவோ மாட்டேன்''

''சுபா''

''போடா, எத்தனை நம்பிக்கையா நான் இருந்தேன்னு உனக்கு எங்கடா தெரியப்போகுது. கோரன் உன்னை கொல்வானு சொன்னப்ப என்னால அதை தாங்கிக்க முடியலை. கிளம்பிப் போடா, அவளோட  நிம்மதியா இரு''

''சுபா, என்னை மன்னிச்சிரு, நான் நீ இப்படி நினைப்ப பழகுவேணு நான் பழகலை. ஆனா உனக்குள்ள இந்த காதல் எல்லாம் எனக்குத் தெரியாது. அப்படியே தெரிஞ்சி இருந்தாலும் உன்னோட குணத்திற்கு நான் பொருந்த மாட்டேன்''

''கிளம்பிப் போடா''

''அதில்லை சுபா''

''போடான்னு சொல்றேன்ல''

அதுக்கு மேல் அங்கிருக்க கூடாது என வீடு வந்து சேர்ந்தேன். காயத்ரியிடம் எல்லா விசயங்களையும் சொன்ன பின்னர் அவளுக்குள் உண்டான நிம்மதியை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

கர்மவினை என்பது எல்லாம் என்னவென இதுவரை கண்டு கொண்டதும் இல்லை. எதற்கு எது நடக்கிறது என இதுவரை புரிந்த பாடில்லை. அன்று இரவு சற்று நிம்மதியாக தூங்கமுடிந்தது.

மாதங்கள் கடந்து போவதில் தாமதம் ஏற்படவில்லை. கல்லூரி வாழ்க்கை வேகமாக கடந்து போய்க்கொண்டு இருந்தது. இந்த ஒரு வருடம் எவ்வித துப்பறியும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. கல்லூரி முடியும் காலம் வந்தது. அனைவரும் பிரிந்து சென்றனர். நானும் காயத்ரியும் மேற்கொண்டு படிப்பது குறித்து யோசித்துக் கொண்டு இருந்தோம்.

எந்த ஒரு விசயமும் அப்படியே முடிந்து போவது இல்லை என்பது போல அன்று இரவு கோரன் எனது வீட்டிற்கு வந்து இருந்தான்.  இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவனை வீட்டிற்குள் அழைப்பதா வேண்டாமா என யோசித்துக் கொண்டு இருந்தபோது எனது அம்மா அவனை உள்ளே வாப்பா என அழைத்து அமரச் சொன்னார்.

''என்னடா முருகேசு எப்படி இருக்க''

''நல்லா இருக்கேன் கோரன், நீ இதுவரை எங்க போன''

''இப்போ நாங்க கரியநேந்தல் போய்ட்டோம். அங்கே ஒரு சின்ன பிசினஸ் வைச்சி நடத்திட்டு இருக்கோம். உன்னைப் பார்க்கணும்னு தோணிச்சி அதான் வந்தேன். சுபத்ரா எங்கே போயிட்டா''

''அவ சொந்த ஊருக்குப் போய்ட்டா, இங்கே வந்த வேலை முடிஞ்சதுனு கிளம்பிட்டா''

''அவளுக்கு போன் பண்ணினேன், எடுக்கலை. நம்பர் மாத்திட்டாளா''

''ஆமா''

''அவ நம்பர் கொடு''

''புது நம்பர் என்கிட்டே இல்லை, அவளோட பழக வேணாம்னு சொல்லிட்டா''

அதற்குள் என் அம்மா அவனுக்கு பலகாரங்கள், காபி கொண்டு வந்து வைத்தார். அவனும் பலகாரங்கள் சாப்பிட்டுக்கொண்டே காபி குடித்து முடித்தான்.

''இங்கே வேணும்னா தங்கிக்கப்பா''

''இல்லைம்மா, அவனுக்கு வேற வேலை இருக்கு, அவன் போகணும்''

''இல்லைடா முருகேசு, இங்கே தங்கிட்டுதான் நான் காலையில போகணும்''

''எங்கே தங்கப்போற''

''தெரிஞ்சவங்க வீட்டில''

''இங்கே தங்குப்பா''

''வேணாம்மா''

''சரிடா, நான் கிளம்பறேன்''

கோரன் அங்கிருந்து கிளம்பினான். எதற்கு வந்தான், எதற்கு சுபத்ராவை விசாரித்தான் என எனக்குப் புரியவே இல்லை. அவனை பின்தொடர நினைத்தேன். பிறகு வேணாம் என விட்டுவிட்டேன்.

அதிகாலையில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. புதிய எண் கண்டு திடுக்கிட்டேன். சிறிது யோசனைக்குப் பிறகு எடுத்தேன்.

''கோரனை  நான் கொன்னுட்டேன்டா''

''சுபா''

''நேத்து உன் வீட்டுக்கு வந்துட்டு என்னைத் தேடி எங்க ஊருக்கு வந்துட்டான், என்னை கொலை பண்ண முயற்சி செஞ்சான். நான் அவனை கொலை பண்ணிட்டேன்''

''என்ன சொல்ற சுபா, போலிஸ் கேசு''

''நீ பேசமா இருடா''

சுபத்ரா இணைப்பைத் துண்டித்தாள். அவளது எண்ணுக்கு அழைத்தபோது அவள் எடுக்கவே இல்லை. தகவல் எதற்கு சொல்ல வேண்டும்.

சில மணி நேரத்தில் எனது வீட்டு வாசலில் காவல் அதிகாரிகள் வந்து நின்றனர்.

''நீதானே முருகேசு''

கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.

(தொடரும்) 

Sunday 11 October 2015

வாசகி ஒருவரின் தொலைக்கப்பட்ட தேடல்கள் குறித்த விமர்சனம்


இங்கே இந்த இணைப்பில் வாசகி ஒருவரின் தொலைக்கப்பட்ட தேடல்கள் குறித்த விமர்சனம்    படிக்கவும்

நிறைய நபர்களிடம் இந்த சிறுகதை தொகுப்பை கொடுத்து இருந்தேன். இந்த சிறுகதை தொகுப்பு வெளியிட்டபின் முதல் முதலில் அது குறித்த விமர்சனம் எழுதித் தந்த வாசகி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த விமர்சனம் எனது எழுத்தை பண்படுத்த உதவும் வகையில் அமைந்து இருப்பது வெகு சிறப்பு. அடடா விமர்சனத்திற்கே விமர்சனம் எழுதுவது நல்லது இல்லை என்பதால் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.

Wednesday 7 October 2015

நமது திண்ணை அக்டோபர் மாத இணைய இதழ்

முதல் பக்கத்தைப் பார்த்ததும் பளிச்சென மனதில் ஒட்டிக்கொண்டு ஒருவித சந்தோசம் தந்துவிடுகிறது நமது திண்ணை. பொதுவாக குழந்தைகள் சுவற்றில் கிறுக்கி விளையாடுவார்கள். சுதந்திரமான வீட்டில் குழந்தைகளால் வரையப்பட்ட ஏகப்பட்ட கோடுகள் இருக்கும். ஆனால் இப்படி ஓவியம் வரையலாம் என்பது ஒரு சில குழந்தைக்களுக்கேத்  தெரியும். அருகில் இருக்கும் செடி கொடிகளால் அந்த மரம் உயிர் பெற்று இருப்பது போல உங்கள் கண்ணுக்குத் தெரிந்தால் நீங்கள் தான் ஓவியத்தில் ஜீவன் காண்பவர்கள். இலைகள், மலர்கள், பட்டாம்பூச்சிகள், பறவைகள். வெகு பிரமாதம். ஓவியர்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு. வாழ்த்துக்கள் ஸ்ருதி. 

எமி அவர்களின் தாயகம் தேடும் உயிர் ஒரு நீண்ட வலியை சொல்லும் கவிதை. இந்த கவிதையில் வரும் ஒவ்வொரு விஷயமும் நிராகரிக்கப்பட்ட மனிதர்களின் ஓலமாகவே இருக்கும். புலம் பெயர் மக்களில் பல வகையினர் உண்டு. இந்த கவிதையில் சொல்லப்படும் புலம் பெயர் மக்களின் அவலம் இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது. என்னதான் இருந்தாலும் சொந்த ஊர் நாடு போல எதுவுமே இருப்பது இல்லை. பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்கிறோம் என்பதோடு அந்த புலம் பெயர் மனிதர்களின் வாழ்க்கைச் சூழலை கவிதை மனவலியுடன்  முடித்து வைக்கிறது.

ரிஸ்வான் அவர்களின் அன்புள்ள அப்பா.  பெருக்குவேன் காகிதங்கள் தினம், பணமெனும் காகிதம் வேண்டி. கல்வி நல்லதொரு வாழ்வைத் தரும் என சொல்லி மகள் மீதான எதிர்பார்ப்புடன் குப்பை பெருக்கினும் கோபுரம் தொடு என அருமையாக இருக்கிறது.

சுஷீமா அம்மா அவர்களின் ஸ்ரீராமானுஜர் தொடர் இத்தனை வேகமாக முடியும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சைவ மன்னன் மட்டும் கொஞ்சம் சுதாரித்து இருந்து இருந்தால் ஸ்ரீராமானுஜர் இன்று இத்தனை அளவுக்கு பேசப்பட்டு இருக்கமாட்டாரோ என்னவோ! ஆனால் நல்ல மனிதர்களுக்கு எவரேனும் உதவியாக வந்துவிடுவார்கள் என்பதுதான் காலம் காலமாக கண்டு வரும் செய்தி. கண்கள் இழப்பது, உயிர் துறப்பது என்பதெல்லாம் நல்லதொரு விசயத்திற்காக முன்னர் மனிதர்கள் துணிந்து செய்தார்கள் என அறிய முடிகிறது. பிற சமயங்களை வெல்வது அன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கலாம். ஓம் நமோ நாராயணா என்றே சொன்னால் போதும் என வாழ்ந்தவர் புகழ் இன்னும் பெருகிக் கொண்டே இருக்கிறது. பல விசயங்களை அறிந்து கொள்ளும் வண்ணம் அருமையான தொடர் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

எம்சி அவர்களின் நண்பன் கதை ஒருவரது  சின்ன கவனக்குறைவு பிறருக்கு எத்தனை பாதிப்பு உண்டாக்கும் என சோகம் சொல்லி முடித்த கதை.

விமலா பாட்டி அவர்களின் காலக்கண்ணாடி கடிதம் பற்றிய அருமையான நினைவலைகள் எனது கடிதம் எழுதிய காலங்களை, இன்றும்  கடிதம் எழுதும் அப்பா குறித்து அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. அவர் சொன்னது போல கடிதங்கள் எல்லாம் தொகுத்து வைத்து இருந்தால் ஒரு காவியமே எழுதி இருக்கலாம் தான்.

பரிசல் அவர்களின் வீட்டைக் காலி பண்ணிப்பார், அட்வான்ஸ் கேட்டுப் பார் என்பது வீட்டின் உரிமையாளரே அட்வான்சை காலி பண்ணிப்பார் என முடிந்து இருப்பது பெரும் சோகம். பணத்திற்கு ஆசைப்பட்டு நல்ல நல்ல குணங்களை மனிதர்கள் தொலைத்து விடுகிறார்கள். முன்பணம் என்பது ஒரு பாதுகாப்புக்கு எனத் தெரியாமல் அதை செலவழித்துவிடும் உரிமையாளர்கள் பலர் இதுபோல நடந்து கொள்வது உண்டு. பலர் நிலையை பிரதிபலிக்கிறது.

அவளதிகாரம், மகளதிகாரம் படங்கள் எல்லாம் அருமை.

பெண்களின் அவல நிலையைச் சொல்லும் ஒரு சோகமான கவிதை மனோவின் ஆண்  திமிர் . மனைவியை கொடுமைபடுத்தும் கணவன்  இறந்து போகவேணும் என எந்த ஒரு மனைவியும் வேண்டுவதில்லை, மாறாக தானே  இறந்து போகிறார்கள்.

சேப்பாக்கம் தொகுதி எம் எல் ஏ திரு அன்பழகன் நேர்காணல்! ஒரு மக்கள் பிரதிநிதியிடம் சினிமா குறித்து நேர்காணல் தொடங்கியதும் என்ன இது என்றே தோணியது. தமிழ் சமூகம் சினிமாவால் தான் சீரழிந்தது என்று இல்லை, சினிமாவுக்கு முன்னரே சீரழிந்த தமிழ் சமூகம் தான் அது. சில கேள்விகளுக்குப் பின்னர் அவரது அரசியல் வாழ்வு பற்றி இருந்தது. மக்களுக்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள், வாரத்தில் எத்தனை முறை தொகுதிக்கு  செல்கிறீர்கள், அடிக்கடி ட்விட்டரில் தென்படுகிறீர்களே உங்கள் தொகுதியின்  தெருக்களில் அடிக்கடி தென்படுவது உண்டா, உங்கள் தொகுதி மக்களுக்கு நாட்டின் மீதான அக்கறை என்ன, குற்றங்கள் குறைந்து இருக்கிறதா என பேட்டி எடுத்து இருந்தால் கலகலப்பாக இருந்து இருக்கும். ஆசிரியரின் முதல் நேர் காணல் என்பதால் அதுவும் தமிழகத்தில் இந்த முதல்வர், அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் என்றால் அளவு கடந்த மரியாதை என்பதால் அதுவும் வீட்டிற்கு ஆட்டோ வரும் என்பதால் சற்று கவனம் அவசியம் தான்.

அட யானைக்கு 38 பெயர்கள். பிரமாதம்.

உமா  க்ருஷ் அவர்களின் பாடல் பரவசம்  காதல் கவிதைகள் படித்திடும் நேரம் உண்மையிலேயே பிறைசூடனின் மிகவும் அற்புதமான  பாடல். ஒரு பாடலுடன் நம் மனம் ஒன்றிவிடாது போனால் அந்த பாடலின் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுவதில்லை. ஒரு பாடல் கேட்போம் அத்தோடு போய்விடுவோம் ஆனால் அதில் உள்ள நுணுக்கங்கள் எல்லாம் ரசிப்பதற்கு தனி மனநிலை வேண்டும். இசைஞானி இசை என்றால் தரம் பிரித்து விடலாம் எனுமளவுக்கு அவரது இசை இருப்பது என்னவோ உண்மைதான். பல இசைக்கருவிகளை கொண்டு இசைக்கப்பட்ட பாடல் என்றாலும் அத்தனையும் சரியாக இணைந்து போக வைப்பதே ஒரு இசையமைப்பளாரின் வெற்றி. இவரது எழுத்தின் மூலமே  அந்த பாடலின் உன்னதம்தனை, இசையின் மேன்மையை நாம் அறிந்து கொள்ளச்  செய்து இருப்பதுதான் வெகு சிறப்பு. அதோடு காட்சிப்படுத்தலை அதில் உள்ள வேறுபாட்டை அழகாக விவரித்து இருக்கிறார். அருமை.


நண்பர் ரவி அவர்களின் சமையல். உக்காரை. எங்குதான் பெயர் கண்டுபிடிப்பு செய்வார்களோ? கேள்விபட்டதே இல்லை. வெறும் கடலைப்பருப்பு வைத்து ஒரு உணவு. வித்தியாசமாக இருக்கிறது. சட்னிக்கு பதில் இப்படியும் செய்து சாப்பிடலாம்தான்.

ஆசிரியர் மூலம் சுந்தரராஜன் அவர்கள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. நமது திண்ணை இணைய இதழ் மட்டுமல்ல இனிய இதழ்.

அழகிய வடிவமைப்பு, எண்  அழுத்தினால் பக்கம் செல்லும் நேர்த்தி எனத் தொடர்ந்து அனைவரையும் உற்சாகம் பண்ணிக்கொண்டு இருக்கும் இந்த இணைய இதழ் புதிய இணையதளம் உருவாக்க இருக்கிறது. உங்களால் முடிந்த நிதியுதவியை நமது திண்ணை ஆசிரியர் அவர்களிடம் விபரங்கள் கேட்டு செய்யுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். 

Tuesday 6 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 28

அடுத்த தினம் காவல் நிலையத்திற்கு சென்று கோரன் பற்றி விசாரித்தேன். அவர்கள் கோரன் வெளியில் சென்றுவிட்டதாக கூறியது பெரும் வருத்தம் தந்தது. அவன் மீது வழக்குப் பதிவு செய்யாமல் என்ன காரியம் பண்ணி இருக்கிறீர்கள் என சத்தம் போட்டேன். என் மீது வழக்குப் பதிவு செய்து விடுவதாக மிரட்டினார்கள்.

எங்கே இந்த கோரன் போயிருப்பான் என அவனது வீட்டிற்கு சென்று பார்த்தால் அங்கே கோரன் இருந்தான். ஆனால் நான் மறைந்து கொண்டேன். அவனது வீட்டிற்குள் சிலர் சென்றார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே சிரித்த முகத்தோடு வந்தார்கள். கோரன் வாசல் வரை வந்து அவர்களை அனுப்பி வைத்தான். இந்த வயதில் இவனுக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது என்றே யோசித்துக் கொண்டு இருந்தேன். ஒருவேளை சுபத்ரா சொன்னது போல பரிணாமத்தின் கர்மவினையோ.

வீட்டிற்குள் சென்ற கோரன் கையில் ஒரு பையுடன் வெளியேறினான். என்னை எவரும் பார்த்துவிடக்கூடாது என்பது போல நடந்து கொண்டேன். அவனை மெதுவாக பின் தொடர ஆரம்பித்தேன். நிச்சயம் இவன் சுபத்ராவை நோக்கித்தான் செல்ல வேண்டும் என எண்ணியது தவறாக முடிந்தது. அவன் கரியனேந்தல் செல்லும் பேருந்தில் ஏறினான். அவனை பின் தொடர்வதா வேண்டாமா என எண்ணியபடி நின்றேன். காயத்ரியின் தந்தையை இப்படித்தான் தொடர்ந்தது நினைவில் வந்து ஆடியது. ஒன்றும் தெரியாதது போல அவன் இருந்த பேருந்து பக்கமாக நடந்தேன். அவன் அமர்ந்து இருந்த சன்னல் பக்கம் சென்று அழைத்தேன்.

''கோரன்''

பெயர் கேட்டதும் திடுக்கிட்டான். என்னைப் பார்த்தவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

''கோரன், கோரன்''

அவன் என்னைத் தவிர்க்க நினைப்பது புரிந்தது. பேருந்தில் ஏறி அவனருகே சென்றேன்.

''கோரன் எங்கே போகிறாய்?''

இருக்கையில் இருந்து எழுந்தவன் வேகமாக பேருந்தில் இருந்து இறங்கி சில பேருந்துகளில் ஏறி இறங்கினான். எனது கண்ணில் இருந்து எப்படியோ மறைந்தான். அங்கே காத்து இருப்பதில் அர்த்தமில்லை என பேருந்து நிலையம் விட்டு வெளியேறினேன். கோரன் மிகவும் புதிராகவே தெரிந்தான்.

வீட்டிற்கு சென்றபோது காயத்ரி மிகவும் கோபமாக இருந்தாள் .

''என்ன விசயம் காயூ''

''எங்க போன''

''கோரன் என்ன பண்றானு பாக்கப் போனேன்''

''அந்த சனியனை விட்டுத் தொலைக்க முடியாதா''

''அவன் சுபாவை கொல்லப்போறேனு  சொல்லி இருந்தான்''

''அதான் சுபா அவனை கொல்வேனு சொன்னால''

''சுபா எங்கே''

''லைப்ரெரி போய்  இருக்கா''

''சாப்பிட்டாளா''

''சாப்பிட்டுத்தான் போனாள்''

''அம்மா எங்கே''

''கோவிலுக்குப் போனாங்க, இன்னும் வரலை''

''நீ போகலை''

''நீ எங்கே போனேனு சொல்லாம போயிட்ட, நீ வந்தா சாப்பாடு எடுத்து வைக்க சொல்லிட்டு அத்தைப் போயிட்டாங்க''

''நானா சாப்பிடமாட்டேனா''

''எனக்கு உன் மேல கோபம் தீரலை''

''சுபா எதுவும் சொன்னாளா''

''சொன்னா, உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா. உன்னை அவளுக்கு  விட்டுத்தரும்படி சொன்னா, எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது''

''விளையாட்டுக்கு பேசி இருப்பா''

''முருகேசு உனக்கு எது விளையாட்டு, எது உண்மைனு தெரியாதா, அவ ரொம்ப சீரியசா பேசறா, எனக்கு பயமா இருக்கு''

''என்ன பயம்''

''என்னை கொலை பண்ணிட்டா''

''என்ன பேசற நீ, அவ அப்படிபட்ட  பொண்ணு இல்ல''

''இல்லை முருகேசு, நீ அவளை வேறு வீடு பாக்கச் சொல்லு''

''எதுக்கு இப்படி பயப்படற, சொன்னா கேளு காயூ, அவ ஒன்னும் பண்ணமாட்டா''

அம்மா கோவிலில் இருந்து வந்தார்கள்.

''என்னடா சாப்பிட்டியா?''

''இல்லைம்மா''

''காயத்ரி, அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்கலை''

''நான் சாப்பிட்டுக்கிறேன்மா, இப்போதான் வந்தேன்''

''அந்த பொண்ணு இங்கேதான் தங்கப்போறா''

''ஆமாம்மா, ஏன்?''

''சும்மா கேட்டேன்டா''

''காயூ சொன்னாளா, எதுவும் சுபா சொன்னாளா ?''

''இல்லையே, நீ போய்  சாப்பிடு, காயத்ரி சாப்பாடு எடுத்து வைம்மா''

சாப்பாடு எடுத்து வைக்கும்போது காயத்ரி சுபத்ராவை வெளியே போகச் சொல்லு என்பதை பலமுறை சொல்லிவிட்டாள்.

''காயூ, எல்லாம் கர்மவினை''

''ஆமா, எது நடக்கணுமோ அதுதான் நடக்கும்னு பேசிட்டு இரு''

காயத்ரி அழாத குறைதான். எனக்கு சுபத்ராவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மனம் இல்லை. கோரன் பற்றிய அச்சம் எனக்கு நிறையவே இருந்தது.
மதியம்தான் சுபத்ரா வீட்டிற்கு வந்தாள்.

''டேய், ஒரு புது வீடு வாடகைக்கு எடுத்துட்டேன். ஒரு ரூம் மட்டும் தரேன்னு சொல்லி இருக்காங்க. லைப்ரெரி பக்கம் தான். அப்படியே இந்த ரெங்கநாதனை நல்லா திட்டிட்டு வந்துட்டேன். எல்லாத்தையும் என் வீட்டுல சொல்லிட்டான். நீ ஒண்ணும்  பரிணாமம் எல்லாம் ஆராய்ச்சி பண்ண வேணாம் வீட்டுக்கு வானு சொல்லிட்டாங்க. அடம் பிடிச்சி இன்னும் ஆறு மாசம்னு சொல்லிட்டு வந்து இருக்கேன். ஏன்டா  இந்த ஆம்பளை பசங்களுக்கு அறிவே இருக்காதா? அந்த கோரன் மடையன் எனக்கு போன் பண்ணி இன்னும் ஆறு மாசம் கழிச்சி உன்னை கொல்றேன்னு சொல்றான். உன் அட்ரஸ் தாடா இப்பவே வரேன் உன்னை கொல்றேன்னு சொன்னதும் போன  வைச்சிட்டான்''

சுபத்ரா மளமளவென பேசியது கண்டு என் அம்மா அப்படியே ஓரிடத்தில் தூணில் சாய்ந்து கொண்டார்கள். காயத்ரிக்கு முகமெல்லாம் சந்தோசம்.

''என்னடா ஒன்னும் பேசமாட்டேங்கிற, டேய் நான் உன்கூட இருந்தா இவ இருக்காளே அவளுக்கு இருப்பு கொள்ளாது, அதான் நான் வெளியே போய் உன்னை தொடர்ந்து காதல் பண்ணப் போறேன். உன் அம்மா கூட பாவம் ரொம்பவே இடிஞ்சி போயிட்டாங்க, இல்லையாம்மா''

''இந்த சின்ன வயசுல இப்படி இருக்கியே''

''எப்படி இருக்கேன், இல்லை எப்படி இருக்கேன், உங்க மகனுக்கு ஏத்த ஜோடி நான் தான், இவ யாரு? என்னை நீங்க மறந்து போயிட்டீங்களோ''

''ஏதோ  வீடு பாத்து இருக்கேன்னு சொன்னயில, போம்மா''

அம்மா அப்படி சொன்னதும் சுபத்ரா தனது பெட்டியை எடுத்துக் கொண்டு வரேன்டா என என்னிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியேறினாள். சுபத்ராவை இருக்கச் சொல்ல எனக்கு வாய்ப்பு இன்றி போனது.

''அம்மா, அவ ஒண்ணுமே இல்லாத விஷயத்தை பெரிசு படுத்துறாமா''

''நீ பேசாம போடா, அவ எவ்வளவு திமிரா பேசுறா, காலையில காயத்ரியை ஓங்கி அடிக்கப் போயிட்டா. நான் அவளை நல்லா திட்டினேன் அதான் எங்கேயோ போயி வீடு பாத்து வந்துருக்கா''

''அம்மா அவ பாவம்மா, காயூ எதுக்கு இதை என்கிட்டே சொல்லலை''

''பாவம் அவ மேல தான் இருக்கும், அதான் சொல்லலை''

''காயூ என்ன நீ இப்படி பேசற''

''அவளை கண்டிச்சி வை''

''நீங்க ரெண்டு பேரும்  அடிச்சிக்க வேணாம்''

பல தினங்களாக சுபத்ராவை நாங்கள் பார்க்கவே இல்லை. ஒருமுறை கோரன் வீட்டுக்குப் போனபோது வேறு ஒரு குடும்பம் அங்கே குடி வந்து இருந்தது. விசாரித்துப் பார்த்ததில் வீட்டை விலைக்கு வாங்கி விட்டதாக சொன்னார்கள்.

இந்த உலகில் என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது என இதுவரை எவருமே சரியாக சொன்னது இல்லை.

(தொடரும்)









Thursday 1 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 27

''சுபாவை கூப்பிடுடா''

''வேண்டாம் கோரன்''

''நீ அவளை வரச் சொல்லிட்டுப் போடா''

''கோரன் நீ ஏன்டா இப்படி நடந்துக்கிற''

''நான் சொன்னதை செய்டா''

சுபத்ராவை  அழைத்தேன்.சுபத்ரா வெளியே வந்தாள். நான் அங்கிருந்து மறைந்து கொண்டேன். கோரனைப்  பார்த்த சுபத்ரா நேராக வந்து கோரன் எதிர்பார்க்காத வண்ணம் மூர்க்கமாகத் தாக்கினாள். கோரன் சுதாரிக்கும் முன்னர் நான் அவன் மீது கல் எடுத்து எறிந்தேன். நிலைகுலைந்து விழுந்தான் கோரன். எவ்வித சப்தமும் போடாமலே கோரன் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

சுபத்ரா போலீசிற்கு தகவல் சொல்லிவிட்டு காத்து இருந்தாள். கோரனின் கால் கைகளை கட்டிப்போட்டேன். அதோடு நானும் உடன் இருக்க வேண்டியதாகி விட்டது. ரங்கநாதன், சுபலட்சுமிக்கு  இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. சுபத்ராவை நாளையே வீட்டை காலி பண்ணி வேறு எங்காவது தங்கிக் கொள்ளச் சொன்னார்கள். சுபத்ரா மறுப்பேதும் சொல்லாமல் சரி என சொல்லிவிட்டாள்.

போலிஸ் உடனடியாக வந்தது. சுபத்ரா எல்லா விபரங்களையும் சொன்னதும் கோரனை போலிஸ் அழைத்துச் சென்றது. என்னையும் சுபத்ராவையும் காலையில் காவல் நிலையத்திற்கு  வரச் சொன்னார்கள்.

''டேய் நான் உன்னோட இப்போ உன் வீட்டுக்கு வரட்டுமா?''

''சுபா''

''அவங்கதான் இங்க என்னை தங்க வேணாம்னு சொல்லிட்டாங்க, அங்க வந்து தங்கிட்டு நாளை வேற இடம் போயிக்கிறேன்''

''சரி சுபா''

சுபத்ரா தனது பெட்டியை எடுத்துக் கொண்டு என்னுடன் நடக்கலானாள். ரங்கநாதன் சுபத்ராவை தடுக்கவே இல்லை. காயத்ரி அக்காவாவது தடுப்பார் என்றால் அதுவும் இல்லை.

''சுபா, என்னை காதலிக்கிறது உண்மையா?''

''ஆமாடா, என்னடா சந்தேகமா?''

''சுபா, நான் காயூவை காதலிக்கிறேன், ப்ளீஸ் எங்க வாழ்க்கையை குழப்பாதே''

''உன்னை என்னை காதலிக்க சொன்னேனாடா''

''எத்தனை பிரச்சினை?''

''சரி செய்துடலாம்டா''

''சரி செய்துரலாம்னு சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான், எதையும் சரி செய்யமுடியாது''

பேசிக்கொண்டே வீடு வந்து  சேர்ந்தோம். சுபத்ராவை கண்டதும் காயத்ரி குழப்பம் அடைந்தாள். அம்மாவிடம் சொன்னதும் அம்மா சரி இருக்கட்டும் என்றார். அப்பா என்னை தனியாக அழைத்து என்னப்பா தேவையில்லாத பிரச்சினைகளோட வாழுற, படிக்கிறதுக்கு பாரு என அறிவுரை சொல்லி அனுப்பினார்.

காயத்ரியின் அறையில் தான் சுபத்ரா தூங்க வேண்டி இருந்தது. காலையில் எழுந்து கிளம்பியபோது காயத்ரிதான் சுபத்ரா இங்கேயே இருக்கட்டும் என்றாள். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என் அம்மாவும், அப்பாவும் காயத்ரி சொன்னாள் என்பதற்காக சம்மதம் சொன்னார்கள்.

நாங்கள் மூவரும் காவல் நிலையம் செல்ல இருந்தோம். அப்பாவும் உடன் வருகிறேன் என்றதால் நால்வரும் சென்றோம். அப்பாவுக்கு அங்கிருந்த காவல் அதிகாரியை தெரியும் என்பதால் எவ்வித பிரச்சினை இன்றி எல்லாம் முடிந்தது. ஆனால் கோரனை வெளியில் விட இயலாது என்றார் அவர்.

நாளிதழ் ஒன்றை பார்த்தபோது கோரன் சொன்னது போலவே ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விசயம் வெளி வந்து இருந்தது. அதை காவல் அதிகாரியிடம் தந்து கோரன் தான் இந்த கொலையை செய்தான் என நான் சொன்னதும் என்னை போகச் சொன்னவர் அவர்கள் அதைப் பார்த்துக் கொள்வதாக கூறினார்கள்.

சுபத்ரா காயத்ரியின்  நெருங்கிய தோழி ஆனது ஆச்சரியம். அன்று கல்லூரியில் எப்படி ஒரு மனிதன் கொடூர எண்ணம் கொண்டு உருவாகிறான் என பாடம் எடுத்தார் எனக்குப் பிடித்த ஆசிரியர்.

''சார், கோரன் ஒரு கொலைகாரனாக மாறியதற்கு என்ன காரணம்?''

''கொலைகாரனா?''

மொத்த வகுப்பும் என்னை பயத்துடன் பார்த்தது.

''நமது கல்லூரி ஆசிரியர் ஒருவரை கோரன் கொலை செய்து தற்போது ஜெயிலில் இருக்கிறான் சார். அவன் நிறை புத்திக்கூர்மை கொண்டவன் ஆனால் எதற்கு இப்படி நடந்து கொண்டான் என நினைக்கும்போது இந்த கொடூர எண்ணம் அவனுள் எப்படி வந்து இருக்கக் கூடும் சார்''

''நீ அதுகுறித்து இங்கு பேசுவது தேவை இல்லை, கொடூர எண்ணம் கோபத்தின் வெளிப்பாடு, இன்று வேறு பாடம் பார்க்கலாம்''

கோரன் பற்றிய பேச்சு கல்லூரி முழுக்க பரவியது. பலர் பரிதாபம் கொண்டார்கள். மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு சென்றபோது சுபத்ராவைப் பார்த்தோம். சுபத்ராவிடம் கோரன் பற்றி கேட்டபோது ஒரே வரியில் சொன்னாள்.

''பரிணாமத்தின் கர்ம வினை''

''கர்மவினையா?''

''ஆமாடா, நமது மூளை வளர வளர நமக்கு நம்மை பாதுகாக்க வேண்டி எண்ணம் வந்தது, அதன் விளைவாக எதிரிகளை உருவாக்கிக் கொண்டோம்''

காயத்ரி குறுக்கிட்டாள்.

''சிலருக்கு அன்புள்ளமே அவர்களுக்கு பெரும் எதிரி''

நான் காயத்ரி என்ன அர்த்தத்தில் சொன்னாள் என புரிந்து கொள்ள முடியவில்லை. சுபத்ராதான் சொன்னாள்.

''கோரன் நிச்சயம் வெளியே வருவான், அவன் ஒரு ஜீனியஸ், ஆனால் முட்டாள்தனமா நடந்துக்குவான்''

''அவன் வெளியே வந்தா உன்னை கொலை பண்ணிருவான்''

''இல்லைடா, நான் அவனை கொலை பண்ணுவேன்''

காயத்ரி பயம் கொண்டாள்.

(தொடரும்)