Friday 30 November 2012

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 2

அஷ்டமாசித்திகளில் முதலான அணுவைப் போல் சிறியது ஆதல் என்பது எவ்வகையில் சாத்தியம் என எவரேனும் பரிசோதனையில் இறங்கி இருக்கிறார்களா என்றால்புராண கதைகளில் படித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் உண்மையிலே இது சாத்தியமா என்றால் இதுவரை நமது காலகட்டத்தில் எவரேனும் இப்படி முயற்சித்து வெற்றி கண்டு இருக்கிறார்களா என்றால் இல்லையென்றே உறுதியாக சொல்லலாம்.

ஆனால் புராண காலத்து கதாபாத்திரங்கள் அல்லது வாழ்ந்த ஜீவன்கள் எல்லாம் முனிவர்களின் சாபத்தினால் அணிமா நிலையை அடைந்து இருக்கின்றன என்றே குறிப்பு இருக்கிறது. அகலிகை சிறு கல்லாக மாறுதல் கூட ஒருவகையில் அணிமாவை சார்ந்ததுதான். கண்ணுக்கே உட்படாத அணிமா வகை என்பது ஒருவகை பண்புதான்.

அணிமா குறித்து சொல்லும்போதே அகிலாண்டீஸ்வரி பற்றி தெரிந்து கொள்வோம். எத்தனையோ முறை ஸ்ரீரங்கம் சென்ற போதெல்லாம் இந்த திருவானைக்கோவிலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயம் சென்று பார்க்க வேண்டும் என தோணவே இல்லை. இதுவரை இந்த ஆலயத்திற்கு சென்றதும் இல்லை. அட்லாண்டீசும் லேமூரியாவும் என்ற கதை எழுதிய பொது கூட திருவானைக்கோவிலில் உள்ள நூலகம் என எழுதினேனே தவிர இந்த ஆலயம் பற்றி எழுதவில்லை.மேலும் சில தருணங்களில் திருவானைக்கோவில் வழியாக செல்லாமல் மாம்பழம் சாலை வழியாக ஸ்ரீரங்கம் சென்றது உண்டு. சிறுவயது காலம் தொட்டே இந்த ஸ்ரீரங்கநாதர் எனக்கு மிகவும் பழக்கமாகிப் போனவர்  என இருந்தாலும் திருவானைக்கோவிலில் உள்ள ஜம்புகேஸ்வரர் மட்டும் எனக்கு பரிச்சயமே இல்லை.  சிவ வழிபாடு எல்லாம் செய்யக்கூடாது என்று இல்லை, ஏனோ இந்த அகிலாண்டீஸ்வரியும் ஜம்புகேஸ்வரரும் எனக்கு தெரியாமலே போனது.

அகிலாண்டீஸ்வரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்தபோது ஜம்புகேஸ்வரர் கண்ணுக்குத் தெரிகிறார். யார் இந்த அகிலாண்டீஸ்வரி? பொதுவாகவே இந்து புராணங்களில் ஒரே ஒரு தெய்வம் தான் பல உருவங்களில் பல பெயர்களில் அவதாரமோ அல்லது பூமியில் பிறப்போ எடுத்து வருவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம் தான். அவர்களின் பூமியில் எழுந்தருளல் குறித்து மிகவும் அற்புதமாகவே எழுதி வைத்து இருக்கிறார்கள். இவை எல்லாம் சத்தியமாகவே நடந்த செயலா என்றால் எனக்குத் தெரியாது. ஆனால் திருவானைக்கோவிலில் உள்ள ஆலயம் அதற்கு சான்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆலயத்திற்கும் என வரலாறும், அதோடு சம்பந்தமான புராண கதைகளும் உண்டு.

சிவன், உலகம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என கயிலையில் தவம் இருக்கிறார். சிவன் நினைத்தால் இந்த உலகினை எப்போதுமே நன்றாக வைத்து இருக்க முடியும், அதாவது தீயவைகள் எல்லாம் அழித்துவிட்டால் நல்லவை மட்டும்தானே மிஞ்சும். ஆனால் அந்த தீயவைகளை கூட நல்லவைகளாக மாற்ற வேண்டி சிவன் தவம் இருக்கிறார். சிவனின் தவத்தைக் கண்டு,  பார்வதி சிவனை நோக்கி பரிகாசம் செய்கிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை கைலாயிலத்தில் இருந்து பூமிக்கு சென்று தவம் மேற்கொள்ளுமாறு கட்டளை  என்ற சாபம் இடுகிறார். கணவன் மனைவிக்குள் இருக்கும் ஊடல் எல்லாம் சிவன், பார்வதியின் வாழ்க்கையில் மிகவும் அதிகமாகவே உண்டு. பார்வதி இவ்வுலக சுபிட்சத்திற்கு நான் தவம் இருக்கிறேன் என சொல்லிக்கொண்டு பூமியில் அகிலாண்டீஸ்வரியாக அவதாரம் மேற்கொள்கிறார்.

அப்பொழுது அவர் தெரிவு செய்த இடம் தான் காடுகள் நிறைந்த திருவானைக்கோவில். அங்கே அவர் ஒரு நாவல் மரத்தின் கீழே தனது தவத்தை மேற்கொள்கிறார். பதிபக்தி என சொல்வார்கள். தன்னை தனியாக அனுப்பிவிட்டாரே என கோபம் எதுவும் சொல்லாமல் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து லிங்கம் செய்து வழிபடுகிறார். மணலில் கயிறு திரிப்பது சாத்தியமற்ற செயலாக இருந்தாலும் இன்றைய அறிவியல் விசயங்களில் மணலுடன் சில வேதியல் பொருட்களை சேர்த்தால் மணலில் கயிறு  திரித்தல் சாத்தியம் தான். அன்றைய கால கட்டத்தில் தனது தவ வலிமையால் பார்வதி தண்ணீரில் லிங்கம் செய்து வழிபட்டது சாத்தியமாகவே இருக்க கூடும். தண்ணீர் பனிக்கட்டியான பின்னர் அதை சிவலிங்கமாக செய்வது மிகவும் சாத்தியமே. இதனை அப்பு லிங்கம் என்றே குறிப்பிடுகிறார்கள். 

அகிலாண்டீஸ்வரியின் தவத்தை மெச்சிய சிவன் ஒருவழியாக கடைசியில் அவருக்கு தரிசனம் தருகிறார். அப்பொழுது சிவன் ஒரு ஆசிரியராக, அகிலாண்டீஸ்வரி ஒரு மாணவியாக இருந்து ஞானம்தனை சிவனிடம் இருந்து பெற்று கொள்கிறார். அதனால் தான் இந்த திருவானைக்கோவிலில் சிவனுக்கும் அகிலாண்டீஸ்வரிக்கும் திருக்கல்யாணம் கூட நடைபெறுவதில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

திருவானைக்கோவில் பெயர் வரலாறு கூட மிகவும் சுவராஸ்யம் தான். சிவனின் பக்தர்களான மலையவன் மற்றும் புஷ்பதந்தா என்பவர்கள் கைய்லாயிலத்தில் வசித்து வந்தார்கள். இவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். இதனால் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொண்டு புஷ்பந்தாவை பூமியில் ஒரு யானையாக உருவெடுக்க சபதம் போடா, புஷ்ப்தந்தா மலையவனை ஒரு சிலந்தியாக உருவேடுக்குமாறு சபதம் இடுகிறார்கள். இங்கே அணிமாவும், மகிமாவும் சாத்தியமாகிறது. மகிமாவின் மகிமை பற்றி அடுத்தத் தொடரில் பார்க்கலாம். பூமிக்கு உருமாறி வந்தாலும் ஜம்புகேஸ்வரம் என்ற நகரை அடைந்து அங்கே சிவனை பூஜிக்கிறார்கள். அங்கேயும் இவர்களின் சண்டை ஓயவில்லை. சிலந்தியானது நாவல் மர இலைகள் சிவலிங்கம் மேல் விழாமலிருக்க சிலந்தி வலை கட்டுகிறது. ஆனால் யானையோ அது லிங்கத்திற்கு மீதான அழுக்கு என அழித்து கொண்டு தினமும் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்கிறது. இதைக் கண்டு கோபம் கொண்ட சிலந்தி யானையை கொன்றுவிடுகிறது. இவர்களது பக்தியினை மெச்சி சிவன் இவர்கள் இருவருக்கும் மீண்டும் பழைய நிலையை கைலாயித்தில் தந்துவிடுகிறார்.

மலையவன் அடுத்தொரு பிறப்பில் கோச்செங்கண்ணன் எனும் அரசராக பிறப்பு எடுக்கிறார். செங்கண்ணன் எனும் பெயர் அவரது கண்கள் பிறப்பிலேயே சிவப்பாக இருந்ததால் வந்தது என்கிறது குறிப்பு. அதாவது ஜோசியர் குறித்த நேரத்தில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை மாபெரும் சிறப்பு அடையும் என்ற நிலை. ஆனால் குழந்தை பிறக்கும் தருணம் முன்கூட்டியே வந்துவிட தாய் ஜோசியர் குறித்த நேரம் வரும் வரை தன்னை தலைகீழாக தொங்கவிடச் சொல்கிறார். அப்படி தலைகீழாக தொங்கவிட்டதால் குழந்தையின் கண்கள் சிவந்து போனது என்கிறது குறிப்பு. அறிவியல் சிந்தனை அன்றே கோலோச்சிதான் இருக்கிறது. கோ என்றால் அரசு, அரசர். கோச்செங்கண்ணன் பல சிவ ஆலயங்களை கட்டுகிறார். அப்படி கட்டிய ஒரு பஞ்சபூத ஆலயங்களில் ஒன்றானதுதான் திருவானைக்கோவில். இந்த ஆலயத்தில் ஒரு சிறு யானை கூட நுழையக் கூடாது என பழைய பகையை மனதில் வைத்து ஆலயம் எழுப்பினான் என சொல்வது உண்டு. ஆனாலும் யானைக்கு பெயர் வந்தது. திரு என்றால் சிறப்பு. சிவனை வழிபட்ட யானை. ஜம்பு அதாவது நாவல் மரங்கள் நினைந்த காடு. திருவானைக்கா என்பதுதான் முன்னர் இருந்தது. பின்னர் திருவானைக்கோவில் என மருவியது என்கிறார்கள்.

உலகம் செழிக்க பார்வதியே அகிலாண்டீஸ்வரியாக வந்து தவம் இருந்து கூட சிலந்தி யானையை கொன்றதாகத்தான் வரலாறு குறிக்கிறது. தெய்வபக்தி நிறைந்த இருவர் ஒருவர் மீது ஒருவர் கொண்ட பொறாமை எண்ணம் இருவரையும் அழிக்கிறது, இருப்பினும் தெய்வபக்தியால் யோகநிலை கைகூடுகிறது. ஆனால் இது தவறான ஒன்று. காதல், அன்பு, தெய்வீகம் என சொல்லிக்கொண்டு மற்றதை அழித்தல் முறை கேடான செயல். பற்று கொண்டு இருத்தல் என்பது பற்றற்று இருத்தல் போல் இருப்பது இல்லை.

நல்ல விசயங்கள் மனதில் இல்லாது போகும்போது நாம் கூனிக்குறுகி போகிறோம். இதுதான் உண்மையான அணிமா. எண்ணங்கள் சிறுத்து போதல் எனலாம்.

(தொடரும்)


Wednesday 28 November 2012

கடவுள் எதற்கு வேறுவிதமாக நினைக்கிறார்?

பக்தா என்ற குரல் கேட்டதும் எனக்கு பயமாகவே போய்விட்டது. இத்தனை நாட்கள் நிம்மதி இன்று தொலைந்து போய்விடுமோ என்ற அச்சத்தில் தூக்கத்தை கலைத்து வீட்டின் ஜன்னல் கதவின் வழியாக பார்த்தேன். அங்கு சாமியார் நின்று கொண்டிருந்தார். வீட்டினை திறப்பதா வேண்டாமா என மிகவும் யோசித்தேன். மீண்டும் பக்தா நான் தான் சாமியார் வந்து இருக்கிறேன் என்றார்.

நான் கதவினை திறக்காமல் பேசாமல் சென்று படுத்து விட்டேன். இருந்தாலும் மனம் திக் திக் என அடித்து கொண்டிருந்தது. அப்பொழுது வீட்டின் கதவு திறந்து கொண்ட சப்தம் எனது பயத்தை மிகவும் அதிகமாக்கியது. மெதுவாக வீட்டின் வாசற்புறம் திரும்பி பார்த்தேன். ஆமாம், வீட்டின் கதவு திறந்து சாமியார் உள்ளே வந்து கொண்டிருந்தார். இந்த அம்மாவும், அப்பாவும் இந்த நேரத்தில் எங்கு தான் போய்த் தொலைந்தார்கள் என மனம் வெகுவேகமாக அடிக்கத் தொடங்கியது.

என்னிடம் மந்திர சக்தி இருப்பதை மறந்து விட்டாயா பக்தா என்றார் சாமியார். நான் அப்பொழுதுதான் தூங்கி எழுந்தவன் போல அடடே சாமியாரா, வாருங்கள் நான் நன்றாக தூங்கிவிட்டேன் அதனால் தான் நீங்கள் வந்தது கூட தெரியாமல் போய்விட்டது என்றேன். நான் கதவை சரியாக பூட்டித் தொலைக்கவில்லை என நினைத்துக் கொண்டேன். நான் சாமானியன், பொய் பேசலாம், ஆனால் சாமியார் எதோ மந்திர சக்தி மூலம் கதவை திறந்ததாக பொய் சொல்கிறாரே என மனதில் கோபம் வந்தது.

இந்த மதிய வேளையில் கூட உனக்குத் தூக்கம் வருமா? என்றார் சாமியார். தலைவலி சற்று அதிகமாக இருந்தது, அதுதான் தூங்கிவிட்டேன் என பொய் சொன்னேன். சரி சென்று முகம் அலம்பி கொண்டு வா, நாம் ஒரு இடம் போகலாம் என்றார். எனக்கு எரிச்சலாக போய்விட்டது. நன்றாக தூங்கி கொண்டு இருந்தானை எதற்கு இந்த ஆள் வம்பு செய்கிறார் என நொந்து கொண்டேன். எனக்கு தலைவலி மிகவும் அதிகமாக இருக்கிறது அதனால் நான் எங்கும் வர இயலாது என மீண்டும் ஒரு பொய் சொன்னேன்.

சாமி, நீங்கள் தான் மந்திர சக்தியால் கதவை திறந்து கொண்டு வந்தீர்கள் அல்லவா, அது போல எனது தலைவலியை மந்திர சக்தியால் போக்கிவிடுங்களேன் என சொன்னேன். இருக்கிற தலைவலியை போக்கலாம், ஆனால் இல்லாத தலைவலியை எப்படி போக்குவது? அது எந்த மந்திர சக்திக்கும் கட்டுக்கு அடங்காதே என்றார் சாமியார். எனக்குள் இருந்த பயம் அதிகமானது. நான் பொய் சொன்னது எல்லாம் இவருக்கு தெரிந்து இருக்குமோ என அச்சம் என்னை வாட்டியது. ஆனால் அவர் பொய் தானே சொல்லி இருக்கிறார் என எனது தலையணையை நகற்றிய போது வீட்டு கதவின் சாவி எனது கைக்கு அகப்பட்டது. சாமியார் எதோ மந்திர சக்தியால் தான் கதவை திறந்து இருக்கிறார் என முடிவுக்கு வந்த வேளையில் நிறையவே யோசிக்கிறாய் என்றார் சாமியார். உடனே கிளம்பு வா போகலாம் என்றார்.

எனக்கு வர விருப்பம் இல்லை என்றேன். அதைக்  கேட்டதும் சாமியார் சிரித்த சிரிப்பு என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உனது விருப்பத்தின் பேரிலா வாழ்க்கை நடக்கிறது என்றார் சாமியார். எனக்கு ஒரு நிமிடம் மயக்கமே வந்து விடும் போலிருந்தது. ஆமாம் எனது விருப்பத்தின் பேரிலா வாழ்க்கை நடக்கிறது, இந்த கேடு கெட்ட சாமியாரை நான் பார்க்கவே வேண்டாம் என நினைத்தாலும் வந்து தொலைத்து விடுகிறார். அதோடு மட்டுமில்லாமல் என்னை எங்கோ எனது விருப்பத்திற்கு மாறாக அழைத்து செல்வேன் என துடி துடிக்கிறார். வேறு வழியின்றி நான் கிளம்பத் தயாரானேன்.

வீட்டுக்கு வந்தவருக்கு எதுவும் தர வேண்டும் என தோணவில்லையா என்றார் சாமியார். கடவுளே இந்த சாமியாரை நீ கொன்று விட மாட்டாயா என நினைத்துக் கொண்டு தண்ணீர் கொண்டு வந்தேன். இவர் கெட்ட கேட்டுக்கு பழச்சாறா தர முடியும் என நினைத்தேன். சாமியார் சிரித்துக் கொண்டே எனது உடலில் எழுபத்தி ஐந்து சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. பரவாயில்லை குடிக்கிறேன் என வாங்கி கொண்டார்.

சாமியாருடன் நானும் கிளம்பினேன். நீ எதையாவது செய்ய வேண்டும் என நினைத்து அதை செய்து முடித்து இருக்கிறாயா என்றார் சாமியார். ஆமாம் செய்து முடித்து இருக்கிறேன் என்றேன். சாமியார் சிரித்து கொண்டே பொய் சொல்ல வேண்டும் என நினைத்து அதை செய்துதான் முடித்து கொண்டு இருக்கிறாய் என்றார். எனக்கு ஒரு மாதிரியாக போய்விட்டது. இவருக்கு எல்லாமே தெரிந்து இருக்கிறதே என நினைத்து சாமியாரிடம் நீங்கள் இந்த உலகத்தை சீரானதாக மாற்ற நினைக்கலாமே என்றேன். நான் நினைத்து என்ன செய்ய, அந்த கடவுள் நினைக்க வேண்டுமே என்றார் சாமியார். ஆமாம் சாமி, அந்த கடவுள் எதற்கு வேறுவிதமாக நினைக்கிறார்? என்றேன்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்றார் சாமியார். எனக்குள் இருந்த பயம் நீங்கி கோபம் கொப்பளித்தது. நல்லதை செய்ய நாம் நினைத்தால் அதை தீயதில் சென்று முடிக்கும் கடவுள் என்ன கடவுள் என்றேன். நல்ல கடவுள் என்றார் சாமியார். எனக்கு இதனால் தான் இவரை பார்க்கவே பிடிப்பது இல்லை. எதற்கு எடுத்தாலும் கடவுளுக்கு வக்காலத்து வாங்குவார். எங்கோ என்னை அழைத்து கொண்டு வந்துவிட்டார் போல என நினைத்தேன். அதற்குள், நாம் வர வேண்டிய இடம் வந்துவிட்டது என்றார் சாமியார்.

அந்த இடத்தில் எதுவுமே இல்லை. மரம், செடி கொடிகள் என எதுவுமே இல்லை. மெல்லிய காற்று மட்டுமே வீசிக் கொண்டு இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இதோ இப்படிப்பட்ட இடத்தில் இருந்துதான் மரங்கள், செடிகள், மனிதர்கள், பூச்சிகள், புழுக்கள் என எல்லாமே உருவானது என்றார் சாமியார். சாமி இவைகள் எல்லாம் இறைவனால் படைக்கப்படவில்லையா? என்றேன்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என சாமியார் சொல்லிக் கொண்டே நான் சொல்ல வந்தது உனக்கு புரிந்து இருக்கும் என சொல்லி மறைந்து போன சமயம் பார்த்து நல்ல நாள் அதுவுமா இன்னும் என்ன தூக்கம் என அப்பா என்னை பிரம்பால் ஓங்கி ஒரு அடி அடித்தார். உலகில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் வலிக்குமோ என நினைத்து கொண்டே நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என வலியால் துடித்துக் கொண்டே எழுந்தேன்.

Friday 16 November 2012

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 1

அஷ்டமாசித்திகள் என்றால் எட்டு பேறுகள் என்றே குறிப்பிடுகிறார்கள்.  இதனை அடைய பெற்றவர்கள் மாபெரும் பலன் கொண்டவர்களாக விளங்குவார்கள் என்றே அறியப்படுகிறது. பெரும்பாலும் சித்தர்கள் இத்தகைய எட்டு சித்திகள் பெற்றவர்களாகவே  காட்டப்படுகிறார்கள். இந்த எட்டு சித்திகள் பெறுவது என்பது அத்தனை எளிதான காரியமாக சாமானியர்களுக்குத் தெரிவதில்லை. இவை எல்லாம் கண் கட்டு வித்தையாக இருக்கலாம் என்றே பொதுவாக உணரப்பட்டாலும், ஒருவேளை இருக்குமோ என்கிற மாய பிம்பம் தென்படத்தான் செய்கிறது.

அஷ்டமாசித்திகள் எவை எவை.

1. அணிமா. இதை அணுத்தன்மை அல்லது நுண்மை என்றே குறிப்பிடலாம். அதாவது அணுவைப் போன்று சிறியவையாதல் என பொருள்படும்.

'கறந்த பால் மடிபுகா' என்று சொன்னாலும் யோக நிலையின் மூலம் உடலை சிறியது ஆக்கலாம் என்றே சொல்கிறார்கள். பொதுவாக பார்க்கப் போனால் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்றே ஆகிறது. ஆனால் உடல் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை என்னவென பார்க்கும் போது சில விசயங்கள் சாத்தியப்படலாம். மூன்று வகை உடல்கள் எவை எவை.

அ . ஸ்தூல சரீரம் அதாவது  கண்களுக்கு புலப்படக் கூடிய உடல்

ஆ . சூக்ஷ்ம சரீரம் அதாவது கண்களுக்கு புலப்படாமல் நுட்பமாய் அமைந்து இருப்பது. இதனை லிங்க சரீரம் என்றும் சொல்கிறார்கள். இந்த லிங்க சரீரம் ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, அந்தக்கரணங்கள் நான்கு, பிராண வாயு ஒன்று என்பவைகளால் ஆனது.

இ. காரண உடல். அதாவது பருவுடல், காரண உடல் இரண்டிற்கும் அடிப்படை இந்த காரண உடல்.

பருவுடம்பு மட்டுமில்லாமல் வளியுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு மற்றும் இன்ப உடம்பு எனவும் உடம்பு பிரிக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் ஒரு நிலை ஆகும். இப்படி பிரித்தெடுத்து சிந்தித்த முன்னோர்கள் போற்றத்தக்கவர்கள் தான்.

தொக்கு, சிங்குவை, சட்சு, ஆக்கிராணம் மற்றும் சோத்திரம் இவை ஞானேந்திரியங்கள். அதாவது   மெய் (உணர்தல்), வாய் (சுவை) ,கண் (பார்வை), மூக்கு (வாசம்), செவி (கேட்டல்) என ஐம்பொறிகளாக வகைப்படுத்தலாம். லிங்க சரீரம் ஞானேந்திரியங்கள் மூலம் ஆனது என்பது இவை கண்களுக்கு புலப்படாத விசயங்கள் உணர்வதாக குறிப்பிடுகிறார்கள். இவைகளை பஞ்ச தன்மாத்திரைகள் என்றே சொல்கிறார்கள்.

வாக்கு, பாணி, பாதம், பாயுரு மற்றும் உபஸ்தம் என்பவை கர்மேந்திரியங்கள் என்றே  குறிக்கப்படுகின்றன. அதாவது வாய், கை, கால், மலவாய், கருவாய். இவை சொல்லல், நடத்தல் கொடுத்தல், விடுதல், மகிழ்தல் என கர்மங்களை செய்வதால் இவை கர்மேந்திரியங்கள் என்றே குறிக்கப்படுகின்றன.

மனம், அறிவு, நினைவு மற்றும் முனைப்பு போன்றவை அந்தக்கரணங்கள் என்றே வழங்கப்படுகின்றன. அந்தக்கரணங்கள் ஞானேந்திரியங்களையும், கர்மேந்திரியங்களையும் கட்டுபாட்டில் வைக்கக் கூடியவை. மனம், புத்தி இரண்டுமே எவை என்பது பிரித்தறிய மனம் நினைப்பு என்றும் புத்தி என்பது அறிவு என்றும் சொல்கிறார்கள். நாம் ஒன்றை நினைக்க மனம் துணையாகும். ஆனால் அதை நிச்சயித்து நடத்த புத்தி தேவை என்பதாகும்.

(தொடரும்)


Tuesday 13 November 2012

எனக்கு மட்டும் இல்லையா தீபாவளி?

சிறு வயதில் கேள்விப்பட்ட நரகாசுரன் கதை தான் தீபாவளிக்கு என இருந்தாலும் வேறு சில கதைகளும் சொல்லப்படுகின்றன. நிறைய பெண்களை தனது கட்டுபாட்டில் வைத்திருந்த நரகாசுரனை வீழ்த்திய தினம் தான் தீபாவளி என்றே கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி அன்று வெடி வெடித்து ஆராவரத்துடன் புத்தாடை உடுத்தி மகிழ்ந்து இருப்பது ஒரு பொழுது போக்கு. எப்போது தீபாவளி வரும், எத்தனை புது படங்கள் வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருப்போரும், ஒரு புது ஆடை கிடைக்கும் என மகிழ்ச்சியுடன் சிலரும், எந்த பண்டிகை வந்தாலும் நமது நிலை இதுதான் என இருப்போர் பலரும் என விழாக்காலங்கள் இந்தியாவில் களைகட்டும்.

சரவெடி, லக்ஷ்மி வெடி, அணுகுண்டு, மத்தாப்பு என சந்தோசமாக கழித்த நாட்கள் நினைவில் ஆடும். இந்த தீபாவளியுடன் எங்கள் கிராமத்தில் பொங்கலும், அதனுடன் கரி நாள் என கொண்டாடப்படும். தீபாவளிக்கு என விடுமுறை நாட்கள் குறைந்தது மூன்று தினமாவது  கிடைத்துவிடும். இது போன்று தீபாவளி கொண்டாடி பல வருடங்கள் உருண்டோடிவிட்டன. தீபாவளி அன்று கூட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் போலவே நிலைமையும் மாறிவிட்டது.

இந்த சிறப்பான தீபாவளி லக்ஷ்மி தேவிக்கு தொடர்புடையது என்று ஒரு சாரர் கூறுவது உண்டு. அதாவது ஒளியானது வாழ்வில் வீசத் தொடங்கினால் அங்கே லக்ஷ்மி தேவி வாசம் செய்வது உண்டு எனும் ஐதீகம் உண்டு. அதாவது லக்ஷ்மி தேவி அவதாரம் செய்த தினம் இந்த தினம் தான் என்று குறிப்பில் இருக்கிறதாம். அதோடு மட்டுமில்லாமல் வாமன அவதாரம் எடுத்து வந்தபோது லக்ஷ்மி தேவியை இந்த திருநாளில் தான் பாலி எனும் அரசனிடம் இருந்து வாமணர் காப்பாற்றினார் என்பதால் இந்த திருநாளை லக்ஷ்மி தேவிக்கு அர்பணிக்கிறார்கள்.

வனவாசம் முடித்துவிட்டு பாண்டவர்கள் திரும்பி வந்த தினம், இலங்கையில் இருந்து சீதையை  மீட்டு அயோத்திக்கு ராமர் வந்த தினம் கூட தீபாவளியாக கொண்டாடப்படுவதும் உண்டு. இந்த தீபாவளி இந்துக்கள் மட்டுமில்லாது சீக்கியர்கள், ஜெயின் மதம் தொடர்புடையவர்கள் கூட கொண்டாடுவது உண்டு. யுகங்கள் மாறினாலும் வெவ்வேறு காரணத்திற்காக இந்த தீபாவளி கொண்டாடப்பட்டு வருவது தெள்ளத் தெளிவாகிறது.

இனி வரும் காலங்களில் இந்த தீபாவளி தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்பட்ட தினமாகவும், இனம், நிறம் போன்ற வேறுபாடு நீக்கிய நாளாகவும், மதங்கள் அழிக்கப்பட்டு தெய்வீகத் தன்மை நிலைபெற்ற நாளாகவும் கொண்டாடப்படலாம். அப்படிப்பட்ட ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தும் நாள் ஒன்றே உண்மையான தீபாவளி. அதுவரை இந்த தீபாவளி பண்டிகை எல்லாம் ஒரு பொழுது போக்கு. ஒரு விடுமுறை தினம் அவ்வளவுதான். 

Friday 9 November 2012

வள்ளலார்

யார் இந்த வள்ளலார்? வள்ளலார் பற்றி இன்றைய சமூகம் மறந்து கொண்டிருக்கலாம், ஆனால் சாதிய வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்று எனும் சமரச சன்மார்க்க கொள்கையை பரப்பியவர். இறைச்சி உண்பவர்களை அறவே வெறுத்தார் என்பது மட்டும் சமரச சன்மார்க்க கொள்கைக்கு எதிரான ஒன்று.

சிதம்பரத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் ராமலிங்கம். ராமலிங்க அடிகளார் என மாற்றம் கொண்டு வள்ளலார் என பின்னாளில் போற்றப்பட்டவர். இவரின் வாழ்க்கை குறிப்பு மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. இவரின் தொண்டு மிகவும் போற்றத்தக்கது என்றும் திருவருட்பா இயற்றி தமிழுக்கு பெருமை சேர்த்தார் என்பது மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை.

இவரின் ஜீவ காருண்யம், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன், அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை என இவரது சொல்லாடல்  மிகவும் பிரபலமானவை. உலகில் நன்மையே நிலைக்க வேண்டும் எனும் கனவுலகில் இவர் வாழ்ந்தவர் என்றே சொல்லலாம்.

சிதம்பரத்தில் பிறந்தாலும் சென்னையில் வளர்ந்தவர். சென்னைக்கு சென்ற தருணத்தில் வேடிக்கையாக சென்னையை தர்மமிகு சென்னை என அழைத்தவர் பின்னாளில் தீட்டிலே திளைத்த சென்னை என மாற்றிக் கொண்டார். உலகில் நீதி, நியாயம், நேர்மை எல்லாம் நிலைக்காமல் போவது கண்டு மனதில் வாட்டம் கொண்டு இருந்து இருக்கிறார். அந்த வாட்டம் எல்லாம் போக்க இறைவன் ஒருவனே கதி என்ற நிலையும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

இப்படியெல்லாம் இருந்தாலும் ஞானம் என்பது அத்தனை எளிதாக எவருக்கும் கிடைப்பதில்லை. எப்போதும் இறைவன் பற்றியும், சமயங்கள் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பவர்கள் மிகவும் குறைவு. விளையாட்டு பருவத்தில் இறைவன் மீதான பற்று என வரும்போது அங்கே மற்ற விசயங்கள் அடிப்பட்டு போய்விடுகின்றன.

ஒரு விசயத்தை பற்றி அறிந்து கொள்ள கல்வி சாலைகள் அவசியமே இல்லை என்பதுதான் முந்தைய கால சூழல். அவரவர் அறிந்து கொண்டிருந்த விபரங்கள் தலைமுறைக்கு கடத்தப்பட்டன. ராமலிங்கம் சிறு வயதில் இருந்தே அவரது மூதாதையர்களின் சமயமான சைவம் குறித்து ஆர்வம் கொண்டிருந்து இருக்கிறார். அதுவும் சென்னையில் தனது அண்ணனுடன் வசித்து வந்தபோது தனது அண்ணனின் சைவ புலமை அவரை மிகவும் கவர்ந்து இழுந்து இருக்கிறது. இதன் பொருட்டு வீட்டிலேயே தமிழ் கற்று கொண்டு இறைவன் மீதான பற்றினை வளர்த்து வந்து இருக்கிறார்.

பொதுவாக சித்தர்கள் சமய சடங்குகளை அறவே வெறுக்க கூடியவர்களாகவே இருந்து வந்து இருக்கிறார்கள். உள்ளுக்குள் இருக்கும் பரமானந்தனை வெளியில் தேடுவது எங்கனம் என்றே கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அது போலவே ராமலிங்கம் இந்த கருத்தில் மிகவும் வலுவாக இருந்து இருக்கிறார்.

பொதுவாக ஒருவர் நன்றாக பேசினால் போதும், அவருக்கு கூட்டம் சேர்ந்துவிடும். அப்படி கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு இவரின் பால் அன்பு பாராட்டியவர் ஏராளம். சில சங்கங்கள் அமைத்து வெற்றியும் கண்டவர்.

சிறு வயதிலேயே இறைவன் மீது அன்பு கொண்டு  இருந்தவருக்கு இவரின் விருப்பத்திற்கு மாறாக இவரது திருமணமும் நடந்தேறியிருக்கிறது. அதெல்லாம் பெரிதாக கருத்தில் கொள்ளாமல் இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு சிறப்பு வாய்ந்தது.

இப்படி இருந்த இவர் ஜனவரி மாதம் முப்பதாம்  நாள் தனது தொண்டர்களிடம் இதோ இந்த வீட்டில்  உள்ளே செல்கிறேன், யாரும் கதவை திறக்க வேண்டாம், அப்படி திறந்தாலும் அங்கே நான் இருக்க மாட்டேன் என சொல்லி சென்றதாகவும், கதவு நான்கு மாதமாக திறக்கப்படமால் அரசு உத்தரவின் பேரின் மே மாதம் திறக்கப்பட்டு பார்த்த போது  அங்கே ராமலிங்கம் எனும் வள்ளலார் இல்லாமல் இருந்ததை அரசு பதிவேட்டில் பதிந்து வைத்துவிட்டது.

இது குறித்து தொண்டர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்?

வள்ளலார் அருட்பெரும் சோதியுடன் கலந்து விட்டார் என்றே சொல்லித் திரிகிறார்கள். ஆனால் இவர்களுக்கு அவரின் மனதின் வலியை கண்டு கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் இருந்து இருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.

தனது உடலானது மிகவும் கேவலமானது என்றே எல்லா சித்தர்களும் வள்ளலார் உட்பட பாடி வைத்து இருக்கிறார்கள். மண வாழ்க்கை கேவலமான ஒன்றே என்பதுதான் இவர்களின் கருத்தாக இருக்கிறது. ஏதோ இவர்கள்,  இறைவன் மீது பற்று வைத்து விட்டால், இறைவனையே சதா பாடித் திரிந்தால் எல்லாமே நன்றாக இருந்துவிடும், உடல் தேஜஸ் நிலை அடைந்து விடும்  என்பது இவர்களின் ஒரு கற்பனை காட்சியாக வலம் வந்து இருக்கிறது.

நெருப்பில் மறைந்த மாணிக்கவாசகர், அப்படியே சமாதியாகிப் போன காரைக்கால் அம்மையார் என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவது என்பது அறவே கிடையாது என்பதுதான் பலரின் கூற்றாக இருக்கிறது. ஆனால் இந்த ஆன்மா அழிவது இல்லை, பாதிக்கப்படுவது இல்லை என்று சொல்வதற்கு காரணம் இந்த இயற்கை வாழ்வில் ஒவ்வொருவரும் கண்டு கொண்ட பிரச்சினைகள்.

எவர் எல்லாம் இறைவனை நாடுவார்கள்? இதற்கு மிகவும் எளிமையான காரணம் ஒன்று இருக்கிறது. இதை எத்தனை பேர் மனதைத் தொட்டு மனசாட்சிக்கு உட்பட்டு ஆமாம் என சொல்லப் போகிறார்கள்?

பிரச்சினைகள் உள்ளவர்கள், பிரச்சினை வராமல் இருக்க வேண்டுபவர்கள் இறைவனை நாடுவார்கள். இறைவனை நாடினால் பிரச்சினை தீர்ந்து விடும் எனும் எதிர்பார்ப்புகளே பெரிதும் இந்த இறைவனின் மீதான சடங்குகள் சம்பிராதயங்கள் எல்லாம் வளர்ந்து வந்திருக்கின்றன. பெரும்பாலனவர்கள் இதனை அறிந்து வைத்து இருந்தாலும் நம்பிக்கை எனும் பேரில், பயம் கருதி இதனை காலம் தொட்டு தொடர்ந்து வந்து இருக்கிறார்கள். இதனை வள்ளலார் கடுமையாகவே எதிர்த்தார். அதனால் தான் இவரின் தொண்டு இடங்களில் எந்த ஒரு சடங்குகளும் அனுமதிக்கப்படுவது இல்லை.

இத்தனை பாடல்கள் இயற்றியும், எத்தனையோ நல்ல விசயங்கள் எடுத்து சொல்லியும் திருந்தாத மானிடர்கள் கண்டு மனம் வெதும்பிய வள்ளலார் இறுதியாக எடுத்த முடிவு. யாருக்கும் சொல்லாமல் ஓடிப் போவது. இதை சாதாரணமாக செய்தால் ஓடிப் போய்விட்டார் என்றே கேவலமாக பேசக் கூடும் என திட்டமிட்டே இந்த செயலை செய்தார் எனலாம்.

தான் பாடிய திருவருட்பாக்கள் மூலம் திருந்தாத மானிட சமூகம் தான் இறைவனுடன் ஐக்கியமானது என நினைத்தாலாவது திருந்தட்டும் என்றே இந்த ஓடிப்போன மறைதல் செயலை நிறைவேற்றி இருக்கிறார்.

உண்மையை சொல்பவன் சதிகாரன்.
நன்மையை நினைப்பவன் நாசக்காரன்.

ஒரு உயர்ந்த உள்ளத்தை, சமூகம் சமரச வாழ்வில் திளைக்க வேண்டும் என தனது வாழ்நாளில் பாடுபட்ட ஒரு ஜீவனை ஓடிப்போக வைத்த இந்த சமூகம் வெட்கி தலை குனிய வேண்டுமே தவிர அருட்பெரும் சோதியில் கலந்து விட்டார் என பொய் சொல்லித் திரிய கூடாது.

இவரது சமரச சன்மார்க்கத்தை மட்டுமே பெரிதாக பேசித் திரியும் சமூக ஆர்வலர்கள் சமரசத்தை ஒவ்வொரு ஊரில் முதலில் நிலைநாட்டத் தொடங்கட்டும். ஒரு சமூகம் அவரவர்  தலைவரின் பிறந்த நாள், இறந்த நாள் என கொண்டாடி பிற சமூகத்தை களங்கப்படுத்துவது நிற்கட்டும். இராமலிங்க பிள்ளையில் இருக்கும் சாதிய பெயர் வள்ளலாரில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. 

Thursday 1 November 2012

ஓவபைன் தந்த அதிர்ச்சி

பொதுவாகவே மருத்துவ ஆராய்ச்சி என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் போல. இன்று இருக்கும் தொழில்நுட்ப வசதி, பலவகையான செயல்முறை பயிற்சிகள் என எதுவமே இல்லாத காலத்தில் இந்த இந்த தாவரம் இந்த இந்த பலனைத் தரும் என சித்தர்கள் என போற்றப்படுபவர்கள் கண்டுபிடித்து தந்ததே பெரும் அதிசயம் தான்.

இந்தியா, சைனா போன்ற நாடுகள் இது போன்ற மருத்துவ முறைக்கு மிகவும் முக்கியத்துவம் தந்து கொண்டிருந்தன. தாவரங்களின் மூலம் தங்களது உடல் நலனை காத்துக் கொள்ளும் முறையை மனிதர்கள் கற்றுக் கொண்டார்கள். இது கூட இயற்கைத் தேர்வு அடிப்படையில் மனித இனம் தம்மை இவ்வுலகில் தக்க வைத்துக் கொண்ட ஒரு முயற்சி எனலாம்.

ஓவபைன் அல்லது ஸ்ட்ரோபந்தின் எனப்படும் மருந்து ஸ்ட்ரோபந்துஸ் எனப்படும் மலர் இன வகை சார்ந்த தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கும் பொருளாகும். இந்த ஸ்ட்ரோபந்துஸ் ஆப்பிரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் வளரும் தன்மை உடையது. இவை மிகவும் உயரமாக வளரக்கூடிய தாவரமும் ஆகும்.

இந்த தாவரம் மிகவும் விஷத்தன்மை உடையது என்பதை முன்னரே அறிந்து வைத்திருந்த ஆப்பிரிக்கர் கூட்டம் இதனை அம்பில் தடவி பிறரை கொல்ல பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றே குறிப்புகள் இருக்கின்றன. அதி வேளையில் இந்த தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஓவபைன் இதயத்திற்கு மிகவும் உபயோகமாகக் கூடிய மருந்தாக பயன்படுத்தப்பட்டது. எதுவுமே அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் அமிர்தமும் நஞ்சு என்பது போல இந்த மருந்து அளவு அதிகமானால் ஆளையே கொன்று விடும் என்பதுவும் அறியப்பட்ட ஒன்று.

இதய கோளாறுகள் நீக்கும் இரண்டு வகை மருந்துகள் என டிஜிடளிஸ் மற்றும் ஸ்ட்ரோபந்துஸ் இரண்டுமே விஷத்தன்மை உடையவை. இந்த ஓவபைன் சோடியம் பொட்டாசியம் பரிமாற்றத்தை தடுக்கும் தன்மை உடையது. இப்படிப்பட்ட மிகவும் கொடிய மருந்துடன் வேலை பார்க்க வேண்டும் என்பதெல்லாம் தலையில் எழுதப்படாத விதி.

கினிபிக்ஸ் வேகஸ் நரம்புதனில் இந்த மருந்தினை சோதனை செய்தபோது இவை மிகவும் அற்புதமாகவே வேலை செய்தது. மிகவும் சிறப்பான மருந்து ஒன்று கண்டுபிடித்துவிட்டோம் என்ற குதூகலத்தில் இந்த மருந்து அளவு அதுவும் மிகவும் குறைவான அளவு கினிபிக்ஸ் ற்கு தந்தபோது அவை அனைத்தும் இறந்து போயின. இந்த செயல்முறையை செய்வதற்கு முன்னரே எனக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. கவனத்துடன் இரு, இல்லையெனில் இந்த மருந்து உன்னை தாக்கலாம் என.

ஆனால் மிகவும் குறைந்த அளவே தந்தும் இப்படி இந்த மருந்து செய்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. வாழ்விலும் அப்படித்தான். கெட்ட விசயங்கள் மிகவும் குறைவாக செய்தால் பிரச்சினை இல்லை என்று நினைக்க கூடியவர்கள் உண்டு. ஆனால் அந்த குறைவான கெட்ட விசயங்கள் மனிதர்களை அழிக்கும் வல்லமை உடையதுதான். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் நடப்பதைவிட ஒரு உண்மை சொல்லி அந்த கல்யாணம் நின்றால் அதுதான் சிறப்பு.

இப்படி உலகில் பல விஷத்தன்மையான விசயங்கள் நல்லது செய்வது போலவே வலம் வருகின்றன. அவை வளம் பெறாமல் காப்பது நமது கையில் உள்ளது.