Monday 14 October 2013

பெண்ணியமும் கன்னியமும்

''என்னடா பண்ணிட்டு இருக்க, கடைக்கு போக சொன்னேன் மறந்துட்டியா?'' அம்மாவின் எச்சரிக்கை வார்த்தையில் புத்தகத்தில் இருந்து மீண்டேன்.

''பரீட்சை வருதுமா, அதான் படிச்சிட்டு இருக்கேன். நீ வாங்கிட்டு வாம்மா'' நான் சொன்னதை அம்மா கேட்கவில்லை

''கடைக்கு போய்ட்டு வந்து படி'' அம்மா சற்று குரலை உயர்த்தி சொன்னார்.

''தங்கச்சிய போக சொல்லுமா, அவ சும்மாதான இருக்கா'' நான் சொன்னதும் அம்மாவுக்கு கோவம் வந்துவிட்டது.

''இப்போதான் பெரிய மனுஷி ஆகி இருக்கா, அவளை எல்லாம் கடைக்கு அனுப்ப முடியாது, நீ போகப் போறியா இல்லையா'' அம்மாவின் அந்த வார்த்தை எனக்கு இடைஞ்சல் தந்தது. புத்தகத்தை தரையில் எறிந்துவிட்டு கிளம்பினேன்.

''என்ன வாங்கனும், சொல்லும்மா'' எனக்கும் கோவம் வந்து இருந்தது. அம்மா வாங்கி வர சொன்ன பொருட்கள் ஐந்துக்கு குறைவாகவே இருந்தது. பணத்தை வாங்கிக் கொண்டு விறுவிறுவென கடையை அடைந்தேன்.

''மாப்பிள்ளை, உன் தங்கச்சிய  எனக்கு கட்டி கொடுப்பியாளே'' என்றார் எனக்கு தெரிந்த வயது அதிகமான மாமா.

''கிழட்டு கிறுக்கனுக்கு புத்திய பாரு'' நான் கோவத்துடன் சொல்லி வைத்தேன்.

''என்ன மட்டு மருவாதி இல்லாம பேசற'' அவர் கையை ஓங்கி அடிக்க வந்தார். நானும் நேராக நின்றேன்.

''பொட்ட புள்ளை எல்லாம் படிச்சி என்ன செய்ய போகுது, பேசாம எனக்கு கட்டி கொடு மாப்பிள்ளை'' என்றார் ஓங்கிய கையுடன் கிண்டலாக.

''ஏன் உன் புள்ளைய படிக்க வைக்காம ஒரு தாத்தாவுக்கு கட்டி தர வேண்டிதான. உனக்கு என் தங்கச்சி இளக்காரமோ மூமா, பேசுறான் கிழட்டு கிறுக்கன்'' என கோவத்துடன் நான் சொல்லும்போதே என்னை அவர் சரமாரியாக அடித்தார். அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரின் தலையை பதம் பார்த்தேன்.

அதற்குள் நாட்டாமை பண்ண சிலர் வந்துவிட்டார்கள். பெண்களை பற்றி கேவலமாக பேசுவதே இந்த கிழட்டு கிறுக்கனுக்கு பொழப்பு என சிலர் அவரை வசைபாடினார்கள். என்னை ஒதுங்கி போயிருக்கலாம்ல என்றார்கள். நானும் கடையில் பொருட்கள் வாங்கியபடி வீடு வந்து சேர்ந்தேன்.

''இவ்வளவு நேரமாடா, எவளோட பேசிட்டு இருந்த'' அம்மாவின் அந்த கூரிய வார்த்தைகள் என்னை மேலும் கோவம் அடைய செய்தன.

''சரசு வந்து இருந்தா, அவளோடதான் பேசிட்டு இருந்தேன். இப்போ என்ன அதுக்கு'' நான் சரசு எனும் பெண்ணை காதலிப்பது குறித்து அம்மாவுக்கு நிறைய கோபம்.

''உனக்கு சூடு வைச்சாதான் சரிப்படும்'' அம்மா சொல்லிவிட்டு போனார்.

''எதுக்கு இப்படி உட்கார்ந்துட்டு இருக்க, போய் விளையாடு, இல்லைனா படி'' நான் தங்கையிடம் சொல்லி வைத்தேன்.

''வெளில விளையாட போனா அம்மா திட்டும்'' பாவமாக சொன்னாள் தங்கை.

அடுத்த நாள் நான் கல்லூரி பேராசிரியர் ஒருவரை சந்திக்க சென்றேன். எனது வீட்டில் கடையில் நடந்ததை கூறி, எதற்கு இப்படி பெண்களை அடிமைபடுத்துகிறார்கள், பெண்களை தவறாகவே பேசுகிறார்கள் என கேட்டேன்.

''உன் அம்மாகிட்ட கேட்காம என்கிட்டே கேட்கிறே. பெண்களுக்கு பெண்களே எதிரி அப்படின்னு பெண்களே சொல்லிகிருவாங்க'' என்றார் பேராசிரியர்.

''இல்லை சார், பெண்கள் முழு வீச்சில் தங்களை அடிமை தனத்தில் இருந்து வெளியே கொண்டு வரனும். எல்லா துறைகளிலும் அவங்க சாதிக்கனும். பாரதி கண்ட புதுமைப் பெண் போல தீரமிக்கவர்களாக வரனும்'' நான் வீராவேசமாக பேசினேன்.

''பேசி முடிச்சிட்டியா?, கல்யாணம் பண்ணி பாரு. அப்புறம் யாரு அடிமைன்னு தெரியும்'' பேராசிரியரின் சொற்றொடர் எனக்கு புரியவில்லை. அவரிடம் சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு கல்லூரி தோழி எழிலரசியிடம் இந்த விசயத்தை பேசிவிட்டு வீடு வந்தேன்.

''எங்கடா போய்ட்டு வர, அந்த சரசு பைத்தியம் பிடிச்சி திரியற''' அம்மாவின் அர்த்தமற்ற கோபம் எனக்குள் கோபத்தை வரவழைத்தது.

''புரபொசர் பாக்கத்தான் போனேன்மா'' என சொல்லிவிட்டு கோபத்தை ஒரு அறையில் உட்கார்ந்து அழுகையாய் வெளிபடுத்தி கொண்டு இருந்தேன்.

''அழாதண்ணா, அம்மா எப்பவும் இப்படிதான். என்னை பூட்டி பூட்டி வைக்கிற மாதிரி உன்னை பூட்டி வைக்க முடியல, அதான் இப்படி பேசுது'' தங்கையின் ஆறுதல் வார்த்தை இதமாகவே இருந்தது.

சில மாதங்கள் பின்னர் சரசுவை பார்க்க சென்றேன். அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிவிட்டார்கள் என்றே சொன்னார்கள்.

''எப்படி உன்னால இப்படி அடங்கி செல்ல முடிகிறது'' என்றே அவளிடம் கேட்டு வைத்தேன். படங்களில் வரும் வசனம் போல் அம்மாவும் அப்பாவும் செத்து போவதாக சொன்னதாக சொன்னாள்.  நான் இனிமேல் கன்னிப் பையன் தான். எனக்கு என்று பேச எவனும் கொடி பிடிக்க மாட்டான். அவன் ஆம்பளைடா என்றே எனது வலியை துடைத்துவிட்டு போய் விடும் இந்த சமூகம். சோகத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தேன்.

''சோனைமுத்து தூக்கில தொங்கிட்டான்டா' என சிலர் அலறிக் கொண்டு ஓடினார்கள். நானும் அங்கே ஓடினேன். அவருக்கு கல்யாணமாகி ஆறுமாதம் ஆகிறது. மனைவி இவரை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் ஓடிப்போனதாக பேசிக் கொண்டார்கள். அதே சோகத்தில் நான் வீடு வந்து சேர்ந்தேன்.

''எத்தனை தடவை சொல்றது, அந்த சரசு பின்னால போகாதேனு'' அம்மா சத்தம் போட்டு முடிக்கும் முன்னர் நான் சொன்னேன்.

''அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்கமா'' எனது வார்த்தை அவருக்கு அதிக சந்தோசம் தந்து இருக்கும்.

''இப்போதான்டா நிம்மதி'' அம்மா சொல்லிவிட்டு போனார்கள். அப்போது எனது கல்லூரி தோழி எழிலரசி வந்தாள்.

''இந்தா பெண்ணியம் புத்தகம், படி'' என அவள் தந்துவிட்டு போகும் முன்னர்

''எழில், நீயே எடுத்துட்டு போ. ஒரு பெண் தான் என்ன நினைக்கிறாளோ அதை எல்லாம் எவ்வித தடை இன்றி செய்ய வேண்டும், அப்படி செய்ய தடை விதிக்கப்பட்டால் அந்த பெண் அடிமைப்படுத்தபட்டவள். அந்த அடிமைத்தனத்தில் இருந்து அகல அந்த பெண் போராட வேண்டும், அதுதானே பெண்ணியம்'' நான் பேசியதை கேட்டு அவளது முகம் மாறியது.

''பெண்ணியம் அன்பின் வெளிப்பாடு. பெண்களை பற்றிய கண்ணோட்டம் சமூக அளவில் மிகவும் கீழாகவே இருக்கு. இந்த ஆண்கள் எல்லாம் ஒவ்வொரு பெண்ணின் பிண்டங்கள். பெண்களை அடக்கி ஒடுக்கி, கேலி பேசி, கிண்டல் செஞ்சி மூலையில உட்கார வைக்கிற காலம் இருந்தது என்னவோ உண்மை. அப்போ எல்லாம் பெண்ணை பாதுகாக்க வேணும் அப்படிங்கிற அக்கறை மட்டுமே இருந்தது. அந்த அக்கறை அடிமைத்தனத்தில் போய் முடியும்னு யாரும் எதிர்பார்க்கலை. பாலூட்டிகள் எல்லாத்துலயும் பெண் இனம் குழந்தை வளர்ப்புதான் முக்கியம்னு தோணிச்சி. தேனீக்கள் ஆணியம் பத்தி பேசறது இல்லை. அவங்க அவங்க முடிஞ்ச வேலை செஞ்சி வாழரதுல இருக்கு. பெண் சுதந்திரம் அப்படிங்கிறது பெண்ணியம் அப்படிங்கிறது பிறரால் ஒரு பெண்ணின் மனம், உடல் உபாதைக்கு உட்படாமல் வாழனும். பெண்களுக்கு என உரிமைகள்'' அவள் சொல்லி முடித்தாள்.

சில மாதங்கள் பின்னர் ஒரு நாள் கல்லூரியில் பேராசிரியரின் தலையில் பெரிய காயம் இருந்தது.

''என்ன சார்?'' என்றேன்.

''வீட்டில் பெண்ணியம்'' என்றே சிரித்துவிட்டு போனார்.

 நான் இன்னமும் கன்னிப்பையன் தான். சரசு இந்நேரம் உண்டாகி இருப்பாள். 

Thursday 10 October 2013

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 14

பாதை 13

மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி: ஒரு மூலக்கூறின் நிறையினை கண்டு கொள்ள உதவும் இது. நான் இந்த மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி செய்ய சென்ற நாள் இன்னும் நினைவில் இருக்கிறது.

முதன் முதலாக மிளகு தனில் இருந்து ஒரு மூலக்கூறுதனை பிரித்தெடுத்து அதன் நிறை என்ன கண்டுபிடிக்க கொடுத்தாகிவிட்டது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாக அந்த மூலக்கூறின் நிறை இருந்தது. எப்படி எல்லாமோ கணக்கு செய்து பார்த்தோம், ஒன்றுமே புரியவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது. இத்தனை சிரமப்பட்டு செய்து வேறு ஏதோ மூலக்கூறுதனை அல்லவா கண்டுபிடித்தோம் என.

எனக்கு அப்போது வேதியியல் அத்தனை பரிச்சியம் இல்லை, இப்போது கூட முழு பரிட்சயம் ஆகிவிட்டது என்று சொல்ல இயலாது. கற்றுக்கொண்டே இருக்கிறேன். நிறை கண்டுபிடிக்க என்ன செய்தாய் என்று ஆசிரியர் கேட்டு வைக்க நான் எடுத்து சென்ற குழாய்தனை காட்டினேன். அப்பொழுது அந்த குழாய்தனின் மூடியை பார்த்தார். யோசித்துவிட்டு சரி என ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார்.

நான் மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி செய்பவரிடம் சென்று இதுதான் நான் எதிர்பார்த்த நிறை, ஆனால் வந்தது வேறு நிறை என்று சொன்னேன். அப்போது மூடி பற்றிய விபரமும் சொல்லி வைத்தேன். நான் கொஞ்சம் உளறி கொட்டுவேன். தேவையோ தேவை இல்லையோ சில விசயங்கள் அதிகமாகவே பேசி விடுவது உண்டு. பார்த்தார். யோசித்த்தார். இது தாலேட் என்றார். தாலேட்?

தாலேட் நிறையுடன் எனது மூலக்கூறு நிறை இணைத்தால் சரியாக வந்தது. இதை நீக்க முடியாது என்றே சொன்னார். இப்படித்தான் சில வாரங்கள் அந்த மூலக்கூறு படாத பாடு படுத்தியது. எப்படி இந்த நிறை எல்லாம் கண்டுபிடிக்க படுகிறது.

இந்த மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஐந்து நிலைகளை கொண்டது.

௧. மூலக்கூறு ஆவியாதல் ௨ எலக்ட்ரான்கள் மூலக்கூறிணை பகுத்தல் ௩ மூலக்கூறு வேகம் பிடித்தல் ௪ நிறைகேற்ப மூலக்கூறு பிரிதல் ௫ நிறை கண்டுபிடித்தல் கருவி

ஒரு மூலக்கூறின் நிறையை கண்டு பிடிக்க அந்த மூலக்கூறு ஆவியாகும் தன்மை உடையதாக இருக்க வேண்டும். மூலக்கூறு வாயு வடிவில் இருத்தல் அவசியம்.

இப்போது அந்த மூலக்கூறு ஆவியாக்கப்பட்டு அடுத்த நிலை சென்று அடையும் போது எலக்ட்ரான்கள் மூலம் தாக்கப்பட்டு அந்த மூலக்கூறு நேர்தன்மை உடையதாக மாறும். அதுவே அந்த அணுவின் நிறை. M+1 சில வேளைகளில் +2 கூட மாறும்.

அதற்கு பின்னர் மேலும் பல பகுப்புகள் நடைபெறும். இவ்வாறு நடைபெறும் போது கிடைக்கப்பெறும் ஒவ்வொரு நிறைகள் கொண்டு மொத்த மூலக்கூறு எப்படி இருக்கும் என கணித்து விடலாம்.

இவ்வாறு பகுக்கப்பட்டு அவை எலக்ட்ரான் புலத்தினால் சிதறி அடிக்கப்படும், அப்படி வேகத்துடன் செல்லும் இவை காந்த புலத்தினால் சிறிய நிறை கொண்டது தள்ளி விலக்கப்பட்டும், பெரிய நிறை கொண்டது அருகில் விலக்கப்பட்டும் கண்டுபிடித்தல் கருவியை அடையும். அங்கே இதன் நிறை எல்லாம் கண்டு கொள்ளப்படும்.

இப்படித்தான் ஒரு மூலக்கூறின் நிறை கண்டு கொள்ளப்படுகிறது. ஒரே நிறை கொண்ட பல மூலக்கூறுகள் இருக்கும், இருப்பினும் இந்த முறைப்படி கிடைக்கும் வெவ்வேறு பகுப்புகளின் நிறைப்படி மூலக்கூறினை கண்டு கொள்ளலாம்.

தாலேட் இருந்த விசயம் தெரியாமல் போயிருந்தால் அன்று நான் செய்தது மிகவும் தவறாகவே முடிந்து இருக்கும்.

(தொடரும்)


Wednesday 9 October 2013

நடிகைகளும் இயக்குனர் சிகாமணிகளும்

''நாய் வேசம் போட்டா குரைக்கத்தான் வேணும்'' என எனது ஆசிரியர் ஒருவர் சொன்னார்.

''என்னதான் நான் குரைத்தாலும் நாய் போல் என்னால் குரைப்பது என்பது கடினமே, வேசம் போட்டாலும் என்னால் நாயாக ஆக முடியாது, அதனால் இந்த நாய் வேசம் எல்லாம் போட முடியாது'' என அவர் முகத்தில் அறைந்தது போன்றே சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

''இங்க வாடா'' என என்னை அழைத்து ஒரு அறை விட்டார்.

''எதுக்கு சார் இப்ப அடிக்கிறீங்க?'' என சுற்றி நிற்கும் மாணவர்கள் பார்க்கும் அவமானம் தாங்காமல் கேட்டேன்.

''நாய் வேசம் போடுன்னு சொல்றேன், ராஸ்கல் என் பேச்சை கேட்காம என்னையவா எதிர்த்து பேசற''

''என்னால முடியாது சார், அதுக்கு வேற ஆளு பாருங்க'' என திரும்பவும் சொன்னேன்.

''என்ன திமிருடா உனக்கு, நாயே'' என காலால் எட்டி உதைத்தார். அவர் சொன்னதை செய்யாமல் அடம் பிடிக்கும் என்னால் அவருக்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டது போன்றே அவ்வாறு நடந்து கொண்டார் என நினைத்தேன். ஆனால் எனக்கு நாய் வேசம் போடவே விருப்பம் இல்லை.

இனிமேலும் என்னால் பொறுத்து கொள்ள இயலாது என ஆசிரியர் என்று கூட பார்க்காமல் அவரை ஓங்கி காலால் எட்டி உதைத்தேன். எனக்கு எப்படி அத்தனை தைரியம் வந்தது என எனக்குத் தெரியவில்லை. பதவி, நிலை என காரணம் காட்டி பிறரை கொத்தடிமைகளாக வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சமூகம் என்னை மிகவும் கோபம் கொள்ள செய்தது. மாணவர்கள் அனைவரும் டேய் வாத்தியாரை அடிச்சிட்டாண்டா என்றே பேசிக் கொண்டார்கள். வாத்தியாருக்கு அடிக்கும் உரிமையை எவர் கொடுத்தது? என்னை கட்டாயப்படுத்தி ஒரு வேலையை செய்ய சொல்லும் உரிமை அவருக்கு எவர் தந்தது.

ஆசிரியர் என்னை பாய்ந்து கொண்டு அடிக்க வந்தார். நானும் விடுவதாக இல்லை. மாணவர்கள் சிலர் இடையில் புகுந்தார்கள். கல்லூரி முதல்வரிடம் அழைத்து செல்லப்பட்டேன்.

''நீ என்ன காரியம் பண்ணியிருக்க, ஒரு ஒழுக்கம் வேண்டாம்'' என முதல்வர் என்னைத் தான் திட்டினார்.

''இதோ நிற்கிறாரே அவருக்கு ஒழுக்கம் இருக்கானு கேளுங்க சார்'' என்றேன்.

''என்ன அடவாடியா என்கிட்டே பேசறே, ஒரு ஆசிரியரை நீ அடிச்சது குத்தம், நீ உன் பேரன்ட்ஸ் கூப்பிட்டு வந்து டிசி வாங்கிட்டு போ, உனக்கு இனிமே நல்ல கண்டக்ட் சர்டிபிகேட் தரமுடியாது'' என எனது பக்கம் நியாயம் எதுவும் கேட்காமல் முடிவை சொன்னார்.

''மாணவர் போராட்டம் வெடிக்கும், எப்படி காலேஜு நடத்துரனு பாக்கிறேன்'' என்றே சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

''இருப்பா'' என்றார் கல்லூரி முதல்வர். நான் நிற்காமல் வெளியில் வந்து விட்டேன். மாணவர்கள் என்ன ஆச்சு என்றே கேட்டார்கள். நடந்ததை சொன்னேன். எவரும் என் பேச்சு கேட்பதாய் தெரியவில்லை. நான் ஆசிரியரை அடித்தது தவறு என்றே சொன்னார்கள்.

கல்லூரியில் நடந்த விசயம்தனை வீட்டில் சொன்னேன். ''நாய் வேசம் போட்டு குரைச்சிட்டு போக வேண்டியதுதானே, எங்க தலைவிதி வந்து தொலையறோம், கையில காலுல விழுந்து உன்னை அங்கே படிக்க வைக்கிறோம்'' என்றே அம்மாவும் அப்பாவும் திட்டினார்கள். அன்று  மாலை எனக்கு சிறு வயதில் இருந்து தெரிந்த ஒரு அக்காவை பார்க்க சென்றேன். அவர் சினிமாவில் இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். எதற்கு நடிக்க போனார் என்றெல்லாம் நான் கேட்டதில்லை. இருப்பினும் இந்த நடிப்பு குறித்து கேட்க வேண்டும் என சென்றேன். என்னை பார்த்ததும் வா என முகம் ம்லர வரவேற்றார்.

''என்னடா நடிக்க சான்ஸ் கேட்டு வந்துட்டியா'' என சிரித்தார்.

''என்னால நடிக்க முடியாதுக்கா, நடிப்பு எல்லாம் எனக்கு வராதுக்கா'' என்றேன்.

''என்னடா சோகமா இருக்க'' என அக்கறையுடன் கேட்டார்.

கல்லூரியில் நடந்ததை சொன்னேன். அந்த அக்கா என் மேல் அதிக கோபம் கொண்டார்கள.

''ஏண்டா, இதுக்கா இப்படி ரகளை பண்ணுவ. நாய் வேசம் போட்டு குரைச்சிட்டு போகலாமேடா'' என அந்த அக்காவும் சொன்னதும் எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.

''ஏன்க்கா, படத்தில உங்களுக்கு பிடிக்காத மாதிரி நடிக்க சொன்னா என்னக்கா பண்ணுவீங்க'' என்றே கேட்டு வைத்தேன்.

''முடியாதுன்னு சொல்வேன், நடிச்சித்தான் ஆகனும்னு சொன்னா நடிச்சி தான் கொடுக்கனும். இது தொழில், இதுல முரண்டு பிடிச்சா நிலைக்க முடியாதுடா. நீ எந்த வேலைக்கும் போய்ப்பாரு, சொல்ற வேலையை நீ செய்யலைன்னா உன்னைய தூக்கிருவாங்கடா'' என அந்த அக்கா சொன்னதும் இந்த சமூகம் பற்றிய கோபம் கொந்தளித்தது.

''சுதந்திரமா நாம நினைச்சத செய்ய முடியாதாக்கா'' என்றே சோகமாக கேட்டு வைத்தேன்.

''எனக்கு நடிக்கிறது பிடிச்சி இருக்கு, அதான் வாய்ப்பு தேடி ஒரு படத்தில வாய்ப்பு கிடைச்சி இருக்கு. டைரக்டர் என்ன சொல்றாங்களோ அதை நான் அப்படியே செய்யலைன்னா இந்த பொண்ணு திமிரு பிடிச்சவனு முத்திரை குத்திருவாங்க, அப்புறம் என் கேரியர் என்ன ஆகுறதுடா. எல்லாம் டைரக்டர் கையில இருக்குடா. நான் எல்லாம் ஒரு பொம்மை மாதிரி'' என சொல்லும்போது ஏதோ ஒரு வலி இருப்பதை போன்று நான் உணர்ந்தேன்.

''அக்கா, நான் டைரக்டர் ஆகனும்க்கா'' என்றேன்.

''டே நிசமாவ சொல்ற, நடிக்க பிடிக்காதுன்னு சொன்ன, டைரக்டர்னா நடிச்சி காமிக்கனும்டா. அப்போதான் எப்படி நடிக்கனும்னு தெரியும். சில காட்சிகள் நமக்கே இயல்பா வரனும்டா, நடிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமாடா. நான் நல்லா நடிக்கிறேன்னு யூனிட்ல எல்லாரும் சொல்றப்ப சந்தோசமா இருக்கும்டா'' என அவர் சொன்னபோது டைரக்டர் கூடவா நடிக்க வேண்டும் என்றே தோணியது. நான் அமைதியானேன். இந்த இயக்குனர்கள் மனம் வைத்தால் எல்லா நடிகைகளும் ஒரு கவர்ச்சி பொருளாக சினிமாவில் வர வாய்ப்பில்லை என்றே நினைக்க தோணியது.

''கவர்ச்சியா எதுக்குக்கா நடிக்கனும்'' என நான் கேட்டது எனக்கே தப்பாக தோணியது. ஒவ்வொரு சராசரி மனிதனும் பிற பெண்களை கவர்ச்சியாக பார்க்கும் எண்ணம் பெருகி விட்ட காலத்தில் எனது கேள்வி தவறுதான்.

''இதை ஒரு கலை நோக்கில, தொலைநோக்கு பார்வையில நீ பார்க்கனும்டா, யாரும் விருப்பபட்டு இப்படி நடிக்கிறதில, ஒரு கான்செப்ட் அதுக்கு ஒரு டான்ஸ் இப்படிதான் போகும்'' என அவர் சொன்னது அவரது பக்க நியாயம் தெரிந்து கொள்ள முடிந்தது.

''எனக்கு இன்னும் அந்த பக்குவம் வரலைக்கா, வரனும்'' என மனமாற்றத்திற்கு தயாரானேன்

''இங்க பாருடா, நீ கொஞ்சம் வளைஞ்சி கொடுத்து வாழ பழகிக்கோ, எத்தனை தடவை நான் சொல்றது. எப்ப பார்த்தாலும் யாருகிட்டயாவது சண்டை போட்டு வந்து நிக்கிற, உன்னால உன் குடும்பத்துக்கு எத்தனை அவமானம். உன்னை யாருக்குடா பிடிக்கும் சொல்லுடா'' அந்த அக்காவின் வார்த்தை என்னுள் வலியை ஏற்படுத்தியது. ''டைரக்டர் ஆகனும்னா சொல்லு, இந்த படத்து டைரக்டர்கிட்ட சொல்லி அசிஸ்டெண்டா ஒர்க் பண்ண சான்ஸ் கேட்கறேன்''.

''வேணாம்க்கா, காலம் பூரா நடிக்க எனக்கு முடியாதுக்கா'' என சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து கிளம்பினேன்.

''சார், சார்' என கதவை தட்டினேன்.

''என்னடா, வீட்டுக்கே வந்துட்டியா, உன் கேரியர் பாதிக்குமேனு உன் மேல போலிஸ் கேசு போடாம விட்டது என் தப்பு'' என்றார் அந்த ஆசிரியர்

''சார், என்னை மன்னிச்சிருங்க சார், நான் நாளைக்கு நாய் வேசம் போட்டு குரைக்கிறேன்'' என்றேன்

''இப்போ மட்டும் எப்படி அறிவு வந்துச்சி, அதை முன்னமே செய்றேன்னு சொல்லி இருக்கலாமே''

''என் தப்பு தான் சார்''

''சரி போ, நான் பேசிக்கிறேன். காலேஜுக்கு நாளைக்கு வா''

நாய் போல எப்படி குரைப்பது என ஒத்திகை பார்க்க துவங்கினேன். மனிதனாய் எதற்கு பிறந்தோம், விலங்காகவே பிறந்து இருக்கலாமோ  எனும் கேள்வி என்னை துளைத்துக்கொண்டு இருந்தது!

Monday 7 October 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படைப்பாளியும்

தமிழில் இப்படி ஒரு திரைப்படம் இனிமேல் வருமா அல்லது இப்படி ஒரு திரைப்படம் வந்து இருக்கிறதா என்றெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டாம். இது ஒரு தமிழ் திரைப்படம். சற்று வித்தியாசமான தமிழ் திரைப்படம். கதையின் தொடக்கத்தில் இருந்து இறுதிகாட்சிக்கு சற்று முன்வரை  யார் இந்த ஓநாய் என்பதை சொல்லாமல் காட்சி அமைப்புகள் அமைத்த விதம் இந்த படத்தின் சிறப்பம்சம். இந்த ஓநாய்தனை சுற்றி பின்னப்பட்ட கதாபாத்திரங்கள் கதையை வெகு சுவாரஸ்யமாக நகர்த்த ஏதுவாகிறது. அதுவும் இந்த ஓநாய் பற்றிய கதையை ஓநாய் சொல்லும்போது கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. அத்தனை அருமை. பின்னோக்கி பார்த்தல் என பெரும்பாலான படங்களில் பல காட்சிகளை வைத்து நகர்த்தி இருப்பார்கள். ஆனால் இதில் ஒரு சின்ன கதையை அழகாக சொல்லி ஒரே காட்சியில் ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டார்கள்.

அவ்வளவுதான் கதை. ஆனால் சொல்லப்பட்ட விதம் சற்று வித்தியாசமானது. பிட்சா மற்றும் இது போன்ற தமிழ் படங்கள் நிறைய வர வேண்டும் என்றே சற்று தமிழ் ரசிகர்கள் ஒருவேளை  எதிர்பார்க்கலாம். ஆனால் இதே காலகட்டத்தில் தான் மற்ற மசாலா படங்கள் கூட வெற்றியும் குவிக்கின்றன. ஒரு படைப்பை இத்தனை சிரமப்பட்டுத்தான் தர வேண்டுமா என்றே பலரும் நினைக்க கூடும். மிகவும் எளிமையாக ஆறு பாடல்கள், நான்கு சண்டை காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என முடித்து செல்வதை விட்டுவிட்டு இதெல்லாம் அவசியமா என்றே குரல் எழுப்பப்படும். ஆனால் அந்த அந்த படத்திற்கு அந்த அந்த சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். தமிழ் திரையுலகில் நடிகைகளை மிகவும் நேர்த்தியாக காட்டக் கூடிய வரிசையில் இந்த இயக்குனர் இருக்கிறார் என சொல்லலாம். கவர்ச்சி காட்டித்தான் நடிகைகள் நடிக்க வேண்டும் என்பதை சற்று தமிழ் திரையுலகம் தகர்த்தி கொண்டால் நடிகைகள் மீதான மரியாதை தமிழகத்தில் சற்று அதிகம் ஆகும். ஆனால், காட்டத்தான் கவர்ச்சி, காணத்தான் கவர்ச்சி என சொல்லி விட்டார்கள்.

 படத்தில் இசையை பற்றி சொல்ல வேண்டும். எனக்கு இசையை பற்றி அதிகம் தெரியாது என்றாலும் கூட ஏதோ ஒருவித இசை உணர்வு படத்துடன் ஒன்றியே இருந்தது. இன்ன இன்ன காட்சிக்கு இப்படித்தான் இசையை எழுப்ப வேண்டும் என ஒரு இசை மேதைக்கு தெரியாமல் இருந்தால் மட்டுமே ஆச்சர்யப்பட வேண்டும். பாடல்கள் இல்லாத படம் இது என்று சொல்ல முடியாது. ஒரு அருமையான பாடல் ஒன்று சில வரிகளில் வந்துவிட்டு போகும். காட்சிக்கு ஏற்ற அமைப்பு.

படம் குறித்து ஒவ்வொரு பிரதியையும் விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்கு திரைப்பட நுணுக்கம் தெரியாது என்பதால் ஒரு படைப்பாளியின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இது ஒரு உயர்ந்த படைப்பு தான். சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் நபர், அவரை புறக்கணிக்கும் சமூகம். உதவிக்கு வராத மருத்துவத்துறை, காவல் துறை என எத்தனையோ முறை பார்த்தாகிவிட்டது. ஆனால் அடுத்த கட்ட காட்சி தமிழ் திரையுலகுக்கு சற்று புதிது, அல்லது நான் பார்க்க தவறி இருக்கலாம். ஆதி காலத்தில் இருந்து இது வரை உடலில் குண்டு பட்டால் ஒரு கத்தியால் குத்தி கிளறி குண்டுதனை எடுத்து போட்டுவிட்டு ஒரு கட்டுடன் சென்றுவிடுவார்கள். ஆனால் இங்கே மண்ணீரல்தனை வெளி எடுத்து விடுவது போன்ற காட்சி அமைப்பு.  மண்ணீரல்தனை எடுத்து விட்டால் என்ன ஆகும் என்பதை விளக்க இது அறிவியல் படம் அல்ல. எப்படி எடுப்பது என்பதுவும், அந்த காட்சியும் தொழில்நுட்பம் இல்லாத காலம்தனை சொல்லி சென்றது. ஆதிகாலத்தில் இப்படித்தான் மருத்துவம் பார்த்தார்கள், இதன் காரணமாக பாக்டீரியாக்கள் மூலம் நோய் பரவி மக்கள் இறந்து கூட போனார்கள்.

ஒருவரை பார்த்து நீ சிறந்தவன் என சொல்லிவிட்டால், சிறந்தவராக இருக்க வேண்டும் என அந்த நபர் நினைப்பது மனித இயல்பு. டாக்டர் என சொன்னதும் டாக்டர் என நினைப்பதுவும், செயல்படுவதும் தன்னம்பிக்கையின் அடையாளம். இப்படித்தான் படத்தில் ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டு இருக்கிறது. இறுதி காட்சியில் மனம் சற்றே கனக்கிறது. வாழ்த்துகள் மிஸ்கின்.

கல்விக்கும், கலைக்கும் செல்வம் தலை வணங்க வேண்டும். ஆனால் செல்வத்தின் முன்னர் இந்த இரண்டுமே பிச்சைக்காரர்கள் போல் காட்சி அளித்து கொண்டு இருக்கிறது. இந்த வியாபார உலகில் நேர்மையான கல்வி, அற்புதமான படைப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். இந்த வியாபார உலகில் கலையை வியாபாரமாக்கிட நினைக்கும் எந்த ஒரு படைப்பாளியும் உன்னதமான படைப்பினை தர இயலாது. ஒரு படைப்பாளி தனது படைப்பின் வெற்றியை வணிக ரீதியாக கணித்து கொள்வான் என்றால் அவனுக்கு இது போன்ற படைப்புகள் தோல்வியே.

இணைய உலகில் இப்போது எந்த படங்களும் திரையரங்குகளுடன் சேர்ந்தே வெளி வந்து விடுகின்றன. உலக நாடுகளில் எல்லா நாடுகளிலும் தமிழ் படங்கள் திரையிடப்படுவதில்லை. தமிழகத்தில் வெளிவந்த ஒரே வாரத்தில் சிடிக்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இப்படி ஒரு படைப்பை பார்ப்பதினால் படைப்பாளி பாதிப்புக்கு உள்ளாகின்றான். அவனது படைப்பு வணிக ரீதியாக தோல்வி அடையும்போது அது போன்ற முயற்சிக்கு அவனால் செல்ல இயல்வதில்லை, யாரும் துணை வருவதில்லை.

இதை எல்லாம் எப்படி தடுப்பது? முடியாது என்பதன் காரணமாகவே தமிழில்  மசாலா படங்கள் பெருகி போய்விட்டன. திரை அரங்குக்கு சென்று காணும் கூட்டம் அதற்கென்றே இருக்கிறது.

படைப்பாளி தனது படைப்பிற்கு விலை பேசக் கூடாது! விலை பேசும் நிலை வந்துவிட்டால் தனது படைப்பை பற்றி கவலை படக்கூடாது. தனது படைப்பா, பணமா என்பதை படைப்பாளி தேர்வு செய்யட்டும்.