Tuesday 19 November 2013

அடியார்க்கெல்லாம் அடியார் 36

'யார் சொல்லி நீவீர் இங்கு வந்தீர், உம்மை விட்டு பிரிந்தே யாம் இந்த நிலை எடுத்துக் கொண்டோம், எதற்கு எம்மை தேடுகிறீர்''

''ஒழுங்கா பேசுங்கோ, நீங்க எதுக்கு அந்த வைஷ்ணவியை ஏமாத்தினேள், இப்போ அந்த பொண்ணு வேற கல்யாணம் பண்ணிக்கப் போறா, அதான் உங்களோட நான் வாழ முடிவு பண்ணி இருக்கேன், இந்த சிவன் வேசம் கலைச்சிருங்கோ'' 

''யான் இதில் இருந்து பௌத்த வேடம் தரிக்க இருக்கிறேன், நீயும் பௌத்த வேடம் தரித்து கொள். எனது அடியாராக இருக்க சம்மதம் எனில் தொடர்ந்து ஏதும் பேசாமல் என்னுடன் வந்து கொண்டிரு, இல்லையெனில் என்னைப் பெற்றெடுத்தவர்களுடன் நீயும் சென்று விடு''

கண்களில் கண்ணீர் பொங்கிட ருக்மணி மதுசூதனனைப் பார்த்தாள். 

''ஏனிப்படி ஒவ்வொரு வேடம் தரித்து கொண்டு ஊர் ஊராக அழையனும், நாம ஊரில போய் சேர்ந்து வாழலாம்''

மதுசூதனன் ருக்மணியை பரிதாபமாக பார்த்தான். 

''எமது அடியாராக வருவீர் என்றே எம்மை எம்முடன் அழைத்தோம், விருப்பம் இல்லையெனில் திரும்பவும்'' என மதுசூதனன் சொன்னதும் கோபம் கொண்ட ருக்மணி விறுவிறுவென வைஷ்ணவி வீடு நோக்கி போனாள். மதுசூதனன் தனது பயணத்தைத் தொடர்ந்தான். 

''எங்கே அவன்'' என மதுசூதனின் பெற்றோர்கள் கேட்டார்கள். அவா என்னோட வாழ மாட்டேன்னு சொல்லிட்டு போறார் என அழுதாள் ருக்மணி. வைஷ்ணவிக்கு என்ன செய்வது என புரியவில்லை. திடீரென் யோசித்தவளாய் வேகமாக வீட்டிலிருந்து வெளியில் ஓடினாள். மதுசூதனனை கண்டு இடைமறித்தாள். கதிரேசனும், ருக்மணி, பெற்றோர் என  உடன் ஓடி வந்து சேர்ந்தனர். 

''உனக்கு என்ன வேணும், இப்போ என்னை பொண்ணு பார்க்க வந்தது இவங்கதான், இப்ப சொல்லு'' என்றாள் வைஷ்ணவி. 

''புத்தி பேதலித்து வந்து இருப்பார்கள், யாம் இனி திருமணம் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. உம்மை இனிமேல் எம்மால் காதல் புரியவும் முடியாது, வேணுமெனில் நீவிரும் அடியாராக எமக்கு வரலாம்'' என நடந்தான் மதுசூதனன். 

''நில்லுடா மதுசூதனா'' என்றான் கதிரேசன். அவன் போட்ட சப்தத்தில் அங்கே நடந்து கொண்டு இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். உன்னை போலீசில் புகார் கொடுத்து ஜெயிலுல அடைச்சிருவோம், ஜாக்கிரதை.

''தாராளாமாக செய்யலாம் எமது அடியாரே, நீவிர் முதலில் திருமண பந்தம் விட்டு எம்மோடு வாரும், யாம் நாளையில் இருந்து புத்த பிட்சுவாக மாற்றம் கொள்ள இருக்கிறோம். இந்த இந்தியாவில் பௌத்தம் மீண்டும் தழைக்க யாமே அவதாரம் எடுத்து உள்ளோம். இனி எமது பெயரை திரிகோடன் என்றே மாற்றம் செய்வோம்'' என்றான் மதுசூதனன். 

''உனக்கு பைத்தியமாடா பிடிச்சி இருக்கு, இதோ இந்த ரெண்டு பொண்ணுகளோட வாழ்க்கையை பத்தி யோசிச்சியா, உன்னை காதலிச்ச ஒரே காரணத்திற்கு உன்னை மறக்க முடியாம அதோ அவ தள்ளாடிட்டு இருக்கா, இதோ இவங்க உன்னை கல்யாணம் பண்ணின பாவத்திற்கு உன்னை தேடி வந்து நிக்கிறாங்க, புரிஞ்சிக்கோடா'' 

''யாம் சொன்னது சொன்னதுதான், அனைவரும் எமது அடியாராக மாறிவிடுங்கள், இன்று இரவு சிவன் கோவிலில் ஒரு சொற்பொழிவு இருக்கிறது அங்கு வந்து எம்மை சந்தியுங்கள், அங்கே உங்கள் அனைவரையும் சிந்திக்க வைப்பேன். 

அவன் போகட்டும் விடுப்பா, என்றே மதுசூதனின் தந்தை சொன்னார். யாரும் எதிர்பாராத விதமாக மதுசூதனின் தாய் அவனது கால்களை பற்றி கதறினார். எங்க கூட வந்துருப்பா எனும் குரல் கதிரேசனை மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. 

மதுசூதனன் குனிந்து அன்னையின் கரம் பற்றி தூக்கினான். ''யாம் இனி திரிகோடன், எம்முடன் நீவிர் வந்தால் சிவன் ஆலயத்தில் ஓரிடம் உங்களுக்கு தர செய்து அங்கே எமது அடியாராக தொடரலாம், இதை மீண்டும் மீண்டும் எம்மால் சொல்ல இயலாது. வருவது எனின் வாருங்கள், இல்லையேல் கோவிலில் சந்திப்போம். மதுசூதனன் விறுவிறுவென நடந்தான். கதிரேசன் அவனை விரட்டி கொண்டு போனான். 

(தொடரும்) 




Thursday 14 November 2013

இன்னுமொரு கிரகத்தில் மனிதர்கள்

எத்தனை கதைகள் வந்து இருக்கும், எப்படி எல்லாம் மனிதர்கள் கற்பனையில் வேற்று கிரகவாசிகள் வந்து போய் இருப்பார்கள். உயிரினங்கள் பூமியில் இருந்து தோன்றி இருக்காது எனவும்,வேறு ஒரு கிரகத்தில் இருந்தே வந்து இருக்க கூடும் என்றே ஒரு கோட்பாடு உண்டு.

இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் கிட்டத்தட்ட பத்து பில்லியன்கள் வருடங்கள் முன்னர் தோன்றி இருக்க கூடும் என்பது ஒரு தோராயனமான கணிப்பு, இது கிட்டத்தட்ட நமது சூரியக் குடும்பம் தோன்றியதற்கு முன்னர் உள்ள கணிப்பு. இன்றுவரை பலரும் வேறு கிரக உயிர்கள் சாத்தியம் என்றே நம்புகிறார்கள். ஆனால் இதுவரை அப்படி கிரக உயிர்கள் இருப்பதாக எந்த ஒரு அடையாளமும், குறிப்புகளும் கிடைக்கவில்லை.

தேவலோகம், இந்திரலோகம் என்றெல்லாம் எதை வைத்து கற்பனை செய்தார்கள் என புரியாத புதிராக இருக்கிறது. ஒருவேளை அப்படி இருந்து அவை எல்லாம் பிற்காலத்தில் நம்மை விட்டு வெகு தூரம் சென்று விட்டதா என எந்தவொரு அடையாளம் இல்லை. வைகுண்டம் எல்லாம் எங்கே இருக்கும் என்றே மிகவும் யோசனையாக இருக்கிறது. இவை எல்லாம் கற்பனை என்றே புறந்தள்ளிவிட முடியாது. புராணங்கள் கணக்குப்படி அன்றைய கால கட்ட மனிதர்களின் வயது காலம் பன்மடங்கு இருந்தது என்றே குறிக்கிறது.

இந்த பிரபஞ்சத்தில் பூமிக்கு என்று மட்டுமே ஒரு சிறப்பு தன்மை இல்லை, இதைப்போல பல கிரகங்கள் பிரபஞ்சத்தில் உண்டு என சொல்வது புராணங்கள் அல்ல, மாபெரும் அறிவியலாளர்கள். வியாழனின் கிரகத்தில் ஈரோப்பா நிலா, சனி கிரகத்தின் என்செலாடஸ் எனும் நிலா போன்ற இடங்களில் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

நவம்பர் நான்காம் தேதி 40 பில்லியன் பூமி போன்ற கிரகங்கள் இருப்பதாகவும், அதில் 11 பில்லியன் பூமி போன்ற கிரகங்கள் சூரியன் போன்ற நட்சத்திரங்களை சுற்றி வருவதாக சொல்லப்படுகிறது. இரண்டு வருடங்கள் முன்னர் வேற்றுகிரகவாசிகள் எவரேனும் தொடர்பில் உள்ளனரா என அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மனு தரும் அளவிற்கு மனிதர்கள் சிலர் வேற்று கிரக வாசிகள் இருப்பதாகவே நம்புகிறார்கள்.

இந்த பூமி எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் இருந்தவர்களுக்கு அமெரிக்காவில் இருந்தவர்களை தெரியாது. ஆனால் மனிதர்கள் இங்கும் அங்கும் இருக்கவே செய்தார்கள். இவர்களுக்கான தகவல் தொடர்பு, வழித் தொடர்பு என எதுவும் இல்லை. ஆப்பிரிக்காவில் தொடங்கிய மனித சமூகம் உலகமெலாம் பரவியது என இருப்பினும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட முப்பது நாற்பது வருடங்கள் முன்னர் வெளிநாடு என்றாலே பெரிய விசயமாக கருதப்பட்டது. ஆனால் இன்று மூலை முடுக்கெல்லாம் எல்லா நாடுகளும் தெரிகிறது

இதே போலவே வேறு கிரகத்தில் நம்மை போலவே மனிதர்கள் இருந்தாலும் அவர்களை தொடர்பு கொள்ளும் தொலைவில் நாம் இல்லை. ஏனெனில் பன்னிரண்டு ஒளிவருடங்கள் தொலைவில் ஒரு பூமி போன்ற கிரகம் உள்ளது. ஒரு ஒளிவருடம் என்பது ஒரு வினாடிக்கு 300000000 மீட்டர்  என கணக்கில் சொல்லப்படுகிறது. இதை ஒருநாள், ஒருவாரம், ஒரு மாதம் ஒரு வருடம் என கணக்கில் கொண்டு பார்த்தால் மிக அதிக தொலைவு என்பது புலப்படும். மனித வாழ்நாள் குறைந்து போனதால்.பல விசயங்கள் சாத்தியம் அற்றதுதான்.

ஒரு உயிரினம் தோன்ற மிக முக்கியமாக கார்பன், ஹைட்ரஜன்,ஆக்சிஜன், நைட்ரஜன், என்பதோடு பாஸ்பரஸ்,கந்தகம் தேவைப்படுகிறது. முக்கியமான வேதி வினைகள் நடைபெற தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை எல்லாம் இருந்துவிட்டால் உயிரினம் சாத்தியம் என்றே கருதப்படுகிறது.

நமது சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்து இருக்கலாம் என்பது பலரின் அசைக்க முடியாத நம்பிக்கை.இந்த அறிவியல் எப்படி வேண்டுமெனில் தேடட்டும்,

இன்னுமொரு கிரகத்தில் இருக்கும் மனிதர்கள் நம்மை தொடர்பு கொள்ள, நாம் அவர்களை தொடர்பு கொள்ள இன்னுமொரு யுகம் ஆகலாம்.

 

Monday 4 November 2013

தமிழ் எதிரி

ஐரோப்பா நாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் அங்கே எழுதப்பட்டு இருக்கும் எழுத்துகள் என்னால் வாசிக்க இயலும் ஆனால் அர்த்தம் புரிந்து கொள்ள இயலாது. அந்த எழுத்துக்கள் ஆங்கில உருவில் தான் இருந்தன. அப்போது எனக்குள் தோன்றியது எல்லாம் தமிழை இப்படி செய்து விடலாமே என்றுதான். தமிழ் அழிகிறது என சொல்பவர்களுக்கு தமிழை காப்பாற்ற இதுதான் வழி என்றே எனக்குள் பலமுறை தோன்றியது உண்டு. ஆனால் தமிழ் மீது கொண்ட பாசம் தமிழ் எழுத்துக்கள் தொலைந்துவிடக் கூடாது எனபதில் தான் இருந்தது.

இந்த இணையத்தில் நான் முதன் முதலில் எழுத வந்தபோது ஆங்கில எழுத்துருவில் தான் எழுதினேன். ஆனால் அதற்கு நான் பட்ட அவஸ்தைகள் எனக்கு மட்டுமே தெரியும். எப்படியாவது தமிழ் எழுதும் விசைப்பலகையை கண்டு கொள்ள வேண்டும் எனும் உத்வேகம் தமிழ் எழுதும் எழுத்துருவினை கொண்டு வந்து என்னிடத்தில் சேர்த்தது.

என்னதான் தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதினாலும் தமிழை தமிழ் எழுத்துகளால் எழுதும் ஒரு ஜீவன் அதில் இருப்பது இல்லை. என்னதான் ஒரு பெண்ணின் மடி என்றாலும் தாய் மடி போல் அமைவது இல்லை. டைப்ரைட்டர் காலத்தில் இருந்தது போல இப்போது விசைப்பலகை எல்லாம் தமிழில் வந்து கொண்டிருப்பதால் தமிழ் எழுத்துருவை கற்று கொள்வதில் தான் அந்த மொழியின் சிறப்பு இருக்கிறது.

எழுத்துருவு மாற்று கருத்து என்னை போன்ற வெளிநாட்டில் வாழ்ந்து தமிழை தனது சந்ததிக்கு தராமல் தொலைத்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் சரியாகவே பொருந்தும். இலங்கை வாழ் தமிழர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு சென்றாலும் தமிழுக்கு முன்னுரிமை தந்து தனது சந்ததிகளுக்கு தமிழை போதிக்கிறார்கள். அது கூட காலபோக்கில் குறைந்துவிடும்.

ஒரு தமிழ் நாவலை வெளியிட்டபோது தமிழர்கள் பலர் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட முடியுமா என்றே கேட்டார்கள். எனக்கோ தமிழ் மொழியை தமிழ் மொழியில் படித்தால் மட்டுமே தமிழ் மொழிக்கு சிறப்பு என்றே தோணியது. நீங்கள் தமிழ் மொழி கற்று கொள்ளுங்கள் என்றே சொல்லி முடித்துவிட்டேன்.

எந்த ஒரு மொழியும் தன்னகத்தே மாற்றத்தை ஏற்றுக்கொண்டு நடமாடும் நிலை வந்தால் ஒழிய அந்த மொழி அழிந்து போகும். சமஸ்கிருதம் ஒரு உதாரணம். மேலும் ஒரு மொழியின் பயன்பாடு ஒரு இனத்துடன் இருப்பது கூட அந்த மொழியின் வளர்ச்சியை தடை செய்யும்.

இதற்காகவே தமிழ் மொழியில் இருக்கும் இலக்கியங்கள் எல்லாம் பிற மொழிக்கு மொழி பெயர்த்து இருந்திருக்க கூடாது என்றே கருதுவேன். வேண்டுமெனில் வந்து தமிழ் படி எனும் ஒரு உறுதியான நிலை எடுத்து கொளல் வேண்டும்.

தமிழில் ஆங்கிலம் கலந்துவிட்டது. ஒருவர் அருமையாக சொன்னார், அதிர்ஷ்டத்திற்கு லக் என்பது தமிழ் மொழி என! என்றோ எழுதியது இன்னும் நினைவில் இருக்கிறது. தமிழ் எண் சொல் என கேட்ட நண்பனிடம் 1 2 3 எழுதி தந்துவிட  இதுவா தமிழ் எண் என கேட்டு அன்றைய எனது முட்டாள்தனம் எனக்கு புரிந்து போனது.

இனி எப்படி தமிழ் வாழும் என்பது தமிழகத்தில் வாழ்பவர்களை பொருத்தே அமையும். பிற நாடுகளுக்கு செல்பவர்கள் தமிழ் சங்கம் என வைத்து தமிழ் வளர்த்தாலும் இனி வரும் காலங்களில் தமிழ் பிற நாடுகளில் தொலையும். எப்படி பண்டிகைகள் இந்திய பண்டிகைகள் என அடையாளம் கொண்டவனோ அதைப்போல தமிழ் உலக மொழி எனும் அந்தஸ்தை அடையப் போவதில்லை. ஆங்கிலத்தை இனி வெளியேற்றுவது கடினமான செயலே.

தமிழ் அழிந்து போகும் எனில் அதற்கு காரணம் நாம் தான். அடுத்த சந்ததிகளுக்கு முறையாக தமிழை கொண்டு சேர்க்காமல் போகும் என்னை போன்ற பெற்றோர்களே தமிழுக்கு மாபெரும் அநீதி இழைக்கிறார்கள்.