Monday 5 December 2016

பெருந்துயரம் - மரணம்

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை 17

காலையில் வேலைக்குக்  கிளம்பிச் செல்லும் முன்னர் எனது வேலை இடத்து மேற்பார்வையாளர்  நோயை எதிர்த்துப் போராடி இன்று அதிகாலை மருத்துவமனையில் அமைதியாக இறந்துவிட்டார் என்று எனது மற்றோரு பேராசிரியரிடம்  இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.

எனக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. எவருக்கு  மரணம் ஏற்படக்கூடாது என்று கடந்த ஒரு வருடமாக  வேண்டிக்கொண்டு இருந்தேனோ அவர் இப்போது மரணம் அடைந்த செய்தி என்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஒரு நல்ல நண்பரை, ஒரு சகோதரரை, ஒரு நல்லாசிரியரை இழந்து விட்டேன்.

நான் அவரை மார்ச் மாதம் 2003ல் சந்தித்தேன். அன்றிலிருந்து இன்று வரை அவரின் மேற்பார்வையில் தான்  வேலை செய்து வந்து இருக்கிறேன். எனது ஒவ்வொரு ஆராய்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர். அறிவிற்சிறந்தவர். சிறு வயதிலேயே கல்லூரியில் உயர் பதவி பெற்றவர் என்ற பெருமை உண்டு. அவரது சிந்தனை செயல் எல்லாம் ஆராய்ச்சிதான்.

இத்தாலியில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்து இங்கிலாந்தில் ஆராய்ச்சிப் பயணத்தைக் தொடங்கியவர். ஆராய்ச்சி தவிர்த்து  அவ்வப்போது கிரிக்கெட் பற்றி மட்டுமே என்னிடம் பேசுவது உண்டு. சில நாட்கள் முன்னர் கூட இந்தியாவில் செல்லாத பணம் குறித்த அறிவிப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார். இவரைப் போல ஆராய்ச்சிச் செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தை எப்போதும் தூண்டிக்கொண்டே இருப்பார்.

பதின்மூன்று வருட காலப் பழக்கம். சென்ற வருடம் இவருக்கு கேன்சர் என்று என்னிடம் சொன்னபோது எனக்கு அழுகை வந்துவிட்டது. ஆனால் இவரது மன தைரியம் தனக்கு நோய் இருந்தது போலவே இவர் காட்டிக்கொள்ள வில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வார காலத்தில் கூட வேலை குறித்து மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டு இருந்தார்.

எல்லாம் சரியாகி மீண்டும் வேலைக்கு வந்து சேர்ந்தார். திடீரென சில மாதங்கள் முன்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆராய்ச்சியைச் செய்ய உன்னைத் தனியாக விட்டுவிட்டேன் அதற்காக என்னை மன்னித்துக் கொள் என்று கூட மின்னஞ்சல் எழுதிக் கொண்டு இருந்தார். குணமாகி வாருங்கள், நான் சமாளித்துக் கொள்கிறேன் என்று மட்டுமே சொல்லத் தெரிந்தது எனக்கு அன்று.

மீண்டும் சரியாகி வந்தவர் சோர்வாகவே காணப்பட்டார். இரண்டு வாரங்கள் முன்னர் bone marrow transplant பண்ண வேண்டும் அதற்கான நபர் கிடைத்துவிட்டார் என மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார்.

அவர் மூன்று மாத காலத்திற்கு ஆராய்ச்சிக்குத் தேர்ந்தெடுத்த ஒரு மருத்துவத்துறை மாணவனை கடந்த மூன்று மாதங்களாக நான் மேற்பார்வை செய்ய வேண்டியது இருந்தது. அவன் எழுதும் ரிப்போர்ட் நான் சரி பார்க்கவா என்றபோது நான் சரி பார்த்து அனுப்புகிறேன் எனக் கூறிவிட்டார். அவர் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முதல் நாள் கூட ஆய்வகத்தில் வந்து எனக்கு உதவி செய்து கொண்டு இருந்தார். சீக்கிரம் குணமாகி வாருங்கள் என்று சொன்னபோது கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னர் வந்து விடுவேன் என்று சொல்லிச் சென்றார்.

அவரின் முழு முயற்சியால் தான் நான் இன்னமும் இந்த ஆராய்ச்சி வேலையைச் செய்து கொண்டு இருக்கிறேன். சில வாரங்களுக்கு முன்னரே அவரது செய்முறை பயிற்சி வகுப்புகள் எல்லாம் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள். அப்போது அதற்கான ஏற்பாடுகளை என்னை  பண்ணச் சொல்லி எனது பேராசியர் சொன்னபோது தான் எல்லாம் ஏற்பாடு பண்ணிவிட்டதாக மருத்துவமனையில் இருந்தே மின்னஞ்சல் எழுதினார்.

எல்லா மருத்துவ சிகிச்சை நல்லபடியாக முடிந்து தேறி வந்து கொண்டிருந்தார். இந்த வாரம் வீட்டிற்கு வந்து விடுவார் என்று சொல்லி இருந்தார்கள். அவருக்கு ஒரு முறை மட்டுமே மின்னஞ்சல் அனுப்பி விரைவில் குணமாகி வாருங்கள் என்று சொல்லி இருந்தேன். அவரிடம் அதற்குப் பதில் இல்லை. இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகவே சென்று இருக்கிறார் என்று மனமும் நினைத்துக் கொண்டு இருக்கிறது. அவர் இப்போது உயிரோடு இல்லை என்று நினைத்தால் மனதில் பெரும் வலி உண்டாகிறது. அவரது மனம் ஒத்துழைத்த அளவிற்கு அவரது உடல் ஒத்துழைக்க வில்லை.

அவர் உயிருடன் இருந்தபோது மரணத்தை விட நோய் கொடியது என்றே நினைத்தேன். அவர் இறந்த பின்னர் மரணம் நோயை விடக் கொடியது என்றே நினைக்கிறேன்.

மிகவும் ஒரு  நல்ல மனிதரை, நல்ல ஆராய்ச்சியாளரை இத்தனை விரைவாக இழந்து நிற்கிறேன் என்பதே பெருந்துயரமாக இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

(தொடரும்)




Monday 7 November 2016

நுனிப்புல் பாகம் 3 10

நுனிப்புல் பாகம் 3 9

இந்த மாதவி குறித்து தனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் பாரதியை மிகவும் ஆட்டி வைத்தது. இவ்வுலகில் நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவியல் உலகம் ஓரளவுக்குத் தெரிந்து வைத்து இருக்கிறது. தனிப்பட்ட மனித வாழ்வில் என்ன நடக்கும் என்பதை ஓரளவு தீர்மானிக்க இயலும் என்பதை எவரும் மறுக்க இயலாது.

ஒரு வாரம் மேல் ஆகியும் மாதவி எவ்வித தொடர்பும் இன்றி இருந்தாள். பாரதி கொஞ்சம் கொஞ்சமாக மாதவி குறித்த நினைவுகளில் இருந்து மீண்டு கொண்டு இருந்தாள். எவரையும் சந்திக்காமல் கல்லூரி, வீடு என ஒரு வாரம் கழிந்து போனதை பாரதி எண்ணிக்கொண்டு இருந்தாள்.

''பாரதி, உன்கிட்ட பேசனும்''

சுந்தரன் தன்னைத் தேடி வருவான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பறவைகளையோ, விலங்குகளையோ மரம் தேடிச் செல்வது இல்லை.

''என்னடா பேசனும்?''

''பிரபா என்னை வேணாம்னு சொல்லிட்டுப் போயிட்டா, வேலை கூட மாறிப் போயிட்டா''

''போகாம என்ன செய்வா, திமிர் பிடிச்சி அலைஞ்சா என்ன செய்வா''

''என்னை நீ காயப்படுத்தாத பாரதி''

''ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ. நம்மை பாதுகாத்து நமக்கு அடைக்கலம் தந்து வாழ வைக்கிற மனுசங்களுக்கு எப்பவும் நன்றியுள்ளவங்களா இருக்கனும், அதை நீ முதலில் கத்துக்கோ''

''எனக்காக நீ பிரபா கிட்ட பேச முடியுமா?''

''அவகிட்ட நா எதுக்கு உனக்காக பேசனும்''

''நான் உன்னை லவ் பண்றேன் அப்படினு நினைக்கிறா''

''அதுக்கு நா என்ன பண்ண முடியும், தேவை இல்லாம பிரச்சினை பண்ணாத''

''நீ வந்து நாம லவ் பண்ணலைன்னு சொல்லனும்''

''சொன்னா''

''என்னை அவ ஏத்துப்பா''

''எதுக்கு வேலைய விட்டுப் போனா''

''எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க அதான் வேற வேலை கிடைச்சதுனு போயிட்டா''

''இது என் லவ்வரு, பேரழகினு சொல்லிட்டுத் திரிஞ்சிருப்ப''

''ஹெல்ப் பண்ணு பாரதி''

''சரி அவ போன் நம்பர் கொடு''

''இல்லை நேர்ல போய் பேசிட்டு வருவோம்''

''உன்னோட ஒரே ரோதனையாய் போச்சுடா, சரி வா''

ஒன்றிலிருந்து மெதுவாக விலகி பின்னர் சம்பந்தமே இல்லாமல் போக ஒன்று மனக்கசப்பு உண்டாகி இருக்க வேண்டும் அல்லது மறறொன்று கிடைத்திருக்க வேண்டும். இந்த மனிதர்களின் வாழ்வை ஒரு சிறு வட்டத்திற்குள் அடைத்து விடலாம்.

இந்த பிரபஞ்சம் எத்தனை பெரிதாக இருந்தால் என்ன, அந்த பிரபஞ்சத்தில் எத்தனை நாடுகள் இருந்தால் என்ன அந்த நாட்டில் எத்தனை மக்கள் இருந்தால் என்ன. எல்லாம் ஒரு சின்ன வட்டம் தான்.

சுந்தரனுடன் சேர்ந்து பாரதி பிரபா வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தாள். மாதவியிடம் இருந்து அழைப்பு வந்தது.

''பாரதி, எப்படி இருக்க, சமாதான தூதுவர் ஆகிட்ட போலிருக்கு. ஒரு வாரமா பேச்சையே காணோம்''

''உன்னோட எனக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு மாதவி, நான் இந்த ஒரு வாரம் மௌன விரதம்''

''மௌன விரதம் என்னோட மட்டுமா இல்லை ஊரு உலகத்துக்கு கூடவா''

''இப்போ எதுக்கு போன் பண்ணின, அதுவும் சமாதான தூதுவர்னு சொல்ற''

''என்ன பாரதி, கோபமா இருக்க. மௌன விரதம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? நான் கூட அடுத்த வருஷம் வைகுண்ட ஏகாதசிக்கு முழு நாளும் மௌன விரதம் இருக்கப்போறேன். அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. அப்போ நீயும் ஊர்லதான் இருப்ப''

''மாதவி இப்படி பொடி வைச்சி பேசறதை நீ நிறுத்து. உனக்கு எல்லாம் தெரியும்னு எனக்கும் தெரியும். இப்போ நான் சுந்தரன் விஷயமா போய்கிட்டு இருக்கேன்''

''காதல் மன்மதன் சுந்தரன் என்ன சொல்றான், பிரபா என்ன கோவிச்சிக்கிட்டுப் போயிட்டாளா? சரி சரி நீ சமாதானம் செஞ்சு வை. நான் உன்னைக் கூப்பிட்டதற்கு முக்கிய காரணம் ஒரு பத்து நாட்கள் சென்னைக்கு வர இருக்கேன். உன் வீட்டுல எனக்குத் தங்க இடம் கிடைக்குமா?''

''என்ன சொல்ற, எப்போ வரப்போற? என்ன விசயம்''

''தங்க இடம் கிடைக்குமா?''

''அதெல்லாம் இடம் இருக்கு, எப்போ வரேன்னு மட்டும் சொல்லு''

''ஒரு முக்கியமான விசயம் பாரதி. கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லப் பழகிக்கிட்டோம்னு வைச்சிக்கோ நம்ம அறிவுத்திறன் பாதுகாக்கப்படும், வைச்சிருரேன்''

''ம்ம்''

''போன்ல யாரு மாதவியா?''

''ஆமா, அதைப்பத்தி உனக்கு என்ன?''

''நீ மாதவியை விட அழகா அறிவா இருக்க ஆனா உனக்கு எதுக்கு வாசன் மேல ஆசை''

''சுந்தரா, இனி ஏதாவது பேசின அப்படியே திரும்பிருவேன்''

''மன்னிச்சிரு பாரதி''

பிரபாவின் வீட்டை அடைந்ததும் பிரபா மட்டுமே வீட்டில் இருப்பது தெரிந்தது. பெருங்கூட்டமொன்றில் அவரவருக்கான சுதந்திரம் என்பது தனிமை. இவ்வுலகில் நம்மைப்போலவே நல்லவர்களாக இருப்பார்கள் என எண்ணும்  நபர்கள் ஒருவகை. அனைவருமே மோசமானவர்கள் என எண்ணும்  நபர்கள் இன்னொருவகை.

அதே இவ்வுலகில் உத்தமர்களாக இருப்பவர்கள் மீது கூட அவச்சொல்லை வீச சிலர் தயங்குவதே இல்லை. மேலும் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் எந்த ஒரு தொழிலும் எவரும் நிலைத்து இருக்க இயலாது என்பதை பலரும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். இந்த பிரபா அப்படிப்பட்ட ஒருவராக இருக்கலாம்.

''சுந்தரா, உனக்குப் பிடிச்சிருக்கு அங்கிருதுக்காக அவளுக்கும் பிடிக்கனும்னு நினைக்கிற உன் நினைப்புல மண்ணை அள்ளிப்போடனும்''

''பாரதி, பிரபாகிட்ட நல்லா பேசு''

''சுந்தரா, ரகசியமான நட்பு, ரகசியமான உறவு அப்படிங்கிற ரகசியமான எதுவுமே நிம்மதியான மகிழ்ச்சியை யாருக்கும் தராது''

''பிரபா, பிரபா''

வீட்டின் கதவைத் தட்டி பிரபாவை பாரதிதான் அழைத்தாள். வீட்டின் கதவைத் திறந்து கொண்டு பிரபா வந்து நின்றாள்.

''என்ன வேணும்''

''சுந்தரன் விசயமா பேசணும்''

''தனிப்பட்ட விசயத்தில் தலையிட வேண்டியது இல்லை, உள்ளே வாங்க''

சுந்தரன், பாரதி வீட்டிற்குள் நுழைந்தனர். வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. இருவருக்கும் பழச்சாறு கொண்டு வந்து வைத்தாள். பிரபாவிடம் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னாள் பாரதி. அனைத்தையும் கேட்டுவிட்டு பிரபா மிகவும் அமைதியாக எனக்கு இவனைப் பிடிக்கலை என முடித்துக் கொண்டாள்.

சுந்தரன் பாரதியை நோக்கி எல்லாம் உன்னாலதான் என சத்தம் போட்டான். பாரதி அதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் பிரபாவிடம் நிறைய நேரம் பேசி ஒருவழியாக அவளை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்துவிட்ட நிம்மதி பாரதிக்கு இருந்தது.

சமாதான தூதுவருக்கு வாழ்த்துக்கள் என மாதவி ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள். பாரதிக்கு படுங்கோபம் வந்தது. மாதவி சென்னைக்கு வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் என முடிவுக்கு வந்தாள்.

(தொடரும்)


Monday 17 October 2016

செவ்வாய் கிரகத்தில் நான்

part 2

நான் செவ்வாய் கிரகத்திற்கு சென்றது போன்ற கனவு கண்டேன். ராக்கெட்டில் சென்று செவ்வாய் கிரகத்தில் இறங்கிய இடத்தில் சிறிது நீர். ஒரு குழந்தை போன்ற மனநிலையில் மனம் சந்தோசமானது. என்னுடன் எனது நண்பர்கள் இருவர் வந்து இருந்தனர். பாலைவனம் போன்ற செம்மண் பரப்பு எங்கும் தெரிய ஒரு பக்கத்தில் பாதுகாக்கப்பட்ட இடம் என பலகை தெரிகிறது. இதோ எங்கள் தமிழ் தமிழ் என ராக்கெட்டில் வந்த ஆங்கிலேயர் ஒருவரிடம் சொல்கிறேன். அவரும் ஆமோதிக்கிறார்.

பாதுகாக்கப்பட்ட இடம்தனில் உள்ளே நுழைய தாவரங்கள் பயிரிடப்பட்டு இருப்பது காண்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியே நடந்தால் ஊர் வருகிறது. அங்கே மக்கள் தமிழ் நிறத்தில் தென்படுகிறார்கள். நீச்சல் குளத்தில் பலர் மகிழ்ச்சியோடு வரிசையாக அமர்ந்து குளிக்கிறார்கள். அதைத்தாண்டிச் செல்ல ஒரு சிலரிடம் பேச்சு கொடுக்கிறேன். அந்த வழியில் பழங்கால தமிழ் எழுத்து கல்வெட்டு தென்படுகிறது.

இப்படித்தான் என நினைக்கையில் சிறிது நேரத்தில் போஸ்டர் தெரிகிறது. பிரின்டர் இருக்கும் என நினைக்கிறேன். ஒருவர் எனக்கு எதுவும் தெரியாது என்கிறார். இன்னொருவர் இந்தி பேச எங்களுக்குப் புரியாது என சொல்ல பங்களா மொழி பேசி தமிழில் சொல்கிறார். அப்போது எனது மனைவி உடன் இருக்கிறார். பூமியின் வேறு ஒரு பகுதிக்கு வந்துவிட்டோமோ என சந்தேகம் ஏற்படுகிறது.

அங்கிருந்து நடக்க சுடிதார் அணிந்த ஒரு பெண் தரையில் அமர்ந்து போன் பேசிக்கொண்டு இருக்கிறார். சிறிது தூரம் நடந்து எனது மொபைல் எடுத்துப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்ததை காட்டுகிறது. செவ்வாய் கிரகம் வர மூன்று வருடங்கள் ஆகிவிட்டதே, மூன்று வருடங்கள் இழந்து விட்டோமே திரும்பிப் போனால் மூன்று வருடங்கள் கிடைக்குமா என கணக்கிட்டு மேலும் மூன்று வருடம் ஆகுமே என நினைக்கிறேன்.

இதே போன்று இங்கு வேறு இடங்கள் உண்டா? கல்லூரி எங்கே? தொழிற்சாலைகள் எங்கே என்ற என் கேள்விகள் மனதோடு இருக்கிறது. அங்கு எவரிடமும் கேட்கவில்லை. மொபைலில் orbit என பூமி போன்ற கிரகங்கள் காட்டுகிறது. படம் எடுத்து அனுப்ப நினைக்கிறேன். ஆனால் அதற்கான signal இல்லை என மனம் சொல்கிறது.

இந்த மனிதர்கள் நம்மை தொடர்பு கொள்ளாமல் இருக்க வாய்ப்பு உண்டு என எண்ணம் உண்டாகிறது. அந்த மனிதர் பேசிய பேச்சில் அரசர் எங்கோ சென்றுவிட்டார் என்பது போன்ற வார்த்தை முழு விசயம் தெரியவில்லை. காட்சிகளின் ஊடே துப்பாக்கி ஏந்திய போலிஸ் எங்களை எவர் எனக்கேட்டுக்கொண்டே ராக்கெட் அருகில் ஆங்கிலத்தில் பேசி வந்து புன்னகையுடன் சென்ற காட்சி.

நான் எங்கு சென்றாலும் உடன் என் மனைவி இருப்பார் எனும் காட்சி, தமிழ் மீதான என் நேசம், மொபைல் போன் தாவரங்கள் என இந்த செவ்வாய் கிரக பயணம் உண்மையிலேயே நான் இதுவரை கண்ட அற்புதமான கனவுகளில் ஒன்று. இந்த கனவு சற்று தொடர்ந்து இருக்கலாம்.

(அடுத்து ஒரு கனவுடன் விரைவில்)

Wednesday 12 October 2016

தேடலும் தரிசனமும் - அகநாழிகை பொன். வாசுதேவன்

மக்கள் பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மரபுகள் இயங்குகின்றன. பண்பாட்டை எடுத்துரைக்கும் பல கூறுகளில் மரபும் ஒரு கூறாகும். 

பழக்க வழக்கம் என்பது தனி மனித செயல் மட்டுமன்று. அது மரபணுக்களின் வழியாக நம் முன்னோர்களின் எச்சமாக நமக்குள் வந்து கொண்டிருப்பது. மனித இனம் எத்தனையோ அறிவியல் வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. அடிப்படை மனித கூறுகளான குணங்கள் குறைந்து கொண்டே வந்தாலும் அது முற்றிலுமாக தீர்ந்து போய்விடவில்லை. மனித அடிப்படை நற்குணங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் மரபணுக்களின் பங்கு அதிகம்.

 'மாறா மரபு' எந்த இந்த நாவலில் மரபு என்பதைத் திருத்தியும், மாற்றியும் அமைப்பதன் வாயிலாக வளர்ச்சியை, மாற்றத்தை, முன்னேற்றத்தை எய்தலாம் என்ற நம்பிக்கையோடு மருத்துவத்தின் வாயிலாக அதைச் சாதித்துவிட முடியும் என்று நம்புகிற ஆய்வின் மர்ம முடிச்சுகளையொட்டி கதைக் கரு அமைந்துள்ளது.

 'கத்தி மேல் நடப்பது போன்ற சிக்கலான போக்குடைய இந்தக் கதைக் கருவை மிகவும் லாவகமாகவும், சுவாரசியத்துடன் அளித்துள்ளார் எழுத்தாளர் வெ. இராதாகிருஷ்ணன். அவர் ஒரு அறிவியலாளராகவும், சிந்தனையாளராகவும் இருப்பதால் இந்தத் திறன் அவருக்கு இயல்பாகவே கைகூடியிருக்கிறது. 

பொதுவாகவே, இராதாகிருஷ்ணன் எடுத்துக்கொள்கிற எல்லாக் கதைகளின் கருவும், அறிவியலையும், வாழ்வியலையும் இணைத்து அதிலிருந்து எழுகிற கேள்விகளுக்கு விடை காண முற்படுபவையாக இருந்திருக்கின்றன. ஏன், எதற்கு, எப்படி என்ற அடிப்படை மனித மனக் கேள்விகளுக்கான விடை தேடல்களே இராதாகிருஷ்ணனின் எழுத்துகளின் உள்ளாழ்ந்த பொருள். இந்தத் தத்துவத் தேடல்களினூடாக அவர் கண்டடைகின்ற தரிசனங்களை, உள்ளொளியை நாமும் அவரது படைப்புகளை வாசிப்பதன் வாயிலாக உணர்ந்தறிய முடிகிறது. 

தனித்துவமான கதை சொல்லல் பாணி, எழுத எடுத்துக்கொள்கிற பேசு பொருள், உள்ளடக்கம், எளிமையான நடை என எல்லாவிதத்திலும் நம்மை ஈர்க்கின்றன. வெ.இராதாகிருஷ்ணனின் படைப்புகளைத் தொடர்ந்து பதிப்பிக்கிற வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் எழுத்துலகில் அவர் தொடர்ந்து எழுதித் தடம் பதிக்க எனது நல்வாழ்த்துகள்.

மிக்க அன்புடன்

பொன்.வாசுதேவன்
அகநாழிகை பதிப்பகம்
pon.vasudevan@gmail.com

------------------

தங்களின் நல்வாழ்த்துகளுக்கு எனது பணிவான வணக்கங்களும், நன்றிகளும். நிறைய வாசிப்பு அனுபவமும், எழுத்தாளராக, தினமலரில் உதவி ஆசிரியராக, சட்ட வல்லுநராக இருக்கும் தங்களின் மூலம் எனது எழுத்துக்கள் நூல் வடிவம் பெறுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 

Tuesday 11 October 2016

மரணத்தைவிட நோய் கொடியது 2

அம்மா நிறையவே வாதிட்டார்கள் இதோடு என் தங்கையும் சேர்ந்து கொண்டாள். எதுவும் பேசாமல் அவள் முகம் பார்த்தபடி அமர்ந்து இருந்தேன். காதல் என்பது தசைகளால் ஆனது. காதல் என்பது கவர்ச்சி என்றெல்லாம் சொன்னவர்களை நினைத்துக்கொண்டு இருந்தேன். அவள் முகம் பொலிவாக இருப்பதைப்போல எனக்குள் ஒருவித எண்ணம் ஏற்பட்டது. உனக்கு என்ன ஆச்சுனாலும் உன்னைத்தான் கட்டிப்பேன் என அவளிடம் அன்று சொன்னது இன்று நினைவில் ஆடியது. எல்லாம் என் விதி என அம்மா மீண்டும் வந்து சத்தம் போட்டுச் சென்றார். ஒரு குழந்தையைப் போல இவளது நடவடிக்கைகள் இருப்பதாக நினைத்தேன், இவளது மூளை நரம்புகளில் ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ அச்சம் ஏற்பட்டது. இத்தனை நேரம் தூங்கும் அளவுக்கு இவளது உடலில் அப்படியென்ன ஒரு மாற்றம் திடீரென வந்து இருக்கும். நான் வேலைக்கு கிளம்பும் அன்றுவரை நன்றாகத்தான் இருந்தாள், எப்போது வருவாய் எனக்கேட்டபோது ஒரு மாதம் கழித்து வருவேன் எனச் சொல்லிச்சென்றபோது சரியென்றுதானே சொன்னாள், ஊரைவிட்டுப் போய் அடுத்தநாள் என இவளது அம்மா சொன்னாரே அதற்குள் என்ன நடந்திருக்கும் நிறைய யோசித்து அயர்வாக இருந்தது.

ஊரறிந்த காதல் என்றெல்லாம் இல்லை, பழகியது பேசியது எல்லாம் ஊருக்கு சாதாரணமான ஒன்றாகவே இருந்தது. நான் மணம் முடிக்கப்போகும் பெண் பேரதிர்வை எனக்குள் தந்து கொண்டு இருந்தாள். காம இச்சையின்றி ஒரு ஆண் வாழ்வது எல்லாம் அத்தனை எளிதான ஒன்றல்ல என கதைகளில் படித்து இருக்கிறேன் அதுவும் மனைவி நோய்வாய்ப்பட்டபின்னர் அவளை காத்துவரும் கணவன் வேறொரு பெண்ணுக்கு மயங்கி அவளே தஞ்சம் என போன கதை மனதில் தைத்துக்கொண்டு இருந்தது. அதுதான் நிதர்சனம் என அந்தக் கதையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய கல்லூரி நண்பர்களை பார்த்து இருக்கிறேன். இதோ இவள், எனக்கென்ன என என்னால் இவளை விட்டுவிட்டு நான் கடந்து போயிருக்கலாம். இவளது பெற்றோர்களும் என்னிடம் வந்து எதுவும் கேட்டு இருக்கப்போவது இல்லை, எதை நிரூபிக்க இவளை இப்போது எனது வீட்டில் தூங்க வைத்து இருக்கிறேன். அறையில் விளக்கொளி இன்னும் அணைக்கப்படாமல் இருந்தது.

''போய்த்தூங்கு ராமா''

''அம்மா நான் செய்றது சரினு படுது பணத்தை எல்லாம் இவளுக்கு செலவு பண்ணிருவேனு நினைக்காத தங்கச்சிக்கு சேர்த்து வைச்சிருக்கல்ல''

''எதுனாலும் பண்ணு போ தூங்கு''

''இங்கனயே இருக்கேன்ம்மா நீங்க தூங்குங்க''

''சொன்னா கேட்கவா போற''

மணி பன்னிரண்டு இருக்கும். புனிதா எழ முயற்சித்தாள். அவளைத் தூக்கி அமர வைத்தேன்.

''என்ன செய்து''

அவளது கண்களில் கண்ணீர் வடிந்தது. கண்ணீரைத் துடைத்தேன்.

''பேசு''

''அம்மா''

''நான் இருக்கேன்''

''ம் அம்மா''

என் அம்மாவை அழைத்தேன்.

''இவளை பாத்ரூம் கூட்டிப்போம்மா''

''நீயே பாத்துக்கிறேனு சொன்ன''

திட்டியபடி அவளை அழைத்துச் சென்றார். திரும்பவும் அமர வைத்ததும் எனது கைகளைப் பற்றிக்கொண்டாள். அவளது ஒடுங்கிய விழிகளில் எனது காதலைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

''ஆஸ்பத்திரிக்குப் போவோம்''

''ம்''

''எப்படி இப்படி ஆச்சு''

''ம்''

புதிய இடம் அவளை இப்போது எழுப்பி இருக்கக்கூடும் என நினைத்தேன். கண்களை மூட இருந்தவளுக்கு தண்ணீர் கொடுத்தேன். மெதுவாக விழுங்கினாள். இப்படியே இருந்தால் முதுகு வலி, இருதய நோய் என எல்லாம் வந்து சேரும் என அவளை நடமாட செய்தேன். தோளில் சாய்ந்து மெல்ல நடந்தாள்.

''நம் காதல் உன் உயிர் காக்கும்''

எனக்கே அபத்தமாக இருந்தது.

''ம்''

அவளது இந்த தூக்கம் ஒருவித நோய். சில மணி நேரங்கள் தூங்கியவள் எழுந்தாள்.

''அம்மா''

நானே அவளை பாத்ரூம் அழைத்துச் சென்றேன். எல்லாம் இயல்பாக நடக்கிறது இந்த தூக்கம் மட்டும் தான் அவளை செயல் இழக்கச் செய்கிறது, குறித்து வைத்தேன். அதிக தூக்கம் ஆற்றலை குறைத்து இருக்கிறது. விருதுநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவளது அப்பா அம்மா தாத்தா உடன் வந்தார்கள். என் அம்மாவும் தங்கையும் இன்னமும் கோபத்தில் இருந்தார்கள். நோயில் உள்ள எவரையும் பரிதாபமாக பார்க்க வேண்டியது இல்லை, அன்பாக நடத்தினால் போதும். டாக்டர் பரிசோதித்துவிட்டு மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு போகச் சொன்னார். அவளது தாத்தாவை மட்டும் அழைத்துக்கொண்டுச் சென்றேன்.

மருத்துவமனையில் கல்லூரி நண்பன் சுரேந்திரனைக் கண்டேன், விபரம் சொன்னேன். அவன் என்னிடம் சொன்ன விசயம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

''ஏன்டா உனக்கு இந்த அக்கப்போரு, நல்ல வேலை, சம்பளம் ஊருல வேற பொண்ணா இல்லை நா சொல்றத கேளு, இவ உறுப்புகள எல்லாம் இப்பவே எடுத்து வித்துட்டா நல்ல காசு பார்க்கலாம் நாளாக நாளாக யாருக்கும் உதவாது நா எல்லாம் அரேஞ் பண்றேன் நீ ஓகே சொல்லு''

முதுகில் குத்துபவனை எல்லாம் உடனே அழிக்கும் ஒரு வரமோ அல்லது இப்படிப்பட்ட எண்ணம் ஏற்படாத மனிதர்கள் இருக்க வரமோ இருக்காதா என்றே அவனை நான் உதாசீனப்படுத்திவிட்டு உள்ளே நடந்தேன்.

''அவரு என்ன சொன்னாரு''

''ஒன்னுமில்ல தாத்தா''

மருத்துவரை சந்தித்து ஒரு அறை ஒதுக்கப்பட்டது. கண் விழித்தாள்.

''அம்மா''

மரணத்தைவிட நோய் கொடியது என கத்தவேண்டும் போலிருந்தது. என்னை மருத்துவ அறை வாசம் உலுக்கியது. பாத்ரூம் அழைத்து சென்றுவிட்டு படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வெளியில் சென்று பிச்சிப்பூவும் மல்லிகையும் வாங்கி வந்து அவளது தலை நிறைய வைத்தேன் விழிகள் திறந்தே இருந்தன.

''என்ன''

''ம்''

''அமுதன் இவங்களுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கனும் அதுக்கு முன்னால ப்ளட் டெஸ்ட் பண்ணனும்''

''சரி டாக்டர், நாளைக்குப் பண்ணலாம்''

அலுவலக மேலதிகாரி மணியனிடம் விபரங்கள் சொன்னேன்.

''எவ்வளவு பணம் வேணும்னு மட்டும் சொல்லு''

ஒரு நண்பனாகவே என்னைப் பார்த்தவருக்கு உதவுவதில் சிரமம் இல்லை.

''பணம் இருக்கு, வேலைக்கு வர நாள் ஆகலாம்''

''சரி, கவலைப்படாதே''

''தாத்தா ஊருக்குப் போங்க''

''இங்க இருக்கேன் ராமா''

''வேண்டாம்''.

வேறு வழியின்றி ஊருக்குப் போனார். நர்ஸ்களிடம் விபரங்கள் சொன்னேன். உடனே இருக்கச் சொன்னவர்கள் உதவிக்கு அழைக்கச் சொன்னார்கள். குளித்து தயார் ஆனேன். அமுதன் காலையில் வந்து ரத்த சோதனைக்கு அழைத்துச் சென்றார்.

''உங்க பொண்டாட்டியா சார்?''

''இல்ல, காதலி''

மணியனிடமிருந்து அழைப்பு வந்தது.

''எந்த வார்ட்? ஆஸ்பத்திரியிலதான் இருக்கேன். உனக்குத் துணையா ஒரு டூ டேஸ் இங்க இருக்கேன்''

மணியனை நினைக்க கண்ணீர் முட்டியது. கட்டிக்கொண்டு அழுதேன்.

''லுக் பி ஸ்ட்ராங். ஐ ஆம் வித் யூ''

புனிதாவுக்கு ரத்தம் எடுத்து வந்தபின் அவளை மணியன் பார்த்த மறுகணம் சொன்னார்.

''சிவா யூ ஆர் கிரேட்''

மணியனின் கண்களில் இருந்த கண்ணீர்த்துளிகள் எனது கண்களில் பட்டுத் தெறித்தது. என் அம்மாவும் அவளது அம்மா தாத்தா வந்து இருந்தனர். கஞ்சி கொடுத்தோம்.

''ராமா நிறைய செலவு ஆகுமேப்பா''

''அதைச் சொல்லத்தான் இங்க வந்தியாம்மா''

''பத்தாயிரம் அடுத்த மாசம் வேணும்''

''சரி''

ராமா என எனது கையைப் பிடித்து அவ்ளதானு நினைச்சேன் என குலுங்கி குலுங்கி அழுதார் அவளது அப்பா. சிலமணி நேரங்களுக்குப் பிறகு ஊருக்குச் சென்றார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு மணியன் கிளம்பினார். ரத்தப் பரிசோதனையில் ஹீமோக்ளோபின் குறைவு எனும் குறை தவிர வேறு குறை ஏதுமில்லை என்றார்கள். மருந்துகள் கொடுக்க ஆரம்பித்தனர். பழச்சாறு என தந்தார்கள். தேறிவிடுவாள் எனும் நம்பிக்கை உற்சாகம் தந்து கொண்டு இருந்தது. எல்லாம் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு என அறிந்து அதை சரி செய்ய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணியன் பண உதவி செய்தார்.

புனிதா குணமாகத் தொடங்கினாள். அமுதன் முகத்தில் கூட மகிழ்ச்சி நிலவியது.

''சார் அடுத்த வாரம் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம்''

புனிதா பேசத் தொடங்கினாள். என் பிரபஞ்சத்தின் தேவதை. அன்று இரவு சுரேந்திரனைக் கண்டேன். விபரங்கள் சொன்னேன். என்ன நினைத்தானோ ஏது நினைத்தானோ சற்றும் எதிர்பாராதபோது ஓங்கி எனது வயிற்றில் கத்தியால் குத்தினான். எனது அலறல் கேட்டு சிலர் ஓடிவந்தார்கள்.

''நீ சாவு''

தலைதெறிக்க என்னை தள்ளிவிட்டுவிட்டு ஓடினான்.

நான் செத்துரக்கூடாது என மனதில் எண்ணிக்கொண்டே நோயை விட மரணம் கொடியது என கத்த வேண்டும் போலிருந்தது. மயக்கமானேன்.

எனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு நின்று கொண்டு இருந்தாள் புனிதா. இவ்வுலகில் இவர் எப்போது இறப்பார் என பிறர் நினைக்கும்படியாய் ஒருபோதும் நாம் வாழவே கூடாது.

முற்றும்

Monday 10 October 2016

மரணத்தைவிட நோய் கொடியது 1

பேசுவதைக் கேட்க முடியாமல் சொல்பவரைப் பார்க்க முடியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் அவள் இருந்தாள். நான் சிவராமன் வந்து இருக்கிறேன் என்றேன். கண்அசைப்பாள் எனும் நம்பிக்கை எனக்குள் இருந்தது. அவளது அம்மாவிடம் கேட்டேன்.

''எப்ப இப்படி ஆனா''

''நீ போன மாசம் ஊரைவிட்டுப் போன மறுநாள்''

''நல்லாதானே இருந்தா''

''யாருக்கு எப்ப என்ன வரும்னு யாருக்குத் தெரியும்'' இடைமறித்தார் தாத்தா.

வீட்டில் வெட்கையாக இருந்தது.ஓடுகளில் பதியப்பட்ட கண்ணாடி வழியே சூரிய ஒளி அவளது முகத்தின் அருகில் விழுந்து கொண்டு இருந்தது. முகம் பெரும் சோகத்தில் இருப்பது போல எனக்குத் தென்பட்டது.

செடி தனது மலர்களுடன் வாடி வதங்கி கிடப்பது போல அவளது உடல் தரையில் பாயின்மீது கிடத்தப்பட்டு இருந்தது.

''ஊருக்கு எப்ப வந்த, உட்காரு''

''இப்ப''

அவளது தலைக்கு அருகில் சென்று அமர்ந்தேன். மல்லிகைப்பூ வாசம்தனை அப்போதுதான் கவனித்தேன். மல்லிகைப்பூ தலைக்கு அடியில் நசுங்கிக் கிடந்தது. நெற்றியில் வைக்கப்பட்ட திருநீறு குங்குமம். அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என்னை நல்லவனாக்கிய முகம் அது எனக்குள் அகமலர்ச்சியும் முகமலர்ச்சியும் கொண்டு சேர்த்த முகம் அது.

''இந்தா மோர் குடி''

அவள் மீது சிந்திவிடாதபடிக்கு சிறிதளவு குடித்துவிட்டு வைத்துவிட்டேன்.

''தினமும் இவளை குளிப்பாட்டி துணி மாத்தி இவ பக்கத்திலேயே என்னை உட்கார வச்சுட்டா''

''சாப்பிட்டாளா?''

''கஞ்சி கரைச்சி கொடுத்தேன்''.

''எப்போ கண் முழிப்பா?''

''ஆறு மணிக்கு''.

''டாக்டர்கிட்ட காமிச்சீங்களா?''

''பணத்துக்கு எங்க போறது''

அவளது கைகளைப்ற்றிக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே நடக்க வேண்டும் போல் இருந்தது.

''நடப்பாளா?''

''ஒரு ஆளுப் பிடிச்சிக்கனும் இது என்ன எழவு நோயுனு தெரியலை''

''பேசுவாளா?''

''அம்மானு சொல்வா''.

''எத்தனை மணி நேரம் முழிச்சிருப்பா?''

''ஒரு நாற்பது நிமிசம் அப்புறம் படுத்துருவா''.

''ஆளுக அடையாளம் தெரியுதா?''

''ம் தெரியும்''

எப்போது ஆறு மணி ஆகும் என்று இருந்தது. அவளது தாத்தா என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார். பதினோரு மணி பேருந்துதனை தவறவிட்டு கண்மாய் காடு என கடந்து வீடு வந்து சேர்ந்ததும் அம்மா என்னிடம் சொன்னார்.

''ராமா புனிதா படுத்தபடுக்கையா இருக்கா''

நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது.

''என்னம்மா சொல்ற?''

''அதான்டா சுந்தரமூர்த்தி மக புனிதா''

எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகள் இந்த பூமிக்குள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் அதிர்வுகளை விட படுபயங்கரமாக இருந்தது. என்னை நிலைப்படுத்த முடியாமல் தடுமாறினேன்.

''பார்த்துட்டு வரேன்மா''

''சாப்பிட்டு போ''

''இப்ப வேணாம்''

தெருவில் கண்டவர்களின் வரவேற்புக்கு தலையாட்டி அழுகையை அடக்கிக்கொண்டு கேள்விகளுடன் அமர்ந்து இருக்கிறேன்.

''செத்துப் போயிருவாளோனு பயமாருக்கு''

''அப்படி சொல்லாதீங்க''

''எப்பப்பாரு இப்படியே சொல்லிக்கிட்டு என் பேத்தி சாகமாட்டா சாகுற வயசா இது'' தாத்தா இடைமறித்தார்.

அவளை அப்படியே தூக்கிக்கொண்டு என்வீடு நோக்கிச் செல்ல வேண்டும் போலிருந்தது. வீட்டுக்கு வெளியில் வந்து நின்றேன். அந்த தெருவின் கடைசி வீடு இது இருபுறமும் வரிசையாக ஒரே அமைப்பினால் ஆன இருபது இருபது வீடுகளை கொண்ட நீண்ட மிகவும் சுத்தமான தெரு இது. தெருவினைப் பார்த்த போது எத்தனை எத்தனை கற்பனைகளை இந்த தெரு எனக்குத் தந்து இருந்தது என்பதெல்லாம் கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்க இயலவில்லை.

''ஆறு மணிக்கு வரேன்''

கனத்த மனதுடன் கண்ணீர் திட்டுகளுடன் வீட்டுக்குப் போனேன்.

''சாப்பிடுப்பா''

அம்மா என கட்டிப்பிடித்து ஓ வென அழ ஆரம்பித்தேன்.

''என்னாச்சு''

''புனிதா எப்போ நல்லா ஆவா''

கதறலில் ஊடே சொன்னேன்.

''அவளுக்கு விதிச்சது அவ்வளவுதான்''

''நல்லா ஆயிருவாம்மா''

''அழாத கண்ணைத் துடைச்சிக்கோ எத்தனை நாளு லீவுல வந்த''

''ஒரு வாரம்''

''பேய் எல்லாம் ஓட்டிப் பார்த்தாங்க தேறலை''

பேய்! எனது பிரபஞ்சத்தின் தேவதை அவள். அவளது வருகைக்குப் பின்னரே எனது கிராமத்தின் தெருக்கள் எல்லாம் அழகு பெற்றன. அவள் வசிக்கும் தெருவினைக் கடக்காமல் ஒருபோதும் எனது தெருவுக்கு சென்றது இல்லை. அவள் இந்த கிராமத்திற்கு வந்து நான்கு வருடங்கள் இருக்கும். பத்தாவது முடித்து இருந்தாள். நான் +2 முடித்து இருந்தேன். கல்லூரிக்குச் சென்று விடுமுறையில் வரும்போதெல்லாம் அவள் மீதான ஆர்வம் அதிகரித்தபடி இருந்தது. எதேச்சையாக அவளிடம் ஒருமுறை கூடப் பேசியது இல்லை. அவளது முகம் பார்த்ததில் இருந்து நல்லவனாக வாழ வேண்டும் எனும் ஆவல் அதிகரித்தபடி இருந்தது. கோபம் கொள்வது தவறு எனும் எண்ணம் புத்திக்கு ஏறி இருந்தது. எனது உலகம் அவளைச் சுற்றி அமையத் தொடங்கியது. சாப்பிட்ட பின்னரும் பசித்தது என்ன காரணம் என யோசித்தபோது அவள் சாப்பிட்டு இருக்கமாட்டாளோ என எண்ண வைத்தது +2 முடித்த பின்னர் படிப்பதை நிறுத்தி இருந்தாள். பண கஷ்டம் எனும் காரணம் போதுமானதாக இருந்தது.

விவசாயத்தில் கூலி வேலை செய்து பிழைப்பது பெரும் கடினம். பக்கத்து மில்லில் சென்று வேலை பார்க்கத் தொடங்கினார் அவளது அப்பா. யார் என்ன விபரம் இதற்குமுன்னர் எந்த ஊரில் இருந்தார்கள் ராமநாதனின் வீட்டிற்கு எப்படி குடி வந்தார்கள் எனும் கேள்விகள் பலநாட்களாக எனக்குத் தோனவில்லை. ஒருமுறை அம்மாதான் என்னிடம் மாந்தோப்புல இவங்க இருந்து இருக்காங்க. ராமநாதன் அண்ணனோட தூரத்துசொந்தம் அந்த அண்ணன் பிசிண்டிக்கு போறதால இங்க வந்துட்டாங்கன்றபோது இங்க எதுக்கு வரனும் எனும் கேள்வி என்னுள் மகிழ்ச்சியைத் தந்து இருந்தது.

''ராமா சாப்பிடுப்பா''

கொஞ்சமாக சாப்பிட்டேன், விழுங்குவதற்கு கடினமாக இருந்தது. ஆறு மணிக்கு முன்னரே புனிதாவின் வீட்டிற்குச் சென்றேன். மாலை நேரத்து இருள் சூழ்ந்து கொள்ளும் வேளையில் தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தது. மனம் துடிதுடித்தது. அவளது அப்பா வேலை முடித்து வீட்டுக்கு வந்து இருந்தார்.

''வா ராமா''

அவளது நிலையை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் போலத் தெரிந்தது. உள்ளே சென்று அமர்ந்தேன்.

''எழுந்தாளா?''

''இன்னுமில்ல''.

ஆறு மணி ஆனது. எழவில்லை. என்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொள்வாளா, வீட்டுக்குள் போதிய வெளிச்சமில்லை. நிமிடங்கள் ஓடின. முகம் பிரகாசமாகத் தெரிய மறுத்தது. அம்மா என்றபடி எழ எத்தனித்தாள். மெதுவாக அவளைத் தூக்கி சுவரோரம் அமர வைத்தார்கள். என்னைப் பார்த்துக்கொண்டே அம்மா என அழைக்க கைத்தாங்கலாக வீட்டுக்குப் பின்புறம் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளே வந்தார்கள்.

''நான் சிவராமன்''

''ம்''

ஒற்றை வார்த்தை சன்னமாக கேட்டது. எனது பிரபஞ்சத்தின் தேவதை.

''நான் என்னோட கூட்டிட்டுப் போறேன்''

''சிரமம் ராமா''

என்னை அடையாளம் கண்டுகொண்டாளா எனத் தெரியாமல் தவித்தேன். அவள் மீண்டும் உறக்கத்தில் விழும் முன்னர் ஏதேனும் செய்ய வேண்டும் என மனம் பரபரத்தது. நானே அவளுக்கு ஆற்றலும் எல்லாம் என நினைத்தேன்.

''நான் கூட்டிட்டுப் போறேன், குணமாக்கிரலாம்''

'வேண்டாம் ராமா''

''புனிதா என்னோட வரியா''

''ம்''

''நான் கூட்டிட்டுப் போறேன்''

உடலில் எவ்வித தசையும் இல்லையோ எனும் அளவுக்கு ஒடுங்கிப்போயிருந்தவளின் கையைப்பிடித்தேன். இறுகப்பற்றிக் கொண்டாள். கஞ்சி கொடுத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினாள். இந்த கன்னங்களைத்தான் எப்படியெல்லாம் என்னுள் வர்ணித்தேன் என நினைத்தேன். அவள் படும்கஷ்டங்களைக் கண்டு எனக்கு கண்ணீர் முட்டிநின்றது இறுகப்பற்றிய கையை விடவில்லை. இறுகப்பற்றிக்கொள்ள எங்கிருந்து வந்தது இந்த ஆற்றல்? போதும் என தலையை மெதுவாக ஆட்டினாள்.

''எல்லா உணர்வுகளும் இருக்கின்றதா''

பேசுவதுப் புரிந்தது போல பார்த்தாள்.

''ம்''

என் மீது அவளை சாய்த்துக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். சிரமம் கொண்டாள். அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டு எனது வீடு நோக்கி நடந்தேன்.

''தூங்கிருவா''

விழிகள் என்னிடம் ஏதோ கெஞ்சுவது போல தென்பட்டது.

''கண்ணை மூடாதே''

''ம்''

சிரிக்க மறந்து இருப்பாள் என தோனியது.

வீட்டுக்குள் சென்றதும்தான் தாமதம்.

''என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்க''

''சொன்னா கேட்கலை''

என்னுடன் வந்து நின்றார்கள் அவளது அம்மா அப்பா தாத்தா.

''நான் பார்த்துக்கிறேன்''

அவளை அமர வைத்தேன்.

''நாளைக்கு நான் காலையில ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டுப் போறேன்''

வீட்டில் பெரும் கூட்டம் கூடிவிட்டது.

''ஏன் இப்படி பண்ற''

''உனக்கு அறிவே இல்லையாண்ணா''

அம்மாவுடன் தங்கையும் சேர்ந்து கொண்டாள். பலர் திட்டத் தொடங்கினார்கள்.

''நான் கட்டிக்கப் போற பொண்ணு பேசாம போயிருங்க''

அவளின் முன் கோபம் அழுகை எல்லாம் எனக்கு வராது. மெல்ல மெல்ல கலைந்து போனார்கள். தூங்கிருவா என்றது போலவே தூங்கத் தொடங்கினாள்.

''எப்போ எந்திரிப்பா?''

''காலையில எட்டு மணி''.

தூங்காத என்றேன் தூங்கிப் போனாள்.

(தொடரும்)


Friday 5 August 2016

போதை தரும் போதனைகள்

''பக்தா''

''சுவாமி வாருங்கள், வாருங்கள். உங்களைப் பார்த்து எத்தனை மாமாங்கம் ஆகிவிட்டது''

''ஆச்சர்யம் பக்தா''

''எதைப் பற்றி சுவாமி?''

''பயபக்தியுடன் என்னை நீ அழைப்பதுவும், வரவேற்பதுவும்''

''நீங்கள் சொல்லும் விஷயங்களை பின்பற்றினால் மோட்சம் கிட்டும் என்று கேள்விப்பட்டேன்''

''வேறு என்ன என்ன கேள்விப்பட்டாய் பக்தா?''

''நோய் உடலைத் தீண்டாது. மனம் விசாலமாக பேரமைதியுடன் இருக்கும்''

''வேறு என்னவெல்லாம் பக்தா?''

''நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்''

''பக்தா உனக்கு சுயபுக்தி என்பதே கிடையாதா?''

''என்ன சுவாமி?''

''நான் சொல்வதை நீ பின்பற்றினால் இதுவே நடக்கும் எனில் நீ சொல்வதை நீ பின்பற்றினால் என்னவெல்லாம் நடக்கும் என யோசித்தாயா?''

''நான் சொல்வதை எப்படி சுவாமி?''

''உனக்கு நல்லது எது கெட்டது எது என்பதை சிந்திக்கும் அறிவு வைத்து இருப்பதற்கு காரணமே சுயபுத்தியுடன் நீ செய்லபட வேண்டும் என்பதுதான். ஆனால் நீயோ வேறு எவருடைய சொல்பேச்சு கேட்டு நடந்தால் உனக்கு நன்மை பயக்கும் என முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு இருக்கிறாய். ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்பது உணவு, உடை, இருக்க இடம். இந்த மூன்றும் வேண்டுமெனில் பணம் அவசியம். பணம் சம்பாதிக்க வேலை அவசியம். வேலை வேண்டுமெனில் திறமை அதைச்சார்ந்த அறிவுக்கூர்மை அவசியம். இதோடு மட்டுமில்லாமல் தெளிவான நோக்கம். இப்படி எல்லாமே உனக்கே நீ செய்து கொள்ள முடியும் எனும்போது எதற்கு பக்தா இப்படி பிறர் பின்னால் சுற்றிக்கொண்டு அலைய வேண்டும் என கருதுகிறாய்''

''சுவாமி நீங்கள் சொன்ன விஷயத்தை கேட்டதும் எனக்குள் ஒரு பரவச நிலை உண்டாகிறது. இது எல்லாம் எனக்குப் புரியாமல் இருந்தது. இதை உங்களிடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது''

''பக்தா மடத்தனமான காரியங்களில் மதி கெட்ட மடையர்களே ஈடுபடுவார்கள். நீ பள்ளிக்குச் செல்கிறாய். பாடங்கள் படிக்கிறாய். அத்தோடு அந்த பாடங்கள் உனக்குத் தரும் அறிவினை வளர்த்துக்கொண்டு இருக்க வேண்டுமேயன்றி பள்ளிதான் எல்லாம் கதி  என கிடந்தால் உன் நிலை என்னவென யோசி பக்தா''

''சுவாமி, உங்கள் போதனைகள் என்னை மெய் மறக்கச் செய்கின்றன''

''ஒரு பாடல் பரவசம் தருவதும், ஒருவரின் கருத்துக்கள் நமக்குப் பிடித்துப் போவதும் இயல்புதான் பக்தா. ஆனால் நீ சொல்கிறாயே, பரவசம் அடைதல் மெய் மறக்கச்  செய்தல் எல்லாம் நீயே உன்னை ஏமாற்றிக்கொள்வதுதான். எதற்கு இப்படி அறிவீனமாக யோசிக்கிறாய் என்றுதான் புரியவில்லை. எவருமே லாபம் இன்றி எந்த ஒரு பணியையும் செய்வது இல்லை. உடற்பயிற்சி செய்ய எதற்கு நீ ஒரு இடம் செல்ல வேண்டும். உனது வீட்டில் இருந்து செய்தால் ஆகாதா. ஆனால் நீ உனது மனதை மயக்கிச் செயல்படும்போது இது இதுதான் சரி என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறாய். பின்னர் உன்னை அறியாமல் அதற்கு அடிமைத்தனம் ஆகிறாய். இதில் இருந்து நீ விடுபடவேணும் பக்தா''

''ஏன்  சுவாமி, நானா உன்னை வீட்டுக்கு வா வானு கூப்பிட்டேன். நீயே வந்துட்டு பெரிய இதாட்டம் போதனை சொல்லிட்டு இருக்க. உன்னை நான் கேட்டேனா, இல்லை கேட்டேனா. நீயும் என்னை மாதிரி ஒரு மனுஷன் தான, ஒரு நாலு ஐஞ்சி புத்தகம் படிச்சிட்டு இவ்வுலகம் அப்படி இப்படினு பேசறியே. நான் அதை எல்லாம் பிடிச்சி இருக்குனு சொன்னா கேட்டுட்டு போக வேண்டிதானே, அதைவிட்டுட்டு என்ன வியாக்கியானம் வேண்டி கிடக்கு''

''பக்தா, என்னை இப்படி பேச உனக்கு எப்படி மனம் வந்தது''

''பிறகு எப்படி பேசனும் சுவாமி? நீயே மதிகெட்டுப் போய்த்தான் ஒவ்வொருவரும் இன்னல்களில் இருக்கிறீர்கள், உங்கள் இன்னல்களை போக்குவேன் என சொல்லி மதி மயக்குற. எவனாச்சும் எதிர்த்துக் கேட்டா உடனே நான் அப்படி இல்லைனு சொல்றது. மனுசனா மனுசனா இருக்க விடு சுவாமி''

''எனது போதனைகள் உன்னில் இப்போது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. நீயே சுயமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டாய். நான் வருகிறேன்''

''சுவாமி, கொஞ்சம் விஷம் இருக்கிறது, அருந்திவிட்டுப் போறியா?''

''வேணாம் பக்தா, நானும் ஒன்னும் ஆலகால நீலகண்டன் இல்லை''

''யாரு அது ஆலகால நீலகண்டன்?''

''எனக்கு நேரம் இல்லை, இன்னொருமுறை சொல்கிறேன்''

''ஏன் சுவாமி உனக்கு அறிவே இருக்காதா, இப்பதான் சுயமா நான் சிந்திக்கிறேன் சொல்ற அப்புறம் நேரம் இல்லை பிறகு சொல்றேன்னு சொல்ற. சுயமா சிந்திக்கவே விடமாட்டியா. நான் கேட்டதும் என்ன சொல்லி இருக்கனும். சுயமாக சிந்திக்க வேணும் பக்தானு ஆனா நீ சொன்ன''

''பக்தா, உன்னைப்போல் தெளிவான மனநிலையில் அனைவரும் இருந்துவிட்டால் எனது போதனைகள் எல்லாம் எதற்கு பக்தா. ஆனால் நிறைய மக்கள் தாங்கள் செய்வது புரியாமல் இந்த உலகில் பல ஆண்டுகள் உயிரோடு இருப்பது போல நினைத்துக்கொண்டு தங்களையேத் தொலைத்து விடுகிறார்கள். இப்படி அவர்களை தொலைய விடாமல் பாதுகாக்க நான் சில விஷயங்களை சொன்னால் எனது காலடியில் வந்து கிடக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய இயலும் பக்தா?''

''சுவாமி, திருந்தவே மாட்டியா? இதை எல்லாம் கேட்டனா? ஆமாம்னு சொல்றதுக்கு பதில் என்ன என்னமோ பேசற''

''பக்தா இந்த உலகில் பலர் தெளிவற்ற மனோ நிலையில் இருக்கிறார்கள். பெரும் குழப்பத்தில் அவர்கள் தடுமாறுவது கண் கூடு. இதற்கு பல காரணங்கள் இருப்பதால் எந்த காரணங்கள் என புரியாமல் ஏதேனும் ஒன்றில் தஞ்சம் அடைய நினைத்து என்னவென்னவோ செய்து கொண்டு இருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. மனதுக்கு திருப்தி என்ற ஒரு சில வார்த்தைகளை அவர்கள் எடுத்துக்கொண்டு செயல்படுவது எத்தனை தவறான விஷயம் என அவர்கள் புரிந்து கொள்வது இல்லை. அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எவரும் நினைப்பதும் இல்லை''

''சுவாமி, என்ன பேசிக்கிட்டே போற. நேரம் இல்லைனு சொன்னில கிளம்பு''

''பக்தா போதனைகள் இந்த உலகில் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. அந்த போதனைகளை சொல்வதற்கென நான் அவதாரம் எடுத்து வந்து இருக்கிறேன். இப்படி எனது செயல்பாடுகளை நீ முடக்குவது எவ்விதத்தில் நியாயம்.''

''சுவாமி, அதுதான் சொன்னேன். பரவச நிலை என. ஆனால் நீங்கள் தான் என்னை குழப்பிவிட்டீர்கள். உங்கள் போதனைகளை கேட்டு உங்களோடு வருகிறேன் சுவாமி''

''டேய் எங்கடா தூக்கத்திலே தூங்கிட்டே நடந்து போற''

சட்டென விழித்துப் பார்த்தேன்.

''சும்மா கண்ணு மூடி நடந்து பார்த்தேனம்மா''

அப்போதுதான் தோனியது. இந்த உலகத்தில் மக்கள் தூங்கிக்கொண்டே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எழுப்பி விடுகிறேன் என பலர் அவர்களை ஏப்பம் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சாமியார் இனிமேல் கனவில் வராமல் இருக்க விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.