Showing posts with label தொடர்கதை வெ. த. Show all posts
Showing posts with label தொடர்கதை வெ. த. Show all posts

Friday 21 November 2014

வெட்டித் தருணங்கள் - 1

முன்னுரை :

இது ஒரு நிழல் அல்ல, நிஜமும் அல்ல. இந்த கதையில் வருபவர்கள் என் கற்பனையில் உதித்தவர்கள் அல்ல. அன்றாடம் இவர்களுடன் எழுத்து மூலம் மட்டுமே பழகி இருக்கிறேன் என சொல்லவும் முடியாது. இருப்பினும் திடீரென இவர்களை எல்லாம் கதை மாந்தர்கள் ஆக்கினால் என்ன என எனக்குத்  தோணியது. அதன் விளைவாக இந்த நாவல் எழுதத் தொடங்கினேன். எவரேனும் இந்த கதைப் பாத்திரம் நான்தானா என என்னிடம் கேட்பீர்களேயானால் எனக்குத் தெரியாது.

கதைக்கான கரு என்னவாக இருக்கும் என்றே நான் யோசனை செய்யாமல் எழுதத் தொடங்கிய கதை இது. எப்போது பார்த்தாலும் அன்புதனை மையமாக வைத்தே எழுதி முடித்தாகிவிட்டது. கதை எழுதி முடிக்கும் முன்னரே எழுதிய முன்னுரையும் இதுதான்.

அன்புடன்
இராதாகிருஷ்ணன்
--------------------------------------------------------------------------------------------------------------------
1.

''அம்மா எனக்கு ஒரு லேப்டாப் வாங்கித் தருவியா?''

''காசுக்கு எங்கடா போறது?''

''அப்பாட்ட கேளுமா''

எனது ஆசையை அம்மாவிடம் சொல்லிவைத்தேன். அம்மா எரிச்சலாக என்னைப் பார்த்தார்கள். இப்போதுதான் பொறியியல் துறையில் முதலாம் வருடம் சேர்ந்து இருக்கிறேன். எனது வீட்டில் இருந்து அரை மணி நேரத்தில் கல்லூரிக்கு சென்று விடலாம். முதல் நாள் கல்லூரியில் நிறைய பேர் கைகளில் விலை உயர்ந்த மொபைல் போன்கள்  வைத்து இருந்தார்கள். எனக்கு ஒரு பாடாவதி போன் அப்பா வாங்கி தந்து இருந்தார். என்னை எப்படியாவது மருத்துவர்  ஆக்கிட வேண்டும் என அப்பாவும் அம்மாவும் போராடினார்கள். நான் பொறியியல் துறைக்குத்தான் போவேன் என அடம் பிடித்தேன். நான் நினைத்ததுதான் நடந்தது.

என்னுடன் உடன் பிறந்தவர்கள் மூன்று அக்காக்கள். பையன் வேண்டும் என வேண்டி பிறந்தவன் நான். ஒரு அக்காவிற்கு மட்டும் திருமணம் முடிந்துவிட்டது. அவர்களைப் பற்றி எல்லாம் எனக்கு இப்போது பேச விருப்பம் இல்லை.

என்னை கொக்கு போகுது பாரு என கேலி பண்ணாதவர்கள் எவருமே எனது ஊரில் இல்லை. நானும் ஆமா நான் கொக்குதான் என சைக்கிளில் பறந்து செல்வேன். சிலரை அடித்து துவைத்து இருக்கிறேன். இருந்தாலும் போடா கொக்கு எலும்பு உடையப்போகுது என கேலி பேசுவார்கள்.

நான் விஜய் ரசிகன். எனக்கு கமல் அஜீத் ரஜினி விக்ரம் சூர்யா ஆர்யா எல்லாம் கொஞ்சம் கூடப் பிடிக்காது. நான் பத்தாவது படிக்கும்போது விஜய் குறித்து கேலி பேசியவனை பல்லை பெயர்த்து இருக்கிறேன். என்னை கேலி பேசியவர்களை விட விஜயை கேலி பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள இயலாது. இதோ என் கையை பாருங்கள். இளைய தளபதி விஜய் என பச்சை குத்தி இருக்கிறேன். நீங்களும் குத்திக் கொள்ளுங்கள். வேறு எவர் ரசிகராக நீங்கள் இருந்தாலும் என்னிடம் விஜய் பற்றி மட்டுமே அதுவும் மிகவும் உயர்வாக பேச வேண்டும், இல்லை என்றால் என்னிடம் பேசக்கூடாது.

நான் ஏ  ஆர் ரகுமானின் பரம விசிறி. என்னமோ இளையராஜாவாம், என் அப்பா இளையராஜா குறித்து நிறைய பெருமை பேசுவார். இளையராஜா பாட்டு கேட்டால்தான் தூக்கம் வரும் என சொல்வார். நான் ரகுமான் பாட்டு கேட்டுதான் தூங்குவேன். இளையராஜா பாடல் என்றால் எனக்கு அறவேப் பிடிக்காது என்றில்லை, பிடிக்காது.

மற்றொன்று நான் பெரியாரின் தீவிர விசிறியும் கூட. பெரியாரின் கொள்கைகளை பதினோராம் வகுப்பில் படிக்க ஆரம்பித்தேன். அன்றிலிருந்து கோவிலுக்கு செல்வதை தவிர்த்தேன். இருந்தாலும் வம்படியாக கோவிலுக்கு அம்மா அழைத்துப் போவார்கள். அங்கு வரும் இளம் பெண்களை சைட் அடிப்பது என்  வழக்கம். என் அக்காக்கள் என்னடா பார்வை அங்க என திட்டுவார்கள். அந்த பொண்ணு அழகா இருக்காக்கா எனும் எனது வெள்ளேந்தி பேச்சு வீட்டில் அப்பாவிடம் அவ்வப்போது மொத்துகள் பெற்றுத் தரும். அதனால்தான் எனக்கு அவர்கள் குறித்து பேச விருப்பம் இல்லை. சதிகார அக்காக்கள்.

எனக்கு இந்த மதம் சாதி எல்லாம் அறவேப் பிடிக்காது. அதனால் நாங்கள் எந்த ஆளுங்க என நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

''என்னடா லேப்டாப் கேட்டியாமே''

''ஆமாம்பா''

''எவ்வளவுடா ஆகும்''

''ஒரு முப்பதாயிரம் ஆகும்பா, லேப்டாப் வசதியா இருக்கும்பா''

''சரிடா வாங்கித்தாரேன்''

அப்பாவின் பழக்கம் இதுதான். தனது பிள்ளைகளுக்கு என எதுவும் குறை வைக்கமாட்டார். எனது பிறந்தநாள் 23 மார்ச். குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வருடம் தவறாமல் நீங்கள் எனக்கு வாழ்த்து சொல்லவேண்டும்.

''பள்ளிக்கூடத்தில தந்த லேப்டாப் மாதிரி இதை பண்ணின, கொன்னுருவேன்''

''இல்லைப்பா, பத்திரமா பாத்துக்குவேன்''

''பொண்ணுகளுக்கு வாங்கித் தராம இவனுக்கு மட்டும் என்ன பவிசு''

''விடுடீ, ஆசைப்படுதாம்ல, அவக கேட்கலைல''

எனக்கு சந்தோசம் பொங்கியது. எனது ஊர் திருநெல்வேலி பக்கம். கிராமத்தின் பெயர் எல்லாம் உங்களுக்கு சொல்லமாட்டேன். நீங்கள் என்னைத் தேடி வந்துவிட்டால் நான் என்ன பண்ணுவது. அதனால் திருநெல்வேலி போதும்.

லேப்டாப் எந்த பிராண்ட் வாங்கலாம் என யோசித்தேன். என்ன வாங்கலாம் சொல்லுங்க?

(தொடரும்)