Friday 25 September 2009

எட்டு திசைக்கும், எட்டும் திசைக்கும்

உயர்பவரெல்லாம் இறக்கத்திலிருந்தே தொடக்கம்
இறக்கமடைந்தாலும் மேன்மையது தவறுவதில்லை
அடக்கமது கொண்டு வாழ்வினை சிறப்பித்தே
எதற்கும் எப்பொழுதும் விழித்திருக்கும் மக்கள்

இறக்கத்திலிருந்து எழும்போது அடக்கமும் விழித்தலும்
மேன்மையிலிருந்து விழும்போது அடக்கமும் விழித்தலும்
உயர்நிலையில் வைத்தே உரிமை கொண்டாடும்
இருள் துடைத்து வெளிச்சமாக்கும் மக்கள்

பூக்கள் சூடிய தோல்கள் சுருங்குவதில்லை
இறை கிடைக்காத எறும்புகள் நடுங்குவதில்லை
கிடைக்காத காற்றுக்கு சிலநுண்ணுயிர்கள் ஏங்குவதில்லை
அனைத்துக்கும் உறுதியாய் இறுதியாகும் மக்கள்

குளிரது எரிக்கும் வெப்பமது விறைக்கும்
கொண்ட கடமையில் பொறுமை கண்டு
வெற்றிதனை வகுத்து காட்டிச் சிறக்கும்
மரணமில்லா தொடரும் முடிவுகள் மக்கள்

அழிவினைத் தடுக்க அன்பினால் பாலம்கட்டி
கொடுமையினைத் தவிர்த்திட கொள்கை மாறாது
அமைதியின் அர்த்தம்தனை விளங்கியே விளக்கி
வேதனை அறியாது வாழ்ந்திடும் மக்கள்

சீற்றம் கொள்ளும் இயற்கை கொல்லும்
நல்வழி தவரும் செயற்கையும் கொல்லும்
கொல்லும் வழியதை கரைகொண்டு அடைத்திட
உயிரதில் உறங்கி வேண்டிக்கிடக்கும் மக்கள்

புரியாத வழி புரிதலுக்கு மொழி
அறியாத புதிரும் அறிதலின் அறிவும்
கொடுப்பது இங்கே எடுப்பது இல்லை
கொடுத்து மகிழ்ந்தே குபேரனாகும் மக்கள்

ஒற்றைச் சூரியன் ஒன்றாக இல்லை
ஒன்றே பூமி ஒற்றுமையாய் இல்லை
என்றோ தொடங்கிய இறக்கமது அரக்கமது
நன்றே அடக்கியே ஒருமனம்காணும் மக்கள்

இசையில் உயிர் போடும் அசையுடன்
வசைச் சொற்கள் ஏற்பில்லா மொழியுடன்
திசையெங்கும் ஒன்றென போற்றும் ஒளியுடன்
இசைந்து வாழ்வாரே இனிதான மக்கள்.

Wednesday 23 September 2009

தாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக

தாய்மையைக் கேள்வி குறியாக்கும் செய்திகள் தொடர்ந்து அறிந்து கொண்டே வரும் வேளையில், சமீபத்தில், தனது இரண்டு குழந்தைகளை உயிருடன் கொன்ற தாய் பற்றிய செய்தி அறிந்ததும், ஒரு தாய் எப்படி தனது குழந்தைகளைக் கொல்லத் துணிவாள் எனும் கேள்வி மனதில் எழாமல் இல்லை. நம் வீட்டில் எதுவும் நடக்காதவரை எல்லாமே கேள்விக்குறியாகத்தான் இருக்கும் என்பதை அறியாமல் இல்லை.

நல்லதங்காள் கதையைக் கேள்விபட்ட போதே எப்படி ஒரு தாய் இப்படி தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறாள் எனும் கேள்வியும் எழுந்தது.

தனது மகள் வேறொருவனைக் காதலிக்கிறாள் என அறிந்ததும் அந்த மகளை உயிருடன் எரித்த தாய் பிறந்த ஊரில் தான் நானும் பிறந்து இருக்கிறேன் என எண்ணும்போதே இந்த தாய்மையை பற்றி சிலாகித்துப் பேச மனம் முன்வருவதில்லை.

தாய்மை உணர்வைத் தூக்கி எறிந்துவிட்டு நவநாகரீகத்தில் உழலும் பெண்கள் பற்றி பேசினால் ஆணாதிக்கம் எனும் அவச்சொல் வந்து சேர்ந்துவிடும் என்பதாலேயே நடப்பதெல்லாம் நடக்கட்டும் என இருந்துவிடத்தான் ஆசை.

வாழ்க்கையில் போராட முடியாமல், அவமானம் தாங்க இயலாமல் தாய்மை தள்ளாடுகிறது. இதுபோன்ற தாய்மை பற்றி விரிவாக எழுதத்தான் ஆசை. ஆனால் உலகம் அறிந்த மக்களிடம் ஒன்றைப் பற்றி நாம் சொல்ல வருமுன்னரே, அது என்ன ஏது என அறியாமல், அதைப்பற்றிய திசைமாறிய எண்ணங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும் என்பதால் இப்படியே விட்டுவிடுகிறேன்.

இதுகுறித்து எழுதுவோர் எழுதட்டும்.

Tuesday 22 September 2009

இறைவனும் இறை உணர்வும் - 3

3.
உண்மையாய் வாழ்வது துன்பம் என்றிருந்தேன்
உண்மையாய் வாழ இயலாது தவித்திருந்தேன்
பொய்மையை மனதில் நிறைத்து இருந்தேன்
கயமை குணத்துடனே வாழ்வை கழித்து இருந்தேன்
ஐயனே உன்னை அறிந்த பின்னும்
பொய்யனாய் வாழ்வது முறையோ?

என பாடிய ஒருவரை எதேச்சையாகச் சந்தித்த மற்றொரு நபர், பாடியவரிடம் சென்று நன்றாக இருந்தது பாடல், சிலர்தான் தங்கள் செயல்களை பரிசீலனை செய்து முறையாக வாழப் பழகிக் கொள்வார்கள் என வாழ்த்திவிட்டுச் சென்றார்.

சில வருடங்கள் பின்னர் அந்த பாடலை பாடியவரைச் சந்திக்கும் வாய்ப்பு எதிர்பாரா விதமாக மீண்டும் அந்த நபருக்கு கிட்டியது. பாடலும் ஒலித்தது. அதே வரிகள். ஐயனே உன்னை அறிந்த பின்னும் பொய்யனாய் வாழ்வது முறையோ? என்றே முடித்ததைக் கேட்டதும் அந்த நபரிடம் சென்று ‘’சில வருடங்கள் முன்னர் இதே வரிகளைத்தான் பாடீனீர்கள், நீங்கள் பொய்யான வாழ்க்கையில் இருந்து மீள முயற்சிப்பதில்லையா’’ என்று கேட்டார்.

‘’முடியவில்லை, பொய்யாகவே வாழ்ந்து பழகிவிட்டது. அந்த பொய்யில் இருந்து உண்மையாய் வாழ்வது என்பது இயலாததாக இருக்கிறது’’ என்றார் பாடியவர். ‘’இறைவனைத்தானே ஐயன் எனக் குறிப்பிட்டீர்கள், இறைவனை அறிந்த பின்னும் பொய்யாக வாழ்வது முறையா என்றுதானே அர்த்தம் சொல்கிறது பாடல்’’ என்றார் அந்த நபர்.

‘’ஆமாம், எனது இயலாமையைத் தான் ஐயனிடம் சொல்லி புலம்புகிறேன்’’ என்றார் பாடியவர். ‘’இறைவனிடம் இப்படி புலம்புவதன் மூலம் எப்படி நீங்கள் உண்மையாக வாழ முடியும், உண்மையாக வாழ முயற்சி செய்ய வேண்டுமல்லவா’’ என்றார் அந்த நபர்.

‘’முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் முடியவில்லை. என்னை ஆட்டிப்படைக்கும் ஐயனிடம் அதனால்தான் மன்றாடிக் கேட்கிறேன். ஐயனை அறியாதபோது செய்த தவறெல்லாம் ஐயனை அறிந்த பின்னும் தொடர்வது ஐயனின் விளையாட்டுதானேயன்றி வேறென்ன?’’ என்றார் பாடியவர்.

‘’ஐயனின் விளையாட்டு அல்ல அது, இது உங்கள் விளையாட்டு. மன தைரியத்துடன் உண்மையாகவே வாழ்வது என பொய்மையையும், கயமையையும் ஒழித்துவிட்டு வாழ்ந்து பாருங்கள். உண்மையாய் வாழ்வது இன்பம் எனப் பாட வரும்’’ என்றார் நபர்.

‘’அந்த ஐயனே உங்களை அனுப்பி இருக்கிறார். என்ன தவம் செய்தேன் நான்’’ என்றார் பாடியவர்.

‘’எந்த ஒரு ஐயனும் என்னை அனுப்பவில்லை, நீங்கள் ஒரு தவமும் செய்யவில்லை. எதேச்சையாக உங்களை நான் பார்க்க நேரிட்டது. எனக்கென்ன வருத்தமெனில் நீங்கள் அந்த ஐயனை அறியவே இல்லை. அந்த ஐயனை அறிந்து அந்த ஐயன் வழி நடந்திருந்தால் நீங்கள் பொய்யான வாழ்வினை வாழ மாட்டீர்கள்’’ எனச் சொல்லிவிட்டு நடக்கலானார் அந்த நபர்.

இறைவனை நம்புவர்கள் மட்டுமே உண்மையாக இருப்பார்கள் என எவர் எங்கு எழுதிக் கொடுத்த நியதி?. இறைவனை நம்பாதவர்கள் உண்மையாக இருக்கமாட்டார்கள் என எழுதித் தரப்பட்டா இருக்கிறது? சில வேதங்கள் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அதனாலேயே நான் மிகவும் உண்மையானவன், ஆனால் இறைவனை நான் நம்புவதில்லை, நான் இறைவனை நம்பாத காரணத்தினால் உண்மையில்லாதவன் என என்னைச் சொல்ல இயலுமா என குரல்கள் எழுப்பப்படுகின்றன.

இறைவன் ஒரு உண்மை. அந்த உண்மையை நம்பாதபோது நீ எப்படி உண்மையாக இருக்க இயலும் என்றே எதிர் குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. அப்படியெனில் உண்மையின் சொரூபமாக மட்டுமேத் திகழ்பவரா இறைவன்?

(தொடரும்)

Monday 21 September 2009

அடியார்க்கெல்லாம் அடியார் - 2

வீட்டுக்குத் திரும்பாமல், திரும்பிச் சென்றால் அம்மா ஏதாவது நினைக்கக்கூடும் என கண்கள் கலங்கியவாறே தொடர்ந்து நடக்கத் தொடங்கினான் கதிரேசன்.

கல்லூரியானது சிங்கமநல்லூரிலிருந்து சற்று உள்ளே தள்ளி அமைந்து இருந்தது. சிங்கமநல்லூர்தனை ஒரு நகரமோ, அல்லது ஒரு கிராமமோ எனச் சொல்லிவிட முடியாதபடி இருந்தது.

மாணவியர்கள் விடுதியானது கல்லூரி வளாகத்திலிருந்து சற்று தள்ளி இருந்தது. மாணவர்கள் விடுதி கல்லூரிக்கு உட்பட்ட இடத்திலேயே அமைந்து இருந்தது. எஞ்சினீயரிங் கல்லூரியும், பாலிடெக்னிக்குடன் சேர்ந்தே இருந்தது. பாலிடெக்னிக்கில் பெரும்பாலும் மாணவர்களே சேர்ந்து இருந்தார்கள். இந்த கல்லூரியை நிறுவி இதோடு எட்டு வருடங்கள் ஆகிறது. இந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்து வருபவர் சிவநாதன். இவர் ஒரு சிவபக்தர். மிகவும் கண்டிப்பானவர். கருநிற முடியும், துறுதுறுவென இருக்கும் இவரது செயலும் இவரை இளமையானவராகவேக் காட்டிக் கொண்டிருக்கிறது. கல்லூரியை ஒட்டி பெரிய சிவன் கோவில் ஒன்றையும் அவர் கட்டி இருந்தார். கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் மற்றும் சிங்கமநல்லூர் ஊர்க்காரர்களும்அந்த சிவன் கோவிலுக்குச் செல்வது உண்டு.

கதிரேசன் சிங்கமநல்லூர் சென்று அடையும்போது மாலை நேரம் ஆகிவிட்டது. விடுதிக்குச் செல்லும் முன்னர் நேராக தான் கொண்டு வந்திருந்த தகரப் பெட்டியை கோவிலின் வாயிலில் ரசீது கொடுப்பவரிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சிவன் கோவிலின் உள்ளே சென்றான் கதிரேசன். சிவனை வணங்கிவிட்டு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு பின்னர் விடுதியைச் சென்று அடைந்தான். வரிசையாக பல மாணவர்கள் அவரவர் தாய் தந்தையரோடு நின்று இருந்தார்கள். தானும் அவர்கள் வரிசையில் சென்று நின்று கொண்டான்.

அனைவரும் உற்சாகமாகத் தென்பட்டார்கள். அம்மாவை இம்முறையும் உடன் அழைத்து வந்திருக்கலாமோ என கதிரேசனுக்கு மனதில் பட்டது. கண்டிப்பும், கோபமும் அதிகமே நிறைந்த விடுதி காப்பாளர் தெய்வேந்திரனிடம் சென்று அறைக்கான எண்ணையும், அறைக்கதவுக்கான சாவியையும் பெற்றுக்கொண்டுவிட்டு ‘ஒவ்வொரு சனிக்கிழமை ஊருக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை வரலாமா சார்’ எனக் கேட்டான் கதிரேசன். ‘நீ ஊருலேயே இருக்க வேண்டியதுதானே, படிக்க வந்தியா ஊருக்குப் போக வந்தியா’ எனக் கடுமையாகவேச் சொன்னார் அவர். கதிரேசனுக்குப் பின்னால் நின்று இருந்தவர்கள் பயந்துதான் போனார்கள். ஆனால் கதிரேசன் பயப்படாமல் ‘படிக்கத்தான் வந்தேன் சார், வாய்ப்பு இருக்குமானு கேட்டேன்’ என்றான். முறைத்தார் தெய்வேந்திரன். தலையை குனிந்து கொண்டான் கதிரேசன். ‘ரூமுக்குப் போ’ என அதட்டியவர் கதிரேசன் பெயரை மனதில் பதித்தார்.

தயக்கத்துடனே அறையில் சென்று தனதுப் பெட்டியை வைத்துவிட்டு சுற்றிப் பார்க்க தனக்கு முன்னரே இரண்டு பேர் அந்த அறைக்கு வந்திருப்பது தெரிந்தது. ஒவ்வொரு அறையிலும் மூன்று பேர் தங்கிக்கொள்ளலாம். கட்டில் எல்லாம் கிடையாது. தரையில்தான் படுத்துக் கொள்ள வேண்டும். அறையில் புதிதாக வர்ணம் பூசி இருந்தது தெரிந்தது. மிகவும் சுத்தமாக இருந்தது. பெட்டிக்கு அருகில் அமர்ந்து கொண்டான் கதிரேசன்.

பெட்டியைத் திறந்தான். பெட்டியில் உள்புறம் ஒட்டப்பட்டு இருந்த சிவன் அபயம் அளித்துக் கொண்டு இருந்தார்.

‘தென்னாட்டுச் சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’

எனச் சொல்லிக்கொண்டே சின்னத் தலைகாணியும், போர்வையும் எடுத்து கீழே வைத்தான். தட்டு, டம்பளர், மிட்டாய், சேவு, முறுக்கு என எல்லாம் எடுத்து வைத்தான். பெட்டியை மூடினான். கதிரேசன் அறையில் தங்கிக்கொள்ளும் இரண்டு மாணவர்கள் உள்ளே வந்தார்கள்.

சிறிது நேரம் பின்னர் மூவரும் அறிமுகம் செய்து கொண்டார்கள். ஒருவன் நாகராஜன், காரியநேந்தல். மற்றொருவன் கார்த்திகேயன், வடமதுரை. அப்பொழுது அறைக்குள் தெய்வேந்திரன் வந்தார். ஒவ்வொரு பெயராக அழைத்தார். மூவரும் ஆம் என்றார்கள். கதிரேசனுக்கு அருகில் வந்தார் தெய்வேந்திரன். கதிரேசனை ஓங்கி ஒரு அறை விட்டார் அவர். 'சிவனே' என்று அலறினான் கதிரேசன்.

அருகில் இருந்து இருந்தால் அம்மா உன்னையே அழைத்திருப்பேன் என மனதுக்குள் கேவினான். ‘என்ன தைரியம் இருந்தா நீ வந்ததும் வராததுமா என்னை எதிர்த்துப் பேசுவ’ என்றார் தெய்வேந்திரன். மெளனமானான் கதிரேசன். ‘இங்க ஒழுக்கம்தான் முக்கியம். பெரியவங்களை மதிச்சி நடக்கனும். எதிர்த்துப் பேசினா கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளிருவேன், ஒழுங்காப் படிச்சி வெளியேப் போக வழியைப் பாரு’ எனத் திட்டிவிட்டுச் சென்றார். மற்ற இருவரும் நடுங்கினார்கள். கதிரேசன் பெட்டியைத் திறந்தான்.

‘உள்ளூர ஆசையில் ஒருவினாவும் கேட்டு வைத்தேன்
எள்ளிநெருப்பாடி என்மேல் எச்சமிட்டுச் சென்றார்
அம்மாவின் அரவணைப்பில் நானும் இருந்து இருந்தால்
சும்மாதான் அவளும் இருப்பாளோ சொல்சிவனே’

கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. துடைக்க மன விருப்பமில்லாமல் தொடர்ந்து மெல்லிய குரலில் பலமுறை இதே பாடலைப் பாடினான். மற்ற இருவரும் பயத்துடனே இருந்தார்கள். கதிரேசனின் கண்கள் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த சிவன் படத்தின் மேல் நிலையாய் நின்றது.

(தொடரும்)

Friday 18 September 2009

அடியார்க்கெல்லாம் அடியார் - 1


புளிய மரங்கள் அதிகம் வளர்ந்து செழித்து இருந்த அந்த கிராமம்தான் புளியம்பட்டி. வாகன வசதிகள் எல்லாம் இல்லை. ஆனால் சாலையெல்லாம் போடப்பட்டு இருந்தது. லாரிகள் புளியம்பட்டிக்கு அருகில் இருக்கும் ஆற்றுப் படுகையில் மணல் அள்ளி செல்லும், அதற்காகவே இந்த சாலைகள் பயன்பட்டுக் கொண்டிருந்தது.

கிராமத்தில் பள்ளிக்கூட வசதியும் கிடையாது. அருகில் இருக்கும் சின்னாளம்பட்டிக்குத்தான் ஐந்து வரை படிக்கச் செல்ல வேண்டும். படிக்கச் சிரமப்பட்டு ஊர் சுற்றுபவர்களே இங்கு அதிகம். விவசாயத்தையும், நெசவுத் தொழிலையும் மட்டுமே நம்பி, ஊரில் இருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்களாக ஆவதென்பது சாத்தியமில்லாமல்தான் இருந்து வருகின்றது. இதில் மணல் லாரியில் வேலைக்குச் செல்பவர்களும் உண்டு. சிறுக சிறுக பணத்தை சேமிக்கலாம் என்றால் உடல் வலி நீங்கும் என சாராயமும், வெற்றியாளர்கள் என நிரூபிக்க சீட்டாட்டமும் பணத்தை பழுது பார்க்கும். பொறுப்பற்றவர்களாக இளைஞர்கள் இருக்கிறார்களெனில் அவர்களது தந்தையர்களும் பொறுப்பில்லாமலே இருந்து வருகிறார்கள். வீட்டு வேலை பார்ப்பதோடு தோட்ட வேலையென பார்த்து கிடைத்தவரை போதும் என அடுப்படிக்குள் புகைந்து போகும் தாய்மார்கள்தான் இங்கு அதிகம்.

வார இறுதி நாட்கள் என வந்துவிட்டால் ஒரு பஞ்சாயத்தாவது நடக்காமல் இருக்காது. சத்தமும் சண்டையுமாகவே அந்த நாட்கள் கழியும். பின்னர் எதுவும் நடக்காதது போல அனைவரும் சகஜமாக பழகி கொள்வார்கள். சாதிப் பிரச்சினை அவ்வப்போது தலை தூக்கும். ஆனால் வெட்டிக் கொள்ளமாட்டார்கள். இப்படி மிகவும் பின் தங்கிப் போய் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணாமல் இறந்து போனவர்களும், இருந்து போகப்போவோர்களும் கிராமத்து கணக்கில் அதிகமாகவே தெரியும்.

அந்த புளியம்பட்டியில் வசித்து வந்த செல்லாயி தனது ஒரே மகன் கதிரேஷனை கஷ்டப்பட்டு பன்னிரண்டு வரை படிக்க வைத்து விட்டார். படிப்பினை சிரமம் இல்லாது படித்து வளர்ந்தான் கதிரேசன். கதிரேஷனுக்கு நான்கு வயதாகும் போதே காச நோயினால் அவனது தந்தை முருகேசன் சிவலோக பதவி அடைந்தார். புளியம்பட்டியில் மறுமணம் எல்லாம் செல்லுபடியாகாது. செல்லாயி தனது மகனே வாழ்க்கை என வாழ்ந்து வருகிறார்.

அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு குறுக்கே பாலிடெக்னிக் படிப்பு வந்து நிற்கிறது. கதிரேசன் இன்று சாயந்திரம் விடுதிக்குச் சென்று சேர்ந்து, நாளையிலிருந்து படிப்புத் தொடங்க வேண்டும். விடுதிக்கான பணத்தை மாதம் தவறாமல் கட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையில் செல்லாயி கதிரேசனை மேற்கொண்டு படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். கதிரேசனும் படிப்பின் மேல் கொண்ட அக்கறையினால் சரியென கேட்டுக் கொண்டான். மன உறுதியுடன் செல்லாயி இருந்தாலும் மகனைப் பிரிந்து இருப்பது என்பது கடினமானதாகத்தான் இருக்கும் என உணரத் தொடங்கினாள். கண்கள் கலங்கியவாறே முறுக்கு, கடலை மிட்டாய், சேவு என எல்லாம் எடுத்து வைத்து 'பத்திரம்பா' என வழி அனுப்பியபோது இருந்த பாதி உயிரும் போனதாகவே உணர்ந்தாள் செல்லாயி.

ஓட்டு வீட்டிலிருந்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தவாரே நடந்தான் கதிரேசன். ஊரின் எல்லையைத் தாண்டிச் செல்லும் முன்னர் ஓடிப்போய் அம்மா முகத்தை மறுபடியும் பார்த்துவிட்டு வரலாமா என்றுதான் இருந்தது கதிரேசனுக்கு.

(தொடரும்)

Wednesday 16 September 2009

மெருகு

சாகுபடி என தலைப்பு இடப்பட்டு
தமிழ் வார்த்தைகளால்
எண்ணங்கள் அலங்கரிக்கப்பட்டு
மேசையின் மீது
கவிதை ஒன்று
மிதந்து கொண்டு இருந்தது

விழிகள் கொண்டு
படித்துப் பார்க்கையில்
அற்புதம் எனப் பாராட்டி
அக்கவிதைக்கு ஒரு கவிதை
எழுதிவிட நெற்றி விரிந்தது

மீண்டும் வாசித்ததில்
வார்த்தை அலங்காரம்
பாமரனுக்குப் புரியுமோ
எண்ணியவாறே
கருவினைச் சிதைக்காது
வார்த்தைகள் மாற்றி
அக்கவிதையை வளர்த்தபின்
பல உள்ளங்களை
சாகுபடி செய்யும் என
இதயம் சிலிர்த்தது

உண்மை சமுதாயத்தின்
உணர்வு தாக்கம்தனை
ஒவ்வொரு ஜீவனிலும்
புகுத்திவிடும் என
அந்த படைப்பினை
கர்வம் கொண்டு பார்த்த பொழுது

''அம்மா
ஏதாவது போடுங்கம்மா''
வீட்டு வாசலில் இருந்து வந்த
சப்தம் கேட்டு
சில வரிகள் தன்னை
சாகுபடி கவிதையில் சேர்த்துவிடலாம்
என எண்ணியே
வாசலில் நின்றவருக்கு
நன்றி சொல்லி
எனக்கு மட்டும் இருந்த உணவை
அவருக்கு கொடுத்துவிட்டு
திரும்புகையில்
என் வெற்றுப்பானைகள்
மெருகேறி இருந்தன.

வலைப்பதிவர் ஆனேன்! தொடர்ந்து விளையாடுங்க (கிரி, தெகா, விதூஸ், ஜெஸ்வந்தி)




முத்தமிழ்மன்றத்தில் நான் எழுதியிருந்த பதிவுகளை மட்டுமே (சில பதிவுகள் தவிர்த்து) இங்கே வெளியிட்டுக் கொண்டிருந்த தருணத்தில் ''தேவதை வந்தாள்'' என அழைத்துச் செல்லக் கூறினார்கள் திருமதி.ஜெஸ்வந்தி அவர்கள். அவசர அவசரமாக பதில் சொல்ல வேண்டி தேவதையிடம் ஒரு வரம் கேட்டு அந்த தேவதையைத் தொலைத்துவிட்டேன். வலைப்பூக்களில் பார்வை இடும்போது அந்த தேவதை மிகவும் சந்தோசமாக வலைய வந்து கொண்டிருப்பதைக் கண்டு ம்னதில் சந்தோசம் கொண்டேன். ஒரு விசயத்தை எத்தனை ஈடுபாடுடன் செய்து கொண்டிருக்கிறார்கள் என.

இதோ தொடர் விளையாட்டுகளில் கலந்து கொள்வது மூலம் வலைப்பதிவராக அறிமுகம் ஆகிறேன்.

1. A – Available/Single? Not Available & Not Single : திருமணம் ஆகிவிட்டது. தனியாளானாக என்னைக் கருதிக்கொண்டால் பெரும் இடர்பாடுகள் வந்து சேரும்.

2. B – Best friend? : எனது மனைவி. எது சரி, எது சரியில்லை என அவர் பார்வையிலிருந்து சொல்வார். என் பார்வைக்கு ஏற்றபடி நான் நடந்து கொள்வேன்.

3. C – Cake or Pie?: கேக் தான், அதிக விழாக்களில் சாப்பிடுவதுண்டு.

4. D – Drink of choice? : எப்போதும் விரும்பி குடிக்க நினைப்பது 7up

5. E – Essential item you use every day? : ஆடைகள்

6. F – Favorite color? : வானத்து, கடலின், கிருஷ்ணரின் நீல நிறம் (கதையே எழுதி இருக்கோம்)

7. G – Gummy Bears Or Worms?: விளையாட, விருந்தாக இரண்டையுமே சேர்த்துக்கொள்வதில்லை.

8. H – Hometown? - மேலத்துலுக்கன்குளம். (எங்கே இருக்கிறது என பலருக்கும் தெரியாமலிருந்தால் இந்த கிராமம் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறது).

9. I – Indulgence? - கற்பனையில் மிதப்பது.

10. J – January or February? ஜனவரி, ஜனங்களுக்கு வரிகள் பல! எனினும் முழுமையான மாதம், முதல் மாதம்.

11. K – Kids & their names? ஒன்பது வயது நிரம்பிய ஒரு பையன். நவீன்.

12. L – Life is incomplete without? - அமைதி, திருப்தி.

13. M – Marriage date? 13-07-1998

14. N – Number of siblings? ஆறு - இரண்டு அக்காக்கள், நான்கு அண்ணன்கள்

15. O – Oranges or Apples? ஆப்பிள். உடலுக்கு நல்லது என பழமொழி கொண்டிருப்பதால்.

16. P – Phobias/Fears? மனிதர்களைக் கண்டு வெகுவாக அச்சப்படுவேன். 'நான் ஒரு ஏமாளி' என என்னை மிக எளிதாகச் சொல்வார்கள்.


17. Q – Quote for today? : 'நன்றாகச் சாப்பிடு, நன்றாகத் தூங்கு, எல்லா வேலையும் நன்றாகவே நடக்கும்'

18. R – Reason to smile? : 'புன்னகைக்குக் காரணமெல்லாம் சின்னதாய் தட்டிக்கொடுத்துக் கொள்வது'

19. S – Season? வெயில் மாறி தூறல் பொழியும் காலம்.

20. T – Tag 4 People? திரு. கிரி, திரு. தெகா, திருமதி. விதூஸ், திருமதி. ஜெஸ்வந்தி (சரியாகத்தான் பகிர்ந்து இருக்கிறேன்)

21. U – Unknown fact about me? உலகிற்கு நல்லது செய்ய வேண்டும் என எதுவுமே செய்யாமலிருப்பது.

22. V – Vegetable you don't like? பிடித்தத் காய்கறிகளைக் கேட்காமல் பிடிக்காத காய்கறி கேட்ட இந்த கேள்விதான். 'எதையும் சாப்பிடும் குப்பைத் தொட்டி என் வயிறு' என பிறர் கேலி செய்வதுண்டு, அசைவம் தவிர.

23. W – Worst habit? எதையும் எளிதாக நம்பிவிடுவது.


24. X – X-rays you've had? 2004ல் animal experiments செய்யும்போது ஏற்பட்ட உபாதையினால் எடுத்துக் கொண்ட நுரையீரல், இருதய எக்ஸ் கதிர் படம்.

25. Y – Your favorite food? :) சாதமும், சாம்பாரும் (இவையிரண்டும் நானே நன்றாக சமைப்பேன்). சிப்ஸும் பர்கரும்.

26. Z – Zodiac sign? Capricorn

அன்புக்குரியவர்கள்: அன்னையும், தந்தையும், மனைவியும், மகனும். உற்றாரும், சுற்றாரும், நட்பும், பகையும்.

ஆசைக்குரியவர்: கடவுள்

இலவசமாய் கிடைப்பது: காண்பதரிது

ஈதலில் சிறந்தது: எதுவும் இரவாமலிருக்கும்படி செய்வது.

உலகத்தில் பயப்படுவது: பொய்யும், உண்மையும்.

ஊமை கண்ட கனவு: எழுத்துக்களில் தெரிந்து கொள்ளலாம்.

எப்போதும் உடனிருப்பது: தலைக்கனம்

ஏன் இந்த பதிவு: கோவியாரின் அன்பு அழைப்பு.

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: நோயில்லா கல்வியும், செல்வமும்.

ஒரு ரகசியம்: சொல் எனும் சொல்

ஓசையில் பிடித்தது: பறவைகளின் சப்தம்

ஔவை மொழி ஒன்று: அறஞ் செய்ய விரும்பு (விரும்புவதை மட்டுமே செய்து வருகிறேன்)

(அ)ஃறிணையில் பிடித்தது: தாவரம் (இது இல்லாது போயிருந்தால் பிற அஃறிணைகளும், உயர்திணையும் இல்லாது போயிருக்கும்)


நன்றி கோவியாரே.

Tuesday 15 September 2009

அழகிய சிலை

நடுங்கியே கைகள்
வடித்தன சிலை
கோணலும் மாணலுமாய்
என் கண்களுக்கு

பொருட்காட்சியில் வைத்தேன்
அருள்பாலிப்பது போன்றே
யார் இதை வாங்குவார்
அச்சத்தில் நான்

சிலைதனை எடுத்து
ஒருவர் ரசிக்கையில்
விலை சொல்ல மனமில்லை
விலகினேன் நான்.

Monday 14 September 2009

தேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்

ஜெஸ்வந்தி அவர்கள் தேவதையை வந்து அழைத்துச் செல்லுமாறு அழைப்பு விடுத்தார்கள். நானும் சென்று தேவதையை அழைத்து வந்துவிட்டேன். எனக்கு தேவதையிடம் பத்து வரங்கள் கேட்க விருப்பமில்லை. ஒரே வரம் கேட்கலாம் என நினைத்து

''தேவதையே உன்னைப் போல் பிறருக்கு வரங்கள் அருளும் பாக்கியம் எனக்கு கிட்ட வேண்டும்'' என சொன்னேன்.

என்ன நினைத்தாளோ, தேவதை எங்கு போனாள் எனத் தெரியவில்லை!

எவரையும் வந்து அழைத்துச் செல்ல என்னிடம் அந்த தேவதை இப்போது இல்லை, மிகவும் வருந்துகிறேன்.











அடுப்பங்கரையில் அம்மா!

சேவலை எழுப்பிவிட்டு
முன்வாசல் துடைத்து தெளித்து
அழிந்துவிடுமென தெரிந்தும்
அளவு புள்ளிகளிட்டு சித்திரம் வரைந்து
வானத்து சூரியன் வருமுன்னே
நெருப்பு சூரியன் உதிக்க வைத்து
நெடுநேரமாய் அங்குதான் நிற்பாள் அம்மா.

அடுப்பினை ஊதினாலும்
புகைபடியாத சுவாசம்
"புகைபிடியாத" மன நேசம்
கண்களன்றி காதலித்து
காதலினால் கருத்தரித்து
"கருவறை சுத்தம்"
ஒருபோதும் செய்ததில்லை
"ஒவ்வாத பானம்" நுகர்ந்ததில்லை
ஒழுக்கமே வாழ்க்கையென
போற்றி வாழும் அம்மா
ஊர் எல்லை தாண்டியதில்லை
எங்கள் ஊர் காவல் தெய்வம் போல.

வீணான கனவுகள்
கலைய விருப்பமின்றி
உறங்கி நடிக்கும் என்
நடிப்புத் தூக்கம் துக்கம் கலைத்து
கல்வி கலை இசையென கற்றிட செய்து
இம்மியளவும் என் வாழ்க்கை
சலித்துபோய் விடாது
தினம்தோறும் எனக்காக வாழும் அம்மா.

ஊரெல்லாம் சுற்றி
காணாத மனிதர்கள் கண்டு
கையில் நடைபேசியுமாய்
காலில் கணினியுமாய்
அலைந்து திரிந்து வீடு திரும்புகையில்
அன்போடு அரவணைக்கும் அம்மா
அறிகின்றேன் உண்மையான அன்பும்
நல்ல ஒழுக்கமும்தான் வாழ்க்கையும் கடவுளும்.

யோசிக்கின்றேன்
இனிவரும் காலத்தில் அன்புக்காக என்பிள்ளை
யாருமில்லா அடுப்பங்கரையில்
துயரம் தாங்கி உலவ வேண்டும்
நானும் என் மனைவியும் வீடு சேரும் வரை.

கருத்துகளும் அதன் சுதந்திரமும்

வலைப்பூக்களில் எழுதுவோர் அனைவருக்கும் கருத்துக்களை வெளியிட சுதந்திரம் உண்டு, அதே வேளையில் கருத்துக்களை எவ்வாறு வெளியிட வேண்டும் என்கிற ஒரு வரைமுறையும் இருக்கிறது? என்பதை அனைவரும் அறிவோம்.

கருத்துக்களைப் பொருத்தவரை கருத்துக்களை வெளியிடுபவரின் மனநிலை, கருத்துக்களைப் படிப்பவரின் மனநிலை என இரண்டு விதமாகப் பிரித்துக் கொள்ளலாம். கருத்துக்களை வெளியிடுபவர் எந்த சூழ்நிலையிலும் சரி, எல்லாச் சூழ்நிலையிலும் சரி தனது கருத்துக்களுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை எவரும் மறுக்க இயலாது.

கருத்துக்களை எடுத்துக்கொள்வது என்பது படிப்பவரின் மனநிலையைப் பொருத்தே அமைகிறது, அதாவது அந்த நேரத்தில் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதைப் பொருத்தும் அமைகிறது. படிப்பவர் ஒவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்ப கருத்துக்கள் எழுதுவது என்பது எளிதான காரியமில்லைதான் ஆனால் கருத்துக்களை திறம்பட எழுதும் விதம் உண்டு.

மேலும் ஒருவரால் வெளியிடப்படும் கருத்துக்களினால் ஏற்படும் மனஸ்தாபங்கள், அதனால் வரக்கூடிய மன உளைச்சல்கள் என கருத்தினை வெளியிடுபவரும், கருத்தினால் பாதிக்கப்படுபவரும் அடைகிறார் என்பதில் இரு கருத்து இல்லை. இதன் விளைவாக அவ்வப்போது தலைகாட்டும் பிரச்சினைகள் பெரிய விவாதங்களை ஏற்படுத்தி வருவது ஒருவரது எழுத்தின் நோக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துவிடுகிறது.

'குழப்பமில்லாது இருப்பின் தெளிவுக்கானத் தேடல் அவசியமில்லை' என்பதை அனைவரும் அறிவோம். பல விசயங்கள் குழப்பம் தரக்கூடியதாக இருக்கும் காரணத்தினாலேயே தெளிவுக்காக விசயங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஒரு மாறுபட்ட எண்ணம் மற்றவர் மனதில் எழுவதற்கு நமது கருத்துக்களும் காரணம் என்பதும் உண்மையே.

பொதுவாக எவரையும் புண்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் எவரும் பதிவுகளை இடுவதில்லை. கருத்துச் சுதந்திரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை பரிசீலனை செய்வோம். 'நமக்குச் சரியெனத் தெரிவது பிறருக்குத் தவறாக இருக்கலாம்' நமக்குத் தவறெனத் தெரிவது பிறருக்குச் சரியாக இருக்கலாம்' எனும் உண்மையை உணர்ந்து கொண்டு விவாதத்தைத் தவிர்த்துவிட்டு கலந்துரையாடினால் அனைவரும் மகிழ்வுடன் இருப்பார்கள், நல்ல நல்ல விசயங்கள் கற்று மகிழலாம்.

எழுத்தின் நோக்கம் வெல்லட்டும், பல சிறந்த எழுத்தாளர்கள் உருவாகட்டும்!

Sunday 13 September 2009

தாவரமே ஆதாரம்


முளைக்கும் விதைக்கு
ஒளித் தேவையில்லை
விழித்துக் கொள்ளும்
முளைத்து வந்தவுடன்

கோள்கள் வெடித்து சிதறியதும்
கரியமில வாயுதனை
ஆக்ஸிஜனாய் மாற்றி
உயிரின் ஆதாரமாய்
உரைத்து நிற்கும் இலைகள்

வேருக்கு தெரியாது
உணவு தயாரிக்க
தண்ணீரை உலைக்குத்
தருவதுப் போல்
தாதுவும் தந்து
இலை தயாரிக்க
வேர் பார்த்து ரசிக்கும்

ஒளியும் நீரும் இல்லையெனில்
ஒன்றுக்கும் ஆகா தாவரம்
உணர்ந்து கொள்ளுங்கள்
உலகின் வாழ்வுக்கு
தாவரமே ஆதாரம்.

Saturday 12 September 2009

எங்க ஊரு ஆலமரம்.

''என்னடா ஆலமரத்தையேப் பார்த்துட்டு நிற்கிறே, போய் மாட்டுக்கு புல்லும், ஆட்டுக்கும் இலையும் பிடுங்கிட்டு வா''

''இருங்க முதலாளி, இப்போ போறேன்''

''ஏண்டா சொல்லிட்டே இருக்கேன், பதிலாப் பேசற''

தரையில் கிடந்த குச்சியை எடுத்து ஓங்கி கருத்தபாண்டியின் முதுகில் அடித்தார் பண்ணையார் குருபாண்டி. வலி தாங்கமுடியாமல் வார்த்தைகளை முனங்கியபடி ஓடினான் கருத்தபாண்டி.

மாட்டுக்கு புல்லும் ஆட்டுக்கு இலையும் பறித்துப் போட்டுவிட்டு மீண்டும் ஆலமரத்திற்கு கீழே போய் நின்றுகொண்டான். அவனுக்கு நேற்றிலிருந்து ஆலமரத்தின் மேல் ஒருவித ஈர்ப்பு வந்துவிட்டது. தாய் தந்தையை சிறுவயதிலே இழந்து தனது குழந்தை பருவம் முதற்கொண்டு பண்ணையார் வீட்டிலேயே வேலை செய்து காலம்தனை கடந்தான். பத்து வயதுதான் ஆனால் வேலைக்கு இது பத்தாது என பண்ணையாரா சொல்லப் போகிறார்.

''டேய் பாண்டி உன்னை பண்ணணயாரு வீட்டுக்கு வரச் சொல்லுறாருடா''

குரல் கேட்டதும் ஆலமரத்தின் மேல் வைத்த கண்ணை எடுத்துத் திரும்பி ஓட்டம் ஓட்டமாய் பண்ணையார் வீட்டை அடைந்தான்.

''ஏண்டா உன்னை ஒரு வேலை சொன்னா அதை மட்டும்தான் செய்வியா, ஏண்டா நேத்திலிருந்து ஆலமரத்துக்கு கீழேயே நிற்கிற''

கருத்தபாண்டி எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருக்க பண்ணையார் எழுந்து அவனை ஓங்கி ஒரு அறை விட்டார். கருத்தபாண்டி ஓ என அழுதுவிட்டான். அழுததை பொருட்படுத்தாமல் மேலும் சில அடிகள் கொடுத்தார்.

''ஏன் பச்சைப் புள்ளைய போட்டு இந்த அடி அடிக்கிறீங்க''

பண்ணையாரின் மனைவி கருத்தபாண்டியை அழைத்து சாதம் போட்டார். விக்கிக் கொண்டே சாதம்தனை விழுங்கினான்.

''அவர் எப்பதான் உன்னை அடிக்கிறதை நிறுத்தப் போறாரோ, ஏன் இப்படி இவர்கிட்டயே கிடந்து அடிவாங்கி சாகுற எங்காவது ஓடிப்போய் வாழ வேண்டியதுதான''

சாப்பிட்டுவிட்டு பதில் எதுவும் பேசாமல் திண்னையில் வந்து ஒரு ஓரத்தில் படுத்துக்கொண்டான். பண்ணையார் குருபாண்டி அவனருகில் வந்தார். கருத்தபாண்டி நடுங்கியவாறே எழுந்தான்.

''படுடா படு, நீ அந்த ஆலமரத்துக்கிட்ட நிற்கிறது எனக்குப் பிடிக்கலடா இனிமே உன்னை அங்க கண்டேன் கொன்னு போட்டுருவேன்''

ஆனால் அதிகாலை எழுந்து ஆலமரத்துக்குத்தான் போனான் கருத்தபாண்டி. அங்கேயே நின்று கொண்டிருந்தவன் நேரம் போவதை கவனிக்கத் தவறினான். பண்ணையார் நேராக அங்கே வந்தார்.

''பாண்டி பண்ணையார் வராருடா''

கருத்தபாண்டி திரும்பி பார்த்தவன் ஓட்டமாக ஓடினான். மாடுகளை அவிழ்த்துக்கொண்டு காட்டுப் பக்கம் போனான். பண்ணையார் மாடுகளை ஓட்டிச் செல்வதைப் பார்த்து பேசாமல் வீட்டிற்குச் சென்று விட்டார். மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவன் எங்காவது ஆலமரம் தென்படுகிறதா எனப் பார்த்தான். ஆனால் காட்டில் ஆலமரங்களே தென்படவில்லை. நன்றாக வெயில் அடித்ததும் மாடுகளை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

''ஏண்டா நேத்து என்ன சொன்னேன், நீ என்ன செஞ்ச அந்த ஆலமரத்துக்குக் கீழ போய் நிற்காதடா''

''அந்த ஆலமரத்துக்கு எத்தனை பறவை வருது ஐயா, மரம் விரட்ட மாட்டேங்குதே, வேலை வாங்க மாட்டுதே ஐயா''

சொல்லிவிட்டு ஓடிப்போனான் கருத்தபாண்டி. மிகவும் யோசித்தார் குருபாண்டி. அடுத்த தினமே தனது மனைவியை அழைத்துக்கொண்டு அந்த ஊரு பள்ளி தலைமை ஆசிரியரை சந்திக்கச் சென்றார் பண்ணையார் குருபாண்டி.

முற்றும்.

Friday 11 September 2009

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 4

எலக்ட்ரானின் எதிர் தன்மையை காட்டியவர் ஜே. ஜே. தாம்ஸன். புரோட்டானின் நேர் தன்மையை காட்டியவர் கோல்ட்ஸ்டெயின். இவர்களின் ஆராய்ச்சியின்படி ஒரு அணுவின் மொத்த நிறையும் நேர்தன்மையுடைய புரோட்டான் துகளால்தான் வருகிறது எனவும் மிக மிக மெல்லிய நிறை கொண்டது எலக்ட்ரான் எனவும் தெரிய வந்தது.

உதாரணமாக எலக்ட்ரான் 1837 மடங்கு புரோட்டானை விட சிறியது என ஹைட்ரஜனில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரிந்தது.

இந்த எலக்ட்ரான்களினால்தான் அணுக்களின் எண் பற்றி எளிதாக அறிய முடிந்தது. இது குறித்து மோஸ்லியின் ஆராய்ச்சிகள் சொன்னது என்னவெனில் எலக்ட்ரான்கள் உலோகத்தினை மோதும்போது எக்ஸ்-ரே கதிர்களை உருவாக்குகிறது இந்த கதிர்களுக்கு எந்தவித தன்மையும் இல்லை அதே வேளையில் ஒரு தனிமத்தில் இருந்து மற்றொரு தனிமமாக மாறும்போது அத்தனிமத்தின் நிறை அதிகரிப்பதாகவும் அது புரோட்டானின் நேர்தன்மையினால்தான் என கண்டறிந்தார். எனவே புரோட்டான் தான் அணு எண்ணுக்கு காரணம் என அறிவித்தார் இது தான் ஒரு அணுவிற்கு அடிப்படையானதும் கூட. ஒரே எண்கள் கொண்ட வெவ்வேறு அணுக்கள் இல்லவே இல்லை என்பதைச் சொல்வதைக் காட்டிலும் இதுவரையிலும் எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மெண்டலீவ் தனிம அட்டவணையை உருவாக்கியவர். இவரது கணிப்புகள் வேதியியலுக்கு பல வகையில் உதவி செய்தன என சொன்னால் மிகையாகாது. மென்டலீவின் ஒருங்கினைப்பு சிந்தனை அற்புதமான செயல்பாடு எனலாம்.

சாட்விக் நியூட்ரானைக் கண்டுபிடித்தார், கண்டுபிடிக்கப்பட்டு 85 வருடங்கள் கூட இன்னும் முற்றுப் பெறவில்லை. இந்த நியூட்ரானின் எடையும் புரோட்டான் எடையும் ஒன்றாக இருந்தது. இதனுடைய கூட்டுத்தான் ஒரு அணுவின் நிறை எனலாம் அதாவது நிறை எண்.

பொதுவாக இந்த எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எல்லாம் எப்படி வந்தது என உள்நோக்கிப் பார்த்தால் ஒன்றுமே புரியாத விசயமாக இருக்கும். இப்படி ஒரு மின்சாரத் தன்மையான சக்தி எப்படி வந்தது?

முதலில் வாயுக்கள் போன்ற தூசுப் பொருட்கள் இருந்து இருக்கிறது என்று சொல்லும் போது அதனிலிருந்து தான் நட்சத்திரங்கள் உருவாகி இருக்கிறது என சொல்லும் போது வேதியியல் வேதம் பேசுகிறது என்று தான் தோன்றுகிறது.

இந்த சூரியனின் ஆயுட்காலம் 13.5 பில்லியன் வருடங்கள் வரை தான் அதில் தற்போது 4.5 பில்லியன் வருடங்கள் முடிந்து விட்டது இனி 7.5 பில்லியன் வருடங்கள் இருக்கிறது அதில் என்னவெல்லாம் நடக்கும் என பில்லியன் வருடம் வீதமாக சொல்லி வைத்து விட்டார்கள். முடிவில் ஒன்றுமே இல்லாத ஒரு சூரியனாய் போய்விடுமாம். இந்த ஆய்வு ஆச்சரியம் தருகிறது.

அறிவியல் கூற்றுப்படி தனிமங்கள் எல்லாம் பின்னால் தோன்றியவை, ஒன்றில் இருந்து ஒன்று மாறி வந்தவை எனும் போது இவையெல்லாம் முன்னால் இருந்தவை எனும் கூற்று அடிப்பட்டு போகும். அப்படி முன்னால் இருந்தவை என்றால் எதற்கு அனைத்து கோள்களும் ஒரே மாதிரியான நிலையை பெறவில்லை என்ற கேள்வியும் எழும். இயற்பியலும் வேதம் பேசுகிறது.

இந்த தட்பவெப்ப நிலையே உயிர் வாழச் சாதகமானது என சொல்லப்படும் பட்சத்தில் காற்றில்லாமல் வாழும் உயிரினங்கள், தரையில் வந்தால் செத்துப் போகும் உயிரினங்கள், தண்ணீரில் சென்றால் தவித்துப் போகும் உயிரினங்கள் என பிரிந்து இருக்கும் பட்சத்தில் மற்ற கோள்களிலும் உயிர்கள் இருக்கத் தானே செய்யும்? கண்ணுக்குத் தெரியாமல் வாழும் உயிரினங்களா அவை? கேட்கும் சப்தம் இருக்கிறதே அதைக் கூட அளந்து வைத்து இருக்கிறார்கள். அதனை டெசிபல்ஸ் எனப்படும். அந்த அளவுக்கு உட்பட்ட சப்தம் மட்டுமே நாம் கேட்கமுடியும்! அப்படியெனில் உயிரியலும் வேதம் பேசுகிறது!

எழுத நினைத்ததும்

கவிதை எப்படி வருமாம்
காதலித்தால் வருமாம்
கற்பனை இருந்தால் வருமாம்
கலங்கி கிடக்கும் நெஞ்சம்
புலம்பி தவிக்கையில் வருமாம்

துயரம் கண்டு துடிதுடிக்கையில்
துள்ளிக்கொண்டு சீறிப்பாய்ந்து வருமாம்
கண்ணை மூடி கடவுளை நினைக்கையில்
கனிந்து தவழ்ந்து வருமாம்

கண்ணீர் சிந்தி அழுவதற்கு பதில்
எழுதுகோல் சிந்தி அழுது வருமாம்
வார்த்தை அலங்காரம் செய்துவிட
வேடிக்கைக் காட்டி வருமாம்
வண்ணத்துபூச்சிப்போலே பறந்து
வண்ணகனவுகளுடன் வருமாம்

எழுத நினைத்தும்
எழுத வார்த்தைகளன்றி இருப்போர்க்கு
ஊமையாகவும் வருமாம்
புன்னகையாகவும் வருமாம்
அழுகையாகவும் வருமாம்
தோழமையாகவும் வருமாம்

இனி
கவிதை வந்தவிதம்தனை
நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

Thursday 10 September 2009

காதல்

உன்மேல் எனது ஈர்ப்பு
உயிரின் பாதுகாப்பு
தொட்டதற்கெல்லாம் குற்றம்
தொலையாது மனம் சுற்றும்
விட்டுவிட்டு போக நினைக்கையில்
கால்களுக்கும் மனம் இருக்கும்
வாசல் கடக்காது
கட்டுப்பட்டே நிற்கும்!

என்ன கொணர்ந்தேன் என
கைகளைப் பார்த்துக்கொண்டே
இதயத்தில் நுழைவாய்
அன்புதனை விடவா
பொருள் பெரிதென்றால்
பொருள்தான் பெண்ணின் அழகு
பொருள்படச் சொல்வாய்
புரிந்தவனாக நான் இல்லை!

காதலை மனதில் பூட்டிக் கொண்டால்
கண்கள் எப்படி சொல்லிக் காட்டும்
ஊடலின் வலி என்னுள் விதைத்து
பூட்டினை உடைப்பாய் கட்டியே அணைத்து
விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகள்
விருப்பமில்லாத விளக்கங்கள் சொல்லி வழியும்
பொருளில் இல்லை காதல் என்பதை
உனது புன்னகைச் சொல்லிக் கிறங்கும்

எனது ஆயுள் உன்னில் அடங்கும்
பிள்ளைப்பேறினால் உலகம் இருக்கத் தொடரும்
கைகள் இணைத்து நடந்தே செல்கையில்
ஒருவருக்கொருவர் முதுமையில் முதுகில் சாய்கையில்
எப்படி வாழ்ந்தோம் என எண்ணியே
முகத்தோடு முகம் ஒட்டுகையில்
இறைவனாக நாம் இயங்க வைத்த
காதலை கணக்கிட்டு சொல்லவும் கூடுமா?
உன்மேல் எனது ஈர்ப்பு
நமது உயிரின் பாதுகாப்பு!

(நம்பிக்கை குழுமம் நடத்திய போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கவிதை)

Wednesday 9 September 2009

சிறுகதைப் பட்டறை - ஆச்சரியமளிக்கிறது.

சிறுகதைப் பட்டறை குறித்த இன்றைய பதிவு ஒன்றைப் படித்ததும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. முன்னர் இதே சிறுகதைப் பட்டறை சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் தெரிவித்தும் இருந்தேன்.

நானூறு ரூபாய் நுழைவுக் கட்டணம் என்று எழுதப்பட்டு இருந்ததைப் படித்துதான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன். தொழில்ரீதியாக தங்களை மெருகேற்றிட பணம் செலவழித்து பல பட்டறைகளில் தங்களை இணைத்துக்கொள்பவர்களிடையே எழுத்துத் தொழிலையும் போற்றி இந்த சிறுகதைப் பட்டறை மூலம் தங்களை மெருகேற்றிட நினைத்து இருக்கும் பல ஆர்வலர்களை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இடத்திற்கே அதிக பணம் செலவழிந்துவிடும் என்பதுதான் வருத்தத்துக்குரிய விசயம். சிறுகதை எழுதிட அமைதியான சூழல் அவசியம், ஆடம்பரமான சூழல் அல்ல!

பிறந்தநாள் விழா, தலைவர் படம் என விழாக்கள், சினிமா என செலவிடும் பணத்தைப் பார்க்கும்போது இந்த பணம் ஒருவிதத்தில் மிகவும் குறைவுதான். ஆனால் இந்த பணத்தைக் கூடத் தர இயலாமல் எழுதத் துடித்துக் கொண்டிருக்கும் ஒருவர் இருக்கவும் கூடும்.

இன்றைய வாழ்க்கை சூழலில் தானாக கற்றுக் கொள்வது என்பது குறைந்து போய்விட்டது. எதையும் எவரேனும் சொல்லித் தந்தால் மட்டுமே கற்றுக் கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் இதற்காக தனியாக நேரம் செலவிட முடியாததும், தன் முனைப்பு இல்லாததும் காரணமாகும். இது போன்ற பட்டறைகளில் கலந்து கொள்வதால் நாம் மெருகேறிவிடலாம் என கனவு காண்பவர்கள், இதன் மூலம் பெறும் அனுபவங்களை முயற்சியாக்க வேண்டும் என நினைவுடன் இருந்தால் மட்டுமே வெற்றி காண முடியும்.

இப்படித்தான் லண்டனில் மருத்துவத் துறைக்குச் செல்ல மருத்துவம் சம்பந்தமாக இரண்டு நாட்கள் மட்டுமே நடக்கும் பட்டறைகளில் பணம் செலவழித்து கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் இங்கு அதிகம் பேர் உள்ளனர். இதுபோன்ற பட்டறைகளில் கலந்து கொள்வதால் ஒரு விழிப்புணர்வும், நல்ல அனுபவமும் கிடைக்கக் கூடியதாகவே கலந்து கொள்பவர்கள் கூறுகிறார்கள், மேலும் இவ்வாறு கலந்து கொண்டதற்கான தரப்படும் சான்றிதழ் பெரும் மதிப்பு உடையதாக இருக்கிறது.

சிறுகதை பட்டறை சிறப்பாக நடந்திட வாழ்த்துகள்.

உனக்கென இருக்கும் உடல்

உயிரை உடலுக்குள் எங்கு
வைத்து இருக்கிறாய்
இந்த உடல் வளர வளர
உயிர் சுருங்கிக் கொண்டே வருமோ
உடல் வளரும் முன்னே
சுருங்கிப் போன
உயிர்களும் உண்டே இங்கு!

வெளியில் விடுதலையுடன் இருந்த
உயிரையா உடலுக்குள் வைத்தாய்
வெளிச் செல்ல வேண்டுமென்றா
தினமும் போராடுகிறது
இருக்குமிடம் அறியாத எனக்கு
அதன் போராட்டம் புரிவதில்லை!

ஆதியும் அந்தமும் இல்லாத
உயிரினை எங்ஙனம் படைத்தாய்
உறுப்புகள் உடல் பிரிகையில்
உயிரும் துணை சென்று வருமோ
உன்னை உணர்ந்திட
உடல் தேடி வருவதேன்!

உயிருக்கு உன்னை உணர வைக்கும்
ஒரு வழி காட்டியது இவ்வுடல்
புதைக்கவோ எரிக்கவோ வேண்டாம்
மீண்டும் அதே உயிர்
உணர்தல் தொலைத்து உடல்
தேடி வரலாம் பாதுகாத்து வையுங்கள்.

Tuesday 8 September 2009

உனக்காக ஒரு பொழுது

நீ பிறந்தவுடன்
நீதான் எனக்கென
எனது கன்னம் பிடித்து
தட்டிக்கொடுத்து நம் திருமணம்
குறித்துப் போன உன் தந்தை!

முடிந்து வளரும் தினமெல்லாம்
நான் பார்த்து ரசிக்க
நீ வாங்கி வந்த வரமாம்
உனது பிறப்பிற்கு பின்னர்
மறுபிறப்பு எடுத்த என் உயிர்
பொய் பேசாமல் சொல்லும் என் அம்மா!

அருகருகே அமர்ந்த மழலை மொழிகள்
காதல் புரியாமலே காதல் பார்வைகள்
முடியாத சக்தியெல்லாம் என்னில் இருப்பதாய்
என்னுயிர் காக்கின்றாய் உன்னுயிர் காத்துக்கொண்டு!

உன்னில் என்னை புதைத்த காலங்கள்
எனது கனவினை சுமக்கும் நேரங்கள்
சிறுவயது காலம் முதல்
இவ்வயது காலம் வரை
எனக்காக நீ வாழ்வது
எனக்காக மட்டுமில்லை அறிவாயா?
உனக்காக ஒரு பொழுதேனும்
உனக்காக மட்டும் ஒதுக்கி வை
உன்னில் இருக்கும்
என்னைப் பற்றிய நினைவுகள்
இளைப்பாறட்டும்!

அன்புள்ள காதலனுக்கு,

நீங்கள் எழுதிய
கவிதை வரிகள் கண்டு
என் வாழ்வின்
வசந்தம் உணர்ந்தேன்

பாலைவனத்தில் மழை பெய்து
பூஞ்சோலை உருவானால்
அதை பார்ப்பவருக்கு
எவ்வளவு மகிழ்ச்சியோ
அதைவிட அளவிலா
மகிழ்ச்சி அடைந்தேன்

தந்தையின் மனம் மாறவில்லை
ஆனாலும் நம் காதலை
மறுக்க முடியவில்லை
காலம் செல்லும் போக்கில்
அவர் தன் மனதை
மாற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன்

முறையில்லா வாழ்க்கைக்கு
முடிச்சு போடாதீர்கள்
என்று சொன்னேன்
முரண்பட்டவற்றில் உள்ள
முடிச்சை சிக்கலாக்குவதே
என் உயரிய தொண்டு என்றார்

தாயில்லா எனக்கு
தயவு காட்டுங்கள் என்றேன்
தாய்மையின் பெருமையை
நீ உணரும் வரை
என் நிலை விளங்காது என்றார்

நிலவு வரை
காதல் போய்விட்டது
ஏன் நிலவறைக்குள் அடைக்கிறீர்கள்
என்றேன்
பெண்ணை பெற்றவனுக்கு
பெரும்பாடு என்று
மண்ணின் பாட்டை
மறுபடியும் கூறினார்

எனக்கு வரன் பார்ப்பதாக
என்னிடம் கூறினார்
தட்சிணை வைப்பதாய்
இருந்தால் அந்த
காரியத்தை தள்ளி வையுங்கள்
என்றேன்

இந்த காலத்தில்
தட்சிணையின்றி தாலியா
அதற்கு சாத்தியமில்லை என்றார்
அப்படியென்றால்
காதலற்ற மணத்திற்கும்
சாத்தியமில்லை என்றேன்

நீங்கள் கூறியது போல
எல்லாம் அவர் குற்றம்
என்றார்
புரிந்து கொண்டால் நல்லது
என்று புரையோடியவிட்ட
புண்ணை கீறிவிட்டேன்

மருந்து போடுவதற்கு
ஆயத்தமானேன்
நீங்கள் காட்டுபவரை
நான் கைபிடித்து
வாழ்வு சரியாகாதுப் போனால்
அதற்கு என்ன உத்தரவாதம் என்றேன்

ஆனால்
என்னையே அவர்
திருப்பிக் கேட்டார்
காதலரை மணந்தால்
இந்நிலை ஏற்படாது என்று
என்ன உத்தரவாதம் என்றார்

காதல் உத்தரவாதம் என்றேன்
காறித் துப்புகிறது மேலை நாடுகள் என்றார்
நாம் மேலை நாட்டின்
நிலையில் இல்லை என்றேன்
எழுபத்து ஐந்து சதவிகிதம்
தாண்டிவிட்டோம் என்றார்
இருபத்து ஐந்து காப்பாற்றும் என்றேன்

வாக்குவாதம்
வரிகளால் அர்ச்சனை
செய்யப்படும் போது
அவர் விலகி நிற்க
ஆசைப்பட்டார்
என் தந்தையின் மனது
குழப்பமானதை
நானும் உணர்ந்து
விலகி விட்டேன்
நீங்கள் வரும்வரை
நிச்சயம் காத்து இருப்பேன்.

Monday 7 September 2009

செவ்வாயில் தண்ணீர்

இருக்கும் பூமியில் தண்ணீர்
இல்லாமல் போகும் நிலைக்கு
மாற்றுவழி கண்டு மனம்
மகிழ்ந்திட வழியின்றி
பக்கத்து கிரகத்தில்
சேரோடு சகதியில்
தண்ணீர்தானா என தவித்து

பூமியில் வாழும் மனிதர்களுக்கு
நல்வழி காட்டி மகிழாது
பொருளையெல்லாம் கொட்டி
பிஞ்சு உள்ளம் வெந்து
சாவதை கண்டு துடிக்காது
என்ன இந்த விஞ்ஞானம்

எண்ணிப் பார்க்கையில் விந்தைதான்
என் பையில் கொஞ்சம் பணம்
அதிகமாகவே இருக்கிறது
அழுது கொண்டு நிற்கும்
அந்த பையன் இன்னும்
அழுதபடியே!


Sunday 6 September 2009

என்னுடைய ஆசிரியர்கள் - 4

GATE - இந்த தேர்வில் தேர்வாக அனைத்து ஆசிரியர்களின் சிறப்பான பாடம் நடத்தும் முறையே உதவியது எனலாம், குறிப்பாக ஹபீப் மற்றும் பிரகாஷ். அதிகபட்ச கேள்விகள் இதில் இருந்துதான் வந்தது. GATE -ல் 84.7 percentile 234 வது இடம் எடுத்து தேறினேன். 1400 பேர் எழுதி இருந்தார்கள்.

பீகார் மற்றும் கல்கத்தாவில் இருந்து வாய்ப்பு வந்தது. இரண்டும் 10 நாட்கள் என்ற வித்தியாசத்தில் இருந்ததால் இரண்டும் செல்ல வேண்டியது என முடிவு எடுத்தாலும் கல்கத்தாவில்தான் எனது மனம் நின்றது. அப்பொழுது செல்லும் முன்னர் எனது தாயிடம் ஒரு கேள்வி கேட்டேன். இதுவரை வாழ்ந்துவிட்ட நீங்கள் உலகினைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? இதுதான் அந்த கேள்வி. உலகில் ஒன்றுமே இல்லை இதுதான் எனது தாய் தந்த பதில். ஒரு மாபெரும் ஆசிரியராக எனது தாய் எனது கண்ணிற்கு தெரிந்தார். அவர் 3 வது வரை படித்து இருந்தார். ஐந்தாவது வரை படித்து இருந்தால் ஆசிரியராகி இருப்பார். படிக்க முடியாததன் காரணம் இளம் வயதில் அவர் அவரது தாயை இழந்தது. மக்களைப் பெற்ற மகராசி என பெயர் பெற்றவர். பொறுமையின் சிகரமாக போற்றப்படுபவர். எனக்கு அவரது பதிலில் வாழ்க்கையின் முக்கியமான விசயம் புரிந்து போனது.

ஜதாவ்பூர் பல்கலைகழகம் கல்கத்தா.

பீகாரில் தோல்வி அடைந்து கல்கத்தாவில் மருந்தியல் நுண்ணுயிர்கள் பிரிவினை எடுத்தேன். பின்னர் நான் கேட்ட pharmaceutical chemistry கிடைத்தது ஆனால் நான் மாற்ற வேண்டாம் என முடிவுக்கு காரணமானவர் சுஜாதா கோஷ் டஷ்டிதார் என்னும் ஆசிரியை.

சுஜாதா : இவர்தான் எனது முதுநிலை மருந்தியல் படிப்பின் supervisor. பொதுவாக ஆறு மாதம் செய்ய வேண்டிய ஆய்வகப்பணியினை 18 மாதங்கள் செய்ய வைத்தவர். கல்லூரி தொடங்கிய தினம் அன்று முதல் முடிக்கும் வரை ஆய்வகத்தில் வேலை பார்த்தேன். ஆராய்ச்சியில் எனக்கு இருந்த ஈடுபாடு அதிகமானதற்கு காரணம் இவர்தான். சிறந்த ஆராய்ச்சி செய்ய உதவியவர். அதிக கோபம் வரும். நன்றாக பாடம் நடத்துவார். இதே நுண்ணுயிர் பிரிவில் உள்ள மற்றொரு ஆசிரியர் புகைத்துக் கொண்டே பாடம் நடத்துவார். மிக மிக வித்தியாசமாக உணர்ந்தேன், ஆசிரியர்களிடம் நெருங்கிய நட்பு இங்குதான் ஏற்பட்டது.

பயோகெமிஸ்ட்ரி மற்றும் பார்மகாலஜி இரண்டும் எனது துணைப்பாடங்கள். இதில் பயோகெமிஸ்ட்ரி ஆசிரியர் 5 முறை ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். மிக சிறப்பாக பாடம் நடத்துவார். பார்மகாலஜி ஆசிரியர் மிகவும் சிறப்பாக பாடம் நடத்துவார். நல்ல திறமையானவர். மேலும் சில பாட ஆசிரியர்கள் முதுநிலை தானே என விடாமல் சிரத்தையுடன் பாடம் நடத்துவார்கள். பாட வகுப்பில் அமர்ந்த காலங்கள் விட ஆய்வகத்தில் செலவிட்ட காலங்கள் இங்கு அதிகம்.

சுஜாதா அவர்களிடம் பி ஹெச் டி பண்ண வாய்ப்பு கிடைத்தும் மறுத்துவிட்டு டில்லி சென்றேன். டில்லியில் AIMS ல் பி ஹெச் டி பண்ண வாய்ப்பு தந்தார் ஒரு ஆசிரியர். சில மாதங்கள் இருந்துவிட்டு நானே ஆசிரியராக மாறினேன். இலண்டன் சென்ற பின்னர் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனும் எனது கொள்கையில் பிடிப்புடன் முதன் முதலில் அமலா எனனும் ஆசிரியை சந்திக்கச் சென்றேன்.

அவர்தான் மாணவர்கள் நலன் பேணுபவராக அந்த தருணத்தில் இருந்தார். அவரிடம் இருந்த புரொஜெக்ட்ஸ்களை காட்டினார். இதில் உனக்கு விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள் என்றார். ஒரு நிமிடம் யோசித்தேன். அப்படி ஒரு நிமிட சிந்தனையில் வந்து விழுந்ததுதான் அந்த புரொஜெக்ட். எந்த நம்பிக்கையில் தேர்ந்தெடுத்தேன் எந்த நம்பிக்கையில் அவர் என்னிடம் கொடுத்தார் என்பது தெரியாது. பதினைந்து நாட்கள் இருந்த பட்சத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கான பண நிதிக்கு விண்ணப்பம் பண்ண வைத்து வெற்றி பெற வைத்து எனது ஆராய்ச்சிக்கு வித்திட்டவர். இவர் ஒரு perfectionist. இவர் தந்த ஊக்கம் வார்த்தையில் சொல்லி வைக்க இயலாது. எனது மேல் கொண்ட நம்பிக்கையில் எனக்கு இவர் மற்றொரு ஆசிரியரை துணை மேலாளாராக வைத்துக் கொள்ள வேண்டி அறிமுகப்படுத்தினார். நான் எடுத்துக் கொண்ட புரொஜக்ட், ஒரு வருடத்தில் கிடைத்த ஆய்வு வெற்றியின் காரணமாக ஒரு நிறுவனம் மொத்தமாக நிதி உதவி செய்தது. ஆராய்ச்சி என்றால் இவரைப் போல் செய்ய வேண்டும் என எனக்கு வழி காட்டியவர் இந்த ஆசிரியை. இரு வாரத்திற்கு ஒரு முறை என அனைத்து ஆய்வக முடிவுகளை முகம் கோணாமல் சரி பார்ப்பார். இரண்டரை வருட காலங்களே நான் முடித்து இருந்த வேலையில் அதே ஆய்வகத்தில் அந்த நிறுவனம் என்னை பணியாளானாக ஏற்றுக் கொண்டது, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றது இன்னமும் மறக்க முடியாத நினைவு.

இவர் நான் தீஸிஸ் முடிக்கும் முன்னர் அமெரிக்காவிற்கு மாற்றம் ஆகிச் சென்றார் இருப்பினும் நான் வெற்றிகரமாக முடிக்க எல்லா உதவிகளும் செய்தார், இனியும் உதவிகள் செய்து கொண்டு இருக்கிறார். எனக்கு பக்கபலமாக தற்போது இருந்துவரும் மூன்று ஆசிரியர்கள் பற்றி ஒரே வார்த்தை சாதனையாளர்கள். எனது மாணவர்கள் என்னை எப்படி ஆசிரியராக பார்த்தார்கள் என்பதற்காக அந்த ஒரு வருடம் ஆசிரியர் பணி முடித்து நான் லண்டன் வந்தபோது மூன்று பரிசு தந்தார்கள். அதனை பின்னர் குறிப்பிடுகிறேன்.

இப்படி கல்லூரியிலும் பள்ளியிலும் ஆசிரியர்களாக இருந்த இவர்கள் என்னை எத்தனையோ மெருகேற்றி இருக்கிறார்கள், இது தவிர வெளி உலக வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்கள் மற்றும் இயற்கை விசயங்கள் எனக்கு ஆசிரியர்களாக இருந்து கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் சொல்லித்தர வேண்டும் என சொல்லித்தரமாட்டார்கள். இவர்களிடம் இருந்து நாமாக கற்றுக் கொள்வதில்தான் இருக்கிறது வாழ்க்கையின் பயனும் பண்பும். இந்த தருணத்தில் நான் விளையாடி மகிழும் பகவான் நாராயணனையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன். இந்த பகவான் நாராயணன் யார் என்பதை நிச்சயம் நுனிப்புல்லில் எழுதி விடுவேன் என்ற அளவு கடந்த எண்ணம் உண்டு.

முத்தமிழ்மன்ற பள்ளியில், இப்போது வலைப்பூக்களில் எனது ஆசானாக/ஆசிரியர்களாக இருப்பவர்கள் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள். உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. ஒரு சில ஆசிரியர்கள் பற்றி குறிப்பிடாமல் விட்டு இருந்தால் என்னை மன்னித்து விடுவார்கள்.

என்னுடைய ஆசிரியர்கள் - 3

உத்தங்குடி கே எம் மருந்தாக்கியல் கல்லூரி (தமிழ்நாடு எம் ஜி ஆர் பல்கலைகழகம்)

டாக்டர் ரவீந்திரன் : இவர்தான் நான் மருந்தாக்கியல் படிக்க வழி வகுத்தவர். எனது இளைய அக்காவின் திருமணம் மே மாதம் நடந்தது. அப்பொழுது எனது நிலையை அறிந்த எனது பாவா, அவருக்குத் தெரிந்த டாக்டர் ரவீந்திரன் என்பவர் கே எம் மருந்தாக்கியல் கல்லூரியில் முன்பு anatomy physiology யில் வேலை பார்த்தார், எனவே அவரிடம் கேட்கலாம் என சென்று எனது மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் காட்டி அந்த கல்லூரியில் ஒரு இடம் வாங்கித் தந்தார். இதில் என்னவென்றால் மொத்தமே தமிழகத்தில் ஐந்து இளநிலை மருந்தாக்கியல் கல்லூரிகள் மட்டுமே அப்பொழுது இருந்தது. diploma மருந்தாக்கியல் படிப்பு மதுரை மருத்துவ கல்லூரியில் கிடைத்தும் மறுத்துவிட்டு இந்த கல்லூரியில் சேர்ந்தேன். இதே படிப்பை ஊட்டியில் பணம் கட்டி படிக்க வாய்ப்பு வந்தும் வேண்டாமென மறுத்துவிட்டு இந்த கல்லூரியில் மிகவும் குறைவாக பணம் கட்ட வேண்டிய நிர்பந்தம் வந்தபோது இப்படியெல்லாம் படிக்கத்தான் வேண்டுமா? என என்னுள் எழுந்த கேள்விக்கு தேவை இல்லை என்ற பதில் வந்து இருக்குமானால் பின்வருவனவற்றை எழுத வாய்ப்பின்றி போயிருந்திருக்கும்.

கல்லூரியின் முதல் வருடத்தில் சைமன் என்ற மருத்துவர் அனாடமி சொல்லித் தருவார். இவரிடம் நான் கற்றுக்கொண்டது, முன் அறிவிப்பு இல்லாமலே ஆச்சரியப்படுத்தும் வகையில் திடீரென தேர்வு வைப்பார். அமைதியாக பேசுவார். மிக அழகாக இருக்கும் சொல்லாடல். இதுவரை தமிழில் படித்துவிட்டு ஆங்கில உலகத்தில் எனக்கு பெரும் கஷ்டமாக இருந்தது. ஒரு முறை ஆய்வுக்கூடத்தில் cover slip என வரும் அதற்கு பதிலாக cover sleep என நோட்டில் எழுதி திருத்த கொடுத்துவிட்டேன். இதனை பார்த்து எனக்கு இவர் ஒரு அடி கொடுத்தார். அந்த நோட்டு இன்னும் எனது வீட்டில் இருக்கிறது, சிரிப்பாக இருக்கும்!

மற்றுமொரு மருத்துவர் சுற்றுப்புற சுகாதரம் பற்றி பேசி நாமே நமக்கு எவ்வளவு கெடுதல்களை செய்கிறோம் என அருமையாக பாடம் எடுப்பார். இவரது வகுப்பு மிகவும் நன்றாக இருக்கும். எனது கல்லூரியில் எனது படிப்பு வருடத்தில் இரண்டே மாணவிகள் தான், மீதம் 48 பேர் மாணவர்கள்.

இராமமூர்த்தி; இவர் inorganic chemistry எடுப்பார். நான் புத்தகம் வாங்கியதே இல்லை. இவர் வகுப்பில் சொல்வதை நோட்டில் எழுதி அதை அப்படியே மனனம் செய்து தேர்வு எழுதுவோம். இவர் தேர்வு அமைக்கும் முறை வித்தியாசமாக இருக்கும். MCQ வினாத்தாள்களின் பதில்கள் a or b or c or d என்பதில் முப்பது கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் இருக்கும் எனவே முதல் தேர்வில் இதை கண்டுபிடித்த நாங்கள் அப்படியே பதில் எழுதப் பழகிக் கொண்டோம். ஒருவன் ஒருமுறை 0 வாங்கினான் பி பதிலாக அ போட்டதுதான் காரணம். இவரது வகுப்பு கலை கட்டும். இவர்தான் மூன்றாம் வருடத்தில் business management சொல்லித் தந்தார்.

physical chemistry இவருடைய வகுப்பு மிகவும் அமைதியாக இருக்கும். சிறப்பாக இருக்கும். organic chemistry நந்தகுமார் இரண்டாம் வருடமும் இவரே. இவர் மிகச் சிறந்த ஆசிரியர். எளிதாகப் புரியும். இரண்டாம் வருட இறுதி தேர்வில் செய்முறை பயிற்சியில் எனது titration reading தவறாக வந்தது என lab technician மாற்றச் சொல்லி நான் மாற்றியதை வெகு துல்லியமாக கண்டுபிடித்து 32 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கி என்னை கரையேற்றியவர். இவர் மட்டும் அன்று மிகவும் கடுமையாக நடந்து இருந்தால் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து இருப்பேன்.

statistics ஒரு ஆசிரியை. ஒரு வகுப்பு மட்டுமே வாரத்திற்கு. நன்றாக திட்டுவார்கள். எனது நண்பன் ஒருவன் இந்த ஆசிரியை வெறுப்பேற்றிக் கொண்டே இருப்பான் ஆதலால் ஒரு முறை அவனை வகுப்பறையை விட்டே வெளியேப் போகச் சொல்லிவிட்டார்கள், எனக்கோ பயமாக இருந்தது. அவன் அருகில்தான் நான் அமர்ந்து இருப்பேன். இறுதிவரை எதுவும் அவ்வாறு நடக்கவில்லை.

விஜயா ஆசிரியை : இவர்கள்தான் இரண்டாம் வருடத்திலும் நான்காம் வருடத்திலும் preparative மற்றும் industrial pharmacy எடுத்தார்கள். சாக்பீஸ் எல்லாம் எறிவார்கள். கோபம் கோபமாக வரும் இவர்களுக்கு. இறுதியாண்டில் விபத்துக்கு உள்ளானார்கள், சிறிதுகாலம் பின்னர் சரியாகியது. இவரிடம்தான் நான் எனது மூன்று மாத புரொஜக்ட் செய்தேன் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டார். கோபம் வந்தாலும் குரல் சாந்தமாக இருக்கும்.

biochemistry and biotechnology ஆசிரியர் இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர், தாராளமாக மதிப்பெண்கள் வழங்குவார். இவரது வகுப்பு கலகலப்பாக இருக்கும். இரண்டாம் வருடம் நான்காம் வருடம் இவர்தான்.

நர்மதா ஆசிரியை : இவர்களுக்கு அதிகமாக கோபம் வரும். வகுப்பில் சத்தம் கேட்டால் அவ்வளவுதான். மூன்றாம் வருடத்திலும் இவர் பாடம் எடுத்தார். எனக்கு meal maker எனும் சோயாவை அறிமுகப்படுத்தியவர். ஒரு மனிதனாக வாழ வேண்டும் என சொன்னவர். நெற்றியில் B.Pharmacy என ஒட்டிக் கொண்டு திரிவதற்கா இங்கு படிக்கிறீர்கள் என சொன்னவர்., என்னுள் ஒரு மாற்றம் நிகழ்த்தியவர் எனலாம்.

pharmacognosy இது தாவரங்களை பற்றிய மருந்தாக்கியல் படிப்பு. இந்த ஆசிரியரைக் கண்டால் அனைவரும் பயப்படுவோம். தேர்வுக்கு நுழைவுத்தாள் இவரிடம் இருந்துதான் பெற வேண்டும். எனவே மிகவும் பய பக்தியுடன் இவரது வகுப்பில் இருப்போம். கண்டிப்பானவர்

pharmaceutical technology இதை எடுத்தவர் படிப்பு மற்றும் அல்லாது பல்வேறு youth club களில் இணைய வைத்து வாழ்க்கைப்பாடம் சொல்லித் தந்தவர். என்னுள் இருந்த சமூக சிந்தனைக்கு வித்திட்டவர் எனலாம்.

pharmacology ஆசிரியர் இவர் சத்தம் போட்டு பாடம் எடுப்பார். எனது நண்பர்கள் இவர் தங்கி இருந்த வீட்டினில் அருகில் தங்கி இருந்தனர் அப்பொழுது இவர் சத்தம் போட்டு மனனம் செய்வது கேட்குமாம். இவரது குறிப்புகளை வைத்தே படிப்பதுண்டு. சுருக்கமாக தருவார். மூன்றாம் வருட ஆசிரியர்.

medicinal chemistry ஹபீப் , அனைத்து மாணவர்களின் கவனம் ஈர்த்தவர். வெகு திறமையான ஆசிரியர். synthesis எல்லாம் ஒரு பார்வை கூட புத்தகம் பார்க்காமல் எழுதுவார். அதிசயமாக இருக்கும் எனக்கு. இவருக்கும் கோபம் வரும்.

analyitcal chemistry பிரகாஷ் இவரை பார்மஹோப்பியா என அழைப்பது உண்டு. அனைத்து விவரங்களும் அறிந்து வைத்து இருப்பார். மென்மையான குரல். பல விசயங்கள் கற்றுக் கொண்டது உண்டு. சிரித்துக் கொண்டே இருப்பார். என்னை வெகுவாக இவர் பாராட்டுவது உண்டு. viva வில் 25/25 மதிப்பெண்கள் எனக்கு கிடைத்துவிடும்.

principal இவர் சிரித்த முகத்துடன் இருப்பார். இரண்டாம் வருடத்தில் பெரிய பிரச்சினை வந்துவிட்டது. வெளியில் தங்கியிருந்த எனது நண்பர்கள் இறுதியாண்டு கேள்வித்தாளை இரகசியமாக பெற்றுவிட்டனர். விடுதியில் இருந்த நானும் எனது நண்பனும் அதை வாங்கிட மறுக்க, விடுதியில் இருந்த வேறு சில நண்பர்கள் அவர்களது நலனை கருத்தில் கொள்ளுமாறு கூறி எங்களை சம்மதிக்க வைத்தனர், அவர்களுக்கு பதில் தயாரித்து தந்தோம். இது மாபெரும் தவறு என தெரிந்தும் செய்ய வேண்டிய நிர்பந்தம். ஆனால் இரண்டே இரண்டு நண்பர்கள் மட்டும் எங்களுக்காக ஆறு மாதம் படிப்பை இழக்க வேண்டியதாகிவிட்டது அவர்கள் தான் இந்த கேள்வித்தாள்கள் பெற்று வந்தார்கள் என்பதற்காக. அவர்களை நினைத்தால் பாவமாக இருக்கும். இவர் பாடம் நடத்த வருவார் சிரிப்பாக இருக்கும்.

விடுதி காப்பாளார் இவர் உடற்பயிற்சி ஆசிரியர் கூட. dignity என வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பார். ஒருமுறை எனது நண்பர்கள் முதல்வருடத்தில் ஆவி அழைத்து யார் முதல் மதிப்பெண்கள் எடுப்பார் என கேட்க அந்த ஆவி டம்ளர் நகற்றி என் பெயரை காட்டியதாம். நான் இரவு 10 மணிக்கு தூங்கிவிடுவது வழக்கம். இது அறிந்த அவர் அதில் ஈடுபட்ட நண்பர்கள் அனைவரையும் அன்றிரவே வெளியேறச் சொல்லிவிட்டார். எனக்கு காலையில் தான் தெரியும். பெற்றோர்கள் வந்த பின்னர் அனுமதித்தார், எனது நண்பர்கள் இரண்டாம் வருடத்தில் விடுதியை புறக்கணிக்க காரணமானவர். நான் இறுதியாண்டில் வெளியேறினேன். சுதந்திரம் இல்லாத படிப்பு ஒரு படிப்பு அல்ல என உணர வைத்த விடுதி அது.

இப்படி என்னை மருந்தாக்கியல் வல்லுநராக்க மாபெரும் உதவிகள் புரிந்த இந்த ஆசிரியர்களின் பணி மிகவும் மகத்தானது. வணங்கி மகிழ்கிறேன். நான்காம் வருடத்தில் GATE என்னும் அகில இந்திய தேர்வு வந்தது. இந்த நேரத்தில்தான் இலண்டனில் இருந்து மாப்பிள்ளை பார்க்க வந்தனர்.

என்னுடைய ஆசிரியர்கள் - 2

எப்படி எங்களை எல்லாம் மறந்தாய் என விளையாட்டு ஆசிரியரும், ஓவிய ஆசிரியரும் கேட்பது நினைவில் வந்தது. எனக்கும் விளையாட்டுக்கும் சற்று தொலைவு. எனக்கு வலது கை, சிறு வயதில் உடைந்து போய் திரும்பவும் ஒட்ட வைக்கப்பட்டதால் வேகமாக எறிவதோ எடை அதிகமுள்ள பொருட்களை தூக்குவதோ சற்று சிரமம். அதுபோல் ஒரு முறை மரத்தின் கிளையினை பிடித்து pull ups செய்ய வேண்டிய நிர்பந்தம். விளையாட்டு ஆசிரியர் நான் பல முறை முயன்று 0 எடுத்ததை சிரித்தவாறே உனக்கு 1 போட்டு வைக்கிறேன் என செல்லமாக பிரம்பால் ஒரு அடி போட்டார். என்னை விளையாட்டுத் துறையில் பிரகாசிக்க செய்ய வேண்டும் என பலமுறை முயன்று தோற்றுப் போனார் இருந்தாலும் உடற்பயிற்சி தேர்வு எழுதுவதில் அதிக மதிப்பெண்கள் பெற்று விடுவேன். அன்பாக இருப்பார், நல்ல நகைச்சுவை உணர்வுடன் பேசுவார்.

ஓவிய ஆசிரியர்; சுப்பு ஆசிரியர். இவரை மனதில் வைத்தே நுனிப்புல்லில் ஓவிய ஆசிரியர் பார்த்தால் ஒரு மதிப்பெண் கூட குறைக்க மாட்டார் என்பது போல் எழுதி இருக்கிறேன். இவரிடம் நான் அதிக மதிப்பெண்கள் வாங்கியது 6/10. அநாயசயமாக படம் வரைவார். இவரின் ஓவியங்கள் உண்மையிலே பேசும். அந்த கருநிறப் பலகையில் வண்ணம் கொண்டு பூசிவிட்டார் என்றால் போதும் அத்தனை சிறப்பாக இருக்கும், ஏனோ எனக்கு தான் இன்னமும் வரைவதில் ஈடுபாடு இல்லை.

தலைமை ஆசிரியர் சீனிவாசன் குறிப்பிட்டு இருக்கிறேன் இவர் பாடம் எடுத்ததில்லை. பிரம்பால் அடி வாங்கி இருக்கிறேன். இவர் எட்டாவது படித்தபோது விலகியவுடன் புது தலைமை ஆசிரியர் வந்தார். அவ்வளவு அமைதி. பாடம் எல்லாம் எங்களுக்கு எடுத்தார். எம்டன் வருது என அந்த கால நினைவுகளையெல்லாம் பகிர்ந்து கொள்வார். அதிர்ந்து பேச மாட்டார். இவரது காலகட்டத்தில் பள்ளி மிகவும் சிறப்பு பெற்றது எனலாம். ஆசிரியர்களை நான் மறந்து போயிருந்தால் அவர்கள் என்னை மன்னிக்கவும். இங்கு குறிப்பிட்ட ஆசிரியர்களின் பெயர்கள் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் பெயர்கள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னை ஒரு மாணவனாக உருவாக்கியதில் இவர்களது பங்கு பெரும் மகத்தானது. என்றென்றும் கடமை பட்டு இருக்கிறேன்.

அருப்புக்கோட்டை எஸ் பி கே மேல்நிலைப்பள்ளி

ஜெரால்டு ; எனக்கு இவர் பாடம் சொல்லித்தந்தது இல்லை. எனது வாழ்க்கையின் மாற்றத்திற்கு இவர் ஒரு காரணம். எனது மதிப்பெண்கள் பார்த்துவிட்டு எனக்கு கணித பிரிவு தரமுடியாது என மறுத்துவிட்டார். எனது அண்ணன் இந்த பள்ளியில் ஆறாவது இருந்தில் படித்து வந்தார் எனினும் எனக்கு கணித பிரிவு முடியவே முடியாது என மறுக்க நான் மல்லாங்கிணருக்கு திரும்பலாமா என யோசித்த வேளையில் எனது தந்தை இங்கேயே சேர்ந்து அறிவியல் பிரிவு படி என சொல்லியதும் அறிவியல் பிரிவு எடுத்துப் படித்தேன். முதல் மாதத் தேர்வில் முதல் மாணவனாக வந்ததும், ஜெரால்டு விடுதியின் காப்பாளாராகவும் இருந்தார், எனது மதிப்பெண்கள் பார்த்துவிட்டு கணித பிரிவு தராததுக்காக ஜெரால்டு வருத்தம் தெரிவித்தார். இவர் வேதியியல் பாடத்தில் வித்தகர் என்பது அனைவருக்கும் தெரியும். இன்றும் இவரை பார்க்கிறேன் அதே புன்னகை. ஆனால் மிகவும் கண்டிப்பானவர். இவரைக் கண்டு நடுங்குவார்கள்.

இரத்தினசபாபதி தமிழ் ஆசிரியர்: இவரைப் பற்றியும் நுனிப்புல்லில் குறிப்பிட்டு இருக்கிறேன் நூறு நாள் கற்ற கல்வி ஆறுநாள் விடப்போம் என சொல்லி தந்தவர். தமிழ் ஆசிரியர். இவரது சொல்லித்தரும் விதம் அனைவரையும் கவரும். தமிழ் நேசிக்க எனக்கு மேலும் வழிகாட்டியவர்.

எனக்கு இயற்பியல் கற்றுத் தந்த ஆசிரியர் பால சுப்ரமணியம். சிரித்த முகத்துடன் இவர் சொல்லித் தரும் பாங்கு அருமையாக இருக்கும். இவரது திறமையை பள்ளி வெகுவாக பாராட்டும். ஆனால் எனக்கு கிடைத்த வேதியியல் ஆசிரியர் வயதானவர் தலைமை ஆசிரியராக இருந்தார் அனைத்தும் அவரது விரல் நுனியில் இருக்கும் எனினும் எங்களையே படிக்கச் சொல்வார். ஆங்கில ஆசிரியர் எப்பொழுதும் வெத்திலை போட்டுக் கொண்டு ஆங்கிலம் சொல்லித் தருவார். நான் எனது படித்த காலங்களில் எப்பொழுதுமே தேர்வில் தோற்றது இல்லை, மாதத் தேர்வில் கூட.ஆனால் ஆங்கிலத்தில் எப்பொழுதுமே 60 சதவிகிதம் தான்.

விலங்கியல் சொல்லித்தந்த ஆசிரியர் என்னை வியப்பில் ஆழ்த்தினார். அவருக்கு ஒருமுறை உடல்நலம் சரியில்லை என்றதும் அவரது மதத்தின் முறைப்படி மருத்துவரை நாடாது நலமாகி வந்தார், இது என்னை பயங்கரமாக சிந்திக்க வைத்தது! இவர் மருத்துவரிடமே சென்றது இல்லையாம்!

தாவரவியல் சொல்லித்தந்த ஆசிரியை (இது மாணவர்கள் மட்டும் உள்ள பள்ளி) எளிதாக சொல்லித்தருவார்கள், மிகவும் எளிதாகப்புரியும். எனது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய பாடம் இந்த தாவரவியல். இதில் நான் எடுத்தது 121/200. இத்தனைக்கும் தாவரவியல் இறுதி தேர்வில் நான்கு நாட்கள் விடுமுறை வேறு. எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் குறைந்தேன் என எனக்கு தெரியாது! அந்த பள்ளியில் அறிவியல் பிரிவில் முதல் மாணவனாக வந்தேன் 938 மதிப்பெண்கள். எனக்கு அடுத்து வந்த மாணவன் 937. அவனும் தாவரவியலில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள். இப்பொழுது அந்த தொழிற்கல்வி ஆசிரியரின் சாபம் பலித்தது! நுழைவுத்தேர்வில் நான் எடுத்தது 37/50. பி எஸ் ஸி எல்லாம் படிக்க முடியாது, படித்தால் மருத்துவத் துறை சம்பந்தபட்டதுதான் படிப்பேன் என எந்த ஒரு கல்லூரிக்கும் நான் விண்ணப்பிக்கவில்லை, ஒரே ஒரு கல்லூரி தவிர அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆயுர்வைசியா கல்லூரி. வேதியியல் படிக்க இடம் கிடைத்தது. நான் மறுத்துவிட்டேன்.

எனக்கு பக்கபலமாக இருந்த எனது தந்தையை நினைத்துப் பார்க்கிறேன். அவர் எனக்கு தந்த ஊக்கமும் அன்பும் வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அவர் மாந்தோப்பு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர். எனக்கு வீட்டில் எப்பொழுதும் படிக்க சொல்லித் தந்தது இல்லை. நானாக படித்துவிடுவேன். எனது விசயத்தில் குறுக்கிட்டதும் இல்லை. முழு சுதந்திரம் உடையவனாகவே வாழ்ந்து வந்தேன். எனக்காக அவர் இந்த அருப்புக்கோட்டை பள்ளிக்கு முதன்முதலில் விடுதியில் தங்கி படிக்கச்சென்றபோது பெட்டியை தூக்கி வந்த நிகழ்வு இப்பொழுதும் எனக்கு அழுகையை கொண்டு வரும். என்ன தவம் செய்தேன்! ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் என்னுடன் இருந்து எனக்கு செய்த உதவி ஒரு தந்தையின் கடமை என நான் சொல்வேனானால் என்னைப் போல் ஒரு முட்டாள் ஒருவன் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது.

Saturday 5 September 2009

அன்புள்ள காதலிக்கு,

நான் எழுதிய
காதல் வரிகள்
கானல் வரிகள் அல்ல
அவை கானல் வரிகளானால்
அதை எழுதிய
எனது கைகள் என்னவாகும்?

தேனைப் பெற்றது மலரின் குற்றமா?
அதை நுகரவந்த வண்டின் குற்றமா?
இல்லை இல்லை
அதை வளர்த்த நிலத்தின் குற்றம்.

உன்னை நினைக்க
மனதில் இடம் இருக்கிறது
உன்னை மணக்க
சட்டமும் இடம் கொடுக்கிறது
ஆனால்...
மாலையோடு நான் வந்தால்
மயான வாசலில்
நிற்க வேண்டுமாம், காற்றில்லாமல்
நான் சொல்லவில்லை
அன்பே!
உன் தந்தை சொன்னார்

உன் தந்தையின் முடிவு
என் வாழ்வின் முடிவாகுமா?
நீ
வந்தால் எரிகிறேன்!
அல்லால் புதைகிறேன்!
நாட்கள் வித்தியாசமாகலாம்
அதுபற்றி
நான் சிந்திக்க வேண்டியதில்லை!

கடற்கரைக்கு நம் கால்கள்
நடக்கவில்லை
கவலை அலையை கடக்கத்தான்
நாம் நீந்த வேண்டும்
சுண்டலுக்கு கை நீட்டி நாம்
சுட்டுக் கொள்ளவில்லை
சுடுகாட்டிற்குப் போகும் முன்
இணைய வேண்டும்!

வீட்டிற்கு நீ ஒரு பெண்தான் என்றாலும்
வீணாக நம் வசந்தத்தை கெடுப்பானேன்
மனம் ஊனமாய் பிறந்திருந்தால்
மங்கையே
உன் தந்தை யோசிக்கலாம்
என்நிலையை நான்
மீண்டும் கூறி
உன்னை ஏன் வதைப்பானேன்
வதைபட்டு வதைபட்டு
வாழ்க்கைக்கு சிதை வைப்பானேன்

காலத்தின் கோலம்
''கலப்பு மணத்திற்கு
கை நிறைய காசு''
நான் கொடுக்கவில்லை
அரசாங்கம் அவிழ்க்கிறது

உன் மனதால் என்னை எண்ணி
உயிரெல்லாம் ஓட்டம் விட்டு
என்னைப் பிரியச் சொன்னால்
எப்படி முடியும் உன்னால்
ஏன் விளங்கவில்லை அவர்களுக்கு!
''கல்யாணம்'' என்று கூறி
''கருமாதி'' வைப்பதற்கு
உன் தந்தைக்கு வழி வைத்து விடாதே!

பாவ செயல்களை
காலம் எப்படி சகித்துக் கொள்கிறதோ
காதலே
நீயும் அவற்றை சகித்துக் கொள்
வேண்டிய மட்டும் எடுத்துக் கூறி
விடைபெற்று வா
விழலுக்கு இறைக்கும் தண்ணீராகிப் போனால்
''விடுதலை'' என
விபத்தில் சிக்கிக் கொள்ளாதே
ஆறுமட்டும் அங்கேயே இரு
அப்பொழுதுதான் நம் காதலுக்கு
அர்த்தம் விளங்கும்

உடலுக்கு ஒப்பந்தம் என்றால்
உடனடியாக கிளம்பி வா
உயிருக்கு ஒப்பந்தம் என்றால்
அங்கேயே ''உலை'' வைத்துக் கொள்
இரண்டிற்கும் ஒப்பந்தம் என்றால்
இரண்டாண்டுகள் பொறுத்திரு
வாழ்வினை சீராக்க
வளமையை நான்
எதிர்பார்க்க வேண்டியுள்ளது

கண்களால்தான் பேசினோம்
ஆனால்
''காதலுக்கு கண் இல்லை''
என்கிறார்களே
கவனமாய் இரு
எனக்குச் சொந்தம் இருந்திருந்தால்
என்நிலை இன்று என் கதியோ?
கடவுளின் செயல்
அக்கவலை இல்லை எனக்கு!

முறையாக வந்து கேட்டால்
''முறை'' பார்த்து
அனுப்பி விடுவார்
முடியும் மட்டும் வருகிறேன்
நடுத்தர வர்க்கத்திற்கு
படகை நடுக்கடலில்
தனியாய் விட்டபாடுதான்!

சாதி பார்த்து
மணம் புரிய வேண்டுமாம்
சாதகம் பார்த்து
வழி பார்க்க வேண்டுமாம்
இவையன்றி
விழிபார்த்தது தவறா?

சாத்திர சம்பிரதாயங்களை
குறை சொல்லவில்லை
அவை சாத்தானாக உள்ளதே என
குறைபட்டுக் கொள்கிறேன்

இணையாத காதலுக்குத்தான்
இவ்வுலகில் மதிப்பு
அதற்காக நாம்
இணையாது போனால்
என்ன நியாயம்?
கடமைகளைச் சரியாய் செய்து வா
உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்!

தந்தையின் மனநிலைக்கு
ஏற்றவாறு தென்றலே
நடந்து கொள்
அதற்காக
இரவை பகலாக்கிக் கொள்ளாதே

முடியும் என்றிரு
நன்றாக உறங்கு
என்றாலும் ஒன்றரை மணிநேரம்தான்
உண்மையான உறக்கம்
அந்த ஒன்றரை மணி நேரத்தையும்
வருத்திவிடாதே

காலம் மாறிவிட்டதை
நான் சொல்லியா
உனக்குத் தெரிய வேண்டும்
காலைச் செய்திகளைப் பார்த்தால்
கண் முன்னால்
அனைத்தும் விளங்கும்
தொலைக்காட்சியைப் பார்
அதன் தொல்லைக்கும் முன்னால்
உன் தொல்லைகள்
ஒன்றும் பெரிதல்ல

ஆகாயத்தைப் பார்த்து
அடைய முடியவில்லையே
என ஆத்திரப்படுவதை விட
பூமியிலாவது நிற்கிறோமே
என பெருமைப்பட்டுக் கொள்!

பெண்கள் முன்னேற்ற சங்கம்
என்றும்
மகளிர் சங்கம்
என்றும்
இந்த மதி கெட்ட உலகில்
பலவும் வைத்து
போராடுவதைப் பார்
அந்நிலையை
உருவாக்கியது யார்?

நானும் கேட்டிருக்கிறேன்
வாழ்வின் கொடுமைக்கு
வரதட்சினை மட்டும்
காரணமல்ல
அதையும் மீறிய
அடிப்படை பிரச்சினைகள்
என்பதை!
நீயும் சங்கம் வளர்த்து
பங்கம் ஏற்படாமல்
பார்த்துக் கொள்

இந்த காதல் வரிகள்
உனக்கு மனமகிழ்ச்சி
ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன்!

என்னைக் காணாத உனக்கு
இது ஓர் ஆறுதலாக இருக்கட்டும்
இது உன் தந்தையின்
போனால் கூட
எனக்கு ஒருவகையில் சந்தோசமே!
ஆனால்
நீ அதற்கு வழிவிடாதே

இன்னும் ஓரிரு வருடங்களில்
உன்னைக் காண வருவேன்
அதுவரையில்
எரிகின்ற தீபமாய்
சுடர்விட்டு இரு!

வெப்பத்திற்கு இங்கு
விளக்கம் சொல்ல வேண்டி இருக்கிறது
அங்கே குளிருக்கு விளக்கம்
சொல்ல வேண்டி இருக்கும்
இங்கே வெள்ளத்திற்கு
விளக்கம் சொல்ல வேண்டியிருந்தால்
அங்கே பஞ்சத்திற்கு
பதில் சொல்ல வேண்டியிருக்கும்
நாட்டின் இரு பக்கங்கள்
வாழ்வின் நிலையை
விளக்கி வைக்கும்
நாணயத்தின் இரு பக்கங்கள்
அதன் நிலைமையை
உணர்த்தி நிற்கும்

கவலை வந்தால்
அழுது விடு! முடியும் மட்டும்
அழுது விடு
மன உறுதியை
ஏற்படுத்திக் கொள்

இயற்கையின் மேல்
காதலை வளர்த்துக் கொண்டால்
இன்பமாய் இருக்கும்
அவ்வின்பத்தை உனக்குச் சொன்னால்
புரியாது
நீயும் நேசித்துப் பார்
பாசப்பட்டு இருப்பதை
புரிந்து கொள்வாய்

இரத்தத்தின் அளவை
கவனித்துக் கொள்
எண்ணங்கள் பாயும் முறையில்தான்
நமது இயக்கமும் உள்ளது
என்பதையும் உணர்ந்து கொள்

உலகவிசயங்கள் பலவும்
உனது காதுகளில்
கண்களில் பட்டிருக்கும்
சிந்தனை செய்து பார்
அவை உன்னை
கொஞ்சம் அமைதியாய்
இருக்க வழி செய்யும்

கனவுகளுடன் வாழாதே
அவை உன்னை
கணக்கில்லா துன்பத்தில் ஆழ்த்தும்

மாளிகையை கற்பனை செய்து
குடிசையையாவது கட்ட
முயல வேண்டும்! ஏன்
அந்த மாளிகையையே
கட்டிவிட வேண்டும்
வைராக்கியம் உள்ளவரை
வையத்தில் துன்பம் இல்லை
போராடத் துணிந்தவனுக்கு
போர்க்களம்தான் சரியான இடம்
புரிந்து கொள்

பண்பாடு சீரழிந்தால்
இந்த பாரதம்
பண்படாது என்பது
உனக்குத் தெரியும்
இப்பொழுது என்ன
பாரதம் பண்பட்டா
இருக்கிறது என்று
நீ கேட்பது புரிகிறது

உயிர் அலைகள்
உன்னை வந்து
மோதும் போது
என்னை மட்டும்
மோதாமல் இருக்குமா என்ன?

உன் நிலையை உணர்கிறேன்
ஜீன்களின் சாரம்சம் பற்றி
நீ படித்திருப்பாய்
அவைகளை இப்பொழுது
நாடி பிடித்து கொண்டிருக்கிறார்கள்

அதன் நாடி பிடிபட்டு
போனால்
நமது குழந்தைகளின்
எதிர்காலம் பொற்காலம்தான்

என்னே! எந்தன் அவசரம்
காதலுக்கு வழி கிடைக்காத போது
''பிறக்கும் முன் பேர்'' வைத்த
கதையாகி விட்டது
ஆனால் ஒன்று நிச்சயம்
சூரியன் மறைந்தால் தான்
நட்சத்திங்கள் தெரியும்
உன்னை மணந்தால் தான்
வாழ்வின் அர்த்தம் புரியும்

என்னிடம் பலர் கேட்டார்கள்
''காதல்'' ''காதல்'' ''காதல்''
என்கிறீரே
அதன் அர்த்தம் தெரியுமா என்று
நான் வள்ளுவனை
கை காட்டினேன்
கம்பனை எடுத்துரைத்தேன்
பாரதியை படித்துக் காட்டினேன்
அரபுவையும் இந்தியாவையும்
இணைத்துக் காட்டினேன்
இறுதியில்
உன்னையும் என்னையும்
சேர்த்துக் காட்டினேன்

எனக்கு நேரம் போவதே
தெரியவில்லை
காரணம் கேட்டால்
உந்தன் காதலும்
தமிழ்க் காதலும்
என்று விளக்குவேன்

இந்த காதல் வரிகள்
கானல் வரிகள் அல்ல
நம் வாழ்வின் வரிகள்
வசந்தம் வரும்.

Friday 4 September 2009

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 2

ரகுராமன் வீட்டிற்குச் சென்று தனது பாட்டியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.

''போய் பொழப்பப் பார்க்க வழியப் பாரு, எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டனுட்டு''

''சொல்லுங்க பாட்டி''

''போறியா என்னடா, வந்துட்டான்''

பாட்டி எரிச்சலில் இருந்தார். ரகுராமன் அவ்விடம் விட்டு நகர்ந்தான். தாத்தாவிடம் கேட்டான் ரகுராமன்.

''நம்ம நாட்டு சுதந்திரத்துக்காகப் போராடினவங்க உண்டு பண்ணின கட்சி, அந்த கட்சிக்கு ஓட்டுப் போடாம வேறு எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுறது?''

''ஆனா இப்போ அந்த காங்கிரஸ் இல்லையே தாத்தா, இப்போ இருக்கிறது இந்திரா காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியோட கொள்கை என்ன தாத்தா?''

''உனக்கு என்ன வேணும் இப்போ, நானே உன் பாட்டி என்கிட்ட கோவிச்சிக்கிட்டு அப்படி ஓரமாப் போய் உட்கார்ந்திட்டானு கவலையா உட்கார்ந்திருக்கேன், போய் ரங்கசாமி கடையில எங்க ரெண்டு பேருக்கும் வடை வாங்கிட்டு வா''

''காங்கிரஸ் கட்சி கொள்கை என்னனு சொல்லுங்க தாத்தா, போய் வாங்கியாரேன்''

''அது அ.தி.மு.க வோட சேர்ந்தா அந்த கட்சியோட கொள்கை, தி.மு.க வோட சேர்ந்தா அந்த கட்சியோட கொள்கை, போடா, வாங்கிட்டு வெரசா வாடா''

ரகுராமன் கோபமாக முறைத்துப் பார்த்துவிட்டு ரங்கசாமி கடையில் வடை வாங்குவதற்காக நின்றான். விவசாயம் பார்த்துக் கொண்டும், கிரிக்கெட் விளையாடித் திரியும் அழகர்பாண்டி ரகுராமனிடம் சொன்னான்.

''ஏலே ரகு, நீ என்னமோ கட்சி ஆரம்பிக்கப் போறீயாம்மே, எனக்கு ஒரு பதவி இருக்குல, நம்ம டீமுக்கு கேப்டன் பதவியே வேணாம்பா, கட்சிக்கு தலைவரு போஸ்டு வேணாம்னு சொல்லுவியல''

''சும்மா இருடா அழபா, பழனி பத்த வைச்சிட்டானுக்கும்''

''உடனே ஆரம்பி, இந்த கேப்டன் கட்சியை விட நிறைய ஓட்டு வாங்கி நாமதான் பெரிய கட்சினு சொல்லிக்குவோம், என்ன சொல்ற? அதில்லாம எவன் எவனோ கட்சினு ஒரு கொடியை வைச்சிட்டு அதை கிழிக்கப் போறேனு, இதை கிழிக்கப் போறேனு வாய் கிழியாத குறையா பேசறான், நாம் என்ன அவன் பேசறதையெல்லாம் கேட்டுட்டு இருக்கோம், நம்ம பொழப்ப நாம பார்க்கறதில்லையா. அதிருக்கட்டும், நாளைக்கு நீ மேட்சுக்கு வரலியனு வைச்சிக்கோ, வத்தனாங்குண்டுகாரங்கே நம்மளை ஒரு வழி பண்ணிருவானுங்க''

''எல்லோரும் என்னையவே பார்க்கறாங்கடா, அடக்கி வாசிடா, கருமம், கருமம்''

''தலைவா''

கடையின் பின்புறம் மறைந்திருந்த பழனிச்சாமி ரகுராமனின் காலில் சடாரென ஓடி வந்து விழுந்தான். ரகுராமன் திடுக்கிட்டான்.

''என்ன நக்கலா?''

''நீ கட்சி ஆரம்பிக்கிற தலைவா, நாங்க உன்கூட இருக்கோம் தலைவா, டேய் அழபா, கட்சியை நாளைக்கு வத்தனாங்குண்டுல வச்சி ஆரம்பிச்சிரலாம்டா''

ரகுராமன் கோபத்துடன் பேசாமல் இருக்குமாறு அவர்களை சத்தம் போட்டான். கடைக்காரர் ரங்கசாமி கட்டிக்கொடுத்த வடையை வாங்கிக் கொண்டான்.

''தம்பி நீ இந்த வெட்டிப் பயலுகளோட சேந்து வீணாப் பூராதே''

''யோவ் ரங்கு, சாமியாப் போயிருவ, யாரை வெட்டிப்பயகனு சொல்ற, தரிசு நிலத்தை வெளச்சல் நிலமா மாத்தினவங்க நாங்க, என்னடா அழபா''

''விடுறா, விடுறா, காபி போட்டு ஆத்திக்கிட்டு இருக்காரு, மூஞ்சியில ஊத்தினாலும் ஊத்திருவாரு, விவரங்கெட்ட மனுசன்''

''டேய் இப்படியே அலம்பல் பண்ணி அந்த தம்பியக் கெடுத்து குட்டிச்சுவராக்கிராதீங்கடா''

ரகுராமன் கடையை விட்டு நடக்கத் தொடங்கினான். பழனிச்சாமி ரகு பின்னால் ஓடினான்.

''ரகு என்னடா பேசாமப் போய்கிட்டு இருக்க, அவரு அப்படித்தான் டா''

''இது அப்படியே என் அப்பாகிட்ட போகும், அவரு ஏகத்துக்கும் கவலைப் படுவாரு, சும்மா வாயை வச்சிட்டு இருக்கமாட்டியா, விளையாடப் போங்க, நா சாயந்திரமா வரேன்''

தாத்தாவிடம் சென்று வடைப் பொட்டலத்தைத் தந்தான் ரகுராமன். பாட்டி சமாதானமாகி இருந்தார்.

''அடுத்த வருசம் எந்த கட்சிக்குத் தாத்தா ஓட்டுப் போடுவீங்க''

''எப்பவும் போலத்தான்''

பதிலைக் கேட்கப் பிடிக்காமல், ரகுராமன் ஊர் தலைவர் ராமசுப்புவினை சென்றுப் பார்த்தான். பஞ்சாயத்துத் தலைவராக இருப்பது எப்படி இருக்கிறது எனக் கேட்டான்.

''இந்த பஞ்சாயத்துத் தலைவராகிறதுக்கு நான் பட்டபாடு இருக்கே, என்னத்த சொல்றது, ஊருலயே ஒத்துமையா இருக்க மாட்றானுங்க, அந்த கட்சி இந்த கட்சினு நீ வேற சாதி, நான் வேற சாதினு ஒரே அடிதடி. நீயும் தானப் பாத்துக்கிட்டு இருக்க. போட்டி பொறாமைனு ஏண்டா பொது வாழ்க்கைக்கு வந்தோம்னு இருக்கு இப்போ, எல்லோரும் கூடி என்னை இதுல இழுத்து விட்டுட்டாங்க, இனி ஒதுங்கிப் போக முடியாது, ஏன் இவ்வள அக்கறையா கேட்கற''

''அடுத்த வருசம் நடக்கப் போற தேர்தலுல ஓட்டுப் போடனும் அதான் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுறதுனு முடிவு பண்ணலாம்னு கேட்டேன்''

''என்ன இதுக்குப் போய் ஒரு வருசம் முன்னமே யோசிக்கிற, நம்ம கட்சிக்கு கண்ணை மூடிட்டு ஓட்டுப் போடு, நம்ம கட்சியில உன்னை உறுப்பினராச் சேர்த்துவிடுறேன்''

''வேணாம்''

ரகுராமன் கிரிக்கெட் விளையாடும் மைதானத்துக்குச் சென்றான்.

''பழனியண்ணன் சொல்லுச்சு, நெசமாவே கட்சி ஆரம்பிக்கப் போறியாண்ணே''

இடது கை ஆட்டக்காரன் சுப்பிரமணி அப்பாவியாய் கேட்டான். ரகுராமன் ஒரு கட்சி ஆரம்பித்தால்தான் என்ன என அசட்டுத்தனமாகச் சிந்திக்க ஆரம்பித்தான். நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் உடனடியாக செயல்படத் துணிந்து விடுகிறோம், ஆனால் மொத்த மக்களின் ஒட்டு மொத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏன் தயங்கி பின்னடைகிறோம்?

(தொடரும்)

என்னுடைய ஆசிரியர்கள் - 1

மேலத்துலுக்கன்குளம் நடுநிலைப் பள்ளி

அரை வகுப்பு - ஐந்தாம் வகுப்பு வரை.

திருமதி. தவமணி, திருமதி. லீலாவதி மற்றும் திருமதி. தனலட்சுமி. இந்த மூன்று ஆசிரியைகளும் எனக்கு அத்தை முறை. இவர்கள் எங்கள் ஊர்க்காரர்கள். நன்றாக சொல்லித் தருவார்கள். மற்றபடி குறிப்பிடும்படியாக எதுவும் ஞாபகம் இல்லை. ஆனால் இவர்களுடைய மகன்கள் (என்னை விட வயது மூத்தவர்கள்) எனக்கு நல்ல பழக்கம் என்பதால் இவர்கள் வீடு சென்று சாப்பிடுவது, தொலைக்காட்சி பார்ப்பது என பிற்காலங்களில் செய்து இருக்கிறேன். இவர்களை டீச்சர் என அழைப்பதா அத்தை என அழைப்பதா என பல முறை அவர்கள் வீடு சென்றபோது குழம்பியது உண்டு. வணக்கத்திற்குரியவர்கள். மூன்றாம் வகுப்பு வரை இவர்கள் தான்.

நான்காவது வகுப்பில் மல்லாங்கிணர் சீனி வாத்தியார். இவர் பதில் புத்தகம் தந்து வினாக்களுக்கு பதில் எழுத சொன்னதாக எனக்கு ஞாபகம். அடிக்கமாட்டார். சிவப்பாக ஒற்றை இராமம் போட்டு வருவார். சிரித்த முகத்துடனே இருப்பார்.

ஐந்தாவது வகுப்பில் வத்தனாங்குண்டு வாத்தியாருக்கு என் மேல் கொள்ளைப் பிரியம். என்னை எப்பொழுதும் பாராட்டிக் கொண்டே இருப்பார். நுனிப்புல்லில் இவரை மனதில் வைத்து ஒரு ஆசிரியர் குறிப்பிட்டு உள்ளேன். திறமையாக பாடம் நடத்துவார். அடிக்க மாட்டார். நான் எந்த ஆசிரியரிடமும் அடி வாங்கியது இல்லை, ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் இராஜ்ஜியம்தான். ஆறாவது வகுப்புக்கு இந்த பள்ளிவிட்டு வேறு பள்ளி செல்ல நாங்கள் (4 நண்பர்கள்) முடிவெடுத்த போது பள்ளித் தலைமையாசிரியர் முதற்கொண்டு மிகவும் வருத்தப்பட்டார்கள். இப்படி நல்லா படிக்கிறவங்க எல்லாம் எட்டு வரைக்கும் இங்கு படிக்கலாம்தானே என சொன்னது, தலைமை ஆசிரியர் நடராஜன் அறை எனக்கு இன்னமும் நினைவில் வந்து போகும். ஆறாவது வகுப்பு ஆசிரியர் ஏழாவது வகுப்பு ஆசிரியர் எங்களுக்கு அவ்வப்போது பாடம் நடத்துவது உண்டு. ஏழாவது வகுப்பு ஆசிரியரைக் கண்டால் பயப்படுவோம். என்னை செதுக்கியதில் பெரும் பங்கு பெற்றவர்கள்.

மல்லாங்கிணர் மேல்நிலைப் பள்ளி

ஆறாவது வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை

அறிவியல் ஆசிரியை : எனது குரல் வளம் (பாடல் குரல் வளம் அல்ல) கேட்டு எப்படி கணீருன்னு ஒன்று இரண்டு சொல்றான் என பாராட்டியவர். மிகவும் கண்டிப்பானவர். நன்றாக சொல்லித் தருவார். இவரின் மகள் உமா மகேஸ்வரி எங்கள் வகுப்பில்தான் படித்தார். இவர் மாணவ மாணவியர்களை அடிப்பது உண்டு. நானும் வாங்கி இருப்பேன்.

கணித ஆசிரியை : மென்மையான குரலில் பாடம் எடுப்பார்கள். இவர்கள் நான் எட்டாவது படிக்கும்போது உடல் நல குறைவால் பணியை விட்டுவிட்டார்கள். திறமையான ஆசிரியை.

தமிழ் ஆசிரியை : எனது தமிழுக்கு வித்திட்டவர். இவரிடம் மதிப்பெண்கள் வாங்குவது கடினம் ஆனால் நான் 85க்கு குறையாமல் வாங்கி விடுவேன். என் மேல் அலாதிப் பிரியம் இவருக்கு. அடித்ததே இல்லை, ஆனால் அதிக கோபம் வரும். பாட்டு போட்டி, கட்டுரை போட்டிகளில் கலந்து கொள்ளச் சொல்லி ஊக்கம் தந்தவர். தமிழ் அருமையாக சொல்லித்தருவார்.

பாட்டு ஆசிரியை : எட்டாவது வகுப்பில் பாடச் சொல்லும்போது 'சலங்கையிட்டால் மாது' எனும் பாடலை பாடி கரகோசம் பெற்றேன். இப்பொழுது எனது ஆய்வகத்தில் நானாக பாடிக்கொண்டு இருந்தால் 'terrible voice' என எனது ஆய்வக நண்பர்கள் சொல்லும்போது சிரிப்பாக இருக்கும். கோபம் அதிகமாக வரும் இவருக்கு.

தொழிற்கல்வி ஆசிரியை : பாடம் எதுவும் எடுத்ததில்லை. பள்ளியில் உள்ள தாவரங்கள் பராமரிப்போம், நன்றாக அடி விழும். யாரும் ஓடியாடி வேலை செய்யமாட்டார்கள்.

ஆங்கில ஆசிரியர்: 'close the door' என ஒருமுறை ஆய்வாளர்கள் வந்த பொழுது என்னை அழைத்துச் சொல்ல திருதிருவென முழித்தேன். அப்பொழுது ஒரு மாணவி எழுந்து சென்று கதவை அடைத்துவிட்டு கைத்தட்டல் பெற்றார். நல்லாவே ஆங்கிலம் கற்று இருக்கிறேன்.
நன்றாக திட்டுவார். அடியும் விழும்.

அறிவியல் ஆசிரியர் : மிகவும் சிரிப்பாக பாடம் நடத்துவார். இவர் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. சேர்ந்ததெல்லாம் சிவலிங்கம், வாய்ச்சதெல்லாம் வைத்தியலிங்கம் என்பார். ஏலே என ஒரு அடி தருவார் சரியாக பதில் சொல்லாவிட்டால்.

வரலாறு ஆசிரியர் : மாடு மேய்க்கறவனெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வந்துருக்கான் என எங்களை மிரளச் செய்தவர். ஆங்கில பாடமும் ஒன்பதாவதில் இவர் தான். அடி இடியெனெ விழும். முதுகை பதம் பார்ப்பார்.

கணித ஆசிரியர் : முதலில் சீனிவாசன் ஆசிரியர் பத்தாவதில் பாதியில் இவர் சென்ற பின்னர் மொட்டையாண்டி ஆசிரியர் வந்தார். சீனிவாசன் ஆசிரியரை இழந்த கவலையில் இருக்க தனது அதிரடியால் எங்கள் மனம் கவர்ந்தவர் இவர். சீனிவாசன் ஆசிரியர் எனது பெயரை rathakrishnan என்பதை radhakrishnan என மாற்றியவர், பள்ளியில் முதல் மாணவனாக வருவேன் என ஆருடம் சொன்னவர். 8ம் வகுப்பில் இருந்து நான் தான் பள்ளியில் முதல் மாணவன். காரணம் ஏழாவதில் பள்ளியை விட்டுச் சென்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி. இந்த ஆசிரியர் என்னை ஒருமுறை inland letter வாங்கி வா என சொன்னதும் முதலில் inland letter வாங்கி பின்னர் பாதியிலே மனது மாறியவனாக திரும்பவும் சென்று வேறு கடிதம் வாங்கி தந்து திட்டு வாங்கி ஒழுங்கான கடிதம் கடைசியில் வாங்கி தந்தேன்.

மொட்டையாண்டி ஆசிரியர் கணிதத்தில் 100/100 வாங்க வேண்டும் என என்னிடம் தலையில் ஓங்கி அடித்து சொல்லியும் என்னால் 98 தான் வாங்க முடிந்தது. இரண்டு மார்க்குல போய்ருச்சே என என்னிடம் மதிப்பெண்கள் வாங்கிய தினம் அன்று வருத்தப்பட்டார். நான் பள்ளியின் முதல் மாணவனாக வந்தும் எனது மொத்த மதிப்பெண்கள் இவ்வளவு கேவலமாக இருக்கிறதே இதனை இந்த பள்ளியில் எழுதி வைத்து விடுவார்களே என வருத்தத்தில் இருந்தேன் நான் எடுத்த மதிப்பெண்கள் 359. பள்ளியில் பெயர் எழுதப்பட்டதை பெருமையாக படம் பிடித்து வைத்து இருக்கிறேன்.

எட்டாவது படிக்கும்போது நான் வேறு ஒரு அறிவியல் ஆசிரியருக்கு பயந்து செயல்முறை பாட வகுப்புக்கு செல்லாமல் இருந்தேன். எனக்கு படம் வரைய வராது. அவர் காலில் அடிப்பார். ஆதலால் நெஞ்சு வலிக்கிறது என ஒரு தோட்டத்தில் அமர்ந்து கண்ணீருடன் வரைவேன் அப்புறம் வீடு சென்று விடுவேன். இப்படி சில தினங்கள் நடந்ததும் என்ன இவனை காணோம் என திருமதி. சுப்புலட்சுமி அறிவியல் ஆசிரியை கண்டுபிடித்து பன்னிரண்டாவது சொல்லித்தரும் தமிழ் ஆசிரியரிடம் சொல்லி காலையில் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் கடவுள் வாழ்த்து பாடும் முன்னர் எனது கன்னத்தை பிடித்து திருகி இப்படியெல்லாம் பண்ணுவியா என என்னை திட்டியதும் , 'நல்லா படிக்கிறவன் ஆனா என்னான்னு தெரியல' என அந்த ஆசிரியை சொன்னதும் என்னால் மறக்க முடியாத நினைவுகள். என்னை புடம் போட்டவர்கள் அந்த இரண்டு ஆசிரியர்களும்.

ஒரு முறை எனது அக்காவின் திருமணத்திற்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது மாத தேர்வினை பொருட்படுத்தாமல் மூன்று நாட்கள் சென்ற போது இயற்பியல் ஆசிரியர் (எனது அண்ணனின் நண்பர்) பளார் என அறைந்து படிப்பு முக்கியம்னு தெரியாம எதுக்குடா நீ படிக்க வர என சொன்னது இன்னும் மறக்க முடியாது. பன்னிரண்டாவது வரை இருந்ததால் சிறப்பு பிரிவு ஆசிரியர்கள் அவ்வப்பொழுது வந்து எங்களுக்கு பாடம் எடுப்பது வழக்கம். வேதியியல் ஆசிரியர் இன்னமும் மனதில் நிற்கிறார். சிரித்த முகத்துடன் சொல்லித்தந்த விதம் மறக்க முடியாதது.

பத்தாம் வகுப்பு முடித்து செல்லும்போது அந்தப் பள்ளியில் கணிதப் பிரிவு இல்லாததால் கணிதப் பிரிவு வேண்டி அருப்புக்கோட்டை எஸ் பி கே செல்ல முடிவு எடுத்து மாற்றுச் சான்றிதழ் வாங்கி செல்லும்போது 'நீ கஷ்டப்பட போற பாரு' என என்னை வாழ்த்தி அனுப்பிய பன்னிரண்டாவது வகுப்புக்கு சொல்லித்தரும் ஒரு தொழிற்கல்வி ஆசிரியர் அதிகமாகவே என்னை பயமுறுத்திவிட்டார்.

(தொடரும்)