Tuesday 8 September 2009

அன்புள்ள காதலனுக்கு,

நீங்கள் எழுதிய
கவிதை வரிகள் கண்டு
என் வாழ்வின்
வசந்தம் உணர்ந்தேன்

பாலைவனத்தில் மழை பெய்து
பூஞ்சோலை உருவானால்
அதை பார்ப்பவருக்கு
எவ்வளவு மகிழ்ச்சியோ
அதைவிட அளவிலா
மகிழ்ச்சி அடைந்தேன்

தந்தையின் மனம் மாறவில்லை
ஆனாலும் நம் காதலை
மறுக்க முடியவில்லை
காலம் செல்லும் போக்கில்
அவர் தன் மனதை
மாற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன்

முறையில்லா வாழ்க்கைக்கு
முடிச்சு போடாதீர்கள்
என்று சொன்னேன்
முரண்பட்டவற்றில் உள்ள
முடிச்சை சிக்கலாக்குவதே
என் உயரிய தொண்டு என்றார்

தாயில்லா எனக்கு
தயவு காட்டுங்கள் என்றேன்
தாய்மையின் பெருமையை
நீ உணரும் வரை
என் நிலை விளங்காது என்றார்

நிலவு வரை
காதல் போய்விட்டது
ஏன் நிலவறைக்குள் அடைக்கிறீர்கள்
என்றேன்
பெண்ணை பெற்றவனுக்கு
பெரும்பாடு என்று
மண்ணின் பாட்டை
மறுபடியும் கூறினார்

எனக்கு வரன் பார்ப்பதாக
என்னிடம் கூறினார்
தட்சிணை வைப்பதாய்
இருந்தால் அந்த
காரியத்தை தள்ளி வையுங்கள்
என்றேன்

இந்த காலத்தில்
தட்சிணையின்றி தாலியா
அதற்கு சாத்தியமில்லை என்றார்
அப்படியென்றால்
காதலற்ற மணத்திற்கும்
சாத்தியமில்லை என்றேன்

நீங்கள் கூறியது போல
எல்லாம் அவர் குற்றம்
என்றார்
புரிந்து கொண்டால் நல்லது
என்று புரையோடியவிட்ட
புண்ணை கீறிவிட்டேன்

மருந்து போடுவதற்கு
ஆயத்தமானேன்
நீங்கள் காட்டுபவரை
நான் கைபிடித்து
வாழ்வு சரியாகாதுப் போனால்
அதற்கு என்ன உத்தரவாதம் என்றேன்

ஆனால்
என்னையே அவர்
திருப்பிக் கேட்டார்
காதலரை மணந்தால்
இந்நிலை ஏற்படாது என்று
என்ன உத்தரவாதம் என்றார்

காதல் உத்தரவாதம் என்றேன்
காறித் துப்புகிறது மேலை நாடுகள் என்றார்
நாம் மேலை நாட்டின்
நிலையில் இல்லை என்றேன்
எழுபத்து ஐந்து சதவிகிதம்
தாண்டிவிட்டோம் என்றார்
இருபத்து ஐந்து காப்பாற்றும் என்றேன்

வாக்குவாதம்
வரிகளால் அர்ச்சனை
செய்யப்படும் போது
அவர் விலகி நிற்க
ஆசைப்பட்டார்
என் தந்தையின் மனது
குழப்பமானதை
நானும் உணர்ந்து
விலகி விட்டேன்
நீங்கள் வரும்வரை
நிச்சயம் காத்து இருப்பேன்.

No comments: