Wednesday 16 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 24

24. காலத்தில் காலம் இல்லை.

இந்த உலகில் எதுவுமே தெரியாமல் இருந்து கொள்வது கூட ஒரு வகையில் பேரின்பம்தான். நாம் பேசுகின்ற பல விசயங்கள் பெரும்பாலும் பிறரைப் பற்றியதாகவே இருக்கிறது. புறங்கூறுதல் போலவே புறங்கூறுதலை கேட்பதும் மோசமானது. ஒருவர் புறம் பேச ஆரம்பித்தவுடன் நாம் விலகியே இருந்தாலும் சிறிது நேரத்தில் அப்பேச்சில் ஈர்க்கப்பட்டு நாமும் அதில் இணைந்து விடுகிறோம். அதே வேளையில் அறிவியல் வளர்ச்சி, புரட்சி என ஒரு புறம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, மறுபுறம் தங்களது நம்பிக்கைகளை எல்லாம் அத்தனை எளிதாக விட்டுத்தர முன் வராமல் மகிழ்வோடு இருந்து கொள்ளவே பலரும் விருப்பம் கொள்கின்றனர்.

பாமாவும், நாச்சியாரும் இரவு எட்டு மணிக்கு குண்டத்தூர் வந்தடைந்தனர். அங்கு இருந்த ஒரு உணவகத்தில் உணவு அருந்திவிட்டு பெருமாள்பட்டிக்கு நடக்கத் தொடங்கினர். இருள் என்பது ஒளியற்ற ஒரு நிலை. அதே இருள் மனதில் இருப்பின் அதை அறிவற்ற நிலை என்றே குறிப்பிடுகின்றனர். பாமரத்தனம் என்பது அறிவற்ற நிலை என்பதைக் காட்டிலும் தெளிவற்ற நிலை என்றே குறிப்பிடலாம். பாமரத்தனத்தை வெகுளித்தனம் என எண்ணுபவர்களும் இருக்கின்றனர். நிலாவின் வெளிச்சத்தில் சாலை தெளிவாகவே தெரிந்தது.

''பாமா, ஆழ்வார் திருநகரி பத்தி ஏதேனும் உனக்கு முன் ஞாபகம் இருக்கா'' நாச்சியாரின் பாமரத்தனமான கேள்வி அது.

''இல்லைம்மா, எனக்கு அப்படி ஒன்னும் தெரியலைம்மா. நம்மாழ்வார் பத்தி படிச்சதால தெரிஞ்சிகிட்ட ஊருதான் அது, வாழ்நாளில் கட்டாயம் போய் பாக்கனும்னு நினைச்ச ஊருல ஒன்னு அதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியலம்மா. அதிலயும் நான் இன்னும் திருவரங்கமோ, திருவில்லிபுத்தூரோ போனது இல்லைம்மா''

''ஒருவேளை உனக்கே தெரியாம இருக்கும், எதுக்கும் நீ ஆழ்ந்த தியானம் இருந்து பாரு''

''பண்றேன்மா, ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து இப்படி ஒரு எண்ணம் எல்லாம் எனக்கு வந்ததே இல்லை. அப்பாதான் எனக்கு பெருமாள் அறிமுகம் பண்ணி வைச்சார். நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிப்பார், அதில உண்டான ஈர்ப்புதான்ம்மா மற்றபடி என்ன சொல்றதுனு தெரியலை அதுவும் உங்களோட இந்த உறவு எல்லாம் எனக்கு நிறைய மகிழ்ச்சி தரக்கூடியதா இருக்கு''

''தியானம் இருந்து பாரு பாமா''

''சரிம்மா''

பெருமாள் கோவிலின் கோபுரத்தில் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தது. நாச்சியார் பாமாவின் தெய்வீகத் தொடர்பு குறித்து எண்ணிக் கொண்டு இருந்தார். ஆனால் பாமாவுக்கு பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் முளைத்து விட வேண்டும் என்பதிலும், நாராயணிக்கு கை கால்கள் வர வேண்டும் என்பதிலும் இருந்தது.

நல்ல மனிதர்களாக இருப்பதுவும், நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களோடு பிரியாமல் சேர்ந்து இருப்பதுவும் இன்றைய காலத்தில் பெரிய விசயம்தான். அதே போல நமது செயல்களை எந்த ஒரு காலத்தில் நினைத்துப் பார்த்தாலும் நாம் தலை நிமிர்ந்து இருக்கும்படியாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு வாழ்வை பாமா சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை. படித்தோம், வேலைக்குச் சென்றோம் என்று இருக்கும் என்றுதான் எண்ணி இருந்தாள். இந்த உலகில் காலத்தின் தேவைக்கு ஏற்ப காலம் விசயங்களை நடத்திக் கொள்ளும். காலத்தின் தேவை, தேவையாகவே இருந்திருக்கவில்லை என காலமும் ஒரு கணத்தில் உணர்த்தி வைக்கும். இந்த மொத்த அண்டவெளியும் காலத்திற்கானது இல்லை, காலத்தில் காலமும் இல்லை.

சனிக்கிழமை அன்று அதிகாலையில் யசோதையின் வீட்டை அடைந்தாள் பாமா.

''சொன்ன நேரத்திற்கு சரியா வந்துட்ட பாமா''

''காலத்தில் காலம் இல்லை யசோ, வண்ணத்துப்பூச்சியை கவனிச்சிக்கிட்டதுக்கு நன்றி''

''யசோ, என்னோட அத்தை கூப்பிடற மாதிரியே இருக்கு. உன்னோட பேரழகுல நானே மயங்கிருவேன் போல. தெய்வீகக்கலையம்சம் உனக்கு பாமா''

''உங்க அத்தை உங்களுக்கு ஒருவேளை அந்த யசோதையை பார்த்துதான் பெயர் வைச்சி இருப்பாங்க போல''

''நல்லாவே பேசற பாமா''

''உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லனும், எவ்வளவு பெரிய உதவி நீங்க பண்றது''

யசோதை முகம் மலர்ந்தாள். இருவரும் மருத்துவர் மாறனை சந்திக்கச் சென்றனர்.

மருத்துவர் மாறன் யசோதைக்காக காத்து இருந்தவர் போல வரவேற்றார். பட்டாம்பூச்சியைப் பார்த்தவர் வியப்பு அடைந்தார்.

''நான் கொடுக்கப்போற இந்த ட்ரீட்மென்ட்ல ஒருவேளை இந்த பட்டாம்பூச்சி இறந்து போகலாம், அதுக்காக என் மேல பழி சுமத்தக் கூடாது. இப்படி டெவெலப்மென்ட் ஆகாம இத்தனை நாட்கள் இது உயிரோட இருக்கிறதே அபூர்வம்தான்''

''என்ன சொல்றீங்க டாக்டர்''

மாறன் தான் எழுதி வைத்து இருந்த விசயத்தை அவர்களிடம் காண்பித்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார். இவ்வுலகில் உருவான அத்தனை உயிரினங்களும் தங்களுக்குள் பெரும் அதிசயத்தைப் புதைத்து வைத்து இருக்கிறது. பாமா மெய் மறந்து அமர்ந்து இருந்தாள்.

(தொடரும்)

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் 23


23. பாமரத்தனம்

சடகோபன் தன்னை பாமரத்தி எனக் குறிப்பிட்டுச் சென்றது குறித்து நாச்சியாரிடம் பாமா கேட்டாள். நாச்சியாருக்கு எதுவும் புரியவில்லை. நம்மை புதிதாகப் பார்க்கும் ஒருவர் நம்மைக் குறிப்பிட்டச் சொல் சொல்லும்போது அவர் எதற்காகச் சொன்னார் என்பதை அவர் உண்மையாக உரைக்காதபோது நாம் அதன் உண்மைத்தன்மையை அறிய முடிவது இல்லை.

நாச்சியார் சடகோபனிடமே கேட்டு விடுவது நல்லது என எண்ணினார். இருவரும் கோவிலுக்குள் சென்று வணங்கிவிட்டு வந்தார்கள். சடகோபனிடம் சென்று நாச்சியார்தான் கேட்டார்.

''பாமாவை நீங்க பாமரத்தினு சொன்னீங்களே, என்ன காரணம்''

''தான் யார் என்ன அப்படினு ஒரு தெளிவில்லாம இருக்காளே அதை வைச்சுத்தான் சொன்னேன்''

பாமாவுக்கு இப்போது ஒன்றும் புரியவில்லை. தான் யார், என்ன என அறியாத அளவுக்கா நான் இருக்கிறேன், தன்னைப் பற்றி அப்படி என்ன இவர் புரிந்து வைத்து இருக்கிறார் அதுவும் பார்த்து சில மணி நேரங்கள் கூட ஆகவில்லை என யோசித்தாள். 

''என்ன சொல்றீங்க, என்ன தெளிவு இல்லை பாமாகிட்ட''

''இவளுக்கும், இந்தக் கோவிலுக்கும் முன் பிறவி தொடர்பு இருக்கு, அதை இவ இன்னும் உணரலை. இதோ இந்த புளியமரம் இருக்கே அது பல ஆயிரம் ஆண்டுகளா இங்கதான் இருக்கு, அந்த மரம் சாதாரணமான ஒன்னு இல்லை, ஆனா சாதாரணமான ஒன்னாத்தான் மத்தவங்க கண்ணுக்குத் தெரியும். அதுபோலத்தான் இவளும். நம்மைப் பத்தி நிறைய தெரிஞ்சிக்க நாமதான் முயற்சி பண்ணனும்''

பாமா இதை எல்லாம் கேட்டபடி அமைதியாகவே இருந்தாள்.

''உங்களுக்கு எப்படி இது எல்லாம் தெரியும்'' நாச்சியார் கேட்டார்.

சடகோபன் கலகலவென சிரித்தார்.

''நமக்குள்ள உள்ளுணர்வுனு ஒன்னு இருக்கு, அதைக் கேட்டா எல்லாம் தெரியும், அவளுக்கு உணரணும்னு தோனுறப்ப  உணரட்டும்''

சடகோபன் அவ்வாறு சொன்னதும் நாச்சியாருக்கு பாமாவை சந்தித்தபோது உண்டான ஒருவித உணர்வு நினைவில் வந்து போனது.

''நீங்க சொல்றமாதிரி எனக்கும் அவளைப் பார்க்கிறப்ப தோனிச்சி, எனக்கு உங்களை மாதிரி இப்படிச் சொல்லத் தோனலை''

''தோனாதும்மா'' எனச் சொல்லிவிட்டு பாமாவைப் பார்த்தார். பாமா பெரும் யோசனையில் இருந்து விடுபட்டவளாகவே இல்லை.

வாழ்வில் சில மனிதர்களை அவசியம் சந்திக்க வேண்டும். சில மனிதர்களை கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் சந்திக்கவே கூடாது. பாமாவுக்கு சடகோபன் வாழ்வில் சந்திக்க வேண்டிய நபராகவே தென்பட்டார், ஆனால் பாமா தான் ஒரு சாதாரணமான பெண் என்பதை மட்டுமே அறிவாள். தனக்குள் எவ்வித அபூர்வ சக்தி இல்லை என்பதையும் உணர்வாள். தனக்குத் தெரிந்தது எல்லாம் எல்லோரிடத்தில் பாசத்தோடும், அன்போடும் மட்டுமே இருப்பது, பட்டாம்பூச்சிகள் வளர்ப்பது. பெருமாளை காலை மாலை எனத் தவறாமல் வணங்கி பாசுரங்கள் பாடுவது. இதைத் தாண்டி அவளால் என்ன அவளைப் பற்றி உணர இயலும் என அவள் அறிந்திருக்கவில்லை.

பாமரத்தனம் என்பது ஒருவரின் தெளிவற்ற அறிவைக் குறிப்பிடுவதுதான். ஒரு விசயத்தைக் குறித்து தெளிந்த அறிவு இல்லாதபோதும் எதையும் அப்படியே நம்பி விடுவது. உண்மை எதுவென அறியாமல் உண்மை என நம்பிக்கைக் கொள்வது. ஒன்றைக் குறித்து முழுமையாகக் கற்றுக்கொள்வதால் அந்த விசயம் குறித்த இந்த பாமரத்தனம் அகன்றுவிடும்.

பாமரத்தனம் உடையவர்களை, பாமரன், பாமரள், பாமரத்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். பாமாவின் பாமரத்தன்மை என சடகோபன் நினைப்பது பாமாவின் இறை மீதான முழு உணர்வற்றத் தன்மையை. பாசுரங்கள் பாடுவதால் மட்டுமே ஒருவர் சிறந்த பக்தி கொண்டவராக ஆகி விட இயலாது. நமது வாழ்வில் நாம் நம்மை முழுமையாக உணர்வது கிடையாது. நமக்கு புற விசயங்கள் பெரிதாகப் படுகிறது, அக விசயங்களுக்கு நாம் அத்தனை முக்கியத்துவம் தருவதும் இல்லை.

''நீங்க பள்ளிக்கூடம் கட்ட உதவி பண்றதே பெரிய விசயம், அதை மட்டும் பண்ணிக் கொடுத்துருங்க''

பாமா சடகோபனிடம் சொன்னதும் வானத்தைப் பார்த்தவர்

''அதைப்பத்தி கவலைப்பட வேண்டாம், நீ என்ன வேணும்னு கேட்டாலும் நான் பண்ணித்தர ஏற்பாடு பண்றேன். உனக்குனு நான் பண்ற காரியம் எல்லாம் பெரும் புண்ணியம். ஸ்ரீ ஆண்டாளுக்கு உண்டான விருப்பத்தை ஸ்ரீ இராமானுசர் நிறைவேத்தி வைக்கலையா அது போல உன் விருப்பம் எதுவோ அதை நான் நிறைவேத்தி வைக்கிறேன்''

பாமா அவரை நோக்கி கைகள் கூப்பி வணங்கினாள்.

''அதோ அந்த பெருமாள் அவரை மட்டுமே வணங்கு'' என்றவர் நாச்சியாரிடம்  ''உங்க ஊருக்கு அடுத்த புதன்கிழமை அன்னைக்கு விருதுநகர்ல இருந்து வந்து பார்ப்பாங்க, இடம் எல்லாம் காட்டுங்க மத்த விசயங்களை நான் அதுக்கடுத்து நேர்ல வந்து பார்க்கிறேன்''

சில மனிதர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். தாங்கள் அறிந்தது போல நம்மால் சாத்தியமே அற்ற விசயங்களைக் கூட சொல்வார்கள். அவர்களுக்கு எப்படி இப்படியான விசயங்கள் தெரிகிறது என்பது வியப்புக்குரிய விசயங்களில் ஒன்று. மேலும் எவ்வித பலனும் எதிர்பாராத உதவி என்பது உலகில் அரிதான விசயம் ஆனாலும் அதைச் செய்யும் மனிதர்கள் உண்டு.

அன்று மாலையே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

''நான் பாமரத்தியாம்மா'' பாமா மிகவும் அப்பாவியாய் கேட்டாள்.

''நீ பாமரத்தி இல்லைம்மா, பட்டாம்பூச்சி. எல்லோரையும் மகிழ்விக்கிற பட்டாம்பூச்சி'' எனச் சிரித்துக் கொண்டே சொன்னார் நாச்சியார்.

பாமா புன்னகை புரிந்தாள்.

''நான் நானாகவே இருக்கேன்மா''

நாம் நாமாக இருப்பது ஒன்றும் பிரச்சினை இல்லை, ஆனால் பலருக்கும் நாம் நாமாகவே இருப்பது இல்லை போன்றே தெரிகிறது.

(தொடரும்)

Monday 14 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் -22

22. வயதற்ற கனவுகள்

நாச்சியார் பாமாவை தன்னுடன் ஆழ்வார் திருநகரிக்கு வருமாறு அழைத்தார். பாமாவும் சம்மதம் சொன்னாள். நாச்சியாருக்கு பாமா மீது நிறைய அன்பும், மதிப்பும் பெருகிக் கொண்டே இருந்தது. அதிகாலையிலேயே சென்றுவிட்டு அன்றே இரவே திரும்பி விடுவதாக முடிவு செய்தனர். குண்டத்தூர் வந்து விருதுநகர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.

''பாமா, சடகோபன் அப்படிங்கிறவரைத்தான் பார்க்கப் போறோம், இன்னைக்கு இரவுக்குள்ள திரும்பிரலாம். நீ உன்னோட திட்டம் போல சனிக்கிழமை யசோதை கூடப் போய் என்ன ஏதுனு பாரு''

''சரிங்கம்மா''

''நீ எதிர்பார்த்த சம்பளம்தான நாங்க பேசினது''

பாமா சிரித்தாள்.

''என்னாச்சு பாமா''

''இங்கே என்ன செலவு இருக்கும்மா, தங்குற வீடு, சாப்பிட சாப்பாடு முதற்கொண்டு எல்லாமே நீங்க தரது, அதோட சம்பளம்னு பணம் வேற சொல்லி இருக்கீங்க.  எங்க அப்பா நிறைய சம்பாதிக்கிறார் ஆனா மிச்சம் எதுவும் இல்லைனு சொல்லிட்டே இருப்பார். இதுக்காகவே அம்மா, அப்பா கொண்டு வர பணத்தில் எனக்குன்னு சேர்த்து வைச்சிருவாங்க, என்னதான் இருந்தாலும் கிராமம் வேற, சிட்டி வேறதானம்மா''

''உன்னோட தோழிகள் எல்லாம் உன்னோட முடிவு பத்தி எதுவும் சொல்லலையா''

''யாரு என்ன சொன்னாலும் நம்ம மனசுக்குனு பிடிக்கனும்னு நினைப்பேன், என்னமோ நீங்க என்கிட்டே பேசினதுல இருந்து எனக்கு நீங்க சொல்றத கேட்கனும்னு தோனிச்சி, இன்னைக்கு இப்படி ஒரு அற்புதமான பெருமாள் கோவிலைப் பார்க்க உங்களாலதான் கொடுத்து வைச்சி இருக்கு, நிறைய திருப்தியா இருக்கும்மா. இந்த வாழ்வை ஒரு பயனுள்ள வகையில் வாழனும்னு நினைச்சேன், நாராயணியை நினைக்கிறப்போ பயனுள்ள வாழ்வாவே இருக்கு''

''மெடிக்கல் உலகத்தில நிறைய முன்னேற்றம் வந்துருச்சி, யசோ கூட வேலன் சொல்லித்தான் இந்த கை , கால் வளர்ச்சி, உடல் உறுப்புகள் மாற்றம்னு படிக்க ஆரம்பிச்சா, வேலன் இல்லைன்னா நிச்சயம் இதை எல்லாம் படிச்சி இருக்கமாட்டேனு சொல்வா, யாராவது ஒருத்தர் ஒரு உற்சாகம், ஊக்கம் தரக்கூடியவங்களா அமைஞ்சிருறாங்க. எனக்கு எப்பவுமே பெருமாள் தான்''

''எனக்கும் எப்பவும் பெருமாள் தான்ம்மா''

நாச்சியார் அமைதியாக இருந்தார். அவரது மனம் நிறைய யோசிக்கத் தொடங்கியது. கல்லுப்பட்டி தாண்டி விருதுநகரை நோக்கி பேருந்து சென்று கொண்டு இருந்தது.

''கல்யாணம் பண்ணு பாமா''

''இரெங்கன் கிடைச்சா பண்ணிக்குவேன்ம்மா, இல்லைன்னா உங்களை மாதிரியே இருந்துக்கிறேன்''

''என்னை மாதிரியா?, இன்னொரு நாச்சியார் வேணாம்''

பாமா சிரித்தாள். அவள் சிரிக்கும்போது கண்களும், புருவங்களும், கன்னங்களும் அழகிய கதையை சொல்வது போல் இருக்கும்.

''எல்லா பாசுரமும் மனப்பாடமா தெரியுமா?''

''எல்லாம் தெரியாதும்மா, குறிப்பிட்டது மட்டும் அதுல நிறைய நம்மாழ்வாரோடது''

விருதுநகர் வந்து அடைந்தார்கள். நாச்சியாரின் பள்ளிக்கூட கனவு என்பது வயது கடந்த கனவுகள் போல தோன்றினாலும் கனவுகள் வயது அற்றவைகள். அங்கிருந்து திருச்செந்தூர் சென்று ஆழ்வார் திருநகரி அடைந்தபோது பதினோரு மணி ஆகி இருந்தது. சடகோபனைத் தேடிச் சென்றனர். அறுபது வயதுக்கும் மேலானவராக இருந்தார். காரைவீடு. நிறைய ஆட்கள் அங்கே பணிபுரிந்து கொண்டு இருந்தனர். நாச்சியார் தன்னிடம் இருந்த கடிதம் கொடுத்ததும் சடகோபன் இவர்களை வரவேற்று உபசரித்தார். பாமா தங்களது திட்டம், என்னவெல்லாம் செய்ய இருக்கிறோம் என அத்தனை அருமையாக பல எடுத்துக்காட்டுகள் மூலம் பள்ளிக்கூடம் பற்றி சொன்னதும் தன்னால் முடிந்த உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார். இது நாச்சியாருக்கு சற்று வியப்பாக இருந்தது. விருதுநகரில் உள்ள ஒருவர் மூலமே எல்லா அனுமதியும் பெற்று தருவதாகவும் உறுதி அளித்தார். கனவுகள் நிச்சயம் வயது அற்றவைதான்.

ஒரு விசயத்தை பல வருடங்களாக செய்ய முயற்சி செய்து எல்லாம் தடைபட்டுக் கொண்டே இருப்பதை எண்ணி மனம் தளர்ந்து போவார்கள், அதன் காரணமாக அந்த விசயத்தை வேண்டாம் என கைவிட்டு விடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே அந்த விசயங்கள் குறித்த கனவை தங்களுடனே சுமந்து கொண்டு இருப்பார்கள். ஒரு மரம் எப்படி பலன் தர பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறதோ அது போலவே சில காரியங்கள் நடக்க பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். ஆனால் அதை நிறைவேற்ற தகுந்த மனிதர்கள் வரும் வரை அந்தக் கனவுகள் தங்களை இருக்கப் பிடித்துக் கொள்ளும். நாச்சியார் பாமாவை கட்டிப்பிடித்துக் கொண்டார். பாமா பேசிய முறை தன்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது என புகழாரம் சூட்டினார். பாமா நம்மாழ்வாரை எண்ணி மனமுருக வேண்டிக் கொண்டாள். அவளது மனதில் கம்பர் தனது கனவினை நிறைவேற்ற சடகோபன் அந்தாதி பாடிய நிகழ்வினை எண்ணினாள்.

கம்பர் தனது இராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கர் சன்னதியில் அரங்கேற்ற விருப்பம் கொள்ள அது தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. அப்போது இத்தடை போக்க என்ன செய்ய என நாதமுனிகளிடம் கேட்க அவர் அரங்கன் சன்னதியில் அரங்கேற்றம் பண்ண அனுமதி அளித்தார். அதன்பின்னும் தடை உண்டானது. கம்பர் ஸ்ரீரெங்கனிடம் வேண்ட, பெருமாளே அவரது எண்ணத்தில் வந்து நம் சடகோபனை பாடினாயோ எனக்கேட்க நம் சடகோபன் நம்மாழ்வார் ஆனார். இதன் காரணமாகவே கம்பர் சடகோபன் அந்தாதி இயற்றினார். அதன்பின்னரே அவரால் எவ்வித தடைகள் இல்லாமல் அரங்கேற்றம் பண்ண முடிந்தது. கம்பர் அரங்கம் இன்றும் அரங்கன் கோவிலில் உண்டு.

கம்பனின் கனவை நிறைவேற்றியவர் அச்சடகோபன். நாச்சியாரின் கனவை நிறைவேற்ற இருப்பவர் பாமாவின் மூலமாக இச்சடகோபன். கம்பர் நம்மாழ்வாருக்கு என இயற்றிய முதல் துதி.

தருகை நீண்ட தயரதன் தரும்
இருகை வேழத்தி இராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட
குருகை நாதன் குரைகழல் காப்பதே.

சாதாரண நிகழ்வைக் கூட நம் மனம் எத்தனையோ ஆண்டுகள் முன்னர் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பெருமிதம் கொள்ளும். பல வருடங்களாக ஒன்றின் ஒன்றாகத் தொடர்ந்து நடப்பது போல ஒரு மாயத்தோற்றம் உண்டாகும்.

சடகோபன் அவர்களை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிசேத்திரத்திற்கு அழைத்துச் சென்றார்.  இந்த ஊரின் பழைய பெயர் திருக்குருகூர். தான் அவதரித்த இந்த ஊரை நம்மாழ்வார் பாசுரங்களில் குருகூர் என்றே குறிப்பிட்டு இருக்கிறார். பாமா அந்த ஆலயத்தில் கால் வைத்ததும் மெய் சிலிர்த்தாள். தான் இதுவரை மனதில் வேண்டிய ஒருவரின் தலத்திற்கு வந்து இருப்பது அவளுக்குள் பேரின்பத்தை உண்டு பண்ணியது. அங்கே இருந்த புளிய மரத்தின் பொந்தில் தான் நம்மாழ்வார் 16 வருடங்கள் வாசம் இருந்தார். எல்லாப் பாடல்களும் அவர் இங்கேயே இயற்றினார். இந்த புளிய மரம் கூட பெருமாளே புளிய மரமாக வந்ததாக கதை உண்டு. புளிய மரத்தைத் தொட்டு வணங்கினாள் பாமா.

''அம்மா, நீங்க இதுக்கு முன்ன இங்க வந்து இருக்கீங்களா?'' பாமா நாச்சியாரிடம் கேட்டாள்.

''இல்லை பாமா, உன்னோட நான் வரனும்னு இருந்து இருக்கு''

சடகோபன் பாமாவிடம் இந்தக் கோவிலோட பூர்வ ஜென்ம தொடர்பு உனக்கு இருக்கும்மா என்றார். பாமா வியப்பாக அவரைப் பார்த்தாள். தனக்கு அப்படி ஒரு எண்ணம் எப்போதுமே உண்டானது இல்லை என அவள் அறிவாள், ஆனால் நம்மாழ்வார் மீது அவளுக்கென தனிப்பிரியம் சிறு வயதிலேயே உண்டானது. சடகோபன் பாமாவின் யோசனையைப் பார்த்துவிட்டு ஆலயம் நோக்கி வணங்கினார்.

''நீ ஒரு பாமரத்தி''

சடகோபன் பாமாவை நோக்கி சொல்லிவிட்டுச் சென்றதும் பாமா அப்படியே புளியமரத்தைப் பற்றிக் கொண்டு நின்றாள். புளியமரத்தின் அடியில் நான்கு சுவர்களில்  நிறுவப்பட்ட முப்பத்தி ஆறு திவ்ய தேசப் பெருமாள் சிற்பங்கள் எல்லாம் அவளை நோக்கி அருளாசி வழங்குவது போல இருந்தது. இந்த நிகழ்வு ஒருவன் சொன்ன கவித்துவ நிகழ்வுக்கு ஒப்பாக இருந்தது.

'கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் 
எனக்கு பெருங்குழப்பம் நேர்வது உண்டு 
நீ தெய்வங்களை கும்பிடுகிறாயா அல்லது 
உன்னை தெய்வங்கள் கும்பிடுகின்றனவா என்று'

பாமாவின் கண்களில் இருந்து அவளையும் அறியாமல் கண்ணீர் கசிந்து கொண்டு இருந்தது. ஒன்றின் மீதான காதலின் உயர்நிலையில் பாமா நின்று கொண்டு இருந்தாள்.

(தொடரும்)






Sunday 13 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 21

21 மரபணுக்கள்

யசோதை, சில தினங்களுக்குப் பிறகு பாமாவை மதுரைக்கு வருமாறு அழைத்தாள். தான் ஒரு மருத்துவரிடம் கலந்து ஆலோசித்ததாகவும், அவரும் பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் வரவைக்கலாம் எனவும் சொன்னதாக சொல்லி சனிக்கிழமை அன்று அவரைச் சந்திக்க பதிவு செய்து இருப்பதாகச் சொன்னாள்.

அது எப்படி செய்ய இருக்கிறார்கள் என பாமா கேட்டதும் மிகவும் சுருக்கமாகச் சொன்னாள் யசோதை.

''வண்ணத்துப்பூச்சிகளுக்கு இரண்டு வாழ்வு பாமா. ஒன்னு கம்பளிப்பூச்சியா இருக்கிறது, மத்தது வண்ணத்துப்பூச்சியா மாறுரது. கம்பளிப்பூச்சியில இருந்து வண்ணத்துப்பூச்சியா மாறும் சமயத்தில் முதல் இருந்த செல்கள் எல்லாம் உடலோட அழிக்கப்பட்டு புது செல்கள் தோன்றும் அப்போ அந்த செல்கள் நிறைய எதிர்ப்புகள் மேற்கொண்டு தங்களை அங்கே நிலைநிறுத்தி வண்ணத்துப்பூச்சியை உருவாக்கும். முதலில் இருந்த செல்களில் உள்ள டிஎன்ஏவும் புதுசா உருவாகுற டின்ஏவும் ஒன்னுதான் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனா வெளிப்படுத்தும் ஜீன் இருக்கில்ல அது மாறுது''

பாமா தான் கேட்டுக் கொண்டு இருப்பது தனக்கு விளங்கிக்கொள்ள முடிகிறது என எவ்வித ஐயமும் கேட்காமல் தொடரச் சொன்னாள்.

''முதலில் இருக்கிற செல்களில் உள்ள ஜீன்கள் கம்பளிப்பூச்சி நிலைக்கு தன்னை வெளிப்படுத்துது ஜீனோடொம் கலந்த பீனோடோம். இரண்டாவது புதுசா உருவாகிற செல்களில் உள்ள ஜீன்கள் வண்ணத்துப்பூச்சியை வெளிப்படுத்திருது இதுவும் ஜீனோடொம் கலந்த பீனோடோம். டாக்டர் என்ன சொன்னாருன்னா சிறகுகள் உருவாக்குற  ஜீன்களை ஹார்மோன் மூலமா ஆக்டிவேட் பண்றது. ஈசோடின் ஹார்மோன் இதைச் செய்யும்னு சொல்றார். வண்ணத்துப்பூச்சி ஜீனோம் எல்லாம் பிரிச்சி வைச்சி இருக்காங்க, பண்ணிரலாம்னு சொல்றார். செலவு எல்லாம் ஒன்னும் ஆகாது. அந்த ஹார்மோனுக்கான செலவு மட்டும்தான். அதான் அதைச் செய்யறப்போ நீ இருக்கனும்னு நினைக்கிறேன்''

அதைக் கேட்டதும் பாமாவுக்கு அளவிலா மகிழ்ச்சி. கட்டாயம் வரேன் என்றாள்.

நம்மாழ்வார் பாசுரம் ஒன்று அவளது நினைவில் ஆடியது. எத்தனை வருடங்களாக இந்த பாசுரங்களை எல்லாம் மனனம் செய்து வருகிறாள் என்பது வியப்புக்குரிய ஒன்று. மகிழ்வான தருணங்களிலும் சரி, சோகமான தருணங்களிலும் சரி அவளுக்கு பாசுரம் பாடத் தோனும்.

நின்றனர் இருந்தனர்
கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர்
கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர்
என நினைவு அரியவர்
என்றும் ஓர் இயல்வோடு
நின்ற எம் திடரே

பாமா பாடிய அடுத்த கணம் அவளது சிந்தனையில் பொறி தட்டியது.  யசோதை சொன்ன விசயங்கள் அப்படியே பொருந்திப் போகும்படியான பாசுரம் இது என வியப்பு அடைந்தாள். இதை எல்லாம் எண்ணி எழுதப்பட்ட பாசுரம் அல்ல அது என அவள் அறிவாள் அவளது அறிவால்.

பூங்கோதையிடம் ஓடிச்சென்று நாராயணிக்கு கை கால் வந்துரும்க்கா என அளவிலா மகிழ்ச்சியோடு சொன்னாள். நாராயணி புன்னகை புரியத் தொடங்கி இருந்தாள். கைகள் இருந்தால் எப்படி நம்மைக் கண்டதும் குழந்தைகள் நீட்டுமோ கால்களை ஆட்டுமோ அதுபோல பாமாவை காணும் போதெல்லாம் நாராயணியின் கை கால் தசைகள் ஆடும். இதைக்கண்டு மிகவும் பூரிப்பு அடைந்து இருக்கிறாள் பூங்கோதை.

இந்த உலகில் எல்லா உயிர்களும் ஒருவிதத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையன. அன்போடு இருப்பதே உயரிய செயல். எப்போது ஒருவருக்கு நம்மீது வெறுப்பு தோன்றுகிறதோ அப்போது அவர்களிடம் வெறுப்பை நெருப்பென காட்டி நம்மை நாமே சுட்டெரித்து விடாமல் அமைதியாக தெளிந்த நீரோடை போல அவர்களிடம் இருந்து விலகிப் போவது சிறந்தது. ஆனால் இந்த உலகம் அப்படி விலகிப் போவோர்களை ஏளனம் பண்ணி, அடிமைப்படுத்தவே நினைக்கும். பேரன்பினால் ஆனது உலகம் என்று சொன்னாலும் உலகம் அப்படியாக உருவானது இல்லை. ஒன்றின் உணவாக மற்றோன்றின் உடல் எப்போது தேவை என்று ஆனதோ அப்போதே அன்பு என்பதன் பொருள் விலங்கு உண்ணும் உயிர்களிடத்தில் எதிர்பார்க்க இயலாது. இருந்தாலும் பேரன்பினால் ஆனது உலகம் என மனம் மகிழ்கின்றோம்.

நாச்சியாரிடம் விபரத்தைச் சொன்னாள் பாமா.

''ஒரு மாசமோ, இரண்டு மாசமோ அது உயிரோட இருந்துட்டு இறக்கப் போகுது அதுக்கு எதுக்கு இப்படி எல்லாம் பண்ணனும்''

வசுதேவன் இப்படிச் சொல்வார் என பாமா சற்றும் எதிர்பார்க்கவில்லை. நாச்சியார் தான் வசுதேவன் மனம் புரிந்தவராக அமைதியாகச் சொன்னார்.

''உசிரு, உசிருதாண்ணே, ஒருநாள் வாழ்ந்தாலும் இறக்கையோட வாழ்ந்தோம்னு இருக்கும் அதுவும் நினைச்ச இடத்துக்குப் பறக்கும். இப்போதான் எனக்கு உரைக்குது. எதுக்கு ஒரு பட்டாம்பூச்சி கோதை, யசோதை, பாமா தோளில் போய் உட்கார்ந்து இருந்துச்சுனு, என்னை வைச்சி அது ஏதோ ஒரு விளையாட்டை நடத்திட்டு இருக்கு''

வசுதேவன் சிரிப்பை அடக்க முடியாமல் சொன்னார்.

''திருவிளையாடல் புராணம், விஷ்ணுவோட பத்து அவதாரங்கள் புராணம் மாதிரி சொல்ற நாச்சியார், நம்மை எல்லாம் அந்த பட்டாம்பூச்சிக்கு உணர இயலுமா''

''உணரும், உணர்ந்துதான் இப்படி ஒரு நிகழ்வு நடந்துட்டு இருக்குண்ணா''

நாச்சியார் சொன்ன மறு நிமிடம் மன்னிப்பு கேட்டார் வசுதேவன். பாமாவுக்கு வியப்பாக இருந்தது. சட்டென மாறும் மனநிலை அவளுக்குப் புதிராக இருந்தது.

''என் அண்ணன் எப்பவுமே என்னை இப்படி சோதனை பண்ணுவார், நான் உறுதியா இருந்தா பேசாம மறுப்பு தெரிவிக்காம சம்மதம் சொல்லிருவார்'' என்றார் நாச்சியார்.

பாமாவும் புன்னகை புரிந்தார்.

சிறகுகள் முளைத்து விடும் பட்டாம்பூச்சி காண அவள் பேராவலோடு இருந்தாள். அவளது மனம் நாராயணிக்காக வேண்டிக்கொண்டது.

(தொடரும்)


பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 20

20 சிறகுகள்

பாமா பாடி முடித்ததும் மனதில் அவளுக்கு ஒரு யோசனை தோனியது. யசோதையிடம் இந்த பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் வரவைக்க இயலுமா எனக் கேட்கவேண்டும் என நினைத்தாள். சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சியை பட்டாம்பூச்சி என எவரும் அழைக்க மாட்டார்கள். அது ஒரு பூச்சி அவ்வளவுதான். பட்டாம்பூச்சிகளை வளர்த்துப் பழகிய பாமாவுக்கு பட்டாம்பூச்சியை சிறகுகள் இல்லாமல் அடையாளம் காண்பது எளிதாகவே இருந்தது.

யசோதையிடம் அலைபேசி மூலம் பேசி தனது ஆர்வத்தைச் சொன்னாள் பாமா. யசோதை சிறிது நேரம் யோசித்தவள் சிறகுகள் வரவைக்கலாம் என உறுதி தந்தாள். இந்த உலகில் பரிணாம வளர்ச்சி என்பது உணர்தல், தொடுதல், ஊர்தல், பறத்தல், நடத்தல் என்றே பக்கத்திற்கு பக்கமாக விரிவடைந்து வந்து இருக்கிறது.

தமக்கு தேவை இல்லாத உறுப்புகளை உதறித்தள்ளிவிடும் குணாதிசயங்கள் உயிரினங்களுக்கு இருந்து வந்து இருக்கிறது. எல்லா உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி என்பது பிரமிக்கத்தக்க ஒன்றுதான் அந்த அந்த இயற்கை சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் வல்லமை இந்த உயிரினங்களுக்கு உண்டு. இதில் இன்று வரை பெரும் வியப்பு தந்து கொண்டு இருப்பவைகள் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்ணுயிர்கள். தங்களை அழிக்க வருபவைகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கின்றன. எவை எல்லாம் பயனில்லை என்று ஆகிறதோ அவை அழிந்து போகும். எவை மென்மேலும் பயன் உண்டாக்க உதவுமோ அவை மாற்றம் அடைந்து ஒரு நிலைக்கு வரும்.

பூங்கோதை வீட்டுக்குள் சென்றாள் பாமா.

''வாம்மா, உட்கார்'' பூங்கோதை பாமாவை வரவேற்றாள்.

''குழந்தை எப்படி இருக்கா?''

''நல்லா இருக்கா''

''நாராயணி'' என அழைத்தாள் பாமா. குழந்தை குரல் கேட்டு ஒலி எழுப்பியது.

''தன்னைத்தான் கூப்பிடறாங்கனு நினைக்கிறா அக்கா''

''பசிச்சா மட்டும் அழறா, மத்தபடி எந்த ஒரு தொல்லையும் இல்லம்மா, இவளுக்குனு இப்படிதான் துணி எல்லாம் தைச்சி வைச்சிருக்கேன்'' கை கால் வைக்காத துணியைக் காட்டினாள் பூங்கோதை.

''அக்கா, ஆழ்வார்களில் நம்மாழ்வார் எனும் சடகோபன் பத்தி நீங்க தெரிஞ்சி இருக்கீங்களா''

''இல்லைம்மா''

''நம்மாழ்வார் பிறந்தப்போ அழவே இல்லை. அதுக்கு நம்ம உடம்புக்குள்ள இருக்கிற காற்றை நாம வெளியேற்றத்தான் பிறந்த உடனே அழறோம்னும் நம்மாழ்வார் சட அப்படிங்கிற காத்தை அடக்கியாளும் திறமை இருந்ததால அழாம இருந்தார்னு சொல்றாங்க. அதுவும் பதினாறு வருசம் அவர் பேசாம ஒரு பிண்டம் மாதிரியே இருந்து இருக்கார். புளியமரத்துக்கு அடியில இப்படியே அசைவற்று கிடந்தவரை மதுரகவி ஆழ்வார்தான் ஒரு கல்லை தூக்கிப் போட சலனம் இருக்குனு கண்டுபிடிச்சி அவர்கிட்ட கேள்வி கேட்டு அவருடைய அறிவை மெச்சி தனது குருவாக ஏத்துக்கிட்டார், அதுக்கு அப்புறம் அவர் எழுதின பெருமாள் பற்றிய பாசுரங்கள் எல்லாம் சேர்த்து வைச்சி இருக்காங்க. நம்ம நாராயணி அப்படி இல்லைக்கா, நிச்சயம் பதினாறு வருசம் எல்லாம் அப்படி இருக்கமாட்டா, மத்த குழந்தை போல பேசுவா''

''ஆனா அவளால தன்னால் எதுவும் செய்யமுடியாதுல. தவழ்றது, நடக்கிறது, கை கொட்டி சிரிக்கிறதுனு எதுவுமே பண்ண முடியாதுல அதை நினைச்சி எனக்கு அப்போ அப்போ பகீர்னு இருக்கும்மா''

''அதான் யசோதை கை கால் வந்துரும்னு சொல்லி இருக்காங்க, நீங்க கவலைப்படாதீங்க அக்கா''

ஒரு தாய்க்கு தனது சேய் தான் உலகம். கட்டிய கணவனை விட தான் பெற்ற பிள்ளைக்காக எதுவும் செய்யத் துணிவு கொண்டுவிடுவாள் தாய். ஒரு தாய்க்கு மனச்சோர்வு ஏற்பட்டு இந்த வாழ்வைத் தொலைத்து விடுவோம் என எண்ணிக் கொண்டிருக்கையில் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழறயாம்மா, அழாதம்மா நானிருக்கேன்ல எனும் அந்த சேயின் மழலைச் சொல் அந்த தாய்க்கு இந்த வாழ்வின் மீது நிறைய நேசத்தை வளர்த்து விடும். ஆனால் நாராயணி பூங்கோதையின் மனதில் கவலைகளை சேர்த்துக் கொண்டு இருந்தாள். அந்தக் கவலைப் போக்குவதற்கு என்றே பாமா நிறைய நம்பிக்கைகள் தந்து கொண்டு இருந்தாள். பாமாவின் பேச்சு பூங்கோதைக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

பாமா நாச்சியார் சொன்னபடி விவசாய நிலங்களில் வேலை பார்த்து வர ஆரம்பித்தாள். கோவிலை கோவிந்தன் பார்த்துக் கொண்டான். பரந்தாமனிடம் வசுதேவன் இன்னொரு குழந்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் அதனால் இந்த மன வருத்தம் எல்லாம் தீரும் என ஆறுதல் சொன்னார். இனிமேல் தான் பெருமாளுக்கு சேவை செய்தால் நன்றாக இருக்காது என்ற பரந்தாமனுக்கு அப்படி எல்லாம் நினைக்க வேண்டாம் முப்பது நாள் கழித்து தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

யசோதை சொன்னது போலவே அடுத்த வாரம் பெருமாள் பட்டி வந்து சேர்ந்தாள். அவளுடன் சடகோபன் மருத்துவரும் உடன் வந்தார். நாராயணியை பரிசோதித்தவர் ஒரு மாதம் கழித்து தனது மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வரச் சொல்லிவிட்டு கிளம்பினார்.

''யசோ டாக்டர் என்ன சொல்லிட்டுப் போறார்'' நாச்சியார் கேட்டார்.

''முயற்சி பண்ணி பார்க்கலாம்னு சொல்றார் அத்தை. செல்களை மறுபடியும் இயங்க வைச்சி பார்க்கலாம்னு சொல்றார். செல்கள் இயங்க ஆரம்பிச்சிருச்சினா சாதாரணமா வளர்ச்சி அடையறது போல வளர்ந்து விரல்கள், நகங்கள் எல்லாம் உருவாகி நின்றும், கவனமா செய்யனும் இல்லைன்னா ஒரு கைக்கு இரண்டு கை வரக்கூட வாய்ப்பு இருக்குனு சொல்றார்''

''யசோ, உன்னை நம்பித்தான் இருக்கோம்''

''கவலையை விடுங்க அத்தை, குழந்தை இந்தளவுக்கு நல்லா இருக்கிறதே பெரிய விசயம்னு அவர் சொல்றார். நிறைய செலவு ஆகும், அப்பாதான் இதுக்கு உதவி பண்ணணும்''

''பணத்தைப் பத்தி கவலைப்படாத யசோ''

பாமா அப்போதுதான் வந்தாள்.

''எப்போ வந்தீங்க யசோதை''

''இப்பதான், நீங்க எங்க போனீங்க''

''திருமங்கலம்ல வேளாண்மை கூட்டத்துக்குப் போயிட்டு வந்தேன், குழந்தைக்கு எதுவும் முயற்சி பண்ணினீங்களா''

''டாக்டர் வந்துட்டுப் போனார், அடுத்த மாசம் குழந்தையை கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கிறார்''

''ரொம்ப நன்றிங்க யசோதை, பட்டாம்பூச்சிக்கு முயற்சி பண்ணினீங்களா''

பட்டாம்பூச்சியை காட்டினாள் பாமா. பாமா எங்கு போனாலும் காலை, மாலை என நாராயணியையும், பூங்கோதையையும், பட்டாம்பூச்சியையும் பார்க்காமல் செல்வது இல்லை.

''இமேகோ செல்களை செலுத்திப் பார்க்கலாம் பாமா, நான் இதை எடுத்துட்டுப் போறேன்''

''இன்னைக்கே போறீங்களா, ஊருல தங்க மாட்டீங்களா''

''நிறைய வேலைக இருக்கு பாமா, அதான் இன்னைக்கு சாயந்திரமே கிளம்புறேன்''

யசோதை வீட்டுக்குச் சென்றுவிட்டு கிளம்புவதாக இருந்தாள். வசுதேவன் நாச்சியார் சொன்ன விசயங்களை கேட்டதும் மறுப்பு எதுவும் சொல்லாமல் உண்மையை ஒப்புக் கொண்டாள். அப்போதே மாணிக்கவாசகரை சென்று பார்த்து விபரங்கள் சொல்ல வேண்டும் என்றார் வசுதேவன். நாச்சியார் தடுத்தார்.

''குழந்தைக்கு நல்லது நடக்கிற வரைக்கும் இதை பேச வேண்டாம்ணா''

வசுதேவன் எதுவும் சொல்லாமல் அமைதியானார். பாமாவை வரச் சொன்னாள் யசோதை. பாமா பட்டாம்பூச்சியை ஒரு காற்றுப் புகக்கூடிய சிறு குடுவையில் அடைத்து அது உயிர்ப்போடு இருக்க மலர்களுடன் கூடிய செடியை உள்ளே வைத்து இருந்தாள். யசோதை அதைப் பார்த்ததும் ஆச்சரியம் கொண்டாள்.

''எப்படிங்க பாமா, இப்படி எல்லாம் பண்ணி கொண்டு வந்து இருக்கீங்க''

''வளர்த்துப் பழகிருச்சிங்க''

பாமாவை மகிழ்வோடு கட்டிப்பிடித்துக் கொண்டாள் யசோதை.

பாமா. பேரழகும் பேரறிவும், பேரன்பும் நிறைந்த ஒரு பெண். அவளுக்கென ஆன கள்ளமில்லா உள்ளம் வேறு எவருக்குமென ஆனது இல்லை. அவளை எண்ணி மகிழ்ந்திட உண்டாகும் உற்சாகம் வேறு எதனாலும் உண்டானது இல்லை. இதை எல்லாம் ஆச்சரியங்களில் அடக்க வேண்டியது இல்லை. அவளது இயல்பே அதுதான்.

சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி பாமாவை நோக்கி நன்றி சொல்வது போல தனது முன்னங்கால்களை சேர்த்து வணங்குவது போல செய்தது.

இந்த உலகில் உள்ள உயிரினங்களின் எண்ணங்கள் எதுவென எவரும் ஆழமாகவும், முழுமையாகவும் படித்தது இல்லை. அதனின் செயல்பாடுகள் எதற்கு என முழுவதுமாக உணர்ந்ததும் இல்லை. மழை வரும் முன்னே தோகை விரிக்கும் மயில், தனது பெண் துணைக்கு தான் விடும் தூது என்றே நாம் சொல்லிக் கொள்கிறோம், அதற்காக மட்டும்தான் என்பதை நாமாக முடிவு செய்தால் மயிலுக்கு தெரியவாப் போகிறது. பாமா பட்டாம்பூச்சியின் செயல் கண்டு புன்னகை புரிந்தாள்.

(தொடரும்)

Saturday 12 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 19

19. நம்பிக்கைகள்

பாமாவின் தோளில் அமர்ந்த பட்டாம்பூச்சி அப்படியே குழந்தையின் மீது அமர்ந்துவிட்டு பறந்து போனது. சிறகுகள் இருப்பதால் எங்கு வேண்டும் என்றாலும் பறந்து போகும் இந்த பட்டாம்பூச்சிக்கு இலக்குகள் என்று இரண்டுதான், உயிர்ப்போடு இருப்பது, இனத்தைப் பெருக்குவது. பொதுவாகவே எல்லா உயிரினங்களும் இந்த இரண்டுக்காகத்தான் வாழ்கின்றன, இதில் அன்பை, பாசத்தை, நேசத்தை கலந்து வாழும் உயிரினங்கள் இந்த வாழ்வின் மீது ஒரு தீராத காதலை ஏற்படுத்திக் கொள்கின்றன.

முதுகெலும்பு பாதிக்கப்பட்டு நடக்கவே இயலாமல் இருப்பவர்களைத் தூக்கிச் சுமக்கும் தாய்மார்கள், செவிலியர்கள், இயக்கமற்றுப் போய் நினைவே இல்லாமல் படுக்கையிலேயே தமது வாழ்நாட்களை கடக்கும் மனிதர்கள், தான் யார் எவர் என்று அறியாமல் மனநிலையைத் தொலைத்துவிட்டு, மனநிலையைப் பாதிப்புக்கு உள்ளாக்கி நோயாளிகளாகவே வாழும் மனிதர்கள், எவற்றின் மீதாவது வெறுப்புகளை சுமந்து கொண்டே திரியும் மனிதர்கள் என இந்த உலகம் கண்டு கொண்ட, கண்டு கொண்டிருக்கும், கண்டு கொள்ளப்போகும் உயிரினங்கள் என நிறையவே உண்டு.

தலை நிறைய மல்லிகைப்பூவும், நெற்றியில் சிவந்த பொட்டும், காதில் தண்டட்டியும், கழுத்தில் நகைகளும், மூக்குத்தியும் அணிந்து பட்டாடை உடுத்திய ஒரு மூதாட்டி பூங்கோதையின் அருகில் வந்து ''மகராசி கை, கால் இல்லாம பிறந்துருச்சேன்னு வருத்தப்படாத ஆத்தா, இங்க இருக்க வெயிலுக்குகந்தம்மனுக்கு முப்பது நாளு கழிச்சி குழந்தையைத் தூக்கி வந்து அந்த ஆத்தாளுக்கு முன்னாடி கிடத்தி கை கால் வரனும் நிச்சயம் வளர்ந்துரும், உனக்கு கை கால் வெள்ளியில் செஞ்சி வைக்கிறேனு மனமுருக வேண்டிக்கோ ஆத்தா, உனக்கு எந்த குறையும் வராது, நீயும் உன் பொண்ணும், குடும்பமும் நல்லா இருப்பீங்க'' என சிரித்த முகத்தோடு சொல்லியவர் குழந்தையின் கன்னத்தைத் தடவினார்.

பூங்கோதை கைகள் எடுத்து அவரைக் கும்பிட்டாள். ''வேண்டிக்கிறேன் பாட்டி'' எனும் அவளது குரல் தழுதழுத்தது. யசோதையும், பாமாவும் அந்த மூதாட்டியை வியப்போடு பார்த்தவண்ணம் நின்றார்கள். ''நீங்க எந்த ஊரு'' என்றார் நாச்சியார். ''ஸ்ரீரங்கம், குழந்தைக்கு கை கால் வந்துட்டா என்னை வந்து பார்த்துட்டுப் போகப் போறீங்களா?'' என்றார் மூதாட்டி. ''வந்து பார்த்துட்டுப் போறதுல ஒன்னும் தப்பு இல்லையே, வீடு விபரம் தந்தீங்கனா வரோம்'' என்ற நாச்சியாரைப் பார்த்து சிரித்தார் அந்த மூதாட்டி.

அங்கே இருந்த செவிலியர் ஒருவரிடம் காகிதம் வாங்கி எழுதித்தந்தார். ஆண்டாள் என அவரது பெயர் குறிப்பிட்டு இருந்தது. நாச்சியார் அவரிடம்  ''கல்யாண வீட்டுக்குப் போறது போல இங்க வந்து இருக்கீங்க'' என்றதும் ''நான் எப்பவும் அலங்காரத்தோடதான் இருப்பேன், அலங்கரிச்சி கொண்டாடத்தான் இந்த உடம்பும், மனசும்'' என்றவர் பூங்கோதையின் தலையில் கை வைத்து பாமாவை கை காட்டி பூங்கோதையிடம் ''இவ உனக்கு உறுதுணையா இருப்பா ஆத்தா, கவலைப்படாத'' என்றபடி நடந்து போனார். பூங்கோதையின் கண்கள் பாமாவை ஆறுதலுடன் பார்த்தன. பாமாவுக்கு பட்டாம்பூச்சி தந்த மெய் சிலிர்ப்புதனைக் காட்டிலும் அந்த மூதாட்டி தந்த மன உற்சாகம் மிகவும் பிடித்து இருந்தது. யசோதை தான் மருத்துவரை சென்று பார்த்துப் பேசிவிட்டு தகவல் சொல்வதாக மதுரைக்கு கிளம்பினாள். வசுதேவன் யசோதையிடம் ''ஒரு எட்டு ஊருக்கு வந்துட்டுப் போம்மா'' என்றதும் ''அம்மாகிட்ட சொல்லுங்கப்பா அடுத்த வாரம் கட்டாயம் வரேன்'' என்றபடி அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினாள்.

ஒரு குறையும் இல்லை எனும் நம்பிக்கை தரும் சொற்கள் தரும் உற்சாகங்கள் பேரழகானவை. குறையை நிறையாக மாற்றிவிடவே பலரும் முனைகின்றனர். குறையை அப்படியே குறையாக ஏற்று வாழ்தல் என்பது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. நோய் என்று வந்தால் அதற்கு மருந்து என்ற ஒன்றை நாடிச் செல்கின்றனர். இந்த வாழ்வை செம்மையாக வாழ வேண்டும் எனும் பேராவல் பலரிடமும் உள்ளது. ஆனால் தாங்கள் செல்லும் பாதை, தாங்கள் கொள்ளும் நட்பு உறவுகள், பழக்க வழக்கங்கள் அவர்களை வழி மாற்றிவிடுகிறது. மன உறுதி உள்ளவர்கள் தடுமாற்றம் கொள்வது இல்லை.

''பாமா, அந்தம்மா சொன்னது எனக்கு நிறைய மகிழ்ச்சியா இருக்கு'' என்றார் நாச்சியார்.

''நாம வைக்கிற நம்பிக்கைகளோட பலம் நமக்கு உறுதுணையா எப்பவும் இருக்கனும்மா'' என்றாள் பாமா.

நாச்சியார் மட்டுமே அங்கே தங்க அனுமதி வாங்கி இருந்தார். பாமா இரண்டு நாட்கள் கழித்து பெருமாள் பட்டியில் வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு கிளம்ப இருந்தாள். பூங்கோதை பாமாவின் கைகளைப் பிடித்து ''மறக்காம வந்துரும்மா'' என்றார். ''வரேன்க்கா, எதுவும் எடுத்துட்டு வரலை, போய் எல்லாம் எடுத்துட்டு ஊருக்கே வந்துருறேன்'' என்றபோது குழந்தையும் மகிழ்ச்சியால் உடல் அசைத்தது.

மனிதர்களின் நம்பிக்கைகள் அறியாமை கலந்த பேரன்பின் வெளிப்பாடுகள். ஊசி போட்ட பின்னம் திருநீறு பூசி விடுகிறேன் உன் காய்ச்சல் சரியாகும் என்பவர்கள், உன் உடைந்த கை சரியானால் வெயிலுக்குகந்தம்மனுக்கு மாவினால் ஆன கை செய்து வைக்கிறேன் என்பவர்கள். இந்த வாழ்வை பேரழகோடு இரசித்திட தனி மனம் வேண்டும்.

''அம்மா, இன்னைக்குத்தான் நானும் பிறந்தேன்'' என்றாள் பாமா.

''இது புரட்டாசி மாசம், சனிக்கிழமை. பெருமாளுக்குனு ஆனது. காலையிலேயே கருட சேவை பண்ணினேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  நீ பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாம குழந்தைச் செல்வங்களோட நல்லா வாழனும் பாமா'' என்றார் நாச்சியார். ''பிறந்தநாள் வாழ்த்துக்கள்'' என்றார் பூங்கோதை.

அவள் இந்த புரட்டாசி மாதம்தனில்தான் பிறந்தாள் என்பதைத் தவிர வேறொன்றும் இந்த மாதத்திற்குச் சிறப்பு இல்லை, அதைவிட வேறு எந்த ஒரு மாதத்திற்கும் இந்த சிறப்பும் கூட இல்லை என சென்ற வருடம் கல்லூரியில் தனது பிறந்தநாளுக்கு கிடைத்த பாராட்டை எண்ணி மகிழ்ந்தாள் பாமா.

மதுரைக்குச் சென்று தனது பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு பெருமாள்பட்டிக்கு வந்து சேர்ந்தாள் பாமா. ஊரில் பூங்கோதையின் குழந்தையைப் பற்றி பயத்தோடும் வியப்போடும் பேசிக் கொண்டார்கள். பூங்கோதை வீட்டுக்குச் சென்றாள் பாமா. அப்போது ஒரு பட்டாம்பூச்சி அவள் மீது அமர்ந்து பறந்து ஒரு செடியில் அமர்ந்தது. அதையே பார்த்து நின்றாள் பாமா. மறுபடியும் பறந்து வந்து அவள் மீது அமர்ந்துவிட்டு செடியில் சென்று அமர்ந்தது. என்னவென அச்செடியை நோக்கிச் சென்றாள். கால்கள் தலை கொண்ட சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி ஒன்று மலரில் தேன் அருந்திக் கொண்டு இருந்தது. கண்களில் சட்டென நீர் முட்டிக்கொண்டது. கண்கள் மூடி வணங்கியபடி பாசுரம் பாடினாள்.

வண்டுணு நறுமலரிண்டை கொண்டு பண்டை நம்வினைகெடவென்று அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருளெனக் கருளுதியேல்
வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே

தேன் சுவையை விட இச்சுவை பெரிது என எண்ணியது போல பாடல் ஒலி கேட்டு தன் தலை உயர்த்திப் பார்த்தது சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி.

(தொடரும்)

Friday 11 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 18

18. உயர்வறவுயர்நலம்

தன்னை அழைப்பது எவரென திரும்பிப் பார்த்தாள் பாமா. யசோதை பாமாவின் அருகில் அமர்ந்தாள்.

யசோதையை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டவள்  எப்படி ஆமையானது தனது தலை, கால்களை உள்ளே இழுத்துக் கொள்ளுமோ அப்படி தனது கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

''யசோதை, எப்படி இருக்கீங்க?''

அவளது குரல் அவளது மனதின் வருத்தம்தனை வெளிக்காட்டியது.

''நல்லா இருக்கேன், நீங்க?''

''ம்ம், கோதை அக்காவுக்கு குழந்தை பிறந்து இருக்கு, அவங்களைப் பார்க்கத்தான் நான் போயிட்டு இருக்கேன், நீங்களும் அங்கதான் போறீங்களா''

''ம்ம், அப்பா விபரத்தைச் சொன்னார். அதான் என்ன ஏதுன்னு நேரடியாய் பார்த்துட்டு ஏதாச்சும் பண்ண முடியுமானு பார்க்கனும்''

நடத்துனர் பயணச்சீட்டு கேட்டு வந்தார். இருவருக்கும் யசோதையே பயணச்சீட்டு வாங்கினாள்.

''பரீட்சை எல்லாம் நல்லா எழுதி இருக்கீங்களா, வேலை தேட ஆரம்பிச்சிட்டீங்களா'' பாமாவின் முடிவு குறித்து எதுவும் அறியாத யசோதை கேட்டாள்.

''நல்லா எழுதி இருக்கேன், பெருமாள்பட்டில விவசாயம் சம்பந்தமா வேலை, வீடு எல்லாம் நாச்சியார் அம்மா பார்த்து கொடுத்து இருக்காங்க. கை, கால் இல்லாம குழந்தை பிறக்குமா, அது உயிரோட எவ்வளவு நாள் இருக்கும்''

பாமா அவளது வேலை குறித்து சொன்னதும் யசோதை வியப்போடு நோக்கினாள்.

''என்னது, அந்த ஊரிலேயே வேலையா, அந்த ஊர்ல இருந்து எல்லாம் வெளியூர் போயிட்டு இருக்காங்க, நீங்க என்ன இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கீங்க, நல்லா யோசிங்க பாமா. அப்புறம் அந்த குழந்தை பத்தி கேட்டீங்கள, பொதுவா இந்த மாதிரி பிறக்கிற குழந்தைக மூச்சு விட திணறும், நரம்பு மண்டலம் எல்லாம் ஒழுங்கா உருவாகி இருக்காது, குறைஞ்ச காலத்திலேயே இறந்துருவாங்க, சில விதி விலக்கு இருக்கு. எல்லாமே நல்லபடியா இருந்து கை கால் மட்டும் இல்லைன்னா நம்மளைப் போல உயிர் வாழ்வாங்க, ஆனா யாரையாவது துணைக்கு உடன் வைச்சிட்டே இருக்கனும். கை, கால் வரத பத்தி தான் நான் யோசிச்சிட்டு இருக்கேன்''

''கை கால் வளருமா''

''இதுபத்திதான் எனக்குத் தெரிஞ்ச ஒரு டாக்டர் நிறைய ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காரு. நானும் வேலனும் அவர்கிட்டதான் இதுபத்தி நிறைய கத்துக்கிட்டு இருக்கோம்''

பாமா வியப்போடு யசோதையைப் பார்த்தாள். பேருந்து அதிவேகமாக போய்கொண்டு இருந்தது. இந்த உலகில் குறைகள் அற்ற ஒன்றாக அனைத்தையும் மாற்ற வேண்டும் என நிறைய முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது.

இறந்து போன ஒருவரை தரையில் கிடத்தி வைத்த பிறகு, அவர் இறந்துவிட்டார் என மனதுக்கு தெரிந்தாலும், உயிர்த்து எழுந்து வந்து விடமாட்டாரா என நடக்காத ஒன்றை அவர் மீதான பிரியத்தினால் எண்ணும் மனம் அவரது இழப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அந்த இழப்பை மறந்து விட பல வருடங்கள் ஆகிறது. அவர்கள் வானத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என சமாதானம் அடைகிறது அல்லது தங்களது குடும்பத்தில் பிறக்கும் குழந்தையை அவராக எண்ணி மனதை தேற்றிக் கொள்கிறது. உறுப்புகள் அற்று பிறந்த பிறகு இதுவரை எந்த ஒரு குழந்தைக்கும் உறுப்புகள் வளர்ச்சி அடைந்ததாக மருத்துவக் குறிப்பில் இல்லை.

பொதுவாக எல்லாமே கருவில் தீர்மானிக்கப்படும் விசயமாக இருக்கிறது. நான்காவது வாரத்திலேயே கை கால் தோன்றுவதற்கான ஆயத்தங்கள் தொடங்கிவிடுகிறது. இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் ஸ்டெம் செல்கள் மூலம் பல மாற்றங்களை உண்டாக்கி வருகிறார்கள். இறந்து போன செல்களைப் புதுப்பித்தல் என்பது எல்லாம் நடைபெறுகிறது.

''எப்படியாவது இந்த குழந்தைக்கு முயற்சி பண்ணுங்க யசோதை'' பாமா தனது ஆசையை சொல்லி வைத்தாள்.

''கால் இல்லாம போன தவளைக்கு கால் வர வைச்சி இருக்காங்க, புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்தான் இதுக்கு துணை புரிஞ்சி இருக்கு பாமா, இதையே முன்மாதிரியா வைச்சி மனுசங்களுக்கு செய்யலாம்னு சொல்லி இருக்காங்க. நிறைய பேருக்கு கை கால் வெட்டி எடுத்துட்டா திரும்பி வளர வாய்ப்பே இல்லாம இருந்ததை மனசில வைச்சி இந்த ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு''

''முயற்சி பண்ணுங்க யசோதை''

கட்டாயம் பண்ணுவதாகச் சொன்னாள் யசோதை. அதன்பின்னர் அவர்கள் அமைதியாக வந்தனர். மருத்துவமனையை வந்து அடைந்தபோது மாலை ஆறு மணி ஆகி இருந்தது.  இருவரும் சென்று குழந்தையைப் பார்த்தார்கள். நாச்சியார் அங்கேதான் பூங்கோதையோடு இருந்தார். கை கால்கள் உடன் இல்லாமல் இருந்த குழந்தை பார்க்க மன உறுதி வேண்டும். தாங்கள் வாங்கி வந்த பொருட்களை அங்கே வைத்தார்கள். வைச்சி விளையாட கைக இல்லை என வருந்தினாள் பூங்கோதை. அப்போது சிறு ஒலி எழுப்பியது குழந்தை. கை, கால் முளைக்க வேண்டிய இடத்தில் இருந்த தசைகள் ஆடின.

''கவலைப்பட வேண்டாம்க்கா, உங்க குழந்தைக்கு கை கால் வந்துரும்'' யசோதை பூங்கோதைக்கு நம்பிக்கை கொடுத்தாள்.

''குழந்தை உயிரோட இருந்தாலே போதும் சின்னம்மா'' பூங்கோதையின் வலிமை இழந்த சொற்கள் பாமாவை என்னவோ செய்தது.

''நான் இருக்கேன்க்கா'' பாமா பூங்கோதையின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். குழந்தையைத் தூக்கினாள் பாமா. ''குழந்தை தலை பத்திரம் பாமா'' என்றார் நாச்சியார்.

தன் கன்னத்தோடு குழந்தையின் கன்னம் ஒட்டிக் கொண்டாள். அதன் செவியில் பாசுரம் ஒன்றைப் பாடினாள்.

உயர்வறவுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வறமதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதியவனவன்
துயரறுசுடரடி தொழுதெழன்மனனே

பாமா பாடிய பாடலைக் கேட்டு குழந்தையின் முக தசைகள் புன்னகை புரிவது போல அசைந்தன. வானில் பேரிடி ஒன்று இடித்து ஓய்ந்தது. 'பெருமாளே, இந்தக் குழந்தையை குறையில்லாத குழந்தையா மாத்து' என மனதில் வேண்டிக் கொண்டார் நாச்சியார்.

பாமாவின் தோளினைத் தொட்டாள் யசோதை. எங்கிருந்தோ ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. மெய் சிலிர்த்துப் போனாள் பாமா.

(தொடரும்)

Thursday 10 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 17

17. ஊனமறு நல்லழகே

கம்பளிப்பூச்சியாக இருந்தபோது அதனில் உள்ள இந்த எதிர்ப்பு சக்தியானது இந்த இமேகோ செல்களை உருவாக விடாமல் தடுத்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாது இவை எல்லாத் தடைகளையும் தாண்டி பல செல்கள் உருவாகி பட்டாம்பூச்சியாய் உருவானது. தோலினுள் உருமாற்றம் தொடங்கி தோலினை கிழித்து தலைகீழாக வெளிவந்தபோது அவைகளுக்கு சிறகுகள் இல்லை. கால்கள் மற்றும் தலையோடு மட்டுமே வெளிவந்தது. சிறகுகள் இல்லாத இதை எப்படி பட்டாம்பூச்சி எனச் சொல்வார்கள்.

வெளிவந்த அடுத்தகணம் தலையை மேற்புறம் திருப்பி தனது தோலுக்கு நன்றி சொல்லிக்கொண்டது போல இருந்தது. அங்கிருந்து பறந்து போக சிறகுகள் இல்லை. துளசி இலையில் இருந்து கீழே பொத்தென்று விழுந்து தரையில் ஊர்ந்து சென்றது. இதைக்கண்டு பட்டாம்பூச்சி ஒன்று அதன் அருகில் சில நிமிடங்கள் நின்றுவிட்டு பரந்தாமனின் வீட்டுக்குள் சென்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டது.

ஊர்ந்து கொண்டே சென்ற இந்த பட்டாம்பூச்சி ஒரு மலர் இருந்த செடியின் மீது ஏறி அந்த மலரில் தேனினை உறிஞ்சத் தொடங்கியது. இமேகோ செல்கள் தங்களது பணியை சரிவரச் செய்யாத காரணத்தால் கால்கள் தலைகளோடு சிறகுகள் அற்ற பட்டாம்பூச்சி உருவானது. தனது நிலையை எண்ணி வருத்தம் எதுவும் கொள்ளாமல் பறந்து செல்வதற்குப் பதிலாக ஊர்ந்து சென்று மலர் இருந்த செடியை அடைந்தது.

விருதுநகர் மருத்துவமனையை அடைந்தார்கள். வலி பொறுக்கமாட்டாமல் கத்தினாள் பூங்கோதை. மருத்துவமனையில் வெகுவேகமாக அனுமதித்தார்கள். குழந்தையின் தலை சரியாக இருக்கிறது. பிரச்சினை எதுவும் இல்லை என மருத்துவர்கள் சொன்னார்கள். பரந்தாமனும் மருத்துவமனையை வந்து அடைந்தான். மிகவும் பதட்டமாகக் காணப்பட்டான். நாச்சியார் ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார்.

மழை எப்போது பெய்யும் என்றும், பிள்ளை எப்போது பிறக்கும் என்றும் மகாதேவனே அறிந்தது இல்லை எனும் சொல்வழக்கு உண்டு. நேரம் ஆகிக் கொண்டு இருந்தது. அறுவை சிகிச்சை எதுவும் செய்யாமல் குழந்தை வெளிவந்தது. குழந்தையைக் கண்ட மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.  கை கால் என இல்லாமல் உடலோடும், தலையோடும் மட்டுமே பிறந்து இருந்தாள். நாச்சியார், எம்பெருமாளே என்ன சோதனை இது எனக் கூறியபடி உடல் நடுங்கினார்.

கால், கை குறைவோடு பிறக்கிறவங்க இருக்காங்க, ஆனா இப்படி கால், கை முழுவதுமே இல்லாம பிறக்கிற குழந்தைக அபூர்வம். இதை அமெலியானு சொல்வாங்க. குழந்தையின் இதயத் துடிப்பு எல்லாம் சீராக இருந்தது.

கை, கால் தோன்றும் இடத்தில் கருமை நிறத்தில் புள்ளிகள் மட்டுமே தென்பட்டன.பூங்கோதை மயக்கத்தில் இருந்து தெளியாமல் இருந்தாள். குழந்தையைப் பாதுகாப்பு பண்ணிவிட்டு பரந்தாமனிடம் விபரத்தைச் சொன்னார்கள் மருத்துவர்கள். பரந்தாமன் கண்களில் நீர் திரண்டு வழிந்தது.

உள்ளே சென்று பூங்கோதையை, பிள்ளையை பார்த்தான் பரந்தாமன்.

''நாராயணி'' தழுதழுத்த குரலோடு அழைத்தான். குழந்தை பரந்தாமன் அழைத்தது கேட்டு வாய் அசைத்தது.

பூங்கோதை விழித்தாள். பிள்ளையைக் கண்டதும் ''நான் என்ன பாவம் பண்ணினேன்'' எனக் கண்கள் கலங்கியவள் குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள்.

''குழந்தை நல்லாதான் இருக்கா, கை கால்கள் மட்டும்தான் வளரலை, நீங்க இதை முன்னமே ஸ்கேன் எடுத்து பார்த்து இருந்தா சொல்லி இருப்பாங்க, இவ்வளவு தூரம் விட்டு இருக்க வேணாம்'' மருத்துவர் சொன்னதைக் கேட்கும் மன நிலையில் அங்கே எவரும்  இல்லை.

வசுதேவன் யசோதைக்குத் தகவல் சொன்னார். நாச்சியார் கேட்டுக் கொண்டதன் பேரில் பாமாவுக்கும் தகவல் சொன்னார் வசுதேவன்.

''ஒரு இரண்டு நாள் இங்க தங்கிட்டுப் பிறகு கூப்பிட்டுட்டுப் போங்க'' தன் பேச்சை சட்டை செய்யாமல் இருப்பது கண்டு மருத்துவர் தனியறை ஒன்று தருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

பத்து தலைகள் கொண்ட இராவணன். ஆறு தலைகள் கொண்ட முருகன். நான்கு தலைகள் கொண்ட பிரம்மன். ஐந்து தலைகள் கொண்ட நாகம். எட்டு கைகள் கொண்ட துர்க்கை. நான்கு கைகள் கொண்ட விஷ்ணு. யானை தலை கொண்ட விநாயகர். சிங்கம் தலை கொண்ட நரசிம்மர். இந்த பூமி இப்படி எண்ணற்ற விசயங்களை கேள்விப்பட்டது உண்டு.

''அம்மா, இப்படி ஆயிருச்சேம்மா, இனி அந்தக் குழந்தை வளர்ந்து எப்படிம்மா இந்த உலகத்தில் வாழப் போகுது'' பரந்தாமன் அழுகையை அடக்க இயலாதவனாகச் சொன்னான்.

''நீ கவலைப்படாத, எல்லாம் நல்லபடியாக நடக்கும், நான் போய் கோதை கூட இருக்கேன்''

தாலிடோமைடு எனும் மருந்துதனை காலையில் வாந்தி வருவதை தடுக்க கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டதால் அனைருக்கும் கை கால் குறைபாடு உள்ள குழந்தை பிறந்தது. அதன்பின் உடனடியாக அந்த மருந்து தடை செய்யப்பட்டது. பூங்கோதைக்கு எப்படி இப்படி ஆனது என மருத்துவரால் புரிந்து கொள்ள இயலவில்லை.

''துளசிச் செடியை அந்த பட்டாம்பூச்சி தின்னப்பவே எனக்கு ஒருமாதிரி இருந்துச்சும்மா'' பரந்தாமன் வருத்தம் பொங்கச் சொன்னான்.

''தேவை இல்லாம கண்டதை நினைச்சி குழப்பிக்காதே, நாங்க அந்த குழந்தையை நல்லா வளர்த்துருவோம்''

வசுதேவன் பரந்தாமனை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

யசோதை அவசரம் அவசரமாக மதுரையில் இருந்து கிளம்பி விருதுநகருக்கு செல்ல பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாள். அவள் ஏறிய பேருந்தில் ஒரு இருக்கையில் பாமா அமர்ந்து இருந்தாள்.

பேருந்தில் பாடல் ஒலித்தது.

''ஊனமறு நல்லழகே, ஊறு சுவையே கண்ணம்மா''

பாமாவின் அருகில் வந்தாள் யசோதை.

''பாமா''

பாமாவின் கண்கள் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தது.

(தொடரும்)

Sunday 6 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 16

16. இமேகோ செல்கள்

துளசிச் செடியில் இருந்த அச்சிறு கம்பளிப்பூச்சி தனது தோல்களையே ஒரு கூடு போல உண்டாக்கிக் கொள்ளத் தொடங்கியது. வேறு சில பூச்சிகள் வேறு சில பொருட்கள் கொண்டு புழுக்கூடு கட்டும் ஆனால் பட்டாம்பூச்சி அப்படி இல்லை. ஒரு நல்ல இலையினைப் பார்த்து தலைகீழாகத் தொங்கத் தொடங்கியது. வெகு வேகமாக காற்று அடித்தால் அடித்துச் செல்லப்படும் நிலையைப் பொருட்படுத்தாமல் இலையினை பிடிமானமாகக் கொண்டு தனக்குள் ஒரு பெரும் உருமாற்றத்திற்காக தயார்படுத்திக் கொண்டு இருந்தது.

தினம் நகர தான் சுரக்கின்ற திரவத்தை வைத்துக் கொண்டே கம்பளிப்பூச்சி தன்னை மொத்தமாக கரைக்க ஆரம்பித்து இருந்தது. கம்பளிப்பூச்சியும் இல்லை, பட்டாம்பூச்சியும் இல்லை. பச்சை வண்ண திரவமாக மாறி இருந்தது. தனது உருவத்தையே மொத்தமாக கரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கி, செல்களோடு மட்டுமே இருக்கும் இந்த நிலை இந்த உயிரினத்தின் ஒரு ஒப்புயர்வற்ற நிலை.

இதையே மனித மன வாழ்வுக்கும் சொல்லலாம். எண்ணங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டு ஒரு முழு மனிதனாக உருவாதல். இந்த மனநிலையை நான்கு நிலைகளாகப் பிரித்துச் சொல்லப்பட்டு இருக்கிறது.

நமது அடையாளம் எதுவென அறியாமல் நம்மை நாமே தொலைத்து இருத்தல் ஒரு நிலை. இதுதான் மிகவும் அச்சம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். நிகழ்காலம் புரியாமல் எதிர்காலம் மயங்குகிறது எனச் சொல்வது போன்ற ஒரு நிலை இது. எல்லாவற்றையும் தொலைத்தது போன்ற ஒரு இனம்புரியாத நிலையை சமாளித்துக் கொள்வது என்பது அறிவில், அன்பில் சாத்தியம்.

அடுத்த நிலை எப்படி மழையே இல்லாமல் இருந்த நிலத்தில் மழை பொழிந்து மண் வாசம் உண்டாக்கி அந்த ஒரு மகோத உன்னத மகிழ்ச்சியை உண்டாக்குமோ அது போல நம்மை புதுமைப்படுத்திக் கொள்வது. நமது அனுபவங்கள், பழைய விசயங்களில் இருந்து ஒரு அடையாளம், நமக்கான இலக்கு எதுவென நம்மை நாமே உணர்ந்து அறிந்து கொள்ளும் இந்த நிலை. ஒரு கற்பனை, அதில் இருந்து நமக்கான ஒரு உருவம் என நம்மை செழுமைப்படுத்திக் கொள்ள நமக்கு நிறைய மன உறுதி தேவைப்படுகிறது.

அடுத்து வரும் நிலையே நம்மை எவரென உலகம் அறிந்து கொள்ள வழி செய்யும். ஒரு உற்சாகத்தோடு நம்மை வழி நடத்திட நமது கனவுகளை எல்லாம் நனவாக்கிட நாம் செய்யும் செயல்கள். இந்த நிலையில் எண்ணற்ற எதிர்பாராத பிரச்சினைகள் வந்து சேரும். அதை எல்லாம் தகர்த்து இலக்குகள் நோக்கிய விசயத்தில் மனம் தளராது செயல்படுவது.

இறுதியான நிலையானது நாம் நினைத்த விசயங்களை சாதித்துக் காட்டி உலகம் நம்மை முழுமையாக அறிந்து கொள்ளச் செய்வது. இந்த நான்கு நிலைகளில் ஒவ்வொரு விசயங்களுக்கு நம்மை உட்படுத்திக் கொள்கிறோம். இது மனிதனின் மனமாற்றமான உருமாற்றம் என்று கொள்ளலாம்.

பச்சை திரவத்தில் இருப்பது இமேகோ செல்கள். அவை அதுவரைக்கும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கிறது. அப்படியே அவைகள் அழிந்து போய் இருந்தால் ஒரு பட்டாம்பூச்சி எனும் இலக்கை அவைகள் அடைந்து இருக்காது.

தோலினுள் பச்சை திரவம் வடிவம் ஏதும் எடுக்காமல் அப்படியே இருந்தது. இமேகோ செல்கள் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள விரைவில் துவங்கும்.

பூங்கோதை தனக்கு அவ்வப்போது வலி ஏறுபடுவதாகச் சொல்லிக் கொண்டு இருந்தாள். பாமா தேர்வுகளில் முழு கவனம் செலுத்திக் கொண்டு இருந்தாள். யசோதை மேலும் ஒரு கருத்தரங்கு சென்று உடலில் கை கால்கள் எப்படி உருவாகிறது, அதை எப்படி எல்லாம் நம் வழிக்கு மரபணு மூலம் மாற்றலாம் என அறிவை வளர்த்ததோடு சில முக்கிய நபர்களின் தொடர்பும் பெற்றுக் கொண்டாள்.

இந்த பூமியில் இருக்கும் நீர் எல்லாம் ஒரு காலத்தில் தான் ஒரு மழை என்று அறியாது. பச்சை திரவமாக இருந்த இமேகோ செல்கள் செயல்பாட்டினைத் தொடங்க ஆரம்பித்தது. இதில் ஒரு ஆச்சர்யமான விசயம் என்னவெனில் கம்பளிப்பூச்சியாக இருந்தபோது இருந்த நிகழ்வுகளை எல்லாம் அந்த செல்கள் நினைவில் சுமந்து கொண்டு இருப்பதை ஒரு ஆய்வில் கண்டுபிடித்தார்கள்.

ஒரு பட்டாம்பூச்சி உருவாக ஒவ்வொரு நிலையில் ஒரு வாரம் என குறைந்தது ஒரு மாதம் ஆகிறது. எப்படி துளசிச் செடி இலையில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு தன்னில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள தயார் ஆனதோ அது போல தலைகீழாக தன தலையைத் திருப்பியபடி வெளி உலகுக்கு வருவதற்கு தயாராகிக் கொண்டு இருந்தது பூங்கோதையின் குழந்தை.

அடுத்த சில தினங்களில் வலி அதிகம் இருப்பதாகத் துடித்தாள் பூங்கோதை. பாப்பாத்திதான் உடனே நாச்சியாருக்கு தகவல் சொல்லி வசுதேவன் வாகனத்தை தயார் செய்து விருதுநகர் மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்.

பரந்தாமன் கோவில் கதவு அடைக்கும் நேரம் வரை உருவமாக அங்கே நின்று கொண்டு மனம் எல்லாம் பூங்கோதை மீது நிலைத்து இருந்தது. பாப்பநாயக்கன்பட்டிக்குத் தகவல் சொல்லி கோவிந்தனை கோவிலை மாலை முழுதும் பார்த்துக் கொள்ள தகவல் சொன்னான் பரந்தாமன்.

துளசிச் செடியில் பட்டாம்பூச்சியின் உருமாற்றம் நிகழ்த் தொடங்கி இருந்தது.

(தொடரும்)

Saturday 5 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 15

15. மனித உறவுகள்

பாமாவின் முடிவைக் கேட்டு மிகவும் அச்சம் கொண்டார்கள் அவளது பெற்றோர்கள். பாமா தனது முடிவில் உறுதியாக இருந்தாள். ஏதேனும் ஒன்றை நேசித்தல் என்பது பெரும் வரம், அதிலும் எத்தனை மிரட்டல்கள், துயரங்கள் வந்தாலும் அந்த நேசிப்பை விட்டு விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்வது அதனிலும் பெரும் பேரின்பம்.

''நம்மை விட்டு அங்க போய் இருக்கனும்னு முடிவு பண்ணினப்பறம் நாம என்ன பண்ண முடியும், எப்படியும் கல்யாணம் பண்ணி இன்னொரு குடும்பம்னு போக இருக்கிறவகதானே இப்பவே போகட்டும்'' பாமா மனம் மாறாமாட்டாள் எனும் முடிவுக்கு வந்த தந்தை வராகன் சொன்னார்.

''நீங்க இரண்டு பேரும் என்னோட வந்து இருங்க'' பாமா தனது ஆசையை எவ்வித குழப்பம் இன்றி கொண்டு செல்ல ஒரு யோசனை சொன்னாள்.

''இல்லைம்மா, நாங்க வாராவாரம் உன்னை வந்து பாக்கிறோம், நீ மட்டும் அங்கே போய் இரு, நல்லமுறையா பரீட்சை எல்லாம் எழுது, நல்ல மார்க் எடு அது போதும் எங்களுக்கு'' வராகன் பேச பாமாவை பார்த்த வண்ணம் இருந்தார் ருக்மணி.

''என்னம்மா ஒன்னும் சொல்லலை'' பாமா சொன்ன மறுகணம் பாமாவை கட்டிப்பிடித்து அவளது நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னார் அவளது அம்மா.

''தைரியமா போய் வேலையைப் பாரு, அவர் சொன்ன மாதிரி நாங்க வந்து உன்னைப் பார்க்கிறோம். பல தடவை நீ சில விசயங்களுக்கு தயங்கினப்ப நான் சொன்ன கதைதான். இதே போல ஒரு நிலைமை எனக்கு வந்தப்ப உன்னோட பாட்டிதான் எனக்கு தைரியம் தந்து வெளியூருக்குப் படிக்க அனுப்புனது. ஊருல எல்லோரும் எதுக்கு அவ்வளவு தூரம் படிக்க அனுப்பனும்னு சொன்னப்ப என்னோட விருப்பத்துக்கு ஏத்தமாதிரி நடக்கனும்னு முழு சுதந்திரம் கொடுத்தது உன் பாட்டிதான், அப்படிப்பட்ட அம்மாவோட பிள்ளையா நான் இருந்துட்டு தேவை இல்லாம பயப்படுறது தப்பு''

பாமாவுக்கு அம்மாவை நினைத்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த உலகில் உங்கள் விருப்பம் போல வாழ இயலாமல் போவது பெருஞ்சாபம். எப்பாடுபட்டாவது உங்களது விருப்பம் போல உலகில் இந்த வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.

பாமாவுக்கு பெருமாள்பட்டியும், பெருமாள் கோவிலும் திரும்பத்திரும்ப நினைவில் வந்து போயின. ஸ்ரீரங்கம் செல்கிறேன் எனச் சொல்லிச் சென்ற பாட்டியை மீண்டும் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் மேலிட்டது. தனது தேர்வுகள் முடியும் வரை காத்திருப்பது என முடிவுக்கு வந்தாள் பாமா.

பரந்தாமன் துளசிச் செடிகளின் நிலை கண்டு மிகவும் வருத்தம் கொண்டவன் ஆனான்.

''கோதை, அந்த பட்டாம்பூச்சிக்காக இப்படி இந்த துளசிச் செடிகளை வதைக்கிறது எனக்கு நல்லதாகவே படல. மனசுல என்னமோ ஓடுது. இந்த துளசி செடி இல்லாம வேறு எந்த ஒரு செடியில போய் முட்டை போட்டு வளர்ந்து இருக்கலாம்ல உலகத்தில் இல்லாத அதிசயமா ஒரே ஒரு முட்டை போட்டு அதுவும் துளசிச் செடி இலைகள் எல்லாம் நாசாமப் போகுது''

''உங்களுக்குத்தான் தேவை இல்லாம சஞ்சலம், பெருமாளுக்கு அது பக்கத்தில இருக்க துளசிச் செடி இலைகளை எடுத்துப் போய் தீர்த்தம் பண்ணித் தந்தா ஆகாதுன்னு இருக்கா, எதுக்கு இப்படி கவலைப்படுறீங்க''

''உனக்கும் நம்ம பிள்ளைக்கும் எதுவும் ஆகாம இருக்கனும், அது போதும்''

''உங்க பெருமாளே ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலைதான் தனக்கு உகந்ததுனு சொல்லி இருக்காரு அது போல இந்த பூச்சி உண்ட இலைகளை வேணாம்னா சொல்லப் போறாரு''

''எதுக்கு இப்படி எல்லாம் பேசற கோதை, பல வருசங்களுக்கு அப்புறம் இப்பதான் நமக்கு ஒரு புள்ளை வரப்போகுது இந்த நேரத்தில பெருமாள் மேல எதுக்கு நிந்தனை''

''நான் எங்க நிந்தனை பண்ணினேன், இருக்கிறதைத்தான் சொன்னேன்''

''மனசுக்கு ஒருமாதிரியா இருந்தது கோதை, அதுதான் மத்தபடி ஒன்னும் இல்லை''

''எனக்கும் நான் செத்துப் போயிருவேனோனு நினைப்பு வருது''

பரந்தாமன் தனது கண்கள் குளம் போல நிறைய பூங்கோதையின் வாயினை இரு கைகளால் மூடினான்.

''அப்படி எல்லாம் சொல்லாத கோதை''

பரந்தாமனின் கண்களில் இருந்து நீர்த்துளிகள் கொட்டின.

''என் மேல அவ்வளவு பிரியமா, குழந்தை இல்லாதப்ப கூட என் மேல இத்தனை கரிசனத்தோட இருந்தீங்க''

எதுவும் சொல்லாமல் பூங்கோதையை கட்டிக்கொண்டான் பரந்தாமன். இவ்வாழ்வுதனை அழகுற இரசித்து வாழ்வதற்கு எவரேனும் ஒருவரை அல்ல, நமது மனதுக்கு மிகவும் பிடித்த ஒருவரை எப்போதும் நம்முடனே வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மனிதர்கள் இந்த பட்டாம்பூச்சிகள் போலவே மனமாற்றம் கொள்ளும் நிலையை நான்காகப் பிரித்துக் கொள்கின்றனர். அது பட்டாம்பூச்சிகளின் வாழ்வு சுழற்சி போலவே இருக்கிறது என்பதாக சிலரது எண்ணங்கள்.

பட்டாம்பூச்சியாக உருவெடுக்கும் முன்னர் தனது பழைய தோல்களை பலமுறை கழட்டி எறிந்து அதன்பின் கூடு கட்டி அதனுள் தன்  உடலையே திரவ நிலைக்கு மாற்றி அதில் இருந்து சிறகுகளும், கால்களும் என புதுப்பொலிவைப் பெறுகிறதே பட்டாம்பூச்சி அதுபோல மனிதர்களும் பல்வேறு மனமாற்றங்களுக்கு உட்பட்டு புதுப்பொலிவை பெறுகிறார்கள்.

துளசிச் செடியில் வளரும் கம்பளிப்பூச்சி தனது தோல்களை சிலமுறை கழட்டி போட்டபடி துளசிச் செடி இலைகளை உண்டு வளர்ந்து கொண்டு இருந்தது.

(தொடரும்)


Wednesday 2 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 14

14. தாய்மையின் மனம்

பூங்கோதை பட்டாம்பூச்சி பற்றி சொன்னதும் பாமாவின் இடது தோளில் இருந்து பறந்து போனது பட்டாம்பூச்சி. பாமாவுக்கு பெருமாள்பட்டி மிகவும் பிடித்துப் போனது. தேர்வு முடிந்ததும் பெருமாள்பட்டிக்கே வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் பாமா. நாச்சியார் பாமாவை எண்ணி பெருமிதம் கொண்டார்.

சில முடிவுகள் சூழலுக்கு ஏற்ப எடுக்கப்படுபவைகள். அச்சூழலுக்கு அவை சரியெனப்படும். சூழல் மாறிட எடுத்த முடிவுகள் தவறாகத் தோன்றும். எல்லாச் சூழலுக்கும் அதே முடிவு என்பது அறிவுடைமை ஆகாது, ஆனால் அதைத்தான் நேர்மை, கொள்கைப்பிடிப்பு என்றெல்லாம் சொல்லிக் கொள்கின்றனர்.

பூங்கோதையை மிகவும் கவனமாக இருக்கச் சொன்னார் நாச்சியார். பிள்ளை பெறுதல் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்றெல்லாம் இச்சமூகத்தில் சொல் வழக்கு உண்டு. உயிரில் உயிர் தோன்றி உயிர் பிரித்தல் என்பது பாலூட்டிகளில் மட்டுமல்ல பெரும்பாலான உயிரினங்களில் நடக்கும் ஒன்று.

இதுபோன்ற முதல் கர்ப்பம் தரித்தச் சூழலில் தானும், குழந்தையும் நலமாக இருக்க வேண்டும் என பெண்ணின் மனம் நிறையவே அல்லாடும். இந்த தருணங்களை அழகுற நேசித்தல் பெண்ணுக்குரிய பெருமிதம். இக்கால கட்டங்களை வாழ்நாள் எல்லாம் அசைபோடும் நினைவுகளை சுமக்கும் பெண்ணின் மனம். அதோடு மட்டுமல்ல இனம் புரியாத ஒரு அச்சமும் வந்து சேரும். பூங்கோதைக்கும் அந்த அச்சம் ஏற்பட்டது.

''குழந்தைப் பிறக்கறப்ப நான் செத்துப் போனா என் பிள்ளையை நீங்க கவனிச்சிக்கோங்கம்மா''

பதறிப்போனார் நாச்சியார்.

''கோதை, இப்படி எல்லாம் பேசாத, உனக்கு ஒன்னும் ஆகாது. நல்லபடியா குழந்தையைப் பெத்து பெரிய ஆளா வளர்க்கிற வழியப் பாரு''

''மனசுல என்னமோ தோணிச்சிம்மா'' பூங்கோதையின் மனதில் ஒரு வித வலி.

நாச்சியார், பூங்கோதையின் தலையை வருடியபடி சொன்னார்.

''எதுக்கும் கவலைப்படாத கோதை, உன்னை பெருமாள் கைவிடமாட்டார்''

மனிதர்கள் தரும் நம்பிக்கைகள் எல்லாம் எவ்வித உறுதிப்பாடும் இல்லாதவை. ஆனாலும் இந்த நம்பிக்கைகள் ஒருவித மன நிம்மதியைத் தந்து போகிறது.

''இத்தனை வருசமா என்னை பெருமாள் இந்தக் குழந்தைக்காக காத்திருக்க வைச்சிட்டாரும்மா''

மனதில் ஏற்படும் இரணங்களை சுமந்தபடியே தமக்கு ஒரு விடிவுகாலம் வராதா என ஏங்கியபடியே நாட்களை கடத்துகின்றனர். அவர்களை இச்சூழலுக்கு உண்டாக்கும் எல்லாக் காரணிகளை விட இறைவனே எல்லாவித பொறுப்பும் பெரும்பாலானவருக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். இயக்கம் என்ற ஒன்றைத் தோற்றுவித்து இயங்காமல் இருப்பது என்பது எத்தனை கடினமான செயல்.

பூங்கோதையின் வேதனையை நாச்சியாரால் புரிந்து கொள்ள முடிந்தது.

''இருக்கிற நிலைமைக்கு மகிழ்ச்சியா இருக்கப் பழகிக்கிரனும் கோதை, இப்போவாவது தாயாகும் வாய்ப்பு கிடைச்சதுனு நிம்மதியா இரு''

''இல்லைம்மா, திடீருனு இப்படி தோனுது, அதை மனசில வைச்சிக்க முடியாம உங்ககிட்ட கொட்டிட்டேன்''

''ம்ம், கவலைப்படாத எல்லாம் நல்லா நடக்கும்''

பூங்கோதைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நாச்சியார் பாமாவுக்கென ஒரு வீடுதனை உள்ளூரில் வாடகைக்குப் பார்த்து வைத்தார். நகரங்களில்தான் வாடகைக்கு என விடப்படும் வீடுகள் உண்டு எனில் கிராமங்களில் கூட வாடகைக்கு வீடு விடப்படுவது உண்டு.

வசுதேவனிடம் பள்ளிக்கூடம் குறித்தும், ஆழ்வார் திருநகரி செல்ல வேண்டியது குறித்தும் விரிவாகப் பேசினார் நாச்சியார். வயதான பிறகு இது எல்லாம் தேவை இல்லை என வசுதேவன் மறுத்துவிட்டார். நாச்சியாருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் பாமா நினைவுக்கு வந்து போனாள். பாமா வந்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு ஆழ்வார் திருநகரி செல்லத் திட்டமிட்டார்.

''அண்ணா, இதை எனக்காக பாமா செய்வா, அவளே வழி நடத்துவா, நான் பக்கபலமா இருப்பேன், கோவிலுக்குப் பக்கத்தில சின்ன இடம் கிடைச்சா போதும்ண்ணா''

''ஊர்ல இருக்கிறவங்ககிட்ட பேசி செய்ய வேண்டிய காரியம், நான் கலந்து பேசிட்டு சொல்றேன்மா''

''அண்ணா அப்புறம் ஒரு முக்கியமான விசயம். யசோதை, சுந்தரவேலனை கல்யாணம் பண்ணுவேனு இருக்கா, மாணிக்கவாசகர் பையன்''

இதைக் கேட்ட மறுகணம் வசுதேவன் மிகவும் கோபம் கொண்டார்.

''நான் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கலை, என்ன மனசில நினைச்சிட்டு இருக்கா. எல்லாம் நீ கொடுத்த செல்லம்தான்''

''பதட்டப்படாம அவளோட விருப்பப்படி செய்ற வழியப் பாருங்கண்ணா''

வசுதேவன் இனிமேல் எதுவும் அதிகம் சொல்லக்கூடாது என அமைதி ஆனார்.

''யோசிக்கிறேன்மா''

நாச்சியார், வசுதேவனின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாதவராக இருந்தார். தான் திருமணம் பண்ணமாட்டேன் என்றபோது சரி, உன் விருப்பம் ஆனா உன் மனசு மாறும்னு நினைக்கிறேன் என பல வருடங்கள் காத்து இருந்தார், அதன்பின் தன் மனம் மாறவில்லை என அறிந்ததும் தன் வழி என போய் விட்டார். தான் பெற்ற பிள்ளை என்றதும் நிறைய உரிமை எடுத்துக் கொள்வது போல் நாச்சியாருக்குப் பட்டது.

யசோதையின் ஆசையை நிறைவேற்றுவது நாச்சியாருக்கு மிகவும் முக்கியமாகப் பட்டது. துளசி இலைகளை தினமும் உண்டு தன்னை வளர்த்துக் கொண்டு இருந்தது பட்டாம்பூச்சியாக உருமாற்றம் கொள்ள இருக்கும் அச்சிறு கம்பளிப்பூச்சி.

(தொடரும்)