Monday 28 November 2011

மனைவியின் மயோர்கா 3

கியரின் தலைப்பாகம் இல்லாமல் காரை செலுத்திவிடுவது என எங்கேயும் நிறுத்தாமல் ஹோட்டல் வந்து அடைந்தேன். ஹோட்டலில் அதற்குள் மகனும், மனைவியும் கீழே வந்து காத்து கொண்டிருந்தார்கள். நடந்த விசயம் சொன்னதும் சற்று பயம் அவர்களுக்குள் வந்து சேர்ந்தது.

காலை உணவு ஹோட்டலிலே சாப்பிட்டோம், காலை உணவு நன்றாக இருந்தது.  அங்கே இருக்கும் கார்களில், சாலைகளில்  நமது ஊரில் இருக்கும் கார்களைப் போல, சாலைகளை போல  கிலோமீட்டர் கணக்குதான். சாலைகள் மிகவும் நன்றாக இருந்தன. அதி வேகமாக செல்லும் கார்கள் பயத்தை தந்துவிட்டு போனது. மதிய வேளை வந்தது. ஓரிடத்தில் நிறுத்தினோம். அங்கே இருந்த ஒரு பெரிய கட்டிடத்தை பார்வையிட்டுவிட்டு வீதிகளில் நடந்து செல்ல பெரிய கடைத்தெரு இருந்தது. இந்த கடைகள் எல்லாம் அன்றே முளைத்து அன்றே மறையக்கூடியவை போலிருந்தது. கூட்டம் அலை மோதியது. சில பொருட்கள் ஆசையாக இருந்தது என வாங்கினோம். இந்திய கடைகள் எதுவும் தென்படவில்லை மாறாக ஆப்பிரிக்கா போன்ற நாட்டு கடைகள் இருந்தன. தனித் தொழில் திறமையுடைய மனிதர்கள் ஆங்காங்கே அமர்ந்து படங்கள் வரைந்து கொண்டு இருந்தார்கள்.








வெவ்வேறு நாடுகளின் அழகிய பொருட்கள் விற்பனைக்கு இருந்தது. மதிய வேளையில் அங்கே இருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சுற்றுவழி மூலம் நாங்கள் தங்கும் இடம் வந்து சேர்ந்தோம். மாலை வேளையில் நடந்து நாங்கள் தங்கி இருந்த இடத்தை நடந்தே சுற்றி பார்க்க சென்றோம்.

அப்போது இரண்டு இந்திய உணவகங்கள் தென்பட்டன. ஒரு உணவகத்தில் சாப்பிட்டபோது அங்கே இருந்த பையன் நன்றாக பேசினான். வட இந்திய நாடு எனவும், வந்து சில வருடங்களே ஆனது எனவும் சொல்லிக் கொண்டிருந்தான். சாப்பாடு மிகவும் பிரமாதமாக இருந்தது. ஆங்காங்கே இருந்த கடைகளைப் பார்த்துவிட்டு ஹோட்டல் திரும்பினோம்.

அடுத்த தினம் வேறு வழியாக பயணத்தை செலுத்தினோம். இந்த முறை மிகவும் அபாயகரமான சாலை ஒன்று உள்ளது எனவும் அதில் சென்றால் நாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருந்து மறுகோடியில் இருக்கும் பகுதியை பார்க்க முடியும் என்பதால் சற்று பயத்துடனே கிளம்பினோம். முதலில் கடலில் நிறுத்தப்பட்ட படகுகளைப் பார்த்துவிட்டு சின்ன கிராமங்களைப் பார்க்க கிளம்பினோம்.

இந்த சின்ன சின்ன கிராமங்களை தொடாமல் நேராக அந்த அபாயகர பகுதிக்கு செல்லலாம் எனினும், மயோர்காவில் பல இடங்களை பார்த்து விட வேண்டும் எனும் ஆர்வத்தில் கிராமங்களைத் தொட்டு சென்றோம். அங்கே கைவினைப் பொருட்கள் விற்று கொண்டிருந்தார்கள். மிகவும் அருமையான இடங்களாக தெரிந்தது.




மலைகளின் ஊடே போடப்பட்டிருந்த பாதையில் சென்ற பயணம் மிகவும் அருமையாக இருந்தது. சில இடங்களில் எல்லாம் பயத்துடனே வாகனம் செலுத்த வேண்டி இருந்தது. மூணாறு சென்றபோது வந்த பயம் இங்கேயும் வந்து சேர்ந்தது. அழகிய இயற்கை காட்சிகள் என அதி அற்புதமாக மயோர்கா காட்சி தந்து கொண்டிருந்தது. சில ஊர்களில் அத்தனை பெரிய வசதிகளோ, தொழிற்சாலைகளோ இல்லை. அவர்களின் தொழில் என்ன, எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நினைத்தாலும் இயற்கையும், அதன் காட்சிகளும் கவிதை சொல்லிக் கொண்டிருந்தன.

சில பாதைகளில் எல்லாம் செல்ல முடியாது என வழிகாட்டி சொல்லிக் கொண்டிருந்தது. மீறியும் அந்த சாலைகளில் எல்லாம் பயணம் செய்தோம். இந்த பாதை மிகவும் அபாயகரமானது என எச்சரிக்கை எழுதப்பட்டு இருந்தது. அந்த பாதையில் சென்றால் தான் மலை உச்சியை அடைந்து அங்கே இருந்து கடலை பார்க்க இயலும்.

இத்தனை தூரம் வந்துவிட்டு பார்க்காமல் திரும்பி செல்வதா எனும் யோசனையுடன் ஓரிடத்தில் காரினை நிறுத்தினோம்.

(தொடரும்)

Thursday 24 November 2011

ஒழுக்கம்

எத்தனையோ வருடங்கள் முன்னர் கவிஞர் வைரமுத்து சொன்னதாக ஒருவர் என்னிடம் சொன்னது இன்னும் மனதில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கிறது. அவர் உண்மையிலேயே அப்படி சொன்னாரா என்பதை இப்போது அவரிடம் கேட்டால் அவர் மறந்து இருக்க கூடும். ஒரு நல்ல கவிஞர், ஆனால் நடிகைகள் பற்றி எதற்கு அப்படி சொன்னார், உண்மையிலேயே சொல்லி இருப்பாரோ என எண்ணும் போது அந்த கவிஞரை நடிகை சிம்ரனை பற்றி இணைத்து பேசிய செய்தி கசிந்தது. 

நடிகையாக என்ன தகுதி வேண்டும் என கேட்டால் தகாத உறவுக்கு தயாரானவராக இருக்க வேண்டும் என்றுதான் பலர் மனதில் சொல்லிக்கொள்கிறார்கள். குடும்ப பாங்கான படங்களில் நடித்தவுடன், ஓரளவுக்கு புகழ் பெற்றவுடன் ஒரு நடிகை தனது முந்தைய வரலாற்றினை அழித்துவிடுகிறார் எனும் குற்றச்சாட்டு உண்டு. இதன் மூலம் ஒரு நடிகை என்றாலே எத்தனை கேவலமான எண்ணம் மக்களின் மனதில் உள்ளது என்பதை அறியலாம். விலைபொருட்கள் போலவே நடிகைகள் நடத்தப்படுகிறார்கள் எனும் பொதுவான குற்றச்சாட்டு உண்டு. இந்த நடிகைகள் குறித்து ஒருமுறை நாளிதழ் ஒன்று வெளியிட்டதை எதிர்த்து பெரும் போராட்டமே வெடித்தது. நடிகைகளும்  சாதாரண பெண்மணிகள் எனும் எண்ணம், சகோதரத்துவம் போன்றவை பொதுவாக ஒரு பாமரனிடம் எழுவதில்லை. 

ஒரு நடிகையின் கதை என குமுதம் ஒன்றில் வந்த தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது எல்லாம் கற்பனை, அந்த தொடருக்கு தடை விதிக்க போராடி வருகிறோம் என அரசியல் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அன்று என்னிடம் சொன்னது இன்றும் நினைவில் உள்ளது. அவர் சொன்ன ஓரிரு வாரங்களில் தொடர் நின்று போனது. 

சமீபத்தில் கூட கவிஞர் வாலி ஒழுக்கமில்லாத துறை திரைத்துறை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த திரைத்துறையில் வெகு சிலரே ஒழுக்கத்துடன் இருக்கிறார்கள் என்று அவர் சொன்னது குறித்து எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவில்லை. மது உட்கொள்தல் ஒழுக்க கேடு என கவிஞர் வாலி நினைக்கிறார் போலும். 

கிசுகிசுக்கள் அதிகம் உலவும்  துறை திரைத்துறை தான். இரண்டு மூன்று படங்களில் ஒரே நடிகர், நடிகை சேர்ந்து நடித்தால் காதல் என கிசுகிசுக்கப்படுகிறார்கள். அதற்கு அலங்காரம் செய்வது போல சில நடிகை, நடிகர்கள் செயல்படுவது உண்மைதான்.  இயக்குனர்கள் சேரன் மற்றும் தங்கர்பச்சான் மீது பொய்யான கற்பழிப்பு வழக்கு போடப்பட்டதாக செய்திகள் உலவின. தற்போது பிறிதொருவரின் மனைவியை, குழந்தையை கடத்தியாக கவிஞர் சினேகன் மீதான குற்றச்சாட்டு. அரசியல் பலத்தினாலும், சொந்த செல்வாக்கினாலும் நடிகை சோனா சொன்ன பாடகர் எஸ் பி பி மகன் சரண் மீதான குற்றச்சாட்டு ஒன்றும் இல்லாமல் போனது. நடிகைகள் பற்றிய படம் எடுத்தால் என்ன ஆகும் என்கிற பயம் பலருக்கும் இருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை திருமணங்கள், விவாகரத்து என எதிர்கொண்டது திரைத்துறையில் உள்ளவர்கள் என அறியலாம். 

நடிகர் கமல்ஹாசன், நடிப்பு என சொல்லிக்கொண்டு இவர் நடிகைகளிடம் பண்ணும் அட்டகாசம் பெருமளவில் ரசிக்கப்படுவது உண்டு.  தன்னை தானே ஒழுக்கம் கெட்டவன் என தைரியமாகவே சொல்லக்கூடியவர் இவர் என சொல்கிறார்கள். இவர் மட்டும் காந்தியை போன்று சத்திய சோதனை எழுதினால் திரை உலகம் சந்தி சிரித்துவிடும் என சொல்பவர்கள் உண்டு. நடிகர் ரஜினிகாந்த் பற்றியும் நடிகை அமலா பற்றியும் கூட வேலைக்காரன் படத்தின் போது அரசல் புரசலான செய்திகள் பரவியது உண்டு. 

சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அமலா பால் இடையே தகாத உறவு இருந்ததால் தான் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என ஒரு இணையம் எழுதி இருந்தது. சமீபத்தில் நடிகை ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தா சாமியார் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியது. நடிகர் சிம்பு, நடிகர் பிரபுதேவா, நடிகை நயனதாரா விவகாரங்கள் திரையுலகின் ஒழுக்கம் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பின. 

இப்படி இருக்க திரைத்துறையில் பேசப்படும் இதெல்லாம் எந்தளவுக்கு உண்மை? உண்மையிலேயே திரைத்துறை ஒழுக்கம் கெட்டதா? எல்லா துறைகளிலும் ஒழுக்க கேடு என்பது கொஞ்சம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் என பாலியல் வன்முறைக்கு உட்படும் பெண்கள் மூலம் அறியலாம். ஆனால் இந்த திரைத்துறையில் நடிப்பு என்ற போர்வையில் பாலியல் வன்முறைக்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாகவே வெளியில் இருப்போர்க்கு தென்படுகிறது. மேலும் திரைத்துறை பெருமளவு மக்களால் பார்க்கப்படுவதால், ரசிக்கப்படுவதால் அங்கே நடக்கும் சில விசயங்கள் பூதகாரமாக்கப்படுகின்றன. அவரவர் கற்பனைக்கேற்ப தவறான கண்ணோட்டம் பரப்பப்படுகிறதோ என அச்சம் நிலவுகிறது. 

அப்பொழுதெல்லாம் நினைவு வரும், எங்கிருந்து இந்த கற்பனைவாதிகள் புறப்படுகிறார்கள் என! உறவுகள் குறித்து எதற்கு ஒரு தவறான கண்ணோட்டம் நமது தமிழ் மக்களிடம் வந்து சேர்ந்தது. புறம் பேசுதல் குறித்து இலக்கியங்கள் அதிகமாகவே பேசுகிறது. ஒழுக்கம் கெட்ட விசயங்களின் அடிப்படையில் இதிகாசங்கள், இலக்கியங்கள் உருவாகி இருக்கின்றன. 

இது அவரவர் தனிப்பட்ட பிரச்சினை என எவரும் விடுவதில்லை. ஊரெல்லாம் இவர்கள் பற்றி தெரிவதால் நமட்டு சிரிப்புடன், பரிகாச பார்வையுடன் இவர்களைப் பற்றி பேசுகிறார்கள். அதே வேளையில் கவிஞர் கண்ணதாசன் போல எவரும் தன்னைத்தானே இந்த திரையுலகில் மட்டுமல்ல உலகில்  நிர்வாணப்படுத்தி கொள்ள முன்வருவதில்லை. 

திரைத்துறையில் ஒழுக்கம் இல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை பின்பற்றும் ரசிகனும், ரசிகையும் அதிகமாக தமிழகத்தில் இருக்கிறார்கள் எனும் போது மொத்த தமிழகமே ஒழுக்கம் கெட்டதோ எனும் கேள்வி எதற்கு எழுவதில்லை. 

திருவள்ளுவர் அற்புதமாக சொல்கிறார் 

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். 

அதாவது ஒழுக்கம் உடையவர்கள் தவறியும் கூட தகாத வார்த்தைகளை சொல்லமாட்டார்களாம்! 

வள்ளுவர் சொல்வதைப் பார்த்தால் அத்தகைய ஒழுக்க நெறி இந்த உலகில் மிகவும் குறைவாகவே இருக்கிறது எனலாம். எனவே ஒழுக்கம் கெட்டதுதான் திரைத்துறை என சாலமன் பாப்பையா அங்க வை, இங்க வை என தீர்ப்பு கூறலாம். 

போதைப் பொருளால் கசங்கிய பெண்

இப்ஸ்விச் எனும் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஊரில் வசித்து வந்தாள் அந்த பெண். அழகிய மேனி. பளபளக்கும் கண்கள். வாழ்வில் சாதிக்க வேண்டும் எனும் வெறி. பள்ளிபடிப்பு, கல்லூரி எல்லாம் கடந்து தனக்குப் பிடித்தவரை மணமுடித்து தொடங்கிய இந்த பெண்ணின் வாழ்க்கையில் புதிதாய் வந்தான் ஒருவன்.  பிரேசில் நாட்டில் வசித்து வந்தான். மாநிறம். பண வெறி. நீண்ட மூக்கு. 

இருவருக்கும் இணையம் மூலம் மெதுவாக தொடங்கிய நட்பு, ஒரு சில மாதங்களில் அவனை இவளது வீட்டுக்குள் வரவைத்தது. இவளது குடும்பத்தில் நல்ல நண்பன் ஆனான். இங்கிலாந்து வருவதும் போவதுமாய் சில வருடங்கள் இருந்தான். வர இயலாத காலங்களில் தொலைபேசி மூலம், இணையம் மூலம் தொடர்பு கொண்டு இருந்தான். இவர்களுக்குள் எவ்வித தவறான பழக்கங்களும் இல்லை. எவ்விதமான சண்டை சச்சரவு என எதுவும் இல்லை. கணவன், மனைவியின் நட்பினை வெகுவாக சம்பாதித்தான். ஐந்து வருடங்கள் அதற்குள் கடந்து இருந்தன.

சில வருடங்கள் பிரேசில் நாட்டுக்கு அழைத்து இருக்கிறான். அப்பொழுது இவளால் செல்ல வழியில்லாமல் இருந்தது. மறுமுறையும் அழைத்தான். 

'பிரேசில் நாட்டினை சுற்றிப் பார்க்க வருகிறாயா, எனது மனைவி, குழந்தைகள் உன்னைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள்' என்றான்.

'சரி வருகிறேன்'

பெண்ணின் கணவன் பலமுறை தடுத்தும் கேளாமல் இந்த பெண் பிரேசில் நாட்டுக்கு சென்றாள். அங்கே விமான நிலையத்தில் இவளை வரவேற்க அவன் இல்லை. அவனது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது அது உபயோகத்தில் இல்லை என வந்தது. கலங்கியபடியே நின்றாள்.

சிறிது நேரம் கழித்து தொடர்பு கொண்டபோது ஒரு மார்கெட் இடத்திற்கு வர சொன்னான். அங்கே சென்று பார்த்தபோது அவனுடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். 

மொழி தெரியாத ஊரில் வேதனையுடன் தான் கழித்த நேரங்களை சொல்லியவள் 'எங்கே மனைவி, பிள்ளைகள்?' என்றாள்.

'வீட்டில் இருக்கிறார்கள், பிறகு அழைத்து செல்கிறேன் என தன்னுடன் இந்த பெண்ணை அறிமுகப்படுத்தினான்' 

'நான் சில பொருட்கள் ஊருக்கு செல்ல வாங்க வேண்டும்' என இந்த பெண் சொன்னதும் 'இவளை அழைத்துக் கொண்டு போ, நான் ஒரு விசயமாக வேறு இடம் செல்ல வேண்டி இருக்கிறது' என சென்றான். 

பல பொருட்கள் வாங்கியவள் அவனை தொடர்பு கொண்டபோது தொடர்பில் இல்லை. வழக்கம் போல சிறிது நேரம் பின்னர் நீங்கள் இந்த ஹோட்டல் அறைக்கு சென்று தங்குங்கள், எனது மனைவியும் குழந்தைகளும் இப்போது அவர்களது தந்தை ஊருக்கு சென்று விட்டார்கள். வர எப்படியும் சில மாதங்கள் ஆகும் என்று சொன்ன விசயத்தை கேட்டு ஏமாந்து போனாள். 

அதன்படியே அவன் வந்தான். வந்தவன் தன்னிடம் இருந்த பையை தந்தவன் அனைத்து பொருட்களையும் இந்த பையில் வைத்து செல், இந்த பையானது ஒரு வகை மரத்தினால் ஆனது, எனவே சற்று வாடை அடிக்கும், அதைப் பற்றி கவலைப்படாதே, உனக்காக வாங்கி வந்தேன் என தந்துவிட்டு சில இடங்களை காட்டிவிட்டு ஊருக்கு அனுப்பி வைத்தான். இப்படி வாடை அடிக்கிறதே என அவள் சுதாரிக்க வில்லை. இதற்கு முன்னர் போதைப் பொருள் பழக்கம் இல்லாததால் எப்படி இருக்கும் எனும் சிந்தனை அவளுக்கு இல்லை. 

விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டபோது அந்த பையினுள் போதைப்பொருள் வைக்கப்பட்டு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைக்கேட்ட மறுநிமிடமே இவள் மயங்கி விழுந்தாள். தன்னை ஏமாற்றிவிட்டானே என மனதுக்குள் புலம்பினாள். விமான சோதனை அதிகாரிகளிடம் எத்தனையோ முறை சொல்லியும் அவளை விடவில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் புரியாத காரணம் வேறு. 

தனக்கும், போதைப்பொருளுக்கும் சம்பந்தம் இல்லை என அழுது பார்த்தாள், எதுவும் நடக்கவில்லை. அவளை சிறையில் அடைத்தார்கள். அவளிடம் காவல் அதிகாரிகள் தவறாக நடக்க முயன்றார்கள். அத்தனை வேதனைகளையும் சுமந்து கொண்டு எப்படியாவது தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என ஆங்கிலம் தெரிந்த ஒரு அதிகாரியிடம் பேசிப் பார்த்தாள். ஆனால் எவரும் இவளை நம்புவதாக இல்லை. கதறினாள். கெஞ்சினாள்.

விசயம் கணவனுக்கு தெரிந்தது. தன்னுடன் ஒரு வழக்கறிஞர் ஒருவரை அழைத்து வந்து பேசிப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. இவளுடன் பழகியவன் மாயமாக மறைந்து இருந்தான். தான் கொடுத்தனுப்பிய பொருள் கிடைக்காதது கண்டு சுதாரித்து கொண்டான். 

கணவனும் வழக்கறிஞரும் ஒரு திட்டம் தீட்டினார்கள். மருத்துவமனைக்கு அவளை கொண்டு சென்று அங்கே இருந்து அவளை தப்பிக்க சொல்லி ஒரு போலி பாஸ்போர்ட் உருவாக்கி இங்கிலாந்து சென்று விடலாம் என நினைத்தார்கள். இவளுக்கு அந்த தைரியம் வரவில்லை. மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட முடியாமல் தவித்தாள். தனக்கு தைரியம் வரவில்லை என மீண்டும் சிறைக்கே சென்றாள். இனிமே வாழ்க்கையே சிறையில் தான் என எண்ணி வேதனையுற்றாள். கணவனும் ஒன்றும் செய்வதறியாது திரும்பினார்.

நமது ஊரில் சில தலைவர்கள் பிறந்த நாள் வரும்போது சில கைதிகளை வெளியிடுவது போல அந்த ஊரிலும் செய்யும் வழக்கம் உண்டு. அப்படி ஒரு நாள் வந்தது. அந்த நாளில் இவளையும் விடுதலை செய்தார்கள். தப்பித்தோம் பிழைத்தோம் என இங்கிலாந்து வந்தபோது அதிர்ச்சி காத்து இருந்தது.கணவன் தனது வாழ்க்கை சீரழிந்து போனதாக இவளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

போதைப் பொருட்கள் பக்கமே தலைவைத்து படுக்காதவர் நட்பு எனும் போதையினால் தனது வாழ்க்கையையே தொலைத்தது மிகவும் கொடுமையான விசயம். 

எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என எவராலும் கண்டு கொள்ள முடிவதில்லை. நட்புகளே, உறவுகளே நாம் பல வருடங்கள் ஒருவருடன் பழகி இருந்தாலும் மிக மிக எச்சரிக்கையாக இருப்பது நமது பொறுப்பு. 

Wednesday 23 November 2011

முஸ்லீம் வீட்டு திருமணம்

மதம் சார்ந்து மனிதர்கள்  வாழ ஆரம்பித்த பின்னர் மதம் எதற்கு என கேட்பவர்கள் சற்று வெளியே நின்று வேடிக்கைப்  பார்க்கவும். 

நான் அடிப்படையில் ஒரு இந்து மதம் ஒட்டிய சமூகத்தை சேர்ந்தவன். எனது உறவினர்கள், உற்றார்கள் என அனைவரும் இந்து மத சமூகத்தை சார்ந்தவர்கள். 

இதற்காக நான் முஸ்லீம் வாத்தியாரிடம் படிக்கமாட்டேன் என்றோ, கிறிஸ்துவ வாத்தியாரிடம் படிக்க மாட்டேன் என்றோ அடம் பிடித்தது கிடையாது. 

என்னுடன் இந்து சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே பழக வேண்டுமென ஒரு கட்டாயம் கொள்வதும் கிடையாது.

இந்து சமூகத்தை சார்ந்தவன் என்றாலும், பிற மத சம்பிராயதங்களை அதனதன் பாட்டுக்கு விடுவதில் மட்டுமே எனக்கு உரிமை உண்டு. அதை சகட்டுமேனிக்கு விமர்சிக்க எனக்கு எவ்வித உரிமையும் கிடையாது. 

இப்படி ஒரு மதத்தை சார்ந்து வாழ்வது எனினும், அனைவரும் மக்கள் என்கிற உணர்வு இருக்கும் என்கிற படசத்தில் இந்த மதங்களே அவசியம் இல்லை என்றாகிவிடுகிறது. ஆனால் இந்த மதங்கள்  ஒரு சாத்திர சம்பிராதய அடையாளங்களாக இருந்து வருவதை  மாற்றுவது சற்று கடினமானது. 

என்னுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தோழி ஒருவர் முஸ்லீம் மதத்தினை சார்ந்தவர் என்பதை அறிய கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிப்போனது எனக்கு. பொதுவாகவே பெண்களிடம் கலகலப்பாக நான் பேசுவது இல்லை. மேலும், ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் எனக்கு அத்தனை இல்லை. 

நான்கு வருடங்கள் பின்னர் தான் எனது ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பெண் இருவரும் கணவன் மனைவி என்பதே எனக்கு தெரிய வந்தது. 

இப்படியெல்லாம் இருக்க இந்த தோழி எனக்கு நல்ல பழக்கமானாள். அப்பொழுதுதான் இவளது திருமணம் நிச்சயிக்கப்பட போவதாகவும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற போவதாகவும் சொன்னாள். திருமண பேச்சு பற்றிய விபரம் தெரிந்த பின்னரே இவர் ஒரு முஸ்லீம் என தெரிய வந்தது. அதோடு மட்டுமில்லாமல் நான் சில வருடங்களாக உதவி புரிந்த மற்றொரு பெண் முஸ்லீம் என தெரிய வந்தது. 

முஸ்லீம் என்றால் பர்கா போட்டு இருக்க வேண்டும் போன்ற சட்ட திட்டங்கள் இல்லாமல் இவர்கள் சாதாரணமாக இருந்ததால் இவர்கள் எந்த மதம் என எவராலும் கண்டுபிடிக்க இயலாமல் போனது. இப்படித்தான் அடையாளங்கள் ஏதும் நாம் அணியாமல் போனால் நமக்கு மத முத்திரை குத்தப்படமாட்டாது. மேலும் மதம், கடவுள் பற்றிய விசயங்களை எவரும் ஆய்வகங்களில் அத்தனை பெரிதாக விவாதித்தது இல்லை. 


நான் சில நாட்களாக தாடி வளர்த்து இருந்தேன். சில தினங்கள் முன்னர் கோவிலுக்கு சென்றபோது அங்கிருந்த சிவாச்சாரியார், ஐயப்பனுக்கு மாலை போடப் போறீங்களா என கேட்டார். இல்லையே என சொன்னபிறகுதான் தெரிந்தது, அட தாடி. பிறகுதான் தெரிந்தது இந்த தாடி முஸ்லீம்களின் அடையாளம் என.

சில மாதங்களுக்கு முன்னரே திருமணத்திற்கு வருகிறோம் என இவரிடம் உறுதி கொடுத்தாகிவிட்டது. இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்னர் திருமணம் நடக்க இருக்கும் ஊரை அடைந்தோம். ஒரு ஹோட்டலில் அன்று இரவு தங்க அறை எடுத்து இருந்தோம்.

மதியம் மூணு மணிக்கெல்லாம் சென்று விட்டதால் அந்த ஊரை சுற்றிப் பார்க்க சென்றோம், எங்கு பார்த்தாலும் ஆசிய மக்கள். சரவண பவன், சென்னை தோசா, என தமிழ்கடைகள் இருந்தன. சற்று தள்ளிப் போனால் இண்டிகோ, பீஸ்ட் இந்தியா என்றெல்லாம் கடைகள். நான்கு மணி ஆகி இருந்தது, சாப்பிட வேண்டும் என மனைவியும் மகனும் விரும்பியதால் இண்டிகோ ஹோட்டலில் சாப்பிட்டோம். இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் திருமணத்திற்கு சென்றுவிடுவோம், அங்கு சென்று சாப்பிடலாம் என நினைத்து இருந்ததால் குறைவாகவே சாப்பிட்டேன்.

சில கடைகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு, லண்டனில் இல்லாத துணி எல்லாம் இங்கே இருக்கிறது, மறுமுறை இந்த ஊருக்கு வர வேண்டும் என நினைப்புடன் ஹோட்டலுக்கு சென்று இந்திய உடையில் ஏழு மணி முப்பது நிமிட திருமணத்திற்கு ஆறு மணி நாற்பத்தினைந்து நிமிடத்திற்கு சென்று விட்டோம்.

மிகப்பெரிய கட்டிடம், அழகாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வெகு சிலரே ஆங்காங்கே அமர்ந்து இருந்தார்கள். எங்களை சைவம் என குறிப்பிட்டு இருந்த ஒரு மேசையில் அமர வைத்தார்கள். எனது வேலை பார்க்கும் இடத்தில் இருந்து நண்பர்கள் வர இருப்பதாக சொன்னார்கள், ஆனால் எவரையும் காணவில்லை. மணமேடை போடப்பட்டு இருந்தது. ஆனால் அங்கே யாரும் இல்லை. மணி ஏழு முப்பது தொட்டது. மணமேடையில் எவருமே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வந்து சேர்ந்தார்கள். யார் எந்த மதத்தினர் என அடையாளம் காண இயலவில்லை. தோழியின் அம்மாவும், அப்பாவும் எங்களை வரவேற்பு செய்து விட்டு போனார்கள். தாடி முஸ்லீம்களின் அடையாளம் அல்ல, தனி மனிதர்களின் விருப்ப அடையாளம் என புரிந்தது.

மணி எட்டு ஆனது. எனது நண்பர்கள் வந்தார்கள், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மேசையில் சென்று அமர்ந்து கொண்டார்கள். மணி எட்டு முப்பது தொட்டது. திருமண மேடை அப்படியேதான் இருந்தது. அப்பொழுதுதான் அப்பளம் வைத்து விட்டு போனார்கள். அப்பாடா என இருந்தது, அதுவரை தண்ணீர், மற்றும் பழச்சாறு மட்டுமே! நல்லவேளை சாப்பிட்டோம் என நினைத்து கொண்டோம்.

இந்த வேளையில் எங்களது மேசையில் எவருமே அமர வரவில்லை. இரண்டு வாலிபர்கள், அவர்களது அம்மா வந்தார்கள். இது சைவ மேசை என்றதும், இன்னும் எத்தனை மேசை மாற வேண்டுமோ என எழுந்து சென்றார்கள். அதன் பின்னர் ஒரு கணவர், மனைவி வந்தார்கள். ஆனால் அவர் முஸ்லீம் என பார்த்தவுடன் அடையாளம் சொல்ல இயலவில்லை. அவர் எங்களுடன் பேசினார். அப்பொழுதுதான் முஸ்லீம் திருமணம் குறித்து பல விசயங்கள் சொன்னார். இத்தனை நேரமாகிறதே என்றபோது குடும்பத்தை பொறுத்தது என்றார். எனது கல்யாணம் இங்குதான் நடந்தது, சரியான நேரத்தில் நடந்து முடிந்தது, மேலும் முஸ்லீம்களில் வெவ்வேறு சமூகம் உண்டு என சொல்லிக் கொண்டார். எனது தோழி இருக்கும் சமூகத்தில் அத்தனை கட்டுப்பாடு இல்லை எனவும், ஆனால் மணமகனின் சமூகம் மிகவும் கட்டுப்பாடானது என்று சொன்னார்.

அப்பொழுது மணமகன் வந்துவிட்டார் என அறிவிப்பு வந்தது. நிறைய மேசைகள் மண மேடையின் அருகில் காலியாகவே இருந்தது. நாங்கள் கூட என்ன இப்படி இருக்கிறதே என நினைத்து இருந்தோம். சிறிது நேரத்தில் மணமகனுடன் பெரிய பட்டாளமே வந்து இறங்கியது. அனைவரும் சென்று அமர அனைத்து மேசைகளும் நிறைந்தன. தோழியை காணவே இல்லை. பாகிஸ்தான் பேருந்து ஒன்றில் மாப்பிள்ளை வந்து இறங்கினார் என பேருந்தினை காண ஓடினோம். பேருந்து அலங்கரிக்கப்பட்டு அருமையாக இருந்தது.

மணமகன் மேடைக்கு செல்லவே இல்லை. சிறிது நேரத்தில் மணமகனுடன் பலர் இணைந்து முதல் மாடிக்கு சென்றார்கள். மணி பத்து ஆகிவிட்டது. சிறிது நேரம் முன்னர் தான் ரொட்டியும், காய்கறி வகைகளும் கொண்டு வந்து வைத்தார்கள். நாங்கள் சைவ மேசை என அமர்ந்து இருக்க அசைவம், சைவம் என எல்லாம் கொண்டு வந்து வைத்தார்கள். மனிதர்களால் எங்கள் மேசையும் நிறைந்துவிட்டது.

மணமேடையில் திருமணம் நடக்கும் என நினைத்தால் திடீரென திருமணம் முடிந்துவிட்டது என சொன்னார்கள். மாடியில் நின்று படம் எடுத்து கொண்டிருந்தார்கள். பக்கத்தில் அமர்ந்து இருந்த பெண்மணியிடம் விசாரித்தோம். இமாம் என்பவர் இந்த திருமணத்தை கீழே நடத்த சம்மதிக்கவில்லை, அதனால் மாடிக்கு சென்று நடத்தி இருக்கிறார் என்றார். எங்கே மணமகள் என்றோம்? மணமகள் வர தேவையில்லை. மணமகளிடம் தனியாக சம்மதமா என மூன்று முறை கேட்பார்கள், சம்மதம் சொன்னதும் இரண்டு நபர் சென்று சம்மதம் சொல்வார்கள். திருக்குரானில் ஒரு பகுதி ஓதப்படும். பின்னர் இருவருக்கும் விவாகரத்து நடந்தால் மணமகளுக்கு எவ்வளவு பணம் தருவது குறித்து பேசி ஒரு கையொப்பம் இடுவார்கள். மணமகன் தரும் வரதட்சணை. இந்த பணம் உடனே தர வேண்டிய அவசியம் இல்லையாம்.

அப்படி கையொப்பம் இட்டவுடன் திருமணம் முடிந்ததாக அறிவிக்கப்படும் என்றார். எனக்குள் ஒலித்தது திருமணம் நடக்கும் முன்னரே விவகாரத்தா? அதற்கேற்றார்போல முஸ்லீம்கள் மிகவும் பிராக்டிகலாக இருக்க விருப்படுகிறார்கள், திருமண வாழ்வில் எதுவும் நடக்கும் என்பதால் பெண்ணுக்கு பாதுகாப்பு கருதி இவ்வாறு செய்கிறார்கள் என்றார். அது அந்த காலத்து சம்பிராதயம் என்றே தோன்றியது. ஏனெனில் அந்த காலத்தில் முஸ்லீம் பெண்கள் வேலைக்கு செல்வதில்லை, எனவே அவரது குடும்பம் கணவனை நம்பியே இருக்கும், அதனால் இப்படி ஒரு சட்டம் இருக்கலாம் என தோன்றியது.

பின்னர் மணமகன் மேடையில் அமர, மணமகள் வந்தார். அதற்குள் சோறு, சாம்பார் என சாப்பிட்டு முடித்து இருந்தோம். மணி பதினொன்று மேல் ஆனது. வாழ்த்துகள் தெரிவித்து விட்டு ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

புரோகிதர், யாகம் வளர்த்தல், மந்திரம் செபித்தல் என எதுவும் இல்லாமல் இந்துக்கள் நடத்தும் சீர்திருத்த கல்யாணம் என்பது முஸ்லீம்களின் கல்யாணம் தான் போல.

எங்களை இந்து என்று எவருமே அடையாளம் காணவில்லை. :) மதம் நமக்கு அவசியமில்லாத ஒன்று என்பது எனக்கு மிகவும் அழுத்தமாகவே புரிந்தது. 

Monday 21 November 2011

ஒரு சினிமா தயாரிப்பாளரின் பைத்தியகாரத்தனம்

திருமோகூர் கோவிலில் சரியாக சொன்னபடி ஏழு மணிக்கு அனைவரும் திரண்டார்கள். பக்கத்து ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து இருந்தார்கள்.

வேல்முருகன் கம்பீரமான குரலில் பேசத் தொடங்கினான். 

'இந்த படம் எடுக்க குறைஞ்சது ஒரு வருடம் ஆகும். நீங்க எல்லாம் இந்த ஊர்லதான் இருக்கனும். உங்களுக்கு தினமும் வேலை இருக்கு. யார் யாருக்கு என்ன சம்பளம், எப்படியெல்லாம் படம் எடுக்க போறோம் அப்படிங்கிற விவரம் எல்லாம் இந்த டாகுமென்ட்ல இருக்கு. இதை எல்லாம் படிச்சி பாருங்க. சுருக்கமா சொல்ல போனா பதினைஞ்சி ஏக்கர் தரிசு நிலத்தை நீங்க எல்லாரும் சேர்ந்து பண்பட்ட நிலமா மாத்தி அதுல விவசாயம் செய்யனும். அந்த நிலத்துல சாகுபடி பண்ணனும், அது ஒரு போகமா இருக்கலாம், அல்லது ரெண்டு போகமா இருக்கலாம். நிலத்தை பண்படுத்த எப்படியும் குறைஞ்சது மூணு மாசம் ஆகும். நீங்கதான் உழைக்க போறீங்க. இங்க என்ன நடக்குது அப்படிங்கிற விவரம் எல்லாம் என்னோட இணையதளத்துல எழுதி படங்கள் எல்லாம் போட்டு வருவேன். எப்படி வேலை செய்றீங்க எல்லாம் படம் எடுத்து இணையத்துல எழுதுவேன். இப்படி நடக்கிற விசயங்களை கதையோட இணைச்சி சுவராஸ்யமா சொல்றதுதான் நம்மோட 'நன் செய்' படம்.   உங்களுக்கு மேற்கொண்டு இந்த படத்துல நடிக்க விருப்பம் இருந்தா, இங்க இருக்கலாம், அப்படியில்லைன்னா நீங்க கிளம்பி போகலாம். வேறு படத்தில கமிட் ஆகி இருந்தா அந்த படம் சம்பந்தப்பட்டவங்களுக்கு தகவல் சொல்லி அனுப்பிருங்க'

வேல்முருகனுடன் தங்கி இருந்த மூன்று இயக்குனர்கள் புன்னகை முகத்துடன் இருந்தார்கள். பின்னர் வந்து சேர்ந்த அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். சிலர் இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என பேசிக்கொண்டார்கள். 

'எதுக்கு சார் இதெல்லாம், ஒரு காட்சியில தரிசு நிலத்தை காட்டுவோம், அடுத்த காட்சியில விவசாயம் ஆயிருச்சின்னு விளைநிலத்தை காட்டுவோம். இதுக்கு போய் நாங்க எல்லாம் மாடா உழைச்சி தரிசு நிலத்தை விளை நிலமா மாத்தனுமா. நடிக்க சொல்வீங்கன்னு பார்த்தா நிசமாவே வாழ சொல்றீங்களே, என்ன பைத்தியகாரத்தனம் இது, நீங்க சரியான பைத்தியம்' என ஒருவர் உயர்ந்த குரலில் பேசினார். 

'சினிமான்னு சொல்லிக்கிட்டு அதை சாதிக்கிறான், இதை சாதிக்கிறான் அப்பிடின்னு ஒரு ஹீரோவை படத்துல காமிக்கிறது, அவன் தான் உலகத்துல  ரொம்ப நல்லவன்னு காட்டுறது,  ஊழலை ஒழிக்கிறான் அப்படின்னு ஊழல் பண்றவனைய படத்துல நடிக்க சொல்றது, பள்ளிக்கூடம் பக்கமே போயிருக்க மாட்டான் அவனையெல்லாம் ஐ பி எஸ், ஐ எ எஸ், டாக்டர் அப்படின்னு படத்துல காட்டுறது எல்லாம் பைத்தியகாரத்தனமா தெரியலையா.பொழுதுபோக்கு அப்படின்னு சொல்லிக்கிட்டு மொத்த சமூகத்தையும் பைத்தியமாக்கி வைச்சிருக்க இந்த சினிமா, சமூக அக்கறை, சாக்கடை திருத்தம் அப்படின்னு சொல்லிக்கிட்டு, கடையில கஷ்டப்பட்டு உழைக்கிறவங்களோட வறுமையை, கொடுமையை படமா காட்டுறோம்னு காசு பணத்தை அள்ளி பைக்குள்ள போட்டுகிறது முதற்கொண்டு இப்படி அடவாடித்தனம் பண்ற மத்தவங்க எல்லாம் நல்லவங்க, சினிமாவுல சொல்லப்போற சமூக சிந்தனைய வாழ்க்கையா வாழ்ந்து காட்டுங்க அப்படின்னு சொல்ற நான் பைத்தியகாரன், சரிதான். இந்த சினிமா மூலம் ரொம்ப நல்ல விசயங்கள் பண்ணலாம் அப்படிங்கிறதைத்தான் சமூகத்துக்கு சொல்லப்போறேன், இஷ்டம் இருந்தா இருங்க, இல்லைன்னா போகலாம்' 

வந்தவர்களில் சிலர் மட்டுமே களைந்து சென்றார்கள். மற்றவர்கள் சம்மதம் என சொல்லி நின்றார்கள். 

படம் தொடங்கியது. அனைவரும் தரிசு நிலத்தை பண்படுத்த வேலையாட்களாக இறங்கினார்கள். பூஜை என்ற பெயரில் காசு பணத்தை வீணாக்குவது, விளம்பரம் என்ற பெயரில் காசு பணத்தை கரியாக்குவது என இல்லாமல் படம் இணையதளத்தில் அறிவிப்புடனே தொடங்கியது. சில நாட்களில் படத்திற்கான காட்சிகள் எடுக்கப்பட்டன. படம் தொடங்கிய சில நாட்களில் இன்னும் சிலர் பிரிந்து சென்றார்கள். 

பண்படுத்தப்பட்ட நிலம், விளைச்சலில் இறங்கியது. இறுதியாக இருநூற்றி முப்பத்து ஆறு பேர் கொண்ட அந்த படக்குழு பெருமிதம் கொண்டது. தினமும் விவசாய வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டார்கள். இணையதளம் மூலம் பரவிய செய்தியினால் பணம் நன்கொடையாகவும் வந்து கொண்டிருந்தது. 

படத்திற்கான காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டன. அனைவரும் சந்தோசம் கொண்டார்கள். தாங்கள் விளைத்த நிலத்தில் தாங்களே அறுவடை செய்தார்கள். நன் செய் படமும் வெளியானது. 

ஒரு படத்தை எடுத்து வெளியிட்ட சந்தோசத்தை விட ஒரு தரிசு நிலத்தை விளைநிலமா மாத்துன திருப்திதான் ரொம்ப பெரிசு என இந்த படத்தில் ஈடுபட்டவர்கள் சொல்லிக்கொண்டார்கள். கால காலத்திற்கும் விவசாயம் செய்வது என முடிவு கொண்டார்கள். அவர்களைக் கொண்டே எடுக்க இருக்கும் அடுத்த படத்துக்கிற்கான அறிவிப்பை வெளியிட்டார் வேல்முருகன்.  படத்தின் பெயர் 'குறைவற்ற செல்வம்' 

சுத்தம் நிறைந்த நோயற்ற பகுதிகள் உருவாக்க வேண்டும் என்பதுதான் படத்தின் கதை. விவசாயத்தோடு மாசு அற்ற நகரங்கள் உருவாக அந்த படக்குழு தமது புது படத்தை தொடங்கியது. 

இப்படித்தான் படைப்பாளிகளும், எழுத்தாளர்களும் தங்களது சமூகம் பற்றிய சிறந்த எண்ணங்களை கற்பனை மூலம் வெளிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் அவை எல்லாம் உண்மையாக நடப்பது அரிதாகவே இருக்கின்றது. 

இதுதான் வாழ்க்கை என்றான பின்னர் எவரை குறைபட்டு என்ன பிரயோசனம். திருமோகூருக்கு அருகில் பதினைந்து ஏக்கர் நிலம் இன்னும் தரிசாகவே இருக்கிறது!  

Thursday 17 November 2011

மனைவியின் மயோர்கா - 2

மயோர்கா வரைபடங்களை ஹோட்டல் வரவேற்பாளரிடம் பெற்றுக்கொண்டு கார் பற்றி விசாரித்தோம். எல்லா இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டுமெனில் கார் மிகவும் அவசியமாக தென்பட்டது. இஷ்டத்திற்கு எங்கே வேண்டுமெனிலும் செல்லலாம், எதற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை போன்ற வசதிகள் இருப்பதால் கார் எடுப்பது சரியென பட்டது. அந்த எண்ணத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அந்த வரவேற்பாளர் அதெல்லாம் தைரியமாக கார் ஓட்டலாம் என நம்பிக்கை தந்தார். சரியென மிக குறைந்த நாள் வாடகையில் மூன்று நாட்கள்  பியட் கார் ஒன்றை பதிவு செய்தோம். மறு தினம் காலையில் ஒன்பது மணிக்கு வந்து கார் பெற்று கொள்ள சொன்னார்கள். ஹோட்டலுக்கு கார் வந்துவிடும் எனும் நம்பிக்கையில் அன்றே மதிய வேளையில் அந்த சுட்டெரிக்கும் வெயிலில் நடந்தே நாங்கள் தங்கி இருக்கும் இடத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

வெளியில் செல்லும் முன்னர் ஹோட்டலையும் அதன் வெளிப்புறத்தையும் நோட்டம் இட்டோம். ஹோட்டல் பின்புறம் நீச்சல் குளம் ஒன்று உண்டு. அந்த நீச்சல் குளம் தாண்டி சின்ன கடற்கரை ஒரு இரு நூறு மீட்டர் தொலைவு உண்டு. அதற்கு பின்னர் கடல். நீச்சல் குளம்தனை தாண்டி கடற்கரை அடைந்ததும் கீழ் உள்ளாடை மட்டும் அணிந்து மேல் உள்ளாடை இல்லாமல், மேலாடை இல்லாமல் மார்பகங்கள் வெளித் தெரிய வானம் பார்த்து படுத்து புத்தகம் படித்து கொண்டிருந்த ஒரு இளம் வயது பெண்ணை கண்டதும் திடுக் என்று இருந்தது. மணலோடு மணல் நிறத்தில் தான் அந்த மங்கை இருந்தார். ஆங்காங்கே சிலர் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தார்கள்.  இனி அங்கே நிற்பது முறையில்லை என நகர்ந்தோம்.

மதிய சாப்பாடு சாப்பிட வேண்டும் என பத்து நிமிடத்தில் அங்கிருந்து நடந்து ஒரு இத்தாலியன் ஹோட்டல் அடைந்தோம், அவர்கள் பரிமாறிய உணவு நன்றாகவே இருந்தது. அங்கிருந்து நடந்து செல்ல மற்றொரு கடற்கரை. எங்கு பார்த்தாலும் அரை குறை ஆடைகளோடு உல்லாசமாக மனிதர்கள். சாலையில் கூட வெறும் உள்ளாடைகளுடன் சுற்றி திரிந்த ஆண்களும் பெண்களும். 'நல்ல காட்சி உங்களுக்கு' என மனைவி கிண்டல் செய்தார். இது போலிருக்க நமக்கு இத்தனை தைரியம் வராது என சொல்லிக்கொண்டு நாங்கள் அணிந்திருந்த முழு ஜீன்ஸ், டி-சர்ட் போட்டிருந்ததை சுட்டி காட்டினேன்.

மனிதர்கள் ஆடை இல்லாமல் திரிந்தாலும் அவை காம உணர்வுகளை தூண்டுவதில்லை என்பதை மயோர்கா காட்டி கொண்டிருந்தது. இந்த விசயங்களை எல்லாம் எழுத்தில் நேரடியாய் வைக்கும் போது வக்கிரம் நிறைந்த பார்வை என்றே பார்க்கப்படுகிறது. இலைமறை காயாக சொல்லும்போது, உவமைகளையும், உவமானங்களையும் வைத்து விவரிக்கும்போது அவை இலக்கியம் என சிலாகிக்கப் படுகிறது. நிர்வாணம், நிர்வானம், நேசிக்க தெரிந்த கண்களுக்கு  காமமாக தெரிவதில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் முழு நிர்வாணம் அனுமதிக்கப்படுவதில்லை. மானம், அவமானம் என்றெல்லாம் இந்த நிர்வாணம் பிரித்து பார்க்கப்படுகிறது. மார்பக புற்று நோயை பற்றிய விழிப்புணர்வுக்கு பிரா இல்லாமல் வெறும் மார்பகங்களோடு நின்று உணர்த்திய பெண்களும் சரி, சில விசயங்களுக்கு நிர்வாணமாக கூட்டம் கூட்டமாக நின்று தங்கள் போராட்டத்தை வெளிக்காட்டும் போதும் சரி, நிர்வாணம் காமத்தின் வெளிப்பாடு அல்ல என்பது புரியும். அதே வேளையில் வெட்கம் இருக்கும் இடத்தில் நிர்வாணத்திற்கு இடமில்லை. சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பி, அந்த வெயிலில் அங்கிருந்து நடந்தே இடங்கள் சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

 நிறைய கடைகள் இருந்தன. வெயிலின் கொடுமை தாங்காமல், மகன் நீச்சல் குளத்தில் குளிக்க வேண்டும் என விரும்பியதால் இரண்டு மணி நேரத்தில் திரும்பினோம். நீச்சல் குளத்தில் நாங்கள் சென்று விளையாட மனைவி வெட்கப்பட்டு கொண்டு  வர மறுத்து அங்கே இருக்கும் நாற்காலியில் அமர்ந்து விட்டார்.

மாலை நேரம் மீண்டும் நடந்தே இடங்கள் சுற்றினோம், ஓரிடத்தில் ஹோட்டல் செல்லும் வழி தெரியாமல் அங்கிருப்பவர்களிடம் பாதை கேட்க ஸ்பானிஸில் பேசினார்கள். ஆங்கிலத்தில் பேச மறுத்தார்களா அல்லது தெரியாதா என தெரியவில்லை. நாங்கள் ஒன்று கேட்க அவர்கள் ஒன்று சொன்னார்கள். நாங்கள் சொன்னது அவர்களுக்குப் புரியவில்லை, அவர்கள் சொன்னது எங்களுக்கு விளங்கவே இல்லை. மொழி தெரியாமல் ஒரு இடத்தில் வாழ்வது அத்தனை சௌகரியமில்லை. நாங்களாகவே நடந்து பிரதான சாலையை கண்டுபிடித்தோம். அங்கிருந்து ஹோட்டல் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது.

இரவு ஹோட்டலில் சாப்பிடலாம் என முடிவு செய்தோம். சாப்பிட அமர்ந்தவுடன், ஏன்டா சாப்பிட வந்தோம் என்றாகிவிட்டது. ஒரு தட்டு சோறுடன் பாத்தி கட்டி சாம்பார் ஊத்தி சாப்பிட்டு பழகி போன எனக்கு இரண்டு கத்தரிக்காய், ஒரு காளான், இரண்டு காரட் என வந்து வைக்க அட பாவிகளா என்றுதான் சொல்ல தோணியது. பஃபே முறை இருந்ததால் அங்கே இருந்த ரொட்டி வகைகளை எடுத்து சமாளித்தோம். எப்படியாவது நல்ல கடை ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் எனும் ஆவல் பிறந்தது. இரவு அந்த ஹோட்டலில் ஒருவர் பாடினார். தேநீர் அருந்தி கொண்டு இரவு பன்னிரண்டு வரை புரியாத மொழி எனினும் பாடலை ரசித்தோம்.

உறங்க செல்லும் முன்னர் கார் ஓட்டி விடுவீர்களா? என மனைவி கேட்டார். அதெல்லாம் ஓட்டிவிடலாம் என சொல்லிவிட்டு,  மனைவியின் இரவு நேர கேள்வியினால் கார் எப்படி ஓட்டுவது என்பது குறித்தான சிந்தனையை மன திரையில் ஓட்டினேன். வலது பக்கம் சென்றால் எப்படி திரும்ப வேண்டும், எப்படியெல்லாம் செல்ல வேண்டும் என்பது குறித்து மனதில் ஓட்டி பழகினேன். ஓரளவு நம்பிக்கை பிறந்தது. காலையில் ஒன்பது மணிக்கு கார் வந்து இருக்கிறது, வாருங்கள் என தொலைபேசியில் அழைத்தார் வரவேற்பாளர். நான் மட்டும் போய் கார் சாவியை வாங்கி வருகிறேன், தயாராக  இருங்கள் என மனைவி, மகனிடம் சொல்லிவிட்டு சில படிவங்களை எடுத்து கொண்டு கீழே வந்தேன்.

கார் காணவில்லை. ஒருவர் வாருங்கள் என என்னை அழைத்தார். என்னோடு மேலும் சிலர் வந்தார்கள். எங்கே கார் என கேட்டேன்? இதோ இந்த காரில் ஏறுங்கள் என அனைவரையும் சொன்னார். அப்பொழுதுதான் புரிந்தது, கார் வேறு ஒரு இடத்தில் இருக்கிறது என்பது. எனக்கு புரிந்த வேளையில் அவரே சொன்னார். கார் வேறு இடத்தில் இருந்து நான் எடுத்து வரவேண்டுமென. அட ராமா என எனக்கு ஆகிப் போனது. அப்பொழுதுதான் எனது செல்பேசி என்னிடம் இல்லை என புரிந்தது. மனைவியிடமும், மகனிடமும் தகவல் சொல்ல வழியில்லை. வேறு வழியின்றி காரில் ஏறி அமர்ந்தேன். சற்று இடைவெளியின் போது ஒரு சுற்றுப் பாதை என வந்து கொண்டே இருந்தது. எப்படி செல்கிறார் என கவனமாக பார்த்து கொண்டே வந்தேன். ஒவ்வொரு சாலை பெயரை மனதில் பதித்தேன். ஒரு சுற்றுப் பாதை வழியாக சென்று கார் இருக்கும் இடம் அடைந்தேன். வந்தவர்களில் எவரும் ஆங்கிலேயர்கள் இல்லை. ஒவ்வொருவரும் பதிவு செய்து கார் எடுத்து கொண்டு சென்றார்கள்.

எனது சுற்று வந்தது. வழிகாட்டி ஒன்றை வாங்கினேன். அதை ஆங்கிலத்தில் மாற்றி அமைத்து தந்தார்கள். மிகவும் பழைய கார். அங்கங்கே சின்ன சின்ன அடி வாங்கி இருந்தது. சுட்டி காட்டினேன், அதெல்லாம் ஒன்றுமில்லை என்றார்கள். சரியென காரில் ஏறி அமர்ந்தேன். சரியாக ஹோட்டல் சென்று விடுவோமா என அச்சம் வந்து சேர்ந்தது. காரை சிறிது தூரம் செலுத்த கண்ணாடியில் ஒட்டப்பட்ட வழிகாட்டி கீழே விழுந்தது. ஆங்கிலத்தில் இருந்து அது மாறி இருந்தது. அதை எப்படி சரி செய்வது என புரியாமல் வழிகாட்டி இல்லாமல் மெதுவாக காரை செலுத்த ஆரம்பித்தேன்.

இடது, வலது, மறுபடியும் வலது என பாதையை நினைவுபடுத்தி சுற்றுப்பாதை வந்தேன்.  மெதுவாக வந்தபடியே வலது பக்கம் திரும்பி பிரதான சாலை அடைந்தேன், கியரை மாற்றும்போது  கியர் தலைப்பாகம் கையுடன் வந்து தள்ளி விழுந்தது. பக் என்று இருந்தது.

அன்று எடுத்த சில புகைப்படங்கள்.

மயோர்கா இயற்கை காட்சிகள் நிறைந்தே தென்பட்டது. கடற்கரைகள், மலைகள் என அற்புதம். அழகிய மரங்களும், வரிசையாய் நிறுத்தப்பட்ட கார்களும்.


தங்கியிருந்த ஹோட்டலின் பின்புறம், நீச்சல் குளமும், அதைத் தாண்டி கடலும்.




நீச்சல் குளத்தில் முன்னர் இருந்த நாற்காலிகள்.


ஹோட்டலின் உட்புறத்தில் ஒரு பகுதி.


இரவில் மயோர்கா.


(தொடரும்)

Wednesday 16 November 2011

இங்கே சினிமாவுக்கு கதைகள் விற்கப்படும்

'அப்பா நம்ம பங்களா வீடு எனக்கு தந்திருங்க'

'எதுக்குடா'

'தேவைப்படுதுப்பா'

திருமோகூரில் வாழ்ந்து வந்த இருபத்தி மூன்று வயது நிரம்பிய வேல்முருகன் தனது திரைப்பட நிறுவனத்திற்கு வேல்முருகன் சினி லிமிடெட் என பெயர் வைத்தான்.  அதனுடனே வேல்முருகன் இன் என்று ஒரு இணைய தளம் தொடங்கினான்.

அந்த இணையதளத்தில் 'இயக்குநராக ஆசைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள  விளம்பரம் தந்து தனது செல்பேசி நம்பரை இணைத்தான். அவன் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் இருபது பேர் அவனை தொடர்பு கொண்டார்கள்.  ஒவ்வொருவராக அவர்களை சந்திக்கும் திட்டத்துடன் திருமோகூருக்கு தனித்தனி நேரங்களில் அவர்களை வரச் சொன்னான் வேல்முருகன். வந்தவர், வேல்முருகனைப் பார்த்து இத்தனை சின்ன வயசாக இருக்கிறானே, இவனா தயாரிப்பாளர் என யோசித்தார். அந்த யோசனையை அப்புறப்படுத்தினான் வேல்முருகன்.

'எத்தனை வருசமா திரை உலகத்துல இருக்கீங்க'

'பதினைந்து வருசமா'

'என்ன வேலை பாத்துட்டு இருக்கீங்க'

'அசிஸ்டென்ட் டைரக்டர் '

'எத்தனை படங்கள்'

'இருபது படங்கள்'

'சரி, ஒரு கதை சொல்லுங்க, ஒரு வரி கதை'

'நம்ம தமிழகத்துல தீவிரவாதிங்க நுழைஞ்சிட்டாங்க, அவங்கள ஒருத்தர் எப்படி அழிக்கிறார் அப்படிங்கிறது தான் கதை'

'சரி, எங்களோட பங்களா ஒன்னு இருக்கு, அதுல அடுத்த வாரம் மூணாம் தேதியில இருந்து தங்குங்க, சாப்பாடு எல்லா வசதியும் நான் பண்ணி தரேன், நாம நிச்சயம் படம் பண்ணலாம். மத்தது எல்லாம் மூணாம் தேதி பேசிக்கிறலாம்'

இன்முகத்துடன் அவரை அனுப்பி வைத்தான். இது போல ஒவ்வொருவரிடம் ஒரு வரி கதை கேட்டான் வேல்முருகன். சிலர் ஒரு வரி மேலேயும் சொன்னார்கள். வந்த அனைவரையும் மூணாம் தேதி வரச் சொல்லி அனுப்பினான். ஐந்தாவது, ஏழாவது. பதினான்காவது கதை சொன்னவர்களை மட்டும் தன்னுடன் இருக்க சொன்னான். வந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பேச வேல்முருகன் நினைக்க ஒரு படம் இயக்கினா அதுவே பெரிசு, கொடுக்கிறதை கொடுங்க என பெருந்தன்மையாய் வந்தவர் சொன்னார்கள்.

இயக்குநர் ஆகும் கனவோடு வந்தவர்கள் சொன்ன கதைகள்.

1 நம்ம தமிழகத்துல தீவிரவாதிங்க நுழைஞ்சிட்டாங்க, அவங்கள ஒருத்தர் எப்படி அழிக்கிறார் அப்படிங்கிறதுதான் கதை.

2  கதாநாயகன் மிங்கி மிங்கி பா மட்டுமே பேசுவான். அவனை ஒருத்தி காதலிக்கிறா. அவங்களுக்கு பொறக்கிற குழந்தையும் மிங்கி மிங்கி பா மட்டுமே பேசுது. இவங்களை சுத்தி நடக்கிற விசயம் தான்  கதை.

3 ஒரு சித்தன் ஊரெல்லாம் சுத்துறான். போற இடத்துல எல்லாம் அழிவு நடக்குது. இந்த அழிவை நடத்தறது யாரு அப்படிங்கிறதை கண்டுபிடிக்கிறதுதான் கதை.

4 ஒரு ரயிலுல வாழ்க்கையை ஓட்டுற சின்ன பசங்களோட கண்ணீர் கதை

5 நெகாதம் செடி அப்படிங்கிற செடியில எல்லா மருத்துவ குணங்களும் நிறைஞ்சி இருக்கு, அந்த ரகசியத்தை தெரிஞ்ச ஒரு பெரியவரும், இளைஞனும் நெகாதம் செடியை அடைஞ்சாங்களானு ஒரு கதை.

6 ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணாம செயற்கையா ஸ்டெம் செல்கள் மூலமா குழந்தை பெத்துக்கிறதை பத்திய ஒரு அறிவியல் சமூக கதை.

7 விவசாயம் அழிஞ்சிட்டு வரதை பொறுக்க முடியாம பெரிய பெரிய தொழிற்சாலையை தரை மட்டமாக்குற ஒரு இளைஞனோட கதை.

8 தாயுக்கும் மகளுக்கும் இடையே நடக்கிற ஒரு பாச போராட்ட கதை.

9 ஒரு கோயில், ஒரு பூசாரி, ஒரு கொலை இதுதான் கதை.

10 இது ஒரு காதல் கதை சார். அண்ணனும் சித்தப்பா மகளும் நேசிக்கிறாங்க, கல்யாணத்துல முடியுமா அப்படிங்கிற கதை.

11 நண்பனுக்காக உயிரை விடற ஒரு பொண்ணோட கதை.

12 ஐந்து நண்பர்கள் சேர்ந்து ஒரு பொண்ணை கல்யாணம் பண்ண விரும்புறாங்க, கல்யாணம் பண்ணினாங்களா, சமூகம் என்ன சொல்லுதுன்னு ஒரு ஆராய்ச்சி கதை.

13 இது ஒரு எழுத்தாளரோட வக்கிரபுத்திய விலாவாரியா சொல்ற உண்மை கதை. கதை டிஸ்கசன்ல முழுசா சொல்றேன்.

14 ஆப்பிரிக்கா நாட்டில இருந்து விவசாயத்துக்கு ஆட்களை இறக்குமதி பண்ற ஒரு பண்ணையாரோட கதை

15 ஊழல் பண்ற அரசியல்வாதி எப்படி வியாதியில சாகுறான் அப்படின்னு ஒரு கதை.

16 ஒரு குடும்பம் எப்படி பண பைத்தியம் பிடிச்சி அழியுது அப்படின்னு கதை.

17 ஒரு பையன் படிக்காமலே எப்படி தன்னோட திறமையால் முன்னுக்கு வர போராடுரானு போராட்டத்தை காமிக்கற கதை. முடிவுல பையன் செத்துருவான் சார்.

18 அம்மாவையும் அப்பாவையும் கொலை பண்ற ஒரு பையனோட போராட்ட கதை.

19 நேர்மையான அதிகாரி எப்படி தான் நினைச்சதை குறுக்கு வழியில நாட்டுக்காக சாதிக்கிறார் அப்படிங்கிறதுதான் கதை. முரண்பட்ட விசயம் சார் இது.

20 வறுமையில வாடறவங்க படிக்காதவங்களை பத்தின கதை. இந்த கதை நிச்சயம் தேசிய விருது பெரும் சார்.

அதைப் போலவே நடிகர்கள், துணை நடிகர்கள், நடிகைகள், துணை நடிகைகள், இசை அமைப்பாளர்கள், நடன ஆசிரியர் என திரைப்படத்தின் அனைத்து பிரிவுகளில் இதுவரை சேர இயலாமல் தவித்து கொண்டு இருந்த நபர்களை இணையதளத்தில் விளம்பரம் செய்து  வரவழைத்து அவர்களுடன் பேசி மூணாம் தேதி வரச் சொல்லி அனுப்பினான் வேல்முருகன்.

வந்த அனைவரது எண்ணிக்கையை கூட்டியபோது முன்னூற்றி முப்பத்தி இரண்டு என வந்தது. வேல்முருகு படம் எடுக்க போகுது என சுற்று வட்டாரம் எல்லாம் பேச தொடங்கினார்கள். அதன் காரணமாக சென்னைக்கு செல்லாமல் திருமோகூரை முற்றுகையிட்டவர்கள் சிலர் இந்த எண்ணிக்கையில் அடங்குவர். அத்தனை பேரையும் தங்க வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் ஊரில் செய்தான். ஊரில் உள்ள அனைவரும் வேல்முருகனின் தந்தைக்காக என நினைத்து உதவி செய்தார்கள்.

ஐந்தாவது, ஏழாவது, பதினான்காவது கதை சொன்னவர்களுடன் தினமும் கலந்து ஆலோசித்தான் வேல்முருகன். தினமும் மூவருடன் சென்று வயலில் வேலை செய்வது, ஊரை பெருக்குவது போன்ற விசயங்கள் செய்து வந்தான். அவர்களின் யோசனைப்படியே திரைப்படம் எடுப்பதற்கான கருவிகள், கிராமத்து இசைக் கருவிகள் மிகவும் குறைந்த செலவில் ஒவ்வொன்றாக வந்து இறங்கின. அனைத்தையும் தனது இணைய தளத்தில் எழுதிக் கொண்டே வந்தான். இந்த செய்தி வலைப்பதிவாளர்கள் மூலம் சென்னையில் காட்டு தீயாக பரவியது.

சென்னையில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் குமுறியது. எப்படி படம் வெளி வருகிறது என பார்ப்போம் என ஒவ்வொரு நாளும் அறிக்கை முழக்கமிட்டார்கள்.

மூணாம் தேதி வந்தது. முன்னூற்றி இருபத்தி ஒன்பது பேர் திருமோகூரை அடைந்தார்கள். திருமோகூர் கோவிலுக்குள் அனைவரையும் வரவழைத்து பேசினான் வேல்முருகன்.

'நம்ம படத்தோட தலைப்பு 'நன்செய்'

'தலைப்பை கேட்டதும் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து சம்மதம் சொன்னார்கள். இந்த படத்துக்கு மூணு பேரு இயக்குநர் என ஐந்து, ஏழு, பதினான்காவது கதை சொன்னவர்களை காட்டினான். மத்த பதினேழு பேரு துணை இயக்குநர்கள். அவங்களுக்கு அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு தரப்படும்'.

'என்ன கதை, எல்லோருக்கும் என்ன என்ன வேலை, எப்படி காட்சி அமைக்க போறோம் அப்படிங்கிறதை நாளைக்கு நாம பேசலாம். எல்லாருக்கும் தங்க வீடு, சாப்பாடு எல்லாம் இந்த கிராமத்துல இருக்கிறவங்க மூலம் தயார் செஞ்சிருக்கோம், இன்னைக்கு எல்லோரும் ஊரை எல்லாம் சுத்தி பாருங்க, நல்லா ரெஸ்ட் எடுங்க, காலையில சரியா ஏழு மணிக்கு இந்த கோவிலுக்கு வாங்க என அனுப்பினான்.

'அப்பா நீங்க கொடுத்த பணத்துல நான் ஒரு லட்சம் கூட இன்னும் செலவு செய்யலை'

'படத்தோட பேரு நல்லா இருக்குடா, வந்தவங்க ஒவ்வொருத்தரும் பேசிகிட்டதை பார்க்கறப்ப அவங்களுக்குள்ள எத்தனை கனவுடா, எதையெல்லாம் தொலைச்சி வாழ்ந்துருக்காங்க, நினைக்கறப்ப கண்ணு கலந்குதுடா'

'இனி அவங்க கலங்க மாட்டாங்கப்பா, நீங்க வட்டிக்கு விடற தொழிலை விட்டுட்டா ரொம்ப நல்லா இருக்கும்'

'நான் என்ன ஏழை பாழைங்க வயித்துல அடிச்சா சம்பாதிக்கிறேன்'

'சரிப்பா, நாளைக்கு நீங்களும் ஏழு மணிக்கு கோவிலுக்கு வந்துருங்க'

'நன் செய்' படம் தொடங்கியதா? அடுத்த பதிவில் காண்போம். 

இங்கே சினிமா கதைகள் விற்கப்படும்

 'அப்பா நீங்க சொன்ன மாதிரி டிகிரி முடிச்சிட்டேன், ரெண்டு கோடி ரூபா கொடுங்க'

'கம்ப்யூட்டருக்கு படிச்சிட்டு எதுக்கு என்னோட மானத்த வாங்கற'

'இந்த கம்ப்யூட்டரை வைச்சித்தான் நான் நினைச்சதை செய்யப் போறேன், சொன்ன வாக்கு மீறாதீங்கப்பா'

'வட்டிக்கு விட்டு, காடு கழனில உருண்டு விழுந்து சம்பாதிச்சது, இன்னைக்கு விவசாயத்துக்கு வான்னு கூப்பிட்டா யாரும் வேலைக்கு ஆளு கிடைக்கலை, அப்படியே ரொக்கமா ரெண்டு கோடி ரூபா கொடுக்கச் சொன்னா எனக்கு மனசு வரலை'

'பணத்தை தனியா எடுத்து வைச்சிக்கோங்க, நான் கேட்கறப்ப கொஞ்சம் கொஞ்சமா கொடுத்தா போதும்'

'நான் சொல்லி இனி நீ கேட்கவா போற, எப்ப மெட்ராசு கெளம்புற'

'நான் எதுக்கு சென்னைக்கு போகனும், இங்கேயே இருந்துதான் செய்யப் போறேன்'

'ஒரு படத்தை இங்கே இருந்து எப்படிடா எடுப்ப, எல்லோருக்கும் ஹீரோ ஆகனும் டைரக்டர் ஆகனும்னு ஆசை இருக்கும், நீ பட தயாரிப்பளாரா ஆசைப் படறியே, எங்க போய் என் தலைய முட்டிக்கிறது'

'எல்லாரும் படம்னா சென்னைக்கு ஓடுறாங்களே, அதை மாத்தி மதுரைக்கு ஓடி வர வைக்கனும்'

'நிறைய செலவு ஆகுமேடா'

'ஆகாது'

'என்னமோ செய்டா போ'

'முன் பண தொகையா பத்து லட்சம் கொடுங்க'

இப்படித்தான் மதுரையில் அருகில் இருக்கும் திருமோகூரில் இருந்து ஒரு தயாரிப்பாளர் உருவாக இருக்கிறார்.

அவரது கனவுகள் நிறைவேறியதா? அவர் தனது திட்டங்களை எப்படி செயல்படுத்தினார்? விரைவில் தொடரும்.




Monday 14 November 2011

மனைவியின் மயோர்கா -1

இந்த வருடம் தான் இந்தியாவுக்கு போகலையே, எத்தனைவாட்டிதான் இங்கிலாந்தில் உள்ள இடங்களையே சுற்றிப் பார்ப்பது, அதனால் ஐரோப்பாவில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டிற்கு செல்லலாமா என எனது மனைவி அவரது ஆசையை சொல்லி வைக்க, அந்த ஆசையை நிறைவேற்றி வைக்கும் முயற்சியில் இறங்கினேன்.

அவர் சொன்ன இரண்டு இடங்களும் விமானத்தில் பயணம் செய்யும்படிதான் இருந்தது. அதில் ஒன்று ஸ்பெயின் நாட்டின் குட்டித் தீவான டேனரீப் (1 ) மற்றொன்று ஸ்பெயின் நாட்டின் குட்டி தீவான மயோர்கா (2 )

                                             1 .
          
                                            2




டேனரீப் எனும் இடத்தில் தான் சில வருடம் முன்னர் ஒருவன் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணியாக வந்திருந்த ஒரு பெண்ணின் கழுத்தை வெட்டி சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து சென்றான் என்பதை படித்தபோது திகிலுடனே இருந்தது. அதனால் என்ன, டேனரீப் செல்லலாம் என முடிவு எடுத்து நான் எப்பொழுதும் ஹோட்டல்கள் முன்பதிவு செய்யும் தளத்தில் சென்று ஒரு ஐந்து நட்சித்திர ஹோட்டல் பார்த்தோம். அந்த ஹோட்டல் அறை விலை மிகவும் குறைச்சலானதாக இருந்ததை பார்த்து ஹோட்டலை முன்பதிவு செய்துவிட்டோம்.

பின்னர் விமானத்திற்கு பயணச்சீட்டு தேடியபோது நமது ஊருக்கே சென்று வந்துவிடலாம் போலிருக்கிறதே எனும் அளவிற்கு விலை மிகவும் அதிகமாகவே இருந்தது. டேனரீப் வேண்டாம் என முடிவு செய்து மயோர்காவைத் (majorca) தேர்ந்தெடுத்தோம். டேனரீப் ஹோட்டலை வேண்டாம் என சொல்லிவிட்டு மயோர்காவில் ஒரு ஹோட்டல் முடிவு செய்தாகிவிட்டது. விமானத்தளத்தில் இருந்து அந்த ஹோட்டல் மிகவும் அதிக தொலைவு என அதனையும் ரத்து செய்துவிட்டு மற்றொரு ஹோட்டலை தேர்வு செய்தோம். சற்று விலை குறைச்சலாகவே அப்போது இருந்தது. உடனே ஹோட்டலை முன்பதிவு செய்துவிட்டு விமானம் தேடினோம்.

ஐரோப்பா பயணம் எனில் நான் அதிகம் விரும்பி தேர்ந்தெடுக்கும் விமானம் ஈசிஜெட்.  நான் முதன் முதலில் கிளாஸ்கோ சென்றபோதும் சரி, சுவிட்சர்லாந்து சென்றபோதும் சரி இந்த விமானம்தான் தேர்ந்தெடுத்தேன். இதற்கு முக்கிய காரணம் பயண சீட்டு சற்று குறைந்த விலையில் கிடைக்கும். டேனரீப்க்கு விலை மிகவும் அதிகமாக இருந்தது, ஆனால் மயோர்காவுக்கு சற்று விலை குறைந்தே இருந்தது. சரி என இந்த விமானத்தில் பதிவு செய்தோம்.

மிகவும் ஆர்வமாகவும் அதே நேரத்தில் பயமாகவும் இருந்தது. நான், எனது மனைவி, பையன் மட்டுமே. நன்றாக வெயில் அடிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டோம். இங்கிலாந்தில் இந்தியாவைப் போலவே இடது பக்கம் வாகனம் செலுத்துவார்கள். ஆனால் ஐரோப்பா நாடுகளில் வலது பக்கம் வாகனம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் இவ்வாறு வாகனம் ஓட்டி பழக்கம் இல்லை. எனவே மயோர்காவில் சுற்றிப் பார்க்க வேண்டும் எனில் வாடகைக்குத்தான் காரை அழைக்க வேண்டும் எனும் நினைப்பு வேறு. துபாய் சென்றபோது மிகவும் பாதுகாப்பாக இருந்தது நினைவில் வந்து போனது, அதைப்போலவே இங்கேயும் பாதுகாப்பாக இருக்குமா எனும் அச்சம் தொற்றிக்கொண்டது. இதுகுறித்து மனைவியிடம் சொன்னபோது, நாம் ஹோட்டலில் தங்கி பொழுதை கழித்துவிட்டு வந்துவிடலாம் என்றார். எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

பயண நாள் நெருங்கியது. பொதுவாகவே உறவினர் எவராவது விமான நிலையம் வரை அனுப்பிவிட்டு செல்வார்கள், அது போல திரும்பி வரும்போது எவராவது வந்து அழைத்து செல்வார்கள். ஆனால் இந்த முறை காரை விமான நிலையத்திலே விட்டுவிட்டு செல்லலாம் என முடிவெடுத்தோம். நான்கு நாட்கள் பயணம். காரை விமான நிலையத்தில் விட்டு செல்ல ஒரு தளத்தில் பதிவு செய்தோம்.

கார் பத்திரமாக இருக்குமா? எனும் கேள்வி மனதுள் எழுந்தது, இருப்பினும் தைரியத்துடன் காரை நிறுத்திவிட்டு செல்லலாம் என முடிவுடன் கிளம்பினோம். பயண நாள் வந்தது. காரை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து இருபது நிமிட தொலைவில் நிறுத்திவிட்டு (3 )கையில் கார் சாவியினை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஒரு பேருந்தில் விமான நிலையம் அடைந்தோம். நன்றி: கூகிள் படங்கள்.

3 .

இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்னர் மயோர்கா விமான நிலையம் அடைந்தோம். டாக்சி என தேடினோம், அதற்கு முன்னர் ஏதாவது சாப்பிட வேண்டும் போல் தோணியது. மொழி தெரியாத இடம். நானும் எனது மனைவியும் சைவம். பிரான்ஸ் நாட்டில் ஒரு முறை சைவம் என்பதால் பட்ட பாடு நினைவுக்கு வந்து போனது.

விமான நிலையத்தில் இருந்த ஒரு உணவு கடையில் கையை காட்டி ரொட்டி போன்ற உணவு வாங்கினோம். கார் வாடகைக்கு நான்கு நாட்கள் எடுத்துக் கொள்ளலாமா? என்று எனது மனைவியிடம் கேட்டதற்கு வேண்டாம் என ஒரேயடியாக மறுத்துவிட்டார். சரி, பேருந்தில் செல்லலாம் என்று சொன்னதற்கும் வேண்டாம் என மறுக்க துபாயில் போலவே வரிசையாய் விமான நிலையத்தில் வெளியில் டாக்சி நிற்க கையில் இருந்த ஹோட்டல் பெயரை காட்ட அரை மணி நேரத்தில் ஹோட்டல் அடைந்தோம். வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.


பயணம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அமெரிக்காவில் எனது அண்ணனுடன் விமான நிலையத்தில் இருந்து அவரது வீடு வரை சென்றபோது இல்லாத வித்தியாச உணர்வு இங்கே இருந்தது. கார் வாடகைக்கு எடுக்க வேண்டும் எனும் நினைப்பில் சாலையெல்லாம் மனனம் செய்ய தொடங்கிவிட்டேன். ஹோட்டல் பக்கத்தில் வந்ததும் சுற்றுப் பாதை வந்தது. இங்கிலாந்தில் செல்வதற்கு எதிர்மாறாக அங்கே சென்றதை கண்டதும், காராவது, வாடகைக்கு எடுப்பதாவது என மனம் அல்லாடியது. ஹோட்டல் மிகவும் நன்றாகத்தான் இருந்தது. கார் எடுப்பதா வேண்டாமா  என மீண்டும் நடந்த சின்ன கலந்துரையாடலில் மனைவி சற்று அதிகமாகவே பயபட்டார். அறையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மயோர்காவில் சுற்றிப் பார்ப்பது குறித்து ஹோட்டல் அலுவலர்களிடம் பேச கீழே வந்தோம். மனம் கார், கார் என நினைக்க தொடங்கியது.


(தொடரும்)

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? வக்கத்தவனும் போக்கத்தவனும்

தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் மனிதர்கள் கல்தனை பல வேலைகளுக்கு உபயோகப்படுத்தி வந்தார்கள் என்பதை அறியலாம். இந்த கற்காலம் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் வருடங்கள் வரை மனித வாழ்வில் பெரும் இடம் பெற்று உள்ளது. தற்போது கூட இந்த கல்லானது மனித வாழ்வில் பெரும் பங்கு வகித்தாலும் அவை உபயோக பொருளாக இல்லாமல் உபய பொருளாக மாறிவிட்டது. கல்லிலே கலைவண்ணம் கண்டான் என சிலாகித்து பாடும் வண்ணம் இந்த கல் பெருமை பெற்றது. சில வேதிவினை ஆராய்ச்சிகள் மூலம் ஒரு கல்லானது எப்படி இருக்கிறது, எதற்காக உபயோகப்படுத்தபட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். சில கல்லின் அமைப்புகள் அவை பல விசயங்களுக்கு உபயோகபடுத்தபட்டு இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து கொண்டே இருக்கின்றன.


                                                         நன்றி : விக்கிபீடியா   


விலங்குகளை வெட்டி உண்ணும் பழக்கம் உடையவராக இந்த கற்கால மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். அப்பொழுது எல்லாம் இரும்பு, தாமிரம் போன்ற தகடுகள் உபயோகத்தில் இல்லை. எனவே இந்த கல்லினை கூறு செய்து அதை ஆயுதமாக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அன்றைய மனிதர்கள் மட்டுமா கல்லினை ஆயுதமாக உபயோகம் செய்தார்கள்? இன்று கூட கல்லினை எடுத்து வாகனங்களை உடைப்பது, அடுத்தவரின் மண்டையை உடைப்பது என கல்லினை இன்றைய மனிதர்களும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தத்தான் செய்கிறார்கள்.

இந்த கல்லினை ஆயுதமாக உபயோகபடுத்தியது மட்டுமில்லாமல் இந்த கல்லை தங்களுக்கு தரும் ஒரு பாதுகாப்பு இடமாகவும் உபயோகப்படுத்தி வந்து இருக்கிறார்கள். மரக்கிளைகள் கூட இந்த கால கட்டத்தில் ஆயுதமாக இருந்து இருக்கலாம். ஆனால் அவையெல்லாம் மண்ணோடு மண்ணாக மக்கி இன்றைக்கு அவை நிலக்கரியாகவோ, வாயுவாகவோ, எண்ணையாகவோ மாறி இருந்து இருக்கலாம். எனவே தொல்பொருள் ஆராய்ச்சியில் இந்த தடயங்கள் எதுவும் கிடைக்காமல் போனது ஆச்சரியம் இல்லை.

இந்த கல் மூலம் பல விசயங்களை செய்த இந்த காட்டுமிராண்டி நாகரிகத்தில் வாழ்ந்த மனிதர்கள் அந்த கல்லில் இருந்து எப்பொழுது உலோகங்களை  கண்டு கொண்டனரோ அப்பொழுது இந்த கற்காலம் மறைந்து உலோக காலம் தொடங்கியது. அந்த கால கட்டத்திற்கு சற்று முன்னர் தான் விவசாயம் எனும் முறையை இந்த மனிதர்கள் கற்றறிந்து இருந்தார்கள். பன்னிரண்டு ஆயிரம் வருடங்கள் முன்னர் தான் இந்த விவாசய முறை கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறை படுத்தப்பட்டது. அப்பொழுது அவர்களிடம் இருந்த காட்டுமிராண்டி நாகரிகம் குறையத் தொடங்கியது. அதோடு மட்டுமில்லாமல் முதன் முதலில் தாமிரத்தை கல்லில் இருந்து பிரித்தெடுக்கும் முறையை எட்டாயிரம் வருடங்கள் முன்னர் மனிதர்கள் கண்டறிந்தார்கள். தாமிர கத்தி போன்றவை உருவானது. அதற்கு பின்னர் தாமிரத்தையும் பிற தனிமங்களுடன் கலந்து உருவாக்கும் தன்மையை கண்டறிந்து இருக்கிறார்கள்.

இந்த மனிதர்களுக்கு எந்த வாத்தியார் சொல்லி கொடுத்தார்? இந்த மனிதர்களுக்கு எந்த காவல்காரர் காவல் இருந்தார்? எதன் காரணமோ வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலிஸ் வேலை என சொல்லி வைத்தார்கள். நாம் கற்று கொள்ள எந்த ஆசிரியரும் அவசியம் இல்லை, நம்மை பாதுகாத்து கொள்ள எந்த போலிசும் அவசியம் இல்லை. ஆனால் நமது அறிவு வளர்ச்சியானது ஆசிரியர்களை கொண்ட பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் உருவாக்கியதோடு மட்டுமில்லாமல் ஊருக்கு ஊர் காவல் நிலையங்களை உருவாக்கி வைக்கச் சொல்லிவிட்டது. இந்த வாழ்க்கை சீரழிவுக்கு உப்டடுத்தபட்ட நாம் காட்டுமிராண்டி நாகரிகத்தை விட கேவலமான நாகரிகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் மறுத்தாலும் நான் மறுக்கப் போவதில்லை.

புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த பலர் பள்ளிக்கூடங்களில் இவைகளை கற்றுக்கொண்டதில்லை. பள்ளிக்கூடங்கள், இவர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்றுதான் கற்றுத் தருகிறது. எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என எந்த பள்ளிக்கூடமும் கற்றுத் தருவதில்லை. கற்றுக் கொள்தல் என்பது அவரவர் ஆர்வத்தை உள்ளடக்கி உள்ளது. எண்களை கண்டுபிடித்தவருக்கு எந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்? இதோ இந்த கணினி எப்படி உபயோகிப்பது என்பது குறித்து எந்த ஆசிரியரிடம் நாம் கற்றுக் கொண்டோம்? ஒருவர் உருவாக்குகிறார், அதன் பயனை பலர் அனுபவிக்கிறோம். அந்த கற்றுக் கொள்தலை பிறருக்கு சொல்லி தருகிறோம், அப்படி சொல்லித் தருவதால் நாம் ஆசிரியர் ஆகிறோம், இதன் காரணமாகவே கல்வி ஒரு வியாபார பொருளாகிப் போனது.

கொலை, கொள்ளை, திருட்டு என்பதெல்லாம் காட்டுமிராண்டி நாகரிகத்தில் இல்லாமல் இல்லை. அப்பொழுது பணம் என்பது இல்லாமல் போனதன் காரணமாக, தனது உடைமைகள் என எதையும் பாதுக்காக்க வேண்டிய நிர்பந்தம் இல்லாததன் காரணமாக அவையெல்லாம் பெரிய விசயமாகவே இல்லை. மனிதர்களை கொன்று தின்னும் நரமாமிசர்கள் இருந்தார்கள் என்கிறது வரலாறு, இன்னும் ஆங்காங்கே இருந்து தொலைக்கிறார்கள் எனும் செய்தியும் உலவுகிறது. இந்த காட்டுமிராண்டி நாகரிகத்தில் பலியிடுதல் எனும் கொடுமைகள் இல்லை. கொன்றால் அவை உணவு என்றுதான் இருந்தது. இப்பொழுது திருடர்கள், அவர்கள் திருட்டுக்கு தண்டனை, தண்டனை கொடுக்க சட்டம், அதை பாதுகாக்க சட்ட நிபுணர்கள், காவல் அதிகாரிகள். அறிவு வளர வளர பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும், ஆனால் பயம் அதிகரித்துப் போனது நம்மிடம்.

இரும்பு போன்றவைகளை உபயோக செய்யும் அறிவு கிட்டத்தட்ட இரண்டாயிரத்து முன்னூறு வருடங்கள் முன்னரே உருவானது. அந்த இரும்பு உலோகம் இன்று வீச்சருவா, வெட்டருவா, வேல், கத்தி என பரிணாமம் கொண்டது. இந்த உலோகங்களின் தன்மையினால் அவை துப்பாக்கிகளாகவும், பீரங்கிகளாகவும் பரிணமித்தது. வானில் பறக்கும் விமானம் கூட ஆயுதமாக மாற்றப்பட்ட கேவலமான நாகரிகம் நம்முடையதுதான். அந்த கேவலத்தை செய்ய ஒரு மதம் காரணமாக காட்டப்பட்டது காட்டுமிராண்டித்தனத்தினை விட மிகவும் கேவலமானது.

வாழ்க்கையில் சீரழிய முட்டாளாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. அறிவினை முட்டாள்தனமாக உபயோகபடுத்த தெரிந்தால் அது போதும்.

முட்டாள்தனமான அறிவு குறித்து தொடர்வோம்.

---------

To earn money thorough Bingo Liner, click here

Friday 11 November 2011

தாம்பத்ய வாழ்க்கையும் தத்து பிள்ளையும்

பாரதியாரின் கவிதை வரிகளை கண்கள் மேய்ந்து கொண்டிருந்தது. 

பாயுமொளி நீ யெனக்கு பார்க்கும்விழி நானுனக்கு
தோயுமது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு 
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மையெல்லாம்; 
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!   

தொடர்ந்து அந்த கவிதை வரிகளை அசைபோட்டுக் கொண்டிருந்தபோது மனதுக்குள் சின்ன வரி ஒன்று முளைத்திருந்தது. 

காலமடி நீ யெனக்கு காதலடி நானுனக்கு

சந்தம் சரியாகவே அமைந்து இருந்தது போலிருந்தது. ஏதேனும் இலக்கணப் பிழைகள் இருக்குமோ என அணி பிரித்துப் பார்க்க தோணவில்லை. இந்த சின்ன வார்த்தைகளை பாரதியாரின் இந்த  கவிதை வரிகளில் தேடியபோது தென்படவில்லை. கவிதையினை முடிக்கும் தருவாயிற்கு வந்து சேர்ந்தது கண்கள். 

ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!

பாரதியாரின் இந்த கவிதையின் கடைசிவரிகள் கண்டபோது பாவ்லோவ் எனும் ஒரு ஆராய்ச்சியாளனின் சோதனை மனதில் நிழலாடியது. பாவ்லோவ் எனும் ஆராய்ச்சியாளன் தான் வளர்த்த நாய்க்கு தினமும் காலையில் உணவு வைப்பானாம். உணவு வைத்தவுடன் ஒரு மணியை ஒலிப்பானாம். உணவினை கண்டதும் அந்த நாய்க்கு எச்சில் ஊறுமாம். இவ்வாறு தொடர்ந்து சில தினங்கள் செய்த பாவ்லோவ் ஒரு தினம் உணவு வைக்காமல் மணியை மட்டும் ஒலித்தானாம். அந்த மணி ஓசையை கேட்டதும் நாயின் வாயில் எச்சில் ஊறியதாம். இந்த சோதனையை சில முறை செய்து ஊர்ஜிதப்படுத்திய பாவ்லோவ் இதை நரம்புகளின் தன் உணர்ச்சிகள் என வரையறுத்தானாம்.

இந்த சோதனையை போலவே தன் காதலியை நினைக்கும்போது மனதில் இனிய சுவை ஏற்படுவதாக, தனது கற்பனை காதலி என்பவர் ஊனமற்ற நல்லழகு பொருந்தியவராக இருப்பவர் எனும் சாதாரண மனிதனின் கற்பனை மகாகவியின் கவிதை வரியில் தென்பட்டது.  

காலமடி நீயெனக்கு காதலடி நானுனக்கு

அர்த்தம் கொண்டா இந்த வரிகள் என்னுள் முளைத்தன?! இந்த வரிகள் முளைத்ததும் அர்த்தம் தேடிச் சென்றேனா என்பதே  புரியாதபோது மீண்டும் சில வரிகள் வந்து முளைத்தன. இசையின் சந்தத்திற்கு ஏற்ப வரிகள் அமைத்துக் கொள்வது சற்று எளிதுதான்.

கோலமடி நீயெனக்கு கெஞ்சுமொழி நானுனக்கு

தாம்பத்ய வாழ்க்கை. உறவுகளில் ஒழுக்கம் வேண்டும் என்பதற்காக, ஒருவனுக்கு ஒருத்தி என்று   உணர்த்தப்பட்ட வாழ்க்கை. திருமணம் என்பது இந்த தாம்பத்ய வாழ்க்கைக்கு அளிக்கப்பட்ட ஒரு அங்கீகாரம். இஷ்டப்பட்டவருடன் இணைந்து வாழ்ந்து விட்டு, கஷ்டம் மனதில் வரும்போது பிரிந்துவிடலாம் என்பதை மறுபரிசீலனை செய்ய சொல்லும் வாழ்க்கை. இந்த தாம்பத்ய வாழ்க்கையின் உன்னதம் குறித்த சிந்தனை அதிக அளவில் எழுவதில்லை. 

காமத்தின் இச்சை தணிக்கவோ, உடலோடு உடல் கொள்ளும் உறவுக்காகவோ அமைந்தது அல்ல இந்த தாம்பத்ய வாழ்க்கை. திருமணம் என்பது தேவையற்ற ஒன்று, ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழலாம் என்பதுமாய், ஒரு குடும்பம் என்றால் என்ன என்கிற உணர்வு குறைந்து போய்விட்ட இக்கால சூழலில் இந்த தாம்பத்ய வாழ்க்கை குறித்த சிந்தனை அதிக அளவில் எழுவதும் இல்லை. 

மோகமடி நீயெனக்கு முள்ளுமடி நானுனக்கு 

மனதோடு உடலும் சேர்வதுதான் தாம்பத்ய வாழ்க்கை. ஒருவரின் ஒருவர் உணர்வை அறிந்து, இருவருக்குமாய் சேர்ந்து ஏற்படுகின்ற உணர்வில் வருவதுதான் பேரின்பம். உணர்வற்ற நிலையில் ஒருவரும், தன் உணர்வை தீர்க்க வேண்டிய உறுதியில் மட்டுமே ஒருவருமாய் நடந்து கொள்கின்ற முறை  சரியான முறையும் அல்ல. உடலின் இச்சை தீர்க்க வேண்டி பரத்தையர் கூட்டம் நாடும் உடலைப் போன்றே காம இச்சையின் பொருட்டு கற்பனை உலகில் ஆடும் மனம் கொடியது. 

திருமணம் முடிந்த சில மாதங்களில் அந்நியோநியத்தை வெளிப்படுத்த ஒரு முத்திரையாய் குழந்தை. பிடிக்காமலே ஆடவரும், பிடிக்காமலே பெண்டிரும் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட பெற்றுக் கொள்வதற்காக இந்த மண்ணில் வந்து விழுந்த குழந்தைகள் ஏராளம். இந்த குழந்தைகளின் வாழ்விற்காக போராடும் போராளிகளாய் மாறியபின்னர் தாம்பத்ய வாழ்க்கை ஒரு சம்பிராதயமாகிப் போகிறது. 

காமமடி நீ யெனக்கு, குழந்தையடி நானுனக்கு 

இந்த குழந்தை பெற்றுக் கொள்தல் வரம்.  இந்த வரம் அனைவருக்கும் வாய்ப்பது இல்லை. மலடி என்ற சொல், மங்கையருக்கு மழலைச் செல்வம் வாய்க்காத தருணத்தில் வந்து வாய்க்கின்ற ஒரு பெயர். அறிவியல் அறிவு குறைந்த கால காரணத்தினாலும், ஆடவன் வலிமை உடையவன் என்கிற ஆணவத்தினாலும் மலடன் என்ற சொல் முளைக்காமலே போனது.  'ஆண்மையற்றவர்' என்பதை வீரத்திற்கு சேர்த்துப் பொருத்திப் பார்த்தது உலகம். 

இன்றைய அறிவியல் வளர்ந்த சூழலில் எப்படி குழந்தை பிறக்கிறது என்பது குறித்த சிந்தனை பன்னிரண்டு வயது குழந்தைக்கும் கல்வி சொல்லித் தரப்படுகிறது. கற்றுக் கொள்பவரும், கற்றுத் தருபவரும் முறையோடு இருந்து கொண்டால் கற்றுக் கொள்வதில் தவறில்லை. காமத்தில் குரூரம் இல்லாதபோது காம உணர்வின் தலைவன் மன்மதனும், காமனும் இலக்கியங்களில் போற்றப்படும் தெய்வமாகிறார்கள். 

இந்த குழந்தை பிறப்புக்கு என பெண்களில் ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஷ்டீரோன் மட்டுமல்லாது, FSH (Follicular Stimulating Hormone), LH (Leutinising Hormone) முக்கிய பங்கு வகிக்கிறது. வயதுக்கு வந்துவிடுதல் என்பதன் அடையாளமாய் ஆணுக்கு குரல் மாற்றமும், அங்கங்களில் அங்கங்கே முடி வளர்வதுமாய் இருந்திட, பெண்ணுக்கு அடையாளமாய் அங்கத்தில் சில மாற்றமும், குரல் மாற்றமும் , மாதவிடாய் எனப்படும் ரத்த வெளியேற்றமும் ஏற்படுகிறது. இந்த நிகழ்வுகள் பத்து பன்னிரண்டு வயதுகளில் இந்த ஹார்மோன்களால் ஏற்படுகிறது. 

முட்டை செல்கள் உருவாக்கிட ஈஸ்ட்ரோஜென், FSH (Follicular Stimulating Hormone) பெரும் உதவியாய் இருக்கிறது. மாதவிடாய் தொடங்கி பதினான்கு நாள்களில் LH (Leutinising Hormone) உதவியின் மூலம் இந்த முட்டை செல்களானது முட்டைப்பையில் (ovary) இருந்து வெளிப்பட்டு (oviduct) கருக்குழலில் பயணிக்கின்றது. கருத்தரித்தல் நடைபெறாத பட்சத்தில் ப்ரோஜெஷ்டீரோன் அளவு குறைந்து ரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது. இப்பொழுதெல்லாம் சுத்தம் பற்றிய விழிப்புணர்வும், இந்த மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்த வேண்டி வாங்க சொல்லும் துணி உறை விளம்பரங்களும் அதிகரித்து, 'வீட்டுக்கு விலக்காகி இருக்கேன்' என தனியாய் எவரும் போவதில்லை. 

இந்த கருக்குழலில்தான் முட்டை செல்லும், விந்து செல்லும் இணைந்து கருத்தரித்தல் நடக்கிறது. கருத்தரிக்கப்பட்ட முட்டையானது பயணித்து கருப்பை(uterus)தனை வந்து அடைகிறது. இப்பொழுது ரத்த நாளங்கள் உடைந்து போகாமல் தேவையான உணவுப் பொருட்கள் கிடைத்திட குழந்தை உருவாகி கருப்பையில் வளர்கிறது. இப்படி உருவாகும் குழந்தையை கடமைக்காக பெற்றுக் கொள்தல் என்பதும், காம இச்சையின் காரணம் மட்டும் கொண்டே உருவாக்கி அந்த குழந்தையை பேணி காக்காமல் உலகில் அல்லல்பட விடுவது எவ்விதத்தில் நியாயம்.  

'கர்வமடி நீ யெனக்கு, ஆர்வமடி நானுனக்கு' 

இந்த குழந்தையை பெற இயலாமல் போராடும் தம்பதிகள் அதிகம் உண்டு. பெண்ணின் கருவாயில் ஏற்படும் அடைப்பு, ஆணின் விந்துகுழாயில் அடைப்பு போன்றவைகளால் பெரும்பாலும் இயற்கையாக கருத்தரித்தல் நடைபெற வாய்ப்பில்லாமல் போகும். கருப்பையின் பலவீனம் கூட முக்கிய காரணமாகவும்  அமைகிறது. இத்தனை வருஷம் ஆச்சா? இன்னுமா குழந்தை பெத்துக்கிரலை? ஒரு குழந்தை போதுமா? இன்னொன்னு பெத்துகிறது? போன்ற வாக்கியங்கள் சர்வசாதாரணம். 

உடலுக்குள் கருத்தரித்தல் நடைபெற இயலாத பட்சத்தில் உடலுக்கு வெளியே கருத்தரிக்கும் முறையானது invitro fertilisation (IVF) கையாளப்பட்டு கருவினை பெண்ணின் கருப்பையில் வைத்து குழந்தையை உருவாக்குவது இன்றைய சூழலில் அதிகரித்தாலும் இந்த முறைக்காக ஆகும் செலவுகள் அதிகம், (வெற்றி சதவிகிதமும் குறைவு, பக்க விளைவுகளும் அதிகம்,) மேலும் இந்த சிகிச்சை முறைக்கு உட்படுத்தப்படும் தம்பதிகள் பெரும்பாலும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். 

வாடகைத் தாய், எவரோ ஒருவரின் முட்டை செல், விந்து செல் மூலம் குழந்தை பெறுதல்  என்கிற அளவுக்கு எல்லாம் உலகம் முன்னேறிவிட்டது. செல்வதுக்குள் எல்லாம் செவிச்செல்வம் அச்செல்வம் மழலைச் செல்வம் என்றாகிப் போனது. குடும்பஸ்தன் என்பற்கான ஒரு அடையாளமாகவே இந்த சந்ததிகள் விளங்குகிறார்கள். 

'தேர்வுமடி நீ யெனக்கு, தீர்வுமடி நானுனக்கு' 

பெண் பார்த்து திருமணம் செய்த நாட்கள் என்பது போய் எப்படிப்பட்ட பிள்ளை வேண்டும் என்கிற அளவுக்கு, கருவில்தனிலே எந்த வியாதி இருக்கிறது என்பதை முதற்கொண்டு தீர்மானித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என மருத்துவ முறைகள் அதிகரித்துவிட்டன. இதை கருத் தேர்வு (embroyinic screening) என அழைக்கலாம். பெண்ணுக்கு என்ன குரோமோசோம்கள், ஆணுக்கு என்ன குரோமோசோம்கள் என தீர்வை கண்டபின்னர் 'பொட்ட பிள்ளைய பெத்துட்டே' என பெண்ணை திட்டும் காலம் போய்,  பெண் பிள்ளைக்கு ஆண்தான் காரணம் என சட்டம் பேச வாய்ப்பு வந்துவிட்டது. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிற காலம் பழுதாகிப் போகுமோ என்கிற அச்சம் நிலவுகிறது. 

''என்னங்க, நமக்குன்னு ஒரு குழந்தை இருக்கு. இன்னொரு குழந்தை பெத்துக்கிறதை விட ஒரு குழந்தைய தத்து எடுத்துகிரலாமா?'' வார்த்தைகள் வீரியமாய் வந்து விழுந்தன. 

''எதற்கு தத்து எடுக்க வேண்டும்?'' வார்த்தைகளில் கோபம் சிதற எத்தனித்தது. 

''எனக்கு பெண் குழந்தை ஆசையாய் இருக்கிறது, நாம் ஒன்று பெற்றுக் கொள்ள நினைத்து அதுவும் ஆணாக பிறந்துவிட்டால் என்ன செய்வது?'' வார்த்தைகளில் மென்மையான வலி தெரிந்தது. 

''எப்படி தத்து எடுப்பாய்? குழந்தைகள் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று செல்வாய். அதில் எந்த குழந்தை அழகாக இருக்கிறது என கண்களால் அளவு எடுப்பாய். எந்த குழந்தை அறிவாக இருக்கிறது என தேர்வு ஒன்று வைப்பாய். அத்தனை குழந்தைகளில் ஒரு குழந்தை ஒன்றை உனது மனதுக்குப் பிடித்தது போல எடுத்து வருவாய். அத்தனை குழந்தைகளையும் ஏக்கம் கொள்ள செய்துவிட்டு ஒரு குழந்தையை மட்டும் தனியே எடுத்து வருவது சரியாகவே எனக்குப் படவில்லை.  தத்து எடுப்பதாக இருந்தால் மொத்த ஆதரவற்றோர் குழந்தை இல்லத்தை தத்து எடு'' மனதில் உறுதியாய் இருப்பது சரியோ தெரியவில்லை. 

''ஒரு குழந்தையை வளர்க்கத்தான் தத்து எடுக்க சொன்னேன்'' வார்த்தைகள் வலுவிழந்து இருந்தன. 

இந்த தத்துப் பிள்ளையும், மருத்துவ முறையால் தேர்வு செய்யப்படும் பிள்ளைக்கும் சின்ன வித்தியாசம் மட்டுமே உண்டு. குழந்தைகள் பெற இயலாத தம்பதிகள் இந்த தத்து எடுக்கும் முறைக்கு செல்ல பயப்படுகிறார்கள். சொந்த குழந்தை போல வருமா என்கிற உணர்வுடன் வாழ்வதாகவே சொல்கிறார்கள். ''உன்னை தவிட்டுக்குத்தான் வாங்கினார்கள்'' என குழந்தையிடம் சொன்னால் பெற்ற தாய் எங்கே என மனம் அல்லாடத்தான் செய்யும். அதைப்போலவே தத்து எடுத்துக் கொண்டாலும் மனம் விலகிய வண்ணம் இருக்கும் என்பதை உறுதிபடுத்த வழியில்லை. 

'என்ன தவம் செய்தனை, தாயே யசோதா 
என்ன தவம் செய்தனை
பரபிரம்மம் உன்னை அம்மாவென அழைக்க 
என்ன தவம் செய்தனை'

பல வழிகளில் முயன்று குழந்தை பெறுகின்ற வழி அடைக்கப்பட்டால் காலத்தை வீணாக்காமல் ஒரு குழந்தையாவது தத்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென குழந்தை இருந்தாலும் எவரோ பெற்று விட்டார்கள் நமக்கென்ன தலையெழுத்தா என்று இருக்காமல் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம்  ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வுலகம் குழந்தைகளின் கையில் உள்ளது. 

'நாம குழந்தைய தத்து எடுத்துகிரலாம்' வார்த்தைகள் வண்ணமிட்டுக் கொண்டிருந்தன. 

'நிசமாவா சொல்றீங்க' சந்தோசமாக விரிந்த கண்களில் 'அம்மா' என எங்கோ ஒரு குழந்தையின் அழுகுரல் ஒலிக்கக் கேட்டு, சில வரிகள் முளைத்த மனதில் ஆனந்தமும், பாரதியாரின் கவிதைகளை மேய்ந்த கண்களில் கண்ணீரும் எட்டிப் பார்த்தது. காலமடி நீ யெனக்கு, காதலடி நானுனக்கு.

வானமடி நீ யெனக்கு, வண்ண மயில் நானுனக்கு
பானமடி நீ யெனக்கு, பாண்டமடி நானுனக்கு 
ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!

Thursday 10 November 2011

பல் வலி கொல்லும்?

தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது முதுமொழி. பல் போனால் சொல் போச்சு என்பது சொலவடை. பல் இல்லாவிட்டால் பொக்கை வாய் என கேலி பேசுவோர் உண்டு. இந்த பல்லில் சிங்க பல், தங்க பல், கடாப் பல், அறிவு பல் என சில பிரிவுகள் உண்டு. 

இந்த பல்லானது ஆறு அல்லது பத்து மாதங்களில் குழந்தைக்கு முளைக்க தொடங்கிவிடும். முன்புறம் வளரத் தொடங்கும் பல்லானது இரண்டு  மூன்று வருடங்களுக்குள் பக்கவாட்டில் வளர்ந்து முழுமை பெறும். இப்படி வளரும் பற்கள்தான் பேச்சுக்கும், மெல்வதற்கும் உறுதுணையாக இருக்கின்றன. இப்போதைய தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் பல்லின் அமைப்பை  மாற்றியமைக்க கூடிய வசதிகள் வந்துவிட்டன. தெத்துப் பல், சொத்தை பல், கோரப் பல் என பல்லானது முக அழகை மாற்றியமைத்துவிடும் தன்மை உடையது. 

நமது ஊரில் சிறு குழந்தையின் பல்லானது விழுந்துவிட்டால் அதை எடுத்து பத்திரமாக வைக்கும் பழக்கம் அவ்வளவாக இல்லையெனினும், சில நாடுகளில் அந்த விழுந்த பல்லை எடுத்து தலையணையின் கீழே வைத்து படுத்துக் கொண்டால் பணம் கிடைக்கும் என அக்கால சிறுவர்கள் நம்பினார்கள் என்கிற கதை உண்டு. ஆனால் இன்றைய கால சிறுவர்கள் தனது பெற்றோர்கள் தான் பணத்தை தலையணைக்கு கீழே வைக்கிறார்கள் என்பதை அறிந்து இருந்தாலும் இந்த நிகழ்வை மிகவும் ரசிக்கிறார்கள். மேலும் இந்த குழந்தைகளின் பல்லானது பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கற்றுக்கொள்ள பெருமளவில் உபயோகப்படுகிறது. 

இந்த பல்லானது எனாமல், டென்டின், சிமென்டம் மற்றும் பல்ப் எனும் ரத்தநாளங்கள், எலும்பு மற்றும் நரம்புகள் கூடிய தசைகளால் ஆனது.  ஈறு, எளிறு என்று தமிழில் சொல்வார்கள். எனாமல் மிகவும் உறுதிவாய்ந்த ஒன்று. இந்த பல் பலமானதற்கு காரணம் கால்சியம் திசுக்களில் சேர்ந்து ஒரு உறுதிபடுத்தப்பட்ட தன்மையை உருவாக்குகிறது. இதன் காரணமாக கால்சியம் நிறைந்த உணவு பொருட்களை நாம் உண்பது அவசியமாகிறது. நாம் எத்தகைய கால்சியம் உணவை உண்டாலும், பல்லை சுத்தமில்லாமல் வைத்துகொண்டால் பல வியாதிகள் வர வாய்ப்புண்டு. ஆடு மாடு என்ன பல்லா விலக்குது என நகைச்சுவையாய் சொல்பவர்கள் உண்டு. அவை வேக வைத்த உணவு பண்டங்களை உண்பது இல்லை அதனால் நமக்கு ஏற்படும் தொல்லைகள் போன்று அவைகளுக்கு இல்லை என சொல்பவர் உண்டு. 

செங்கல் பொடி, சாம்பல் பொடி என இவையெல்லாம் வைத்து பல் துலக்குபவர்கள் உண்டு. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என பழமொழி உண்டு. பல்லில் ஏற்படும் பல துயரங்களுக்கு காரணம் பாக்டீரியாக்கள். 

இந்த பாக்டீரியாக்கள் எங்கும் சர்வ சாதாரணமாக திரிவது போல நமது வாயில், பல்லில், நாக்கில் சுழன்று திரியும். அப்படி திரியும் பாக்டீரியாக்கள் சில நல்லவைகள் எனினும், அதன் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க நமது பல்லில் அது ஒரு கூட்டம் அமைத்து வெள்ளைநிற பற்களை பழுப்பு நிறமாக்குவதோடு, பல்லில் ஓட்டை விழ வழி செய்கின்றன. நாம் உண்ணும் உணவு பெரும்பாலும் இந்த பாக்டீரியாக்களுக்கு பெறும் தீனிகளாக அமைவதால் அவை கொழுத்து திரிகின்றன. இதன் காரணமாகவே நாள் ஒன்றுக்கு நான்கு முறை பல் துலக்க வேண்டும். அதுவும் ஒவ்வொரு முறை பல துலக்கும்போது பல் சிறு இடைவெளியை மிகவும் சுத்தமாக துலக்க வேண்டும் என அறிவுரை சொல்கிறார்கள். இந்த சிறு இடைவெளியே பின்னாளில் பெறும் துயரமாக காரணமாகிறது. இந்த பாக்டீரியாக்களே பிளேக் எனப்படும் படிமங்களை பல்லில் ஏற்பட வலி செய்கிறது. 

சின்ன சின்ன புண்கள் நமது வாயில் ஏற்படுவதன் மூலம் இந்த பாக்டீரியாக்கள் மென்மேலும் வளர்ச்சி பெறுகின்றன. நாம் தெரியாமல் நமது வாயின் பக்க, முன்  தசைகளில் கடிப்பதால் இந்த சின்ன புண்கள் ஏற்படலாம். நமது பல்லை பாதுகாக்க நாம் அடிக்கடி பல் மருத்துவரை சென்று பார்ப்பது இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. பெரும்பாலோனோர் பல் மருத்துவரை சென்று பார்க்க பயப்படுகின்றனர். 

பல்லில் வலி ஏற்பட்டால் உடனே ஒரு பாரசிட்டமாலோ, ஐபுப்ரோபேனோ போட்டதுடன் சரியென பலர் இருந்துவிடுவதுண்டு. சாதாரண புண்களால் இந்த பல்லின் தசைகளில் சீழ் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது பலருக்கு தெரியாத விசயம், இதன் காரணமாகவே வாய் துர்நாற்றம் ஏற்படுவது உண்டு. நாம் உண்ணும் உணவு மூலமாக நமது வயிற்று துர்நாற்றம் வாயின் மூலமாக வெளிப்படும். இத்தகைய விசயங்களை கண்டு காணாமல் இருப்போர்கள் நாட்டில் மிகவும் அதிகம். ஒரு குளோஸ் அப் பல்பொடியை எடுத்து விலக்கிவிட்டலோ, சூயிங் கம் போன்ற வாசம் தரும் விசயங்களை வாயில் அள்ளிப்போட்டாலோ எல்லா பிரச்சினைகளும் சரியாகி விடும் என கருதுவோர் உண்டு. 

குறைந்தது மூன்றோ அல்லது ஆறு மாதம் ஒருமுறை பல் மருத்துவரை சென்று பார்த்து வருவது மிகவும் நல்லது. சென்சிடிவ் பல் என சொல்வதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். இது எதனால் ஏற்படுகிறது எனில் நமது பல்லில் கீழுள்ள தசையானது பழுதுபட்டுவிடுவதாலும், பல்லை இணைக்கும் நரம்புகள் மீது எளிதாக வெளிப்பொருட்கள் படுவதாலும் இந்த கூசும் உணர்வு ஏற்படுகிறது. இதை சில பல் பொடிகள் மூலம் கட்டுப்படுத்த இயலும், எனினும் பல் மருத்துவரிடம் சென்று காண்பிப்பது நல்லது. 

பல் வலி வந்தால் கிராமப் பகுதிகளில் மூக்கு பொடி வைத்து அந்த வலியை போக்க முயற்சிப்பவர்கள் உண்டு. இப்படியெல்லாம் செய்வது தவறு என்பதை வலியுறுத்தினாலும் அவர்கள் கேட்பதில்லை. புகையிலையின் காரணமாக வாயில் கேன்சர் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். மேலும் பல்லை துலக்கும்போது ரத்தம் வருவது உண்டு, இதற்கு காரணம் பல் தசையில் இணைந்திருக்கும் ரத்த நாளங்கள் உராயப்படுவதாகும், எனவே பல்லை துலக்கும்போது பாத்திரத்தை துலக்குவது போல முரட்டுத்தனமாக துலக்குவது தவிர்த்தல் நலம்.

மேலும் பல் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள உடனே பல் மருத்துவரை அணுகவும். 

பல் மருத்துவரை காண பயந்து கொண்டு பல்லில் உருவான வலியை பொருட்படுத்தாமல் இருந்த ஒரு கல்லூரி மாணவி தனது பல் தசையில் சீழ் பிடித்து அதன் மூலம் இறந்து போனார் என்பது துயரமான செய்தி. 

இந்த பல்லில் உருவாகும் பாக்டீரியாக்கள் இருதய ரத்த நாளங்களை பாதிக்கும் தன்மை உடையது என ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. 

பல் துலக்கியாச்சா? என எவரேனும் கேட்டால் கோபம் படாதீர்கள். பல் துலக்கவில்லை எனில் எந்த நேரமாக இருந்தாலும் சரி உடனே பல் துலக்கிவிடுங்கள். பலர் காபியிலே பல் துலக்கும் பழக்கம் உடையவர்களாக நமது ஊரில் இருப்பார்கள். அவற்றை எல்லாம் தவிர்த்து விடுங்கள். 

வாயை சுத்தப்படுத்தாமல் தண்ணீரோ, காபியோ அருந்தினால் அந்த பாக்டீரியாக்கள் வயிற்றில் சென்று அங்கிருக்கும் அமிலத்தினால் செத்துவிடும் என விவாதம் செய்பவர்கள் உண்டு. இந்த விவாதம் எல்லாம் தள்ளி வைத்துவிட்டு பல்லை துலக்குங்கள். 

இறை அவதாரம் எனினும் அவரும் பல் துலக்க வேண்டும் என்பதை நினைத்துதான் ஆண்டாள் இப்படி எழுதினாரோ என்னவோ?

கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ 
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ 
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. 

வெண்சங்கே உன்னை ஊதுகின்ற அந்த பரந்தாமனின் வாய் வாசனையை கூறாயா என சொல்லும் ஆண்டாளின் கற்பனைதான் எத்தகையது. 

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்பது நாம் நமது மனதை சுத்தமாக வைத்திருப்பதோடு பல்தனையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் சொன்னதுதான். 

பல் இருந்தால் தான் இளிக்க முடியும். பல் இருந்தால் தான் வார்த்தை சொலிக்க முடியும் என இத்துடன் பல் புராணம் முடிக்கிறேன். 

Tuesday 8 November 2011

வேணாம்னா விட்டுருங்க அணுத்தொல்லையை

கூடங்குளத்தில் வேகமாக பயன்பாட்டுக்கு உட்படுத்தவிருக்கும் அணுமின் நிலையத்தை எதிர்த்து ஒரு சாரார் போராட்டம் நடத்தி வருவது வியப்புக்குரியது அல்ல. இதற்கு முக்கிய காரணம் பயம். 

இந்த திட்டம் ராசீவ் காந்தியால ஆரம்பிக்க பட்டது. சோவியத் யூனியன்ல பிரச்சினை வராம இருந்து இருந்தா இந்நேரம் கூடங்குளம்  சூப்பரா வேலை செஞ்சிட்டு இருந்துருக்கும். காலம் கடந்ததால் இந்த கூப்பாடுகள். அதைவிட முக்கியமான ஒன்னு என்னன்னா யுரேனியம் நம்ம நாட்டுல குறைந்த அளவுலதான் கிடைக்குதாம். நாம பல நாடுகள்கிட்ட ஒப்பந்தம் போட்டு இறக்குமதி செய்றம். அதுக்கு எத்தனை கோடி செலவோ? இப்படி கஷ்டப்பட்டு கடனை உடனை வாங்கி 14000  கோடி ரூபாய்ல 2001  ல ஒரு ஒப்பந்தம் போட்டு அப்படி இப்படின்னு கூடங்குளம் அணுமின் நிலையத்த ஆரம்பிக்கிற நேரத்தை பார்த்து சிவ பூஜையில புகுந்த கரடி மாதிரி ஜப்பான் நாட்டுல நடந்த துயர செய்தி லேசு பாசா இருந்த போராட்டத்துக்கு ரொம்ப வசதியா போச்சு. 

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதைமை அப்படின்னு அஞ்சாங்கிளாசுல படிச்சது எல்லோருக்கும் நினைவில இருக்கும் போல. அதுவும் இந்த ஜப்பான் நாட்டுல நடந்த பெரும் துயரத்திற்கு அப்பால உலக நாடுகளே ஒரு நிமிஷம் நமக்கு அணு உலை எல்லாம் தேவையான்னு ஒரு மாநாடு போட்டுகிட்டாங்க அவங்க அவங்க ஊருல. 

எப்படித்தான் இருந்தாலும் துணிஞ்சவனுக்கு துக்கமில்லை அப்படின்னு 1986ல  தற்போதைய உக்ரைன், அன்றைய சோவியத் யூனியன்,  நாட்டுல நடந்த பெரும் அணு உலை விபத்து நடந்தப்பறம் கூட உலகத்துக்காரங்க எதையும் நிறுத்தி வைக்கலையே. இது ஒரு செயற்கை விபத்து. இதனால பாதிக்கப்பட்டவங்க ரொம்ப பேரு. இந்த பூமி எப்பவும் அழிவை எதுத்துதான் போராடுதுன்னு பாதிக்கப்பட்டவங்களுக்காக துக்கம் அனுசரிச்சிட்டு அடுத்த வேலைய அந்த ஊரு மக்கள் கவனிக்க போய்ட்டாங்க. இந்த விபத்தினால சோவியத் யூனியனோட மொத்த பொருளாதாரமே ஆட்டம் கண்டுருச்சி. இந்த  விபத்தினால வந்த அழிவை சரி செய்ய கோடி கோடியா ரூபில்ஸ் செலவாகிப் போச்சு.   ஆனா ஜப்பான் நாட்டுல நடந்த இந்த அணு உலை விபத்து இயற்கை சீற்றத்தினால வந்தது. அங்க கசிஞ்ச கதிரியக்கம் அயர்லாந்து நாட்டுல ரெகார்ட் ஆச்சு அப்படின்னு பேசிகிட்டாங்க. காலம் போகப் போக நம்ம மனுஷ சாதி பல விசயங்களை மறந்துரும். இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சி பாருங்க, புது அணுமின் நிலையத்தை ஜப்பான் நாட்டுக்காரங்க கட்ட ஆரம்பிச்சிருவாங்க, அதுவும் எப்படி தெரியுமா? எந்த இயற்கை சீற்றம் வந்தாலும் நொட்டமுடியாதபடி. அது அவங்களோட போராட்ட குணம். 

நமக்கும் போராட்ட குணம் இருக்கு. உங்களுக்கென்ன தெரியாதா? போராடுவோம், போராடுவோம் அணு உலையை எதிர்த்து போராடுவோம். வைக்காதே வைக்காதே எங்கள் உயிருக்கு உலையை வைக்காதே. போராடுவோம் போராடுவோம் ஊழலை எதிர்த்து போராடுவோம் அப்படின்னு கத்து கத்துனு கத்திட்டு இந்த அரசாங்க பலத்துக்கு முன்னால கடைசியில பம்மிட்டு போறவங்கதான் முக்காவாசி நம்ம ஊருக்காரங்க. 'ஏலே ஒழுங்கா உண்ணாவிரதத்தை நிறுத்திட்டு ஓடிப்போயிரு, சாலைய மறிக்கிறது, கட்டவிடாம தடுக்கிறது அப்படின்னு ஆட்டம் கிட்டம் போட்ட குண்டர் தடுப்பு சட்டம், தீயவர் தடுப்பு சட்டம், அணு உலை அக்கிரமர்கள் சட்டம் அப்படி இப்படி ஆரம்பிச்சி உள்ள போட்டுருவோம்'   என மிரட்டி அடக்கிருவாங்கே. இந்த போராட்டம் இங்க மட்டும் இல்லைங்க, மும்பைக்கு பக்கத்துல ஜைடாபூர் அங்கிர ஊருல புதுசா ஒரு அணு மின் நிலையம் கட்டப்போறத எதிர்த்து அங்க வாழற மக்கள் போராடிகிட்டு இருக்காங்க. பத்தாயிரம் பேரு தங்களுடைய இடம், காடு எல்லாத்தையும் இந்த திட்டத்துக்காக இழக்கனுமாம். மீனவர்கள் தங்களோட மீன் பிடிப்புக்கு பாதிப்பு வரும்னு ஒரே எதிர்ப்பு. மேற்கு வங்காள அரசு 'போங்கடா நீங்களும் உங்க அணுத் தொல்லையும்' அப்படின்னு ஹரிபூர்ல கட்ட கூடாதுன்னு விரட்டி அடிச்சிட்டாங்க. 

அப்துல்கலாம் கனவு காண சொன்னாரு, அது ரொம்ப பேருக்கு ரொம்ப ஈசியா இருந்துச்சி. ஹையா ஐயா சொல்லிட்டாரு அப்படினுட்டு ரொம்ப பேரு கனவு காண ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப ஐயாவும் தன்னோட பங்குக்கு இப்படியெல்லாம் எதிர்க்காதீங்க, விளைவுகள் நினைத்தால் விளைச்சல பார்க்க முடியுமா அப்படிங்கிற ரேஞ்சுக்கு சொல்லிட்டாரு. அதனால ரொம்ப பேரு இந்த போராட்டத்தை கைவிட்டுரலாம்னு யோசனையில இருப்பாய்ங்க அப்படினுட்டு ரொம்ப பேரு அப்துல்கலாம் சொல்றதை கேட்காதீங்க அப்படிங்கிற அளவுக்கு போராட்டத்தை தீவிரபடுத்தி இருக்காங்க. 

நம்ம மக்களோட பயம் நியாயம்தானே. ஒழுங்கா ரோடு போட தெரியாதவங்க கிட்ட போய் இந்த அணு உலைய கொடுத்தா குரங்கு கையில பூமாலை கொடுத்த கதை மாதிரி ஆகிப்போயிரும். போபால் கதை எல்லாம் நமக்கு மறந்து போச்சா. அது மறந்துருக்கும், நமக்கு கோபால் கோபால் அப்படிங்கிற வசனம் தான் நியாபகத்துல இருக்கும். நம்ம நாட்டுல இதுவரைக்கும் ஆறு தடவை இந்த அணு உலை சிறு விபத்து நடந்துருக்கு. இதெல்லாம் சின்ன சின்ன விபத்துதான் அப்படின்னு ஒதுக்கி வைக்க முடியாது. அதே நேரத்துல ஒரு விசயத்தை செஞ்சா ஆயிரத்தெட்டு பிரச்சினை வரும், பிரச்சினைய நினைச்சா வாழ முடியுமாலே. பிரச்சினை வரத்தான் செய்யும்னு சொல்றியள, ஏலே பிரச்சினைக்கு என்ன சொலுசண் வைச்சிருக்க,  ஒழுங்கா சேப்ட்டி பண்ணிகிட்டா எங்களுக்கு என்ன பிரச்சினை. அதை சொல்லுவே அப்படிங்கிற மக்களோட கோரிக்கை நியாயம் தானே. ஆனால் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடிமா என அரசுதனை கேட்டால் அவர்கள் என்ன சித்திரகுப்தர்களையா மந்திரிசபையில் உட்கார வைத்து இருக்கிறார்கள், கணக்குகளை எல்லாம் மாற்றி எழுத. 

மின்சாரம் எப்படி தயாரிக்கிறது அப்படிங்கிறதை பத்தியும், இந்த அணு உலை எப்படி செயல்படுது, வேறு மாற்று வழிகள் என்ன எனபதையும், ஐசொடோப்கள், புளுடோனியம், யுரேனியம் அதனோட 'பாதி வாழ்க்கை காலம்' (4600 மில்லியன் வருடங்கள் அல்லது 4.6  பில்லியன் வருடங்கள் யுரேனியம் பாதியா குறைய), ஆல்பா, பீட்டா, காமா போன்ற கதிர்கள் பத்தின தகவல்களை, இதனால் ஏற்படும் விளைவுகளை இன்னொரு பதிவுல விளக்கமா பார்ப்போம். அப்பத்தான் நம்மவங்களோட பயம் நியாயமா இல்லையா அப்படின்னு தெரியும். 


சரி அதெல்லாம் இருக்கட்டும் என்னதான் முடிவு. 

அணு உலை வேணுங்கிறவங்க தமிழ்நாட்டுல வாழட்டும். 'அணு உலை வேணாம்னு நினைச்சீங்கன்னா, உங்க போராட்டம் ஜெயிக்காதுன்னு ஆகிப்போச்சுனா ஒரே வழி இருக்கிறது. தமிழகத்தை விட்டு மட்டுமில்லை, இந்தியாவை விட்டே ஓடிப்போயிருங்க அப்படின்னு கூட நாலு ஐஞ்சு பேரு அறிவுரை சொல்லலாம். எல்லாத்துக்கும் தலையாட்டிக்கிட்டே அவதிபட்டுட்டு அங்கேயே இருங்க. 

மத்தவங்க சொல்றது இருக்கட்டும், நான் என்ன சொல்ல வரேன்னா 'ஊருல மின் பற்றாக்குறை ரொம்ப ஜாஸ்தி. இதுக்கு உற்பத்தி அளவு குறைச்சல் மட்டுமில்லை காரணம். நாம அளவோட மின்சாரத்தை உபயோகம் செய்றது இல்ல. புது வீடு, புது ஏசி, புது சலவை மெசினு, புது மோட்டாரு அப்படின்னு சகல வசதிகளையும் பெருக்கி வைச்சிட்டு நைட்டுல தூங்கறப்ப கூட லைட்ட போட்டு தூங்குறது, நல்ல மழை பெய்யும் ஆனாலும் வாய்க்காலுல தண்ணி விடறது, வக்காளி பொதுக்கூட்டம் போட்டாலும் சரி, ஒரு படம் ரிலீசானாலும் சரி, பொண்ணு வயசுக்கு வந்துட்டாலும் சரி, மாப்பிளைக்கு கல்யாணம் வைச்சாலும் சரி, அம்மனுக்கு தெருவெல்லாம் தேரு இழுத்தாலும் சரி, நட்டு வைச்சிருக்கிற அத்தனை போஸ்ட்ல இருந்தும் கரண்ட களவாடறது, குளிர்காலத்துல ஏசி தியேட்டுர்ல போய் உட்கார்ந்துட்டு ஏசிய போட சொல்லி அலம்பல் பண்றது, அல்லாப்பயகளும் தூங்கனப்புறம் கூட விளம்பர தட்டிக்கு லைட்டு கனக்சன் கொடுக்குறது   இப்படி சகட்டு மேனிக்கு நாம மின்சாரத்தை வேஸ்ட் பண்றத நிறுத்தறதுக்கு ஒரு போராட்டம் நடத்தனும். ஜெயராம் ரமேஷும், கோபால கிருஷ்ணனும், யாரு இவங்க அப்படின்னு கேட்டு தொலைசிராதீங்க, தங்களோட வாய்ச காட்டட்டும். நாமளும் வாய்ச மட்டும் காட்டாம உடனே வெட்டியா ஓடிட்டு இருக்கிற அத்தனை எலேக்டரிகளை நிறுத்துவோம். 

Monday 7 November 2011

புத்தகங்களும் ஆராய்ச்சி கனவுகளும்

 நுனிப்புல் பாகம் இரண்டு தயாராகி சில வருடங்கள் ஆகிவிட்டது. அந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என நண்பர் அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களிடம் சென்ற வருடம் விசாரித்தபோது 'தொலைக்கப்பட்ட தேடல்கள்' சிறுகதை தொகுப்பு இன்னமும் அப்படியே இருக்கிறது, நீங்கள் அனுப்பி வைத்த நுனிப்புல் பாகம் ஒன்று நாவல் இன்னமும் அப்படியே இருக்கிறது. ஒரு அறை எல்லாம் புத்தகங்களாக நிரம்பி வழிகின்றன என்றார். சரி என்ன செய்வது சற்று தாமதிக்கலாம் என விட்டுவிட்டேன். சில பல காரணங்களால் வலையுலகத்தில், இணைய உலகத்தில் பழகிய பலர் தொடர்பில் தற்போது இல்லவே இல்லை. இதற்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம் என நான் நினைத்தாலும், என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என எவருமே நினைக்கவில்லை என்பது சற்று வித்தியாசமாகவே உணர முடிந்தது. வாழ்க்கை புரிந்து போனது. 

சரி, தம்பி செல்வமுரளியிடம் விசாரிப்போம் என சில வருடங்கள் முன்னர் முதலில் கேட்டபோது, நீங்கள் எந்த புத்தகத்தையும், எந்த பதிகப்பதார் மூலமாவது வெளியிடுங்கள் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை ஆனால் ஒரு ஆராய்ச்சியாளனின் பாதையை நீங்கள் எழுதி முடித்தபின்னர் எனது பதிப்பகத்தின் மூலம் தான் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். சரி என ஒப்புதல் தந்தாலும் இன்னமும் எழுதி முடிக்கவில்லை. இதில் பல விசயங்கள் இணைத்து, கழித்து பின்னர் வெளியிட வேண்டும். எனவே இன்னும் சில வருடம் கால தாமதம் ஆகலாம். 

எனது மகன் பெறும் 'ப்ளாக் பெல்ட்' கராத்தே சான்றிதழ் வழங்கும் விழா அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடக்கலாம். அதற்கு எனது புத்தகம் ஒன்றை வெளியிடலாம் என கராத்தே மாஸ்டர் சில மாதங்கள் முன்னர் சொன்னபோது எனக்கு மனதில் இருந்த இரண்டு கதைகள் ஒன்று நுனிப்புல் பாகம் இரண்டு, மற்றொன்று அடியார்க்கெல்லாம் அடியார். நுனிப்புல் பாகம் இரண்டு வெளியிட்டால் தான் நுனிப்புல் பாகம் மூன்று அடுத்த வருடம் எழுதலாம் என்கிற யோசனை வேறு. என்ன செய்வது?

ஒரு நல்ல பதிப்பகம் வேண்டும், புத்தகங்களை மட்டும் வெளியிட்டு விட்டு அத்தோடு நிறுத்திவிடாமல் அதை நல்ல முறையில் விற்பனை செய்து அதில் வரும் பணத்தை பல தொண்டு நிறுவனங்களுக்கு தர வேண்டும். இதை சிரத்தையுடன் செய்வது யார்? எழுதும் ஆசிரியன் எனக்கே இந்த விளம்பர புத்தி இல்லாமல் இருந்தால் எவரைப் போய் குற்றம் சொல்வது? ஆங்கில நாவல் எழுத வேண்டும் என ஆவலுடன் தொடங்கிய எழுத்து ஒரு அத்தியாயம் கூட தாண்டாமல் அப்படியே இருக்கிறது. 

இந்த புத்தகங்களை எல்லாம் சிறப்பாக அச்சிட ஏதேனும் நிறுவனம் கிடைக்குமா? நாமே பதிப்பகம் என போட்டு வெளியிடலாமா எனும் ஓராயிரம் யோசனையுடன் புத்தக கனவுகள் அப்படியே நிற்கின்றன. 

நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இதோடு பதினான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு வருடத்தையும் திரும்பி பார்க்கும்போது ஏதோ ஒன்று மிச்சப்பட்டு போனது போன்றே உணர்வுகள். 

பலமுறை கிடைத்த தொடர் தோல்விகள். பலமுறை ஏற்பட்ட தடங்கல்கள். இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும், மக்கள் பயன் பெறுவார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு மருந்து ஆமை போலவே நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இதை செய்து தாருங்கள், அதை செய்து தாருங்கள் என பல ஆய்வுகள் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். இன்னமும் மருந்து வெளிவந்தபாடில்லை. 

புதிய மருந்துகள் கண்டுபிடிக்க எண்ணற்ற விலங்குகளை கொன்றது மட்டுமே மிச்சமாக இருக்கிறது. சில ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் சில மூலக்கூறுகளை காப்புரிமை செய்து வைத்திருக்கிறார்கள், ஆனால் எனக்கு அதில் உரிமை என்றே சொல்லிவிட்டார்கள். பல ஆய்வு கட்டுரைகள் வெளியிட முடியாத நிலையில் இருக்கின்றன. எனது ஆய்வு குறித்த முழு விபரங்களும் எங்கேயும் சொல்ல முடியாத நிலைதான் நிலவுகிறது. இரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்றே சொல்கிறார்கள். மக்கள் பயன் பெற எவர் பெயர் எடுத்தால் என்ன என்கிற மனநிலையே எனக்கு இருக்கிறது. 
இந்த ஆராய்ச்சி கனவுகள் கூட முழுமை பெறாமல் அப்படியே நிற்கின்றன.

கனவுகள்தனை நிறைவேற்றும் முயற்சிக்கான போராட்டம் தொடரட்டும்.