Wednesday 29 September 2010

இந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் - 2

சென்னையிலிருந்து அருப்புகோட்டைக்கு ஏழு மணி நேரத்தில் வாகனத்தில் சென்றது ஆச்சர்யம் தான். ஆனால் அதிர்ச்சியாகவும் இருந்தது. இன்னும் சாலைகள் முழுவதும் போட்டு முடிக்கப்படவில்லை. பல இடங்களில் யார் முன்னர் செல்வது, யார் நின்று செல்வது என புரியவே முடியாதபடி சாலை அமைப்பு. சாலையில் இருந்து வலப்பக்கம் திரும்பும்போது எந்த அறிவிப்பும் இல்லை. திடீரென தவறான பாதையில் வரும் வாகனங்கள். நமது ஊர் மக்கள் திறமைசாலிகள்தான். எந்த சூழலிலும் வாழ்ந்துவிடும் அளவுக்கு மிகவும் திறமைசாலிகள்தான். போதிய திறமை இல்லாத காரணத்தால் நான் இந்தியாவில் வாகனத்தை ஓட்டவே இல்லை.

முதல் நாள் எங்கும் செல்லாமல் கழிந்தது. அடுத்த நாள் மதுரைக்கு சென்று வந்தோம். போத்தீஸ் கடையில் மனிதர்கள்! எங்கு பார்த்தாலும் மனிதர்கள். அங்கு வேலை பார்ப்பவர்கள் மிகவும் அதிகம். இன்னும் கடை முழுவதும் தயாராகவில்லை என்றே சொல்லலாம். மதுரை எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்தனை சுற்றியிருந்த கடைகள் மதுரை மாட்டுத்தாவனிக்கு இடப்பெயர்ச்சி ஆகி கொண்டிருந்தது. இருப்பினும் மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி எங்கும் கூட்டம். பீமாஸ் எனப்படும் நகைகடையிலும் மனிதர்கள். வாகனங்கள் நிறுத்த வழியின்றி சாலைகள் எல்லாம் சிறு வாகனங்கள் நிரம்பி இருக்கிறது. லண்டனில் நகை கொடுத்து நகை வாங்கினால் நம்மிடம் இருந்து வாங்கும் நகைக்கு அவர்கள் தரும் விலை இருபது சதவிகிதம் கூட இருக்காது. ஆனால் தமிழகத்தில் விற்கும் விலைக்கே வாங்கும் விலை நிர்ணயிக்கிறார்கள். தொழிலில், விற்பனையில், வியாபாரத்தில் கொடிகட்டும் நம்மவர்கள் திறமைசாலிகள்.

அன்று இரவு கிராமத்தில் பூப்புனித நீராட்டு விழா. சடங்குகள் இன்னும் தொலைந்து போகவில்லை என்பதை காட்டும் வண்ணம் ஒலித்து கொண்டிருந்த குழாய் ரேடியோ. உற்சாகமாக கலந்து கொண்ட மக்கள். இந்த விழா பெண்ணுக்கு நடத்தப்படுவது குறித்து இப்பொழுதெல்லாம் பெரும் விவாதம் எழுப்பப்படுவது உண்டு. ஆனால் கிராமங்களில் இந்த சடங்கு உறவுமுறைகளை இணைக்கும் வண்ணமாகவே இருந்து வருகிறது. முன்னர் எல்லாம் இலைமறை காயாகவே பேசப்படும் இந்த விசயங்கள் எல்லாம் 'அம்மா, அது உங்க காலம்' என வெளிப்படையாகவே பேசும் நவநாகரிகம் இன்னும் கிராமத்தில் வளர்ந்திருக்கவில்லை. விழா முடிந்ததாக அறிவிக்கப்படும் வண்ணமாக உணவு பரிமாற்றம். எத்தனை பேர் மகிழ்வுடன் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். உறவுகள் ஒட்டாத நகரம் எவருக்கு தேவை.

இணையம் மறந்து போயிருந்தேன். இணைய உறவுகள் மறந்து போயிருந்தேன். முத்தமிழ்மன்ற கூட்டம் ஒன்று திருவண்ணாமலையில் நடைபெற இருப்பதாக அறிந்து இருந்ததால், அன்றே நண்பர் ரத்தினகிரியை தொடர்பு கொண்டேன். மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டதாக சொன்னார். நண்பர் செல்வமுரளியிடமும் பேசினேன். தோழி சூரியவிடமும் பேசினேன். எழுத்துலக நண்பர்கள்தனை சந்திக்கும் ஆவல் அதிகமாகவே இருந்தது.

அடுத்த நாள் எனது பிறந்த ஊருக்கு சென்றேன். மேற்கு தெருவில் ஒரு வீடு எழுதிய மனம் உண்மையிலே அழுதது. நான் வருவேன், என் சகோதரன் வருவான் என எந்த ஊருக்கும் செல்லாமல், லண்டன் வரும் வாய்ப்பு இருந்தும் அதை தட்டிக் கழித்துவிட்ட எனது அன்னை இல்லாத வீடு. கடவுள் தொழுதல் கண்ணை விட்டு அகலவில்லை. நுனிப்புல்லில் எழுதிய நாச்சாரம்மாள் வீடு. மனம் ஒருபோதும் மறுப்பதில்லை. நம்பிக்கைகள் விருட்சமாக இருக்கிறது. இறைவன் மறுக்கவே முடிவதில்லை. அமைதியாய் வேண்டுதல், உள்மனதில் ஆயிரம் கேள்விகள். நம்பிக்கைகளை தொலைக்கும் தைரியம் ஒருபோதும் ஊரில் வருவதே இல்லை.

உறவுகளை பார்த்த திருப்தி. மகிழ்வுடன் பேசிய தருணங்கள். ஒரு இரவு கூட தங்காமல் திரும்பினேன். தந்தையை என்னுடன் வந்து தங்க சொல்லும் அளவுக்கு தலைக்கனம். பணம் தரும் வசதிகளில் பழையவை புறக்கணிக்கப்படுகின்றன, அல்லது புறக்கணிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம். பல விசயங்கள் வேதனைபடுத்தின. இதுதான் வாழ்க்கை என சமாதானம் வசதியாகவே இருந்தது. அவசர அவசரமாக திரும்பினோம்.

அடுத்த தினம் மீண்டும் மதுரை, மீண்டும் போத்தீஸ். இன்னும் சில கடைகள். அருப்புகோட்டையும், விருதுநகரும் மதுரை அளவுக்கு இன்னும் வளரவில்லை. வியாழக்கிழமை ஒரு திருமணம். அதற்கு முதல் தினமே வளையல் அணிவிக்கும் நிகழ்வு. எந்த ஒரு திருமண நிகழ்விலும் இதுபோன்ற நிகழ்வு பார்த்ததில்லை. மிகவும் சிறப்பாக இருந்தது. பலர் ஆவலுடன் வளையல்கள் அணிந்து கொண்டார்கள். தூத்துக்குடி செல்லும் சாலையில் இருக்கும் ஒரு ஆலயம். பிரமிக்க வைக்கும் அளவில் அமைக்கப்பட்ட சிலைகள். நாற்பது நாட்களாக பூமிக்குள் இருந்த மனிதர் அதாவது சித்தர். வியக்கவைக்கும் அதிசயங்கள் நமது ஊரில் மிகவும் அதிகம். வினாக்களும் உடன் எழுவதை தவிர்க்கவே இயல்வதில்லை. ஆனால் பிறர் நம்பிக்கையை உரசும் அளவுக்கு எதுவும் பேச வருவதில்லை.

அடுத்த நாள் திருமணம். கோவிலில் வைத்து மிகவும் சிறப்பாகவே நடந்தது. திருமணம் முடிந்த உடன் பந்திக்கு பரபரக்கும் மக்கள். அடுத்த வேலை பார்க்க வேண்டும் என ஓடும் அவசரம். பலருடன் நிதானமாக பேச இயலாத தருணம் அது. நான்கே மணி நேரத்தில் அனைவரும் பறந்து போனார்கள்.

அடுத்த நாள் காங்கேயனத்தம் எனும் ஊரில் கும்பாபிஷேகம். எழுத்துலக நண்பர்கள் எவரும் தொடர்பில் இல்லை. இணையம் செல்லாமல் ஏழு நாட்கள், வாழ்க்கை வசதியாகத்தான் இருந்தது. வலைப்பூ பற்றி எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. வாழ்க்கையில் வேலையென அன்றாடம் உழலும் மக்களுக்கு எழுதுவதற்கு ஆயிரமாயிரம் கதைகள் இருக்கும், ஆனால் அவர்களுக்கு வக்கணையாக எழுதும் வசதிகள் இருக்கவில்லை. அறிக்கைகள் விட்டு கொண்டிருக்கும் அனாவசியம் அவர்களுக்கு இருப்பதில்லை.

(தொடரும்)

Tuesday 28 September 2010

எந்திரன் - முதல் விமர்சனம் இலண்டனிலிருந்துதான்

எந்திரன் இம்மாதம் முப்பதாம் தேதி அன்றே லண்டன் திரை அரங்குகளில் வெளியாகிறது. முதல் மூன்று காட்சிகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

படம் பார்த்துதான் விமர்சனம் எழுத வேண்டும் என எந்த விதியும் இல்லை. படம் பார்க்காமலே படத்துக்கு மதிப்பெண்கள் தந்துவிடலாம் எனும் அளவுக்கு எந்திரன் பிரமாண்டமாக இருக்கிறது.

ரஜினி - இளமை துள்ளல். இதைப் போல இன்னும் சில என்ன பல வருடங்கள் நடிக்கலாம்.

ரஹமான்  -  எந்திரத்தில் அங்கங்கே கோளாறு.

சங்கர் - இனி தமிழ் படம் இயக்கும் வாய்ப்பு இவருக்கு இருக்காது.

கலாநிதி மாறன் - பலபல பளபள கோடிகளை தேர்தல் நிதிக்காக இனி ஒதுக்கலாம்.

மொத்தத்தில் எந்திரன் வியாபாரத்தில் தந்திரன்

45/50

இத்துடன் எந்திரன் சம்பந்தப்பட்ட பதிவுகள் காலவரையற்று நிறுத்தப்படுகிறது.

நான் இறந்து போயிருந்தேன்

 நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது

பதினேழு முறை
நான் கொண்டு சென்று
பதினெட்டாம் முறையாய்
நான் இறந்து போனபின்

அஷ்டோத்திர மந்திரம் கற்று
உலகம் நலம் பெற வேண்டுமெனும்
ஒரு உயரிய உள்ளம் கொண்ட
அடியேன் ராமனுஜதாசன்
கதை கேட்டு

நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது

யாம் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
உள்ளூர மோதியபோது

நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது

நான் நான் நான்
என நாணமே இல்லாமல்
செருக்குடன் கிறுக்குப் பிடித்த
நான் நான் நான் 

நான் இருந்தபோது
கவலைகள் என்னை
தின்று கொண்டிருந்தது

நான் இறந்தபோது
கவலைகளை
தின்று கொண்டிருந்தேன்.

நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது




கவிதைகள் எழுதி மின்னஞ்சல் அனுப்ப : bharathphysics2010@gmail.com

Monday 27 September 2010

தோழிகள் ஒரு சாபக்கேடு

1. நல்லாவே சமைப்பேன் 


2. எனது மனைவி போடும் கடிவாளம்    


3. பெண்களால் ஏற்படும் பிரச்சினைகள் 

4. சபலத்தில் அல்லாடும் மனம் 


5. விளையாட்டுப் பெண்கள் 

'என்னது எனது பெயர் போட்டு இருக்கிறாய்' என அந்த ஆத்திரத்தில் கத்திவிட்டேன். 'உங்கள் பெயர் போட்டதில் என்ன தவறு, இந்த பெயர் உங்களுக்கு மட்டுமா இருக்கிறது' என்றாள் அவள். எனது மனைவி ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

'பொதுவாக காதலனை, காதலியை மணம் முடிக்க இயலாமல், வேறு ஒருவருடன் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு பிள்ளை பெற்றுக் கொள்பவர்கள் தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் பெயர் வைப்பார்கள். நினைவுகளில் எப்போதும் இருக்கிறார்கள் என சொல்லும் ஒரு போலித்தனம். ஆனால் நான் அப்படி இல்லை' என்றாள்.

என்ன ஆச்சுங்க, என்ன பிரச்சினை என்றாள் என் மனைவி. இதோ இந்த பத்திரிகையில் எனது பெயர் மணமகன் எனும் இடத்தில் இருந்தது, அதுதான் எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது என்றேன். என்னங்க, இவங்க சொல்றமாதிரி இந்த பெரு உங்களுக்கு மட்டுமா சொந்தம் என சிரித்தாள் எனது மனைவி.

அசடு வழிந்தேன். எல்லாம் நன்றாக இருக்கிறது. அச்சடிக்கலாம் என்றேன் . அப்படியெனில் வரவேற்பு உங்கள் இருவர் தலைமையில் என இணைத்து விடட்டுமா என்றாள். எனது மனைவி அதெல்லாம் எதற்கு என மறுத்துவிட்டாள். நானும் எனது பங்குக்கு மறுப்பு சொன்னேன். எனது வாழ்க்கையையே குலைத்து போட இருந்தவள். அவளையா என் தோழியாக நினைத்து முதன் முதலில் வேலைக்கு சேர்ந்ததும் எல்லாம் சொல்லி தந்தேன். நினைக்கும் போதே எனக்கு நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது. அவள் போனதும்தான் எனக்கு நிம்மதியாக இருந்தது.

அவ மேல உங்களுக்கு ஆசை இருக்குல என்றார்  என் மனைவி. எனக்கு எரிச்சலாக போய்விட்டது. இப்பொழுதுதான் ஒரு சனியனை விரட்டி அடித்தேன். பெண் மட்டும் போய்விட்டாள். ஆனால் சனியன் எனது மனைவி மீது அமர்ந்துவிட்டதோ என அச்சம் அடைந்தேன். அவள் மீது ஆசை இருந்தால் எதற்கு நான் அவளை ஒதுக்க வேண்டும் என கேட்டேன். அதற்கு அவர்  வெறுப்பில் தான் ஆசை அதிகம் வளருமாம் என்றார். அன்பில் தான் ஆசை அதிகரிக்கும் என்றல்லவா படித்து இருக்கிறேன் என்றேன்.

உங்கள் பெயரை பத்திரிகையில் பார்த்ததும் உங்களுக்குள் தேனாட்டம் இனித்து இருக்குமே என்றார். தேளாட்டம் இருந்தது என வெடுக்கென பேசினேன். நச்சரித்து கொண்டே இருந்தார். இனிமேல் உன்னுடனே இருபத்தி நான்கு மணி நேரம் இருக்கிறேன் என அவசரமாக சொல்லிவிட்டேன். என்னிடம் எதையோ மறைக்க பார்க்கிறீர்கள் என்றார். எதுவும் இல்லை என சத்தியம் செய்தேன்.

வீட்டினுள் இருக்கப் பிடிக்காமல் ஊரின் தெருக்களில் உலாத்திக் கொண்டு இருந்தேன். 'மாமா' என வந்தாள் என் மாமா மகள். அடுத்த ஒரு தொல்லையா என நினைத்தேன். கைபேசியை எடுத்தாள். அவளுடைய முன்னால் காதலுனுக்கு அவள்  அனுப்பிய தூது ஒன்றை காட்டினாள்.

வருத்தம் தரும் செய்தி கேட்டேன். வாழ்க்கை நீ இழக்கவில்லை. உனக்கு வாழ்க்கைப்பட நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். நாளை எனது அலுவலகத்தில் மாலை சந்திக்கலாம். அவள் அனுப்பிய செய்தி படித்ததும் அதிர்ந்தேன்.

நீ என்ன காரணம் செய்து கொண்டு இருக்கிறாய் தெரியுமா? உனது வாழ்க்கையை வீணடித்து விடப்போகிறாய் என எச்சரித்தேன். அவள் அதற்கு சிரித்தாள். அவன் வரமாட்டான், குற்ற உணர்ச்சியில் அவன் குறுகி போய் இருப்பான் என்றாள். நான் என்னுடன் வேலை பார்த்த பெண்ணின் கதையை சுருக்கமாக சொன்னேன்.

நான் சொல்லித்தந்த டெக்னிக்கு மாமா அது, அதை உங்களுக்கே காட்டிட்டா, என விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் விழுந்து விழுந்து சிரித்ததில் எனது மனம் புண்ணாகி கொண்டு இருந்தது. இவளைப் போய் ஒரு தோழியாய் நினைத்தோமே என மனம் வருந்தியது.

வீட்டினை அடைந்தேன். உங்கள் மாமா மகளுடன் இந்த இரவில் என்ன அப்படி இளிப்பு என்றார். சிரித்தது நான் இல்லை, அவள் தான் என்றேன். பெரிய நாகேசுனு உங்களுக்கு நினைப்போ என்றார். என்ன சொல்வது என தெரியவில்லை.

எத்தனையோ நல்ல தோழிகள் எனக்கு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அவரவர் குடும்பத்தை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். குடும்பமாக வருகிறார்கள், குடும்பமாக போகிறார்கள். அவர்களை பற்றியெல்லாம் எனது மனைவி ஒருபோதும் தவறாக பேசியதே இல்லை. ஆனால் இந்த இருவர் மூலம் நான் படும் தொல்லைகள் மிக அதிகம். எவர் கொடுத்த சாபமோ என உறங்கிப் போனேன்.

அடுத்த நாள் எனது மாமாவிடம் அவரது மகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் பண்ணி வைக்குமாறு சொன்னேன். அவளது செயல்கள் பற்றி எச்சரித்தேன். அந்த எச்சரிக்கை எனக்கே வினையாக வந்து சேர்ந்தது.

அன்று இரவே எனது வீட்டுக்கு வந்து எனது மாமா மகள் கன்னாபின்னாவென்று சத்தம் போட்டாள். எனது மனைவிக்கு பொறுக்க இயலவில்லை. பளார் பளார் என எனது மாமா மகளை அறைந்தார். யாரைப் பத்தி எனக்கு முன்னால இப்படி பேசுவ என எனது மனைவி கொண்ட கோபத்தில் அவரது பலநாள் ஆத்திரம் தெரிந்தது. பிள்ளைதாட்சியா இருக்கே, இல்ல நிலைமையே வேற என அழுதபடி வெளியேறினாள் எனது மாமா மகள்.

கைகால்கள் எல்லாம் நடுங்கியபடி அமர்ந்து இருந்தேன். கோவிலுக்கு போய்விட்டு வந்த எனது பெற்றோர்கள் என்ன ஆச்சு என்றார்கள். சிறிது நேரத்தில் எனது மாமாவும், அத்தையும் வாசலில் வந்து நின்றார்கள். ஓ என எனக்கு அழவேண்டும் போலிருந்தது.

வைரவாசல் (சவால் சிறுகதை)




நெடு நெடுவென உயரமும், தோசை சட்டி போன்ற பரந்த முகமும் உடைய ஐம்பது வயது மதிக்கத்தக்க பரந்தாமன் மதிய நேர சூரிய வெளிச்சத்தில் தனது வீட்டு மாடியில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார்.  வழுக்கைத்தலையில் இருந்து அவரது நெற்றியில் வியர்வைத்துளிகள் கோடு போட்டுக் கொண்டிருந்தது. அந்த வியர்வைத்துளிகள் புதிய ஆற்றுப்பாதை போல அமைந்து இருந்தது.                                                                 

வறட்சியான காலத்தில் எப்படி ஆறு வற்றி போய்விடுமோ அதைப்போலவே சட்டென அந்த வியர்வைத்துளிகளை தனது வலது பக்க தோளில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த துண்டினால் துடைத்து விட்டார். 'சே என்ன வெயில்' என வெயிலில் நடந்து கொண்டே  அழுத்துக் கொண்டார்.       

நேரத்தைப் பார்த்தார். மணி சரியாக பன்னிரண்டு என காட்டிக் கொண்டிருந்தது. பசிக்க வேறு ஆரம்பித்தது. பரந்தாமன் தனது ஒரு கைப்பேசியை எடுத்தார். காமினியின்  கைப்பேசியின் எண்களை ஒவ்வொன்றாக அழுத்தினார். மறுபுறம் 'வைரத்தைக்  கொண்டு வருவேன், தைரியமாய் இருந்து கொள்ளுங்கள்' என ஒலித்தது. சிலமுறை அதே வரிகளை ஒலித்தவுடன் அடங்கிப் போனது. 'ஏன் இன்னும் போன் எடுக்கலை இந்த காமினி' என மனதுக்குள் கேட்டுக்கொண்டார்.

''வெயிலுல குளிர் காயறீங்களா, வந்து சாப்பிட்டு போங்க'' என பரந்தாமனின் மனைவி பரமேஸ்வரி வீட்டின் கீழ் தளத்தில் இருந்து கத்தினார். சாப்பாடு என்றதும் மேலும் பசிக்க ஆரம்பித்தது. மீண்டும் காமினி எண்களை அழுத்தினார். அதே பாடல். அதே அடக்கம். இருபது முறை இதுவரை அழைத்துவிட்டதாக கைப்பேசி கணக்கு காட்டிக் கொண்டிருந்தது.

 மாடியிலிருந்து கீழிறங்கி வந்தார். அவசரம் அவசரமாக சாப்பிட்டார். இரண்டு மூன்று முறை புரையேறிவிட்டது. ''யாரு நினைக்கிறாங்களோ இந்த நேரத்தில'' என பரமேஸ்வரி சிறிது சாதம் எடுத்து வைத்தார். ''அந்த காமினி பொண்ணுதான் நினைக்கிறாளோ என்னவோ, அவளுக்கு போன் போட்டு பார்த்தேன், ஆனா அவ எடுக்கலை'' என்றார். ''ஏன் நம்ம பொண்ணு நினைக்கமாட்டாளா'' அப்பொழுது பரந்தாமனின் கைப்பேசி ஒலித்தது. அவசரமாக எடுத்தார். மனைவியை பார்த்தார்.

மறுமுனையில்,

''சார், நான் டாக்டர்.காமினி பேசறேன்''

''எங்கே இருக்கே''

''ஒரு முக்கியமான ஆப்பரேசன் வேலை வந்திருச்சி சார். இப்போதான் முடிச்சிட்டு எங்க மருத்துவமனையில என்னோட அறையிலதான் இருக்கேன், இன்னும் கொஞ்ச நேரத்தில வைரவாசல் கிளம்பிருவேன். வயர் எல்லாம் அப்படி அப்படியே மாட்டிக் கிடக்கு, கழட்டனும்''

''இன்னைக்கு ராத்திரியே வந்து சேர்ந்துருவியா''

''வந்துருவேன் சார், ஆனா அந்த சிவா என்னை வாட்ச் பண்ணிட்டே இருக்கான், இப்போ கூட எங்க மருத்துவமனையிலதான் இருக்கான்''

''அவனுக்கு ஒரு மயக்க மருந்து ஊசியை நறுக்குன்னு குத்திட்டு போ''

''அதெல்லாம் வேணாம் சார். அவன் கண்ணுக்கு தெரியாம வைரவாசல் போகணும், அதுதான் எனக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது''

''அவன் கூட யாராச்சும் இருக்காங்களா''

''தெரியலை சார்'' 

''சரி''

''அப்புறம் பேசறேன் சார்''

தனது முகத்தில் மீண்டும் மாஸ்க்தனை அணிந்து கொண்டாள். சிறிது நேரத்தில் அந்த அறையில்  டாக்டர் ரகசியன் உள்ளே நுழைந்தார்.

''ஹௌ இஸ் பேசன்ட் நௌ காமினி''

'' பைன் டாக்டர்''

''யு ஹவேன்ட் ரிமுவ்ட் யுவர் மாஸ்க்''

'' வில் டூ சார்''

'' தேங்க்ஸ் பார் திஸ் ஹெல்ப், யு கேன் லீவ் நௌ''

''ஓகே சார்'' 

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

 ''ஆ'' என சின்ன சத்தம் எழுப்பிக் கொண்டாள். புல்தரை மெத்தென இருந்தாலும் மலர் உடம்பில் முள்ளாகத்தான் குத்தியது. தனது கைப்பையில் எல்லாம் சரிபார்த்து கொண்டாள். தான் அணிந்து இருந்த வெள்ளை கோட்டினை கழற்றினாள். கைப்பையில் இருந்து ஒரு சிறிய பையை எடுத்து கோட்டினை வேகமாக மடித்து அதற்குள் வைத்தாள்.

அங்கிருந்து ஆட்டோ ஒன்றில் ஏறி நேராக திருச்சி பேருந்து நிலையம் அடைந்தாள். வெகு வேகமாக தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் ஏறினாள். 

''வைரவாசலுக்கு ஒரு டிக்கட்'' 

''வண்டி நிக்காதும்மா'' 

''வைரவாசலுக்கு அடுத்த ஸ்டாப்ல இறங்கிகிறேன்'' 

காற்று சன்னல் வழியாக படபடவென அடித்தது. ஒரு கனவு காணலாம் என்று நினைத்துப் பார்த்தாள். ஆனால்  மனம்  அனுமதி தரவில்லை. தனது சிறிய வயது காலங்களை எல்லாம் அசை போட நினைத்தாள். அதற்கும் மனம் அனுமதி தரவில்லை. வைரவாசல் அடைந்ததும் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என  சிந்திக்க நினைத்தாள். அதுவும் இயலவில்லை. உறங்குவது போன்று கண்களை வைத்துக் கொண்டாள். மனம் உறங்கிப் போனது.

வைரவாசல் ஊர்தனை பேருந்து நெருங்கியது. இதை அறிந்த காமினி பேருந்தின் சன்னல் வழியே குதிக்கலாமா என எண்ணினாள். எலும்பு கூட தேறாது என படி அருகில் வந்தாள். ஓரிடத்தில் பேருந்து மெதுவாக செல்லவே ஓடும் பேருந்தில் இருந்து கீழிறங்கி பேருந்துடன் சிறிது தூரம் ஓடி நின்றாள். இரண்டாவது தடவை தப்பித்தோம் என நினைத்துக் கொண்டாள்.

ஊர் அமைதியாக இருந்தது. அங்கும் இங்குமாக மனிதர்கள் இருந்தார்கள். 

''இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வீடு எது?''

''நேராப் போய் கிழக்கே போங்க'' 

வழி சொன்னவர்கள் காமினியை சற்று நேரம் கழித்து பின் தொடர்ந்தார்கள். காமினி,  சுப்பிரமணி வீட்டினை அடைந்தாள்.  அவள் சற்றும் எதிர்பாராத வண்ணம் வீட்டினில் உள்ளே இருந்து சிவா வெளிப்பட்டான். அதிர்ச்சியில் ஒரு கணம் திகைத்து போனாள் காமினி.
“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

''சிவா....'' 

''நான் திருடன் தான், கொள்ளைக்காரன் தான். எப்படிப்பட்டவனா இருந்தா உங்களுக்கு என்ன''

''நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை'' 

''உனக்கு தெரிஞ்ச ரகசியம் எனக்கு தெரியாதா?''

அப்பொழுது சிவாவின் கைகளில் சட்டென பெரும் கல் ஒன்று விழுந்தது. துப்பாக்கி சற்று தள்ளி சென்று விழுந்தது.  சிலர் ஓடி வந்து சிவாவினை வளைத்தார்கள்.
''போங்க, இவனை நாங்க பாத்துக்கிறோம், டேய் இவன் காரை அடிச்சி நொறுக்குங்கடா'' 

சுப்பிரமணி வீட்டுக்குள் நுழைந்தாள் காமினி.

'வைரமணி' என கட்டிப்பிடித்தாள் காமினி.

''உனக்கு ஒன்னும் ஆகலையே மணி''

''இல்லை''

''எங்கே இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி''

''தெரியலை''

''ராஸ்கல், அவன் தான் சிவாவுக்கு போன் பண்ணி சொல்லி இருக்கனும்'' 

''அவரா''

''வேகமா கிளம்பு, திருட்டு கேஸ் போட்டுருவான்'' 

இன்னும் சிலர் சிவாவை அடித்து கொண்டிருந்தார்கள். சிவா வலியால் துடி துடித்து கொண்டிருந்தான்.சுப்பிரமணி அந்த இடத்திற்கு வந்தபோது காமினியும், வைரமணியும் திருச்சி நோக்கி பேருந்தில் பயணித்து கொண்டிருந்தார்கள். 

''சார், உங்க வீட்டுக்கு வந்த பொண்ணை இவன் கொல்ல பார்த்தான் சார்'' 

''எங்கே அந்த பொண்ணு''

''உங்க வீட்டுல இருந்த ஒரு பொண்ணை கூட்டிட்டு போய்ட்டாங்க சார்''

''இவனை விட்டுட்டு நீங்க போங்க'' 

அனைவரும் அங்கிருந்து நகன்றார்கள். சிறிது நேரத்தில் காவல் அதிகாரிகள் அங்கே வந்தார்கள். 

''வீ அரெஸ்ட் போத் ஆப் யு பார் கிட்னாப்பிங் எ கேர்ல்''

இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி திருதிருவென முழித்தார்.

மாலையில் பரந்தாமனின் வீட்டுக்கு காமினியும், வைரமணியும் வந்து சேர்ந்தார்கள். இதை கண்ட பரந்தாமன் முகத்தில் பெரும் பிரகாசம் தெரிந்தது.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

''டைமண்டா இவ, இவ சரியான மண்டு சார்'' 

(முற்றும்) 
கதை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்
kbkk007@gmail.com

Sunday 26 September 2010

ரஜினியின் எந்திரனும் அமெரிக்காவின் நாசாவும்

ரஜினியின் எந்திரனா?, சங்கரின் எந்திரனா? எனும் கேள்விக்கு  சங்கரின் எந்திரன் என  ரஜினி பதில் சொல்லிவிட்டார். ஆனால் இது ரஜினியின் எந்திரன் என சங்கருக்கும் தெரியும், இந்த படத்தை தயாரித்த கலாநிதி மாறனுக்கும் தெரியும். ரஜினி ஒரு மந்திர சொல் என்பதான மாயை எப்போதும் உண்டு.

இந்த எந்திரன் என்ன கதை? வைரமுத்து தனது பங்கிற்கு சொல்லிவிட்டார். 'இது ஒரு முக்கோண காதல் கதை'. ரஜினியின் படத்திற்கு எதற்கு கதை? யார் ரஜினியின் படத்திற்கு கதை தேடி சென்று இருக்கிறார்கள்? ரஜினி நடிக்கிறார் என்பதற்காக மட்டுமே செல்பவர்கள் அதிகம்.

எந்திரனில் அழிவில் இருந்து மீட்க எந்திரனாக வலம் வரும் ரஜினி, அறிவியலாளாரக வலம் வரும் ரஜினி. தான் உருவாக்கிய எந்திரனிடமே தனது காதலியை பறிகொடுத்துவிடும் நிலையில், எதிர்க்கும் நிலையில்  ரஜினி. மீதியை வெள்ளித்திரையில் காண்க.

ரஜினியின் திரைப்பட உலக வரலாற்றில் தோல்விப்படங்கள் பல உண்டு. ஆனால் அதில் குறிப்பிடப்பட வேண்டியவை ஸ்ரீராகவேந்திரர் மற்றும் பாபா. ரஜினிக்கு ஒரு உண்மை உரைத்து இருக்க வேண்டும். ஆன்மிகத்தை வியாபாராமாக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டவைகள் அந்த படங்கள்.

ஆன்மிகத்திற்கு எதற்கு விளம்பரம்? ஊரெல்லாம் பாபாஜி, மாதாஜி. உள்ளூர வெந்து வேகிறார் விவசாயி.

எந்திரன், மனிதன் போல பல மொழிகள் தெரிந்து வைத்து கொண்டு, மனிதன் போலவே செயல்படும் ஒரு பாத்திரம். இதை பல கதைகளில் எழுத்தாளர்கள் சித்தரித்து இருக்கிறார்கள்.

அதைப்போலவே நாசாவில் ஒரு மனிதனை போல செயல்படும் வண்ணம் ரோபோ ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். பத்து மொழிகள் தெரியும் அந்த ரோபோவிற்கு. அந்த ரோபோவின் நோக்கம் மனிதர்களை இடப்பெயர்ச்சி செய்வதல்ல. மனிதர்களுக்கு உதவியாய் வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட வைப்பது.

ரஜினியின் எந்திரனா, நாசாவின் எந்திரனா எனும்போது நாசாவின் எந்திரன் மனித குலத்திற்கு பெரும் உதவியாக இருக்கபோவது மட்டுமே உண்மை.

Friday 24 September 2010

நுனிப்புல் பாகம் 2 (16)

16. பெருமாள் கடிதம்

திருமால் சில தினங்களாக வாசன் பற்றிய நினைவில் இருந்தார். குழந்தைகளைப் பார்க்கும்போதும் வாசன் வந்து போனான். ஆனால் இதுகுறித்து எதுவும் பேசாது இருந்தவர் செவ்வாய் மாலை தனது மனைவியிடம் தான் திருவில்லிபுத்தூர் சென்று வருவதாக கூறினார். ஆனால் அவரது மனைவியோ வேண்டாம் என்பதுபோல் பார்த்தார். திருமால் பேசினார்.

''ஒரு முக்கியமான வேலை இருக்கு, நான் போய்ட்டு கூடிய சீக்கிரம் வந்துருவேன், இதுதான் சமயம், நீயும் பிள்ளைகளும் ஆஸ்ரமத்திலேயே தங்கிக்கோங்க''

''என்ன விசயமா திருவில்லிபுத்தூருக்குப் போறீங்க, அதுவும் திடீருனு''

''வாசன்''

''திருமலைக்குப் போகப் போறீங்க, எவ்வளவு தடுத்தாலும் போய்த்தான் தீருவேனு அடம்பிடிக்கிறீங்க, இப்போ வாசன் அங்கப் போகப்போறானா, போய்ட்டு வாங்க''

''பெருமால் தாத்தா இப்போ உயிரோடில்லை''

திருமால் சொன்னதை கேட்டதும் தனது கையில் இருந்த பாத்திரத்தை தவறவிட்டார் யோகலட்சுமி.

''எப்ப நடந்தது?''

''பாரதியும் கிருத்திகாவும் வந்தப்ப சொன்னாங்க, உடனே சொல்லத் தோணலை''

நீங்க அன்னைக்கேப் பார்க்க போயிருந்திருக்கனும், நான் தான் உங்களைத் தடுத்திட்டேன்''

''ம்ம் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கலை, இப்போ நான் போயிட்டு வந்துருரேன்''

''சாத்திரம்பட்டிக்கும் போகப் போறீங்களா?''

''இல்லை, நாம் எல்லாம் சேர்ந்து ஒருநாள் போய்ட்டு வருவோம், குளத்தூர் போய்ட்டு போகலாமானு ஒரு எண்ணம் இருக்கு''

சிறிது நேரத்தில் யோகலட்சுமியையும், குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு திருமால் அவரது ஆஸ்ரமம் நோக்கி நடந்தார். ஆஸ்ரமம்தனை அடைந்ததும் அங்கிருந்த முக்கிய பொறுப்பாளரிடம் விபரம் கூறிவிட்டு பாதுகாப்புடன் செயல்புரியுமாறு கூறினார்.

மிகப்பெரிய பரப்பளவில் அந்த ஆஸ்ரமம் அமைந்து இருந்தது. குழந்தைகள் தங்குவதற்கான அழகான கட்டிடமும், பாடசாலையும் சுற்றியிருந்த நிலப்பரப்பில் விவசாயம் என ஒரு சிறிய ஊர் போல இருந்தது. நிலப்பரப்பைச் சுற்றி பெரும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. திருமாலைக் கண்டதும் குழந்தைகள் ஓடி வந்தனர். ஒரு சிறுவன் கேட்டான்.

''பிரபோ, முக்காலம் உணரும் கலைதனை எப்பொழுது ஆரம்பிக்க இருக்கிறீர்கள், நேற்று கேட்டேன் எந்த பதிலும் தராமல் புன்னகைத்தீர்கள்''

''யார் இது குறித்து இத்தனை ஆவலை உன்னில் தூண்டியது?''

''உடலுக்குள் உயிர் புகுமெனில், உயிர் வளருமெனில், உடல்விட்டு உயிர் போகுமெனில் அக்கலையை அறியத் தாருங்கள்''

மற்ற சிறுவர் சிறுமியர்களும் ஆமாம் என்பது போல் பார்த்தனர். திருமால் தான் அவசரமாக வெளியூர் செல்வதால் திரும்பி வந்தவுடன் இதுகுறித்து கலந்துரையாடுவதாக கூறினார். அனைவரும் சம்மதம் சொன்னார்கள். யோகலட்சுமி ஆஸ்ரமத்தில் இருந்து சில வரைபடங்களை எடுத்து வந்தார். அந்த வரைபடங்கள் அங்கிருந்த சிறுவர் சிறுமியர்களால் வரையப்பட்டது. சில படங்களைக் காட்டி ஆண்டாள் கோவிலில் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார். திருமாலும் சரியென சில படங்கள் எடுத்துக்கொண்டார்.

பேருந்து நிலையம் வந்தடைந்தார். மதுரையை மறுநாள் புதன் காலையன்று வந்தடைந்தார். மதுரையில் காலைக் குளியல் முடித்துவிட்டு நேராக மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றார். மீனாட்சி அம்மனை வணங்கிவிட்டு கோவில் பிரகாரம் சுற்றி வந்தபோது மாதவி அவர் முன்னர் எதிர்பட்டாள். மாதவியை திருமால் அழைத்தார்.

''குளத்தூர் இங்கே இருந்து எவ்வளவு நேரம் ஆகும், எப்படி போறதுனு கொஞ்சம் சொல்ல முடியுமா''

''எந்த குளத்தூர்?''

''நான் விசாரிச்சவரைக்கும் எல்லாரும் எந்த குளத்தூர்னுதான் கேட்கறாங்க, குளத்தூருக்கு எதுக்கு முகவரினு நினைச்சி வந்துட்டேன்''

''பக்கத்துல பெரிய ஊர் ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க, சரியா சொல்வாங்க. என்னோட ஊர் குளத்தூர் தான், நாணல்கோட்டை பக்கத்துல சோலையரசபுரம் இருக்கு, அங்க இருக்கிற குளத்தூர்தான் என்னோட ஊர் அந்த ஊரை கேட்கறீங்களா''

''ஆமா அதே குளத்தூர் தான், உங்களுக்கு வாசன் அப்படிங்கிறவரைத் தெரியுமா''

மாதவி திருமால் அவர்களைப் பார்த்தாள். மனதுக்குள் பல கேள்விகள் எழுந்தது. அந்த கேள்விகளை எல்லாம் ஓரங்கட்டினாள். தெரியாத ஒருவரிடம் பேசுவதாய் அவள் மனதுக்குப்படவில்லை. பரிச்சயமானவர் போலவே இருப்பது போல் இருந்தது. சற்றும் யோசிக்கவில்லை

''தெரியும்''

''பெருமாள்''

''உயிரோட இல்லை, நீங்க யாரு? என்ன விபரமா இதையெல்லாம் கேட்கறீங்க''

திருமால் எந்த பதிலும் சொல்லாமல் தான் கிழக்கு நடைபாதை வழியில் சென்று காத்து இருப்பதாகவும் அம்மனை தரிசித்துவிட்டு வருமாறு மாதவியிடம் கூறிவிட்டு பின்னர் விபரமாக பேசுவதாக கூறிச் சென்றார். தான் இன்னும் அம்மனை தரிசிக்கவில்லை என இவருக்குத் தான் சொல்லவே இல்லையே என மனதில் மாதவி நினைத்தாள்.

மாதவி கோவிலில் சென்று வழிபட்டுவிட்டு கிழக்கு நடைபாதைக்கு வந்தாள். திருமால் அங்கு நின்று கொண்டிருந்தார். மாதவி திருமாலிடம் தான் கல்லூரி செல்வதற்கு நேரம் ஆவதால் விரைவாக கூறும்படி கேட்டுக்கொண்டாள். தனக்கும் நேரம் ஆகிறது என சுருக்கமாக கிருத்திகா, பாரதி பற்றி கூறினார் திருமால்.

''மாமா இன்னைக்கு இந்நேரம் திருவில்லிபுத்தூர் கிளம்பிப் போய்ட்டு இருப்பார், குளத்தூர் வர நாட்கள் ஆகும்'

''ம்ம் திருவில்லிபுத்தூருல எங்க தங்குவாரு, முகவரி இருக்கா, குளத்தூர் முகவரி மாதிரி தேடமுடியாது''

மாதவி நேரமாகிறது என பாவனை காட்டியவள் திருமலை முகவரியைக் கூறினாள். திருமால் சிரித்தார். மாதவியும் சிரித்தாள். விஷ்ணுப்பிரியன் பற்றி திருமால் குறிப்பிட்டார். மாதவி மீண்டும் சிரித்தாள். திருமால் அவர்களை தன்னுடன் கல்லூரிவரை வருமாறு கேட்டுக்கொண்டாள். திருமால் சரியென மாதவியுடன் நடந்தார். மாதவி திருமாலிடம் எல்லா விபரங்களையும் கூறினாள். திருமால் மாதவியிடம் தனது பைகளிலிருந்து பெருமாள் எழுதிய கடிதப் பக்கங்களை எடுத்துக் கொடுத்தார். வாங்கிக்கொண்டவள் தான் நகல் எடுத்துத் தருவதாக கூறினாள். திருமால் வேண்டாம் எனவும் தன்னிடம் நகல்கள் இருப்பதாகவும் கூறினார். திருமால் தான் திரும்பி வரும்போது மீண்டும் சந்திப்பதாக கூறி விடைபெற்றுக்கொண்டார். கடிதம்தனை தனது அறையில் பத்திரப்படுத்திவிட்டு கல்லூரிக்குச் சென்றாள். மூளை பற்றிய தனது தனிப்பட்ட ஆராய்ச்சிக்கான முழு விபரங்களையும் இன்று கல்லூரி ஆசிரியை தெய்வீகம்பாளிடம் தந்து சந்தித்துப் பேச எண்ணினாள். தெய்வீகம்பாள் மாதவியைத் தேடி வந்தார்.

(தொடரும்)

Thursday 23 September 2010

இந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் - 1

ஸ்காட்லாந்து பயண கட்டுரையை பின்னர் எழுதி கொள்ளலாம் என ஒதுக்கி வைத்து விட்டேன். ஸ்காட்லாந்து பயண கட்டுரையை எழுதி இருந்தால் இந்த இந்திய பயண கட்டுரைக்கு இந்த தலைப்பு அவசியம் வந்து இருக்காது.

ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு செல்ல வேண்டுமென பிப்ரவரி மாதம் முடிவு எடுத்தாகிவிட்டது. பயணத்திற்கான தேதி எல்லாம் குறித்து பயண சீட்டு பெற்றபோது ஏப்ரல் மாதம் ஆகி இருந்தது. அப்பொழுதுதான் தொலைக்கப்பட்ட தேடல்கள் புத்தக பணியும் நடந்து கொண்டிருந்தது. நாம் சென்றபின்னர் புத்தக வெளியீட்டு வைத்து கொள்ளலாம் என நினைத்தபோது ஏனோ மனதில் முழு சம்மதம் இல்லை. புத்தகத்தினை நான் செல்லும் முன்னரே வெளியிட்டு விடலாம் என கருதி அதற்கான ஏற்பாடுகளை அகநாழிகை திரு. பொன். வாசுதேவன் அவர்கள் மூலம் செய்து கொண்டிருந்தேன்.

எப்பொழுதுமே இந்திய பயணத்தின் போது  திட்டமிட்டு எதையும் செய்வதில்லை. அங்கே இருக்கும் சூழல்படி பயணத்தை அமைத்துக் கொள்வது வழக்கம். சென்றமுறை இந்தியா சென்றபோது துபாயில் மூன்று நாட்கள் தங்கி இருந்து சென்றோம். ஆனால் இம்முறை இந்தியாவில் சில இடங்கள் செல்லலாம் என திட்டமிட்டோம். அதன்படி பெங்களூரு, கோவா, கோயமுத்தூர் என ஒரு வார பயணம் திட்டமிட்டோம். மதுரையில் இருந்து பெங்களூரு, பெங்களூருவில் இருந்து கோவா, கோவாவில் இருந்து மறுபடியும் பெங்களூரு, அதன் பின்னர் பெங்களூருவில் இருந்து கோயமுத்தூர். இதுவரை திட்டம் மிகவும் சரியாகவே செய்தேன். இதற்கான விமான பயண சீட்டு, தங்கும் அறைகள் என எல்லாம் லண்டனில் இருந்து கிளம்பும் முன்னர் தயார் செய்துவிட்டேன். கோயமுத்தூரிலிருந்து அடுத்து எங்கு செல்வது என்ன என்பதான திட்டம் எதுவும் இல்லை. அதுவும் ஊரில் இறங்கிய ஒரு வாரம், ஊரில் இருந்து கிளம்பும் முன்னர் இருக்கும் ஒரு வாரம் எந்த திட்டமும் இல்லை.

கடைசி வாரத்தில் 'தொலைக்கப்பட்ட தேடல்கள்' புத்தக விமர்சன கூட்டம் ஒன்றை மதுரையில் நடத்தலாம் என யோசனை இருந்தது. ஆனால் தேதி குறிக்கவில்லை. சென்றபின்னர் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து இருந்தேன். எனது ஆசிரியர்கள், எனது நண்பர்கள், எனது புத்தகங்களை வெளியிட்ட புத்தக வெளியீட்டார்கள் என அனைவரையும் அழைத்து சிறப்பிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆவலுடன் இருந்தேன்.

பயண தினம் நெருங்க நெருங்க என்றைக்குமில்லாத ஆவல் அதிகமாகவே இருந்தது. சென்னையில் தங்கி செல்ல இயலாத வண்ணம் ஊரில் சில விசேசங்கள் திட்டமிட்டு இருந்தார்கள். அதனால் சென்னையில் இருந்து நேராக விமானம் மூலம் மதுரை செல்வதாக விமான பயண சீட்டு எல்லாம் எடுத்தாகிவிட்டது. இவ்வேளையில் முத்தமிழ்மன்ற நண்பர் ஒருவருடைய நண்பரின் மகள் லண்டனுக்கு படிக்க வரவேண்டும் அதற்கு உதவி செய்ய இயலுமா என கேட்டு இருந்தார். சரி என சொல்லி இருந்தேன்.

ஆகஸ்ட் மாதம் பதின்மூன்றாம் தேதி, காலை சரியாக எட்டு மணி. லண்டன் விமான நிலையத்துக்கு செல்ல எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தோம். கைப்பேசி ஒன்றை சமீபத்தில் மாற்றியதால் அதில் எவருடைய  எண்களையும் சேகரிக்கவில்லை. ஆதலினால்  முந்தைய கைப்பேசி ஒன்றையும் எடுத்துக்கொண்டேன். அப்பொழுது இந்தியாவில் இருந்து தொலைபேசி வந்தது. மதுரை செல்லும் விமானம் ரத்தாகிவிட்டது மதுரைக்கு செல்ல வேறு எந்த விமானத்திலும் இடம் இல்லை  என்றார்கள்.

மாற்று திட்டம் தீட்டி கோயமுத்தூர் செல்ல நினைத்தேன். விமான பயண சீட்டு அதிக விலையாக இருந்தது. இத்தனை விலை கொடுத்து எதற்கு செல்வானேன் என கோயமுத்தூரில் இருந்த எங்களது வாகனம் ஒன்றை சென்னைக்கு வருமாறு சொல்லிவிட்டு லண்டன் விமான நிலையத்தை அடைந்தோம்.

(தொடரும்)

Wednesday 22 September 2010

இயற்பியலில் இறைவனுக்கு இடமில்லை

இயற்பியலை எப்படி பிரித்து சொல்வது என தமிழ் ஆசிரியரைத்தான் கேட்க வேண்டும். எனக்கு தெரிந்த தமிழில் இயல்பு+இயல் என பிரித்து லகரம் றகரமாக திரிந்தது என சொல்லித் தந்து விடுவது எளிதாகத்தான் இருக்கும்.

இந்த இயற்பியல் விதிகள் மூலம் இந்த உலகத்தை பார்த்தால் இறைவன் என்பவர் ஒருவர் இருக்கும் வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக ஒரு அறிவியலாளர் அறிவித்து இருக்கிறார். இயற்கையாகவே எல்லாம் நடந்தது என்பதுதான் அவரது விதி. யாரும் எதையும் படைக்கவில்லை என்பது அவரது உறுதிப்பாடு. பல அறிவியல் அறிஞர்கள் பல வித கண்டுபிடிப்புகளை கண்டு சொன்னாலும் இறைவன் என்பவரை ஒதுக்குவதில் சற்றே தயக்கம் காட்டினார்கள்.

எங்கள் மனதிலும், எங்கள் அனுபவத்திலும் இருக்கும் இறைவனை எவராலும் அகற்ற இயலாது என நம்பும் கூட்டம் உண்டு என்பதை உறுதிபடுத்தும் வண்ணம் சமீபத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து என சுற்றிப் பார்க்க வந்த போப் அவர்களை பார்க்க குழுமியிருந்த கூட்டம் உறுதிபடுத்தியது.

இந்த அறிவியல் அறிஞரின் இயற்பியல் விதியை நமது மக்களிடம் சொன்னால் 'வேலை வெட்டி இல்லாத ஆள்' என சொல்லிவிட்டு போவார்கள். நாங்கள் தான் இயற்கையை மட்டுமல்ல எல்லாமே இறைவன் என ஏற்றுக் கொண்ட பின்னர் இதில் என்ன பாகுபாடு வேண்டி இருக்கிறது என்பதில் அவர்கள் உறுதியாய் இருப்பார்கள்.

எதையும் உறுதியாய் நம்புவர்களின் உள்ளத்தில் ஒருபோதும் கீறல் ஏற்படுவதில்லை. இறைவனை உறுதியாய் நம்புவர்களுக்கு இறைவன் சுகமாக இருக்கிறார்.

இறைவன் பற்றிய கவலையைவிட இப்போதெல்லாம் திருடர்களை பற்றித்தான் அதிகம் கவலைப்பட வேண்டி இருக்கிறது. பொருளாதார சரிவினால் மட்டுமல்ல, திருடுவதை ஒரு தொழிலாக கொண்டு வாழ்பவர்கள் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். திருடர்களின் தொல்லை மிகவும் அதிகம் ஆகிவிட்டது.

இந்தியாவுக்கு செல்லும் முதல் நாள் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் வாகனம் திருடு போனது. இன்னமும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஊரில் இருந்து வந்தபின்னர், ஊரில் இருந்து எடுத்த படங்கள் அனைத்தையும் வழக்கம் போல அச்சடிக்க அனுப்பி இருந்தேன். அவர்களும் அடுத்த தினமே அச்சடித்து அனுப்பி இருந்து இருக்கிறார்கள். எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் இடம் வரை அந்த படங்கள் வந்து சேர்ந்துவிட்டது. ஒரு வாரம் ஆகியும் எனக்கு கிடைக்காமல் இருந்ததால் எனக்கு சந்தேகம் ஏற்படவே விசாரித்தேன். அதை எனக்கு கொண்டு சேர்க்க வேண்டி கொண்டு வந்த வாகனம் திருடு போய்விட்டதாக இன்று தகவல் சொன்னார்கள். கோவில் படங்கள் பல அதில் இருந்தது.

திருடியவனின் கண்ணை சாமி குத்துமா என இயற்பியலில் இறைவனுக்கு இடமில்லை என  சொன்ன அறிவியல் அறிஞருக்கு தொலைபேசி போடலாமா என நினைத்தேன், ஆனால் அதைவிட  எனக்கு கோவிலில் எடுத்த படங்களில் இருந்த தெய்வங்கள், மலைகளிலும், மரங்களிலும், மழைத்துளிகளிலும், மக்களிலும் நிறைந்து இருந்த இறைவன் தொலைந்து போன  வருத்தம் மட்டுமே மிஞ்சி இருந்தது.

Monday 20 September 2010

விளையாட்டுப் பெண்கள்

மணமான என்னை என்னுடன் வேலை பார்க்கும் பெண் மணந்து கொள்ள எதற்கு நினைத்தாள் என்பதற்கான காரணத்தை என்னால் சிறிது நேரம் கூட யோசிக்க இயலவில்லை. அறையின் கதவை திறந்து கொண்டு அவளின் அறைக்கு செல்ல இருக்கையில் அவளே அவளது அறையில் இருந்து வெளியில் வந்தாள். அவளது கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தது.

'உங்களிடம் பேச வேண்டும்' என்றாள். கவனியுங்கள், அவர் என அவளை இதற்கு முன்னர் வரை சொல்லிக் கொண்டு இருந்தேன். இனிமேல் அவள் தான். 'எனது அறையா? உனது அறையா?' எனக் கேட்டேன். 'எனது அறை' என்றாள். எனக்கு எனது மனைவி கன்னத்தில் அறை விடுவது போன்று ஒருவித உணர்வு வந்து போனது. அவளின் விருப்பப்படியே அவளது அறைக்கு சென்றேன். அங்கிருந்த நாற்காலியில் நான் அமர்ந்தேன். அவளும் என் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

'நீங்கள் என்னை ஏன் மணம் முடிக்க கூடாது?' எனக் கேட்டாள். 'நான் மணமானவன், மறந்துவிடாதே' என்றேன். 'மணமுடிக்காமல் இருந்தால்?' என்றாள். 'எனக்கு வேலை கிடைத்து இருந்து இருக்காது என நினைப்பவர்கள் அதிகம்' என்றேன். எனது பதிலை மிகவும் சாதுர்யமாக நான் பேசியது எனக்கு வியப்பை தந்தது. அவளிடம் உன்னை திருமணம் பண்ணும் வாய்ப்பே இருந்து இருக்காது  என ஏன் என்னால் நேரடியாக சொல்ல இயலவில்லை என யோசனை எழுந்தது. அதற்குள் அவள் ஒரு சின்ன கதை சொன்னாள்.

முருகனுக்கு எதற்கு இரண்டு பொண்டாட்டிகள்  எனக் கேட்டாள். எனக்கு தெரியாது என சொன்னேன். மனிதர்களின் வாழ்க்கையில் அவர்களை தேடி ஒன்று வரும், அது போல மனிதர்கள் அவர்களாகவே ஒன்றை தேடி போவார்கள் என்பதை சொல்லும் வண்ணம் தான் முருகனுக்கு இரண்டு பொண்டாட்டிகள் என்றாள். வள்ளி அவராக தேடி சென்றது, தெய்வானை அவரை தேடி வந்தது. அது போல உங்கள் மனைவி நீங்கள் தேடியது, நான் உங்களை தேடி வந்தது என நிறுத்தினாள். நான் இருந்த சூழலையே மறந்து கட்டிடங்கள் இடிந்து விழும் வண்ணம் சிரித்து தொலைத்தேன்.

அப்படியெனில் உன்னைத்  தேடி ஒருவன் வந்தான் எனில் அவனையும் ஏற்றுக் கொள்வாயா என சிரிப்பின் இடைவெளியில் கேட்டு வைத்தேன். எனது கேள்வி எனக்கு சரியாகத்தான் பட்டது. அவள் முகத்தில் கோபம் அனலாக வெடித்தது. நான் ஒன்றும் கேவலமான பிறவி இல்லை என்றாள். உனது எண்ணத்தை சரிபார்த்து கொள் என சொல்லிவிட்டு எழுந்தேன். அன்று பேசியவள்தான், அதற்கு பின்னால் ஒருநாள் கூட பேசவும் இல்லை, நானும் பேசுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவும் இல்லை.

வாழ்க்கையை விளையாட்டுத்தனமாக பார்ப்பவர்களுக்கு வாழ்க்கையின் அன்பின் அடித்தளம் புரிவது இல்லை. வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக எதையும் யோசிக்காமல் செய்பவர்களின் நிலைமை அத்தனை நிம்மதியாக இருப்பதில்லை. எவரோ சொன்னது எனது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. நான் எனது உறுதியான செயல்பாடினால் மிகவும் நிம்மதியாக இருந்தேன். நேரம் இருக்கும்போதெல்லாம் தொலைபேசி மூலம் எனது மனைவியின் உடல்நலம் விசாரித்து கொண்டிருந்தேன்.

ஹாங்காங்கில் இருந்து ஊருக்கு திரும்பினேன். அவளும் தான் விமானத்தில் உடன் வந்தாள். ஆனால் அடுத்த நாளில் இருந்து வேலைக்கு வரவே இல்லை. வேலையை விட்டுவிட்டதாக அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். கேட்கவா வேண்டும்? எனது மாமா மகளை தவிர அலுவலகத்தில் இருந்த பெண்கள் அவள் வேலையை விட்டுவிட்டதற்கு நான் தான் காரணம் என பேச ஆரம்பித்து இருந்தார்கள். சில வாரங்கள் பின்னர் அவளுக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொன்னார்கள். வேலையை  விட்டு விட்டதற்கு திருமணம் தான் காரணம் என இப்போது சொன்னார்கள். மனதில் சிரித்து கொண்டேன்.

எனது மனைவி ஒவ்வொரு நாள்தனையும் மிகவும் கொண்டாடி வாழ்ந்து கொண்டிருந்தார். தான் தாய் ஆகப் போகிறோம் எனும் எண்ணம் அவரை அளவில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தி கொண்டிருந்தது.

இந்த வேளையில் தான் எனது மாமா மகள்  'மாமா, என்னை காதலிச்சவனுக்கு இப்போ விவாகரத்து ஆயிருச்சி' என்றாள். 'நீ எதாச்சும் பண்ணினயா' என பதட்டத்துடன் கேட்டேன். 'எனக்கு எதுக்கு அந்த வேலை, கட்டாய கல்யாணம் பண்ணி வைச்சதால தினமும் சண்டைதானாம். என்னை பிடிக்காம எதுக்குடா கல்யாணம் பண்ணின அப்படினு விவாகரத்து வரைக்கும் அந்த பொண்ணு போயிருச்சாம். பெரியவங்க சொல்லியும் அந்த பொண்ணு கேட்கலையாம், விவாகரத்து வாங்கிருச்சாம்' என்றாள். 'இந்த கதை உனக்கு எப்படி தெரியும்' என்றேன். 'என்னோட பிரண்டுதான் சொன்னா, நான் அவனுக்கு வாழ்க்கை தரலாம்னு இருக்கேன் மாமா' என கலகலவென சிரித்தாள். 'விளையாட்டுத்தனமா எதுவும் பண்ணிராதே' என சொன்னேன். 'அவன் வாழ்க்கையில விளையாடப் போறேன்' என சொல்லிவிட்டு விறுவிறுவென கடந்து போனாள். 'ஐயோ பெண்கள்' என தலையில் அடித்து கொள்ள வேண்டும் போலிருந்தது.

அன்று வீட்டுக்கு சென்றபோது வீட்டில் என்னுடன் முதலில் வேலை பார்த்த பெண் எனது மனைவியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்ததும் எழுந்து வரவேற்றாள். எனது கையில் காகிதம் ஒன்றை தந்தாள். சரி பாருங்க, அச்சடிக்கனும் என்றாள். மணமகன் எனும் இடத்தில் எனது பெயர் போட்டு இருந்தது. கொதித்து போனேன். என்ன காரணம் என யோசிக்க எல்லாம் எனக்கு அப்போது தோணவே இல்லை.

(தொடரும்)

Wednesday 15 September 2010

கருணாஸ் நடித்ததால் எந்திரன் படம் தோல்வி?

பல விசயங்கள் புரிந்து கொள்ள முடியாத வாழ்க்கையில் மனிதர்களின் நம்பிக்கைகள் புரிய முடியாத விசயங்களுக்கு பதிலாக அமைந்து விடுவது காலம் காலமாக நடந்து கொண்டு வருவதுதான். இந்த மனிதர்களின் நம்பிக்கைகள் எல்லாம் மிகவும் சரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவரின் அனுபவத்தின், நம்பிக்கையின் காரணமாக விசயத்தின் முழு உண்மையை எவரும் ஆராய முற்படுவதில்லை. இதன் காரணமாக இது நடந்தது என மிகவும் சர்வ சாதாரணமாக சொல்லிவிடுவது வழக்கம்.

அதீத திறமையுடைவர்களை  கூட அதிர்ஷ்டத்தினாலும், கடவுள் கிருபையினாலும் மட்டுமே வெற்றி பெற்றார்கள் எனும் எண்ணும் வழக்கம் இருக்கிறது. இதற்கு வாழ்வில் நடக்கும் காரண காரியங்கள் ஆதாரம்.

'இது என்னால் மட்டுமே சாத்தியமில்லை' எனும் எண்ணம் உடையவரை மற்ற காரணிகளுக்கு மதிப்பு தந்து தன்னடக்கத்துடன் இருப்பதாகத்தான் எடுத்து கொள்ளவேண்டும்.

சகுனம் பார்க்கும் சங்கடம் நம்மில் அதிகம் உண்டு. ராசி பார்க்கும் பாசம் நம்மிடம் மிக மிக அதிகம் உண்டு. இதன் காரணமாகவே பலர் தன்னம்பிக்கையை தொலைத்து விடுகிறார்கள்.

அறிமுகமே இல்லாத ஒருவர் 'பாபா படத்தில் தலைவருடன் சேர்ந்து கருணாஸ் நடித்ததால்தான் பாபா படம் தோல்வி அடைந்தது, அதே நிலைமை எந்திரன் படத்துக்கு வந்து விடுமோ என அச்சப்படுகிறேன்' என்றார்.

'எந்த ஒரு படமும் மக்கள் பார்க்க மறுத்தால்தான் வியாபார ரீதியாக தோல்வி அடையும், எனவே இது போன்ற குருட்டுத்தனமான எண்ணங்களை கைவிடுங்கள்' என சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தேன்.

ஏன் மனிதர்கள் மட்டும் இப்படி இருக்கிறார்கள்?

Thursday 9 September 2010

நுனிப்புல் (பாகம் 2) 15

15. கிராமத் தலைவர் வாசன்

அனைவரையும் வழியனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்தான் வாசன். சாப்பிட அமர்ந்தான்.

''நல்லா சாப்பிடுப்பா''

கண்கள் கலங்கியபடியே வாசனின் தாய் சொன்னார்.

''என்னம்மா, என்னை சென்னைக்குப் போகச் சொன்ன, இப்ப கண் கலங்குற''

''அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா, ஜோதி உன்னை பத்திரமா பாத்துக்கிறேனு சொல்லியிருக்கா, அவங்க வீட்டுலயே தங்கி இருப்பா''

''கவலைப்படாதேம்மா, நாங்க வேகமா வந்துருவோம்''

சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வாசனின் மனம் கலங்கியது. வாசன் சாப்பிட்டு வெளியில் வந்து அமர்ந்தான். தாய் தோட்டம் செல்ல தயாரானார்கள். அம்மாவிடம் மீண்டும் சென்று சொன்னான்.

''பொன்னுராஜ் மாமாவும், முத்துராசு அண்ணனும் விவசாயத்தை கவனிச்சிக்கிருவாங்கம்மா''

''நீ தைரியமாப் போய்ட்டு வாப்பா''

தைரியம் இல்லாமல் சொன்னார் ராமம்மாள். வாசன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இது குறித்து கேட்டபோது அதிகம் யோசிக்காமல் நல்ல காரியம் என சரியென சொல்லியவர் இரண்டு தினம்தான் இருக்கிறது என்றதும் வருத்தம் வந்து அவருக்குச் சேர்ந்தது. சிறுவயதில் இருந்தே எங்கும் பிரிந்து செல்லாத வாசன் தற்போது விலகிச் செல்வதை நினைக்கும்போது வேதனையாக இருந்தது. இந்த காரியம் வெகுவிரைவில் நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார். வாசனும் அம்மாவுடன் தோட்டம் சென்றான். தோட்டத்தில் இன்னும் வேலை தொடங்கி இருக்கவில்லை. பொன்னுராஜ், முத்துராசு பேசிக்கொண்டு இருந்தார்கள். வேலனும் வந்து சேர்ந்தார். ராசாத்தி மற்றும் பலரும் வந்து சேர்ந்தார்கள்.

''என்ன மருமகனே, திருவில்லிபுத்தூருக்கு தயாரா''

''ஆமா மாமா''

''வாசு அங்க பொண்ணு பார்த்து அங்கேயே தங்கிரு, இனி நான் தான் இந்த ஊருக்கு தலைவரு''

முத்துராசு சிரித்துக் கொண்டே சொன்னார். வாசன் சிரித்துக்கொண்டே பதில் சொன்னான்.

''நீங்க தலைவருன்னா, ஊரே செழிப்பாயிரும்''

''ராசு வா வா வேலையை கவனிப்போம்''

பெண் பார்க்கும் பேச்சை ஆரம்பித்ததால் பொன்னுராஜ் முத்துராசுவை அழைத்துச் சென்றார். வாசனும் வேலை செய்யத் தொடங்கி்னான். பெண்கள் களையெடுக்கத் தொடங்கினார்கள்.

''என்ன ராமக்கா, தம்பி எப்ப திரும்பி வரும், செடிய அனுப்பிவைக்கச் சொன்னா கேசவன் போயிருக்குல்ல, கொண்டு வந்துரப் போகுது, இதுக்கு எதுக்கு இவங்க இரண்டு பேரும் அங்க போய்த் தேடனும், அப்படி என்ன செடியோ''

ராசாத்தி செடியின் அருமை தெரியாது பேசினார்.

''அதான் அன்னைக்கி கூட்டத்துல பெரியவரு சொன்னாருலே, இது என்னமோ வளர ஒரு வருசம் ஆகும்னு, அதுக்குள்ள எத்தனை தரம் களை எடுக்கறது, எத்தனை தரம் மருந்தடிக்கிறது நமக்கு எல்லாம் நல்ல வேலை இருக்கு, நம்ம வேலையும் பார்க்கனும்''

முனியம்மாள் தெரிந்தவிசயம் போல் சொன்னார்.

''தெரியலை ராசாத்தி, மலைப்பகுதியெல்லாம் தேடனுமாம், ஊரே போனா என்னன்னு தோணுது''

ராமம்மாள் வருத்தமாகச் சொன்னார்.

''ஏன் ராமக்கா, தம்பி ஊர்த்தலைவரு ஆயிருச்சே நம்ம ஊருல வேலை வெட்டி இல்லாம இருக்கறவங்களுக்கு ஏதாச்சும் பண்ணலாம்ல''

''யார் வேலையில்லாம இருக்கா, வேலைக்குத்தான் ஆள் இல்லாம இருக்கு, விவசாயம் யார் பார்க்குறா''

''ஏன் ராசாத்தி, மரத்தடியில உட்கார்ந்து விளையாடறவங்களை சொல்றியா, ராமக்கா நாம அவங்களைத் திருத்த முடியாது''

முனியம்மாள் சரியாகவே சொன்னார். வாசனிடம் அதிகம் எதிர்பார்க்கத் தொடங்கினார்கள். பெரியவரிடம் பேச அச்சப்பட்டவர்கள் வாசனிடம் நேரடியாய் பேசலாம் என நினைத்தார்கள். ஆனால் வாசன் பெரியவரை மீறி எதுவும் செய்யமாட்டான் என எண்ணவும் செய்தார்கள். பேசிக்கொண்டே அவர்கள் வேலையும் எளிதாக சென்று கொண்டிருந்தது.

மதியவேளை உணவு உண்ண அனைவரும் அமர்ந்தார்கள். வாசன் வேலை செய்து கொண்டிருந்தான். வேலன் சித்தப்பா வாசனிடம் சென்றார்.

''அடுத்தவாரம் கோவில்பட்டியில இருந்து உன் சித்தப்பா வரானாமே''

''அப்பா சொல்லிட்டு இருந்தார், ரோஹிணிக்கு படிப்பு முடிய இன்னும் மூணு மாசம் இருக்கு, முடிச்சிட்டுதான் வருவாங்கனு நினைக்கிறேன்பா''

சுந்தரன் பற்றி பேச்சை ஆரம்பித்தார் வேலன். இப்பொழுது வேண்டாம் என்றான் வாசன். ஆனால் வேலன் சுந்தரன் நேற்று பேசியதாகவும் விபரங்களைச் சொன்னார்.

''நல்லவேளை அவனே மனசு மாறிக்கிட்டான்''

''எனக்கு வருத்தம்பா''

''இது நடக்கிற காரியம் இல்லைனு அன்னைக்கு சொன்னேனே நாம ஏதாவது பேசி இருந்தா பிரச்சினை வந்துருக்கும் எல்லாம் நல்லபடியா நடக்கனும்னு பெருமாளை வேண்டிக்கிறேன்''

சாப்பிட வருமாறு அழைத்தார்கள். வாசன் சென்று அமர்ந்தான்.

''என்ன வாசு, வேலை செஞ்சு களைச்சிட்டே, மரத்தடியில உட்கார்ந்து இருக்கறவங்களை ஏதாவது செய்யலாம்ல''

முனியம்மாள் சொன்னார். திருவில்லிபுத்தூர் சென்று வந்து செய்வதாக சொன்னான் வாசன். முத்துராசு கேட்டார்.

''என்ன பண்றதா உத்தேசம், பட்டணத்துக்கு அனுப்பப் போறியா''

''அனுப்பி வைச்சிருவோம்ணே''

ராமம்மாள் குறுக்கிட்டார்.

''உன் இஷ்டத்துக்கு எதுவும் செய்யாதப்பா''

''மருமகன் சரியாத்தான் செய்வாரு, என்ன மருமகனே''

வாசன் தலையாட்டினான். அனைவரும் சாப்பிட்டுவிட்டு வேலை செய்யத் தொடங்கினார்கள். வாசனுக்கு மாதவி பற்றிய நினைவு வந்து சேர்ந்தது. பூங்கோதையின் நிலை நினைத்து வருந்தினான். மாலை வந்து இரவும் நகர்ந்தது. அடுத்த நாள் சற்று வேகமாகவே கடந்தது. வாசன் மாலை வேளையில் அனைத்தும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான். சாரங்கன் வாசனின் வீட்டிற்கு வந்தார். சாரங்கனைப் பார்த்ததும் வாசனுக்கு தேவையில்லாத பிரச்சினை ஒன்று வந்திருப்பதாகப் பட்டது. சாரங்கன் வந்ததும் வராததுமாய் வாசனைப் பார்த்து கேட்டார். வாசன் திடுக்கிட்டான்.

(தொடரும்)