Tuesday 31 January 2012

கூகிள் குரோமில் என்னதான் பிரச்சினை - பின்னூட்டம்

நான் internet explorer அதிகம் உபயோகம் செய்வது கிடையாது. நான் மிகவும் விரும்பி உபயோகம் செய்வது google chrome. மின்னல் வேகத்தில் வேலை செய்யும். அதைப்போல எதாவது தளம் வைரஸ் போன்ற விசயங்களால் தாக்கப்பட்டு இருந்தால் காட்டி கொடுத்துவிடும். அதனால் எப்போதும் கூகுள் குரோம் தான் எனக்கு சிறந்த ஒன்று. 

அதுவும் இந்த வலைப்பூ எழுதுவது என்றால் குரோம் அல்லது ஆப்பிள் சஃபாரி. ஆப்பிள் சஃபாரியில் என்ன பிரச்சினை என்றால் நேரடியாக பின்னூட்டத்தில் தமிழ் வைத்து எழுத முடியாது. கூகுள் சென்று அங்குதமிழில் மாற்றி எழுதி அதை கொண்டு வந்து பின்னூட்டத்தில் வந்து பதிவிட  வேண்டும். அதனால் படிக்கும் வலைப்பூக்களுக்கு என்னால் எளிதாக பின்னூட்டம் இடவே முடிவதில்லை. அதனால் சுயநலமியாக எனது வலைப்பூவில் மட்டும் பின்னூட்டம் எழுதிவிட்டு அவ்வப்போது ஒவ்வொரு வலைப்பூவிற்கு பின்னூட்டம் இடுவது உண்டு. 

கூகிள் குரோம் என்னவென்றால் பதிவுக்கு கீழே வைத்திருக்கும் பின்னூட்ட பெட்டியில் மறுமொழி பதிவு போட இயலாது. அதுவே மற்றொரு பக்கத்தில் வரும் பின்னூட்ட பெட்டி என்றால் எளிதாக பின்னூட்டம் எழுத முடியும். இப்படி இருப்பதால் குரோமில் படித்துவிட்டு பின்னர் எக்ஸ்ப்லோறேர் சென்று போதும் என்றாகிவிடும். 

பொதுவாக பின்னூட்டம் எழுதுவது அந்த நேரத்தில் எழுதுவதும், சிறிது நேரம் பின்னர் எழுதுவதும் வித்தியாசமாக இருக்கும். சிந்திக்க அவகாசமே தரக்கூடாது என்பதுதான் நான் படிக்கும்போது நினைப்பது. படித்தவுடன் பளிச்சென ஒரு எண்ணம் வரும், அதுதான் எனக்குப் பிடித்த  பின்னூட்டம். சிறிது நேரம், சிறிது நாட்கள் கழித்து எழுதினால் மொத்த சிந்தனையும் வேறு மாதிரி இருக்கும். 

நண்பர் கிரி பதிவில் குரோம் பற்றி எழுதி இருந்தார். இந்திய மக்களுக்கு நான் அனுபவிக்கும் சோதனைகள் வருமோ என்னவோ. 

சில மாதங்கள்தான் இந்த பிரச்சினை. அதுவும் புதிய வலைத்தள வடிவமைப்புக்கு சென்ற பின்னர் என கருதுகிறேன். ஏதாவது தொழிநுட்பம் தெரிந்தால் சொல்லுங்கள். 

இத்தருணத்தில் மேலும் சில நாட்கள் நீட்டித்தமைக்கு நேசம் குழுவுக்கு நன்றி. கட்டுரை எழுதி கொண்டிருக்கிறேன். தமிழ் படுத்தும் பாடு! 

Monday 30 January 2012

முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள்

ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. 
ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். 

எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இல்லை. 

முஸ்லீம் என்றால் இறைவனிடம் தம்மை ஒப்புவிப்பவர் என அரபிக் மொழியில் பொருள்படும் என சொல்லப்படுகிறது. ஆஹா, எத்தனை ஆனந்தமான சொல். 

ஆனால் முஸ்லீம் என்றால் உலகில் வெறுப்புக்கு உள்ளாகும் நபர்கள் என்பது முஸ்லீம் என்ற பெயர் கொண்டு சிலர் செயல்படும் நடவடிக்கைகள் தான். ஆனால் எந்த மனிதர்தான் அடவாடித்தனமாக செயல்படவில்லை? தனது கொள்கைகளை நிலை நிறுத்த எல்லோருமே அடாவடியாக செயல்படத்தான் வேண்டி இருக்கிறது. 

தமிழை பழித்தால் தாய் தடுத்தாலும் விடேன் எனும்போது ஒரு ஆவல் பிறக்கிறது. அதே போல எமது இறைவனை, எமது புனித நூலை பழித்தால் விடேன் என முஸ்லீம்கள் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என புரியவில்லை. 

முஸ்லீம்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள் எனும் ஒரு பொதுவான எண்ணம் நிலவுகிறது. எதற்கு ஐயா சகித்து கொண்டு போக வேண்டும்? எதை சகித்து கொண்டு போக வேண்டும்? திருக்குர்ஆன் பற்றி உங்களால் சகித்து கொண்டிருக்க இயலாத நிலையில் அவர்கள் எதற்கு அதற்கான எதிர்ப்பை சகித்து கொண்டிருக்க வேண்டும்?

பரிணாம கொள்கையை எதிர்க்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு ஆத்திகர்கள் மேல் அதாவது முஸ்லீம்கள் மேல் அதிகமாகவே சொல்லப்படுவது உண்டு. எதற்கு பரிணாம கொள்கையை எதிர்க்க கூடாது? ஏதேனும் சட்டம் இருக்கிறதா? பரிணாம கொள்கையை முற்றிலும் ஏற்று கொள்ள இயலாது. இதுவரை கண்டெடுக்கப்பட்ட விசயங்களை நிறையவே ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. 

பில்லியன் ஆண்டுகள் முன்னாள் ஒன்றுமே இல்லை என அறிவியல் சொல்லும், அதை மட்டும் ஆஹா, ஓஹோ என கேட்டுக் கொள்வோம். ஆனால் . அதை எதிர்த்து ஒருவரும் கருத்து சொல்ல மாட்டோம். அற்புதமான பகுத்தறிவு. அறிவியல் பில்லியன் ஆண்டுகள் முன்னாள் எந்த இயற்பியல் விதிகளும் இல்லை என்கிறது, என்ன பைத்தியகாரத்தனம், என்னதொரு மூட நம்பிக்கை என எவருமே சிந்தித்துப் பார்ப்பதில்லை. நாம் அனைவருமே நமது வாழும் காலங்களில் ஏமாற்றப்பட்டு கொண்டே இருக்கிறோம், அல்லது ஏமாறுவதற்கு ஆயத்தமாகவே இருக்கிறோம். 

இந்த ஆத்திகர்கள், நாத்திகர்கள்.  இந்த பதம் தனை எவர் கண்டுபிடித்தது என்று தெரியவில்லை. ஆத்தி, நாத்தி. என்ன கொடுமையான தமிழ் இது. ஆத்தி சொல்வதை மாத்தி சொல்வது நாத்தி. நாத்தி சொல்வதை மாத்தி சொல்வது ஆத்தி. அடி ஆத்தி, என்னதொரு விளக்கம். 

ஆதிகர்கள் என்பதுதான் ஆத்திகர்கள் என மருவிற்று. ஆதி என்றால் முதலானவை. முதல் முதலில் உலகில் தோன்றியவைகள் எல்லாம் ஆதிகர்கள். ஆதியும் அந்தமும் இல்லாத சோதி இறைவன் என குறிப்பிடப்படுகிறது. இப்படி ஆதி இல்லாத இறைவனை கேள்விக்குறியுடன் பார்க்கும் உலகம், ஆதி இல்லை என சொல்லும் அறிவியலையும் கேள்விக்குறியுடன் பார்க்கட்டும்.

இஸ்லாம், கிறிஸ்துவம்தனை தன்னுள் உள்ளடக்கியது என்கிறார்கள். இஸ்லாம், கிறிஸ்துவம் என எல்லாவற்றையும் இந்துமதம் தன்னுள் உள்ளடக்கியது என்கிறார்கள். 

இவை எல்லாவற்றையும் அறிந்து கொள்ள உதவும் அறிவியல் அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ள துடிக்கிறது. 

இதெல்லாம் இருக்கட்டும், உலகில் பஞ்சங்களும் , திருடுகளும், கொள்ளைகளும் குறையவா போகிறது, உலகம் சுபிட்சம் பெற்று சிறப்புடன் இருக்கவா போகிறது. 

எது எப்படியோ...

நமது நோக்கம் எல்லாம் உலகம் செழிக்க போராடுவதில் இருக்கட்டும். உலகம் இப்படியே இருக்கிறது என்பதை சகித்து கொள்வதை ஒருபோதும் நாம் அனுமதிக்க வேண்டாம். 

Thursday 26 January 2012

நண்பனால் தடுமாறிய தமிழ்வெளி

ஹிட்ஸ் ஹிட்ஸ் ஹிட்ஸ்! 

பதிவு எழுத வந்திருப்பவர்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்களா என்பது பற்றிய விவாதம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். 

பதிவு எழுத வந்திருப்பவர்கள் தரமிக்க பதிவுகளை எழுதுகிறார்களா என்பது பற்றிய கலந்துரையாடல் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். 

எந்த பதிவர் எப்படி தலைப்பு வைத்து எழுதி எப்படி ஹிட்ஸ் அள்ளி குவிக்கிறார் என்பதுதான் இன்றைய விவாதம் எல்லாம். ஹிட்ஸ் வைத்து வீடா கட்டப் போகிறோம் என அறைகூவல் விடுத்தாலும் ஹிட்ஸ் என்பது ஒரு அங்கீகாரத்தின் அடையாளம். 

எழுத்துகள் அத்தனை எளிதாக எவரையும் வசீகரிப்பதில்லை. எந்த ஒரு எழுத்தாளரும் அனைத்து சமூகத்தையும் தன்னருகே ஒருங்கே நிறுத்தியது இல்லை இதுவரை. பிரிவினைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. நான் இவரது ரசிகன் என ஒருவர் சொல்லும்போதே மற்றவர்களை ரசிக்கும் தன்மை குறைந்தவராகவே தென்படுகிறார். 

எழுதுவது அவரவர் உரிமை. எப்படி எழுதுவது, எதை எழுதுவது என்பதை எழுதுபவரே தீர்மானிக்கிறார். 

இப்பொழுதெல்லாம் ஒரு சட்டம் இருக்கிறது. இதை மறுமொழி இடுபவர்க்கு என வெப்துனியா தனது மறுமொழி இணைப்புக்கு முன்னர் எழுதி இருக்கிறது. 

//விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.//

இதே விசயத்தை பதிவு எழுதுபவர்கள் மீதும் ஒருவர் தொடங்கலாம் என்பது அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்று. 

இணையத்தில் நல்ல விசயங்களை மட்டுமே வாசிக்க நினைப்பவர்கள் கையில் தான் மவுஸ் உள்ளது. இவர்கள் அவ்வாறு செய்யாமல் சர்ச்சைக்குரிய விசயங்களைப் பற்றி பேசி பொழுதை வீணடிக்கிறார்கள் என்கிறார் இணையதளத்தை அதிகமாக உபயோகிக்கும் ஒருவர். 

மேலும் இணையதளத்திற்கும், மொபைல் போன்களுக்கும் அடிமையாகிவிட்டு இதற்கெல்லாம் அடிமையாகி விடாதீர்கள் என பிறருக்கு அதே அடிமைத்தனத்தில் இருந்து கொண்டே எச்சரிக்கை விடுப்பது குடிகாரன் பிறரை குடிக்காதே என அறிவுரை சொல்வது போன்றதுதான். அவரவருக்கு தெரியும் எது செய்ய வேண்டும், எது செய்ய கூடாது என. எந்த போதையும் கண்களை மறைக்கும். 

இந்த ஹிட்ஸ் பற்றி என்ன சொல்வது?

எந்திரனை மிஞ்சிய நண்பன் எனும் பதிவுக்கு தமிழ்வெளி மூலம் வந்த வாசகர்கள் என ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேலே காட்டியது. அதைவிட கூகுள் பக்கம் பார்வைகள் ஒரே நாளில் நான்காயிரம் அருகில் என காட்டியது. இதுவரை எந்த ஒரு பதிவுக்கும் இப்படி ஒரு நிலை வந்தது இல்லை. இத்தனைக்கும் எந்திரனை மிஞ்சிய நண்பன் எனும் பதிவு எனது கணக்கில் ஒரு கமர்சியல் பதிவு. அவ்வப்போது ஒரு கமர்சியல் பதிவு எழுதுவது வாடிக்கை.



இப்படி எந்த பதிவு எத்தனை பேரால் வாசிக்கப்பட்டது என்பது பெரிய விசயமாக பேசப்பட்டாலும் அதில் எத்தனை பேர் பயன் அடைந்தார்கள் என பார்த்தால் சைபர். சைபர் என்றால் இருவேறு அர்த்தங்களும் உண்டு. 

ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடித்து இருக்கிறது. பிடித்த விசயத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். தனக்கு அதாவது தனக்கு தவறென தெரிந்தால் எதிர்த்து பதிவு போடுகிறார்கள். இவர்களது கருத்து பரிமாற்றங்கள் தனிமனித தாக்குதல் வரை சென்று அச்சத்தை விளைவிக்கிறது. 

ஹிட்ஸ் குவிக்க நினைப்பவர்கள் எழுத வேண்டிய விசயங்கள் 

சினிமா சம்பந்தமான கிசுகிசுக்கள், பரபரப்பு செய்திகள். 

பாலியல் சம்பந்தமான போக்கிரித்தனமான பதிவுகள். 

பதிவர்கள் சம்பந்தமான உள்குத்து வெளிகுத்து கும்மாங்குத்து பதிவுகள். 

ஆனால் இதை எல்லாம் தாண்டி பல வாழ்வியல், அறிவியல் விசயங்களை மட்டுமே அற்புதமாக எழுதும் பதிவர்கள் இந்த பதிவுலகில் நிறையவே உண்டு. அவர்களை இனம் கண்டு கொள்வதில் எந்த சிரமமும் எவருக்கும் இல்லை. அவரவர் கையில் மவுசும், கீபோர்டும் உள்ளது. 

Tuesday 24 January 2012

ஐயா ஒரு நிமிடம் - நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை

ஒரு கதையாவது எழுதனும்னு நானும் பலமுறை யோசிச்சி பார்த்தேன். ஆனா எழுத வரலை. இப்படி எழுதனும், அப்படி எழுதனும்னு பல பேரு யோசனை சொன்னாங்க. என்னத்த எப்படி எழுதுறது அப்படினுட்டு தமிழ் வாத்தியார்கிட்ட என மனக்குறைய சொல்லப் போனேன். அவரை சுத்தி ரொம்ப பேரு உக்காந்து இருந்தாங்க. எனக்கு எப்படி கேட்கறதுன்னு ஒரு பயம் வந்துச்சு. 

'வா பழனிசாமி, என்ன இந்தப் பக்கம்'

'வாத்தியார் ஐயா, நா ஒரு கதை எழுதனும், உதவி பண்ணுவீங்களா'

'பள்ளிக்கூடம் பக்கமே வரமாட்ட, எப்ப பார்த்தாலும் காடு, கழனி, இதுதானே உனக்கு பழக்கம், கொஞ்சம் நஞ்சம் தெரிஞ்ச தமிழை வைச்சி எழுதப் போறியாக்கும், எழுதிக் கொண்டு வா, என் தலைவிதிக்கு நானும் வாசிக்கிறேன். நீ படிச்சி இருந்தா உன் தங்கச்சி மாதிரி பத்தாவதுல முத மார்க்கு வாங்கி இருந்து இருப்ப'

'ஐயா, நீங்க அப்படி எல்லாம் சொல்லக்கூடாது, வீட்டு வசதி அப்படி, என்ன பண்றது, என்னால படிக்க முடிஞ்சா படிச்சி இருப்பேன் ஐயா'

'இங்க பாரு பழனிசாமி, நீ சொல்ற சாக்கு போக்கு எல்லாம் எனக்கு வேணாம், இன்னைக்கு நீ படிச்சி இருந்தா பன்னிரண்டு முடிச்சி ஒரு காலேஜ்ல போயி சேர்ந்துருப்ப, விதி யாரை விட்டுச்சு' 

சுத்தி இருந்தவங்களை வைச்சிகிட்டு தமிழ் வாத்தியார் அப்படி சொன்னது என் மனசுக்குள்ள வலியை தந்துச்சு. எங்க ஊருல பள்ளிக்கூடம் எல்லாம் இல்ல, பக்கத்து ஊருக்குத்தான் போகணும். இவரு பக்கத்து ஊருல சொல்லிக் கொடுக்கிற எங்க ஊரு வாத்தியாரு. பேரு ரத்தினசபாபதி. பேருக்கு ஏத்தமாதிரி  ரொம்ப தங்கமான மனுசர். ஆனா அடிக்கடி புகையில போடுற பழக்கம் இவருக்கு இருக்கு. யாராச்சும் உதவின்னு கேட்டு போனா என் தலைவிதிக்கு நானும் செய்றேன் அப்படின்னு மறுக்காம செய்வாரு. தமிழ் வாத்தியாருதான் ஆனா, இங்கிலீஷ் நல்லா அவருக்குத் தெரியும். கணக்கு கூட ரொம்ப நல்லா சொல்லித் தருவாரு. அதனால எங்க ஊருல இருக்கறவங்களுக்கு இவர் தான் ரொம்ப விசயத்துக்கு துணை. இன்னொருத்தர் குருசாமி ஐயர். அவர் மாதிரி ஒரு மனுசரை பார்க்கறது ரொம்ப கஷ்டம். எங்க காட்டுல கூட வந்து வேலை செய்வாரு, கோவிலுள பூசையும் செய்வாரு.  நா ஐயரோட ரொம்ப நெருங்கி  பேசினது இல்ல. எங்க அப்பாகிட்ட பேசறப்ப நா தள்ளி நின்னுக்குவேன். அவரு சாமிங்கிற பயம். 

'டே பழனி, நாளைக்கு  அப்பாவுக்கு திவசம் பண்ணனும், ஐயர் கிட்ட சொன்னியா'

நா வீட்டுக்குள்ளாற நுழைஞ்சி நுழையாம என்னோட அம்மா சத்தமா சொல்லிச்சி. 

'இன்னைக்கு காட்டுக்கு போறப்ப சொல்லிட்டுதான் போனேன், வந்துருறேன் அப்படின்னு சொன்னாருமா' 

'ஐயர் சொன்னதை கேட்டு நடந்து இருந்தா உங்க அப்பாவுக்கு இப்படி ஒரு நிலைமை வந்துருக்குமா' 

எங்க அப்பா போன வருஷம் தான் செத்துட்டாரு. ஏதோ  டி பி நோயாம். அது வந்துதான் செத்துப் போயிட்டாரு அப்படினுட்டு கவர்மென்ட் ஆஸ்பத்திரில சொன்னாங்க. எப்ப பார்த்தாலும் சிகரெட்டு, சாயந்திரம் ஆயிருச்சினா சாராயம். என் அம்மா, தினமும் அதையெல்லாம் நிறுத்த சொல்லி அவரோட சண்டை போடுவா. ஆனா அந்த மனுஷன் எதையும் நிறுத்தலை எங்கம்மாவை ஒரு வார்த்தை எதிர்த்து பேசலை, அடிக்கலை. ஆறு வருஷம் முன்னால இரும ஆரம்பிச்சாரு. அப்பவாச்சும் நிறுத்துவாருனு பார்த்தா நிறுத்தலை. என் தங்கச்சி கூட தினமும் அழும். பழனி, உன் அப்பன் மாதிரி நீயும் ஆயிறதரா, எனக்கும், உன் தங்கச்சிக்கும் ஒரு ஆதரவு இல்லைடா அப்படின்னு ஒரு வருசமா அம்மா தினைக்கும் சொல்லிக்கிட்டே இருக்கும். அம்மா முத முத அந்த வாக்கியத்தை சொன்னப்ப எனக்கு எப்படி இருந்துச்சுன்னு எப்படி சொல்றது. இன்னைக்கும் அதேதான் சொன்னா. 

'நான் குடிக்க மாட்டேன், சிகரெட்டை தொடக் கூட மாட்டேன், எந்த தப்பான வழிக்கும் போக மாட்டேன், கவலைப்படாதம்மா' 

என் பேச்சை கேட்டதும் என் அம்மா என்னை வழக்கம் போல உச்சி மோர்ந்தா. என் தங்கச்சி என் கையை புடிச்சிகிட்டு நின்னா. 

'அம்மா நான் ஒரு கதை எழுதலாம்னு இருக்கேன், அதை அப்பா பத்தி எழுதினா நல்லா இருக்கும்லமா'

'அவரைப் பத்தி என்னடா எழுதப் போற, வேற வேலையிருந்தா பாரு' 

'நான் எழுதனும், சொல்லும்மா'

'குடிச்சி அழிஞ்ச ராமரு, புகைச்சி அழிஞ்ச புத்தரு. இதைவிட என்னத்த சொல்றது'

அம்மா அப்படி சொன்னதும் எனக்கு ஓநு அழுகை வந்துருச்சி. அழுகையை அடக்கிகிட்டு கைய காலை அலம்புனேன். அந்த அலம்புன தண்ணியில என் கண்ணீரும் கரைஞ்சி போயிருச்சி. எந்த வம்பு தும்புக்கும் எங்க அப்பா போனது இல்லை. சாராயம் குடிச்சிட்டு வீட்டுல வந்து இருக்கறதை சாப்பிட்டுட்டு தூங்கிருவாரு. அம்மா சண்டை போட்டாலும் 'விடலாம்னுதான் இருக்கேன் அந்த கருமத்தை, என்ன செய்யிறது என் கர்ம வினை, இப்படி இந்த கருமத்தை தலையில சுமக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு இருந்துருவாரு.

'பழனி, வந்து சாப்பிடு' 

அம்மா, நான், என் தங்கச்சி உட்கார்ந்து சாப்பிட்டோம். 

'அப்பா பத்தி எழுதறப்ப நல்ல விசயங்களா எழுதுணா, ஒரு வரி கூட தப்பா எழுதிராதே' 

'எதுக்கு அப்படி சொல்ற, அவர் குடிச்சது எல்லாம் சொல்லனும், அவர் குடிச்சதாலதான் நோய் எல்லாம் வந்துச்சு' 

'நம்ம கோயில் கருப்புசாமி கூட தான் சாராயம் குடிக்குது, அதுக்கு எந்த நோய் வந்துச்சுணா' 

'கல்லுக்கு போய் நோய் வருமா, என்ன படிப்பு படிக்கிற நீ' 

'வண்டி வண்டியா புகை விடுறாரே வணங்காமுடி, அவருக்கு எங்க நோய் வந்துச்சு, சிகரெட்டு பிடிக்கிறவங்க, சாராயம் குடிக்கிறவங்க எல்லாத்துக்குமா இந்த நோய் வருது, சொல்லுணா பார்ப்பம்' 

'பழனி, இதுக்குதான் நாலெழுத்து படிக்கனும், முதல சாப்பிடு'

என் தங்கச்சி சொன்னது மனசுல உறுத்திக்கிட்டே இருந்துச்சு. குடிக்கிறவன் எல்லாம் இப்படி செத்தா போறான். உடல் நலத்துக்கு கேடு அப்படின்னு தெரிஞ்சுதானே எல்லாம் செய்றாங்கன்னு ராவெல்லாம் ஒரே யோசனை. குடிச்சாதான் ஒரு கெத்து அப்படின்னு பக்கத்து ஊருல ஏகப்பட்ட டாஸ்மாக் கடை. சாகறதுக்கு முண்டியடிச்சிட்டு நிக்கிறாங்க அப்படின்னு தோணும். அப்படி இப்படி நினைச்சிகிட்டே தூங்கிப் போனேன். 

விடியற்காலை ஆறு மணிக்கெல்லாம் ஐயர் கூப்பிட அவரோட வீட்டுக்கு போனேன். 

'மது அருந்தி மனம் வருந்தும் நிலை வேண்டிலேன்
புகை பிடித்து புற்று நோய் வர வேண்டிலேன் 
மாதுவின் மனம் மயங்கி மறைந்திட வேண்டிலேன் 
பணமதில் என் குணம் தொலைந்திட வேண்டிலேன் 
நின் கரம் பிடித்து நல்வழி சென்றிட வேண்டுகிறேன்
நிலையில்லா உலகில் நீயே நிலை அறிகிறேன்' 

இந்த பாட்டை இப்போதான் முத முத ஐயர் பாட கேட்டேன். பாட்டு முடியற வரைக்கும் காத்து இருந்தேன். இதே வரிகளை மூணு தரம் பாடினாரு. இன்னும் பாட மாட்டாரா அப்படின்னு இருந்துச்சி. நான் வாசலுல நின்னுகிட்டு இருந்தேன். வெளியில வந்தார்.

'வாடா அம்பி, உன் ஆத்துக்குத்தான் கிளம்பிண்டு இருக்கேன்' 

'சாமி, நீங்க இந்த பாடுன பாட்டு'

'டே அம்பி, காப்பி குடிக்கிறியா, நேத்தைக்கு மாதிரி வேணாம்னு சொல்லிராதேள், உன்னை பாக்க வைச்சி நா குடிக்கப்படாது. சிவகாமி ரெண்டு காப்பி கொண்டு வா, பழனி அம்பி வந்துருக்கான்' 

'சாமி பாட்டு'

'டே அம்பி, உன் தோப்பனார் ரொம்ப பாந்தம். ஆனா அவாகிட்ட ரெண்டு கெட்ட பழக்கம் இருந்துச்சு. நோக்கு நன்னா தெரியும். நா அவாளைப் பாக்கறச்சே அதையெல்லாம் விட்டுருங்கோ அப்படின்னு சொல்லி பாலபாடம் எடுத்துருக்கேன். அவா என்னால விட முடியலை சாமி அப்படின்னு கையெடுத்து கும்பிடுவா. ஈஸ்வரன் மேல பாரத்தை போடுங்கோனு சொல்லிப் பார்த்தேன். கேட்கலை' 

'பாட்டு பத்தி சொல்லுங்க சாமி'

'அதான் சொல்ல வரேன்டா அம்பி. இந்தா காப்பி எடுத்துக்கோ. என்னது ரொம்ப சின்ன லோட்டாவா இருக்கேன்னு பாக்கிறியா. காபி கூட அளவோட தான் குடிக்கனும். பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே அப்படினு ஒரு அண்டா நிறைய குடிக்கப்படாது. இந்த பாட்டு என்னோட தோப்பனார் எனக்கு சொல்லித் தந்தது. மது வகைகள் நாம சாப்பிட்டா நம்மோட மனசு பிறழும். மனசு பிறழ்வு வந்தா வருத்தம் வரும். அதே மாதிரி புகை பிடிச்சா நுரையீரலுல புற்று நோய் வரும். அதே போல பெண்கள் கிட்ட மயக்கம் வந்துச்சினா மதி கெட்டு போயிரும். அதைவிட பண மோகம் வந்துச்சுணா குணம் கெட்டுப் போயிரும். இதெல்லாம் வேண்டாம். உன்னோட கரம் பிடிச்சி நான் நல்வழி போகணும் அப்படின்னு இந்த நிலையில்லா உலகில் இதெல்லாம் தேவை இல்லை அப்படின்னு எம்பெருமானை நோக்கி பாடுறது, காபிய குடி'

'புகை பிடிச்சா புத்து நோய் வருமா'

'ரமண மகரிஷி கேள்விப்பட்டு இருக்கியோ, அவாளுக்கு கூட புற்று நோய் வந்துச்சி. முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை கேள்விபட்டு இருக்கியோ, அவாளுக்கு கூட புற்று நோய் வந்துச்சி. இவா ரெண்டு பேருக்கும் எதுக்கு வந்துச்சி' 

'தெரியாது சாமி'

'சிவகாமி, இந்தா லோட்டா, நான் திரும்பி வர ஒரு மூணு மணி நேரம் ஆகும்'

'வாடா அம்பி, பேசிட்டே போகலாம்'

ஐயருடன் நடக்க ஆரம்பிச்சேன். 

'புகையிலை சாப்பிட்டா புற்று நோய் வரும். அதே மாதிரி சிகரெட்டு, பீடி புகை பிடிச்சா புற்று நோய் வரும். இந்த புற்று நோய் இன்னும் வேற வேற ரூபத்தில வரும். இப்போ புரியுதோ எதுக்கு அவா ரெண்டு பேருக்கும் வந்துச்சின்னு. மனுசாள் தப்பு பண்ணினா புற்று நோய் வரும்னு அந்த காலத்தில பயமுறுத்தி வைச்சிருந்தா. பாம்பு எப்படி மண்ணை எல்லாம் சேகரிச்சி புத்து கட்டுறதோ அதைப் போல முனிவர்கள் தவம் இருந்தா அவாளை சுத்தி மண் எல்லாம் மூடி ஒரு புத்து போல வளர்ந்துரும். இதே மாதிரி நாம புகையிலையோ, புகையையோ பிடிச்சா அதுல இருக்கற கெமிக்கல், கெமிக்கல் தெரியுமோ நோக்கு, கொஞ்சம் கொஞ்சமா படிஞ்சி செல்கள் எல்லாம் புத்து போல வளர்ந்துரும். அதுக்குதான் புற்று நோய் அப்படின்னு பேரு வைச்சா'

'கட்டியா வளருமா சாமி'

'ஆமாடா அம்பி,  செல்கள் எல்லாம் ஐம்பத்து மூணு தடவை பல்கி பெருகி அப்புறம் அழிஞ்சிரும். நோக்கு நம்ப உடம்புக்குள்ள இருக்கிற ஜீன்ஸ் தெரியுமோ?. இந்த ஜீன்ஸ் தான் எல்லாத்தையும் கட்டுப்படுத்துறது. இப்போ இந்த ஜீன்ஸ்ல ஏதாச்சும் மாத்தம் வந்துருச்சினா, இந்த செல்கள் ஐம்பத்து மூணு தடவை மேலயும் பல்கி பெருகும். அப்போ இந்த செல்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து கட்டியா வளரும். இந்த வளர்ச்சிக்கு நம்ம உடம்பு ஈடுகொடுக்க முடியாம செத்து போயிருவாங்க'

'எங்கப்பா செத்தது டி பி தானு சொன்னாங்க சாமி'

'சாவு அப்படின்னா என்னான்னு தெரியுமா அம்பி? நம்மளோட செல்கள் இனிமே உழைக்க முடியாத நிலைமைதான் சாவு. மார்கண்டேயன் இந்த செல்கள் எல்லாம் வயசாகமா இருக்கிற வித்தை தெரிஞ்சிருந்தா.   இப்போதான் உலகம் கெமிக்கல் உலகம் ஆகிண்டே வருதே. நகரத்துக்கு போய் பாரு. வீட்டை கழுவ, துடைக்க எல்லாம் கெமிக்கல். சில கெமிக்கல் ரொம்ப மோசமானதுடா அம்பி. டே அம்பி இந்த புற்று நோய் ரத்தம், தலை, மார்பகம் அப்படின்னு இதுதான் இங்கதான் வரணும் அப்படின்னு பாகுபாடு பாக்கறது இல்லை, எல்லா இடத்திலும் வரும், கெமிக்கல் பேக்டரியில, கதிரியக்கம் மூலம் வரும். பேப்பர் படிச்சியோ? கூடங்குளத்தில அணுஉலை வேணாம்னு சொல்றாளே, இந்த புற்று நோய்க்கு பயந்துதான், ரொம்ப மோசமான நோய்டா அம்பி. உன்னோட தோப்பனாருக்கு வந்தது புற்று நோய் தான், காச நோய் அப்படின்னு மருத்துவம் பாக்கறவா குழம்பிட்டா' 

'தமிழ் வாத்தியார் புகையிலை போடுறாரே, அவருக்கு புத்து நோய் வருமா சாமி'

'வருமா, வராதா அப்படின்னு பட்டிமன்றம் வைக்கப்படாது அம்பி. இது இது தப்பு அப்படின்னு தெரிஞ்சா அது சாமியே ஆனாலும் தள்ளி வைச்சிரனும், அப்பத்தான் இந்த லோகம் சேமமா இருக்கும்'

'ஏதாச்சும் தடுக்க வழி இருக்கா சாமி'

'டே அம்பி, இப்ப எல்லாம் இந்த புற்று நோய் வந்து இருக்கா, இல்லையானு தெரிஞ்சிக்க சோதனை எல்லாம் செய்றா. நம்ம கிராமத்துக்கு இதெல்லாம் தேவையான்னு கேட்கப்படாது. எந்த புற்று நோய் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது. அதனால ஆறு மாசமோ, ஒரு வருசமோ உடம்பை செக்கப் பண்றது நல்லது.  நகரத்துல ஒரு கிளினிக்குக்கு ரெண்டு மாசம் முன்னாடி நா போனப்ப எனக்கு தெரிஞ்ச மருத்துவர் கிட்ட பேசினேன். அதுல ரொம்ப பேரு புற்று நோய் செக்கப் பண்ண வந்து இருந்தா. பொம்மனாட்டி எல்லாம் தங்களோட மார்பகங்களில கட்டி இருக்குதா அப்படின்னு பார்க்க வந்து இருந்தா. இப்படி செக்கப் பண்ணிகிட்டா நாம புற்று நோயை பெரிசாக்கவிடாம தடுத்துரலாம்டா அம்பி. இதை எல்லாம் நம்ம ஊருல இருக்கிறவங்களுக்கு அறிமுகம் செய்யனும். நம்ம ஊருல இருக்கறவங்களை பயப்படாம  போய் பாத்துட்டு வர சொல்லனும்டா அம்பி. இந்த விபரம் முன்னாடியே தெரிஞ்சி இருந்தா உன்னோட தோப்பனார் இப்படி சின்ன வயசுல போயிருக்க மாட்டாரு'

ஐயர் அவரோட கைய என்னோட தோள் மேல போட்டாரு.  எனக்கு சங்கோஜமா இருந்துச்சி.வழியில போறவங்க எல்லாம் 'கும்பிடுறேன் சாமி' அப்படின்னு ஐயரை பாத்து சொல்லிட்டு போனாங்க. 

'டே அம்பி ஒன்னு கவனிச்சியா'

'என்னது சாமி?' 

'இவா எல்லாம் என்னைப் பாத்து கும்பிடுறேனு போறாளே, ஏன்?'

'தெரியலை சாமி' 

'மரியாதை கொடுக்குறா, இந்த மரியாதை யாருக்கு வேணும்டா அம்பி?. நோய் நொடி இல்லாம வாழற வழிய நா சொன்னா கேட்க மாட்டேங்கிறா. என்னைய கும்பிட்டுட்டு தொண்டை வரைக்கும் நிறைய சாராயம் குடிக்கிறா. நா வரதை பாத்து குடிச்சிட்டு இருக்கிற பீடிய கீழே போட்டு காலால மிதிக்கிறா. இதெல்லாம் எதுக்குடா அம்பி? பொய்யான வேஷம்' 

'மனுசருக்கு வாக்கு சுத்தம் வேணும் அப்பத்தான் வாழ்க்கை சுத்தமா இருக்கும்டா அம்பி. நல்ல விசயத்தை  திரும்ப திரும்ப சொல்லிக்கிரனும், இல்லைன்னா மறந்து போயிரும் நோக்கு புரியுமோ?'. 

எங்க வீடு வந்துருச்சி. சாமி அறைக்கு போன ஐயர் பாடினார். 

'பற்றுதனை  வைக்கும் இடத்தில் வைக்காமல் 
புற்றுதனை உள்ளத்தில் வளர்த்து 
உடலை தொலைத்த நம்பியே, 
எனது வாக்கை நம்பாமல் தொலைந்தது எங்கனம்'

ஐயர் எல்லா காரியங்களை செஞ்சி முடிச்சாரு. 

'டே அம்பி, நீ தினமும் காட்டு வேலை முடிச்சதும் என் ஆத்துக்கு சாயங்காலம்  வாடா அம்பி. உன்கிட்ட நிறைய பேசனும்' 

ஐயர் போனப்பறம் அவசர அவசரமா புத்து நோய் பத்தி ஐயர் சொன்னதை வைச்சி எங்க அப்பாவையும் அதுல சேர்த்து வைச்சி கதை எழுதுனேன். புற்று நோய் தடுக்கலாம் வாங்க என தலைப்பிட்டேன். அதை தமிழ் வாத்தியார்கிட்ட காட்டுனேன். ஐயா, இதை நகல் எடுத்து எல்லார்கிட்டயும் தாங்க, எல்லாருக்கும் நீங்க படிச்சி காட்டுங்கன்னு சொன்னேன். சரின்னு படிச்சிட்டே இருந்தவர் கண்ணுல கண்ணீர் கொட்டுச்சி. படிச்சி முடிச்சவரு என் தலைவிதிய மாத்தி எழுதவாடா கதை எழுதுன அப்படின்னு என்னை கட்டிபிடிச்சி கண்ணீர் விட்டாரு. 

இப்பல்லாம் நான் எங்க ஊரு தெருவுல நடந்து போறப்ப என்னை பார்த்து ரொம்ப பேரு கும்பிடுறாங்க. ஐயர் கூட என்னை பார்த்து கும்பிட்டாரு. 


(முற்றும்) 







Monday 23 January 2012

எந்திரனை மிஞ்சிய நண்பன்

ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் கதையமைப்பில் அல்ல, அது எத்தனை தூரம் வசூலை அள்ளி குவிக்கிறது என்பதை பொருத்துத்தான் அமைகிறது என்பதை சமீப காலங்களில் அறிந்து கொண்ட திரையுலகினர் படம் ஐம்பது நாள் ஓடுகிறதா, நூறு நாள் ஓடுகிறதா, வெள்ளிவிழா கொண்டாடுகிறதா என்பதெல்லாம் பற்றி கவலைப்படுவதில்லை. எவ்வளவு வசூல் வந்தது என்பதுதான் இப்போதைய வெற்றி கணக்கு. அதன்படி பார்க்கும்போது பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்கள் இயக்கம் படங்கள் 'குப்பைகளாக' இருந்தாலும் வெற்றி பெற்ற படங்களாகவே ஆகிவிடுகின்றன. அதற்கு முக்கிய காரணம் விளம்பரங்கள். ஒரு கரகாட்டகாரன், ஒரு சந்திரமுகி என பல நாட்கள் திரையரங்குகளில் ஓடிய படங்கள் என விரல் விட்டு எண்ணிவிடலாம். இப்போதெல்லாம் தொழில்நுட்பம் பெருகிவிட்டதால் படங்கள் அடுத்த நாளிலேயே இணையதளங்களில் எளிதாக கிடைத்துவிடுகின்றன. இப்படிப்பட்ட சூழலிலும் தமிழ் திரைப்படங்கள் வசூல் சாதனை புரிந்து கொண்டுதான் இருக்கின்றன. 

எந்திரன் படம் தயாரிக்கப்பட்ட போது படத்தை பற்றிய அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த நண்பன் படம் அப்படி ஒன்றும் எதிர்பார்க்கப்பட்ட படமாக அமையவில்லை. இதற்கு காரணம் இது ஒரு இந்தி படத்தின் தழுவல். 'ஈ அடிச்சான் காப்பி' என்பது போல இந்த படத்தை வெகு நேர்த்தியாகவே சங்கர் காப்பி அடித்துவிட்டார் எனும் பரவலான குற்றச்சாட்டு உண்டு. அது அவரது திறமைக்கு ஒரு சான்று என சான்றிதழ் தருபவர்கள் உண்டு. 

நண்பன் ஒரு ஈ அடிச்சான் காப்பி என்றாலும் அது மக்களிடம் நல்ல பெயரை வாங்கி இருப்பதாகவே பல இணையதளங்கள் செய்திகளை எழுதி வெளியிட்டு கொண்டிருக்கின்றன. அதிகாரப் பூர்வமாக அறிவித்தலில் கூட பல குளறுபடிகள் இருக்கும் என்றாலும் அது அதிகாரப் பூர்வமான அறிவிப்பு என்றே பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். இந்த நண்பன் படம் சரியாக வசூல் குவிக்கவில்லை என ஒரு பக்கம் ஒரு தரப்பு எழுதுவதும், அதே வேளையில் எந்திரனை மிஞ்சிய படம் என மறு சாரார் எழுதுவது என இந்த நண்பன் வசூல் குறித்த உண்மை நிலவரம் இதுவரை வெளிவரவில்லை. மிக சிறந்த படங்கள் அனைத்துமே வசூலில் அள்ளி குவிப்பதில்லை என்பதுதான் தமிழக திரையுலக வரலாறு.  

விஜய் அவர்களுக்கு நிறைய கனவுகள் இருப்பது பாராட்டப்பட வேண்டியதுதான். அரசியலில் இறங்க வேண்டும் எனும் அவரது எண்ணம் நல்லதுதான். இதற்கான முயற்சிகளை அவர் செய்கிறாரோ இல்லையோ அவரது தந்தை மிகவும் எச்சரிக்கையுடன் அதற்கான விதைகளை தூவிக்கொண்டே இருக்கிறார். இதற்கு திரையுலகில் வெற்றியை மிகவும் முக்கியமானதாகவே விஜய் கருதுகிறார். தனுஷ், சிம்பு என அடுத்த கட்ட நடிகர்கள் பலமுகங்களுடன் திரையுலகை ஆக்கிரமித்து கொண்டு வருகிறார்கள். இந்த சூழலில் விஜய் தொடர்ந்து வெற்றிப்படங்கள் தராது போனால் அவரது கனவுகள் தகர்க்கப்பட்டுவிடும் என்பதால் நண்பன் போன்ற படங்களில் எல்லாம் விஜய் நடிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார் என்றே திரையுலகினர் கருதுகிறார்கள். 

விக்கிபீடியா ஒருநாள் செயல்படாமல் இருக்கப்போவதை கண்டு ஒருவர் 'அப்பாடா இனிமேல் நான் பொய்யான தகவல்களை வாசிக்கவோ, சேகரிக்கவோ வேண்டியதில்லை' என நகைச்சுவையாக எழுதினார். இந்த விக்கிப்பீடியாவில் வரும் பல செய்திகள் நம்பகத்தன்மை இல்லாத தளங்களில் இருந்தெல்லாம் விசயங்களை சேகரித்து வெளியிடுகிறது. இந்த விக்கிபீடியாவில் வெளியிடப்பட்ட விபரங்களில் படி ஒரு மூன்று படங்களின் (எந்திரன் ஏழு நாட்கள், நண்பன் நான்கு நாட்கள், மங்காத்தா ஐந்து நாட்கள்) வசூலைப் பார்ப்போம். இதன் கணக்குப்படி பார்த்தால் நண்பன் எந்திரனை மிஞ்சிவிடும். மேலும் தயாரிப்பு செலவு என பார்த்தால் நண்பன் பெற்று இருப்பது எந்திரனை விட பெரும் வெற்றிதான். எனவே இனிமேல் விஜய் தான் 'சூப்பர் ஸ்டார்' என அறிவிக்கப்பட வேண்டும். 


பொய்யான தகவல்களை தருவதும், கவர்ச்சிமிக்க தலைப்புகளில் எழுதுவதும் மீடியாக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. அதில் நாமும் கரைவோம்.


Sunday 22 January 2012

உயிரினங்கள் தானாக தோன்றுவதில்லை

முன்னொரு காலங்களில் எல்லாம் உயிரினங்கள் தானாக தோன்றுகின்றன என்கிற சிந்தனை பெரும்பாலும் நம்பப்பட்டு வந்தது. அதாவது தண்ணீரோ, உணவோ கெட்டுப் போனால் அதிலிருந்து தானாக உயிரினங்கள் தோன்றுகிறது என நம்பினார்கள்.  ஆனால் இந்த உயிரினங்கள் தானாக தோன்றுவதில்லை என்பதை முதன் முதலில் உலகுக்கு எடுத்து காட்டியவர் ச்பல்லன்ஜானி எனும் அறியியல் அறிஞர்தான். 

உணவு பொருட்கள் அடங்கிய இரண்டு குடுவைகள் எடுத்துக் கொண்டார். அதில் ஒன்றை காற்றுவெளியில் திறந்து வைத்தார். மற்றொன்றை நன்றாக கொதிக்க வைத்து மூடியால் நன்கு இருக்க மூடி வைத்தார். ஒரு சில நாட்கள் பின்னர் இந்த இரண்டு குடுவைகளை பார்த்தபோது திறந்து வைக்கப்பட்டு இருந்த குடுவையில் நுண்ணுயிர்கள் தோன்றி இருந்தது, ஆனால் கொதிக்க வைக்கப்பட்டு மூடப்பட்ட குடுவையில் எந்த நுண்ணுயிர்களும் தோன்றவில்லை. இந்த செய்முறையை பலமுறை செய்து பார்த்துவிட்டு 'உயிரினங்கள் தானாக தோன்றுவது என்பது கிடையாது என அறிவித்தார். ஆனால் அவர் சொன்னதை அத்தனை எளிதாக எவரும் நம்பவில்லை. 

காற்றில் உள்ள முக்கியமான பொருளை இப்படி கொதிக்க வைத்ததால் செயல் இழக்க செய்துவிட்டதால் உயிரினங்கள் தோன்றவில்லை என வாதிட்டார்கள். இந்த அறிவியல் அறிஞரும் இப்படிப்பட்டவர்களை என்ன சொல்லி திருத்துவது என பேசாமல் விட்டுவிட்டார். 

அதற்கு அடுத்த வந்த அறிவியல் அறிஞர்கள் ஸ்வான் மற்றும் ச்சுல்சே காற்றை கந்தக அமிலத்தில் செலுத்தினார்கள். அவ்வாறு கந்தக அமிலத்தில் செலுத்தியபோது காற்றில் இருக்கும் சுவாச வாயு மாறாமலும், ஆனால் காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்திருக்கும் என்றும் நம்பினார்கள். அதை செயல்முறை படுத்த இவ்வாறு கந்தக அமிலத்தில் செலுத்தப்பட்ட காற்றை உணவு பொருட்களில் செலுத்தினார்கள். சில நாட்கள் ஆகியும் அந்த உணவு பொருட்களில் எந்த நுண்ணுயிரும் தோன்றவில்லை. அதைப்போலவே சாதாரண காற்றை உணவு பொருட்கள் செலுத்திய சில நாட்கள் பின்னர் நுண்ணுயிர் தோன்றியது. அப்பொழுது கூட காற்றில் உள்ள மிக முக்கியமான பொருளை சிதைத்துவிட்டார்கள் என்றே எதிர் தரப்பினர் வாதிட்டனர். 

பின்னர் நடந்த வெவ்வேறு ஆராய்ச்சிகள் மூலம் உயிர்கள் தானாக தோன்றுவதில்லை, அவை காற்றில் மூலம் தான் வர வாய்ப்பு இருக்கிறது என நிரூபிக்கப்பட்டது. 

அதெல்லாம் சரி, இன்னும் எப்படி மனிதர்கள், கடவுளால் அப்படியே படைக்கபட்டார்கள் எனவும், அறிவார்ந்த கட்டமைப்பு எனவும் நம்பி கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் புரியாத புதிராகவே இருக்கிறது. 

ஒரு செல் பல செல்கள் அமைப்பு என்பது நாமே கண்கூடாக பார்க்கும்போது அப்படி அப்படியே எப்படி களிமண்ணில் பொம்மை செய்து வைப்பதுபோல கடவுள் மனிதர்களை செய்து வைத்திருப்பார் என நினைக்கும்போது வெறுமை மட்டுமே மிஞ்சுகிறது. 

கடவுளை பொம்மை செய்து வைத்து அழகு பார்க்கும் வித்தையை நாம் கற்று கொண்டது போல கடவுளும் நம்மை பொம்மை போல செய்து வைத்திருப்பார் என எண்ணுவது விந்தைதான். 

ஒன்றுமே இல்லாமலா இவ்வுயிரினங்கள் தோன்றின எனும் சிந்தனையின் முன்னுரையாய் இதை எழுதியது, ஜீரோ எழுத்துக்காக. 

Friday 20 January 2012

உருவ வழிபாடு தப்பாங்க!



சுயநலமற்ற மனிதர்களின் கருத்துமலர்கள் சத்திய வாக்குதான். என்னைப் பொருத்தவரை அவர்கள் மனிதர்களே. வாழ்வில் இப்படித்தான் வாழ வேண்டுமெனெ சத்தியத்துக்கு கட்டுபட்டு வாழ்ந்த ஷீர்டி சாய்பாபா போன்ற வெகு சில மனிதர்கள் போற்றத்தக்கவர்கள்தான், மறுப்பதற்கில்லை. இருப்பினும் என்னைப் பொருத்தவரை அவர்கள் கூறிய கருத்துமலர்களை மட்டுமே போற்றி கொண்டு இருக்காமல் நாமும் ஒரு சாய்பாபா போல வாழ்ந்து காட்டுவதுதான் அவர் போன்றோரை பின்பற்றுபவர் செய்ய வேண்டிய அரிய செயலாகும். இது எவருக்கும் வாய்ப்பது அத்தனை எளிதில்லை, அதனால்தான் ஒரே ஒரு ஷிரிடி சாய்பாபா மட்டுமே இருக்கிறார், மற்றவர்கள் எல்லாம் அவர்களின் அடியார்களாக‌ இருக்கிறார்கள். இது நான் மக்களின் மீது சொல்லும் குற்றசாட்டு அல்ல. 

சாதாரண மக்கள் தங்களால் வாழ இயலாத வாழ்க்கையை இந்த மகான்களிடம் காண்பதால் பெரு மகிழ்ச்சி கொண்டு தங்களைத் தாங்களே முடக்கி கொள்கிறார்கள் என்பதுதான் எனது எண்ணம். இதன் காரணமாக மனிதர்களை கடவுளாக வழிபடுதல் என்பது அவரவரின் மனதுக்கு ஏற்ப நடக்கும் நம்பிக்கை எனும் செயல்பாடு. இந்த நம்பிக்கை இருக்கும் மட்டுமே ஷ்ரிடி சாய்பாபா, ரமண மகரிஷி, ராகவேந்திரர் போன்ற மகான்கள் மீதான பற்றுதல் தொடர்கிறது. இப்பொழுது சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர் எனும் மனித உருவில் உள்ள தெய்வங்கள் என சொல்லப்படுபவர்களை எடுத்துக் கொள்வோம். இந்த தெய்வங்கள் எல்லாம் இன்னல்களில் இருந்து காத்துவிடுவார்கள் எனும் நம்பிக்கை ஒன்றுதான் நம்மை அவர்களை வணங்க செய்கிறது. ஊரில் விளையாட்டாக சொல்வார்கள், கஷ்டம்னு ஒன்னு வந்தாத்தான் கடவுள் நமது கண்களுக்குத் தெரிவார் என்பார்கள். 

மரணமடைந்த எனது தாய் இறைவனாக இருந்து காத்து கொண்டிருக்கிறார் என எனது தந்தை அடிக்கடி சொல்வார், என்ன முட்டாள்தனம் என்றே எனக்குத் தோன்றும், ஆனால் பிறரது நம்பிக்கைகளை உதாசீனப்படுத்தும் யோக்யதை எனக்கு இல்லை, யோக்யதை இருந்தாலும் உதாசீனப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை, எனவே சிரித்து கொண்டே அமைதியாக இருப்பேன். கிராமத்து வீட்டில் எனது தாத்தா, எனது தாய் என பூஜையறையை அலங்கரித்து கொண்டிருப்பார்கள். அதே போல எனது மற்றொரு தாத்தாவுக்கு (எனது தாயின் அப்பா) கிராமத்து தோட்டத்தில் சமாதி ஒன்று உண்டு, அங்கே பூஜைகள் எல்லாம் நடக்கும். அதே போல நாச்சாரம்மாள் எனும் குழந்தை தீயில் விழுந்து இறந்து போனதால் அந்த குழந்தை நம்மை காக்கும் என அவரையும் ஒரு வீட்டில் தெய்வமாக கொண்டாடுவோம். இப்படி மனிதர்களை கடவுளாக வைத்து வணங்கிப் பார்க்கும் பழக்கம் நம்மில் தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தவறு என்று நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் என்ன வேண்டும்? நிம்மதி! அந்த நிம்மதி எந்த ரூபத்தில் வந்தால் என்ன என்கிற மனப்பக்குவம் உடையவர்கள் தான் நாம். 

எனக்கு இறை நம்பிக்கை கிடையாது, ஆனால் இறைவன் இருக்கிறார். எப்படி இருக்கிறார், ஏன் இருக்கிறார், எதனால் இருக்கிறார், எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை. இறைவன் இருக்கிறார் அவ்வளவே. எனது செயல்பாடுகளுக்கே நானே காரணம். இதில் இறைவன் பங்கு கொள்வதும் இல்லை, பங்கு பெறுவதும் இல்லை. நான் என்ன புதிதாக சொல்லிவிடப் போகிறேன். நன்றும் தீதும் பிறர்தர வாரா என சொன்னவர்கள் இந்த வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிந்தவர்கள். 

ஏதேனும் தவறாக நடந்தால், ஏதேனும் நேர்மாறாக நடந்தால் 'தெய்வம் சும்மா விடாது' என சொல்பவர்களை கண்டு சிறுவயதில் மிகவும் பயந்தே இருக்கிறேன். இப்பொழுது கூட வாழ்வில் நடக்கும் பல விசயங்களைப் பார்க்கும்போது நமக்கு அதனதன் காரண காரியங்கள் தெளிவதில்லை தெரிவதும் இல்லை. நான் முதன் முதலில் நாவலுக்கு எழுதிய கவிதை 

நீ என் அருகினில் இருப்பினும்
உன்னை என்னுள் உணராதவரை
உன்னை தேடுதல் ஒரு தேவை.

இது எனது மனைவி அருகில் இருக்க நான் எழுதியது. இங்கே இறைவனைப் பொருத்திப் பார்க்கலாம், எனது மனைவியை நினைத்தும் பார்க்கலாம். 

மனிதர்களின் செயல்பாடுகளுக்கெல்லாம் இறைவன் பொறுப்பு ஏற்பது இல்லை, எனினும் நடக்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் ஒரு காரணியாக காட்டப்படுவதால் மனிதர்களின் நம்பிக்கை, தெய்வங்களிடம் மட்டுமின்றி மனிதர்களிடமும் பரவி இருக்கிறது என்பதுதான் நான் இதுவரை கண்டுகொண்ட விசயம். 

அவரவருக்கு எது எது பிடித்து இருக்கிறதோ அதன்படி அவர்கள் மட்டுமே நடந்து கொண்டால் பிரச்சினை இல்லை, அதை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது பெரும் பிரச்சினைக்கே வழி வகுக்கும். 

நான் அவர்களின் அருகில் இல்லாத காரணத்தினால் மகான்கள் எனப் போற்றபடுபவர்கள் எல்லாம் என்னை வியக்க வைக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களைப் பற்றி என்னில் பல அபிமானங்களை பிறர் திணித்துவிடுகிறார்கள், அல்லது அபிமானங்களை நானே திணித்துக் கொள்கிறேன். 

ஒரு கட்டத்துக்குள் நம்மை நாமே நுழைத்துக்கொள்ளும்போது எந்த சிந்தனையும் முழுமை பெறுவதில்லை. 

உருவ வழிபாடு தப்பும் இல்லை, வழிபாடு பண்ணாம இருப்பதும் தப்பு இல்லை. அவரவருக்கு அவரவர் செயல்கள் தப்பே இல்லையாம்! 

Thursday 19 January 2012

இது எல்லாம் கவிதைகள்

மழையில் நனையாமல் இருக்க
குடை பிடித்தேன்
குடை நனையாமல் இருக்க
மழை நிற்குமா?!

பிரச்சினைகள் கண்டு கண்டு
ஓடி ஒளிந்தேன்
நான் ஓடி ஒளிந்ததை கண்டு
பிரச்சினைகள் ஒழியுமா?!

அன்பின் அவசியம் குறித்து 
கோபம் கொண்டேன் 
கோபம் கொள்வது என்பது
அன்பில் அவசியமா?!

இறையென பலர் சொன்னதும் 
இரை என்கிறேன் 
இரையின்றி இறைவன் சரி
மனிதன் சரியா?!

ஏனோ கவிதைகள் புரிவதில்லை
வார்த்தைகள் என்றேன் 
வெறும் வார்த்தைகள் கொண்டால்
கவிதை அவையாகுமா? 

Tuesday 17 January 2012

இணையதள அறிவுகளஞ்சியங்கள் நாளை முடங்குகின்றன

அமெரிக்காவில் கொண்டுவரப்பட இருக்கும் இரண்டு சட்டங்களை எதிர்த்து இணையதளங்கள் நாளை இருபத்தி நான்கு மணிநேரம் தங்களை முடக்கி கொண்டு எதிர்ப்பினை தெரிவிக்க இருக்கின்றன. 

கிட்டத்தட்ட ஐயாயிரம்  இணையதளங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் என களத்தில் இறங்கி இருக்கின்றன. 

எப்படி நமது இணையதளத்தை முடக்குவது என்பது குறித்தான விபரங்களையும் இந்த இணையதளம் வெளியிட்டு உள்ளது. இணையதளம் வைத்திருக்காத நபர்கள் எதிர்ப்பினை ட்விட்டர், முகநூல் தனில் பதிவு செய்ய வேண்டுமென கேட்டு கொண்டிருக்கிறார்கள். சிடிசன், குடிமக்கள், என்பது போல இணையதளம் வைத்து இருப்பவர்கள் நெட்டிசன், வலைதளமக்கள், என புது பட்டம் அளித்து இருக்கிறார்கள். 

கருப்பு கொடி காட்டுவது போல எல்லா இணையதளங்களும் கருப்பாகவே இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது எனது வேண்டுகோள். 

சரி, அப்படி என்ன அந்த இரண்டு சட்டங்கள் சொல்கிறது. இணையதள ரகசியங்கள் பாதுகாப்பு தடுப்பு சட்டம், அறிவுசார் சொத்து பாதுகாப்பு சட்டம். இப்படி இந்த இரண்டு சட்டங்கள் கொண்டு வந்தால் நிறைய அறிவுசார் இணையதளங்கள் எல்லாம் மூட வேண்டிய நிலை வந்து விடும். நாளை அமெரிக்காவில் கொண்டு வர இருக்கும் சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும், நமது சுதந்திர பேச்சை, நமது முன்னேற்றத்தை தடுக்கும் இந்த சட்டங்கள் ஒடுக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்து இருக்கிறார்கள்.  

இந்த இணையதளங்கள் செய்யும் பல விசயங்கள் கண்டனத்துக்குரியவையாக இருக்கின்றன என சொல்கிறார்கள். 

1  ஒருவர் எழுதிய நூலை அப்படியே அப்பட்டமாக பதிவது. (இது போன்று நான் எழுத நினைத்த கம்பராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் கிடப்பில் போடப்பட்டு விட்டன). 

2 பி டி எப் வடிவில் புதத்தகத்தையே காப்பி செய்து இணையத்தில் பதிவது. 

3 இசையை வெளியிடுவது, படங்களை வெளியிடுவது, தொடர்கள் வெளியிடுவது என பல வேலைகளை இலவசமாகவே செய்து வருகின்றன. இதன் மூலம் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைகிறார்கள். 

எத்தனையோ அறிவு சார்ந்த விசயங்கள் இணைய தளம் மூலம் கிடைப்பதால் நூலகம் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. அப்படியெனில் நூலகங்களில் இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள் முடக்கப்படுமா? ஒரு படம் வாங்கி அதில் பல படங்கள் உருவாக்கி வாடகைக்கு விடப்படும் தொழில் முடக்கப்படுமா? 

இணையதள வளர்ச்சியினால்  பதிப்புரிமை, காப்புரிமை வைத்திருப்பவர்கள்  பாதிக்கப்பட்டது என்னவோ உண்மைதான். அதற்காக இணையதளத்தையே முடக்குவது அறிவை சிதைப்பது போன்றதாகும். 

காப்புரிமை, பதிப்புரிமை வைத்திருப்பவர்கள் சற்று சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது. அதே வேளையில் இணையதளம் வைத்திருப்பவர்கள் மிகவும் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டிய தருணம் இது. 

இணையதளங்கள் மீது திணிக்கப்பட இருக்கும் சட்டத்தை நீங்கள் எதிர்க்கிறீர்களா?, ஆதரிக்கிறீர்களா? 





Friday 13 January 2012

நேசம் போட்டிகள் எப்போது களைகட்டும்?



நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்


இதுவரை இந்த போட்டிகளுக்கு என எழுதியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது என்பதை நினைக்கும்போது பதிவர்கள் நிறையவே யோசித்து கொண்டிருக்கிறார்கள் என தெரிகிறது. நான் ஒரு சிறுகதை, கட்டுரை தயார் செய்து கொண்டிருக்கிறேன். பொங்கலுக்கு பின்னர் வெளியிடலாம் என இருக்கிறேன். 

அதற்கு முன்னர் என்றோ எழுதிய புற்று நோய் எனும் கதையை இங்கே மீண்டும் பதிவு செய்கிறேன். இந்த போட்டி குறித்த விபரங்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்துக

புற்று நோய் - சிறுகதை (இது இந்த போட்டிக்காக அல்ல, போட்டிக்காக வேறு ஒரு கதை எழுதி கொண்டிருக்கிறேன்) 

//புதனவெள்ளி மருத்துவமனை வளாகத்தில் ஆறு மருத்துவர்கள் மிகவும் யோசனையுடன் அமர்ந்து இருந்தார்கள். மிகவும் நிசப்தமான அமைதி நிலவியது. ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் யாராவது பேச்சைத் தொடங்கமாட்டார்களா என எதிர்பார்ப்புடன் இருப்பது அவர்களின் முகத்தில் அப்படியே தெரிந்தது. அமைதியை கலைத்து தலைமை மருத்துவர் ஜெயபால் பேசினார்.

''இன்னைக்கு வந்திருக்க பேஷண்ட் ரொம்பவும் கிரிட்டிக்கல் கண்டிசன்ல இருக்கார், அவருக்கு அறுவை சிகிச்சை செஞ்சாகனும் ஆனா அதற்கான செலவை ஏத்துக்குற வசதி அவங்களுக்கு இல்லை. யாரோ சொல்லி இங்க கொண்டு வந்திருக்காங்க, இந்த கேன்சரை வெட்டினாலும் திரும்ப வந்துரும், இப்போ போராடுற உயிருக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க''

''அறுவை சிகிச்சை செஞ்சிரலாம், இதுக்கு யோசனைப் பண்ண வேண்டியதில்லை'' என்றார் துணை மருத்துவர் கோபால்.

''மருத்துவ செலவு யார் கட்டுவாங்க'' என்றார் ஜெயபால்

''நாம் எப்பவும் ஆராய்ச்சிக்குனு வாங்குற ஃபண்ட்ல இருந்து உபயோகிப்போம், இப்படி உயிருக்குப் போராடுறவங்களை காப்பாத்துறது நம்மளோட தர்மம்'' என்றார் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயக்கொடி.

ஜெயக்கொடி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு அந்த நோயாளியின் உறவினர்களிடம் புற்றுநோய் பற்றி சின்ன விளக்கம் கொடுத்தார்.

'புற்றுநோய் எப்படி உருவாகிறது? எதனால் உருவாகிறது? ஒரு முறை வரும் இந்த நோய் உயிர் கொல்லாமல் போகாது. ஒவ்வொரு அங்க அமைப்பையும் கூறு பார்க்கும் இந்த நோய்க்கு உலகமே மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டு இருக்கிறது. லேசர், எக்ஸ்ரே என ஒளியின் உதவி கொண்டு இந்த நோய் தடுக்கும் முறையை கண்டுபிடித்து ஓரளவே வெற்றி கண்டு இருக்கிறார்கள்.

பொதுவாக செல்கள் இரண்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிரியும், அதிலிருந்து இரண்டு இரண்டாக செல்கள் பிரிந்து கொண்டே ஒரு சீரமைப்புடன் வரும். அப்படி இல்லாமல் தான் தோன்றித்தனமாக ஒரு செல் பல செல்களாக மாற்றம் கொள்ளும்போது போதிய சக்தியைப் பெறமுடியாமல் மற்ற செல்களின் உணவையும் தானே தின்று அந்த நல்ல செல்களையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது இந்த மாறுபாடு அடைந்த செல்கள். இப்படி மூர்க்கத்தனமான செல்களை அழிக்கப் பயன்படும் மருந்துகள் நல்ல செல்களையும் ஒரு கை பார்த்துவிடுகிறது. இதனால் நல்ல செல்கள் பாதிக்கப்பட்டுவிடுகின்றன.

வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மரபணுக்களில் கையை வைத்தால் வேறு விளைவுகளையும் கொண்டு வந்து விடுகிறது. எனவே இந்த செல்களை அழிப்பதன் மூலம் ஓரளவுக்கு நிலைமையை சீராக்க முடியும் ஆனால் மீண்டும் இந்த செல்கள் தங்களது மாற்றத்தை வெளிப்படுத்த தொடங்கிவிடும். இந்த நோயில் இரண்டு வகை உண்டு. ஒன்று உடலில் எல்லா இடங்களிலும் பரவி விடுவது, மற்றொன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிலை கொள்வது. எப்படியும் அவரை உயிருடன் பிழைக்க வைத்துவிடுவோம் 'ஜெயக்கொடி பேசியது வந்திருந்தவர்களுக்கு புரிந்ததா எனத் தெரியவில்லை.

கடும் போராட்டத்துக்குப் பின் அறுவை சிகிச்சை முடிந்தது. மருத்தவமனையிலே அவர் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை முறைத் தொடர்ந்து நடந்து வந்தது. சற்று தேறி வருவதாகவே சொன்னார்கள். உறவினர்கள் பணத்தை புரட்டினார்கள். எப்படியாவது இவர் பிழைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். செல்கள் மருந்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் ஓரிரு வாரங்களில் செல்கள் தனது வேலையை காட்டத் தொடங்கியது. இந்த முறை அதிவேகமாக தனது பணியைச் செய்தது. மருத்துவர்கள் மேற்கொண்டு எந்த முயற்சியும் செய்ய இயலாது என சொல்லிவிட்டனர். அந்த நோயாளி அகால மரணம் அடைந்தார்.

''இந்த கேன்சருக்கு ஒரு முடிவுகாலமே வராதா?' என சோகத்துடன் சொன்னார் ஜெயக்கொடி. ஜெயபால் இதற்காக செலவிடப்படும் நேரத்தையும், பணத்தையும் நினைத்து மனம் வருந்தினார். பல காலமாக நடந்து வரும் ஆராய்ச்சியில் ஒரு முடிவும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக சொன்னார்.

அப்பொழுது ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை வெகுவேகமாக அளிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிய நிலையில் வந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர். என்ன ஏது என விசாரிக்காமல் அனைத்து சிகிச்சையும் முடிந்திருந்தது. எப்படி இந்த நிலைமை வந்தது என பின்னர் கேள்விபட்டபோது மருத்துவர் ஜெயக்கொடி மனமுடைந்தார்.

ஒரு அரசியல் தலைவரை கேவலமாக பேசியதற்காக இவரை அந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர் ஒருவர் வெட்டிவிட்டார் எனவும், இதே போன்று பலமுறை அவர் பலரை வெட்டி இருப்பதாகவும் சில காலங்கள் சிறைக்குச் செல்வதாகவும், பின்னர் சிறையிலிருந்து வெளிவந்தால் இதேபோன்று நடந்து கொள்வதாகவும் கூறினார்கள்.

ஒரு சமுதாயத்தை இதுபோன்ற மனிதர்கள் அழித்துவிடுவது குறித்து மிகவும் வேதனையுற்றார் ஜெயக்கொடி. இப்படி தான் தோன்றித்தனமாக திரிபவர்களை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டுவர இயலாத வாழ்க்கை முறையை நினைத்துப் பார்க்கையில் புற்றுநோய் நிலைமையை விட இந்த புற்றுநோய் நிலைமை ஜெயக்கொடியை மிகவும் சோகத்திற்குள்ளாக்கியது.

ஏதாவது ஒரு பெயரில் இதுபோன்ற மனிதர்களின் நடமாட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஆராய்ச்சி ஒன்றை ஒருவர் துவங்கினார். இந்த ஆராய்ச்சியும் புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியைப் போலவே நீண்டுவிடாமல் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என உலக சமயத்தை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே ஜெயக்கொடிக்குப் பட்டது.

முற்றும்.//



Thursday 12 January 2012

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? எனது பெயர் முகமது பின் துக்ளக்

முன்பகுதி 

தொலைந்த நாகரிங்கள் பற்றி பார்க்கும் முன்னர் ஒரு முக்கியமான நபரை பற்றி பார்த்துவிடுவது சிறப்பு தரும் என்பதால் அவரே நம்மிடம் பேசுகிறார்.

--------

எனது பெயர் முகம்மது பின் துக்ளக், அதாவது நீங்கள் எப்படி என் சகோதரன் பின் லேடனை உச்சரிப்பீர்களோ அதைப்போலவே எனது பெயரை நீங்கள் உச்சரிக்க வேண்டும். பேருந்தினை 'பின்னால்' தள்ளினால் என்ன ஆகும் என கேட்டால் 'பின்' வளைந்து விடும் என மொக்கை சொல் சொல்வார்களே அது போல எனது பெயரில் நகைச்சுவை உண்டு என நீங்கள் கருதினால் அது உங்கள் முட்டாள்தனம். எனது பெயரில் நாடகம், திரைப்படம் கூட எடுத்து இருக்கிறீர்கள், அந்த திரைப்படத்தை நான் பார்த்து சிரித்து சிரித்து அழுதேன். சோ எனும் இந்துத்துவா எடுத்த படம் அது. அவரது பத்திரிக்கைக்கு கூட துக்ளக் என்றே பெயர் இட்டு எனது பெருமை நிலை நாட்டி மத நல்லிணக்கத்தை காட்ட முயற்சி செய்து இருக்கிறார். துக்ளக் என்றால் கோமாளி என்று அர்த்தம் தனை சொன்ன சோ வேண்டுமானால் கோமாளியாக இருக்கலாம், நான் ஒருபோதும் கோமாளியாக இருந்தது இல்லை. மேலும் முசலமான் மட்டும் தான் இவ்வுலகில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய நெடுநாளைய கனவு அல்ல. இந்துக்கள், ஜெயின் மதத்தவர்கள் என அனைவரையும் நேசிக்கும் மனப்பான்மை எனக்கு அதிகம் உண்டு. இதை புரிந்து கொள்ளாதவர்கள் பற்றி நான் என்ன செய்ய இயலும்?

என்னை அறிவிற்சிறந்த முட்டாள் என்றே உலகம் அழைத்து வருகிறது கண்டு வெகுவாக மனம் உடைகிறேன். நான் அறிவினை முட்டாள்தனமாக உபயோகித்தேனா என்பது குறித்து விளக்கம் தருமாறு பலர் கேட்கிறார்கள். நான் பல நல்ல நல்ல திட்டங்களை நாட்டில் அறிமுகப்படுத்தினேன், ஆனால் அதை சரிவர செயல்படுத்தவில்லை என்பதால் என்னை அறிவிற்சிறந்த முட்டாள் என்றே சொல்கிறார்கள். நான் ஒன்று கேட்கிறேன், திட்டம் ஒன்றை கொண்டுவந்தால் அதை வெற்றி பெற செய்வது அரசரான நானா, மக்களா? மக்கள் எதையுமே புதிதாக ஒன்றை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இருப்பதில்லை. அவர்களது நலத்திட்டங்கள் என்று தெரிந்து இருந்தும் எனது திட்டங்கள் தோல்வி அடைந்ததற்கு மக்களே காரணம். அவர்கள் தான் கோமாளிகள், நான் அல்ல என்பதை தெளிவு படுத்துகிறேன்.

நான் பல துறைகளில் தேர்ச்சி பெற்று இருந்தேன். என்னை தத்துவ ஞானி என போற்றுவார்கள். கணித புலமை எனக்கு நிறைய இருந்தது. எனக்கு சமஸ்கிருதம் முதற்கொண்டு பெர்சியன், அரபிக், துர்கிஷ் போன்ற மொழிகளில் புலமை பெற்று இருந்தேன். எனது அரசு எல்கைகள் விரிவடைந்ததால் தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றினேன். தொவ்லபாத் என்று பெயரிட்டது உண்மைதான். ஆனால் தேவகிரியில் போதிய வசதிகளை பெருக்க முடியாததால் எனது திட்டம் தோல்வி அடைந்தது. மொத்த மக்களையும் டெல்லியில் இருந்து நான் இடமாற்றம் செய்தது எனது தவறு என்றே சொல்கிறார்கள். தலைநகரை மட்டுமே மாற்ற நினைத்த நான் எப்படி மக்களை என்னுடன் கொண்டு செல்ல முயற்சி செய்து இருப்பேன். நான் தலைநகர் மாற்றியதும் ஒரு கவிஞர் டெல்லி சாத்தான்களின் கூடாரமாக இருந்தது என்று எழுதி இருக்கிறார்.  வரலாற்றை திரித்து திரித்து எழுதுவதுதான் அனைவரின் வேலையா? அது சரி, இந்தியாவின் தலைநகரை டெல்லியில் இருந்து மத்திய பிரதேசத்திருக்கு மாற்றினால் எப்படி இருக்குமோ அப்படி ஆகிவிட்டது எனது செயல்பாடு, இதற்காக நான் அறிவிற்சிறந்த முட்டாள் என அழைக்கப்படுவது எவ்விதத்தில் நியாயம், என்னை கோமாளி என சொல்வது எப்படி சரியாகும்?

நாணயங்களில் என்னை நானே பதித்து அழகு பார்த்தேன், எனது தந்தையை பதித்து அழகு பார்த்தேன். வரிவடிவ வரைவியல் எனக்கு பிடித்தமானதாக இருந்தது, இதன் காரணமாக நான் ஏராளனமான தங்க நாணயங்கள் உற்பத்தி செய்தேன். நான் எழுதியதில் எனக்கு பிடித்தது என்னவெனில் 'எவர் ஒருவர் சுல்தானுக்கு தலைவணங்குகிறார்களோ அவர்கள் இரக்கமுள்ள இறைவனுக்கு தலை வணங்குகிறார்கள்' என்று குறிப்பிட்டேன். இதன் மூலம் பல நாணயங்கள் அதிக விற்பனைக்கு போனது. அது எனது ராஜ தந்திரம் ஆகும்.


தவறு செய்பவர்களுக்கு, என்னை எதிர்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதித்தேன். எப்படி ஹிட்லர் குளிரில் சென்று மாட்டினாரோ அதைப்போலவே எனது படைகள் சீனப் படையெடுப்பின் போது குளிரில் மாட்டி கொண்டன. அதற்காக ஹிட்லரும் நானும் கோமாளிகளா? எனக்கு எதிராக நடத்த அடக்குமுறை போராட்டத்தை எதிர்க்க புறப்பட்ட நான் நோய்வாய்பட்டு இறந்தேன். எனது அறிவை போர் போன்றவைகளில் செலவழிக்காமல் மக்கள் நலனுக்காக செலவழித்து இருக்கலாமோ என இப்போது கண்ணீர் விட்டு கதறுகிறேன், என்ன செய்வது. காலம் கடந்துவிட்டது. 

வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்ற நான் எனது அகங்காரத்தால் சீரழிந்து போனேன், வாழ்க்கையில் சீரழிய முட்டாள்தனமான அறிவு ஒன்றே போதும் என்பதற்கு என்னை உதாரணமாக காட்ட முனைகிறார்கள். அது முற்றிலும் தவறு. எனது அகங்காரம் எனது அறிவை மறைத்தது. வாழ்வில் சீரழிய 'தான்' என்ற அகங்காரம், மற்றவர்களை 'மதிக்காத தன்மை' மற்றும் அன்பை நிலைநாட்டாமல் இருப்பது போன்றவை என்பதுதான் நான் வாழ்வில் கற்று கொண்ட பாடம். இதை நீங்கள் கற்று கொண்டு ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருந்து இந்த உலகத்தில் தீன் இலாஹி அக்பர் என சொல்லிக்கொண்டு மத நல்லிணக்கத்தோடு வாழ வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன். 

----------

முகம்மது பின் துக்ளக் உரையை கேட்டதும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்கள் தங்களது அறிவினை முட்டாள்தனமாக உபயோகிப்பதை மட்டும் மாற்றப் போவதில்லை என்பது உறுதியானது. முடிந்த பின் வருந்துவது மனித இயல்பு. 

தொலைந்த நாகரிகங்கள் எப்படி சீரழிந்து இருக்க கூடும்? 


Wednesday 11 January 2012

மொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா? - 4

எனது தந்தை தமிழ் ஆசிரியர் மற்றும் அவர் சில காலங்கள் முன்னர் வரை தமிழ் அடிப்படைவாதியாக இருந்தவர். தமிழ் தொன்மையான, உன்னதமான மொழி என எனக்கு மூளை சலவை செய்து வளர்த்து வந்தார். ஆனால் அவர் தொடர்ந்து இப்படி சொல்லி வந்ததும், மற்றும் மற்ற தமிழ் புலமை உள்ளவர்களின் செயலும் என் மனதில் சந்தேகத்தை வரவழைத்தது. அதன் காரணமாக நானே தமிழ் குறித்து ஆராய்ச்சி செய்து தமிழ் தொன்மையான மொழி இல்லை என்பதை கண்டு கொண்டேன். எனது தந்தையார் முன் வைத்த எனது விவாதங்கள் மூலம் எனது தந்தை தமிழ் மீது வைத்திருந்த நம்பிக்கையை சற்று மாற்றியமைக்க வித்திட்டது. தற்போது தமிழ் சார்ந்த பாரபட்ச எண்ணங்களை கைவிட்டுவிட்டார். அந்த சில எண்ணங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதோடு எவரோடும், எந்த நிமிடத்திலும், எந்த இடத்திலும் விவாதம் செய்ய தயார் என செண்பகமுருகன் எனும் ஆங்கிலத்தில் வலைப்பதிவு எழுதும் பதிவர் 2007ம் ஆண்டு பகிங்கிரமாக அறிவிப்பு செய்து இருந்தார்.

ஆராய்ச்சி செய்தேன் என சில இடங்களை என்னைப் போல் தேடிப் பார்த்துவிட்டு, நான் தமிழ் தொன்மையான மொழி என சொன்னேன், அவரோ தமிழ் தொன்மையான மொழி இல்லை என சொல்லிவிட்டார். காலம் காலமாக தொல்பொருள் ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி என செய்தவர்கள் முன்னர் கிடைக்கும் சில விசயங்கள் அடிப்படையில் தமிழ் தொன்மையான மொழி இல்லை என அவர் முடிவுக்கு வந்தது வியப்புக்குரியது. அதே வேளையில் தமிழ் தொன்மையான மொழிதானா எனும் சந்தேகம் அவசியம் அற்றது என்பதற்கு தம் இல் என தெளிந்து கொண்டோம். உலகில் உள்ள எல்லா உயிரினங்களும், உயிரற்ற சடப்பொருள்களும் தமிழிலியே பேசின. செண்பகமுருகன் எழுதியதை வைத்து தமிழ் மீது பற்று கொண்டவர்களின் கருத்துகள் மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தது.

மொழியில் இரண்டு வகை உண்டு, ஒன்று எழுத்து மொழி மற்றொன்று பேச்சு மொழி. பேச்சு மொழியை எழுத்தில் வைக்க பழங்கால மனிதர்கள் திணறி இருப்பார்கள். இப்படித்தான் வேத நூல் எனும் ஒரு சிறுகதையில் பேச முடியாத ஒருவர் பேச வேண்டும் என நினைக்கும்போது எழுத்து உருவாக்கப்பட்டது என ஒரு கற்பனை எழுந்தது. மனித இனம் தோன்றி மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன என தொல்லுயிர் எச்சம் மூலம் கிடைக்கும் விசயங்கள் உணர்த்துகின்றன. ஆனால் இந்த கல்வெட்டுகள் போன்றவை எல்லாம் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டே உள்ளது என தெரிகிறது. ஒன்று இந்த கல்வெட்டுகள் எல்லாம் வரலாற்றை சிதைத்து கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. அது எப்படியெனில்  தொல்லுயிர் எச்சங்கள் கிடைப்பது போன்ற இந்த கல்வெட்டுகள் எல்லாம் காலப்போக்கில் தங்கள் மீது எழுதப்பட்ட அடையாளங்களை சிதைத்து இருக்கலாம் என எண்ண வாய்ப்புண்டு.

சமஸ்கிருதம் பற்றி குறிப்பிடும்போது அது வாய் மொழி என்றே கூறப்பட்டு வந்து இருக்கிறது. ஒலி எழுப்புதல் பொறுத்தே ஒரு மொழி எழுதப்பட்டு இருக்குமெனில் அது தமிழ் மொழியாக முதலில் இருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் க, த, ட போன்றவைகள் பல விதங்களில் உச்சரிக்க பிராமி, கிரந்தா, சமஸ்கிருதம் என எழுத்து மொழியில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழில் அப்படி இல்லை என சொல்வோர் உண்டு. ஆனால் இதன் காரணமாக தமிழ் மொழி மிகவும் பின்தங்கியது என வாதிட முடியாது. வாடா. வாடா. எனும் வார்த்தைகளில் என்ன வித்தியாசம் எழுத்தில் காண முடியும்? ஆனால் இந்த வார்த்தைகள் சொல்லும் விதத்தில் ஒருவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் என கண்டு கொண்ட மொழி தமிழ்.

இப்படி பிறமொழிகளில் உள்ள எழுத்துகள் போன்று இல்லாமல் தனித்தே காணப்பட்டதால் தமிழ் தொன்மையான மொழி என உறுதியாக இறுதியாக அறியலாம் என கூறுவோர் உண்டு. அதிலும் சில சமஸ்கிருத வார்த்தைகள் எல்லாம் தமிழில் உள்ளதால் தமிழ் தொன்மையான மொழி இல்லை என சொல்வோர் உண்டு. ஆனால் தமிழ் வார்த்தைகள் தான் மருவியிருக்கிறது என்பதை எவரும் அறிய முற்படுவதில்லை. ஆங்கில வார்த்தைகள் கலந்து தமிழ் தற்போது பேச்சு வழக்கில் இருப்பதால், தங்கிலிஷ் ஆளுமையால் பிற்காலத்தில் தமிழ் ஆங்கிலம் தழுவியது என சொன்னாலும் சொல்வார்கள். இருப்பினும் எந்த மொழி முதலில் வந்தது என்பது கண்டு கொள்வது கடினமில்லை, ஆனால் தமிழ் முதல் மொழியில்லை என நிரூபிக்க தமிழர்களே முன் நிற்பது  நகைப்புக்குரியது.

தமிழ் கொண்ட மாற்றங்கள் என ஒரு தனிக்கட்டுரையே எழுதலாம். எழுத்து, பேச்சு என தமிழ் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. சங்கத்தமிழ், செந்தமிழ், கொடுந்தமிழ் என தமிழ் பிரிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது கொடுந்தமிழ் காலத்தில் இருக்கிறோம். சென்னை தமிழ், மதுரை தமிழ், நெல்லை தமிழ், கோவை தமிழ் என தமிழ் பேசும் மக்களின் வேறுபாடு தமிழ் எத்தைகைய அழகு மொழி என புரியும். எழுத்து என வரும்போது இந்த பேதம் எழுத்தில் தெரியுமா என நெல்லை பதிவர்கள், மதுரை பதிவர்கள், கோவை பதிவர்கள், சென்னை பதிவர்கள்  என தேடிப்பார்த்தால் தான் புரியும்.

தமிழ், தமிழ் என சொல்வதை விட்டு உருப்படியாக வேலையை பாருங்கள் என சொல்பவர்கள் உண்டு. ஒரு மொழி அழிந்தால் அதன் இனம் அழியும். இந்த பூமியில் எத்தனையோ அழிவுகள் ஏற்பட்டு இருக்கின்றன. ஒரு தமிழ் கண்டமே அழிந்து போனதாக கதைகள் உண்டு, ஆனால் அறிவியலில் அப்படி ஒரு கண்டம் இருந்ததற்கான சாத்திய கூறுகள் இல்லை என்றே சொல்கிறார்கள். இந்த லெமுரியா கண்டம் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். இது குறித்த தேடல் அதிகம் தேவை எனினும் தொலைந்தது, தொலைந்ததுதான். எப்படி சமஸ்கிருதம் இன்று அழிந்து கொண்டிருக்கிறதோ அது போன்ற நிலை தமிழுக்கு நேரலாம், எனினும் தமிழ் பற்றாளர்கள், தமிழகம் இருக்கும்வரை தமிழுக்கு அழிவில்லை.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே... தமிழர்கள் பூமி உருவானபோதே உருவாகிவிட்டார்கள். இது அறிவியலுக்கு வியப்பை தரும். படிப்பவர்களுக்கு எரிச்சலை தரும். ஆனால் இந்த பூமியில் என்ன நடந்தது என எவருக்கு தெரியும்? வீரஸ் எனும் ஒரு தமிழர் தமிழ் பெருமை குறித்து இப்படி கூறுகிறார். வீரஸ் என்பவரின் இந்த சிந்தனை மிகவும் அழகாக இருக்கிறது.

வெடித்து சிதறிய பூமியானது வாயுக்களாக இருந்தது. வெப்பம் தணிந்ததும் முதன் முதல் பூமியில் எங்கும் தண்ணீர் நிரம்பியிருந்தது. பின்னர் சூரியனின் வெப்பத்தில் தண்ணீர் ஆவியாக தொடங்கியது. அப்படி ஆவியானதும் மலைக்குன்றுகள் மட்டுமே  தெரிந்தன. இதைக்கண்டதும் மலைகளும் மலைகள் சார்ந்த இடங்கள் குறிஞ்சி என தமிழர்கள் சொன்னார்கள். காலப்போக்கில் சில இடங்கள் மரங்கள் உருவாகும் வகையில் இருந்தன. அதைக்கண்டு காடுகளும், காடுகள் சார்ந்த பகுதிகள் முல்லை  என்றார்கள். அதற்குப்பின்னர் சின்ன சின்ன இடங்கள் விவசாயம் செய்யும் நிலங்கள் என கண்டு கொண்டார்கள். அதை மருதம் என அழைத்து வயலும் வயல் சார்ந்த இடங்கள் என சொன்னார்கள். சில இடங்கள் மிகவும் தாழ்வாக இருந்ததால் அங்கே தண்ணீர் ஆவியாக வில்லை, அந்த இடங்கள் உள்ள தண்ணீர் ஆவியாகி மீண்டும் மழையாக பொழிந்து கடல் போன்று இருந்ததது. அதை நெய்தல் என்றார்கள். கடலும் கடல் சார்ந்த இடங்கள். அதே போன்று சில இடங்கள் வறண்டே காணப்பட்டன, அதைக்கண்டு பாலை என சொன்னார்கள். நீரற்ற வறண்ட பகுதி. இப்படி பூமியின் பெருமையை அழகாக தமிழர்களே சொன்னார்கள் என்கிறார் வீரஸ்.

சமஸ்கிருத மொழி இலக்கியம், கணிதம், மனிதர்கள் என அந்த மொழி அளித்த பங்கு மறுக்கவியலாது. ஆர்யபட்டர், பாஸ்கரர், விஷ்ணு சர்மா, வச்தசயனர், வியாசர், வால்மீகி என ஒரு சமஸ்கிருத பட்டாளமும், திருவள்ளுவர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமணர்கள் என தமிழர்கள் பட்டாளமும், இரண்டு மொழிகளிலும் மாபெரும் இலக்கியங்கள் படைத்த ஆண்டு என வரலாறு சொல்வது கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டுதான். அதுவும் முதல் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இலக்கிய சிந்தனையாளர்கள் கோலோச்சி கொண்டிருந்தார்கள். குப்த, பல்லவ ஆண்டு காலம் மொழிகளின் பொற்காலம் என்றே சொல்லப்படுகிறது. வேற்றுமை இருந்த காரணத்தால் பல விசயங்கள் அழிந்து போயின. அதுவும் களப்பிரர் காலம் கரு மேகங்கள் கொண்டு தமிழை அழித்ததாக சொல்வார்கள். இவர்கள் கன்னடியர்கள் எனும் குற்றச்சாட்டு இன்றும் உண்டு. இதே காலத்தில் கிரேக்கர்களின் சிந்தனைகள் கொடிகட்டி பறந்தன. மிகவும் சிறப்பு வாய்ந்த  மொழிகளின் இலக்கியங்கள் குறித்து இனி பார்வையை திருப்புவோம். 

Tuesday 10 January 2012

மொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா - 3

இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கும் மொழி சமஸ்கிருதம் என்று சமீபத்தில் நடந்த பதினைந்தாவது உலக சமஸ்கிருத மாநாட்டில் இந்திய பிரதமர் திரு. மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். சமஸ்கிருதம்  இந்திய திருநாட்டின் உணர்வையே பிரதிபலிக்கிறது எனும் கூற்று நகைப்புக்குரியதாக இருக்கிறது. தமிழ் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமோ இல்லையோ பிற நாட்டு மொழி ஆர்வலர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். செக்கோஸ்லோவோகியா நாட்டை சேர்ந்த சமீபத்தில் மரணமடைந்த மொழி ஆய்வாளர் கமில் ஜ்வேலேபில் தம் - இல் என்று பிரித்து தம் என்றால் ஒருவருடைய இல் என்றால் ஒலி என கூறுகிறார். மொழி என்றால் அது தமிழ். ஆனால் தமிழை ஒழித்து கட்ட பல்வேறு காலங்களில் பல்வேறு வகையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று ஆங்கிலம்தனை தன்னில் ஏற்றுக்கொண்டு தமிழ் வலம் வந்து கொண்டிருக்கிறது.

மொழிகளுக்கு எல்லாம் தாய் எதுவெனில் ஒலி. இதை எவரும் மறுக்க இயலாது. ஒலி மூலமே மொழி பயன்பாட்டிற்கு வந்திருக்க இயலும். தமிழ் எனும் வார்த்தை உருவானதிலிருந்தே நாம் தெளிவுபடுத்த வேண்டியது என்னவெனில் மொழிகளுக்கெல்லாம் தாய் தமிழ். தமிழ் மொழி ஒலியின் வடிவத்தில் இருந்து தொடங்கி பின்னர் கொண்ட மாற்றங்கள் இதை மிகவும் அழகாக பறைசாற்றுகின்றன. நன்னூல் மிகவும் அழகாகவே சொல்கிறது, பவணந்தி முனிவர் நன்னூல் எழுதும்போது இவ்வாறு தமிழ் கொண்ட மாற்றத்தை மனதில் கொண்டே பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என நன்னூல்தனை முடித்து வைக்கிறார். முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்.

இதே சமஸ்கிருதம் என்றால் என்ன அர்த்தம்? சமஸ்தம் என்றால் யாவும் என பொருள்படும், கிருதம் என்றால் சேர்த்து என்று பொருள்படும். பிற மொழிகளையெல்லாம் சேர்த்து உருவாக்கியது சமஸ்கிருதம் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதாக கூறுகிறார்கள். அதே வேளையில் சம்யம்-கிருதம் என்றால் நன்கு அமைக்கப்பட்டது என்று பொருள்படும். மேலும் சமஸ்கிருதம் பற்றி திரு மன்மோகன் சிங் குறிப்பிடுகையில் சமஸ்கிருதம் ஒரு இனத்துக்கோ, மதத்துக்கோ சொந்தமானது அல்ல என கூறி இருக்கிறார். சமஸ்கிருதம் ஒரு இனத்தின் மொழியாகத்தான் இருந்து இருக்க கூடும். இன்றைய கணக்குப்படி பேச்சு வழக்கில் இல்லாத மொழியாக சமஸ்கிருதம் ஆகிப்போனது என்னவோ உண்மை, வெறும் பதினைந்தாயிரம் மக்களே சமஸ்கிருதம் தெரிந்தவர்களாக உள்ளனர் எனும்போது சமஸ்கிருதம் பேசும் இனம் அழிந்து போனது என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை.

சமஸ்கிருதத்தில் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் அடிப்படையில், வேதங்கள் அடிப்படையில் சமஸ்கிருதம் பெரும் மதிப்பை பெற்றது என்பது அன்றைய காலத்தில் சரியே. சிறந்த சிந்தனையாளர்கள் தமிழில் இருந்தார்கள் என்பதற்கு சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் ஒரு சாட்சி. ராமாயணமும், மகாபாராதமும், வேதங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காரணத்தால் சமஸ்கிருதம் மொழிகளில் தாய் ஆகிவிட இயலாது. ஓம் எனும் பிரணவ மொழி தமிழ் தந்ததுதான். தமிழில் எழுத்துக்கள் உண்டு, எண்கள் உண்டு, மாதங்கள் உண்டு, வாரங்கள் உண்டு, வருடங்கள் உண்டு.

இந்த சமஸ்கிருதம் முன்னர் குறிப்பிட்டதை போல தென்னிந்திய மொழிகளில் பெருமளவு கலந்து சற்று சீரமைப்பு செய்தது என மொழி ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் தொல்காப்பியம் எழுதப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது தமிழுக்கு இலக்கணம் சொல்லித்தந்தது சமஸ்கிருதம் என்பதெல்லாம் எத்தகைய உண்மை என புரிவதற்கு இல்லை. ரிக் வேதங்களில் தமிழ் சொற்கள் கலந்து இருக்கிறது என்கிறார்கள். யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும் வாக்கியம் எந்த வேதத்துக்கும் மேலானது, அதைத் தந்தது தமிழ் தான்.

பழங்கால கல்வெட்டுகளில் இருந்த மொழி தமிழ் தான் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சமஸ்கிருதம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை எந்த ஒரு கல்வெட்டிலும் இல்லை என்பது தெளிவு. இந்த மொழி பிற மொழிகளில் இருந்து கடன் வாங்கியே வளர்ந்து உள்ளது. எப்படி ஆங்கிலம் கடன் வாங்கி வளர்ந்ததோ அதைப்போல இந்த சமஸ்கிருதம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மொழி. ஆனால் தமிழ் இயற்கையாகவே உருவான மொழி எனவும் உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் தமிழ் என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ் செம்மொழி என போராடி இந்திய அரசால் 2004ம் ஆண்டு தமிழுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டாலும் தமிழ் உலகின் தாய் மொழி எனும் அங்கீகாரம் விரைவில் கிடைக்கும். மொழிகளில் தாய் தமிழ் பற்றிய சிறப்பு பார்வை தொடரும். 

Sunday 8 January 2012

மொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா? - 2

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே, நான் ஜார்ஜ் ஹார்ட் பேசுகிறேன். என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் தருகிறேன்.

நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சம்ஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றேன். நான் முதன் முதலாக சம்ஸ்கிருத பேராசிரியராக விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் பணியாற்றினேன். பின்னர் கலிபோர்னியா பல்கலைகழகத்தில்  ஆண்டு முதல் நான் தமிழ் பேராசிரியாராக பணிபுரிந்து வருகிறேன். அதோடு மட்டுமில்லாமல் தமிழ் தலைமைபீடத்தின் பொறுப்பாளராக அந்த பல்கலைகழகத்தில் இருந்து வருகிறேன்.

எனக்கு ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் மட்டுமல்லாது தொன்மை வாய்ந்த லத்தீன், கிரேக்கம் போன்றவைகள் நன்றாக தெரியும், அந்த மொழிகளில் எழுதபட்டிருக்கும் இலக்கியங்களை அதன் மூல மொழியில் நன்றாக அலசி ஆராய்ந்து இருக்கிறேன். இது தவிர ஐரோப்பா மொழிகளில் ரஷ்யா, ஜெர்மன், பிரெஞ்ச் போன்ற மொழிகளில் படித்து இருக்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் மலையாளம் அல்லாத இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களை மொழிபெயர்ப்பில் படித்து இருக்கிறேன். தெலுங்கு மொழியில் உள்ள இலக்கியங்கள் குறித்து அதிகம் தெலுங்கில் புலமை பெற்ற நாராயண ராவ் அவர்களிடம் விவாதம் செய்து இருக்கிறேன். இந்தி இலக்கியங்களை அதிகம் படித்து இருக்கிறேன், குறிப்பாக மகாதேவி வர்மா, துளசி மற்றும் கபீர் போன்றவர்களின் படைப்பை வாசித்து இருக்கிறேன்.

எனது மொத்த வாழ்நாள் காலங்களை சமஸ்கிருதம் படிப்பதில் அதிகமாக செலவழித்து இருக்கிறேன். காளிதாசர், மகா, பைரவி, ஹர்சா, ரிக் வேதங்கள், உபநிடதங்கள், மகாபாரதம், கதாசரிதசாகரா, ஆதிசங்கரரின் எழுத்துகள் என எல்லாம் சமஸ்கிருதத்தில் படித்து இருக்கிறேன். இதை எல்லாம் நான் சொல்வதற்கு காரணம் என்னவெனில் எனது பல மொழிகளின் புலமையை வெளிப்படுத்த அல்ல, தமிழ் செம்மொழி என்பதை சொல்வதற்கு நான் தகுதியானவன் என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டவே இதை சொல்கிறேன்.

பாரதியார் குறிப்பிடுவதை போல 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அதே வாக்கியங்களை சொல்வதற்கு எனக்கும் அருகதை இருப்பதாக கருதுகிறேன். எந்த ஒரு அடிப்படை காரணம் எடுத்தாலும், தமிழ் மொழி மிகவும் தொன்மையான, மரபு சார்ந்த ஒரு அழகிய மொழி என்பதை ஆணித்தரமாக என்னால் அடித்து சொல்ல முடியும்.

இதற்கான காரணங்கள் பல உண்டு எனினும் நான்கு காரணங்கள் மட்டும் குறிப்பிட விழைகிறேன். முதலில் தமிழ் தொன்று தொட்டு பேசப்பட்டு வரும் மொழியாகும். குறிப்பாக தொல்காப்பியம் தனை சொல்லலாம். பிற இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களை விட தமிழ் இலக்கியங்கள் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்தது. மிகவும் பழமை வாய்ந்த சங்கம் வளர்த்த தொகை நூல்கள் பல. தமிழில் பத்துப்பாட்டு போன்ற கவிதை இலக்கியங்கள் காளிதாசரின் எழுத்துகளை விட குறைந்தது இரு நூறு வருடங்கள் முன்னர் இருந்தது ஆகும்.

இரண்டாவதாக தமிழ் மொழி மட்டுமே சமஸ்கிருதத்தில் இருந்து எந்த ஒரு கலாச்சாரத்தையும் தன்னில் எடுத்த செல்லாத மொழியாகும். சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் வருவதற்கு முன்னரே தமிழ் தன்னில் ஒரு பெரிய இலக்கியத்தை தன்னளவில் படைத்து வளர்த்து கொண்டிருந்தது அதோடு மட்டுமில்லாமல் தமிழ் மொழி மட்டுமே பிற இந்திய மொழிகளில் இருந்து தனித்தன்மை பெற்று இருந்தது. தமிழின் சொந்த இலக்கணங்கள், கவிதை விதிமுறைகள், அழகியல் கோட்பாடு என தமிழ் தனித்துவம் பெற்று விளங்கியதை எவரும் மறுக்க இயலாது. மிகவும் பழைய, மிகவும் பெரிய பாரம்பரியத்தை தமிழ் பெற்று இருந்தது என்பதே சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் தனித்து இருந்தது எனலாம்.

மூன்றாவதாக தமிழ் இலக்கியங்களில் தரமானது பத்தரை மாத்து தங்கமானது. இதுவே தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளின் இலக்கியங்கள், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், சைனீஸ், பெர்சியன், அராபிக், இருந்து வேறுபடுத்தி காட்டி கொண்டிருந்தது. திருக்குறள் பற்றி நான் சொல்லித்தான் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல பல தரம், திறம் வாய்ந்த இலக்கியங்கள் கொண்ட தமிழ் மொழிக்கு அழகு சேர்ப்பது திருக்குறள். இந்த தமிழ் இலக்கியம் எல்லாவிதமான மனித இருப்புதனை பட்டைதீட்டி கூர் பார்த்துவிட்டது எனலாம், மனித இருப்புதனை தொடாத இடமே இல்லை என சொல்லலாம்.

இறுதியாக தமிழ் மொழிதான் இந்திய மொழிகளின் மூல காரணி என்பதை குறித்து நிறையவே எழுதி இருக்கிறேன். தென்னிந்திய கலாச்சாரம் எப்படியெல்லாம் சமஸ்கிருதத்தை பாதித்து உள்ளது என்பது சம்ஸ்கிருத இலக்கியங்களில் தென்படும். தமிழ் இந்து மத கோட்பாடுகள், சங்க தொகை நூல்கள், எல்லாமே பகவத் புராணம் போன்றவைகள் மட்டுமல்ல, கன்னடம், பிற மொழி இலக்கியங்களில் கையாளப்பட்டு இருக்கிறது. தமிழ் மொழியின் புனித தன்மையால் அவை வேதங்களுக்கு நிகரானவை, அதன் காரணமாகவே திருப்பதி போன்ற பெரிய தலங்கள் முதற்கொண்டு பல தென்னிந்திய தலங்களில் வேந்தங்களுக்கு நிகராக தமிழ் மொழி ஓதப்பட்டு வருகிறது. எப்படி சமஸ்கிருதம் இந்திய-ஆரியர்களின் மூல மொழியாக இருக்கிறதோ அதைப்போல தமிழ் மொழி பல தென்னிந்திய மொழிகளின் மூலம் என சொல்லலாம்.

தமிழை செம்மொழி இல்லை என மறுப்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என சொல்லக்கூடிய வகையை சேர்ந்தவர்கள். செம்மொழி எனும் தகுதி எந்த ஒரு மொழிக்கும் இந்த உலகில் இடம் இல்லை, தமிழை தவிர. ஒரு செம்மொழி என அதற்கு பழமையானது, தனித்துவம் பெற்று தனக்கே உரிய மரபு கொண்டது, பழமையான இலக்கியங்கள் கொண்டது என பல காரணிகள் பார்க்கும்போது தமிழ் ஒன்றே அதற்கு தகுதியானது ஆகும்.

இதை எல்லாம் உங்களிடம் சொல்வதற்கு நான் மிகவும் விந்தையாக, அதிசயமாக உணர்கிறேன். ஏனெனில் இந்தியா மாபெரும் தேசம், இந்து மதம் உலகின் மிக சிறந்த மதம் என எவரும் சொல்லியா தெரிய வேண்டும். தமிழ் மொழி பற்றி தெரிந்தவர்கள் ஒருபோதும் தமிழ் செம்மொழி என்பதை மறுக்க மாட்டார்கள்.

வாழ்க தமிழ்.

-------------

இப்படி பேசிய ஜார்ஜ் ஹார்ட் அவர்களிடம் இதை எல்லாம் ஆங்கிலத்தில் சொன்ன நீங்கள் தமிழில் பேசி இருக்கலாமே என்று கேட்க தோணியது. தமிழர்களே தமிழில் பேச, எழுத தயங்கும்போது ஆங்கிலேயன் நான் ஆங்கிலத்தில் பேசுவது தவறு என எப்படி சொல்ல முடியும் என கேட்டாலும் கேட்பார் என நினைக்க வேண்டியதானது, அதோடு மட்டுமில்லாமல் இப்படி பழமை வாய்ந்த தொன்மையான மொழி பலரும் பேசும், எழுதும் மொழியாக வளர்ச்சி அடையாமல் போனதற்கு தமிழர்களின் குறுகிய மனப்பான்மை என்று சொல்ல இயலுமோ? திரை கடலோடி திரவியம் தேடு என்று சொன்னார்களே தவிர திரைகடலோடி தமிழ் மொழி பரப்பு என சொல்ல மறந்துவிட்டார்கள். எனது சந்ததிகள் தமிழ் தெரியாத சந்ததிகளாக உருவாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பதை நினைக்கும் போதே தமிழ் செம்மொழி என சொன்னாலும் தமிழ் தமிழ் என சொல்ல எனக்கு என்ன அருகதை இருக்கிறது?

மேலும் பிற மொழிகளை தன்னில் கலக்கவிட்டு தனது நிறம் தொலைத்த தமிழ் மொழி குறித்து என்ன சொல்ல முடியும்? மொழிகளில் தாய் இன்னும் தொடரும். 

Thursday 5 January 2012

மொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா? - 1

அனைத்து மொழிகளின் தாய் தந்தை என எல்லாமே தமிழ் தான் என வாதிடுவோர் உண்டு. இது குறித்து பல இடங்களில் விவாதங்கள் நடந்தது கண்டது உண்டு. சமஸ்கிருதத்தை தேவ பாஷை என குறிப்பிடுகிறார்கள். இது குறித்து தமிழ் உணர்வாளர்கள் வெகுண்டு எழுவது உண்டு. மேலும் சமஸ்கிருதத்தில் உள்ள மந்திரங்கள் பல இழிவானவை என கருதுபவர்கள் உண்டு. இப்படி பல விசயங்களை அடிப்படையாக கொண்ட மொழியின் மூலம் பிரிவினைகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் தவிர்க்க முடியாதவை என இந்த காலகட்டத்தில் ஆகிப்போனது.

இது குறித்து பார்க்கும்போது லெவிட் எனும் அமெரிக்கரும், கு. அரசேந்திரன் தனது புத்தகத்திலும் தமிழே தொன்மையான மொழி என குறிப்பிட்டு உள்ளதாக கூறுகிறார்கள். தமிழ் மீது பற்று கொண்ட ஜார்ஜ் ஹார்ட் தமிழே தொன்மையானது என பல கருத்துகளை குறிப்பிட்டு வாதிடுகிறார்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என சொல்வது மிகவும் மிகைப்படுத்தக்கூடிய செயலாகத்தான் தெரிகிறது, இல்லையோ? இருப்பினும் இது குறித்து பலரது கருத்துகளை பார்ப்போம்.

முதலில் ஜார்ஜ் ஹார்ட் என்ன சொல்கிறார் எனில்... தொடரும். 

Wednesday 4 January 2012

ஜீரோ எழுத்து - 2

ஒரு வட்டம் போடும் போது ஒரு புள்ளி வைத்து தொடங்குவோம், அப்படியே அந்த புள்ளியினை கோடாக்கி மீண்டும் அந்த புள்ளியில் சேர்க்கும் போது வட்டம் உருவாகிவிடும். அப்படியெனில் புள்ளி தான் தொடக்கம், அந்த புள்ளி தொடக்கம் எனினும் புள்ளியில் இருந்து தொடங்கிய கோடு மீண்டும் புள்ளியை தொடும்போது எது தொடக்கம், எது முடிவு என்பது பின்வரும் நாளில் வரைந்தவருக்கே மறந்து போய்விடும்.

இது எந்த ஒரு மூடப்பட்ட சூழலுக்கும் பொருந்தும், சதுரம், செவ்வகம், முக்கோணம் என எந்த ஒரு வடிவத்தை எடுத்தாலும் தொடக்கம் எது, முடிவு எது என அறிவது மிகவும் கடினம், ஆனால் தொடக்கமும் முடிவும் அந்த கோடுக்குள் தான் இருக்கும் என்பது மிக மிக தெளிவு. அதே வேளையில் தொடங்கும் இடத்தில் ஒரு வண்ணத்தை வைத்து ஆரம்பித்துவிட்டு இப்பொழுது கோடு வரைவோம், மீண்டும் வண்ணம் இடத்திற்கே வருவோம், இப்பொழுது தொடக்கம் வரைந்தவருக்கு தெரிந்துவிடும். ஆனால் இதை புதிதாக பார்ப்பவர்க்கு தொடக்கத்திற்காக இடப்பட்ட வண்ண புள்ளியா, அல்லது முடிவுக்காக இடப்பட்ட வண்ண புள்ளியா என்பது புரியாது.

ஒரு வட்டம் போடத்தான் ஒரு புள்ளியை வைத்து தொடங்க வேண்டும். அதனால் வட்டத்தில் புள்ளி தொடக்கம் எது எனும் தேடல் அவசியமாகலாம், ஆனால் புள்ளியே வட்டமாக விரிவடைந்தால் அந்த புள்ளிதான் தொடக்கமும், எல்லாமும். இந்த பிரபஞ்சமும் அப்படித்தான் என்கிறது அறிவியல். இப்பொழுது இந்த புள்ளி இருக்க ஒரு இடம் இருக்க வேண்டும், காலம் இருக்க வேண்டும், நேரம் இருக்க வேண்டும், எல்லாம் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு முன்னர் அப்படி ஒரு நிலை இல்லை எனும் கூற்று  அத்தனை எளிதாக ஏற்று கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்படித்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேதங்களும் சொல்கிறது, அறிவியலும் சொல்கிறது. வேதங்களும், அறிவியலும் சொல்கிறது என்பதற்காக சமரசம் செய்து கொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை. இருக்கின்ற தன்மை கொண்டு இல்லாத தன்மையை சிந்திக்கும்போது இது போன்ற நிகழ்வுகள் வாடிக்கை.

இப்பொழுது புள்ளி விரிவடைந்து கொண்டே செல்லும்போது ஒரு வெறுமை, எதுவுமற்ற தன்மை புள்ளிக்குள், அதாவது வட்டத்திற்குள், உருவாவது போன்ற தோற்றம் நமக்கு தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல, அந்த வட்டத்திற்குள் புலப்படாத விசயங்கள் இருக்கின்றது என்பதுதான் நமக்கு புரிந்து கொள்ள வேண்டிய அறிவு. இறைவனை பற்றி அல்லது ஒன்றை பற்றி சதா எந்நேரமும் சிந்தித்து  கொண்டிருக்கும் ஒருவரும் சரி, ஒரு கணத்தில் மட்டுமே இறைவனை அல்லது ஒன்றை பற்றி சிந்திக்கும் நிலையிலும் சரி அதற்குரிய சிந்தனை மிகவும் முக்கியத்துவம் ஆகிறது.

இறைவன் எங்குமே இல்லை என சொல்லும்போதே அந்த வார்த்தையில், வாக்கியத்தில் இறைவன் இருப்பதாகவே அர்த்தம் காட்டப்படும். இல்லாத ஒன்றை பற்றி எதற்கு எவரும் பேச வேண்டும்? அதோ அந்த இடத்தில் ஏதோ சத்தம் வருகிறது, என்னவென பார்த்து வருகிறாயா என எவரையேனும் அனுப்பி அவரை அந்த இடத்தை பார்த்து வர சொன்னால், அங்கே ஒன்றுமே இல்லை என அவர் சொல்வதன் மூலம் என்ன அர்த்தம் நமது மனதில் ஓடும் என்பது பொறுத்தே இந்த பிரபஞ்சத்திற்கான விடை இருக்கிறது.

நிறைய சிந்தனைவாதிகளை இந்த உலகம் தந்து இருக்கிறது. ஒவ்வொருவரின் சிந்தனைகளும் மிகவும் நேசிப்புக்கு உரியவையாக இருக்கின்றன.  இறைவன் நம்பிக்கை சரி, இறைவன் அற்ற நம்பிக்கை சரி, எந்த விசயம் எனினும் அது குறித்து திறம் படவே சிந்தித்து இருக்கிறார்கள். இருப்பினும் உலகம் எப்படி உருவானது என்பதற்கு இது விடை தெரியாத கேள்வி என்றே ஒதுங்கி கொள்கிறார்கள், இன்றல்ல, பல காலம் முன்னர் எழுதப்பட்ட ரிக் வேதம் கூட அதைத்தான் சொல்கிறது.

ரிக் வேதம் : 10 .129 (மொழி பெயர்ப்பு: ராதாகிருஷ்ணன்; தவறுகளுக்கும், தவறுதலான கருத்துக்கும் நானே பொறுப்பு; ரிக் வேதம் எழுதியவர் அல்ல) 


இருப்பு நிலையும், இல்லாத நிலையும் இல்லாதிருந்தது. காற்றின் ஆட்சியும் இல்லை, அதைத் தாண்டிய ஆகாயமும் இல்லை. என்ன, எங்கே மறைத்து இருந்தது? யார் அடைக்கலம் கொடுத்தது? தண்ணீர் இருந்ததோ? எந்த ஆழத்தில் இருந்ததோ?


இறப்பு நிலையும் இல்லை, இறவா நிலையும் இல்லை. எந்த ஒரு அறிகுறியும் இல்லை, இரவென்றும், பகலென்றும் பிரித்துணர. ஒன்றே ஒன்று சுவாசமற்ற தன்மையில் அதனின் தன்மையில் சுவாசித்து கொண்டிருந்தது, அதைத்தவிர வேறு ஒன்றுமே இல்லை. 


இருள் இருந்தது. அந்த இருளில் ஒழுங்கின்மையுடன் எல்லாம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஒரு வெற்றிடமாய் மட்டுமே எந்த ஒரு தன்மையும் இன்றி இருந்தது. அந்த ஒரு நிலையிலே மிகப்பெரிய அன்பு நிறைந்த சக்தி/ஆற்றல் ஒரு தொகுதியாய் உருவானது. 


அந்த அன்பு நிறைந்த ஆற்றலில் ஒரு ஆசை பிறந்தது. அந்த ஆசைதான் முக்கிய காரணங்களில் மூல விதை. முனிவர்கள் இதயப்பூர்வமாக இதை தேடியபோது கண்டு கொண்டார்கள். இருக்கும் தன்மையின் உறவு இல்லாத தன்மையில் இருந்தது என. 


அந்த நிலையானது குறுக்கே விரிவடைந்தது, அதற்கு மேலே என்ன இருக்கிறது, கீழே என்ன இருக்கிறது? உற்பத்தி திறன் இருந்தது, எல்லையில்லா சக்தி இருந்தது, சுதந்திரமான ஆக்கமும், ஆற்றலும் உலவியது


யாருக்கு முழுமையாக தெரியும், யார் அதை பிரகடனப்படுத்துவது, எப்பொழுது பிறந்தது, எப்பொழுது உற்பத்தியானது? கடவுளர்கள் எல்லாம் இந்த உற்பத்திக்கு பின்னே உருவானார்கள்? யாருக்கு தெரியும் முதன் முதலில் இங்கு எப்படி இயக்கத்திற்கு வந்தது என. 


அவனே, இந்த உற்பத்திக்கு முதலானவன், அவன் உருவாக்கினானா, இல்லை உருவாக்கவில்லையா, இந்த உலகத்தை சுவர்க்கத்தில் இருந்து பார்த்து கொண்டிருப்பவன், அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கும், ஒருவேளை தெரியாமலே இருக்க கூடும். 

இப்பொழுது இந்த வாசகங்கள் எல்லாம் (தமிழ் படுத்தும் பாடு!) படிக்கும்போது மனிதர்களின் சிந்தனை எப்படி உலகம் உருவாகி இருக்கும் என்பது குறித்து அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அக்னி, வாயு, காயத்ரி, இந்திரன், சோமன் போன்ற கடவுள்கள் எல்லாம் பிற்பாடே தோன்றி இருக்கிறார்கள் எனும் தெளிவு அன்றே இருந்து இருக்கிறது. இந்த உற்பத்தியை கண்காணிப்பவனுக்கு கூட  ஒரு வேளை தெரியாது என்று எழுதி இருப்பதுதான் விசேசம். ஏனெனில் அத்தனை குழப்ப நிலையில் அன்றே மனிதர்கள் இருந்து இருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் இறைவன் பற்றிய சிந்தனை குறித்து ஒரு தெளிவே இல்லாமல் தான் இருந்து இருக்கிறது. அதிலும் இருக்கும் தன்மையின் உறவு இல்லாத தன்மையில் இருந்தது என்பது கூட அறிவுக்கு எட்டாத ஒரு விசயம் என்பதால் மட்டுமே அப்படி எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரிக் வேதத்தில் எழுதியதைத்தான் அறிவியலும் குறிப்பிட்டு வருகிறது, ஒரு வேளை காலப்போக்கில்  மாறக்கூடும்.  ஆனால் இந்த வரி ஒன்றே ஒன்று சுவாசமற்ற தன்மையில் அதனின் தன்மையில் சுவாசித்து கொண்டிருந்தது, மிகவும் யோசிக்க வைத்தது. ஒன்றுமே இல்லாமல் எதுவுமே உருவாகி இருக்க முடியவே முடியாது. உற்பத்தி நிலை குறித்து சிவவாக்கியர் எனும் சித்தர் குறிப்பிடும்போது

அண்ணலே அநாதியே அநாதிமுன் அநாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாநீர் சுக்கிலம் சுருதிஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?

இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு பதில் ஒண்ணுமில்லை என சொன்னால் எப்படி? பதிலே இல்லாத கேள்வி இந்த பாரினில் இருக்கத்தான் முடியுமா? இந்த ஒரு கேள்விக்கு ஆன்மிகம் தேடி கண்டுபிடித்த விடை 'இறைவன்'. அறிவியல் தற்போதைக்கு  தேடிக் கொண்டு இருக்கும் விடை 'கடவுளின் துகள்'

ஒண்ணுமே இல்லாமல் தான் உயிரினங்கள் வந்ததா? அப்படி அதில் ஜீரோ சாதித்தது என்ன?

(தொடரும்)

Monday 2 January 2012

என் பதிவு திருடு போச்சே!

உங்க பதிவு ஒன்னு திருடு போச்சு, கவனிச்சீங்களா?

எப்பவோ சொல்லிட்டேனே, என் பதிவுகளை தாராளமாக திருடுங்கள் அப்படினுட்டு, அது சரி இந்த திருட்டை எங்க போய் எப்படி கவனிக்கிறது?

இந்த பதிவு நீங்க எழுதினதா அல்லது நீங்க திருடி எழுதினதா? 

எந்த பதிவு?


ஆமாம், நான் எழுதினதுதான். 

எப்படி நம்புறது, இதை கருப்புரோஜாக்கள் ராஜேஷ், தான் எழுதினது போல அவரோட வலைப்பூவில் எழுதி வெளியிட்டு தேன்கூடு அப்படிங்கிற ஒரு திரட்டியில இணைச்சி இருக்காரு, யுடான்ஸ் ல இணைச்சி இருக்கார். 

நான் எழுதின தேதி நவம்பர் 3, 2011. அவர் வெளியிட்ட தேதி நவம்பர் 18, 2011. தலைப்பை கூட மாத்தாம அப்படியே வெளியிட்டு இருக்கார். அழகான ஒரு படம் போட்டு இருக்கார். அந்த படம் தான்  வித்தியாசம். 

உங்களுக்கு கோவம் வரலையா?
எதுக்கு கோவம் வரனும்? அவருக்கு பிடிச்ச பதிவுகளை சேகரிச்சிட்டு வரார். என்னமோ போங்க, அடுத்தவங்க எழுதினதை தன்னோடது போல காட்டுறது அவருக்கு ஒரு சந்தோசம். இதுமாதிரி ரொம்ப பேரு பிடிச்ச பதிவுகளை தங்களோட பதிவு போல காப்பி பண்ணி பேஸ்ட் பண்றது ரொம்பவே சகஜம் தானே. சினிமா செய்திகள், செய்திகள் அப்படின்னு விசயங்களை பிற தளங்களில் இருந்து பகிர்ந்து கொள்வது தவறில்லைதான், ஆனா ஒரு நன்றி அப்படின்னு போட்டுட்டா குறைஞ்சிறவா போறாங்க. இப்படித்தான் கிராம வளர்ச்சி அப்படின்னு ஒரு சிறுகதை எழுதி தட்ஸ்தமிழ் இணையத்துக்கு அனுப்பினேன், அவங்க அந்த கதையை வெளியிட்டாங்க. அட பரவாயில்லையே அப்படின்னு நினைச்சு தேடுனப்ப ரெண்டு மூணு இணையத்தில வெளியிட்டு இருந்தாங்க, என்னோட பெயரோட. பரவாயில்லையேன்னு நினைச்சிகிட்டேன். அந்த கதை இந்த வலைதளத்தில இல்லை, அதை வேகமா இணைச்சிருறேன். 

உங்களை மாதிரி இருக்கறவங்க இப்படி பதிவுகளை திருடி வெளியிடுறவங்களை  ஊக்குவிக்கிறீங்கதானே! அவங்களுக்கு பிடிச்சி இருந்தா ஒரு இணைப்பு தந்தா போதாதா, அல்லது நன்றி சொல்லி போட்டா ஆகாதா! அவருக்கு மின்னஞ்சல் அனுப்பலையா?

நிச்சயமா நான் அவங்களை ஆதரிக்கவில்லை. எனக்கு என்னமோ இப்படி எழுதி என்னத்தை பெரிசா சாதிச்சி பேரு வாங்க போறோம், பொழுது போக்கு, ஆத்ம திருப்தி அப்படி இப்படின்னு எதோ தமிழ் தெரியும் அப்படிங்கிறதுக்காக எழுதிட்டு வரோம், அப்படிங்கிற நினைப்பு மட்டும் தான். இஷ்டபட்டா அவங்க பதிவா போட்டுட்டு போகட்டும், என்ன பண்றது. தப்பு அப்படின்னு தெரிஞ்சே செய்றவங்களுக்கு என்ன தண்டனை தந்தா திருந்துவாங்க? சொல்லுங்க. எதுக்கு மின்னஞ்சல்? பிறர் பொருள் கள்வர்களுடன் என்ன பழக்கம் வேண்டி இருக்கிறது? 

உங்க வீட்டை என்னோட வீடு அப்படின்னு ஒருத்தர் சொன்னா, உங்க பொருளை என்னோட பொருள் அப்படின்னு மத்தவங்க சொன்னா சண்டைக்கு போக மாட்டீங்களா?. 

ஹூம், எது எதுக்கோ முடிச்சி போடறீங்க. நிச்சயம் சண்டைக்கு போகமாட்டேன், காவல் துறையில புகார் கொடுத்துட்டு என் வேலைய நான் பாத்துட்டு இருப்பேன். இப்போ நான் எழுதினதை எல்லாம் எடுத்து ஒரு புத்தகமா போட்டு அது மூலம் ஒருத்தர் லாபம் அடைஞ்சா எனக்கு எந்த வருத்தமும் வரப்போறதில்லை. என்னோட பெயர் இல்லாம போனாலும். 

பாரதியார், திருவள்ளுவர், கம்பர் இவங்க எல்லாம் புகழ், பெயர் வேணுமின்னு எழுதின மாதிரி எனக்கு தெரியலை. இந்த எழுத்து மூலம் நான் ஒருபோதும் புகழோ பெயரோ தேடிக்கிற போறதில்லை.  நினைச்சதை எழுதுவேன், புத்தகம் வெளியிடுவேன், அது குழந்தைகால கனவு. எல்லாருக்கும் தங்களோட கனவுகளை நனவாக்குற வாய்ப்பு கிடைக்கிறது இல்லை, அதனால புத்தகமா வெளியிட ஆசைப்படறவங்க எழுத்தை புத்தகமா வெளியிடற எண்ணம் எல்லாம் இருக்கு, காலம் கனியட்டும். 

நீங்க இனிமே எதைப்பத்தி எழுதப்போறீங்க? புது வருட புதிய கொள்கைகள்?

என்னது நீங்க திருந்திடீங்களா அப்படின்னு யாரும் என்னை கேட்ககூடாது. அப்படியேதான் இருக்கும் என் எழுத்து. மீண்டும் உறுதி அளிக்கிறேன், என் பதிவுகளை தாராளமாக திருடுங்கள், தயவு செய்து பிறர் பதிவுகளை திருடி எனது பெயர் பொறித்துவிடாதீர்கள், அது போதும்.