Showing posts with label தொடர்கதை - 4. Show all posts
Showing posts with label தொடர்கதை - 4. Show all posts

Friday 17 June 2016

இது கர்மவினை அல்ல, பரிணாமம்

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - முன்னுரை

பரிணாமம் குறித்துத்தான் எழுத வேண்டும் என நினைத்து இந்த கதையைத் தொடங்கினேன். அப்போது பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் எனும் இந்த வாக்கியம் மிகவும் பிடித்து இருந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டேன். எதற்காக இதைச் சொன்னார்கள் என்பதை விடுத்து இந்த வாக்கியத்திற்கு இரண்டு விதமான பொருள் தரலாம். ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவது பெண்களின் சமயோசித புத்திகளில் ஒன்று. மற்றொன்று இந்த பிரபஞ்சமானது ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து இன்று கடவுள் இவ்வுலகை படைத்தார் என்பதற்கான காரணியாக பெண்கள் விளங்குகிறார்கள் எனவும் கொள்ளலாம்.

இன்றைய மருத்துவ உலகில் தாயின் கர்ப்பப்பை இல்லாமல் ஒரு குழந்தையை முழுமையாக உருவாக இயலாத நிலைதான் இருந்து வருகிறது. அப்படியே வைத்துக் கொண்டால் இந்த உலகின் சந்ததிகள் தாயின் வழித் தோன்றல்களாக இருப்பார்கள். தாய் தனது சந்ததிகளை பேணி காத்து வராது போயிருப்பின் உயிரின பரிணாமத்தின் நிலையை யோசிக்க இயலாது. 

இப்படித்தான் கதையின் பாதையை சிந்தித்து வைக்க கர்மவினை என்ற ஒரு விஷயம் நிறைய இடைஞ்சலாகவே இருந்தது. போன ஜென்மத்தில் நீ அதுவாக பிறந்து இருப்பாய், அடுத்த ஜென்மத்தில் நீ இதுவாக பிறப்பாய் என்றெல்லாம் மனிதர்கள் கொண்டுள்ள நம்பிக்கை சரியானது இல்லை என முழுவதும் விலக்கி வைத்தாலும் உலகில் நடக்கும்  ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆச்சரியமும் ஆதங்கமும் கொள்ள வைக்கின்றன.

காதல், கல்யாணம், குடும்பம் என ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டாலும் மனிதனின் எண்ணங்கள் ஒரு வட்டத்தில் நின்றது இல்லை. மேலும் பரிணாமத்தின் 'வலுவுள்ளதே பிழைக்கும்' எனும் கோட்பாட்டின் படி தனக்கு சாதகமான விஷயங்களை செய்து முடித்துக்கொள்ள எந்த ஒரு எல்லைக்கும் ஒரு உயிரினம் போகும் ஆனால் மனிதன் மட்டும் காதல், உறவு, நட்பு என சொல்லிக்கொண்டு தியாகம் என அடைமொழி கொடுத்து மரணித்துப் போகவும் தயங்கமாட்டான்.

நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும் என நம்பி வாழ்ந்து கொண்டு இருப்பதால் இந்த கர்ம வினை மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஆனால் மனிதன் சிந்திக்காமல் பரிணாமத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து இருந்தால் இப்படிப்பட்ட எண்ணங்கள், சிந்தனைகள் ஒருபோதும் வந்து இருக்காது.

ஒருவனின்  வாழ்வில் என்னவெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டோ அல்லது தொடர்பு இன்றியோ நடக்கிறது போலவே இந்த கதையை முடித்து வைத்தேன்.

கர்ம வினை என்பதை விட பரிணாமம் மிகவும் சரியாகவே இருக்கிறது.



Friday 8 April 2016

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 30

''ஆமா சார், என்ன சார் விஷயம்''

''இதோ இவனை உனக்குத் தெரியுமா?''

''தெரியும் சார், இவன் பேரு கோரன், என்னோடதான் படிச்சான், பாதியில படிப்பை விட்டுட்டான். நேத்துகூட எங்க வீட்டுக்கு வந்து இருந்தான். இப்போ கரியநேந்தல் அப்படிங்கிற ஊருல பிசினஸ் வைச்சி இருக்கிறதா சொன்னான்''
''இவனை யாரோ கொலை பண்ணி இருக்காங்க''

பயத்தில் முருகேசு நடுங்கிக்கொண்டு இருக்க காயத்ரி உடனே வந்தவள்
''சார், சுபத்ராகிட்ட நீங்க விசாரிச்சா எல்லாம் தெரியும், இவருக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை''

''நீ யாருமா''

''என்னோட பேரு காயத்ரி''

''சரி நீங்க ரெண்டு பேரும் எங்களோட கிளம்பி வாங்க, சுபத்ரா ஊருக்குப் போகலாம், ஊரு தெரியும்ல''

அதற்குள் முருகேசுவின் அம்மா என்னடா இதெல்லாம் என்றபடி வந்து நின்றார்கள்.

''அந்த பையனை இங்க தங்கிட்டுப் போகச் சொன்னோம் அவன் தான் கேட்கலை''

''நீ யாருமா இவனோட அம்மாவா, நீயும் கூட வாம்மா''

மறுப்பேதும் சொல்லாமல் மூவரும் உடன் சென்றார்கள்.

''சார்  இங்க சுபத்ராவோட சொந்தக்காரங்க இருக்காங்க ரங்கநாதனு பேரு என்னோட அக்காவைத்தான் கட்டி இருக்காங்க, அவங்களையும் விசாரிச்சிட்டு கூட்டிட்டுப் போகலாம்''

''அதெல்லாம் இருக்கட்டும், முதலில அந்த சுபத்ராவை விசாரிப்போம்''

சுபத்ராவின் ஊருக்குள் சென்றபோது இருவர் வந்து நின்றார்கள்.

''அந்த பையன் கொலைக்கேசு விஷயமாவ வந்து இருக்கீங்க, நாங்கதான் அவனை கொன்னுபோட்டோம். உங்களுக்கு தகவல் சொன்னதே நாங்கதான். இவங்களை கூப்பிட்டு வந்து இருக்கீங்க''

காவல் அதிகாரி கடும் கோபம் கொண்டார்.

''என்ன தைரியம்டா உங்களுக்கு''

''இருக்காத பின்ன, இந்த ஊரு மண்ணு அப்படி''

''தம்பி நீங்க மூணு பெரும் போகலாம். உன்னைத் தேடித்தான் கோரன் வந்தான்னு அவங்க அப்பா தகவல் சொன்னதாலதான் உன்னை விசாரிக்க வந்தோம்''.

கொலை செய்தோம் என சொன்ன அந்த இருவரையும் காவல் அதிகாரிகள் பிடித்து வைத்தார்கள்.

''சுபத்ரா யாருடா''

''எங்க ஊரு பொண்ணுதான், ஆனா அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நேத்து எங்க தோட்டம் பக்கம் வந்தான் அப்போ யாரு என்னனு  விசாரிச்சப்ப திமிரா பேசினான் அப்போ இவனுக்கும் எங்களுக்கும் நடந்த தகராறுல கொஞ்சம் வரம்பு மீறிப் போச்சு நாங்க அவனை தொலைச்சி கட்டிட்டோம் இதெல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம். புடிச்சிட்டுப் போயா, சுபத்ரா எங்க சுமித்ரா எங்கனுட்டு''

பலர் அங்கே கூடி நின்றார்கள். நீங்க எல்லாம் எப்பவுமே திருந்த மாட்டீங்களாடா என்று ஆளாளுக்குப் பேசியபடி நின்றார்கள்.

''நாங்க எதுக்கு திருந்தனும், அவனவன் ஒழுங்கா இருந்தா நாங்க ஒழுங்கா இருக்கப்போறோம்''

காயத்ரி முருகேசுவிடம் வா போகலாம் என்றாள் . கொஞ்சம் இரு என்றான் முருகேசு.

''சுபத்ராவை கூப்பிடுங்க''

சுபத்ரா அங்கு வந்து நின்றாள்.

''என்ன சார் என்ன விஷயம்''

''கோரன் அப்படின்னு ஒருத்தனை கொன்னு இருக்காங்க உனக்கு இதில சம்பந்தம் இருக்கா''

''எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை சார், அவனை எதுக்கு சார் நான் கொல்லனும் எனக்கு என்ன கொல்லுறது தான் தொழில்னு நினைச்சீங்களா''

''ஏன்டா போலிசு மூதேவி, நாங்கதான் கொன்னோம்னு இந்த இரண்டு பேரும் சொல்றாங்க பிடிச்சி வேற வைச்சி இருக்க அவகிட்ட விசாரிக்கிற''

அங்கிருந்த ஒருவர் சொன்னபடி கத்தியை ஓங்கி காவல் அதிகாரியை குத்த வந்தார். அவரை சிலர் பிடித்துக்கொண்டார்கள்.

''சரிம்மா நீ போம்மா''

''எதுவும் மேல் விபரம் தேவைப்பட்டா என்னை கூப்பிடுங்க சார்''

''என்ன நீ அந்த போலிசு  மூதேவிகளை  சார்னு சொல்லிட்டு இருக்க, அவனுகளையும் சேர்த்து வகுந்துட்டா சரியாப் போயிரும்''

இன்னும் அவர் சத்தம் இட்டுக் கொண்டு இருந்தார். அவரை எதுவும் காவல் அதிகாரிகள் சொல்லவில்லை.

காவல் அதிகாரிகள் கொலை செய்தோம் என சொன்ன இருவருடன் கிளம்பினார்கள்.

சுபத்ராவை நோக்கி முருகேசு சென்றான். காயத்ரி எவ்வளவோ தடுத்துப் பார்த்தாள். அவர்களை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு சுபத்ராவின் வீட்டுக்குள் சென்றான்.

''சுபா நீ போன்ல சொன்னது போல நீதான கொலை பண்ணின''

''ஆமாடா நான்தான் அவனை என்னுடைய தடயம் எதுவும் இல்லாம கொன்னுட்டு பழியை இவனுங்க ரெண்டு பேரையும் ஏத்துக்க சொன்னேன்''

''எதுக்கு சுபா''

''அவன் உன்னையும் என்னையும் கொலை பண்ணத்தான் நேத்து வந்தான். உன் அம்மாவைப் பார்த்து மனசு மாறிட்டான். ஆனா அவன் வஞ்சம் தீரலை. என்கிட்டே அவன் இந்த விபரத்தை சொன்னப்ப அவனை கொலை பண்ணினேன், இப்போ என்னடா அதுக்கு, போயி அதோ அவ இருக்காள அவளோட பிள்ளை குட்டி பெத்து சந்தோசமா இரு. இது இந்த உலக பரிணாமம்டா. புத்தியுள்ளதே பிழைக்கும். அவளைக் கொல்ல எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது, ஆனா எனக்கு நீ சரிப்பட்டு வரமாட்டடா  அதனால அவளைக் கொன்னு பிரயோசனம் இல்லை''

''ஒன்னுமே இல்லாத விஷயத்தை இப்படி கொலையில கொண்டு வந்து நிறுத்திட்டியே சுபா''

''இந்த பூமி கூட ஒன்னுமே இல்லாமத்தான்டா இருந்துச்சு. புல், பூச்சி, மனுஷன் எல்லாம் வரலை, அது போலத்தான்டா, நீ கிளம்பிப் போ. கர்ம வினை அது இதுன்னு சொல்லிட்டு திரியாதே இது பரிணாமம். இன்னும் விலங்குகள் மனம் கொண்ட மனிதர்கள் திரியும் பூமி, கொஞ்சம் மாறி இருக்கேன் இதுவே விலங்கா இருந்து இருந்தா அவளை எப்பவோ கொன்னு போட்டு இருப்பேன்''

''சுபா நீ பண்ணினது தப்புன்னு தோணலையா''

''என்னை உன்னை காப்பாத்திக்க நான் பண்ணினதை எப்படிடா தப்புன்னு சொல்வ, பேசாம போயிருடா, என்னைத் தேடி இனிமே வராதடா''

''என்னப்பா அந்த பொண்ணு சொல்லுது''

''கொலை பண்ணிட்டு அவனுகளை ஏத்துக்கச் சொன்னேன்னு சொல்லுதுமா''

''முருகேசு வா போலீசுக்குப் போகலாம்''

''வேணாம் காயூ''

''இன்னும் அவ மேல உனக்கு கரிசனம் போகலைல முருகேசு''

''ஐயோ அம்மா இவளை கொஞ்சம் பேசாம இருக்கச் சொல்லு''

''காயத்ரி, இத்தோட இந்தப் பிரச்சினை முடிச்சிருச்சினு பேசாம இரும்மா''

''சரி அத்தை''

சில வருடங்கள் கழிந்தது. முருகேசுவிற்கும் காயத்ரிக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. திருமணநாள் அன்று சுபத்ரா வாழ்த்து பூங்கொத்தோடு வந்து இருந்தாள். காயத்ரிக்கு மனதில் பயம் குடி புகுந்தது.

''டேய் முருகேசு நீ சந்தோசமா இருக்க நான் எதுவும் செய்வேன்னு உன்னோட புதுப் பொண்டாட்டிக்கு சொல்லி வை, திருமண வாழ்த்துக்கள் காயத்ரி'' என வாழ்த்திவிட்டு சுபத்ரா சென்றாள். காயத்ரிக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.

''கர்ம வினைன்னு சொல்வாங்களே அதுதான் இதுவா முருகேசு''

''இல்லை காயூ, இது பரிணாமம்''

(முற்றும்)









Tuesday 13 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 29

சுபத்ராவை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று அவளது வீட்டிற்கு சென்றேன். வாடகை வீடு கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனை கடினமாக இல்லை. சுபத்ரா பற்றி கேட்டதும் மாடியினை காட்டினார்கள். பின்னர் சிறிது நேரம் யோசித்துவிட்டு அவர்களே சென்று சுபத்ராவை அழைத்து வந்தார்கள். என்னைப் பார்த்ததும் சுபத்ரா முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. என்னோட நண்பர் தான் என அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு என்னை அவள் தங்கி இருக்கும் மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

''சுபா, என் மீது கோபமா?''

''இல்லைடா, நான் உன் மேல சின்ன வயசில இருந்து ஆசை வைச்சது என்னமோ உண்மைதான். அது காதல்னு இன்னைக்கு வரைக்கும் நம்புறேன். இந்த ஊருக்கு வந்ததே உன்னைப் பார்க்கணும் பேசணும்னு தான். ஆனால் எல்லாம் தலைகீழா இருக்கு. கோரன் மூலம் உன்னை மிரட்டி கூட பார்த்தேன். எப்ப என்னை நீ வீட்டை விட்டு வெளியே அனுப்புனியோ அப்பவே நீ வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்டா.

முயற்சி செஞ்சிட்டு முடியலைன்னு செத்துரக்கூடாதுனு எங்கம்மா அடிக்கடி சொல்லும். ஆனா உன்கிட்ட என்னால முயற்சி கூட செய்ய முடியலை. ஏன்டா என்னை நீ எப்படி மறந்த? எத்தனை ஆசையா என்னோட பழகின பேசின, எப்படிடா உன்னால முடிஞ்சது. இனிமே உன் வழியில நான் குறுக்கே வரலை. நீ என்னைப் பார்க்கறது பேசறது எல்லாம் நிறுத்திக்கோ. இதுவே நம்ம கடைசி சந்திப்பா இருக்கட்டும். நான் இனிமே உன்கூட பேசவோ பழகவோ மாட்டேன்''

''சுபா''

''போடா, எத்தனை நம்பிக்கையா நான் இருந்தேன்னு உனக்கு எங்கடா தெரியப்போகுது. கோரன் உன்னை கொல்வானு சொன்னப்ப என்னால அதை தாங்கிக்க முடியலை. கிளம்பிப் போடா, அவளோட  நிம்மதியா இரு''

''சுபா, என்னை மன்னிச்சிரு, நான் நீ இப்படி நினைப்ப பழகுவேணு நான் பழகலை. ஆனா உனக்குள்ள இந்த காதல் எல்லாம் எனக்குத் தெரியாது. அப்படியே தெரிஞ்சி இருந்தாலும் உன்னோட குணத்திற்கு நான் பொருந்த மாட்டேன்''

''கிளம்பிப் போடா''

''அதில்லை சுபா''

''போடான்னு சொல்றேன்ல''

அதுக்கு மேல் அங்கிருக்க கூடாது என வீடு வந்து சேர்ந்தேன். காயத்ரியிடம் எல்லா விசயங்களையும் சொன்ன பின்னர் அவளுக்குள் உண்டான நிம்மதியை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

கர்மவினை என்பது எல்லாம் என்னவென இதுவரை கண்டு கொண்டதும் இல்லை. எதற்கு எது நடக்கிறது என இதுவரை புரிந்த பாடில்லை. அன்று இரவு சற்று நிம்மதியாக தூங்கமுடிந்தது.

மாதங்கள் கடந்து போவதில் தாமதம் ஏற்படவில்லை. கல்லூரி வாழ்க்கை வேகமாக கடந்து போய்க்கொண்டு இருந்தது. இந்த ஒரு வருடம் எவ்வித துப்பறியும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. கல்லூரி முடியும் காலம் வந்தது. அனைவரும் பிரிந்து சென்றனர். நானும் காயத்ரியும் மேற்கொண்டு படிப்பது குறித்து யோசித்துக் கொண்டு இருந்தோம்.

எந்த ஒரு விசயமும் அப்படியே முடிந்து போவது இல்லை என்பது போல அன்று இரவு கோரன் எனது வீட்டிற்கு வந்து இருந்தான்.  இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவனை வீட்டிற்குள் அழைப்பதா வேண்டாமா என யோசித்துக் கொண்டு இருந்தபோது எனது அம்மா அவனை உள்ளே வாப்பா என அழைத்து அமரச் சொன்னார்.

''என்னடா முருகேசு எப்படி இருக்க''

''நல்லா இருக்கேன் கோரன், நீ இதுவரை எங்க போன''

''இப்போ நாங்க கரியநேந்தல் போய்ட்டோம். அங்கே ஒரு சின்ன பிசினஸ் வைச்சி நடத்திட்டு இருக்கோம். உன்னைப் பார்க்கணும்னு தோணிச்சி அதான் வந்தேன். சுபத்ரா எங்கே போயிட்டா''

''அவ சொந்த ஊருக்குப் போய்ட்டா, இங்கே வந்த வேலை முடிஞ்சதுனு கிளம்பிட்டா''

''அவளுக்கு போன் பண்ணினேன், எடுக்கலை. நம்பர் மாத்திட்டாளா''

''ஆமா''

''அவ நம்பர் கொடு''

''புது நம்பர் என்கிட்டே இல்லை, அவளோட பழக வேணாம்னு சொல்லிட்டா''

அதற்குள் என் அம்மா அவனுக்கு பலகாரங்கள், காபி கொண்டு வந்து வைத்தார். அவனும் பலகாரங்கள் சாப்பிட்டுக்கொண்டே காபி குடித்து முடித்தான்.

''இங்கே வேணும்னா தங்கிக்கப்பா''

''இல்லைம்மா, அவனுக்கு வேற வேலை இருக்கு, அவன் போகணும்''

''இல்லைடா முருகேசு, இங்கே தங்கிட்டுதான் நான் காலையில போகணும்''

''எங்கே தங்கப்போற''

''தெரிஞ்சவங்க வீட்டில''

''இங்கே தங்குப்பா''

''வேணாம்மா''

''சரிடா, நான் கிளம்பறேன்''

கோரன் அங்கிருந்து கிளம்பினான். எதற்கு வந்தான், எதற்கு சுபத்ராவை விசாரித்தான் என எனக்குப் புரியவே இல்லை. அவனை பின்தொடர நினைத்தேன். பிறகு வேணாம் என விட்டுவிட்டேன்.

அதிகாலையில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. புதிய எண் கண்டு திடுக்கிட்டேன். சிறிது யோசனைக்குப் பிறகு எடுத்தேன்.

''கோரனை  நான் கொன்னுட்டேன்டா''

''சுபா''

''நேத்து உன் வீட்டுக்கு வந்துட்டு என்னைத் தேடி எங்க ஊருக்கு வந்துட்டான், என்னை கொலை பண்ண முயற்சி செஞ்சான். நான் அவனை கொலை பண்ணிட்டேன்''

''என்ன சொல்ற சுபா, போலிஸ் கேசு''

''நீ பேசமா இருடா''

சுபத்ரா இணைப்பைத் துண்டித்தாள். அவளது எண்ணுக்கு அழைத்தபோது அவள் எடுக்கவே இல்லை. தகவல் எதற்கு சொல்ல வேண்டும்.

சில மணி நேரத்தில் எனது வீட்டு வாசலில் காவல் அதிகாரிகள் வந்து நின்றனர்.

''நீதானே முருகேசு''

கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.

(தொடரும்) 

Tuesday 6 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 28

அடுத்த தினம் காவல் நிலையத்திற்கு சென்று கோரன் பற்றி விசாரித்தேன். அவர்கள் கோரன் வெளியில் சென்றுவிட்டதாக கூறியது பெரும் வருத்தம் தந்தது. அவன் மீது வழக்குப் பதிவு செய்யாமல் என்ன காரியம் பண்ணி இருக்கிறீர்கள் என சத்தம் போட்டேன். என் மீது வழக்குப் பதிவு செய்து விடுவதாக மிரட்டினார்கள்.

எங்கே இந்த கோரன் போயிருப்பான் என அவனது வீட்டிற்கு சென்று பார்த்தால் அங்கே கோரன் இருந்தான். ஆனால் நான் மறைந்து கொண்டேன். அவனது வீட்டிற்குள் சிலர் சென்றார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே சிரித்த முகத்தோடு வந்தார்கள். கோரன் வாசல் வரை வந்து அவர்களை அனுப்பி வைத்தான். இந்த வயதில் இவனுக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது என்றே யோசித்துக் கொண்டு இருந்தேன். ஒருவேளை சுபத்ரா சொன்னது போல பரிணாமத்தின் கர்மவினையோ.

வீட்டிற்குள் சென்ற கோரன் கையில் ஒரு பையுடன் வெளியேறினான். என்னை எவரும் பார்த்துவிடக்கூடாது என்பது போல நடந்து கொண்டேன். அவனை மெதுவாக பின் தொடர ஆரம்பித்தேன். நிச்சயம் இவன் சுபத்ராவை நோக்கித்தான் செல்ல வேண்டும் என எண்ணியது தவறாக முடிந்தது. அவன் கரியனேந்தல் செல்லும் பேருந்தில் ஏறினான். அவனை பின் தொடர்வதா வேண்டாமா என எண்ணியபடி நின்றேன். காயத்ரியின் தந்தையை இப்படித்தான் தொடர்ந்தது நினைவில் வந்து ஆடியது. ஒன்றும் தெரியாதது போல அவன் இருந்த பேருந்து பக்கமாக நடந்தேன். அவன் அமர்ந்து இருந்த சன்னல் பக்கம் சென்று அழைத்தேன்.

''கோரன்''

பெயர் கேட்டதும் திடுக்கிட்டான். என்னைப் பார்த்தவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

''கோரன், கோரன்''

அவன் என்னைத் தவிர்க்க நினைப்பது புரிந்தது. பேருந்தில் ஏறி அவனருகே சென்றேன்.

''கோரன் எங்கே போகிறாய்?''

இருக்கையில் இருந்து எழுந்தவன் வேகமாக பேருந்தில் இருந்து இறங்கி சில பேருந்துகளில் ஏறி இறங்கினான். எனது கண்ணில் இருந்து எப்படியோ மறைந்தான். அங்கே காத்து இருப்பதில் அர்த்தமில்லை என பேருந்து நிலையம் விட்டு வெளியேறினேன். கோரன் மிகவும் புதிராகவே தெரிந்தான்.

வீட்டிற்கு சென்றபோது காயத்ரி மிகவும் கோபமாக இருந்தாள் .

''என்ன விசயம் காயூ''

''எங்க போன''

''கோரன் என்ன பண்றானு பாக்கப் போனேன்''

''அந்த சனியனை விட்டுத் தொலைக்க முடியாதா''

''அவன் சுபாவை கொல்லப்போறேனு  சொல்லி இருந்தான்''

''அதான் சுபா அவனை கொல்வேனு சொன்னால''

''சுபா எங்கே''

''லைப்ரெரி போய்  இருக்கா''

''சாப்பிட்டாளா''

''சாப்பிட்டுத்தான் போனாள்''

''அம்மா எங்கே''

''கோவிலுக்குப் போனாங்க, இன்னும் வரலை''

''நீ போகலை''

''நீ எங்கே போனேனு சொல்லாம போயிட்ட, நீ வந்தா சாப்பாடு எடுத்து வைக்க சொல்லிட்டு அத்தைப் போயிட்டாங்க''

''நானா சாப்பிடமாட்டேனா''

''எனக்கு உன் மேல கோபம் தீரலை''

''சுபா எதுவும் சொன்னாளா''

''சொன்னா, உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா. உன்னை அவளுக்கு  விட்டுத்தரும்படி சொன்னா, எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது''

''விளையாட்டுக்கு பேசி இருப்பா''

''முருகேசு உனக்கு எது விளையாட்டு, எது உண்மைனு தெரியாதா, அவ ரொம்ப சீரியசா பேசறா, எனக்கு பயமா இருக்கு''

''என்ன பயம்''

''என்னை கொலை பண்ணிட்டா''

''என்ன பேசற நீ, அவ அப்படிபட்ட  பொண்ணு இல்ல''

''இல்லை முருகேசு, நீ அவளை வேறு வீடு பாக்கச் சொல்லு''

''எதுக்கு இப்படி பயப்படற, சொன்னா கேளு காயூ, அவ ஒன்னும் பண்ணமாட்டா''

அம்மா கோவிலில் இருந்து வந்தார்கள்.

''என்னடா சாப்பிட்டியா?''

''இல்லைம்மா''

''காயத்ரி, அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்கலை''

''நான் சாப்பிட்டுக்கிறேன்மா, இப்போதான் வந்தேன்''

''அந்த பொண்ணு இங்கேதான் தங்கப்போறா''

''ஆமாம்மா, ஏன்?''

''சும்மா கேட்டேன்டா''

''காயூ சொன்னாளா, எதுவும் சுபா சொன்னாளா ?''

''இல்லையே, நீ போய்  சாப்பிடு, காயத்ரி சாப்பாடு எடுத்து வைம்மா''

சாப்பாடு எடுத்து வைக்கும்போது காயத்ரி சுபத்ராவை வெளியே போகச் சொல்லு என்பதை பலமுறை சொல்லிவிட்டாள்.

''காயூ, எல்லாம் கர்மவினை''

''ஆமா, எது நடக்கணுமோ அதுதான் நடக்கும்னு பேசிட்டு இரு''

காயத்ரி அழாத குறைதான். எனக்கு சுபத்ராவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மனம் இல்லை. கோரன் பற்றிய அச்சம் எனக்கு நிறையவே இருந்தது.
மதியம்தான் சுபத்ரா வீட்டிற்கு வந்தாள்.

''டேய், ஒரு புது வீடு வாடகைக்கு எடுத்துட்டேன். ஒரு ரூம் மட்டும் தரேன்னு சொல்லி இருக்காங்க. லைப்ரெரி பக்கம் தான். அப்படியே இந்த ரெங்கநாதனை நல்லா திட்டிட்டு வந்துட்டேன். எல்லாத்தையும் என் வீட்டுல சொல்லிட்டான். நீ ஒண்ணும்  பரிணாமம் எல்லாம் ஆராய்ச்சி பண்ண வேணாம் வீட்டுக்கு வானு சொல்லிட்டாங்க. அடம் பிடிச்சி இன்னும் ஆறு மாசம்னு சொல்லிட்டு வந்து இருக்கேன். ஏன்டா  இந்த ஆம்பளை பசங்களுக்கு அறிவே இருக்காதா? அந்த கோரன் மடையன் எனக்கு போன் பண்ணி இன்னும் ஆறு மாசம் கழிச்சி உன்னை கொல்றேன்னு சொல்றான். உன் அட்ரஸ் தாடா இப்பவே வரேன் உன்னை கொல்றேன்னு சொன்னதும் போன  வைச்சிட்டான்''

சுபத்ரா மளமளவென பேசியது கண்டு என் அம்மா அப்படியே ஓரிடத்தில் தூணில் சாய்ந்து கொண்டார்கள். காயத்ரிக்கு முகமெல்லாம் சந்தோசம்.

''என்னடா ஒன்னும் பேசமாட்டேங்கிற, டேய் நான் உன்கூட இருந்தா இவ இருக்காளே அவளுக்கு இருப்பு கொள்ளாது, அதான் நான் வெளியே போய் உன்னை தொடர்ந்து காதல் பண்ணப் போறேன். உன் அம்மா கூட பாவம் ரொம்பவே இடிஞ்சி போயிட்டாங்க, இல்லையாம்மா''

''இந்த சின்ன வயசுல இப்படி இருக்கியே''

''எப்படி இருக்கேன், இல்லை எப்படி இருக்கேன், உங்க மகனுக்கு ஏத்த ஜோடி நான் தான், இவ யாரு? என்னை நீங்க மறந்து போயிட்டீங்களோ''

''ஏதோ  வீடு பாத்து இருக்கேன்னு சொன்னயில, போம்மா''

அம்மா அப்படி சொன்னதும் சுபத்ரா தனது பெட்டியை எடுத்துக் கொண்டு வரேன்டா என என்னிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியேறினாள். சுபத்ராவை இருக்கச் சொல்ல எனக்கு வாய்ப்பு இன்றி போனது.

''அம்மா, அவ ஒண்ணுமே இல்லாத விஷயத்தை பெரிசு படுத்துறாமா''

''நீ பேசாம போடா, அவ எவ்வளவு திமிரா பேசுறா, காலையில காயத்ரியை ஓங்கி அடிக்கப் போயிட்டா. நான் அவளை நல்லா திட்டினேன் அதான் எங்கேயோ போயி வீடு பாத்து வந்துருக்கா''

''அம்மா அவ பாவம்மா, காயூ எதுக்கு இதை என்கிட்டே சொல்லலை''

''பாவம் அவ மேல தான் இருக்கும், அதான் சொல்லலை''

''காயூ என்ன நீ இப்படி பேசற''

''அவளை கண்டிச்சி வை''

''நீங்க ரெண்டு பேரும்  அடிச்சிக்க வேணாம்''

பல தினங்களாக சுபத்ராவை நாங்கள் பார்க்கவே இல்லை. ஒருமுறை கோரன் வீட்டுக்குப் போனபோது வேறு ஒரு குடும்பம் அங்கே குடி வந்து இருந்தது. விசாரித்துப் பார்த்ததில் வீட்டை விலைக்கு வாங்கி விட்டதாக சொன்னார்கள்.

இந்த உலகில் என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது என இதுவரை எவருமே சரியாக சொன்னது இல்லை.

(தொடரும்)









Thursday 1 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 27

''சுபாவை கூப்பிடுடா''

''வேண்டாம் கோரன்''

''நீ அவளை வரச் சொல்லிட்டுப் போடா''

''கோரன் நீ ஏன்டா இப்படி நடந்துக்கிற''

''நான் சொன்னதை செய்டா''

சுபத்ராவை  அழைத்தேன்.சுபத்ரா வெளியே வந்தாள். நான் அங்கிருந்து மறைந்து கொண்டேன். கோரனைப்  பார்த்த சுபத்ரா நேராக வந்து கோரன் எதிர்பார்க்காத வண்ணம் மூர்க்கமாகத் தாக்கினாள். கோரன் சுதாரிக்கும் முன்னர் நான் அவன் மீது கல் எடுத்து எறிந்தேன். நிலைகுலைந்து விழுந்தான் கோரன். எவ்வித சப்தமும் போடாமலே கோரன் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

சுபத்ரா போலீசிற்கு தகவல் சொல்லிவிட்டு காத்து இருந்தாள். கோரனின் கால் கைகளை கட்டிப்போட்டேன். அதோடு நானும் உடன் இருக்க வேண்டியதாகி விட்டது. ரங்கநாதன், சுபலட்சுமிக்கு  இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. சுபத்ராவை நாளையே வீட்டை காலி பண்ணி வேறு எங்காவது தங்கிக் கொள்ளச் சொன்னார்கள். சுபத்ரா மறுப்பேதும் சொல்லாமல் சரி என சொல்லிவிட்டாள்.

போலிஸ் உடனடியாக வந்தது. சுபத்ரா எல்லா விபரங்களையும் சொன்னதும் கோரனை போலிஸ் அழைத்துச் சென்றது. என்னையும் சுபத்ராவையும் காலையில் காவல் நிலையத்திற்கு  வரச் சொன்னார்கள்.

''டேய் நான் உன்னோட இப்போ உன் வீட்டுக்கு வரட்டுமா?''

''சுபா''

''அவங்கதான் இங்க என்னை தங்க வேணாம்னு சொல்லிட்டாங்க, அங்க வந்து தங்கிட்டு நாளை வேற இடம் போயிக்கிறேன்''

''சரி சுபா''

சுபத்ரா தனது பெட்டியை எடுத்துக் கொண்டு என்னுடன் நடக்கலானாள். ரங்கநாதன் சுபத்ராவை தடுக்கவே இல்லை. காயத்ரி அக்காவாவது தடுப்பார் என்றால் அதுவும் இல்லை.

''சுபா, என்னை காதலிக்கிறது உண்மையா?''

''ஆமாடா, என்னடா சந்தேகமா?''

''சுபா, நான் காயூவை காதலிக்கிறேன், ப்ளீஸ் எங்க வாழ்க்கையை குழப்பாதே''

''உன்னை என்னை காதலிக்க சொன்னேனாடா''

''எத்தனை பிரச்சினை?''

''சரி செய்துடலாம்டா''

''சரி செய்துரலாம்னு சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான், எதையும் சரி செய்யமுடியாது''

பேசிக்கொண்டே வீடு வந்து  சேர்ந்தோம். சுபத்ராவை கண்டதும் காயத்ரி குழப்பம் அடைந்தாள். அம்மாவிடம் சொன்னதும் அம்மா சரி இருக்கட்டும் என்றார். அப்பா என்னை தனியாக அழைத்து என்னப்பா தேவையில்லாத பிரச்சினைகளோட வாழுற, படிக்கிறதுக்கு பாரு என அறிவுரை சொல்லி அனுப்பினார்.

காயத்ரியின் அறையில் தான் சுபத்ரா தூங்க வேண்டி இருந்தது. காலையில் எழுந்து கிளம்பியபோது காயத்ரிதான் சுபத்ரா இங்கேயே இருக்கட்டும் என்றாள். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என் அம்மாவும், அப்பாவும் காயத்ரி சொன்னாள் என்பதற்காக சம்மதம் சொன்னார்கள்.

நாங்கள் மூவரும் காவல் நிலையம் செல்ல இருந்தோம். அப்பாவும் உடன் வருகிறேன் என்றதால் நால்வரும் சென்றோம். அப்பாவுக்கு அங்கிருந்த காவல் அதிகாரியை தெரியும் என்பதால் எவ்வித பிரச்சினை இன்றி எல்லாம் முடிந்தது. ஆனால் கோரனை வெளியில் விட இயலாது என்றார் அவர்.

நாளிதழ் ஒன்றை பார்த்தபோது கோரன் சொன்னது போலவே ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விசயம் வெளி வந்து இருந்தது. அதை காவல் அதிகாரியிடம் தந்து கோரன் தான் இந்த கொலையை செய்தான் என நான் சொன்னதும் என்னை போகச் சொன்னவர் அவர்கள் அதைப் பார்த்துக் கொள்வதாக கூறினார்கள்.

சுபத்ரா காயத்ரியின்  நெருங்கிய தோழி ஆனது ஆச்சரியம். அன்று கல்லூரியில் எப்படி ஒரு மனிதன் கொடூர எண்ணம் கொண்டு உருவாகிறான் என பாடம் எடுத்தார் எனக்குப் பிடித்த ஆசிரியர்.

''சார், கோரன் ஒரு கொலைகாரனாக மாறியதற்கு என்ன காரணம்?''

''கொலைகாரனா?''

மொத்த வகுப்பும் என்னை பயத்துடன் பார்த்தது.

''நமது கல்லூரி ஆசிரியர் ஒருவரை கோரன் கொலை செய்து தற்போது ஜெயிலில் இருக்கிறான் சார். அவன் நிறை புத்திக்கூர்மை கொண்டவன் ஆனால் எதற்கு இப்படி நடந்து கொண்டான் என நினைக்கும்போது இந்த கொடூர எண்ணம் அவனுள் எப்படி வந்து இருக்கக் கூடும் சார்''

''நீ அதுகுறித்து இங்கு பேசுவது தேவை இல்லை, கொடூர எண்ணம் கோபத்தின் வெளிப்பாடு, இன்று வேறு பாடம் பார்க்கலாம்''

கோரன் பற்றிய பேச்சு கல்லூரி முழுக்க பரவியது. பலர் பரிதாபம் கொண்டார்கள். மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு சென்றபோது சுபத்ராவைப் பார்த்தோம். சுபத்ராவிடம் கோரன் பற்றி கேட்டபோது ஒரே வரியில் சொன்னாள்.

''பரிணாமத்தின் கர்ம வினை''

''கர்மவினையா?''

''ஆமாடா, நமது மூளை வளர வளர நமக்கு நம்மை பாதுகாக்க வேண்டி எண்ணம் வந்தது, அதன் விளைவாக எதிரிகளை உருவாக்கிக் கொண்டோம்''

காயத்ரி குறுக்கிட்டாள்.

''சிலருக்கு அன்புள்ளமே அவர்களுக்கு பெரும் எதிரி''

நான் காயத்ரி என்ன அர்த்தத்தில் சொன்னாள் என புரிந்து கொள்ள முடியவில்லை. சுபத்ராதான் சொன்னாள்.

''கோரன் நிச்சயம் வெளியே வருவான், அவன் ஒரு ஜீனியஸ், ஆனால் முட்டாள்தனமா நடந்துக்குவான்''

''அவன் வெளியே வந்தா உன்னை கொலை பண்ணிருவான்''

''இல்லைடா, நான் அவனை கொலை பண்ணுவேன்''

காயத்ரி பயம் கொண்டாள்.

(தொடரும்)

Wednesday 30 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 26

அன்று மாலை கோரனின் வீட்டிற்கு நானும் காயத்ரியும் சென்றோம் ஆனால் கோரனின்  வீடு பூட்டப்பட்டு இருந்தது. எங்கு சென்று இருப்பான் என எண்ணுவதற்கு வழியில்லை. அப்படியே காயத்ரியின் அக்காவை பார்க்க ரங்கநாதன் சார் வீட்டிற்கு சென்றோம்.

காயத்ரியைப் பார்த்ததும் அவளது அக்கா அத்தனை பாசமாக வரவேற்றார்.  நாங்கள் சிறிது நேரம் அங்கு இருக்கும்போதே சுபத்ரா அங்கு வந்தாள். எங்களைப் பார்த்தவளின் முகம் அத்தனை சந்தோசமாக இல்லை. வாங்க என சொல்லிவிட்டு நேராக மாடிக்குப் போனாள். காயத்ரியின் அக்காவின் கவனத்தை என் பக்கம் திருப்பினேன்.

''சார் எப்போ வருவாங்க?''

''அவர் வர எப்படியும் மணி எட்டு ஆகும்''

''நீங்க வேலைக்குப் போறதை எதுக்கு நிறுத்தினீங்க''

''வேணாம்னு சொல்லிட்டார், நிறுத்திட்டேன், நீ சொன்னா காயத்ரியும் கேட்பா''

''வேலைக்குப் போக வேணாம்னு நான் சொல்லமாட்டேன்''

''ஆனா இது கூட நல்லா இருக்கு''

''அவங்க அம்மா எங்கே?''

''அத்தை வெளியூர் போயிருக்காங்க, வர ஒரு வாரம் ஆகும்''

பேசிக்கொண்டு இருக்கும்போதே சுபத்ரா வந்தாள்.

''சுபா, கோரன் எங்க போனான்னு தெரியுமா''

''எனக்குத் தெரியாது''

''சொல்லு சுபா, அவன் வீடு பூட்டி இருந்தது''

''எனக்குத்  தெரியாதுடா''

சுபத்ரா அவ்வாறு சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள். காயத்ரி அவளது அக்காவிடம் எல்லா விபரங்களையும் சொல்லி வைக்க காயத்ரி அக்காவோ சுபத்ராவிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார். நாங்கள் இருவரும் வீட்டிற்கு வந்துவிட்டோம்.

அடுத்த நாள் கல்லூரியில் கோரன் வந்து தனது மாற்று சான்றிதழ் வாங்கிச் சென்றதாக பேசிக்கொண்டார்கள். நானும் தான் கல்லூரியில் இருக்கிறேன் ஆனால் எனக்குத் தெரியாமல் என்னைப் பார்க்காமல் அவன் அவ்வாறு செய்தது ஆச்சரியமாக இருந்தது. தலைவலி என சொல்லிவிட்டு கோரன் வீட்டிற்கு சென்றேன். அவனது வீடு பூட்டப்பட்டுதான் இருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது ஒரு மணி நேரம் முன்னால வெளிய கிளம்பி போனாங்க என தகவல் சொன்னார்கள். எனக்கு இப்படி துப்பறியும் வேலையாகவே போய்விட்டது.

கல்லூரியில் படிப்பு தடைப்பட்டுக் கொண்டு இருந்தது. காயத்ரியும் படிப்பு மீது அக்கறை செலுத்த வேண்டும் என சொல்லிக்கொண்டே இருந்தாள். ஒரு வாரம், இரண்டு வாரம் என வாரங்கள் கடந்து சில மாதங்கள் கடந்தது. தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வந்தது கண்டு கொஞ்சம் சந்தோசம் என்றாலும் கோரன் எங்கு போனான் என தெரியவில்லை. இந்த சில மாதங்களாக சுபத்ரா முகம் கொடுத்து பேசவும் இல்லை.

திடீரென எனது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

''டேய் முருகேசு, நான் கோரன் பேசறேன்''

''கோரன், எங்க இருக்க''

''நான் எங்க இருக்கேனு உனக்குத் தெரிய வேணாம், அந்த வாத்தியானை கொன்னுட்டேன், அடுத்து சுபத்ராதான்''

''என்ன சொல்ற''

''அவ உன்னை காதலிச்சேன்னு என்கிட்டே பொய் சொன்னால அதுக்கு அவளை கொலை பண்ணிட்டுதான் மறு வேலை''

''கோரன் உன்னோட புத்தி எதுக்கு இப்படி போகுது''

''நம்பிக்கைத் துரோகிகளை இந்த உலகம் சகித்துக்கிட்டு இருக்கவே கூடாதுடா, நீ காயத்ரிக்கு நம்பிக்கைத் துரோகம் பண்ணின உன்னையும் கொல்வேன்டா''

''இப்படி எத்தனை பேரை கொல்லப் போற''

''எனக்கு ஏதாவது சம்பந்தபட்டவங்க மட்டும் தான்''

''நீயே நம்பிக்கைத் துரோகம் பண்ணினா உன்னை நீயே கொல்வியா''

''மூடன் மாதிரி பேசாதடா, நான் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் பண்ணமாட்டேன்டா''

''எனக்குப் பண்ணி இருக்கியே''

''என்னடா சொல்ற''

''உன்னை நல்லவன்னு நம்பினேன் ஆனா நீ கொடூர மனம் கொண்டவனா இருக்கே, நீ பதில் சொல்றது எல்லாம் நினைச்சி எவ்வளவு நினைச்சி இருந்தேன்''

''டேய் வாயை மூடுடா, நாளைக்கு அந்தாளு முகத்தோட பேப்பர்ல வரும், படிச்சிக்கோடா''

அத்துடன் அழைப்பைத் துண்டித்தான். அவனை மீண்டும் அழைத்தபோது அழைப்பில் இல்லை என்றே பதில் வந்தது. இதை காயத்ரியிடம் சொன்னபோது காயத்ரி சுபத்ராவை எச்சரிக்கைப் பண்ணலாம் என சொன்னாள் . சுபத்ராவிற்கு போன் போட்டபோது சுபத்ரா எடுக்கவே இல்லை. அன்று இரவு சுபத்ராவை சந்திக்கப் போனேன். எனது அழைப்பு கேட்டும் சுபத்ரா பேச மறுத்தாள். சிலமுறை முயற்சி செய்து கடைசியாக பேசினேன்.

''சுபா ஒரு முக்கியமான விஷயம், சொன்னா கேளு, வெளியே வா''

சுபா வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

''என்னடா''

''உன்னை கோரன் கொல்லப் போறதா எனக்கு போன் பண்ணினான்''

''என்னடா உளறுற''

''சொன்னான், அந்த வாத்தியானை கொன்னுட்டானாம், அடுத்து நீதான் அப்படின்னு சொன்னான்''

''எந்த நம்பர்ல இருந்து பேசினான், என்கிட்டே இருக்க நம்பருக்கு அவனை கூப்பிட முடியலையேடா''

''நம்பர் அழிச்சிட்டான்''

''நீ போடா நான் பாத்துக்கிறேன்டா, முருகேசு எனக்கு ஒரு உதவி பண்ணுவியாடா''

''என்ன உதவி''

''அடுத்தமுறை கோரன் போன் பண்ணினா எனக்கு இப்படி வந்து சொல்லாதே, அவ மேல கை வைச்சி பாருடா, உன்னை நானே கொலை பண்ணுவேன்னு சொல்லு''

''ஏன்''

''டேய், உன்னோட காதலி என்னை ஒருத்தன் கொல்லப்போறேனு சொல்றான், அதை கேட்டுட்டு என்கிட்டே வந்து தகவல் சொல்ற''

''அது இல்லை''

''என்னடா அது இல்லை, ஒழுங்கு மரியாதையா காயத்ரியை மறந்துரு''

''சுபா நீ என்னை காதலிக்கிறது பொய்னு தெரிஞ்சிதான் கோரன் உன்னை கொல்ல இருப்பதா சொன்னான்''

''சரிடா, ஆனா நான் காதலிக்கிறது உண்மைடா''

''வேணாம் சுபா''

''பாருடா என்ன நடக்குதுன்னு''

அவள் வீட்டிற்குள் சென்றுவிட்டாள். நான் வெளியில் நின்று கொண்டு இருந்தேன். என் மீது எவரின் கையோ பட்டது. திரும்பிப் பார்த்தேன். கோரன் நின்று கொண்டு இருந்தான். எனக்கு கை கால்கள் நடுங்கத் தொடங்கியது.

(தொடரும்)





Tuesday 29 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 25

''முருகேசு, உனக்கு சில உண்மைகளை சொல்றேன் கேளுடா, அதுக்கு அப்புறம் உனக்கும் ஒரு விஷயம் சொல்றேன்டா, அதுபடி நீ நடக்கணும்டா, இல்லை...''

''சொல்லு''

''அவனின் மனைவி எனது அம்மாவுக்கு  தங்கை முறை, என் அப்பாவுக்கும் தூரத்து சொந்தம். அவனும் சித்தியும்ஓடிப்போய்த்தான் காதல் திருமணம் பண்ணிக்கொண்டார்கள். முதலில் நன்றாகத்தான் இருந்தார்கள். சித்தி எங்கள் வீட்டுக்கு வருவார்கள், போவார்கள். பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தார்கள். இதனால் இவனால் எனது சித்தி மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்கப்பட ஆரம்பித்தது. இதற்கு சற்று ஆறுதலாக இருந்த எங்களை பார்க்கக்கூடாது என அவன் கட்டளை போட்டதால் எப்போதாவது வர ஆரம்பித்தவர் சில மாதங்களாக வருவதை அடியோடு நிறுத்திவிட்டார். என் அம்மா அங்கே செல்லும்போது அவன் என் அம்மாவை கண்டபடி பேசியதை என் அம்மா எங்களிடம் சொல்லவில்லை. சித்தியைப்  பார்க்கவும் செல்லவில்லை.

மன அழுத்தம்தனை காரணம் காட்டி பலமுறை மருத்துவமனைக்கு அவன் அழைத்துச் சென்று இருக்கிறான். தான் நல்லவன் போல எல்லோரிடமும் காட்டிவிட்டு தாட் பொரசெஸ் என கதைகட்டிவிட ஆரம்பித்தான். ஒருமுறை சித்தியைப் பார்த்தபோது கோரன் எனக்கு பயமா இருக்குடா, நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன் என்றபோது இவன் வேறொரு மணம்  முடிக்க திட்டமிடுவதை சொன்னார். நான் அவனை முழுமையாக நம்பியதால் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டு வந்த ஒரே வாரத்தில் சித்தி தற்கொலை செய்து கொண்டதாக அவனிடம் இருந்தே தகவல் வந்தது. தற்கொலைதான் என நம்பும்படி எல்லா ஆதாரங்களும் இருந்தன அதனால் போலிஸ் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால் நான் அப்பா அம்மா இது ஒரு கொலை என்றே எண்ணினோம். அவன் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவனை கொல்வது  எனத்  திட்டமிட்டோம். ஆனால் படுபாதகன் நீ குறுக்கே வந்துவிட்டாய், உன்னை கொலை பண்ணினால்தான் அவனை கொலை பண்ண முடியும் என எனக்குள் ஒரு ஆத்திரம் இருந்து கொண்டே இருந்தது. இன்று நான் சொன்னது பொய் என்று சொன்னாய் பார் அதுதான் எனக்கு மேலும் ஆத்திரம் அதிகம் ஆனது.

இப்போது சொன்னது உண்மை. நான் அவனை எங்கேனும் தேடி கொலை பண்ணாமல் விடமாட்டேன். நீ இதற்கு மேல் இதில் தலையிடுவது என இருந்தால் இப்போதே சொல், உன்னை இங்கேயே கொன்று போட்டுவிடுகிறேன்''

''கோரன், இது எல்லாம் தப்பு என தெரியவில்லையா''

''எதுடா தப்பு, சொல்டா, இவ்வுலக உயிர்கள் எல்லாம் பிரசவிக்கின்றன, அந்த பிரசவம் என்பது பெண்ணுக்கு என உண்டானதுடா, ஒரு பெண் பிரசவிக்க முடியாமல் போனால் வேறு ஒரு பெண்ணை நாடுவது அந்த பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி, ஆனால் அப்படியே விருப்பம் கொண்டு போகட்டும் அதற்காக மனநிலை பாதிக்கப்படும்படி செய்து கொலை செய்யும் மனநிலையை எப்படியடா மன்னிப்பது''

''கோரன் சொல்வதைக் கேள், கொலை செய்தார் என்பதற்கு ஆதாரம் இல்லாமல் நீ தவறான முடிவை எடுக்காதே''

''உன்னோடு பேசினதே தப்புடா, இதோ பார் உன்னை...''

நான் சுதாரித்து எழுந்து கதவைத் திறந்து ஓட எத்தனித்தேன். ஆனால் அவன் விருப்பம்படி செய்யட்டும் என அப்படியே உட்கார்ந்து இருந்தேன். கோரன் சமையல் அறைக்குள் என நினைக்கிறேன், அங்கிருந்து ஒரு கத்தியுடன் வந்தான். எனக்கு வியர்க்க ஆரம்பித்தது.

''சொல்டா, நீ தலையிடுவாயா''

''கோரன், இனி அது உன்னோட விருப்பம், நான் விலகிக் கொள்கிறேன்''

''போலிஸ் கேட்டால் எதுவும் தகவல் சொல்வாயாடா''

''இல்லை சொல்லமாட்டேன்''

''அந்த சுபாவை நீ ஏமாற்றினால் இதே கதிதான் உனக்கும். அதென்னடா நீ நினைத்தபடி பெண் மாற்றுவது, முதலில் அவன், அடுத்து நீ. அதுக்கு ஒரு அடையாளம் உன்னில் போடவேண்டும்''

கோரன் பேசிக்கொண்டே என் அருகில் வந்தான். நான் அப்படியே அமர்ந்து இருந்தேன். என் அருகில் வந்ததும் அப்படியே எழுந்து அவனது வயிற்றில் ஓங்கி முட்டினேன் நிலைகுலைந்து கீழே விழுந்தான். எங்கிருந்து வந்த தைரியமோ அவனது உடலில் கைகளில் சரமாரியாக மிதித்தேன். அவன் கொஞ்சம் கூட கத்தவில்லை. இனி அங்கு இருப்பது ஆபத்து என கதவைத் திறந்து வேகமாக வெளியேறினேன். இனி கோரன் பரம எதிரிதான் என நினைக்கும்போது பயமாக இருந்தது.  சுபத்ராவிடம் விஷயத்தை சொல்லி நிலைமையை சரி செய்ய வேணும் என எண்ணிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

காயத்ரி தூங்காமல் காத்துக்கொண்டு இருந்தாள். எல்லா விபரங்களையும் சொல்லி முடித்தேன். அவள் பதறினாள்.

''முருகேசு, என்ன காரியம் பண்ணி இருக்க?''

''நீ கவலைப்படாதே, அவன் எப்படியும் அந்த ஆசிரியரைத் தேடித்தான் போவான் அதுக்குள்ளாற சுபா கிட்ட பேசுவோம்''

''அவதான் எல்லாம் தூண்டி விட்டு இருக்கா, அவகிட்ட எதுக்குப் பேச்சு''

''இல்லை காயூ, நீ தூங்கு''

காயத்ரியிடம் சொல்லிவிட்டு நான்  தூங்காமல் இருந்தேன். காயத்ரியின் அம்மாவின் உடல்நிலையை காரணம் காட்டித்தான் காயத்ரியின் தந்தை இன்னொரு பெண்ணுடன் ஓடிப்போனார். அதேபோல கோரன் சொன்னது போல இருந்தால் ஆசிரியர் எதற்கு கொலை பண்ண வேண்டும். யோசித்தவாரே உறங்கினேன்.

மறுநாள் சுபத்ராவைப் பார்க்கச் சென்றேன். சுபத்ரா எங்கேயோ வெளியே கிளம்பிக் கொண்டு இருந்தாள்.

''சுபா, முக்கியமான விஷயம் பேசணும், நீ கோரன் கிட்ட என்னை காதலிக்கலை, கதைதான் சொன்னேன்னு சொல்லிரு, அவன் என்னை கொல்லணும்னு  சொல்றான்''

''இன்னும் உன்னை கொல்லலையா?, இன்னுமா விட்டு வைச்சிருக்கான், நான் எதுக்குடா பொய் சொல்லணும், நீயும் நானும் காதலிச்சோம், என்ன மறைக்கப் பாக்கிறாய, ஒழுங்காப் போயிருடா''

''நீ பரிணாமம் பத்திதான் படிக்க வந்த, எதுக்கு இப்படி என்னை வம்பில கோர்த்துவிட்ட''

அவளிடம் நேற்று நடந்த விசயங்களை சொன்னதும் அதிர்ச்சி ஆனாள்.

''என்னடா சொல்ற''

''ஆமா சுபா, இதுதான் நடந்தது''

''இருடா''

அவளது செல்பேசியை எடுத்து யாரையோ அழைத்தாள்.

''கோரன், என்ன காரியம் பண்ண இருந்த, முருகேசு என்னோட பிரெண்ட் அவனுக்கு ஏதவாது  ஆச்சு உன்னை என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது. ஏன்டா  அறிவுகெட்டவனே அவனை என்ன பண்றதுனு  எனக்குத் தெரியும் உன் வேலை எதுவோ அதைமட்டும் பாரு''

பதில் கூட பேசாமல் அழைப்பைத் துண்டித்தாள். அவளது அலைபேசி மீண்டும் அழைத்தது.

''என்னடா, ஒழுங்கா இரு''

''-----''

''புரிஞ்சதுல நீ அந்த வாத்தியானை பழி வாங்கு என்னமும்  செய், என் பிரெண்ட் பக்கம் நீ தலை வைச்ச உன் தலை இருக்காது, வைடா போனை''

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவ்வுலகில் எனக்குத் தெரியாதது என்று நிறைய இருக்கிறது, அதில் மிகவும் முக்கியமான ஒன்று நான். சுபாவின் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது.

''நீ தைரியமா இரு, ஆனா நீ என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கிரனும், இல்லைன்னா கோரன் பண்ணவேண்டிய வேலையை நான் பண்ணுவேன்''

சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள்.

''எங்கடா உன் பொய் காதலி, நான் எது சொன்னாலும் சிரிப்பாளே''

''சுபா சீரியஸா பேசு''

''ஒண்ணுமே இல்லாத விஷயத்தை ஊதி  பெரிசாக்கி விட எனக்குத் தெரியும், எவ்வளவோ பெரிய விஷயத்தை ஒண்ணுமே இல்லாம ஆக்க என்னால முடியும்''

''சுபா, நல்லா படிச்சி வேலைக்குப் போகணும்னு இருக்கேன்''

''அப்படின்னா அவளை மறந்துரு''

''சுபா''

''டேய் இந்த உலகத்தில உயிரற்றதில் இருந்து உயிர் உருவாகியதா எந்த வரலாறும் இல்லை. அதனால நான் உன்னோட உயிர். நீ என்னோட உயிர்''

சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டாள். பிறரது உணர்வுகளை மதிக்காதவர்கள் சைக்கோ என குறிப்பிடப்பட்டு இருக்கிறது . சைக்கோ! நானா? அவளா?

(தொடரும்)


Monday 28 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 24


பகுதி 23 

கோரன் ஆசிரியர் அவனது தாய்க்கு பெரும் கொடுமையை இழைத்ததாக தனது கதையை சொல்லி முடித்து இருந்தான். அவன் மிகவும் சுருக்கமாகவே சொன்னவன் என்னை நோக்கி முறைத்தவண்ணம் இருந்தான். அவனை நோக்கி நான் மட்டுமே பேசினேன்.

''நீ சொல்வது எல்லாம் பொய்''

''உன்னை கொலை செய்தால் அந்த உண்மை தெரியும்''

கோரனின் ஆவேசம் எனக்கு ஒன்றும் இப்போது புதிதாக தெரியவில்லை. பிறரது பிடியில் இருந்து விலக்கிக் கொள்ள போராடினான். அதற்குள் காவல் வண்டி கல்லூரி வளாகத்தில் நுழைந்தது. அதைக் கண்ட கோரன் அங்கிருந்து தப்பித்து ஓடினான். அவனை சில மாணவர்கள் விரட்டிக்கொண்டு சென்றவர்கள் எதற்கு நமக்கு வம்பு எனத் திரும்பினார்கள். காவல் அதிகாரிகள் வேறொரு விசயத்திற்காக வந்தார்கள் என்பது எங்களுக்குப் பின்னரே தெரிந்தது.

கோரன் சைக்கோத்தனம் கொண்டவன் என முடிவுக்கு வரவேண்டி இருந்தது. நான் வாசித்த புத்தகத்தில் இருந்து சில வரிகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தன.

சைக்கோக்கள் என்போர் எவரென அடையாளம் தெரியாமல் இந்த உலகம் அல்லாடிக் கொண்டு இருந்தபோது எல்லோரும் ஒருவகையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களே எனும் முடிவுக்கு வருவது பொருத்தம் ஆகாது.

தார்மீக உணர்வுகள் அற்றுப் போனவர்களை சைக்கோ என்றே அழைக்கின்றனர். இவர்கள் எப்படி உருவாகிறார்கள்? இந்த சைக்கோக்கள் இருவகைப்படுகின்றனர். ஒன்று மரபணு ரீதியாக உருவாகும் வகையினர், மற்றொன்று சூழ்நிலை காரணமாக உருவாகும் வகையினர். இவர்களால் சமூகத்திற்கு பெரும் அச்சம் உண்டாக்கப்படுகிறது. 

பிறருடைய உணர்வுகளை மதிக்காதவர்கள் சைக்கோக்கள். இந்த வகையினரின் மூளையில் பிறரின் உணர்வுகளை மதிக்கக்கூடிய இணைப்புகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது. அப்படியெனில் ஆசிரியரை ஏதேனும் ஒரு காரணம் காட்டி கொல்ல  வேண்டும் என உள்ளத்தில் இத்தகைய எண்ணங்கள் எப்படி கோரனுக்கு வந்தது. அவனது விசயத்தில் தலையிட்டேன் என்பதற்காக என்னையும் கொலை பண்ண வேண்டும் என கோரன் இருப்பது எப்படி என யோசித்தேன்.

''என்ன யோசனை?''

''காயூ, கோரன் பத்தி என்ன நினைக்கிறே''

''நீ அவன் விசயத்தில தலையிட்டு இருக்கக் கூடாது''

''என்ன அப்படி சொல்ற''

''நிச்சயம் அவன் உன்னை கொல்ல  மறுபடியும் முயற்சிப்பான்''

''இல்லை என்னை இனி தேடி வரமாட்டான், ஆனா அவன் சொன்ன கதை பொய் அப்படின்னு எனக்குத் தோணுது''

''உண்மைன்னு இருந்தா?''

''காயூ''

''ஆமா முருகேசா, அவன் சொன்னபோது இருந்த ஆவேசம், ஆத்திரம் எனக்கு என்னமோ உண்மைன்னு தோணுது''

''இல்லை காயூ, அவன் ஒரு கதையை உருவாக்கி இருக்கான்''

''உருவாக்கப்பட்ட கதை இல்லை''

மாலை நாங்கள் இருவரும் வீட்டிற்கு நடந்து சென்றபோது சட்டென ஒரு மறைவில் இருந்து எங்கள் முன்னால் கோரன் வந்து நின்றான்.

''நான் சொன்னது பொய்னு சொன்னல, என்னோட வாடா வந்து பாரு''

''கோரன் உன் படிப்பு எல்லாம் யோசிச்சிப் பாரு''

''டேய், எனக்கு படிப்பு எல்லாம் தேவை இல்லை, நான் சொன்னது உண்மைடா, என்னோட வாடா''

அவனது வார்த்தைகளில் கோபமும் ஆத்திரமும் கொப்பளித்தது. காயத்ரி சற்று பயப்பட ஆரம்பித்தாள்.

''என்னோட வந்தா உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன், நீ வரலை, உன்னை கொலை பண்ண தயங்கமாட்டேன்டா''

''நடடா வரேன்''

''அவளை வீட்டுக்குப் போகச் சொல்லுடா''

''அவளும் என்னோட வருவா''

''நீ வீட்டுக்குப் போடி''

அவனது வார்த்தைகள் எனக்கு எரிச்சலைத் தந்தன. காயத்ரியை வீட்டுக்குப் போகச் சொன்னேன். ஆனால் அவளோ அவனை நம்பிப் போகாதே என சொன்னாள். அதற்குள் சிலர் கூடி விட்டார்கள்.

''வாடா''

''என்ன தம்பி தகராறு?''

''அவனை என்னோட வரச்சொல்லு''

''கூப்பிட்டா, போப்பா''

நானும் காய்தரியும் வெகு வேகமாக அங்கிருந்து நகர்ந்தோம். கோரன் எங்களை பின் தொடர்ந்தான்.

''வந்துருடா''

''நாளைக்கு வரேன் கோரன், இன்னைக்கு வீட்டுக்குப் போறேன்''

''இப்போவே வாடா''

''இல்லை கோரன்''

பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குள் நுழைந்தோம். கோரன் வெளியில் நின்று கொண்டே இருந்தவன் அங்கிருந்து சென்றான்.

''போலீசில் சொல்லலாமா?''

''வேணாம் காயூ''

அரைமணி நேரம் கழித்து வேறு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். வீட்டில் எல்லா விசயங்களையும் அம்மாவிடம் ஒப்பித்துக் கொண்டு இருந்தாள் காயத்ரி. எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தவர்

''உனக்கு இது எல்லாம் தேவையாப்பா?''

''நான் ஒன்னும் செய்யலைம்மா''

''அப்புறம் எதுக்கு அவன் உன்னை கொல்ல வரணும், கூட வா வானு கூப்பிடனும்''

''தெரியலைம்மா''

கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றோம். எல்லோரும் உறங்கியபின்னர் நான் மட்டும் எழுந்து கோரன் வீட்டுக்குச் செல்ல நினைத்து காயத்ரியிடம் சொன்னேன்.

''நீ போகவே கூடாது''

''சொன்னால் கேளு காயூ, இதில் ஏதோ இருக்கு. உதவி பண்ணு''

''காயத்ரியை சம்மதிக்க வைத்து கோரன் வீட்டிற்கு தனியாக சென்றேன். அவனது வீட்டில் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. சன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப் பார்த்தேன். கோரன் மட்டும் உறங்காமல் அறையில் முன்னும் பின்னும் நடந்து கொண்டு இருந்தான். வாசற்கதவைத் தட்டினேன்.

''கோரன்''

கதவைத் திறந்தான்.

''உள்ளே வாடா''

அவனது குரலில் ஒன்றும் அத்தனை ஆவேசம் இல்லை. வீட்டிற்குள் சென்றேன். சட்டென கதவுகளை சாத்தி தாழிட்டான்.

''கோரன்''

''உட்காருடா''

''எதுக்கு''

''அப்படியே உட்காருடா''

உட்கார்ந்தேன்.

(தொடரும்)




Friday 5 December 2014

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 23

பகுதி 22  இங்கே

அன்று இரவும் கோரனைத்  தேடி சென்றேன். அவனும் அவனது அப்பாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

''இனி அவனை ஒன்னும் பண்ண வேண்டாம், ஊரை விட்டே ஓடிட்டான்ல அது போதும்''

''ம்ம்''

''நாளைக்கு காலேஜுக்குப் போ''

''முருகேசு இருக்கான்''

''அவன் கிடக்கான், அவன் கிட்ட எதுவும் சொல்லிக்கிற வேணாம்''

''ம்ம்''

இனி அங்கே நிற்பதில்லை என வீடு நோக்கி நடந்தேன். கோரன் எதுக்கு ஆசிரியரை கொல்ல  முயற்சிக்க வேண்டும், ஆசிரியர் எதற்கு ஊரை விட்டே ஓட வேண்டும் எனும் கேள்விகளுடன் வீடு சேர்ந்தேன்.

''காயூ, வாத்தியாருக்கும் கோரன் குடும்பத்திற்கும் ஏதோ  தகராறு இருக்கு போல''

''அதுக்கு என்ன இப்போ, நீ கோரனை  பத்தி பேசறது நிறுத்து, நான் படிக்கணும்''

''படி, உன்னை யாரு பிடிச்சிட்டு இருக்கா''

''ஏன்  பிடிச்சித்தான் பாரேன்''

''கத்துவ, அதானே''

''பிடிக்கிறதுக்கு எல்லாம் யாரும் கத்தமாட்டாங்க''

''உன் அக்காவைப் பார்க்க போலாமா''

''எதுக்கு இப்ப பேச்சை மாத்துற, உனக்கு அவளைப் பார்க்க ஆசை. அப்படித்தானே''

''அவளை எதுக்குப் பார்க்கணும், எனக்கு உன்னைத்தவிர வேறு யாரையும் பார்க்க விருப்பம் இல்லை''

''சும்மா சொல்லாதே''

''நிசமாவே இல்லை, உன் அக்காவைப் பார்த்துட்டு வரலாம்னு தான் சொன்னேன்''

''சரி போலாம்''

காயத்ரிக்கு கோரன் பற்றிய பேச்சு பிடிக்காமலே இருந்தது. அடுத்த நாள் கல்லூரிக்குப் போனோம். கோரன் வந்து இருந்தான்.

''கோரன் உன்கிட்ட பேசணும்''

''தேவை இல்லை''

விறுவிறுவென கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்குச்  சென்றான். சிறிது நேரம் அங்கிருந்தவன் வெளியில் வந்தான்.

''கோரன் நில்லு''

''உயிரோட நீ இருக்கணுமா  வேணாமா?''

''என்ன ஆச்சு உனக்கு''

''என்னோட விசயத்தில தலையிடாதே''

''நீ எதுக்கு இப்படி நடந்துக்கிற''

கத்தியை எடுத்துக் காட்டினான். நான் மிரண்டு போனேன்.

''ஒரே சொருகு, குலை வெளியே வந்துரும்''

நான் அங்கிருந்து நகன்றேன். அவன் கல்லூரியில் இருந்து வெளியே போனான். நான் கல்லூரி முதல்வர் அலுவலகம் சென்றேன்.

''கோரன் எதுக்கு வந்தான்''

'' வேலையை விட்டுப் போன பொரபுசர் பத்தி விசாரிச்சான், தெரியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன்''

அவரிடம் மேற்கொண்டு கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என சொன்னார்.

எனக்கு வகுப்பில் அவன் அருகில் சில நாட்களாக இல்லாதது ஒரு மாதிரி இன்றும் இருந்தது. அவன் இருந்தால் ஏதேனும் சொல்லிக்கொண்டு இருப்பான்.

திடீரென கோரன் வகுப்பில் நுழைந்தான்.

''முருகேசு, வெளியே வாடா''

வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்த ஆசிரியர் அவனை நோக்கி நீ உள்ள வர வேண்டியது தானே என்றார். உன் வேலையை மட்டும் பாரு என அவரை நோக்கி கத்தியவன் என்னை நோக்கி வாடா என கத்தினான். நான் பேசாமல் அமர்ந்து இருந்தேன்.

வகுப்பில் இருந்த சில மாணவர்கள் எழுந்து வேகமாக அவனை மடக்கிப் பிடித்து அவன் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்தார்கள். அந்த கத்தியை வாங்கிய சோபன் கோரனை  நோக்கி இதுதான் நீ படிக்கிற லட்சணமா எனக் கேட்டான். ஆமாம், ஒரு வாத்தியார் ஒழுங்கா இல்லைன்னா அப்படித்தான் ஆகும், எனக்கு என்ன நடந்தது தெரியுமா?

மொத்த வகுப்பும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியது. கோரன் தன கதையை சொல்ல ஆரம்பித்தான்

(தொடரும்)


Tuesday 21 January 2014

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 22

அப்படியே வீட்டுக்கு வந்து வெளியில் பூட்டிய கதவை மெதுவாக திறந்து உள்ளே சென்றேன்.

''எங்க முருகேசு போய்ட்டு வர''

அப்பாவின் குரல் இருளில் வந்தது கண்டு அச்சம் கொண்டேன்.

''சொல்லு முருகேசு''

மின்விளக்கு போட்டுவிட்டு நடந்த விஷயத்தை அப்பாவிடம் சொன்னதும் அப்பா திடுக்கிட்டார். அம்மாவிடம் சொல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்து அனுப்பினார். எனது அறைக்கு சென்று தூங்க முயற்சித்தேன்.சுபா, கோரன், அவனது அப்பா, ஆசிரியர், ஆசிரியரின் மனைவி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே தலை சுற்றியது. நகர் வாழ்க்கையில் எவர் எவர் எப்படி என்பது தெரிந்து கொள்ள இயலாத வாழ்க்கை சூழல். கோரன் இனி நினைவு இழந்தவன் போல நடிப்பான். ஆசிரியரிடம் விபரம் சொல்ல வேண்டும் என தூங்கிப் போனேன்.

''முருகேசு, எழுந்திருப்பா''

வழக்கம் போல அம்மா எழுப்பிவிட்டார்கள்.

''காயத்ரி உனக்கு ராத்திரி கோரன்கிட்ட இருந்து கொலை பத்திய போன் வந்துச்சுன்னு சொன்னப்பா, என்ன ஆச்சு உங்க அப்பாகிட்ட சொன்னா சும்மா பையனுங்க விளையாடி இருப்பாங்கனு சொல்றார். காயத்ரி அப்படி இல்லைன்னு சொல்றா''

''அம்மா, இன்னும் நான் எந்திரிக்கலை''

''கொலைன்னு சொன்னதும் பயந்து வரேன், நீ எந்திரிக்கலைனு சொல்ற, முகம் அலம்பிட்டு வந்து சொல்லிட்டு அப்புறம் கிளம்பு, இல்லை நீ காலேஜுக்கு போக வேணாம்.''

போர்வையை தூக்கிபோட்டு விட்டு எழுந்தேன். கசங்கிய முகம்தனை கைகளால் மேலும் கீழும் அழுத்தி தேய்த்துவிட்டு சோம்பல் முறித்து கொண்டு சென்றேன்.

''நில்லு முருகேஷா''

''என்னம்மா''

''என்னடா ரத்த காயம், அங்க அங்க ரத்தம்உறைஞ்சிருக்கு, என்னங்க இன வாங்க''

''கொசு கடிச்சி தொலைச்சிருக்கும், இதுக்கு எதுக்கும்மா அப்பாவை கூப்பிடற''

வேகமாக பாத்ரூமில் நுழைந்தேன். இந்த காயத்ரியை ஒரு அறைவிட்டால் சரியாகும் என்றே நினைத்தேன். இந்த அம்மாக்கள் இப்படித்தான். எப்படி ரத்த காயம் எல்லாம் கண்ணில் பட்டது. நன்றாக குளித்துவிட்டு வந்தேன். அம்மா, காயத்ரி, அப்பா நின்று இருந்தார்கள்.

''காயத்தை காட்டுடா''

''அம்மா, என்னை துணி மாத்த விடுமா, இதுல இந்த பொண்ணு வேற நிக்கிறா''

காயத்ரியின் முகத்தில் வெட்கம் வெட்டி சென்றது. இந்த பாரு என கையை காட்டிவிட்டு நடந்தேன்.

''கொசு கடி  தான்''

தயாராகி கீழே வந்தபோது காயத்ரி இன்னும் வெட்கத்தில் இருந்தாள். கல்லூரிக்கு கிளம்பினோம். செல்லும் வழியில் எல்லா விசயங்களையும் காயத்ரியிடம் சொன்னதும் மயக்கம் போடாத குறையாக போலிசுக்கு வா போவோம் என்றாள் . நான் ஆசிரியர் வீடு நோக்கி நடந்தேன்.

''என்ன முருகேசு, இங்கிட்டு நடக்கிற''

''சாரை பாத்துட்டு போவோம்'

''போலீசுல சொல்வோம்''

எதுவும் பேசாமல் நடந்தேன். ஆசிரியர் வீட்டினை அடைந்தோம்.

''என்ன இந்த பக்கம், காலேஜுக்கு போகலை''

''ஒரு முக்கியமான விஷயம் பேசணும்''

''உள்ளே வாங்க''

ஆசிரியரிடம் விபரம் சொல்ல சொல்ல அவரது முகம் மாறியது. வியர்வைத் துளிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கின. சமையல் அறைக்குள் எழுந்து சென்றார்.தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்.

''ரொம்ப வெட்கையா இருக்கு''

''காத்தாடி ஓடுதே''

''அது பழசு''

''உங்க மனைவிக்கும், கோரன் அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்''

''அது எல்லாம் உனக்கு எதுக்கு''

''சார், சொல்லுங்க, நாங்க உதவி பண்றோம்''

நிறையவே யோசித்தார்.

''அது வந்து...''

''என்ன சார்''

''நேரமாகுது, கிளம்புங்க''

''முருகேசு, வா கிளம்பலாம்''

வேறு வழியின்றி கிளம்பினோம். அன்று கோரன் கல்லூரிக்கு வரவில்லை. ஆசிரியரும் வரவில்லை. ஆசிரியர் வீடு சென்று பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது.

கோரன் வீட்டிற்கு செல்ல நினைத்த என்னை காயத்ரி தடுத்தாள். அன்று இரவு எட்டு மணிக்கு கோரன் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டு நண்பனை பார்த்து வருவதாக கிளம்பினேன்.

''கோரன் வீட்டுக்கா''

''காயூ, நீ பேசாம இரு, அம்மா தாண்டவம் ஆடுவாங்க''

கோரன் வீட்டினை அடைந்தேன். கோரன் வீட்டில் கோரன், அவனது அப்பா, அம்மா  இருந்தார்கள் . கோரன் ஒரு பையை எடுத்து கிளம்பினான். திடுக்கிட்டேன். அவனை பின் தொடர்ந்தேன். ஆசிரியர் வீட்டினை அடைந்தான். கதவு பூட்டப்பட்டு இருந்தது கண்டு ஆத்திரம் கொண்டவனாய் கத்தினான். அந்த நேரம் பார்த்து ஒரு காவல் அதிகாரி வந்தார்.

''என்னடா சத்தம் போடுற''

''பூச்சி கடிச்சது சார்''

''போய் டாக்டரை பாரு''

ஆசிரியர் வீட்டினை சுற்றி பார்த்துவிட்டு திரும்பினான்.

''கோரன்''

என்னை பார்த்தவன் திடுக்கிட்டான்.

''எதுக்கு இவரை தேடி வந்த''

''உனக்கு தேவை இல்லாத விஷயம்'

''கொல்ல வந்தியா''

''ஆமா''

''ஏன்''

''முருகேசு நீ தலையிடாத''

வேகமாக ஓடி மறைந்தான். அடுத்த நாள் ஆசிரியர் வீட்டிற்கு சென்றேன். வீடு விற்கப்பட்டு விட்டதாக சொன்னார்கள். கல்லூரி முதல்வரிடம் சென்று ஆசிரியர் குறித்து கேட்டேன். வேலையை நேற்றே விட்டுவிட்டதாக சொன்னார். கோரன் அன்றும் கல்லூரிக்கு வரவில்லை.

(தொடரும்)





 

Monday 25 November 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 21

காயத்ரி தூங்க சென்று இருந்தாள். அந்த இரவில் கோரனிடம் இருந்து போன் வரும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

''இன்னைக்கு அந்த வாத்தியானை போட்டு தள்ள முடிவு பண்ணிட்டேன்''

''அதை ஏன் என்கிட்டே சொல்ற, சொல்றவன் செய்யமாட்டான், செய்றவன் சொல்லமாட்டான்''

''உன் பேரை எழுதி வைச்சிட்டு போக போறேன், உனக்கு தான் இந்த வாத்தியானை பிடிக்காதே''

''எழுதி வைச்சிட்டு போ, கையெழுத்து என்னை மாதிரியா இருக்காது''

தைரியமாக பேசினாலும் எனக்குள் இனம் புரியாத பயம் வந்து தொற்றி கொண்டது. பேரைப் போலவே கோரபுத்தி உடையவனாக இருக்கிறானே, என்னை எதற்கு இந்த வம்பில் மாட்டிவிட வேண்டும்.

''போய் உன்னோட பையில இந்த வாத்தியானோட பாட நோட்டு இருக்கானு பாரு, அதுதான் தடயம்''

மறுமுனையில் போன் துண்டிக்கப்பட்டது. திரும்ப அழைத்து பார்த்தேன், அதற்குள்ளாகவே இணைப்பு முற்றிலும் இல்லாமல் போனது. எனக்கு வியர்க்க ஆரம்பித்து இருந்தது.

வேகவேகமாக பையில் நோட்டினை தேடினேன். அவன் சொன்னது போலவே அந்த நோட்டினை காணவில்லை. நெஞ்சு படபடவென அடித்து கொண்டு இருந்தது. மயங்கி விழுந்துவிடுவது போன்ற உணர்வு. காயத்ரியின் அறையினை மெல்ல தட்டினேன். கதவினை மெதுவாக திறந்து அறையில் விளக்குதனை போட்டேன். அவள் அழகாக தூங்கி கொண்டு இருந்தாள்.

''காயூ''

''ம்ம்''

''எழுந்திரு காயூ, ஒரு பிரச்சினை''

சட்டென விழித்தாள். அதற்குள்ளா இப்படி உறங்கிப் போனாள். கனவு என எதுவுமே காண மாட்டாளா?

''என்ன முருகேசு''

படபடப்புடன் விசயத்தை சொல்லி முடித்தேன்.

''சரி, காலையில பாத்துக்கிரலாம்''

''அவன் சாரை கொல்லப்போறான், நீ என்ன இவ்வள அசால்ட்டா சொல்ற''

''அவன் கொல்லமாட்டான், வேணும்னா அவர்கிட்ட இவன் சாவான்''

''காயூ''

''கவலைப்படாம, நீ தூங்கு முருகேசு''

''எப்படி தூங்குறது''

''இங்க தூங்கு, நான் உன்னோட ரூமில தூங்குறேன்''

''எனக்கு என்னோட ரூமில தூங்க தெரியாதா, அவன் திருப்பி போன் பண்ணுவானோ''

''என்ன திடீர் பயம் உனக்கு''

''கொலையை தடுக்கனும், பழி பத்தி பயமில்லை''

''சொன்னா கேளு, எதுவும் நடக்காது''

காயத்ரியின் அறையை விட்டு வெளியேறினேன். உடைகள் மாற்றினேன். வீட்டில் எவரிடமும் சொல்லாமல் கதவை வெளியில் பூட்டிவிட்டு வெளியேறினேன். அந்த நடு இரவில் ஆசிரியரின் வீட்டினை அடைந்தபோது மணி சரியாக 11.00.

ஆசிரியர் வீட்டின் வாசலில் கோரன் நின்று கொண்டு இருந்தான்.

''நீ இங்கு வருவாய் என எனக்கு தெரியும்''

''எதற்கு இப்படி ஒரு விபரீத விளையாட்டு''

''நான் வகுப்பில் சொன்னது மறந்து போனயா''

''அதுதான் அவர் சொன்னாரே, அது ஒரு தற்கொலை''

''அவர் சொன்னா அதை நீ நம்பிருவியா''

''அதுக்கு எதுக்கு என்னை இதுல வம்புக்கு இழுக்கிற''

''சுபத்ரா''

''யார் சுபத்ரா''

''சுபத்ராவை தெரியாது?, உன்னோட உண்மை காதலி''

''கோரன், வேண்டாம்''

''என்னடா வேண்டாம், சின்ன வயசுல இருந்து அவ உன்னை காதலிப்பா, நீ இன்னொருத்திய காதலிப்ப, அதை வந்து உன்கிட்ட சொன்னா, நீ அவளை உதாசீனப்படுத்துவ, இதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா, இப்பவும் சொல்றேன், நீ சுபத்ராவை ஏத்துக்கோ, காயத்ரியை எனக்கு விட்டுக் கொடுத்துரு, இல்லைன்னா நீ கொலை கேசுல உள்ள போக வேண்டி இருக்கும்''

சுபத்ராவை இவனுக்கு எப்படி தெரியும்? என்ற யோசனையில் மனம் சென்றது. அதோடு எனது காயத்ரி மீது இவனுக்கு என்ன ஆசை.

''கோரன், சுபாவை எப்படி உனக்கு தெரியும்''

''உன்கிட்ட கதை பேச நான் என்ன சினிமா வில்லன்னு நினைச்சியா, உன் பக்கத்தில உட்கார்ந்து இருந்தா நான் என்ன உன்னோட உயிர் நண்பன்னு கனவு கண்டியா''

இனிமேலும் தாமதிக்க கூடாது என அவன் எதிர்பாராதபோது அவனது மூக்கில் இரண்டு மூன்று என எண்ணிக்கொண்டே குத்துகள் விட்டேன். அந்த குத்துகளின் வேகத்தில் அவன் நிலைகுலைந்து போனான். அவன் வைத்து இருந்த பையில் உள்ள நோட்டினை எடுத்து கொண்டேன். படுபாவி, கத்திகள் இரண்டு வைத்து இருந்தான்.

பின்னந்தலையில் ஓங்கி ஒரு அடி வைத்தேன். மயக்கமாகி இருக்க வேண்டும். அப்படியே படுத்துவிட்டான். அவனை தரையில் இழுத்துக் கொண்டு ஆசிரியரின் வீட்டினை தட்டினேன். சிறிது நேரத்தில் கதவு திறந்தது.

''என்ன இந்த நேரத்தில''

''சார், இவன் உங்களை கொல்ல வந்தான்''

''யாரு''

''கோரன்''

மயங்கி கிடந்த கோரனை ஆசிரியர் பார்த்தார். வீட்டினுள் தூக்கி சென்றோம். மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருந்தது. மூக்கினை மேல்வாக்கில் உயர்த்தி பிடித்தவர், தண்ணீரால் முகம் தனை துடைத்தார். விழித்து பார்த்தவன்

''நீங்க யாரு?''

நான் திடுக்கிட்டேன்.

''டேய் நான் முருகேசுடா, இவர் நம்ம சார்டா''

அவன் சுற்றும் முற்றும் பார்த்தது கண்டு எனக்கு மிகவும் பதட்டமானது.

''இவனோட வீடு தெரியுமா?''

''தெரியும் சார்''

''சரி வா, இவனை அவங்க வீட்டுல விட்டுட்டு வருவோம்''

''எப்படி சார், இந்த நிலைமையில''

''சொல்றதை செய்''

கோரனை எனது வீட்டிற்கு அழைத்து வர திட்டமிட்டேன்.

''சார், நான் அவங்க வீட்டுல விட்டுட்டு போறேன்''

''அவங்க அப்பாவை பார்த்து நான் சொல்லிட்டு வரனும்''

இனி எதுவும் செய்ய முடியாது என புரிந்து கொண்டு கோரன் வீட்டினை அடைந்தோம். அவருடைய காரில் தான வந்தோம். வரும் வழியில் கோரன் எங்க போறோம், நீங்க யாரு என்றே கேட்டு கொண்டிருந்தான். நடுத்தர வயது உடையவர் வீட்டு கதவினை திறந்தார்.

''உங்க பையன் என்கிட்டே படிப்பு சம்பந்தமா சந்தேகம் கேட்க வந்தவன் கிளம்பி போறப்ப கீழே தவறி விழுந்துட்டான், இப்போ தன் நினைவு இல்லை. அதான் விட்டுட்டு போக வந்தேன்''

''சரி, போ''

''நீங்க யாரு, இது யார் வீடு''

''கோரன், இது உன்னோட வீடு''

''முருகேசு, கிளம்பு அவங்க அப்பா பாத்துக்கிருவார், வா உன்னை ட்ராப் பண்ணிட்டு போறேன்''

''இல்லை சார், நான் போய்கிறேன்''

கோரன் வீட்டுக்குள் சென்றதை பார்த்து கொண்டே இருந்தேன். எனக்குள் அளவில்லா பயம் வந்து சேர்ந்தது. கதவு சாத்தப்பட்டது. வீட்டின் சன்னல் ஓரம் எனது காதை வைத்தேன்.

''போன காரியம் என்னடா ஆச்சு''

''நம்ம சுபத்ரா சொதப்ப வைச்சிட்டாப்பா''

''அவகிட்ட எதுக்குடா இந்த விசயத்தை சொன்ன''

''நேத்து அவளை எதேச்சையா பார்த்தேன், அப்போதான் இந்த முருகேசு பயலை பத்தி எல்லாம் சொன்னா. அதனால இவனை இதுல கோர்த்து விடலாம்னு திட்டம் போட்டேன். அவன் என்னை அடிச்சி மயக்கமாக்கிட்டான்''

''அந்த வாத்தியானை பதிமூணாவது நாள் காரியம் ஆக முன்னாடி முடிக்கனும்டா. இந்த முருகேசு கருகேசு எல்லாம் இதுல சேர்க்காதே''

''நான் பாத்துக்கிறேன்பா''

எனக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

(தொடரும்) 

Friday 20 September 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 20


கோரனை வகுப்புக்கு வெளியே போக சொன்னார் ஆசிரியர். ''I never killed her, she committed suicide and police recorded that, you don't need to argue on that as it is my personal issue and I need to continue the subject''

''Carry on'' கோரன் வகுப்பை விட்டு வெளியே சென்றான். நிலைமையை சரி செய்ய நான் எழுந்தேன்.

''சார், எதுக்கு ஆண், பெண் என இருபாலர் இருக்கனும், முதலில் வந்தது ஆணா, பெண்ணா?. அல்லது இரண்டுமே  ஒரே நேரத்தில் உருவானதா? இந்த இரண்டுமே இனப்பெருக்கம் வழியில் இல்லாம உருவாகி இருந்தா, அப்படியேதானே பெருகி இருக்கனும், எதுக்கு ஆணின் மரபணுக்கள், பெண்ணின் மரபணுக்களோட இணையனும், என்ன காரணம்'' என்று கேட்டு அமர்ந்துவிட்டேன்.

''We absolutely don't know anything about our ancestors, how we came to this world or how we are developed over the million years, but we think we are very good at coming to conclusion based on fossil records, postulating theories and ideas in one way and put all these things on God in another way. We live our imaginary world very lively as Koran thought that I have killed my wife whereas the truth was she committed suicide. Now I can say that she has committed suicide and police do have evidence on that but certain people like Koran would believe that I have killed my wife. How could I change him?''

அதற்குப் பின்னர் நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. பாடம் தாட் ப்ராசெஸ் பற்றியே சுற்றிக் கொண்டு இருந்தது. அப்போதுதான் யோசித்தேன், சுபத்ரா பரிணாமத்தினை பற்றி படித்துக் கொண்டு இருக்கிறேன் என்றுதானே சொன்னாள், அவளிடம் சென்று கேட்டால் என்ன என தோணியது. அன்றைய நாள் முழுவதும் எனது கேள்வியில் மனம் அலைபாய்ந்தது. மதிய உணவு சமயத்தில் கூட காயத்ரி என்ன முட்டாள்தனமான கேள்வியை கேட்ட நீ என்றே கோபித்துக் கொண்டாள்.

மாலை வேளையில் காயத்ரியிடம் பேசினேன்.

''காயூ, நான் சுபாவை பாக்கப்போறேன்,வரியா?''

''என்ன விசயம் திடீர்னு?''

''ஆணா, பெண்ணா? அப்படிங்கிற என் கேள்விக்கு பதில் தெரியனும்?''

''அட முருகேசு, ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஆணும், பெண்ணும் இயற்கை அமைத்துக் கொண்டது''

''இனப்பெருக்கம் இரண்டு வகையில நடைபெறும், ஒன்னு கலவு முறை, மத்தது கலவு இல்லாத முறை , என்ன காரணத்திற்கு கலவு முறை உருவாச்சு, காரணம் இருக்கும் இல்லையா?''

''தெரிஞ்சு என்ன செய்யப் போற''

''இப்ப எல்லாம் ஆண் இல்லாம பெண்கள் பிள்ளை பெத்துக்க முடியும்னு சொல்லிட்டு இருக்காங்க, படிச்சி இருக்கியா''

''ஆஸ்திரேலியாவுல நடத்தின எலி பரிசோதனைய பத்தி பேசறியா''

''நீயும் அதைப் படிச்சியா''

''முருகேசு, மனசை போட்டு குழப்பிக்காத, அது எலி, நாம மனுசுங்க''

''எதுக்கும் சுபாவை பார்த்துட்டு வரலாம்''

''சரி''

எனக்கு குரோமோசோம்கள் பற்றியெல்லாம் மனம் ஓடிக் கொண்டு இருந்தது. எக்ஸ் எக்ஸ் என்றால் பெண், எக்ஸ் ஒய் என்றால் ஆண். இந்த குரோமோசோம்கள் ஒரு உயிரின் ஆண், பெண் தன்மையை நிரூபிக்கின்றன. ஒரு குழந்தை உருவாகும்போது அந்த குழந்தை பெண்ணாகவே பல வாரங்கள் இருக்கும் என்றும், பின்னரே இந்த குரோமோசோம்கள் உதவியால் இனப்பெருக்க உறுப்புகள் தோன்றுவதாகவும் படித்து இருக்கிறேன். என்ன ஆச்சர்யமான மாற்றம் இது.

''என்ன யோசனை முருகேசு''

''காயூ, எல்லா குழந்தையும் உருவாகிறப்ப பெண் தான் தெரியுமா''

''இல்லை முருகேசு, எல்லா குழந்தையும் உருவாகும்போது அது ஒரு எம்ப்ரியோ. அந்த எம்ப்ரியோவில  உள்ள செல்கள் டிப்பெரென்சியெட் ஆகுறப்ப, இட் டேக்ஸ் தா பார்ம், இட் டேக்ஸ் வீக்ஸ்''

''என்ன இங்கிலீஸ் பேசற''

''ஏன் உனக்கு இங்கிலீஸ் புரியாதா, நீயும் தானே சில நேரத்தில இங்கிலீஸ் பேசற''

''நான் தமிழுல கேட்டப்ப, சேகரன் சாரு கூட இங்கிலீஸ்ல தான் பதில் சொல்றார்''

''நீ பேசாம தமிழ் இலக்கியம் படிக்க போய் இருந்து இருக்கலாம்''

''காயூ, அர்த்தநாரீஸ்வரர் பத்தி தெரியும்ல உனக்கு, ஆண் பாதி, பெண் பாதி''

''அதுக்கு என்ன இப்போ''

''இந்த பூமியில ஆணும் பெண்ணும் இணைஞ்சு தோன்றி இருக்கனும், அப்புறம் தான் பிரிஞ்சி இருந்து இருக்கனும், அப்புறம் இனப்பெருக்கம் மூலம் ஆணும் பெண்ணும் உருவாகி இருக்கனும்''

'வாட் நான்சென்ஸ் முருகேசு''

''எதுக்கு கோபப்படுற, நல்லா யோசிச்சி பாரு''

அர்த்தநாரீஸ்வரர் எனது கேள்விக்கு பதில் சொல்லிவிட்டதை போன்றே இருந்தது. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இந்த மூலக்கூறுகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து இருந்து உயிரினம் உருவாகும்போது கலவு முறையில்லாதபோது நமது உடலில் உள்ள செல்கள் எப்படி பெருகி உருவம் உருவாகுதோ அதைப் போலவே இப்படி சேர்ந்து உருவாகி இருக்கனும்.

''ஒரு ரொமான்டிக்கா பேச மாட்டியா, எப்ப பாரு பாடம், பாடம்''

''அன்பே, உனது விழிகளுக்குள் எனது பார்வை மாட்டிக் கொண்டது, எனது பார்வை பறிபோய் விடாதபடி திருப்பி தந்துவிடு''

காயத்ரி அப்படியே நின்று என்னை பார்த்து சிரித்தாள்.

''எந்த படம் முருகேசு''

''நான் எழுதினது காயூ''

''நீ எழுதினா, மைட்டோகாண்ட்ரியா, நீ தான் என்னோட ஆண்ட்ரியா அப்படின்னு எழுதுவ''

''என்ன சொன்ன''

''மைட்டோகாண்ட்ரியா, நீ தான் என்னோட ஆண்ட்ரியா''

''காயூ, மைட்டோகாண்ட்ரியா ஈவ் பத்தி படிச்சி இருக்கியா''

''ஆடம், ஈவும் தெரியும், மைட்டோகாண்டிரியா ஈவும் தெரியும்''

''எழுபது ஆயிரம் வருசம் முன்னால இந்த மைட்டோகாண்ட்ரியா ஈவ் தான் இப்ப இருக்கிற மனித குலத்தோட முன்னோடி. பெரிய எரிமலை வெடிப்புனால மொத்த மண்டிஹா சமூகம் அழிஞ்சி போனப்ப தப்பிச்ச சில பெண்கள் தான் இந்த மனித குலம் தழைக்க உதவினாங்க''

''ஆமா முருகேசு, என்ன என்னமோ பேசற, எதுக்கு சுபாவை பாக்கனும், உனக்கு தெரியாததையா அவ சொல்லப் போறா''

ரெங்கநாதன் வீடு அடைந்தோம். சுபத்ராவை சந்திக்க வந்திருப்பதாக கூறினோம். சுபத்ராவும் வந்தாள். முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாள்.

''சுபா, பரிணாமத்தில் முதலில் வந்தது பெண்ணா, ஆணா?'' என்றேன்.

''ம்ம்ம் உன்னோட பாட்டி''

காயத்ரி கிளுக்கென சிரித்துத் தொலைத்தாள்.

''இதுக்கு இப்போ எதுக்கு சிரிப்பு, உண்மையிலேயே முருகேசனோட பாட்டி தான் இந்த உலகத்துக்கு முதலில் வந்தது''

காயத்ரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ரெங்கநாதன் அம்மா, பலகாரங்கள் கொண்டு வந்து வைத்தார்கள். காயத்ரியின் அக்காவும், ரெங்கநாதன் இன்னும் வந்திருக்கவில்லை என்றே தெரிந்தது. அவர்களைப் பற்றி கேட்டபோது, அவங்க வரதுக்கு எட்டு மணி ஆகும் என்றே சொன்னார். ரெங்கநாதனின் அம்மா, அந்த இடம் விட்டு நகர்ந்ததும் சுபத்ராவிடம் மீண்டும் கேட்டேன்.

''சுபா, கிண்டல் பண்ணாம சொல்லு''

''உன்னை கிண்டல் பண்ண நீ என்ன என்னோட முறைப்பையனாடா, இல்லை என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறியாடா, அதுதான் இதோ உன் காயூ இருக்காளே''

''உனக்கு பரிணாமத்தில் ஆர்வம் இருக்கு, அதான் உன்னை பாத்து கேட்டு போகலாம்னு வந்தேன்''

''அதுதான் சொல்றேன்லடா, உன் பாட்டி தான் முதலில் வந்தது''

காயத்ரி அவளது கண்களில் தண்ணீர் தரும் வரும்படியாய் சிரித்துக் கொண்டு இருந்தாள். இவள் இப்படி சிரித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது. இனி சுபத்ராவை மடக்க வேண்டும்.

''என்னோட பாட்டியோட அம்மா, அப்பா வந்து இருப்பாங்களே''

''ஏன்டா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா, உன் பாட்டிதான் முதலில வந்ததுன்னு சொல்றேன், அந்த பாட்டிக்கு ஆயா, அப்பத்தானு பேசறதா''

''உனக்கு அம்மா, அப்பா இருக்கிறமாதிரி''

''நானும், உன் பாட்டியும் ஒன்னாடா''

''முருகேசு, அதான் சுபா சொல்லிட்டாங்கள, உன் பாட்டிதான் முதலில் வந்ததுன்னு, வா போவோம்''

அப்போது ரங்கநாதனின் அம்மா, காபி கொண்டு வந்து வைத்து விட்டு சென்றார்கள்.

''இரு காயூ, காபி குடிச்சிட்டு போவோம்''

''வந்ததுக்கு பலகாரம், காபி கிடைச்சதுல, சாப்பிடறதுக்கே இருப்பியாடா''

''சுபா, என் மேல உனக்கு கோபம் இருக்கும், நீ எனக்கு சாப்பாடு கொண்டு வந்து தந்து இருக்க''

''பரிணாமம் பத்தி தெரிஞ்சிக்கனும்னா, இதோ இவளை மறந்துரு''

''அர்த்தநாரீஸ்வரர் சொல்லி இருக்கார், பரிணாமத்தில் முதலில் வந்தது ஆணும், பெண்ணும் ஒரு உருவமாய். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. எனக்கு என் காயூ முக்கியம், பரிணாமம் இல்ல''

''Yes Suba, both sexes developed simultaneously, Murugesu knows everything. He came to test you whether you are really here to study evolution, அப்படித்தானே முருகேசு வா போலாம்''

வீட்டிற்கு வெளியே வந்தபின்னர் காயத்ரியிடம் கேட்டேன்.

''என்ன காயூ, நான் சுபாவை சோதிக்க போனேன் சொல்லிட்ட''

''முருகேசு, அவ எவ்வளா நக்கலா பேசுறா, என்னாலே சிரிப்பை அடக்க முடியல''

''படிக்கிறப்பவே அப்பத்தான், ரொம்ப கிண்டலா பேசுவா, ஆனா இப்போதான் காதல் அது இது அப்படின்னு மாறிப் போய்ட்டா''

''இது அவளோட புது பரிமாணம்''

''பரிணாமமா''

''பரிமாணம். முப்பரிமாணம்''

''ஆமா, காயூ, பரிணாமத்தில் முதலில் வந்தது பெண்ணா, ஆணா?''

''ம்ம்.. உன்னோட பாட்டி''

காயத்ரி மீண்டும் சிரித்தாள். அப்போதுதான் புரிந்தது. பரிணாமத்தில் முதலில் வந்தது பெண் தான் என்பதை தான் சுபத்ரா அப்படி சொல்லி இருப்பாளோ! வீட்டினை அடைந்ததும் நன்றாக சாப்பிட்டுவிட்டு புத்தகத்துடன் மாடிக்கு கிளம்பினேன். காயத்ரியும் புத்தகங்களுடன் என்னுடன் வந்தாள்.

''காயூ, செல்லில இரண்டு வகை எதுக்கு ஹெப்லோய்ட், டிப்லாய்ட்''

''டுயூப்லைட் பிரகாசமா இருக்கு''

''ஆணும், பெண்ணும் பருவம் அடைய பல வருடங்கள் ஆகுதே காயூ''

''பேசாம படி, இப்படி ஏடாகூடமா பேசின, நான் தூங்கிருவேன், தாங்க முடியல''

கர்மவினை தாண்டினேன், பரிணாமம் என்னை படுத்துகிறது.

(தொடரும்) 

Friday 23 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 19

''எதுக்கு சுபத்ராவை பார்க்கனும்?''

''முருகேசா, தெரியலை, பார்த்துட்டு வருவோம்''

நானும் பதில் எதுவும் பேசாமல் எங்கே பார்ப்பது என தெரியாமல் அங்கிருந்து நடந்தோம். இறுதியாக ரங்கநாதன் வீட்டிற்கு செல்வதென முடிவெடுத்து அங்கே சென்றோம். சுபத்ரா அப்போதுதான் வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.

''சுபா, உன்கிட்ட  பேசனும்''

''என்னடா பேச போற''

சுபத்ராவின் வார்த்தையில் கோபம் கொப்பளித்தது.

''கோபப்படாதே, எங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை அதுதான் ரங்கநாதன் கிட்ட சொன்னோம்''

''உன்னோட வாழ்க்கைக்கு இனி நான் இடைஞ்சல் பண்ண மாட்டேன், பேசறதுக்கு ஒன்னுமில்ல''

''சுபா, சொன்னா கேளு. எங்களோட வா''

சுபத்ரா எங்களோடு வர மறுத்துவிட்டாள். காயத்ரியும் கேட்டுப் பார்த்தாள், ஆனால் அவள் வருவதாகவே இல்லை. இனிமேல் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என நாங்கள் கிளம்பினோம்.

''காயூ, சுபாவோட மாற்றத்தை பார்த்தியா?''

''இல்லை முருகேசா, அவ மாறி இருந்தா நம்மளோட வந்து இருப்பா, எதுக்கும் நீ எச்சரிக்கையா இரு''

காயத்ரி சொன்னதில் எனக்கு அர்த்தம்  .இருப்பதாகவே தெரிந்தது. மறுநாள் கல்லூரிக்கு சென்றோம். ஆசிரியர் சேகரன் பாடம் எடுக்க ஆரம்பித்தார். இவர் எனக்கு முதலில் பிடிக்காமல் இருந்து பின்னர் பிடித்து போனது. எனது அருகில் இருந்தவன் எதுவும் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே நினைத்து கொண்டேன்.

''Our thoughts are very strange at sometimes. No one knows why and how we think and where our thoughts come from. When you look at a picture, you could see that you can have various thoughts on it, same goes with when you see a girl''

''Can I stop you there Sir?''

மறுபடியும் ஆரம்பித்துவிட்டானே என்றே நினைத்தேன். இந்த கோரனுக்கு மிகவும் கோரமான சிந்தனைகள் வந்து சேர்கிறதே என நினைத்தேன்.

''Say Mr. Koran''

''Could you please explain why did you mention about a girl?''

''I gave an example''

''I don't think so''

''It is an example''

''I interpret that you see a girl as an object rather than a human being''

''That's what your brain processed the thoughts on it, not mine Koran. Please sit down and do not disturb the class''

அனைவரும் மேசைகளை தட்டி கோரனை உட்கார சொன்னார்கள். நானும் அவனது கையை பிடித்து இழுத்து அமர வைத்தேன், ஆனால் அவனோ என்னை தள்ளிக் கொண்டு வகுப்பை விட்டு  வெளியேறினான். இவனுக்கு என்ன ஆனது என்றே நான் யோசித்து கொண்டிருந்தேன். வகுப்பு ஆசிரியரோ எதையும் கண்டு கொள்ளாதவாறு பாடம் நடத்த ஆரம்பித்தார்.

''We all have brain network consists of neurons which will interact with inside and outside factors and thoughts are created. When the brain process the thoughts, chemicals are released from endocrine glands and nerve endings. These chemicals determine the next step of your body's physical activity. A mental process leads into physical process''

கல்லூரி பிரின்சிபல் உடன் கோரன் வகுப்பின் வாசலில் வந்து நின்றான். பிரின்சிபல் வகுப்பு ஆசிரியரை அழைத்தார். ஒரு சில நிமிடங்கள் வெளியில் சென்று பேசிவிட்டு உள்ளே வந்தார் ஆசிரியர். என்ன நடந்தது என சொல்லாமல் பாடத்தை மேலும் தொடங்கினார். கோரன் வகுப்புக்குள் வரவில்லை.

''Our thoughts have limitations, it has some boundaries which is not easy to cross''

''என்ன பிரச்சினை சார், எதுக்கு பிரின்சிபல் வந்தார்''

வகுப்பு தலைமை மாணவன் சூரியராஜ் எழுந்து கேட்கவே ஆசிரியர் சிரித்து கொண்டே சொன்னார்.

''நான் பெண்களை கொச்சையா பேசறேனாம், நான் கிளாஸ் எடுக்கறப்ப எல்லாம் கேர்ல்ஸ் எல்லாம் வகுப்புல உட்கார முடியாம நெளியராங்கனு இவன் போய் கம்ப்ளைன் பண்ணி இருக்கான். அதுதான் வகுப்புல என்ன நடக்குதுன்னு பாக்க வந்து இருக்காரு, என்ன அக்கிரமம்''

காயத்ரி எழுந்து ''Sir, how many thoughts are good for a person at a time?''

''Fewer thoughts are better as you can save energy. More uncontrollable thoughts are waste of energy. You should control your thoughts on particular issue so that you can easily handle it. Once you have control on what you think, your brain process that thought meaningfully and convert them into reality. For example if you are cheated by someone, you would tend to have unnecessary thoughts on it and try to explore why this happened to you and so on. In reality, your expectations were not met, it is simple as that, so further thoughts on this unnecessary and you should move away your thoughts from that person how important that person is''

''It is very difficult thing to do Sir as you always have those memories coming back to you, isn't''

காயத்ரியின் கேள்வியில் அவளுக்கு உண்டான வலி தெரிந்தது.

''Certainly Gayathri, why do you need give importance to someone who does not care to give importance to you. It is not about egoism or caring, it is about how you make yourself strong in the world community. Your thought process should not destroy yourself, it should make you very firm. Your thoughts should be focused on universal rather than personal''

காயத்ரி அமைதியாகவே அமர்ந்துவிட்டாள். அப்போது கோரன் உள்ளே வந்து அமர்ந்தான்.

''Koran, what were you thinking?''

''I was thinking about how to murder you and tonight I would definitely kill you. This is your last day''

''Could you ask your brain, what is the basis for this thought process and what does your brain wanted to achieve by murdering me?''

மொத்த வகுப்பும் கோரனை கோபத்துடன் பார்த்தது. கோரனிடம் மெதுவாக பேச்சு கொடுத்தேன்.

''டேய், நீ என்னடா பேசற. எதுக்குடா இவர் மேல கோபம்''

''பெரிய தாட் ப்ரோசெசஸ் பத்தி பேசறான். இவனை இன்னைக்கு முடிச்சிட போறேன்''

''Koran, answer me''

''Yes, you have killed your wife and tell me why did you do that, what was the basis of that thought process and what did your brain want to achieve by killing her?''

அனைத்து வகுப்பும் அப்படியே உறைந்து போனது.

(தொடரும்) 

Sunday 18 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 18

காயத்திரியின் சோகமான முகம் கண்டு அம்மா பதட்டம் கொண்டார்கள். 

''என்ன காயத்ரி, ஒருமாதிரி இருக்க, அக்காவை நினைச்சி கவலைப்படறியா?''

''இல்லம்மா''

''அப்புறம் எதுக்கு உன் முகம் ஒருமாதிரி இருக்கு''

நான் இடைமறித்தேன். 

''அந்த சுபத்ரா, காயத்ரி அக்கா வாழ்க்கை என் கையில அப்படின்னு மிரட்டிட்டு போனா''

''என்ன சொல்ற நீ''

''ஆமா''

''அவளை இப்பவே ரெண்டுல ஒன்னு பாத்துட்டு வரேன்''

அப்பா அம்மாவை தடுத்தார். 

''என்ன காயத்ரி நீ, உடனே அவங்களை அடிக்க போக துடிக்கிற, பாவம் சின்ன பொண்ணு, அவளே வருத்தமா இருக்கா''

நான் மட்டுமே என் காயத்ரியை காயூ என அழைக்கிறேன். அப்பா, அம்மாவை காயத்ரி என்றே அழைக்கிறார். 

''பிறகு என்னாங்க, என்ன நெஞ்சழுத்தம் அவளுக்கு''

வீட்டிற்கு வந்தபின்னும் அம்மா முனுமுனுத்து கொண்டே இருந்தார். காயத்ரி எதோ புத்தகம் வாசித்து கொண்டிருந்தாள், அல்லது நடித்து கொண்டிருந்தாள். மிகவும் குறைவாகவே இரவு சாப்பிட்டாள். எனக்கு மிகவும் கவலையாக போய்விட்டது. நாளை விடுமுறை என்பதால் அவளை எங்காவது அழைத்து செல்ல வேண்டும் என திட்டமிட்டேன். 

காலையில் எழுந்து அனைவரும் தயாரானோம். வாசற்கதவு தட்டப்பட்டு திறக்கப்படுகையில் சுபத்ரா நின்று கொண்டிருந்தாள். அம்மாவுக்கு கோபம் ஜிவ்வென தலைக்கேறியது. 

''அடுத்த அடி எடுத்து வைச்ச காலை வெட்டிருவேன்''

அம்மாவின் அந்த ஆவேசம் சுபத்ராவை மட்டுமல்ல எங்களையும் நிலைகுலைய வைத்தது. 

''அத்தை...''

''யாரு அத்தை, யாருடீ அத்தை. அடுத்தவங்க வாழ்க்கையில விளையாடறவங்க எல்லாம் என்னை அத்தைனு கூப்பிட என்ன அதிகாரம் இருக்கு, ஒழுங்கா திரும்பி போ, இல்லை உதைபட்டே சாவ''

அம்மாவின் கோபம் கண்டு பல நாட்கள் ஆகிப் போனது. காயத்ரி கூட பயத்துடன் இருந்தாள். அப்பாதான் அம்மாவை சமாதானம் பண்ணினார். 

''உள்ளே வாம்மா சுபா''

''என்னங்க, இது மாதிரி அசிங்கங்களை இப்பவே துடைச்சிரனும், வளரவிட்டு வேடிக்கை பார்க்க கூடாது''

சுபத்ரா அங்கே மறுகணம் நிற்கவில்லை. வேகமாக சென்றுவிட்டாள்.

''என்ன காயத்ரி நீ, வீட்டுக்கு வந்த பொண்ணை இப்படி கேவலபடுத்தி அனுப்பிட்ட''

அம்மா காயத்ரியை தனது பக்கத்தில் இழுத்து வைத்து கொண்டு 

''இதோ இந்த புள்ளையோட முகத்தை பாருங்க, இவங்க அம்மா செத்ததுல இருந்து என்னைக்கு இந்த புள்ளையால சிரிச்சி சந்தோசமா இருக்க முடிஞ்சது, இதுல இப்போ இந்த சனியன் வேற வந்து ஏழரைய கூட்ட நினைச்சா எப்படிங்க பாத்துட்டு சும்மா இருக்கிறது''

அம்மாவின் காயத்ரி மீதான பாசம் எனக்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது. அப்பாவும் சரி என பேசாமல் இருந்தார். நானும் காயத்ரியும் வெளியில் செல்கிறோம் என சொல்லிவிட்டு கிளம்பினோம். 

''காயூ எங்க போகலாம்?''

''கோவிலுக்கு''

''கோவிலுக்கு வேணாம், ஏதாவது பார்க்குக்கு போகலாம்''

''கோவிலுக்கு போய்ட்டு பார்க்குக்கு போகலாம்''

சரியென கோவிலுக்கே சென்றோம். அங்கே கோவிலில் காயத்ரியின் அக்காவும், ரங்கநாதனும் நின்று கொண்டிருந்தார்கள். 

''காயூ, நீயும் உங்க அக்காவும் பேசி வைச்சீங்களா?''

''இல்லை''

அவர்கள் இருவரையும் சந்தித்து சுபத்ரா விசயமும் சொன்னோம். ரங்கநாதன் மிகவும் கோபப்பட்டார். சுபத்ராவை தனது வீட்டுக்குள் விடாதவாறு பார்த்து கொள்வதாக சொன்னார். சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு கிளம்பினோம். 

அங்கே இருந்து ஒரு மணி நேரத்தில் பார்க் அடைந்தோம். அங்கே எனக்கு பிடித்த ஆசிரியர் அவரது குடும்பத்துடன் அமர்ந்து இருந்தார். வாங்க என வரவேற்றார். நாங்கள் இருவரும் அவரது கண்ணில் படாமல் தப்பிக்க நினைத்தோம் ஆனால் அவர் எங்களை கண்டதும் அழைத்துவிட்டார்.

''என்ன அதிசயமா இந்த பக்கம்''

''சும்மா வந்தோம் சார்''

அவரது குடும்பத்தை அறிமுகப்படுத்தினார். மனைவி, பத்து வயது நிரம்பிய பையன், பதினான்கு வயது நிரம்பிய பெண். அவர்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆசையாக இருந்தது. துறுதுறுவென பையனும், பெண்ணும் ஓடியாடி திரிந்தார்கள். 

''எங்களுக்கு இதுதான் பொழுதுபோக்கு இடம், மாசத்தில இரண்டுவாட்டி வந்துருவோம்''

''இப்பதான் சார், நாங்க முதல் முதலா வரோம்''

அவருடன் பேசிக் கொண்டிருந்த நேரம் அற்புதமான நேரம் என்றே சொல்லலாம். காயத்ரி மிகவும் லேசாக உணர்ந்தாள். ஆசிரியரின் மனைவி மிகவும் நகைச்சுவையாக பேசினார். அவர்களது திருமணம் காதல் திருமணம் என்றும், எப்படியெல்லாம் நாடகம் ஆடி திருமணம் செய்தார்கள் என்பதை விவரித்தபோது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 

''சார், நம்ம காலேஜ்ல உங்களைதான் ரொம்ப பிடிக்கும்''

''பக்கத்தில காயத்ரி இருக்கா, அதைக்கூட கவனிக்காம இப்படி சொல்றியேப்பா''

''காயத்ரியை ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார்''

''என்னங்க உங்க சூடன்ட் உங்களை மாதிரியே அறுக்கிறார்''

''ஒரே வெட்டா வெட்டத்தான் செய்வார்'' 

காயத்ரியின் பதில் எனக்கு சௌகரியமாக இருந்தது. 

அரைமணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பினோம். 

''காயூ''

''என்ன முருகேசா''

''இந்த உலகம் இரண்டே இரண்டு வகை மனிதர்களால் ஆனது''

''சொல்லு''

''ஒன்று சந்தோசம் உடைய மனிதர்கள், மற்றொன்று துக்கம் உடைய மனிதர்கள்''

''மொத்தமா பிரிச்சி வைக்க முடியாதுல''

''ஆமா, இங்கிட்டும், அங்கிட்டும் ஆடிக்கிட்டே இருப்பாங்க''

''என்னை மாதிரி''

''இல்ல, என்னை மாதிரி''

''முருகேசா, இப்படி வெளில வந்து இருக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு''

''ம்ம்''

''வாரம் வாரம் இப்படி வந்துருவோம், ஷாப்பிங், லைப்ரரி எல்லாம் வேணாம்''

''ம்ம்''

''அம்மா என் மேல பிரியமா இருக்காங்கள''

''அம்மா எப்பவும் அன்புக்கு கட்டுபட்டவங்க''

''சுபத்ராவை போய் பார்ப்போமா''

நான் காயத்ரியின் முகத்தை மட்டுமே பார்த்தேன். 

(தொடரும்)






Tuesday 13 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 17

''அத்தை  ரொம்ப நல்லா சமைச்சி இருந்தாங்க''

எனது கவனம் எல்லாம் காயத்ரியின் அக்காவின் செயல்பாட்டில் இருந்தது.

''முருகேசா, நான் சொல்றது காதுல வாங்கலையா''

''அம்மா எப்பவும் நல்லா சமைப்பாங்க''

எந்த ஒரு ஜீவனும் இல்லாமல் பேசி வைத்தேன். அதற்குள் அம்மா, பால் காய்ச்சி கொண்டு வந்தார்கள்.

நாங்கள் மூவரும் மாடிக்கு வந்தோம். சுபத்ராவிடம் சொல்வதா வேண்டாமா எனும் யோசனையுடன் காயத்ரி அக்கா விசயத்தை காயத்ரியின் அனுமதி இல்லாமல் சொல்லி முடித்தேன்.

''இதுக்கு எதுக்கு இவ்வளவு டென்சன்''

''சுபா, என்ன சொல்ற நீ''

''அவங்களுக்கு பிடிச்ச லைஃப் தேடிக்கிட்டாங்க, இதுல என்ன இருக்கு''

''ஒரு முறை இருக்கு சுபா''

''என்ன முறை''

''வாழ்க்கை முறை, நெறிமுறை''


''ஒவ்வொரு உயிரினமும் தன்னை பாதுகாத்து கொண்டு, தனது சந்ததிகளை பெருக்குவதில் மிகவும் குறியாக இருக்கும், அப்படிப்பட்ட உயிரினமே இந்த பூமியில் வாழ தகுந்த அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளும். அதுமாதிரிதான், மனுசங்களும். தனக்கு ஏதாவது சாதகம் நடைபெறக் கூடியதா இருந்தா அதுபக்கம் தனது நிலையை வைத்து கொள்வார்கள். இப்படி வாழ்ந்து கொண்டிருந்தவங்க ஒரு சமூகமா அமைஞ்சப்போ, இந்த மாதிரி தனக்கு மட்டுமே சாதகமா நடந்து கொண்டிருந்ததை ஒரு சிலரால் சகிச்சிக்க முடியலை. அதனால கொண்டு வரப்பட்டதுதான் நெறிமுறைகள், மரியாதை, கலாச்சாரம் எல்லாமே. ஆனா பரிணாம விதிப்படி இது எல்லாம் சரியானதுதான்''

சுபத்ராவின் இந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது, ஆனால் அதுதான் நிதர்சனமோ என எண்ண வைத்தது.

''சுபா, நீ சொல்றது சரிதான், ஆனா...''

''என்ன ஆனா...  இப்போ நீ காயூவை காதலிக்கிறே, நாளைக்கே நீ காயூவை விட்டுட்டு வேற பொண்ணோட வாழ மாட்டேன்னு எப்படி உன்னால உறுதியா சொல்ல முடியும். ஆனா அப்படி நடக்காது, நடக்க கூடாதுன்னு நீங்க இரண்டு பேருமே முடிவோட இப்போ இருப்பீங்க, அப்படிப்பட்ட நினைவுகளுக்கு இடையூறு வந்தா என்ன பண்ணுவீங்க, நீங்க இரண்டு பேரும் முயற்சி பண்ணுவீங்க, எந்த விசயம் டாமினேட் பண்ணுதோ அதுவே கடைசியில ஜெயிக்கும், உதாரணத்திற்கு என்னை உனக்கு ஒரு போட்டியானவளா காயூ இப்போ நினைச்சிட்டு கலங்கிட்டு இருப்பா''

இப்படி சுபத்ரா சொல்வாள் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. எனக்கு மனதில் எவரோ கடப்பாரை கொண்டு பெயர்ப்பது போன்று இருந்தது. காயத்ரியின் முகம் கூட சற்று மாறிப் போனது. திடீரென சுபத்ரா ஆங்கிலத்திற்கு மாறினாள்.

''This world is full of uncertainties, anything can happen to anyone at anytime. However the probability of that happening is very limited on that given occasion and on that given situation''

''ரொம்ப தத்துவம் எல்லாம் பேசற சுபா. நீ எத்தனை நாளைக்கு இந்த ஊருல இருக்க போற, நீ போன காரியம் என்ன ஆச்சு''

''முருகேசா,  என்ன பேச்சை மாத்துற. இதைத்தான் இப்போ சொன்னேன், உனக்கு ரொம்ப அசௌகரியமா இருக்குல. எது எப்ப வேணும்னாலும் நடக்கும், நடக்க வேண்டிய சந்தர்ப்பம் அமையனும், அமைச்சிகிரனும். இப்போ you feel me as a threatening to your relationship''

காயத்ரிக்கு கோபம் வந்து இருக்க வேண்டும்.

''சுபா, என்ன பேசுறீங்க நீங்க, உங்களுக்கு முருகேசுவை பிடிச்சி இருந்தா நேரடியா பேசுங்க, அதைவிட்டுட்டு சுத்தி வளைச்சி பேசறீங்க. நானே என்னோட அக்கா பண்ணினது பத்தி கவலைப்பட்டுட்டு இருக்கேன், நேரம் காலம் புரியாம பேசறீங்க''

''காயூ, ஆமா நான் முருகேசனை காதலிச்சேன், இன்னமும் காதலிக்கிறேன், அவன் மனசை மாத்துறேனா இல்லையா பாரு, இந்த ஊருலதான் இன்னும் ஒரு மாசம் இருப்பேன், தேவைப்பட்டா ஒரு வருசம் கூட இருப்பேன். என்ன நடக்குதுன்னு பாரு, வரேன் பை''

சுபத்ராவின் பேச்சு எனக்கு கனவில் நடந்தது போன்றே இருந்தது. அவ்வாறு பேசியவள்  வேகமாக கிளம்பினாள்.

''சுபா ஒரு நிமிசம் உட்கார், நீ என்ன பேசினனு தெரிஞ்சிதான் பேசினியா. படிக்கிற காலத்தில ஒரு நல்ல பிரண்டா பழகிட்டு இப்படி பேசற, அதுவும் காயூ முன்னால''

''ஏன், காயூ இல்லாதப்ப பேசி இருந்தா இனிச்சி இருக்குமா, ஆசை ஆசையா உனக்கு சோறு கொண்டு வருவேனே, உனக்கு ஒன்னுனா நான் ஓடி வருவேனே. என்னோட காதல் உனக்கு புரியலையா! I will take you away from her, this is for sure. Bye''

சுபத்ரா காயத்ரியின் அக்கா போனது போலவே வேகமாக கீழிறங்கி சென்றாள். நாங்களும் கீழிறங்கினோம். என் அம்மாவிடம் சென்று வருகிறேன் அத்தை என சொல்லிவிட்டு கிளம்பினாள். சிறிது நேரம் கழித்து என் அப்பா வந்தார். என் அப்பாவிடம், அம்மாவிடம் சுபத்ரா பற்றிய விசயத்தை சொல்லி வைத்தேன். அம்மாவிற்கு மிகவும் கோபமாக இருந்தது. அப்பா யோசனையோடு இருந்தார்.

''என்னப்பா பண்ணலாம்''

''என்கிட்டே கேட்டா எப்படி, நீங்க ரெண்டு பேரும் உறுதியா இருந்தா அவ என்ன பண்ண முடியும்''

''முருகேசு, நீ கவலைப்படாத, அவளோட காலை நான் ஓடிச்சி விடுறேன், அடுத்தவாட்டி வரட்டும், நல்ல பொண்ணுன்னு நினைச்சா இப்படியா பேசிட்டு போறா''

''அம்மா, கால் எல்லாம் ஒடிக்க வேண்டாம். அப்பா, காயத்ரியோட அக்கா வீட்டை விட்டு கிளம்பி போய்ட்டாங்க, ரங்கநாதன் வந்து கூப்பிட்டு போய்ட்டார், உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க''

''என்ன சொல்ற''

''ஆமா, இனிமே வரமாட்டாங்க, அப்படியே கல்யாணம் பண்ணி வாழ போறாங்க''

''என்னம்மா காயத்ரி இது எல்லாம்''

காயத்ரி அழத் தொடங்கினாள். அவளுக்கு எத்தனை வலிக்கும் என்பது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

''நீ ஏன்மா அழற, அதுதான் சரின்னா நல்லா இருந்துட்டு போகட்டும், கல்யாண தேதி இடம் தெரிஞ்சா போயிட்டு வருவோம். நீ கவலைப்படாதம்மா''

அப்பா ஆறுதல் வார்த்தை சொன்னார். அம்மா காயத்ரியின் அருகில் வந்து அமர்ந்தார்கள்.

''இங்க பாரு காயத்ரி, நீ எதை நினைச்சியும் மனசை குழப்பிக்காத, உன்னை பத்திரமா பாத்துக்க வேண்டியது எங்களோட பொறுப்பு. இந்த வயசுல உனக்கு இத்தனை சோதனையா? கவலைபடாத  நாளைக்கு ரங்கநாதன் வீட்டுக்கு போவோம், உன் அக்காகிட்ட பேசுவோம். சந்தோசமா இருக்கட்டும், எப்ப இருந்தாலும் அந்த வீட்டுக்கு போகப் போற பொண்ணுதான''

காயத்ரி சற்று சமாதானம் அடைந்தது போன்றே தெரிந்தது. நானும் காயத்ரியிடம் உறுதி கொடுத்தேன். நான் காதலித்த ஒரே பெண் காயத்ரி மட்டுமே என்பதை சத்தியம் செய்தேன். இருப்பினும் சற்று பயம் அவளுக்குள் இருக்கத்தான் செய்தது. அதிகாலையில் காயத்ரியின் முகம் தனை பார்த்தபோது இரவெல்லாம் அழுது இருக்க கூடும் என்றே காட்டியது.

காலையில் நாங்கள் நால்வரும் ரங்கநாதன் வீட்டிற்கு போனோம். ரங்கநாதனின் அம்மாவிடம் பேசினோம். அவர்கள் காயத்ரியின் அக்கா அவர்களுடன் இருப்பதையே விரும்பினார்கள். காயத்ரியின் அக்கா தான் அவ்வாறு கிளம்பி வந்தமைக்கு வருத்தம் தெரிவித்தாள். திருமணத்திற்கு கட்டாயம் அழைக்கிறோம் என சொன்னார்கள். காயத்ரி, அவளின் அக்காவிடம் தனியாக சென்று பேசிக் கொண்டிருந்தாள். அப்போது சுபத்ரா அங்கே வந்தாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அத்தை என்றே ரங்கநாதனின் அம்மாவை அழைத்தாள். பேசினாள். தனியாக பேசிவிட்டு காயத்ரியும் அவளது அக்காவும் திரும்பி வந்தார்கள். காயத்ரிக்கு அங்கே சுபத்ராவை கண்டதும் அச்சத்துடன் கலந்த அதிர்ச்சி ஏற்பட்டு இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினோம். வீட்டு வாசலை கடந்து கொண்டிருந்த போது, சுபத்ரா காயத்ரியிடம் வந்து சொன்னாள். எனக்கு மெல்லிதாக கேட்டது.

''உன்னோட அக்கா வாழ்க்கை என் கையில, ரொம்ப வசதியா போச்சு''

சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றாள். நாங்கள் நடக்க ஆரம்பித்தோம், காயத்ரியின் உள்ளம் நடுங்கியதை என் உள்ளம் நடுக்கத்துடன் கண்டது.

(தொடரும்)

Wednesday 7 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 16

நான் ஒருவேளை காயத்ரியை சந்திக்காது போயிருந்தால் எவரை காதலித்து இருப்பேன், அல்லது எனக்குள் காதல் என்பதே வந்து இருக்காதோ என்றே எண்ணத் தோன்றியது.

காதல் எப்படி வரும்? காதல் எதற்கு வரும்? காதல் ஒரு கர்ம வினை என்றே மனதில் திட்டமிடும் அளவுக்கு தள்ளப்பட்டு இருந்தேன். மாலை சந்திக்கிறேன் என்று சொன்ன சுபத்ராவையும் காணவில்லை.  கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டு அம்மாவிடம், காயத்ரியிடம் எதுவும் அதிகம் பேசாமல் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடிக்கு போனேன்.

கர்ம வினை என்பது உண்டு எனில் அதற்கான முற்பிறவியும், அடுத்து வரப்போகிற பிறவியும் இருந்துதான் தீர வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இந்த கர்ம வினை எல்லாம் வெறும் கட்டுக்கதை என்ற எண்ணம் தோணியது.

மாடியில் அமர்ந்தோம், வானத்தை பார்த்தோம், நட்சத்திரங்கள் எண்ணினோம் என்றெல்லாம் மனம் ஓடவில்லை. காதல் கர்மவினையாக இருக்கக் கூடுமோ? அப்படியெனில் நான் சென்ற பிறவியில் காயத்ரியை காதலித்தேனா? இப்படி என்னுள் எண்ண அலைகள் ஓடிக்கொண்டு இருந்தபோது காயத்ரி மாடிக்கு வந்தாள்.

''என்ன காலேஜுல இருந்து வந்த பிறகு எதுவும் பேசலையே முருகேசு''

''அதெல்லாம் ஒண்ணுமில்லை காயூ, காதல் கர்ம வினையா?''

''ஆமாம் காதல் கர்ம வினைதான்''

''என்ன காயூ சொல்ற''

''புராணங்கள் எல்லாம் படிக்கிறது இல்லையா?''

''கதை சொல்றியா?''

''பீஷ்மர் பத்தி தெரியுமா?''

''இப்போ என்ன அதுக்கு''

''காதல் ஒரு கர்ம வினை''

''காயூ, போரடிக்காதே''

''இந்த பீஷ்மர் தனது முற்பிறவியில் தனது காதல் மனைவிக்காக ஒரு பசுவை வசிஷ்டர் முனிவரிடம் இருந்து திருடினதால தனது அடுத்த பிறவியில் யார் மீதும் காதல் கொள்ளாத தன்மை உடையவரா இருப்பார் அப்படின்னு வசிஷ்டர் சாபம் விட்டுட்டார், இதுதான் அந்த பிறவியில் செய்த திருட்டு பாவத்திற்கு இவருக்கு அடுத்த பிறவியில் கிடைச்ச தண்டனை''

''ஒரு பசுவை திருடினதுக்கா இந்த சாபம்''

''ஆமா''

''ஆமா, காயூ, அப்படின்னா அந்த பசுவை திருடுறதுக்கு முற்பிறவியில் ஏதாவது செஞ்சி இருப்பாரோ''

நான் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்தாள் காயத்ரி. நானும் எனது கேள்வியை மெச்சிக் கொண்டேன்.

''என்ன காயூ பதிலை காணோம், உன்னை நான் போன பிறவியில் காதலித்து இருப்பேனோ?''

''இறைவனுடைய அவதாரங்கள் எல்லாம் அப்படித்தான் சொல்றது, காதல் ஒரு கர்மவினைதான்''

''காயூ, என்னை நீ பார்க்காம இருந்து இருந்தா யாரை காதலிச்சி இருப்ப?''

''தெரியலை''

''காதலிச்சி இருந்திருப்பியா இல்லையா?''

''தெரியலை''

''சரி, என்கிட்டே அந்த கேள்வியை கேளு''

''நீ என்ன பண்ணி இருந்து இருப்ப''

''யாரையும் காதலிச்சி இருந்து இருக்க மாட்டேன் காயூ''

''முருகேசு...''

''காதல் கர்மவினையாகவே இருக்கட்டும், நீ மட்டுமே எனது காதலியா எல்லா பிறவியிலும் இருப்ப, அது நிச்சயம்''

''முருகேசு...''

காயத்ரியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியதை கண்டு என் மனம் வாடியது.

''என் அப்பா கூட இப்படித்தான் என் அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தாருன்னு அம்மா சொல்லி சந்தோசப்படுவாங்க, ஆனா என்ன நடந்தது பாத்தியா. அது கர்மவினைதானு மனசை தேத்திக்கிறேன்''

காயத்ரியின் கண்ணீரைத் துடைத்துவிட்டேன். ஆனால் அவளது மனதில் ஏற்பட்ட காயத்தை துடைக்க முடியாது கலங்கினேன்.

''காயூ, கர்மவினை அப்படியெல்லாம் இனிமே பேச வேண்டாம், நமக்குள்ள ஒரு உறுதிப்பாடு இருந்தா எதுவும் நம்மை அசைக்க முடியாது, தைரியமா இரு''

''ம்ம்... சுபத்ராவை பாத்தீங்களா''

''இல்லை, வரேன்னு சொல்லிட்டு போனா ஆனா வரலை''

''உங்க வீடு அவளுக்கு தெரியுமா''

''ம்ம், தெரியும் ஆனா அடிக்கடி எல்லாம் வரமாட்டா''

பேசிக்கொண்டிருந்தபோது அம்மா என்னை கீழிருந்து அழைத்தது கேட்டது. நாங்கள் இருவரும் இறங்கி வந்து பார்க்கையில் சுபத்ரா வீட்டினுள் அமர்ந்து இருந்தாள்.

''சாரி லேட்டாயிருச்சி, பாக்கிறேன்னு சொன்னேன்ல, அதான் வந்துட்டேன்''

''காலையில வந்து இருக்கலாமே, அதுவும் எதுக்கு இந்த இருட்டு நேரத்தில, சரி சாப்பிட்டியா சுபா''

''இன்னும் இல்லை''

அம்மா உடனடியாக சுபத்ராவை வா வந்து சாப்பிடு என அழைத்து சென்றார். சுபத்ராவும் சாப்பிட்டு வந்து பேசுகிறேன் என எழுந்து சென்றாள். காயத்ரியின் அக்காவும் அப்போதுதான் வந்தார். வந்தவர், நேராக அம்மாவிடம் சென்று சிறிது நேரம் பேசியதை கண்டேன். பின்னர் எங்களிடம் வந்தார்.

''காயத்ரி, நானும்   அவரும் ஒரு வீடு பாத்து இருக்கோம், அவங்க வீட்டுல சரின்னு சொல்லிட்டாங்க, அடுத்த வாரம் அங்க குடி இருக்க போறோம், இனிமே இப்படி நான் இங்க இருக்கிறது அவருக்கு பிடிக்கல''

அவசரம் அவசரமாக பேசிய காயத்ரியின் அக்காவின் வார்த்தைகள் என்னுள் ஊசியாக குத்தி தொலைத்தன. எனது பெற்றோர்கள் இவருக்காக எத்தனை சிரமம் பட்டு இருப்பார்கள். சில மாதங்கள் எனினும் இதுதானா முறை என்றே எண்ணத் தோன்றியது.

''அக்கா...''

இப்போதெல்லாம் காயத்ரியின் வார்த்தைகளில் அதிர்ச்சியே நிறைய தெரிந்து கொண்டிருந்தது. காயத்ரியின் அக்கா விறுவிறுவென மாடிக்குப் போனார். ஒரு பெட்டியுடன் கீழே வந்தார்.

''நான் கிளம்பறேன் காயத்ரி, மத்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வந்து எடுத்துட்டு போறேன்''

''என்னக்கா...''

பதில் ஏதும் சொல்லாமல் அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.

''அப்பா வரட்டும்''

''அப்பாகிட்ட நீ சொல்லிரு''

காயத்ரியின் அக்கா வீட்டு வாசலை தாண்டி சென்றபோது எனக்கு காதல் கர்மவினை என்றே கனத்தது. ரங்கநாதன் என்னை அறியாதவர் போல் காயத்ரியின் அக்காவை அழைத்துக் கொண்டு போனார். அது இன்னமும் அதிகமாக வலித்தது. காயத்ரி அப்படியே அமர்ந்துவிட்டாள்.

''சாப்பாடு சூப்பர்''

சுபத்ராவின் வார்த்தைகள் எனக்கு கேட்கவே இல்லை.

(தொடரும்)

Wednesday 17 July 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 15

என்னைப் பற்றியும் சுபத்ராவைப் பற்றியும் காயத்ரி என்ன நினைத்திருப்பாள் என்றே என் மனம் நினைக்கையில்

"ஹலோ ஐ ஆம் சுபத்ரா" என காயத்ரியின் கைகள் பிடித்து குலுக்கினாள்.

"ஹாய் ஐ ஆம் காயத்ரி"

''சுபா, நீ எப்படி இந்த ஊருக்கு, எப்போ வந்த'' என நான் குறுக்கிட்டேன். சுபா என்றே அவளை அழைத்து பழகிப் போனது.

''நேத்துதான் வந்தேன், பரிணாம ஆராய்ச்சிக்காக வந்து இருக்கேன்''

''என்ன கோர்ஸ் எடுத்துப் படிக்கிற''

''டெவெல்த்தோட ஸ்டாப், பரிணாமத்தில இண்டரெஸ்ட் அதான் அது எடுத்து தனியாப் படிக்கிறேன், சரி பிறகு வந்து பார்க்கிறேன், விவரமா பேசலாம், இப்போ ஒருத்தரை சந்திக்கப் போறேன், ஸீ யூ காயூ'' என அவள் கிளம்பி சென்றாள்

காயூ... நான் அழைப்பது போலவே அவளும் அழைத்து சென்றது எனக்கு பெருமையாக இருந்தது.

''காயூ, நீ சுபாவைப் பத்தி என்ன நினைக்கிற''

''உங்களுக்கு மிகவும் பொருத்தமானவ''

சில வேளைகளில் என்ன பேசுகிறோம் என்றே நமக்கு தெரியாமல் போய்விடுவது துரதிர்ஷ்டம் என நினைத்துக் கொண்டேன். காயத்ரி அவ்வாறு கூறியதும் நான் சமாளிப்பதாக நினைத்துக் கொண்டு பேசினேன்.

''ஆமா, என்னோட அலைவரிசை அவளுக்கு இருக்கு''

''அவளை ஏன் காதலிக்கலை''

''அது அந்த பருவம் வரலை''

''இப்போ காதலிக்கலாமே''

''உன்னை காதலிச்ச பிறகு வேறு யாரை நான் காதலிக்கனும்''

நான் சொன்ன இந்த வார்த்தைகளில் காயத்ரி வாயடைத்துப் போனாள். பொதுவாகவே ஆண் - பெண் இடையே ஈர்ப்பு என்பது சகஜமான ஒன்றுதான். ஒரு ஆண் பல பெண்களை காதலிப்பதும், ஒரு பெண் பல ஆண்களை காதலிப்பதும் என்பதெல்லாம் சரியே என்றே வெளித் தோற்றத்தில் தென்படும். ஆனால் அவை ஒருவகையான பாலின ஈர்ப்பு என்பது புரிந்தபாடில்லை. காதல் என்பதன் முழு அர்த்தம் கவனிக்கப்படவில்லை என்றே தோணியது.

''காயூ, நீ மனசை போட்டு உலப்பிக்காதே, சினிமாவுல வரமாதிரி முக்கோண காதல் எல்லாம் எனக்குள்ள வராது. ஒரு காதல் கதைன்னு வந்தாலே அதுல ஒரு முக்கோண காதல், அந்த பெண் இவனைக் காதலித்தாள், அவன் வேறு ஒருவளை காதலித்தான் அப்படின்னு சொல்றதுக்கு இது நிழல் இல்ல, நிஜம். என்னை நம்பு''

கல்லூரியின் வாசல் அடைந்து இருந்தோம். காயத்ரி எனது கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு என் அப்பாவோட வாழ்க்கை என்னை ரொம்பவே பாதிச்சிருச்சி முருகேசா என கண்களில் கண்ணீர் மல்க  சொன்னாள்.

''காயூ, மனசு அப்படிங்கிறது நமக்கு கட்டுப்பட்ட ஒண்ணா இருக்கனும், மனசுக்கு நாம கட்டுபட்டவங்களா மாறக் கூடாது''

சொன்ன மாத்திரத்தில் எனக்கு புரியவில்லை.  மனதுக்கு கட்டுப்பட்டு இருப்பது, மனதை கட்டுப்படுத்துவது, இதில் என்ன வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தோன்றியது என புரியாமலே இருந்தது.

''சரி முருகேசா''

புரிந்தது போல சரி என சொல்கிறாளே என நினைத்துக் கொண்டிருக்கையில் நண்பர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கல்லூரியில் இருக்கும் பொழுதில் பாடத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க காதல் சற்றே வழிவிட்டு நிற்கும். எனக்குப் பிடிக்காத ஆசிரியரே பாடம் எடுத்தார். அவர் எடுத்த முதல் பாடம் மனம் பற்றியதுதான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

''Human mind is not an object, it is not located any particular part of the body''

வழக்கம்போல எனது அருகில் இருந்தவன் எழுந்து ''mind your language'' என்றான். மொத்த வகுப்பும் கொல்லென சிரித்தது. அந்த ஆசிரியர் மிகவும் கோபத்துடன் ''why should I?, get out of the class'' என்றார்.

''சாரி சார், நீங்க சொன்னது எனக்குப் புரியலை, கொஞ்சம் தமிழுல சொல்றீங்களா''

''அப்படி கேட்க வேண்டியதுதானே, டிசிப்ளின் இல்லாத பசங்க எல்லாம் எதுக்குப் படிக்க வரனும், பன்னி மேய்க்க போகலாமே''

''பன்னி மேய்க்க கூட டிசிப்ளின் வேணும் சார், அதுவும் படிக்க சொல்லித் தரதுக்கு ரொம்ப டிசிப்ளின் வேணும் சார்''

''பாடம் நடத்துங்க சார், நீங்க இரண்டு பேரும் வெளில சண்டையை வைச்சிகோங்க'' என்றாள் வளர்மதி. மொத்த வகுப்பும் ஆமா சார் என்றது.

''This is what I call is human mind. It is not located any particular part of the body, it is everywhere. அதாவது மனம் எங்கும் வியாபித்து  இருக்கிறது. வளர்மதி சொன்னதும் நீங்க எல்லாரும் ஆமாம் சொன்னீங்க இல்லையா அதுதான் மனம். அது சுற்றுப்புற சூழல் மூலம் மாசும் அடையும், சுத்தமும் அடையும். Human mind is influenced by external stimulations; based on that, internal vibrations start to occur. It is very difficult to control internal vibrations once you have constant external stimulations or once external stimulations occurred very deeply, this start coming back again and again to create internal stimulations how clever you are!''

''யோவ் நீ என்னதான் சொல்ல வர''

இப்படி அருகில் இருந்தவன் சொல்வான் என்றே எவரும் எதிர்பார்க்கவில்லை. அவர் நடத்திய பாடம் எனக்கு பிடித்து இருந்தது. முதலில் பிடிக்காத ஆசிரியர் எனக்கு பிடித்தவராக தெரிந்தார். மொத்த வகுப்பும் நீ உட்கார் என அவனை நோக்கி சத்தம் போட்டது.

''என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு, நான் எது சொன்னாலும் உனக்கு நக்கலா இருக்கு, உனக்கு விருப்பம் இல்லைன்னா நீ வகுப்பு விட்டு வெளியே போ, புரியலைனா என்னனு மரியாதையா கேளு இப்படி அநாகரிமாக நடந்துகிறது நல்லதில்லை''

ஆசிரியர் பேசியது எனக்கு சரியாகவே பட்டது. சாரி கேட்டு உட்காருடா என அவனை இழுத்தேன்.

''I tried to see how you react to me Sir, when I said mind your language, you shouted at me and asked me to get out of the class and talked about discipline. That was an external stimulation which angered you. You talked about discipline. I said 'Teacher should have more discipline than others'. After you taught for a while, I have criticised your way of teaching that I did not understand, you reacted very differently now and you have shown some degree of dignity. How could an external stimulation have such an impact immediately, you should have some internal vibrations all the time on all matters, is that right?''

அவன் பேசி முடித்து அமர்ந்தபோது மொத்த வகுப்பும் கைதட்டி ஆரவாரம் செய்தது. ஆசிரியர் கைத்தட்டல்கள் சத்தம் ஓயும் வரை காத்து இருந்தார். 

''Does child have internal vibrations on all matters which is not exposed to or do you have internal vibrations which you are not exposed to or you haven't paid any attention to it?'' 

ஆசிரியரின் அந்த கேள்வி என்னை நிஜமாகவே உலுக்கியது. பக்கத்தில் இருந்தவன் எழுந்து சில  வார்த்தைகள்  சொல்லிவிட்டு அமர்ந்தான். 

''Worth looking at it''

''என்னடா சொல்ற'' என மெல்ல கேட்டேன். 

''நிறைய யோசிக்க வைச்சிட்டான்டா வாத்தி''

ஒரு விசயம் பிடிக்கும், பிடிக்காது காரணம் சொல்லலாம். காதலுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? என மனம் நினைத்தது. இந்த மனம்... கர்ம வினையா? மர்மம் தீர வேண்டினேன். 

(தொடரும்)


Wednesday 19 June 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 14

காயத்ரி கர்மவினை என சொன்னதும் நான் பேசாமல் எழுந்து சென்று விட்டேன். எனக்கு இந்த கர்மவினை எல்லாம் சுத்த பொய் என்றே தோன்றியது. ஒரு செல் உயிரினத்தில் இருந்து பல செல்கள் கொண்ட உயிரினம் தோன்றிட என்ன அவசியம் வந்து சேர்ந்தது என்றே எண்ணினேன்.

மறுநாள் நானும் காயத்ரியும் கல்லூரிக்கு சென்ற வழியில் நான் எதுவும் பேசாமல் நடந்தேன். காயத்ரியும் எதுவும் பேசாமல் நடந்து வந்தாள். ஆனால் என்னால் பேசாமல் இருக்க இயலவில்லை.

''என்ன எதுவும் பேசாமல் வர''

''என்ன பேசனும்''

சில நேரங்களில் நமது மனம் நடந்து கொள்ளும் விதத்தை நினைத்தால் மிகவும் விந்தையாக இருக்கிறது. நூல் பல கற்பினும் உண்மை அறிவே மிகும் என்பது எனக்கு மிகவும் அதிசயம் தந்த வரிகள்.  படித்த முட்டாள்கள் எனும் அடைமொழி எனக்கு மிகவும் நேசிப்புக்குரியவை. இதையே ஒரு பொருளாக பேச நினைத்தேன்.

''நூல் பல கற்பினும் உண்மை அறிவே மிகும் தெரியுமா காயூ?''

''என்ன சொல்ல வர?''

''அந்த வரிக்கு அர்த்தம் தெரியுமானு கேட்டேன்''

''தெரியும், அதுக்கு இன்ன இப்போ?''

அவளது பிடி கொடுக்காத பேச்சில் எனக்கு பிடித்தம் இல்லை. படித்த முட்டாள்கள் என்றே சொல்லி வைத்தேன். அவளுக்கு கோபம் வந்து இருக்க வேண்டும்.

''என் அக்காவை பத்தி எதுவும் பேசனும்னா நேரடியா பேசு''

''காயூ, நான் எப்போ என்ன சொன்னேன்''

''படித்த முட்டாள்கள் சொன்ன''

''கர்ம வினையை கை காட்டுபவர்கள் படித்த முட்டாள்கள் என்றேன்''

''என்னையவா முட்டாள்னு சொல்ற''

வினையே வேண்டாம் என்று பேசாமல் இருந்திட நினைத்தேன். ஆனால் அவளோ மிகவும் கோபம் கொண்டாள்.

''எதுக்கு எடுத்தாலும் கர்ம வினை கர்ம வினைன்னு சொல்றியே, அதுக்கு என்ன அர்த்தம்?''

''அதுக்கு அது அது அப்படித்தான் நடக்கும்னு அர்த்தம், நீ சொன்னியே பல நூல் கற்பினும் உண்மை அறிவே மிகும் அப்படின்னு, அது கூட கர்மவினையின் செயல்பாடு. இப்படி இப்படி வாழனும்னு ஒரு வழிமுறை இருக்கறப்போ எதுக்கு மனுசங்க எல்லாம் தடுமாறனும், சொல்லு பார்க்கலாம்''

காயத்ரியின் மனதில் அவளது தந்தையின் செயல்பாடு பெரும் பாதிப்புதனை ஏற்படுத்தி இருந்ததை உறுதி படுத்தி கொள்ள முடிந்தது.

''அது வந்து....''

''முருகேசா, எப்படிடா இருக்க?'' வழியில் நான் கேட்ட சுபத்ராவின் வார்த்தைகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. சுபத்ரா பத்தாம் வகுப்பு வரை என்னோடு படித்தவள். மெல்லிய உருவம். எப்போதும் கலகலப்பான பேச்சு. தினமும் தவறாமல் எனக்கும் சேர்த்து அவள் வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வருவாள். என்னை விட மிகவும் நன்றாகவே படிப்பாள்.

அவளது தந்தையின் வேலை மாற்றம் காரணமாக பத்தாம் வகுப்பு முடித்த கையோடு வேறு ஊரு சென்றுவிட்டார்கள். இரண்டு வருடங்கள் பின்னர் இன்றுதான் அவளை முதன் முதலில் பார்க்கிறேன். சுபத்ராவை பார்த்த மாத்திரத்தில் காயத்ரியை பார்த்தேன்.

(தொடரும்)