Sunday 18 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 18

காயத்திரியின் சோகமான முகம் கண்டு அம்மா பதட்டம் கொண்டார்கள். 

''என்ன காயத்ரி, ஒருமாதிரி இருக்க, அக்காவை நினைச்சி கவலைப்படறியா?''

''இல்லம்மா''

''அப்புறம் எதுக்கு உன் முகம் ஒருமாதிரி இருக்கு''

நான் இடைமறித்தேன். 

''அந்த சுபத்ரா, காயத்ரி அக்கா வாழ்க்கை என் கையில அப்படின்னு மிரட்டிட்டு போனா''

''என்ன சொல்ற நீ''

''ஆமா''

''அவளை இப்பவே ரெண்டுல ஒன்னு பாத்துட்டு வரேன்''

அப்பா அம்மாவை தடுத்தார். 

''என்ன காயத்ரி நீ, உடனே அவங்களை அடிக்க போக துடிக்கிற, பாவம் சின்ன பொண்ணு, அவளே வருத்தமா இருக்கா''

நான் மட்டுமே என் காயத்ரியை காயூ என அழைக்கிறேன். அப்பா, அம்மாவை காயத்ரி என்றே அழைக்கிறார். 

''பிறகு என்னாங்க, என்ன நெஞ்சழுத்தம் அவளுக்கு''

வீட்டிற்கு வந்தபின்னும் அம்மா முனுமுனுத்து கொண்டே இருந்தார். காயத்ரி எதோ புத்தகம் வாசித்து கொண்டிருந்தாள், அல்லது நடித்து கொண்டிருந்தாள். மிகவும் குறைவாகவே இரவு சாப்பிட்டாள். எனக்கு மிகவும் கவலையாக போய்விட்டது. நாளை விடுமுறை என்பதால் அவளை எங்காவது அழைத்து செல்ல வேண்டும் என திட்டமிட்டேன். 

காலையில் எழுந்து அனைவரும் தயாரானோம். வாசற்கதவு தட்டப்பட்டு திறக்கப்படுகையில் சுபத்ரா நின்று கொண்டிருந்தாள். அம்மாவுக்கு கோபம் ஜிவ்வென தலைக்கேறியது. 

''அடுத்த அடி எடுத்து வைச்ச காலை வெட்டிருவேன்''

அம்மாவின் அந்த ஆவேசம் சுபத்ராவை மட்டுமல்ல எங்களையும் நிலைகுலைய வைத்தது. 

''அத்தை...''

''யாரு அத்தை, யாருடீ அத்தை. அடுத்தவங்க வாழ்க்கையில விளையாடறவங்க எல்லாம் என்னை அத்தைனு கூப்பிட என்ன அதிகாரம் இருக்கு, ஒழுங்கா திரும்பி போ, இல்லை உதைபட்டே சாவ''

அம்மாவின் கோபம் கண்டு பல நாட்கள் ஆகிப் போனது. காயத்ரி கூட பயத்துடன் இருந்தாள். அப்பாதான் அம்மாவை சமாதானம் பண்ணினார். 

''உள்ளே வாம்மா சுபா''

''என்னங்க, இது மாதிரி அசிங்கங்களை இப்பவே துடைச்சிரனும், வளரவிட்டு வேடிக்கை பார்க்க கூடாது''

சுபத்ரா அங்கே மறுகணம் நிற்கவில்லை. வேகமாக சென்றுவிட்டாள்.

''என்ன காயத்ரி நீ, வீட்டுக்கு வந்த பொண்ணை இப்படி கேவலபடுத்தி அனுப்பிட்ட''

அம்மா காயத்ரியை தனது பக்கத்தில் இழுத்து வைத்து கொண்டு 

''இதோ இந்த புள்ளையோட முகத்தை பாருங்க, இவங்க அம்மா செத்ததுல இருந்து என்னைக்கு இந்த புள்ளையால சிரிச்சி சந்தோசமா இருக்க முடிஞ்சது, இதுல இப்போ இந்த சனியன் வேற வந்து ஏழரைய கூட்ட நினைச்சா எப்படிங்க பாத்துட்டு சும்மா இருக்கிறது''

அம்மாவின் காயத்ரி மீதான பாசம் எனக்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது. அப்பாவும் சரி என பேசாமல் இருந்தார். நானும் காயத்ரியும் வெளியில் செல்கிறோம் என சொல்லிவிட்டு கிளம்பினோம். 

''காயூ எங்க போகலாம்?''

''கோவிலுக்கு''

''கோவிலுக்கு வேணாம், ஏதாவது பார்க்குக்கு போகலாம்''

''கோவிலுக்கு போய்ட்டு பார்க்குக்கு போகலாம்''

சரியென கோவிலுக்கே சென்றோம். அங்கே கோவிலில் காயத்ரியின் அக்காவும், ரங்கநாதனும் நின்று கொண்டிருந்தார்கள். 

''காயூ, நீயும் உங்க அக்காவும் பேசி வைச்சீங்களா?''

''இல்லை''

அவர்கள் இருவரையும் சந்தித்து சுபத்ரா விசயமும் சொன்னோம். ரங்கநாதன் மிகவும் கோபப்பட்டார். சுபத்ராவை தனது வீட்டுக்குள் விடாதவாறு பார்த்து கொள்வதாக சொன்னார். சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு கிளம்பினோம். 

அங்கே இருந்து ஒரு மணி நேரத்தில் பார்க் அடைந்தோம். அங்கே எனக்கு பிடித்த ஆசிரியர் அவரது குடும்பத்துடன் அமர்ந்து இருந்தார். வாங்க என வரவேற்றார். நாங்கள் இருவரும் அவரது கண்ணில் படாமல் தப்பிக்க நினைத்தோம் ஆனால் அவர் எங்களை கண்டதும் அழைத்துவிட்டார்.

''என்ன அதிசயமா இந்த பக்கம்''

''சும்மா வந்தோம் சார்''

அவரது குடும்பத்தை அறிமுகப்படுத்தினார். மனைவி, பத்து வயது நிரம்பிய பையன், பதினான்கு வயது நிரம்பிய பெண். அவர்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆசையாக இருந்தது. துறுதுறுவென பையனும், பெண்ணும் ஓடியாடி திரிந்தார்கள். 

''எங்களுக்கு இதுதான் பொழுதுபோக்கு இடம், மாசத்தில இரண்டுவாட்டி வந்துருவோம்''

''இப்பதான் சார், நாங்க முதல் முதலா வரோம்''

அவருடன் பேசிக் கொண்டிருந்த நேரம் அற்புதமான நேரம் என்றே சொல்லலாம். காயத்ரி மிகவும் லேசாக உணர்ந்தாள். ஆசிரியரின் மனைவி மிகவும் நகைச்சுவையாக பேசினார். அவர்களது திருமணம் காதல் திருமணம் என்றும், எப்படியெல்லாம் நாடகம் ஆடி திருமணம் செய்தார்கள் என்பதை விவரித்தபோது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 

''சார், நம்ம காலேஜ்ல உங்களைதான் ரொம்ப பிடிக்கும்''

''பக்கத்தில காயத்ரி இருக்கா, அதைக்கூட கவனிக்காம இப்படி சொல்றியேப்பா''

''காயத்ரியை ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார்''

''என்னங்க உங்க சூடன்ட் உங்களை மாதிரியே அறுக்கிறார்''

''ஒரே வெட்டா வெட்டத்தான் செய்வார்'' 

காயத்ரியின் பதில் எனக்கு சௌகரியமாக இருந்தது. 

அரைமணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பினோம். 

''காயூ''

''என்ன முருகேசா''

''இந்த உலகம் இரண்டே இரண்டு வகை மனிதர்களால் ஆனது''

''சொல்லு''

''ஒன்று சந்தோசம் உடைய மனிதர்கள், மற்றொன்று துக்கம் உடைய மனிதர்கள்''

''மொத்தமா பிரிச்சி வைக்க முடியாதுல''

''ஆமா, இங்கிட்டும், அங்கிட்டும் ஆடிக்கிட்டே இருப்பாங்க''

''என்னை மாதிரி''

''இல்ல, என்னை மாதிரி''

''முருகேசா, இப்படி வெளில வந்து இருக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு''

''ம்ம்''

''வாரம் வாரம் இப்படி வந்துருவோம், ஷாப்பிங், லைப்ரரி எல்லாம் வேணாம்''

''ம்ம்''

''அம்மா என் மேல பிரியமா இருக்காங்கள''

''அம்மா எப்பவும் அன்புக்கு கட்டுபட்டவங்க''

''சுபத்ராவை போய் பார்ப்போமா''

நான் காயத்ரியின் முகத்தை மட்டுமே பார்த்தேன். 

(தொடரும்)






No comments: