Wednesday 21 August 2013

கம்பன் காதலுக்கு எதிரியா, அம்பிகாபதி?

அமரக் காதல், ஜீவித காதல், தெய்வ காதல் இன்னும் எத்தனயோ பெயர் வைத்துக் கொள்ளலாம். காதல் அத்தனை தித்திப்பானது. வேப்பாங்காயை கடித்துவிட்டு இனிக்கிறதே என டுபாக்கூர் விட சொல்லும் காதல். காதல் எதையும் தாங்கும் வல்லமை கொண்டது. காதல்தனை காதலிப்பவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். எத்தனையோ புராணங்களில் காதல் புராணம் மிகவும் அற்புதமானது.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் மகன் அம்பிகாபதி மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் மகள் அமராவதியின் காதல் மிகவும் பிரசித்தி பெற்றது. முதலாம் குலோத்துங்க சோழனின் மனதுக்கு பிடித்தவராகிறார் கம்பன். கம்பனின் காவியத் திறமைக்கு மதிப்பளித்து தனது அரசவை கவிஞர் ஆக்குகிறார் சோழ மன்னர். கம்பனின் வளர்ச்சி கண்டு பொறுப்பற்ற தன்மையில் பொறாமை கொள்கிறான் ஒட்டகூத்தன்.

கம்பனின் மகன் அம்பிகாபதியும், சோழ மன்னரின் மகள் அமரவாதியும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததே சோழ மன்னர் தான். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதற்கினங்க அம்பிகாபதி மிகவும் காவிய திறமை வாய்ந்தவனாகவே வளர்கிறான். அம்பிகாபதியும், அமராவதியும் காதல் கொண்ட விசயம் கம்பன் அறிந்தபோது தள்ளாடுகிறான், அல்லாடுகிறான்.

மன்னரின் காதிற்கு விசயம் போனால் பேராபத்து விளையும் என்பதை அறிந்து கொண்ட கம்பன் அம்பிகாபதியிடம் காதலை கைவிடுமாறு கோரிக்கை விடுகிறான். மேலே எழுதிய காதல் வகைகளில் ஒன்றை குறிக்க மறந்து விட்டேன், அது பொருந்தா காதல். அமராவதிதான், அம்பிகாபதியை காதல் புரிந்து இருக்க வேண்டும், காதல் புரிய தூண்டி இருக்க வேண்டும். அரச பரம்பரையில் வந்தவர்கள் அரச பரம்பரையில் தான் திருமணம் முடிப்பார்கள் என்பது எழுதப்படாத நியதி.

இந்த காதல் விசயம் ஒட்டக்கூத்தனுக்கு தெரிய இதுதான் தக்க தருணம் என குலசேகர இளவரசனுடன் இணைந்து கொண்டு பல திட்டங்கள் தீட்டுகிறான், ஒவ்வொன்றிலும் தப்பிக்கிறான் அம்பிகாபதி.

காதல் என வந்துவிட்டால் அனைவரும் கவிஞர்களாகி விடுவார்கள். ஆனால் கவிஞன் இங்கே காதலனாகி நிற்கிறான். காதல் ரசம் சொட்ட சொட்ட அமராவதியை சிலாகித்து கவிதைகள் பொழிகிறான். ஆண்டாள் கூட தான் காதல் ரசம் சொட்ட சொட்ட ரங்கநாதன் மீது கவிதைகள்  எழுதினாள். இந்த கவிதைகளே அம்பிகாபதிக்கு எதிரிகள் ஆகின.

சோழ மன்னருக்கு விசயம்  ஒட்டகூத்தன் மூலம் சென்றடைகிறது. கம்பர் மீதான மரியாதையில், கம்பரின் வேண்டுகோளுகிணங்க அம்பிகாபதியை நாடு கடத்த உத்தரவு இடுகிறார் மன்னர். புஷ்பக தீவுக்கு செல்லும் வழியில் சென்ற கப்பல் உடைந்து அதில் கிடைத்த மரக்கட்டையின் மீதேறி செண்பக தீவு அடைகிறான் அம்பிகாபதி. உறையூரில் நடக்கும் விசயம் அவனது காத்து எட்டுகிறது. புகழேந்தி புலவரின் மகள் கண்ணம்மாவின் மூலம் அமரவாதியை சந்திக்க ஆயத்தம் செய்கிறான் அம்பிகாபதி. காதலின் வலி, அவனை அமராவதியை அழைத்து கொண்டு ஓடி செல்ல தூண்டுகிறது. அவ்வாறு திரும்பி வந்து அழைத்து செல்லும் தருவாயில் இருவரும் பிடிபடுகிறார்கள்.

இந்த முறையும் கம்பர் மீதான மரியாதையில், அமராவதி அடம்பிடித்ததில் இருந்து  அம்பிகாபதி கொல்லப்படுவதில் இருந்து மீட்கபடுகிறான். சோழ மன்னரோ கவிதைக்கு பெரும் மரியாதை தருபவர், அதன் காரணமாக அம்பிகாபதி நூறு பாடல்கள் புறம் பற்றி, அதாவது போர், அரசியல் குறித்து பாடினால் தனது பெண்ணை மணமுடிக்க சம்மதம் சொல்கிறார், அப்படி இல்லாத பட்சத்தில், கொல்லப்படுவாய் என அரசர் அரசாணை இடுகிறார். காதல் பற்றி ஒரு பாடலும் பாடக் கூடாது என்கிறார். கம்பர் அச்சம் கொள்கிறார். பெண்ணின் மீது காதல் இருக்குமிடத்து புறம் தெரிவது இல்லை. அம்பிகாபதியை மிகவும் எச்சரித்து அனுப்புகிறார். ஓட்டகூத்தனோ தனது திட்டம் தவிடு பொடியாகிவிட்டதே, தனக்கு நிகரான ஒரு புலவனின் மகன் இளவரசனா? என எப்படியாவது இந்த காதல் கரைசேர விடக் கூடாது என திட்டம் தீட்டுகிறான்.

அரச சபை கூடுகிறது. பாடல் பாட ஆரம்பிக்கிறான் அம்பிகாபதி. ஒன்று இரண்டு என தொன்னூற்றி ஒன்பது வந்தாகிவிட்டது. அனைவரும் அமைதியாய் இருக்க, வாழ்த்துபாவுடன் இணைத்து நூறு என எண்ணிக்கொண்டு காதலில் திளைத்த அமராவதி, அம்பிகாபதி முன் சென்று வெற்றி களிப்பில்  நிற்கிறாள். நூறாவது பாடலை அவள் அழகை பாடி முடிக்கிறான் அம்பிகாபதி. ஒட்டக்கூத்தன் எழுகிறான், நூறு பாடல்கள் சொன்னபடி பாடவில்லை என ஆதாரத்துடன் காட்டுகிறான். அரசர் இதை காரணம் காட்டி அம்பிகாபதியை கழுவில் ஏற்றுகிறான். அமராவதியும் உடன் இறக்கிறாள்.

கம்பர் மிகவும் சமயோசிதமாக நடந்து கொண்டும் தனது மகனின் காதலை கைகூட வைக்க முடியவில்லை. கம்பர் இந்த காதலை பொருந்தா காதல் என்றே எண்ணினார். இன்றைய காலகட்டத்தில் காதல் எதிர்ப்பு பெருகி இருக்க, அன்றைய கால கட்டம் இதைவிட சற்று மோசமாகவே இருந்து இருக்க கூடும். கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள் முன்னர் அரங்கேறிய நிகழ்வு இது. அதுவும் அரசரின் மகள்.

போட்டிகள் வைத்தே மணம் முடித்து வைக்கும் பாங்கு அன்றைய தேதியில் இருந்து இருக்கிறது. அம்பிகாபதியின் காதல் ஒரு காவியமாகி போனது. இந்த நிகழ்வுகள் வைத்தே 'பெண் புத்தி பின் புத்தி' என சொல்லப்படுவது உண்டு. அதாவது செய்து முடித்த பின்னர் யோசிப்பது. இந்த அம்பிகாபதி குறித்து இரண்டு முறை தமிழ் சினிமா குறித்து வைத்துள்ளது. இரண்டுமே மாபெரும் வெற்றி படங்கள். ஒன்று தியாகராஜா பாகவதர் நடித்தது, மற்றொன்று சிவாஜி கணேசன் நடித்தது.

கம்பரின் நிலையில் இருந்து இந்த நிகழ்வை எல்லாம் அசை போடும்போது மனம் மிகவும் அதிகமாகவே வலிக்கிறது. கம்பன் காதலுக்கு எதிரியா, அம்பிகாபதி?


1 comment:

மகேந்திரன் said...

வரலாற்று காதல் பற்றிய அருமையான அலசல் நண்பரே...