Showing posts with label எண்ணங்கள். Show all posts
Showing posts with label எண்ணங்கள். Show all posts

Friday 3 April 2015

நமது திண்ணை ஏப்ரல் மாத இணைய சிற்றிதழ்

நமது திண்ணை  (இணைப்பு) மூன்றாவது மாத இணைய சிற்றிதழ் இன்று வெளியிடப்பட்டது. இது பாராட்டுக்குரிய விஷயம். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகளை ஆசிரியர் மனமுவந்து தெரிவித்து இருக்கிறார். ஒரு இணைய சிற்றிதழ் மூலம்  சிறப்பான படைப்புகளை கொண்டு வருவது அந்த இணைய சிற்றிதழ் ஆசிரியர் மற்றும் குழுவுக்கு மட்டுமல்ல அதில் எழுதுபவர்களுக்கும் ஒரு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர் தனது பார்வையில் இதை  மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார்.  மேலும் தமிழ் எழுதுபவர்களை இது உற்சாகம் கொள்ளச் செய்யும். தமிழ் கீச்சர்கள் சந்திக்க இருக்கும் விழா ஒன்று குறித்த அறிவிப்பு இதில் இருப்பது ஆச்சரியம் அடையச் செய்தது. உண்மையிலேயே இந்த இணைய சிற்றிதழ் தமிழ் எழுத்துக்காக பெரும் பங்காற்ற இருக்கிறது என்பதை உறுதியாக நம்பலாம். ஆசிரியருக்கு பாராட்டுகள்.

தமிழ் கீச்சர்கள் பற்றி நான் விரிவாக எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. என்னால் புரிய முடியாத ஓர் உலகம் அங்கு உண்டு. அந்த உலகத்தை முற்றிலும் புறக்கணிக்கிறேன். ஆனால் இந்த இணைய சிற்றிதழ் காட்டும் உலகம் எனக்குப் பிடித்த ஒன்று. எப்போதும் அதில் மட்டுமே பயணிக்க விரும்புகிறேன்.  இந்த சிற்றிதழின் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. வெயில் காலத்தை குறிப்பிடும் வண்ணம் குளிர்ச்சியான பழ வகை, நொங்கு போன்றவைகளை கொண்டு மிகவும் அழகாக சிந்தித்து இருக்கிறார்கள். சிற்றிதழுக்கென உருவாக்கப்பட்ட வடிவம் சிறப்பு. அருமையாக வடிவமைப்பு செய்து வரும் நண்பர் அல் அமீன் அவர்களுக்கு பாராட்டுகள். எப்படி எல்லாம் இந்த இணைய சிற்றிதழ் உருவாகிறது அதற்கான பின்னணி என்ன என்பதை அறியும் போது  பிரமிப்புதான்.

முதலில் நாம் காண இருப்பது சுஷீமாசேகர் அம்மாவின் 'குகன்' எனக்கு இந்த குகன் பற்றி முன்னரே அறிந்து இருந்தாலும் பல புதிய விசயங்கள் தெரிந்து கொண்டேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும் அதற்கு மிக்க நன்றி அம்மா. மொத்தமாக ஒரு கதை படிப்பது என்பது வேறு. அதில் ஒரு கதாபாத்திரம் குறித்து படிப்பது வேறு. ஒரு படகோட்டிக்கு குகப் பெருமாள் எனும் பட்டமெல்லாம் அன்பினால் மட்டுமே சாத்தியம் என்பதை திருக்குறள் மூலம் ஆரம்பித்து வால்மீகி சொல்லாத விசயங்களை கம்பர் சொன்னார் என முடித்தபோது அருமை என சொல்லாமல் எவரும் இருக்கமாட்டார். குகன் பற்றிய வர்ணனை கம்பர் பார்வையில் இருந்து அம்மாவின் பார்வை அருமை. நீங்கள் என்றுமே பார்க்காத ஒருவர் மீது பிறர் சொல்வதைக் கேட்டு அன்பு கொள்வீர்களேயானால் நீங்களும் குகப் பெருமாள் தான். அடடா! இன்றுதான் திருமங்கையாழ்வார் குறித்து ஒரு பதிவு எழுதினேன். அதே திருமங்கையாழ்வார் குறிப்பிட்டு ஒரு பாசுரம். என்ன தவம் செய்தனை! இந்த உலகம் கொஞ்சம் விசித்திரமானது, நாம் புரிந்து கொண்டால் விசாலமானது. குகனின் பண்பு நலன்கள், பரதனிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதெலாம் படிக்க படிக்க நமக்கே அப்படி இருக்க ஓர் ஆசை வரும். பாராட்டுகள். இன்னும் பல அதிசய மனிதர்களை இந்த சிற்றிதழ் காட்டும் என்றே நம்புகிறேன்.

அடுத்து விருதுநகர். எனது தந்தை நடந்து சென்று படித்த ஊர். எனது கைராசி மருத்துவர் டாக்டர் வெள்ளைச்சாமி இருக்கும் ஊர். சிறுவயதில் கை முறிந்து லைசாண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊர். என் அம்மா, மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்த ஊர். திரைப்படம் பார்த்துவிட்டு நாங்கள் தொலைந்து போனதாக பிறரை எண்ண வைத்த ஊர். இப்படிப்பட்ட எங்கள் பக்கத்து ஊரை செல்வி. நந்தினி எங்கள் ஊர் என எழுதி இருக்கும் விதம் என்னை அந்த ஊருக்கே மீண்டும் அழைத்துச்  சென்றது. எத்தனை நினைவுகளை இந்த பதிவு கீறிவிட்டது என எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அத்தனை அருமையாக எடுத்து சொல்லி இருக்கிறார்.

 எனது முதல் நாவலில் இந்த மாரியம்மன் கோவிலை மனதில் வைத்தே எழுதினேன். என் பேரு எப்படி இந்த சாமிக்கு தெரியும் என்பது கதைநாயகனின் கேள்வி. கதைநாயகி சொல்வாள், அணுவுக்கும் அணு கூட அந்த சாமிக்கு தெரியும் என்பது போல ஒரு காட்சி. அப்படி பட்ட அந்த கோவில் சிறப்பு என அந்த பங்குனி மாதம் விழாவை குறிப்பிட்டது நாங்கள் மாட்டுவண்டியில், ட்ராக்டரில் சென்ற காலங்களை நினைவில் கொண்டு வந்துவிட்டது. இதை நாங்கள் அஞ்சாம் திருநாள் என்றே அழைப்போம். நான் சிறுவயதில் சென்றதால் அவர் குறிப்பிட்டது போல காதல் மங்கையர்களை கண்டது இல்லை. அப்போது எல்லோரும் அக்காக்களாக கண்ணுக்குத் தெரிந்து இருப்பார்கள். பொருட்காட்சி என்றால் மதுரை தான் என்றாலும் இங்கேயும் இந்த விழாவினை முன்னிட்டு விருதுநகர் ஜொலிக்கும் என்பது கண்ணில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.

கல்வி. இவர் விருதுநகர் பற்றி எழுதி இருக்கிறார் என்று சொன்னபோது நிச்சயம் கல்வி பற்றி இருக்கும் என்றே எண்ணினேன். ஆமாம், அங்கு ஒரு பள்ளிக்கூடம் உண்டு. நான் படித்த காலத்தில் கூட கல்வியில் முதலிடம், இப்போதும் தான். எங்கள் கரிசல் மண் அப்படி. விழுந்து விழுந்து படிப்போம். கல்வி காலங்களை கொண்டு வந்து காட்டியதற்கு மீண்டும் நன்றி. விருதுநகர் வியாபாரிக்கு வித்துப்போடு செல்லக்கண்ணு என பாடும் அளவுக்கு பெருமிதம் உள்ள ஊர் என சொல்லிவிட்டார். ஆமாம், எங்கள் ஊர் வியாபார ஸ்தலம் கூட அதுதான். விவிஎஸ் இதயம் நல்லெண்ணெய் முதற்கொண்டு. கல்வித்தந்தை காமராஜர் என ஒரு குறிப்பு போதும் ஓராயிரம் கட்டுரைகள் எழுதலாம் என மிகவும் சிறப்பாக சொல்லிவிட்டார்.

அதானே, எங்கே புரோட்டா இல்லாமல் போகுமா? அதுவும் சிறப்பாக சொல்லி இருக்கிறார். நான் எண்ணெய் புரோட்டா வாரம் ஒருமுறை சாப்பிட்டு விடுவேன். மதுரை புரோட்டா தினமும் படித்த காலத்தில் சாப்பிட்டது உண்டு. என்னதான் மதுரை புரோட்டா என்றாலும் அவர் சொன்னது போல விருதுநகர் விருதுநகர் தான். பங்குனி திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள் என அழைப்பு விடுத்தது அன்பின் வெளிப்பாடு. திருமணம் ஆகாதவர்களை அழைக்கிறார் என நீங்கள புரிந்துகொண்டால் அதற்கு அவர் பொறுப்பல்ல. அருமையான எழுத்துங்க, பாராட்டுகள். நந்தினி என்றால் தமிழ் ட்விட்டர் ட்ரென்ட் செட்டர் என்ற ஒரு பெயர் உண்டு. அதை இங்கும் நிரூபித்துவிட்டீர்கள். அவரது கள்ளம் அற்ற உள்ளம் போலவே அன்பு சிறப்பினை சொல்லி இருக்கிறார். சிறப்பு பார்வை சரிதானா என நந்தினிதான் இனி சொல்லவேண்டும்.

களவு போகும் உழவு எனும் கவிதை - ரிஸ்வான். உழவுத்தொழில் நசிந்து வருகிறது. ஏன்  இப்படி இருக்கிறீர்கள் என சமூக அக்கறை சொல்லும் அருமையான கவிதை. உழைப்பை நம்பி கலப்பை சுமந்து என தொடங்கி ஓர் உழவன் மண்ணில் விதையாவான், அவள் மனைவி விதையாவள் என்பது எத்தனை வலி தரும் என அந்த மண்ணில் வசிப்பவரை கேட்டுப்பாருங்கள். அந்த வலியை  வார்த்தைகளால் உணர வைத்துவிட்டார்.

நச்சுனு சிரிங்க. எல்லாமே சிறப்பாக சிரிக்க வைக்கும் ரகம் தான். எத்தனை நகைச்சுவை மிக்க மனிதர்கள் நம்மில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். சாமி சத்தியமா என்பது நல்ல விழிப்புணர்வு கதை. விஜய் என்பவர் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு மனிதரும் இப்படி திருந்திவிட்டால் இந்த உலகம் எப்படி சிறப்பாக இருக்கும். ஒருவர் திருந்த ஒரு சிறு பொறி போதும். அந்த பொறி எப்படி பற்றிக்கொள்கிறது என அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. பாராட்டுகள். பொன்ராம்  அவர்களின் நீரின்றி அமையா உடம்பு அருமையான பதிவு. தண்ணீர் சிகிச்சை முறை என்ற ஒன்று உள்ளது. முறையாக எல்லாம் செய்துவர எல்லாம் சிறப்பாக இருக்கும், நல்ல தகவல்கள் கொண்ட பகுதி. இன்னும் பல விசயங்கள் எழுதி இருக்கலாமோ என தோணியது. நற்பணி தொடரட்டும். ஆங்காங்கே சின்ன சின்ன விஷயங்கள் சிந்திக்கும் வண்ணம் ஆங்காங்கே செதுக்கப்பட்டு இருக்கின்றன.

கவிஞர் இளந்தென்றல் திரவியம் அவர்களின் அழகிய அழுத்தமான பலகாரக் கிழவி  முக்கு கவிதை. ஒரு கவிஞரின் கவித்தன்மைக்கு ஒரு சில வரிகள் போதும். அந்த கடைசி வரிகள்தான் பலரது மூக்கை உடைக்கும் வரிகள். இன்றுவரை பிள்ளைகள் ஏதும் பெறாத எந்த பெண்ணும் பலகாரக் கிழவியாய் வந்தது இல்லை. எங்கள் ஊர் அரசுப்பள்ளியினை நினைவில் கொண்டு வந்து விட்டீர்கள் சார். அட்டகாசம். பாராட்டுகள். அடுத்து சத்யா அவர்களின் அவள். ஆஹா அவள் உங்கள் கைகளில் அழகாகவே தவழ்ந்து இருக்கிறாள். கவிதையில் காதல் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது.

கீர்த்திவாசன் மற்றும் சக்திவேல் அவர்களால் எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. இந்த சிற்றிதழில் முடிந்த மட்டும் தமிழ் தலைப்பு இருப்பது நலம் என்பது எனது எண்ணம். பழமொழியும் அர்த்தங்களும் எழுதுவது எவர் எனத் தெரியவில்லை. மிகவும் சிறப்பு. போக்கத்தவன், வக்கத்தவன் என்பதான எனது அர்த்தம் வேறாக இருந்தது. ஆனால் உண்மை அர்த்தம் இப்போதே கண்டு கொண்டேன். நன்றி. வழக்கம்போல விடுகதைகள் பதில் சில தெரிந்தது. அதோடு மஹியின் பாராமுகம், பாலைவனம் ஒரு நல்ல கவிதை. பெண்கள் இதுபோன்ற கவிதைகளை தவிர்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டியது இல்லை. இப்படிப்பட்ட கவிதைகள் தான் பலரால் எழுதப்படுகின்றன. நானும் ஒன்பது வருடங்களாக பார்க்கிறேன், புரட்சி கவிதாயினிகளை காண இயலவில்லை. ஏதேனும் சொன்னால் எழுத வருவதுதானே வரும் என ஹூம் என சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.

மாறா மரபு. நான் இந்த தொடர்கதை குறித்து என்ன சொல்வது. ட்விட்டரில் கதை சொல்வது எனது வழக்கம். கதைசொல்லி என பட்டம் கொடுத்து திருமதி.மீனம்மாகயல் தந்த பரிசுதான் நான் எனது பெயர் கொண்டு இந்த வலைப்பூவில் அலங்கரித்து வைத்து இருப்பது. 'சிறந்த கதை சொல்லி' அல்ல. 'கதைசொல்லி', அவ்வளவுதான். ஒரு கதையை எந்த முகாந்திரம் இல்லாமல் தொடங்குவேன். ஒரே ஒரு வரி கதைக்கான கரு. அப்படியே அதை ஒரு நாடகத்தொடர் போல வளர்த்து செல்வேன். அப்படி ட்விட்டரில் எழுத ஆரம்பித்த கதை இது. திடீரென நிறுத்தி நாளைத் தொடரலாம் என இருந்தபோது நண்பர் அல் அமீன் கேட்டதும் மறுக்க மனம் இல்லாமல் எடுத்துக்கொள்ளுங்கள் எவரேனும் திட்டினால் நிறுத்திக்கொள்ளும் உரிமையும், கதையில் மாற்றம் செய்யும் உரிமையும் உங்களுக்கு உண்டு என்றேன். ஆனால் அவர் தைரியம் தந்த காரணமே இந்த கதை இந்த சிற்றிதழில். நன்றி சார். கதை தலைப்பு என்ன எனக் கேட்டார். உடனே மாறா மரபு என  சொன்னதுதான், தலைப்பு.  இந்த கதையை தொடர்கதையாக வெளியிடுவோம் என நண்பர் அல் அமீன் அவர்கள் சொன்னதும் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. என்னவொரு நம்பிக்கை! ஒரு வரி கூட மாற்றாமல் அப்படியே வெளியிட்டு இருக்கிறார்கள். இதைவிட எழுதுபவருக்கு என்ன சுதந்திரம் வேண்டும்? இதுவரை எந்த ஒரு தமிழ் அல்லது ஆங்கில இதழில் எனது எழுத்து வந்தது இல்லை. இப்படி ஒரு நல்ல வாய்ப்பை தந்த அவருக்கும் ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என் எழுத்துக்கான பெரும் பாக்கியம் அது.

ஆஹா பிரமாதம் குழந்தைகள் படம். அதுவும் மாஸ்டர் கானபிரபா அவர்களின் எழுத்தும், சுஷீமா அம்மாவின் எழுத்தும் என்னவொரு பொருத்தம். மனதை கொள்ளைகொண்டன எழுத்தும் குழந்தைகளும். கருப்பையா அவர்களின் வாசிப்பு அனுபவம் கேள்விபட்டது உண்டு. அவர் ஒரு அற்புத கவிஞர். அவருக்குள் ஒரு அற்புத எழுத்தாளர் இருக்கிறார். அவர் பார்வையில் சுமித்ரா எனும் நாவல் குறித்த அவரது அனுபவம் நம்மை அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் வண்ணம் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். அருமைங்க. பாராட்டுகள். அதுவும் நூல் விமர்சனம் முடிக்கும்போது எழுதப்பட்ட வரிகள் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் சிந்தனை போல உள்ளது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும். சுமித்ரா ஒரு பிரமிப்பு.

சாப்பாடு பக்கம். நளபாகம் ரவி அவர்களின் அக்கி ரொட்டி தயாரிப்பு. பெயரே வித்தியாசம். சப்பாத்தி போல ஆனால் இது சப்பாத்தி அல்ல என அழகாக சொல்லி இருக்கிறார். மைதா மாவு இல்லாதபோது இந்த அரிசி மாவு கொண்டு அக்கி ரொட்டி செய்து மனம் மகிழுங்கள். பாடல் பரவசம் மூலம் நம்மை பரவசபடுத்தி இருப்பவர் செல்வி.உமாகிருஷ். எடுத்துக்கொண்ட பாடல் வெகு சிறப்பு. மிகவும் அற்புதமாக விவரித்து இருக்கிறார். அதுவும் எனக்குப் பிடித்த ரஜினி. நான் இப்படி எல்லாம் ரசித்தது இல்லை. எனக்கு ரஜினி திரையில் இருந்தால் போதும், ரஜினியாகவே நான் உணர்வேன். இவரது எழுத்து வாசித்த பின்னர் ரஜினியை யோசித்துப் பார்த்தேன். பிரமாதம். வரிகள், இசை சிலாகித்த விஷயம் சரி.

ஒரு கவிஞர் என்ன மனோபாவத்தில் எழுதினார் என்பது கவிஞருக்கே வெளிச்சம். அவர் குறிப்பிட்டது போல பாடியதில் தவறு சாத்தியம்தான். ஆனால் இது ஒரு கவிஞரின் எழுத்து என வரும்போது நினைத்தாயோ என்பதை விட நிலைத்தாயோ ஒரு படி மேல்தான். அப்படித்தான் புரிந்து கொண்டேன் என்கிறார். அதுதான் சரி. மறப்பேனா என்ற ஒரு மன நிலையில் நீ நிலைத்துவிட்டாயா? என்ன ஒரு அக்கிரமம் என்பது போல அந்த வரியை எடுத்துக்கொள்ளலாம். அட! இத்தனை தூரம் வரிகள் சிலாகிப்பார்களா என ஆச்சரியமூட்டும் விசயங்கள்.

தேசிய விருது குறித்து எழுதி இருப்பது மகிழ்ச்சி. இறுதியாக ஆசிரியரின் தெரிந்த பிரபலங்கள் தெரியாத உண்மைகள். சந்திரபாபு, நான் ரசித்த ஒரு அற்புத கலைஞன். பல தகவல்கள் அறிய முடிந்தது.

ஆக மொத்தத்தில் இந்த சிற்றிதழ் ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவத்தை தந்தது. எல்லோர் மனதிலும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இந்த இணைய சிற்றிதழ். நமது எழுத்தை எப்போது இந்த சிற்றிதழ் ஏற்றுக்கொள்ளும் என பலரை எண்ண வைத்து இருப்பது  இந்த சிற்றிதழ் பெற்றுவிட்ட மாபெரும் பெருமை. சிறந்த வடிவமைப்பு, நல்ல கருத்துகள் தாங்கி வந்து இருக்கிறது என்றே சொல்லி மகிழ்வர். ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்தினைத் தாண்டி பாருங்கள். பிரமிக்க வைத்து இருக்கிறார் நண்பர் அல்  அமீன்.

அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

'தமிழ் வளர்த்த நமது மண்ணை 
தமிழ் கொண்டு சிறக்க 
வைப்பது நமது திண்ணை' 

நன்றி 

Saturday 14 March 2015

நமது திண்ணை - சிற்றிதழ் மின்னிதழ் ஒரு பார்வை

மின்னிதழ் நமது திண்ணை இங்கே

எனக்கு தமிழ் தாங்கி வரும் இதழ்களில் ஆர்வம் எப்போதோ முற்றிலும் குறைந்து போனது. குமுதம், ஆனந்தவிகடன் எல்லாம் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. எங்கேனும் தமிழ் இதழ் வாசிக்க கிடைத்தால் உள்ளே சினிமா சினிமா மட்டுமே. அதை குறை கூறவும் முடியாது. அறிவை வளர்த்துக்கொள்ள இது போன்ற இதழ்கள் எல்லாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் தவறான விண்ணப்பம் ஆகும்.

திரு. அல் அமீன் அவர்கள் இந்த நமது திண்ணை - சிற்றிதழ் மின்னிதழை எனது பார்வைக்கு கொண்டு வந்தார். அவருக்கு நன்றி. இது ஒரு மாத மின்னிதழ். சிற்றிதழ் என்பதால் மிக மிக குறைவான பக்கங்கள் எனினும் நல்ல விசயங்கள் உள்ளடக்கி இருந்தது. 17 பக்கங்கள் கொண்ட முதல் இதழ் பிப்ரவரியில் வெளிவந்து இருக்கிறது. 21 பக்கங்கள் கொண்ட அடுத்த இதழ் மார்ச் மாதம் வெளிவந்து இருக்கிறது. முதல் இதழில் மாதம் குறிப்பிடவில்லை. 

முதலில் என்ன இருக்கிறது எப்படி இருந்தது என பார்த்துவிடும் முன்னர் இந்த மின்னிதழின் ஆசிரியர் திரு. ஆந்தைகண்ணன் முயற்சியை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அவரது உரையில் தமிழை வளர்க்கும் ஆர்வம், தமிழ் எழுதுபவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கம் என குறிப்பிட்டு இருப்பது பாராட்டுக்குரியது. இவருக்கு உறுதுணையாக இந்த மின்னிதழை சிறப்பாக வடிவைமக்க உதவிய நண்பர் திரு அல் அமீன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். 

முதல் இதழின் அட்டை பக்கத்தில் பல முகங்கள் தென்படுகின்றன. அதில் எனக்குத் தெரிந்த முகங்கள் பலர் இருந்தார்கள். இதழின் உள்ளே பல படங்கள் இருக்கின்றன. அவை ஏனோ தெளிவின்றி காணப்படுகிறது. இரண்டாவது இதழில் உள்ளிருக்கும் படங்களில் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது என சொல்லலாம். இரண்டாவது இதழின் அட்டைப்படத்தில் தமிழர் விளையாட்டு குறித்து காணப்படுகிறது. பல்லாங்குழி விளையாட்டில் நாங்கள் புளியம்பழ முத்துக்கள் வைத்து தான் விளையாடி இருக்கிறோம். தாயம் விளையாடுவதற்கு கூட ஒரு பக்கம் உரசப்பட்ட முத்துகள் உபயோகித்து இருக்கிறோம். சோசியர் உபயோகிக்கும் முத்துகள் பல்லாங்குழியில் இருப்பது ஆச்சரியம். அட்டைப்பட வடிவமைப்பை சற்று மெருகேற்றினால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அதைப்போல 'நமது திண்ணை' என்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்டு எல்லா இதழிலும் ஒரே மாதிரியாக வந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். திண்ணை என்பதற்கு ஆசிரியர் தந்த விளக்கம் சரிதான். திண்ணை ஒரு ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஓர் இடம். எங்கள் கிராம வீட்டில் திண்ணை இருந்தது. இப்போது அது மூடப்பட்டு எவரும் அமர இயலா வண்ணம் இருப்பது வருத்தம் தரக்கூடியது.

முதலில் சுஷீமா அம்மாவின் என் பார்வையில் திரௌபதி. இவரது எழுத்து மிகவும் எளிமையாக அனைவரையும் கவரும் வண்ணமாக இருக்கும். ஒரு பெண்ணின் பெருமையை சொல்லும் எழுத்து என சொல்லலாம். சீதை, அகலிகை, மன்டோதரி, தாரை பற்றி குறிப்பிட்டு திரௌபதி பெருமை சிறப்புதான் என எண்ண வைக்கும் வகையில் சிறப்பாக எழுதி இருக்கிறார். பெண் அடிமை என்பதெல்லாம் நாம் ஏற்படுத்திக் கொண்டது என அன்றே ஒரு பெண்ணின் திறமையை போற்றி இருக்கிறார்கள், வெற்றி பெற்று இருக்கிறார் என தெளிவாக சொல்லி இருக்கிறார். அடுத்த இதழில் எடுத்துக்கொண்ட என் பார்வையில் அனுமன். மிகவும் அருமையாக இருந்தது. பொக்கிஷம் போல போற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஸ்லோகம் மற்றும் எழுத்து. எங்கிருந்தோ வந்து குரங்கு ராமர் கதை கேட்கும் விஷயம்  நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதுவும் வணங்கியது போல நிற்கும் அனுமன். பிரமாதம். உங்கள் எழுத்துகளில் எப்போதும் அன்பு இருக்கும். திருக்குறள், கம்ப ராமாயணம் என அருமை. ஆன்மிகம் குறித்த எனது குறுக்குசால் எண்ணங்களை கைவிட வேண்டும் என எண்ண  வைத்துவிட்ட உங்கள் எழுத்துக்கு பாராட்டுகள்.

அடுத்ததாக 'நளபாகம்' நண்பர் ரவி. இவரது சிந்தனை கண்டு வியப்பது உண்டு. அதுவும் மகளே என அனு, நிவேதி, கோதை, ரேணுகா, நிலாமகள் போன்ற சக பெண் ட்விட்டர்களை இவர்கள் அழைக்கும்போது நிறைய ஆச்சரியம் அடைவது உண்டு. எத்தனை உரிமையாக பழகும் எண்ணம். அதுவும் இவரது நளபாகம் அனைவரிடத்தில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. சமையல் செய்ய இவரது இணையதளம் எனக்கும் உதவியது என்று சொல்வதில் மகிழ்ச்சிதான். முதல் இதழில் மைசூர் பாகு. அடுத்த இதழில் கைமா இட்லி. மிகத் தெளிவாக எழுதி இருக்கிறார். படித்ததும் சமைக்க வேண்டும் என எண்ணம் வரும்படி இருக்கிறது. பாராட்டுகள்.

செல்வி. உமாகிரிஷ் அவர்களை புரட்சி பெண்மணி என்றே சொல்லலாம். சமூக ஆர்வலர். இசைப்பிரியை. இவர் சென்ற வருடம் இளையராஜா இசைக்குழு நிகழ்வுக்கு சென்று வந்து எழுதிய கட்டுரையில் நம்மையும் அங்கே அழைத்து சென்றுவிட்டார். அதுபோல இவர் முதல் இதழில் குறிப்பிட்ட பாடல் பரவசம் அபாரம். இசை, பாடும் விதம், பாடல் வரிகள், பாடியவர் நளினம் என அற்புதமான விவரிப்பு. எனக்கு மிகவும் பிடித்த பாடல் கூட. இரண்டாவது இதழில் பாடல் கேள்விபட்டது இல்லை. அதற்காக இசை சண்டை எல்லாம் செய்து விடாதீர்கள். ஆனால்  அந்த பாடல் மூலம் எழுந்த எண்ணங்கள் என அவர் சொன்ன விசயங்கள் ஒவ்வொன்றும் அருமை. பனை ஓலை கொண்டு பதநீர் குடித்தது உண்டு. குருத்தோலை என்றெல்லாம் நான் கேள்விபட்டது கிடையாது. பல விசயங்கள் அறிய முடிந்தது. பாராட்டுகள்.

கவிதை என இரண்டு இதழிலும் எடுத்தவுடன் தொடங்குகிறது. முதல் இதழில் ரிஸ்வான் அவர்களின் புதிய வரவு கவிதை. குழந்தைகளின் வலி சொல்லும் கவிதை. தாயின் உருவம் வரைதல், பாலூட்டி செல்தல் என பல வரிகளில் நம்மை மனம் வலிக்க செய்து புதிய வரவுதனை குப்பை தொட்டியில் எதிர்பார்க்கிறேன் என முடிப்பது சமூக அவலம் மாறவில்லை என்பதை குறிப்பிடுகிறது. அடுத்த இதழில் மிஸ்டர்.ஒயிட் என்பவரின் நண்பேன்டா கவிதை பாடல் வரிகளை போல வாசித்து செல்லும் வகையில் அமைந்து இருக்கிறது. ஒவ்வொருவரும் அந்த வரிகள் சொல்லும் நிகழ்வில் இருந்து இருப்பார்கள். இருவருக்கும் பாராட்டுகள்.

அடுத்து நகைச்சுவை, சிரிங்க நல்லா சிரிங்க. எனக்கு நகைச்சுவை என்று சொன்னதும் திருமதி ஜனனி என நினைக்கிறேன். அவர்கள் சொன்ன 'மொக்கை ஜோக்குக்கும் விழுந்து விழுந்து சிரிப்பான்' என்பதுதான் எனக்கு நினைவுக்கு வரும். திரு முருகன் மற்றும் திரு செந்தில்குமார் அவர்களின் நகைச்சுவை அருமை. திரு செந்தில்குமார் அவர்களின் நகைச்சுவை தனித்துவம் வாய்ந்தது என்றே சொல்லலாம். எவரேனும் ஒரு நகைச்சுவையை கொண்டு வந்து யாரோடது என கேட்டால் திரு. செந்தில்குமார் என சொல்லிவிடலாம். அதற்காக என்னை பரிசோதிக்க வந்துவிடாதீர்கள். திரு முருகன் வித்தியாசமான சிந்தனையாளர்.

திக் திக் திக் எனும் கதை ஒரு கனவுதான் என எண்ணும்படியாக  மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார் சம்பத். சுதா ஆனந்த் அவர்களின் ஹைக்கூ அருமை. விடுகதை என இரண்டு இதழ்களிலும் உள்ளது. மிகவும் நல்ல முயற்சி. திரு விவேக் மற்றும் திரு சுரேஷ் அவர்களின் ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் என இரண்டு இதழ்களில் வெளிவந்து இருக்கும் விசயங்கள் அந்த செல்பேசி பயன்பாட்டாளருக்கு நன்மை தரும். ஜப்பான் திரு ரகு அவர்களின் புகைப்படங்கள் அழகு சேர்க்கின்றன. எப்போதும் போல திரு பரணி அவர்களின் ஓவியங்கள் மிகவும் அருமை. மின்னிதழில் சற்று தெளிவாக வந்தால் நல்லது. இரண்டாவது இதழில் திரு ராஜா முகம்மது அவர்களின் புகைப்படங்கள் மற்றும் திரு தினகர் அவர்களின் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. இப்போது இந்த புகைப்படங்கள் ஓவியங்கள் என்ன சொல்ல வருகின்றன எனும் ஆராய்ச்சியை இப்போதைக்கு தள்ளி வைப்போம். பொதுவாக புகைப்படங்கள், ஓவியங்கள் தங்களுக்குள் ஒரு பெரும் கதையை மறைத்து வைத்துக் கொண்டு இருப்பதாக சொல்வார்கள். எதையோ எடுக்கிறோம், எதையோ வரைகிறோம் என்பதல்ல. அதற்காக பின்னணி குறித்து ஒரு கதையே எழுதலாம். வாழ்த்துகள்.

மருத்துவர் நேரம் என டாக்டர் வந்தனா அவர்களின் சர்க்கரை நோய் பற்றிய விபரங்கள் மிகவும் அருமை. பயனுள்ள விசயங்கள் இருந்தது. அடுத்த இதழில் பல் மருத்துவர் டாக்டர் ரியாஸ் அகமது அவர்களின் பற்சொத்தை மிகவும் சிறப்பும் பயன்படும் வண்ணம் இருந்தது. இந்த சர்க்கரை வியாதி மற்றும் பல்லுக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த இரண்டு விசயங்களை அடுத்து அடுத்து இதழில் கொண்டு வந்தது வெகு சிறப்பு. வாழ்த்துகள்.

முதல் இதழில் திரு கவுண்டமணி, இரண்டாவது இதழில் திரு எம் ஆர் ராதா குறித்து பல விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இதை ஆசிரியர் அவர்களே எழுதி இருக்கிறார்கள். அப்படியே தமிழ் புலவர்கள், தமிழ் அறிவியல் அறிஞர்கள் என குறிப்புகள் இருப்பது கூட நன்றாக இருக்கும். நூல் விமர்சனம் இரண்டவாது இதழில் உள்ளது, வெகு சிறப்பாக பிறர் நூலை வாங்கும் வண்ணம் எழுதி இருப்பது சிறப்பு. எழுத்தாளர் முத்தலிப் அவர்களுக்கு பாராட்டுகள். திரு சாத்தூரான் அவர்களின் பாட்டி கதை இவ்வுலகில் அன்பு எப்படி இருக்கிறது, எப்படி மனிதர் கஷ்டம் கொள்கிறார்கள் என அறிய முடிந்த அழகிய பதிவு. நிறைய அனுபவங்கள் கொண்டவரும் இயற்கையை நேசிப்பவரும் ஆவார். அருமை.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வித்தியாசம். என்ன காரணத்திற்கு சொல்லப்பட்டு இருக்கும் அதன் பின்னணி என்ன என அலசிப்பார்க்கும் பழமொழிகள் குறித்த எண்ணங்கள் அருமை. திரு பாலகணேஷ் அவர்களின் புதிர் சிறப்பு. மேலும் ஆங்காங்கே டவிட்கள் மின்னுகின்றன. முன்னரே படித்து இருந்தாலும் இதழில் படிக்கும்போது அதற்குரிய சிறப்பே தனிதான்.

ஒரே வரியில் விமர்சனம் - நமது திண்ணையில் வெட்டிக்கதைகள் பேசப்படுவதில்லை.

ஆசிரியர் திரு. ஆந்தைகண்ணன், வடிவமைப்பாளர் திரு அல் அமீன் அவர்களின் முயற்சி தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

நன்றி. 


Thursday 12 December 2013

நான் வரைந்த ஓவியம்

எனக்கு ஓவியம் வரையவே தெரியாது. ஏதேனும் ஒன்று வரைய வேண்டும் என நினைத்து உன் முகம் தனை பலமுறை மன கண்களில் கொண்டு வந்தேன்.

தூரிகையை எடுத்த போது கைகள் வெடவெடவென நடுங்கி தொலைந்தது. அறையின் கதவுகள் எல்லாம் மூடினேன். என்றைக்கும் இல்லாத திருநாளாய் தூரிகையை கீழே வைத்துவிட்டு ரவிவர்மனை நெஞ்சுருக வேண்டினேன்.

அறையின் சிறு வெளிச்சத்தில் நடுங்கிய கைகளுடன் மீண்டும் தூரிகையை கையில் எடுத்தேன். உனது முகம் மின்னலாக வந்தது. தாளினை சரி செய்தேன்.

வரைய எத்தனித்தபோது அறையின் கதவு தட்டப்பட்டது. வெகுவேகமாக தாள், தூரிகை என மறைத்து வைத்தேன். கதவினை திறந்த போது நீ வந்து நின்றாய்.

இருட்டு அறையில் என்ன செய்கிறாய் என கேட்டாய். உன்னை வரைய முனைவதாக சொன்னேன். கலகலவென சிரித்தே உனக்கு வரைய வராதேடா என்றாய்

எனக்குள் அழுகை வந்ததை நீ அறிந்திருக்க மாட்டாய். சரி, கிறுக்கித் தொலை என சிரித்து நகர்ந்து விட்டாய். நீ கொடுத்த தைரியம். வரையத் தொடங்கினேன்.

ஈஸ்வரா எனக்கு வரையத் தெரியாதே. மனம் அடக்கி வரைந்தேன். ரவிவர்மன் மண்டு இது என்ன கண்ணா? கடுகு மாதிரி இருக்கு என மனதில் இருந்து திட்டினார்.

கூந்தலை வரைந்த போது மனம் கூனியது. ஒரு தேவதையை, பேய் மாதிரியா வரைவது, உன் விரல்களை உடைக்க வேண்டும் என்றார் ரவிவர்மன். மீண்டும் கதவு தட்டும் ஓசை.

நீ வந்து நின்றாய். வரைந்த ஓவியத்தை தயக்கத்துடன் உன்னிடம் காட்டினேன். என்ன சொல்வாய் என எச்சில் விழுங்கினேன்.

டேய், என்னை மாதிரியே செமையா வரைஞ்சிருக்கேடா என்றாய். இனிமே என்னை மட்டும் வரைடா, உனக்கு வரைய வரும் என்றே நகர்ந்தாய்.  நான் கண்கள் கலங்கி நின்றேன். ஏன் தெரியுமா?

என் மீதான உன் காதலை நான் புரிந்து கொண்ட தருணம் அது. ரவிவர்மன் தலைகுனிந்தார்.


Thursday 14 November 2013

இன்னுமொரு கிரகத்தில் மனிதர்கள்

எத்தனை கதைகள் வந்து இருக்கும், எப்படி எல்லாம் மனிதர்கள் கற்பனையில் வேற்று கிரகவாசிகள் வந்து போய் இருப்பார்கள். உயிரினங்கள் பூமியில் இருந்து தோன்றி இருக்காது எனவும்,வேறு ஒரு கிரகத்தில் இருந்தே வந்து இருக்க கூடும் என்றே ஒரு கோட்பாடு உண்டு.

இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் கிட்டத்தட்ட பத்து பில்லியன்கள் வருடங்கள் முன்னர் தோன்றி இருக்க கூடும் என்பது ஒரு தோராயனமான கணிப்பு, இது கிட்டத்தட்ட நமது சூரியக் குடும்பம் தோன்றியதற்கு முன்னர் உள்ள கணிப்பு. இன்றுவரை பலரும் வேறு கிரக உயிர்கள் சாத்தியம் என்றே நம்புகிறார்கள். ஆனால் இதுவரை அப்படி கிரக உயிர்கள் இருப்பதாக எந்த ஒரு அடையாளமும், குறிப்புகளும் கிடைக்கவில்லை.

தேவலோகம், இந்திரலோகம் என்றெல்லாம் எதை வைத்து கற்பனை செய்தார்கள் என புரியாத புதிராக இருக்கிறது. ஒருவேளை அப்படி இருந்து அவை எல்லாம் பிற்காலத்தில் நம்மை விட்டு வெகு தூரம் சென்று விட்டதா என எந்தவொரு அடையாளம் இல்லை. வைகுண்டம் எல்லாம் எங்கே இருக்கும் என்றே மிகவும் யோசனையாக இருக்கிறது. இவை எல்லாம் கற்பனை என்றே புறந்தள்ளிவிட முடியாது. புராணங்கள் கணக்குப்படி அன்றைய கால கட்ட மனிதர்களின் வயது காலம் பன்மடங்கு இருந்தது என்றே குறிக்கிறது.

இந்த பிரபஞ்சத்தில் பூமிக்கு என்று மட்டுமே ஒரு சிறப்பு தன்மை இல்லை, இதைப்போல பல கிரகங்கள் பிரபஞ்சத்தில் உண்டு என சொல்வது புராணங்கள் அல்ல, மாபெரும் அறிவியலாளர்கள். வியாழனின் கிரகத்தில் ஈரோப்பா நிலா, சனி கிரகத்தின் என்செலாடஸ் எனும் நிலா போன்ற இடங்களில் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

நவம்பர் நான்காம் தேதி 40 பில்லியன் பூமி போன்ற கிரகங்கள் இருப்பதாகவும், அதில் 11 பில்லியன் பூமி போன்ற கிரகங்கள் சூரியன் போன்ற நட்சத்திரங்களை சுற்றி வருவதாக சொல்லப்படுகிறது. இரண்டு வருடங்கள் முன்னர் வேற்றுகிரகவாசிகள் எவரேனும் தொடர்பில் உள்ளனரா என அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மனு தரும் அளவிற்கு மனிதர்கள் சிலர் வேற்று கிரக வாசிகள் இருப்பதாகவே நம்புகிறார்கள்.

இந்த பூமி எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் இருந்தவர்களுக்கு அமெரிக்காவில் இருந்தவர்களை தெரியாது. ஆனால் மனிதர்கள் இங்கும் அங்கும் இருக்கவே செய்தார்கள். இவர்களுக்கான தகவல் தொடர்பு, வழித் தொடர்பு என எதுவும் இல்லை. ஆப்பிரிக்காவில் தொடங்கிய மனித சமூகம் உலகமெலாம் பரவியது என இருப்பினும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட முப்பது நாற்பது வருடங்கள் முன்னர் வெளிநாடு என்றாலே பெரிய விசயமாக கருதப்பட்டது. ஆனால் இன்று மூலை முடுக்கெல்லாம் எல்லா நாடுகளும் தெரிகிறது

இதே போலவே வேறு கிரகத்தில் நம்மை போலவே மனிதர்கள் இருந்தாலும் அவர்களை தொடர்பு கொள்ளும் தொலைவில் நாம் இல்லை. ஏனெனில் பன்னிரண்டு ஒளிவருடங்கள் தொலைவில் ஒரு பூமி போன்ற கிரகம் உள்ளது. ஒரு ஒளிவருடம் என்பது ஒரு வினாடிக்கு 300000000 மீட்டர்  என கணக்கில் சொல்லப்படுகிறது. இதை ஒருநாள், ஒருவாரம், ஒரு மாதம் ஒரு வருடம் என கணக்கில் கொண்டு பார்த்தால் மிக அதிக தொலைவு என்பது புலப்படும். மனித வாழ்நாள் குறைந்து போனதால்.பல விசயங்கள் சாத்தியம் அற்றதுதான்.

ஒரு உயிரினம் தோன்ற மிக முக்கியமாக கார்பன், ஹைட்ரஜன்,ஆக்சிஜன், நைட்ரஜன், என்பதோடு பாஸ்பரஸ்,கந்தகம் தேவைப்படுகிறது. முக்கியமான வேதி வினைகள் நடைபெற தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை எல்லாம் இருந்துவிட்டால் உயிரினம் சாத்தியம் என்றே கருதப்படுகிறது.

நமது சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்து இருக்கலாம் என்பது பலரின் அசைக்க முடியாத நம்பிக்கை.இந்த அறிவியல் எப்படி வேண்டுமெனில் தேடட்டும்,

இன்னுமொரு கிரகத்தில் இருக்கும் மனிதர்கள் நம்மை தொடர்பு கொள்ள, நாம் அவர்களை தொடர்பு கொள்ள இன்னுமொரு யுகம் ஆகலாம்.

 

Friday 15 October 2010

கவிதா அவர்களின் பெண்ணிய ஆணாதிக்க சிந்தனை

அழகிய கட்டுரையை எழுதியமைக்கு பாராட்டுகளுடன்.

முழு விசயத்தையும் எழுதி மறுமொழி அனுப்பினேன். மிகவும் பெரிதான மறுமொழி என கூகிள் மறுத்துவிட்டது. எனவே அதை இங்கே வெளியிடுகிறேன்.

கவிதா அவர்களின் கட்டுரையில் (முழு கட்டுரை படிக்க) நான் நினைக்கும் முரண்பாடுகள்.

௧. //அவளே முதல். அவளே முடிவும்.//

இந்த வார்த்தைகள் மூலம் கட்டுரையின் மொத்த சாரமும் தொலைந்து விடுவதாக கருதுகிறேன். 

௨. //ஒரு பெண் நினைத்தால் நல்லவனை கெட்டவன் ஆக்கலாம், கெட்டவனை நல்லவனாக ஆக்க முடியும். அது தான் பெண்ணிற்குண்டான தனித்தன்மை//

இதுவும் கூட ஒரு விதத்தில் மிகவும் பொய்யான பிரச்சாரம். ஒரு ஆண்  கூட இதை எளிதாக செய்துவிட முடியும். எத்தனை மனைவிமார்கள் கணவனை புரிந்து கொண்டு வாழ்க்கையை திருத்தி அமைத்து இருக்கிறார்கள் என்பதை ஒரு படம் எடுத்துதான் சொல்ல வேண்டும். 

௩ //பெண் என்பவள் எப்படி ஆணால் ஆதிக்கம் செய்ய படுகிறாளோ அதே போன்று, ஆணும் பெண்ணால் ஆதிக்கம் செய்ய படுகிறான் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை//

ஆதிக்கம் என்பதற்கும், அன்பின் வெளிப்பாடு என்பதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. பொதுவாக ஒரு விசயத்தை சொல்லும்போது இது போன்ற 'இதுதான் முடிவு' என்பது போன்ற வாசகங்கள் பெரும் சறுக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. பல வேளைகளில் வாழ்வில் அன்பின் வெளிப்பாடு என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். எங்கிருந்து ஆதிக்கம் வந்தது? புரிதலை தொலைத்து நிற்கும் கூட்டங்கள் நாம்.

௪ //ஒரு பெண் தான் இன்னொரு பெண்ணுக்கு எதிரி.//

இதுவும் ஒரு போலியான பார்வைதான். உலகில் இந்த விசயம் பரவலாகவே பேசப்படுகிறது. ஒரு பெண் மட்டுமல்ல, ஆணும சரி. அவரவர் அவரவருக்கு எதிரி. இதில் எந்த பாகுபாடும் இல்லை. 

௫. //பெண்ணிற்கு தேவையானவற்றை அறிந்து செய்பவன், அல்லது செய்ய விடுபவன் ஆணாக இருக்கிறான்.//

இங்கே பெண்ணுக்கு எனப்படும் சுதந்திரமும், ஆணுக்கு எனப்படும் சுதந்திரமும் தொலைந்து விடுகிறது. ஒரு ஆண் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் காரணிகள் வாழும் சூழல் பழக்க வழக்கங்கள் எனும்போது சில முரண்பாடுகள் எழும். 

௬. //குறிப்பாக மனைவியை பற்றி பேச விரும்புவதில்லை. முடிந்த அளவு தானே சமாளிக்கிறார்கள்.//

இதுவும் ஒரு பொது காரணி தான். எனக்கு தெரிந்த பலர் அவரவர் மனைவியை பற்றி சொல்வது உண்டு. உங்கள் விசயம், பார்த்து கொள்ளுங்கள் என்பதுதான் எனது பதில். 


ஒரு கணவன் மனைவி என்பவர்கள் அவர்களுக்குள் இருக்கும் பிணக்குகளை அவர்களே தீர்த்து கொள்ளும் வலிமை பெற்று இருக்க வேண்டும். இதை யார் வலியுறுத்துவது? தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வெளி காரணிகள் அதிகம். 

கவிதா,

//ஒவ்வொரு ஆணையும் தனியாக விசாரித்து... எனும் வரியில் இருந்து

பரிதாப நிலையில் கூட இருக்கிறார்கள். முடிக்கும் வரை//

இதற்கு என்ன காரணம் என தெரிந்து கொள்ள முயற்சி செய்து இருக்கீர்களா? 


இதற்கு ஒரு காரணம் நம்பகத்தன்மை. மறைத்து செயலாற்றுவது. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது. இந்த ஆண்கள் படும் பாட்டிற்கு பெண்கள் காரணம் அல்ல, ஆண்களே காரணம். வெளிப்படையாக வாழும் எந்த ஆணும் சரி, பெண்ணும் சரி பிரச்சினைக்கு உட்படமாட்டார்கள் எனக் கொள்ளலாம். வேசம் கட்டும்போதுதான் வாழ்க்கை நாசமாகிறது. 

௬. //பெண்ணின் புலம்பல்கள் பெண்ணியமாகிறது, ஆணின் அமைதி ஆணாதிக்கமாகிறது என்று தான் என் புரிதலாக இருக்கிறது.//

இது சரியில்லாத புரிதல் என்றே கருதுகிறேன். நான் பெண்ணியம் பற்றியோ, ஆணாதிக்கம் பற்றியோ எழுதாதற்கு காரணம் ஒன்று தான். உயிரினங்கள் தன்னை நிலை நிறுத்தி கொள்ள எது வேண்டுமெனினும் செய்து தொலைக்கும். இதில் பாகுபாடு பார்ப்பது எவ்வாறு. 


சற்று சிந்தித்து பாருங்கள். 


பெண் எல்லா நேரத்திலுமா புலம்பி கொண்டே இருக்கிறார்.


ஆண் எல்லா நேரத்திலுமா அமைதியாக இருக்கிறார்.

௭. //பெண்ணால் சட்டென்று முடியாத பல விஷயங்கள் ஆணால் முடியும்.//

நீச்சல் குளம் விசயம் எனக்கு மிகவும் புதிராக இருந்தது. முதலில் உயிரை காப்பாற்ற குதித்தது ஒரு பெண் தானே! 


பெண்ணாலும் முடியும் என்பது தொலைந்து போன நம்பிக்கையா? 


இதை இதை பெண்கள் செய்தல் கூடாது என வரையறை வைத்து கொள்ள சொன்னது யார்? 


எனக்கு தெரிந்த பெண்கள் பலர் சாமர்த்தியசாலிகள், தைரியசாலிகள். 

--------------------------------

நான் பல விசயங்களை இந்த கட்டுரையில் ரசித்தேன். குறிப்பாக 

//ஆண்களின் ஆதிக்கம் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகிறது. பெண்களின் ஆதிக்கம் அவர்களின் இயல்பு//

//பெண்ணியம் பேசியும் ஆணாதிக்கவாதி என பறைசாற்றிக்கொண்டும் அவரவர் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாமல், இருவரும் அவரவர் வேலையை ஆண் பெண் ஈகோ இல்லாமல் செய்து வந்தாலே பிரச்சனை வராது//

இருவரும் என்பதில் அனைவரும் என்று சொல்லி இருக்கலாம் தான். :) 


 நன்றி கவிதா.

கடைசியாக 


முரண்பட வேண்டும் என எண்ணினால் மட்டுமே எந்த ஒரு விசயத்திலும் முரண்பட்டு கொள்ள முடியும். ஏற்று கொள்ளும் பக்குவம் வரும்போது, எதுவுமே செய்ய இயலாது என்கிற பொது எல்லாமே சரி என்றுதான் போக தோன்றும். வாழ்வில் நாம் இரு நிலைகளிலும் வாழ்ந்து விடுகிறோம் என்பதுதான் கொடுமை. 

Wednesday 21 April 2010

விவகாரமான எழுத்தாளர்கள்

யார் எழுத்தாளர்கள் எனும் கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது? புத்தகம் வெளியிட்டு விட்டால் அவர் எழுத்தாளரா? வலைப்பூ அல்லது வலைத்தளத்தில் மட்டும் பதிபவர்கள், எழுத்தாளர்கள் எனும் அங்கீகாரம் பெறாதவர்களா?

எழுத்தாளர்கள் எனும் அங்கீகாரம் உடையவர்கள் சொந்த வலைத்தளமோ, அல்லது வலைப்பூவோ வைத்துக்கொண்டு எழுதுவார்கள். எனவே இவர்களை பதிவர்கள் என அழைத்தல் முறையல்ல செயலோ?

எழுத்தாணி பிடித்தவர் எல்லாம் எழுத்தாளர்கள் ஆகி விட முடியாது என சொல்வது வழக்கம் தான். ஆனால் இப்போது பதிவர்கள் எனப்படுபவர்கள் புத்தகம் வெளியிட்டு தங்களை எழுத்தாளர்கள் எனச் சொல்லப்படும்  அங்கீகாரம் பெறத் துணிந்து விட்டார்கள், மேலும் பலர் தங்களை எழுத்தாளர்களாகவே சித்தரித்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.  எனவே இனிமேல் பதிவர்கள் என இவர்கள் எவரையும் அழைப்பது முறையல்ல. எழுத்துதனை ஆள்பவர்கள் அனைவருமே எழுத்தாளர்கள். அப்படி பார்க்கையில் ஒருவகையில் இந்த பதிவர்கள் எழுத்துதனை ஆளத் தொடங்கிவிட்டார்கள்.  இதுவல்ல பிரச்சினை. 

பிரச்சினை என்னவெனில் இந்த  எழுத்தாளர்கள் மனதில் ஒரு பெரிய எண்ணம் தோன்றி இருக்கிறது. அது என்னவெனில் தங்களை சமூக நல காவலர்கள் போல் சித்தரித்துக் கொள்வது. எழுதுவதால் மட்டுமே எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு வந்து விடும் எனும் இவர்களின் விபரீதமான கனவுதனை மிகவும் நேர்த்தியாகவே செய்கிறார்கள்.

கணினியின் முன்னர் அமர்ந்து எழுதும் உலகத்துக்கும், அதைத் தாண்டி வெளியில் இருக்கும் உலகத்துக்கும் எத்தனை வித்தியாசம் என்பதை இந்த  எழுத்தாளர்கள் அறிந்திருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு விஷயத்தை எப்படி வேண்டுமெனிலும் சிந்தனை செய்யலாம் என்பது சிந்திக்கத் தெரிந்த மானுடத்துக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு.

பலர் மனதில் இருப்பதை எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் எழுதுவதால் நன்றாகவே பிறரிடமிருந்து சொல்லடி படுகிறார்கள். இவர்கள் இதை எல்லாம் கணினியில் பதிவாக எழுதுவதால்தான் இந்த பிரச்சினை.   இவர்கள் நினைப்பதை எல்லாம் ஒரு புத்தகமாக போட்டுவிட்டால் படிப்பவர்களுக்கு மட்டுமே பிரச்சினை எனவும் இருந்து விட முடியாது, ஏனெனில் புத்தகம் வெளி வந்த பின்னரும் பிரச்சினையாகி விடும் நிலை இருந்துதான் வருகிறது.  

பல விசயங்களில் பலரும் எழுதி எழுதியே சிக்கித் தவிக்கிறார்கள். இது எழுதுபவர்களது பிரச்சினை என எவரும் இருப்பதில்லை, எப்படி இப்படி நடக்கலாம், சொல்லலாம் என சில காலத்திற்கு எங்கெங்குத் திரும்பினாலும் நடந்து முடிந்த விசயங்களை உலகப் பிரச்சினை போல இந்த எழுத்துகள் ஆக்கி விடுவது ஒருவித மாயை.

இதில் என்ன சுவாரஸ்யம் எனில் விசயம் சம்பந்தபட்டவர்கள் பற்றி ஒரு கண்டன அறிக்கை விடுவது வாடிக்கை. பிரச்சினை தீர வழி எதுவும் இவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் அதிலும் மிக மிக சுவாரஸ்யம். முன்னாள் எல்லாம் தெருவுக்கு தெரு பத்திரிக்கை படித்து பேசிக் கொள்வார்கள். பெட்டிக்கடையில் ஒருவருக்கு ஒருவர் முட்டி கொள்வார்கள். இப்பொழுது கணினி பெட்டியில் தட்டி கொள்கிறார்கள். ஒரு விஷயத்தை மாற்று கோணத்தில் சிந்திப்பது சற்று கோணலாக சிந்திக்கும் வண்ணம் தெரிவதால் எழுத்துகளும், எழுதுபவர்களும் விவகாரமானவர்களாகவேத் தெரிகிறார்கள்.   இது போன்ற சிந்தனைகளை தவிர்த்தலும், எழுதுவதும் அவரவர் சிந்தனைக்கு உட்பட்டது எனினும் சில வரைமுறைகள் உள்ளது.  மேலும் இந்த விவகாரம், பார்க்கும் கண்களில் இருக்கிறது எனும் தத்துவம் வேறு.

இப்பொழுது ஒரு பிரச்சினை தட்டப்படும், அடுத்த ஒரு பிரச்சினை வந்ததும் முதல் பிரச்சினை முடிந்துவிடும். இந்த எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்கு பிரச்சினைகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் ரகசியத்தின் மர்மம எதுவோ.

வள்ளுவர் சொல்வார்

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

அது சரி, எவரெல்லாம் விவகாரமான எழுத்தாளர்கள்? எவரையும் கை காட்டுவது முறையல்ல என்பதாலும் அப்படி எவரும் எவரையும் கைகாட்டுவதால் அவர்களும் விகார சொரூபமாக திகழ வாய்ப்பு  இருப்பதாலும் யானைப் போரை கண்டு களியுங்கள், சோளப்பொரிதான் எனினும்.

Thursday 25 February 2010

அடுத்தவங்க பார்க்கிறாங்க - நன்றி மருத்துவர் ருத்ரன்

//சமுதாயம் என்பது என்ன? யார் அந்த நாலு பேர்? உறவினரா, உற்றாரா, ஊரில் பழக்கமானவர்களா, உழைக்கும் தளத்தில் உடன் இருப்பவர்களா? காணாதும் வாழ்வில் அறியாதும் சுற்றி இருக்கும் அநாமதேயங்களா? யார்தான் அந்த முக்கியமான நாலு பேர்? அவர்கள் சொல்படித்தான் நடக்கிறோமா அல்லது அவர்கள் ஏதும் சொல்லிவிடக்கூடாதே என்று நடந்துகொள்கிறோமா?//  படிக்க

தனிப்பட்ட பதிவாகவே எழுதிவிட விழைகின்றேன், இருப்பினும் இது குறித்து ஒரு சில வரிகளில் சொல்லிவிடலாம் என்ற நோக்கத்துடனே இங்கேயே எழுதுகிறேன் என்றுதான் எழுத ஆரம்பித்தேன், பதில் நீண்டு கொண்டே சென்றதால் ஒரு தனிப்பதிவாகவே இங்கே வெளியிடுகிறேன். அவரது மற்ற இரு கேள்விகளுக்கும் அவரது தளத்திலேயே பதிவிட்டுவிட்டேன். அவை வெளிவந்ததும் இங்கே ஒரு கேள்விக்கான பதிலை மட்டும் இணைத்துவிடுகிறேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது அவருடைய கேள்விகள்.

1. சமுதாயம் என்பது ஒரு கூட்டமைப்பு. நமது செயல்பாடுகள் மட்டுமே இந்த சமுதாய கூட்டமைப்பில் ஒரு அங்கத்தினராக நம்மை கொண்டு சேர்க்கும். நமது வேலை உண்டு, நமக்கு என்ன செய்ய வேண்டும், நமது பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என சமுதாய சூழலில் சிக்காமல் செயலாற்றும்போது சமுதாயத்தில் நாம் சிக்கிக்கொள்வதில்லை. அவரவர் வேலை அவரவருக்கு என்கிற கோட்பாடு நமக்கு இருக்கும் பட்சத்தில் சமுதாயத்தில் நம்மால் ஒரு பெரும் தாக்கம் கொண்டு வர இயலாது. மணிக்கணக்கில் நின்றாவது நமக்கு வேண்டுமென்பதை சாதித்துக்கொள்வோம், இதுகுறித்து ஆதங்கப்படுவதுடன் நிறுத்திக்கொள்வோம். போராட்டம் எல்லாம் செய்ய மாட்டோம் எனில் அங்கே நமது சமுதாய பங்களிப்பு குறைந்துவிடுகிறது.

2. அந்த நான்கு பேர்கள், தாய், தந்தை, இறைவன், இறைவனற்ற, அதாவது மனசாட்சியாகிய நமது மன எண்ணங்கள், மற்றும் நல்லாசிரியர், அதாவது நமக்கு நல்வழிகளென பகுத்தறிந்து சொல்பவர்கள்.

இதில் முதல் இருவரும் அன்பை முன்னிறுத்தி அவர்கள் மனதில் எது சரியென நமக்குப்படுமோ அதைச் சொல்லக்கூடியவர்கள். நமது சரி என்பதெல்லாம் பலரிடம் இரண்டாம் பட்சமே, மேலும் அன்பின் காரணத்தால் உனக்கு எது சரியென எது படுதோ அதைச் செய் என நாம் நன்றாக இருக்க வேண்டும் எனும் உயரிய நோக்கம் மட்டுமே உடையவர்கள்.

மூன்றாவது நாம், இங்கேதான் ஒரு தனிமனிதரின் சுயசிந்தனை, சுயசெயல்பாடு மிகவும் அவசியமாகிறது. எந்த சூழலில் எப்படி செயலாற்றவேண்டும் என்கிற பக்குவமும், செயல்பாடும் தீர ஆராய்ந்து வரவேண்டும், அப்படி வரும்போது தவறு களையப்பட்டு விடும், இது தேவையா, அது தேவையா? என்கிற ஒரு அலசல் பல விசயங்களில் தேவையின்றி பேசுவதை, செயல்படுவதை குறைத்துவிடும்.

கடைசியாக ஆம், நல்லாசிரியர்கள், நாம் நன்றாக கற்றுக்கொள்ளும் மாணவனாகவே இங்கே செயல்பட வேண்டும். ஒருவர் சொல்கிறார் என்பதை நன்கு ஆராய்ந்து செய்ய வேண்டும். நமக்கென சிலர் இருப்பார்கள், ஆங்கிலத்தில் 'வெல் விஷ்ஷர்ஸ்' என சொல்வார்கள். நமக்கு நன்மை தீமை என நேரும்போதெல்லாம் நம்பிக்கை கொடுத்து தூக்கி விடுவார்கள், திருமணமானவர்களுக்கு இதில் மனைவியோ கணவனோ பெரும் பங்கு வகிக்கக்கூடியவர்களாக இருப்பது மிகவும் அவசியமாகும். நண்பர்கள், அநாமதேயங்கள், உற்றார், உறவினர்களும் இதில் சேர்த்தி எனில் வாழ்க்கை சகல செளகரியங்கள் கொண்டதாகும்.

3. வாழ்க்கைச் சூழலானது மிகவும் அசெளகரியங்களையும், செளகரியங்களையும் கொண்டது. பிறர் சொல்கிறார்களே என நாம் நடந்து கொள்வது என்பது அந்த சூழலில் பிறர் மனம் வருந்தக்கூடாதே எனும் எண்ணம் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது.

 நம்மை நாம் நன்றாக கவனித்துப் பார்த்தோமெனில் 'காம்ப்ரமைஸ்' செய்து கொண்டு வாழும் ஒரு சமூக அங்கத்தினராகவே நாம் இருக்கிறோம். நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தியாவதில்லை, அப்பொழுது ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிடுவதை தவிர்க்க இயலாது.

இப்பொழுது தாய், தந்தை, நமது மனசாட்சி, நல்லாசிரியர்கள் என அவர்கள் சொல்வது எல்லாமே ஒன்றாக இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்சினையும் நடந்து கொள்வதில் இருக்காது, அதே வேளையில் ஒன்றுக்கொன்று முரணாகப் போகும்போது வேறுபாடுகள் முளைத்து குழப்பம் விளைகின்றது, அந்த குழப்பத்திற்கான தீர்வு காணும்போது ஒரு தெளிந்த மனமே அதாவது மனசாட்சி, மனதில் எழும் எண்ணங்கள், ஒரு முடிவாக அமைந்து விடுகிறது.

தவறு எனத் தெரிந்தும், சரி என நமது மனம் கட்டுப்பட்டு விடுகிறது. பிற பெண்களுடன் தகாத உறவு, ஆண்களுடன் தகாத உறவு, சமூக ஒழுக்கீனங்கள், திருடுதல், கொள்ளையடித்தல், ஏமாற்றிப் பிழைத்தல், மக்களை புறக்கணிக்கும் அரசு, மக்கள் உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் அரசு என்பன போன்றவைகள் எல்லாம் அவரவர் மனதில் அவையெல்லாம் சரியெனத் தோன்றுவதும் மேலும் ஒரு தவறுக்கு அடிமைப்படும் அந்த எண்ணங்களும் ஆகும். எனவே நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் தீர்மானித்துக்கொள்ள வேண்டும், இருப்பினும் பல சங்கடங்கள் இருக்கின்றன. நால்வர் சொல்வதை மட்டுமேக் கேட்டு நடப்பதைக் காட்டிலும் எது நன்மை பயக்கும் என செயல்பாடுகளை வாழும் காலங்களில் மாற்றியமைத்தல் மிகவும் சிறப்பு.

எவருமே தவறாகப் போக வேண்டுமென முடிவு எடுப்பதில்லை. ஒரு விசயத்தில் எடுக்கப்படும் முடிவானது, அல்லது நாம் நடந்து கொள்ளும் விதமானது சரியாகவேப் போக வேண்டும் என்கிற எண்ணம் எல்லோரிடத்திலும் உண்டு. பொதுவாகப் பார்த்தால் அடுத்தவங்க பார்க்கிறாங்க என நம்மை நாம் வழிநடத்தினாலும், பல நேரங்களில் நமக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ அதைச் செய்து விடுகிறோம், அது தவறாகவே இருந்தாலும் சரி, ஒழுக்கம் கெட்ட செயலாக இருந்தாலும் சரி.

நன்றி மருத்துவர் அவர்களே.

Tuesday 19 January 2010

அறிவுரை

அறிவுரை என்பது எளிதாகக் கிடைப்பது என்பார்கள். எவர் வேண்டுமெனிலும் அறிவுரை சொல்லலாம் எனவும் சொல்வார்கள். அறிவுரை சொல்வோர் அதே அறிவுரைப்படி நடக்கிறார்களா என்பது பற்றி ஆராயவும் கூடாது எனவும் சொல்வார்கள். இதைச் சுருக்கமாக 'ஊருக்கு உபதேசம்' எனச் சொல்லப்படுவதும் உண்டு.

உட்கருத்து, வெளிக்கருத்து எனச் சொல்லிக் கொண்டே காரியத்தில் கருத்தாக இல்லாது இருப்போர் இவ்வுலகில் உண்டு. 'நான் எப்படி எல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன், அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என சொல்லும் யோக்கியதை எனக்கு உண்டு' என்பார் ஒரு கவிஞர்.

உங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் நீங்கள் சொல்லிவிட்டு, அது எல்லோருக்கும் புரிய வேண்டும் என நினைப்பதும், அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதும் எத்தனை சிரமமான காரியம் தெரியுமா, எனவே எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே சொல்வதை உங்களது பணியாக வைத்துக் கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பம் என அறிவுறுத்தும் அறிஞர் பெருந்தகைகளும் உண்டு.

நான் ஒன்றைச் சொல்வதற்கு முன் அதன்படி என்னால் வாழ முடிகிறதா என யோசித்து செய்துப் பார்த்து விட்டேச் சொல்வேன் என இருந்த ஞானிகளும் உண்டு. ஒரு கருத்தானது பிறருக்கு நன்மை விளைய வேண்டும் எனும் நோக்கில்தான் சொல்லப்படுவது, ஆனால் அதே கருத்தினை தீமை விளைவிக்கும் வகையில் வகைப்படுத்துவது எனும்போது கருத்துச் சிதைவு ஏற்படுகிறது.

தீபம் கொண்டு திருக்குறள் படிக்கலாம், கூரையையும் கொளுத்தலாம் என்பார் ஒரு கவிஞர். உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் பொருளை நீங்கள் எப்படி பயன்படுத்த நினைக்கிறீர்களோஅதன் பலன் அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்வது விவேகம். ஆயுதங்கள் தற்காத்துக் கொள்ள வேண்டிதான் உருவாக்கப்பட்டன என வைத்துக் கொண்டோமெனில் அதே ஆயுதம் பிறரைப் பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ளாது போனோம்.

அவரவர் அறிந்த உண்மை அறிவே மிகும் எனும் நிலை இருப்பதினால், அவரவர் கருத்துப்படி திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் சமாதானமும், அமைதியும், அன்பும், பணிவும், ஒருவருக்கொருவர் உதவியாக இருத்தலும் என உலகைச் செம்மைப்படுத்த நாம் நம்மைச் செம்மைப்படுத்துவோம்.

Wednesday 23 September 2009

தாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக

தாய்மையைக் கேள்வி குறியாக்கும் செய்திகள் தொடர்ந்து அறிந்து கொண்டே வரும் வேளையில், சமீபத்தில், தனது இரண்டு குழந்தைகளை உயிருடன் கொன்ற தாய் பற்றிய செய்தி அறிந்ததும், ஒரு தாய் எப்படி தனது குழந்தைகளைக் கொல்லத் துணிவாள் எனும் கேள்வி மனதில் எழாமல் இல்லை. நம் வீட்டில் எதுவும் நடக்காதவரை எல்லாமே கேள்விக்குறியாகத்தான் இருக்கும் என்பதை அறியாமல் இல்லை.

நல்லதங்காள் கதையைக் கேள்விபட்ட போதே எப்படி ஒரு தாய் இப்படி தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறாள் எனும் கேள்வியும் எழுந்தது.

தனது மகள் வேறொருவனைக் காதலிக்கிறாள் என அறிந்ததும் அந்த மகளை உயிருடன் எரித்த தாய் பிறந்த ஊரில் தான் நானும் பிறந்து இருக்கிறேன் என எண்ணும்போதே இந்த தாய்மையை பற்றி சிலாகித்துப் பேச மனம் முன்வருவதில்லை.

தாய்மை உணர்வைத் தூக்கி எறிந்துவிட்டு நவநாகரீகத்தில் உழலும் பெண்கள் பற்றி பேசினால் ஆணாதிக்கம் எனும் அவச்சொல் வந்து சேர்ந்துவிடும் என்பதாலேயே நடப்பதெல்லாம் நடக்கட்டும் என இருந்துவிடத்தான் ஆசை.

வாழ்க்கையில் போராட முடியாமல், அவமானம் தாங்க இயலாமல் தாய்மை தள்ளாடுகிறது. இதுபோன்ற தாய்மை பற்றி விரிவாக எழுதத்தான் ஆசை. ஆனால் உலகம் அறிந்த மக்களிடம் ஒன்றைப் பற்றி நாம் சொல்ல வருமுன்னரே, அது என்ன ஏது என அறியாமல், அதைப்பற்றிய திசைமாறிய எண்ணங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும் என்பதால் இப்படியே விட்டுவிடுகிறேன்.

இதுகுறித்து எழுதுவோர் எழுதட்டும்.

Monday 14 September 2009

தேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்

ஜெஸ்வந்தி அவர்கள் தேவதையை வந்து அழைத்துச் செல்லுமாறு அழைப்பு விடுத்தார்கள். நானும் சென்று தேவதையை அழைத்து வந்துவிட்டேன். எனக்கு தேவதையிடம் பத்து வரங்கள் கேட்க விருப்பமில்லை. ஒரே வரம் கேட்கலாம் என நினைத்து

''தேவதையே உன்னைப் போல் பிறருக்கு வரங்கள் அருளும் பாக்கியம் எனக்கு கிட்ட வேண்டும்'' என சொன்னேன்.

என்ன நினைத்தாளோ, தேவதை எங்கு போனாள் எனத் தெரியவில்லை!

எவரையும் வந்து அழைத்துச் செல்ல என்னிடம் அந்த தேவதை இப்போது இல்லை, மிகவும் வருந்துகிறேன்.











Friday 31 July 2009

கவிதை காலப்போக்கில் இலக்கணங்களை இழந்துவிடுமா?

கவிதைக்கான இலக்கணங்கள் என்ன எனத் தெளிந்துகொண்டால் இழப்பும், இழப்பாகாது இருப்பதும் அறியத்தகும். 'வெறும் வார்த்தைகள்' என தமிழ் இலக்கணம் ஏதும் அறியாமல், தெரிந்து கொள்ளவும் முயற்சிக்காமல் ஒரு கவிதைப் புத்தகம் வெளியிடும் நிலைக்கு வந்துவிட்ட எனக்கு இந்தக் கேள்வியைப் பார்த்ததும் கவிதை என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திற்கும் புதிய இலக்கணங்களை வரையறுத்துக் கொண்டது என சொல்லத் தோன்றுகிறது, ஆனால் அது ஒப்புக்கொள்ளக் கூடிய விசயமல்ல.

வாழ்க்கை என்றால் இப்படித்தான் என ஒரு இலக்கணம் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கணம் வைத்துக்கொண்டு வாழ்வதைப் போல கவிதைக்கு என இலக்கணங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கணம் என ஆகிப்போனதில் அதிசயமில்லை. ஆனால் உண்மையிலேயே கவிதைக்கு இலக்கணம் அவசியமா? அவசியம், அநாவசியம் என்பது எழுதுபவரைப் பொருத்து அமைகிறது எனும் நிலைக்கு கவிதைத் தள்ளப்பட்டுவிட்டது. மருத்துவர் தொழிலை ஒரு பொறியியல் படித்தவர் செய்வது போல! எவர் எத்தொழில் வேண்டுமெனில் செய்யலாம் எனில் எதற்கு முறையான படிப்பு என வந்தது? இது இருக்கட்டும்.

கவிதை என்றால் என்ன எனக் கேட்டால்

நீ பேசும் வார்த்தையெல்லாம் கவிதை - அட
நீ பேசாத வார்த்தைகளும் கவிதை

என எழுதும் வல்லமையை கவிதை என்று சொல்லிக்கொண்டால் எல்லாமே கவிதைதான்! எல்லாமே கவிதை எனும்போது அதற்கு ஏது இலக்கணம்!

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை கவிதைக்கான இலக்கணம் என்று கூறி

உள்ளத் துள்ளது கவிதை
இன்ப உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்
உண்மை தெரிந்துரைப்பது கவிதை

என பாடியிருப்பது பலருக்குத் தெரிந்திருந்தால் தாங்கள் எழுதும் பலவிசயங்களை கவிதை எனச் சொல்லமாட்டார்கள். எழுத்துக்கும் வார்த்தைக்கும் இலக்கணம் உண்டு அதுபோல கவிதைக்கும் இருக்கிறது. 'நாளை நான் சாப்பிட்டேன்' எனச் சொன்னால் ''நாளை நான் சாப்பிடுவேன்' எனச் சொல்லித் திருத்தலாம். கவிதையில் எது சரி, எது சரியில்லை என யார் சொல்லித் திருத்துவது.

செய்யுள் வடிவாக இருந்த தமிழ் மொழிக்கு தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என இலக்கணம் வகுத்தது. 'யாப்பெருங்கலக் காரிகை' கவிதைக்குரிய இலக்கணம் பற்றி எடுத்தியம்புகிறது. எதுகை, மோனை, சீர், அணி, அடி, தொடை, தளை, குற்றியலுகரம், குற்றியலிகரம், அளபெடை என பலவகையான விசயங்களை அறிந்து வைத்துக்கொண்டே கவிதை எழுத வேண்டுமெனில் இவையெல்லாம் இல்லாது எழுதப்பட்டவைகள் எல்லாம் வெறும் வார்த்தைகளே எனத் தைரியமாகச் சொல்லலாம்! கவிதையில் இனிமையைத் தருவது எதுகையும் மோனையும் எனச் சொல்வார்கள். எதுகையையும் மோனையையும் மட்டுமே வைத்து எழுதப்பட்டவை இலக்கணம் உள்ள கவிதை என்பது எப்படி சொல்ல இயலும்.

அறிஞர் அண்ணா எழுத ஆரம்பித்துச் சொல்கிறார்

பாடுகிறான் அண்ணன் ஓர் கவிதை என்று
பரிவாலே எண்ணிடாதீர் உடன் பிறந்தாரே!
சீர் அறியேன், அணி அறியேன், சிந்தை உந்தும்
செய்தி தனைத் தெரிவித்தேன்; ஆசையாலே.

இதுதான் உண்மை. தமிழ் இலக்கணம் ஏந்தி வருவதே கவிதை. ஆனால் நாங்கள் எழுதுவது கவிதை இல்லை, எழுதுவது புதுக்கவிதை எனச் சொல்லி எழுதினார்கள்.

//'கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத் தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர். ( அல்குர்ஆன், 26:224-226)//

//கவிதையில் உண்மை இருக்க வேண்டும். கவிதை என்ற பெயரில் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுப் பொய்யையும் புனைச் சுருட்டையும் சேர்த்து இட்டுக்கட்டக்கூடாது. கவிதையின் இலக்கணம் அதன் ஒவ்வொரு வாசகத்திலும் உண்மை பொதிந்திருக்க வேண்டும். இதையே இஸ்லாம் விரும்புகின்றது. புனைவுக் கவிதைகளில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கும் கவிஞனின் வயிறு கவிதையால் நிறைந்திருப்பதைவிட சீழ் சலத்தால் நிறைந்திருப்பது எவ்வளவோ மேல் என்ற கருத்தைச் சொல்லிக் கண்டிக்கிறது இஸ்லாம். அவ்வாறான கவிதைகளையும், கவிஞர்களையும் விட்டு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும்'' நன்றி: சத்தியமார்க்கம் இணையதளம்.//

//கவிதை, மனிதர்களுடைய வாழ்வில் ஏற்படும் இன்ப, துன்பங்களையும் அனுபவங்களையும் நன்கு எடுத்துக்காட்டுகின்றது; மேற்கண்ட அனுபவத்தால் ஏற்படும் சுவைகளையும் உண்மையான உணர்ச்சியோடும், இயல்பான தன்மையோடும் எடுத்து இயம்புகின்றது. எனவே கவிதையில் கருத்து, கருத்துக்கு உயிரூட்டும் உணர்ச்சி, கற்பனைச் செழுமை, பொருள் புலப்பாடுக்குரிய ஏற்ற வடிவம் ஆகிய நான்கும் இன்றியமையாதவைகளாகும். நன்றி: (டாக்டர்.சி.பாலசுப்பிரமணியன்)//

//சோகமோ, வீரமோ, காமமோ, காதலோ, எந்த உணர்ச்சியாக இருந்த போதிலும் கூட அது நல்ல உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு, வார்த்தைகளால் வடிவமைப்பதுதான் கவிதை. எனக்கு தெரிந்து கவிதைக்கு இலக்கணம் வரையறுக்கப்படக்கூடாது. கவிதைக்கு இலக்கணமே இல்லை என்கிற போது, கவிதை என்பதற்கு என்ன இலக்கணம் என்று கேட்பது இன்னும் பிற்போக்காக அமையும். எனவே கவிதை என்பது காலந்தோறும் மாறிக் கொண்டே வருகிற விஷயம். நன்றி: வைரமுத்து//

காலப்போக்கில் கவிதைக்கு இலக்கணமே தேவையில்லை என சமுதாயம் அறிவுறுத்தப்பட்டது. உண்மையில் கவிதை தமிழ் இலக்கண வடிவத்தைத் தொலைக்கவில்லை. இழக்கப் போவதுவமில்லை. எழுதுபவர்கள் இழந்துவிட்டார்கள், தொலைத்துவிட்டார்கள். கற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். கவிதை எழுதத் தெரியாது போனார்கள். எனவே இவர்கள் எழுதுவதை இனிமேலாவது கவிதை எனச் சொல்லாமல் இருந்தாலே போதும். ஆக இழப்பு நமக்குத்தானேயன்றி தமிழ் கவிதைக்கு அல்ல. மேலும் செய்யுள், பா போன்றவை கவிதை வடிவம் கொண்டதாக கருதுபவர்களும் உண்டு. செய்யுள் பா போன்றவைகள் கவிதைக்கான இலக்கணம் இருந்ததை மறுக்க இயலாது. இது தமிழ் மொழிக்கும் பொருந்தும்.

பல விசயங்களைத் தொலைத்து நிற்கும் சமுதாயமாகவே எல்லா விசயங்களிலும் மாற்றம் என மாறிக்கொண்டேயிருக்கிறோம். இந்த மாற்றம் அழிவின் பாதைக்கா? ஆக்கப் பாதைக்கா? என்பதை நாளைய சமூகம் குறித்துக்கொள்ளட்டும்!


Sunday 5 July 2009

கேள்வியும் பதிலும் - 13

13. உங்கள் வாழ்வில் நீங்கள் தமிழை நேசிப்பது பெருமையாக இருக்கின்றது இங்கிலாந்தில் இருந்தாலும் தமிழ் நேசித்து தமிழுக்காய் சேவை செய்து வருகின்றீர்கள் உங்கள் நுனிப்புல் காண ஆவலோடு இருக்கின்றோம் அந்த வகையில் நீங்கள் தமிழை நேசிக்க மூலகாரணம் என்ன அண்ணா?

இந்த கேள்விக்குப் பதில் தொடங்கும் முன்னர் ஏ ஆர் ஆர் அண்ணன் அவர்களுக்கும் தங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழை நேசிக்க மூலகாரணம் என எடுத்துக்கொண்டால் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்தது எனச் சொல்லலாம்.

வீட்டில் நாங்கள் பேசும் மொழி தெலுங்கு. அதனை தெலுங்கு என்று சொல்வதைவிட தமிழ்-தெலுங்கு என சொல்லலாம், நாங்கள் பேசுவது இரண்டு மொழிகளின் கலவையாக இருக்கும். வீட்டில் தெலுங்கு பேசிக்கொண்டாலும் எனது சிறுவயதில் எனது மனதுக்கு எனது தாய்மொழி தமிழ்தான் என தோன்றியது, இப்பொழுதும் சரி எப்பொழுதும் சரி தமிழ்தான் எனக்கு ஓரளவுக்கு தெரிந்த மொழி. எனது பள்ளிச் சான்றிதழிலும் தாய்மொழி தமிழ் என்றே இருக்கும். தெலுங்கு பேசும் மொழியாகிப் போனது வீட்டுடன், உறவுகளுடன். தமிழ் பேசிக் கற்கும் மொழியாகிப் போனது. பள்ளிகளில் தமிழ் மொழி மூலமாக கற்றதன் விளைவு தமிழ் மேல் ஒரு பற்றினை ஏற்படுத்தியது எனலாம். அறிவியல், வரலாறு, புவியியல் தமிழில் இருந்தாலும் கூட தமிழை தமிழாக கற்றது மனதிற்கு ஆனந்தமாக இருந்தது. இந்த வகையில் தமிழை மிகவும் நேசிக்க காரணமானவர் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியை திருமதி சாந்தா. பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற அக்கறை தமிழை அக்கறையுடன் கற்றுக்கொள்ளத் தூண்டியது. இந்த ஆர்வமானது மேலும் பெருகிட உதவியவர் பதினொன்று பன்னிரண்டாம் வகுப்பில் கற்றுத்தந்த தமிழ் ஆசிரியர் திரு. இரத்தினசபாபதி. அதற்குப் பின்னர் தமிழுடன் கற்றுக்கொள்ளும் உறவு குறைந்து போனது, ஆனால் பற்று மட்டும் விட்டுப்போகவில்லை.

கவிதைகள் கதைகள் என எண்ணங்களை எழுத்தில் வைத்திட இந்த தமிழ் மிகவும் உதவியாக இருந்தது. சிறு வயது முதல் தமிழில் பேசுவது வசதியாக இருந்தது. மேலும் கவிதைகளும் கதைகளும் பேச்சும் தமிழ் மேல் இருந்த நேசத்தை நிலைநிறுத்திக்கொள்ள உதவின. திருவள்ளுவர், பாரதியார், ஒளவையார் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். தமிழ் நேசிக்க உதவிய மூலகாரணத்தினை முழுவதுமாய் உண்மையாக்கிட உதவிய உபகாரணங்கள் நினைவு கூறத்தக்கவை.

தமிழ் அறிவு எனக்கு குறைவுதான். 1996ல் என்னுடன் கல்கத்தாவில் ஆந்திர மாநிலத்தினை சேர்ந்த ஒருவர் பயின்று வந்தார். அவர் தமிழகத்துக்குச் சென்றதில்லை, ஆகவே என்னிடம் தமிழ்நாட்டிற்குச் செல்கிறேன் அங்கு உள்ள பேருந்து எண்கள் தமிழில் எழுதி இருக்குமே அதனால் எனக்கு தமிழ் எண்கள் எழுதித் தா என்றான். நானும் உதவி செய்கிறேன் என வேகமாக 1 , 2 , 3 என எழுதி 10 வந்த பின்னர் அதற்கடுத்த எண்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்து 11 , 21 என வரும் என எழுதிக் கொடுத்தேன். அதை அவன் பார்த்துவிட்டு 'இதுதான் எல்லா ஊர்களிலும் இருக்கிறதே' என்றான். இதுதான் தமிழ் எண்கள் என்றேன், ஒரு சில விநாடிகளில் எனக்கு உண்மை உரைத்தது, அட தமிழ் எண்கள் க என்றல்லவா ஆரம்பிக்கும், அவனிடம் தமிழ் எண்கள் எல்லாம் பேருந்தில் இருக்காது என சொல்லி வைத்தேன் அன்றைய வருடத்தின் பெரும் நகைச்சுவையாகிப் போனது அது. இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. தமிழுக்காக சேவை என்றெல்லாம் எதுவுமில்லை, தமிழ் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. நன்றி.

Saturday 4 July 2009

கேள்வியும் பதிலும் - 12

12. உலகில் சிலர் துன்புறுவதற்குக் காரணம் பூர்வ ஜென்ம பலாபலன் என்று கூறக்கேட்டுள்ளோம்.

அவ்வாறு பூர்வ ஜென்ம தொடர்ச்சி என்பது உண்மையா..? முற்பிறவியின் நிகழ்வுக்கான பேறோ, தண்டனையோ அடுத்த பிறப்பிலும் தொடரும் என்னும் கருத்து உங்களுக்கு ஒப்புதல் உடையதா..?

எனது பதிலை எழுதும் முன்னர் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ முதல் பாகத்தில் கண்ணதாசன் அவர்கள் எழுதியதில் சில உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

‘ஒவ்வொரு உயிரும் மறுபிறப்பெடுத்து நன்மை தீமைகளை அனுபவிக்கிறது’ எனும் இந்துக்கள் நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. ‘பத்வீம் பூர்வ புண்ணியானாம்’ என்பது வடமொழி சுலோகம். ‘மேலைத் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்’ என்பதும் தமிழ் மூதுரை. முற்பிறப்பின் கரும வினைகள் அடுத்த பிறப்பிலும் தொடர்கின்றன.

‘இட்டமுடன் என் தலையில் இன்னபடி
என்றெழுதி விட்ட சிவன்’

என்றொரு பாடல் சொல்கிறதே, அதன் பொருள் என்ன? ஒவ்வொரு உயிரின் வாழ்வும், தாழ்வும், வறுமையும், வளமும், நோயும், சுகமும், இறப்பும் மறுபிறப்பும் ஆண்டவனின் இயக்கமே என்பதைத் தவிர வேறென்ன? ஆண்டவனின் தீர்ப்புக்கு யாரும் தப்ப முடியாது. ஒரு தலைவருக்குப் புற்றுநோய் வந்தபோது ‘நாத்திகம் பேசியதால் வந்தது’ என்றார்கள். ஆத்திகம் பேசிய இரமணரிஷிக்கு ஏன் வந்தது?

இன்பத்தையோ துன்பத்தையோ தெய்வம்தான் வழங்குகிறது என்பதைத் தவிர வேறு என்ன காரணம்? எந்தக் கணக்கைக் கொண்டு தெய்வம் வழங்குகிறது? ஒவ்வொரு பிறவியின் கணக்கைக் கொண்டும் அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது. நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்ற நூலை எழுதியவர், அறுபது ஆண்டிலேயே காலமானதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே நமது கண்ணுக்குத் தெரியாத சூட்சும இயக்கம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. நாம் பிறந்துள்ள இந்தப் பிறப்பில் நடந்து கொள்கிற முறையை வைத்து, அதற்குரிய பரிசையோ தண்டனையையோ இந்தப் பிறப்பில் பாதியையும் அடுத்த பிறப்பில் பாதியையும் அனுபவிக்கின்றோம்.

‘’முன்னர் நமதிச்சையில் பிறந்தோமில்லை
முதல் இடை கடைநமது வசத்திலில்லை’ என்றான் மகாகவி பாரதி

'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப் புடைத்து' என்றான் வள்ளுவன்.

ஆகவே பிறவிகள் ஏழு என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நம்மவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.


இப்படி எங்குப் பார்த்தாலும் இந்து சமயம் ‘ஊழ்வினை’ என்பதை மிகவும் அழுத்தமாகவேச் சொல்கிறது என்பதை அறியலாம். இப்பொழுது இதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்வேன். பிறக்கும் முன்னர் நான் எப்படி இருந்தேன், இறந்த பின்னர் நான் எப்படி இருப்பேன் என்பதிலெல்லாம் எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. பூர்வ ஜென்ம பலன் காரணமாகத்தான் இந்த வாழ்க்கையில் நான் அனுபவித்துக்கொண்டிருப்பது அடுத்த பிறவியில் அனுபவிக்கப் போவது எனக்கொள்வோம் எனில் எனக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், பல விசயங்களை நமது கட்டுப்பாட்டுக்குள் அத்தனை எளிதாகக் கொண்டு வர இயலுவதில்லை. இது மனவலிமையின்மையா? இறைவனின் தன்மையா? என்றெல்லாம் என்னால் சிந்தித்துக் கொள்ள இயலவில்லை. அதன் காரணமாகவே ‘எல்லாம் தீர்மானத்தின் பேரில் நடக்கிறது’ என இந்து சமய தத்துவத்தையே நுனிப்புல்லில் எழுதினேன்.

அதேவேளையில் நமது செயல்களுக்கு நாமே பொறுப்பு ஏற்க வேண்டும் எனும் கொள்கை என்னுள் உண்டு, இதில் இறைவனை பங்காளியாக்கிக் கொள்ள ஒருபோதும் துணிவதுமில்லை. ஆனால் மகான்கள், ரிஷிகள், முனிவர்கள் என பலரும் ஊழ்வினை கருத்தை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்' என்கிறார் வள்ளுவர்.

'ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்' என்கிறார் இளங்கோ.

‘எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்’ என்கிறார் மாணிக்கவாசகர்.

ஆனால் எனக்கோ இதையெல்லாம் ஒப்புக்கொள்ள இயலுவதில்லை, அவர்கள் அறிந்ததுபோல் நான் ஒருவேளை அறியாமலேயே இருக்கலாம். இதற்கான காரணம் நடக்கும் விசயங்களுக்கு நம்மால் உண்மையான விளக்கம் சொல்ல இயலுவதில்லை. ஆனால் இதை மிகவும் அருமையாக ‘இயற்கைத் தேர்வு’ எனும் கொள்கைக்குள் கொண்டு வந்தார் சார்லஸ் டார்வின். ‘சுற்றுப்புறச் சூழல் பொருத்தே ஒரு உயிரினம் தன்னை தற்காத்துக் கொள்வதோடு, தனது இனத்தைப் பெருக்கிக்கொள்கிறது’ என்கிறார் இவர். எது எப்படியிருப்பினும் ஊழ்வினை பற்றிப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொருவரும் இதுகுறித்து பேசும்போது கேட்பதற்கு ஆசையாகத்தான் இருக்கிறது.

சுவாமி விவேகாநந்தர் ‘மனிதனின் மனம் பலவீனப்பட்டு இருக்கும்வரை இறைவன் அத்தியாவசியமாகத் தெரிகிறார்’ என்கிறார். இப்படி ஒவ்வொருவரின் கருத்துக்களையும், பல நூல்களையும் படித்த பின்னர் ஒருவர் எடுத்துக்கொள்ளும் முடிவு கூட ஊழ்வினையாகத்தான் இருக்கும் என முடிப்பது எத்தனைப் பொருத்தமாக இருக்குமோ எனக்குத் தெரியாது, ஆனால் வள்ளுவர் அப்படித்தான் சொல்கிறார்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

‘எல்லாம் தீர்மானத்தின் பேரில் நடக்கிறது’ என அடுத்த பிறவியிலும் பேறோ தண்டனையோத் தொடரும் என நானும் இக்கேள்விக்குப் பதிலாக வைத்துவிடத்தான் நினைக்கிறேன் ஆனால் என் ஊழ்வினை என்னைத் தடுக்கிறது போலும். :)

கேள்வியும் பதிலும் 11

11) ‘ஞானப்பறவை’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். உங்கள் கருத்துப்படி ஞானம் என்றால் என்ன? அதற்கும் பறவைக்கும் என்ன சம்பந்தம்? கொஞ்சம் விளக்க முடியுமா?

ஞானப்பறவை அடைமொழியின் பின்னணி கூறுகிறேன் இது எனக்குத் தெரிந்தவரை. என்னை ஞானப்பறவை என அன்பு அண்ணன் ஏஆர்ஆர் அவர்கள் அழைத்தபோது அச்சமும் கலக்கமும் ஆச்சர்யமும் அடைந்தேன், அந்த அச்சம் இன்றும் உண்டு என்பதுதான் உண்மை. அவர் ஒரு கேள்வி கேட்டு இருந்தார், எப்படி மனிதர்கள் மிகவும் ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கிறார்கள் மற்றும் பணம் உடையவர்கள் மருத்துவ வசதி கொண்டு வாழ்ந்தும், வசதி இல்லாதவர்கள் கஷ்டப்பட்டும் இருக்கிறார்கள் என, இதற்கு என்ன காரணம் என்பது போன்று அமைந்த கேள்வி என நினைக்கின்றேன். அதற்கு நான் பின்னூட்டம் இட்டிருந்தேன், அவரது பின்னூட்டம் வந்து இருந்தது, கடைசியாக அவரை அரங்கநாதனை ஸ்ரீரங்கம் சென்று கண்டு வாருங்கள் என்றது போன்ற பதிவும் இட்டேன் என ஞாபகம். அதற்குப் பின்னர் ஒரு கவிதையில் இறைவனை எழுதி இருந்தேன், அதற்கு பின்னூட்டம் இட்டிருந்தார் அந்த பின்னூட்டம் பின்னர் ஞானப்பறவையானேன். அண்ணன் பார்வையில் இது மட்டுமல்லாது வேறு முக்கிய காரணங்களும் உண்டு என்பதை உணர்வேன், ஆனால் அதற்கெல்லாம் எனக்கு தகுதியில்லை என்பதை நான் நன்கு அறிவேன். தாய் தன் குழந்தையை எப்படி இல்லாத ஒன்றையும் இணைத்து கொஞ்சுவார்களோ, அதுபோன்று நான் கொஞ்சப்படுகின்றேன் என்பதே உண்மை.

கேள்விக்கான பதில், ஞானம் என்றால் ஒன்றை கற்றுத் தெளிவதோடு மட்டுமல்லாமல் கற்றுக்கொள்ளாமல் கூட தெளிவது. இறைவனை யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை, யாரும் கற்றுக்கொள்ளவும் வேண்டியதில்லை. தெளிவாய் ஒன்று மனதில், எண்ணத்தில் இறைவனைப் பற்றி இருக்கும் அந்த தெளிவுதான் ஞானம். அதனையே செயல்பாடுகளுக்கும் பொருத்திக்கொள்ளலாம். எந்த ஒரு செயலிலும் மிகவும் தெளிவான எண்ணமும் அதனால் பிறருக்கு தீங்கு வாரா வண்ணம் செயல்படுதலும் அந்த செயலிற்கான ஞானம் என கொள்ளலாம். ஆக ஞானம் என்பது பிற உயிர்களுக்கு நன்மையாய் இருப்பது. ஞானம் பலவகைப்படும் அதில் கேள்வி ஞானம் மிகவும் முக்கியம். அஞ்ஞானம், மெஞ்ஞானம், விஞ்ஞானம் என அடுக்கலாம். ஆனால் இவையாவும் ஞானம் மட்டுமே. அறிவில்லாத ஒன்றில் தெளிவு அஞ்ஞானம், காணா அறிவில் ஒரு தெளிவு மெஞ்ஞானம், கண்டு தெளிந்து தெளிந்து நெளியும் தெளிவு விஞ்ஞானம் என வகைப்படுத்திக் கொண்டே செல்லலாம்.

இந்த ஞானத்திற்கும் பறவைக்கும் ஒரு சம்பந்தம் இருப்பதாய் நான் சம்பந்தபடுத்திக் கொண்டு சொல்கிறேன். கருடர் எனப்படும் பறவையானது, சீதை தூக்கிச் செல்லப்படும்போது அந்த தீமையை தடுக்கும்பொருட்டு தாக்கப்பட்டு, இராமருக்கு யார் சீதையை தூக்கிச் சென்றது என்ற அரும்பெரும் தகவலை தந்து இராமர் என்னும் கடவுள் அவதாரத்திற்கு உதவியதால் அந்த கருடர் கருடாழ்வார் எனப் போற்றப்படும் அளவிற்கு உயர்ந்தது. இதில் என்ன விசேஷம் என்றால் நம்மை எடுத்துக் கொள்வோம், எத்தனை தீமையும், கொடுஞ்செயலும் இவ்வுலகில் நடக்கிறது அதனை பார்த்துவிட்டு நாம் எத்தனை மெத்தனமாக கண்டபின்னர் காணாதது போல் வாழ்கிறோம், ஆனால் அந்த தீமைகளை நினைத்து வருந்துகிறோம் இப்படி வருந்துவதின் மூலம் இவ்விசயத்தில் நமக்கு ஒரு தெளிவில்லை என்பது புலப்படுகிறது, ஆனால் அந்த பறவையின் பார்வையில் இராவணர் செய்தது தீமை எனப்பட்டது, அது தீமை என்னும் தெளிவு பிறந்ததும் அதனை தடுத்து நிறுத்திட முயற்சி செய்தது, தவறு என்ற தெளிவு கிடைத்ததும் அதனை வெறுமனே பார்க்காமல் தவறை திருத்திட போராடியதால் அந்த பார்வை ஞானப்பார்வையானது அந்த பறவை ஞானப்பறவையானது. சிறுவயதில் கருடர் பார்வை என்மேல் படாதா என்று வானை நோக்கிய காலங்கள் ஞாபகம் வருகிறது. அப்படி வந்து அதன் பார்வையில் பட்ட தினங்கள் கண்டு மகிழ்ந்து இருக்கிறேன். விரல் நகத்தில் முட்டை போடும் பறவைக்காக ஏங்கிய காலமும் உண்டு. சுதந்திர வாழ்க்கை கொள்ளும் பறவைகள் ஞானம் உடையவைதான். ஆக இப்படி தெரியாத ஒன்றினைப் பற்றி தெரிந்தது போல எழுதும் தெளிவு கூட ஒருவகை ஞானம்தான். மன்னிப்பீராக.

Friday 3 July 2009

கேள்வியும் பதிலும் - 10

10. வருங்கால சந்ததிகள் நம் பண்பாட்டை கட்டி காப்பாற்றுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

நமது பண்பாடு, கலாச்சாரம் என்றெல்லாம் எனக்கு எதுவென்று உண்மையிலே தெரியாது, எல்லாம் கேள்விப்பட்டதுதான். இந்தியா பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் மிகவும் சிறந்த பெயர் போன நாடு என்ன சொல்லக் கேள்விப்பட்டு இருக்கையில், குழாயடிச் சண்டை பார்த்திருக்கிறேன். ஒரு குடம் தண்ணீர் முன்னே பிடித்தால் என்ன பின்னே பிடித்தால் என்ன? இரண்டாவது குடத்திற்கு தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் முதல் குடத்தின் தண்ணீர் பாதியை பகிர்ந்து கொண்டுவிட்டால்தான் என்ன? நினைத்து நினைத்து நிம்மதி தொலைத்த காலங்கள் அதிகம். நிம்மதி தொலைத்தோமே அறியாமையில் என இன்றைய அறியாமை நிம்மதியாய் இருக்கிறது.

விருந்தோம்பல் என சொல்லி வைத்துக் கொண்டு தொலைக்காட்சியை விரும்பி பார்ப்பதன் இரகசியம் என்ன? ஒருவர் அவரது நண்பரது வீட்டிற்குச் சென்றாராம் ,வாங்க உட்காருங்க தொலைக்காட்சி பாருங்க என்றாராம் அந்த நண்பர். உடனே வந்தவர் எனது வீட்டில் தொலைக்காட்சி இருக்கிறது என எழுந்து சென்றுவிட்டாராம். விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத்தான் என சொல்லி வைத்ததன் நோக்கம் என்ன விருந்தோம்பலுக்குப் பெயர் போன பூமியில்.

காலம் மாறிக்கொண்டே வருகிறது, மாற்றங்கள் மிகவும் அத்தியாவசியமாகிவிட்டன. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் நமது நாட்டின் கலாச்சாரம் என சொல்ல வருகிறீர்களா? இசை நாடகம் நாட்டியம் கலாச்சார கலைகள் என சொல்ல வருகிறீர்களா? ஒரு நிமிடம் யோசியுங்கள். மாபெரும் இதிகாசங்கள் எனப் போற்றப்படும் இராமாயணத்திலும் சரி மஹாபாரதத்திலும் சரி இதனை ஒழுங்காக வலியுறுத்தவில்லை. பிறர்மனை கள்வர்கள் பற்றி பேசியது. ஐவருக்கு ஒருத்தி என்று ஏடாகூடாமாக விளக்கியது. உற்ற உறவினர்களை கொல்வது தர்மம் என ஒவ்வாத அதர்மம் பேசியது. ஆக இதிகாச காலங்களே கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் விலைக்கு விற்றுவிட்டது. நம்மில் எத்தனை பேர் நமது கலைகளை நமது குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறோம், அட நாம்தான் கற்று வைத்து இருக்கிறோம். ஓரொண்ணா ஒன்னு தான் நமது கலை.

இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் வந்தது அந்த திரைப்படம் கிராமத்தின் நிதர்சனம் எடுத்துக் காட்டியது. கிராமத்தில் வாழும் மனிதர்கள் சண்டையில் திட்டிக் கொள்ளும் வாசகங்கள் எது தெரியுமா? உறவு முறைகளை கொச்சைப்படுத்துவதுதான். உடனே திருவள்ளுவர் எனக்கு ஞாபகத்திற்கு வருவார் கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்பார். சரி இதனையெல்லாம் விட்டுவிடுகிறேன். இன்னலோடு இன்பமாக வாழ்வதுதானே வாழ்க்கை. திருவள்ளுவர் கூட தனது திருக்குறளில் எல்லா விதமான தவறு பற்றி எழுதி இதெல்லாம் கூடாது என்பார் கூடா நட்பு என சொல்வார். அந்த கால கட்டத்திலும் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் என்னவென்று புரியவில்லை. இளங்கோ அடிகள் என்ன சொன்னார் சிலப்பதிகாரத்தில்? திணற அடிக்கிறது ஐம்பெரும் காவியங்கள். பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் என்ன நடக்கிறது? நமது நாட்டின் பாரளுமன்ற வளாகத்தில் சென்ற ஆண்டு உள்ளே அமர்ந்துவிட்டு வெளியில் வந்த எனது மனநிலை என்ன தெரியுமா? இவர்களெல்லாம் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதுதான். வந்தார்கள், கூச்சலிட்டார்கள் வெளியே சென்று விட்டார்கள். இட நெருக்கடி, இட ஒதுக்கீடு, நிம்மதி இல்லாத உணர்வு, வீட்டின் கதவை திறந்து வைத்துச் செல்ல முடியாத நிலை கொண்டுள்ள நாடு கற்றுத் தந்த பண்பாடு தான் என்ன? இது இப்படித்தான் இருக்கும், வருங்கால சந்ததி இந்தியர்களாக பல காலங்கள் இருப்பார்கள். உங்கள் உணர்வுகளை நோகடித்து இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் எனக்கு நமது நாட்டின் பண்பாடும் தெரியாது, கலாச்சாரமும் தெரியாது.

வருங்கால சந்ததிக்கு என்ன பண்பாடு கலாச்சாரம் சொல்லித் தர முடியும்? என்றால் பிறரது உணர்வுகளை மதிக்கும் உண்மையான பண்பாட்டினையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுத்து வரலாம். அது மட்டுமே இந்த உலகத்தினருக்கு வேண்டிய பண்பாடும் கலாச்சாரமும். அதை அவர்கள் கட்டிக் காத்து வந்தால் உலகம் அமைதி பெறும்.

இது ஆதங்கப்பட்டோ நமது நாட்டினை தாக்கியோ எழுதப்பட்டது அல்ல. இது ஒரு அறியாமையில் இருப்பவனின் அ எழுத்து, அவ்வளவே. கற்று தெளிந்து கொள்ளும் முன்னர் கேள்விகளுக்கு பதில் தருவது என்பது சற்று கடினமே என இந்த ஐந்து கேள்விகளும் எனக்கு உணர்த்தியது.

கேள்வியும் பதிலும் - 9

9. தொழிற்சாலை / நிர்வாகம் போன்றவற்றில், தொழிற்சங்க யூனியன் என்ற ஒன்று அடிக்கடி வேலைநிறுத்தம் செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன? அதனால், நம் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கப்படுமா? படாதா?

அதாவது ஒத்துழையாமை என இதனைச் சொல்லலாம். எனக்கு இதுப் பிடிக்கவில்லை அதனால் நான் ஒத்துழைக்கப் போவது இல்லை என தனது பக்கம் உள்ள நியாயத்தை? வலியுறுத்திப் போராடுவதாகும். வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஒருமுறை பாடம் கற்பித்தார், அவருக்கு இவர்கள் மறுமுறை பாடம் கற்பித்தார்கள். இப்படி அடிக்கடி வேலை நிறுத்தம் செய்வது தவறு. தொழிலாளர்கள் தான் பணி செய்யும் நிர்வாகத்தின் பெயரை நிலைநிறுத்த முயற்சி செய்ய வேண்டும், நிர்வாகத்தினரும் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் பரஸ்பர ஒற்றுமையும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் இருக்கும்பட்சத்தில் இந்த பிரச்சினைகள் வரப்போவதில்லை. வியாபார உலகம் என்றான பின்னர் வெறும் கதையில் வேண்டுமென்றால் அவ்வளவு சிறப்பாக இருந்தது இவ்வளவு ஒற்றுமையாக இருந்தனர் என எழுதி வைத்துக் கொள்ளலாம். வேலைநிறுத்தம்தனை கூடுமானவரை தவிர்த்தால் நிர்வாகமும் தொழிலாளர்களும் பலன் பெறுவார்கள்.

இந்தியாவில் வெளிநாட்டு முதலீடா? நடந்து கொண்டுதானே இருக்கிறது. இந்த வேலை நிறுத்தம் பற்றி எண்ணும் முன்னால் முதலீடு செய்ய வேண்டும் என வருபவர்களின் எண்ணத்தை ஒடுக்கும் சக்திகள் பல உண்டு என்னும் உண்மையை தற்போது வந்த திரைப்படம் சொன்னது உண்மையில்லை என அனைவரும் நினைக்க வேண்டுமா?

வெளிநாட்டு முதலீட்டினை தடுக்கும் சக்திகளை பற்றி, ஏன் ஒரு மாநில அரசையே ஏமாற்றிய உள்ளூர் வெளியூர் கூட்டு பற்றிய விபரம் அறிவேன். இருப்பினும் அந்த வெளிநாட்டு நிர்வாகம் வேறொரு மாநில அரசின் உதவியுடன் முதலீடு செய்ய உள்ளது. ஆக இது போன்ற பிரச்சினைகள் எல்லாம் லாபம் கிடைக்குமெனில் வெளிநாட்டு நிறுவனங்கள் பெரிதாக கருத்தில் கொள்ளப்போவது இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுதான் எல்லாம் காரணம்.

கேள்வியும் பதிலும் - 8

8. அமைதியாக எல்லாவற்றையும் அனுசரித்து போவது நல்லதா? கெட்டதா?

நல்லதும் கெட்டதும் ஒவ்வொரு மனிதருடைய சூழ்நிலைப் பொருத்த மனநிலையைப் பொருத்து அமைந்துவிடுகிறது எனலாம். அமைதியாக எல்லாவற்றையும் அனுசரித்து போவது என்பது பேச்சளவில் சரியாகப்படலாம் ஆனால் நல்லதாகப்படாது. அதே நேரத்தில் தீயதாகவும் வந்து விடியாது.

எது அமைதி என்பதை முதலில் நாம் தெளிவுப்படுத்திக் கொள்வது நமக்கு மிகவும் நல்லது. ஒரு செயல் நடக்கிறது, அது பிடித்தமானதில்லை என வைத்துக் கொள்வோம் அப்பொழுது எதுவும் செய்ய முடியாத பட்சத்தில் முடங்கி கிடப்பவர் கொள்ளும் அமைதியை அமைதியாக கருதமுடியாது. பிடிக்கவில்லை எனும்பட்சத்தில் அதனை மாற்ற முடியும் என்ற சந்தர்ப்பம் இருந்தும் மாற்ற வேண்டாம் என கருத்தில் கொண்டு அமைதியுடன் அனுசரித்து செல்வதுதான் உண்மையில் அமைதி. ஆனால் அமைதி கொள்வது போல் இருந்துவிட்டு இதயம் அந்த பிடிக்காத விசயத்தை பற்றி இடி இடியென இடித்துக் கொண்டு இருந்தால் அந்த உண்மை அமைதி வெளிப்பார்வைக்கு மட்டும்தான் என்றாகிவிடும். ஆக அதுவும் உண்மையான அமைதி இல்லை என்றாகிவிடுகிறது. ஆதலால் அமைதியானது உள்ளத்து எண்ணங்களிலும், செய்யும் செயல்களிலும் ஒன்றாய் இருப்பது. நம்மில் எத்தனை பேருக்கு அப்படி இருக்கிறது? எனக்கு இருக்கிறது என நாம் குடுகுடுப்பைக்காரன் போல் நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது என நம்பிக்கையோடு சொல்லிக்கொள்ளலாம்.

இதனையே வேறொரு கோணத்தில் பார்ப்போம், அமைதியாக அனுசரித்து போவது குறித்து மகாத்மா காந்தியடிகளுக்கு தென் ஆப்பிரிக்கா பாடம் கற்றுத்தராமல் இருந்து இருந்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து இருக்காது எனலாம். ஆனால் அந்த சுதந்திரத்தால் பாதிக்கு பாதி பேர் பிரிட்டன் ஆட்சி இருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருப்போம் என பேசுவதை உங்கள் காதுகள் கேட்டு இருக்கும், அதே நேரத்தில் உண்மையான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என மேடைப்பேச்சுக்கள் திண்ணைப்பேச்சுக்கள் சுதந்திரம்தனை கேலிக்கூத்தாக்கிக் கொண்டு இருப்பதை காணலாம். எனவே எதை அனுசரித்துப் போவது என்பதை முக்கியமாக ஒரு செயலாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் எதற்கு நீங்கள் முன்னுரிமை தந்து வைத்து இருக்கிறீர்கள் என்பதை குறித்துக் கொள்ளுங்கள், அந்த கொள்கையானது மிகவும் உறுதிப்பாடுடன் இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். அந்த முன்னுரிமை செயலுக்கு ஏற்படும் விசயங்கள் குறித்து அனுசரித்துப் போவதைப் பற்றி சிந்தியுங்கள்.

நீங்கள் உங்களை மட்டும் முன்னிலைப்படுத்துபவராக இருந்தால்....

அமைதியாக அனுசரித்துப் போவதால் உங்கள் மனநிலை பாதிக்காத வண்ணம் இருந்தால் அது நல்லது.

அமைதியாக அனுசரித்துப் போவதின் மூலம் உங்கள் மனநிலை பாதிக்கும் எனில் அது கெட்டது.

எல்லாவற்றையும் அமைதியாக அனுசரித்துப் போவது குறித்து உங்கள் மனதினை நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். ''இதுவும் கடந்து போகும்'' என்ற ஒரு வசனம் சித்தி நாடகத்தொடரில் மிகவும் பிரபலம். அதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அமைதியாக அனுசரித்துப் போவதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என உறுதி கொள்ளுங்கள், யாருக்கும் தீங்கிழைக்காத அமைதியாக அனுசரித்துப் போகும் செயல்கள் மட்டுமே நடக்கும்.

கேள்வியும் பதிலும் - 7

7. மது கடைகள் முலம் அரசாங்கம் லாபம் பார்ப்பது சரியா?
(நண்பர் மோகன் காந்தி என்னை கேட்ட கேள்வியே இது)


நீங்கள் சரியே என பதில் சொன்னதால் நான் தவறு என பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என சொல்ல முடியாது. அரசாங்கம் லாபம் பார்ப்பது என்பது என வரும்போது மதுக்கடைகளாக இருந்தால் என்ன, கல்வி நிறுவனங்களாக இருந்தாலென்ன? இது பள்ளம், விழுந்தால் எழுந்திருக்க மாட்டாய் என எச்சரித்துவிட்டு இருக்கும் பள்ளத்தை மூடாமல் எத்தனை பேர் எப்படி விழுகிறார்கள் என கணக்கெடுத்துக் கொண்டிருப்பவனை விட பள்ளத்தினை நோக்கி தானாகச் சென்று விழுபவர்கள் மிகப்பெரும் அறிவாளிகளாகத்தான் இருப்பார்கள் என சொல்லவா வேண்டும்?

மக்களின் நலன் கருதி மதுக்கடைகள் மூடிவிட்டால் மட்டும் போதுமா? மனக்கடையை யார் மூடுவது? மனிதர்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டே எல்லா வியாபாரங்களும் செழித்து ஓங்குகின்றன. இன்றைய வாழ்க்கை சூழல் அவ்வாறு இருக்க எதைக் குறைப்பட்டு கொள்வது? மதுக்கடைகள் மூலம் அரசாங்கம் லாபம் பார்க்கலாம் என்றுதானே சொல்ல வருகின்றேன் என எண்ணினால் அது எனது தவறு.

எது எப்படி இருப்பினும் எனது பதில் மதுக்கடைகள் மூலம் அரசாங்கம் லாபம் பார்ப்பது முற்றிலும் தவறு. இதை மதுக்கடைகளுக்கு மட்டும் ஒதுக்கிவிட முடியாது மற்ற கடைகளுக்கும் தான். அரசாங்கம் மக்கள் நலன் பார்க்கும் அரசாங்கமாக இருக்க வேண்டுமே தவிர லாபம் பார்க்கும் அரசாங்கமாக இருப்பதில் அர்த்தமே இல்லை. அது இருக்கட்டும், அர்த்தம் பார்த்து யார் வாழ்க்கை வாழ்ந்தது? இனியும் வாழ்வது?

(தொடரும்)

கேள்வியும் பதிலும் - 6

மேலே இருக்கும் கேள்விகள் கேட்டவர் பத்மஜா சகோதரி. இனி வரப்போகும் அடுத்த ஐந்து கேள்விகள் கேட்டவர் சுதாகர் அண்ணன்.

6. இன்னும் சில நாட்களில் பதவி விலக போகும் நம் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்கள் மீண்டும் பல்கலை கழகத்திற்க்கு வேலைக்கு போகும் பட்சத்தில், அவருடைய மதிப்பு எந்த நிலையில் இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?


எனக்கு பெயர் இடப்பட்ட கதையினை இங்கு சொல்வது சரியாகப்படும் என்பதை சொல்லி ஆரம்பிக்கிறேன். நமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தத்துவமேதை என போற்றப்படுபவர் திரு. எஸ். இராதாகிருஷ்ணன். அவர்களை மனதில் கொண்டு எனக்கு எனது அக்கா இட்ட பெயர்தான் இராதாகிருஷ்ணன். ஒரு ஆசிரியர் ஆன ஜனாதிபதியை சிறப்பிக்கும் பொருட்டு அவருடைய பிறந்ததினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. மக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர்.

நான் அறிந்தவரை அரசியல் விசயத்துக்காக மட்டுமே பல ஜனாதிபதிகள் நமது நாட்டில் பெயர் பெற்றனர், ஆனால் திரு. அப்துல்கலாம் அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு பலருடைய மனதில் இடம் பெற்றுவிட்டார். இது அவர் புரிந்த விஞ்ஞானத்தில், கவிதையில், கனவில், செயலில் செய்த சாதனையை பொருத்து அமைந்தது என குறிப்பிடலாம். அப்படிப்பட்டவர் ஒரு பல்கலைகழகத்திற்கு மீண்டும் பணியாற்ற செல்வாரேயானால் அந்த பல்கலைகழகம் பெரும் பேறு பெற்றதாகும். அவருடைய மதிப்பு எள்ளளவும் குறையாது. மேலும் மேலும் பெருகும். இந்த ஜனாதிபதி பதவியானது அவரது சாதனையை மதிப்பில் கொண்டு வந்ததுதான். அந்த பல்கலைகழக மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள், நேரில் உரையாடும் வாய்ப்பு கிட்டும். முன்னேறத்துடிக்கும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வழி காட்டுபவர் உடனிருப்பார் எனும்போது மேலும் உற்சாகம் பொங்கும். சாதிக்க முடியாத மனமெல்லாம் அவர் அருகில் இருக்கையில் சாதித்து காட்டிட முனையும். அந்த மாணவர்கள் இவரது புகழை மென்மேலும் பரப்புவார்கள். திரு. அப்துல்கலாம் இந்திய வரலாற்றில் சாதனையாளர்கள் வரிசையில் என்றோ இடம்பெற்றுவிட்டார், அதிலிருந்து இடம் பெயர்த்தல் என்பது இனி சாத்தியமில்லை. அவருடைய மதிப்பு மென்மேலும் பெருகிக்கொண்டே பொகும் என்ற நிச்சயமான எண்ணம் அனைவரிடமும் இருக்கும் என்றே கருதுகிறேன்.

(தொடரும்)

Thursday 2 July 2009

கேள்வியும் பதிலும் - 5

5) தாங்கள் செய்து வந்த ஆய்வில் மிகப் பெரிய தவறு செய்துவிட்டீர்கள். ஆனால், தற்பொழுது அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இச்சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் தவறை நீங்களே சென்று ஒப்புக் கொள்வீர்களா இல்லை எதுவுமே நடவாதது போல் இருப்பீர்களா?

தவறுகள் நடக்கும்போதெல்லாம் நானே சென்று இப்படி செய்தேன் இப்படி ஆகிவிட்டது என ஒப்புக் கொண்டு இருக்கிறேன். மிகப்பெரிய தவறு நடந்தாலும் அதையேதான் செய்வேன். எதுவும் நடவாததுபோல் இருக்கவும் முடியாது.

பல ஆராய்ச்சிக்கூடங்களில் எதுவுமே சாதாரணமாக செய்வதில்லை, ஒரு விசயத்தை பலமுறை செய்து ஊர்ஜிதப்படுத்திய பின்னர்தான் முடிவினைச் சொல்கிறோம். ஆதலினால் தவறாக வந்த முடிவுகளையும் இணைத்துவிடுகிறோம். ஆனால் அது குறித்த ஒரு ஆராய்ச்சிகட்டுரை வெளி வருகிறது எனில் இந்த விசயங்கள் மூடி மறைக்கப்பட்டுவிடும். ஆனால் 80 சதவிகிதம் மேல் செயல்முறைகள் சரியாக இருந்தால் அன்றி அதனை வெளியிடுவதில்லை. எல்லாம் சரியாய் அமைவது என்பது மிகவும் அரிதாக நடக்கும்.

ஆராய்ச்சிதனை ஒவ்வொரு முறையும் பிற குழுக்களிடம் பேசும்போது தவறினை எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். நாம் எண்ணாத விசயங்கள் எல்லாம் அவர்கள் எண்ணத்தில் ஓடும், நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

முடிந்தவரை தவறுகளை தவிர்த்தால் நலம் பயக்கும். இப்படி தவறுதலாக மருந்து ஒன்றை உருவாக்கி அதனை சோதனை செய்தால் பலருடைய உயிர் கேள்விக்குறியாகிறது என்பது உண்மை.

கேள்விகளுக்கு நன்றி.

(தொடரும்)