Showing posts with label தொடர்கதை. Show all posts
Showing posts with label தொடர்கதை. Show all posts

Friday 26 June 2009

பழங்காலச் சுவடுகள் - 11 (நிறைவுப் பகுதி)

பழங்காலச் சுவடுகள் - 11

சிறிது நேரத்திற்கெல்லாம் மழை ஓய்ந்தது. இருவரும் ஒளி கற்கள் கோபுரத்தை அடைந்தனர். கோபுரத்தில் உள்ளே செல்வதற்காக அனுமதி பெற்று நுழைந்ததும் இருவரும் ஒருவித அமைதியை உணர்ந்தனர். மனம் இலேசாகியது. அங்கேயே பல மணி நேரம் கழிந்தது. புத்தம் புதிய உலகத்தில் இருப்பது போன்று இருந்தது.

மாலை நேரம் வந்ததும் பெருவின் இயற்கை அழகை ரசித்தபடியே பல இடங்களை சுற்றி பார்த்தனர். நேராக கோவிலில் சந்தித்தவரின் வீட்டிற்குச் சென்றனர். இவர்களின் வரவை எதிர்நோக்கியவாறே மெகாய்ட் காத்து இருந்தார்.

''வாங்க வாங்க''

''நல்ல மழை பெய்தது''

''எங்கும் தண்ணீர் தேங்கியிருக்காதே''

''இல்லை, மிகவும் துடைத்துவிட்டது போன்று இருந்தது''

''அமருங்கள், என்ன சாப்பிடுகிறீர்கள்''

''வெளியில் சாப்பிட்டுவிட்டோம்''

''பழரசமாவது அருந்துங்கள்''

''ம்ம் சரி''

பழரசங்கள் எடுத்து வந்தார் அவர். தானும் குடிக்க எடுத்துக்கொண்டார். அப்பொழுது ஒருவர் அங்கே வந்தார்.

''இதோ இவன் பெயர் ஜொவியன், மற்றொரு கோவிலில் தலைமை பூசாரியாக இருக்கிறான்''

''காலையில் சந்தித்தோம், என்மீது தெரியாமல் மோதிவிட்டார்''

''ஓ சந்திப்பு நடந்துவிட்டதா, நாங்கள் இருவர் மட்டுமே இங்கே தங்கி இருக்கிறோம்''

''திருமணம் ஆகவில்லையா''

''இருவரும் திருமணம் செய்து கொள்ள மாட்டோம், அதே கோவிலில் பணிபுரிவதே எங்கள் கடமையாக கருதுகிறோம்''

''ஒளிகற்கள் கோபுரம் சென்று இருந்தோம், மனம் இலேசாகியிருந்தது''

''பூமி எல்லாமே இப்படித்தான் இருக்கும், ஆனால் ஒரு இடத்தில கோபுரத்தைக் கட்டி அங்கே அமைதியான உணர்வும், கடவுள் உணருர தன்மையும் இருக்கிறதா பழங்காலத்தில உருவாக்கின காரணம் எப்பவும் சண்டையும் சச்சரவுமா இருக்கிறவங்களை அமைதிபடுத்தத்தான்; மொத்த பூமியும் அப்படித்தான் இருக்கும்னு உணருர மாதிரி சுவடுகளை எந்த ஒரு மனித நாகரிகமும் வளர்க்கலை, அதுதான் இன்னமும் பிரிவினைக்கெல்லாம் காரணம், இதெல்லாம் அழிஞ்சி மொத்த பூமியும் தெய்வீக உணர்வை உணருமாறு ஒரு புது நாகரிகம் தோன்றனும், அந்த நாகரிகம் எல்லாரையும் வசப்படுத்தனும், இல்லைன்னா இந்த பழங்காலச் சுவடுகள் மனசில வலியை உருவாக்கிக்கிட்டே இருக்கிற வடுக்களாகத்தான் இருக்கும்''

''எங்க நாட்டிலயும் பல கோவில்கள், சிற்பங்கள், சிந்து சமவெளி நாகரிங்கள்னு எல்லாம் சிதைந்து போயிருக்கு''

சின்னசாமி பேசி முடித்ததும் அகிலா சொன்னாள்.

''இரகசியங்கள் பத்தி சொல்லுங்க''

அப்பொழுது அந்த இரவில் ஒரு சிலர் அங்கே வந்தார்கள். வந்தவர்கள் நேராக மெகாய்ட்டிடம் இரகசியங்களைத் தருமாறு கேட்டார்கள். மெகாய்ட் மறுத்தார். வந்தவர்கள் இதோடு பலமுறை வந்துவிட்டதாகவும் இனிமேலும் பொறுமை காக்கமுடியாது என்றும் கோபத்துடன் கூறினார்கள். அகிலாவையும் சின்னசாமியையும் பார்த்தார்கள். இவரிடம் இரகசியங்கள் பெற வந்திருக்கிறீர்களா எனக் கேட்டுக்கொண்டே இரகசியங்கள் பெற்று இருந்தால் உடனடியாகத் தருமாறு கேட்டார்கள். அகிலாவும் சின்னசாமியும் இல்லையென சொன்னார்கள். ஜோவியன் அவர்களை அங்கிருந்து போகுமாறு கேட்டுக்கொண்டான். ஆனால் அவர்கள் இந்த முறை இரகசியங்கள் பெறாமல் செல்வதில்லை என மேலும் சொன்னார்கள்.

சின்னசாமி மெகாய்ட்டிடம் இரகசியங்கள் தந்துவிடுமாறு கூறினார். மெகாய்ட் ஒரு சின்னதாளில் எழுதி அந்த மனிதர்களிடம் கொடுத்தார். பூமியில் எல்லா இடமும் அமைதியானது என்பதை உணர்த்தும் வகையில் எந்த ஒரு நாகரிகமும் தோன்றவில்லை அதுவே இந்த பூமியின் இந்த கொடூர நிலைக்கு காரணம் இதுவே ஒவ்வொருவரும் அறிய வேண்டிய இரகசியம் என்பதை வாசித்ததும் வந்தவர்களின் ஒருவன் மெகாய்ட்டின் தலையில் ஓங்கி அடித்தான். தடுக்க வந்த ஜோவியனை மற்றொருவருன் தாக்கினான். பலமாக இருவரையும் அடித்துவிட்டு அகிலாவையும் சின்னசாமியையும் ஒன்றும் செய்யாது ஓடினார்கள். மெகாய்ட் முனகினார். அகிலாவும் சின்னசாமியும் செய்வதறியாது பயத்தில் உறைந்து போயினர். மெகாய்ட் கோவிலில் கிழக்குப்பகுதியில் ஒரு சுரங்க அறை ஒன்று இருப்பதாகவும் அங்கேதான் எல்லா உலக ரகசியங்கள் இருப்பதாகவும் எப்படியாவது இந்த நாட்டில் தங்கிவிடுமாறும் கூறிக்கொண்டே சாவியினை சின்னசாமியின் கைகளில் தந்து மரணம் அடைந்தார். ஜொவியன் முன்னரே மரணமடைந்து இருந்தான்.

காவல் அதிகாரிகள் வந்தனர். அகிலாவும் சின்னசாமியும் நடந்ததை சொன்னார்கள். சுரங்க அறைக்கான சாவியை தந்தார்கள். இருவரின் நேர்மையை காவல் அதிகாரிகள் போற்றினார்கள். உடனே எந்த கூட்டம் இதற்கான பின்னணியில் இருக்கும் என கண்டுபிடித்து அந்த இரவோடு இரவே அவர்களை சிறையிலடைத்தனர். மறுநாள் கோவிலில் அகிலா சின்னசாமியை வைத்தே சுரங்க அறையை திறந்தனர். அங்கே சூரியன் ஒளி தருவது போன்று சுவரெல்லாம் வரையப்பட்டு இருந்தது. மொத்த பூமியும் ஒன்றான நிலப்பரப்பாக இருந்தது போன்ற வரைபடம் எல்லாம் இருந்தது. எகிப்தியர்கள் மாயன்கள் இடத்திற்கு வந்து போனதாகவும் ஆரியர்கள் எகிப்துக்கு வந்து சென்றதாகவும் குறித்து இருந்தது. லெமூரியர்களும் மாயன்களும் அட்லாண்டிஸுகளும் தொடர்புடையவர்களாக காட்டி இருந்தது. அஜ்டெக்குகளும் இன்கா சமூகமும் தொடர்புடையவை என குறித்து இருந்தது. அந்த அறையின் சுவர்களிலே இந்த விபரங்கள் மட்டும் குறிக்கப்பட்டு இருந்தது.

அறையில் இருந்த இரும்பு பெட்டிகளை திறந்தபோது ஏடுகள் இருந்தது. அதை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அகிலாவும் சின்னசாமியும் உடன் இருந்தனர். நாம் அறியாத ஒரு நாகரிகம் பற்றி குறிப்பிட்டு இருந்தது. மேலும் மாயன்கள் இன்கா அஜ்டெக்குகள் எகிப்தியர்கள் பயன்படுத்திய நாட்காட்டிகள் இருந்தது. பல்லாயிரக்கணக்கான வருடங்கள் வாய்மொழியாகவே விசயங்கள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன என்பதை மறுக்கும் வண்ணம் பல இலட்ச வருடங்கள் முன்னரே எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன என்பதை பறைசாற்றும் வண்ணம் அந்த ஏடுகள் இருந்தது. அந்த எழுத்துக்களைப் பார்த்து அகிலாவும் சின்னசாமியும் பரவசமடைந்தனர். அனைத்து ஏடுகளும் தமிழ் மொழியிலே எழுதப்பட்டு இருந்தது. எழுத்துக்கள் இந்திய எண்களே என பறைச்சாற்றும் வண்ணம் பூச்சியம் எல்லாம் இருந்தது. கடைசியாக எழுதப்பட்ட வருடம் 129304 என குறிக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு வருடத்திற்கு ஒரு பக்கம் மட்டுமே எழுதி இருந்தது. ஒரு வருட நிகழ்வுகளை மொத்தமாக குறிப்பிட்டு இருந்திருக்கக்கூடும் என சின்னசாமி யோசனை சொன்னார். அகிலாவும் வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்திப் பார்த்தார், கடைசி எழுதிய வருடங்களில் இருந்த குறிப்புகள் நாம் அறிந்த நமக்குத் தெரிந்த வரலாற்று குறிப்புகளுடன் தொடர்புடையதாக எதுவும் இல்லை. முதல் பக்கத்தில் சூரியன் வரையப்பட்டு சின்ன சின்ன துகள்கள் போன்று வரைந்து இருந்தது. இரண்டாம் பக்கத்தில் உலக ரகசியம் உரைக்கப்பட்டு இருந்தது. மேலும் சில பகுதிகள் மட்டும் வாசித்துப் பார்த்ததில் உலகம் யாவும் அமைதியாகவே இருந்து இருக்கிறது. ஒரே நாகரிகம் தான் இருந்து இருக்கிறது என்பதை அறிய முடிந்தது. மனிதன் எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பான் என கையில் கத்தியும் வேலும் கொடுத்தது நமது கொடூர எண்ணங்களேயன்றி அதையே கருத்தில் கொண்டு கொடுங்கோலர்களாய் வளர்ந்தது, வளர்ந்து கொண்டிருப்பது நமது குற்றமேயன்றி மனிதர்கள் மனிதத்தோடு வாழ்ந்தார்கள் என ஒரு நாகரிகம் இருந்தது என்பதை எந்த ஒரு சுவடும் இல்லாமல் ஆக்கியது நாமே என அறிய முடிந்தது.

தனித்தனி நாகரிகங்கள் பற்றிய குறிப்புகளும் இருந்தது, அது அந்த அந்த நாகரிக சம்பந்தபட்ட மொழி தொடர்புடையதாக இருந்தது. நாம் அறிந்த தெரிந்த வரலாறும் அந்த சுரங்க அறையில் இருந்தது. தமிழ் சம்பந்தபட்ட விசயங்கள் மட்டும் பெற்றுத்தருமாறு அரசிடம் கோருமாறு இருவரும் வேண்டினர். அரசு அதனை நகல் எடுத்து தருமாறு உடனே உத்தரவிட்டது. இவையெல்லாம் எப்படி கோவிலில் வந்தது என்பது குறித்து விசாரணையை தொடங்க அரசு காவல்துறைக்கு ஆணையிட்டது. இதை ஒரு செய்தியாக வெளியிட காவல்துறையினர் மறுத்துவிட்டனர். மெகாய்ட் மற்றும் ஜொவியன் முன்விரோதத்தினால் கொலை என மொத்த விசயத்தையும் அரசு கட்டளைப்படி மறைத்தது.

அகிலாவும் சின்னசாமியும் பெரு நாட்டிலிருந்து தேன்நிலவு முடித்து தமிழகம் வந்தனர். சின்னசாமியின் தந்தை அகிலாவை அன்புடன் வரவேற்றார், சிலவாரங்களில் அவர் விமான நிலையத்தில் என்ன சொன்னார் என்பதையே மறந்து இருந்தார்.

அந்த மொத்த எழுத்துக்களையும் புத்தகமாக எழுதி வெளியிட இருவரும் திட்டமிட்டனர். அதற்கான தலைப்பும் தேர்ந்தெடுத்தனர். அந்த பழங்காலச் சுவடுகள் மூலம் உலகத்திற்கு ஒரு புதிய நாகரிகத்தை அவர்கள் காட்டிட எண்ணினார்கள். அந்த நாகரிகத்தை பற்றி தெரியவந்தால் இந்த மொத்த மனித குலமும் மனிதம் என்பதை பற்றி உணரும் என நம்பிக்கை கொண்டார்கள். அகிலா முதல் வரி எழுதினாள். இன்றைய மனிதர்கள் தலைகுனிந்தார்கள்.

முற்றும்.

பழங்காலச் சுவடுகள் - 10

''மாயன்கள் அஜ்டெக்குகள் கலாச்சாரம் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த மனிதர்களும் கடவுள் வழிநடத்துவதாக தங்களுக்கென கடவுளை கொண்டாடி வந்தனர். சிற்பக்கலை போன்ற கலைகளில் மிகவும் கை தேர்ந்தவர்களாகவே இருந்தனர். இவர்கள் இருந்த பகுதி மெக்ஸிகோ பகுதியாகும். குவாட்டமேலா, ஹோண்டுராஸ் பகுதிகளில் மாயன்கள் வாழ்ந்தனர். அஜ்டெக்குகள் கட்டிய பிரமிடும் உருவாக்கிய நகரமும் மிகவும் பிரபலமானவை. இந்த மனிதர்கள் தங்களது அரசை போரிட்டு விரிவாக்கிக் கொண்டனர். பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்பெயின் எப்பொழுது கால் எடுத்து வைத்ததோ அப்பொழுதே இந்த கலாச்சாரம் அழிவுக்கு வித்திட்டது''

அகிலா கேட்டாள்.

''ஒற்றுமையின்மையினால் தானே அழிந்தார்கள், பெருவில் இது போன்று இருந்தார்களா''

''பெருவில் நாஜ்கா, இன்கா என மனித கூட்டம் இருந்தது. இங்கே சூரியக்கடவுள்தான் பிரசித்தம். ஏனைய கடவுள்கள் இருந்தாலும் சூரியனே எல்லாம். நீங்கள் இங்கே மச்சு பிச்சு பகுதியைப் பார்க்கலாம். ஆண்டிஸ் எனப்படும் மலைப்பகுதியில் அந்த நூற்றாண்டிலேயே இத்தனை பெரும் வியப்புகளை ஏற்படுத்தியது இன்கா வம்சவழியினர். மாயன்கள் அஜ்டெக்குகள் போன்றே விவசாயம் தான் இவர்களுக்கு எல்லாம்''

''எல்லா இடங்களுக்கும் எங்களை அழைத்துச் செல்ல முடியுமா''

''என்னால் வர இயலாது, எனக்கு இங்கே வேலை இருக்கிறது, ஒரே ஒரு இடம் அதை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். ஒளிக் கற்களால் ஆன ஒரு கோபுரம் இருக்கிறது. அங்கே சென்றால் அத்தனை சக்தியும் நமக்குள் வந்துவிடும் போன்ற உணர்வு ஏற்படும். இதை இன்கா வம்சத்தினர் அஜ்டெக்குகளிடம் இருந்து திருடினார்கள் என சொல்வார்கள். ஆனால் அன்றைய மக்கள் கடவுளுடன் தொடர்பு கொள்வதையே பெரும் பேறாக கருதினார்கள்''

''இன்கா சமுதாயம் என்ன ஆனது''

''மாயன் அஜ்டெக்குகள் சின்ன கூட்டங்களாக இருந்தார்கள், அதைப்போல இன்கா வும் கூட்டங்கள்தான். மாயன், அஜ்டெக்குகளை வெற்றி கொண்டதை கண்ட அதற்கடுத்த வந்த தளபதி பெருவின் மேல் கண் வைத்தான், இன்கா சமுதாயத்தை வெற்றி கொண்டான்''

''இவர்களது கலாச்சாரம் வழிமுறைகள் என்ன ஆனது''

''ஸ்பெயின் தளபதிகள் கத்தோலிக்கத்தை முற்றிலும் விதைத்தனர், மாயன்களும் அஜ்டெக்குகளும் தங்களது சுயம்தனை இழந்தார்கள், ஆனால் இன்கா சமுதாயத்தினர் தங்களது வழிமுறையை வைத்துக்கொண்டார்கள், இந்தியர்களைப் போல''

'வேதம் என பெயரைச் சொல்லி சமுதாயத்தை அழித்துக்கொண்டே இருக்கிறார்கள்' விவிட் சொன்னது அகிலாவின் காதுகளில் ஒலித்தது. சின்னசாமி திக்கிக்கொண்டே கேட்டார்.

''கலாச்சாரம் தொலைந்தது ஆனால் கலாச்சார சின்னங்கள் இருக்கிறதா''

''மாயன்கள் அஜ்டெக்குகள் உருவாக்கிய நகரம் சின்னபின்னமானது, முற்றிலும் மாறிவிட்டது. டெக்னிக்குவான் இடத்தை அஜ்டெக்குகள் உருவாக்க கடவுளே கட்டளையிட்டார் என சொல்வார்கள், இப்பொழுது உருக்குலைந்து இருக்கிறது, மாயன் பெண்மணி நோபல் பரிசு எல்லாம் வென்று இருக்கிறார் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னர். குவாட்டமேலா பெரும் சர்ச்சைக்குரியதாக இப்பொழுது இருக்கிறது, இன்கா அமைத்த பெரிய சாலைகள் கோவில்கள் எல்லாம் இங்கே அப்படியேதான் இருக்கிறது''

''இரகசியங்கள் என சொன்னீர்களே என்ன''

''எனக்கு வேலை இருக்கிறது, நீங்கள் எத்தனைநாள் இங்கே இருப்பீர்கள், முகவரி தருகிறேன், இரவு வீட்டிற்கு வாருங்கள், நான் விடுதிக்கெல்லாம் செல்வதில்லை''

அகிலாவும் சின்னசாமியும் நன்றி சொல்லிக்கொண்டு பெரு நகரத்தை வலம் வந்தார்கள். இந்தியாவில் இருப்பது போன்று உணர்ந்தார்கள்.

''ஒளிக்கற்கள் கோபுரம் போகலாமா''

''இந்த ஊரிலேயே இருக்கலாம் போல இருக்கு''

''ஏன் சண்டையிட்டே வாழ்ந்து இருக்காங்க, ஒருத்தரை தன்வசப்படுத்திதானே பெரும் சாம்ராஜ்யம் உருவாக்கி இருக்காங்க, அடிமைகளா நடத்தி இருக்காங்க, ஆனா தெய்வீக உணர்வு மட்டும் தன்னோட வச்சிகிட்டாங்க''

''நம்ம ஊருல மட்டும் என்னவாம், ஜைனர்களை ஆறாம் ஏழாம் நூற்றாண்டில வேட்டையாடுனவங்கதானே நாம, எத்தனை பேரை கொன்னோம், மாற்றத்தை உருவாக்க பலியாக்கப்பட்ட மனிதம்தான் எத்தனை, அதான் விவிட் சொன்னானே கொலை பாதகர்கள், ரத்த வெறியுடன் அலைபவர்கள்''

''நல்ல விசயத்தை ஏன் எடுத்துக்கலை யாரும்''

''நல்ல விசயத்தை மட்டுமே ஏன் போதிக்கலை எவனும்''

சின்னசாமியின் மேல் ஒருவன் மோதினான். மோதியவன் மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டு விலகி நடந்தான். சற்று தூரத்திற்குச் சென்றவன் திரும்பினான்.

''வலிக்கிறதா''

''இல்லை''

''வலி குறைந்திருக்கும் என்றே சற்று தொலைவு சென்று திரும்பினேன்''

சின்னசாமியும் அகிலாவும் புன்னகைத்தனர். அந்த மனிதரும் புன்னகைத்தார். தனது பெயர் ஜொவியன் என அறிமுகப்படுத்திக் கொண்டுவிட்டு சென்றார்.

''உலகம் எத்தனை அமைதியாக இருக்க வேண்டியது''

''நம்மளை நாமே தொலைச்சிட்டோம்''

''உன்னை தொலைக்க வேண்டாம்னு சொல்றியா''

அகிலா சிரித்தார். பெரு வில் பெரும் மழை கொட்டத் தொடங்கியது.

(தொடரும்)

பழங்காலச் சுவடுகள் - 9

விவிட்டிடம் அகிலா பேசினாள். இனிமேலாவது ஒரு சமுதாயம் உருவாக்கும்போது அன்பே உருவான சமுதாயமாக உருவாக்குமாறு கேட்டுக்கொண்டாள். விவிட் சிரித்தான். அது மட்டும் ஒருபோதும் உருவாக்கப்போவதில்லை என்றான். பொக்கிஷங்கள் எல்லாம் வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் வளர்க்கக்கூடியதாக இருப்பதாக கூறினாள். வேதநூல்கள் சொல்லும் நல்வழியை பின்பற்றுமாறு அறிவுறுத்தினாள். ஆனால் விவிட் எதையுமே கேட்பதாக இல்லை. அனைவருக்கும் அங்கே சமையல் தயாராகிக் கொண்டிருந்தது. சின்னச்சாமி அகிலாவை அழைத்து நாம் விடுதிக்கு செல்வது என நல்லது என கூறினார். இருவரும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்கள். வாகனத்தில் வாகன ஓட்டி காத்துக்கொண்டிருந்தான். விடுதியை அடைந்தனர். சின்னச்சாமி நிம்மதியாய் உணர்ந்தார்.

''உலகம் எவ்வளவு மாறிவிட்டது, இப்படி பழமையிலே ஊறிப்போய் ஒருவரையொருவர் எப்படி வெட்டிக்கொண்டு வாழ்கிறார்கள்''

''வாழ்கிறார்களா? சாகிறார்களா? ம்ம் நீயும் தான் முதலாம் பானிபட் போர், இரண்டாம் பானிபட் போர் இன்னும் சொல்லித்தந்து கொண்டிருக்கிறாய், போரினால் ஏற்பட்ட விளைவுகளைச் சொல்லி இனிமேல் போர் என்பதே நடக்கக்கூடாது என எந்த வரலாறு புத்தகமாவதுச் சொல்லித் தருகிறதா? இந்த மனிதர்கள் எப்பொழுது மூன்றாவது உலகப்போர் வரும் என விஷ விதைகளை தூவிக்கொண்டே இருக்கிறார்கள். மனிதர்கள் போரினால் படும் அவலநிலைகள் என ஈராக், ஆப்கானிஸ்தான், லெபனான், இலங்கை என நாடுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம், விவிட் சொன்னதுபோல் மனிதம் அற்றவர்களாக நாம் தான் இருக்கிறோம், பழங்காலத்தில் நடந்தது இன்று அதிக அளவில் தொடர்ந்து நடைபெறுகிறது என்பதை நீயும் நானும் மறுக்க முடியுமா''

''தேன்நிலவுக்குத்தான் வந்தோம் ஆனால் இப்படி கொடூரமான வாழ்க்கை முறையை கண்டதும் இனிவரும் சந்ததியினர் பற்றி அச்சமாக இருக்கிறது''

''அன்பை போதிக்கும் முறை அழிந்து போய்விடுமோ என அச்சமாகவும் இருக்கிறது, அதே மனிதர்களிடம் நான் எப்படி நடுங்கிக்கொண்டே இருந்தேன் தெரியுமா, ஒன்று பேசுவதற்குள் ஒன்றாக நின்றுகொண்டே வாளினை எடுக்கிறார்கள், எதிரெதிர் நின்று கொள்கிறார்கள் பார்க்கவே உயிர் பறந்து போய்விடும் போலிருக்கிறது''

''பெரு நாட்டிற்குச் செல்ல வேண்டுமா''

''செல்லத்தான் வேண்டும்''

எகிப்தில் சிலநாட்கள் இருந்து பிரமிடுகள், கோவில்கள் எல்லாம் பார்த்தார்கள். நைல்நதியின் ஓரத்தில் செல்லவே அச்சமாக இருந்தது. ஆனால் பெரு செல்லும் நாளன்று வாகன ஓட்டியை விவிட் இருக்கும் பகுதிக்கு வாகனம் செலுத்தச் சொன்னாள். அங்கே அதே இடத்தில் சில குடிசைகள் முளைத்திருந்தன. பெரிய அழிவு நடந்ததிற்கான ஆதாரமே இல்லாது போன்று இருந்தது. ஒரு சுவடும் தெரியாமல் அழித்துவிட்டார்களே, ஆனால் என்றோ நடந்த போர்கால சரித்திரங்களை மட்டும் இன்னும் பாதாள அறையில் பாதுகாத்து வருவது ஏனோ என எண்ணிக்கொண்டே இருக்க விமானநிலையம் வந்து அடைந்தார்கள். வேதநூல்களும், நூலக நூல்களும் வைத்திருப்பதை நினைக்கையில் அகிலாவுக்கு மனம் என்னவோ செய்தது.

பெரு நாட்டினை அடைந்தார்கள். தென் அமெரிக்க நாடுகள் பெரும்பாலும் ஸ்பெயின் ஆதிக்கத்தில் இருந்தவை. பெரு நாட்டினை அடைந்ததும் கோவில்கள் தென்பட்டன. அனைவரு்ம் புன்னகை புரிந்தார்கள். என்ன உதவி வேண்டும் என தேடி வந்து கேட்டார்கள். வணங்கினார்கள். அகிலா ஆச்சரியம் அடைந்தாள்.
விடுதியை அடைந்தபோது விடுதியில் இருந்தவர்களும் மிகவும் அன்போடு உபசரித்தார்கள்.

சற்று நேரம் ஓய்வு எடுத்துவிட்டு ஒரு கோவிலுக்குச் சென்றார்கள். அங்கே இருந்தவர் பல உலக ரகசியங்கள் இங்கே புதைந்து இருப்பதாக சொன்னார். இந்தியாவுக்கும் பெருவுக்கும் பெரிய தொடர்பு இருப்பதாக கூறினார். கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது. மாயன்கள் அஜ்டெக்குகள் பற்றி சொன்னார். அவர் சொல்ல சொல்ல ஆர்வமாக கேட்கத் தொடங்கினார்கள்.

(தொடரும்)

பழங்காலச் சுவடுகள் - 8

இருவரும் ஒருவழியாய் விடுதியை அடைந்தார்கள். பிரமை பிடித்தது போல் இருந்தது. இனிமேல் இப்படி ஒரு தவறை செய்யக் கூடாது என சின்னசாமி எச்சரிக்கை செய்தார்.

''விவிட் அம்மா இறக்கும்போது இந்தியா இந்தியா என சொன்னார்களே''

''இப்ப என்ன வேணும் உனக்கு, இப்பதான் உயிர் தப்பிச்சி வந்திருக்கோம்''

''விவிடோட அப்பா எங்க இருக்காருனு சொல்லலையே''

''இப்ப என்ன வேணும் உனக்கு''

''நாளைக்கு அந்த இடத்துக்கு நாம போகனும்''

''உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு அகிலா''

''போய்த்தான் ஆகனும்''

''பெரு நாட்டுக்கு கூட போக வேண்டாம், நாளைக்கே நாம இந்தியா போவோம்''

''நீங்க போங்க நான் வரலை''

''இங்க இருந்து என்ன பண்ண போற, நானே பயத்துல செத்துகிட்டு இருக்கேன்''

''பயம் தற்காப்புனு என்ன என்னமோ சொன்னீங்க''

''நீ பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சிட்ட''

''பொக்கிசங்கள் பாக்கனும்''

''தீயில போட்டு பொசுக்கப் போறான்''

அகிலா பிடிவாதம் பிடித்தாள். சின்னசாமி கோபம் அடைந்தார். ஆனால் அகிலா விடாமல் அடம்பிடித்தாள். இரவெல்லாம் யோசித்தார் சின்னசாமி. காலை முதல் வேலையாய் விடுதியை காலி பண்ணும் திட்டத்துடன் உறங்கினார். ஆனால் அகிலா வேறு திட்டம் வைத்து இருந்தாள். காலையில் எழுந்ததும் அகிலா தனது விருப்பபடியே நடக்க வேண்டும் என கூறினாள். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது சின்னசாமிக்கு. சாவது என முடிவாகிவிட்டது என மெத்தையில் பொத்தென விழுந்தார் சின்னசாமி. அகிலா அவசரப்படுத்தினாள்.

வாகன ஓட்டி யாரும் வர மறுத்தார்கள். பெரும் சேதம் நடந்து இருப்பதாகவும் அந்த இடத்துக்கு செல்வது ஆபத்து எனவும் கூறினார்கள்.

''காவல் துறை எதுவும் செய்வதில்லையா''

''அப்பகுதியில் வாழும் மக்களிடம் யாரும் தொடர்பு வைத்து கொள்வதில்லை. இது போன்று இவர்களுடன் சேர்த்து மொத்தம் மூன்று கூட்டமைப்பு இருக்கிறது. அது அவர்களின் தனி பிரதேசம். இம்முறை பெரிய சேதம் நடந்துவிட்டதாகத்தான் தெரிகிறது. நைல் நதியை ரத்த நதியாக்கும் கூட்டங்கள். இந்நேரம் மற்ற இரு கூட்டங்களும் அங்கே வந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது''

''சற்று தொலைவில் எங்களை விட்டு விட்டு வாருங்கள்''

சின்னசாமி மிகவும் எரிச்சல் அடைந்தார்.

''அதான் வரமாட்டோம்னு சொல்றாங்கள இனி உன் பாடு''

''...''

ஒரு வாகன ஓட்டி சம்மதம் சொன்னார். சற்று தொலைவில் இறக்கிவிடுவதாக அழைத்துச் சென்றார். அகிலா வற்புறுத்தவே சற்று அருகிலேயே கொண்டு நிறுத்தினார்.

''காத்திருக்க முடியுமா''

''என்னை யாராவது தாக்காமல் இருந்தால் இங்கேயே இருப்பேன்''

சின்னசாமி திட்டிக்கொண்டே நடந்தார். அகிலா அப்பகுதியை அடைந்தாள். மக்கள் நடமாட்டம் இருந்தது. இடம் சுத்தமாக்கப்பட்டு இருந்தது. அருகில் நடந்து சென்றபோது இவர்களை நோக்கி ஒருவன் ஓடிவந்தான். சின்னசாமி தைரியம் வரவழைத்துக் கொண்டார். விவிட் அவன் பின்னால் ஓடி வந்தான். ஓடி வந்தவன் திரும்பி பார்த்து நின்றான். விவிட் அகிலாவிடம் கேட்டான்.

''இப்போ எதற்கு இங்கே வந்தீர்கள்''

''பொக்கிசங்கள் பார்க்க வேண்டும்''

''...''

''என்ன நடக்கிறது இங்கே''

''எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது''

''நேற்றுதானே அமங்கலம் நடந்தது''

''நேற்று இன்றைய கணக்கில் வருவதில்லை''

''இவர்கள் எல்லாம் யார்''

''எங்கள் உறவினர்கள்''

''நேற்று நடந்தது பற்றி கவலை இல்லையா''

''பழையதை பற்றி பேச வேண்டாம்''

''அப்படியெனில் எதற்கு பொக்கிசங்கள் காக்கப்படுகிறது''

விவிட் திணறினான்.

''நீ சிந்து பெண்ணல்லவா அதுதான் இப்படி பேசுகிறாய்''

''நாங்கள் பெரு நாட்டுக்கு செல்ல வேண்டி இருக்கிறது, பொக்கிசங்கள் பார்க்க வேண்டும்''

''சரி வாருங்கள்''

விவிட் அகிலாவையும் சின்னசாமியையும் பற்றி சொன்னான். ஒருவன் வாளை எடுத்தான். மற்றொருவனும் வாளை எடுத்தான். விவிட் கத்தினான். இரண்டு கூட்டமும் தனித்தனியாய் வேக வேகமாக நின்றது.

''என்னை பார்க்க வந்து இருக்கிறார்கள், விடுங்கள்''

அகிலாவுக்கு சுய நினைவில் இருப்பது போன்று எதுவும் தெரியவில்லை. சின்னசாமி முகம் வெளிறிப் போனது. சின்னசாமியின் கைகளைப் பிடித்தாள் அகிலா.

''அப்பவே சொன்னேன் கேட்டியா, சாமி வந்தது போல குதிச்ச''

''...''

பாதாள அறைக்குள் நுழைந்தார்கள். இருவரின் முகம் ஆச்சரியத்தில் அப்படியே கண்களை நிலை குத்தி நிற்க வைத்தது.

''இவை எல்லாம் சிந்து பகுதியையும் அதன் அருகில் இருக்கும் பகுதியையும் சார்ந்ததுதான், இதுதான் அலெக்சாண்டர் தந்த கேடயம்''

''உங்கள் தந்தை எங்கே''

''சிந்து பகுதிக்கு சென்று இருக்கிறார் அவர் வர ஒரு வருட காலம் ஆகும்''

''இவை வேத நூல்கள் அல்லவா''

''ஆம் எனது தந்தை மொழி பெயர்த்து எழுதியது அதோ அங்கே இருக்கிறது''

''மரண செய்தி கேட்டால் அவரின் நிலை''

''அதற்கெல்லாம் கவலைப்படமாட்டார்''

''நீங்கள் மானிட பிறவிகள் தானா''

''நாங்கள் மனிதம் அற்றவர்கள்''

''வேத நூல்கள் வைத்து இருக்கீர்கள் ஆனால் மனிதம் அற்றவர்கள் என சொல்கிறீர்கள்''

''ஆம் மனிதம் அற்றவர்கள் நாங்கள்''

''வேதம் படித்தவர்களுக்கு நீங்கள் செய்வது இழுக்கு அல்லவா''

''மேலே வாளுடன் இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லுங்கள்''

''என்ன பைத்தியகாரத்தனம் இது''

''இந்த சமவெளியில் நாங்கள் நன்றாகத்தான் இருந்தோம் எங்களிடம் துவேசத்தை நிரப்பினார்கள். நாகரிகம் வளர்த்த எங்களை மனிதம் அற்றவர்கள் ஆக்கியவர்கள் வேதம் என வேசம் போடுகிறார்கள்''

''புரியவில்லை''

''கொலை பாதகர்கள், ரத்த வெறியுடன் அலைகிறார்கள்''

''ஒரு சமுதாயமே அழிந்ததன் காரணம் நீங்கள்''

''ஒரு சமுதாயம் மட்டும் தான் அழிந்ததை பார்த்தீர்கள், மொத்த சமுதாயத்தையும் வேதம் பெயர் சொல்லி அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்''

''நீங்கள் பேசுவது தன்னையே அழித்துக்கொண்டு பிறரை குற்றம் சாட்டுவது போல இருக்கிறது''

''இதைப் பாருங்கள்''

அகிலா அதிர்ச்சியில் உறைந்து போனாள். சின்னசாமி சின்னாபின்னமாகிப் போனார்.

''இது ரோமப் பேரரசு. இது கிரேக்கப் பேரரசு. கிரேக்கன் காட்டிய கடவுளையெல்லாம் ரோமன் பெயர் மாற்றி காட்டினான் எங்கு பார்த்தாலும் ஒருவரையொருவர் வெட்டிக் கொன்றனர் இவையெல்லாம் ரத்தம் தோய்ந்த ஆடைகள்''

''...''

''இதோ வாளுடன் புறப்பட்ட மனிதமே அற்றவர்கள், தலையை சீவினார்கள். உங்கள் சிந்து பகுதியில் எடுத்தது''

''...''

''அடுத்தவர்களை வெட்டிக் கொல்வதிலே மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்ட கூட்டம் அதுதான் சொல்கிறேன் நாங்கள் மனிதம் அற்றவர்கள்''

''இப்பொழுது மாறிவிட்டது அல்லவா''

''ஆம் வாளுக்கு பதில் வான வேடிக்கை நடக்கிறது நாங்கள் வாளுடன் மட்டுமே இருக்கின்றோம்''

''மனிதம் வளர்க்கலாம் அல்லவா''

''என் தந்தை சொல்வார். நிறம் பார்த்து வெட்டிக் கொல்லும்் கூட்டம் இருக்கிறதாம். இனம் வேறுபாடு பார்த்து வெட்டிக் கொல்லும் கூட்டம் இருக்கிறதாம். நிலை பார்த்து வெட்டிக் கொல்லும் கூட்டம் இருக்கிறதாம். நாங்கள் அழிய வேண்டும் என வெட்டிக் கொள்பவர்கள்''

''சிந்து பகுதிக்கு ஏன் சென்று இருக்கிறார்''

''ரத்தம் தோய்ந்த ஆடைகள் எடுக்க''

''...''

''பொக்கிசங்கள் பார்த்தாகிவிட்டதா''

''பார்க்க சகிக்கவில்லை''

''வேத நூல்களிலும் ரத்தம் படிந்து இருக்கிறது பாருங்கள்''

''துடைத்து தூய்மையாக்குங்கள்''

''எழுத்துக்கள் சேர்ந்து அழிந்து போகும்''

அகிலாவும் சின்னசாமியும் மேலே வந்தார்கள். பெண் தயாராக இருந்தார். விவிட் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டான். பாதாள அறைக்கு மேல், வீட்டினை உடனே எழுப்பினார்கள். குடிசையாய் தான் வெளியில் தெரிந்தது. உள்ளே குகையாய் அமைத்தார்கள். அகிலா அசையாமல் நின்று கொண்டிருந்தாள். சின்னசாமி மனிதம் பற்றி யோசிக்கலானார்.

(தொடரும்)

பழங்காலச் சுவடுகள் - 7

சப்தம் கேட்டதும் பாதள அறையிலிருந்து பிரம்ட் மேல் தளத்துக்கு வந்தான். மற்ற இருவரும் பயத்துடன் பிரம்ட் ஐ பார்த்தார்கள்.

''என்ன ஆனது''

வாகனம் எரிந்து கொண்டிருப்பதை பிரம்டுக்கு காட்டினார்கள். கிரக் மிகவும் ஆத்திரம் கொண்டவனாக காணப்பட்டான். இவன் இரண்டாமவன். சொபிட் தனது கையில் போட்டிருந்த துணியை அவிழ்த்து மருந்து வைத்து எதுவும் நடக்காதது போல அமர்ந்து இருந்தான்.

''எல்லாம் இவனால் வந்தது''

மிக்கட் சொபிட்டை நோக்கிச் சொன்னான். கிரக் ஒரே பாய்ச்சலாக ஓடி சொபிட்டை உதைப்பதற்கு காலை தூக்கினான். சொபிட் இதை எதிர்பார்த்தவன் போல கிரக் காலினை பிடித்து சுழற்றிவிட்டான். கிரக் எதிர்பாராவிதமாய் கீழே விழுந்தான். இச்செயலை பார்த்த பிரம்ட் கத்தினான்.

''நாம் அழியப் போகிறோம்''

''பாதாள அறைக்குள் ஒளிந்து கொள்ளலாம்''

கிரக் எழுந்தவன் சொபிட்டை முறைத்தப்படியே பாதாள அறைக்குள் நுழைந்தான். பாதாள அறையை உள்புறமாக பூட்டினான் பிரம்ட். பிரம்ட் சொன்னான். மிக்கட் மட்டுமே பதில் பேசினான்.

''அனைவரும் நமது உறவுக்காரர்கள்''

''இனி உறவு கொண்டாட முடியாது''

''வாகனம் எரித்தவர்கள் நம்மை எரிக்காமல் விடமாட்டார்கள்''

''நாம் சில காலங்கள் கழித்து திரும்பியிருக்க வேண்டும்''

பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டின் கதவு நொறுங்கும் சத்தம் கேட்டது. அறையெல்லாம் தேடினார்கள்.

''பாதாள அறைக்குள் இருப்பார்கள், கல் கதவை உடைத்து நொறுக்குங்கள்''

''இது முறையல்ல என அப்பொழுதிருந்தே நாங்கள் சொல்லி வருகிறோம் நீங்கள் நடந்து கொள்வது முறையில்லை''

சொன்னவரை முறைத்தார் அவர். பிரம்ட் ஒரு முடிவுடன் பாதாள அறையை விட்டு வெளியே வந்தான். பிரம்ட் ஐ கண்டதும் ஒருவன் வாளால் வெட்டப் பொனான். அவனை தடுத்து நிறுத்தியவர் பிரம்ட்டிடம் கேட்டார்.

''சொபிட் எங்கே, அவனை எங்களிடம் விட்டுவிட்டு நீ செல்லலாம்''

அதற்குள் பாதாள அறைக்குள் சிலர் இறங்காமலே குதித்தார்கள். வெளிச்சம் ஏற்ற உதவிய தீ அதி வேகமாக எரிந்தது. பிரம்ட் அப்படியே நின்றான். சொபிட் வெளியே இழுத்து வரப்பட்டான். பிரம்ட் பாதாள அறையை மூடச் சொன்னான். பாதாள அறைக்குள் சென்று வந்தவன் சொன்னான்.

''மரியாவையும் விவிட்டையும் காணவில்லை''

''அவர்களை விடு, இவன் தானே கையை வெட்டினான்''

சொபிட்டை ஓங்கி ஒரு அறை விட்டார். ஒருவன் உதைத்தான். சொபிட் கீழே விழுந்தான். பிரம்ட் கெஞ்சினான்.

''எங்களை விட்டு விடுங்கள் இனிமேல் நாங்கள் இப்பகுதிக்கு வரமட்டோம்''

''இப்படித்தான் உனது குடும்பம் ஒவ்வொரு முறையும் ஏதாவது செய்து தப்பித்து விடுகிறது. இம்முறை அது சாத்தியமில்லை''

''சொபிட் மட்டுமே குற்றவாளி மற்றவர்களை விட்டுவிடுவோம்''

''சொன்னது யார்''

''நானே சொன்னேன்''

''அப்படியென்றால் அவர்களுக்காக நீ மரணமடைய தயாரா உனது கூட்டம் இன்னமும் இவனுக்கு உதவியாக ஏன் பேசுகிறது முதலில் உங்களை வெட்ட வேண்டும்''

சலசலப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் ஆரம்பித்தது. ஒருவருக்கொருவர் சண்டையிட தொடங்கினார்கள். பிரம்ட் வாளினை எடுத்தான். கிரக்கும் மிக்கடும் வாளினை எடுத்தார்கள். சொபிட் அறையில் தீயை வைத்தான். இரு பிரிவுகளாக பெரும் சண்டை நடந்தது. வீட்டினில் தீ பரவிடவே வெளியே வந்தார்கள். வாகனம் எரிவதை பார்த்து விட்ட வந்த அந்த பகுதி மக்கள் எல்லாம் குவிந்தார்கள். குழந்தைகள் கதறின. பெண்கள் வாளினை எடுத்தார்கள். நிலவு வெளிச்சமும் தீ வெளிச்சமும் போதவில்லை.

பிரம்ட் பல நபர்களை வெட்டினான். சற்று நேரத்திற்கெல்லாம் பெரும் சேதம் நடந்தது. அனைவருமே கீழே விழுந்தார்கள். தீ வேகம் வேகமாக பரவியது. அவ்விடத்தை விட்டு தப்பித்தவர்கள் வெகு சிலரே. ஆனால் அதையும் பொறுக்காமல் காயங்களோடு அனைவரையும் வெட்டினான் கிரக். தீ முழுவதும் பரவியது. அந்த இடமே சாம்பலாகியது.

விவிட் பதட்டமடைந்தான். சென்றவர்களை காணவில்லையே என கலக்கமுற்றான். அகிலா கேட்டாள்.

''நடு இரவு தாண்டி விட்டது, இங்கிருந்து எப்படி செல்வது''

''வாகனங்கள் காலையில் வரும், சென்றுவிடலாம், ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது''

பயத்துடன் இரவினை கழித்தார்கள். காலையில் வாகனங்கள் தென்பட ஆரம்பித்தன. ஒரு வாகனத்தை பிடித்து தனது பகுதிக்கு விரைந்தான் விவிட்.

அருகே செல்ல செல்ல எரி வாசனை அடித்தது கண்டு வாகன ஓட்டி அச்சமுற்றார். விவிட் ஓட்டச் சொன்னான். மொத்த பகுதியும் எரிந்து சாம்பலாகி கொண்டு இருந்தது. விவிட் ஓ வென அலறினான். மரியா மயக்கமுற்றார். அகிலாவும் சின்னச்சாமியும் பயத்தால் நடுங்கினர். வாகன ஓட்டி அவர்களை இறக்கிவிட்டு பணம் கூட வாங்காமல் வாகனத்தை எடுத்து சென்றார். மரியாவுக்கு மயக்கம் தெளிவித்து அப்படியே அமர்ந்துவிட்டான் விவிட்.

''என்ன கொடுமை இது இப்படி செய்து விட்டார்களே''

''பேசாமல் இரு அகிலா''

விவிட் சொன்னான்.

''நீங்கள் உங்கள் விடுதிக்கு செல்லுங்கள். நாம் வந்த இடத்தை அடைய இரண்டு மணி நேரம் ஆகும், அங்கிருந்து வாகனம் பிடித்து செல்லுங்கள்''

''நீங்கள் வரவில்லையா''

''தீ குழம்புகள் இருக்கின்றன, இதை தாண்டி உள்ளே செல்வது எளிதில்லை. மொத்த வம்சமும் அழிந்துவிட்டது''

மரியா பேச முடியாமல் இந்தியா இந்தியா என சொல்லிக்கொண்டே இறந்து போனார். அகிலாவும் சின்னசாமியும் அடக்கி வைத்திருந்த அழுகையை அடக்கமுடியாமல் கதறினார்கள். விவிட் ஓ என அலறினான். உடனே தாயை தூக்கிக் கொண்டு தீ குழம்புகள் பொருட்படுத்தாது ஓடினான். சின்னஞ்சிறு தீயில் போட்டான். தீயை மூட்டினான். உடல் எரிய தொடங்கியது. அகிலா மயக்கமானாள். சின்னசாமி கதறினார். விவிட மறுபுறம் ஓடினான். கற்கள் எடுத்தான். அதன் மேல் நடந்து தனது வீடு அடைந்தான். எல்லாம் எரிந்து அடங்கியிருந்தது. பாதாள அறையை ஒரு வழியாய் கண்டுபிடித்தான். திறந்து உள்ளே இறங்கினான். எதுவும் எரியாமல் அப்படி அப்படியே எல்லாம் இருந்தது.

அகிலா மயக்கம் தெளிந்தாள். விவிட் கண்ணுக்கு தெரியவில்லை. அங்கேயே அமர்ந்து இருந்தார்கள். விவிட் சிறிது நேரத்திற்கு எல்லாம் வந்தான்.

''பழங்கால பொக்கிசங்கள் எதுவும் சேதம் ஆகவில்லை''

''இவ்வளவு பேர் இறந்து விட்டார்களே, உனக்கு கவலை இல்லையா''

''தானே அழிவை தேடிக் கொண்டவர்கள் பற்றி எனக்கு என்ன கவலை''

''என்ன செய்யப் போகிறாய்''

''ஒரு பெண்ணை மணமுடித்து ஒரு சமுதாயம் இங்கே மீண்டும் உருவாக்கப் போகிறேன், இதுதான் சில ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்னால் நடந்தது, பொக்கிசங்கள் காக்கப்படும் நீங்கள் கிளம்புங்கள்''

அகிலாவும் சின்னசாமியும் மெதுவாக பிரமிடுகள் நோக்கி நடந்தார்கள்.

''என்ன பொக்கிசங்கள் பார்க்கலாமா''

''அத்தனை பேரு செத்து கிடக்காங்க பொக்கிசங்கள் பாக்கப் போறியா, நம்மளை தீயில் போடாம விட்டானே''

''பெரு நாட்டுக்கு போக முன்னால இங்க வரனும்''

''ம்ம் தொலையனும்னு ஆசைப்படுற, நம்மால ஒரு சமுதாயமே தொலைஞ்சி போயிருச்சு''

''....''

கவலையில் கரைந்து கொண்டே நடந்தனர்.

(தொடரும்)

Friday 8 May 2009

பழங்காலச் சுவடுகள் - அத்தியாயம் 6

கதவு தட்டும் சப்தம் கேட்டதும் சின்னச்சாமி கதவைத் திறந்தார். பிரம்ட் வெளியே நின்று கொண்டு இருந்தார். தெரிந்த ஆங்கிலத்தில் பேசினார்.

''உள்ளே வாங்க''''நீங்க இன்னும் தயாராகவில்லையா''
''இதோ கிளம்பிட்டே இருக்கோம், கொஞ்சம் காத்திருக்க முடியுமா''
''சீக்கிரம் வாங்க''

அகிலாவும் சின்னச்சாமியும் தயாரானார்கள். பாஸ்போர்ட் மற்றும் விமான சீட்டு எல்லாம் பத்திரப்படுத்தினார்கள். இராமபிரானை வேண்டிக்கொண்டாள் அகிலா. வாகனத்தில் அமர்ந்து பிரம்ட் இருக்கும் பகுதிக்கு வந்தார்கள். மாலை நேரம் ஆகியிருந்தது. ஒரே சத்தமாக இருந்தது. பிரம்ட் பதட்டமடைந்தான். வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டின் முன் கூட்டமாக இருந்த மனிதர்களை நோக்கி சென்றான்.

''என்ன நடக்குது, ஏன் இப்படி கூச்சல் போடுகிறீர்கள்''
மரியா பிரம்ட் நோக்கி வந்தார்.
''என்னை ஏமாற்றியா நீ இந்த திருமணம் செய்ய துணிந்தாய்?''
''யார் சொன்னது"
''இதோ உனது இளவல் தான் சொன்னான், அந்த சிந்து பெண் திருமணம் ஆனவள் எனவும் அந்த மனிதர் அவரது கணவர் எனவும் சொன்னான், ஏன் இப்படி காரியம் பண்ண துணிந்தாய்''

''நீங்கள் நினைப்பது போல எந்த ஒரு பெண்ணும் எங்கள் ஐவரையும் மணக்க சம்மதிக்கப் போவது இல்லை நாங்கள் காலம் காலமாக இப்படியே இருக்க வேண்டியதுதான்''
''நீ தேடாமல் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வரலாம்''
''நான் உங்கள் பேச்சுப்படி நடக்கப் போவது இல்லை''

கூட்டத்தில் இருந்தவர்கள் வாளினை எடுத்தார்கள். பிரம்ட் நோக்கி வந்தார்கள். பிரம்ட் வாகனம் நோக்கி ஓடினான். மரியா பிரம்ட் ஐ விட்டுவிடச் சொன்னார். ஆனால் கூட்டம் அவனை துரத்தியது. மற்ற நான்கு சகோதரர்களும் வாளினை எடுத்துக்கொண்டு அந்த கூட்டத்தை விரட்டினார்கள். ஓடியவர்கள் திரும்பினார்கள். அகிலாவும் சின்னச்சாமியும் அதிர்ச்சி அடைந்தார்கள். வாள் சண்டை நடந்தது. மரியா கூட்டத்தினரை நோக்கி சண்டையை நிறுத்துமாறு சத்தமிட்டார். ஆனால் யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பிரம்ட் சண்டை நடக்கும் இடத்திற்கு ஓடி வந்தான்.

''என்னை வாளால் வெட்டுங்கள்''

சண்டையிட்டவர்கள் அப்படியே நின்றார்கள். மரியாவும் அந்த இடத்திற்கு வந்தார். கூட்டமாக அனைவரும் வந்து சேர்ந்தனர். கூட்டத்தினர் மரியாவை மனம் மாறச் சொன்னார்கள். மரியா தான் தனது கணவருக்கு வாக்கு கொடுத்துவிட்டதால் இப்படித்தான் என் பிள்ளைகள் இருக்க வேண்டும், அவர்கள் இதை மீறிச் செல்லக்கூடாது என பிடிவாதமாக இருந்தார். சிறிது நேரத்தில் மயக்கமாகி விழுந்தார். அவரைத் தூக்கிக்கொண்டு ஒரு கூட்டம் சென்றது. கூட்டத்தில் இருந்தவர் பிரம்ட் நோக்கி சொன்னார்.

''எல்லாவற்றிற்கும் நீயே காரணம், உன்னை பலியிட்டால் தான் சரியாகும், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உங்கள் குடும்பமே விளையாட இருந்தது''
''இது எங்கள் பிரச்சினை, நீங்கள் ஏன் இப்படி தலையிடுகிறீர்கள்''
''இது இந்த பகுதி பிரச்சினை, எங்களுக்கும் உனது தாய்க்கும் நடக்கும் பிரச்சினை, உனது தாயின் ஆசை நிறைவேற்ற இதுபோன்று இங்கிருந்து செய்ய வேண்டாம், ஒரு பொழுது தருகிறோம், இடத்தை காலி பண்ணுங்கள்''

பிரம்ட் விவிட் நோக்கிச் சென்றான். ஏன் இப்படிச் செய்தாய் எனக்கேட்டான். விவிட் சொபிட் பற்றி குறிப்பிட்டான். பிரம்ட்க்கு ஆத்திரமாக வந்தது. அனைவரும் பேசிதானே செய்தோம், அதற்குள் ஏன் இப்படி முடிவு செய்தீர்கள் எனக் கேட்டான். அதற்குள் சொபிட் வாளால் அப்பகுதியைச் சார்ந்த ஒருவன் கையை வெட்டினான். சொபிட்டை விரட்டினார்கள். பிரம்ட் வீட்டுக்குள் சென்று தாயை தூக்கிக்கொண்டு வாகனம் நோக்கி ஓடினான். மற்ற மூவரும் வாகனம் நோக்கி வந்தார்கள். சொபிட் தனியாக விடப்பட்டான், அவனை மட்டுமே கூட்டம் குறி வைத்து ஓடியது. வாகனத்தை விரைவாக எடுத்தான் பிரம்ட். அகிலாவும் சின்னச்சாமியும் பயத்தில் உறைந்து போனார்கள். வாகனம் விடுதி செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்றது. சொபிட் தொலைவில் ஓடுவது தெரிந்தது. வாகனத்தை சொபிட் நோக்கி செலுத்தினான் பிரம்ட். வாகனம் அருகில் வந்ததும் சொபிட் தாவி ஏறினான். மற்றவர்கள் வாளை வீசினார்கள். சொபிட் கையை குறிபார்த்தது ஒரு வாள். சொபிட் அலறினான். துணியால் கட்டுப்போட்டார்கள். வாகனத்தை விரைவாக செலுத்தினான் பிரம்ட். வாகனம் பிரமிடுகள் பகுதியை அந்த அந்திமாலையில் அடைந்தது. ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தினான் பிரம்ட். ஐந்து பேரும் தனியாக சென்றார்கள். பிரம்ட் சொன்னான்.

''மடையர்களாக நீங்கள் நடந்து கொண்டீர்கள்''
''தவறு பண்ணிவிட்டோம் மன்னியுங்கள்''
''அத்தனை பொருளும் இழக்க வேண்டியதாகிவிட்டது உங்கள் நடத்தையினால், பாதாள அறையின் சாவி யாரிடம் இருக்கிறது''
''நான் வைத்திருக்கிறேன்''
''சரி இன்று இரவே செல்வோம், பாதாள அறையில் இருக்கும் அந்த பழங்கால பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும்''
''யோசனையில்லாமல் நடந்து கொண்டுவிட்டோம்''
''இனி பேசி பயனில்லை, தாயை குணப்படுத்த ஒரே வழி ஒரு பெண்ணை கண்டுபிடிப்பதுதான்''

வாகனத்துக்கு திரும்பினார்கள். அகிலாவையும் சின்னச்சாமியையும் பிரமிடுகளுக்கு அருகில் அமரவைத்தார்கள். மரியாவும் விவிட்டும் உடன் இருந்தார்கள். நால்வரும் வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். விவிட் சொன்னான்.
''இதோ இந்த பிரமிடுக்கு முன்னால் நின்றுதான் மாவீரன் அலெக்ஸாண்டர் தனக்கு இதுபோல ஒன்று கட்ட வேண்டும் என சொன்னான்''
''ஏன் இப்படி சண்டை நடந்தது''
''எங்கள் மேல் அந்த பகுதி மக்களுக்கு வெறுப்பு அதிகமாகிவிட்டது, எங்களிடம் பழங்கால பொக்கிஷங்கள் இருக்கிறது, எனது அம்மா பழங்காலத்தில் நடந்த ஒரு மாபெரும் போர் சரித்திரத்தினை கருத்தில் கொண்டு எங்களுக்கு ஒரு பெண்ணை முடித்து வைக்க முடிவெடுத்தார்கள், அதுதான் அவர்களது வெறுப்புக்கு உச்சம்''
''எந்த போர் சரித்திரம்''
''சிந்து நாட்டில் நடந்தது அது''
''இந்தியாவா''''ஆமாம்''
''எப்படி இதெல்லாம் தெரியும்?''
''எங்களிடம் பழங்கால பொக்கிஷங்கள் இருக்கிறது, மாவீரன் அலெக்ஸாண்டர் தனது கேடயத்தை எனது முப்பாட்டனாரிடம் கொடுத்துச் சென்றான்''
''வீட்டில் ஒன்றும் தெரியவில்லையே''
''ஆறு அறைகளுக்கு கீழே பெரிய பாதாள அறை இருக்கிறது, அங்கேதான் நிரப்பி வைத்திருக்கிறோம், ஒழுங்காக அடுக்கப்பட்டு இருக்கிறது வேத சாஸ்திரங்கள் முதற்கொண்டு அங்கே இருக்கிறது. கிரேக்க நாட்டில் பலவருடங்கள் முன்னர் கட்டப்பட்ட நூலகம் ஒன்று அழிந்து போனது, ஆனால் அந்த நூலகத்தில் இருந்த நூல்களின் பிரதிகள் எல்லாம் எங்களிடம் இருக்கிறது''
''எப்படி உங்களுக்கு கிடைத்தது''
''எங்கள் முப்பாட்டனாருக்கு முப்பாட்டனார் முதல் வழிவழியாக வந்தது'' ''உங்கள் தந்தை எங்கே?''

மரியா விழித்துப்பார்த்தார். பிரமிடு பகுதியில் இருப்பதைக் கண்டு பதட்டமடைந்தார். விவிட் நடந்ததை சொன்னான். அகிலாவைப் பார்த்து மரியா வணங்கினார். மன்னிக்குமாறு வேண்டினார். பிரமிடுகளில் காற்று மோதி ஒருவித சப்தத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. விவிட் பழங்கள் எடுத்து அனைவருக்கும் தந்தான். தந்தையை பற்றி எதுவும் பேசாமல் இருந்தான் விவிட். அகிலாவும் சின்னச்சாமியும் தேன்நிலவுதனை நிலவின் வெளிச்சத்தில் அன்று கொண்டாடினார்கள். வாகனத்தை ஓட்டிச் சென்ற பிரம்ட் சற்று தள்ளி நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்றான். மூவரும் உடன் சென்றார்கள். ஊர் அமைதியாய் இருந்தது. இருளில் நிலவு வெளிச்சம் மட்டுமே இருந்தது. வீடு பாதிப்பு அடையாமல் இருப்பது கண்டான். வீட்டை திறந்து உள்ளே சென்றான். உள்புறமாக பூட்டிவிட்டு பாதாள அறைக்குச் சென்றான். மூவரும் மேல்தளத்தில் இருந்தார்கள். பாதாள அறையில் விளக்கு ஏற்றினான். அனைத்தையும் எப்படி எடுத்துச் செல்வது என புரியாமல் விழித்தான். வெளியில் பெரும் சப்தம் கேட்டது பாதாள அறையில் எதிரொலித்தது.(தொடரும்)

Friday 20 February 2009

பழங்காலச் சுவடுகள் - 5

குகை போல இருந்தாலும் வெளிச்சமாக இருந்தது. சூரிய கதிர்கள் உள்ளே விழுந்து சுவர்களில் மாட்டி வைக்கப்பட்ட கண்ணாடிகளில் பட்டு உள்ளே இயற்கையின் ஒளி எங்கும் வியாபித்து இருந்தது. அகிலாவும் சின்னச்சாமியும் உள்ளே நடந்து சென்றனர். வெளியில் இருந்து வந்த இளையவன் யாவருக்கும் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் சொன்னான். அதைக் கேட்டதும் அகிலா ஆங்கிலத்தில் வினவினாள். மூத்தவன் பதில் சொன்னான்.

''என்ன காரியம் பண்ணி இருக்கீங்க, நாங்க எப்படி திரும்பி போறது''

''கவலை வேண்டாம், எங்களிடம் வண்டி இருக்கிறது''

ஒரு குறுகிய அறைக்குள் நுழைந்தனர். அங்கே கட்டிலில் ஒரு பெண்மணி, மரியா, படுத்து இருந்தார். மூத்தவன் தனது தாயை தொட்டு எழுப்பினான். முனகியவாறெ எழுந்தாள் அந்த பெண்மணி. அந்த பெண்மணியிடம் ஏதோ கூறினான். பெண்மணியின் முகம் மலர்ந்தது. அகிலாவை நோக்கி கையை காட்டினார் அந்த பெண்மணி. நடுவானவன் அகிலாவை செல்லுமாறு கூறினான். சின்னசாமியும் உடன் செல்ல எத்தனித்தார்.

நடுவானவன் சின்னசாமியை சைகையால் இருக்கச் சொன்னான். அகிலாவை செல்லுமாறு மீண்டும் கூறினான். அகிலா பயத்துடன் அருகில் சென்றாள். அந்த பெண்மணி அகிலாவின் கைகளை எடுத்து தனது கன்னங்களில் ஒட்டிக் கொண்டார். தனது அருகி்ல் அமருமாறு கட்டிலில் உட்காரச் சொன்னாள். மொழி புரியவில்லை, விருப்பம் மட்டும் புரிந்தது. அகிலாவும் அமர்ந்தாள். மூத்தவன் அகிலாவை நோக்கி சொன்னான்.

''நீதான் எங்களை கல்யாணம் பண்ணிக்கிற போகிற பெண்ணாக சொல்லி இருக்கிறேன் அதுதான் படுக்கையில் பல நாட்களாக வேதனையுடன் இருந்தவர்கள் எழுந்துவிட்டார்கள். வேண்டாம் என மறுத்து விடாதே''

அகிலாவுக்கு படபடப்பு அதிகமாகியது. நெற்றி வியர்த்தது.

''நான் கல்யாணமானவள் இது போன்று ஏமாற்று வேலைக்கு நான் உதவ மாட்டேன்''

''இல்லை நீ எங்களை திருமணம் முடித்த உடனே செல்லலாம்''

''விபரீதமாக போய்விடும், என்னை எனது கணவர் நிராகரித்து விடுவார்''

''கவலைப்படாதே''

இவர்கள் பேசுவதைக் கெட்டுக் கொண்டிருந்த பெண்மணி மூத்தவனிடம் விசாரித்தாள். மூத்தவன் நாளையே திருமணம் வைத்துக்கொள்வதாக கேட்டதாகவும் அகிலா சரியென சொல்வதாகவும் கூறினான். அந்த பெண்மணி இந்தியா இந்தியா என சொன்னாள்.அகிலாவுக்கு அழுகையாக வந்தது.

கிருஷ்ணரை வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள். எழுந்த மரியா சுறுசுறுப்புடன் காணப்பட்டார். அறையை விட்டு வெளியே வந்தார். தனது நான்கு மகன்களையும் அழைத்தார். அவர்களிடம் சந்தோசமாக பேசினார். அந்த குகையில் ஒவ்வொருவருக்கென ஒரு அறை இருந்தது. ஒரு தனி அறையில் சின்னசாமி மன வருத்தத்துடன் அமர்ந்து இருந்தார். மூத்தவன் பிரம்ட் அகிலாவை சமாதனப்படுத்திக் கொண்டு இருந்தான். அகிலா சின்னசாமியை தேடிச் சென்றாள்.

''இப்போ என்ன பண்ண போற''

''நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க''

''அப்படியே தொலைஞ்சி போயிரு''

''.....''

''போக வேணாம்னு சொன்னேன் கேட்டியா, இப்போ மாட்டிக்கிட்டு முழிக்கிற சொபிட் என்ன சொல்றான் தெரியுமா''

''யாரு அவன் என்ன சொல்றான்''

''அவன் தான் கடைசி பையனாம், கல்யாணம் முடிஞ்சிட்டா நீ எங்கயும் போக முடியாதாம்''

''பிரம்ட் அப்படி சொல்லலையே, இப்போ என்ன பன்றது''

அப்போது கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். மகாராணியை போன்று உடைகளும் நகைகளும் அணிந்து கம்பீரமாக மரியா அனைவருக்கும் முன்னால் நின்றார். அகிலாவை அழைத்து வரச் சொல்லி கட்டளை இட்டார். பிரம்ட் சின்னசாமியிடமும் அகிலாவிடமும் உறுதி கொடுத்துவிட்டு அகிலாவை அழைத்து சென்றான். அனைவரின் முன்னால் நின்றபோது அகிலாவுக்கு கால்கள் நடுங்கியது. புரியாத மொழியது. மரியா பேசினார்.

''நீங்கள் எல்லாம் எனது மகன்களுக்கு பெண் தரமறுத்துவிட்டீர்கள், சிந்து பெண் எனது மகன்களுக்கு மனைவியாகப் போகிறாள் அந்த வைபவம் நாளை கைரோ பிரமிடுகளுக்கு முன்னால் நடக்கும். அனைவரும் அந்த காட்சியை காண வாருங்கள்''

கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அகிலாவை நோக்கி சத்தமிட்டனர். கோவமான மனிதர்கள் பார்த்து அகிலா பயந்து போனாள். சின்னசாமி அங்கே வந்தார். சின்னசாமியை காட்டி மரியா சொன்னார்.

''திருமணம் இவர்தான் நடத்தி வைக்க போகிறார், சிந்து மனிதர்''

கூட்டம் கலைய தொடங்கியது. ஆனால் சின்ன சின்ன கூட்டமாக நின்று பேச தொடங்கி விட்டனர். ஆங்கிலம் பேசுபவர்கள் அந்த கூட்டத்தில் இல்லை. இந்த ஐந்து பேர் மட்டுமே ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருந்தனர். இவர்கள் ஆங்கிலம் கற்று கொண்டதன் காரணம் இவர்களது தந்தை.

அகிலாவும் சின்னசாமியும் விடுதிக்கு சென்று வரலாம் என சொன்னார்கள். பிரம்ட் சரியென அவர்களை அழைத்துக் கொண்டு தான் மட்டும் வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்றான். அகிலா பிரம்டிடம் இப்படி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிவிட்டது குறித்து கோபமாக பேசிக்கொண்டு இருந்தாள். பிரம்ட் அகிலாவின் யோசனை தான் இந்த முடிவுக்கு காரணம் என சொன்னான். வரமாட்டீர்களோ என அச்சம் கொண்டதாக வேறு சொன்னான். விடுதியில் இறங்கியதும் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டனர் இருவரும். பிரம்ட் விடுதி கீழே வெளியில் காத்துக் கொண்டு இருந்தான்.

''பயமா இருக்கு''

''எல்லாம் உன்னால வந்தது, என்னாலயும் தான்''

''போகாம இங்கேயே இருந்துலாம்''

''அவன் திட்டமில்லாமலா நம்மளை இங்க கொண்டு வந்து இருப்பான் அந்த சொபிட் என்ன சொன்னான் தெரியுமா''

''சொபிட் சொபிட்''

''நாம இந்த திட்டத்துக்கு சரினு சொல்லலைன்னா உன்னை மட்டும் கொன்னு நைல் நதியில வீசிருவானாம்''

''உங்க திட்டம் பலிக்கட்டும்''

''ஆனா அதுல விவிட் ரொம்ப கலக்கமா இருந்தான், எதுவுமே பேசலை''

''யாரு விவிட்''

''மூணாவது பையன்''

மனம் கலக்கத்தில் என்ன செய்கிறோம் என தெரியாமல் இருவரும் இருந்தார்கள். பிரம்ட் இங்கும் அங்கும் நடக்க ஆரம்பித்தான். அகிலாவும் சின்னசாமியும் உறுதியான முடிவுக்கு வந்தார்கள். அறையின் கதவு தட்டப்பட்டது.

(தொடரும்)

Tuesday 17 February 2009

பழங்காலச் சுவடுகள் - 4

ஐவரும் இவர்களையேப் பார்த்தார்கள். அவர்களை சின்னச்சாமி நேருக்கு நேராய் பார்த்தார். கண்கள் மூடிய அகிலா கண்கள் திறந்தாள். அதில் ஒருவன் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினான். சின்னச்சாமி அகிலா பக்கம் திரும்பினார். அகிலா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவனைச் சுற்றி நின்ற மற்றவர்கள் புன்னகை புரிந்தார்கள். நீ மிகவும் புத்திசாலி பெண் என ஆங்கிலத்தில் பேசியவன் பாராட்டினான். அகிலா ஆஞ்சநேயருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டாள்.

தனது சட்டைப் பையிலிருந்து வேகமாக ஒரு காகிதத்தையும் எழுதுகோலையும் எடுத்தவன் தனது முகவரியையும் எப்படி அந்த இடத்திற்கு வருவது குறித்தும் எழுதி அகிலாவிடம் தந்தான். பின்னர் சின்னச்சாமியைப் பார்த்து இந்த பெண்ணை உனது மனைவியாக பெற்றதால் நீ மிகவும் அதிர்ஷ்டக்காரன் என ஆங்கிலத்தில் சொன்னான். சின்னச்சாமி 'சாரு என்ன சொல்றாரு' என்பது போல் அகிலாவைப் பார்த்தார். அடுத்த நொடியில் சின்னச்சாமிக்கு, கைகள் கூப்பி வணங்கிய அந்த ஐவரின் செய்கை சற்று வியப்பூட்டியது. வெகுவேகமாக நடந்து கடந்தார்கள். சின்னச்சாமி அகிலாவிடம் விசாரிக்கத் தொடங்கினார்.

''அவங்க ஐஞ்சு பேரும் அண்ணன் தம்பிகளாம், அவங்க அம்மா ஒரே ஒரு பெண்ணைத்தான் அந்த ஐஞ்சு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறனும்னு கண்டிப்பா சொல்லிட்ட்டாங்களாம், ஆனா எந்த ஒரு பெண்ணுமே அப்படி கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டாறாங்களாம் அதனால அவங்க அம்மா வேதனையில இருக்காங்களாம். அவங்க அம்மா சொன்னாங்கனு யாரையாவது கடத்தியாவது கல்யாணம் செய்யலாம்னு நினைச்சி இந்த நைல் நதி பக்கம் வாகனத்துல வந்து ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு நடப்பாங்களாம், ஆனா யாரும் இரண்டுமாசமா கண்ணுக்கு சிக்கலை என்ன பண்றது தெரியலைனு சொன்னாங்க''

''அகிலா மஹாபாரதம் சொல்றியா நீ''

''இல்லை நிசமாத்தான் சொல்றேன், வேணும்னா நாம இந்த அட்ரஸுக்குப் போய் பார்ப்போம்''

''அப்படியா, நீ என்ன சொன்ன''

''ஒரு பெண்ணை பார்த்து விசயத்தைச் சொல்லுங்க, ஐஞ்சு பேரும் சேர்ந்து கல்யாணம் பண்றதா அம்மா முன்னால கல்யாணம் பண்ணுங்க, ஆனா அந்த பொண்ணோட புருஷனா ஒருத்தர் மட்டும் இருங்க, மத்தவங்க வேற வேற ஊருக்குப் போய் அவங்க அவங்க ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி இருங்கனு சொன்னேன்''

''என்ன சொன்னாங்க அதுக்கு''

''அருமையான யோசனை, புத்திசாலினு என்னை சொன்னாங்க''

''நீ மஹாபாரதத்தை காப்பி பண்ணி சொல்றியா''

''எப்படி சொன்னா என்ன, அவங்கதான் சந்தோசமா போயிட்டாங்களே''

''இல்லை அவங்க பேசினது வேற, நீ இப்படி சொல்ற''

''உங்களுக்கு இங்கிலீஸ் தெரியுமே அப்புறம் ஏன் இப்படி கேட்கறீங்க''

''எனக்குப் புரியலை''

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. அகிலா சின்னச்சாமியை அழைத்துக்கொண்டு விடுதிக்கு திரும்ப எத்தனித்தாள்.

''சொல்லு என்ன சொன்னாங்க''

''சோதனையாப் போச்சு, அதான் சொன்னாங்க, நாளைக்கு அவங்க வீட்டுக்கே போகலாம் போதுமா''

சின்னச்சாமி சமாதனம் அடையாதவராய் அகிலாவுடன் நடந்தார். அகிலாவுடன் அவர்கள் தந்த முகவரிக்குச் செல்ல விருப்பமில்லை. சின்னச்சாமி யோசனையில் ஆழ்ந்தார். மின்னல் வெட்டியது. தூறல் மண்ணைத் தொட்டது. விடுதியை அடைந்தனர். அன்றைய இரவு இன்ப இரவாக கழிந்தது. காலையில் எழுந்து குளித்துவிட்டு வெளியே செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார் சின்னச்சாமி. அகிலா சின்னச்சாமியிடம் அந்த நபர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என பிடிவாதமாக கூறினார்.

''நீயா தொலையனும்னு ஆசைப்படற''

''காலங்கார்த்தால என்ன வார்த்தை இது''

''சரி சரி சேர்ந்தே தொலைவோம்''

அகிலாவும் சின்னச்சாமியும் சாலைகளின் வழியே பயணித்தபோது பிரமிடுகள் அவரவர் கண்ணுக்குள் சின்னதாய் தெரிந்தது. பாழடைந்த கோவில்கள் தென்பட்டன. அதிகாலைப் பயணம் இதமாக இருந்தது. பயணம் செய்த வாகனம் பயணித்தே கொண்டிருந்தது. சஹாரா பாலைவனம் தென்பட்டது. நைல் நதியை ஒட்டியே பாலைவனம் இருந்தது தெரிந்தது. வாகன ஓட்டியிடம் அகிலா முகவரி இருக்குமிடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என கேட்டாள். வாகன ஓட்டி இன்னும் பத்து நிமிடம் ஆகுமென்றார்.

சின்னச்சாமிக்கு தலை கிறுகிறுத்தது.ஒருவழியாய் அந்த இடத்தை அடைந்தபோது வெகு சில குடிசைகளே இருந்தது. ஒரு பக்கம் நைல்நதி. மறுபக்கம் சஹாரா பாலைவனம். அங்கே இறங்கி வாகன ஓட்டியை காத்திருக்கச் சொல்லிவிட்டு நடந்தனர். வழியில் கண்ட ஒருவரிடம் முகவரியைக் காட்ட வாசிக்கத் தெரியாது என சைகை காட்டிச் சென்றார்.

அப்பொழுது ஆங்கிலம் பேசியவன் தென்பட்டான். இவர்களை அடையாளம் கண்டுகொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். குடிசையாய் வெளியே தெரிந்தாலும் உள்ளே பெரிய குகையாய் காட்சி அளித்தது. சின்னச்சாமி திடுக்கிட்டார். அகிலாவிற்கு பயமாக இருந்தது. வெளியில் வாகனம் கிளம்பும் சப்தம் கேட்டது.

(தொடரும்)

Monday 16 February 2009

பழங்காலச் சுவடுகள் - 3

குளித்துவிட்டு வெளியே வந்த அகிலா அறையினில் சின்னச்சாமி இல்லாதது கண்டு சற்று அதிர்ச்சி அடைந்தாள். கதவைத் திறந்திட முயற்சித்தபோது கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்டாள். பொதுவாக வெளியில் கதவை பூட்டினால் உள்ளிருந்து திறக்கும் வண்ணம்தான் பெரும்பாலான விடுதிகளில் வைத்திருப்பார்கள், ஆனால் இங்கு அப்படியில்லாமல் இருந்தது. அகிலா அச்சம் அடைந்தாள். ஆனால் ஆர்ப்பாட்டம் செய்யாமல் உடைகள் மாற்றிக்கொண்டு சகஸ்ர நாமம் சொல்ல ஆரம்பித்தாள். சின்னச்சாமி சில உணவுப்பொருட்களை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினார். அகிலா, சின்னச்சாமியின் கைகளில் இருந்த பொட்டலங்களைப் பார்த்தாள்.

''வெளியே போனா சொல்லிட்டுப் போங்க''

''நீ குளிச்சி முடிக்கிறதுக்குள்ள திரும்பிரலாம்னு நினைச்சேன்''

''பயந்துட்டேன்''

''பயம் வரத்தானேச் செய்யும்''

''என்ன சொல்றீங்க''

''நான் உன்னைத் தொலைக்கமாட்டேனு உனக்கு நம்பிக்கை வரவரைக்கும் பயம் வரத்தானேச் செய்யும்''

''கடவுளை வேண்டிக்கிற ஆரம்பிச்சிட்டேன்''

''காப்பாத்துவார்னு நம்பிக்கையா''

''நீங்க என்னைத் தொலைக்கவிடமாட்டாருனு நம்பிக்கை''

''நான் குளிச்சிட்டு வரேன்''

''நான் வெளியே போகமாட்டேன்''

இருவரும் சிரித்தார்கள். இருவருக்குமான நெருங்கிய அன்பு மேலும் அதிகரித்தது. வருடங்கள் ஆக ஆக அன்பு அதிகரிக்க வேண்டும். சின்னச்சாமி குளித்துவிட்டு வந்தார். இருவரும் சாப்பிட்டார்கள். பின்னர் ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள். அகிலா கண் அயர்ந்தாள். சின்னச்சாமி குறிப்பு எழுதத் தொடங்கினார்.

'எகிப்து நாட்டின் விமானத்தளத்தில் எங்களை வரவேற்க யாரும் இல்லை, ஆனால் நிறைய மனிதர்கள் தென்பட்டார்கள். அனைவரையும் பார்த்து புன்னகைத்தேன். சிலர் புன்னகைத்தார்கள், சிலர் முகம் திருப்பிக்கொண்டார்கள். வெளியில் வந்ததும் புதிய புதிய கட்டிடங்கள் பழங்கால எகிப்து எப்படி இருந்து இருக்கும் என்பதை முற்றிலுமாக மறைத்துவிட்டது. கட்டிடங்கள் வானை நோக்கி வளர்ந்து கொண்டு இருந்தது. பூமிக்குத்தான் ஈர்ப்பு சக்தி இருக்கும் என்றில்லை, வானுக்கும் உண்டு என்பதுபோல் அந்த கட்டிடங்கள் அமைந்து இருந்தது.

நகரங்கள் செல்வச் செழிப்புடன் இருந்தது. மக்கள் வேகமாக பயணித்தனர். எகிப்து நாட்டின் கைரோ விடுதியில் அமர்ந்து இருப்பது, திருநெல்வேலியில் சென்ற வருடம் தங்கியிருந்த விடுதியைப் போல் இருந்தது. அங்கே தாமிரபரணி ஆறு, இங்கே நைல் நதி'

அகிலா சட்டென விழித்தாள். சின்னச்சாமி மும்முரமாக எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

''என்ன எழுதறீங்க''

''உனக்கு கடைசி கடிதம் எழுதறேன், உன்னை விட்டுட்டு ஓடிப்போக தயாராயிட்டேன்''

''கொடுங்க பார்ப்போம்''

'இந்தா''

அகிலா படித்துப் பார்த்தாள்.

''இதுக்கு எதுக்கு இத்தனை செலவழிச்சி இவ்வளவு தூரம் வரனும்''

''இங்க வராட்டி தெரிஞ்சிருக்காது, சாயந்திரமா நைல் நதிக்குப் போவோம்''

''என்னைத் தள்ளிவிடமாட்டீங்களே''

''என்னை பயமுறுத்திட்டே இருக்க, நீ இப்படியே பேசினா எனக்கு அந்த நினைப்பு வந்தாலும் வரும்''

அகிலா அமைதியானாள். இருவரும் மாலை நேரத்தில் விடுதியிலிருந்து நடந்து நைல் நதியினை அடைந்தார்கள். அந்த இடத்தில் ஆள் அரவமற்று இருந்தது. காற்று சிலுசிலுவென அடித்தது. நதியின் ஓரமாகவே இருவரும் நடந்தார்கள்.

''அந்த காலத்தில நைல் நதியை ஒட்டியேதான் மக்கள் வாழ்ந்து இருக்காங்க, நைல் நதிதான் கடவுள். நைல் நதி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்புகளை அழிச்சி இருக்கு, அப்போ கடவுள் கோபிக்கிறார்னு நினைக்கிறாங்க, மனித நாகரிகம் தொடங்கினது இங்கதானு சொல்வாங்க, அது மட்டுமில்லாம சமய கோட்பாடுகள் எதுவும் இல்லாத சமூகமாகத்தான் இருந்து இருக்காங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாய் வாழ்ந்திருக்காங்க''

''எந்த புத்தகத்தில படிச்சீங்க, இப்ப நீங்களும் நானும் இருக்கற மாதிரி''

''ஆமா ஆமா நீயும் நானும் மாதிரி, ஆனா அப்போ மொத்த சமூகம்''''எப்படி மாறிச்சி''

''பேராசை, தானே பெரியவன், தனக்கே எல்லாம் தெரியும் அப்படிங்கிற அகந்தை''

சின்னச்சாமி அகிலாவைத் தோளில் தொட்டார். அகிலா சின்னச்சாமியின் கைகளைத் தட்டிவிட்டார்.

''இந்த பயம் தான் அன்பை அடியோட அழிக்க பயன்பட்ட முதல் ஆயுதம். தற்காப்புனு சொல்லி அழிவைத் தொடங்கி வைச்ச பெரும் ஆயுதம்''

அகிலா திடுக்கிட்டாள். சும்மாதானே கையைத் தட்டிவிட்டோம், இப்படி நினைக்கிறாரே இந்த மனுசன் என நினைக்கத் தோன்றியது. சின்னச்சாமி ஈரம் எனப் பார்க்காமல் அங்கேயே அமர்ந்தார். அகிலாவும் உடன் அமர்ந்தாள். தொலைவில் யாரோ வருவதுபோல் இருந்தது. ஐந்து நபர்கள் இவர்களின் அருகில் வந்ததும் இவர்கள் எழுந்து கொண்டார்கள். அகிலாவுக்கு மனதில் பயம் தொற்றிக்கொண்டது. ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம் மனதில் சொல்ல ஆரம்பித்தாள்.

(தொடரும்)

பழங்காலச் சுவடுகள் - 2

''என்னங்க நாம தெரியாத ஊருக்குப் போறோமே அங்க யாராவது நம்மளை ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றது''

''என்ன திடீருனு இந்த யோசனை''

''மாமா நம்மளை போக வேணாம்னு சொன்னாரே அதான் ஒரே யோசனையா இருந்தது''

''இராத்திரி நேரம் ஆனாலே பயம் வந்துருமே, என் அப்பாவுக்கு ஞாபக மறதி அதிகமாகிட்டே வருது அதான் அப்படி சொல்லிருக்கிறாரு, நீ தைரியமா தூங்கு, படத்தில வர மாதிரி எகிப்துக்கு கனவுல போய்ட்டு வந்துராத''

''உங்களுக்கு எப்பவும் கிண்டல்தான்''

அந்த இரவில் தங்களது அறையில் சின்னச்சாமியும் அகிலாவும் பேசிக்கொண்டார்கள். சிறிது நேரத்தில் அறை நிசப்தமானது. மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. அதிகாலைப் பொழுதில் எழுந்த சின்னச்சாமி வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தார், வெள்ளம் போல் தண்ணீர் வீட்டினை சூழ்ந்து கொண்டிருந்தது. படகு ஒன்றை வாங்கி வைக்க வேண்டும் என வீட்டுத்தரகர் சொன்னது இப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது. இரண்டு மணி நேரத்தில் பாதை சரியாகிவிடும் என்று மீண்டும் தனது அறைக்கு வந்து படுத்துக்கொண்டார்.

''என்னங்க எழுந்துச்சா''

''இல்லை இனிமேதான் தூங்கனும்''

''மணி எத்தனை''

''நாலு''

''பிளைட்டுக்கு நேரமாச்சா''

''அது நாளைக்கு, இப்போ நீ தூங்கு''

சின்னச்சாமி எகிப்து பற்றிய சிந்தனையில் இருந்தார். எகிப்து நாட்டிற்கு ஏன் செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம் என நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமாக இருந்தது. எகிப்து அரசராக இருந்ததை போன்ற உணர்வு வந்தது. சிறுக சிறுக சேமித்த பணத்திலும், தந்தை மற்றும் தாய் சேர்த்து வைத்த பணத்திலும் தனது கனவு நினைவாகப் போவதை நினைத்துக் கொண்டே கண் அயர்ந்தார். நைல் நதி கரைபுரண்டோடியது. எகிப்துக்கு செல்ல ஆயத்தமாகி விமான நிலையம் வந்தபோது சாமிமுத்து சின்னச்சாமியை தனியே அழைத்தார்.

''நீ அவளை அங்கேயே தொலைச்சிட்டு வந்துரு, இதை சொல்லனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டே இருந்தேன், இப்ப சொன்னாதான் உனக்கு மறக்கவே மறக்காது, என்ன புரியுதா''

''எகிப்துல தொலைக்கவா? இல்லைன்னா பெருல தொலைக்கவா?''

''நீ எந்த நாட்டில தொலைச்சாலும் பரவாயில்லை, ஆனா நீ அவளோட திரும்பி வீட்டுக்கு வந்தா உனக்கும் அவளுக்கும் இங்க இடமில்லை''

''நீங்க சொன்னதை அப்படியே நான் நினைவில வைச்சிக்கிறேன்''

''சமத்தான பையன், இங்க உனக்கு டாக்டர் பொண்ணு பாத்து வைச்சிருக்கோம்''

சின்னச்சாமி சிரித்துக்கொண்டே விமானநிலையத்து இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார். அகிலாவிடம் விசயத்தை சொன்னார். அகிலா அரண்டு போனாள்.

''நீங்க திட்டம் போட்டுத்தான் கூப்பிட்டுட்டு போறீங்களா, நாம போக வேணாம்''

''உன்னை எதுக்கு நான் அப்படி தொலைக்கனும்''

''நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கனும்னு மாமா நினைக்கிறாரே''

''நல்ல யோசனைதான், ஆனா எதுக்கு வேற கல்யாணம்''

''நீங்கதான் திட்டம் போட்டீங்க, சொல்லுங்க''

சின்னச்சாமி அகிலாவிடம் சொல்லாமல் இருந்து இருக்கலாம் என நினைத்துக்கொண்டே விமானத்துக் கட்டுப்பாடுகளை முடிக்க கிளம்பினார். அகிலாவுக்குச் செல்ல மனமில்லாமல் போனது. சற்று குழப்பமாக இருந்தது. சின்னச்சாமி அகிலாவை அழைத்துக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு விமானத்தில் ஏறி அமர்ந்தார்.அகிலா அச்சத்துடன் காணப்பட்டாள். சின்னச்சாமி அகிலாவை கவனித்தார்.

''பயமா''

''ரொம்பவே''

''இறங்கிப் போ''

''தொலைஞ்சி போனு சொல்றீங்களா''

''அவ்வளவு ஈசியா தொலைச்சிருவேனா''

''மாமா ஏன் அப்படி சொன்னாரு''

''அது அவரோட விபரீத ஆசை''

''நாம காதலிச்சி கல்யாணம் பண்ணினது பிடிக்கலையா''

''அப்படின்னா எதுக்கு மூணு வருசம் காத்து இருக்கனும்''

''தொலைக்கமாட்டீங்கதானே''

சின்னச்சாமி சிரித்தார். அகிலா அமைதியானாள். விமானப் பயணம் இனிதாய் அமைந்தது. எகிப்து நாட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது வெயில் சுட்டெரித்தது. கண்ணுக்கு எட்டிய தொலைவில் பிரமிடுகள் வரவேற்றுக்கொண்டிருந்தன. நைல் நதியின் ஓரத்தில் பிரமாண்டமாக அமைந்திருந்த விடுதி ஒன்றில் இருவரும் நுழைந்தனர். சின்னச்சாமி சன்னல் வழியே நதியை பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தார்.

''மனசுக்கு அமைதியா இருக்குங்க''

''எனக்கும் தான்''

''குளிச்சிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வெளியில போவோம்''

''தொலைச்சிர மாட்டீங்களே''

''இன்னுமா நினைச்சிட்டே இருக்க, இல்லை வசனம் பேசிப் பழகுறியா''

''டாக்டர் பொண்ணு எந்த ஊரு''

''இனி அந்த பேச்சை நீ எடுத்த நாம இந்த ரூமிலேயே இருப்போம், எங்கயும் போக வேணாம், சரியா''

''குளிச்சிட்டு வரேன்''

அகிலா குளியலறைக்குள் நுழைந்ததும் சின்னச்சாமி அறையை விட்டு வெளியேறினார்.

(தொடரும்)

Saturday 14 February 2009

பழங்காலச் சுவடுகள் -1

பரந்து விரிந்த வானத்திற்கு வெள்ளை மேகங்கள் வைத்த நீல வண்ண சேலையில் ஜரிகையாக மழை பொழிந்திட தயாராகிக்கொண்டிருந்தது. மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் திருநகரைத் தாண்டியதும் ஒரு சாலை வடக்குப் புறமாகச் செல்லும். அந்த சாலையின் வழியாக நடந்தால் சற்றுத் தொலைவில் ஒரே ஒரு வீடு மட்டும் இருக்கிறது. வீடு இருக்கும் இந்த நிலமானது முன்னர் விளைநிலமாக இருந்தது. இங்கே இந்த நிலம் வீட்டுமனைகளாக மாற முன்னேற்பாடுகள் எல்லாம் நடந்து முதன்முதலாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வீடும் வந்துவிட்டது. மற்ற இடங்களும் விற்பனையாவதில் கால தாமதம் ஏற்படுவதாக அறிந்து கொள்ள முடிந்தது.

அந்த வீட்டிற்கு சொந்தக்காரர் சின்னச்சாமி. வயது இருபத்தி ஆறு. அவரது மனைவி அகிலா. வயது இருபத்தி மூன்று. குழந்தை தற்போது வேண்டாம் என தற்காலிகமாக தள்ளிப்போட்டார்கள், வருடம் மூன்று உருண்டோடி விட்டது. சின்னச்சாமியுடன் அவரது தந்தை சாமிமுத்துவும், அன்னை தமிழ்மணியும், இளைய சகோதரி பூர்ணிமாவும், இளைய சகோதரர் சகாதேவனும் வசித்து வந்தார்கள்.

சின்னச்சாமி திருநகரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் புவியியல் பாடம் மற்றும் கணிதம் சொல்லித்தரும் ஆசிரியர். அவரது மனைவி அகிலா அதே பள்ளியில் வரலாறு மற்றும் ஆங்கிலம் சொல்லித் தரும் ஆசிரியை. பூர்ணிமா மதுரையில் ஆயுர்வைசியா கல்லூரியில் இரண்டாம் வருட இயற்பியல் துறை படித்து வந்தார். சகாதேவன் தல்லாகுளத்தில் மின்சாரத் துறையில் சேர்ந்து சில மாதங்களே ஆகிறது. சாமிமுத்துவும் தமிழ்மணியும் திருநகரில் உள்ள சின்னச்சாமி மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

தேன்நிலவுக்காக சென்ற வருடம் திட்டமிட்டபடி இந்த வருடம் கோடை கால விடுமுறையில் எகிப்து மற்றும் பெரு நாடுகளுக்குச் செல்ல தீர்மானித்தார் சின்னச்சாமி. அதற்கான ஏற்பாடுகளை அனைத்தையும் முறையாக செய்தார். அகிலா மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். மதுரையும், திருநெல்வேலியும், கன்னியாகுமரியும் மற்றும் சென்னையும் மட்டுமே சுற்றிப்பார்த்து இருந்த அகிலாவுக்கு எகிப்து என்றதும் மிகவும் கொண்டாட்டமாக இருந்தது. பிரமிடுகளின் பிரமிப்பை நேரில் காணும் ஆவல் அதிகமானது. பெரு நாட்டிற்குச் செல்வதில் அத்தனை விருப்பமில்லை, இருந்தாலும் தனது கணவருடன் தனியாய் இந்த விடுமுறையினை கழிக்கப் போவதில் மகிழ்ச்சியாக இருந்தது. சின்னச்சாமியும் எகிப்து மட்டும் பெரு செல்வதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தார். சில வருடங்களாக எகிப்து நாட்டிற்கும் பெரு நாட்டிற்கும் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டு இருந்தார்.

மழை விழ ஆரம்பித்தது. அனைவரும் வீட்டில் ஒரு அறையில் அமர்ந்து இருந்தார்கள். தொலைகாட்சி துண்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. சாமிமுத்து கேட்டார்.

''எப்போடா பிளைட்டு''

''நாளன்னைக்கு காலையில எட்டு மணிக்குப்பா''

''எல்லாம் எடுத்து வைச்சாச்சா''

''எடுத்து வைச்சாச்சுப்பா''

''எடுத்து வைச்சதெல்லாம் திருப்பி கீழ எடுத்து வைச்சிடுங்க, இப்போ போக வேண்டாம்''

''என்னப்பா திடீருன்னு இப்ப சொல்றீங்க''

''கொல்கத்தாவில நிலைமை சரியில்லை, அதனால நீ சொன்ன மாதிரி டிசம்பர்ல போகலாம்'''

'அப்பா, நாங்க போகப் போறது எகிப்து நாட்டுக்கு''

''மறந்துட்டேன்பா, நீ கொல்கத்தாவுக்குப் போகனும்னு சொன்னியே அதான் சொன்னேன்''

''அப்பா நான் சொன்னது பஞ்சாப்புக்கு, அங்கதான் இந்த டிசம்பர்ல போகனும்னு சொன்னேன்''

''வர வர எல்லாம் மறந்துட்டே வருதுடா''

''இனி உங்களுக்கு நீங்க வைத்தியம் பார்க்க வேண்டியதுதான்''

அனைவரும் சிரித்தார்கள் சாமிமுத்து உள்பட. ஒவ்வொருவரும் தனக்கு இதுதான் வேண்டும் என குறிப்பு எழுதிக் கொடுத்தார்கள். சந்தோசமாக வாங்கிக்கொண்டார் சின்னச்சாமி. அகிலாவுக்கு இரண்டுதின இரவுகள் இப்பொழுதே கழியாதா என்று இருந்தது. இவர்களின் இனிய வரவை நோக்கி எகிப்து உற்சாகமாகிக் கொண்டு இருந்தது.

(தொடரும்)