Friday 26 June 2009

பழங்காலச் சுவடுகள் - 10

''மாயன்கள் அஜ்டெக்குகள் கலாச்சாரம் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த மனிதர்களும் கடவுள் வழிநடத்துவதாக தங்களுக்கென கடவுளை கொண்டாடி வந்தனர். சிற்பக்கலை போன்ற கலைகளில் மிகவும் கை தேர்ந்தவர்களாகவே இருந்தனர். இவர்கள் இருந்த பகுதி மெக்ஸிகோ பகுதியாகும். குவாட்டமேலா, ஹோண்டுராஸ் பகுதிகளில் மாயன்கள் வாழ்ந்தனர். அஜ்டெக்குகள் கட்டிய பிரமிடும் உருவாக்கிய நகரமும் மிகவும் பிரபலமானவை. இந்த மனிதர்கள் தங்களது அரசை போரிட்டு விரிவாக்கிக் கொண்டனர். பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்பெயின் எப்பொழுது கால் எடுத்து வைத்ததோ அப்பொழுதே இந்த கலாச்சாரம் அழிவுக்கு வித்திட்டது''

அகிலா கேட்டாள்.

''ஒற்றுமையின்மையினால் தானே அழிந்தார்கள், பெருவில் இது போன்று இருந்தார்களா''

''பெருவில் நாஜ்கா, இன்கா என மனித கூட்டம் இருந்தது. இங்கே சூரியக்கடவுள்தான் பிரசித்தம். ஏனைய கடவுள்கள் இருந்தாலும் சூரியனே எல்லாம். நீங்கள் இங்கே மச்சு பிச்சு பகுதியைப் பார்க்கலாம். ஆண்டிஸ் எனப்படும் மலைப்பகுதியில் அந்த நூற்றாண்டிலேயே இத்தனை பெரும் வியப்புகளை ஏற்படுத்தியது இன்கா வம்சவழியினர். மாயன்கள் அஜ்டெக்குகள் போன்றே விவசாயம் தான் இவர்களுக்கு எல்லாம்''

''எல்லா இடங்களுக்கும் எங்களை அழைத்துச் செல்ல முடியுமா''

''என்னால் வர இயலாது, எனக்கு இங்கே வேலை இருக்கிறது, ஒரே ஒரு இடம் அதை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். ஒளிக் கற்களால் ஆன ஒரு கோபுரம் இருக்கிறது. அங்கே சென்றால் அத்தனை சக்தியும் நமக்குள் வந்துவிடும் போன்ற உணர்வு ஏற்படும். இதை இன்கா வம்சத்தினர் அஜ்டெக்குகளிடம் இருந்து திருடினார்கள் என சொல்வார்கள். ஆனால் அன்றைய மக்கள் கடவுளுடன் தொடர்பு கொள்வதையே பெரும் பேறாக கருதினார்கள்''

''இன்கா சமுதாயம் என்ன ஆனது''

''மாயன் அஜ்டெக்குகள் சின்ன கூட்டங்களாக இருந்தார்கள், அதைப்போல இன்கா வும் கூட்டங்கள்தான். மாயன், அஜ்டெக்குகளை வெற்றி கொண்டதை கண்ட அதற்கடுத்த வந்த தளபதி பெருவின் மேல் கண் வைத்தான், இன்கா சமுதாயத்தை வெற்றி கொண்டான்''

''இவர்களது கலாச்சாரம் வழிமுறைகள் என்ன ஆனது''

''ஸ்பெயின் தளபதிகள் கத்தோலிக்கத்தை முற்றிலும் விதைத்தனர், மாயன்களும் அஜ்டெக்குகளும் தங்களது சுயம்தனை இழந்தார்கள், ஆனால் இன்கா சமுதாயத்தினர் தங்களது வழிமுறையை வைத்துக்கொண்டார்கள், இந்தியர்களைப் போல''

'வேதம் என பெயரைச் சொல்லி சமுதாயத்தை அழித்துக்கொண்டே இருக்கிறார்கள்' விவிட் சொன்னது அகிலாவின் காதுகளில் ஒலித்தது. சின்னசாமி திக்கிக்கொண்டே கேட்டார்.

''கலாச்சாரம் தொலைந்தது ஆனால் கலாச்சார சின்னங்கள் இருக்கிறதா''

''மாயன்கள் அஜ்டெக்குகள் உருவாக்கிய நகரம் சின்னபின்னமானது, முற்றிலும் மாறிவிட்டது. டெக்னிக்குவான் இடத்தை அஜ்டெக்குகள் உருவாக்க கடவுளே கட்டளையிட்டார் என சொல்வார்கள், இப்பொழுது உருக்குலைந்து இருக்கிறது, மாயன் பெண்மணி நோபல் பரிசு எல்லாம் வென்று இருக்கிறார் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னர். குவாட்டமேலா பெரும் சர்ச்சைக்குரியதாக இப்பொழுது இருக்கிறது, இன்கா அமைத்த பெரிய சாலைகள் கோவில்கள் எல்லாம் இங்கே அப்படியேதான் இருக்கிறது''

''இரகசியங்கள் என சொன்னீர்களே என்ன''

''எனக்கு வேலை இருக்கிறது, நீங்கள் எத்தனைநாள் இங்கே இருப்பீர்கள், முகவரி தருகிறேன், இரவு வீட்டிற்கு வாருங்கள், நான் விடுதிக்கெல்லாம் செல்வதில்லை''

அகிலாவும் சின்னசாமியும் நன்றி சொல்லிக்கொண்டு பெரு நகரத்தை வலம் வந்தார்கள். இந்தியாவில் இருப்பது போன்று உணர்ந்தார்கள்.

''ஒளிக்கற்கள் கோபுரம் போகலாமா''

''இந்த ஊரிலேயே இருக்கலாம் போல இருக்கு''

''ஏன் சண்டையிட்டே வாழ்ந்து இருக்காங்க, ஒருத்தரை தன்வசப்படுத்திதானே பெரும் சாம்ராஜ்யம் உருவாக்கி இருக்காங்க, அடிமைகளா நடத்தி இருக்காங்க, ஆனா தெய்வீக உணர்வு மட்டும் தன்னோட வச்சிகிட்டாங்க''

''நம்ம ஊருல மட்டும் என்னவாம், ஜைனர்களை ஆறாம் ஏழாம் நூற்றாண்டில வேட்டையாடுனவங்கதானே நாம, எத்தனை பேரை கொன்னோம், மாற்றத்தை உருவாக்க பலியாக்கப்பட்ட மனிதம்தான் எத்தனை, அதான் விவிட் சொன்னானே கொலை பாதகர்கள், ரத்த வெறியுடன் அலைபவர்கள்''

''நல்ல விசயத்தை ஏன் எடுத்துக்கலை யாரும்''

''நல்ல விசயத்தை மட்டுமே ஏன் போதிக்கலை எவனும்''

சின்னசாமியின் மேல் ஒருவன் மோதினான். மோதியவன் மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டு விலகி நடந்தான். சற்று தூரத்திற்குச் சென்றவன் திரும்பினான்.

''வலிக்கிறதா''

''இல்லை''

''வலி குறைந்திருக்கும் என்றே சற்று தொலைவு சென்று திரும்பினேன்''

சின்னசாமியும் அகிலாவும் புன்னகைத்தனர். அந்த மனிதரும் புன்னகைத்தார். தனது பெயர் ஜொவியன் என அறிமுகப்படுத்திக் கொண்டுவிட்டு சென்றார்.

''உலகம் எத்தனை அமைதியாக இருக்க வேண்டியது''

''நம்மளை நாமே தொலைச்சிட்டோம்''

''உன்னை தொலைக்க வேண்டாம்னு சொல்றியா''

அகிலா சிரித்தார். பெரு வில் பெரும் மழை கொட்டத் தொடங்கியது.

(தொடரும்)

No comments: