Tuesday 30 June 2009

வேத நூல் - 3

சாங்கோ மிபலோவிடம் விளக்கம் சொல்ல சொன்னான். மிபலோ விளக்கம் தெரியாது என்றான். பிறகு ஏன் அந்த வார்த்தையைச் சொன்னாய் என்றான் சாங்கோ. அந்த வார்த்தையைக் குறித்துத்தான் நான் இத்தனை நாட்களும் சிந்தனை செய்து கொண்டிருக்கிறேன் என்றான் மிபலோ. சாங்கோவுக்கு கோபம் வந்தது. ஏன் எண்ணங்கள் தயார் என்றாய் என்றான் சாங்கோ.

சாங்கோ கோபம் அடைந்ததைப் பார்த்த குவ்விலான் சில வரிகள் எழுதினான். ''கடவுள் - எந்த ஒரு சுவடும் இல்லாமல் இருந்து கொண்டே இருக்கும்''. குவ்விலான் எழுதியதைப் பார்த்த சாங்கோ கடும் கோபம் கொண்டான். குவ்விலானைப் பார்த்து கிழித்துப் போடு எனக் கத்தினான்.

மிபலோ என்ன சொல்கிறானோ அதை மட்டுமே நாம் எழுத வேண்டும், நீ சொல்ல நினைப்பதை தனியாக எழுதிக் காட்டு, இப்படி ஒன்றுடன் ஒன்று கலக்காதே என சீறிட்டான். இதையெல்லாம் கேட்டு மிபலோ பொறுமையாகவே இருந்தான். இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் எனக் கேட்டான் சாங்கோ மறுபடியும். அப்பொழுது மிபலோ சொன்னான். ''அர்த்தமற்று இருக்கும், ஆனால் அர்த்தம் பொதிந்து இருக்கும், எனக்கு அர்த்தம் தெரியாது'' என்றான் மிபலோ.

சாங்கோ எரிச்சல் அடைந்தான். சாத்தான் என்ற வார்த்தைக்கு என்ன விளக்கம் எழுதுவது என முழித்தான். சரி மேலே சொல்லு என்றான் சாங்கோ. ''கடல், ஆகாயம் நமக்குக் கிடைத்த ஆதாயம்'' என்றான் மிபலோ. அவன் சொன்னதைக் கேட்டதும் குவ்விலானிடம் எழுதிக்கொள், எழுதிக் கொள் இவனைப் பெரிய சிந்தனையாளன் என நினைத்தேன், சரியான முட்டாளாக இருக்கிறான் என்றான் சாங்கோ. சொல்லிக்கொண்டே கடல் ஆகாயம் சாத்தானால் உருவானது என எழுதினான் சாங்கோ. மிபலோ சிரித்துக்கொண்டு நாளைத் தொடரலாம் என எழுந்தான். இவ்வளவுதானா? என்றான் சாங்கோ. நிறைய இருக்கிறது என நடந்தான் மிபலோ. அப்படியென்றால் இன்னும் சொல் என்றான் சாங்கோ.

சாங்கோவை நோக்கி ''என் சிந்தனையை வெல்ல உன் சிந்தனைக்கு எப்படி வலிமை வந்தது'' என்றான் மிபலோ. சாங்கோ அதிர்ச்சி அடைந்தான். குவ்விலானுக்கு ஒன்றும் புரியவில்லை. சாங்கோவின் கையில் இருந்ததை பறித்த குவ்விலான் அதைப் படித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். ''நான் சொன்னதை மாற்றி எழுதுகிறான் இவன்'' என்றான் மிபலோ. மிபலோ சொன்னதை கேட்டதும் ஆம் எனத் தலையாட்டினான் குவ்விலான்.

''இருவரின் கை அசைவுகளும் எழுத்து வடிவமும் வேறாக இருப்பது கூடவா எனக்குத் தெரியாது'' என சொன்னான் மிபலோ. சுதாரித்துக் கொண்ட சாங்கோ நான் சரியாகவே எழுதுகிறேன், இவனே மாற்றி எழுதுகிறான் என சொன்னான் சாங்கோ. மிபலோ சாங்கோ சொன்னதை நம்பிட தயாராக இல்லை. ''இனிமேல் என் சிந்தனைகள் நீ எழுதாதே, குவ்விலானே எழுதட்டும்'' என மிபலோ சொன்னதும் சாங்கோ கோபத்துடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

மிபலோ குவ்விலானிடம் ''நீ நான் சொல்வதை அப்படியே எழுதுவாய் என்ற என் நம்பிக்கையை சிதறடித்துவிடாதே'' என்றான். குவ்விலான் கண்கள் பணித்தான். இருவரும் சாங்கோவைத் தேடிச் சென்றார்கள். சாங்கோ சிரகமெராவிடம் இவ்விருவரைப் பற்றிக் கத்திக் கொண்டிருந்தான். சிரகமெரா சமாதனம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

''சாங்கோ நீ எங்களுடனே எப்போதும் போல் இருக்க வேண்டும் நீ எப்படி வேண்டுமெனினும் எழுது'' என்றான் மிபலோ. குவ்விலான் மன வருத்தம் கொண்டான். ஆனால் வெளிக்காட்டாமல் இருந்து கொண்டான். சாங்கோவின் தந்தை அன்றே தான் கடல்வழிப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக சொன்னதும் சாங்கோ தானும் வருவதாக சொன்னான். மிபலோவும் இணைந்து கொள்வதாக சொன்னான். குவ்விலான் வேறு வழியின்றி சேர்ந்து கொண்டான்.

எந்த திசை செல்லலாம் என சாங்கோவே முடிவை எடுத்தான். மிபலோ சிந்தனைகளை மேலும் மெருகேற்றத் தொடங்கினான். அன்றே பயணத்திற்கான நாளைக் குறித்தார் சாங்கோவின் தந்தை ரேண்ட்டர். சிரகமெரா சாங்கோவிடம் தன்னையும் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டாள். சாங்கோ மறுப்பு தெரிவிக்க சிரகமெரா ஆர்பாட்டம் பண்ணினாள். சரி என்றான் சாங்கோ.

(தொடரும்)

No comments: