Showing posts with label அறிவியலும் ஆன்மிகமும். Show all posts
Showing posts with label அறிவியலும் ஆன்மிகமும். Show all posts

Wednesday 25 September 2013

பச்சை மாமலைபோல் மேனி

காலையில் இருந்து மாலை வரை எப்படியும் ஆயிரத்து எட்டு தடவை இந்த பாசுரத்தை கேட்டு இருந்து இருப்பேன். ''பச்சை மாமலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்''. எப்படித்தான் இப்படி ஒரு அற்புதமான பாசுரத்தை இயற்ற முடிந்ததோ என்றே எண்ணிக கொண்டே இருந்தான். என்னப்பா யோசனை என்றே அப்பா கேட்டார். நானும் பாசுரம் பற்றிய விசயம் சொன்னேன். இதில் என்ன பெரிய அற்புதம் இருக்கு என்றே சொல்லிவிட்டார்.
ஆனாலும் மனம் கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் அதே பாசுரம் மனதில் நிழல் ஆடிக் கொண்டு இருந்தது.

பக்கத்தில நாலு பிளாட் விலைக்கு வருதுடா, எப்படியாவது வாங்கிரனும் என்றார் அம்மா. ஏதுமா, நாலு போகம் நெல் விளையுமே, அந்த நிலத்திலா பிளாட் போடுறாங்க என ஆச்சர்யத்துடன் கேட்டேன். ஆமாடா, அடுத்த அறுவடையோட அந்த நிலம் எல்லாம் அபார்ட்மென்ட் ஆகிப் போகும்டா, யோசனை பண்ணிட்டு இருக்காதே, லோன் போடனும்னா, உடனே ஏற்பாடு செய்டா. பச்சை மாமமலைபோல் மேனி என பாடியபோது தொண்டை விக்கியது.

நகர்ப்புறங்களில் தான் இப்படி செய்கிறார்கள் எனில், கிராமப்புறங்களிலும் இந்த அவலம் தொடர்கிறதே என்றே மனம் வேதனையுற்றது. அந்த வேதனையில் அப்படியே தூங்கிப் போனேன்.

''பக்தா''

''வாருங்கள் சாமி, அமருங்கள்''

''மிகவும் மன வேதனையில் உழன்று கொண்டு இருக்கிறாயோ''

''ஆமாம், சாமி, விளைநிலங்கள் எல்லாம் வீடுகள் ஆகி கொண்டு இருக்கின்றன, இப்படியே போனால் இந்த பூமி தரிசாக மாறிவிடுமே, மக்கள் உணவுக்கு மிகவும் கஷ்டப்படுவார்களே, அதை நினைத்துதான் வேதனை அடைந்தேன்''

''பக்தா, உனது வேதனை புரிகிறது, எனினும் இந்த வேதனை எல்லாம் ஆகாது, எல்லாம் அந்த விஷ்ணு பார்த்து கொள்வான்''

''விளைநிலங்களை காப்பாற்ற தெரியாத விஷ்ணு, என்ன விஷ்ணு''

''பக்தா, விஷ்ணுவை கோபித்து என்ன லாபம், நமது மானிடர்களின் செயல்பாடு அப்படி, என்ன செய்வது''

''சாமி, இறைவன் நினைத்தால் எல்லாம் நடத்தலாமே''

''நடத்தலாம், நினைக்க வேண்டுமே, சரி, ஒரு பாசுரம் பற்றி நிறைய யோசனையில் இருந்தாயே''

''ஆமாம், சாமி, நல்ல வேளையாக நினைவுபடுத்தி விட்டீர்கள், பச்சை மாமலைபோல் மேனி எனும் பாசுரம் தான் என்னை நிறைய யோசிக்க வைத்தது''

''அது அற்புதமான பாசுரம் ஆயிற்றே, அதில் என்ன ஐயப்பாடு''

''அதெப்படி பச்சை மாமலைபோல் மேனி?''

''காக்கை சிறகினிலே நந்தலாலா எனும் பாடலில் கூட ஒரு அற்புதம் இருக்கிறது. நீல வண்ண கண்ணா வாடா எனும் பாடலில் கூட அற்புதம் இருக்கிறது''

''சற்று விளக்கமாக சொல்லுங்கள் சாமி''

''பக்தா, இப்போதெல்லாம் உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது, முன்னர் எல்லாம் நான் வந்தால் என்னை விரட்டுவதில் என் மீது வெறுப்பு காமிப்பதில் மட்டுமே குறியாய் இருப்பாய், ஆனால் இப்போதோ பொறுமையை கடைபிடிக்கும் வழக்கம் வைத்து இருக்கிறாய்''

''சாமி, விளக்கம் சொல்லுங்கள்''

''இந்த பூமியில் கரியமில வாயு மட்டுமே நிரம்பி இருந்தது. அப்போது இந்த விஷ்ணுவின் உடல் கரியநிறம் கொண்டு இருந்தது. வெறும் கரியமில வாயுவை உட்கொண்டே வந்த விஷ்ணு தனது செல்களில் குளோரோபிளாஸ்ட் அதாவது தற்போது செடி, மர இலைகளில் எல்லாம் இருக்குமே அது போல கொண்டு வந்தார். அப்படி கொண்டு வந்த சமயத்தில் அவரது உடல் பச்சை நிறமானது. அப்படி நமது பூமியில் இருந்த கரியமில வாயு எல்லாம் இந்த குளோரோபிளாஸ்ட் மூலம் ஆக்சிஜன், குளுக்கோஸ் எல்லாம் உருவாக்கினார். இந்த ஆக்சிஜன் குறைவான போது அவரது உடல் நீல வண்ணம் ஆனது. எப்போது பச்சை வண்ணம் கொண்டாரோ இதே சமயத்தில் தான் ஆர்கேபாக்டீரியா, சையனோபாக்டீரியா எல்லாம் தோன்றியது. அவைகளும் இந்த கரியமில வாயுவை உட்கொண்டு உணவு உற்பத்தி செய்தன. இப்படி உருவானபோது நீராவி எல்லாம் குளிர்ந்து தண்ணீராக மாறியது. அப்போது தண்ணீரில் பாசிகள் உருவான. அந்த பாசிகள் கூட பச்சை வண்ணம் கொள்ள ஆரம்பித்தது. அதற்கு பின்னர் மரம் செடிகள், கொடிகள் எல்லாம் தோன்றியதும், விலங்கினங்கள் உருவானதும் நீ அறிந்தது தானே''

''செவ்வாய் கிரகத்தில் சென்று எதற்கு விஷ்ணு பச்சை வண்ணம் கொள்ள வில்லை சாமி"

''அங்கே இன்னும் கரிய நிறமாகத்தான் இருக்கிறார் பக்தா''

''சாமி, பச்சை மாமலைபோல் மேனிக்கு ஏதோ விளக்கம் சொல்கிறீர்களே, கரியமில வாயு இந்த பூமியில் அதிகரிப்பதாக சொல்கிறார்களே''

''பக்தா, இந்த பூமியில் எல்லா விளைநிலங்களும் மாறிவிடும் எனில் மனிதர்களில் உள்ள தோல் செல்கள் எல்லாம் குளோரோபிளாஸ்ட் உருவாக்கிக் கொண்டு தனக்கு தானே உணவு தயாரித்து கொள்ளும். அதனால் எதற்கும் கவலைப்பட வேண்டாம். கரியமில வாயு அதிகரிப்பின் இந்த குளோரோபிளாஸ்ட் கொண்ட செல்களுக்கு கொண்டாட்டம் தானே. இந்த பூமி எத்தகைய இன்னல்களுக்கு உட்பட்டாலும் மீண்டும் வளமாகவே இருக்கும்''

''சாமி, இப்படி நீங்கள் பேசுவதுதான் எனக்கு வெறுப்பை வரவழைக்கிறது''

''பச்சை மாமலைபோல் மேனி''

சாமியார் பாடியதை கேட்டு விழித்துப் பார்த்தேன். சாமியார் அங்கே இல்லை. வீட்டில் தேடினேன் அம்மா, அப்பா கூட இல்லை. வீட்டின் வெளியில் வந்து பார்த்தேன். அம்மாவும், அப்பாவும் வீட்டுத் தோட்டத்தில் மரங்கள் நற்றுக் கொண்டு இருந்தார்கள். நானும் வேகமாக அவர்களுக்கு உதவப் போனேன். 

Thursday 7 February 2013

உணர்வுகளின் பரிணாமம்

இறைவனும் இறை உணர்வும் - 4

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம் - 6

நரம்பியல் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கால சூழல் அமைய வேண்டும் என்றே எண்ணுவது உண்டு. அப்படிப்பட்ட நரம்பியல் பற்றி தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் எனும் கேள்வி எழுப்பும்போதே நரம்பியிலின் நுண்ணியதன்மை வெளிப்பட்டுவிடுகிறது.

ஐந்து வகையான உணர்வுகள், தொடுதல், சுவாசித்தல் , பார்த்தல், கேட்டல், சுவைத்தல்,  பற்றி பாடப்புத்தகத்தில் படித்த காலங்கள் உண்டு. பார்வைக்கு கண் என்றும், தொடுதலுக்கு தோல் என்றும், சுவாசித்தலுக்கு (வாசனைக்கு) நாசி என்றும், கேட்டலுக்கு காது என்றும் வகைப்படுத்தப்பட்டது.

ஒளி இருப்பின் பார்வையும், ஒலி இருப்பின் கேட்டலும் என்றே ஆனது. ஆனால் நமது பார்வையும் சரி, கேட்டலும் சரி ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் மட்டுமே இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம்.

ஆனால் இந்த உணர்வுகளைத் தாண்டி மேலும் பல உணர்வுகள் இருப்பதாகவே அறிவியல் நமக்கு அறிவுறுத்துகிறது. தொடுதலில் மென்மை, வலி, காமம் என எவ்வாறு நாம் வேறுபடுத்தி கொள்கிறோம் என்பதும்  அதைப்போல நாம் பார்க்கும் பொருளின் தன்மையை வேறு வேறு விதமாக நாம் எவ்வாறு உருவகித்து கொள்கிறோம் என்பதும்  சற்றே வித்தியாசமான ஒன்றுதான். நமது எண்ணமே இந்த உணர்வுகளைத் தூண்டுகிறதா? அல்லது உணர்வுகளால் நமது எண்ணங்கள் தூண்டப்படுகிறதா? என்பது சற்றே சிந்திக்கக் கூடிய விசயம்.

ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதா உபதேசத்தில் ஒரு தேரானது உடம்பாகவும், அந்த தேரினை இழுத்து செல்லும் ஐந்து உணர்வுகள் ஐந்து குதிரைகளாகவும், தேரோட்டியை மனமாகவும் சித்தரித்து உள்ளதாக குறிப்பு உள்ளது.

தாயைத் தொடும்போது உள்ள தொடுதல் உணர்வுக்கும், தாரத்தைத் தொடும்போது உள்ள தொடுதல் உணர்வுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பது மனம் சம்பந்தம் கொண்டதா, அல்லது உணர்வு சம்பந்தம் கொண்டதா? இந்த விசயத்தில்தான் பகுத்தறிவு என ஆறாம் உணர்வினை சொன்னார்கள். நமது மனதின் எண்ணவோட்டத்தின் பொருட்டே உணர்வுகளின் நிலை வேறுபடுகிறது என்றுதான் தொன்று தொட்ட காலம் முதல் சொல்லப்பட்டு வருகிறது.




உணர்வு நரம்பு, கடத்தும் நரம்பு, வெளிபடுத்தும் நரம்பு என மூன்று வகையாக நரம்பினைப் பிரிக்கலாம். பார்வை, கேட்டல், தொடுதல் என உணர்வு நரம்பு மூலம் கடத்தும் நரம்புக்கு சென்று பின்னர் மூளையின் செயல்பாடு, அல்லது செயல்பாடற்ற தன்மைக்கு பின்னர் வெளிப்படுத்தும் நரம்பு மூலம் ஒன்றை உணர முடிகிறது.

உதாரணமாக, ஒரு மிகவும் சூடான பாத்திரத்தை கையால் தூக்கும்போது சூடு தாங்க முடியாமல் கீழே போட்டுவிடுகிறோம். அப்படி கீழே போட வேண்டும் என மூளையின் கட்டுபாடுகளுக்கு நாம் காத்து இருப்பது இல்லை. அதே வேளையில் சூடாக இருந்தாலும் அதில் இருக்கும் பொருளின் மதிப்பை கண்டு நாம் கீழே போடாமல் இருக்க நாம் நமது மூளைக்கு கட்டுபடுகிறோம. இப்படியான ஒரு செயலை தனிச்சை செயல் என்றும் அனிச்சை செயல் என்றும் பிரிக்கலாம்.

ஏதாவது ஒன்று நம்மிடம் சொல்லும்போது சற்று கூட யோசனை செய்யாமல் பேசிவிடுவது கூட மூளைக்கு சம்பந்தம் உள்ளதா? இல்லையா என்பது குறித்து சர்ச்சைகள் உண்டு.

நன்றி: கூகிள்

இப்படி ஒவ்வொரு உணர்வும் எப்படி வேறுபாடு அடைகின்றன என சிந்திக்கும் வேளையில் இந்த ஐந்து உணர்வுகளில் எந்த உணர்வு முதலில் தோன்றி இருக்க கூடும்?

தொடுதல் என்கிறார்கள் சிலர். கேட்டல் என்கிறார்கள் சிலர். வாசம் என்கிறார்கள் சிலர். பார்த்தலும், சுவைத்தலும் இறுதியாக வந்து இருக்கலாம் என்றே சொல்கிறார்கள். இன்னும் எத்தனையோ உணர்வுகள் இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். இது குறித்து பின்னர் பார்ப்போம். அதில் ஒன்றுதான் இறை உணர்வு, முக்காலமும் உணரும் தன்மையான உணர்வு.

(தொடரும்)

Tuesday 23 October 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 6

முன்பகுதி 

மாணிக்கவாசகர் முக்காலத்தை அறிந்து இருந்தாரா என்பதற்கான சான்றுகள் கிடைப்பதற்கு அரியதாகவே இருக்கிறது. ஆனால் முனிவர்கள் அனைவரும் முக்காலமும் அறிந்தவர்களாகவே காட்டப்பட்டு வருகின்றனர்.

இதற்காக ஒரு கதை கூட சொல்லப்பட்டு இருக்கிறது. பிருகு முனிவர் மிகவும் ஆணவம் கொண்டவர் என்றே கருதப்படுகிறது. இவ்வுலகை ஆட்டிப்படைக்கும் பிரம்மா, சிவன், விஷ்ணு என மூவரும் இவருக்கும் கீழேதான் எனும் மமதை இவருக்கு மிகவும் அதிகமாகவே உண்டு. முன்னொரு காலத்தில் எல்லாம் கற்றறிந்தவர்கள் பெரும் மதிப்புக்கு உரியவர்களாகவே போற்றப்பட்டு வந்தனர். அதன் காரணத்தில் முனிவர்கள், சித்தர்கள் போன்றோர்கள் எல்லாம் கடவுளர்களால் போற்றப்பட்டு வந்தார்கள்.

புராணங்களில் கூறப்பட்டவை புரட்டுகள் என்றே வைத்துக் கொண்டாலும் எழுதப்பட்ட விசயங்கள் எல்லாம் மிகவும் ஆச்சரியமும், அதே வேளையில் சுவராஸ்யமாகவும் இருப்பதை எவரும் மறுக்க இயலாது. எள்ளலுக்கு உட்படும் புராணங்கள் எனினும் எழுதப்பட்டவைகளை மாற்றி அமைத்தல் என்பதும், திரித்து கூறுதல் என்பதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

மகாபாராதம் என சொல்லப்படும் இதிகாசம் இந்தியாவின் வரலாறு என்றே குறிப்பிடப்படுகிறது. அஸ்தினாபுரம் என்ற ஒரு இடம் இருந்ததாக, இருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இறந்த காலத்தை தோண்டி எடுக்கும் திறன் அகழ்வாரய்ச்சியாலர்களுக்கு நிறையவே உண்டு. படிமங்களை கொண்டு இறந்த காலம் உணரும் திறனை அவர்கள் வளர்த்து கொண்டார்கள் என்பது போல ஒரு தோற்றம் இருக்கத்தான் செய்கிறது.

கடவுளர்களால் போற்றப்பட்ட பிருகு முனிவரின் சாபத்திற்கு ஆளாகிறார்கள் பிரமனும்,சிவனும். இவர்கள் இருவருக்கும் சாபம் இடுகிறார் பிருகு முனிவர். பிரமனுக்கு கோவில்களே இருக்காது எனவும, சிவனுக்கு லிங்க வடிவிலேதான் பூஜை எனவும் சொல்லி செல்கிறார். ஆனாலும் பிரமனுக்கு ஒரு கோவில் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய வழிபாட்டு முறையை கொண்டு அன்று பிருகு முனிவர் சொன்னது போல எழுதி இருக்க வாய்ப்பு இல்லை. அல்லது பிற்காலத்தில் பிருகு முனிவர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அதை பின்பற்றியும் இருந்து இருக்கலாம். ஆனால் இங்கே முக்காலத்தை நிர்ணயிக்கும் வல்லமை கொண்டவராகவே பிருகு முனிவர் போற்றப்படுகிறார்.

இதைவிட விசேசம் என்னவெனில் பிருகு முனிவர் விஷ்ணுவை காலால் எட்டி நெஞ்சில் உதைக்க, விஷ்ணுவோ பணிவுடன் அவருக்கு பணிவிடை செய்ய விஷ்ணுவுக்கு கோவில்கள் என்கிறார் பிருகு முனிவர். ஆனால் விஷ்ணுவின் மனைவி லட்சுமி பிருகு முனிவரின் வம்சமான பிராமணர்கள் வசதி வாய்ப்பு இன்றி போகட்டும் என சாபம் இடுகிறார். இங்கே எவர் பிராமணர் எனும் கேள்வி பெரிய கேள்வி? எவர் அந்தணர்? ஆனால் பின்னர் சற்று பரிவு கருதி முக்காலத்தை குறித்து வைக்கும் ஆற்றல் பெற்று பிராமணர்கள் அதன் மூலம் அவர்களது வாழ்வினை வளப்படுத்தட்டும் என்றே ஒரு வாய்ப்பு தருகிறார்.

அந்த வாய்ப்பை கொண்டு பிருகு முனிவர் ஒரு தனி சூத்திரங்கள் எழுதியதாக வரலாறு சொல்கிறது. பிருகு சம்ஷிடா எனப்படுவது அது. விநாயகரின் துணை கொண்டு எழுதப்பட்டதாக புராணம் சொல்கிறது. விஷ்ணு கூட முனிவர்களில் நான் பிருகு என்கிறார். இப்படி பல விசயங்ககளை தொகுத்து வைக்கிறார் பிருகு. ஆனால் அவை எல்லாம் பிற்காலத்தில் முஸ்லிம்கள் படையெடுப்பால் தொலைந்து போயின என்கிறார்கள். நாலந்தா பல்கலைகழகத்தில் பிருகு முனிவரின் எழுத்துகள் சேர்த்து வைக்கப்பட்டன என்றும் அந்த பல்கலைகழகம் அழிக்கப்பட்டதால் எல்லாம் அழிந்து போயின என்கிறார்கள். பிருகு முனிவரின் சீடர்கள் எல்லாம் சேர்ந்து இன்றைய மரபணுக்கள் எப்படி தொகுக்கப்பட்டதுவோ அது போன்று எல்லா உயிர்னங்களின் முக்காலங்களையும் தொகுத்து வைத்ததாகவே சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் தான் சோதிட கலை உருவானது என்றே சொல்கிறார்கள்.

என்ன இருந்தாலும் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்றே தெரியாமல் இருப்பதால் வாழ்வு சுவாரசியம் என்றும் சொல்வது உண்டு.

(தொடரும்)

Monday 30 January 2012

முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள்

ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. 
ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். 

எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இல்லை. 

முஸ்லீம் என்றால் இறைவனிடம் தம்மை ஒப்புவிப்பவர் என அரபிக் மொழியில் பொருள்படும் என சொல்லப்படுகிறது. ஆஹா, எத்தனை ஆனந்தமான சொல். 

ஆனால் முஸ்லீம் என்றால் உலகில் வெறுப்புக்கு உள்ளாகும் நபர்கள் என்பது முஸ்லீம் என்ற பெயர் கொண்டு சிலர் செயல்படும் நடவடிக்கைகள் தான். ஆனால் எந்த மனிதர்தான் அடவாடித்தனமாக செயல்படவில்லை? தனது கொள்கைகளை நிலை நிறுத்த எல்லோருமே அடாவடியாக செயல்படத்தான் வேண்டி இருக்கிறது. 

தமிழை பழித்தால் தாய் தடுத்தாலும் விடேன் எனும்போது ஒரு ஆவல் பிறக்கிறது. அதே போல எமது இறைவனை, எமது புனித நூலை பழித்தால் விடேன் என முஸ்லீம்கள் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என புரியவில்லை. 

முஸ்லீம்கள் சகிப்புத்தன்மை அற்றவர்கள் எனும் ஒரு பொதுவான எண்ணம் நிலவுகிறது. எதற்கு ஐயா சகித்து கொண்டு போக வேண்டும்? எதை சகித்து கொண்டு போக வேண்டும்? திருக்குர்ஆன் பற்றி உங்களால் சகித்து கொண்டிருக்க இயலாத நிலையில் அவர்கள் எதற்கு அதற்கான எதிர்ப்பை சகித்து கொண்டிருக்க வேண்டும்?

பரிணாம கொள்கையை எதிர்க்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு ஆத்திகர்கள் மேல் அதாவது முஸ்லீம்கள் மேல் அதிகமாகவே சொல்லப்படுவது உண்டு. எதற்கு பரிணாம கொள்கையை எதிர்க்க கூடாது? ஏதேனும் சட்டம் இருக்கிறதா? பரிணாம கொள்கையை முற்றிலும் ஏற்று கொள்ள இயலாது. இதுவரை கண்டெடுக்கப்பட்ட விசயங்களை நிறையவே ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. 

பில்லியன் ஆண்டுகள் முன்னாள் ஒன்றுமே இல்லை என அறிவியல் சொல்லும், அதை மட்டும் ஆஹா, ஓஹோ என கேட்டுக் கொள்வோம். ஆனால் . அதை எதிர்த்து ஒருவரும் கருத்து சொல்ல மாட்டோம். அற்புதமான பகுத்தறிவு. அறிவியல் பில்லியன் ஆண்டுகள் முன்னாள் எந்த இயற்பியல் விதிகளும் இல்லை என்கிறது, என்ன பைத்தியகாரத்தனம், என்னதொரு மூட நம்பிக்கை என எவருமே சிந்தித்துப் பார்ப்பதில்லை. நாம் அனைவருமே நமது வாழும் காலங்களில் ஏமாற்றப்பட்டு கொண்டே இருக்கிறோம், அல்லது ஏமாறுவதற்கு ஆயத்தமாகவே இருக்கிறோம். 

இந்த ஆத்திகர்கள், நாத்திகர்கள்.  இந்த பதம் தனை எவர் கண்டுபிடித்தது என்று தெரியவில்லை. ஆத்தி, நாத்தி. என்ன கொடுமையான தமிழ் இது. ஆத்தி சொல்வதை மாத்தி சொல்வது நாத்தி. நாத்தி சொல்வதை மாத்தி சொல்வது ஆத்தி. அடி ஆத்தி, என்னதொரு விளக்கம். 

ஆதிகர்கள் என்பதுதான் ஆத்திகர்கள் என மருவிற்று. ஆதி என்றால் முதலானவை. முதல் முதலில் உலகில் தோன்றியவைகள் எல்லாம் ஆதிகர்கள். ஆதியும் அந்தமும் இல்லாத சோதி இறைவன் என குறிப்பிடப்படுகிறது. இப்படி ஆதி இல்லாத இறைவனை கேள்விக்குறியுடன் பார்க்கும் உலகம், ஆதி இல்லை என சொல்லும் அறிவியலையும் கேள்விக்குறியுடன் பார்க்கட்டும்.

இஸ்லாம், கிறிஸ்துவம்தனை தன்னுள் உள்ளடக்கியது என்கிறார்கள். இஸ்லாம், கிறிஸ்துவம் என எல்லாவற்றையும் இந்துமதம் தன்னுள் உள்ளடக்கியது என்கிறார்கள். 

இவை எல்லாவற்றையும் அறிந்து கொள்ள உதவும் அறிவியல் அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ள துடிக்கிறது. 

இதெல்லாம் இருக்கட்டும், உலகில் பஞ்சங்களும் , திருடுகளும், கொள்ளைகளும் குறையவா போகிறது, உலகம் சுபிட்சம் பெற்று சிறப்புடன் இருக்கவா போகிறது. 

எது எப்படியோ...

நமது நோக்கம் எல்லாம் உலகம் செழிக்க போராடுவதில் இருக்கட்டும். உலகம் இப்படியே இருக்கிறது என்பதை சகித்து கொள்வதை ஒருபோதும் நாம் அனுமதிக்க வேண்டாம். 

Wednesday 4 January 2012

ஜீரோ எழுத்து - 2

ஒரு வட்டம் போடும் போது ஒரு புள்ளி வைத்து தொடங்குவோம், அப்படியே அந்த புள்ளியினை கோடாக்கி மீண்டும் அந்த புள்ளியில் சேர்க்கும் போது வட்டம் உருவாகிவிடும். அப்படியெனில் புள்ளி தான் தொடக்கம், அந்த புள்ளி தொடக்கம் எனினும் புள்ளியில் இருந்து தொடங்கிய கோடு மீண்டும் புள்ளியை தொடும்போது எது தொடக்கம், எது முடிவு என்பது பின்வரும் நாளில் வரைந்தவருக்கே மறந்து போய்விடும்.

இது எந்த ஒரு மூடப்பட்ட சூழலுக்கும் பொருந்தும், சதுரம், செவ்வகம், முக்கோணம் என எந்த ஒரு வடிவத்தை எடுத்தாலும் தொடக்கம் எது, முடிவு எது என அறிவது மிகவும் கடினம், ஆனால் தொடக்கமும் முடிவும் அந்த கோடுக்குள் தான் இருக்கும் என்பது மிக மிக தெளிவு. அதே வேளையில் தொடங்கும் இடத்தில் ஒரு வண்ணத்தை வைத்து ஆரம்பித்துவிட்டு இப்பொழுது கோடு வரைவோம், மீண்டும் வண்ணம் இடத்திற்கே வருவோம், இப்பொழுது தொடக்கம் வரைந்தவருக்கு தெரிந்துவிடும். ஆனால் இதை புதிதாக பார்ப்பவர்க்கு தொடக்கத்திற்காக இடப்பட்ட வண்ண புள்ளியா, அல்லது முடிவுக்காக இடப்பட்ட வண்ண புள்ளியா என்பது புரியாது.

ஒரு வட்டம் போடத்தான் ஒரு புள்ளியை வைத்து தொடங்க வேண்டும். அதனால் வட்டத்தில் புள்ளி தொடக்கம் எது எனும் தேடல் அவசியமாகலாம், ஆனால் புள்ளியே வட்டமாக விரிவடைந்தால் அந்த புள்ளிதான் தொடக்கமும், எல்லாமும். இந்த பிரபஞ்சமும் அப்படித்தான் என்கிறது அறிவியல். இப்பொழுது இந்த புள்ளி இருக்க ஒரு இடம் இருக்க வேண்டும், காலம் இருக்க வேண்டும், நேரம் இருக்க வேண்டும், எல்லாம் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு முன்னர் அப்படி ஒரு நிலை இல்லை எனும் கூற்று  அத்தனை எளிதாக ஏற்று கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்படித்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேதங்களும் சொல்கிறது, அறிவியலும் சொல்கிறது. வேதங்களும், அறிவியலும் சொல்கிறது என்பதற்காக சமரசம் செய்து கொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை. இருக்கின்ற தன்மை கொண்டு இல்லாத தன்மையை சிந்திக்கும்போது இது போன்ற நிகழ்வுகள் வாடிக்கை.

இப்பொழுது புள்ளி விரிவடைந்து கொண்டே செல்லும்போது ஒரு வெறுமை, எதுவுமற்ற தன்மை புள்ளிக்குள், அதாவது வட்டத்திற்குள், உருவாவது போன்ற தோற்றம் நமக்கு தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல, அந்த வட்டத்திற்குள் புலப்படாத விசயங்கள் இருக்கின்றது என்பதுதான் நமக்கு புரிந்து கொள்ள வேண்டிய அறிவு. இறைவனை பற்றி அல்லது ஒன்றை பற்றி சதா எந்நேரமும் சிந்தித்து  கொண்டிருக்கும் ஒருவரும் சரி, ஒரு கணத்தில் மட்டுமே இறைவனை அல்லது ஒன்றை பற்றி சிந்திக்கும் நிலையிலும் சரி அதற்குரிய சிந்தனை மிகவும் முக்கியத்துவம் ஆகிறது.

இறைவன் எங்குமே இல்லை என சொல்லும்போதே அந்த வார்த்தையில், வாக்கியத்தில் இறைவன் இருப்பதாகவே அர்த்தம் காட்டப்படும். இல்லாத ஒன்றை பற்றி எதற்கு எவரும் பேச வேண்டும்? அதோ அந்த இடத்தில் ஏதோ சத்தம் வருகிறது, என்னவென பார்த்து வருகிறாயா என எவரையேனும் அனுப்பி அவரை அந்த இடத்தை பார்த்து வர சொன்னால், அங்கே ஒன்றுமே இல்லை என அவர் சொல்வதன் மூலம் என்ன அர்த்தம் நமது மனதில் ஓடும் என்பது பொறுத்தே இந்த பிரபஞ்சத்திற்கான விடை இருக்கிறது.

நிறைய சிந்தனைவாதிகளை இந்த உலகம் தந்து இருக்கிறது. ஒவ்வொருவரின் சிந்தனைகளும் மிகவும் நேசிப்புக்கு உரியவையாக இருக்கின்றன.  இறைவன் நம்பிக்கை சரி, இறைவன் அற்ற நம்பிக்கை சரி, எந்த விசயம் எனினும் அது குறித்து திறம் படவே சிந்தித்து இருக்கிறார்கள். இருப்பினும் உலகம் எப்படி உருவானது என்பதற்கு இது விடை தெரியாத கேள்வி என்றே ஒதுங்கி கொள்கிறார்கள், இன்றல்ல, பல காலம் முன்னர் எழுதப்பட்ட ரிக் வேதம் கூட அதைத்தான் சொல்கிறது.

ரிக் வேதம் : 10 .129 (மொழி பெயர்ப்பு: ராதாகிருஷ்ணன்; தவறுகளுக்கும், தவறுதலான கருத்துக்கும் நானே பொறுப்பு; ரிக் வேதம் எழுதியவர் அல்ல) 


இருப்பு நிலையும், இல்லாத நிலையும் இல்லாதிருந்தது. காற்றின் ஆட்சியும் இல்லை, அதைத் தாண்டிய ஆகாயமும் இல்லை. என்ன, எங்கே மறைத்து இருந்தது? யார் அடைக்கலம் கொடுத்தது? தண்ணீர் இருந்ததோ? எந்த ஆழத்தில் இருந்ததோ?


இறப்பு நிலையும் இல்லை, இறவா நிலையும் இல்லை. எந்த ஒரு அறிகுறியும் இல்லை, இரவென்றும், பகலென்றும் பிரித்துணர. ஒன்றே ஒன்று சுவாசமற்ற தன்மையில் அதனின் தன்மையில் சுவாசித்து கொண்டிருந்தது, அதைத்தவிர வேறு ஒன்றுமே இல்லை. 


இருள் இருந்தது. அந்த இருளில் ஒழுங்கின்மையுடன் எல்லாம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஒரு வெற்றிடமாய் மட்டுமே எந்த ஒரு தன்மையும் இன்றி இருந்தது. அந்த ஒரு நிலையிலே மிகப்பெரிய அன்பு நிறைந்த சக்தி/ஆற்றல் ஒரு தொகுதியாய் உருவானது. 


அந்த அன்பு நிறைந்த ஆற்றலில் ஒரு ஆசை பிறந்தது. அந்த ஆசைதான் முக்கிய காரணங்களில் மூல விதை. முனிவர்கள் இதயப்பூர்வமாக இதை தேடியபோது கண்டு கொண்டார்கள். இருக்கும் தன்மையின் உறவு இல்லாத தன்மையில் இருந்தது என. 


அந்த நிலையானது குறுக்கே விரிவடைந்தது, அதற்கு மேலே என்ன இருக்கிறது, கீழே என்ன இருக்கிறது? உற்பத்தி திறன் இருந்தது, எல்லையில்லா சக்தி இருந்தது, சுதந்திரமான ஆக்கமும், ஆற்றலும் உலவியது


யாருக்கு முழுமையாக தெரியும், யார் அதை பிரகடனப்படுத்துவது, எப்பொழுது பிறந்தது, எப்பொழுது உற்பத்தியானது? கடவுளர்கள் எல்லாம் இந்த உற்பத்திக்கு பின்னே உருவானார்கள்? யாருக்கு தெரியும் முதன் முதலில் இங்கு எப்படி இயக்கத்திற்கு வந்தது என. 


அவனே, இந்த உற்பத்திக்கு முதலானவன், அவன் உருவாக்கினானா, இல்லை உருவாக்கவில்லையா, இந்த உலகத்தை சுவர்க்கத்தில் இருந்து பார்த்து கொண்டிருப்பவன், அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கும், ஒருவேளை தெரியாமலே இருக்க கூடும். 

இப்பொழுது இந்த வாசகங்கள் எல்லாம் (தமிழ் படுத்தும் பாடு!) படிக்கும்போது மனிதர்களின் சிந்தனை எப்படி உலகம் உருவாகி இருக்கும் என்பது குறித்து அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அக்னி, வாயு, காயத்ரி, இந்திரன், சோமன் போன்ற கடவுள்கள் எல்லாம் பிற்பாடே தோன்றி இருக்கிறார்கள் எனும் தெளிவு அன்றே இருந்து இருக்கிறது. இந்த உற்பத்தியை கண்காணிப்பவனுக்கு கூட  ஒரு வேளை தெரியாது என்று எழுதி இருப்பதுதான் விசேசம். ஏனெனில் அத்தனை குழப்ப நிலையில் அன்றே மனிதர்கள் இருந்து இருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் இறைவன் பற்றிய சிந்தனை குறித்து ஒரு தெளிவே இல்லாமல் தான் இருந்து இருக்கிறது. அதிலும் இருக்கும் தன்மையின் உறவு இல்லாத தன்மையில் இருந்தது என்பது கூட அறிவுக்கு எட்டாத ஒரு விசயம் என்பதால் மட்டுமே அப்படி எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரிக் வேதத்தில் எழுதியதைத்தான் அறிவியலும் குறிப்பிட்டு வருகிறது, ஒரு வேளை காலப்போக்கில்  மாறக்கூடும்.  ஆனால் இந்த வரி ஒன்றே ஒன்று சுவாசமற்ற தன்மையில் அதனின் தன்மையில் சுவாசித்து கொண்டிருந்தது, மிகவும் யோசிக்க வைத்தது. ஒன்றுமே இல்லாமல் எதுவுமே உருவாகி இருக்க முடியவே முடியாது. உற்பத்தி நிலை குறித்து சிவவாக்கியர் எனும் சித்தர் குறிப்பிடும்போது

அண்ணலே அநாதியே அநாதிமுன் அநாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாநீர் சுக்கிலம் சுருதிஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?

இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு பதில் ஒண்ணுமில்லை என சொன்னால் எப்படி? பதிலே இல்லாத கேள்வி இந்த பாரினில் இருக்கத்தான் முடியுமா? இந்த ஒரு கேள்விக்கு ஆன்மிகம் தேடி கண்டுபிடித்த விடை 'இறைவன்'. அறிவியல் தற்போதைக்கு  தேடிக் கொண்டு இருக்கும் விடை 'கடவுளின் துகள்'

ஒண்ணுமே இல்லாமல் தான் உயிரினங்கள் வந்ததா? அப்படி அதில் ஜீரோ சாதித்தது என்ன?

(தொடரும்)

Friday 13 February 2009

தலைவிதி தலைமதி - 9 சனி பார்வை குரு பார்வை

குரு பார்வையும், சனி பார்வையும் நமது ஜோதிட சாஸ்திரங்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ராகு கேதுப் பெயர்ச்சிகளுக்குப் பெரும் முக்கியத்துவம் தராவிட்டாலும் சனிப்பெயர்ச்சிக்கும், குருப்பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருவது பலரும் அறிந்திருக்கக்கூடும் விசயமே. இதில் அறிவியலுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தான் ஒரு விசயம் கண்ணுக்குப் பட்டது. அவ்விசயத்திற்கு விரைவில் வருகிறேன்.

பூமிக்கு மற்ற கிரகங்களினால் பாதிப்பு உண்டு எனும் தம்பி முரளியின் பார்வை மிகவும் விசாலமானது. வாழ்த்துகள் தம்பி முரளி. பொதுவாக சூரியனின் கடுமையான கதிர்கள் நமது பூமியில் விழாத வண்ணம் வெள்ளி, புதன் கிரகங்கள் பாதுகாத்து வருவதும், பூமியானது தனது காந்த சக்தியால் அதுபோன்ற விசமிக்க கதிர்களை புறந்தள்ளிவிடும் தன்மையுடையது என நாம் அறிவோம்.

இதனைத் தாண்டி 1997ல் டொரான்டோவினைச் சேர்ந்த இரு இயற்பியல் விஞ்ஞானிகள் பூமியின் தட்பவெப்ப நிலையானது, பூமியின் வடிவத்துடன் சேர்ந்து பிற கிரகங்களின் அதுவும் முக்கியமாக ஈர்ப்புவிசையினால் சனியாலும், குருவாலும், பாதிக்கப்படுகிறது என சொல்லி இருக்கிறார்கள். இருவரும் நாங்கள் தான் இந்த விசயத்தை முதன் முதலாகச் சொல்கிறோம் என மார்தட்டிக் கொண்டார்கள். அதுவும் விசயம் வெளி வந்த இதழ் நேச்சர் எனும் இதழ். சாதாரணமாக எதையும் இந்த நேச்சர் இதழில் அத்தனை எளிதாக வெளியிடமாட்டார்கள். ஒவ்வொரு ஆராய்ச்சியாளனின் கனவும் இந்த இதழில் வெளியிடுவதுதான். இன்னும் அந்த நிலைக்கு எல்லாம் நான் போகவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய விசயமாகத்தான் இருக்கிறது. ஒருநாளேனும் அந்த இதழில் நிச்சயம் வெளியிட்டுவிடலாம் என நம்பிக்கையும் இருக்கிறது.

பூமியின் சாய்வுத் தன்மையும் அது சுற்றி வரும் தன்மையும் பூமியில் தட்ப வெப்ப நிலை மாற காரணமாக இருக்கிறது. சாய்வுத் தன்மையானது 46000 வருடத்திற்கு ஒருமுறை மாறும் எனவும், சுற்றும் தன்மையானது 26000 வருடத்திற்கு ஒரு முறை மாறும் எனவும் கணித்து இருக்கிறார்கள். இப்படி மாறுவதால் சூரியனின் கதிர்கள் பூமியில் பட்டு மாற்றம் ஏற்படுகிறது என உறுதியாகச் சொல்கிறார்கள்.

20 மில்லியன் வருடங்கள் முன்னர் பூமியானது சனி மற்றும் குருவின் ஈர்ப்புத் தன்மை போலவே தனது ஈர்ப்புத் தன்மையை வைத்துக் கொண்டதால் சாய்வு தனமையும் வடிவமும் பெற்றதாக ஆராய்ச்சியில் நிரூபித்து இருக்கிறர்கள். அதன் விளைவாகவே 20 மில்லியன் வருடங்கள் முன்னர் பூமியில் சீதோஷ்ண நிலை மாறி இருக்கக் கூடும், எனவே இனி வரும் காலங்களிலும் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள்.

ஆக சனிப் பெயர்ச்சிக்கும், குருப் பெயர்ச்சிக்கும், அறிவியலுக்கும் சம்பந்தம் உண்டு. இதனால் மொத்த மனிதர்களும் பாதிக்கப்படாமல் ஏன் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என எண்ணம் ஏற்பட்டால் ''எனக்கு அதுப் பிடிக்காது, எனக்கு இதுப் பிடிக்காது'' என நம்மில் எப்படியெப்படி இருக்கிறோம் என்பதையும், ஒரே மருந்து ஒவ்வொருவருக்கும் வேறுவிதமாக வேலைப் பார்க்கும் என்பதையும் கருத்தில் கொள்வோம்

தலைவிதி தலைமதி - 8

ஒரு சின்ன மாநாடு. அங்கே ஒருவர் கேள்வி எழுப்பினார். புற்று நோய் என வந்துவிட்டால் அது எதனால் வருகிறது என்பதை அறிந்து அதற்குரிய சிகிச்சை முறை அளித்தால் ஒழிய எந்த ஒரு பிளாசிபோவும் ஒரு பலனும் அளித்துவிடாது. உடனே மற்றவர் சொன்னார், ஆமாம் ஆமாம் அப்படியே மருந்து அந்த நோயை முற்றிலும் தீர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

பிளாசிபோவை நம்பி மட்டும் செயல்பட்டால் இன்று உலக மக்கள் தொகை மிகவும் குறைவாகவே இருந்து இருக்கும் என்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர். கருணை, புண்ணியம், அன்பு பிரார்த்தனை இதெல்லாம் காப்பாற்றும் என்று இருந்தால் ஏன் விலை கொடுத்து மருந்து வாங்க வேண்டும்! இந்த பிளாசிபோ கடுமையான ஒன்று என்கிறார்கள் அறிவியலாளர்கள். எனவே பிளாசிபோவினால் நோய் குண்மாகும் என்பதெல்லாம் நம்ப தகுந்தது அல்ல, உரிய முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

நமது திருவள்ளுவரும் அதைத்தானே அழகாக சொல்கிறார். நோய் நாடி... எனவே ஆன்மிகம் சொல்லும் மன அமைதியும், கட்டுப்பாடான வாழ்க்கையும் ஒரு பிளாசிபோ போன்று இருந்து மருந்தை சற்று தூர நிற்கச் செய்யும், ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை. நோய் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. அறிவியல் மருந்தை கண்டுபிடித்து தடுத்து நிறுத்திய நோய்கள் என பல இருக்கிறது. ஒரு காலத்தில் நோய் கடவுளால் கொடுக்கப்பட்ட தண்டனை என கருதிய புண்ணியவான்கள் இருந்தார்கள். ஆனால் கடவுள் அத்தனை சிரமம் எல்லாம் தருவதில்லை என நோய் வருவதற்கான காரணத்தை கண்டுபிடித்து எது நோய் உருவாக்கியதோ அதை வைத்தே மருந்து கண்டுபிடித்த அறிவியல் மேதைகளும் இருக்கிறார்கள்.

உதாரணமாக அனைவருக்கும் தெரிந்த பென்சிலின், முக்கியமாக எனக்குப் பிடித்துப் போன பென்சிலின். தடுப்பு ஊசி முறையெல்லாம் 'முள்ளை முள்ளால் எடுப்பது' போன்றதுதான். ஆக ஆன்மிகம் நம்மை நல்வழிபடுத்த, நம்மை நாம் உணர்ந்து கொள்ள சொல்லும் வழிமுறை. அறிவியல் எல்லாவற்றையும் பிரித்து மேய்ந்து தீர்த்திட வழி பார்க்கும் ஒரு வழிமுறை. பிளாசிபோவோ, மருந்தோ 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதால் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன், அத்துடன் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிளாசிபோ, மருந்து போன்று விற்பனைக்கு கிடைப்பதில்லை! ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆனால் நோய் தீர்க்கிறேன் என வித்தை காட்டும் மனிதர்கள் பிளாசிபோ வகையைச் சார்ந்தவர்களே. நமது மூதாதையர்களின் மருத்துவம் பிளாசிபோ வகையைச் சார்ந்தது அல்ல, ஆனால் அனைத்தையும் முறைப்படுத்துங்கள் என மேல்நாட்டு மருத்துவம் கேட்டுக்கொள்கிறது. நமக்கு அதற்கு எங்கே நேரம்? ஒரு திப்பிலி, சுக்கு, மிளகு, இஞ்சி போய்க்கொண்டே இருப்போம்!

மாத்திரை என்பது நமது உடலில் உயிர் வேதி மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். அதாவது நமது உடலில் உயிர்வேதிவினைகள் பல மூலக்கூறுகளால் வழிநடத்தப்படுகிறது. அவ்வாறு நடக்கும் வினைகள் நமது உடலுக்கு நல்ல செயலை செய்ய வேண்டும், அப்படியில்லாது ஏதாவது பிரச்சினை ஏற்படும்போது இந்த மாத்திரைகள் நமது உடலில் இருந்த முதன்மை நிலைக்கு கொண்டு செல்லும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றன.

நமது மூளை நமது உடலில் அனைத்தும் சீராக இருக்கும் வண்ணம் பல தொழிலாளர்களை வேலைக்கு அமைத்து உள்ளது, ஏதாவது பிரச்சினையெனில் இயற்கையாகவே முதல் நிலைக்கு கொண்டு செல்லப்படும், அப்படி இல்லாதபட்சத்தில் தான் இந்த மாத்திரை உதவுகிறது. அதுதான் உடம்புக்கும் மாத்திரைக்கும் உள்ள சம்பந்தம்.

இது ஒன்றும் தற்காலிகமாக நடந்தது அல்ல. பல வருடங்கள் முன்னரே மருத்துவ ரீதியாக உணரப்பட்ட ஒன்று. ஒரு ஆராய்ச்சியாளர் ஆற்றில் தண்ணீரை குடித்ததும் காய்ச்சல் வந்துவிட்டதை போன்று உணர்ந்தார். ஆனால் அந்த தண்ணீரை அதிகமாக அருந்த அருந்த காய்ச்சல் மறைந்து போனதை கண்டார். அப்படி உருவானதுதான் மலேரியாவுக்கான மாத்திரை. நமது ஆயுர்வேத மருந்தும் அதுவே.

நோய் என்பது நமது உடல்நிலை சமன்நிலை அற்று போவதாகும். நமது உடலில் பலவித வழிப்பாதைகள் இருக்கின்றன, அனைத்தும் சரியாக செயல்பட்டாலன்றி ஏதாவது பிரச்சினை வரக்கூடும், அப்படி சில வழிபாதைகளில் ஏற்படும் கோளாறுகளால் வரும் நோய் வழி அறிந்து தரப்படும் மாத்திரை அந்த வழிப்பாதையை சீராக்குகிறது. நோய் அப்படித்தான் குணமாகிறது. இது குறித்து பெருமளவில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது, புது புது வியாதிகள் வந்து கொண்டு இருக்கிறது, மாத்திரையும் தான்!

நமது உடம்பு கார்பன் போன்ற தனிமம் சேர்ந்த மூலக்கூறுகளால் ஆனதே. எரித்தால் தெரியும், புதைத்தால் புரியும். எனவே தனிமத்திற்கும் உடலுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. எப்படி இத்தனை சிக்கலான வழியமைப்பை ஏற்படுத்திக் கொண்டது என வரும்போதுதான் ''அறிவிற்சிறந்த ஒருவர் உருவாக்கினார்'' எனும் கொள்கை பிறக்கிறது. நமது உடல் செயற்கை அல்லவே! எல்லாம் இயற்கை தான். இயற்கை தான் செயற்கையாக தோற்றம் அளிக்கின்றதேயன்றி கீதாசாரம் சொன்னது போல எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது! மாற்று விசயங்கள் என வரும்போது எல்லாம் செயற்கைத்தனமாக இருக்கிறது அவ்வளவே. ஆம் இயற்கையாய் மட்டுமல்ல அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான்.

பறப்பது என்பது மனிதனுக்கு சாத்தியமில்லை என பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள். இதன் காரணமாகவே மனிதன் தனது அறிவினைக்கொண்டு பறந்து செல்ல விமானம் தயாரித்துவிட்டான். இறக்கைகள் உள்ள பறவையெல்லாம் பறப்பதில்லை. இறக்கைக்கு கீழே இருக்கும் சிறகுகள்/இறகுகள் தான் பறப்பதற்கு காரணம். ஒரு பட்டம் பறந்தது, வியந்தான் மனிதன். பறவை பறந்தது, வியந்தான். தானும் பறக்க கைகளில் சிலவற்றைக் கட்டியும் பார்த்தான். எலும்பு உடைந்ததுதான் மிச்சம். மனிதன் நடப்பதற்கேற்ற உடலமைப்பு கொண்டவன் என நிரூபணம் ஆனது. பலூனில் காற்றை அடைத்து அதைப் பறக்கச் செய்தான். தனது காற்றை ஊதி பலூன் பறப்பது கண்டு தனக்குள் இருக்கும் காற்று தன்னை மிதக்கச் செய்யாதா எனும் ஏக்கம் இன்று வரை தீரவில்லை. பலூனில் ஹீலியம் வாயு அடைத்து அதில் தன்னை இணைத்து பறந்தான். ஹைட்ரஜன் மூலம் உருவாக்கப்பட்ட விமானம் எரிந்து வீழ்ந்தது. இப்படி ஒன்றில் தொடர்பு கொண்டுதான் அவனால் பறக்க முடிகிறது என்பது மனிதனால் செய்யக்கூடிய விசயம். ஒல்லியாக இருப்பவரை ஊதித் தள்ளிவிடுவேன் எனச் சொல்வது நகைச்சுவையாக இருக்கும், காற்றடித்தால் பறந்துவிடுவாய் என்பதும் நகைச்சுவையாக இருக்கும். ஆனால் மனிதனால் பறப்பது என்பது சற்று கடினமே.

சித்தர்கள்... அதிசய மனிதர்கள். இப்படி இயற்கையாய் சாத்தியமில்லை எனச் சொன்னால் அது உங்கள் இயலாமையின் காரணம் என சொல்லும் மனிதர்கள். கூடுவிட்டு கூடு பாய்வது, காற்றோடு காற்றாய் இருப்பது, தண்ணீரில் நடப்பது என்பதெல்லாம் இதுவரை பார்த்தது இல்லை. செய்தி கேள்விபட்டதுதான். அதே வேளையில் பயங்கர பூகம்பத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய பலர் பல நாட்களாக உயிருடன் இருந்து இருக்கிறார்கள் எனும் செய்தி கேட்கும்போது அந்த அழிவின் காரணமாக மனம் வலித்தாலும் ஆச்சரியம் அளிக்கின்றது.

காற்றில் 78% நைட்ரஜன், 21% ஆக்ஸிஜன் 1% ஆர்கன், கிரிப்டான், செனான் கார்பன்- டை- ஆக்ஸைடு (0.04%) ஹைட்ரஜன் மட்டுமே. இதில் இலகுவான காற்றை உள்ளிழுத்து சித்தர்கள் பறக்கிறார்களா? அல்லது மனம் இலேசாக இருப்பதால் பறந்தது போல் உணர்கிறார்களா? அறிவதற்கில்லை.

போகர் ஆச்சரியம் அளிக்கின்றார். திருமூலர் ஆச்சரியம் அளிக்கின்றார். கலசமுனி வியக்க வைக்கின்றார். ஒருநாளேனும் ஒரு சித்தரையாவதுப் பார்த்து உண்மை தெரிந்து கொள்ளக்கூடாதா என்றுதான் எனக்கு இருக்கின்றது. உடல் செலுத்துவது என்பது யோசிக்க வேண்டிய விசயம். இரத்தம் ஒரே வகுப்பும் காரணியும் இல்லையென்றால் உயிர் மிஞ்சாது. இன்ன இன்ன இரத்த வகுப்புதான் இன்ன இன்ன இரத்த வகுப்புக்கு என எழுதி வைக்கப்பட்ட விதி இருக்கிறது. அதே வேளையில் உறுப்பு மாற்று சிகிச்சை சாத்தியமே என்கிறது அறிவியல்.

எனது எண்ணத்தை உங்களிடம் திணித்து என்னைப் போலவே உங்களை 100% சதவிகிதம் மாற்ற முடியாவிட்டாலும் ஓரளவு மாற்ற இயலும் என்கிறது மனோதத்துவ முறை. எனவே தனிமங்கள் மூலம் சாதிப்பது என்பது சற்று யோசிக்க வேண்டியதே. கார்பன் மோனாக்ஸைடு ரத்தத்தில் அதிக அளவில் கலந்தால் உயிர் போய்விடும். நைட்ரஜன் இரத்தத்தில் கலந்துவிட தொடங்கினால் உயிர் வலி எடுக்கும். கடலுக்கு அடியில் செல்லும் மனிதர்களுக்கு இந்த நிலை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

சித்தர்கள் வாழ்க்கை முறை சாமான்யனான எனக்கு தெரிய வாய்ப்பு இதுவரை இல்லை. கோமெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அமினோஅமிலங்கள் இருக்கிறது. ஆனால் அங்கு உயிரினங்கள் இல்லை. இங்கு இருப்பதோ இருபதே இருபது அமினோஅமிலங்கள். அதை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் சிந்தனைகள் நமக்கு ஏற்பட்டு இருக்கிறது என்பது ஆச்சரியமே. எப்படியெல்லாம் உயிரினங்கள் புரதம்தனை உருவாக்கிக் கொள்கின்றன என்பது அதிசயமே.

அதாவது நமக்கு பிரச்சினை எல்லாம் சூரியன் தான். பக்கத்தில் இருக்கும் கோள்கள் நமக்கு நன்மை பயக்கும் வகையில் தான் இருக்கின்றன என்பது எனக்குத் தெரிந்தவரை. நமது வாயு மண்டலம் பற்றி விரிவாக பார்த்தால் தெரியும். பிற கிரகங்களில் இருந்து வாயுக்கள் நமது பூமியில் நுழைகிறதா என்பது பற்றி தெரிந்து கொண்டு எழுதுகிறேன். தாவர இனங்கள் அனைத்து மூலக்கூறுகளையும் வைத்திருக்கிறது. பாம்பின் விஷம் கூட நோய்க்கு மருந்து. கொல்லப்பட்ட பாக்டீரியா, வைரஸ், விஷம் நீக்கப்பட்ட பாக்டீரியா, வைரஸ் மருந்து. எனவே விண்வெளியில் சென்று இங்கிருப்பதையே எடுத்துச் செய்வது என்பது இந்தியாவில் குக்கிராமத்தில் இருந்து காய்ச்சலுக்கு இலண்டனுக்கு வந்து ஊசிகூட போடாமல் மருந்து வாங்கிச் சாப்பிடுவது போன்றதே. இலண்டனிலாவது மருந்து கிடைக்கும் எனத் தெரிந்து வரலாம். ஆனால் விண்வெளியில் எங்கு என்ன இருக்கிறது எனப் பார்த்தால் எல்லாம் வெறுமையாக இருக்கிறது.

தலைவிதி தலைமதி - 7 பிளாசிபோ

தண்ணீர் சிகிச்சை முறை கூட ஒருவகை பிளாசிபோ தான். ஆனால் தற்போதைய ஆய்வின் படி ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடல்நலம் நன்றாக இருக்கும் என்பதால் வெறும் கற்பனை என தெரியவந்துள்ளது.

இந்த பிளாசிபோவுக்கு எனது ஆய்வுக்கூடத்தில் நடந்த ஒரு சின்ன உதாரணம். இருமலைக் கட்டுப்படுத்த ஒரு மூலக்கூறுதனை கண்டுபிடித்து இருக்கிறோம். அந்த மூலக்கூறு உண்மையிலே சிறந்ததா என கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து வருகிறோம். இதனை மேலும் உறுதிபடுத்த குவைத் நாட்டில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு என்னைச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்கள். நானும் சரி என சொன்னேன். அந்த ஆய்வகமானது இங்கு பயின்ற மாணவரால் நடத்தப்பட்டு வருகிறது. சில வாரங்கள் முன்னர் என்னிடம் அந்த ஆசிரியர் வந்து குவைத் ஆய்வகத்திற்கு தண்ணீர் மட்டும் அனுப்பி மருந்து என சொல்லி இருப்பதாகவும் வரும் முடிவு பொறுத்தே நாம் மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டும் என கூறிவிட்டார். என்னால் சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. நான் சிரித்ததும் அவரும் சிரித்துவிட்டார். இதுதான் பிளாசிபோ!

சிரிப்பாக எனக்குத்தான் இருக்கும் ஆனால் பீச்சர் எனும் ஆய்வாளருக்கு அப்படியில்லை. பீச்சர் 15 வித வித நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை கையில் எடுத்தார். அந்த 15 ஆராய்ச்சிகளை ஆராய்ந்தவர் இந்த பிளாசிபோ மூலம் 35 சதவிகிதம் தேர்ச்சி அடைந்தார்கள் என தனது ஆய்வுக்கட்டுரையில் எழுதினார். ஆனால் அதற்குப் பின்னால் நடந்த ஆராய்ச்சிகளை ஆராய்ந்தபோது பீச்சர் சொன்னதைவிட பிளாசிபோ சற்று அதிகமாகவே நோயினை தீர்த்து இருப்பதாக தெரியவந்தது. இந்த பிளாசிபோவுக்கு நோய் தீர்க்கும் ஆற்றலுண்டு என மின்னல் வேகத்தில் பல ஆராய்ச்சிகளை ஆராய ஆரம்பித்த பெருமை பீச்சர் எனும் ஆய்வாளருக்குத்தான் சேரும்.

வலி, மனநிலை பாதிப்பு போன்ற நோய்களில் 60 சதவிகிதம் பிளாசிபோவால் முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள் எனவும், மனநிலை நோயாளிகளில் மருந்துக்கும், பிளாசிபோவுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சியில் எதையுமே சரி என அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், 1997 ல் கீய்ன்லே மற்றும் கீய்ன் பீச்சர் கூறிய அனைத்து ஆராய்ச்சியையும் திரும்பவும் சரிபார்த்து பீச்சர் சொன்னது அப்பட்டமான பொய் என காட்டினார்கள். பிளாசிபோவுக்கு இங்கே என்ன வேலை என கூறி ஒரு நோயில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு வேறு சில காரணிகளும் உண்டு, அதனை கருத்தில் கொள்ளவில்லை என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

பாவ்செல் எனும் ஆய்வாளர் சொன்ன வாசகம் மிகவும் யோசிக்க வேண்டியது. பொதுவாக ஒரு நோய் தானாக, இயற்கையாக மாற்றம் கொள்ளக்கூடியது மருந்து உட்கொண்டாலும் சரி, உட்கொள்ளாவிட்டாலும் சரி, எனவே அதைக் கருத்தில் கொள்ள வேண்டும் அதை விடுத்து பிளாசிபோ நோய் தீர்க்கும் என சொல்வது விந்தையானது என கடந்த வருடம் அறிவித்து உள்ளார்.

ஒரு ஆராய்ச்சியில் பிளாசிபோவால் முன்னேற்றம் என சொன்னபோது அதுகுறித்து மற்ற ஆராய்ச்சியாளர் சொன்னது இந்த முடிவுகள் எதைத் தெரிவிக்கின்றது எனில் ஒன்று செய்முறையில் குளறுபடி இருக்க வேண்டும் அல்லது முடிவுகளை கண்மூடி எழுதி இருக்க வேண்டும். இப்படி பிளாசிபோ முன்னேற்றம் தந்ததாக கூறும் ஆய்வுகள் ஒருபக்கமும், அது கண்கட்டு விளையாட்டு என மறுபக்கமும் கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.

பிளாசிபோ என்பது மருந்து மற்றும் சிகிச்சை முறை அற்றது என அர்த்தப்படும். ஒரு ரத்தநாளம் உடைகிறது எனில் அதை நாம் கட்டி நிறுத்தினால் அது சிகிச்சை முறை. ஆனால் அதே ரத்தநாளத்தை கட்டுவது போல் கட்டி ஆனால் கட்டாமல் விட்டுவிட்டு என்ன ஆகிறது எனப் பார்ப்பது பிளாசிபோ.

பாரசிட்டமாலை தண்ணீரில் கலந்து கொடுத்தால் அது மருந்து. அது உடலில் என்ன செய்கிறது எனப் பார்ப்பது மருந்தினால் என்ன விளைவு.

பிளாசிபோ என்றால் வெறும் தண்ணீரை மருந்து கலக்காமல் தருவது. பல சிகிச்சை முறைகள் குறிப்பாக பிரார்த்தனை கூட பிளாசிபோ வகையில் சாரும்.

மருந்து ஒன்றைத் தராமல், நோய் தீர்க்கும் மருந்து தந்திருக்கிறேன், சரியாகிவிடும் என மனதில் நம்பிக்கையை விதைக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் நோயாளியும் மருந்து உட்கொள்வதால் நோய் குணமாகிவிட வாய்ப்பு இருக்கிறது. எல்லாம் மனதில்தான் இருக்கிறது என்கிறார்கள்.

நமக்கு என்ன நடக்கப்போகிறது எனும் நம்பிக்கையே நோய் தீர்க்கும் மருந்து என்கிறார் கிர்ஸ்ச். இவர் பல ஆராய்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தபின்னர் சொன்ன முடிவு இது. ஒரு மனிதனின் நம்பிக்கை நமது உடலில் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தவல்லவை எனவும் மனிதனின் எண்ணம் நரம்பியல் மற்றும் உயிர்வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையே என்கிறார்கள்.

இதைத்தானே ஆன்மிகமும் சொல்கிறது, அப்படியெனில் ஆன்மிகமும் அறிவியலும் வேறு என எப்படி சொல்லலாம் என்றால் அறிவியல் விளக்கம் சொல்லப்பார்க்கிறது, ஆன்மிகம் விளக்கம் தேவையில்லை என்கிறது அதனால்தான் இரண்டும் வெவ்வேறு. இந்த மனநிலைதான் பிளாசிபோ ஏற்படுத்தும் முன்னேற்றத்திற்கான காரணம் என நம்பப்படுகிறது. ஒருவரிடம் பிளாசிபோவை தந்து அதிக சக்தி வாய்ந்த மருந்தை தந்திருக்கிறேன் என சொல்லி அவரது நோய் குணமான பின்னர் அவரிடம் நான் தந்தது பிளாசிபோ என சொன்னால் அவர் எல்லாம் மனதில்தான் இருக்கிறது என்று நினைக்கக்கூடும் அல்லவா! ஆனால் இந்த மனநிலைதான் ஒட்டுமொத்த காரணம் என சொல்லிவிடமுடியாது என்கிறார்கள் பலர்.

நமது எண்ணம் நமது உடலில் ஓடும் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை வேண்டும் என்கிறார்கள். சரிதான்! இதுமட்டுமல்ல காரணம், அன்பு, கருணை, உற்சாகம் போன்ற காரணிகள் அவசியம் என்கிறார்கள். இதைத்தானே ஒரு திரைப்படத்தின் மூலம் சொல்ல வந்தார்கள்.

தலைவிதி தலைமதி - 6 பிளாசிபோவும் மருந்தும்

பிளாசிபோ (placebo) வினை என்பது மருந்து மற்றும் பிற சிகிச்சை முறைகள் இல்லாமல், உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை அளவிடக்கூடியது, பார்க்கக்கூடியது ஆகும். உதாரணத்திற்கு ஜலதோசத்தை குறிப்பிடலாம். மருந்து எடுத்துக்கொண்டாலும் சரி, எடுத்துக்கொள்ளாவிட்டாலும் சரி, ஏழு நாட்களில் ஜலதோசம் குணமாகிவிடும் என சொல்வார்கள். ஒரு மருத்துவரை அவர் கைராசிக்காரர் என பலர் தங்களுக்கென ஒரு மருத்துவரைக் குறிப்பிடுவதை நாம் அறியலாம். எனக்கு இந்த அனுபவம் உண்டு.

எனது தந்தையுடன் சிறுவயதில் பயின்று பின்னர் மருத்துவத்துறைக்குச் சென்று விருதுநகரில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்த மருத்துவர் வெள்ளைச்சாமி என்பவரே நான் குறிப்பிடப்போகும் மருத்துவர். காய்ச்சல் என வந்துவிட்டால் அவரிடம் ஓடிச் சென்று ஒரு பென்சிலின் கேட்டுப் போட்டுக்கொள்வதுண்டு. முதலில் பென்சிலின் அலர்ஜி இருக்கிறதா என ஆராய்ந்துவிட்டு தொடர்ந்து பென்சிலின் மறுக்காமல் போட்டுவிடுவார். காய்ச்சல் ஒரு வருடத்திற்கு எட்டிப் பார்க்காது.

1993 என நினைக்கின்றேன். நான் மதுரை கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டு இருந்தபோது 'தண்ணீர் சிகிச்சை முறை' என தினமும் காலையில் பல் துலக்கியதும் 500 மில்லி லிட்டருக்கு மேல் தண்ணீர் குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்வது வழக்கம். இந்த சிகிச்சை முறையை ஆரம்பித்து ஒரு மாதம் இருக்கும். திடீரென ஒருநாள் காய்ச்சல் வந்துவிட்டது. அங்கே இருந்த ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு பென்சிலின் போடுங்கள் என கேட்டபோது, நான் ஸ்டெப்ட்ரோமைசின் தான் போடுவேன் என மறுத்துவிட்டார். இரண்டு தினங்களாக அதே மருந்தை போட்டும் பலனில்லை. மூன்றாவது நாள் மாதத் தேர்வு. நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எனது கல்லூரி ஒரு பள்ளியை போல் செயல்பட்டது, நான் அகில இந்திய அளவில் நடந்த தேர்வில் வெற்றி பெற உதவியது எனலாம். மாதத் தேர்வு எழுதவில்லை என நினைக்கின்றேன்.

விடுதி காப்பாளர் என்னை ஊருக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். 'பார்மகாலஜி' தேர்வு ஆதலால் பார்மகாலஜி ஆசிரியரிடம் கூறிவிட்டு அன்றே வெள்ளைச்சாமி மருத்துவரை அணுகினேன், விபரங்கள் கூறினேன். 'பென்சிலின் வேண்டாம், இரத்த பரிசோதனைக்கு சென்று வா' என அனுப்பினார். இரத்த பரிசோதனை முடிவில் டைபாய்ட் என தெரிய வந்தது. டைபாய்டோ இருக்குமோ எனும் அச்சமே நான் உன்னை அனுப்பியதன் காரணம் என ஆருடம் சொன்னார்.

கவலைப்படாதே, சரியாகிவிடும் என குளோரம்பெனிக்கால் மாத்திரைகளை எழுதி தந்தார். நம்பிக்கையுடன் அந்த மருந்துகளை உட்கொண்ட பின்னர், பத்து நாட்கள் பின்னரே குணமாகும் டைபாய்ட் நான்கே நாட்களில் குணமாகியது. குணமான அடுத்த தினமே கல்லூரிக்குச் சென்றேன், நண்பர்கள் ஆச்சரியப்பட்டனர். 'பார்மகாலஜி' ஆசிரியர் நீ பாடம் படித்தே உனக்கு நோய் விரைவில் குணமாகிவிட்டது என நகைச்சுவையாய் சொன்னார்.

ம் பாடம் படிப்பது? அன்றெல்லாம் கந்த சஷ்டி கவசம் அல்லவா தினமும் மனனமாய் படிப்பேன். மனன சக்தியை அதிகமாக்கிட உதவியது கந்த சஷ்டி கவசம் என்றால் மிகையில்லை. ஒரு வார்த்தை இடறினாலும் 'முருகா' என நினைப்பதுண்டு. இப்பொழுது ஒருவித அசட்டுத்தன்மை இருக்கிறது. ஆக அந்த வெள்ளைச்சாமி மருத்துவர் எனக்கு நோய் தீர்த்து வைப்பவராகவே தெரிந்தார். இப்பொழுதெல்லாம் ஒரு 'பாரஸிட்டமால்' நோய் தீர்க்கும் மருத்துவராக தெரிகிறது.

இப்படி பிளாசிபோ வினையை பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கி வைத்தார்.

'மருத்துவர் தான் மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் வைத்திருக்கும் நம்பிக்கையும், நோயாளி அந்த மருத்துவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்துகிறது, இந்த பரஸ்பர நம்பிக்கை தரும் முடிவு ஒரு சக்தி வாய்ந்த சிகிச்சை முறையை உருவாக்குகிறது மட்டுமின்றி நோயினில் நல்ல முன்னேற்றமும் அந்த நோயை தீர்த்துவிடவும் உதவுகின்றது' - பிடர் ஸ்காரபேனக், ஜேம்ஸ் மெக்கார்மிக்.

பிளாசிபோ குறித்து இனி பார்ப்போம்.

Thursday 12 February 2009

தலைவிதி தலைமதி - 5 பிரார்த்தனையும் நோயும்

இந்த ஆராய்ச்சி முடிவு வந்தவுடன் இதுகுறித்து என்னவெல்லாம் ஆராய்ச்சி வந்திருக்கிறது என அறிவியல் கட்டுரைகள் எல்லாம் தேடிப்பார்த்ததில் மூன்று கட்டுரைகள் மட்டுமே வெளிவந்து இருந்ததை அறிய முடிந்தது என்கிறார் ஸ்டீபென் பேரட். அந்த ஆராய்ச்சியானது பிரார்த்தனைகளினால் மக்களிடம் என்ன மாறுபாடு இருந்தது என கண்டறிய செய்யப்பட்ட ஆராய்ச்சி, அந்த மக்களுக்கு பிரார்த்தனை செய்வது பற்றி தெரியாமல் இருக்குமாறு வைக்கப்பட்ட ஆராய்ச்சி என்கிறார்.

இதில் ஒரு ஆராய்ச்சி பிரார்த்தனையினால் பலன் இருக்கிறது என சொன்னது ஆனால் செய்முறை முறையாக செயல்படுத்தவில்லை எனவும், மற்றொரு ஆராய்ச்சி பலன் இல்லை ஆனால் செய்முறை மிகவும் முறையாக செயல்படுத்தப்பட்டது எனவும் மற்ற ஆராய்ச்சி அத்தனை தெளிவாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

பல ஆராய்ச்சி நூல் வெளியீட்டாளர்களையும், வாசகர்களையும் இது குறித்த ஆராய்ச்சி பற்றி ஏதேனும் மறுத்து இருக்கிறீர்களா, எத்தனை ஆராய்ச்சி கட்டுரை வெளியிட கோரி வந்தது என விசாரித்தபோது ஒருத்தரும் பதில் சொல்லவில்லை. அதற்கு பின்னர் தேடிப்பார்த்தபோது நான்கு ஆராய்ச்சி கட்டுரை வெளிவந்ததில் இரண்டு பலனிருப்பதாகவும், இரண்டு பலனில்லை எனவும் வந்ததாக குறிப்பிடுகிறார். இங்கேதான் இந்த அறிவியலும் அறியாமையில் தவிக்கிறது! நம்பிக்கையாளர்கள் என்ன சொல்வார்கள்? நம்பிக்கையற்றவர்கள் என்ன சொல்வார்க்ள்? உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

பைர்ட் ஆராய்ச்சி பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆராய்ச்சியாளரின் முடிவு நியாயமற்றது என்றார். வேறோரு பயம், மனநிலை மாற்றம் ஆராய்ச்சி பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதில் பன்னிரண்டு வாரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் நோயாளிகளுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது. மற்றொரு பிரிவுக்கு பிரார்த்தனை செய்யப்படவில்லை. இந்த ஆராய்ச்சி முடிவில் அனைத்து பிரிவுமே முன்னேற்றம் கண்டது, இந்த இரண்டு பிரிவிலும் மாறுபாடு இல்லை எனவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் ஆல்கஹால் குடிப்பழக்கத்தில் பிரார்த்தனை எந்த மாற்றம் செய்யவில்லை என மற்றொரு ஆராய்ச்சி கட்டுரையை மேற்கோள் காட்டி உள்ளார்.

1999ல் வெளியிடப்பட்ட கான்ஸாஸ் நகரத்தில் நடந்த இருதய ஆராய்ச்சியானது மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டது என குறிப்பிட்ட அவர் அவர்கள் வெளியிட்ட பிரார்த்தனையினால் முன்னேற்றம் உள்ளது எனும் முடிவினை ஏற்றுக்கொள்ள முடியாது என கடுமையாக விமர்சித்துள்ளார். கணக்கியலில் 11 சதவிகிதம் முக்கியத்துவமாக இருக்கலாம், ஆனால் மருத்துவ முறையில் இது ஒன்றுமே இல்லை என்பதுதான் இவரது வாதம்.

2001ல் மாயோ ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட பிரார்த்தனையினால் எந்த முன்னேற்றம் இல்லை எனும் இருதயப்பிரிவு ஆராய்ச்சியை குறிப்பிட்டுள்ளார். பேரட் சொன்ன வார்த்தை இதுதான்

''மேலும் இது போன்ற பல ஆராய்ச்சிகள் எதிர்மறையான முடிவினை தந்தாலும் நம்பிக்கையாளர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளப்போவதில்லை, அதேபோன்று மேலும் இதுபோன்ற பல ஆராய்ச்சிகள் நேர்மறையான முடிவுகள் தந்தாலும் நம்பிக்கையற்றவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளபோவதில்லை''

தலைவிதி தலைமதி - 4 பிரார்த்தனை நோய் தீர்க்குமா?

பிரார்த்தனையினால் நோயினால் என்ன மாற்றம் ஏற்படுகிறது என கண்டறிய ரேண்டோல்ப் பைர்ட் எனும் இருதயப்பிரிவு மருத்துவர் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டார். 393 இருதய நோயாளிகளை அவர்களின் அனுமதியுடன் சான்பிரான்ஸிஸ்கோ மருத்துவமனையில் உள்ள இருதயப்பிரிவில் ஆகஸ்ட் 1982லிருந்து மே 1983 வரை அனுமதித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.

ஆராய்ச்சியில் பல விதம் உண்டு. தரப்படும் மருந்து,

அ) கொடுப்பவருக்கும், சாப்பிடுபவருக்கும் தெரியும்.

ஆ) இருவரில் ஒருவருக்கு மட்டுமே தெரியும்

இ) எவருக்குமே தெரியாது (இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத ஒருவருக்கு மட்டுமேத் தெரியும்)

மேலும் தோராயமாக நோயாளிகளைப் பிரிப்பது. அதாவது நோயின் சீற்றம் அறிந்து பிரிக்காமல் தோராயமாக பிரித்து ஆராய்ச்சி மேற்கொள்வது.

பைர்ட் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தோராயாக நோயாளிகளைப் பிரித்து, பிரார்த்தனைக்கு உட்படுத்தப்பட்ட பிரிவு (192 நோயாளிகள்), பிரார்த்தனைக்கு உட்படுத்தாத பிரிவு (201 நோயாளிகள்) என பிரிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் இருக்கும் எவருக்கும். பைர்ட்டுக்கும் கூட யார் யார் எந்த பிரிவென தெரியாது. பிரார்த்தனைக்கு உட்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள நோயாளி ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவத்தில் தன்னை அர்பணித்துக்கொண்ட மூன்றிலிருந்து ஏழு நபர்கள் மருத்துவமனை வெளியில் தினமும் கிறிஸ்துவிடம் பிரார்த்தனை செய்வது என நியமிக்கப்பட்டார்கள். பைர்ட் தனது ஆராய்ச்சி முடிவினை ஐந்து ஆண்டுகள் பின்னர் 1988-ல் வெளியிட்டார். அந்த ஆராய்ச்சி முடிவு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அப்படி பைர்ட் என்னதான் முடிவினை வெளியிட்டார் என்றால் பிரார்த்தனைகளினால் நோய் தீர்வதில் முன்னேற்றம் இருக்கிறது என்று கூறினார். உடனே இது குறித்து விமர்சனம் எழுதினார் போஸ்னர் எனும் ஆராய்ச்சியாளர். கடவுள் இருதயப்பிரிவு பகுதியில் இருக்கிறாரா? எனும் தலைப்பிட்டார். பைர்ட் செய்த ஆராய்ச்சியில் பிழை இருக்கிறது என்றார். மேலும் பைர்ட் குறிப்பிட்டதையே ஆதாரமாக காட்டினார்.

பைர்ட் சொன்னது இது

'இரு பிரிவிலும் உள்ள நோயாளிகளுக்கும் பலர் பிரார்த்தனை செய்து இருப்பார்கள், அதனை கட்டுபடுத்த இயலாது மேலும் அவர்கள் இந்த ஆராய்ச்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் எனவே இந்த இரு பிரிவையும் சுத்தமான பிரிவுகளாக கணக்கில் கொள்ள முடியாது'

இதை எடுத்துக்காட்டினார் போஸ்னர். மேலும் பைர்ட் இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட எடுத்துக்கொண்ட காலகட்டம் ஆராய்ச்சிக்குப் பின் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள். பல மருத்துவ இதழ்கள் வெளியிட மறுத்து இருக்கக்கூடும், அதன் பின்னரே பைபிள் கூட்டம் அதிகமுள்ள பகுதிக்கு சொந்தமான இதழ் வெளியிட சம்மதித்துள்ளது என்பதை பைர்ட் மூலமாகவே நிரூபித்தார். இது போன்ற ஆராய்ச்சி வெளியீடு வருவதில் தவறில்லை, ஆனால் தவறான நோக்கம் கற்பிக்கப்படுகிறது என மிகவும் வன்மையாகவே கண்டித்தார். பைர்ட் முடிவுகளை விமர்சித்து பைர்ட் ஆராய்ச்சி அடிப்படையற்றது என்றும் கூறினார். பைர்ட் ஆராய்ச்சி முடிவுகளை பார்த்தபோது அப்படித்தான் இருந்தது. பைர்ட் தான் வெளியிட்ட கட்டுரைக்கு குறிப்பிட்ட தகவல் ஆராய்ச்சிகள் எல்லாம் பிழை என்றும் போஸ்னர் நிரூபித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டீபென் பேரட் என்பவர் சற்று ஒருபடி மேலே போய் 'நம்பிக்கை அடிப்படையில் நோய் தீர்வு பற்றி சில எண்ணங்கள்' என ஒரு கட்டுரை எழுதினார். அதில் பிரார்த்தனைகள் பற்றியும் சற்று குறிப்பிட்டுள்ளார், அதில் பைர்ட் ஆராய்ச்சியும் அடக்கம்!

தலைவிதி தலைமதி - 3

ஈர்ப்பு விசையும் மனவிசையும்:

எல்லா கோள்களும் அதன் பாதையில் ஒழுங்காகப் போய்க்கொண்டிருக்கக்கூடிய காரணம் ஈர்ப்பு விசையும் அதனுடன் கூடிய இயக்க விசையும். எப்பொழுது ஈர்ப்புவிசையை சமநிலைப்படுத்தும் இயக்க விசை இல்லாமல் போகிறதோ அப்பொழுது கோள்கள் தடம் மாறிப் போகும். இதனை பல விண்கற்கள் இடம் மாறுவதன் மூலம் அறியலாம். சிறு துகள்களும் இந்த 'விதி'க்கு உட்படுகிறது.

இன்னதுதான் நடக்கும் என ஒரு விசயத்தை இருக்கும் பொருள் கொண்டே ஒருவர் கணித்துச் சொல்ல முடியும், இல்லாத ஒன்றை வைத்து கணித்துச் சொல்ல முடியாது. இதனால்தான் இது நடக்கும் எனும் விசயங்களுக்கு இரண்டில் ஒன்றுதான் நடக்க வாய்ப்பு உள்ளது. ஒன்று நடக்கும், மற்றொன்று நடக்காது. நடந்தால் அட நடந்துவிட்டதே என சொல்லலாம், நடக்கவில்லையெனில் நம்ம கையிலா இருக்கிறது என சொல்லலாம்.

அறிவியல் கொள்கைகள் என்பது ஒன்றும் விளக்கத்தின் எல்லைக்கோடு அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். எல்லாம் நம்மைப் போன்ற மனிதர்கள் சிந்தனை செய்ததின் பொருட்டு வந்த விசயங்கள் அவை. இப்படி இருந்து இருக்கலாம் என சொல்ல முடியுமே தவிர பல விசயங்களை அறிவியல் நிரூபிக்க முடியாது, அப்படி கடந்த கால விசயத்தை நிரூபிக்கும் பொருட்டு நிகழ்கால நிலையில் இருந்து பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்க்கும் பார்வை இன்றைய நிலைக்கு சரியென வருமே தவிர என்றைக்குமே அது சரியென வராது.

நமது மூளையில் சில விசயங்கள் திணிக்கப்பட்டு விடுகின்றன, நம்மை நாம் அறியாமல் சில விசயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்கிறோம், அவர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலைதான் அறிவியல் கொள்கைகளின் நிலை.

ஆன்மிகவாதிகள் இயற்கை என ஒதுக்கப்படும் விசயங்களை இறை என சொல்லவில்லை என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். எல்லாமே இறை என்பதுதான் அவர்களது கோட்பாடு. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதுதான் அசைக்கமுடியாத கோட்பாடு, அப்படித்தான் ஆன்மிகம் அறிவியலை சர்வ சாதாரணமாக வெற்றி கொண்டுவிடுகிறது. அந்த வகையில் பார்த்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட ஆன்மிகத்துக்கு உட்பட்டவையே என்பதுதான் முக்கியமாக குறித்துக்கொள்ள வேண்டிய விசயம்.

துகள்களாகவும் தூசியாகவும் இருந்துதான் மனிதனாக வந்து இருக்கிறோம் என்கிறது அறிவியல்! இதே பெரிய அற்புதம்தான். நம்பிக்கை கொண்டு இருப்பவர்களுக்கு மகான்களாய் மனிதர்கள் அற்புதங்கள் செய்ததாக கருத வாய்ப்புண்டு, நம்பிக்கை அற்றவர்களுக்கு அப்படி என்ன அற்புதங்கள் செய்து விட்டதாக நினைக்கிறீர்கள் என கேட்க வழியுண்டு. சகல ஜீவராசிகளிலும் அன்பு கொண்டு இருங்கள் என ஒருவர் சொல்ல அப்பொழுது உங்களுக்கு ஒரு ஈடுபாடு வருகிறது. இப்படியும் நடக்கும் அப்படியும் நடக்கும் எனும் செயல்பாடுகளில் இப்படியே நடக்கிறது என வரும்பொழுது மனம் அதில் லயிக்கிறது. அப்படியே நடக்கும் என ஒரு முறை வந்தாலும் மனம் சஞ்சலம் அடைகிறது.

என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு மனிதரும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் பொருட்டே பல விசயங்களை உற்று நோக்க மறந்துவிடுகிறார்கள் அதில் நானும் அடக்கம். நம்பிக்கை என வரும்போது பல விசயங்கள் மறைந்து கொள்கின்றன, ஏற்றுக்கொள்ளப்படாமல் உதாசீனப்படுத்தப்படுகின்றன. மேலும் மகான்கள் அற்புதம் செய்ததாக எனக்கு எப்பொழுதும் உடன்பாடு இல்லை, இது எல்லாம் தவறுதலாக கற்பிக்கப்பட்ட விசயம்.

ஒரு விசயத்தில் ஈடுபாடு கொள்ளும் மக்கள் அதனை தங்களால் தனிப்பட்ட முறையில் செய்யாமல் போகமுடியாத போது, ஒருவரை தலைமையாக ஏற்றுக்கொண்டு அவரைப் போற்றுதல் எனும் முறைதான் இருந்ததே தவிர தனிப்பட்ட முறையில் பெரும் மாற்றம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பதை நீங்கள் கண்கூடாக காணலாம். எனவே மகான்களால் பெரும் அளவில் பூமியில் மாற்றம் நிகழ்ந்ததாக எனக்கு ஒன்றும் இதுவரைக்கும் தெரியவில்லை.

நம்பிக்கையாளர்கள் என்னை மன்னிக்கவும்! தெரிந்து கொண்டதாய் எண்ணும்போதே அறியாமை முன்னின்று வந்துவிடுவதை அத்தனை எளிதாக தவிர்க்க இயலவில்லைதான்!

Wednesday 11 February 2009

தலைவிதி - 2

கவனக்குறைவு:

ஒருவிசயம் நடந்துவிட்டது. அது நமக்கு எதிராகப் போய்விட்டது என வைத்துக்கொள்வோம். நம்மை ஏளனமாகப் பேசுபவர்கள் உண்டு, நம்மைத் தட்டிக்கொடுக்கும் மனிதர்களும் உண்டு. இப்படி எதிராக ஏன் ஒரு விசயம் போகவேண்டும் எனப் பார்த்தால் அதற்கெல்லாம் காரணம் கற்பிப்பது ஒரு கண்மூடிய விளையாட்டாகத்தான் இருக்கும். இது போன்ற செயல்களை பார்த்து பார்த்து சலித்துப் போன மானுடம் விதி வலியது என்று கூறிவிட்டுப் போகும், பாவம் என பரிதாபமாய் எளக்காரப் பார்வை பார்த்துவிட்டுப் போகும்.

அடிப்படை காரணம் கவனக்குறைவு. இந்த நேரத்தில் ஏன் நடக்க வேண்டும் என கேட்டால் அது அப்படித்தான் நடக்கும். அப்படித்தான் நடக்கும் எனும் அந்த சமயத்தில் சமயோசிதமாக செயல்படுவதுதான் ஒரு சாதாரண மனிதரை சாதனை மனிதராக மாற்றும்.

மனம் புண்படும்படி பேசும் மானுடம் வாழும் உலகில் எண்ணங்கள் உருக்குலைந்து போகும். புத்தரின் எனது அனுமதியின்றி என்னை யாரும் நிந்திக்கமுடியாது எனும் கொள்கையை உறுதியாக பற்றிக்கொண்டால் வாழ்வில் பல சாதிக்கலாம்.

என்னதான் வியாக்கியானம் பேசினாலும் போனது போனதுதான், அதைப்பற்றி சிந்தித்து பயனில்லை எனும் பக்குவம் வருவது அத்தனை எளிதல்ல. நாம் அடுத்தவரைப் பார்க்கும் பரிதாபப் பார்வையில் அவர்களுக்கு இருக்கும் சிறிது தன்னம்பிக்கையையும் தகர்த்தெறிகிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

மகாகவி பாரதியாரின் ஒரு அழகிய கவிதை இது

சென்றதினி மீளாது மூடரே! நீவீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

இந்த புனித உலகில் நம்மை நாமே அழித்துக்கொள்வதுதான் பெரிய கொடுமையான செயல். கோப்மேயரின் எண்ணங்களை மேம்படுத்துவோம் எனும் புத்தகமும், விவேகாநந்தரின் என்ன நீ நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய் எனும் அழகிய தத்துவமும் அறிவியல் உலகை ஆட்டி வைக்கும். மனரீதியாக பலவிசயங்களை யாராலும் புரிந்து விளங்கிக்கொள்ள முடியாத பட்சத்தில் அறிவியல் சற்று விலகி நின்று அசைபோடும், அப்படிப்பட்ட அந்த புரிந்துகொள்ள முடியாத விசயத்துக்கெல்லாம் வடிகால் தான் ஆன்மிகம். நமக்குத் தேவை நிம்மதி, எது எப்படி இருந்தால் என்ன?

நலிந்தோர்க்கு நாளும் கோளும் இல்லை என்பதை எழுதியவர் யார்? எனக்குத் தெரியவில்லை. ஒரு தனிப்பட்ட மனிதனின் சிந்தனை எப்பொழுது மொத்த சமூகத்தை ஆட்டிப்படைக்கிறதோ, ஒரு தனிப்பட்ட மனிதனின் செயல்பாடு எப்பொழுது மொத்த சமூகத்தையும் தன் வசப்படுத்துகிறதோ அப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டியதுதான் அந்த சிந்தனை, செயல்பாடு எத்தனை வலிமையானது என. மொத்த சமூகம் என நான் குறிப்பிடும்பொழுதே நாம் குறித்துக்கொள்ள வேண்டியது, அந்த சமூகத்தில் இதே சிந்தனை செயல்பாட்டினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் உளர் என.

சிரமம் என்பது இவருக்குத்தான் வரும், இவருக்குத்தான் வரக்கூடாது என கட்டம் பார்த்து வருவதில்லை, அதைத்தான் நன்றும் தீதும் பிறர்தர வாரா என நறுக்கெனச் சொல்லியிருக்கிறார்கள். எந்த ஒரு எண்ணமும் நடுநிலையில் நின்று விவாதிக்கப்படுவது இல்லை, சொல்லப்பட்ட விசயங்கள் எல்லாம் ஒவ்வொன்றுக்கும் முரண்பாடானவைகள் என்பதை வைத்தே நாம் ஒரு தெளிவற்ற சமுதாயம் என நம்மை கருத வாய்ப்புண்டு.

ஒரு தெளிவான சமுதாயமாக இருந்து இருந்தால் சூரியனை வணங்கியதோடு காற்று, நெருப்பு, நிலம், நீர் என வணங்கி அத்துடன் நிறுத்தியிருக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு 'விண்டவர் கண்டில்லை கண்டவர் விண்டில்லை' எனச் சொன்னால் அது சரிதான் என போக வேண்டியதுதான்.

நான் மகிழ்ச்சியாக இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் எனச் சொன்னால் அது சரிதான் என சிரித்துக்கொள்வேனேத் தவிர அது குறித்து ஆராயப்போவது இல்லை. நமது மனதில் ஒருவித திட்டம் வகுத்து வைத்துக்கொள்கிறோம். இது மரபியல் வாயிலாகவோ, சுற்றுப்புற காரணிகளாகவோ நம்மிடம் ஒரு வட்டம் வரைந்து கொள்ளப்பட்டு விடுகிறது.

அந்த வட்டத்திற்கு உள்ளே வருபவர்கள் வேண்டியவர்கள், வட்டத்திற்கு வெளியே இருப்பவர்கள் வேண்டாதவர்கள். 'சே உன்னைப் போய் இப்படி நினைச்சேனே' என நீங்கள் ஒருவரிடமும் சொல்லாமல் இருந்து இருப்பீர்களானேயானால் நீங்கள் செய்த பாக்கியம், உங்கள் வட்டம் மிகப்பெரியது அதில் அனைத்து கட்டங்களும் அடங்கும்.

உள்ளுணர்வு :

இது ஒரு மெய்யில் கலங்கிய பொய்மையான உணர்வு. என்னைப் பொறுத்தவரை இது இல்லையெனில் அது. அவ்வளவே. நான் நினைச்சிட்டே இருந்தேன் நீங்க வந்துட்டீங்க, அப்படியெனில் நினைத்தபோதெல்லாம் அவர் வந்தாரா? அவர் வந்த சமயத்தில் எல்லாம் நீங்கள் நினைத்ததுண்டா? நமது மூளை ஒரு விநாடியில் எண்ணற்ற செயல்பாடுகளை பரிசீலிக்கும். மூளையை பற்றி பலர் ஆராய்ச்சி செய்து எழுதிய கருத்துக்களில் கூட வாசிக்கும் பலருக்கு உடன்பாடில்லை. ஒவ்வொருவரின் எண்ண ஓட்டம் வேறு, இந்த கோணத்தில் சிந்தித்துப் பார், எனது நிலையில் நின்று பார் என்பதெல்லாம் இதன் அடிப்படையே.

யாராவது நம்மை கவனிக்கிறார்கள் என நினைக்கும்போதே நாம் நமது எண்ணத்திற்கு விரோதமாக செயல்படுகிறோம் என நினைக்க வேண்டி இருக்கும். உங்களுக்குத் தெரியாத ஒருவர் உங்களை கவனிக்கிறார் என உங்கள் உள்ளுணர்வு சொல்லுமா? அமெரிக்காவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மனிதர் என்னை கவனிக்கிறார் என உள்ளுணர்வு சொல்லப் போகிறதா? இது எல்லாம் மூளையின் சுட்டித்தனம்.

அடடா நான் நினைச்ச மாதிரி நடந்துருச்சே என்பதெல்லாம் மூளையின் இல்லாத ஒன்றை இருப்பதாய் படம் காட்டும் வேலை. அறிவியல் அப்படித்தான் சொல்கிறது. ஆன்மிகம் அமைதியாய் இரு என்கிறது.

பின் குறிப்பு:இதை செய்ய வேண்டாம் என நினைத்துக்கொண்டே இருந்தேன், ஆனால் அதை செய்துவிட்டேன். இதுதான் விதியோ? என நினைப்போர்களே, உங்களிடம் கட்டுப்பாடு இல்லை என்பதை கடவுள் வந்தா சொல்லித் தெரிய வேண்டும்.

தலைவிதி - 1

தலைவிதி :

சுருக்கமாகச் சொல்லப்போனால் எப்பொழுது தனிமனிதன் தன்னால் அனைத்து செயல்களையும் தனது கட்டுப்பாட்டுக் கொண்டுவர முடியாமல் தவித்தானோ அப்பொழுது அவனது மனதில் உதித்த எண்ணம்தான் தலைவிதி. எந்த ஒரு செயலுக்கும் காரணம் கற்பிக்க வேண்டும் என எப்பொழுது அவனது மனதில் தோன்றியதோ அப்பொழுது இடப்பட்ட விதைதான் தலைவிதி. ஒன்றைச் சார்ந்தே ஒன்று நடக்கின்றன என்னும் தத்துவமே இதன் அடிப்படை.

இதனால் என்ன நன்மை தீமை? நன்மை என எடுத்துக்கொண்டால் நடப்பது நமது கையில் இல்லை, அதனால் மனம் உடைந்து போய்விட வேண்டாம் என இதற்கு அதிபதியான இறைவனை துணைக்கு வைத்துக்கொண்டு அடுத்த அடுத்த காரியங்களில் இறங்கிவிடுவது. தீமை என்னவெனில் நமக்கு விதித்தது இவ்வளவுதான் என முடங்கிப்போய்விடுவது.

தலைவிதியை நிர்ணயம் செய்வது யார்? நாம். நமது செயலை நம்மால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும். நம்மை மீறி ஒன்று நடக்கிறது என்ற பிரமையை அகற்ற வேண்டும். அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகிறது என நமக்குத் தெரியாது என்பது சாதாரணமாக நடக்கக்கூடியதே அதை நாம் பக்குவமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது செயல்களை முறைப்படுத்திட சுற்றுப்புற காரணிகள் மற்றும் நமது உடலில் ஓடுகின்ற ரசாயனங்கள் இதையெல்லாம் தாண்டிய எண்ணங்கள் மிகவும் முக்கியம். எனவே தலைவிதி என்பது நமக்கு நாமே விதித்துக்கொண்டது.

மரபியல் தத்துவமும் மூளையின் செயல்பாடும்:

மரபணுக்கள் மட்டுமே ஒரு மனிதருடைய குணாதிசயங்களை நிர்ணயித்துவிடுவதில்லை. மூளையின் செயல்பாடு மிகவும் முக்கியம். எப்பொழுது ஒரு மனிதன் எண்ண ஆரம்பித்தானோ அப்பொழுதே அவனது செயல்களில் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. மரபணுக்கள் ஆதியிலிருந்து அத்தனை மாறுபாட்டை ஒன்றும் அடையவில்லை, ஆனால் மூளையில் பல மாறுபாடுகள் அடைந்து இருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட மாறுபாடு மனிதனை இன்று இந்த அளவிற்கு சிந்திக்க வைத்து உள்ளது.

நாம் ஒருவரை பார்த்ததும் அட என்போம், மற்றொருவரை பார்க்கும் போது ம்ஹும் என்போம், இதற்கு காரணம் நமது மனதில் தோன்றும் எண்ணமே. சற்று நமது எண்ணங்களை பரிசீலித்தால் இருவருமே அட ஆவதற்கு சாத்தியம் உண்டு. மகிழ்ச்சி நமது மனதைப் பொருத்ததே என்பதுதான் எல்லா ஆன்மிக கோட்பாடுகளுக்கும் அடிப்படை.

அறிவியலும் ஆன்மிகமும்:

இரண்டும் ஒன்று என்பார் பலர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எப்பொழுது ஒன்று தனித்தனியாக பிரிகிறதோ அப்பொழுதே அது தனது தனித்தன்மையை காட்ட வேண்டும்.

இதைப்பற்றி விரிவாக தொடர்வோம். நீங்களும் தொடருங்கள். ஒவ்வொரு விசயங்களாக எனக்குத் தெரிந்தவரை எழுதுகிறேன், கற்றுக்கொள்ளும் முயற்சியே அன்றி கற்றுக்கொடுக்கும் முயற்சி அல்ல என்பதை மிகவும் தெளிவாக கூறிவிடுகிறேன்.