Tuesday 23 October 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 6

முன்பகுதி 

மாணிக்கவாசகர் முக்காலத்தை அறிந்து இருந்தாரா என்பதற்கான சான்றுகள் கிடைப்பதற்கு அரியதாகவே இருக்கிறது. ஆனால் முனிவர்கள் அனைவரும் முக்காலமும் அறிந்தவர்களாகவே காட்டப்பட்டு வருகின்றனர்.

இதற்காக ஒரு கதை கூட சொல்லப்பட்டு இருக்கிறது. பிருகு முனிவர் மிகவும் ஆணவம் கொண்டவர் என்றே கருதப்படுகிறது. இவ்வுலகை ஆட்டிப்படைக்கும் பிரம்மா, சிவன், விஷ்ணு என மூவரும் இவருக்கும் கீழேதான் எனும் மமதை இவருக்கு மிகவும் அதிகமாகவே உண்டு. முன்னொரு காலத்தில் எல்லாம் கற்றறிந்தவர்கள் பெரும் மதிப்புக்கு உரியவர்களாகவே போற்றப்பட்டு வந்தனர். அதன் காரணத்தில் முனிவர்கள், சித்தர்கள் போன்றோர்கள் எல்லாம் கடவுளர்களால் போற்றப்பட்டு வந்தார்கள்.

புராணங்களில் கூறப்பட்டவை புரட்டுகள் என்றே வைத்துக் கொண்டாலும் எழுதப்பட்ட விசயங்கள் எல்லாம் மிகவும் ஆச்சரியமும், அதே வேளையில் சுவராஸ்யமாகவும் இருப்பதை எவரும் மறுக்க இயலாது. எள்ளலுக்கு உட்படும் புராணங்கள் எனினும் எழுதப்பட்டவைகளை மாற்றி அமைத்தல் என்பதும், திரித்து கூறுதல் என்பதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

மகாபாராதம் என சொல்லப்படும் இதிகாசம் இந்தியாவின் வரலாறு என்றே குறிப்பிடப்படுகிறது. அஸ்தினாபுரம் என்ற ஒரு இடம் இருந்ததாக, இருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இறந்த காலத்தை தோண்டி எடுக்கும் திறன் அகழ்வாரய்ச்சியாலர்களுக்கு நிறையவே உண்டு. படிமங்களை கொண்டு இறந்த காலம் உணரும் திறனை அவர்கள் வளர்த்து கொண்டார்கள் என்பது போல ஒரு தோற்றம் இருக்கத்தான் செய்கிறது.

கடவுளர்களால் போற்றப்பட்ட பிருகு முனிவரின் சாபத்திற்கு ஆளாகிறார்கள் பிரமனும்,சிவனும். இவர்கள் இருவருக்கும் சாபம் இடுகிறார் பிருகு முனிவர். பிரமனுக்கு கோவில்களே இருக்காது எனவும, சிவனுக்கு லிங்க வடிவிலேதான் பூஜை எனவும் சொல்லி செல்கிறார். ஆனாலும் பிரமனுக்கு ஒரு கோவில் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய வழிபாட்டு முறையை கொண்டு அன்று பிருகு முனிவர் சொன்னது போல எழுதி இருக்க வாய்ப்பு இல்லை. அல்லது பிற்காலத்தில் பிருகு முனிவர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அதை பின்பற்றியும் இருந்து இருக்கலாம். ஆனால் இங்கே முக்காலத்தை நிர்ணயிக்கும் வல்லமை கொண்டவராகவே பிருகு முனிவர் போற்றப்படுகிறார்.

இதைவிட விசேசம் என்னவெனில் பிருகு முனிவர் விஷ்ணுவை காலால் எட்டி நெஞ்சில் உதைக்க, விஷ்ணுவோ பணிவுடன் அவருக்கு பணிவிடை செய்ய விஷ்ணுவுக்கு கோவில்கள் என்கிறார் பிருகு முனிவர். ஆனால் விஷ்ணுவின் மனைவி லட்சுமி பிருகு முனிவரின் வம்சமான பிராமணர்கள் வசதி வாய்ப்பு இன்றி போகட்டும் என சாபம் இடுகிறார். இங்கே எவர் பிராமணர் எனும் கேள்வி பெரிய கேள்வி? எவர் அந்தணர்? ஆனால் பின்னர் சற்று பரிவு கருதி முக்காலத்தை குறித்து வைக்கும் ஆற்றல் பெற்று பிராமணர்கள் அதன் மூலம் அவர்களது வாழ்வினை வளப்படுத்தட்டும் என்றே ஒரு வாய்ப்பு தருகிறார்.

அந்த வாய்ப்பை கொண்டு பிருகு முனிவர் ஒரு தனி சூத்திரங்கள் எழுதியதாக வரலாறு சொல்கிறது. பிருகு சம்ஷிடா எனப்படுவது அது. விநாயகரின் துணை கொண்டு எழுதப்பட்டதாக புராணம் சொல்கிறது. விஷ்ணு கூட முனிவர்களில் நான் பிருகு என்கிறார். இப்படி பல விசயங்ககளை தொகுத்து வைக்கிறார் பிருகு. ஆனால் அவை எல்லாம் பிற்காலத்தில் முஸ்லிம்கள் படையெடுப்பால் தொலைந்து போயின என்கிறார்கள். நாலந்தா பல்கலைகழகத்தில் பிருகு முனிவரின் எழுத்துகள் சேர்த்து வைக்கப்பட்டன என்றும் அந்த பல்கலைகழகம் அழிக்கப்பட்டதால் எல்லாம் அழிந்து போயின என்கிறார்கள். பிருகு முனிவரின் சீடர்கள் எல்லாம் சேர்ந்து இன்றைய மரபணுக்கள் எப்படி தொகுக்கப்பட்டதுவோ அது போன்று எல்லா உயிர்னங்களின் முக்காலங்களையும் தொகுத்து வைத்ததாகவே சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் தான் சோதிட கலை உருவானது என்றே சொல்கிறார்கள்.

என்ன இருந்தாலும் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்றே தெரியாமல் இருப்பதால் வாழ்வு சுவாரசியம் என்றும் சொல்வது உண்டு.

(தொடரும்)

No comments: