Saturday 9 June 2018

காலா - உலக மாற்றம் எவர் கைகளில்

கபாலி படம் பார்த்த பிறகு நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்தாகி விட்டது. பல படங்களின் பெயர்கள் கூட மறந்து விட்டது. பொதுவாக படத்தைப் பார்க்க ஆரம்பித்த அரை மணி நேரத்தில் உறங்கி விடுவது உண்டு., என்னைத் தாலாட்டும் தமிழ் படங்கள்.  அருவி, அறம் போன்ற படங்கள் சமூகத்தில் சில விசயங்களை மாற்ற வேண்டும் என மிகவும் தைரியமாகச் சொன்ன படம். இதை விட இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் படம் எல்லாம் அதீத தைரியம்தான். சமூகப் பிரச்சினைகள் ஒருபுறம், காமம் சார்ந்த விசயங்கள் எல்லாம் ஒரு புறம். படைப்பாளி சமூகத்திற்கு ஏதேனும் சொல்ல வேண்டும் என துடிதுடித்துக் கொண்டு இருக்கிறான்.

காலா படத்தைப் பார்க்க வேண்டும் எனும் முடிவு ரஜினி.  தியேட்டருக்குப் போனால் தெரிந்தவர்கள் நிறைய பேர் வந்து இருந்தார்கள். அதற்கு முன்னர் வேறொரு திரையில் படம் பார்த்தவர்கள் வெளியில் உணவுப் பொருட்கள் வாங்க வந்து இருந்தார்கள். பார்க்க வேண்டிய படம் என சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

படம் ஆரம்பிக்கத் தொடங்கியதும் மனிதர்கள் குறித்த வரலாறு சொல்லப்படுகிறது. நில ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கோலோச்சிய காலம் இன்றும் தொடர்கிறது. நிலத்தை இழந்தவர்களின்  கதையை, பறிக்கப்பட்ட கதையை கேளுங்கள், எத்தனை வலிமிக்கது எனப் புரிய வரும். குடும்பம், காதல், அடிதடி என படம் அழகாக நகர்கிறது. கதாநாயகன் வில்லன் என எடுக்கப்படும் படங்களில் பெரிதாக ஒன்றும் எதிர்பார்த்து விட முடியாது. நிலம் நம் உரிமை. நம் நிலத்திலேயே நம் மரணம் என்பது எல்லாம் கேட்க உணர்வுப் பூர்வமாக இருக்கும். ஆனால் வெளியூர் வேலை என்பதுதான் பலரின் கனவு. ஊரை விட்டு வெளியேப் போகாமல் வாழ்ந்து மடிந்த மக்கள் முன்னர் இருந்தனர், அப்போது கூட திரைகடல் ஓடி திரவியம் தேடு எனச் சொன்னது தமிழ்.

புரட்சி, போராட்டம் என்பது மக்களின் வாழ்வோடு கலந்த ஒன்று. மக்கள் அனைவரும் போராட்டத்திற்கு தங்களை தயார்படுத்துவது இல்லை. போராட்டம் புரட்சி பண்ண ஒரு தனிக்கூட்டம் மக்களில் உண்டு. அதிகார வர்க்கம் என்பது அடிமை வர்க்கத்தினால் உண்டாவது. அடிமை வர்க்கம் போராடும் போது அதிகார வர்க்கம் ஆடும், ஆனால் அதிகார வர்க்கம்தனை அழிப்பது கடினம். பணம், பதவி. இவற்றை வெல்ல மக்கள் மாற வேண்டும்.

படத்தில் இந்தி வசனங்கள் வருகிறது. தூய்மை இந்தியா எனும் முழக்கத்தை கேலி கூத்தாக்க முனைந்து இருக்கிறார்கள். சிறு குழந்தைகள் சம்பந்தபட்ட காட்சிகள் எல்லாம் இப்போதைய குழந்தைகளின் மனநிலையை சொல்கிறதா எனத் தெரியவில்லை. படம் நன்றாக இருக்கிறது என்றார் ஒருவர். சரியான குப்பை என்றார் இன்னொருவர்.

தமிழகத்தில் இப்படிப்பட்ட இடங்கள் உண்டா எனக் கேட்டார் ஒருவர். இருக்கிறதா?

தமிழ் சினிமாவின் சாபக்கேடு பாடல்கள். மனைவி நோக்கி இரஜினி பாடும் ஒரு பாடல்  நன்றாக இருந்தது என்றனர். இசை மிகச் சிறப்பு.

நிறைய காட்சிகள் பேரழகு. இராமன் இராவணன் கதை. இராவண காவியம் எனும் நூல். என்னவோ சொல்ல வந்து என்ன என்னவோ சொல்கிறார்கள். இறுதியில் நல்லவேளை நிலத்தைப் பாதுகாப்பது போல? முடிக்கிறார்கள். வாழ்த்துகள் இயக்குநர். ரஜினி தமிழ் சினிமாவின் பேரரசர் என்னவோ சொல்ல வந்து என்ன என்னவோ சொல்லி முடிக்கிறேன். படைப்பாளியின் பலவீனங்களில் இதுவும் ஒன்று.

மக்கள் நினைத்தால் உலக மாற்றம் நிகழும், எந்த மக்கள் என்பதே கேள்வி.