Showing posts with label தொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம். Show all posts
Showing posts with label தொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம். Show all posts

Tuesday 28 July 2009

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 6 (நிறைவுப் பகுதி)





மாதங்கள் ஓடிக்கொண்டிருந்தது. ஜீன் தெரபிக்காகச் சென்று விசாரித்ததில் ஜீன் தெரபி எல்லாம் செய்ய முடியாது என சொல்லிவிட்டார்கள். இந்த விசயம் தெரிந்தபின்னர் எப்படி கல்யாணம் செய்து வைப்பது என மேலும் கவலைகொண்டனர் பெற்றவர்கள். ஆனால் இவர்கள் இருவரும் மனது மாறவில்லை.

இத்தனை விசயங்கள் நடந்தாலும் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் பக்கமே வரவே இல்லை. அவனுக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வான். அவனை சென்று பார்க்க அவனோ தொலைதூரத்தில் வேலையில் இருந்தான். அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என பெற்றவர்கள் ஒன்றும் தகவல் சொல்லாமல் இருந்தார்கள்.

ஆண்டாள் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தாள். ஒருநாள் திடீரென பாலரங்கன் வீட்டிலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். கோதைநாச்சியாரிடம் அன்று காலையில் கனவு கண்டதாகவும் தான் மணமேடையில் அமர்ந்து இருந்து திருமணம் நடந்ததாக சொல்லி இருந்தாள் ஆண்டாள். அவர்கள் பெண் கேட்டு வந்ததும் மறுக்காமல் சரியென சொன்னார்கள்.

மருத்துவத் துறையில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் அப்படி ஏற்படாது போனாலும் அதனால் கவலை வேண்டாம் நாங்கள் எப்போதும் சந்தோசமாக வாழ்வோம் என இருவரும் பெற்றோருக்கு உறுதி சொல்லி சந்தோசம் தந்தார்கள். கல்யாணத் தேதி எல்லாம் குறித்தாகிவிட்டது. இனி பத்திரிக்கை எல்லாம் அடிக்க வேண்டும்.

இப்படி திடீரென நடந்தேறிய முடிவு அந்த அக்ரஹாரம் எல்லாம் தெரிய ஆரம்பித்தது. ஆண்டாள் பெரு மகிழ்வு அடைந்தாள். சின்னஞ்சிறு வயதில் தனக்கு கல்யாண விருப்பம் வந்தது கண்டு இன்று இரண்டாம் முறையாக வெட்கப்பட்டாள்.

''சாதி, இனம், மொழி என எத்தனையோ காதலுக்குத் தடையாய் இருந்து வந்ததுண்டு, ஆனால் நோய் தடையாய் ஒருபோதும் வந்தது இல்லை, நமக்கு இந்த நோயும் தடையாய் வந்து நிற்கவில்லை, ஏனெனில் காதலும் ஒரு நோய் தானே'' என்றான் பாலரங்கன். ''காதல் ஒரு நோய் இல்லை'' என சிரித்தாள் ஆண்டாள்.

''குழந்தைப் பெத்துக்கலாம்தானே'' என்றாள் ஆண்டாள். ''அதைப்பத்தி இப்போ ஏன் கவலை, முதல்ல நமக்கு நல்லா கல்யாணம் நடக்கட்டும். உனக்கு ஜோசியத்துல என்னமோ சொன்னாங்க, இந்த நோய் இருக்கிறதால நாம கல்யாணம் பண்ணக்கூடாதுனும் இருக்கு, ஆனா ஒன்னு தெரியுமா? குழந்தைப் பெத்துக்கிறதுக்கு கல்யாணம் இல்லை'' என்றான் பாலரங்கன். ''ஓ அப்படியா?'' என்றாள் ஆண்டாள். ''கவலைப்படாதே நாம குழந்தைப் பெத்துக்குவோம்'' என்றான் பாலரங்கன். ''எனக்கு கல்யாணம் நடந்தாலே போதும்'' எனச் சிரித்தாள் ஆண்டாள். எல்லாம் சந்தோசமாக இருந்தது. கோதைநாச்சியார், நாராயணன் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். உண்மை அன்புக்கு எதுவும் தடையில்லை.

மண்டபம், பத்திரிக்கை எல்லாம் தயாராகிக்கொண்டு இருந்தது. கோபாலகிருஷ்ணனுடன் வேலைப் பார்க்கும் அவனது நண்பன் அந்த தருணத்தில் இரண்டு நாள் விடுமுறையாக ஊருக்கு வந்திருந்தான். ஆண்டாளின் கல்யாண விசயம் கேள்விபட்டான். வேலைக்குத் திரும்பிச் சென்ற அவன் அன்று இரவு கோபாலகிருஷ்ணனை சந்தித்தான்.

''டேய் ஆண்டாளுக்குக் கல்யாணமாம்டா'' என விசயத்தைச் சொன்னான் கோபாலகிருஷ்ணனின் நண்பன்.

''நமக்கு அழைப்பு வைக்காமலாப் போயிருவாங்க'' என்றான் கோபாலகிருஷ்ணன்.

முற்றும்.

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 5

பாலரங்கன் மருத்துவர்களிடம் சென்று மேல்விபரம் கேட்டான். அப்பொழுது மருத்துவர் ''ஆண்டாள் சிஸ்டிக் பிப்ரோஸிஸ் கேரியர்'' என்றார். ''நானும் தான் சிஸ்டிக் பிப்ரோஸிஸ் கேரியர்'' என்றான் பாலரங்கன். ''அப்படின்னா நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறக்கூடாது. குறைஞ்சது 50% சதவிகிதம், உங்களுக்குப் பிறக்கப் போற குழந்தை இந்த நோய் உடையதாகவேப் பிறக்க வாய்ப்பிருக்கு'' என்றார் மருத்துவர். ''தெரிஞ்சி வைச்சிருக்கேன் சார், ஆனா ஜீன் தெரபி பண்ணலாமே?'' என்றான் பாலரங்கன். ''ஜீன் தெரபி பண்ணலாம், ஆனா இன்னும் அத்தனை தூரம் முன்னேறல எதுக்கும் என்னோட பிரண்ட் கிட்ட ரெபர் பண்றேன், அவன்கிட்ட போய் ட்ரீட்மெண்ட் பண்ணமுடியுமானுப் பாருங்க'' என்றார் அவர்.

ஆண்டாள் அன்றே மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாள். சில தினங்கள் கழித்து ஆண்டாளின் வீட்டிற்குச் சென்ற பாலரங்கன் ஆண்டாளிடம் பேசினான். ''இருவரும் ஜீன் தெரபி செய்தால் ஒழிய திருமணம் செய்யக்கூடாது எனவும், அப்படியே திருமணம் செய்தாலும் குழந்தையைப் பெற்றுக்கொள்ளக்கூடாது'' எனவும் கூறினான்.

''அப்படி நம்ம அப்பா அம்மா நினைச்சிருந்தா நாம இப்போ இருக்கமுடியுமா'' என்றாள் ஆண்டாள். ''நான் உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன்'' என்றான் பாலரங்கன். ''நான் மட்டும் என்னவாம்?'' என்றாள் ஆண்டாள். அப்படிச் சொன்னவள் ''எப்படி இந்த நோய் உனக்கும் எனக்கும் வந்துச்சு'' என்றாள் ஆண்டாள்.

''உடல் பொருள் ஆவி மனசு சந்தோசம் துக்கம் இப்படி எல்லாத்துலயும் ஒன்னா வைச்சிக்கிறச் சொல்ற காதல் இந்த நோயிலயும் வந்து வைச்சிக்கிருச்சி'' என சிரித்தான் பாலரங்கன். ''எப்படி வந்துச்சுனு சொல்லுனு சொன்னா காதல்னு சொல்ற'' என்றாள் ஆண்டாள்.

''இது ஜெனிடிக் நோய். மிகவும் மோசமான வியாதி. இது ஜீன்ல நடக்கிற ம்யூடேஷன்னால வருது. ஆனா எப்படி ம்யூடேஷன் நடக்குது, எப்படி வருது என்னங்கிறது இன்னும் தெரியலை. இந்த வியாதி நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல் பெருகுடல்னு பாதிச்சிரும். நாம கேரியர்ஸ், நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. சாதாரண வியர்வைத்துளியை வைச்சிக்கூட இந்த நோய் இருக்கானு கண்டுபிடிச்சிரலாம்'' என்றான் பாலரங்கன்.

''ம்யூடேஷன்னா என்ன?'' என்றாள் ஆண்டாள். ''இப்போ ஜீன் இருக்குனு வைச்சிக்கோ அதுபாட்டுக்கு அது வேலையை சரியாப் பார்க்கும், அதுல ஏதாவது மாற்றம் வந்துச்சுன்னா தன்னோட வேலைய மறந்துட்டு வேற ஏதாவது செஞ்சிரும், அதுமாதிரிதான் 7 வது குரோமோசோம்ல ஒரு மாற்றம் நடக்கிறதால இப்படி வருது. சாதாரணமா இந்த ஜீன் செய்ற வேலை என்னன்னா வியர்வை, சாப்பிடும்போது சுரக்கிற திரவம், அப்புறம் சளி இதெல்லாம் கட்டுப்படுத்தும். ஏதாவது மாற்றம் வந்தா இதெல்லாம் அதிகப்படியாப் போய் பெரிய பிரச்சினை ஆயிரும். ஆம்பளைங்களுக்கு ஆண் தன்மை கூட போயிரும்''.

''ஒவ்வொரு ஜீனுக்கு இரண்டு குணம் உண்டு. ஒன்னு டாமினேட்டா இருக்கும், இன்னொன்னு அடங்கிட்டு இருக்கும். டாமினேட்டுதான் வெளிப்படும், ஆனா அடங்கிட்டு இருக்கறது வெளிப்படாது. இந்த ஜீன் அடங்கிட்டு இருக்கற வகையச் சார்ந்தது. நம்ம இரண்டுபேருகிட்ட அடங்கிட்டு இருக்கற வகை நம்ம குழந்தைக்குப் போனா அந்த குழந்தையில வெளிப்பட்டு அவ்வளவுதான். இந்த வியாதி வந்தா 20 வயசுல இருந்து 30 வயசுல செத்துருவாங்க, இப்போ 50 வயசு வரைக்கும் ஆயுட்காலம் கூட்டிட்டு இருக்காங்க'' என்றான் பாலரங்கன்.

''எப்படி இவ்வளவு விசயம் தெரிஞ்சி வைச்சிருக்க?'' என்றாள் ஆண்டாள். ''இப்போ நமக்கு ஒரு நோய்னா அதைப்பத்தி அக்குவேறு ஆணிவேறா பிரிச்சி மேய்ஞ்சிரனும். அப்படித்தான் எனக்கு இந்த நோய் இருக்குனு சொன்னதும் தேடாத புத்தகம் இல்லை, படிக்காத விசயம் இல்லை, என் வீட்டுக்கு வந்தா படமெல்லாம் காமிக்கிறேன்'' என்றான் பாலரங்கன். ''ங்கோ, றேள் போட்டு பேசவே இல்லையே'' எனச் சிரித்தாள் ஆண்டாள்.

அப்பொழுது கோதைநாச்சியார் அங்கு வந்தார். ஆண்டாள் அவரிடம் பாலரங்கன் சொன்னதை சொன்னதும் பதட்டம் கொண்டார் கோதைநாச்சியார்.

''இந்த கல்யாணம் நடக்க வேணாம்'' என்றார் கோதைநாச்சியார். ''என்ன சொல்றேள் மாமி, நாங்க ஜீன் தெரபி பண்ணிக்கிறப் போறோம். கவலைப்படாதேள், எங்களுக்கு ஷேமமா கல்யாணம் நடக்கும்'' என்றான் பாலரங்கன்.

மேலும் ''குழந்தையப் பெற முன்னாடி கூட கருவை டெஸ்ட் பண்ணி குழந்தை நல்லா இருந்தா கருவை பழையபடி வைச்சி குழந்தைய உருவாக்கலாம் மாமி, நீங்க ஏன் இப்படி பதட்டப்படறேள்'' என்றான் பாலரங்கன். ''என்ன புராணம் சொல்றீங்கோ'' என்றார் கோதைநாச்சியார்.

அப்பொழுது அங்கு வந்த நாராயணன் ''ஜோசியர்கிட்ட போய்ட்டு வந்தேன், ஏதோ சனி கொஞ்சம் வேறப்பக்கம் பார்த்துட்டு நிற்கிறானாம், குரு பலமா பார்க்கிறாராம் ஆண்டாளுக்கு ஒரு வருசம் கழிச்சி நல்லாவே கல்யாணம் பண்ணலாமாம், எந்தப் பிரச்சினையும் இல்லையாம்'' என்றார். ''ஜோசியர் பரிகாரம் சொன்னா ஏத்துப்பேள், நான் சொல்ற பரிகாரம் சொன்னா ஏத்துக்கமாட்டேளா'' என்றான் பாலரங்கன். ''வந்து எல்லோரும் சாப்பிடுங்க'' என கோதைநாச்சியார் சொல்லிவிட்டு ''பெருமாளே'' என்றார்.

இவ்வேளையில் ராஜமன்னார் விசயம் கேள்விபட்டு ஆறுதல் சொன்னதோடு சரி ஆண்டாள் காதல் புரிவதால் தனது பையனுக்கு சம்மதமில்லை என்றே சொல்லிவிட்டார். ஆண்டாள் தான் மணந்தால் பாலரங்கனையே மணப்பேன் என உறுதியாக இருக்க, பாலரங்கனும் தான் மணந்தால் ஆண்டாளை மணப்பேன் என உறுதியாக இருக்க இருவரது பெற்றோர்களும் செய்வதறியாது திகைத்தனர்.

(தொடரும்)

Monday 27 July 2009

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 4

ஓடியாடி விளையாடி பள்ளிப்பருவமும் கடந்தாள் ஆண்டாள். பதினாறு வயது கடந்ததும் இனி எப்படி திருமணம் நடக்குமோ என கவலையில் நாட்களை கழித்தார் கோதைநாச்சியார். அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தனக்கு எப்பொழுது காதல் வரும் என எதிர்பார்ப்புடன் இருந்தாள் ஆண்டாள். வருடங்கள் மெல்ல உருண்டோட ஆரம்பித்தது. கல்லூரிப்பருவத்தில் நுழைந்தாள் ஆண்டாள், ஆனால் காதல் வந்தபாடில்லை.

ஒருநாள் தனது அறையில் அமர்ந்து கொண்டு ''ஏன்டி ஆண்டாள், நீ மட்டும் எப்படிடீ திருவரங்கன் மேல காதல் கொண்ட, அதுவும் அவனைப் பார்க்காம கொள்ளாம உனக்கு மட்டும் எப்படி காதல் வந்துச்சு, சொல்லேன்டி ஆண்டாள்'' என சுவரைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தாள் நம் ஆண்டாள். இதைக் கவனித்த கோதைநாச்சியார் ''காதல் வரனும்னா அதுக்கான பையனைப் பார்க்கனும், நீ குனிஞ்ச தலை நிமிராம நடக்கற, இப்ப இருக்கிற பொண்ணுக மாதிரியா இருக்க, பட்டிக்காட்டுல கூட இப்படி இருக்கமாட்டாங்கம்மா கொஞ்சம் சுடிதார் ஜீன்ஸ் டி சர்ட் னு போட்டுட்டு இரு உன்னை காதலிக்க ரொம்ப பேரு நிப்பாங்க உனக்கும் யாரை காதலிக்கனும்னு தலைப் பிய்ச்சிக்கும்மா'' என கடிந்து சொல்லிவிட்டு போனார். ''நீ காதல் கல்யாணம் பண்ணினியா? தள்ளிவிட்டாங்க, போய் விழுந்துட்ட நீ'' என்றாள் ஆண்டாள். ''அது அந்தக் காலம்'' என்றார் கோதைநாச்சியார்.

அன்றைய தினத்திலிருந்து தினமும் காதலைப் பத்தி வீட்டில் பெரிய பட்டிமன்றமே நடக்க ஆரம்பித்தது. ஆண்டாள் ஒவ்வொருமுறையும் பழங்காலம் பழங்காலம்னு சொல்லாதே என அம்மாவை பேச்சில் வென்று கொண்டே இருந்தாள், ஆனால் காதல் வந்தபாடில்லை. ''அடக்கம் ஒடுக்கம் எல்லாருக்கும்தான் நான் உன்கிட்டே ரொம்பப் பேசறேனோம்மா'' என்றாள் ஆண்டாள். ஆண்டாளை உச்சி முகர்ந்து ''நீ என்னோட உசிரும்மா'' என்றார் கோதைநாச்சியார்.

இப்படியாக கல்லூரியிலும் ஒருவருடம் ஓடியது. ஒருமுறை வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் ஒருவனைப் பார்த்தாள். அவனும் ஆண்டாளைப் பார்த்தான். மனது என்னவோ செய்தது அவளுக்கு. இதுதான் காதலா என எண்ணிக்கொண்டு நடக்க இருந்தவளை ''செத்த நிக்கிறேளா'' என்றான் அவன். ''செத்தா எங்குட்டு நிக்கிறது?'' என்றாள் ஆண்டாள். மென்மையாக சிரித்தான் அவன். ''என் பேரு பாலரங்கன்'' என்றான். ''என்ன விசயம் சொல்லுங்க'' என்றாள் ஆண்டாள். ''நீங்க எங்க குடியிருக்கேள்'' என்றான் அவன். ''உங்க மனசுலயா குடியிருக்க முடியும், அதோ செண்பகப்பூ அக்ரஹாரத்தில்தான் குடியிருக்கேன்'' என சொல்லிவிட்டு நடந்தாள் ஆண்டாள்.

முதன்முதலாக தனது அம்மாவிடம் தான் தனது காதலை சொன்னாள். ''அம்மா ஒரு பையன் என்னை காதல் பண்றான்மா'' என்றாள் ஆண்டாள். ''அது எப்படி உனக்குத் தெரியும்'' என்றாள் கோதைநாச்சியார். ''நான் காதல் பண்றேன்லம்மா அவனை'' என்றாள் ஆண்டாள். கோதைநாச்சியாருக்கு மனதில் பயமும் சந்தோசமும் நிறைந்தது.

ஆண்டாளுக்கு கோவிலின் வழியில் பாலரங்கனைப் பார்ப்பதும் ஓரிரு வார்த்தை பேசுவதுமாய் நாட்கள் கழிந்தது. ஒருநாள் உடல்நிலை சரியில்லாது போய் ஆண்டாளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாகிவிட்டது. இதற்கு முன்னர் ஆண்டாளுக்கு இவ்வாறு உடல்நிலை சரியில்லாதபோது பல பரிசோதனைகள் செய்தவர்கள் இம்முறை கொஞ்சம் அதிகப்படியான பரிசோதனை செய்தார்கள். விசயம் கேள்விப்பட்டு பாலரங்கன் தனது பெற்றோருடன் மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு ஆண்டாளுக்கு சிஸ்டிக் பிப்ரோசிஸ் எனும் நோய் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதாக கேள்விபட்டதும் ஆடிப்போனான் பாலரங்கன்.

(தொடரும்)

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 3

கோதைநாச்சியாருக்குத் தவிர அன்றைய தினம் மிகவும் சந்தோசமாக கடந்தது. கோபாலகிருஷ்ணனும் அவனது மனைவியும் வந்து சாப்பிட்டுவிட்டு மாலையே சென்றுவிட்டனர். ஆண்டாளின் கல்யாணம் பற்றி எந்த பேச்சும் பேசவில்லை. அன்று இரவு தூங்கும் முன்னர் ஆண்டாள் தனது அம்மாவிடம் ''ஏன்மா என்னைப் பத்தி ரொம்ப கவலைப்படறியா?'' என்றாள்.

''ஜோசியர் சொன்னதுல இருந்துதான் மனசுக்கு சரியில்லைம்மா, நீ போய் தூங்கு, நாளைக்கு நல்லா கனவு காணு, லேட்டாவே எழுப்புறேன்'' என்றார் கோதைநாச்சியார். ''நாளைக்கு ஞாயித்துக்கிழமை, கனவு வராதேம்மா'' என சொல்லிவிட்டு தூங்கச் சென்றாள் ஆண்டாள்.

தூக்கம் வராமல் அழுகையே வந்துவிட்டது கோதைநாச்சியாருக்கு. என்ன பெரிய ஜோசியம், எல்லாம் நாம வைச்சதுதானே, இதுக்குப்போய் இப்படி கவலைப்படறோமே என நினைத்துக்கொண்டே ''ஏங்க ஏதாவது பரிகாரம் செய்யலாமனு கேட்டீங்களா?'' என்றார் கோதைநாச்சியார். ''பரிகாரம் கேட்க மறந்துட்டேன், நாளைக்கு அழகியமணவாளன் பத்திக் கேட்டுட்டு வரலாம்னு இருக்கேன்'' என்றார் நாராயணன்.

''உங்களுக்கு ஏன் இப்படி மனசு போகுது, நாளைக்கு நம்மளை கொஞ்சம் கூட மதிக்காம போகப்போறாங்க, இப்படி ஒரு விசயத்தை வெளிய சொன்னம்னா என்ன குடும்பம் இதுனு கேலி பண்ணாதவங்க யாரும் இருக்கமாட்டாங்க, அதுவுன் ஜோசியத்தைக் காரணம் காட்டினா காரித்துப்புவாங்க'' என்றார் கோதைநாச்சியார். ''எதுக்கும் கேட்டு வாரேன்'' என நாராயணன் சொல்லிவிட்டு மனதில் கவலை கொண்டார்.

பொழுது விடிந்தது. ஆண்டாள் எழுந்து குளித்து பாடங்கள் படித்துக் கொண்டிருந்தாள். ''பிஞ்சுக் குழந்தை'' என மனதில் சொல்லிக்கொண்டு நாராயணன் நண்பரைப் பார்க்கக் கிளம்பினார். நண்பரிடம் விசயம் சொன்னதும் ''உன் பொண்ணை இப்ப எதுக்கு கட்டிக்கொடுக்க ஆசைப்படற, கல்யாண வயசு வரப்ப நானே வந்து பொண்ணு கேட்டு என் பையனுக்குக் கட்டி வைக்கிறேன், பேச்சு மாறமாட்டேன்'' என்றார் இராஜமன்னார்.

ஜோசியர் சொன்னதை சொன்னதும் ''அட என்ன நீ இவ்வளவு பட்டிக்காட்டுத்தனமா இருக்க, இப்ப உலகம் எவ்வளவு தூரம் முன்னேறிக்கிடக்கு, ஜோசியம் பாசியம்னு'' என அறிவுரை கூறி அனுப்பினார். ஆனாலும் மனது கேட்காமல் ஜோசியரிடம் சென்று பரிகாரம் கேட்டதற்கு ஜோசியர் ''பரிகாரம் இருக்கு, ஆனா முப்பது வயசுக்கு அப்புறம் தான் அதுவும் செய்ய முடியும், அதுவும் இரண்டாம் தாரமாப் போனாத்தான் உண்டு'' என்றார் ஜோசியர். மனதைத் தேற்றிக்கொண்டு விளையாட்டுத்தனமாக நினைத்த விசயம் விபரீதமாகப் போய்க்கொண்டிருப்பதை நினைத்து வீடு சேர்ந்தார் நாராயணன்.

இரண்டு மாதங்கள் கடந்தது. சனிக்கிழமையானால் கல்யாணம் பத்தி பேச ஆரம்பித்துவிடுவாள் ஆண்டாள். கோதைநாச்சியார் ஆண்டாளிடம் நிலைமையை சொல்லி போன சனிக்கிழமை அழுதேவிட்டார். ஆண்டாள் ''நான் கல்யாணம் பண்ணாமே வாழ்ந்துக்கிறேன்ம்மா, இப்ப கல்யாணம் வேணாம்மா, அழாதே'' என சொன்னவள் ''ஜோசியர் பத்திக் கவலைப்படாதேம்மா, காதலுக்கு அதெல்லாம் ஒரு தடையும் இல்லம்மா, எனக்கு காதல் வரும்லம்மா'' என சொல்லிவிட்டு சிறு பிள்ளையாய் விளையாடினாள். கோதைநாச்சியார் ''பெருமாளே'' என்றார்.

(தொடரும்)

Sunday 26 July 2009

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 2

கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் ஆண்டாளைத் தனியாக அழைத்துச் சென்றார் கோதைநாச்சியார். ''நீ இப்படி இனிமே நடந்துக்கிராதே, எனக்கு மனசெல்லாம் வலிக்குது, உனக்கு நல்லாப் படிச்சி, ஒரு நல்ல உத்தியோகத்துக்குப் போய் வாழனும்னு ஆசையே இல்லையா'' என அறிவுரை சொன்னார்.

''கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கிறேன், உத்தியோகத்துக்குப் போறேன்மா'' என்றாள் ஆண்டாள். ''ஐயோ பெருமாளே, என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்கேள், என் புள்ளைக்கு புத்திமதி சொல்லப்படாதோ'' என வேண்டிக்கொண்டார் கோதைநாச்சியார்.

''ஏன் பெருமாள்கிட்ட அப்படி வேண்டிக்கிறம்மா, என்னோட வேண்டுதலை முறியடிக்க நீ இப்படி வேண்டினா அந்த பெருமாள் உனக்கு உதவுவாரா'' என ஆண்டாள் கண்சிமிட்டிக் கொண்டே கேட்டவள் ''என்னோட வேண்டுதல் தான் ஃபர்ஸ்ட்'' என இங்குமிங்கும் ஓடினாள்.

''ஆண்டாள், ஆண்டாள் நில்லு, சரி இப்ப விளையாட நேரமில்லை, நான் சமையல் பண்ணனும்'' என்றவருக்கு ''நானும் உனக்கு உதவுறேன்மா'' என்றாள் ஆண்டாள். ''நீ படி, சமையல் வேலை நான் பார்த்துக்கிறேன்'' என்றவருக்கு ''நானும் சமைக்கிறேன்'' என அம்மா செல்லும் முன்னரே சமையல் கட்டுக்குள் போனாள் ஆண்டாள்.

''ஏங்க, நம்ம பிள்ளையை கண்டிக்கக் கூடாதா'' என்றார் கோதைநாச்சியார். அதற்கு நாராயணன் ''நான் மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்'' என்றார். ''இது என்ன கொடுமை, அப்பனும் பிள்ளையுமா சேர்ந்து இப்படி ஆடுறீங்க, இது என்ன விளையாட்டா?'' என்றார் கோதைநாச்சியார்.

''காதல் வர பருவத்தில கல்யாண ஆசை வந்துருக்கு, நான் ஆண்டாளோட சாதகத்தை எடுத்திட்டுப் போய் பார்த்துட்டு வரேன்'' என கிளம்பினார். 'பெருமாளே ஏன் தான் ஆண்டாள்னு பேரு வைச்சேனோ?' என சொல்லிக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தார்.

அங்கே ஆண்டாள் காய்கறிகள் நறுக்க ஆரம்பித்து இருந்தாள். ''இது அண்ணனுக்கு ரொம்பப் பிடிக்கும்லம்மா'' என்றாள் ஆண்டாள். ''பிடிக்கும் பிடிக்கும், கத்தரிக்காய் பிடிக்காம இருக்குமா, ஆனால் கல்யாணம் பிடிக்கும்னு சொல்ற முத பொண்ணு நீயாத்தான் இருப்ப'' என சொல்லிக்கொண்டே சமையல் வேலை செய்ய ஆரம்பித்தார்.

''என்னது சின்னப் பொண்ணோட சாதகமா இருக்கு இது. குரு பார்வை பலமா இருக்கு. இன்னும் ஆறு மாசத்தில கல்யாணம் நடக்கனும் அப்படியில்லையினா அறுபது வயசில தான் கல்யாணம், சரியான நேரத்திலதான் அந்த பெருமாள் உங்களை இங்கே அனுப்பி வைச்சிருக்கா நாராயணன்'' என்றார் ஜோதிடர்.

''நினைச்சேன், என்னடா இந்த வயசுல பொண்ணு இப்படி கல்யாணத்துக்குப் பறக்கறாளேனு'' என்றார் நாராயணன். ''மாப்பிள்ளை அமையுமா?'' என்றார் மேலும். ''அந்த பெருமாளே மணவாளானா வருவாரு பாருங்கோ'' என்றார் ஜோதிடர். 'மணவாளன்' என மனதில் சொல்லிக்கொண்ட நாராயணன் தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகன் அழகியமணவாளனைப் பற்றி கற்பனை பண்ணத் தொடங்கினார். அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தபோது சமையல் எல்லாம் தயாராக இருந்தது. கோதைநாச்சியாரிடம் விசயத்தைச் சொன்னார் நாராயணன்.

''பெருமாளே, என்ன சோதனை இது'' என சொன்ன அன்னையிடம் ''என்னம்மா'' என்றாள் ஆண்டாள். ''உனக்கு இப்பவே கல்யாணம் பண்ணித்தான் ஆகனுமாம் சோசியர் சொல்லிட்டாராம்'' என வார்த்தைகளை நழுவவிட்டார். ''நான் சொன்னா கேட்கலை, சோசியர் சொல்லித்தான் கேட்கனுமா'' என அம்மாவின் கவலையினை அதிகரித்தாள் ஆண்டாள்.

''அண்ணனும் அண்ணியும் வரப்போறாங்க, ஏன்மா உம்முனு இருக்க'' என்றபடி ஆண்டாள் வாசலை எட்டிப்பார்த்தாள்.

(தொடரும்)

Saturday 25 July 2009

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 1

திருவான்மியூரினில் ஒரு அழகிய வீட்டினில் அதிகாலை அனைத்து சப்தங்களுக்கும் மத்தியில் ஒரு சப்தம் அதிகமாகவே கேட்டது.

''ஆண்டாள், ஆண்டாள், எழுந்திரும்மா, மணி ஏழாகப் போகுது, இன்னுமா உறக்கம். சனிக்கிழமைனு வந்துட்டாப் போதுமே'' என பதினைந்து வயது நிரம்பிய ஆண்டாளினை அவரது அன்னையார் கோதைநாச்சியார் எழுப்பி விட்டார்.

''என்னம்மா, இன்னைக்கும் என்னோட கனவை நீ கெடுத்துட்ட, கல்யாண மேடையெல்லாம் தயாரா இருந்துச்சு, போம்மா'' என முனகிக் கொண்டே எழுந்தாள் ஆண்டாள்.

''அடியம்மா, வார வாரம் சனிக்கிழமையானதும் மூணு மாசமா இதே பல்லவியை நீ பாடறியே, இப்ப உன்னை கல்யாணம் செஞ்சிக் கொடுத்தா என்னை ஜெயிலுலப் போட்டுருவாங்கம்மா, போன வாரம் ஏழரைக்குத்தான் எழுப்பினேன் இதே பல்லவியைத்தான் பாடின. சீக்கிரம் குளிச்சிட்டு வா, கோவிலுக்கு நேரமாகுது எனக்கு'' என கோதை நாச்சியார் பரபரப்பாகத் திரிந்தார்.

''இன்னைக்கும்மா கனவு கண்டேனு சொன்னா, சமத்துப் பிள்ளை'' என தனது பங்குக்கு ஆண்டாளின் தந்தை நாராயணன் கேட்டு வைத்தார்.

''ஒரு சினிமாவுக்குப் போகமாட்டேங்கிறா, டி.வி முன்னால உட்கார மாட்டேங்கிறா, புள்ளைகளோட ஊர் சுத்த மாட்டேங்கிறா. ஆனா எப்படித்தான் இப்படி கனவு வருதோ இவளுக்கு, நீங்கதான் அவளை மெச்சிக்கனும், கிளம்புங்க'' என அவசரப்படுத்தினார் கோதை நாச்சியார்.

ஆண்டாள் குளித்துவிட்டு தலையில் சாம்பிராணி புகையைப் போடச் சொல்லி அம்மாவிடம் வந்து நின்றாள். ''ஹேர் ட்ரையர் எடுத்து தலை முடியை காய வை, இப்படி துண்டாலத் துவட்டிக்கிட்டு வந்து நிக்கிற, தடுமம் பிடிக்கப் போகுது'' என ஓடியாடினார் கோதைநாச்சியார். ''எனக்கு அதெல்லாம் வேணாம், மல்லிகைப்பூ இருந்தா அப்படியே வைச்சி விடும்மா'' என்றாள் ஆண்டாள்.

சாம்பிராணி புகைப் போட்டுக்கொண்டே இருக்கும்போது ''ஏன்மா மஞ்சள் கொஞ்சமாப் பூசிக்கிறக் கூடாதோ, வெயில் அடிக்கிற மாதிரி இருக்கு'' என்றார் கோதைநாச்சியார்.

''என்னை அவசரப்படுத்திட்டு இப்படி சாவகாசமா நின்னா எப்படி'' என்றார் நாராயணன். அவசர அவசரமாக கிளம்பினார்கள். ''அம்மா பச்சைக் கலர் தாவணி மாத்திக்கிரட்டா?'' என சத்தமிட்டாள் ஆண்டாள். ''நீலக் கலருக்கு என்னப் பிரச்சினை வந்துச்சு இப்போ, அதையேப் போட்டுக்கிட்டு வா'' என மறுபதில் சொன்னார் கோதைநாச்சியார். ''மாத்திக்கிரேன்'' என மறுபடியும் சத்தமிட்டாள் ஆண்டாள். ''உன் இஷ்டப்படி செய், ஏன் ஸ்கூல் யூனிபார்ம் கூடப் போட்டுக்கிட்டு வா'' எனச் சொன்னவர் ''மாடர்னா இருப்பாளுனுப் பார்த்தா இப்படி பட்டிக்காட்டுத்தனமா இருக்கா'' என தனது கணவரிடம் சொல்லிக்கொண்டார் கோதைநாச்சியார்.

''நீ ரொம்ப மாடர்னு, நட நட'' என்றார் நாராயணன். ஆண்டாள் துள்ளிக்கொண்டு ஓடி வந்தாள். ''போலாம்மா'' என்றாள் அவள். மூவரும் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்குச் சென்றார்கள். ''இன்னைக்கு என் பையனோட பிறந்தநாள், பேரு கோபாலகிருஷ்ணன். அவன் பேர்ல ஒரு அர்ச்சனை செஞ்சிருங்கோ'' என கோதைநாச்சியார் சொன்ன மறுகணம் ''என் பேரு ஆண்டாள், அப்படியே எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகனும்னு ஒரு அர்ச்சனை செஞ்சிருங்கோ'' என்றாள் ஆண்டாள். கோவில் பட்டர் சிரித்தார், ''என்னம்மா அர்ச்சனை பண்ணிரட்டுமா'' என்றார் பட்டர். ''அவாகிட்டே எதுக்குக் கேட்கறீங்கோ, நான் சொன்னதைச் செய்யுங்கோ சாமி'' என்றாள் ஆண்டாள்.

''ஏன்மா சும்மா இருக்கமாட்டியா, என்னைக்க்குமில்லாம இன்னைக்கு ஏன் இப்படி கோவிலுல வந்து மானத்தை வாங்குற, சாமி நீங்க பையனுக்கு மட்டும் பண்ணுங்கோ'' என கோதைநாச்சியார் சொன்னார். ''பொண்ணு விருப்பத்துக்கும் செஞ்சிருங்கோ'' என்றார் நாராயணன்.

பட்டர் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார். அங்கே வந்து இருந்தவர்கள் ஆண்டாளை ஒருமாதிரிப் பார்வையுடன் பார்த்தார்கள். ஆண்டாள் கண்களை மூடி பிரார்த்திக்கத் தொடங்கி இருந்தாள். அவள் பிரார்த்தனையைக் கேட்ட கோதைநாச்சியார் ''யேய் ஆண்டாள், என்னப் பிரார்த்தனை இது, உன் விளையாட்டுக்கு அளவில்லையா?'' என மெல்லச் சொன்னார். ஆனால் ஆண்டாள் பிரார்த்தனையை நிறுத்தவில்லை. ''எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வை பெருமாளே'' என பிரார்த்தனையை முடித்தவள் முன்னால் தீபத்தைக் காட்டினார் பட்டர்.

(தொடரும்)