Monday 27 July 2009

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 3

கோதைநாச்சியாருக்குத் தவிர அன்றைய தினம் மிகவும் சந்தோசமாக கடந்தது. கோபாலகிருஷ்ணனும் அவனது மனைவியும் வந்து சாப்பிட்டுவிட்டு மாலையே சென்றுவிட்டனர். ஆண்டாளின் கல்யாணம் பற்றி எந்த பேச்சும் பேசவில்லை. அன்று இரவு தூங்கும் முன்னர் ஆண்டாள் தனது அம்மாவிடம் ''ஏன்மா என்னைப் பத்தி ரொம்ப கவலைப்படறியா?'' என்றாள்.

''ஜோசியர் சொன்னதுல இருந்துதான் மனசுக்கு சரியில்லைம்மா, நீ போய் தூங்கு, நாளைக்கு நல்லா கனவு காணு, லேட்டாவே எழுப்புறேன்'' என்றார் கோதைநாச்சியார். ''நாளைக்கு ஞாயித்துக்கிழமை, கனவு வராதேம்மா'' என சொல்லிவிட்டு தூங்கச் சென்றாள் ஆண்டாள்.

தூக்கம் வராமல் அழுகையே வந்துவிட்டது கோதைநாச்சியாருக்கு. என்ன பெரிய ஜோசியம், எல்லாம் நாம வைச்சதுதானே, இதுக்குப்போய் இப்படி கவலைப்படறோமே என நினைத்துக்கொண்டே ''ஏங்க ஏதாவது பரிகாரம் செய்யலாமனு கேட்டீங்களா?'' என்றார் கோதைநாச்சியார். ''பரிகாரம் கேட்க மறந்துட்டேன், நாளைக்கு அழகியமணவாளன் பத்திக் கேட்டுட்டு வரலாம்னு இருக்கேன்'' என்றார் நாராயணன்.

''உங்களுக்கு ஏன் இப்படி மனசு போகுது, நாளைக்கு நம்மளை கொஞ்சம் கூட மதிக்காம போகப்போறாங்க, இப்படி ஒரு விசயத்தை வெளிய சொன்னம்னா என்ன குடும்பம் இதுனு கேலி பண்ணாதவங்க யாரும் இருக்கமாட்டாங்க, அதுவுன் ஜோசியத்தைக் காரணம் காட்டினா காரித்துப்புவாங்க'' என்றார் கோதைநாச்சியார். ''எதுக்கும் கேட்டு வாரேன்'' என நாராயணன் சொல்லிவிட்டு மனதில் கவலை கொண்டார்.

பொழுது விடிந்தது. ஆண்டாள் எழுந்து குளித்து பாடங்கள் படித்துக் கொண்டிருந்தாள். ''பிஞ்சுக் குழந்தை'' என மனதில் சொல்லிக்கொண்டு நாராயணன் நண்பரைப் பார்க்கக் கிளம்பினார். நண்பரிடம் விசயம் சொன்னதும் ''உன் பொண்ணை இப்ப எதுக்கு கட்டிக்கொடுக்க ஆசைப்படற, கல்யாண வயசு வரப்ப நானே வந்து பொண்ணு கேட்டு என் பையனுக்குக் கட்டி வைக்கிறேன், பேச்சு மாறமாட்டேன்'' என்றார் இராஜமன்னார்.

ஜோசியர் சொன்னதை சொன்னதும் ''அட என்ன நீ இவ்வளவு பட்டிக்காட்டுத்தனமா இருக்க, இப்ப உலகம் எவ்வளவு தூரம் முன்னேறிக்கிடக்கு, ஜோசியம் பாசியம்னு'' என அறிவுரை கூறி அனுப்பினார். ஆனாலும் மனது கேட்காமல் ஜோசியரிடம் சென்று பரிகாரம் கேட்டதற்கு ஜோசியர் ''பரிகாரம் இருக்கு, ஆனா முப்பது வயசுக்கு அப்புறம் தான் அதுவும் செய்ய முடியும், அதுவும் இரண்டாம் தாரமாப் போனாத்தான் உண்டு'' என்றார் ஜோசியர். மனதைத் தேற்றிக்கொண்டு விளையாட்டுத்தனமாக நினைத்த விசயம் விபரீதமாகப் போய்க்கொண்டிருப்பதை நினைத்து வீடு சேர்ந்தார் நாராயணன்.

இரண்டு மாதங்கள் கடந்தது. சனிக்கிழமையானால் கல்யாணம் பத்தி பேச ஆரம்பித்துவிடுவாள் ஆண்டாள். கோதைநாச்சியார் ஆண்டாளிடம் நிலைமையை சொல்லி போன சனிக்கிழமை அழுதேவிட்டார். ஆண்டாள் ''நான் கல்யாணம் பண்ணாமே வாழ்ந்துக்கிறேன்ம்மா, இப்ப கல்யாணம் வேணாம்மா, அழாதே'' என சொன்னவள் ''ஜோசியர் பத்திக் கவலைப்படாதேம்மா, காதலுக்கு அதெல்லாம் ஒரு தடையும் இல்லம்மா, எனக்கு காதல் வரும்லம்மா'' என சொல்லிவிட்டு சிறு பிள்ளையாய் விளையாடினாள். கோதைநாச்சியார் ''பெருமாளே'' என்றார்.

(தொடரும்)

No comments: