Wednesday 1 July 2009

வேத நூல் - 6

சாங்கோ அசையாது அப்படியே நின்றான். மூவரும் திரும்பிப் பார்த்தபோது சாங்கோ தொடர்ந்து வராததைக் கண்டு ரேண்ட்டர் கோபம் கொண்டார். ஏனிவன் இப்படி நடந்து கொள்கிறான் என அவனை அழைக்கச் சென்றார். சாங்கோ ரேண்ட்டரிடம் ''இது நம்மைப்போன்றவர்கள் வாழும் பகுதியாகத் தெரிகிறது, இல்லையெனில் இத்தனைப் பெரிய கல் தானாக உயர்ந்து இருக்காது. எதற்கு ஆயுதங்களைத் தயார்நிலையில் வைத்திருப்போம்'' என்றான். ''ஏன் விலங்கினங்களை வேட்டையாடியது போதாதென்று மனிதர்களையும் வேட்டையாடப் போகிறாயா? எனது குறிக்கோள் இங்கிருந்து செல்வங்களை அள்ளிச் செல்வது மட்டுமே'' என்றார் ரேண்ட்டர். ''சரி நடக்கலாம்'' என்றான் சாங்கோ.

சிறிது நேரத்தில் அவர்களை வழிமறித்து நிறுத்தினான் ஒருவன். தன்னை கிரகமெஸ்ட் என அறிமுகப்படுத்தியவன், யார் எவர் என விபரங்கள் விசாரித்துவிட்டு அவர்கள் நால்வரையும் அழைத்துக்கொண்டுச் சென்றான். அவர்கள் பேசியதை கிரகமெஸ்ட் புரிந்தவன் போல் தலையாட்டினான். எந்த இடம் செல்கிறோம், என்ன நடக்கும் என அறியாமல் அவனைப் பின் தொடர்ந்தார்கள். ஆனால் சாங்கோ தன் தந்தையிடம் அந்த நபரை அடித்துப் போட்டுவிடலாம் என சொன்னான்.

இதைக்கேட்ட மிபலோ சாங்கோவிடம் ''தேவையில்லாது பிரச்சினைகளை வளர்க்காதே, அமைதியாக இரு, இது புதிய இடம்'' என்றான். கிரகமெஸ்ட் அவர்களை ஒரு கல் கட்டிடத்துக்குள் அழைத்துச் சென்றான். அவர்களைப் பார்த்ததும் ''அட்லாண்டீஸ் காரர்களா'' என்றான் தலைமை அதிகாரியாய் அமர்ந்து இருந்த ரேவிரன். ''இல்லை, தமிழ்காரர்கள்'' என்றான் கிரகமெஸ்ட். ''அட்லாண்டிஸ்காரர்கள் போல் இவர்களும் பிரமிட் கட்டப் போகிறார்களா?'' என்றான் ரேவிரன். ''இங்கேயிருந்து திருடிச்செல்ல வந்திருக்கிறார்கள்'' என்றான் கிரகமெஸ்ட்.

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என அறியாது இருந்தாலும் சூழ்நிலையை அறிந்தான் மிபலோ. ''திருட வந்திருக்கிறார்களா?, அவர்களைக் கொன்றுவிடு'' எனச் சொல்லி அனுப்பினார். ''வாருங்கள் போகலாம்'' என அழைத்தான் கிரகமெஸ்ட். மிபலோ, குவ்விலான் எழுதியிருந்த எழுத்தை வாங்கிக்கொண்டு ரேவிரனை நோக்கி முன்னேறினான்.

(தொடரும்)

No comments: