Friday 24 July 2009

ஆசைப்பட்டேன் - 5

தேர்வில் வெற்றி பெற்றதும் மனம் அளவிலா மகிழ்ச்சி கொண்டது. பார்மகாலஜி அல்லது வேதியியல் துறைக்குச் செல்ல வேண்டும் என ஆசையாய் இருந்தது. பீகார் மாநிலத்திலும் மேற்கு வங்காளம் மாநிலத்திலும் இரண்டு வார இடைவெளியில் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. பீகார் மாநிலத்தில் தேர்ச்சியடையாமல் போகவே ஆசை வேதனையானது. ஆசைப்படு ஆசைப்படு என நண்பர்கள் சொல்லியும் ஆசையே இல்லாமல் மேற்கு வங்காளம் சென்றேன். அங்கே நுண்ணுயிரியல் தந்தார்கள். ஆசையுடன் ஏற்றுக்கொண்டேன். பரோடா செல்ல அழைப்பு வந்தது. ஆனால் ஆசைப்பட முடியவில்லை. வேதியியல் பிரிவும் தந்தார்கள். இருப்பதே போதும் என ஆசை கட்டுப்பட்டது. ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனும் பேராசை ஒருவழியாய் முதல்படியை தொட்டது.

அப்போதுதான் எனது கவிதைகளை வெளியிட வேண்டும் எனும் ஆசை துளிர்விட்டது. எழுதிக்கொண்டேதான் இருந்தேன். கவிஞன் என நண்பர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டேன். ஆசை துள்ளல் கொண்டது.

மேற்கொண்டு மருத்துவ ஆராய்ச்சி செய்ய வேண்டும் என ஆசை அதிகமாகவே இருந்தது. எனது ஆசையை நிறைவேற்ற எனது முதுநிலை ஆசிரியரே உதவுவதாக சொன்னார். சில காரணங்களால் அவரது ஆசையுடன் என் ஆசை சேராமல் போனது. டில்லி சென்று ஆசையைத் தொடர்ந்தேன். மூன்றே மாதங்களில் கல்யாண ஆசை தொற்றிக்கொள்ள ஆசிரியர் ஆனேன்.

கல்யாணப் பருவம்

என்னுடன் என் தாய் எப்போதும் இருக்க வேண்டுமெனும் ஆசை அடுத்த வருடத்திலே தொலைந்து போனது. அழுதபோதாவது அம்மா வருவாளா? இங்கேதான் நான் கடவுளின் ஆதிக்கத்தில் முழுதும் என்னை தொலைத்து இருந்தேன். உயிர் வாழும் ஆசை கூட அற்றுப்போனது எனலாம். தாய் ஆசைப்பட்ட பெண்ணும் நான் ஆசைப்பட்ட பெண்ணுமே மனைவியானார். சிறகுகள் முளைக்கத் தொடங்கியது. இந்தியாவில் பண்ண வேண்டிய ஆராய்ச்சியை இங்கிலாந்தில் இலண்டனில் பண்ணிட வாய்ப்பு கிடைத்தது. ஆசையிலும் பேராசை!

கல்யாணம் ஆனது, குடும்பமும் ஆனது. அட இனி ஆசைப்படாமல் இருக்க முடியாதே. ஆனால் ஆசைகள் என்னைத் தொலைக்கத் தொடங்கின. கவியுணர்வு தொலைந்தே போனது. ஆராய்ச்சி என்னை ஆக்கிரமிக்கவும் குடும்ப பொறுப்பும் என்னை ஆசையை சற்றே ஓரமாக்கத் தூண்டியது. கடவுளை கேள்வி கேட்கும் விநோத ஆசை வந்து சேர்ந்தது. திருநீரும் குங்குமும் அணிந்தே பழக்கப்பட்டு வெறும் நெற்றியாய் நடந்திட எதையோ தொலைத்து விட்டது போன்ற உணர்வு. மதித்து போற்றிய கடவுளுடன் சற்று அதிகமாக விளையாடிய தருணங்கள்தான் இவை.

கோதை ஆண்டாள் ரங்கன் மேல் ஆசைப்பட்டாள்
முருகன் வள்ளியின் மேல் ஆசைப்பட்டார்
ராமன் சீதையின் மேல் ஆசைப்பட்டார்
சீதை ராமன்மேல் ஆசைப்பட்டார்
மீரா கண்ணன் மேல் ஆசைப்பட்டாள்
நானும் நாராயணன் மேல் ஆசைப்பட்டேன்!

நுனிப்புல் சிதறியது. நுனிப்புல் ஆசை பேராசையானது. புத்தகம் வெளியிட்டு எனக்கும் எழுதத் தெரியும் என அடையாளம் காட்டிக்கொண்டேன். கவிதைப்புத்தக ஆசை ஆசையாகவே இருக்கிறது.

அதே வேளையில் ஆசையாய் அன்று ஆரம்பித்த ஆராய்ச்சி வரும் காலத்தில் மக்களுக்கு உதவும் என நினைக்கும்போது ஓரளவு நிம்மதியாக இருக்கிறது. தொடர்ந்து ஆராய்ச்சி ஆசையை நடத்தி தந்து கொண்டிருக்கும் நாராயணனை வணங்கிக் கொள்கிறேன்.

என் பேராசைகள் தொடரும்

No comments: