Saturday 25 July 2009

சில்வண்டுகள் - 9

நிலம் அதிர்ந்தது. வெகுவேகமாக தூரத்தில் ஒருவர் ஓடிவருவதைப் பார்த்தார் ஜகநாதன். சுகுமாரனை தனக்குப் பின்னால் சென்று நின்று கொள்ளுமாறு கூறினார். மோகனவள்ளி திரும்பிப் பார்த்தார்.

''ஜகநாதா என்னை காப்பாத்துடா, அவனை இனிமே அடிக்க மாட்டேன், ஜகநாதா என்னை மீண்டும் அழிய விட்டுராதேடா'' என மோகனவள்ளி சொல்லிக்கொண்டிருக்கும்போதே சட்டை போடாத ஜகநாதன் அங்கு கடுங்கோபத்துடன் வந்து நின்றார். மேலும் கீழும் தாவி குதித்தார். இதை மறைந்து நின்று பார்த்த சுகுமாரன் உறைந்து போனான். உள்ளம் நடுநடுங்கியது. கண்களை இறுக மூடிக்கொண்டான். ஆத்திரத்துடனும் ஆவேசத்துடனும் ஆடிய சட்டை போடாத ஜகநாதன் எதுவும் பேசாமல் தாயை எரிக்கத் தொடங்கினான். தாய் அலற ஆரம்பித்தாள்.

''வேண்டாம்டா ஜகநாதா, நிறுத்துடா ஜகநாதா, அவன் உன் அப்பாவையே எரிச்சான், நீ என்னை எரிக்கிறியேடா'' என சொல்லியபோது சட்டை போட்ட ஜகநாதனுக்கு கடுங்கோபம் வந்தது. ''என்னம்மா சொல்கிறாய்? நான் எரித்தேனா? உன்னை காப்பாற்றுவது மகாபாவம்'' என சொல்லிவிட்டு சுகுமாரனை அழைத்துக்கொண்டு ஊருக்குள் நடக்கத் திரும்பினார். சட்டை போடாத ஜகநாதன் சுகுமாரனைப் பார்த்துவிட்டார். ஆவேசத்துடன் ஓடி வந்து சுகுமாரன் முன்னால் நின்றார் அவர். சுகுமாரன் நடுநடுங்கினான். சட்டை போட்ட ஜகநாதன் 'இவன் அமைதியானவன், இவனை விட்டுவிடு'' என சொன்னதும் தரையில் ஆக்ரோஷமாக சுற்ற ஆரம்பித்தார் சட்டை போடாத ஜகநாதன். அதற்குள் தாய் எரிந்து சாம்பலாகி இருந்தார். கீழே விழுந்து சாம்பலில் உருள ஆரம்பித்தார். இந்த செய்கைகளை கண்டு சுகுமாரன் மயங்கி விழுந்தான்.

''நிறுத்து ஜகநாதா, உனது கோபத்தையும் ஆவேசத்தையும் நிறுத்து'' என சட்டை போடாத ஜகநாதனிடம் சென்று உரக்கச் சொன்னார் சட்டை போட்ட ஜகநாதன். உருள்வதை நிறுத்தியவர் மேலும் கீழும் பார்த்தார். உரக்கச் சிரித்தார். மயங்கிய நிலையிலே இருந்தான் சுகுமாரன்.

''நீ அமைதியை தேடிக் கொண்டாயோ''

''அமைதியில் தான் உள்ளேயே இருந்து கொண்டேன், நீ வெளியே சென்று இன்னமும் கோபம் தணியவில்லை, நான் உள்ளே இருந்து அமைதியை அறிந்து கொண்டேன்''

''வெளியேயும் அமைதி காணலாம் என அன்று உன்னிடம் கூறிவிட்டு வெளிச்சென்று சிவாங்குகம் காட்டினிலே கடுந்தவம் புரிந்து அமைதியின் உச்சத்தைத் தொட்டபோது கடும் மழை எனது தவம் கலைத்தது. இடம் மாறினேன். அமைதியாய் இருக்க இடம் தேடியபோதெல்லாம் எவரேனும் ஒருவர் இன்னல் தந்து கொண்டிருந்தார். எனவே நான் செய்யும் செயல்களுக்கு உன்னிடம் இனிமேல் விளக்கம் தரப்போவதில்லை''

''உனது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர் என அடுத்தவரை கைகாட்டுவதை இன்னும் நீ மறக்கவில்லை''

''நீயும் அமைதி இழந்துதானே இதோ இந்த மாபாவியின் சொல்கேட்டு வீட்டினுள் வருபவரை விரட்டி அடித்தாய், நீயும் அமைதியற்றே அலைந்து திரிந்தாய். சில தினங்களுக்கு முன்னர் அதிகாரிகளை பொடி தூவி நீ எரித்ததை நான் அறியமாட்டேன் என நினைத்தாயா? எனது கோபத்தை நீ அதிகரிக்காதே''

''மனிதர்கள் கோபம் இல்லாமல் வளர்ச்சி அடைய முடிவதில்லை. ஒன்றை உரசாமல் ஒன்று உருமாற்றம் கொள்வதில்லை எல்லாம் ஒருவித கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அதை அறிய நீ வெளியே திரிய வேண்டியதில்லை, உள்ளே நான் முடங்கிப்போக அவசியமில்லை. இதோ இவனே எனக்கு ஆசான்'' என சட்டை போட்ட ஜகநாதன் சுகுமாரனை நோக்கி காட்டியதும் அவனை எரிக்கத் தொடங்கி்னார் சட்டை போடாத ஜகநாதன்.

விழித்தான் சுகுமாரன். எரிய விடாமல் தடுத்தார் சட்டை போட்ட ஜகநாதன். ''நீ எரிப்பதைத் தொடர்ந்தால் நான் பிழைக்க வைப்பதை தொடர்வேன், நீ எரித்ததற்கு அர்த்தம் இல்லாமல் போகும் எனவே நீ நிறுத்திக்கொள்'' என அவர் கூறியதைக் கேட்டு மேலும் கீழும் குதித்தார் சட்டை போடாத ஜகநாதன்.

சுகுமாரனை நோக்கி ''அன்றே என் பின்னால் வராதே என உன்னிடம் சொன்னேன், உன்னைப் போன்றவர்கள் எங்கள் தவ யோகத்தினை தடுக்க வல்லவர்கள் இப்பொழுதே சென்று விடு'' என சொன்னதும் 'அவன் தாய் தந்தையர்களை இழந்துவிட்டான், இனிமேல் என்னுடனே இருப்பான், கோபம் அமைதிக்கான வழி என அறிந்து கொள் அமைதியை அழிக்கவல்லது அல்ல. கோபம் நேர்வழியில் நடக்க உதவி செய்யும், கோபத்தினால் ஏற்படும் மெளனம் சாதிக்கவல்லது. அந்த கோபத்தைக் கொண்டு நீ எரிப்பதை தவிர்த்துவிட்டு அமைதியை உருவாக்கக் கற்றுக்கொள்'' என சட்டை போட்ட ஜகநாதன் சொன்னதும் சுகுமாரனுக்கு சப்தநாடிகளும் ஒடுங்கிவிட்டது.

''ஜகநாதா'' என பலமாக கத்தினார் சட்டை போடாத ஜகநாதன். ''நீ அணிந்திருக்கும் ஆடையைப் போன்றே உன்னில் இருக்கும் கோபத்தை மறைத்து வைக்கிறாய். நான் அமைதியாய் இருக்கத்தான் விழைந்தேன். இதோ இந்த மாபாவி சொன்னதுபோல் இந்த உலகத்தில் அமைதியாகவே இருக்க இயலாது!'' என சொல்லிவிட்டு கிறுகிறுவென சுத்தினார்.

''இருக்க இயலும், சாதுக்கள் இருக்கிறார்கள். சதா இறைவனையே நினைத்துக்கொண்டு சக மனிதர்கள் மேல் கோபம் கொள்ளாமல் வாழ்பவர்கள் இருக்கிறார்கள்''

''ருத்ர தாண்டவம் தெரியாதா! புராணங்கள் படித்தறியா மூடனே! தேவலோகம் என சித்தரித்து தவத்தினை சிறுமைபடுத்திய முனிவர்கள் கூட்டம் தெரியாதா, கோபம் கொண்ட மகான்களே அதிகம் உண்டு! அமைதியை விரும்புவதுபோல் அழிப்பதையே குறிக்கோளாயும், அழிக்கும் எண்ணம் கொண்டவர்களை அதிகரித்தவர்களே அதிகம் உண்டு. எந்த இறைவன் அமைதியே சொரூபமாக வாழ்ந்தார்!'' என சொல்லி சுற்றிக்கொண்டே ஜகநாதனை நோக்கி வந்தார் சட்டை போடாத ஜகநாதன். இருவரையும் கண்ட சுகுமாரன் கதிகலங்கிப் போனான்.

''கோபத்தில் மதி இழந்து பேசாதே, ஒருவரை மட்டும் உனக்கு உரைக்கிறேன், அவர் சீனிவாசப் பெருமாள்'' என சட்டைப் போட்ட ஜகநாதன் சொன்னதும் சட்டைப் போடாத ஜகநாதன் அப்படியே நின்றார்.

(தொடரும்)

No comments: