Saturday 25 July 2009

சில்வண்டுகள் - 10 (முற்றும்)

'' நீ சீனிவாசப் பெருமாள் பற்றி எனக்கு ஒன்றும் புதிதாக சொல்ல வேண்டாம், இந்த மனிதர்கள் கோபம் ஒன்றே அதிகம் அறிந்தவர்கள். எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர்கள். அமைதியாய் இருப்பதையும் கண்டு கோபப்படுபவர்கள். தேவர்களும் கோபத்தின் மொத்தவடிவமாகவே இருந்தார்கள். அசுரர்களை அழித்துத்தான் அவர்களால் எதையும் சாதிக்க முடிந்தது. பக்தியில் செழித்திருந்த அசுரர்களை அன்பினால் அமைதியினால் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதை நீ அறிவாயா?'' என கோபத்துடன் கூறினார் சட்டை போடாத ஜகநாதன்.

''கோபங்கள் இல்லாமல் வாழ்வது இயலாத காரியம். சின்ன சின்ன விசயங்களுக்கும் கோபங்கள் வந்தே தீரும். கோபம் கொள்வதால் நிலை மாறப்போவதில்லை என அறிந்தும் கோபம் வந்தே தீரும். கோபம் அமைதிக்கான வழியே'' என சட்டை போட்ட ஜகநாதன் சொல்லியதும் மற்ற ஜகநாதன் ஆவேசமானார்.

''நீ இன்னும்மா மாறவில்லை, கோபம் அழிப்பது; எனது கோபம் அமைதியை குலைப்பது. அமைதியாய் இருக்க துடித்திடும் என்னை இந்த கோபம் விடுவதில்லை. உன்னை என்ன செய்கிறேன் பாரடா'' என சட்டை போடாத ஜகநாதன் சொன்னதும் சட்டை போட்ட ஜகநாதன் சுகுமாரனை 'வீட்டுக்கு போ' என சொன்னார்.

சுகுமாரன் அங்கிருந்து ஓடினான். பயங்கரமாகச் சிரித்தார் சட்டை போடாத ஜகநாதன். ''கோபத்துடனே வாழ்பவர்களே வெற்றி பெறுகிறார்கள்'' என சட்டை போட்ட ஜகநாதனை எரிக்கத் தொடங்கினார். போராடிப் பார்த்தும் முடிவில் எரிந்து சாம்பலானார் சட்டை போட்ட ஜகநாதன். சாம்பலை உடலில் பூசிக் கொண்டு ஊருக்குள் நடக்கலானார் அவர்.

ஓடிய சுகுமாரன் ஒரு இளைஞன் ஜகநாதன் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டான். மறைந்து இருந்து பார்த்தான். மூதாட்டி உணவு வந்து வைத்தாள் அதே போலே நடித்தாள். ஆனால் அந்த இளைஞன் உண்ணாமல் தட்டை கீழே தள்ளிவிட்டான். கதவைத் திறந்து கொண்டு தீப்புண்களுடன் வந்த அந்த வயதானவர் அந்த இளைஞனை ஒரு பக்கம் இழுத்துச் சென்றார். மூதாட்டியும் உடன் சென்றார். எரியும் வாசனை அடித்தது. அதிர்ந்து போனான் சுகுமாரன். திரும்பியவன் தோளில் ஜகநாதன் கையை வைத்தார். அரண்டு போனான் சுகுமாரன்.

உள்ளே போய் நான் வந்திருக்கிறேன் என சொல் என சொன்னார் அவர். சுகுமாரன் போக மறுத்தான். போ என சத்தமிட்டார். சுகுமாரன் உள்ளே நுழைந்தான். அறையில் ஒருவன் எரிந்து கொண்டு இங்கும் அங்கும் ஓடினான். அவனை கட்டையால் அடித்து அடக்கிக் கொண்டு இருந்தார்கள். 'ஆ' என கத்தியே விட்டான் சுகுமாரன். திரும்பி பார்த்த மூதாட்டி 'நீ திரும்பவும் வந்தாயா' என கூறிக்கொண்டே பொடியை தூவினார். சுகுமாரன் வெளியில் ஓடிவரும் முன் தீயை எறிந்தனர். சுகுமாரன் எரியத் தொடங்கினான்.

இதைக் கண்டு சிரித்துக் கொண்டே கோபம் இல்லா மனிதர்கள் இருக்கவே முடியாது. கோபம் அழிக்கும், அது அமைதிக்கான வழி இல்லை என சத்தமிட்டார். வயதானவரும் மூதாட்டியும் வந்து பார்த்தனர். எரிந்து சாம்பலானான் சுகுமாரன். ஜகநாதன் அவர்களை உள்ளுக்குள்ளே தள்ளிவிட்டுவிட்டு வீட்டினை எரித்துவிட்டு நடக்க தொடங்கினார். கிராமம் அதிர்ச்சிக்குள்ளாகியது. ஊர்க் கோவிலில் சென்று அமர்ந்தார். ஊரில் யாருமே சண்டை போடாமல் இருந்தார்கள். சத்தம் போட்டு பேசுவதற்கு கூட பயந்தார்கள். ஒரு நாள் ஜகநாதபுரத்திற்குள் ஒரு வாகனம் நுழைந்தது. அதிலிருந்து இறங்கிய இளைஞன் ஒருவன் நேராக கோவிலுக்கு சென்று ஜகநாதனைப் பார்த்தார். அவனுடன் வந்த அவன் குடும்பத்தினர் கோவிலைச் சுற்றினார்கள். ஜகநாதனிடம் பேசினான் அந்த இளைஞன்.

''கோபம் கொண்டால் நீங்கள் எரித்து விடுவீர்களாமே''

''ம்ம்''

''உங்களை யார் எரிப்பது?''

அவனை மேலும் கீழும் பார்த்தார் ஜகநாதன்.

''அன்பினை சொல்லக் கூட சத்தம் போட்டுத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அன்பினை வலியுறுத்த கோபம் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி கோபம் மனித வாழ்வில் பெரும் இடம் வகிக்கிறது. சாந்த சொரூபமாக இருக்க நடக்கும் நிகழ்வுகள் உதவுவதில்லை. எல்லா மணி நேரத்திலும் எல்லோரும் கோபம் கொள்வதில்லை. அன்பே உருவமாக வாழ்ந்த மனிதர்களையும் எவரும் மதித்து நடப்பதில்லை. அமைதியைத் தேடி இப்படி கோபம் கொண்டு அழையும் உம்மை யார் எரிப்பது என்றுதான் கேட்டேன்''

''நீ யார் எனத் தெரியவில்லை''

''உனது கண்களுக்கு என்னைத் தெரியாதது ஒன்றும் பெரிய விசயமில்லை. உன்னிடம் எத்தனை பெரிய சக்திகள் இருக்கின்றன. நீ நினைத்தால் எவரையும் எரிக்கலாம். ஆகாரம் காற்று எதுவுமின்றி நீ வாழலாம். மரணம் என்பதை அருகே விடாத வண்ணம் நீ இருக்கலாம். இத்தனை சக்திகளை கொண்டு நீ அமைதியை உலகில் நிலை நிறுத்தி இருக்கலாம். உன்னால் ஏன் முடிவதில்லை? உனது அமைதியை குலைத்தார்கள் என்றுதானே நீ நினைத்தாய். அவர்கள் ஏன் அமைதியற்று திரிகிறார்கள் என நினைத்தாயா?''

''நீ யார்? அவர்கள் அமைதியற்று இருக்கவே பிறந்தவர்கள். அவர்களுக்கு அமைதியாக இருந்தால் மரணித்துப் போனதாக நினைக்கக் கூடியவர்கள். எப்பொழுதும் சண்டையும் கோபமும் சத்தமும் போட்டு கொண்டே இருக்க வேண்டும் அவர்களுக்கு. அதனால் எனது அமைதிக்கு இடையூறு விளைவித்தால் எரிக்கிறேன். உன்னை எரிக்கும் முன்னர் சொல்லிவிடு''

''உனது செயல்களுக்கு காரணம் சொல்லிவிட்டாய் பார்த்தாயா! என் பெயர் சீனிவாச பெருமாள். அமைதியற்று இருப்பவர்களிடம் அமைதியை ஏன் எதிர்பார்க்கிறாய். இப்பொழுது சொல் உன்னை யார் எரிப்பது?''

ஜகநாதன் கோபம் கொண்டு எழுந்தார்.

'உடல் நிர்வாணம் ஒன்றும் அவசியமில்லை. மனம் நிர்வாணம் ஆக வேண்டும். நீ திருந்திவிடுவாய் என இருந்தேன். நீ என்றுமே மாறுவதில்லை என முடிவு கொண்டாய். உன்னை யார் எரிப்பது' என திரும்பவும் கேட்டான் அவன்.

ஜகநாதன் சுற்றத் தொடங்கினார். 'உன்னில் அமைதியும் அன்பும் நிலவட்டும். கோபம் உன்னிடம் இருந்து போகட்டும். இந்த மனிதர்கள் இப்படித்தான் சண்டை சச்சரவுகளுடன் இருப்பார்கள். நீ எரிப்பதை நிறுத்தி கொள்' என சீனிவாச பெருமாள் சொல்லியபோது ''ஏங்க இவ்வளவு நேரம் இங்க என்ன பண்றீங்க சீக்கிரம் வாங்க இராமேஸ்வரம் போகனும்' என கடிந்து கொன்டார் அவன் மனைவி.

வாகனத்தில் ஏறிக்கொண்டு கிளம்பியபோது தன்னையே எரிக்கத் தொடங்கினார் ஜகநாதன். கிராமம் வேடிக்கைப் பார்த்தது.

முற்றும்.

No comments: