Wednesday 1 July 2009

வேத நூல் - 7

மிபலோ முன்னேறிச் சென்றதைத் தடுத்தான் கிரகமெஸ்ட். ஆனால் ரேவிரன் மிபலோவிற்கு வழிவிடுமாறு கூறினான். மிபலோ ரேவிரனிடம் சென்று தனது கையில் இருந்த எழுத்துக்களைக் காட்டினான். அதைப் பார்த்த ரேவிரன் அதைப் பறித்து பக்கத்தில் நின்ற காவலாளியிடம் கொடுத்து இதனை உடனடியாக எரித்துவிடு எனச் சொன்னான். காவலாளியும் அதனை வாங்கிச் சென்று தீயில் போட்டான். மிபலோ செய்வதறியாது விழித்தான். குவ்விலான் அழுதான்.

கிரகமெஸ்ட்டிடம் படகில் தாங்கள் சென்றுவிடுவதாகவும் தங்களை கொன்றுவிட வேண்டாம் என சாங்கோ சொன்னான். மிபலோ கண்களை மூடி ரேவிரன் முன்னர் அமர்ந்தான். சூரியன் அனலாக சுட்டெரித்தது. இதோடு மட்டுமல்லாமல் இடியையும் மின்னலையும் கேட்டு ரேவிரன் அச்சம் கொண்டான். தனது செயல்தான் இதற்கு காரணம் என அவனது மனம் அவனை வதைக்கத் தொடங்கியது. அனைவரையும் அமைதியாக இருக்குமாறு பணித்தான் ரேவிரன். நால்வரையும் எதுவும் செய்து விடவேண்டாமெனக் கேட்டுக்கொண்டான. ஆனால் மிபலோ மூடிய கண்களைத் திறக்கவில்லை. பனி உருகத் தொடங்கி கடலின் நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. நைல் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

கண்களைத் திறந்தான் மிபலோ. மிபலோவிடம் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுமாறு பணித்தான் ரேவிரன். மிபலோ ஏற்றுக்கொண்டான். ரேவிரன் சிலநாட்களிலேயே மரணத்தைத் தழுவினான். கிரகமெஸ்ட் மிபலோவிற்கு உதவி புரிவதாக வாக்கு அளித்தான். தான் சொன்ன விசயங்கள் எல்லாம் தொலைந்து போனது குறித்து மிகவும் வேதனையுற்றான் மிபலோ. ரேண்ட்டர் சாங்கோவுடன் தனது ஊர் நோக்கிச் செல்லத் திட்டமிட்டார்.

அப்பொழுது ஏற்பட்ட இந்த பெரும் பிரளயத்தால் அட்லாண்டீஸ் எனும் நிலப்பரப்புபகுதி அப்படியே கடலுக்கடியில் மூழ்கியது. அங்கிருந்து தப்பித்து வந்த அட்லாண்டீஸ்காரர்கள் பலர் எகிப்தில் தஞ்சம் புகுந்திடத் தொடங்கினார்கள். எகிப்தில் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது.

அட்லாண்டீஸ்லிருந்து தப்பி வந்த மக்களுடன் நல்லதொரு தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டான் மிபலோ. சாங்கோ மிபலோ மேல் அதிகம் பொறாமை கொண்டான். மிபலோ தான் மிகப்பெரிய பிரமிட் ஒன்றை கட்ட வேண்டும் என எனும் எண்ணம் கொண்டு அட்லாண்டீஸ்காரர்களுடன் இணைந்து திட்டத்தைத் தொடங்கினான். எரிச்சலுற்ற சாங்கோ அதிக செல்வங்களுடன் ரேண்ட்டருடன் தனது ஊருக்கான பயணத்தைத் தொடங்கினான். தான் எழுதி வைத்திருந்த அனைத்தையும் பத்திரப்படுத்தினான் சாங்கோ. அவர்களை வழியனுப்பி வைத்தான் மிபலோ.

மிபலோ மீண்டும் குவ்விலானை எழுதச் சொன்னான். கடவுள். குவ்விலான் கடவுள் என்று மட்டுமே எழுதினான்.

பத்து வருடங்கள் போராடி மாபெரும் பிரமிட் ஒன்றைக் கட்டி முடித்தான் மிபலோ. இந்த பிரமிட் தனது எண்ணத்தால் அலங்கரிக்கப்படட்டும், இந்த பூமியில் ஏற்பட்ட இந்த பிரளயத்தையும், அட்லாண்டீஸ்காரர்களின் சிறப்பைச் சொல்லட்டும் என்றான் மேலும். பிரமிட்டில் பாதுகாப்பான அறை ஒன்றில் தான் சொல்லி குவ்விலான் எழுதியதை எல்லாம் உள்ளே வைத்து பூட்டினான்.

பத்து வருடத்திற்குப் பின்னர் சாங்கோ சிரகமெராவுடன் எகிப்து நோக்கி பயணம் செய்தான்.

(தொடரும்)

No comments: