Monday 30 September 2013

டிவிட்டர்களில் அறிவு ஜீவிகள்

பொதுவாகவே இந்த சமூக இணைய தொடர்புகளுக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்லை என்றே ஒதுங்கி கொள்வது உண்டு. எவரேனும் நண்பர்கள் லண்டன் வந்தால் கூட என்னால் நேரம் ஒதுக்கி சென்று பார்க்க இயலாத நிலையில் தான் எனது வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டு இருக்கிறது. அதே போன்று, ஊருக்கு சென்றாலும், இருக்கின்ற மூன்று வார விடுமுறையில் உறவினர்கள் தேடி சென்று பார்ப்பதில் கழிந்து விடுகிறது. இதன் காரணமாக எப்போதும் தனித்தே இயங்கி பழகியாகிவிட்டது. 

கணினியில் வந்து அமர்ந்து ஒரு விசயம் படித்த காலம் மலையேறி விட்டது, இப்போதெல்லாம் தமிழில் மொபைல் போனில் எழுதும் வசதியெல்லாம் பெருகிவிட்டதால் படித்த விசயத்திற்கு உடனே பதில் எழுதும் வசதி வந்துவிட்டது. வீட்டில் மொபைலில் அப்படி என்ன இருக்கிறது என திட்ட ஆரம்பித்து விட்டார்கள். தமிழை படிப்பது எத்தனை சுகம்? 

டிவிட்டரில் நான் இணைய வேண்டாம் என ஒதுங்கியே இருந்த காலம். இணைந்த பின்னர் என்ன எழுதுவது என புரியாத போது பலரின் எழுத்துகள் வாசிக்க நேர்ந்தது. எண்ணற்ற நல்ல கருத்துகளை பகிர்ந்து கொண்டு இருப்பதை பார்க்கும்போது அட என்று தான் தோணியது. பெரும்பாலும் தமிழ் டிவிட்டுகள் சினிமாவை பற்றியே இருந்தாலும் இன்னும் எனது வாசிப்பு விரிதல் அடையவில்லை. கூகுள் பிளஸ், பேஸ்புக் இவையெல்லாம் விட டிவிட்டர் மிகவும் வசதியாக இருப்பது போல் எனக்கு தோணுகிறது.

சமூக இணைய தளத்தில் பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் ட்விட்டரில் சற்று அதிகமாகவே இருக்கும் போல தெரிகிறது. வீணாக பேசி பொழுதை கழிக்கும் நபர்கள் உண்டு என்றே புலம்புவதை காண இயல்கிறது. இதை எல்லாம் தவிர்த்து அறிவியல் அறிஞர்கள் கூட வலம் வருகிறார்கள். சற்று அறிவை வளர்த்து கொள்ள உதவும் என்றே நினைக்கிறேன். 

திருக்குறள் போல டிவிட்டர் செயல்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எழுத இயலாது என்பதால் ஒரு சில வரிகளில் எண்ணத்தை பகிர வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. 

நான் சில விசயங்களை பொதுவாக சொல்லும் போது அதை சற்றும் நம்புவதில்லை. இவ்வுலகில் இதுதான் இப்படித்தான் என எவராலும் வரையறுக்க இயலாது. அவரவர் அனுபவத்தின் அடிப்படையில் செய்தியை பகிர்ந்து கொள்கிறார்கள். பொதுவில் சில விசயங்கள் தவறாகவே தெரிகிறது. 

தாய் மட்டுமே கருணை உடையவரா? தாயின் கருணையை ஒரு ஆணினால் மிஞ்ச இயலாதா? என்பன போன்ற விசயங்கள் பகிரப்படுகின்றன. சட்டென சிரிப்பு மூட்டும் வசனங்கள் வலம் வருகின்றன.நேரடியாக நேரம் கிடைக்கும் போது பல தமிழ் மக்களுடன் பேசும் வாய்ப்பு போன்றே இருக்கிறது. 

டிவிட்டரில் அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள், அவர்களை மட்டும் கண்டு கொள்ளுங்கள். தேவையில்லாமல் சண்டை போட்டு மன உளைச்சலுக்கு உட்படாதீர்கள். டிவிட்டர் அது ஒரு சமூகம் என்கிறார் ஒருவர். சரி என்றே படுகிறது! 

Thursday 26 September 2013

ஜீரோ எழுத்து 8 ( அணுக்களின் உலகம் )

'நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்' என நம்மில் பலர் மிகவும் எளிதாக சொல்லிக் கொள்வோம். ஆனால் நமக்குள் இருக்கும் வேறுபாடு சொல்லிமாளாது. இப்படித்தான் இந்தியாவின் பெருமை பெருமளவில் சீரழிக்கப்பட்டது. இந்த அணுக்கள் பற்றி கிரேக்கர்கள் தான் முதலில் சொன்னார்கள் என அவர்களை பெருமைபடுத்தி பார்த்தது மேலைநாட்டு உலகம். ஆனால் இந்தியர்கள் இந்த அணுக்கள் பற்றி அதிகம் தெரிந்து இருந்தார்கள், இருப்பினும் அணுக்கள் பற்றி அறிவித்தவர்கள் கிரேக்கர்களா, இந்தியர்களா எனும் சர்ச்சை இன்னமும் உண்டு. 

2600 வருடங்கள் முன்னரே இந்த அணுக்கள் பற்றி சொல்லித் தரக்கூடிய  பள்ளிகள் இந்தியாவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஜெயின் சமயம் மிகவும் தழைத்தோங்கி இருந்த சமயம் அது. அஜிவிகா, கார்வகா, வைசேசிகா, நியாய போன்ற பள்ளிகள் அணுக்கள் பற்றியும் அணுக்கள் இணைந்தால் மூலக்கூறு உருவாகும் என்றெல்லாம் சொல்லி தந்தது. இதே சமயத்தில் கிரேக்கத்தில் தேமாக்ரிடுஸ், லூசிப்பஸ் போன்றோர்கள் அணுக்கள் பற்றி பேசினார்கள். 'அணுவை துளைத்து' என்றெல்லாம் தமிழில் பாடி வைத்து இருக்கிறார்கள். கிரேக்க தத்துவ மேதைகள் இயற்கை விதிகளை படித்து அணுவை சொன்னதால் முதல் அறிவியலார்கள் என சொல்லப்பட்டார்கள். ஆனால் வேதங்களில் கூட அணு பற்றிய செய்தி உண்டு. அணுவில் என்ன இருக்கும் எனும் அன்றைய சிந்தனை சற்று குறைவு அல்லது அது குறித்து அவர்கள் சொன்னது அழிந்து போயிருக்கலாம். 

200 வருடங்கள் முன்னர் தான் இந்த அணுக்களில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எல்லாம் கண்டு பிடித்தார்கள். டால்டன் கண்டுகொண்ட அணு, மென்டலீவ் இடம் விட்டு வரைந்த தனிம அட்டவணை எல்லாம் அறிவியலின் அதிசயம். வெற்றிடம் எதுவும் இல்லை என்பதுதான் இவர்கள் சொல்லாமல் சொன்னது. குவார்க்ஸ் எனும் அடிப்படை துகள்கள்  மூலமே இந்த புரோட்டான், நியூட்ரான் உருவானது என கணடுபிடித்தார்கள். அணுக்களின் உள்ள கருவில் இந்த புரோட்டான்கள்  இருக்கின்றன எனவும், இவைகளை சுற்றி எலக்ட்ரான்கள் வருகின்றன என ரூதர்போர்டு 1911ம் வருடம்  சொன்னபோதுதான் அணுக்கள் பற்றிய ஆராய்ச்சி மிகவும் சூடுபிடித்தது. சாட்விக் நியூட்ரான் கண்டுபிடித்தார். 1897ம் வருடம்  ஜே. ஜே. தாம்சன் எலக்ட்ரான் கண்டுபிடித்தார். 1912ம் வருடம் நீல்ஸ் போர் கண்டுபிடிப்பு எப்படியெல்லாம் எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன எனும் அறிவிப்பே குவாண்டம் கொள்கையின் ஒரு ஆரம்ப நிலை. பத்து பன்னிரண்டு வருடங்களில் குவாண்டம் இயற்பியல் மிகவும் பேசப்பட்டது. பால் டிரக் என்பவர் 1925ம் வருடம் குவாண்டம் இயக்கியல் உருவாக்கினார். 

1945ம் வருடத்திற்கு பின்னர் நூற்றுக் கணக்கான புது புது துகள்களை தற்போதைய அறிவியல் தொழில்நுட்பம் மூலம் கண்டு பிடித்தார்கள். இவைகள் ஹெட்றான் என அழைக்கப்பட்டன. புரோட்டான் மற்றும் நியூட்ரான் இவைகளில் அடக்கம். இருப்பினும் இந்த ஹெட்றான் குவார்க்ஸ் என அறியப்பட்டது. எலக்ட்ரான்கள் லெப்டான்கள் எனப்பட்டன. லெப்டான்கள் தனியாக இருக்கும், அதற்கு ஒரு இணைப்பு ஆற்றல் இல்லை. ஆனால் குவார்க்ச்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இணைப்பு ஆற்றலுடன் இருக்கும் என அறியப்பட்டது. 

குவார்கக்ஸ், குலான்ஸ் எனப்படும் துகள்களால் பிணைக்கப்பட்டு இருக்கும். இந்த குவார்க்ஸ் மேசான்ஸ், ப்ரையான்ஸ் என துகள்கள் உருவாக்கி பின்னர் ஹெட்றான்ஸ் துகள்களாக இருக்கும். ப்ரையான்ஸ் துகளே நியூட்ரான், புரோட்டான் என அறியப்பட்டது. ஒரு அணு எப்படி நிறை கொண்டது என்பதை அறிய தற்போது நிறைய பொருட்செலவில் நடத்தப்படும் ஆய்வில் கண்டறிய பட இருக்கும் போஸான் எனும் கடவுள் துகள் மேசாணில் இருந்து உருவானது. 

லெப்டான் தன்னில் ஆறுவகை கொண்டு இருக்கிறது. எலக்ட்ரான், மோவோ, டாவோ மற்றும் மூன்று வகை நியூட்ரினோக்கள். எலக்ட்ரான் எதிர் பாசிட்ரான் என்றெல்லாம் கண்டு சொல்லப்பட்டது. இவ்வாறு பல துகள்கள் கொண்டு இருக்கும் இந்த அணுக்கள் உலகம் மிக மிக விசித்திரமானது. அதைத்தான் குவாண்டம் கொள்கை சொன்னது. இந்த அணுக்களின் உலகம் முற்றிலும் வேறானது என. 

ஆறு குவார்க், ஆறு லெப்டான் சேர்ந்து உருவாக்கியதுதான் இந்த உலகம், இந்த பிரபஞ்சம் எல்லாம். மூன்றே குவார்க் இணைந்து ஒரு நிறையை உருவாக்கி விட்டது என எண்ணினார்கள். புரோட்டன், நியூட்ரான்! இதை எல்லாம் தாண்டிய ஒரு அணுக்களின் உலகம் இருப்பதாக அறிவியல் நம்பத் தொடங்கியதுதான் குவாண்டம் கொள்கை. கருந்துளைகள் கண்டறியபட்டபோது அறிவியல் சற்று ஸ்தம்பித்து போனது.

(தொடரும் ) 

Wednesday 25 September 2013

பச்சை மாமலைபோல் மேனி

காலையில் இருந்து மாலை வரை எப்படியும் ஆயிரத்து எட்டு தடவை இந்த பாசுரத்தை கேட்டு இருந்து இருப்பேன். ''பச்சை மாமலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்''. எப்படித்தான் இப்படி ஒரு அற்புதமான பாசுரத்தை இயற்ற முடிந்ததோ என்றே எண்ணிக கொண்டே இருந்தான். என்னப்பா யோசனை என்றே அப்பா கேட்டார். நானும் பாசுரம் பற்றிய விசயம் சொன்னேன். இதில் என்ன பெரிய அற்புதம் இருக்கு என்றே சொல்லிவிட்டார்.
ஆனாலும் மனம் கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் அதே பாசுரம் மனதில் நிழல் ஆடிக் கொண்டு இருந்தது.

பக்கத்தில நாலு பிளாட் விலைக்கு வருதுடா, எப்படியாவது வாங்கிரனும் என்றார் அம்மா. ஏதுமா, நாலு போகம் நெல் விளையுமே, அந்த நிலத்திலா பிளாட் போடுறாங்க என ஆச்சர்யத்துடன் கேட்டேன். ஆமாடா, அடுத்த அறுவடையோட அந்த நிலம் எல்லாம் அபார்ட்மென்ட் ஆகிப் போகும்டா, யோசனை பண்ணிட்டு இருக்காதே, லோன் போடனும்னா, உடனே ஏற்பாடு செய்டா. பச்சை மாமமலைபோல் மேனி என பாடியபோது தொண்டை விக்கியது.

நகர்ப்புறங்களில் தான் இப்படி செய்கிறார்கள் எனில், கிராமப்புறங்களிலும் இந்த அவலம் தொடர்கிறதே என்றே மனம் வேதனையுற்றது. அந்த வேதனையில் அப்படியே தூங்கிப் போனேன்.

''பக்தா''

''வாருங்கள் சாமி, அமருங்கள்''

''மிகவும் மன வேதனையில் உழன்று கொண்டு இருக்கிறாயோ''

''ஆமாம், சாமி, விளைநிலங்கள் எல்லாம் வீடுகள் ஆகி கொண்டு இருக்கின்றன, இப்படியே போனால் இந்த பூமி தரிசாக மாறிவிடுமே, மக்கள் உணவுக்கு மிகவும் கஷ்டப்படுவார்களே, அதை நினைத்துதான் வேதனை அடைந்தேன்''

''பக்தா, உனது வேதனை புரிகிறது, எனினும் இந்த வேதனை எல்லாம் ஆகாது, எல்லாம் அந்த விஷ்ணு பார்த்து கொள்வான்''

''விளைநிலங்களை காப்பாற்ற தெரியாத விஷ்ணு, என்ன விஷ்ணு''

''பக்தா, விஷ்ணுவை கோபித்து என்ன லாபம், நமது மானிடர்களின் செயல்பாடு அப்படி, என்ன செய்வது''

''சாமி, இறைவன் நினைத்தால் எல்லாம் நடத்தலாமே''

''நடத்தலாம், நினைக்க வேண்டுமே, சரி, ஒரு பாசுரம் பற்றி நிறைய யோசனையில் இருந்தாயே''

''ஆமாம், சாமி, நல்ல வேளையாக நினைவுபடுத்தி விட்டீர்கள், பச்சை மாமலைபோல் மேனி எனும் பாசுரம் தான் என்னை நிறைய யோசிக்க வைத்தது''

''அது அற்புதமான பாசுரம் ஆயிற்றே, அதில் என்ன ஐயப்பாடு''

''அதெப்படி பச்சை மாமலைபோல் மேனி?''

''காக்கை சிறகினிலே நந்தலாலா எனும் பாடலில் கூட ஒரு அற்புதம் இருக்கிறது. நீல வண்ண கண்ணா வாடா எனும் பாடலில் கூட அற்புதம் இருக்கிறது''

''சற்று விளக்கமாக சொல்லுங்கள் சாமி''

''பக்தா, இப்போதெல்லாம் உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது, முன்னர் எல்லாம் நான் வந்தால் என்னை விரட்டுவதில் என் மீது வெறுப்பு காமிப்பதில் மட்டுமே குறியாய் இருப்பாய், ஆனால் இப்போதோ பொறுமையை கடைபிடிக்கும் வழக்கம் வைத்து இருக்கிறாய்''

''சாமி, விளக்கம் சொல்லுங்கள்''

''இந்த பூமியில் கரியமில வாயு மட்டுமே நிரம்பி இருந்தது. அப்போது இந்த விஷ்ணுவின் உடல் கரியநிறம் கொண்டு இருந்தது. வெறும் கரியமில வாயுவை உட்கொண்டே வந்த விஷ்ணு தனது செல்களில் குளோரோபிளாஸ்ட் அதாவது தற்போது செடி, மர இலைகளில் எல்லாம் இருக்குமே அது போல கொண்டு வந்தார். அப்படி கொண்டு வந்த சமயத்தில் அவரது உடல் பச்சை நிறமானது. அப்படி நமது பூமியில் இருந்த கரியமில வாயு எல்லாம் இந்த குளோரோபிளாஸ்ட் மூலம் ஆக்சிஜன், குளுக்கோஸ் எல்லாம் உருவாக்கினார். இந்த ஆக்சிஜன் குறைவான போது அவரது உடல் நீல வண்ணம் ஆனது. எப்போது பச்சை வண்ணம் கொண்டாரோ இதே சமயத்தில் தான் ஆர்கேபாக்டீரியா, சையனோபாக்டீரியா எல்லாம் தோன்றியது. அவைகளும் இந்த கரியமில வாயுவை உட்கொண்டு உணவு உற்பத்தி செய்தன. இப்படி உருவானபோது நீராவி எல்லாம் குளிர்ந்து தண்ணீராக மாறியது. அப்போது தண்ணீரில் பாசிகள் உருவான. அந்த பாசிகள் கூட பச்சை வண்ணம் கொள்ள ஆரம்பித்தது. அதற்கு பின்னர் மரம் செடிகள், கொடிகள் எல்லாம் தோன்றியதும், விலங்கினங்கள் உருவானதும் நீ அறிந்தது தானே''

''செவ்வாய் கிரகத்தில் சென்று எதற்கு விஷ்ணு பச்சை வண்ணம் கொள்ள வில்லை சாமி"

''அங்கே இன்னும் கரிய நிறமாகத்தான் இருக்கிறார் பக்தா''

''சாமி, பச்சை மாமலைபோல் மேனிக்கு ஏதோ விளக்கம் சொல்கிறீர்களே, கரியமில வாயு இந்த பூமியில் அதிகரிப்பதாக சொல்கிறார்களே''

''பக்தா, இந்த பூமியில் எல்லா விளைநிலங்களும் மாறிவிடும் எனில் மனிதர்களில் உள்ள தோல் செல்கள் எல்லாம் குளோரோபிளாஸ்ட் உருவாக்கிக் கொண்டு தனக்கு தானே உணவு தயாரித்து கொள்ளும். அதனால் எதற்கும் கவலைப்பட வேண்டாம். கரியமில வாயு அதிகரிப்பின் இந்த குளோரோபிளாஸ்ட் கொண்ட செல்களுக்கு கொண்டாட்டம் தானே. இந்த பூமி எத்தகைய இன்னல்களுக்கு உட்பட்டாலும் மீண்டும் வளமாகவே இருக்கும்''

''சாமி, இப்படி நீங்கள் பேசுவதுதான் எனக்கு வெறுப்பை வரவழைக்கிறது''

''பச்சை மாமலைபோல் மேனி''

சாமியார் பாடியதை கேட்டு விழித்துப் பார்த்தேன். சாமியார் அங்கே இல்லை. வீட்டில் தேடினேன் அம்மா, அப்பா கூட இல்லை. வீட்டின் வெளியில் வந்து பார்த்தேன். அம்மாவும், அப்பாவும் வீட்டுத் தோட்டத்தில் மரங்கள் நற்றுக் கொண்டு இருந்தார்கள். நானும் வேகமாக அவர்களுக்கு உதவப் போனேன். 

Tuesday 24 September 2013

நிலையில் பிரியேல்

உன்னை மறந்துவிட 
என்னிடம் 
ஆயிரம் கோடி 
கொடுத்தாலும் 
என்னை நான் மறந்தால் 
அன்றி 
எதுவும் நடக்காது 

கொண்ட துயரமோ 
கூடி வரினும் 
கண்டு கலங்கி 
செய்வதறியாது 
திகைத்து நிற்பினும் 
உன்னை விட்டு 
விலகிட மனம் உண்டோ!

தீயவை எனின் 
புறம் தள்ளலாம் 
செய்யத்தகாவை எனின் 
சீ என ஒதுங்கலாம் 
கண்ணில் மனதில் 
எண்ணத்தில் உள்ள 
உன்னை 
தூக்கி எறிந்திட முடியுமோ!

கீழ்தட்டு நிலையில் 
இருந்து 
மேல்தட்டு நிலைவரை 
உயர்ந்து ஓங்கிய பின் 
கீழே வீழ்ந்திடும் 
நிலை வரின் 
உயிர் நிற்குமோ!

எவ்வித தடைவரின் 
குழப்பமும் 
குந்தகமும் 
விளைவித்தே எவரும் வரின் 
நாம் கொண்ட 
காதல் நிலையில் 
எக்கணமும் பிரியேல் காதலி. 


Sunday 22 September 2013

சூப்பர் ஸ்டார்

என் இனிய நண்பா,

நலம், நலம் அறிய ஆவல். இ-மெயில், பேஸ்புக், ட்விட்டர் என எத்தனையோ வந்த பின்னும் உன்னுடன் எனக்கு கடித போக்குவரத்து மட்டுமே நிகழ்கிறது. தந்தி அனுப்புவதை கூட சமீபத்தில் நிறுத்தி விட்டார்கள், இல்லையெனில் உனக்கு ஒரு தந்தி அனுப்பி இருப்பேன்.

உனக்குத் தெரியும், நான் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து சூப்பர் ஸ்டாரின் பரம ரசிகன். அவர் என்ன செய்கிறார், என்ன பேசுகிறார் என நாள் தவறாமல் தேடித் தேடி படிப்பது உண்டு. அவரை காண்பதற்காக அவரின் ஒவ்வொரு பிறந்தநாளின்போது நான் அவரது போயஸ்கார்டன் தெருக்களில் சுற்றிக் கொண்டு இருப்பேன். எனது நோட்டு புத்தகங்களில் அறிவியல் படங்கள் இருக்குமிடத்தில் எல்லாம் சூப்பர் ஸ்டார் இருந்து கொண்டு இருப்பார். நான் எனது அறையில் தலைவர் படத்தை மட்டுமே வைத்துக் கும்பிட்டு வருகிறேன் என்பது கூட உனக்குத் தெரியும்.

தலைவரது  திரைப்படம் வெளியாகும்போது, முன் இரவே சென்று திரையரங்கு வாசலில் துண்டு விரித்து தூங்கியவன் நான். நீ கூட என்னிடம் எதற்கு இப்படி பைத்தியக்காரனாக இருக்கிறாய் என்றே என்னை கோவித்து இருக்கிறாய். என்னால் முடியவில்லை நண்பா, நான் அவருக்கு ஒரு அடிமையாய் ஆகிப் போனேன். உன்னை கூட, நண்பன் என பாராமல் என் தலைவரை நீ அவதூறாக பேசியதற்கு உனது மூக்கை உடைத்ததை நினைக்கும்போது நான் செய்தது இன்னமும் சரி என்றே கருதுகிறேன். ஆனால் நீயோ என்னை கோவித்துக் கொள்ளாமல் உன்னை என் நண்பனாகவே ஏற்றுக் கொண்டாய்.

நான் முக்கியமில்லை, உனது குடும்பம் முக்கியம்  என்றெல்லாம் தலைவர் சொன்னபோது கூட, அவரே முக்கியம் என அவரது உடல் நலன் சரியில்லாதபோது அவருக்காக நான் ராகவேந்திரா ஆலயத்திற்கு பாத யாத்திரை சென்றேன். இதை கேள்விப்பட்ட நீ,  நான் பத்திரமாக சென்று திரும்ப வேண்டும் என எனக்கு துணையாய் நீ காரில் பயணம் செய்து வந்தாய். உன் தலைவிதி, நீ நடக்கிறாய், என் தலைவிதி உனக்கு பாதுகாப்பு தருவது மட்டுமே, எவரோ ஒருவருக்காக நான் நடக்க வேண்டிய அவசியமில்லை என எனது நலனில் நீ காட்டிய அக்கறை என்னால் என்றுமே மறக்க முடியாது. எனது தந்தையின் மரணத்தின் போது கூட மொட்டை அடிக்காத நான், தலைவரின் உடல் நலம் தேற வேண்டி திருப்பதியில் மொட்டை அடித்த விசயம் கேள்விப்பட்டு நீ கண்ணீர் விட்டு அழுதாய். எதற்கு அழுகிறாய் என உன்னை நான் கேட்டபோது, எனது தந்தையை பற்றி நினைத்தாய் என்றே கூறினாய். அதனால் என்ன இப்போ என்றே அலட்சியம் செய்தேன்.

சில வருடங்களாக தலைவரின் படம் வெளிவராத காரணத்தினாலும், ராணா, கோச்சடையான் பற்றிய செய்திகள் மூலம் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானேன். உன்னிடம் இதை சொல்லாமல் மறுத்தது எனது தவறு என்றே இன்று உணர்கிறேன். இப்போது இதை எப்படி உனக்கு சொல்வது என்றே தெரியவில்லை. எனக்கு ஒருவித மனநோய் ஏற்பட்டு இருப்பதாக இன்று மருத்துவர் சொன்னபோது ஆடிப் போய்விட்டேன் நண்பா. நீ அன்று என்னை பைத்தியகாரன் என்று சொன்ன நிலையை இன்று உணர்கிறேன் நண்பா. என்னை ஊரில் 'மெண்டல்' என்றே அழைத்தது உண்மையாகிவிட்டதே என அச்சம் கொள்கிறேன். எனது அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாத போது நான் எந்திரன் படம் பார்க்க திரையரங்கு வாசலில் தவம் இருந்தபோது, நீ எனது அம்மாவிற்கு மருத்துவம் பார்த்த விசயம் கேள்விப்பட்டு மனதில் எவ்வித குற்ற உணர்வு அப்போது இல்லை. நண்பா, என்னை மன நோயில் இருந்து உன்னால் மட்டுமே மீட்க முடியும் என்றே எனது அம்மா சொன்னார். அதனால் தான் இந்த மடல் எழுதுகிறேன்.

ஒரு விசயத்தில் அதிக பற்று வைத்து விட்டால், இது போன்ற கொடிய விளைவு ஏற்படும் என்றே மருத்துவர் சொன்னார். மனம் வெகு பாரமாக இருக்கிறது. எதையோ இழந்து பரிதவிப்பது போல் இருக்கிறது. நான் தனிமையில் இருப்பதாய் உணர்கிறேன் நண்பா. என்னை நீ வந்து அழைத்து சென்று உனது அருகில் என்னை வைத்து கொள்ளமாட்டாயா என்றே ஏங்குகிறேன். உனது நிறுவனத்தில் நான் வேலை செய்ய இப்போது சம்மதம் சொல்கிறேன் நண்பா. தீராத மன நோயில் நான் விழுந்துவிடக் கூடாது எனும் அச்சமே முழுக் காரணம். அரசியலுக்கு வருவார், வரமாட்டார் என பலர் கிண்டலாக பேசியபோது அவர்களை நொறுக்கி இருக்கிறேன். தலைவர் என்ன முடிவு செய்கிறாரோ அதுவே எனது முடிவு என்றே இருந்தேன்.

இறுதியாக, எனது தலைவர் தனிமையில் இருப்பதாய் உணர்கிறேன் என நேற்று பேசியதை கேட்டு மிகவும் வேதனைப்படுகிறேன். அவரை உயரத்தில் வைத்தது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்றே சொன்னார். ஆனால் உண்மையிலேயே என்னைப் போன்ற பைத்தியகார ரசிகர்கள் தான் அவரது இந்த உயர்நிலைக்கு காரணம் என்பதை நீ அறிவாய் நண்பா. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ரஜினிதாசன் என்றே என்னை கேட்டுக் கொள்கிறேன். எனது அழகிய 'முருகன்' எனும் பெயரை நான் அலங்கோலம் படுத்திக் கொண்டதாய் நினைக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்தை அவர் தூக்கி எறிந்துவிட்டு என்னைப் போன்ற ஏழை பங்காளன் உடன் அவர் நேரத்தை செலவிட சொல்ல வேண்டும் என்றே என் மனம் கேட்கிறது. எதற்கு தனிமையாய் உணர வேண்டும்! ஆனால் 'டாப்' இல் இருப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினை என்றே சொல்லிவிட்டார் நண்பா. ஆனால் நீ, எத்தனயோ உயரத்தில் இருந்தும் சாதாரண நபரை போலவே உலா வருகிறாய். பிரமிப்பாக இருக்கிறது நண்பா. இதற்கு முன்னர் இப்படித்தான் சூழ்நிலை கைதி என சொன்னார், ஆனால் நான் என் தலைவரை உயிருக்கு உயிராக நேசித்தேன் என்பதை நீ அறிவாய்.

எப்படி மது, மாது என அடிமையாய் ஆகிறார்களோ, அதைப்போலவே சினிமா மோகம் என்னை பிடித்து ஆட்டிவிட்டது. ஒரு தனி மனிதனுக்கு என்னை தாரை வார்த்துவிட்டது கண்டே கலங்குகிறேன். ரஜினி ரசிகையைதான் திருமணம் செய்து கொள்வேன் என்கிற கொள்கையை தளர்த்தி கொள்கிறேன். இனி அவர் என் தலைவர் இல்லை என்பதை முழு சம்மதமின்றி ஏற்றுக் கொள்கிறேன். எனக்காக, என்னைப் போன்ற பைத்தியகார ரசிகர்களுக்காக அவர் தனிமையாக இருக்கவும் வேண்டாம், சூழ்நிலைக் கைதியாக இருக்க வேண்டாம், இனி வரும் காலங்களில் அவர் சுதந்திரமாக வாழட்டும் என்றே விரும்புகிறேன். இப்போது கூட என்னால் அவர் கஷ்டப்படுவதை தாங்கிக் கொள்ள இயலவில்லை நண்பா. என்னை விரைவில் வந்து அழைத்து செல், இல்லையெனில் நான்... தெருக்களில்... எழுதவே கைகள் நடுங்குகிறது நண்பா.

உனது வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்

அன்பு நண்பன்
முருகன் என்ற ரஜினிதாசன்

சினிமா ஒரு மாய உலகம், நல்ல மனிதர்கள் நாசமாகப் போகிறார்கள், நாசமாகப் போக இருந்தவர்கள் நல்லவர்கள் ஆகிறார்கள். 

Friday 20 September 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 20


கோரனை வகுப்புக்கு வெளியே போக சொன்னார் ஆசிரியர். ''I never killed her, she committed suicide and police recorded that, you don't need to argue on that as it is my personal issue and I need to continue the subject''

''Carry on'' கோரன் வகுப்பை விட்டு வெளியே சென்றான். நிலைமையை சரி செய்ய நான் எழுந்தேன்.

''சார், எதுக்கு ஆண், பெண் என இருபாலர் இருக்கனும், முதலில் வந்தது ஆணா, பெண்ணா?. அல்லது இரண்டுமே  ஒரே நேரத்தில் உருவானதா? இந்த இரண்டுமே இனப்பெருக்கம் வழியில் இல்லாம உருவாகி இருந்தா, அப்படியேதானே பெருகி இருக்கனும், எதுக்கு ஆணின் மரபணுக்கள், பெண்ணின் மரபணுக்களோட இணையனும், என்ன காரணம்'' என்று கேட்டு அமர்ந்துவிட்டேன்.

''We absolutely don't know anything about our ancestors, how we came to this world or how we are developed over the million years, but we think we are very good at coming to conclusion based on fossil records, postulating theories and ideas in one way and put all these things on God in another way. We live our imaginary world very lively as Koran thought that I have killed my wife whereas the truth was she committed suicide. Now I can say that she has committed suicide and police do have evidence on that but certain people like Koran would believe that I have killed my wife. How could I change him?''

அதற்குப் பின்னர் நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. பாடம் தாட் ப்ராசெஸ் பற்றியே சுற்றிக் கொண்டு இருந்தது. அப்போதுதான் யோசித்தேன், சுபத்ரா பரிணாமத்தினை பற்றி படித்துக் கொண்டு இருக்கிறேன் என்றுதானே சொன்னாள், அவளிடம் சென்று கேட்டால் என்ன என தோணியது. அன்றைய நாள் முழுவதும் எனது கேள்வியில் மனம் அலைபாய்ந்தது. மதிய உணவு சமயத்தில் கூட காயத்ரி என்ன முட்டாள்தனமான கேள்வியை கேட்ட நீ என்றே கோபித்துக் கொண்டாள்.

மாலை வேளையில் காயத்ரியிடம் பேசினேன்.

''காயூ, நான் சுபாவை பாக்கப்போறேன்,வரியா?''

''என்ன விசயம் திடீர்னு?''

''ஆணா, பெண்ணா? அப்படிங்கிற என் கேள்விக்கு பதில் தெரியனும்?''

''அட முருகேசு, ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஆணும், பெண்ணும் இயற்கை அமைத்துக் கொண்டது''

''இனப்பெருக்கம் இரண்டு வகையில நடைபெறும், ஒன்னு கலவு முறை, மத்தது கலவு இல்லாத முறை , என்ன காரணத்திற்கு கலவு முறை உருவாச்சு, காரணம் இருக்கும் இல்லையா?''

''தெரிஞ்சு என்ன செய்யப் போற''

''இப்ப எல்லாம் ஆண் இல்லாம பெண்கள் பிள்ளை பெத்துக்க முடியும்னு சொல்லிட்டு இருக்காங்க, படிச்சி இருக்கியா''

''ஆஸ்திரேலியாவுல நடத்தின எலி பரிசோதனைய பத்தி பேசறியா''

''நீயும் அதைப் படிச்சியா''

''முருகேசு, மனசை போட்டு குழப்பிக்காத, அது எலி, நாம மனுசுங்க''

''எதுக்கும் சுபாவை பார்த்துட்டு வரலாம்''

''சரி''

எனக்கு குரோமோசோம்கள் பற்றியெல்லாம் மனம் ஓடிக் கொண்டு இருந்தது. எக்ஸ் எக்ஸ் என்றால் பெண், எக்ஸ் ஒய் என்றால் ஆண். இந்த குரோமோசோம்கள் ஒரு உயிரின் ஆண், பெண் தன்மையை நிரூபிக்கின்றன. ஒரு குழந்தை உருவாகும்போது அந்த குழந்தை பெண்ணாகவே பல வாரங்கள் இருக்கும் என்றும், பின்னரே இந்த குரோமோசோம்கள் உதவியால் இனப்பெருக்க உறுப்புகள் தோன்றுவதாகவும் படித்து இருக்கிறேன். என்ன ஆச்சர்யமான மாற்றம் இது.

''என்ன யோசனை முருகேசு''

''காயூ, எல்லா குழந்தையும் உருவாகிறப்ப பெண் தான் தெரியுமா''

''இல்லை முருகேசு, எல்லா குழந்தையும் உருவாகும்போது அது ஒரு எம்ப்ரியோ. அந்த எம்ப்ரியோவில  உள்ள செல்கள் டிப்பெரென்சியெட் ஆகுறப்ப, இட் டேக்ஸ் தா பார்ம், இட் டேக்ஸ் வீக்ஸ்''

''என்ன இங்கிலீஸ் பேசற''

''ஏன் உனக்கு இங்கிலீஸ் புரியாதா, நீயும் தானே சில நேரத்தில இங்கிலீஸ் பேசற''

''நான் தமிழுல கேட்டப்ப, சேகரன் சாரு கூட இங்கிலீஸ்ல தான் பதில் சொல்றார்''

''நீ பேசாம தமிழ் இலக்கியம் படிக்க போய் இருந்து இருக்கலாம்''

''காயூ, அர்த்தநாரீஸ்வரர் பத்தி தெரியும்ல உனக்கு, ஆண் பாதி, பெண் பாதி''

''அதுக்கு என்ன இப்போ''

''இந்த பூமியில ஆணும் பெண்ணும் இணைஞ்சு தோன்றி இருக்கனும், அப்புறம் தான் பிரிஞ்சி இருந்து இருக்கனும், அப்புறம் இனப்பெருக்கம் மூலம் ஆணும் பெண்ணும் உருவாகி இருக்கனும்''

'வாட் நான்சென்ஸ் முருகேசு''

''எதுக்கு கோபப்படுற, நல்லா யோசிச்சி பாரு''

அர்த்தநாரீஸ்வரர் எனது கேள்விக்கு பதில் சொல்லிவிட்டதை போன்றே இருந்தது. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இந்த மூலக்கூறுகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து இருந்து உயிரினம் உருவாகும்போது கலவு முறையில்லாதபோது நமது உடலில் உள்ள செல்கள் எப்படி பெருகி உருவம் உருவாகுதோ அதைப் போலவே இப்படி சேர்ந்து உருவாகி இருக்கனும்.

''ஒரு ரொமான்டிக்கா பேச மாட்டியா, எப்ப பாரு பாடம், பாடம்''

''அன்பே, உனது விழிகளுக்குள் எனது பார்வை மாட்டிக் கொண்டது, எனது பார்வை பறிபோய் விடாதபடி திருப்பி தந்துவிடு''

காயத்ரி அப்படியே நின்று என்னை பார்த்து சிரித்தாள்.

''எந்த படம் முருகேசு''

''நான் எழுதினது காயூ''

''நீ எழுதினா, மைட்டோகாண்ட்ரியா, நீ தான் என்னோட ஆண்ட்ரியா அப்படின்னு எழுதுவ''

''என்ன சொன்ன''

''மைட்டோகாண்ட்ரியா, நீ தான் என்னோட ஆண்ட்ரியா''

''காயூ, மைட்டோகாண்ட்ரியா ஈவ் பத்தி படிச்சி இருக்கியா''

''ஆடம், ஈவும் தெரியும், மைட்டோகாண்டிரியா ஈவும் தெரியும்''

''எழுபது ஆயிரம் வருசம் முன்னால இந்த மைட்டோகாண்ட்ரியா ஈவ் தான் இப்ப இருக்கிற மனித குலத்தோட முன்னோடி. பெரிய எரிமலை வெடிப்புனால மொத்த மண்டிஹா சமூகம் அழிஞ்சி போனப்ப தப்பிச்ச சில பெண்கள் தான் இந்த மனித குலம் தழைக்க உதவினாங்க''

''ஆமா முருகேசு, என்ன என்னமோ பேசற, எதுக்கு சுபாவை பாக்கனும், உனக்கு தெரியாததையா அவ சொல்லப் போறா''

ரெங்கநாதன் வீடு அடைந்தோம். சுபத்ராவை சந்திக்க வந்திருப்பதாக கூறினோம். சுபத்ராவும் வந்தாள். முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாள்.

''சுபா, பரிணாமத்தில் முதலில் வந்தது பெண்ணா, ஆணா?'' என்றேன்.

''ம்ம்ம் உன்னோட பாட்டி''

காயத்ரி கிளுக்கென சிரித்துத் தொலைத்தாள்.

''இதுக்கு இப்போ எதுக்கு சிரிப்பு, உண்மையிலேயே முருகேசனோட பாட்டி தான் இந்த உலகத்துக்கு முதலில் வந்தது''

காயத்ரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ரெங்கநாதன் அம்மா, பலகாரங்கள் கொண்டு வந்து வைத்தார்கள். காயத்ரியின் அக்காவும், ரெங்கநாதன் இன்னும் வந்திருக்கவில்லை என்றே தெரிந்தது. அவர்களைப் பற்றி கேட்டபோது, அவங்க வரதுக்கு எட்டு மணி ஆகும் என்றே சொன்னார். ரெங்கநாதனின் அம்மா, அந்த இடம் விட்டு நகர்ந்ததும் சுபத்ராவிடம் மீண்டும் கேட்டேன்.

''சுபா, கிண்டல் பண்ணாம சொல்லு''

''உன்னை கிண்டல் பண்ண நீ என்ன என்னோட முறைப்பையனாடா, இல்லை என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறியாடா, அதுதான் இதோ உன் காயூ இருக்காளே''

''உனக்கு பரிணாமத்தில் ஆர்வம் இருக்கு, அதான் உன்னை பாத்து கேட்டு போகலாம்னு வந்தேன்''

''அதுதான் சொல்றேன்லடா, உன் பாட்டி தான் முதலில் வந்தது''

காயத்ரி அவளது கண்களில் தண்ணீர் தரும் வரும்படியாய் சிரித்துக் கொண்டு இருந்தாள். இவள் இப்படி சிரித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது. இனி சுபத்ராவை மடக்க வேண்டும்.

''என்னோட பாட்டியோட அம்மா, அப்பா வந்து இருப்பாங்களே''

''ஏன்டா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா, உன் பாட்டிதான் முதலில வந்ததுன்னு சொல்றேன், அந்த பாட்டிக்கு ஆயா, அப்பத்தானு பேசறதா''

''உனக்கு அம்மா, அப்பா இருக்கிறமாதிரி''

''நானும், உன் பாட்டியும் ஒன்னாடா''

''முருகேசு, அதான் சுபா சொல்லிட்டாங்கள, உன் பாட்டிதான் முதலில் வந்ததுன்னு, வா போவோம்''

அப்போது ரங்கநாதனின் அம்மா, காபி கொண்டு வந்து வைத்து விட்டு சென்றார்கள்.

''இரு காயூ, காபி குடிச்சிட்டு போவோம்''

''வந்ததுக்கு பலகாரம், காபி கிடைச்சதுல, சாப்பிடறதுக்கே இருப்பியாடா''

''சுபா, என் மேல உனக்கு கோபம் இருக்கும், நீ எனக்கு சாப்பாடு கொண்டு வந்து தந்து இருக்க''

''பரிணாமம் பத்தி தெரிஞ்சிக்கனும்னா, இதோ இவளை மறந்துரு''

''அர்த்தநாரீஸ்வரர் சொல்லி இருக்கார், பரிணாமத்தில் முதலில் வந்தது ஆணும், பெண்ணும் ஒரு உருவமாய். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. எனக்கு என் காயூ முக்கியம், பரிணாமம் இல்ல''

''Yes Suba, both sexes developed simultaneously, Murugesu knows everything. He came to test you whether you are really here to study evolution, அப்படித்தானே முருகேசு வா போலாம்''

வீட்டிற்கு வெளியே வந்தபின்னர் காயத்ரியிடம் கேட்டேன்.

''என்ன காயூ, நான் சுபாவை சோதிக்க போனேன் சொல்லிட்ட''

''முருகேசு, அவ எவ்வளா நக்கலா பேசுறா, என்னாலே சிரிப்பை அடக்க முடியல''

''படிக்கிறப்பவே அப்பத்தான், ரொம்ப கிண்டலா பேசுவா, ஆனா இப்போதான் காதல் அது இது அப்படின்னு மாறிப் போய்ட்டா''

''இது அவளோட புது பரிமாணம்''

''பரிணாமமா''

''பரிமாணம். முப்பரிமாணம்''

''ஆமா, காயூ, பரிணாமத்தில் முதலில் வந்தது பெண்ணா, ஆணா?''

''ம்ம்.. உன்னோட பாட்டி''

காயத்ரி மீண்டும் சிரித்தாள். அப்போதுதான் புரிந்தது. பரிணாமத்தில் முதலில் வந்தது பெண் தான் என்பதை தான் சுபத்ரா அப்படி சொல்லி இருப்பாளோ! வீட்டினை அடைந்ததும் நன்றாக சாப்பிட்டுவிட்டு புத்தகத்துடன் மாடிக்கு கிளம்பினேன். காயத்ரியும் புத்தகங்களுடன் என்னுடன் வந்தாள்.

''காயூ, செல்லில இரண்டு வகை எதுக்கு ஹெப்லோய்ட், டிப்லாய்ட்''

''டுயூப்லைட் பிரகாசமா இருக்கு''

''ஆணும், பெண்ணும் பருவம் அடைய பல வருடங்கள் ஆகுதே காயூ''

''பேசாம படி, இப்படி ஏடாகூடமா பேசின, நான் தூங்கிருவேன், தாங்க முடியல''

கர்மவினை தாண்டினேன், பரிணாமம் என்னை படுத்துகிறது.

(தொடரும்) 

Wednesday 18 September 2013

காமக்கதைகளுக்கு எப்பவுமே மவுசு அதிகம்

செந்தில்குமார் மிகவும் அக்கறையுடன் படித்துக் கொண்டிருந்தான். ஊருக்குச் சென்றுவிட்டு இன்றுதான் வந்தான். வந்ததும் வராததுமாய் இப்படி புத்தகம் எடுத்துப் படித்ததை கண்டு எனக்கு மிகவும் ஆச்சர்யமாகப் போய்விட்டது. பரீட்சை எதுவுமில்லையே செந்தில்குமார் என சொன்னேன். உன்னை மாதிரி பரீட்சைக்குப் படிக்கிறவனு என்னை நினைச்சியா, என்னை தொந்தரவு பண்ணாதே, சாயந்திரம் நடக்கப் போவயில, இருட்டப் போகுது போ என சத்தம் போட்டு திட்டிவிட்டான்.

வீட்டின் வெளியில் இருந்த வயல்வெளியில் நடக்க ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் தண்ணீர் பாய்ச்சி முடித்து இருப்பார்கள் போல, எங்கும் ஈரம் அதிகமாகவே இருந்தது. வயல்வெளி தாண்டி மாந்தோப்பு பக்கமாக நடந்தேன். இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கே நின்று கொண்டிருந்தாள். இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து தினமும் வயல்வெளி, மாந்தோப்பு என தனியே மாலையில் நடந்து இருக்கிறேன். இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிறது. ஊருக்கு வெளியே கட்டப்பட்ட இரண்டு வீடுகளில் இதுவும் ஒன்று. மாலை வேளையில் ஊர் ஆட்கள் எவரும் அவ்வளவாக இந்தப் பக்கம் எல்லாம் வருவதில்லை. இவள் தனியாய் நின்று கொண்டிருந்தது மட்டுமின்றி இதுநாள் வரை அவளை நான் இங்கே கண்டது இல்லை. மனதில் இனம் புரியாத பயம் ஒன்று சேர்ந்தது. என்னைக் கண்டு அவள் புன்னகை புரிந்தாள்.

பேச்சுக் கொடுக்கலாமா, வேண்டாமா என்றே நினைத்துக் கொண்டிருக்கையில் எதுக்கு அங்கேயே நிக்கிற, வா என அழைத்தாள். அவளது உடையானது ஓரிடத்தில் நில்லாது அங்கும் இங்கும் அல்லாடிக்கொண்டு இருந்தது. என்னை எதற்கு இவள் அழைக்கிறாள் என இல்ல, நா வீட்டுக்குப் போகனும் என்றேன். இவ்வள தூரம் வந்துட்ட, பக்கத்தில வந்துட்டு போறது என்றாள். நீ எந்த ஊரு, உன்னை இதுவரைக்கும் பாத்தது இல்லையே, எதுக்கு இங்க நிக்கிற என்றேன்.

இந்த ஊருக்கு நேத்துதான் வந்தோம். காலாற நடக்கலாம்னு இங்குட்டு வந்தேன் என்றாள். சற்று தைரியத்துடன் அவள் அருகில் சென்றேன். மாந்தோப்புக்குள்ள போலாமா என்றாள். இல்ல வேணாம் என்றேன். வெட்கபடாத, முன் அனுபவம் இல்லேன்னா பரவாயில்ல, எனக்கு இருக்கு என்றாள். என்ன கண்றாவி இது, மாந்தோப்புக்குள் எத்தனை முறை எவ்வித பயம் இன்றி இருட்டிய பின்னர் கூட நடந்து சென்று இருக்கிறேன், இதற்கு எதற்கு முன் அனுபவம்!

யோசிக்காத, சட்டுபுட்டுனு முடிச்சிட்டு போயிருவோம் என்றாள். என்ன சொல்ல வர, மாந்தோப்புக்குள்ள நடக்கிறதுக்கு இப்படி வெளியவே நடக்கலாமே என்றேன். நீ விவரம் புரியாதவனா இருக்கியே. நானும் நீயா தனியா இருக்கிறது கூட உனக்கு புரியலையா. விளக்கமா சொன்னாத்தான் உனக்கு புரியுமா, நீ என்ன பால் குடிக்கிற பாப்பாவா என்றாள். அப்போதுதான் ஆபத்தினை உணர்ந்தேன். அவள் அடுத்த வார்த்தை பேசும் முன்னர் ஓட்டம் பிடித்தேன். நில்லுடா பெண்டுகா எனும் அவளது சப்தம் என்னை கடந்து சென்று கொண்டிருந்தது.

மூச்சிறைக்க வீடு வந்து சேர்ந்தேன். செந்தில்குமார் அப்போதுதான் புத்தகம்தனை படித்து முடித்து விட்டு எழுந்து இருந்தான். என்னடா இப்படி மூச்சிரைக்கிற என்றான். இன்னைக்கு கொஞ்சம் ஓடினேன், அதான் என சமாளித்துவிட்டு குளியலறை சென்று குளித்துவிட்டு வந்தேன். என்ன பாடம் படிச்ச என்றேன். லோகோமோடிவ் என்றான். லோகோமோடிவ், என்ன கதை விடறியா என்றேன். நான் எதைப் படிச்சா உனக்கு என்ன என மீண்டும் சத்தம் போட்டான்.

ஊருக்குள் சென்றுதான் ஹோட்டலில் சாப்பிட வேண்டும். செல்லும் வழியில் மாந்தோப்பில் நடந்த விச யத்தை சொல்லலாமா என யோசித்து வேண்டாம் என விட்டுவிட்டேன். இருவரும் சேர்ந்து ஹோட்டல் அடைந்தோம். அவன் பரோட்டா, ஆம்லெட் என ஆர்டர் செய்தான். நான் என் பங்குக்கு சிக்கன் 65, பரோட்டா ஆர்டர் செய்தேன். சாப்பிட்டு கொண்டிருக்கும் போது மாந்தோப்பில் கண்ட பெண் என் அருகில் வந்து அமர்ந்தாள். வீட்டுக்கு வரியா என முனுமுனுத்தவள் ஒரு தோசை ஆர்டர் செய்தாள்.

யாரு அது மச்சி, உன்னை உரசிக்கிட்டு வந்து உட்காருரா என்றான் செந்தில்குமார். எனக்கு தெரியலை என சொன்னேன். ஏன்மா, கொஞ்சம் தள்ளி உட்காரு, உரசிட்டு உட்காருர, இடமா இல்ல, விட்டா மடியில உட்காருவியோ என செந்தில்குமார் அவளை சத்தம் போட்டான். உன்னையவா உரசினேன், வாயை மூடிட்டு சாப்பிடு என்றாள் அவள். என்னக்கும் இல்லாமல் வேகமாக சாப்பிட்டேன். மெதுவா சாப்பிடுடா என்றான் செந்தில்குமார். அவளோட சண்டை போடாத, வா போகலாம் என சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். நாளைக்கு அங்க வா, நான் நிப்பேன் என்றாள்.

சிகரெட் வாங்கி பத்த வைத்தான் செந்தில்குமார். இந்தா இழு என்றான். இன்னைக்கு வேணாம் என்றேன் . என்ன மச்சி பாதி, பாதி மறந்துட்டியா, எதுக்கு அந்த பிள்ளை உன்னை உரசினதுல இருந்து ஒரு மாதிரியா இருக்க, எந்த ஊருக்காரி, என்ன உனக்கு ரூட்டு போடுறாளா, கிடைச்சா அமுக்கிடனும் மச்சி என்றான். சே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என்றேன்.

எதற்கு அவள் அப்படி நடந்து கொண்டாள் எனும் சிந்தனை என்னை அலைக்கழித்தது. வீடு வந்து சேர்ந்தோம். செந்தில்குமார் ரம் எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான். கம்பெனி கொடுக்கப் போறியா இல்லையா என்றான். கொஞ்ச நேரம் கழிச்சி வரேன் என்றேன். புத்தகம் எடுத்து படிக்கலாம் என ஒரு புத்தகம் எடுத்தபோது அங்கிருந்து ஆடைகள் இல்லாத பெண்கள் படம் போட்ட புத்தகம் விழுந்தது. திடுக்கிட்டேன். இதைத்தான் செந்தில்குமார் படித்தானா என எண்ணிக்கொண்டு அந்த புத்தகம் எடுத்து மாடிக்கு சென்றேன்.

என்னடா இது, எப்ப இருந்துடா இப்படி ஒரு பழக்கம், எதை எதை படிக்கிறதுன்னு ஒரு அறிவு இல்லையா என கத்தினேன்! மச்சி இந்தா வா குடி. அதுல சூப்பர் சூப்பரான கதை எல்லாம் இருக்கு. படிக்க படிக்க அப்படியே கனவுலகத்தில மிதக்கலாம். அதுல ஒரு கதை இருக்கு பாரு, அட்டகாசமான கதைடா என்றான். இது எல்லாம் தப்புடா என்றேன். ஆமா சிகரெட்டு, குடி எல்லாம் தப்புதான், அதை எல்லாம் நீ செய்யல, கதைய கேளுடா என எனக்கு ஊற்றி கொடுத்தான்.

ரெண்டு பிரண்டுஸ். அதுல ஒருத்தன் ரொம்ப யோக்கியம், அடுத்தவன் அப்படி இப்படி. யோக்கியமானவன் ஒரு பொன்னை சந்திக்கிறான். அந்த பொண்ணு அவனை அடைய ஆசைப்படறா. ஆனா அவன் அது தப்பு அப்படின்னு அவகிட்ட சொல்லி அவளை வேணாம்னு தவிர்க்கிறான். இப்படி நடந்த விசயத்தை பிரண்டுகிட்ட சொல்றான். பிரண்டு அடுத்த முறை அவள்கிட்ட பேசி அவளை அடையறான். சும்மா செமையா இருந்தது மச்சி. எப்படி அங்கம் அங்கமா அந்த பெண்ணை எழுதி இருக்கு. படிச்சி பாரு என்றான்.

என்ன செய்வது என  புரியாமல் மாந்தோப்பில் நடந்த விசயத்தை செந்தில்குமாரிடம் சொன்னேன். அடுத்த நாள் மாலையில் எனது கையில் புத்தகம், அவன் மாந்தோப்பு நோக்கி நடந்து கொண்டிருந்தான்.




Tuesday 17 September 2013

சூப்பர் ஹீரோ

 இந்திப் படம் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. தூர்தர்சனின் புண்ணியத்தில் மட்டுமே இந்தி படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அதற்கு பின்னர் இந்திப்படம் என பார்த்தது என எதுவுமே நினைவில் இல்லை.

சமீபத்தில் தியேட்டருக்கு சென்று சென்னை எக்ஸ்ப்ரஸ் படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழ் படம் என்கிற ஒரு நினைப்பில் படம் பார்க்க அழைத்த போது போகலாம் என தியேட்டருக்குள் அமர்ந்த பின்னர் தான் சட்டென நினைவுக்கு வந்தது, வந்திருப்பது ஒரு இந்திப் படத்திற்கு என.

தமிழே புரியாது, இதில் இந்தி வேறா! நிறைய 'இந்தி'மார்கள் அமர்ந்து இருந்து இருந்தார்கள். படம் தொடங்கியது. எனக்கும் இந்திக்கும் உள்ள ஒரு பந்தம் மிகவும் சுவாரஸ்யமானது. கல்லூரி படித்த காலங்களில் ஆர்வத்துடன் ரமேஷ் எனும் நண்பர் கற்று கொடுத்த இந்தியை இலக்கணம் எல்லாம் என சேர்த்து ஓரளவு படித்து விட்டேன். தலைநகர் டில்லி, கல்லூரி கால கல்கத்தா என பிற மாநிலங்கள் சென்றாலும் இந்த இந்தியை இனிப்புக்கு கூட தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டதில்லை. இந்தி மீது தனிப்பட்ட வெறுப்பு என்றோ , மறத்தமிழர் என்றோ இதற்கு காரணம் இல்லை. ஒருவித சோம்பேறித்தனம் வந்து ஒட்டிக் கொண்டது. எனது வாழ்வில் சில மொழிகள் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றே அவ்வப்போது எண்ணம் தலைகாட்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட.

நல்லவேளையாக படத்தில் 'சப்டைட்டில்' ஆங்கிலத்தில் போட்டார்கள். இருப்பினும் அரைகுறை இந்தி மூலம் சில புரிந்து கொள்ளலாம் என்றே பேசுவதையும் கேட்டு வைத்தேன். ஆனால் 'இந்திமார்கள்' சிரிக்கும்போது எனக்கு தானாக சிரிப்பு வரவில்லை. மொழியின் சுவாரஸ்யம் மொழிப்பெயர்ப்பில் இருப்பது இல்லை. சில இடங்களில் சிரித்து வைத்தேன்.

தமிழ்நாட்டில் இத்தனை பேரழகா என உச் கொட்டும் வகையில் மழையும், அருவிகளும் கொண்ட பிரதேசம் காட்டி இருந்தார்கள். இந்த திரைப்படத்தில் பெண்கள் உடுத்தும் சேலை கண்டு 'இந்திமார்கள்' இத்தனை அழகான சேலை எல்லாம் தமிழ்நாட்டில் கிடைக்குமா/கட்டுவார்களா என ஆச்சர்யபட்டார்களாம். ஒரு சேலை எடுக்க கடைக்கு சென்று ஒரு மாதம் கழித்து வீடு திரும்பிய மனைவிமார்கள் பற்றிய நகைச்சுவை கதைகள் கூட தமிழ்நாட்டில் உண்டு.

இந்த திரைப்படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லி விடலாம். எல்லா திரைப்படங்களும் ஒரு வரி கதைதான். அதை எப்படி வடிவமைத்து முடிப்பது என்பதில் தான் மொத்த திரைப்படத்தின் வெற்றியும் இருக்கிறது. எதிர்பாராத தருணத்தில் வாழ்வில் என்னவெல்லாம் நடந்து விடும் என கதை சொல்லி இருக்கிறார்கள். வீட்டை விட்டு அடிக்கடி ஓடிப்போகும் ஒரு பெண். சுத்துப்பட்டி கிராமங்களை எல்லாம் தன வசத்தில் வைத்திருக்கும் ஒரு 'பெரிய தல' என படம் நகைச்சுவை உணர்வுடன் நகர்கிறது.

எழில் கொஞ்சும் பிரதேசங்கள் கண்டு கொண்டே இருக்கலாம் என்பது போல காட்சி அமைப்புகள். அந்த கிராமங்களில் வில்லன் உட்பட சிலர் இந்தி பேசுகிறார்கள். அரை குறை இந்தி தெரிந்தவர்கள் அதிகம் உபயோகிப்பது 'அச்சா' 'தோடா தோடா ஹிந்தி மாலும் ஹை' என்பதுதான். 'ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியாவில் இழுக்கு. ஆங்கிலம் தெரியாவிட்டால் உலகில் இழுக்கு' என மொழியின் பிரவேசம் குறித்து பேசுகிறார்கள். ஆங்கிலம் பிற மொழிகளை வசப்படுத்தியதன் காரணம், மொழிபெயர்ப்பு தான். மொழிபெயர்ப்பு வல்லுனர்கள் எல்லா மொழிகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள். சில நாடுகள் ஆங்கிலத்தினை கடுமையாக எதிர்த்தும் தற்போது உலகமயமாக்கல் எனும் அடிப்படையில் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டு விட்டது.

இந்த திரைப்படத்தில் காதல் தான் உண்மையான மொழி என சொல்வதோடு பிரச்சனைகள் கண்டு ஓடி ஒளியாமல் அதை எதிர்த்து நிற்கும்போது சாதாரண மனிதன் கூட சூப்பர் ஹீரோ ஆகிவிடுவான் என்றே சொல்லி இருக்கிறார்கள். அதாவது 'பவர் ஆ ஃப் தி காமன் மேன்'. கடைசியில் ரஜினியை வைத்து ஒரு பாடல். பாடல் முடிந்தே பலரும் கிளம்பி சென்றார்கள். ஒரு தமிழ் கலந்த இந்திப் படம் பார்த்தது போன்ற திருப்தி. அதுவும் ஹிந்திமார்கள் பேசும் தமிழ் அழகோ அழகு.

இந்த சூப்பர் ஹீரோ குறித்து உண்மையிலேயே மிகவும் ஆச்சர்யம் அடைய செய்யும் தகவல்கள் உண்டு. 1912ம் வருடம் இந்த சூப்பர் ஹீரோ பற்றியஎண்ணங்கள் உருவாக்கப்பட்டதாக சொல்லபப்டுகிறது. அதாவது சூப்பர் ஹீரோக்கள் அமானுஷ்ய தன்மை கொண்டவர்களா கற்பனை செய்யப்பட்டார்கள். 1937ல் முதல் காமிக்ஸ் புத்தகம் வந்தது, இந்த சூப்பர் ஹீரோக்கள் குறித்து தமக்கென இரண்டு நிறுவனங்கள் உரிமம் வைத்து கொண்டன. இதில் ஸ்பைடர்மேன், கேப்டன் அமெரிக்கா என பல சூப்பர் ஹீரோக்கள் உருவாக்கப்பட்டனர். இவை படங்களாக உருவாக்கப்பட்டன. பேட்மேன் போன்ற சாதாரண மனிதர்கள் சில கலைகள் கற்றுக்கொண்டு தமது திறமை மூலம் சூப்பர் ஹீரோக்கள் ஆனார்கள் என சொல்லப்பட்டது. அனிமேஷன் தொழில்நுட்பம் வந்த பின்னர் இப்படி நிறைய சூப்பர் ஹீரோக்கள் திரைப்படங்களில் வடிவம் எடுத்தார்கள்.

'kick ass' எனும் திரைப்படம் வாழ்வில் உள்ள நிஜ சூப்பர் ஹீரோக்கள் பற்றி ஒரு  காமிக்ஸ் புத்தகத்தின் அடிப்படையில் உருவானது. அதாவது சில உடைகள் அணிந்து கொண்டு, சமூகத்திற்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதை தனியாளாக செய்வது, அல்லது ஒரு கூட்டமாக சேர்ந்து செய்வது.  kick ass 2 எனும் திரைப்படம் பார்த்தபோதுதான் இந்த நிஜ சூப்பர் ஹீரோக்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்த காமிக்ஸ் புத்தகம் அடிப்படையில் உண்மையிலேயே அமெரிக்காவில் நிறைய சூப்பர் ஹீரோக்கள் நிஜ வாழ்வில் வலம் வருகிறார்கள். உண்மையிலேயே குற்றங்களை களைவது, வீடில்லாதவர்களுக்கு உதவி செய்வது என பல சமூக விசயங்களை அவரவருக்கு பிடித்த சூப்பர் ஹீரோக்கள் உடை அணிந்து செயல்படுவது இவர்களின் வேலை. கனடாவில் அனுஜன் பஞ்சாட்சரம் இது போன்று செயல்படுவதாக குறிப்பு உண்டு. நமது கிராமங்களில் காட்டுக்கு சென்று காவல் காப்பது, எல்லை காவலாளி என ஒரு மட்டத்தில் மட்டும் சூப்பர் ஹீரோக்கள் உண்டு.

இந்த சூப்பர் ஹீரோக்கள் சில நேரங்களில் காவல்துறைக்கு தலைவலியாக அமைந்து விடுவது உண்டு. சில நாடுகளில் இவர்களின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என காவல்துறையே சொல்லிவிட்டது.

நமது தமிழகத்தில்,  இந்தியாவில் பிற நாடுகளில் உள்ளது போன்று  நிறைய நிஜ  சூப்பர் ஹீரோக்கள் தேவைப்படுகிறார்கள், ஆனால் என்ன பிரச்சினை தமிழக, இந்திய  நிஜ சூப்பர் ஹீரோக்களின் வில்லன்கள் எல்லாம் அதிகார வர்க்கத்தில் அமர்ந்து இருக்கிறார்கள் என்பதுதான் சிரமம்.

Monday 16 September 2013

ஜீரோ எழுத்து - 7 (குவாண்டம் இயக்கியலும், நிலையற்ற நியமமும்)

நிலையற்ற தன்மை அல்லது நிலையற்ற நியமம். ''ஒரு துகளின் உத்வேகத்தையும், அந்த உத்வேகத்தில் இருக்கும்போது உள்ள நிலையினையும் கண்டறிந்து கொள்வது என்பது முடியவே முடியாத ஒன்று. இக்கணத்தில் எக்கணமும் இல்லை'' கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என காலத்தைப் பிரித்து வைத்தார்கள். நேற்று, இன்று, நாளை இது நாள் கணக்கில் வரும் காலங்கள். நேர கணக்கிலும் சரி, வினாடி கணக்கிலும் சரி இந்த மூன்று காலங்களும் வந்தே தீரும். இதைத்தான் புத்தர் சொன்னார், இக்கணத்தில் எக்கணமும் இல்லை. புத்தர் சொன்னதைத்தான் ஹெய்ன்ஸ்பெர்க் எனும் அறிஞர் நிலையற்ற நியமம் என இயற்பியல் வாயிலாக சொன்னார். குவாண்டம் இயக்கியலில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த கருத்து சொல்லப்பட்டு வருகிறது. இந்த விசயமே சாதாரண இயற்பியல் விதிகளுக்கும் குவாண்டம் இயக்கியலுக்கும் உள்ள மாபெரும் வேறுபாடு என கண்டறியப்பட்டது.

நிகழ்தகவு என சொல்வார்கள். உலகில் கிட்டத்தட்ட எல்லா விசயங்களும் இரண்டாகவே பிரிபட்டு நிற்கும். ஒன்று, இல்லையேல் மற்றொன்று. தற்போது  அலைவடிவம் பெறாத துகள், துகள் வடிவம் பெற்றே இருக்க வேண்டும். அதாவது நாம் செயல்முறை பயிற்சி செய்யும்போது துகள் பெறக் கூடிய அலைவடிவம்தனை, நம்மிடம் இருக்கும் உபகரணம் கொண்டு அதை மாற்றிவிடும் பட்சத்தில் அலைவடிவம் மறைந்தாலும் அந்த துகள் எங்கு செல்கிறது என்பதை நாம் கண்டு கொள்ளும் வாய்ப்பு இருக்க வேண்டும். அதைத்தான் நியூட்டன் ஒரு துகளின் உத்வேகத்தையும், உத்வேகத்தில் உள்ள நிலையினையும் கண்டு கொண்டால் அந்த துகள் எங்கு செல்கிறது என அறியலாம் என்றார். ஆனால் அது சாத்தியமற்ற ஒன்று என பின்னாளில் தெரிய வந்தது. இதனைக் கண்டறிய தமது வாழ்நாட்களில் அதிக நாட்கள் செலவிட்ட ஐன்ஸ்டீன் தோற்றுப் போனார். அப்படியே வரும் காலங்களில் எவரேனும் ஒருவர் ஒரு துகளின் இந்த உத்வேகம், உத்வேகத்தில் இருக்கும் நிலை என இரண்டையும் ஒரு சேர நிச்சயித்து விட்டால் இந்த குவாண்டம் இயக்கியலை மூடிவிட வேண்டியதுதான்.

பார்த்தார், ஹெய்ன்ஸ்பெர்க். இந்த இரண்டு நிலைகளை ஒரு  சேர நிச்சயிக்க முடியாது என சொல்லி 'ஹெய்ன்ஸ்பெர்க் நிலையற்ற நியமம்' என கணக்கு போட்டு காண்பித்துவிட்டார். முதன் முதலாக  நிலையற்ற நியமம் என்ற வார்த்தையை சொன்னது எட்டிங்க்டன் என சொல்வோர் உண்டு. நிலையற்ற நிலையில் x , நிலையற்ற உத்வேகம்  p இருக்கும். xp>h/4pi h = ப்ளான்க் மாறிலி. இந்த பிளான்க் மாறிலி என்பது 6.63 x 10 -34 ஜூல்ஸ்/வினாடி. E= hv அப்படிங்கிற சமன்பாட்டினை காண்பித்தவர் இந்த மாக்ஸ் ப்ளான்க். கதிரியக்க ஆற்றலை பற்றி குறிப்பிட்டார் அவர். நாம் முதன் முதலில் குறிப்பிட்ட ஆற்றல் சிறு சிறு பகுதியாய் வரும் என்பதை சொல்வதுதான் இந்த சமன்பாடு. சாதாரண இயற்பியல் விதிகளுக்கு உட்படாத விசயங்களை பற்றி குறிப்பிடவே இப்படி ஒரு சமன்பாட்டினை ப்ளான்க் வெளியிட்டார் எனும் குற்றசாட்டு முதலில் எழுந்தது. ஐன்ஸ்டீன் பின்னர் ஒளியின் ஆற்றலை இதே சமன்பாட்டினை கொண்டு விளக்கினார். ஒளி ஆற்றல் போட்டான்களாக வெளிவருகிறது என்பதை அறிந்ததும் இயற்பியல் விழித்துக் கொண்டது. என்னதான் இந்த குவாண்டம் கொள்கையை ஐன்ஸ்டீன் நம்பத்தகுந்த கொள்கையாக மாற்றினாலும் இது ஒன்று மட்டுமே இந்த இயற்கை உலகினை விளக்க கூடியது என்பதை ஐன்ஸ்டீன் ஒருபோதும் நம்பியது இல்லை. பிற்காலத்தில் ப்ளான்க் நீளம், ப்ளான்க் நேரம் என கண்டுபிடித்தார்கள். வினாடி, மில்லிவினாடி, மைக்ரோவினாடி என ஒரு காலகட்டத்திற்கு மேல் வினாடியை உடைக்க முடியாது என சொன்னார்கள்.

மீண்டும் செயல்முறை பயிற்சிக்கு வருவோம். இந்த துகள்களின் உத்வேகம், நிலை  குறித்து ஒரு செயல்முறை செய்து பார்க்கலாம் என்றார்கள். அதாவது இரண்டு துகள்களை ஒன்றுடன் ஒன்று மோத விடுவது. மோதிக்கொண்ட துகள்கள் எதிரெதிர் திசையில் செல்லும். வெளிக்காரணிகள் ஆதிக்கம் இல்லாத பட்சத்தில் இரண்டு துகள்களின் உத்வேகம், நிலை ஒரே மாதிரி இருக்கும் என்பது இயற்பியல் விதி. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு துகளின் உத்வேகமும், மற்றொரு  துகளின் நிலைதனையும் நிச்சயித்து விடலாம் என சொன்னார்கள். ஆக மொத்தம் கள்ளாட்டம் ஆடி துகளின் இரண்டு நிலையை சொல்லலாம் என நினைத்தார்கள். ஆனால் இவை எல்லாம் ஏதேனும் துகள்கள் ஒளியினை விட வேகமாக சென்றால் மட்டுமே சாத்தியம் எனவும் குறிப்பிட்டார்கள். ஐன்ஸ்டீனின் சார்பு கொள்கை படி ஒளியை விட வேகமான துகள்கள் இது சாத்தியமில்லை என்றாகிறது. (நியூட்ரினோ துகள் ஒளியை விட வேகம் என தற்போது கண்டுபிடித்ததாக ஒரு குறிப்பு உண்டு)

இந்த செயல்முறை பயிற்சியை செய்தே தீர வேண்டும் என ஒரு பிரெஞ்சு அறிவியலாளர் செய்து பார்த்தார். ஹெய்ன்ஸ்பெர்க் என்ன சொன்னாரோ அதையே சொல்லி ஒளியை விட வேகமாக செல்லக்கூடிய துகள் இருந்தாலும் உத்வேகம், உத்வேகத்தில் உள்ள நிலை என இரண்டும்  ஒரு சேர நிச்சயிப்பது சாத்தியமில்லை என முடித்து கொண்டார். ''The particles do not communicate by any means we knew about. All we know is that every particle knows what every other particle it has ever interacted with is doing''

''விண்டவர் கண்டில்லை, கண்டவர் விண்டில்லை''. இந்த வாக்கியம் பலமுறை கேள்வி பட்டு இருப்போம். இந்த வாக்கியத்தைத்தான் துகளின் உத்வேகம், நிலைத்தன்மை பற்றி குறிப்பிடுகிறார்கள். விண்டவர் கண்டில்லை, கண்டவர் விண்டில்லை அப்படிங்கிற விசயத்தை எப்படி ஒருவர் சொல்ல இயலும். இந்த விசயம் சொன்னவர் ஏதேனும் செயல்முறை பயிற்சி செய்து பார்த்தாரா என்றெல்லாம் குறிப்புகள் இல்லை. ஆனால் இந்த வாக்கியத்தின் உட்பொருள் தனை எவரேனும் உடைத்து விடுவாரெனில், அதாவது விண்டவர் கண்டார், கண்டவர் விண்டார், இறைவனை மூடி விட வேண்டியதுதான்.

எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே துகள் துகளாக அல்லது அலையாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தோம். ''உண்மையை யார் உண்மையிலேயே உண்மையாக கண்டறிந்தது என்பது மனித வாழ்வில் ஒரு பெரும் கேள்விக்குறிதான்' ஆனால் இந்த குவாண்டம் இயற்பியல் சொன்னது நாம் என்ன காண்கிறோமோ அல்லது அளக்கிறோமோ அதுவே உண்மை. ஆனால் கேள்வி நீண்டு கொண்டே போகும். அப்படியெனில் நமது உபகரணம் சரியானதா? வேறு உபகரணம் இருந்தால் என்ன கிடைக்கும் என்பது போன்று. இதைத்தான் 'No Analysis is better than the sample itself' என்று சொன்னார்கள்.  கடவுள் இவ்வுலகை படைத்தார் எனில் கடவுளை யார் படைத்தார் என்றே பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். பெரு வெடிப்பு கொள்கை முன்னர் என்ன இருந்தது என அறிவியலிடம் கேட்டால் இயற்பியல் விதிகளுக்கு உட்படாத தன்மை இருந்தது அதையே இந்த குவாண்டம் இயற்பியல் சொல்ல வருகிறது என்கிறார்கள்.

ச்ச்ரோடிங்க்ர் எனும் அறிஞர் நம்மைப் போலவே குவாண்டம் இயற்பியல் பற்றி புரிந்து கொள்ள முடியாது திணறினார். இருப்பினும் குவாண்டம் இயற்பியல் சொல்லும் உலகை நாம் காண இயலாது என்பதை நிரூபிக்க ஒரு செயல்முறை பயிற்சி சொன்னார். அதைத்தான் ச்ச்ரோடிங்க்ர் பூனை செயல்முறை பயிற்சி என சொல்கிறார்கள்.

ஒரு பெட்டி. அந்த பெட்டிக்குள் ஒரு கதிரியக்க ஐசோடோப். கதிரியக்கம் அளக்கும் ஒரு கருவி. ஒரு சயனைடு சீசா. இப்போது கதிரியக்கத்தை அந்த ஐசோடோப் வெளிவிட, அதை இந்த கருவி அளக்கும், கதிரியக்க அதிகரிப்பால் சயனைடு சீசா உடையும், சயனைடு சுவாசித்து பூனை இறக்கும். இப்போது அந்த ஐசோடோப் கதிரியக்கத்தை உமிழவில்லை எனில் பூனை உயிருடன் இருக்கும். இப்போது நமக்கு அந்த பெட்டியை திறந்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியும். அதுவரை பூனை உயிருடன்  இருக்கலாம், அல்லது இறந்து போயிருக்கலாம். தற்போது கதிரியக்கக் கருவி அவசியமற்ற ஒன்று, ஏனெனில் பூனையே ஒரு கருவியாக இங்கே இருக்க வாய்ப்பு உண்டு. ஒரு நிலையை உடைக்கும் தன்மை நாம் பார்ப்பதில் இருக்கிறது, ஆனால் அதை நாம் பார்க்கும்வரை நிச்சயிக்க முடிவது இல்லை. புலி இருக்கிறதா, புலித்தோல் போர்த்திய பசு இருக்கிறதா என்பது நாம் கண்டுகொள்ளும்வரை தெரிவதில்லை. அறிஞர்கள் பார்த்தார்கள், இது மிகவும் வில்லங்கமாக இருக்கிறதே என பாதி செத்த பூனை என சொல்லி வைத்தார்கள், இருப்பினும் அளவுகோல் எது என்பது இதுவரை புதிராகவே இருக்கிறது. ச்ச்ரோடிங்க்ர் சொன்னார் ''I don't like it, and I am sorry I ever had anything to do with it''. முடிவிலி பற்றி கேள்வி பட்டு இருப்போம். முடிவிலியால் முடிவிலி கொண்டு வகுக்க விடை வரையறுக்க முடியாதது. கணக்குதனில் மதிப்பிலா ஒன்றை புறக்கணித்து விடுவார்கள். 'Let us ignore, it is negligible' ஆனால் குவாண்டம் இயக்கியல் சொல்கிறது, 'Don't ignore because it has infinite energy, infinite charge and  infinite mass'.

இப்படி குவாண்டம் இயக்கியல், இயற்பியல் தனது பங்குக்கு இவ்வுலகம் தோன்றிய இயற்கையை பற்றி விவரித்துக் கொண்டிருக்க சில அறிஞர்கள் ஒரு உலகம் மட்டுமே இல்லை, பல்வேறு உலகங்கள் உண்டு என சொல்லவும் செய்தார்கள். பூலோகம், மேலோகம், பாதாள உலகம் என்று இருக்க எதற்கும் அணுக்களின் உலகம் குறித்து அடுத்துப் பார்ப்போம்.

அதற்கு முன்னர் ஒரு சூப்பர் ஹீரோ காத்துக் கொண்டு இருக்கிறார்.

(தொடரும்)

Thursday 12 September 2013

ஜீரோ எழுத்து - 6 ( குவாண்டம் கோட்பாடு)

நம்மை எவரேனும் கவனித்துக் கொண்டு இருக்கிறார் என வைத்துக் கொள்வோம், அப்போது நமது செயல்பாடு எப்படி இருக்கும்? அதே வேளையில் நம்மை எவரும் கவனிக்கவில்லை என வைத்துக் கொள்வோம் நமது செயல்பாடு எப்படி இருக்கும்?

இப்போது ஒரு ஒழுங்குமுறை எதில் இருக்கும்? எவரேனும் கவனித்துக் கொண்டு/ பார்த்துக் கொண்டு இருந்தால் மட்டுமே அதில் பெரும்பாலானவர்களில் ஒழுங்குமுறை இருக்கும், இல்லையெனில் தறிகெட்டுதான் திரிவார்கள். உதாரணத்திற்கு சாலைகளில் கேமரா பொருத்தி இருப்பார்கள். அந்த சாலையில் அதிக வேகம் இவ்வளவுதான் செல்லலாம் என இருக்கும். பெரும்பாலான காரோட்டிகள் இந்த கேமரா அருகில் வரும்போது மட்டும் குறிப்பிட்ட வேகத்தில் செல்வார்கள், அதற்கு பின்னர் அவர்களின் இஷ்டப்படிதான். இது ஒரு உதாரணம். இதைப்போலவே பல உதாரணங்கள் உண்டு. இதைத்தான் குவாண்டம் கோட்பாடு சொல்ல வருகிறது.

குவாண்டா என்றால் மிக மிக நுண்ணிய துகள்/அலை, அதாவது ஆற்றலின் ஒரு பகுதி என்றே கொள்ளலாம். இப்படிப்பட்ட பகுக்க முடியாத ஆற்றல் குறித்து விளக்கும் கோட்பாடுதான் குவாண்டம் கோட்பாடு. இப்போது குவாண்டம் கோட்பாடு பல்வேறு பரிமாணம் எடுத்துக் கொண்டு வருகிறது. அது குறித்து இப்போதைக்கு  தள்ளிப் போடுவோம்.

குவாண்டம் கோட்பாட்டில் ஐந்து விசயங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

1. ஆற்றலானது தொடர்ச்சியாக இல்லாமல், சிறிது சிறிதாக அதுவும் வெவேறான நிலையில் இருக்கும்.

நமது மீது பாயும் ஒளியானது தொடர்ந்து வந்து விழுந்தாலும் அவை ஒரு பகுதி பகுதியாகவே வரும். அதைத்தான் போட்டான் என குறிப்பிடுகிறார்கள். குவாண்டா அந்த போட்டானின் ஒரு சிறு பகுதி. ஒரு படம் எப்படி புள்ளிகள் இணைந்து உருவாகிறதோ அதைப் போலவே இந்த ஆற்றல் புள்ளிகளாக இருக்கிறது. இது எப்படி சாத்தியம் எனில் ஒரு அணுவில் வெளி ஆர்பிட்டலில் இருக்கும் எலக்ட்ரான்கள் வெவ்வேறு ஆற்றல் நிலை கொண்டு இருக்கின்றன என கண்டறியப்பட்டு இருக்கிறது. அதோடு மட்டுமில்லாது  அவை ஓரிடத்தில் நில்லாமல் மேலும் கீழும் குதித்துக் கொண்டு இருக்கிறது. அதன் காரணமாகவே நாம் பல்வேறு வண்ணங்கள் காண முடிகிறது.

2. அடிப்படைத் துகள்கள், இரட்டைத்தன்மை கொண்டது, அதாவது அலைகளாகவும், துகள்களாகவும் செயல்படும்.

இதற்கு ஒரு செயல்முறை பயிற்சி செய்தார்கள். தற்போதைய காலகட்டத்தில் எல்கட்ரானை துல்லியமாக கண்டறியும் கருவி நம்மிடம் இல்லை. அதனால்  நியூட்ரான் கொண்டு செயல்முறை செய்து பார்த்தார்கள்.

ஒரு அறை. அந்த அறையின் மத்தியில் இரண்டு துவாரங்கள் உள்ள சுவர். அந்த பக்கம் மணல் மூடை, இந்த பக்கம் ஒரு துப்பாக்கியுடன் உள்ள நபர். இப்போது ஒரு துவாரம் மூடப்படுகிறது. சுவருக்கு அருகில் இருந்து சுடும் போது திறக்கப்பட்ட துவாரத்தின் வழியின் மத்தியில் பல குண்டுகள் செல்லும். கணிப்பு மிகவும் துல்லியம். சற்று தள்ளி சென்று சுடும்போது அனைத்தும்  துவாரத்தின் மத்தியில் செல்ல வாய்ப்பு இல்லை. இப்போது மறு துவாரம் மூடப்படுகிறது. மூடப்பட்ட துவாரம் திறக்கப்படுகிறது. அதே விடை கிடைக்கிறது. ஏனெனில் இருப்பது ஒரு திறந்த துவாரம் மட்டுமே. இப்போது இரண்டு துவாரங்களை திறப்போம். முன்னர் மாதிரி சில குண்டுகள் இரண்டு துவாரங்கள் மத்தியில் செல்லும், ஒரு குண்டு ஒரு துவாரத்தில் மட்டுமே செல்லும். ஏனெனில் இந்த குண்டுகள் பருமப் பொருள் மட்டுமே எனவே ஒரே நிலைதான். இப்போது இந்த செயல்முறை பயிற்சியில் முக்கியமானது எந்த குண்டும் துவாரத்தைத் தவிர மற்ற இடத்தில் பட்டு திரும்பாது எனும் ஒரு கட்டுப்பாடு.

அதைப் போன்றே அலைகள் இப்போது செலுத்தப்படுகிறது. ஒரு துவாரம் மூடப்படுகிறது. எப்படி குண்டுகள் சென்றதோ அதைப் போன்றே அலைகள் செல்கிறது. மறு துவாரம் மூடி, மூடப்பட்ட துவாரம் திறக்கபடுகிறது, மீண்டும் அதே போன்ற முடிவு. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இப்போது இரண்டு துவாரங்கள் திறக்கப்படுகிறது. இப்போது முதலில் ஒரு துவாரம் திறக்கப்பட்டபோது இருந்த பதில் இல்லாமல், ஒரு அலை வடிவம் தென்படுகிறது. இப்போது அலையின் உயரம் அதிகமாக தென்படுகிறது. இதற்கு காரணம், இரண்டு துவாரங்கள் வழியாக சென்ற அலைகள் இணைந்து ஒரு பெரிய அலையை உருவாக்கிவிட்டது. அதற்கு பின்னர் சின்ன அலை. சில இடங்களில் அலைகள் சேர்ந்து பெரிதாகவும், சில இடங்களில் அலைகள் சேர்ந்து ஒன்றுமில்லாமலும் ஆகும்.

இந்த குண்டுகள், மற்றும் அலைகள் செயல்படும் விதத்தை அடிப்படைத் துகள்கள் ஒரு சேர செய்கின்றன என்பதுதான் குவாண்டம் கோட்பாடு. உதாரணத்திற்கு எலக்ட்ரான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எலக்ட்ரான்கள் எதிர்மறைத் தன்மை கொண்டவை. இப்போது ஒரு துவாரம் திறக்க இந்த எலக்ட்ரான்கள் குண்டுகள் போன்றும், அலைகள் போன்றும் எப்படி ஒரு துவாரம் திறந்து இருந்ததோ அதைப் போன்றே செயல்பட்டன. இரண்டு துவாரங்கள் திறந்தபோது இந்த எலக்ட்ரான்கள் அலைகள் போன்றே செயல்பட்டன. ஒவ்வொரு எலக்ட்ரானும் மோதிக் கொள்வதால் இருக்கும் என்றே ஒரு ஒரு எலக்ட்ரான் மட்டும் செல்லுமாறு செயல்முறை செய்யப்பட்டது. அப்போதும் அவை அலைகள் போன்றே செயல்பட்டன. இதை கண்டறிய ஒளியை பயன்படுத்தினார்கள்.

ஒரு எலக்ட்ரான் செல்லும்போது இந்த ஒளியினால் வெளிச்சம் தரும். எனவே எலக்ட்ரான்கள் எந்த வழியில் செல்கிறது என கண்டறிய முற்பட்டார்கள். சுவற்றின் பின்புறம் விளக்கு வைக்கப்பட்டது. எலக்ட்ரான் ஆச்சரியமூட்டும் வகையில் குண்டுகள் போன்றே ஒரே ஒரு துவாரத்தில் சென்றன. இதற்கு என்ன காரணம் என அறிய முற்பட்டபோது ஒளியின் இடையூறு என அறிந்து கொள்ள முடிந்தது. இதனால் ஒளியின் தன்மையை குறைத்தார்கள். ஆற்றல் பகுதி பகுதியாய் வருவது என குறிப்பிட்டு இருந்தோம். இப்போது எலக்ட்ரான்கள் ஒளியின் தன்மை குறைந்ததால் ஒளியானது எலக்ட்ரானில் படும்போது குண்டுகள் போன்றும், ஒளியில் இருந்து தப்பிக்கும் எலக்ட்ரான்கள் அலைகள் போன்றும் செயல்பட்டன. முதலில் எழுதிய பத்தியை திருப்பி வாசியுங்கள். நம்மை கவனிக்கும்போது நமது செயல்பாடு, நம்மை கவனிக்காமல் இருக்கும்போது நமது செயல்பாடு!

தற்போது ஒளியின் வேகத்தை (சீரான அளவு எனினும்) குறைத்தார்கள். அதாவது ஒளியலையின் நீளம் அதிகரிக்கப்பட்டது. இப்போது ஓரளவு ஒளியலை நீளம் குறைக்கப்பட்டபோது குண்டுகள் போன்றும், மேலும் ஒளியலை நீளம் குறைக்கப்பட்ட போது அலைகள் போன்று செயல்பட்டது. இந்த செயல்முறை பயிற்சி சொன்னது இதுதான். எதைக் கண்டறிய வேண்டுமோ அதற்குரிய செயல்முறை பயிற்சி இல்லாமல் ஒன்றை சொல்ல முடியாது. நாம் செய்யும் செயல்முறை பயிற்சி குறித்தே ஒன்று இருப்பது, இல்லாதது தெரியும்.

இப்போது ஜீவாத்மா, பரமாத்மா. இதற்குரிய செயல்முறை பயிற்சி யோகம் என்றும், தியானம் என்றும் சொல்கிறார்கள். பரமாத்மா, ஜீவாத்மாவாக வந்ததாக புராணங்கள் குறிப்பிடுகிறது. விஸ்வரூப தரிசனம் என்றெல்லாம் சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு அணுத்துகள் எப்படி துகளாகவும், அலையாகவும் செயல்படும் என குவாண்டம் கோட்பாடு சொல்கிறதோ அதைப்போலவே ஆத்மா ஜீவாத்மா, பரமாத்மா என செயல்படும் என மெஞ்ஞானம் சொல்கிறது. குவாண்டத்தின் இந்த முக்கிய கோட்பாட்டை மறுப்பவர்கள் கடவுளை தாராளமாக மறுக்கலாம். ''If you want to say that something behaves a certain way or even exists, you must give the context of this behaviour or existence since in another context it may behave differently or not exist at all'' யோகிகளின், மகான்களின் மனநிலைக்கு கடவுள் தெரிந்து இருக்கலாம். அதைத்தான் அவர்கள் சொன்னார்கள். நாம் நமது நிலையில் இருந்து கொண்டு கடவுள் இல்லை என சொன்னால் அது நமது நிலைக்கு சரியாகவே இருக்கும்.

3. இந்த அடிப்படைத் துகள்கள் ஒழுங்குமுறையின்றி செல்லும் தன்மை கொண்டது.

4. ஒரு துகளின் உத்வேகத்தையும், அந்த உத்வேகத்தில் இருக்கும்போது உள்ள நிலையினையும் கண்டறிந்து கொள்வது என்பது முடியவே முடியாத ஒன்று. கருவிகள் இல்லாதபட்சத்தில் அதாவது ஓடிக்கொண்டிருப்பவர் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் எவ்வளவு வேகமாக ஓடினார் என அறிந்து கொள்வது சிரமம். இவை இரண்டில் ஒன்றை துல்லியமாக அறிந்து கொள்ள நினைத்தால் மற்றொன்று பிழைத்துப் போகும். ''இக்கணத்தில் எக்கணமும் இல்லை''

5. நாம் இப்போது கண்டு கொண்டு இருக்கும் உலகமும், அணுக்களின் உலகமும் முற்றிலும் வெவ்வேறானவை.

எப்போது ஒரு துகள் துகளாகவும், அலையாகவும் இருக்கும். ஆச்சரியப்படாதீர்கள். எப்போது துகளாக பார்க்கிறோமோ அப்போது துகளாக இருக்கும், எப்போது அலையாக பார்க்கிறோமோ அப்போது அலையாக இருக்கும். நாம் பார்க்கும் முறையை பொருத்தது என்றார் ஒரு அறிஞர். ஒன்றை பார்க்காதவரை அது உண்மை இல்லை என்றார் அவர். எனக்கு  பல நேரங்களில் அறிவியலாளர்கள் முட்டாள்கள் போன்றே காட்சி அளிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத்தான் தெரியும் உண்மை என்னவென்று.

ஒரு நாயை கல்லில் சிலை வடித்த கதை, நமது கிராமங்களில் மிகவும் பிரபல்யம். கல்லில் வடிக்கப்பட்ட சிலை கண்டு, இது கல்லோ, நாயோ என்றே எண்ணி, கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என பாடி வைத்தார்கள். கடவுளுக்கு என இது தெய்வம் என்றால் தெய்வம், சிலை என்றால் அது சிலைதான் என எழுதி வைத்தார்கள். ஆனால் உண்மை எது? ஒரு கல், அது சிலை. இப்போது நாயும், தெய்வமும் நாம் பார்ப்பதில் இருக்கிறது. அடிப்படையில் துகள்கள் துகள்கள்தான். செயல்முறை பயிற்சியில் துகள்களைத்தானே துவாரங்கள் வழியாய் செலுத்தினாய் என்றே கேட்க வேண்டும் போல் இருக்கிறது!

குவாண்டம் கோட்பாடு எனக்கு மிக மிக சரியாகப் புரிந்துவிட்டது,  இன்னும் எனது முட்டாள்தனம் நிச்சயமாக சிறிது நாட்கள் பின்னர் தொடரத்தான் செய்யும்.

(தொடரும்)


Wednesday 11 September 2013

ஜீரோ எழுத்து - 5 குவாண்டம் கொள்கையும் மூடத்தனமும்


 ''இது தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கை'' - ஐன்ஸ்டீன்

''எப்படி எப்படி நடக்குமோ, அப்படி அப்படியே நடக்கும்'' - வழக்கு மொழி

''கிடைக்கிறது கிடைக்காம போகாது, கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது'' - ரஜினி பட வசனம்

''கடவுள் தாயக்கட்டையை உருட்டுவதில்லை'' - ஐன்ஸ்டீன்

''மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்'' - வழக்கு மொழி

''வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன், திணை அறுப்பான்'' - வழக்கு மொழி

''அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்'' - வழக்கு மொழி

மேலே சொன்ன விசயங்கள் எல்லாம் ஒரு துக்கிரித்தனமாக இருக்கும்.  இது போன்ற பல சொல்லப்பட்ட விசயங்கள்  மூடத்தனமான கருதப்படுகின்றன. இந்தியாவில், ஏன் இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் தத்துவ மேதைகள் போலவே காட்சி அளிக்கிறார்கள். இதில் பெரும்பாலோனோர் வாழ்க்கையை மிகவும் சர்வ சாதாரணமாய் வாழ்ந்துவிட்டு போவார்கள்.

அணுக்கொள்கை பற்றி கிரேக்கம் சொன்னது இது தான். ''ஒன்றை வெட்ட வெட்ட சின்ன துகள்கள் ஆகும். அதை மேலும் மேலும் வெட்ட அதை வெட்ட இயலாத நிலை ஒன்றை  அடையும்'' இப்படி எண்ணற்ற விசயங்கள் நினைவில் இருந்து வந்தவைதான்.

''ஒளியைவிட வேகமாக செல்லும் துகள்களோ, அலைகளோ இல்லை'' - ஐன்ஸ்டீன்

பொதுவாக ஒரு விசயத்தை சொன்னால் அதற்கான செயல்பாட்டு முறை அவசியம், அதாவது நிரூபிக்கும் வழி முறை. கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க பல சோதனைகள் கடவுளே நடத்துவதாக சொல்லப்பட்டு வருகிறது.இவ்வாறு அறிவியலில் சொல்லப்பட்ட விசயங்கள் பல செயற்முறை பயிற்சி மூலம் நிரூபிக்க பட்டு கொண்டு இருக்கிறது.

கீழே சொல்லப்பட்ட வாக்கியங்கள் மிகவும் விசித்திரமானவை. ஒன்றில் இருந்தே மற்றொன்று தொடங்கும் என்பதற்கான ஒரு தொடர்பு.

 ''நெருப்பில்லாமல் புகையாது''

''அறிவியல் யூகம் சொல்லும்''

''அறிவியல் தாயக்கட்டை உருட்டும்''

ஒரு நாணயத்தை, தலை பூ என இருந்தால், சுற்றிவிடும் போது  ஒன்று தலை விழும். அல்லது பூ விழும். இதைத்தான் அறிவியல் சொல்கிறது. ஆனால் எப்போது தலை விழ வேண்டுமோ அப்போது மட்டுமே தலை விழும் என்பதுதான் தீர்மானிக்கப்பட்ட விசயம். இதை வைத்தே ''கடவுள் தாயக்கட்டை உருட்டுவதில்லை'' என்றார்.

''குவாண்டம் கொள்கை'' இந்த உருட்டலைத்தான் சொல்கிறது. குவாண்டம் கொள்கையானது சொல்லப்படும் யூகம் ஓரளவுக்கு சரியே என்பாரும் உளர். ஆனால் இந்த குவாண்டம் கொள்கையினை நிரூபிக்க கூடிய செயல்பயிற்சி முறை இன்னமும் கிட்டவில்லை. இதனால் இதை ஒட்டிய ஷ்ட்ரிங் தியரியை கடுமையாக விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள்.

இந்த குவாண்டம் கொள்கை அறிவியலின் மூடத்தனம் என்றே சொல்லவும் செய்கிறார்கள். அறிவியலால் நிரூபிக்க முடியாத விசயங்களை இந்த குவாண்டம் கொள்கையின் தலையில் கட்டிவிட்டதாகவும், இதற்காக செலவிடப்படும் பணம் ஊதாரித்தனமான செலவு எனவும் சொல்கிறார்கள்.

ஆமாம், குவாண்டம் கொள்கை என்றால் என்ன? இந்த குவாண்டம் கொள்கையை உருவாக்கியவர் சொன்னார், குவாண்டம் கொள்கையை புரிந்து கொண்டேன் என எவரேனும் சொன்னால் அவரைப் போல முட்டாள் எவரும் இல்லை.

குவாண்டம் கொள்கை எனக்கு மிக மிக சரியாக புரிந்து விட்டது. எனது முட்டாள்தனத்தை சிறிது நாட்கள் பின்னர் பார்க்கலாம்.

(தொடரும்) 

Friday 6 September 2013

சாமியாரின் சுகபோக வாழ்க்கை

நான் சாமியாராகப் போகப் போகிறேன் என்றே கடந்த சில மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தேன். இதனால் எனது அம்மாவும் அப்பாவும் கடும் எரிச்சல் அடைந்தார்கள்.  இருபது வயசுல என்ன சாமியார் ஆசை இவனுக்கு என்றே என்னை மந்தரிக்க எல்லாம் அழைத்து சென்றார்கள். ஆனால் எனது முடிவில் நான் மாற்றம் கொள்ளவில்லை. அவசரம் அவசரமாக ஒரு பெண்ணை பார்த்து எனக்கு மணம் முடிக்க மணப்பெண்ணைத்  தேடி தேடி அலைந்தார்கள்.

யாராவது ஒரு பெண்ணை பார்த்துவிட்டு வந்தால், அந்த குடும்பத்தில் சென்று  நான் சாமியாராகப் போகிறேன் என்றே சொல்லி வைத்தேன். அதனால் எனக்கு எவரும் பெண் தர மிகவும் யோசித்தார்கள். சில சாமியார்கள் சம்சாரிக்கு ஒரு பொண்டாட்டி, சாமியாருக்கு பல பொண்டாட்டிகள் என ஊரில் வசனம் பேச வைத்துவிட்டார்கள். இருப்பினும் எனது சாமியார் ஆசை என்னை விடவில்லை. சாமியார் ஆக வேண்டுமெனில் எப்படி என்னை தயார் படுத்திக் கொள்வது என்று அறிந்து கொள்ள ஒரு சாமியாரை சந்திக்க சென்றேன். இவர் மிகவும் பிரபல்யமானவர் இல்லை. எனது நண்பர் ஒருவர் சொல்லித்தான் இவரைத் தெரியும். அவனிடம் கேட்டதற்கு நீ நேரில் சென்று பார் என முடித்துக் கொண்டான்.

இந்த சாமியார் தனது பெயரில் ஆனந்தா என்றெல்லாம் சேர்த்து கொள்ளவில்லை. தனது பெற்றோர் வைத்த பெயரான வேலுச்சாமி என்பதையே இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தார். அவர் தங்கி இருந்த இடத்தை சுற்றி மரங்கள், செடிகள் என இருந்தன. அந்த மரங்கள் செடிகளுக்கு நடுவே ஒரு ஓலை வேய்ந்த குடிசை. சாமியார், சம்சாரி ஆன கதை எல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேன். குடிசை கதவு திறந்தே இருந்தது. ஆனால் உள்ளே அவர் இல்லை. சரி என சுற்றிப் பார்த்தேன். செடிகளுக்கு ஒருவர் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். இவர்தான் சாமியாரா? காவி உடை எல்லாம் இல்லையே என நினைத்துக் கொண்டிருந்தேன்.

அவர் அருகில் சென்று நீங்கள் தான் வேலுச்சாமி சாமியாரா என்றேன். அவரோ எனது பெயர் வேலுச்சாமி, நான் சாமியார் எல்லாம் இல்லை என்றார். எனது நண்பன் சொன்னான், நீங்கள் சாமியார் என்று என்றேன். உனது நண்பன் மீதான நம்பிக்கை எனக்குப் பிடித்து இருக்கிறது, ஆனால் நான் சாமியார் இல்லை என்றார். நான் அமைதியாக இருந்ததை பார்த்துவிட்டு 'சாமியார்' என்றால் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறாய்? என்றார்

எவர் ஒருவர் பக்தியும், அருளும் நிறைந்து சதா இறைவனையே நினைத்து அவருக்கு பணிவிடை புரிகிறாரோ அவரே சாமியார் என்றேன். மிகவும் நல்ல பதிலை சொல்லி இருக்கிறாய் என்றார். எனக்கு உச்சி குளிர்ந்து போனது. சரி, இறைவன் எங்கெலாம் இருக்கிறார் என்றார். இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்றேன். நல்ல பதிலை சொல்லி இருக்கிறாய் என்றார் மீண்டும். எனக்கு சந்தோசமாக இருந்தது. சரி, நீ என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய் என்றார். நான் வேலை எதுவும் செய்யவில்லை, சாமியார் ஆக வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்றேன். பதிலை சொல்லி இருக்கிறாய் என்றார்.

சாமியார் ஆக நீங்கள் தான் எனக்கு அருள் புரிய வேண்டும் என்றேன். மிகவும் தாராளமாக செய்யலாம், தினமும் காலையில் எட்டு மணிக்கு இங்கு வந்துவிடு, மாலை ஆறு மணிக்கு இங்கிருந்து சென்று விடு என்றார். மிகவும் சந்தோசமாக வீடு சேர்ந்தேன். வீட்டில் விசயம் சொன்னதும் பெற்றோர்கள் மிகவும் கோபம் கொண்டார்கள். ஆனால் என்னை அவர்களால் தடுக்க இயலவில்லை.

மறுநாள் காலையில் சாமியாரை காண சென்றேன். அவர் என்னை அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட எல்கை அளவை காட்டி இங்கே பதினோரு மணி வரை நீ தண்ணீர் பாய்ச்சு என சொல்லிவிட்டு சென்றார். நானும் சாமியார் ஆகும் ஆசையில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தேன். அரை மணி நேரத்தில் பழங்கள் கொண்டு வந்து இதை சாப்பிடு என தந்தார். பழங்கள் மிகவும் ருசியாக இருந்தது. நேரம் ஆக ஆக உடல் வலிக்க ஆரம்பித்தது. சரியாக பத்தரை மணிக்கு பழச்சாறு கொண்டு வந்து தந்தார். அமிர்தமாக இருந்தது. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இருந்தது.

பதினோரு மணிக்கு வந்து பார்த்தவர் மிகவும் நன்றாக வேலை செய்து இருக்கிறாய் என என்னை அழைத்துக் கொண்டு அவர் செய்து முடித்து இருந்த வேலையை காட்டினார். பல தென்னங்காய்கள் உரித்து இருந்தார். இதையெல்லாம் மூட்டை கட்டு என்றார். மூட்டை கட்டி முடிக்கும் முன்னர் முதுகெலும்பு உடைந்து போகுமாறு இருந்தது. ஒரு மினி லாரி வந்தது.

இன்னைக்கு எத்தனை மூட்டை சாமி என்றபடி வந்தவர் பத்து மூட்டை இருக்கே என கொஞ்சம் பணம் முதலாக தந்தார். மினி லாரியில் அவருடன் சேர்ந்து நானும் மூட்டைகளை ஏற்றி விட்டேன். வரேன் சாமி என சொல்லிவிட்டு மினி லாரி டிரைவர் கிளம்பினார். அரைமணி நேரம் கழித்து என்னை அழைத்துக் கொண்டு ஒரு ஆசிரமம் சென்றார். அங்கே சிறு குழந்தைகள், முதியவர்கள் என பலர் இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து சிறிது நேரம் பொழுதை கழித்தவர் தன்னிடம் இருந்த பணத்தை அங்கே இருந்த ஆசிரம நிர்வாகியிடம் தந்தார். கணினியில் வேகமாக தட்டிப் பார்த்துவிட்டு சாமி, இதோட உங்க அன்பளிப்பு தொகை பதினைந்து  லட்சம் என்றார். கணக்கு நான் கேட்கலையே என்றார் சாமியார். ஆசிரமத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட்டார். நானும் அவர்களுடன் சாப்பிட்டேன்.

இரண்டு மணிக்கெல்லாம் குடிசைக்கு திரும்பியவர் அங்கே இருந்த கயிற்று கட்டிலை என்னிடம் காட்டி அதில் தூங்கு என சொல்லிவிட்டு அவர் ஒரு துண்டினை கீழே விரித்து மர நிழலில் அப்படியே உறங்கினார். நான் சாமியார் ஆக வேண்டும் எனும் ஆசையில் அவர் சொல்வதையெல்லாம் தலையாட்டி பொம்மை போல செய்து கொண்டிருந்தேன்.

நான் விழித்து பார்த்தபோது சாமியார் தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார். மணி ஐந்து ஆகி இருக்கும். நானும் வேகமாக எழுந்து நிறைய நேரம் உறங்கிவிட்டேன் என்றேன். உறங்கத்தானே செய்தாய், உடலுக்கு மனதுக்கு நல்லதுதானே என சொல்லிவிட்டு என்னை களை எடுக்க சொன்னார். நானும் எடுத்தேன். சரியாக மணி ஆறு ஆனதும் என்னை வீட்டுக்குப் போக சொன்னார். நான் தங்கி இருக்கிறேன் என சொன்னேன். சரி என சம்மதம் சொன்னார். அன்று மாலை குளித்து முடித்த பின்னர்  மறுபடியும் பழங்கள், காய்கறிகள் என சாப்பிட தந்தார். வேறு உணவு கிடைக்குமா என கேட்க மனம் வரவில்லை. சாப்பிட்டுவிட்டு அமர்ந்து இருந்தோம். அப்போது விளக்கு ஒன்றை கொண்டு வந்து அத்துடன் ஒரு நோட்டு புத்தகம் தந்தார். இதை படிக்க ஒரு மணி நேரம் ஆகும், படித்து முடி என தந்தார். சற்று தள்ளி அமர்ந்து அவர் எதையோ எழுத ஆரம்பித்தார்.

எனக்கு கொடுத்த நோட்டு புத்தகத்தின் தலைப்பு வாழ்க்கையை சுவாரஸ்யமாக வாழ்வது எப்படி என்று எழுதி அதற்கு கீழே வேலுச்சாமி என்று போட்டு இருந்தது.


A saint is one who has been recognized for having an exceptional degree of holiness, sanctity, and virtue. (Wikidpedia)

A real saint is who preserves the nature and support the humanity (Radhakrishnan)