Saturday 26 May 2012

எனக்கு ஏனிந்த வேலை

ந்த சாமியார், ஜோசியர், குறி சொல்பவர் என்பவர்களையெல்லாம் நீக்கிவிட்டேன். ஆச்சரியம் எனக்கு ஒரு வேலை கிடைத்து இருந்தது. ஒரு காலை முழுவதும் செய்த வேலையில் சரியான அலுப்புடன் வீடு வந்து சேர்ந்தேன். என்னால் நம்ப முடியவே இல்லை. நான் காண்பது கனவா, நினைவா எனும் கேள்விக்குறிகள் என்னுள் ஈட்டியாக பாய்ந்து கொண்டிருந்தன. கண்களை கசக்கி கொண்டு பார்த்தேன். ஆனால் பார்த்தது நிஜம் தானா என ஊர்ஜிதம் செய்து கொள்ளவே முடியவில்லை. மீண்டும் கண்களை கசக்கினேன். இப்படி கண்களை கசக்குவதால் மூளைக்கு செல்லும் நரம்புகளும் கசக்கப்படும் என ஒரு வாக்கியம் நினைவுக்கு வந்து போனது. 

வார்த்தை குளறியதால் வாய் குளறியது. நீங்கள் பரந்தாமன் நாராயணனா? என்றேன். அங்கே நின்றவர் ஒரு பெரிய புன்னகையை வீசிக்கொண்டு நின்றார். சொல்லுங்கள், நீங்கள் பரந்தாமன் நாராயணனா? என்றேன் மீண்டும். அதே புன்னகை. அருகில் சென்று உடலைத் தொட்டேன். எனது உடல் சில்லென்றது. ''உங்களைத் தொட்டதால் உலகில் உள்ள அனைத்தையும் தொட்டது என்றாகுமோ?'' என்றேன். மீண்டும் புன்னகை. 

''எனது வீட்டில் நீங்கள் எழுந்தருளியிருப்பது எனது பாக்கியம், வாருங்கள் இதோ இந்த நாற்காலியில் அமருங்கள். உனது நாற்காலி எல்லாம் எதற்கு, நானே நாற்காலி செய்து கொள்வேன் என்றெல்லாம் சொல்லி விடாதீர்கள்'' என்றேன். அதே புன்னகை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வீட்டில் வேறு எவரையும் காணவில்லை. பரந்தாமன் நாராயணன் வந்தது தெரிந்தால் அம்மா எத்தனை சந்தோசம் கொள்வார் என அடுப்பங்களைக்கு ஓடினேன். ஏதாவது ஒரு பானையில் ஒரு சோறாவது ஒட்டி இருக்கிறதா என தேடினேன். 'பரந்தாமன் ஒரு சோறு உட்கொண்டால் உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் பசியாறிவிடும் அல்லவா'' என்று பார்க்க சட்டி நிறைய சோறு இருந்தது. இந்த சட்டி நிறைய இருக்கும் சோற்றில் எந்த ஒரு பருக்கையை மட்டும் எடுத்துக்கொண்டு செல்வது என நினைத்துக்கொண்டிருக்க, பரந்தாமன் போய்விடுவாரோ என ஓடி வந்து பார்த்தேன். அதே புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார். 

சரி ஆனது ஆகட்டும் என கண்களை மூடி ஒரு பருக்கையை மட்டும் எடுத்துக்கொண்டு பரந்தாமனின் கையில் வைத்தேன். எனது வயிறு நிறைந்தது போலிருந்தது. ஒவ்வொரு சோறாக எதற்கு நாட்கள் முழுக்க பரந்தாமன் உண்ணக்கூடாது என மனதில் நினைத்தேன். அதே புன்னகை. அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய்விட்டது. வீட்டில் எரிந்து கொண்டிருந்த ஒளி அணைந்து போனது. பரந்தாமா, நீங்கள் பேரொளியிருக்க இந்த ஒளி எல்லாம் எதற்கு என்றே சொன்ன பிறகும் இருட்டாகவே இருந்தது. இருளில் நீங்கள் இருப்பது இல்லையோ? என்றே கேட்டேன். இப்போது ஒலி மட்டும் வழி கொண்டிருக்க ஒளி தெளிவின்றி இருந்தது. பரந்தாமன் கொண்டது புன்னகையா இல்லையா என தெரியவில்லை. 

சிறிது நேரத்திற்கெல்லாம் எவர் செய்த புண்ணியமோ மின்சாரம் வந்து சேர்ந்தது, அப்படியெனில் எவர் செய்த பாவத்தினால் மின்சாரம் போனது என்றே நினைத்துக்கொண்டே பரந்தாமா இவ்வுலகில் எதற்காக ஜீவராசிகளைப் படைத்தாய்? அதுவும் என்னை எல்லாம் எதற்காக படைத்தாய்? என்றேன். அதே புன்னகை. எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. இத்தனை பேசியும் எதுவுமே சொல்லாமல் இப்படி மெளனமாக நின்று கொண்டிருக்கிறாரே என மனதில் தைரியம் வரவழைத்துக்கொண்டு வீட்டில் இருந்த பூமாலைகள் எடுத்துகொண்டு வந்து அவரின் கழுத்தில் போட்டேன். மாலை சூடிய மங்கை ஆண்டாள் நான் இல்லை என்றாலும் மரியாதை செலுத்தும் பக்தனாக பரந்தாமன் கண்ணுக்குத் தெரியட்டும் என நினைத்தேன். மீண்டும் அதே புன்னகை. 

ஒரு நன்றியாவது செலுத்தமாட்டாயா என்றே கேட்டேன். அதே புன்னகை. இதோ உலகில் உள்ள பாவங்களையெல்லாம் போக்காமல் எதற்காக பார்த்து கொண்டிருக்கிறாய் என்றேன். மீண்டும் புன்னகை. இன்னும் நின்று கொண்டிருக்கிறீர்களே, அமருங்கள் பரந்தாமா என்றேன். புன்னகை மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. இந்த உலகில் மனிதர்கள் அவர்களுடைய காரண காரியங்கள் படி செயலாற்றி கொண்டிருக்க அவர்களை திருத்துவது மாற்றுவது எல்லாம் அவசியமில்லாத வேலை என்று நினைக்கிறீர்களோ பரந்தாமா? என்ற நான் அவருக்காக ஒரு பாசுரம் பாடினேன். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செல்வித்திரு காப்பு. அந்த பாடலை பாடிய பின்னரும் அதே புன்னகை. எப்படி பரந்தாமா இப்படி இருக்க முடிகிறது உங்களால், பதில் சொல்லுங்கள் பதில் சொல்லுங்கள் என கண்ணை மூடி சத்தம் போட்டேன்.

யாரோ தொட்டு எழுப்புவது போன்று இருந்தது. பரந்தாமன் தான் என்னை தொடுகிறானோ என நினைத்தேன். கண்களைத் திறந்த போது எதிரே அம்மா நின்று கொண்டிருந்தார்.

''மதிய வேளையில் கூட என்னடா தூங்கிண்டு இருக்கே, மணி நாலரையாறது. இன்னைக்குத்தான் கோவில் அர்ச்சகரா வேலைக்கு சேர்ந்தே அதுக்குள்ள இப்படித் தூக்கமா. முகத்தை அலம்பிண்டு நீர் ஆகாரம் குடிச்சிட்டு கோவிலுக்குப் போய் மாலை பூஜை எல்லாம் ஆரம்பி' என அம்மா என்னை எழுப்பி சொன்னதும் 'அம்மா, அம்மா அந்த பரந்தாமன் என் கனவுல வந்தாரும்மா' என சொல்லிக்கொண்டே அடுப்பங்களையில் இருந்த சோற்றுப்பானையை திறந்து பார்த்தேன். ஒரே ஒரு சோறு மட்டும் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இருந்தது.

என் பின்னால் வந்த அம்மாவிடம் இதோ ஒரு சோறு என்றேன். நான் பாத்திரத்தை சரியா கழுவாம வைச்சிட்டேன்டா என்றார். இருக்கட்டுமா என்று ஒரு சோற்றினை மட்டும் எடுத்துக்கொன்டு கோவில் நோக்கி புறப்பட்டேன். உலகில் உள்ள உயிர்களின் பசியை போக்குவார் என்கிற அதீத நம்பிக்கையுடன்.

Friday 18 May 2012

குருட்டுத்தனமான குரு பெயர்ச்சி

இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படித்தான் வாழ்க்கையில முன்னேறுரது? வழக்கம் போல பழைய புராணம் ஒன்றை கேட்க வேண்டியதாகி போனது. 'என்னை என்ன பண்ண சொல்ற' என பழைய புராணம் ஒன்றை நானும் தான் எடுத்துவிட்டேன். 'ஏதாவது பண்ணி தொலை' அதே சலிப்புடன் அம்மா நகர்ந்து போய்விட்டாள். எனக்கு அப்பாடா என்று இருந்தது.

இந்த முறை கனவு எல்லாம் நம்ப நான் தயாராக இல்லை. எனவே ஏதேனும் சாமியார் ஒருவரை நிஜத்திலேயே சந்தித்து எதிர்கால வாழ்க்கை குறித்து கேட்டு விடலாம் என கிளம்பினேன். நமது ஊரில் சாமியார்களுக்கா பஞ்சம். சாமியாரிடம் என்ன அருள்வாக்கு கேட்பது என மனதில் திட்டம் போட்டு கொண்டேன். இந்த சாமியார்கள் எல்லாம் மிகவும் சக்தி படைத்தவர்கள். அதாவது பிறரை ஏமாற்றும் சக்தி படைத்தவர்கள் அல்லது பிறர் தங்களிடம் வந்து ஏமாறும் நிலையை அறிந்தவர்கள்.

படித்தறிந்த மேதாவிகள் முதற்கொண்டு படிக்காத தற்குறிகள் உட்பட தங்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ள கொண்டிருக்கும் ஆவலை அவல் போல மென்று துப்பும் வித்தையை இந்த சாமியார்கள் நிறையவே தெரிந்து வைத்து இருக்கிறார்கள். இதற்காக சாமியார்களை மட்டும் குறை சொல்ல முடியுமா? இது வியாபார உலகம். எது எது வியாபாரம் நன்றாக ஆகுமோ அது அது நன்றாக வியாபாரம் ஆகும்.

உடல் விற்று வாழும் பெண்களை வைத்து நடத்தப்படும் தொழில் கூடத்தான் இவ்வுலகில் பெரும் விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக அந்த பெண்களை குறை சொன்னால் மட்டும் போதுமா? எல்லாவற்றுக்கும் மோகம் கொண்டு திரியும் மனிதர்கள்தான் அத்தனை குட்டிச்சுவர்களுக்கும் முழு காரணம். வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக தவறு செய்பவர்கள் கொஞ்சம் என்றால் தவறு செய்ய வாய்ப்புதனை ஏற்படுத்தி கொண்டு வாழ்பவர்கள் மிகவும் அதிகமாகவே இருக்கிறார்கள். இந்த குட்டி குடைசலை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு ஊரிலேயே பெரிய சாமியார் என சொல்லப்படும் ஒருவரை சந்திக்க சென்றேன். எனது கால கிரகம்.

அப்பாய்ன்ட்மென்ட் இருக்கிறதா என வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து இருந்த ஒருவர் என்னை பார்த்து கேட்டதும் எனக்கு வியர்த்து கொட்டியது. இல்லை, எப்போ சாமியாரை பார்க்கலாம் என கேட்டேன். கையில் இருந்த நோட்டில் வேகமாக பார்த்துவிட்டு அடுத்த மாசம் பத்தாம் தேதி வா என பெயர் விலாசம் எல்லாம் குறித்து கொண்டார். சாமியார் இருக்கும் அறைக்குள் எட்டி பார்த்தேன். ஒரு ஐம்பது நபர்கள் அமர்ந்து இருப்பார்கள். சாமியாருக்கு வந்த கிராக்கி என நினைத்து கொண்டு வெளியே வந்தேன்.

பேசாம சாமியாரா போயிரலாம் போல இருக்கு என எனக்கு நானே பேசினேன். சாமியார் ஆகிறது எத்தனை கஷ்டம தெரியுமா? ஆசைகள் எல்லாத்தையும் துறந்துரனும் என்றார். பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்றார் அவர். என்னய்யா மடத்தனமா பேசற இப்ப எல்லாம் அந்த ஆசைகள் எல்லாம் இருந்தாத்தான் சாமியார் ஆக முடியும். ஊரெல்லாம் சிரிச்சி கேவலப்படுத்தினாலும் ஒய்யாரமா இந்த காலத்தில உலா வரமுடியும் என எனது பங்குக்கு கரிச்சி கொட்டினேன்.

வழியில் ஒரு ஜோசியர் கடை தென்பட்டது. ஜோசியம் எல்லாம் கடை போட்டு விற்பனை பண்ணும் நிலைக்கு வந்து விட்டது. ஜோசியம், பரிகாரம், பூஜை புனஸ்காரம். அப்பப்பா என்ன பண்ணுவதென்றே தெரியவில்லை. எதற்கும் ஜோசியரிடம் ஒரு வார்த்தை கேட்போம் என அங்கே சென்றேன். அங்கே எனக்கு முன்னர் ஒரு ஏழெட்டு நபர்கள் அமர்ந்து இருந்தார்கள். அட பாவி மனுசங்களா என திட்டிவிட்டு பக்கத்தில் இருந்த கடையில் டீ குடித்தேன். அங்கே குருபெயர்ச்சி பலன்கள் என போட்டு இருந்தது. சரி படிப்போம் என பார்த்தேன். இந்த குரு ஒவ்வொரு வருஷம் ஒரு ராசிக்கு பயன் செய்வாராம். இந்த வருஷம் ரிஷபத்தில் இருக்கிறாராம்.

இந்த குருவுக்கு தர மரியாதைய இப்போ எல்லாம் யார் தங்களுடைய ஆசிரியர், தாய், தந்தை என யாருக்கும் தரது இல்லை. கொடுமைடா சாமி. நான் எந்த ராசியா இருந்தா என்ன அப்படின்னு எல்லா ராசிய படிச்சி பார்த்தேன். ஆனா எனக்கு ஒண்ணுமே புரியலை. எதுக்கு இந்த குரு இப்படி குருட்டுத்தனமா இடம் பெயர்ச்சி செய்றார். சரி அப்படின்னு ஜோசியர் கிட்ட போனேன். 

அவர் சொன்னார். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு பணம் அந்தஸ்தை அள்ளி தரும் அப்படின்னு சொன்னார். அவர்கிட்ட ஒரு ஆறு வருசமா அப்படித்தான் சொல்லிட்டு இருக்காங்க ஒன்னும் நடக்கலையே என்றேன். குரு துரோகம் பண்ணாதே அழிஞ்சிருவ அப்படின்னு சொன்னார். 

பணம் அந்தஸ்து இருந்தா எல்லா துரோகம் பண்ணலாம்னு சொல்லிட்டுஉங்க ராசிக்கு என்ன சொல்லி இருக்கு அப்படின்னு கேட்டேன். சகல சௌபாக்கியம் அப்படின்னு சிரிச்சார். 

வெளியே வந்தப்போ வியர்க்க விறுவிறு க்க ஒருத்தர் வேலை செஞ்சிட்டு இருந்தார். என்ன ராசி நீங்க அப்படின்னு கேட்டேன். தெரியாது, எதுக்கு கேட்கறீங்க அப்படின்னு கேட்டார். குரு  பெயர்ச்சிநடந்து இருக்காம் அதான் உங்களுக்கு என்ன பலன் இருக்கும்னு தெரிஞ்சிக்கலாம்னு. 

குரு குருட்டுதனமா பெயர்ச்சி அடைவான். சனி சந்தடிசாக்கில பெயர்ச்சி அடைவான். இப்படி வெட்டித்தனமா சுத்திட்டு திரியற அவங்களே இன்ன இன்ன பலன்கள் தராத வெட்டி கதைகள் பேசிட்டு திரியறாங்களே, உழைக்கிற நாம எவ்வளவு பலன்கள் நமக்கும், நம்மை சுத்தி இருக்கறவங்களுக்கும் தரலாம்னு ஊரெல்லாம் போய் சொல்லு என வியர்வை துடைத்து அவர் வீசி சென்றதில் எனக்குள் இருந்த ஒரு சாமியார், ஜோசியர் என்கிற கற்பனை உலகத்தை முற்றிலும் துடைத்து எறிந்தேன். 


Thursday 17 May 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 8

ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் என்ன காரியம் பண்ண இருந்தீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் என்னை நோக்கி கைகள் கூப்பி எங்க இருவரையும் வாழ விடு என்று கெஞ்சினார். எனக்கு கோபம் அதிகமாகவே வந்தது. எத்தனை வருட பழக்கம் என்றேன். சில வருடங்கள் தான் என்றார். சொத்துகள் அனைத்தையும் எழுதி வைத்து விட்டதாக அப்பா சொன்னாரே என்றேன். எனக்கு தேவையானது எடுத்து கொண்டே எழுதி வைத்தேன் என்றார். அவரின் அருகில் இருந்த பெண்ணை பார்த்து இவர் திருமணம் ஆனவர் என்றும் தெரிந்தா இப்படி செய்தீர்கள் என கேட்டேன். அவர் அமைதியாக இருந்தார். 

எனது இந்த செயல்பாடு என்னை கோமாளியாக்கி கொண்டு இருந்தது. இவரை எப்படி வீட்டிற்கு அழைத்து செல்வது என யோசித்தேன். உங்க மனைவியிடம் சத்தியம் செய்தது என சொன்னது எல்லாம் பொய்யா என்றேன். அவர் பேசவில்லை. எப்படி பேசுவார். காயத்ரியின் அம்மா இறந்தபோது இவர் இருந்த நிலை கண்டு நான் எப்படி ஏமாந்துவிட்டேன். எப்படியாவது தொலைந்து போய்விடுங்கள் என சொல்லியபடி அங்கிருந்து கிளம்பினேன். எனக்கு மனம் எல்லாம் பாரமாகி போனது. 

வீட்டிற்கு வந்ததும் அம்மா எப்போதும் போல கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். காயத்ரி அருகில் இருந்தாலும் ஒவ்வொரு பொய்யாக சொல்லி கொண்டே இருந்தேன். ஒரு பொய் ஓராயிரம் பொய்தனை இழுத்து கொண்டு வருமாம். எனது நிலைமை மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது. அன்று இரவு காயத்ரியிடம் தனியாக பேசினேன். காயத்ரி இந்த உலகம் எப்படிபட்டது தெரியுமா என்றேன். எப்படிபட்டது என்றாள். பொய்களாலும், புரட்டுகளாலும் நிறைந்தது என்றேன். அது பார்ப்பவர்களின், நினைப்பவர்களின் கைகளில் உள்ளது என்றாள். 

உன் அப்பா பற்றி என்ன நினைக்கிறாய் என்றேன். அவர் மிகவும் தங்கமான்வர் என்றாள். நான் உன் அப்பாவை வேறு ஒரு நிலையில் இன்று பார்த்தேன் என்றேன். அவளுக்கு இது சற்று அதிர்ச்சியாக இருந்து இருக்க கூடும். என்ன என பதட்டத்துடன் கேட்டாள். இன்று நடந்த அனைத்து விசயத்தையும் அவளிடம் அப்படியே ஒப்புவித்தேன். அவளது கண்களில் கண்ணீர் கொட்டியது. உன்கிட்ட சொல்லாம இருக்க முடியல காயத்ரி, என் அம்மாகிட்ட பொய் சொன்னதுக்கு மன்னிச்சிக்கோ, என் அம்மாவுக்கு தெரிஞ்சா பெரிய ரகளையே பண்ணிருவாங்க என்றேன். என்னால நம்ப முடியலை என்றாள் காயத்ரி. சில விசயங்கள் அப்படித்தான் என்றேன். 

அன்று இரவு எல்லாம் அவள் தூங்கியிருக்க வாய்ப்பே இல்லை என்றே எனக்கு பட்டது. எத்தனை அன்பான அம்மா. எத்தனை அன்பாக இருந்து இருக்கிறார் அவளது அப்பா என்றே நினைத்தேன். எதற்கு இந்த மாற்றங்கள் எல்லாம். கல்லூரிக்கு நாங்கள் இருவரும் சேர்ந்தே சென்றோம். அப்போதெல்லாம் சந்தேகம் மனதில் அள்ளிக்கொண்டு போனது. இவர் இப்படி இருப்பாரோ, அவர் அப்படி இருப்பாரோ, சே சே அப்படி எல்லாம் எல்லாரும் இருக்க மாட்டார்கள் எனும் ஆறுதல் வேறு வந்து போனது. கல்லூரியில் காயத்ரியை நிறைய பேர் துக்கம் விசாரித்தார்கள். அவர்கள் விசாரித்த துக்கத்தில் அவளது கண்கள் குளமாகி கொண்டே இருந்தது. அதிலும் அவர் அப்பா பற்றி அவள் அறிந்து இருந்தது அவளுக்குள் பெரும் வேதனையை உருவாக்கி இருந்தது. மதிய வேளையில் சாப்பிட்டு கொண்டு இருந்தபோது 'முருகேசு நீயும் என் அப்பா மாதிரி நடந்துக்குவியா' என்றாள். 'நிச்சயம் நடந்துக்கமாட்டேன்' என உறுதி அளித்தேன். அவளிடம் நீ அந்த பெண்ணை போல நடந்துக்குவியா என கேட்க தோணவில்லை. நான் இறந்தால் காயத்ரியும் இறந்து போக வேண்டும் என வேண்டிக்கொண்டேன். அதே போல காயத்ரி இறந்தால் நானும் இறந்து போக வேண்டும் என கூடுதலாக வேண்டி கொண்டேன். 

எனக்கு பிடித்த ஆசிரியர் பாடம் நடத்த வந்தார். அவர் பாடம் நடத்த ஆரம்பிக்கும் முன்னரே நான் ஒரு கேள்வி கேட்க எழுந்தேன். 'என்னப்பா, வந்ததும் வராததுமா எழுந்துட்ட, வெளியில போறியா' என்றார். 'இல்லை சார், ஒரு கேள்வி' என்றேன். 

பேனை பெருமாள் ஆக்குவது என்றால் என்ன? என்றேன். கலகலவென சிரித்தார். எல்லாரும் என்னை பார்த்து சிரித்தார்கள். 'You made me laugh' என தொடர்ந்து சிரித்தார். என்ன சொல்றார் என புரியாமல் நின்று கொண்டே இருந்தேன். சார், பேனை பெருமாள் ஆக்குவது என்றால் என்ன என திரும்பி கேட்டேன். மறுபடியும் மொத்த வகுப்பும் சிரித்தது. காயத்ரியை கவனித்தேன். காயத்ரி சிரிக்காமல் இருந்தாள். 

'wait' என சொன்னவர் ஒரு பேன் வரைந்தார். 'what is this?' என்றார். பேன் என்றேன். 'ok, well done' என சொல்லிவிட்டு அந்த பேனை அழித்துவிட்டு நாமத்துடன் கூடிய பெருமாள் வரைந்தார். 'what is this?' என்றார். இது பெருமாள் என்றேன். That's it. என மீண்டும் கலகலவென சிரித்தார். சார், நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே என்றேன். சட்டென காயத்ரி எழுந்தாள். 'Can I have your permission to answer this question Sir' என்றாள். தமிழில் சொன்னால் நல்லா இருக்கும் என்றேன். 'Carry on Gayathri' என்றார் ஆசிரியர். 

ஒரு சின்ன விசயத்தை அதாவது ஒன்றுமில்லாத விசயத்தை பெரிது படுத்தி பேசுவதுதான் பேனை பெருமாள் ஆக்குவது என பொருள்படும் என்றாள். உதாரணம் சொல்ல முடியுமா என்றேன். இந்த உலகத்தில் நடப்பது எல்லாம் இயற்கையாகவே நடக்க கூடியது, ஆனால் நடக்கின்ற விசயத்தை 'ஐயோ இப்படி நடந்துவிட்டதே' என அங்கலாய்ப்பது இந்த பேனை பெருமாள் ஆக்குவதற்கு சமம் ஆகும். உதாரணத்திற்கு நீ ஒருவளை காதலிக்கிறாய். அவள் வேறு ஒருவனுடன் ஓடிப்போய்விடுகிறாள். இப்போது நடந்த விசயத்திற்கு என்ன காரணம், அவளுக்கு உன்னைவிட மற்றவனை பிடித்து இருந்தது, அதனால் அவள் சென்றுவிட்டாள். ஆனால் ஊர் உலகம் இதை எப்படி பேசும்? உன்னை பற்றி தவறாக, அவளை பற்றி தரக்குறைவாக ஏதோ ஏதோ காரணங்கள் காட்டி பேசும். இதுதான் பேனை பெருமாள் ஆக்குவது என கூறிவிட்டு அமர்ந்தாள். எனக்கு அவள் காட்டிய உதாரணம் சுர்ரென வலித்தது வகுப்பு மிகவும் மௌனமாக இருந்தது. 

'Are you happy with the answer Murugesu?' என்றார். 'No Sir, the example is a disgrace and disgusting. It offended me' என்று அமர்ந்தேன். 'Well, Gayathri did not mean to offend you anyway. She tried to simplify what she understood of this. Don't take it personally. I laughed when you asked this question to me because the same sentence I told my wife today. It is a co-incidence' என்றார். நான் பேசாமல் அமர்ந்து இருந்தேன். 

அன்று அவர் நடத்திய பாடம்தனை கவனிக்க எனக்கு தோணவில்லை. மாறாக காயத்ரி எதற்கு இப்படி பேசினாள் என்றுதான் மனம் அலைபாய்ந்தது. அப்போது ஆசிரியர் சொன்ன ஒரு விசயம்தனை கூர்ந்து கேட்க மனம் எத்தனித்தது. 

'This world was created by chance. The chance which occurs very very rarely. There was no reason behind for this happening. It happened at such a rate that no one could ever re-visit. We have various laws of physics to explain this however our biological evidences are showing completely different aspects. Let us consider a Tiger. Now you have to think about this tiger and where its habitat is. Why tiger chose that particular habitat? Think about it and tell me' 

மூன்றாவது வரிசையில் இருந்த ஒருவன் எழுந்தான். 'Could you please tell me Sir,  does Tiger think why he chose particular habitat?' மொத்த வகுப்பும் அவனையே பார்த்தது. 'Absolutely not' என்றார் ஆசிரியர். 'You may be wrong Sir, did you ask any Tiger'? மொத்த வகுப்பும் கொல்லென சிரித்தது. அவன் கேட்ட கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருந்தது. 'Fabulous Sriram, spot on' என்றார். அப்படியெனில் காயத்ரி ஒன்று நினைத்து சொல்ல நான் ஒன்று நினைத்து விட்டேனோ என நினைத்தேன். காயத்ரியை பார்த்தேன். அவள் அமைதியாகவே இருந்தாள். 'We will continue this' என ஆசிரியர் சென்றார். 

அன்று மாலை காயத்ரியிடம் நீ சொன்ன உதாரணம் எனக்கு ரொம்ப வலிச்சது என்றேன். ஒரு உதாரணத்தை உதாரணமா பார்க்காம இருந்த பாத்தியா அதுதான் பேனை பெருமாள் ஆக்குறது. இப்போ இதையே காரணம் காட்டி நாம இரண்டு பெரும் சண்டை போட்டுகிட்டா நம்ம ரெண்டு பேருக்குத்தான் நஷ்டம். நீ எதுவும் மனசில வைச்சிக்காத என்றாள் காயத்ரி. 

ஆனா நீ உன் அப்பாவை பத்தி நான் சொன்னதை இன்னமும் நினைச்சிட்டுதான் இருக்க. அதுதான் அந்த உதாரணம் வந்தது என்றேன். 'தெரியலை, ஆனா என் அப்பாவா அப்படினு என்னால நம்ப முடியல. மத்தபடி நான் என்ன செய்ய முடியும் சொல்லு முருகேசு என சொன்னபோதே அவள் கண்கள் கலங்கியது. காயத்ரியின் அப்பாவை எங்கள் வீட்டில் பார்த்தபோது எனக்கு திடுக்கென இருந்தது. 

(தொடரும்)