Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Friday 5 August 2016

போதை தரும் போதனைகள்

''பக்தா''

''சுவாமி வாருங்கள், வாருங்கள். உங்களைப் பார்த்து எத்தனை மாமாங்கம் ஆகிவிட்டது''

''ஆச்சர்யம் பக்தா''

''எதைப் பற்றி சுவாமி?''

''பயபக்தியுடன் என்னை நீ அழைப்பதுவும், வரவேற்பதுவும்''

''நீங்கள் சொல்லும் விஷயங்களை பின்பற்றினால் மோட்சம் கிட்டும் என்று கேள்விப்பட்டேன்''

''வேறு என்ன என்ன கேள்விப்பட்டாய் பக்தா?''

''நோய் உடலைத் தீண்டாது. மனம் விசாலமாக பேரமைதியுடன் இருக்கும்''

''வேறு என்னவெல்லாம் பக்தா?''

''நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்''

''பக்தா உனக்கு சுயபுக்தி என்பதே கிடையாதா?''

''என்ன சுவாமி?''

''நான் சொல்வதை நீ பின்பற்றினால் இதுவே நடக்கும் எனில் நீ சொல்வதை நீ பின்பற்றினால் என்னவெல்லாம் நடக்கும் என யோசித்தாயா?''

''நான் சொல்வதை எப்படி சுவாமி?''

''உனக்கு நல்லது எது கெட்டது எது என்பதை சிந்திக்கும் அறிவு வைத்து இருப்பதற்கு காரணமே சுயபுத்தியுடன் நீ செய்லபட வேண்டும் என்பதுதான். ஆனால் நீயோ வேறு எவருடைய சொல்பேச்சு கேட்டு நடந்தால் உனக்கு நன்மை பயக்கும் என முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு இருக்கிறாய். ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்பது உணவு, உடை, இருக்க இடம். இந்த மூன்றும் வேண்டுமெனில் பணம் அவசியம். பணம் சம்பாதிக்க வேலை அவசியம். வேலை வேண்டுமெனில் திறமை அதைச்சார்ந்த அறிவுக்கூர்மை அவசியம். இதோடு மட்டுமில்லாமல் தெளிவான நோக்கம். இப்படி எல்லாமே உனக்கே நீ செய்து கொள்ள முடியும் எனும்போது எதற்கு பக்தா இப்படி பிறர் பின்னால் சுற்றிக்கொண்டு அலைய வேண்டும் என கருதுகிறாய்''

''சுவாமி நீங்கள் சொன்ன விஷயத்தை கேட்டதும் எனக்குள் ஒரு பரவச நிலை உண்டாகிறது. இது எல்லாம் எனக்குப் புரியாமல் இருந்தது. இதை உங்களிடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது''

''பக்தா மடத்தனமான காரியங்களில் மதி கெட்ட மடையர்களே ஈடுபடுவார்கள். நீ பள்ளிக்குச் செல்கிறாய். பாடங்கள் படிக்கிறாய். அத்தோடு அந்த பாடங்கள் உனக்குத் தரும் அறிவினை வளர்த்துக்கொண்டு இருக்க வேண்டுமேயன்றி பள்ளிதான் எல்லாம் கதி  என கிடந்தால் உன் நிலை என்னவென யோசி பக்தா''

''சுவாமி, உங்கள் போதனைகள் என்னை மெய் மறக்கச் செய்கின்றன''

''ஒரு பாடல் பரவசம் தருவதும், ஒருவரின் கருத்துக்கள் நமக்குப் பிடித்துப் போவதும் இயல்புதான் பக்தா. ஆனால் நீ சொல்கிறாயே, பரவசம் அடைதல் மெய் மறக்கச்  செய்தல் எல்லாம் நீயே உன்னை ஏமாற்றிக்கொள்வதுதான். எதற்கு இப்படி அறிவீனமாக யோசிக்கிறாய் என்றுதான் புரியவில்லை. எவருமே லாபம் இன்றி எந்த ஒரு பணியையும் செய்வது இல்லை. உடற்பயிற்சி செய்ய எதற்கு நீ ஒரு இடம் செல்ல வேண்டும். உனது வீட்டில் இருந்து செய்தால் ஆகாதா. ஆனால் நீ உனது மனதை மயக்கிச் செயல்படும்போது இது இதுதான் சரி என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறாய். பின்னர் உன்னை அறியாமல் அதற்கு அடிமைத்தனம் ஆகிறாய். இதில் இருந்து நீ விடுபடவேணும் பக்தா''

''ஏன்  சுவாமி, நானா உன்னை வீட்டுக்கு வா வானு கூப்பிட்டேன். நீயே வந்துட்டு பெரிய இதாட்டம் போதனை சொல்லிட்டு இருக்க. உன்னை நான் கேட்டேனா, இல்லை கேட்டேனா. நீயும் என்னை மாதிரி ஒரு மனுஷன் தான, ஒரு நாலு ஐஞ்சி புத்தகம் படிச்சிட்டு இவ்வுலகம் அப்படி இப்படினு பேசறியே. நான் அதை எல்லாம் பிடிச்சி இருக்குனு சொன்னா கேட்டுட்டு போக வேண்டிதானே, அதைவிட்டுட்டு என்ன வியாக்கியானம் வேண்டி கிடக்கு''

''பக்தா, என்னை இப்படி பேச உனக்கு எப்படி மனம் வந்தது''

''பிறகு எப்படி பேசனும் சுவாமி? நீயே மதிகெட்டுப் போய்த்தான் ஒவ்வொருவரும் இன்னல்களில் இருக்கிறீர்கள், உங்கள் இன்னல்களை போக்குவேன் என சொல்லி மதி மயக்குற. எவனாச்சும் எதிர்த்துக் கேட்டா உடனே நான் அப்படி இல்லைனு சொல்றது. மனுசனா மனுசனா இருக்க விடு சுவாமி''

''எனது போதனைகள் உன்னில் இப்போது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. நீயே சுயமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டாய். நான் வருகிறேன்''

''சுவாமி, கொஞ்சம் விஷம் இருக்கிறது, அருந்திவிட்டுப் போறியா?''

''வேணாம் பக்தா, நானும் ஒன்னும் ஆலகால நீலகண்டன் இல்லை''

''யாரு அது ஆலகால நீலகண்டன்?''

''எனக்கு நேரம் இல்லை, இன்னொருமுறை சொல்கிறேன்''

''ஏன் சுவாமி உனக்கு அறிவே இருக்காதா, இப்பதான் சுயமா நான் சிந்திக்கிறேன் சொல்ற அப்புறம் நேரம் இல்லை பிறகு சொல்றேன்னு சொல்ற. சுயமா சிந்திக்கவே விடமாட்டியா. நான் கேட்டதும் என்ன சொல்லி இருக்கனும். சுயமாக சிந்திக்க வேணும் பக்தானு ஆனா நீ சொன்ன''

''பக்தா, உன்னைப்போல் தெளிவான மனநிலையில் அனைவரும் இருந்துவிட்டால் எனது போதனைகள் எல்லாம் எதற்கு பக்தா. ஆனால் நிறைய மக்கள் தாங்கள் செய்வது புரியாமல் இந்த உலகில் பல ஆண்டுகள் உயிரோடு இருப்பது போல நினைத்துக்கொண்டு தங்களையேத் தொலைத்து விடுகிறார்கள். இப்படி அவர்களை தொலைய விடாமல் பாதுகாக்க நான் சில விஷயங்களை சொன்னால் எனது காலடியில் வந்து கிடக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய இயலும் பக்தா?''

''சுவாமி, திருந்தவே மாட்டியா? இதை எல்லாம் கேட்டனா? ஆமாம்னு சொல்றதுக்கு பதில் என்ன என்னமோ பேசற''

''பக்தா இந்த உலகில் பலர் தெளிவற்ற மனோ நிலையில் இருக்கிறார்கள். பெரும் குழப்பத்தில் அவர்கள் தடுமாறுவது கண் கூடு. இதற்கு பல காரணங்கள் இருப்பதால் எந்த காரணங்கள் என புரியாமல் ஏதேனும் ஒன்றில் தஞ்சம் அடைய நினைத்து என்னவென்னவோ செய்து கொண்டு இருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. மனதுக்கு திருப்தி என்ற ஒரு சில வார்த்தைகளை அவர்கள் எடுத்துக்கொண்டு செயல்படுவது எத்தனை தவறான விஷயம் என அவர்கள் புரிந்து கொள்வது இல்லை. அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எவரும் நினைப்பதும் இல்லை''

''சுவாமி, என்ன பேசிக்கிட்டே போற. நேரம் இல்லைனு சொன்னில கிளம்பு''

''பக்தா போதனைகள் இந்த உலகில் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. அந்த போதனைகளை சொல்வதற்கென நான் அவதாரம் எடுத்து வந்து இருக்கிறேன். இப்படி எனது செயல்பாடுகளை நீ முடக்குவது எவ்விதத்தில் நியாயம்.''

''சுவாமி, அதுதான் சொன்னேன். பரவச நிலை என. ஆனால் நீங்கள் தான் என்னை குழப்பிவிட்டீர்கள். உங்கள் போதனைகளை கேட்டு உங்களோடு வருகிறேன் சுவாமி''

''டேய் எங்கடா தூக்கத்திலே தூங்கிட்டே நடந்து போற''

சட்டென விழித்துப் பார்த்தேன்.

''சும்மா கண்ணு மூடி நடந்து பார்த்தேனம்மா''

அப்போதுதான் தோனியது. இந்த உலகத்தில் மக்கள் தூங்கிக்கொண்டே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எழுப்பி விடுகிறேன் என பலர் அவர்களை ஏப்பம் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சாமியார் இனிமேல் கனவில் வராமல் இருக்க விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.



Thursday 3 September 2015

நமது திண்ணை செப்டம்பர் மாத சிற்றிதழ்

நமது திண்ணை சிற்றிதழை ஒவ்வொருமுறை ஒருவர் வெளியிடுவர். இதற்கு பெரிய விழா எல்லாம் இல்லை. ட்விட்டரில் இந்த சிற்றிதழின் இணைப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி என சொல்லி இணைப்பு தருவார்கள். அவ்வளவுதான். ஆனால் இந்த முறை தி.மு.க மந்திரி (அவரே சொன்னபிறகு தான் எனக்குத் தெரியும்) திரு ஜெ அன்பழகன் இந்த சிற்றிதழை வெளியிட்டு இருக்கிறார். ஒரு மந்திரி ஒரு சிற்றிதழை வெளியிட முன்வந்து இருப்பது பாராட்டுக்குரியது.

முதல் பக்க வடிவமைப்பே மிகவும் அட்டகாசம். அட்டைப்படத்தை அலங்கரிக்கும் காய்கறியை இங்கே  படித்துத் தெரிந்து கொள்ளலாம். சுபாஷினி அவர்களுக்கு நன்றி.

1. உயிருக்குள் ஓர் உயிர் - எமி

குழந்தையைப்  பற்றிய, தாய்மையைப் பற்றிய உயிருக்குள் ஓர் உயிர் எனும் அற்புதமான  கவிதையை எமி எழுதி இருக்கிறார். பிள்ளை பெறுவதால் அல்லது குழந்தையை சுமப்பதால் அழகு குறையும் எனும் கவலை இரண்டாவது பத்தியில் தென்படுகிறது. தூக்கத்தை மறந்தேனே என சொல்லப்பட்ட வரிகளுக்கு பின்னர் ஓர் விளக்கமும் இருக்கிறது. உலகம் உருண்டை நம்பினேன் எனும் எண்ணமும் வெளிப்படுகிறது நல்ல நல்ல உவமைகள் கொண்டு இருக்கும் இந்த அழகிய கவிதையில் எழுத்துப்பிழைகளைத்  தவிர்த்து இருக்கலாமோ? தேவை இல்லைதான், அந்த அழகிய குழந்தையை தாய்மையைச்  சுமந்த கவிதையில் ஏது  குறை என எமி கருதி இருக்கலாம்.

2. வளர்த்து விடுங்கள் - வருண் 

மரம் பேசும் கவிதையாக மனிதம் வேண்டும் கவிதையாக அமைந்து இருக்கிறது. இப்போதெல்லாம் மரத்தின் மீதான அக்கறை பெரும்பாலான மனிதர்களிடம் நிறைய இருக்கிறது. வளி  இல்லாமல் திண்டாடும்போது நல்ல கவிதை வரி. வி'சுவாசமாக நல்ல வார்த்தை நயம்.

ராஜ் மற்றும் அம்ஹர் அவர்களின் அழகிய படங்கள் சிற்றிதழை அலங்கரிக்கின்றன.

3. ஸ்ரீஇராமானுஜர் - சுஷீமாசேகர் 

மிகவும் சுவாரஸ்யமான தொடர் என்றால்  மிகையில்லை. திருமலை நம்பி, திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வார், கோவிந்தபட்டர், ஸ்ரீ போதாயன மகரிஷி என பலரது வாழ்வோடு ஸ்ரீ இராமானுஜர் வாழ்வு இணைந்து இருக்கிறது. அன்பில்  மனம் வைத்தால் அனைவரும் மனம் மாறுவர் என்பதற்கு இவரது திருமலைக்கு சென்ற காட்சி விளக்குகிறது. கோவிந்த பட்டர் தான் கொண்ட அன்பை மறக்காமல் பின்னர் இவரின் அன்பை பெற்ற காட்சி சிறப்பு. கூரத்தாழ்வாரின் மனப்பாடம் பண்ணும் ஆற்றல் நான் படித்த  பள்ளியில் ஒரு சில மாணவர்களை  நினைவுகூற  செய்தது. அவன் எல்லாம் ஒரு தடவை பார்த்தால் போதும் அப்படியே ஒப்பிப்பான்  என்பார்கள்.எனக்கும் சரஸ்வதி தேவி கனவில் வரமாட்டார்களா எனும் நிறைவேறாத கனவு உண்டு.

ஸ்ரீ ஆண்டாளின்  ஆசையை இவர் நிறைவேற்றிய கதையை ஓரிடத்தில் சொன்னபோது எனக்கும் பேசத் தெரியும் என சொன்னார்கள். இந்த கதையைப் படித்தபின்னர் நிறைய பேசலாம் போல. நன்றிகள் அம்மா.

4. தலைகவசம் - ப. மணிகண்டபிரபு 

தலைக்கனத்தோடு செல்லவில்லை,  தலையில் கனத்துடன்  செல்கிறேன் என அருமையான கவிதையை எழுதி இருக்கிறார் மணி. இவரது சிந்தனைகள் மிகவும் சிறப்பாக இருக்கும். முகமே அடையாளம் எனினும் நம் உடல் வைத்து நம்மை யார் என கண்டுபிடிப்பவர் உள்ளனர் என ஒரு வரி கவிதைத்துவம். நமது மனதுக்குள் புன்னகைப்பது தெரியாது என்பது போல தலை கவசம் அறிந்தால் முகம் புன்னகைப்பது தெரியாது என்பது போல ஒரு வரி. மிகவும் சிறப்பு.

5. அப்பா - எம்சீ189 (பாமரன்) 

நல்லதொரு குட்டிக்கதை. அதுவும் கடைசி வரி மிகவும் முத்தாய்ப்பு. நாம் நல்லது செய்தால் நமது கெட்டது எல்லாம் மறைந்து போகும். படிப்பு என்பது எல்லாருக்கும்  இல்லை. எவ்வளவு படிச்சாலும் தலையில் ஏறமாட்டேங்குது ஏறமாட்டேங்குது என சொல்பவர்களிடம் எல்லாம் நன்றாக இன்னும் முயற்சி செய்யுங்கள் என சொன்னாலும் முயற்சி செய்யாமல் இருப்பவர்களே அதிகம் தோல்வி அடைகிறார்கள். படிப்பு மட்டுமே சமயோசித புத்தி தராது  என்பதையும் அப்பாவின் அன்பையும் அறிவுறுத்தும் கதை.

6. கிச்சன் டைம் கோவக்காய் பொரியல் - நளபாகம் ரவி 

கோவக்காய் அட! மேலதிக விபரங்கள் இங்கே  இங்கே இதை வினிகரில் போட்டு விற்பார்கள். அப்படியே கடித்து சாப்பிட்டாலும் மிகவும் நன்றாக இருக்கும். வெள்ளரியின் சிறு வடிவம். இவர் எழுதுவது எல்லாம் மிகவும் எளிதாக இருக்கிறது. செய்வதுதான் கடினமாக படுகிறது. ஒருமுறையேனும் நண்பர் சொல்வதை சமைத்து இங்கே ஒரு பதிவு எழுதிவிட வேண்டும்.

7.நேர்காணல் திருமதி ஜானகி சுஷீமாசேகர் 

அன்பான மனிதர்களை சந்திக்கும்போதெல்லாம் இந்த உலகம் இப்படியே இருந்துவிடக்கூடாதா என்கிற ஒரு ஏக்கம் வந்துவிட்டுப் போகும். எத்தனை அழகிய மனிதர்களால் ஆனது உலகம். ஒருவரின் திறமையை உலகறியச் செய்ய வேண்டும் எனும் ஆர்வம் ஒரு சிலருக்கு இருப்பதால்தான் பல திறமையாளர்கள் நம் கண்ணுக்குத் தெரிகிறார்கள். மிகவும் அருமையான பேட்டி   என்றே சொல்ல வேண்டும். குறுகிய நேரத்தில் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அதுவும் அழுகை, அன்பு, ஆர்வம், இசை என எல்லாம் அறிந்து கொண்ட வேளையில் ஒரு விருதுவை புறக்கணித்த தைரியம் வெகு சிறப்பு. செத்த பின்பு ஞானி அவசியமில்லை. கடைசியில் வாசித்த வரிகள் கண்களில் நீர்த்திரள செய்தது. அற்புதமான மனிதர்களை இவ்வுலகம் பின்பற்றவேண்டும்.

கேசவ் அவர்களின் ஓவியங்கள் வெகு சிறப்பு. அருமை. மகளதிகாரம், அவளதிகாரம், மதுவிலக்கு பற்றிய அழகிய டிவிட்கள்.

8. பாடல் பரவசம் - உமா க்ருஷ் 

அப்படியே சிறிய வயது நினைவுகளை முதல் நான்கு பத்திகளில் நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தி  விடுகிறார். இளவயது இசையோடு ஒட்டிய கிராமத்தின் நினைவுகள் சுகமானவை என்பதை நினைவுபடுத்துகிறது. பாடல் பற்றிய பரவசத்தில் மூழ்கும் முன்னர் பாடல் பெற்ற சிறப்பில்  ஒரு நடிகரின் வரலாறு தென்படுகிறது. தேவா இல்லையென்றால் தமிழ் இசையில் இல்லை கானா என்றாலும் ஒரு நல்ல இசை அமைப்பாளாராக இருக்கப்போய்த்தான் பல படங்களுக்கு இசை அமைத்து தேனிசை தென்றல் என பட்டம் பெற்றார் தேவா என அறிய முடிகிறது. மிகவும் அருமையான வரிகளை எழுதி இருக்கிறார் வாலி. இந்த வரிகளை வாசிக்கும்போது கடினமாக இருக்கும், ஆனால் இதை இசைக்குள் நுழைத்து இனிமையாக்கிய பெருமை பாடகர்கள், இசை அமைப்பாளருக்குச்  சேரும். வெட்டப்பட்ட வரிகள் கண்டு இவரது கோபமும் புரிகிறது. அருமை.

சிற்றிதழ் ஆசிரியரின் தியாகராஜ பாகவதர் குறித்த விஷயங்கள்  அருமை, கைது செய்யப்பட்டு பின்னர் என்ன ஆனது என எழுதி இருக்கலாம்தான்.

அழகிய வடிவமைப்புகளுடன் மின்னி வானம் தொட்டு  சிறக்கிறது நமது திண்ணை சிற்றிதழ்.



Monday 10 August 2015

நமது திண்ணை ஆகஸ்ட் மாத சிற்றிதழ்

இந்த மாத சிற்றிதழ் சற்று தாமதமாகவே வெளிவந்தது. எனக்குள் ஒரு சின்ன அச்சம், எங்கே இதழ்தனை வெளியிட மறந்துவிட்டார்களா அல்லது இனிமேல் வெளியே வரவே வராதா என. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது, நான் பார்த்தவரை பல விசயங்கள்  போதிய ஆதரவு இல்லாது போகுமெனில் அவைத் தொடர வாய்ப்பு இல்லை, அதே வேளையில் ஈடுபாடு இல்லையெனில் தொடர்ந்து செய்யவும் இயலாது.  சென்றமுறை சில பிரச்சினைகள் என சொல்லி இருந்தார்கள். நல்லவேளை, மிகவும் சிறப்பாகவே வெளிவந்துவிட்டது. ஆசிரியருக்கும், வடிவமைப்பாளருக்கும் மற்றும் எழுதியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அமரர் திரு அப்துல் கலாம் அவர்களின் மரணம் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் ஒரு அதிர்ச்சி அலைகளை ஏறப்டுத்திச்  சென்றது. எத்தனை பொருத்தமான வரிகள். ''நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்''. ஒரு மாமனிதர் என்பதற்கு அவர் வாழ்ந்த காலங்களே உதாரணம்.

அடுத்து உயில் எனும் கவிதை. தலைப்பே அருமை. உயிலில் விவசாய நிலங்கள் எழுதி வைப்பார்கள். விவசாய நிலங்களே இல்லாது போகும் தருணத்தை மிகவும் அருமையாக எழுதி இருக்கிறார். வேதனைகளை சுமக்கும் வரிகள்.

மிகவும் ஆவலுடன் படிக்கும் தொடர் ஸ்ரீராமானுஜர். இத்தனை விசயங்களையும் மிகவும் சுவாரஸ்யமாக எழுதி வரும் சுஷீமா அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி. செவி வழியாக பல விசயங்கள் பல கேள்விப்பட்டு இருந்தாலும் முதன்முறையாக வாசிப்பது  மிகவும் சிறப்பாக இருக்கிறது, அதுவும் கேள்விபட்டதைவிட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்வு, அந்த மனிதர்களைச் சுற்றி அமைந்த வாழ்வு நமக்கு நல்லதொரு பாடத்தை எடுத்துச் சொல்கிறது. பிறருக்கு உதவுவதே தலையாய பண்பு என்பது அன்று சிலருக்கு இருந்து இருப்பது இன்று சிலருக்கு இருப்பது போற்றத்தக்கது.

அப்பா குறித்த ரோகிணி அவர்களின் பதிவு கண்களை கலங்கச் செய்தது. இப்படி எல்லாம் வாழ வெகு சிலருக்கு மட்டுமே கொடுத்து வைத்து இருக்கிறது போலும். தமது பிள்ளைகள் தான் எல்லாம் என்பவர்கள் உள்ள உலகில் பிறரையும் அரவணைக்கும் அன்பு ஆசிரியர்களுக்கு உண்டுதான் எனினும் இவரது தந்தையை குறித்த விசயங்கள் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.

நல்ல நல்ல படங்கள் மிகவும் தெளிவாக சிற்றிதழை அலங்கரிக்கின்றன. அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள். கேள்விப்படாத பாடல் என்றாலும் உமாகிருஷ் அவர்கள் விவரித்த வர்ணனையில் அந்த பாடலை கேட்டுவிட வேணும் எனும் எண்ணம் உண்டாக்கியது சிறப்பு. இசை வரிகளுக்கு எப்போதும் பலம் தான்.

கலாம் அவர்கள், அவனதிகாரம், அவளதிகாரம் என டவிட்கள் அலங்கரிக்கின்றன. இப்படி ஒரு தலைப்போடு எழுதப்படும் சிந்தனைகளை நாம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றன. பல வாசிக்காதவைகள் என்பதால் இன்னும் ரசிக்க முடிந்தது கூடுதல் சிறப்பு.

ஓவியர் கேசவ் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. ஓவியம் ஒன்றுதான் எனக்கு இன்னும் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் ஒரு விசயம். ஒருவரை தத்ரூபமாக வரைவது என்பது, ஒரு விஷயத்தை மனதில் வைத்து அதை ஓவியமாக வெளிப்படுத்துவது இன்னும் ஆச்சரியத்தை உண்டுபண்ணிக்கொண்டே இருக்கின்றன. எப்படி ஓவியர் ஆனார், ஓவியத்திற்கு எழுதப்படும் வெண்பா என அற்புதமாக விவரித்து இருக்கிறார். அதுவும் கிருஷ்ணர் குறித்த ஓவியங்கள் என அவர் குறிப்பிட்ட  நிகழ்வு ஆச்சரியம். அவரது ஒரு ஓவியம் இது. அவரது வலைதளத்தில் சென்று பார்த்தேன். பிரமாதம். ஒவ்வொன்றும் பிரமிக்க வைத்தன.

கிச்சன் டைம் எனக்குப் பிடித்த காளான். இத்தனை எளிதாக இருக்கிறதே என நண்பர் ரவி எழுதுவதில் இருந்து எண்ணிக்கொள்ளலாம். ஆனால் செய்து பார்த்தால்தான் தெரியும். ஆசிரியரின் மெல்லிசை மன்னர் பதிவு வழக்கம் போல சிறப்பு. 

தொடர்ந்து நமது திண்ணை தடங்கல் இன்றி வெளிவர எமது வாழ்த்துக்கள். சிறப்பாக வடிவமைக்கப்பட்டு நல்ல விசயங்கள் தாங்கி சிறந்து விளங்குகிறது நமது திண்ணை. பாராட்டுகள். 


Friday 1 May 2015

நமது திண்ணை மே மாத இணைய சிற்றிதழ்

ஒரு விசயத்தை தனலாபம் இல்லாமல் தொடர்ந்து செய்வதற்கு ஒரு தனித்துவமிக்க ஈடுபாடு மிக மிக அவசியம். அது மட்டுமில்லாமல் மிகச் சிறந்த வரவேற்பும் அதைச் சார்ந்த மக்களிடம் இருந்து தொடர்ந்து இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது ஒரு விஷயம் பெரும் தொய்வினை சந்திக்கும் என்பது வலி தரும் செய்தி. இந்த உலகத்தில் பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் ஆர்வத்தினால் உண்டானவை, அவர்களது வெற்றிக்கு காரணம் அவர்களுக்குத்  தொடர்ந்து பிறரது ஆதரவு இருந்ததுதான். நல்லதொரு ஆதரவை ட்விட்டர் மக்கள் நமது திண்ணை (சிற்றிதழுக்கு இங்கே அழுத்தவும்) இணைய சிற்றிதழுக்கு வழங்கி வருவது இணைய சிற்றிதழின் ஆசிரியர் மற்றும் சிற்றிதழ் வடிவமைப்பாளர் திரு அல்  அமீன் அவர்களின் ஆர்வத்தை மென்மேலும் உற்சாகமாக வைத்து இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஆசிரியரின் கருத்தும் இதையே பிரதிபலிக்கிறது.

ஸ்ரீராமானுஜர். சுசீமா அம்மா அவர்கள் எழுதும் ஒரு புதிய தொடர். இந்த தொடர் மூலம் பல புதிய விசயங்கள் அறிய முடிகிறது. எனக்கு அதிகமாக ஸ்ரீராமானுஜர் பற்றி தெரியாது  என்பதால் இந்த தொடர் எனக்கு பேரானந்தம் தரக்கூடிய ஒன்றாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. இங்கொன்று அங்கொன்று என இவர் குறித்த விசயங்கள் மட்டுமே அறிந்து வைத்து இருக்கிறேன். நாலாயிர திவ்விய பிரபந்தம் தனில் இவரது புகழ் பேசப்பட்டு இருக்கிறது. சமய ஒற்றுமை, மனித ஒற்றுமை குறித்து பாடுபட்ட ஒரு நற்பண்பாளர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அரங்கனின் கண்கள். விசிட்டாத்துவைதம். எனக்கு அத்வைதம், துவைதம் அடிக்கடி குழப்பத்தைத் தரக்கூடிய ஒன்று. விசிட்டாத்துவைதம் பற்றி எனக்குத் தெரியாமல் கல்லுக்கும் உணர்வு உண்டு, உணர்வற்ற நிலையில் உன் உணர்வு உண்டு என நாராயணனை நோக்கி எழுதியவை நினைவுக்கு வருகின்றன. நல்லதொரு அற்புத தொடர் அம்மா. வாழ்த்துக்கள்.

கமலா அம்மா அவர்களின் புற்றுநோய் குறித்த பதிவு அனைவருக்கும் நல்லதொரு விழிப்புணர்வு தரும் பதிவு. சமீபத்தில் நண்பர் புகழ் அவர்கள் ஒரு சாமியார் எனது புற்றுநோயை தீர்த்து வைக்கிறேன் என்று சொன்னால் அந்த சாமியாரை நம்பமாட்டேன், எனக்கு புற்றுநோய் என்று சொன்ன வைத்தியரைத்தான் சந்தேகிப்பேன் என்று எழுத அவருடனான எனது வறட்டுத்தனமான விவாதங்களை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். அதை ஒட்டிய கருத்துடன் இந்த பதிவு. மிக மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா. மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் எப்படி மக்களின்  பலவீனத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள் என தான் கண்ட நண்பரின் நிகழ்வு மூலம் விரிவாக சொல்லி இருக்கிறார். முந்தைய காலத்தில் ஹோமியோபதி, மூலிகை மருத்துவம் பயன்பாட்டில் இருந்து இருக்கிறது, இப்போது தொடர்கிறது ஆனால் அவற்றின் செயல்பாடுகள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி உலகம் எப்போதும் ஒரு சந்தேகப்பார்வை கொண்டு இருக்கிறது என்பது உண்மைதான். இந்த புற்று நோய்க்கு மருந்து எட்டாத கனி போலத்தான். இப்போது மருத்துவ உலகம் கொண்டுள்ள முன்னேற்றம் அம்மா அவர்கள் சொன்னது போல முறையாக பரிசோதனை செய்து கொண்டு வாழ்வதே நல்லது. வாழ்த்துக்கள் அம்மா.

உமாகிருஷ் அவர்களின் பாடல் அலசல். இந்த பாடலை நான் கேட்டது உண்டு. இத்தனை உன்னிப்பாக கேட்டது இல்லை. இத்தனை விசயங்களை இந்த பாடல் சொன்னது என இன்றே இவரது பாடல் அலசல் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இதைத்தான் இலக்கியம் படைத்தல் என்பார்கள். அதாவது எழுதப்படும் வரிகள் அந்த மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். அதை இந்த பாடல் வெகு சிறப்பாக செய்து இருக்கிறது என அறிய முடிந்தது. எத்தனை கிராமத்து வார்த்தைகள். இவர் குறிப்பிட்ட வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பரிச்சயம். வெள்ளாமை, பொட்டக்காடு, கூழ், கஞ்சி என வாழ்ந்த வாழ்க்கையில் இருந்தது இவரது எழுத்தை அதிகம் நேசிக்க செய்தது எனலாம். வாழ்த்துக்கள். நாலு வரி நோட்டு போல இந்த தொடர் உருவாகலாம்.

சாய்சித்ரா அவர்களின் நகைச்சுவை என்றுமே என்னை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும். அவரது பெயர் பார்க்காமல் படித்தும் கூட டிஷ் பற்றிய நகைச்சுவை சிரித்துக் கொண்டே இருக்க வைத்தது. மற்ற நகைச்சுவைகள் இம்முறை சுமார் ரகம் தான். விடுகதை இந்த முறை விடுபட்டு போய்  இருக்கிறது. சோபியா தங்கராஜ் அவர்களின் கவிதை ஒரு காதல் தொலைத்த சோகம் தான். நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு இருக்கிறது. சின்ன சின்ன விசயங்கள் என டிவிட்கள் அனைத்துமே வெகு சிறப்பு. எழுதியவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் என நம்பலாம்.

அக்ஷ்ய திரியதை பற்றி ரவிக்குமார் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். வருடா வருடம் வீட்டில் எனக்கு இந்த நாளை ஞாபகபடுத்தி விடுவார்கள். நானும் இவரைப்போல கதை எல்லாம் சொல்லிப் பார்ப்பேன். ஆனால் வாழ்வில் சந்தோசம் என்பது சில நம்பிக்கைகள் உண்டாக்கி தருவது. எனவே எத்தனை சொன்னாலும் மக்களின் மனதில் சில விசயங்களை அகற்ற இயல்வதில்லை. இந்த வருடம் தான் அப்படி என்ன இந்த நாளுக்கு சிறப்பு எனத் தேடி அறிந்து கொண்டேன். அதைப்போல அனைத்து விசயங்களையும் சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள்.

ஒரு முழு பக்கத்தை நளபாகத்திற்கு ஒதுக்கி இருக்கலாம். நாங்கள் வீட்டில் ரொட்டியை வெட்டி பஜ்ஜி செய்வது வழக்கம். ஆனால்  இத்தனை விசயங்களை கொண்டு செய்வது என்பது இன்றுதான் அறிந்தது. சமையல் கலையை அறிந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். பசித்தால் உடனே விருப்பப்பட்ட ஒன்றை செய்து சாப்பிட்டுவிடலாம். நண்பர் ரவி வீட்டிற்கு விருந்தாளியாக சென்றால் நிச்சயம் வீட்டு சமையல் அதுவும் அவரின் சமையல் இருக்கும் என உறுதியாக நம்பலாம். எங்கள் வீட்டிற்கு வந்தால் ஏதேனும் ஒரு கடை பலகாரம் மட்டுமே.

திருப்பூர். இந்த ஊர் பற்றி மிக சிறப்பாக எழுதி இருக்கிறார் மணி. இவர் ஒரு நல்ல சிந்தனையாளர் கூட. எனக்கு கொடிகாத்த குமரன் மூலமே இந்த ஊர் அறிமுகம் என நினைக்கிறேன். பின்னர் பனியன் பற்றிய அறிமுகம். அடுத்து இந்த ஊரில் இருந்து நிறைய டிவிட்டர்கள் உண்டு என்பது தெரிய வந்தது. கோவை, திருப்பூர் போன்ற ஊர்கள் எல்லாம் தொழில் ஊர்கள் போலத்தான். தென்னிந்திய மான்செஸ்டர், குட்டி ஜப்பான் என பட்டப்பெயர்கள். இந்த ஊருக்கு இதுவரை சென்றது இல்லை. இந்த ஊரை சென்று பார்க்கும் ஆர்வத்தை உண்டுபண்ணி இருக்கிறது எழுத்து. வாழ்த்துக்கள்.

ரீவிஷாலின் ஓவியங்கள் வெகு அருமை. சிறுவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில்  நல்லதொரு தொடக்கத்தை நமது திண்ணை உருவாக்கி இருக்கிறது. சோபியா துரைராஜ் அவர்களின் கவிதை மற்றுமொரு காதல் வலி சொல்லும் கவிதை. நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு மழையில் ஆரம்பித்து மழையில் முடிகிறது.

மழலையர் மன்றம் புகைப்படங்கள் மிகவும் அருமை. அர்விந்த் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. மேடையில் நேரடி நகைச்சுவை சற்று கடினமான ஒன்று. பேசினால் அறுவை ஜோக் என சொல்லும் சமூகத்தில் ஒவ்வொரு வரிக்கும் சிரிப்பு என்பது எத்தனை கஷ்டம் என பல ஆங்கில நிகழ்வுகள் கண்டு எண்ணியது உண்டு.

புத்தகங்கள் குறித்தும் ஒரு எழுத்தாளனின் நிலையை குறித்தும் முத்தலிப் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். பாராட்டுக்குரிய விசயங்கள். புத்தகங்கள் பல வீணர்களை திருத்தி இருக்கிறது என்றே புத்தகத்தின் பெருமையை சொல்லும்போதே சாமி அறையை விட ஒரு நூலக அறையே வீட்டினை அலங்கரிக்க இயலும்.

பாடல் கேட்பது குறித்து ஹேமாமாலினி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். பாடல் பாடி பிறர் கேட்கும் வண்ணம் வைப்பது. அதாவது எல்லோருக்கும் பாடும் திறமை உண்டு. அதை உற்சாகப்படுத்தும் வண்ணம் இது அமையும்.

வாலி குறித்த ஆசிரியர் பார்வை வெகு சிறப்பு. ''ஒரே ஒரு விமர்சனம் மட்டும் தெளிவா வரணும்'' என தனது பணி குறித்து வடிவமைப்பாளர் அல்  அமீன் அவர்கள் கூறி இருப்பதால் அதை தனி பதிவாக வைக்கப் போகிறேன். சற்று பொறுத்துகொள்ளுங்கள் நண்பரே.

நமது திண்ணை நல்ல நல்ல விசயங்களுடன் வெகுசிறப்பாக இருக்கிறது ஆசிரியர் அவர்களே. உங்கள் நமது திண்ணை அனைவரது வீட்டிலும் வெகு விரைவில் கட்டப்பட வேண்டும் எனும் ஆசையை இங்கே எழுதி வைக்கிறேன்.

(தொடரும்)


Saturday 25 April 2015

இறைவனும் இறை உணர்வும் - 5 (From Man to God - Mrs Sushima Shekar)

பகுதி - 4    From Man to God My Father's Spiritual Journey - Mrs Sushima Shekar

நாம் உலகில் எவர் எவருடன் தொடர்பு கொள்கிறோம் என்பது நமது செயல்பாடுகள், நடவடிக்கைகள் பொருத்து அமைகிறது. நான் இணைய உலகில் எழுத வராமல் இருந்து இருந்தால் பலருடைய அறிமுகம் எனக்கு கிடைத்து இருக்காது. எனது உலகம் மிகவும் சிறியது. எனக்கு இறைவன் பிடிக்கும். அதற்காக இறை மறுப்பு கொள்கையாளர்களை எல்லாம் நான் வெறுப்பது இல்லை. அவரவருக்கு அவரவர் அறிவு.

இந்த தொடரை நான் எழுத ஆரம்பித்து சில ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் அதிகம் புத்தகங்கள் வாசிக்கும் வழக்கத்தை இன்னும் மீண்டும் தொடரவில்லை. திடீரென ஒருமுறை புத்தகம் பற்றி சுசீமா அம்மா அவர்கள் நண்பர் ரவியுடன் பேசுகையில் என்ன புத்தகம் எங்கு கிடைக்கும் என்றேன். அந்த புத்தகம் அன்புக்காக வழங்கப்படுவது, விற்பனைக்கு அல்ல எப்படி உங்களிடம் சேர்ப்பது என்றார். அப்போது அர்ச்சகர் ஒருவர் ஊரில் இருந்ததால் அவரிடம் தரச்சொல்லி இருந்தேன். அவரும் புத்தகத்தை என்னிடம் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தார்.

இறைவன் உணர்வு என்பது உண்மைக்கு நெருக்கமானது அதை நீங்கள் உணரும் வரை இறைவன் பற்றிய கேள்விக்குறி இருக்கும் என்றே பலர் சொல்லி இருக்கிறார்கள். எனக்கு இறைவன் உணர்வு இதுவரை வந்தது இல்லை என மிகவும் தெளிவுபடுத்திவிட்டேன், ஆனால் அடுத்தவர்கள் கொண்டுள்ள இறைவன் உணர்வு குறித்து நான் ஒருபோதும் கேலி செய்வது இல்லை, மாறாக எனக்கு இன்னும் அந்த வாய்ப்பு இல்லை என்றே கருதுவது உண்டு. இந்த நூல் ஒரு தந்தையின் இறைவன் உணர்வு பற்றி அதுவும் எனக்கு மிகவும் நெருக்கமான ஓம் நமோ நாராயணா என்று சொல்லிச் சென்றது எனக்குள் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது.

சுசீமா அம்மா அவர்கள் சொன்னதுபோல எவர் ஒன்றை உணர இயலுமோ அவரால் மட்டுமே மற்றவரின் உணர்வுகளை உணர இயலும். பிறரின் நலனுக்கு பாடுபடும் எந்த ஒரு மனிதரும் போற்றப்பட வேண்டியவர் என்பதில் மறு கருத்து இல்லை. தனது வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்த சுசீமா அம்மா அவர்களின் தந்தை எப்படி எல்லாம் பிறருக்காக வேண்டினார் அவருள் உணர்ந்த இறைவன் எப்படி என மிகவும் அழகாக விளக்கி இருக்கிறார்கள். இந்த நூலைப் படிக்கும்போது எனது தந்தை நினைவுக்கு வந்தார்.

எங்கள் வீட்டில் எவருக்கேனும் ஏதேனும் நோய் வந்தால் கூட சாமி கும்பிட்டுவிட்டு நெற்றியில் திருநீறு வைத்துவிடுவார். நான் திருநீறு வைக்காமல் வீட்டைவிட்டு எங்கும் செல்வதில்லை. பின்னர் குங்குமம் வைக்க ஆரம்பித்து இருந்தேன். தினமும் இரவில் சாமி கும்பிடும் வழக்கம் எங்கள் வீட்டில் உண்டு. என் தந்தை சமீபத்தில் கீழே விழுந்து நடக்க முடியாமல் போனபோது அவரை பார்க்க சென்று இருந்தேன். எனக்கு அழுகை வந்ததை நிறுத்த இயலவில்லை. ஆனால் என் தந்தைக்கோ என்னைப் பார்த்ததில் சந்தோசம். நடந்திருவேன்  என நம்பிக்கை சொன்னவர் இரண்டே வாரங்களில் நடந்தார். எனக்கோ இன்னும் ஆச்சரியம். கடவுள் பற்றி அதிக நம்பிக்கை உள்ளவர் என்றாலும் ஏமாற்றுத்தனம் என் தந்தைக்கு கொஞ்சம் கூடப் பிடிக்காது. இப்படி வாழ்வில் எப்போதும் எவர் உதவி இன்றி வாழப் பழகிய என் தந்தை சில வாரங்கள் பிறரை நம்ப வேண்டி இருக்கிறதே என மனதளவில் குற்ற உணர்வு கொண்டார் என்றே அறிந்தேன். வயது 86. தனது குடும்பமே முன்னுரிமை என்பதில் என் தந்தை முழு உறுதியாக இருந்தார்.

இந்த நூல் படிக்கும்போது ஒரு பார்கின்சன் நோய் மூலம் பாதிக்கப்பட்ட சுசீமா அம்மாவின் தந்தையின் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என என்னால் எண்ணிப்பார்க்க இயலவில்லை. ஆனால் அவரது மன உறுதி பிறருக்கு வேண்டும் அந்த குணம் வியப்பில் ஆழ்த்தியது. அவரது உண்மையான உழைப்பு தன்னை ஏமாற்றியவர்களை மன்னிக்கும் மனப்பாங்கு என அவரது தெய்வீகத் தன்மையை நூல் முழுவதும் அறிந்து கொள்ளலாம். அவரது இறுதி மரண நிகழ்வு ஒரு நிமிடம் என்னை உலுக்கியது. எனது அன்னை இறந்தபோது அவரது பிள்ளைகள் நாங்கள் எவருமே அருகில் இல்லை. ஆனால்  இறக்கும் நாள் அன்று எல்லோர் கனவிலும் என் அன்னை வந்தார் என்றே எல்லோரும் சொன்னார்கள். எனக்கும் ஆச்சரியம். என் அம்மா இறந்துவிட்டார்கள் என அதிகாலை நான்கு மணிக்கு தூக்கத்தில் நினைக்கிறேன். ஆறு மணிக்கு செய்தி வந்துவிட்டது. என் அம்மாவின் மரணம் குறித்து எண்ணும் போதெல்லாம் எனக்கு அரங்கனின் மீது ஒரு கேள்வி எழும். அது இருக்கட்டும்.

இன்றைய காலத்தில் இந்த இறைவன், இறைவன் உணர்வு எல்லாம் ஒரு கேலிப் பொருளாகவே ஒரு பிரிவினரால் பார்க்கப்படுகிறது. அதற்கான காரணம் ஏமாற்றுத்தனம். சில ஏமாற்றுக்காரர்களினால் பல உண்மையானவர்களின் மனம் புண்படத்தான் செய்கிறது. எனது சிந்தனைகள் பலரை புண்படுத்தி இருக்கிறது. நான் விமர்சிக்காத பகவத் கீதையா? வள்ளலாரா? மதங்களா? இறைத்தூதர்களா? மகான்களா? அது என் மற்றொரு சிந்தனையின் கோணம். விமர்சிப்பது தவறு என்று சொல்லவில்லை, ஆனால் எது எத்தகைய விமர்சனம் எனும் பக்குவம் அவசியம் தேவைப்படுகிறது. இறைவன் சொன்னார் என ஒரு மனிதன் சொல்லும்போது எனக்கு கேள்வி எழுகிறது. இறைவனின் அவதாரங்கள் என சொல்லும்போது எனக்கு கேள்வி எழுகிறது. அந்த கேள்விகளை எல்லாம் என்னால் எளிதாக புறந்தள்ள முடிவதில்லை. அவை கேள்விகள், அதற்கான விடைகளை  நானே உருவாக்கி அவையெல்லாம் பித்தலாட்டங்கள் என எப்போது நான் முடிவு செய்கிறேனோ அப்போதே எனது அறியாமை அங்கு வெளிப்படுகிறது. ஏனெனில் அடுத்தவர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை நான் உணராத காரணத்தின் மூலம்  புறந்தள்ளுவது என்றான பின்னர் அங்கே உண்மை எனக்கு தெரியாமல் போய்விடுகிறது.

இந்த நூலினைப் படிப்பவர்கள் அதே இறைவன் உணர்வில் பயணிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால் படித்ததும் இந்த இறைவனின் உணர்வுக்குத் தொடர்பு உடையவர்கள் நிச்சயம் உணர்வார்கள். எனக்குள் அந்த சலனத்தை இந்த நூல் ஏற்படுத்திச்  சென்றது என்னவோ உண்மை.

இப்போது கூட ஓம் நமோ நாராயணா எனும் மந்திரம் ஒலிக்க  பூஜை அறையில் அமர்ந்துதான் இதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

இறை உணர்வு அனைவருக்கும் வாய்ப்பது இல்லை. தெய்வீகம் என்பதை மத சடங்குகளுடன் இணைத்து விடாதீர்கள்.

வெகு சிறப்பாக எழுதப்பட்ட ஒரு அருமையான புத்தகம்தனை படித்தபோது படித்து முடித்த பின்னர் சுசீமா அம்மாவின் தந்தையுடன் பயணித்த உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. எனது அன்புகளும் நன்றிகளும் அம்மா.

புத்தகம் வேண்டுவோர் twitter-ல்  @amas32 அம்மாவிடம் கேளுங்கள்.

Friday 10 January 2014

வைகுண்டமும் பெருவெடிப்பு கொள்கையும்

ஒரு புத்தகம் கொண்டு வந்து இதைப் படி என அம்மா கொடுத்துவிட்டு போனார். இந்த இரவு நேரத்தில் தூங்குவதை விட்டுவிட்டு எவரேனும் புத்தகம் படிப்பார்களா என்றே அந்த புத்தகம் பார்த்தேன்.  அந்த புத்தகத்திற்கு எந்த ஒரு பெயரும் இல்லை. எவரேனும் தலைப்பு இல்லாமல் ஒரு புத்தகம் எழுதுவார்களா? அந்த புத்தகத்தினை எழுதியவர் பெயர் கூட இல்லை. முன் அட்டை, பின் அட்டை வெறுமையாக இருந்தது. உள்ளே எடுத்த எடுப்பில் வைகுண்டத்தில் நாராயணன் வாசம் செய்கிறான் என்றே வரி ஆரம்பித்து இருந்தது. பதிப்பகம், விலை என இத்யாதிகளும் இல்லை. ஆயிரத்து எட்டு பக்கங்கள். தலைக்கு அடியில் வைத்து பார்த்தேன். மெத்தென்று இருந்தது. 

''பக்தா, நல்ல தூக்கமோ''

இந்த வார்த்தைகளை நான் வெகு நாட்களாக கேட்டு இருக்கவில்லை. திடீரென எதற்கு சாமியார் வந்து இருக்கிறார் என்றே ஆச்சர்யத்துடன் அவரை வரவேற்றேன். அங்கிருந்த ஒரு நாற்காலி ஒன்றை அவருக்கு போட்டுவிட்டு கீழே நான் அமர்ந்து கொண்டேன். 

''என்ன விஷயமாக வந்து இருக்கிறீர்கள்''

''நான் வைகுண்டம் போகலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன், அதுதான் நீயும் வருகிறாயா என்று அழைத்து போகவே வந்தேன்'' 

''எங்கே, ஸ்ரீரங்கமா?''

''அது பூலோக வைகுண்டம், நான் உன்னை அழைப்பது நாராயணன் வாசம் செய்யும் வைகுண்டத்திற்கு பக்தா''

''என்ன உளறுகிறீர்கள், அந்த வைகுண்டம் எங்கே இருக்கிறது, அது ஒரு கற்பனையான உலகம்''

''பக்தா, இந்த உலகம் எப்படி தோன்றியது''

''பெரு வெடிப்பு கொள்கையின் படி ஒரு புள்ளியில் இருந்தே எல்லாம் தொடங்கின, அதற்கு முன்னர் எதுவும் இல்லை''

''எந்த பாட புத்தகத்தில் படித்தாய் பக்தா, கடவுள் இவ்வுலகை படைத்தார் என்றதும், கடவுளை யார் படைத்தார் என கேட்கும் நீயா, அந்த புள்ளிக்கு முன்னர் எதுவும் இல்லை என சொல்வது''

''நான் எப்போது கடவுளை யார் படைத்தார் என கேட்டேன், இந்த பிரபஞ்சத்தை படைக்கத் தெரிந்த கடவுளுக்கு தன்னை படைக்கத் தெரியாதா?''

''பக்தா, சரி மனம் மாறிவிட்டாய் போலிருக்கிறது, வா வைகுண்டம் போகலாம்''

''இல்லாத ஒரு இடத்திற்கு எல்லாம் என்னால் வர இயலாது, அதுவும் அது எங்கு இருக்கிறது என்பதே எவருக்கும் தெரியாது''

''பக்தா, வைகுண்டம் அழைக்கும் தொலைவில் உள்ளது என்பதுதான் கதை, ஆனால் உண்மையான வைகுண்டம் இந்த பிரபஞ்சத்தைத் தாண்டி உள்ளது''

''இது யுனிவர்ஸ்''

''அப்படித்தான் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது மல்டிவர்ஸ்''

''மல்டிப்ளக்ஸ் மாதிரி பேசறீங்க, என்னால் உங்களுடன் வர இயலாது''

''நாராயணன் இந்த வைகுண்டத்தில் வாசம் செய்கிறார். அந்த வைகுண்டத்திற்கு ஆத்மாக்கள் செல்லும். உடலை இங்கே கிடத்திவிட்டு ஆத்மா அங்கே வாசம் செய்யும். அதற்கு நற்காரியங்கள் புரிந்து இருக்க வேண்டும். நீ நற்காரியங்கள் புரிந்து இருக்கிறாயா''

''எதற்கு இப்போது இப்படி என்னை தொந்தரவு செய்கிறீர்கள்''

''வருடத்தில் ஒரு நாள் மட்டுமே அந்த சொர்க்கவாசல் எனும் பிரபஞ்சத்தை தாண்டி செல்லும் கதவு திறக்கும், நான் தயார் ஆகிவிட்டேன், அதுதான் உன்னை உடன் அழைத்து செல்ல வந்தேன்''

''நான் வரவில்லை, நீங்கள் போய்விட்டு வாருங்கள்''

''அந்த வைகுண்டம் சென்றுவிட்டால் ஆத்மா திரும்பி வர இயலாது, அந்த நாராயணனுடன் ஐக்கியம் ஆகிவிடும். அப்படி செல்ல இயலாத ஆத்மாக்கள் இந்த பிரபஞ்சத்திற்குள் சிக்குண்டு மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கின்றன''

''எனக்கு கூரை ஏறி கோழி கூட பிடிக்கத் தெரியாது''

''வானம் ஏறி வைகுண்டம் போக நான் வழி சொல்கிறேன்''

''வேண்டாம்''

''சரி பக்தா, இந்த பெருவெடிப்பு கொள்கை மூலம் உருவான இந்த உலகம் முடிவில் என்னவாகும்''

''அப்படியே உறைநிலை அடையும்''

''அதுதான் இல்லை, இந்த உலகம் மீண்டும் ஒரு புதிய தொடக்கம் தொடங்கும், இப்படித்தான் இவ்வுலகை படைக்க பிரம்மன், நாராயணன் அமர்ந்து இருக்கும் தாமரை மலரில் சென்று இடம் கேட்பார். ஒரு இயக்கம் முடிந்து, மறு இயக்கம் தொடரும்போது அழித்தலில் இருந்து கொண்டே ஆக்கம் செய்ய இயலாது என்பதை அறிந்த பிரம்மன், நாராயணனிடம் உதவி கோருகிறார். நாராயணன் தனது இருப்பிடம் வருமாறு வைகுண்டத்திற்கு பிரம்மனை வரவழைக்கிறார். பிரம்மன் இப்படித்தான் ஒவ்வொரு யுகம் படைக்கிறார். அதுபோலவே இந்த பெருவெடிப்பு கொள்கை மூலம் உருவாகும் இந்த பிரபஞ்சமும் இதே மாற்றங்களை கொண்டு அமையும்''

''இந்த பிரபஞ்சம் வைகுண்டத்தில் இருந்து உருவாக்கப்படுவதா, பெருவெடிப்பு கொள்கையா''

''வைகுண்டத்தில் இருந்து நடத்தப்படும் பெருவெடிப்பு கொள்கையும் அதைத் தொடர்ந்த விரிவாக்கமுமே பக்தா, இப்போது வருகிறாயா''

''இல்லை, அழைத்த தூரத்தில்தான் வைகுண்டம் இருக்கும் கதை எனக்குப் போதும்''

''பக்தா, அது ஒரு முட்டாள் அரசரை, ஒரு அறிவாளி மடக்கியது, ஆனால் நாராயணன் ஒளியை விட வேகமாக செல்லக்கூடியவர். இந்த பிரபஞ்சத்தில் அப்பாற்பட்டு இருக்கும் வைகுண்டத்தில் இருந்தே நமது தேவைகளை அவர் அறிய இயலும், அந்த தேவைகளை நிறைவேற்ற அவர் தேரில் வர வேண்டியது இல்லை. எனவே வைகுண்டம் அருகில் எல்லாம் இல்லை''

''ஒளியை விட வேகமாகவா''

''ஆம், இந்த பிரபஞ்சத்தில் பார்க்கும் ஒளி என்றோ வெளியிடப்பட்டது, அது நமக்கு வர பல்லாயிரம் வருடங்கள் ஆகும், ஆனால் நாராயணன் அப்படி அல்ல''

''அப்படிப்பட்ட வைகுண்டம் அடைய பல்லாயிரம் வருடங்கள் ஆகுமே''

''நமது உடலை கிடத்திவிட்டு ஆத்மா ஒளியை விட வேகமாக நாராயணன் நோக்கி செல்லும், சில வினாடிகளில் சென்று அடையும். வருகிறாயா''

''கிருஷ்ணர் தேர் மற்றும் உடலுடன் சென்றதாக தானே மகாபாரதம் குறிக்கிறது''

''கிருஷ்ணரின் உடல் இந்த பஞ்சபூதங்களால் ஆனது அல்ல. தேர் கூட இங்கிருக்கும் பொருளால் ஆனது அல்ல. இந்த பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் வைகுண்டத்தில் பஞ்ச பூதங்களே இல்லை. அங்கிருக்கும் நிலை வேறு, ஆமாம் கிருஷ்ணர் கதை சொன்னாயே, ராமர் கதை தெரியுமா''

''ராமர் என்ன செய்தார்''

''அப்படி கேள் பக்தா, ராமர், தனது மக்கள் அனைவருடன் வைகுண்டம் சென்றார், ஆனால் கிருஷ்ணர் தனது குலம் அழிந்து தான் மட்டுமே சென்றார்''

''அப்படியெனில் நீங்கள் மட்டுமே செல்லுங்கள், நான் வாழும் வரை பூலோக வைகுண்டம் சென்று வருகிறேன் அது போதும்''

எந்திருப்பா, படிக்க புத்தகம் கொடுத்தா தலைக்கு வைச்சா படுப்பே, சீக்கிரமா குளிச்சிட்டு வா கோவிலுக்கு போகலாம், இன்னைக்கு வைகுண்ட ஏகாதசி, ஏழு மணிக்கு சொர்க்கவாசல் திறந்திரும். 

சாமியார் சொன்ன சொர்க்கவாசல், வைகுண்டம் விட இந்த கோவில் சொர்க்கவாசல், வைகுண்ட ஏகாதசி எல்லாம் மிகவும் சுகம். எப்படியும் பிரசாதம் தருவார்கள். வேகமாக எழுந்து குளிக்க ஓடினேன். 

Friday 26 July 2013

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 7

சாபம் விடுவது என்பது முனிவர்களின் ஒரு தலையாய கடனாக இருந்து வந்து இருக்கிறது. அதாவது சாபம் விட்டால் அது பலித்து விடும் எனும் ஒரு அதீத நம்பிக்கை அவர்களுக்குள் இருந்தததுடன் மட்டுமில்லாமல் அந்த சாபத்தை கூட மாற்றி அமைக்கும் வல்லமை உடையவர்களாகவே அவர்கள் சொல்லப்பட்டார்கள். ஒருவரது வாக்கு அத்தனை சக்தி வாய்ந்ததா? என்பதெல்லாம் பற்றி ஆராய்ச்சி அவசியம் இல்லை எனினும், ஒருவரது சொல் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்பது அனைவரும் ஓரளவு தெரிந்தே வைத்து இருக்கிறார்கள். 'வசவு பாடுதல்' எல்லாம் எதிர்வினைகளை அதிக அளவில் ஏற்படுத்தவல்லவை. கிராமங்களில் 'மண் வாரி தூற்றுதல்' 'காசு வெட்டி போடுதல்' 'செய்வினை செய்தல்' போன்ற காரியங்கள் எல்லாம் எதிர்காலத்தில் இப்படி நடக்கும், நடந்துவிடும் என்கிற நம்பிக்கையில் செய்யப்படுபவை. இப்படி செய்தால் அப்படி நடக்கும் எனும் ஒரு உணர்வு! எப்படி இந்த மனிதர்கள் முனிவர்கள், சித்தர்கள் பெரும் வல்லமை கொண்டவர்களாக மாறினார்கள்? அல்லது மாற்றம் கொண்டது போல் போற்றப்பட்டார்கள்?

இதுவரை எவரும் 'கல்லாக நீ கடவது' என சபித்து எவரும் கல்லாய் ஆனது கண்டில்லை. இந்த மனிதர்கள் எப்படி உருவானார்கள்? அல்லது எப்படி படைக்கப்பட்டார்கள்?

தற்போதைய மனிதர்கள் தோன்றிய வரலாறு கிட்டத்தட்ட 50000 ஆயிரம் வருடங்களில் இருந்து 100000 ஆயிரம் வருடங்களுக்கு உட்பட்டுதான் என்று வரலாறு குறிக்கிறது. அதுவும் மனித வழித்தோன்றல்கள் 5 மில்லியன் ஆண்டுகள் முன்னர் மற்றொரு உயிரினத்தில் இருந்து வேறுபட்டு வந்துள்ளது என்றே கணக்கு சொல்லப்படுகிறது. இந்த பூமியானது கடந்த 3 பில்லியன் கோடி வருடங்கள் முதற்கொண்டு உயிரினங்கள் வாழ துணை புரிவதாகவும், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகள் முதற்கொண்டு 5 பில்லியன் ஆண்டுகள் வரை இந்த பூமி உயிரினங்கள் வாழ வழி செய்யும் என்றே குறித்து வைக்கிறார்கள். இப்போது எழுதபட்ட விசயத்தில் எதையும் துல்லியமாக வரையறுத்து சொல்ல இயலாத நிலை இருப்பதை அறியலாம்.

இந்த பூமியில் நடைபெறும் நிகழ்வுகள் அடிப்படையில் உயிரினங்கள் சில மில்லியன்கள் வரை இருப்பதாகவும், அவை மாற்றம் அடைந்து வேறொரு உயிரின வடிவில் தோன்றுவதாகவும் படிமங்களின் ஆராய்ச்சி சொல்கிறது. வருடம்தோறும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் அழிவதாகவும், ஆயிரக்கணக்கான உயிரினங்கள் தோன்றுவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் அவை பெரிய அளவில் உள்ள உயிரினங்கள் என சொல்ல இயலாது. சின்னசின்ன உயிரின மாற்றம் சாத்தியமே.

மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் என்ன வித்தியாசம்? மனித இனம் அழியுமா? அப்படி அழியும் பட்சத்தில் வேறு எந்த உயிரினம் தோன்றும்?

முக்காலம் உணர்ந்த முனிவர்கள் போல எழுதி வைத்து இருக்கிறார்கள். அடுத்த பதிவில் அதைப் பார்க்கலாம்.

(தொடரும்)

Thursday 20 June 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 5

இலகிமா, இதை காற்றை போல் மென்மையாதல் என்றே குறிப்பிடுகிறார்கள். வானத்தில் பறக்கும் சக்தியை இது கொடுக்கும் என்றும், நீரில் மீது நடக்கும் சக்தியை தரும் என்றே கருதப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அருகில் ஒரு சித்தர் இப்படி வானில் பறந்ததாக சமீபத்தில் ஒரு கதை படித்தேன்.

ஒல்லியான உருவம் கொண்டவரை 'காற்று அடித்தால் உன்னை தூக்கிக் கொண்டு போய்விடும்' எனும் ஒரு நகைச்சுவை சொல்வழக்கு உண்டு. பறப்பவை எல்லாம் பறவைகள் என்றுதான் குறிப்பிடப்பட்டு வருகின்றன, ஆனால் மனிதன் பறக்கும் தன்மையை பெற்று இருக்கவில்லை. ஆனால் ஹனுமார் பறந்து சென்றே சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்ததாக புராணங்கள் குறித்து வைக்கிறது.

இவை எல்லாம் அமானுஷ்ய தன்மைகள் என்றும் சொல்லப்பட்டு வருகின்றன. உண்மையிலேயே எங்கே ஈர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறதோ அங்கே பறக்கும் தன்மையை மனிதன் பெற இயலும். உதாரணத்திற்கு நிலவை குறிப்பிடலாம். ஒரு பொருளின் நிறை எந்த இடத்திற்கு சென்றாலும் மாறாது, ஆனால் ஒரு பொருளின் எடை மாறும்.

ஒரு பொருளின் எடையானது அந்த இடத்தின் ஈர்ப்பு விசையின் தன்மையை பொறுத்தே அமைகின்றன. பூமியின் ஈர்ப்பு விசை ஒரு கிலோவுக்கு பத்து நியூட்டன் என்றே கணக்கிட்டு வைத்து இருக்கிறார்கள். வியாழனில் இந்த ஈர்ப்பு விசை ஒரு கிலோவுக்கு இருப்பத்தி நான்கு நியூட்டன். இப்படி ஒவ்வொரு கோள்களிலும் ஈர்ப்பு விசை மாறுபாடு அடைகிறது. இந்த ஈர்ப்பு விசை ஒரு பொருளின் நிறையை பொருத்து அமைகிறது எனலாம். ஒன்றில் ஈர்ப்பு அதிகமாக அதிகமாக பிரச்சினைகள் அதிகமாகும்.

ஒரு விசயத்தில் பற்று கொண்டு அதனிலே உழன்று மன நோயிற்கு உட்பட்டு பாதிப்புக்கு உள்ளாவோர் நிறையவே உண்டு. அங்கே 'மனம் பாரமாக இருக்கிறது' என பொருள். இப்பொழுது அவர்கள் மிகவும் கனமாக உணர்வார்கள். அந்த நபர்களின் பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் எவரேனும் அவருக்கு வாய்த்தல் அவர்கள் மிகவும் இலகுவாக உணர்வார்கள். 'இப்போதான் மனசு ரொம்ப லேசா இருக்கு' இதுதான் இலகிமா.

மனசு லேசாக இருக்கும்போது காற்றில் பறப்பது போன்ற ஒரு உணர்வு வரும். மென்மையான தன்மை நம்மில் உருவாகும். இப்படி மென்மையான தன்மை வரும் பட்சத்தில் பிற உயிர்களுக்கு தீங்கிழைக்கும் எண்ணம் அடியோடு ஒழிந்து போகும். நல்லதையே நினைக்கும், நல்லதையே செய்ய துடிக்கும் எண்ணங்கள் மட்டுமே பீறிடும்.

இப்படிப்பட்ட உணர்வு இந்த உலகத்தில் அத்தனை எளிதாக நாம் அடைய இயலாது என்றாகி விட்டது. பிரச்சினைகளால் உந்தப்பட்டு எவரால் நமக்கு தொல்லை வருமோ, என்ன என்ன எழரைகள் வந்து சேருமோ எனும் அச்சத்தில் வாழ்க்கையை கழித்து கொண்டு இருக்கும் மானுடருக்கு இந்த மென்மையான தன்மை ஒரு அமானுஷ்ய தன்மையாக மாறிப்போனதில் ஆச்சரியமில்லை.

இப்படிப்பட்ட மன அழுத்தத்தில் சிக்கிக் கொண்டு இருப்போருக்கு ஆறுதல் தரவே அகிலாண்டீஸ்வரி வரம் புரிகிறார். கோவிலுக்கு செல்வோம், நூலகங்களுக்கு செல்வோம். இறைவனிடம் மனம் விட்டு பேசுவோம். அவர் எதிர்பேச்சு எதுவும் பேசமாட்டார். எவரிடமும் சென்று நமது குறைகள் பற்றி கேலி பண்ண மாட்டார். ஆனால் ஒன்றே ஒன்று, இறைவனிடம் சொல்லிவிட்டோம், நமது குறைகள் தீர்ந்துவிட்டது என நாம் நம்பிக்கை கொள்வோம். மனம் லேசாகிவிடும். அப்படியே வாழப் பழகுவோம் .

பிரச்சினைகளில் மூழ்கி தவிப்போருக்கு வெளிவரவே இறைவன் எனும் பாடம் நமக்கு சொல்லப்பட்டது. ஆனால் இந்த இறைவனையும் பிரச்சினைக்கு உட்படுத்தி அசிங்கபடுத்தி பார்ப்பதில் நமக்கு நிகர் எவருமில்லை.

''ஏன்  ஒருமாதிரியா இருக்கே, என்னப்பா பிரச்சினை?''

''ஒண்ணுமில்லை''

''இதுதான் பிரச்சினையா?''

''இல்லை, அது வந்து...''

பிரச்சினைகளில் இருந்து வெளிவர வேண்டுமெனில் மனதை லேசாக மாற்ற முயற்சிப்போம். இலகிமா, சித்தர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் அவசியம்.





Friday 15 March 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 4

அடுத்தது கரிமா. இதை விண்டன்மை என்றும் உடலை மிகவும் பருமனாக்குதல் என்றும் குறிப்பிடுகிறார்கள். எந்த ஒரு விசயத்தாலும் நமது உடலை அகற்ற இயலாதபடி தடிமனாக்குதல். இதெல்லாம் ஒரு விளையாட்டுத் தனமாகவே இருக்கிறது. மலைகளை, பாறைகளை எல்லாம் சுக்கு நூறாக்கிவிடும் தொழில்நுட்ப கால கட்டத்தில் உடலை தடிமனாக்கி எதன் மூலமும் அசைக்க இயலாத தன்மை என்பதெல்லாம் சற்று கடினமான விசயம் தான்.

பொதுவாகவே உறுதி என்றால் மலைகளை குறிப்பிடுவார்கள். அப்படிப்பட்ட உறுதியுடன் கூடிய உடல் பெறுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகவே இருக்கிறது. நமது உடலில் மிகவும் முக்கியமாக கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற தனிமங்கள் கூட்டு தன்மையுடன் பல மூலக்கூறுகளை உருவாக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட தனிமங்கள், மூலக்கூறுகள் எல்லாம் நாம் உண்ணும் உணவின் மூலம் பெற்றுக் கொள்கிறோம். திடகாத்திரமான உடல் என்பதெல்லாம் தவத்தால் வருவதில்லை. நாம் உண்ணும் உணவின் மூலமும், நாம் கடைபிடிக்கும் உடற்பயிற்சி மூலமும் வருகிறது.

வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பது போல உடலின் வலு வெவ்வேறாக பார்க்கப்படுகிறது. தசைகள், நரம்புகள், எலும்புகள் என ஆன உடம்பு காற்று அடித்தால் பறந்து விடும் என இருந்தால் அதன் மூலம் பயன் என்ன? அதே வேளையில் உடலானது வெறும் தசைகளால் பருத்து இருப்பது கரிமா எனப்பட மாட்டாது. இப்படிப்பட்ட கரிமா தனை பரிசீலனை செய்ய மல்யுத்தம் போன்ற வித்தைகள் எல்லாம் வந்து சேர்ந்தன எனலாம்.

உடலில் உள்ள உறுப்பு தானங்கள் எல்லாம் இப்போது பெருகி விட்ட கால சூழலில் உடலை பேணி காப்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. எதற்கும் அசைந்து கொடுக்க கூடாது என்றே குறிப்பிடப்படுகிறது. அதாவது மனம் இங்கே பெருமளவில் பேசப்படுகிறது. எந்த ஒரு தீய சக்திக்கும் அசைந்து கொடுக்காத மனது தான் கரிமா. மனது திடத்தன்மையுடன் இருக்கும் பட்சத்தில் மட்டுமே உடலின் திடத்தன்மை வந்து சேரும். எண்ணங்களை திடப்படுத்துதல். உறுதியான எண்ணங்கள். சஞ்சலமற்ற செயல்திறன் கொண்ட எண்ணங்கள்.

மன உறுதி இல்லாத பட்சத்தில் உடல் பலம் ஒரு பலனும் அளிப்பது இல்லை என உணர்த்த வந்ததே இந்த கரிமா. இப்படிபட்ட சித்தியை அனைவரும் பெற்றுக் கொள்வதில் எந்த தடையும் இல்லை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் மனது பலவித விசயங்களால் பாதிப்புக்கு உள்ளாகி உடல் உபாதைகள் அதிகம் ஆகிக் கொண்டே வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் உடல் எப்படி வளர்ப்பது?

உடலில் உள்ள செல்கள் தம்மை தாமே பெருக்கி கொண்டும், தங்களை தாங்களே புதுப்பித்துக் கொண்டும் வருகின்றன. ஒரு மனித வாழ்வில் இந்த செல்களில்  ஏற்படும் மாற்றமே இளமை முதுமை என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகிறது. மார்கண்டேயன் பற்றி அறியாதவர் இல்லை. இளமையுடன், வளமையுடன், உறுதியுடன் வாழ்வது என்பது நாம் நமது எண்ணங்களை உறுதிபடுத்துவதில் தான் இருக்கிறது.

இப்படிப்பட்ட கரிமா சக்தி பெற்றுவிட்டால் நம்மை எவரும்அசைக்க இயலாது என்பதுதான் உண்மை. உடல் உறுதிக்கு மன உறுதி அவசியம். மன உறுதி கரிமா. அணிமா, மகிமா, கரிமா! எண்ணங்களினால் ஆனது அஷ்டமாசித்திகள்.

(தொடரும்) 

Thursday 14 February 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 3

பகுதி  2 

மகிமா என்பது மலை போன்று பெரிதாவது என்றே குறிப்பிடபடுகிறது. விஸ்வரூபம் என்பது கூட ஒருவகையான சித்தி என்றே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. ஒரு சிறு விதை விருட்சமாவது என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால் விருட்சமான மரமானது மேலும் அதுவும் கணநொடியில் மேலும் விருட்சம் என்பது அபூர்வமான ஒன்றாகவும், நம்ப முடியாத விசயமாகவே நமது எண்ணத்திற்கு தோற்றம் அளிக்க கூடியவனாக இருக்கின்றன. 

ஆனால் இப்படிப்பட்ட மகிமா சக்தியை சித்தர்கள் பெற்று இருந்தார்கள் என்றே இன்னமும் சொல்லப்பட்டு வருகிறது. மகாபாரதத்தில் வரும் விஷ்ணுவின் அவதாரம், கிருஷ்ணரின் விஸ்வரூபம் கூட இந்த கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதுவரை எவரும் மனித உருவினை விஸ்வரூபம் எடுத்து பெரிதாக காட்டியதாக வரலாறு குறிக்கவே இல்லை. அப்படியெனில் இந்த மகிமா சாத்தியமா? சாத்தியம் அற்றதா? ஒன்று நம்மால் முடியாதவரை அது சாத்தியம் அற்றது என்றே கருதப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான முயற்சியும் திறனும் நம்மிடம் நாம் வளர்த்து கொள்ள வேண்டும். 

இப்படிப்பட்ட முயற்சி பற்றி எண்ணிடும்போது சூரிய சித்தாந்தம் பற்றி நினைவுக்கு வந்தது. இந்த சூரிய சித்தாந்தம்தனை எழுதியவர் எவர் என்று குறிப்பில் இல்லை. இந்த சூரிய சித்தாந்தம் சூரிய கடவுள் மாயன் எனும் அசுரனுக்கு தரப்பட்டது என்று ஒரு ஐதீகம் உண்டு. தேவர்கள், அசுரர்கள் என அக்காலத்தில் இருந்து குறிப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றன. அசுரர்கள் அழிக்கும் கூட்டம் எனவும், தேவர்கள் காக்கும் கூட்டம் எனவும் வழக்கத்தில் இருந்து இருக்கிறது. இந்த சூரிய சித்தாந்தத்தில் மிகவும் பிரமிக்கத்தக்க வகையில் பல குறிப்புகள் சூரியன் பற்றியும், அதன் கோள்கள் பற்றியும் இருக்கின்றன. கால சூழல் வேறுபாட்டால் பல ஸ்லோகங்கள் தொலைந்து போனதாக வரலாறு குறிப்பிடுகிறது. ஒரு கோளின் அளவினை எல்லாம் இந்த சூரிய சித்தாந்தம் குறிப்பிட்டு இருப்பது, இன்றைய அளவுக்கு மிகவும் சரியாகவே இருப்பது, சைன், டேன், காஸ் டீட்டாகளை எல்லாம் கணக்கில்  வைத்தது பிரமிக்கவைக்கும் செயல் அன்றி வேறு என்னவாக இருக்க இயலும்.

பஞ்சாங்கம் என்பது இந்த சூரிய சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவானதுதான். எந்த எந்த நேரத்தில் எந்த கோள்கள் எங்கிருக்கும் என்றெல்லாம் கணக்கீடு செய்து வைத்து இருக்கிறார்கள். அதன் காரணமாகவே சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எல்லாம் தெரிந்து இருக்கிறது. இப்படிப்பட்ட பிரமிப்பில் ஒரு மலையை சூரியனும், கோள்களும் சுற்றிக்கொண்டு இருக்கின்றன என சொன்னால் எப்படி இருக்கும்?

இந்த மலைகள் எப்படி உருவானது என்பதற்கு பூமித்தட்டுகள் முட்டிக்கொண்டு மேல் எழுந்ததுதான் என்கிறார்கள் இன்றைய அறிவியல் வல்லுனர்கள். இந்த பூமியானது பல தட்டுகளால் உருவானது என்றும் ஒவ்வொரு தட்டுகளும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன, அப்படி நகர்தலின் காரணமாக நிலநடுக்கம், மலைகள் உருவாதல் எல்லாம் நடைபெறுகிறது என்றே சொல்கிறார்கள். தரைமட்டமாக இருந்த நிலபரப்பு திடீரென மலையாய் மாறுதல். மகிமா!

 
இது இமயமலைத் தொடர். இதற்கு பெரிய கதையே உண்டு. இப்போதைக்கு அகிலாண்டீஸ்வரியையும், சிவபெருமானையும் விட்டுவிடுவோம். நமது இந்திய நிலபரப்பு பல்வேறு வருடங்களில் நகர்ந்து வந்து மோதியதால் உருவானது இந்த இமயமலை என்பது ஒரு கணக்கீடு. நன்றி: விக்கிபீடியா 



ஆங்காங்கே இந்திய நிலபரப்பு மட்டுமல்லாது, உலகெங்கும் உள்ள மலைகள் இப்படித்தான் உருவாகி இருக்கும் என்பது ஒரு கணக்கீடு. 


இது ஆல்ப்ஸ் மலைத்தொடர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் என உலகில் ஆயிரக்கணக்கான மலைகள் இருப்பதாகவும் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து சதவிகிதம் பூமி மலைகளால் ஆனது என்றே குறிப்பிடுகிறார்கள். 

ஆனால் மேரு மலை என்று ஒன்று குறிப்பில் உள்ளது. இந்த மேரு மலையில் தான் பிரம்மா மற்றும் அனைத்து கடவுளர்களும் குடியிருப்பதாக ஒரு ஐதீகம். இதுவரை இந்த மேரு மலையை எவருமே கண்டதில்லை. இது எங்கு இருக்கிறது என்பதற்கான ஒவ்வொருவரின் எண்ணமும் வெவ்வேறு விதமாகவே இருக்கிறது. இந்த மலையின் உயரம் கிட்டத்தட்ட பத்து லட்சம் கிலோமீட்டர் உயரம் என்றும், இதனின் குறுக்களவு பூமியைவிட எண்பத்து ஐந்து மடங்கு பெரிதாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உயரத்தை குறிப்பிட யோஜனா என்றும் ஒரு யோஜனா பதினோரு கிலோமீட்டர் என்றும் கணக்கு சொல்கிறார்கள். 

முன்னர் குறிப்பிட்டது போல இந்த மலையை சூரியன் முதற்கொண்டு பிற கோள்கள் சுற்றி வருவதாக ஒரு ஐதீகம். இந்த மேரு மலையை சூரிய சித்தாந்தம் மத்திய பூமியில் இருப்பதாக கணக்கீடு காட்டுகிறது. ஒருவேளை பூமி  வெடித்து சிதறி அதிலிருந்து வேறு பல கோள்கள் உருவாகும் முன்னர் இந்த மலை ஒன்று பூமியில் இருந்து இருக்கலாம் என சூரிய கடவுள் மாயனுக்கு சொல்லி இருக்கலாம். பூமியை சூரியன் சுற்றிய காலமும், சூரியனுக்குள் இருந்த பூமி வெளியே எறியப்பட்ட காலமும் இருந்திருக்கலாம். எவர் கண்டது? ஆனால் இப்படி சூரிய சித்தாந்தத்தில் சொல்லப்பட்ட மேரு மலை இல்லாதது கண்டு பின் வந்தவர்கள் மேரு மலை ஒன்று முன்னர் இருந்தது ஆனால் தற்போது பூமியில் இல்லை என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

இந்த மேரு மலை ஒருமுறை கர்வம் கொண்டதாகவும், அந்த மேரு மலையின் கர்வத்தை போக்கிட நாரதர் வாயு பகவானின் உதவியுடன் மேரு மலையை சிதறடித்ததாகவும் அதிலிருந்துதான் இலங்கை எல்லாம் உருவானது என  ஒரு கதை எல்லாம் உண்டு. அதுவும் லெமூரியா கண்டம் பற்றி எல்லாம் பரபரப்பாக நாம் பேசித் திரிந்த காலம் கூட இங்கே குறிப்பிட வேண்டியதுதான். 

மகிமா என்று சொல்லிவிட்டு மலைகள் பற்றி சொல்லிட வேண்டிய அவசியம் என்ன? பகவான் விஷ்ணு சொல்கிறார் மலைகளில் நான் மேரு. ஒரு மனிதன் தனது எண்ணத்தால், செயலால் உயரும்போது மலையை உதாரணமாக சொல்கிறார்கள். 

உருவத்தில் மனிதன் உயர்வதல்ல மகிமா. மனிதன் தனது உள்ளத்தில், எண்ணத்தில், உணர்வில், செய்கையில் உயர்வது மகிமா. இந்த மகிமா எனும் அஷ்டசித்திகளில் ஒன்றான இதை நாம் பற்றி கொண்டால் உலகம் சுபிட்சமாகவே இருக்கும். 

(தொடரும்)

Thursday 7 February 2013

உணர்வுகளின் பரிணாமம்

இறைவனும் இறை உணர்வும் - 4

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம் - 6

நரம்பியல் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கால சூழல் அமைய வேண்டும் என்றே எண்ணுவது உண்டு. அப்படிப்பட்ட நரம்பியல் பற்றி தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் எனும் கேள்வி எழுப்பும்போதே நரம்பியிலின் நுண்ணியதன்மை வெளிப்பட்டுவிடுகிறது.

ஐந்து வகையான உணர்வுகள், தொடுதல், சுவாசித்தல் , பார்த்தல், கேட்டல், சுவைத்தல்,  பற்றி பாடப்புத்தகத்தில் படித்த காலங்கள் உண்டு. பார்வைக்கு கண் என்றும், தொடுதலுக்கு தோல் என்றும், சுவாசித்தலுக்கு (வாசனைக்கு) நாசி என்றும், கேட்டலுக்கு காது என்றும் வகைப்படுத்தப்பட்டது.

ஒளி இருப்பின் பார்வையும், ஒலி இருப்பின் கேட்டலும் என்றே ஆனது. ஆனால் நமது பார்வையும் சரி, கேட்டலும் சரி ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் மட்டுமே இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம்.

ஆனால் இந்த உணர்வுகளைத் தாண்டி மேலும் பல உணர்வுகள் இருப்பதாகவே அறிவியல் நமக்கு அறிவுறுத்துகிறது. தொடுதலில் மென்மை, வலி, காமம் என எவ்வாறு நாம் வேறுபடுத்தி கொள்கிறோம் என்பதும்  அதைப்போல நாம் பார்க்கும் பொருளின் தன்மையை வேறு வேறு விதமாக நாம் எவ்வாறு உருவகித்து கொள்கிறோம் என்பதும்  சற்றே வித்தியாசமான ஒன்றுதான். நமது எண்ணமே இந்த உணர்வுகளைத் தூண்டுகிறதா? அல்லது உணர்வுகளால் நமது எண்ணங்கள் தூண்டப்படுகிறதா? என்பது சற்றே சிந்திக்கக் கூடிய விசயம்.

ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதா உபதேசத்தில் ஒரு தேரானது உடம்பாகவும், அந்த தேரினை இழுத்து செல்லும் ஐந்து உணர்வுகள் ஐந்து குதிரைகளாகவும், தேரோட்டியை மனமாகவும் சித்தரித்து உள்ளதாக குறிப்பு உள்ளது.

தாயைத் தொடும்போது உள்ள தொடுதல் உணர்வுக்கும், தாரத்தைத் தொடும்போது உள்ள தொடுதல் உணர்வுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பது மனம் சம்பந்தம் கொண்டதா, அல்லது உணர்வு சம்பந்தம் கொண்டதா? இந்த விசயத்தில்தான் பகுத்தறிவு என ஆறாம் உணர்வினை சொன்னார்கள். நமது மனதின் எண்ணவோட்டத்தின் பொருட்டே உணர்வுகளின் நிலை வேறுபடுகிறது என்றுதான் தொன்று தொட்ட காலம் முதல் சொல்லப்பட்டு வருகிறது.




உணர்வு நரம்பு, கடத்தும் நரம்பு, வெளிபடுத்தும் நரம்பு என மூன்று வகையாக நரம்பினைப் பிரிக்கலாம். பார்வை, கேட்டல், தொடுதல் என உணர்வு நரம்பு மூலம் கடத்தும் நரம்புக்கு சென்று பின்னர் மூளையின் செயல்பாடு, அல்லது செயல்பாடற்ற தன்மைக்கு பின்னர் வெளிப்படுத்தும் நரம்பு மூலம் ஒன்றை உணர முடிகிறது.

உதாரணமாக, ஒரு மிகவும் சூடான பாத்திரத்தை கையால் தூக்கும்போது சூடு தாங்க முடியாமல் கீழே போட்டுவிடுகிறோம். அப்படி கீழே போட வேண்டும் என மூளையின் கட்டுபாடுகளுக்கு நாம் காத்து இருப்பது இல்லை. அதே வேளையில் சூடாக இருந்தாலும் அதில் இருக்கும் பொருளின் மதிப்பை கண்டு நாம் கீழே போடாமல் இருக்க நாம் நமது மூளைக்கு கட்டுபடுகிறோம. இப்படியான ஒரு செயலை தனிச்சை செயல் என்றும் அனிச்சை செயல் என்றும் பிரிக்கலாம்.

ஏதாவது ஒன்று நம்மிடம் சொல்லும்போது சற்று கூட யோசனை செய்யாமல் பேசிவிடுவது கூட மூளைக்கு சம்பந்தம் உள்ளதா? இல்லையா என்பது குறித்து சர்ச்சைகள் உண்டு.

நன்றி: கூகிள்

இப்படி ஒவ்வொரு உணர்வும் எப்படி வேறுபாடு அடைகின்றன என சிந்திக்கும் வேளையில் இந்த ஐந்து உணர்வுகளில் எந்த உணர்வு முதலில் தோன்றி இருக்க கூடும்?

தொடுதல் என்கிறார்கள் சிலர். கேட்டல் என்கிறார்கள் சிலர். வாசம் என்கிறார்கள் சிலர். பார்த்தலும், சுவைத்தலும் இறுதியாக வந்து இருக்கலாம் என்றே சொல்கிறார்கள். இன்னும் எத்தனையோ உணர்வுகள் இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். இது குறித்து பின்னர் பார்ப்போம். அதில் ஒன்றுதான் இறை உணர்வு, முக்காலமும் உணரும் தன்மையான உணர்வு.

(தொடரும்)

Friday 30 November 2012

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 2

அஷ்டமாசித்திகளில் முதலான அணுவைப் போல் சிறியது ஆதல் என்பது எவ்வகையில் சாத்தியம் என எவரேனும் பரிசோதனையில் இறங்கி இருக்கிறார்களா என்றால்புராண கதைகளில் படித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் உண்மையிலே இது சாத்தியமா என்றால் இதுவரை நமது காலகட்டத்தில் எவரேனும் இப்படி முயற்சித்து வெற்றி கண்டு இருக்கிறார்களா என்றால் இல்லையென்றே உறுதியாக சொல்லலாம்.

ஆனால் புராண காலத்து கதாபாத்திரங்கள் அல்லது வாழ்ந்த ஜீவன்கள் எல்லாம் முனிவர்களின் சாபத்தினால் அணிமா நிலையை அடைந்து இருக்கின்றன என்றே குறிப்பு இருக்கிறது. அகலிகை சிறு கல்லாக மாறுதல் கூட ஒருவகையில் அணிமாவை சார்ந்ததுதான். கண்ணுக்கே உட்படாத அணிமா வகை என்பது ஒருவகை பண்புதான்.

அணிமா குறித்து சொல்லும்போதே அகிலாண்டீஸ்வரி பற்றி தெரிந்து கொள்வோம். எத்தனையோ முறை ஸ்ரீரங்கம் சென்ற போதெல்லாம் இந்த திருவானைக்கோவிலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயம் சென்று பார்க்க வேண்டும் என தோணவே இல்லை. இதுவரை இந்த ஆலயத்திற்கு சென்றதும் இல்லை. அட்லாண்டீசும் லேமூரியாவும் என்ற கதை எழுதிய பொது கூட திருவானைக்கோவிலில் உள்ள நூலகம் என எழுதினேனே தவிர இந்த ஆலயம் பற்றி எழுதவில்லை.மேலும் சில தருணங்களில் திருவானைக்கோவில் வழியாக செல்லாமல் மாம்பழம் சாலை வழியாக ஸ்ரீரங்கம் சென்றது உண்டு. சிறுவயது காலம் தொட்டே இந்த ஸ்ரீரங்கநாதர் எனக்கு மிகவும் பழக்கமாகிப் போனவர்  என இருந்தாலும் திருவானைக்கோவிலில் உள்ள ஜம்புகேஸ்வரர் மட்டும் எனக்கு பரிச்சயமே இல்லை.  சிவ வழிபாடு எல்லாம் செய்யக்கூடாது என்று இல்லை, ஏனோ இந்த அகிலாண்டீஸ்வரியும் ஜம்புகேஸ்வரரும் எனக்கு தெரியாமலே போனது.

அகிலாண்டீஸ்வரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்தபோது ஜம்புகேஸ்வரர் கண்ணுக்குத் தெரிகிறார். யார் இந்த அகிலாண்டீஸ்வரி? பொதுவாகவே இந்து புராணங்களில் ஒரே ஒரு தெய்வம் தான் பல உருவங்களில் பல பெயர்களில் அவதாரமோ அல்லது பூமியில் பிறப்போ எடுத்து வருவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம் தான். அவர்களின் பூமியில் எழுந்தருளல் குறித்து மிகவும் அற்புதமாகவே எழுதி வைத்து இருக்கிறார்கள். இவை எல்லாம் சத்தியமாகவே நடந்த செயலா என்றால் எனக்குத் தெரியாது. ஆனால் திருவானைக்கோவிலில் உள்ள ஆலயம் அதற்கு சான்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆலயத்திற்கும் என வரலாறும், அதோடு சம்பந்தமான புராண கதைகளும் உண்டு.

சிவன், உலகம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என கயிலையில் தவம் இருக்கிறார். சிவன் நினைத்தால் இந்த உலகினை எப்போதுமே நன்றாக வைத்து இருக்க முடியும், அதாவது தீயவைகள் எல்லாம் அழித்துவிட்டால் நல்லவை மட்டும்தானே மிஞ்சும். ஆனால் அந்த தீயவைகளை கூட நல்லவைகளாக மாற்ற வேண்டி சிவன் தவம் இருக்கிறார். சிவனின் தவத்தைக் கண்டு,  பார்வதி சிவனை நோக்கி பரிகாசம் செய்கிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை கைலாயிலத்தில் இருந்து பூமிக்கு சென்று தவம் மேற்கொள்ளுமாறு கட்டளை  என்ற சாபம் இடுகிறார். கணவன் மனைவிக்குள் இருக்கும் ஊடல் எல்லாம் சிவன், பார்வதியின் வாழ்க்கையில் மிகவும் அதிகமாகவே உண்டு. பார்வதி இவ்வுலக சுபிட்சத்திற்கு நான் தவம் இருக்கிறேன் என சொல்லிக்கொண்டு பூமியில் அகிலாண்டீஸ்வரியாக அவதாரம் மேற்கொள்கிறார்.

அப்பொழுது அவர் தெரிவு செய்த இடம் தான் காடுகள் நிறைந்த திருவானைக்கோவில். அங்கே அவர் ஒரு நாவல் மரத்தின் கீழே தனது தவத்தை மேற்கொள்கிறார். பதிபக்தி என சொல்வார்கள். தன்னை தனியாக அனுப்பிவிட்டாரே என கோபம் எதுவும் சொல்லாமல் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து லிங்கம் செய்து வழிபடுகிறார். மணலில் கயிறு திரிப்பது சாத்தியமற்ற செயலாக இருந்தாலும் இன்றைய அறிவியல் விசயங்களில் மணலுடன் சில வேதியல் பொருட்களை சேர்த்தால் மணலில் கயிறு  திரித்தல் சாத்தியம் தான். அன்றைய கால கட்டத்தில் தனது தவ வலிமையால் பார்வதி தண்ணீரில் லிங்கம் செய்து வழிபட்டது சாத்தியமாகவே இருக்க கூடும். தண்ணீர் பனிக்கட்டியான பின்னர் அதை சிவலிங்கமாக செய்வது மிகவும் சாத்தியமே. இதனை அப்பு லிங்கம் என்றே குறிப்பிடுகிறார்கள். 

அகிலாண்டீஸ்வரியின் தவத்தை மெச்சிய சிவன் ஒருவழியாக கடைசியில் அவருக்கு தரிசனம் தருகிறார். அப்பொழுது சிவன் ஒரு ஆசிரியராக, அகிலாண்டீஸ்வரி ஒரு மாணவியாக இருந்து ஞானம்தனை சிவனிடம் இருந்து பெற்று கொள்கிறார். அதனால் தான் இந்த திருவானைக்கோவிலில் சிவனுக்கும் அகிலாண்டீஸ்வரிக்கும் திருக்கல்யாணம் கூட நடைபெறுவதில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

திருவானைக்கோவில் பெயர் வரலாறு கூட மிகவும் சுவராஸ்யம் தான். சிவனின் பக்தர்களான மலையவன் மற்றும் புஷ்பதந்தா என்பவர்கள் கைய்லாயிலத்தில் வசித்து வந்தார்கள். இவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். இதனால் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொண்டு புஷ்பந்தாவை பூமியில் ஒரு யானையாக உருவெடுக்க சபதம் போடா, புஷ்ப்தந்தா மலையவனை ஒரு சிலந்தியாக உருவேடுக்குமாறு சபதம் இடுகிறார்கள். இங்கே அணிமாவும், மகிமாவும் சாத்தியமாகிறது. மகிமாவின் மகிமை பற்றி அடுத்தத் தொடரில் பார்க்கலாம். பூமிக்கு உருமாறி வந்தாலும் ஜம்புகேஸ்வரம் என்ற நகரை அடைந்து அங்கே சிவனை பூஜிக்கிறார்கள். அங்கேயும் இவர்களின் சண்டை ஓயவில்லை. சிலந்தியானது நாவல் மர இலைகள் சிவலிங்கம் மேல் விழாமலிருக்க சிலந்தி வலை கட்டுகிறது. ஆனால் யானையோ அது லிங்கத்திற்கு மீதான அழுக்கு என அழித்து கொண்டு தினமும் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்கிறது. இதைக் கண்டு கோபம் கொண்ட சிலந்தி யானையை கொன்றுவிடுகிறது. இவர்களது பக்தியினை மெச்சி சிவன் இவர்கள் இருவருக்கும் மீண்டும் பழைய நிலையை கைலாயித்தில் தந்துவிடுகிறார்.

மலையவன் அடுத்தொரு பிறப்பில் கோச்செங்கண்ணன் எனும் அரசராக பிறப்பு எடுக்கிறார். செங்கண்ணன் எனும் பெயர் அவரது கண்கள் பிறப்பிலேயே சிவப்பாக இருந்ததால் வந்தது என்கிறது குறிப்பு. அதாவது ஜோசியர் குறித்த நேரத்தில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை மாபெரும் சிறப்பு அடையும் என்ற நிலை. ஆனால் குழந்தை பிறக்கும் தருணம் முன்கூட்டியே வந்துவிட தாய் ஜோசியர் குறித்த நேரம் வரும் வரை தன்னை தலைகீழாக தொங்கவிடச் சொல்கிறார். அப்படி தலைகீழாக தொங்கவிட்டதால் குழந்தையின் கண்கள் சிவந்து போனது என்கிறது குறிப்பு. அறிவியல் சிந்தனை அன்றே கோலோச்சிதான் இருக்கிறது. கோ என்றால் அரசு, அரசர். கோச்செங்கண்ணன் பல சிவ ஆலயங்களை கட்டுகிறார். அப்படி கட்டிய ஒரு பஞ்சபூத ஆலயங்களில் ஒன்றானதுதான் திருவானைக்கோவில். இந்த ஆலயத்தில் ஒரு சிறு யானை கூட நுழையக் கூடாது என பழைய பகையை மனதில் வைத்து ஆலயம் எழுப்பினான் என சொல்வது உண்டு. ஆனாலும் யானைக்கு பெயர் வந்தது. திரு என்றால் சிறப்பு. சிவனை வழிபட்ட யானை. ஜம்பு அதாவது நாவல் மரங்கள் நினைந்த காடு. திருவானைக்கா என்பதுதான் முன்னர் இருந்தது. பின்னர் திருவானைக்கோவில் என மருவியது என்கிறார்கள்.

உலகம் செழிக்க பார்வதியே அகிலாண்டீஸ்வரியாக வந்து தவம் இருந்து கூட சிலந்தி யானையை கொன்றதாகத்தான் வரலாறு குறிக்கிறது. தெய்வபக்தி நிறைந்த இருவர் ஒருவர் மீது ஒருவர் கொண்ட பொறாமை எண்ணம் இருவரையும் அழிக்கிறது, இருப்பினும் தெய்வபக்தியால் யோகநிலை கைகூடுகிறது. ஆனால் இது தவறான ஒன்று. காதல், அன்பு, தெய்வீகம் என சொல்லிக்கொண்டு மற்றதை அழித்தல் முறை கேடான செயல். பற்று கொண்டு இருத்தல் என்பது பற்றற்று இருத்தல் போல் இருப்பது இல்லை.

நல்ல விசயங்கள் மனதில் இல்லாது போகும்போது நாம் கூனிக்குறுகி போகிறோம். இதுதான் உண்மையான அணிமா. எண்ணங்கள் சிறுத்து போதல் எனலாம்.

(தொடரும்)


Friday 16 November 2012

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 1

அஷ்டமாசித்திகள் என்றால் எட்டு பேறுகள் என்றே குறிப்பிடுகிறார்கள்.  இதனை அடைய பெற்றவர்கள் மாபெரும் பலன் கொண்டவர்களாக விளங்குவார்கள் என்றே அறியப்படுகிறது. பெரும்பாலும் சித்தர்கள் இத்தகைய எட்டு சித்திகள் பெற்றவர்களாகவே  காட்டப்படுகிறார்கள். இந்த எட்டு சித்திகள் பெறுவது என்பது அத்தனை எளிதான காரியமாக சாமானியர்களுக்குத் தெரிவதில்லை. இவை எல்லாம் கண் கட்டு வித்தையாக இருக்கலாம் என்றே பொதுவாக உணரப்பட்டாலும், ஒருவேளை இருக்குமோ என்கிற மாய பிம்பம் தென்படத்தான் செய்கிறது.

அஷ்டமாசித்திகள் எவை எவை.

1. அணிமா. இதை அணுத்தன்மை அல்லது நுண்மை என்றே குறிப்பிடலாம். அதாவது அணுவைப் போன்று சிறியவையாதல் என பொருள்படும்.

'கறந்த பால் மடிபுகா' என்று சொன்னாலும் யோக நிலையின் மூலம் உடலை சிறியது ஆக்கலாம் என்றே சொல்கிறார்கள். பொதுவாக பார்க்கப் போனால் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்றே ஆகிறது. ஆனால் உடல் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை என்னவென பார்க்கும் போது சில விசயங்கள் சாத்தியப்படலாம். மூன்று வகை உடல்கள் எவை எவை.

அ . ஸ்தூல சரீரம் அதாவது  கண்களுக்கு புலப்படக் கூடிய உடல்

ஆ . சூக்ஷ்ம சரீரம் அதாவது கண்களுக்கு புலப்படாமல் நுட்பமாய் அமைந்து இருப்பது. இதனை லிங்க சரீரம் என்றும் சொல்கிறார்கள். இந்த லிங்க சரீரம் ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, அந்தக்கரணங்கள் நான்கு, பிராண வாயு ஒன்று என்பவைகளால் ஆனது.

இ. காரண உடல். அதாவது பருவுடல், காரண உடல் இரண்டிற்கும் அடிப்படை இந்த காரண உடல்.

பருவுடம்பு மட்டுமில்லாமல் வளியுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு மற்றும் இன்ப உடம்பு எனவும் உடம்பு பிரிக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் ஒரு நிலை ஆகும். இப்படி பிரித்தெடுத்து சிந்தித்த முன்னோர்கள் போற்றத்தக்கவர்கள் தான்.

தொக்கு, சிங்குவை, சட்சு, ஆக்கிராணம் மற்றும் சோத்திரம் இவை ஞானேந்திரியங்கள். அதாவது   மெய் (உணர்தல்), வாய் (சுவை) ,கண் (பார்வை), மூக்கு (வாசம்), செவி (கேட்டல்) என ஐம்பொறிகளாக வகைப்படுத்தலாம். லிங்க சரீரம் ஞானேந்திரியங்கள் மூலம் ஆனது என்பது இவை கண்களுக்கு புலப்படாத விசயங்கள் உணர்வதாக குறிப்பிடுகிறார்கள். இவைகளை பஞ்ச தன்மாத்திரைகள் என்றே சொல்கிறார்கள்.

வாக்கு, பாணி, பாதம், பாயுரு மற்றும் உபஸ்தம் என்பவை கர்மேந்திரியங்கள் என்றே  குறிக்கப்படுகின்றன. அதாவது வாய், கை, கால், மலவாய், கருவாய். இவை சொல்லல், நடத்தல் கொடுத்தல், விடுதல், மகிழ்தல் என கர்மங்களை செய்வதால் இவை கர்மேந்திரியங்கள் என்றே குறிக்கப்படுகின்றன.

மனம், அறிவு, நினைவு மற்றும் முனைப்பு போன்றவை அந்தக்கரணங்கள் என்றே வழங்கப்படுகின்றன. அந்தக்கரணங்கள் ஞானேந்திரியங்களையும், கர்மேந்திரியங்களையும் கட்டுபாட்டில் வைக்கக் கூடியவை. மனம், புத்தி இரண்டுமே எவை என்பது பிரித்தறிய மனம் நினைப்பு என்றும் புத்தி என்பது அறிவு என்றும் சொல்கிறார்கள். நாம் ஒன்றை நினைக்க மனம் துணையாகும். ஆனால் அதை நிச்சயித்து நடத்த புத்தி தேவை என்பதாகும்.

(தொடரும்)


Friday 9 November 2012

வள்ளலார்

யார் இந்த வள்ளலார்? வள்ளலார் பற்றி இன்றைய சமூகம் மறந்து கொண்டிருக்கலாம், ஆனால் சாதிய வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்று எனும் சமரச சன்மார்க்க கொள்கையை பரப்பியவர். இறைச்சி உண்பவர்களை அறவே வெறுத்தார் என்பது மட்டும் சமரச சன்மார்க்க கொள்கைக்கு எதிரான ஒன்று.

சிதம்பரத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் ராமலிங்கம். ராமலிங்க அடிகளார் என மாற்றம் கொண்டு வள்ளலார் என பின்னாளில் போற்றப்பட்டவர். இவரின் வாழ்க்கை குறிப்பு மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. இவரின் தொண்டு மிகவும் போற்றத்தக்கது என்றும் திருவருட்பா இயற்றி தமிழுக்கு பெருமை சேர்த்தார் என்பது மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை.

இவரின் ஜீவ காருண்யம், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன், அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை என இவரது சொல்லாடல்  மிகவும் பிரபலமானவை. உலகில் நன்மையே நிலைக்க வேண்டும் எனும் கனவுலகில் இவர் வாழ்ந்தவர் என்றே சொல்லலாம்.

சிதம்பரத்தில் பிறந்தாலும் சென்னையில் வளர்ந்தவர். சென்னைக்கு சென்ற தருணத்தில் வேடிக்கையாக சென்னையை தர்மமிகு சென்னை என அழைத்தவர் பின்னாளில் தீட்டிலே திளைத்த சென்னை என மாற்றிக் கொண்டார். உலகில் நீதி, நியாயம், நேர்மை எல்லாம் நிலைக்காமல் போவது கண்டு மனதில் வாட்டம் கொண்டு இருந்து இருக்கிறார். அந்த வாட்டம் எல்லாம் போக்க இறைவன் ஒருவனே கதி என்ற நிலையும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

இப்படியெல்லாம் இருந்தாலும் ஞானம் என்பது அத்தனை எளிதாக எவருக்கும் கிடைப்பதில்லை. எப்போதும் இறைவன் பற்றியும், சமயங்கள் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பவர்கள் மிகவும் குறைவு. விளையாட்டு பருவத்தில் இறைவன் மீதான பற்று என வரும்போது அங்கே மற்ற விசயங்கள் அடிப்பட்டு போய்விடுகின்றன.

ஒரு விசயத்தை பற்றி அறிந்து கொள்ள கல்வி சாலைகள் அவசியமே இல்லை என்பதுதான் முந்தைய கால சூழல். அவரவர் அறிந்து கொண்டிருந்த விபரங்கள் தலைமுறைக்கு கடத்தப்பட்டன. ராமலிங்கம் சிறு வயதில் இருந்தே அவரது மூதாதையர்களின் சமயமான சைவம் குறித்து ஆர்வம் கொண்டிருந்து இருக்கிறார். அதுவும் சென்னையில் தனது அண்ணனுடன் வசித்து வந்தபோது தனது அண்ணனின் சைவ புலமை அவரை மிகவும் கவர்ந்து இழுந்து இருக்கிறது. இதன் பொருட்டு வீட்டிலேயே தமிழ் கற்று கொண்டு இறைவன் மீதான பற்றினை வளர்த்து வந்து இருக்கிறார்.

பொதுவாக சித்தர்கள் சமய சடங்குகளை அறவே வெறுக்க கூடியவர்களாகவே இருந்து வந்து இருக்கிறார்கள். உள்ளுக்குள் இருக்கும் பரமானந்தனை வெளியில் தேடுவது எங்கனம் என்றே கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அது போலவே ராமலிங்கம் இந்த கருத்தில் மிகவும் வலுவாக இருந்து இருக்கிறார்.

பொதுவாக ஒருவர் நன்றாக பேசினால் போதும், அவருக்கு கூட்டம் சேர்ந்துவிடும். அப்படி கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு இவரின் பால் அன்பு பாராட்டியவர் ஏராளம். சில சங்கங்கள் அமைத்து வெற்றியும் கண்டவர்.

சிறு வயதிலேயே இறைவன் மீது அன்பு கொண்டு  இருந்தவருக்கு இவரின் விருப்பத்திற்கு மாறாக இவரது திருமணமும் நடந்தேறியிருக்கிறது. அதெல்லாம் பெரிதாக கருத்தில் கொள்ளாமல் இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு சிறப்பு வாய்ந்தது.

இப்படி இருந்த இவர் ஜனவரி மாதம் முப்பதாம்  நாள் தனது தொண்டர்களிடம் இதோ இந்த வீட்டில்  உள்ளே செல்கிறேன், யாரும் கதவை திறக்க வேண்டாம், அப்படி திறந்தாலும் அங்கே நான் இருக்க மாட்டேன் என சொல்லி சென்றதாகவும், கதவு நான்கு மாதமாக திறக்கப்படமால் அரசு உத்தரவின் பேரின் மே மாதம் திறக்கப்பட்டு பார்த்த போது  அங்கே ராமலிங்கம் எனும் வள்ளலார் இல்லாமல் இருந்ததை அரசு பதிவேட்டில் பதிந்து வைத்துவிட்டது.

இது குறித்து தொண்டர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்?

வள்ளலார் அருட்பெரும் சோதியுடன் கலந்து விட்டார் என்றே சொல்லித் திரிகிறார்கள். ஆனால் இவர்களுக்கு அவரின் மனதின் வலியை கண்டு கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் இருந்து இருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.

தனது உடலானது மிகவும் கேவலமானது என்றே எல்லா சித்தர்களும் வள்ளலார் உட்பட பாடி வைத்து இருக்கிறார்கள். மண வாழ்க்கை கேவலமான ஒன்றே என்பதுதான் இவர்களின் கருத்தாக இருக்கிறது. ஏதோ இவர்கள்,  இறைவன் மீது பற்று வைத்து விட்டால், இறைவனையே சதா பாடித் திரிந்தால் எல்லாமே நன்றாக இருந்துவிடும், உடல் தேஜஸ் நிலை அடைந்து விடும்  என்பது இவர்களின் ஒரு கற்பனை காட்சியாக வலம் வந்து இருக்கிறது.

நெருப்பில் மறைந்த மாணிக்கவாசகர், அப்படியே சமாதியாகிப் போன காரைக்கால் அம்மையார் என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவது என்பது அறவே கிடையாது என்பதுதான் பலரின் கூற்றாக இருக்கிறது. ஆனால் இந்த ஆன்மா அழிவது இல்லை, பாதிக்கப்படுவது இல்லை என்று சொல்வதற்கு காரணம் இந்த இயற்கை வாழ்வில் ஒவ்வொருவரும் கண்டு கொண்ட பிரச்சினைகள்.

எவர் எல்லாம் இறைவனை நாடுவார்கள்? இதற்கு மிகவும் எளிமையான காரணம் ஒன்று இருக்கிறது. இதை எத்தனை பேர் மனதைத் தொட்டு மனசாட்சிக்கு உட்பட்டு ஆமாம் என சொல்லப் போகிறார்கள்?

பிரச்சினைகள் உள்ளவர்கள், பிரச்சினை வராமல் இருக்க வேண்டுபவர்கள் இறைவனை நாடுவார்கள். இறைவனை நாடினால் பிரச்சினை தீர்ந்து விடும் எனும் எதிர்பார்ப்புகளே பெரிதும் இந்த இறைவனின் மீதான சடங்குகள் சம்பிராதயங்கள் எல்லாம் வளர்ந்து வந்திருக்கின்றன. பெரும்பாலனவர்கள் இதனை அறிந்து வைத்து இருந்தாலும் நம்பிக்கை எனும் பேரில், பயம் கருதி இதனை காலம் தொட்டு தொடர்ந்து வந்து இருக்கிறார்கள். இதனை வள்ளலார் கடுமையாகவே எதிர்த்தார். அதனால் தான் இவரின் தொண்டு இடங்களில் எந்த ஒரு சடங்குகளும் அனுமதிக்கப்படுவது இல்லை.

இத்தனை பாடல்கள் இயற்றியும், எத்தனையோ நல்ல விசயங்கள் எடுத்து சொல்லியும் திருந்தாத மானிடர்கள் கண்டு மனம் வெதும்பிய வள்ளலார் இறுதியாக எடுத்த முடிவு. யாருக்கும் சொல்லாமல் ஓடிப் போவது. இதை சாதாரணமாக செய்தால் ஓடிப் போய்விட்டார் என்றே கேவலமாக பேசக் கூடும் என திட்டமிட்டே இந்த செயலை செய்தார் எனலாம்.

தான் பாடிய திருவருட்பாக்கள் மூலம் திருந்தாத மானிட சமூகம் தான் இறைவனுடன் ஐக்கியமானது என நினைத்தாலாவது திருந்தட்டும் என்றே இந்த ஓடிப்போன மறைதல் செயலை நிறைவேற்றி இருக்கிறார்.

உண்மையை சொல்பவன் சதிகாரன்.
நன்மையை நினைப்பவன் நாசக்காரன்.

ஒரு உயர்ந்த உள்ளத்தை, சமூகம் சமரச வாழ்வில் திளைக்க வேண்டும் என தனது வாழ்நாளில் பாடுபட்ட ஒரு ஜீவனை ஓடிப்போக வைத்த இந்த சமூகம் வெட்கி தலை குனிய வேண்டுமே தவிர அருட்பெரும் சோதியில் கலந்து விட்டார் என பொய் சொல்லித் திரிய கூடாது.

இவரது சமரச சன்மார்க்கத்தை மட்டுமே பெரிதாக பேசித் திரியும் சமூக ஆர்வலர்கள் சமரசத்தை ஒவ்வொரு ஊரில் முதலில் நிலைநாட்டத் தொடங்கட்டும். ஒரு சமூகம் அவரவர்  தலைவரின் பிறந்த நாள், இறந்த நாள் என கொண்டாடி பிற சமூகத்தை களங்கப்படுத்துவது நிற்கட்டும். இராமலிங்க பிள்ளையில் இருக்கும் சாதிய பெயர் வள்ளலாரில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. 

Thursday 19 July 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 5

தியரி அதாவது கோட்பாடு, தேற்றம். நமது சிந்தனைகள் இந்த தியரி எனப்படுவதை சுற்றியே நிகழ்கிறது. சோதனைகள் செய்யும் முன்னர் இந்த தியரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தியரிக்கான சிந்தனையின் மூலம் என்ன என்பது குறித்து அவரவருக்கு அந்த வேளையில் ஏற்படும் சிந்தனை குறித்தே சொல்ல முடியும்.

ஒரு உதாரணத்திற்கு புத்தர். இப்போது புத்தர் சொன்ன ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது ஒரு தியரி. ஆசை என்பதன் அளவு எது? துன்பத்தின் அளவு எது? என்பதெல்லாம் இங்கே விவரிக்கப்படவில்லை. மிகவும் எளிமையாக சொல்லப்பட்ட கோட்பாடு இது. ஆசையே துன்பத்திற்கு காரணம். இப்போது இந்த சிந்தனை எப்படி புத்தருக்கு எழுந்தது. இப்போது நாம் சொல்லப்போவது கூட ஒரு தியரி தான். ஆனால் உண்மை என்ன என்பது புத்தருக்கு மட்டுமே வெளிச்சம். அரண்மனையில் சுகவாசம் அனுபவித்த புத்தர் வெளியில் சென்று பார்க்கும்போது மக்கள் இன்னல்படுவதை காண்கிறார். அங்கே அவருக்கு எதற்கு மக்கள் இன்னல் படுகிறார்கள் எனும் சிந்தனை எழுகிறது. அதற்கான காரணம் என்னவென பார்க்கும்போது அவருக்கு ஆசை என்ற ஒன்று பிடிபடுகிறது. அப்படியே ஒரு மரத்தடியில் அமர்கிறார். கண்களை மூடி அமர்கிறார். மக்கள் துன்பபடுவது ஆசையின் காரணம் தான் என நினைவில் கொள்கிறார். அதை பின்னர் உலகுக்கு அறிவிக்கிறார். இப்போது இந்த கோட்பாடுதனை சோதனைக்கு உட்படுத்தலாம்.

இரு நபர்கள் எடுத்துக் கொள்வோம். ஒருவர் ஆசையே படாதவர். இருப்பதே போதும் என இருப்பவர். மற்றொருவர் அளவுகடந்த ஆசை கொண்டவர். அது வேண்டும், இது வேண்டும் என அலை பாய்பவர். பொதுவாக எல்லோர் வீட்டில் கணவன், மனைவி இப்படித்தான் இரண்டு துருவங்களாக இருப்பார்கள் என்பது வேறு விசயம். ஆசையே இல்லாதவர் துன்பத்துடன் வாழ்கிறாரா, ஆசை கொண்டவர் துன்பமின்றி வாழ்கிறாரா என அவர்களது வாழ்க்கையை இருபது ஆண்டு காலம் கவனித்து வருவோம். பொதுவாக போதும் என இருப்பவர் துன்பம் கொள்வது இல்லை என்பது ஒருவித தியரி. அதன்படியே போதும் என இருப்பவர் இருபது வருடம் முன்னர் எப்படி இருந்தாரோ அப்படியே தான் இப்பவும் இருப்பார். அதாவது எந்த வித முன்னேற்றமோ, வசதிகளோ, வாய்ப்புகளோ பெருக்காமல், ஏனெனில் அவருக்கு எவ்வித ஆசையும் இல்லை. இருப்பினும் சில தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இவர்  துன்பம் அடைகிறார். இப்போது அவரைப் பொறுத்தவரை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு துர்பாக்கியம் கொண்டவர். ஆனால் அவருக்கோ அப்படி இருப்பதே ஆனந்தம். மற்றவர் அப்படி இல்லை. ஆசையின் காரணமாக போராடி நல்ல வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்கிறார். இதன் காரணமாக அவர் கொண்ட துன்பம் அதிகம். இல்லாது இருப்பவர் போதிய வசதி இல்லாமல் துன்பம் அடைகிறார். இருப்பவர் மேலும் மேலும் வசதிகள் வேண்டுமென துன்பம் அடைகிறார். இப்போது ஆசை கொண்டவரும் துன்பம் அடைகிறார். ஆசை இல்லாதவரும் துன்பம் அடைகிறார். இதன் காரணமாக ஆசை ஒரு காரணி. ஆனால் ஆசை மட்டுமே துன்பத்திற்கு காரணம் இல்லை என இந்த சோதனையின் முடிவில் தீர்ப்பு எழுதப்படும்.

இப்படி கோட்பாடுகளை கொண்டு எழுதப்பட்டுத்தான் முக்காலமும். அந்த கோட்பாடுகளை சொன்னவர்கள் தங்களுக்குள் உணர்ந்து கொண்ட விச யத்தை சொன்னவர்கள் உண்டு. அதே வேளையில் கணிதம், பௌதிகம், பூகோளம் என கணக்கீடு முறையால் இப்படித்தான் இருக்கும் என சொன்னவர்கள் உண்டு. தங்களுக்குள் உணர்ந்து கொண்டு சொன்ன விச யத்தை நிரூபிக்க கதைகள் எழுதலாம். ஆனால் அதை ஒரு சோதனை மூலம் நிரூபிப்பது சற்று இயலாத காரியம். கணக்கீடு முறையால் சொன்ன விசயங்களை சோதனைகள் மூலம் நிரூபிக்கலாம். அப்படி நிரூபிக்க முடியாது போனால் அந்த கோட்பாடு தவறு என்றே முடிவுக்கு கொண்டு வரப்படும்.

இப்படி பல சிந்தனைகளை உருவாக்கும் நரம்பு மண்டலத்தில் எவர் இதற்கான விதைகள் விதைத்தது. உங்கள் வீடு ஒன்று. உங்கள் வீட்டில் இருக்கும் நபர்கள் பல. இப்போது ஒரே விசயம். அந்த ஒரே ஒரு விசயத்தை வீட்டில் இருக்கும் நபர்கள் எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் என பாருங்கள். இந்த சோதனையை வீட்டில் செய்து பாருங்கள். ஒவ்வொருவரும் ஒரு தாளில் எழுதி கொள்ள வேண்டும். பின்னர் அனைவருக்கும் வாசித்து காண்பியுங்கள். சிந்தனைகளுக்கான காரணம் என்னவாக இருக்கும்?

ஒன்று கண்ட, கேட்ட விசயங்களின் நேரடி, மறைமுக பாதிப்பு.  மற்றொன்று எதற்கும் தொடர்பே இல்லாத ஒரு சிந்தனை. இப்படி எதற்குமே தொடர்பே இல்லாத சிந்தனை ஒன்று உண்டா?

மாணிக்கவாசகர் பாடுகிறார்.

சோதியனே துன் இருளே தோன்றா பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஒளியும், இருளும் நீயன்றி எதுவும் இல்லை. தோன்றியவைகளும், தற்போது தோற்றத்தில் இல்லாதவைகளும் நீயன்றி எதுவும் இல்லை. முதலுமாய், முடிவுமாய் என முதலும் முடிவும் இல்லாதவன் நீயன்றி எதுவும் இல்லை.

முக்காலமும் எப்படி மாணிக்கவாசகர் அறிந்தார்?

(தொடரும்) 

Friday 23 March 2012

மௌன நிலை

உன்னைக் கண்டேன் உன்னைக் கண்டேன்
உலகம் மறக்கிறதே - துன்ப
உலகம் மறக்கிறதே

உறங்க மாட்டேன் உறங்க மாட்டேன்
மனசு துடிக்கிறதே - மனசு
கிடந்து துடிக்கிறதே

கனவு இல்லை கற்பனை இல்லை
புரிந்து கொள்வேனா
காதல் இன்றே கனிந்தது என்றே
தெரிந்து கொள்வேனா - மனதில்
உவகை கொள்வேனா

ஆசையை துறந்திட
ஆவல் வந்து பிறந்து மடிகிறதே
நேசம் மட்டும் கொண்டேனென்று
நெஞ்சம் சொல்கிறதே - கண்ணில்
தஞ்சம் கொள்கிறதே.

வாழ்வில் மௌனம் தான் எத்தனை அழகு. இந்த மௌனத்தை கடைபிடிக்க எத்தனை துணிவு வேண்டும். எவரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் உடனடியாய் பேச தோன்றும் நிலையை ஒதுக்கிவிடும் இந்த மௌனம் தான் எத்தனை அழகு.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் எனும் பாடலில் வரும் சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை எனும் வரிகள் போல இந்த மௌனத்திற்கு என்ன விலை கொடுத்து விட இயலும். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்றே அர்த்தப்படுத்தபட்டாலும் மௌனம் பேசும் மொழியை அறிந்தவர் எவரேனும் உண்டா.

இந்த மௌனம் என்ன சொல்ல வருகிறது என அவரவர் ஒன்றை நினைக்கத்தான் வாய்ப்பு உண்டு. இறைவன் மௌனியாகவே இதற்காகவே இருக்கிறானோ! நீ போட்டு வைத்த பாதையில் நான் நடந்து செல்வதை பெருமிதமாக நினைக்கிறேன். பாதை எனக்கு சொந்தமானது அல்ல என்றாலும் கூட.

உன்னை கண்டேன் இறைவா
உறங்க மாட்டேன் என மனசு துடிக்கிறது
எங்கே உறங்கினால் நீ கண்ணில் இருந்து
மறைந்து விடுவாய் என்கிற துடிப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

மௌனமாக உன்னிடம் பேசும்போது
எவருமே என்னை எதுவும் நினைப்பதில்லை
உன்னிடம் பேசுவதாக ஊரெல்லாம்
சொல்லிவைத்தால் ஏதேதோ சொல்லிவிடுவார்கள்.

மௌனம் தான் எத்தனை அழகு. என் மனதில் இருப்பதை இந்த மௌனம் ஒருபோதும் வெளியே சொன்னதும் இல்லை. முக பாவனைகளை கூட மறைத்துவிடும் பாக்கியம் மௌனத்திற்கு உண்டு. மௌனம் அவரவர் மனதிற்கேற்ப சம்மதத்திற்கு அறிகுறி.

உன்னைக் கண்டேன் இறைவா இனி உறங்க மாட்டேன். 

Thursday 15 March 2012

குரான் பேசுமா அறிவியல்

ஒரு நூலினை நாம் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு வித எண்ணம் இருக்கும். ஆனால் ஒரு நூல் பலரால் போற்றப்பட்டு, பலரால் நம்பப்பட்டு வரும் பட்சத்தில் அந்த நூலில் கூறப்படும் கருத்துகளை மறுத்து பேசுவது என்பது நம்பிக்கையாளர்களின் மனம் நோக செய்வதாகும்.

எத்தனையோ அறிவியல் வல்லுனர்கள், முனிவர்கள் எழுதிய நூல்கள் இருந்தாலும், அதிக மக்களால் அறியப்பட்ட நூல் என்றால் பகவத் கீதை, குரான், பைபிள் என்றே சொல்லலாம். இவை மதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டு இருந்தாலும், வாழ்க்கை முறைகளை சொல்வதாகவே கருதப்பட்டு இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் குரான், பைபிள் போன்ற நூல்கள் தங்களது வலிமையை இழக்கத் தொடங்கின என்றாலும் இன்னமும் இந்த நூல்கள் பலராலும் பின்பற்றப்பட்டு போற்றப்பட்டு வருகின்றன. தாய் வழித் தோன்றல்கள், தந்தை வழித் தோன்றல்கள் போல இந்த நூல்கள் இறைவழித் தோன்றல்கள் என்றே கருதப்பட்டு வருவது இந்த நூல்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

தத்தம் இறைவனை நம்புபவர்கள் இந்த நூல்களை ஒருபோதும் எதிர்த்து பேச முற்படமாட்டார்கள். ஆனால் வெவ்வேறு வழிப்பாதை கொண்டவர்கள் ஒரு கொள்கையின் மீது அவதூறு பேசி தமது கொள்கையே சிறந்தது என தமது வழிப்பாதை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது என்றே பெருமை பட்டு கொள்வார்கள். இதில் பகவத் கீதையை நாம் சற்று தள்ளி வைத்துவிடலாம். இதற்கு காரணம் அந்த நூல் அறிவியல் பேசுகிறது என இதுவரை எவரும் சொன்னதில்லை, பகவத் கீதை யோக நிலைகளை பறைசாற்றும் ஒரு இலக்கியம். அதற்கடுத்து பைபிள், இதுவும் அறிவியல் பேசுவதாக எவரும் சொல்வதில்லை. ஆனால் அவ்வப்போது உலகம் அழிவதாக சொல்வதாக சொல்வார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி குரான் அறிவியல் பேசுவதாக பல அறிவியல் அறிஞர்கள் முதற்கொண்டு படித்து தெளிந்த பலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

குரான் அறிவியல் பேசித்தான் அது இறைவன் சொன்னதாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என நினைக்கும் அளவுக்கு குரானின் நிலை சென்று கொண்டிருப்பது வருத்தத்திற்கு உரியது. குரான் அறிவியல் பேச வேண்டிய நிர்பந்தம் தான் என்ன? அது அறிவியல் நூலா, வாழ்வியல் நூலா? என்று இதுவரை அறிந்தது இல்லை.

முகம்மது நபிகள் படிக்காதவர், அவருக்கு இத்தனை ஞானம் எப்படி வந்திருக்கும், எனவே குரான் இறைவன் சொன்னதுதான் என்று ஒரு வாதம் வேறு. படிக்காதவர்களை இப்படி எல்லாம் இழிவு படுத்தி இருக்க வேண்டாம். அதே படிக்காத நபிகள் தான் நபிகள் வாக்கு என சொல்லி இருப்பதாகவும் இருக்கிறது. படிக்காத ஒருவர் எப்படி அப்படியெல்லாம் அழகிய வாக்குகள் சொல்லமுடிந்தது என எவரேனும் நினைப்பாரில்லை. குரானும், நபிகள் வாக்கும் பிரித்தே கையாளப்பட்டு இருக்கிறது என்பதுதான் வரலாறு. மேலும் படிப்பறிவு என்பது எதை வைத்து சொல்வது என்பதையும் எவரும் அறிந்தாரில்லை. குரான் எழுதப்பட்டதாக சொல்லப்படும் காலகட்டங்களில் அரேபிய நாடுகள் அறிவியலில் செழித்தோங்கி இருந்தன. அதன் விளைவாக கூட சில வசனங்கள் குர்ஆனில் வைக்கப்பட்டு இருக்கலாம், எனினும் குரானின் நோக்கம் அறிவியல் பேசுவதா?

எனது நண்பர் ஒருவர் சொன்னார், குரான் மட்டுமே அறிவியலுக்கு நெருக்கமாக பேசுகிறது என. நான் அவரிடம் கேட்டேன். நீங்கள் குரான் முழுவதும் படித்து விட்டீர்களா என! இல்லை என்றார். ஒரு நூலை அணுகும் முன்னர் வெளிப்படையான மனம் இல்லை என்றால் அந்த நூலில் நாம் தேடுவது இருக்கிறதா என்றுதான் கண்கள் போகும். அப்படி ஒன்று இருந்துவிட்டால் சாதகம் எனில் சாதகமும், பாதகம் எனில் பாதகமும் என நமக்கு வசதிக்கு ஏற்ப நாம் எழுதுவோம்.

ஆனால் மனதை நிர்மூலமாக்குதல் என முன்னோர்கள் சொல்லி வைத்து இருக்கிறார்கள். அதாவது குரான் ஒரு நூல் மட்டுமே. இப்போது முகம்மது நபிகள் ஒரு இறைத்தூதர், அந்த நூல் முகம்மது நபிகளுக்கு இறைவன் சொன்னது என்பதெல்லாம் இரண்டாம் நிலை. இந்த இரண்டாம் நிலை எல்லாம் நாம் அறிந்து கொண்டு அந்த நூலினை அணுகும்போது நமது மனநிலை, ஒன்று இறைவன் மீது நம்பிக்கை உள்ளவராக இருந்தால் நேசத்தோடும், இரண்டாவது இறைவன் மீது நம்பிக்கையற்றவர்களாக இருந்தால் வெறுப்போடும் அணுகத் தோன்றும். இது மனித இயல்பு. எந்த ஒரு முதல் புத்தகமும், எழுதுபவருக்காக வாங்கப்படுவதில்லை. ஆனால் அதற்குப்பினர் அந்த நபரால் எழுதப்படும் புத்தகங்கள் அவருக்காகவே வாங்கப்படும் நிலை ஏற்படுகிறது. ஆனால் அந்த நிலை எல்லாம் குரானுக்கு இல்லை. குரான் நம்பிக்கைகளின் வெளிப்பாடு.

எனக்கு ஒரு நண்பர் அரபு வசனங்கள் கூடிய தமிழ் வசனங்கள் கொண்ட குரான் தந்தார். முதலில் படிக்கும்போது எதற்கு இறைவன் இப்படி நபிகளிடம் சொன்னார், இதை எல்லாம் இறைவன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றே தோணியது. எப்போது மனதை நிர்மூலமாக்குகிறேனோ அப்போது குரான் வாசிக்கிறேன் என நண்பரிடம் சொன்னேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே உங்களால் மனதை இனிமேல் நிர்மூலம் ஆக்க முடியாது. இதை செய்ய வேண்டும் எனும் அணுகுதல் இருக்கும்போது அதை செய்து விட்டோமா என சரி பார்க்க தோன்றும், எனவே மனதை நிர்மூலமாக்குதல் அவசியம் இல்லை. இறைவன் தந்ததாகவே படியுங்கள் என்றார். அந்த மன நிலை இப்போது இருக்கிறது என்றே கருதுகிறேன். அறிவியல் மூலம் மேலும் பல விசயங்கள் அறிந்து கொள்ளவே விருப்பம் உண்டு, அதுபோலவே இந்த குரானும்.

குரான் - இறைவன் தந்தது.


ஆமாம், குரானை எழுத சொன்னவரே இறைவன் சொன்னதாய் சொன்னது. 

Sunday 4 March 2012

இறைவனும் இறை உணர்வும் - 4

பகுதி - 3 

'என்ன திடீரென அமைதியாக இருக்கிறாய், உன்னை நினைத்து நாங்கள் வருத்தப்பட்டு கொண்டிருந்தோம்' என்றார் சக தொழிலாளி. 

'இறைவனிடம் மனம் லயிக்கும் போதெல்லாம் இவ்வாறு ஆகிவிடுவேன், எதற்கு இந்த வாழ்க்கை, எதற்கு இந்த போராட்டம், எதற்கு மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள், இந்த உலக வாழ்க்கையில் இருந்து எப்படி தனித்து கொள்தல், வாழ்வின் ஆதாரம், வாழ்க்கையின் இயல்பு, இருப்பு என்பதெல்லாம் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவேன், அதுதான் காரணம்' என்று நான் சொன்னதும் என்னை சக தொழிலாளி வித்தியாசமான பார்வையில் பார்த்தார். 

நான் சொன்னதில் அதுதான் உண்மையா? இந்த உண்மை குறித்தும், உண்மை வேறு, நம்பிக்கை வேறு என்பது குறித்தும் முன்னரே எழுதிவிட்டேன். மீண்டும் அதே இடத்துக்கு செல்ல விருப்பம் இல்லையெனினும் நான் மேற்சொன்ன வாக்கியங்களை திரும்பவும் யோசிக்கிறேன். நான் உண்மையிலே அதற்காகத்தான் அப்படி அமைதியாக இருந்தேனா? இல்லை என்று மட்டுமே தோன்றுகிறது. நான் எதற்காக அமைதியாக இருந்தேன் என்பது குறித்து என்ன சிந்திப்பது, ஆனால் அந்த நேரத்தில் வந்து விழுந்த வார்த்தைகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தன. சமயோசித வார்த்தைகள், எதற்கு பேசுகிறோம், பிறரிடம் பேசி அதன் மூலம் என்ன ஆதாயம் தேட நினைக்கிறோம் என்பதெல்லாம் நினைத்து கொண்டிருக்க சமீபத்தில் நண்பர் ஒருவர் மனப்புழுக்கத்தை இங்கே கொட்டி தீருங்கள் என ஒரு பொது மன்றத்தில் எழுதி வைக்க அதைப் படித்ததும் எனக்கு மூன்றே வாக்கியங்கள் எந்த ஒரு சிந்தனையும் இன்றி வந்து விழுந்தது. 

அற்றதெனினும் உற்றதாய் கேட்டு உவகை கொள்ளச் செய்வான் எம்பெருமான் 
சொற்றொடர் கொண்டு வருவோர் போவோரிடம் சொல்லித்திரிமின்
கற்றதனால் என்ன பயன், நன்று இல்லையெனின் அன்றே மற.

இந்த வாக்கியம் எழுதிய பின்னர் சில நாட்களாக யோசனை. எதற்கு இந்த வாக்கியம் வந்து விழுந்தது. மனிதர்கள் தங்கள் கவலைகளை, தங்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை, துரோகங்களை  பிறரிடம் பரிமாறிக்கொள்ளும் போது ஆறுதலான வார்த்தைகளும், நம்பிக்கை தரும் வார்த்தைகளும் கிடைக்கும் பட்சத்தில் மனிதர்கள் தங்கள் கவலைகளை தூக்கி எறிந்து விட்டு வாழ இயலும் என்கிற தொனியில் தானே நண்பர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இப்படி எல்லாம் சொல்ல வேண்டாம், எம்பெருமானிடம் சொல்லுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என சொல்வதன் அர்த்தம் என்ன எனும் சிந்தனை வலுப்பெற்றது. 

நமது மனது நமது கட்டுபாட்டில் இருக்க வேண்டும். நாம் ஒருவரே நம்மை ஆறுதல் படுத்த முடியும், பிறரது வார்த்தைகள் நமக்கு முள்ளாகவோ, மெத்தையாகவோ இருக்க நம்மால், நமது எண்ணத்தால்  மட்டுமே இயலும். நண்பர்கள் நமக்கு முக்கியம், உறவுகள் முக்கியம். ஆனால், தவறாக எடுத்து கொள்ளாதீர்கள், பெரும்பாலனவர்கள் ஏதாவது ஒரு சூழலில் பிறரை எள்ளி நகையாடும் மனப்போக்கைத்தான் கடைப்பிடித்து வருகிறோம். நகைச்சுவைக்காகவேனும் நாம் பிறரின் செயல்களை நம்மிடம் மதிப்பு கொடுத்து பேசியதை குறிப்பிட்டு கேலி பேசிவிடுவோம். இதனால் தான் இறைவன் என்பவர் இங்கே வருகிறார். 

அற்றதெனினும் உற்றதாய் கேட்டு! இங்கே எனக்கு இந்த இரண்டு வார்த்தைகளில் அற்றது என்பது என்ன பொருள் என தெரியாது. ஆனால் உற்றது என்பதற்கு அற்றது எதிர்பதமாக இருக்கலாம் எனும் ஒரு நினைவில் வந்து விழுந்த வார்த்தைகள் அது. அப்படி இறைவனிடம் நமது குறை நிறைகளை சொல்லும்போது நம்மை உவகை கொள்ள செய்வான். நாம் நம்மை தேற்றி கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு இதன் மூலம் வரும், வர வேண்டும். 'கடவுள் மீது பாரத்தை போட்டுவிடு' என எதற்கு சொன்னார்கள். அவன் நமது பாரத்தை எல்லாம் சுமப்பான் என்றா? இல்லவே இல்லை, நமது பாரம் நம்மில் இருந்து இறங்கி நாம் சுகமாகிவிடுவோம் என்பதை அறிந்தே அப்படி சொன்னார்கள். இது எத்தனை பேருக்கு உண்மையாக நடக்கிறதோ எனக்கு தெரியாது, ஆனால் இறைவனே கதி என நமது பணியை நாம் செய்து கொண்டிருப்பது ஆனந்தத்திலும் ஆனந்தம். 

முதன் முதலில் பேரின்பத் தழுவல்கள் கவிதையை எழுத நினைத்தபோது இப்படித்தான் முதல் கவிதை வரிகள் வந்து விழுந்தது. இப்போதும் யோசித்து பார்க்கிறேன், அந்த கவிதைகள் எல்லாம் எழுதிய தருணத்தில் எனது உணர்வுகள் எல்லாம் எப்படி இருந்தன. அதுதான் இறை உணர்வா என்றெலாம் யோசிக்க இயலவில்லை. 

பொய் சொல்ல நினைத்தபின் இதில்
உண்மை உரைந்திருக்கும் என ஒருவரேனும்
நினைத்து ரசிப்போர் இப்பாரினில் உளரேனெனில் 
உன்னையன்றி வேறு எவர் இறைவா? 

அடுத்து எழுதிய ஐந்தாம் கவிதையில் 

உன்புகழ் பாடிட எண்ண வரம்வேண்டுமென 
கேட்டிட வெகுளியாய் ஒதுங்கி 
படிதாண்டி வந்துன் அருட்கரம் பற்றியதும்
வேண்டுதல் ஏதுமில்லை இறை வா. 

இப்போது நினைத்தால் கூட கண்கள் கலங்குகிறது. எவர் என்னை இப்படியெல்லாம் எழுதச் சொன்னது. எனக்கு என்ன அப்போதைய இந்த எண்ணத் தேவை இருந்தது. மிகவும் மதிப்பிற்குரிய நண்பர் அப்போதே கேட்டார். என்னவா? எண்ணவா? இறை வா!  

இதெல்லாம் நடந்த காலம் என பார்த்தால் இரண்டு மூன்று வருடங்கள் முன்னர் என்றே நினைக்கிறேன். அதற்கு பின்னர் இந்த இறைவன் எனும் பற்றுதல் விட்டு சற்று விலகியது போன்றே ஒரு உணர்வு. உண்மையிலேயே ஒதுங்கியா இருந்தேன்? அல்லது அப்போதும் இதே மன நிலைதானா? அடுத்து சில நாட்கள் பின்னர் எழுதிய கவிதை இப்படித்தான் வந்து இருந்தது. 

பற்றிய கரம்தனை விட்டே தவித்து
சுற்றியே இடங்கள் தேடி கொற்றவன்
தன்புகழ் ஏற்றிட மக்கள் காப்பதுபோல் 
உன்புகழ் ஏற்றிட  ஏதுசெய்தாய்.  

இப்படியெல்லாம் இருந்து கொண்டிருக்க சக தொழிலாளியிடம் பேசிய தினத்தன்று இரவில் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பிற மதத்தினரில் இருந்து ஒரு சிலரை தேர்ந்தெடுத்து அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்க எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதுதான். அதில் சில முஸ்லீம்கள், சில கிருத்துவர்கள் என இருந்தார்கள். இதில் ஒரு முஸ்லீம்  தினமும் மசூதிக்கு சென்று ஐந்துமுறை தொழுகை செய்யக் கூடியவர். மற்றொரு முஸ்லீம்  இந்த தொழுகை எல்லாம் அத்தியாவசியம் இல்லை என கருதக்கூடியவர். இப்படி இருக்க அந்த தொழுகை செய்யக்கூடிய முஸ்லீம்தனை தங்களுடன் வெளியே செல்ல அழைக்கிறார்கள். அவர் செல்லும் இடத்தில் மசூதி எல்லாம் இல்லை. முதலில் மறுக்கிறார், எல்லாரும் வற்புறுத்துகிறார்கள். மற்றொரு முஸ்லீம் கூட 'நீ செய்வது சரியில்லை' என்கிறார். சரி என இறுதியாக தொழுகை செய்யும் முஸ்லீம் வெளியில் செல்ல சம்மதம் சொல்கிறார். ஒரு இடத்துக்கு செல்கிறார்கள். 

அங்கே ஒரு நிகழ்வு நடக்கிறது. அனைவரும் ஆங்காங்கே பேசி கொண்டிருக்க 'தொழுகை நடத்தும் முஸ்லீம்' ஒரு பாயை விரித்து அதன் மீது அமர்ந்து ஒரு திசையை நோக்கி தொழுகை செய்கிறார். இதைக் கண்ட ஒருவர் கண்கள் கலங்குகிறது. இறைவன் மீது எத்தனை அலாதிப் பிரியம் இருந்தால் தன்னுடன் இருப்பவர்களின் மீது மனம் நோகாமல், பயணத்திற்கும் வந்து அதே வேளையில் இறைவனை விடாமல் தொழும் அந்த மனிதரை கண்டு பலரும் நெகிழ்ந்து போகிறார்கள். ஒரு நண்பர் எழுதியது நினைவுக்கு வருகிறது. 'மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார்'. தொழுகை செய்யும் முஸ்லீமிடம் சொல்கிறார்கள். வாழ்க்கையில் பலர் தங்களது கொள்கையில் வறட்டு பிடிவாதம் கொண்டிருப்பதால் பிணக்கங்கள் ஏற்படுகிறது என. 'விட்டு கொடுப்பவர் கெட்டுப் போனதில்லை' என்கிறார்கள். இதே தொழுகை செய்யும் முஸ்லீமை எதற்கு அவர்கள் விட்டு கொடுத்திருக்க கூடாது எனும் எண்ணம் எழலாம். இருப்பினும் இதெல்லாம் தாண்டி அவர் கொண்டிருந்த இறைவன் மீதான பற்று என்னை நிறையவே சிந்திக்க வைத்துவிட்டது. மேலும் ஒரு நிகழ்வில் அந்த மனிதர் சொன்ன எல்லாதரப்பட்ட மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வில் நாம் தவறுகள் செய்வது வாடிக்கை, ஆனால் மன்னித்து நடந்து கொள்ளும் மனப்பான்மை நமக்கு வேண்டும், அதைத்தான் இறைவன் சொல்கிறார் என நினைவு கூர்ந்தது கண்டு இப்படி எல்லாரும் எல்லா நேரங்களிலும் நடந்து கொண்டால் எத்தனை சுகமாக இருக்கும் என்றே நினைக்க தோணியது. மேலும் நிறைய நிகழ்வுகள் மனதில் நிழலாடியது. மீண்டும் இறைவனிடம் நெருங்கி செல்ல இயலுமா என நினைத்து கொண்டிருக்கும்போதே உன்னுள்ளே தான் நான் எப்போதும் இருக்கிறேன் என மனம் கட்டி கொண்ட இறைவனை பற்றி என்ன என்னால் சொல்லிவிட முடியும். 

'தெளிவின் நிலைக்கு சென்றவன் தெளிதல் எளிதில்லை என திரும்பி விடுவானோ' எனும் அச்சம் இனி எனக்குத் தேவையில்லை என்றே கருதுகிறேன். 

(தொடரும்)




Tuesday 21 February 2012

மஹா சிவராத்திரியும் வில்வ மரமும்

பதினோராம் வகுப்பு படிக்க சென்ற போது ஒரு பாடல் என்னை மிகவும் அதிகமாக சிந்திக்க வைத்தது. அந்த பாடல் பாடிய பின்னரே பள்ளி தொடங்கும். அந்த பாடல் சிவபெருமானின் பெருமையை பற்றி பேசுகிறது என்பதெல்லாம் அந்த கணத்தில் எனக்கு தெரியாது.

உலகமெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

அன்றைய தினத்தில் இந்த பாடலானது பெரியபுராணத்தில் சேக்கிழாரால் எழுதப்பட்டது என்பது தெரியாது. பின்வரும் நாளில் கூட பெரியபுராணமோ, பன்னிரு திருமறைகளோ படிக்க வேண்டும் எனும் முயற்சி ஒருபோதும் எடுத்தது கிடையாது. திருவாசகம் இளையராஜாவின் சிம்பொனி இசையில் வந்தபோது கேட்டு மகிழ்ந்தது உண்டு. அப்போதுதான் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதன் அர்த்தம் புரிந்தது.

அதிலும் புல்லாகி பூடாகி எனும் வரிகள் மொத்த பரிணாமத்தையும் அசைத்து பார்த்துவிட்டு போகும். பல்விருகமாகி, பறவையாய் பாம்பாகி. எப்படியெல்லாம் சிந்தனைகள் வந்து குவிந்துவிடுகின்றன. புராணங்கள் மூலம் சொல்லப்பட்ட சிவன் பற்றிய கதைகள் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவை சொல்லும் ஒவ்வொரு விசயங்களும் மனதில் ஒரு சிந்தனையை எழுப்பாமல் போவதில்லை, அது நேர்மறை சிந்தனையா, எதிர்மறை சிந்தனையா என்பது சிந்திப்பவரை பொறுத்தே அமைகிறது.

நான் ஒரே ஒரு விசயத்தில் மிக மிக தெளிவாக இருக்கின்றேன். சிவன், பிரம்மன், விஷ்ணு எல்லாருமே மனிதர்கள். ஒன்று இவர்கள் வாழ்ந்து இருக்கலாம், அல்லது இவர்கள் படைக்கப்பட்டு இருக்கலாம். எவர் இந்த புராணங்கள் (வியாசர் என்றே சொல்கிறார்கள்) எல்லாம் தொகுத்து எழுதினாரோ அவருக்கே எல்லாம் வெளிச்சம். அதைப்போலவே அந்த அந்த காலகட்டத்தில் சொல்லப்பட்ட விசயங்கள் எல்லாம் உண்மையிலேயே நடந்தனவா என்பதை ஆராய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. சொல்லப்பட்ட விசயங்களில் என்ன நீதி சொல்லப்படுகிறது என்பதை காண்பது மட்டுமே அறிவு என்றாகிறது.

கிருஷ்ணர் பற்றி நான் எழுதியதை வீட்டில் சொன்னதும் 'திமிர் பிடித்தவன்' என்றே என்னை சொன்னார்கள். உண்மையிலேயே யோசித்து பார்க்கிறேன், அத்தனை அகங்காரமா எனக்கு? தெய்வங்களாக போற்றப்படுபவர்களை நிந்திக்கும் அவசியம் எனக்கு எதற்கு வந்தது? நான் என்னை ஒருபோதும் ஆத்திகன் என்றோ, நாத்திகன் என்றோ நினைத்து கொள்வதில்லை. ஆனால் எனக்கு இறைவன் மிக மிக பிடிக்கும்.

நேற்று ஆலயத்திற்கு செல்கிறேன். மக்கள் அலைகடலென திரண்டு இருக்கிறார்கள். ஆலயத்தின் உள்ளே செல்லக்கூட இடம் இல்லை. சட்டென மனதில் நினைவுக்கு வருகிறது. அடடா, மஹா சிவராத்திரி. அத்தனை பக்தர்கள் கண்டு மனம் ஆனந்தம் கொள்கிறது. நான் நேற்று மீள்பதிவிட்ட பதிவினை நினைத்து  எனக்கே வெட்கமாக வருகிறது.  அலங்காரம் செய்யப்பட தெய்வ சிலைகள் கண்டு மனம் பூரிப்பு அடைகிறது. எங்கே எனது சிந்தனைகள். எனக்குள் எழுந்த எதிர்மறை சிந்தனைகள் எல்லாம் ஓடி ஒளிகின்றன.

பூஜைகள் நடந்து கொண்டிருக்க ஒருவர் சொற்பொழிவு செய்கிறார். நீங்கள் குரங்கு தெய்வம், மாடு தெய்வம் என விலங்குகளை எல்லாம் தெய்வமாக கொண்டாடுகிறீர்களே நீங்கள் செல்லவேண்டியது மிருககாட்சி சாலை, கோவில் அல்ல என்று ஒருவர் சொன்னாராம். அதற்கு விலங்குகளையும் மதித்து போற்றும் மனப்பான்மை உடையவர்கள் நாங்கள் என்பதில் எங்களுக்கு பெருமை உண்டு எல்லா உயிரினங்களையும் போற்றும் தன்மை படைத்தவர், நன்றியுடன் நடந்து கொள்பவர் இறைவனுக்கு சொந்தமானவர் என பதில் அளித்தாராம்.

அதற்கடுத்து சிவராத்திரி பற்றிய விசயங்களை பேசியதை கேட்டதும் எனக்கு இந்த மஹா சிவராத்திரி பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என ஆவல் பிறந்தது. அதிலும் குறிப்பாக வில்வ மரம் பற்றியும், தனக்கே தெரியாமல் அர்ச்சனை செய்து கொண்டிருந்த ஒருவர் பற்றி கூறியதும் சிவராத்திரி பற்றி தேடி பார்த்தேன். பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இருந்தது.

இந்த மஹா சிவராத்திரியானது வருடத்திற்கு ஒருமுறை வில்வ இலைகளால் சிவனுக்கு  பூஜை செய்யப்பட்டு இரவெல்லாம் விழித்து இருந்து, விரதம் இருந்து வழிபடுவதாகும். இது கிருஷ்ண பக்ச தினத்தில் நடைபெறுமாம். வருடா வருடம் இந்த நாள் மாறி மாறி வரும். இந்த மஹா சிவராத்திரியானது பெண்களால் தங்களது கணவர்மாரும், மகன்களும் நலமுடன் இருக்க வழிபடும் தினமாம். சிவனின் மனைவி பார்வதி தேவியார் அமாவாசை அன்று (இன்றுதான் அமாவாசை) தனது கணவருக்கும், குமாரர்களுக்கும் வழிபட்டதாக சொல்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் பாற்கடலை கடைந்தபோது பாம்பானது கக்கிய விஷம் உலகெலாம் பரவி அனைத்து உயிரினங்களையும் அழித்துவிடும் அபாயம் ஏற்படும் நிலை வந்தபோது 'அழிக்கும் கடவுள்' என போற்றப்படும் சிவன் 'காக்கும் பணியை' எடுத்து கொண்டு அந்த விஷத்தை தானே அருந்திய செயலை கண்டு வெகுண்ட பார்வதி தேவியார் 'பாச கயிற்றால் சிவனின் கழுத்தை பிடித்து நிறுத்த' அந்த விஷமானது அப்படியே நிற்க அந்த தினத்தை மஹா சிவராத்திரியாக கொண்டாடுகிறார்கள் என்பது ஒரு ஐதீகம்.

பிரளயம் என்று ஒன்று புராணங்களில் அதிக அளவு சொல்லப்பட்டு வருகிறது. இந்த பிரளயங்கள் ஏற்படும்போதெல்லாம் ஒரு யுகம் அழிந்து மறு யுகம் தோன்றுவது இயற்கை. அப்படி யுகங்கள் அழிந்து மறுபடியும் யுகம் தோன்றும்போது எல்லாம் அழிந்துவிட்டால் மீண்டும் உருவாக்குவது கடினம் என்பதால் சில விசயங்கள் மட்டும் பாதுக்கக்கப்படும். அப்படி பிரளயம் உருவானபோது சிவனை வழிபடுவோர் இந்த பிரளயத்தில் சிக்காமல் காக்கப்படுவது வாடிக்கை. இங்கே சிவன் அழிக்கும் தொழில் செய்பவரா? காக்கும் தொழில் செய்பவரா என்பது சிந்திக்க வேண்டியது. கெட்டதை அழித்து நல்லதை காக்கும் தெய்வமாகவே சிவனின் செயல்பாடுகள் இருக்கின்றன.

சித்ரபானு எனும் அரசர் தனது மனைவியுடன் சேர்ந்து விரதம் இருந்து சிவனை மஹாசிவராத்திரி அன்று வழிபட்டார்கள். எதற்காக இப்படி வழிபாடு செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அரசவைக்கு வந்திருந்த அஷ்டவக்ரா எனும் முனிவர் கேட்க சித்ரபானு சொன்ன கதை என கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அர்ஜூனன் எப்படி கண்ணனிடம் 'நீ இப்போதுதானே பிறந்தாய், ஆனால் எப்படி சூரியபகவான் மகனுக்கு பகவத் கீதையை சொன்னாய் என கேட்கும்போது' கண்ணன் 'நான் எல்லா பிறப்புகளின் நினைவுகளையும் சுமந்து கொண்டிருப்பவன், ஆனால் நீயோ மற்ற மனிதர்களோ ஒரே ஒரு பிறப்பு மட்டுமே நினைவில் இருக்கும் என்கிறான்'

அதுபோலவே சித்ரபானு தனது முற்பிறவியில் நடந்த விசயங்கள் தனக்கு நினைவில் இருப்பதாக கூறி தான் ஒரு வேட்டைக்காரன் என்றும், பறவைகள், விலங்குகள் என வேட்டையாடி திரிபவனாக வாழ்ந்தேன் என்றும் கூறுகிறான். அப்போது அவனது பெயர் சுஸ்வரா. இவ்வாறு வேட்டையாட சென்ற ஒரு தினம் மானை கொல்ல நினைக்கையில், அந்த மான், அதன் குடும்பத்தின் நிலை கண்டு கொல்லாமல் விட்டுவிடுகிறான். எங்கும் தேடியும் வேறு விலங்குகள் கிடைக்காமல் போக இருள் சூழ்ந்து கொள்கிறது. அது அமாவாசை தினம். அப்போது தன்னை இரவில் காத்து கொள்ள ஒரு மரத்தின் மீது ஏறிக்கொள்கிறான். தன்னிடம் இருந்த தண்ணீர் பானையில் இருந்த சிறு ஓட்டையால் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சம் கொட்டிக்கொண்டு இருந்தது. தனக்கு பசியும் தாகமும் வேறு. இந்த இரு நிலைகள் கொண்டிருந்தால் எப்படி உறக்கம் வரும் என்கிற நிலையோடு, உறங்கினால் கீழே விழுந்துவிடுவோம் என்கிற அச்சம் வேறு. தான் உறங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளை கிள்ளி கீழே போட்டுக்கொண்டே இருக்கிறான். காலை வந்ததும் பசியோடு காத்து இருக்கும் தனது மனைவி குழந்தைகளுக்கு உணவு எடுத்து செல்கிறான். உணவு உண்ணும் தருவாயில் 'எனக்கு உணவு போடுங்கள்' என ஒருவர் வந்து கேட்க தங்களுக்கு இருக்கும் உணவில் அவருக்கு  பகிர்ந்து தருகிறான்.

இப்படி வாழ்ந்த சுஸ்வரா மரணம் அடையும் தருவாயில் அவனை சிவலோகத்திற்கு அழைத்து செல்ல தேவர்கள் வருகிறார்கள். தேவர்கள் சுஸ்வராவிடம் நீ ஒரு இரவில் வில்வ மர இலைகளை மரத்தின் கீழ் இருந்த லிங்கம் மீது போட்டு பூஜித்தாய், உனது பானையில் இருந்த நீர் லிங்கம்தனை கழுவியது. அந்த இரவு முழுவதும் உணவு அருந்தாமல் இருந்தாய்.  எனவே உன்னை சிவலோகம் அழைத்து செல்ல வந்திருக்கிறோம் என்றார்கள். தனக்கு தெரியாமலே சிவனை பூஜை செய்த தனக்கு இத்தனை பெரிய பாராட்டா என சுஸ்வரா ஆச்சர்யம் கொள்கிறான். அதற்கு பின்னர் பல வருடங்கள் கழித்து சித்ரபானுவாக அவன் பிறந்தான். அந்த நாள் நினைவில் இருந்ததால் நானும் எனது மனைவியும் பூஜை செய்கிறோம் என சொன்னான் சித்ரபானு. அப்படித்தான் இந்த மஹா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

இந்த மஹா சிவரத்திரியானது மூன்று மணிநேரம் என நாலு கால பூஜைகள் என நடைபெறும். அப்போது வில்வ இலைகளால் சிவனுக்கு அபிசேகம் செய்வார்கள். முதல் காலத்தில் பால் அபிசேகம், இரண்டாம் காலத்தில் நெய் அபிசேகம், மூன்றாம் காலத்தில் தயிர் அபிசேகம். நான்காம் காலத்தில் தேன் அபிசேகம். நான்காம் கால பூஜை முடிந்ததும் அந்தணர் ஒருவருக்கு அன்னமிட்டு விரதம் முடித்து கொள்வது சிறப்பு என்றே சிவனே சொல்வதாக அமைந்து இருக்கிறது. இந்த மஹா சிவராத்திரி பிப்ரவரி மார்ச் மாதங்களில் வரும்.

வில்வ மரம் மருத்துவ குணங்கள் உடையது. இந்த மரத்தின் பழங்கள் மருத்துவ தன்மை உடையதாகும். வில்வ பழம்தனை காயவைத்தோ அப்படியேவோ சாப்பிடலாம். இந்த பழம் வர கிட்டத்தட்ட பதினோரு மாதங்கள் ஆகும். இந்த பழத்தின் ஓடு மிகவும் கடினத்தன்மை உடையது. மரத்தின் கீழ் நிற்கும்போது இந்த பழம் தலையில் விழுந்தால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. வில்வ பழம் மூளைக்கும், இதயத்திற்கும் நல்லதாம். காசநோய், வயிற்றுபோக்கு, வயிருவலி போன்றவைகளுக்கு நல்லதாம். வில்வ பழத்தில் ரிபோப்லவின் நிறைய உண்டு. இந்த மரத்தின் வேர்கள் மருத்துவ குணங்கள் உடையதாகும். பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை உடையதாம் மற்றும் அலர்ஜி, வீக்கங்கள், காயங்களை சரிபடுத்தும் பாங்கு இந்த வேர்களுக்கு உண்டு. தமிழ் சித்தர்கள் இந்த மரத்தை கூவிளம் என்றே அழைத்தார்கள்.

இந்த வில்வ மரத்தை இந்துக்கள் வெகுவாக போற்றுகிறார்கள். எனது வீட்டில் கூட வில்வ மரங்கள் உண்டு. அவை போன்சாய் மரத்தை போன்றே வளராமல் அப்படியே இருக்கிறது. இதுவரை அவை பழங்கள் தந்தது இல்லை. நான் மஹா சிவராத்திரி கொண்டாடினால் இந்த வில்வ மரம் பழங்கள் தர சிவன் மனம் வைப்பாரோ?!

Wednesday 31 August 2011

அஹம் பிரம்மாஸ்மி அப்படின்னா

எதற்கு ஒரு நிகழ்வு நடக்கிறது என்பதற்கான பரிசோதனை ஒன்றை நடத்திப் பார்த்தோமானால் அது நமது எண்ணங்களினால் கட்டப்பட்ட ஒரு விசயம் என ஒதுக்கிவிட இயலவில்லை. அதனையும் தாண்டிய ஒரு உணர்வு ஒன்று இருந்து கொண்டே இருக்கும், அது என்னவென விளக்கவும் இயலாது. அதனை விளங்கிக் கொள்ளும் பொருட்டு நமது முயற்சியில் வெற்றி கிடைத்தால் இந்த 'அஹம் பிரம்மாஸ்மி' வந்து அங்கே நிற்கும்.

ஒரு மனிதன் பிறந்த பின்னர் கடவுளை உணர்கிறாரா? அல்லது மனிதன் பிறக்கும் முன்னரே கடவுளை உணர்ந்து இருக்கிறாரா? அல்லது அந்த மனிதன் இறந்த பின்னரும் கடவுளை உணர்ந்து கொண்டிருக்கிறாரா? 

மேற்குறிப்பிட்ட இந்த மூன்று கேள்விகளை சிந்தித்துப் பார்த்தால் மனிதன் உயிரோடு இருக்கும்போது மட்டுமே கடவுளை உணர்வதாகத்தான் பலரும் அறிவார்கள், பலரும் புரிந்து கொள்வார்கள். ஆனால் 'அஹம் பிரம்மாஸ்மி' எனும் சொல்லானது இந்த மூன்று கேள்விக்கு பதிலாக அனைத்து நிலைகளிலும் கடவுள் உணரப்பட்டு கொண்டேதான் இருக்கிறார் என்பதாகும். 'உணர்வற்ற நிலையிலும் உன்னை உணர்வதற்கு நிகரேது' இதுதான் ஒரு கவிதையில் கடவுள் குறித்தான சிந்தனை எனக்குள் எழுந்தது. 

இதைத்தான் மாணிக்கவாசகர் 'எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்' என்கிறார். இவ்வுலகம் என்பது உயிரினங்களுடன், உயிரற்ற பொருள்களினாலும் ஆனது. ஒரு உயிர் எப்படி படைக்கப்பட்டு இருக்கும், அல்லது உருவாகி இருக்கும் எனப் பார்த்தால் நிச்சயம் உயிரற்ற பொருள் ஒன்றில் தான் இந்த உயிர் இருந்து இருக்க வேண்டும் என இந்த ஒரு விசயத்தை தெளிவுப்படுத்திக் கொண்டோமானால் 'அஹம் பிரம்மாஸ்மி' மிகவும் தெளிவாகும். 

'தோன்றாப் பெருமையனே' என கடவுளை விளிக்கும் பொருட்டு இவ்வுலகில் கடவுள் தோன்றவே இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வேளையில், 'தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்' எனும் வாசகமானது கடவுள் தோன்றவில்லை என்பதை மிகவும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம், அதே வேளையில் கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். அந்த தெளிவு கொண்டுவருவதுதான் 'அஹம் பிரம்மாஸ்மி' 

'அஹம் பிரம்மாஸ்மி' ஒருவர் தன்னைத்தானே கடவுள் என சொல்லிக்கொள்ளும் விதம்தனை அகந்தை என கொள்வோர் உண்டு. காரணம் கடவுள் என்பதற்கான விளக்க நிலைகள் வெவ்வேறு. ஒரு மனிதர் கடவுள் ஆக இயலாது, ஆனால் கடவுள் மனிதரில் இருப்பது என்பதை மாற்ற இயலாதது. இந்த ஒரு தெளிவு கிடைத்துவிட்டால் அதுதான் 'அஹம் பிரம்மாஸ்மி' 

மேலே எழுதிய பல விசயங்கள் தெளிவு தருவது போல் இருக்கும், ஆனால் சில தினங்களில் அந்த தெளிவு தொலைந்து போகும், இதுதான் வாழ்க்கையின் மாபெரும் சூட்சுமம். 'தெளிந்த பின், தெளிந்ததில் தெளிவில்லை என திரும்புவானோ' இந்த வாசகம் ஒரு கதையில் நான் ஒரு கதாபாத்திரத்திற்கு வைத்தது. இது எல்லாருக்கும் பொருந்தி போகக்கூடும்!

ஒரு எழுத்தாளர் எப்பொழுது வெற்றி பெறுகிறார் என்றால் வாசிக்கும் வாசகர் தன்னை அந்த எழுத்தில் தன்னை வைத்து பார்க்கும்போதுதான் என சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே அந்த நிலையானது ஒரு இருள் நிலை தான். ஆனால் வாசகர் தனது மனதில் அந்த அந்த சூழலாகவோ, கதாபாத்திரமாகவோ மாறுகிறார். இங்கே வருவதுதான் 'அஹம் பிரம்மாஸ்மி' . வாசகர் நிச்சயமாக அந்த கதாபாத்திரமாக மாற இயலாது, ஆனால் அந்த கதாபாத்திரம் அந்த வாசகரில் எங்கேனும் ஓரிடத்தில் இருக்கலாம் என்பதுதான் தெளிவு. 

'அஹம் பிரம்மாஸ்மி' இதனை 'நானே கடவுள்' என அர்த்தப்படுத்துவதை விட 'என்னிலும் கடவுள் இருக்கிறார்' என்பதுதான் சரியாக இருக்கும். 

'நானே கதாபாத்திரம்' என ஒரு எழுத்தில் நம்மைப் பார்ப்பதைவிட 'இந்த கதாபாத்திரமும் என்னில் இருக்கிறது' என்பது மிகச் சரியாக இருக்கும்.

'அஹம் பிரம்மாஸ்மி'