Wednesday 26 March 2014

அறிவுகெட்ட

உன்னை நான் காதலிச்சேன்.
என்னை நீ காதலிச்ச.
எனக்குப் பிடிச்சது
உனக்குப் பிடிச்சது.
கல்யாணம் பண்ணிக்கலாம்னு
திட்டம் போட்டோம்.
நீயும்தான் சரின்னு சொன்ன.

அடி பாதகத்தி
காதலுல வந்த சின்ன சின்ன
சண்டைகள் எல்லாம்
அன்பின் தடயம்னு
நானும்தான் நம்பி இருந்தேன்
உன்னோட கோவத்தை எல்லாம்
பாசம்னு கதை படிச்சேன்

போராடி வீட்டுல வாங்கிய
சம்மதம் வைச்சி
போட்டேன் மூணு முடிச்சி
நம்ம சந்தோசத்துக்கு
பெரிய வலை விரிச்சி
நீயும்தான் கழுத்து நீட்டின

என்னைவிட நீ பெரிய படிப்பு
என்னைவிட நீ பெரிய பதவி
என்னைவிட நீ பேரழகி
எப்பவுமே பேதம் பாக்கலையே
இதையெல்லாம் என்கிட்டே
ஒருபோதும் நீ கேட்கலையே

ஆத்தாடி நீயும் என்
ஆசைநாயகி ஆன பின்னே
எல்லாமும் வித்தியாசம் ஆகுமா
இதையே ஒரு காரணம்
என நீ சொன்னா தகுமா

உன்னோட சேவகனா
நான் கிடக்கேன்
என்னை நீயும்
கை வுட்ராதே
கைகட்டி நானும் நிக்கிறேன்
உன் கண் பார்வையில்
இருந்து என்னை ஒதுக்காதே
பலமுறை கேட்டாலும்
படுபாவி உன் காது செவிடா

பாவ புண்ணியம் பாக்காம
கோர்ட் வாசப்படி
மிதிக்க வைச்சே
உன்னை கொடுமை
படுத்துறேனு கொடி பிடிச்ச
படிப்பு, பதவின்னு
சொல்லி வைச்ச

சண்டாள பயபுள்ளைக
உண்மை தெரியாம
நீதி சொன்னாக
இதை சரித்திரத்தில
தப்பாக குறிச்சி வைப்பாங்களே

எல்லாம் இந்த
அறிவுகெட்ட





Friday 14 March 2014

அவள் என்னை ஒதுக்கினாள்

என்னை உங்களுக்கு நினைவு இருக்குமா என தெரியாது. நான், என் மாமா மகள், என் மனைவி, என்னுடன் வேலை பார்த்த பெண் அப்புறம் புதிதாக பக்கத்து அலுவலகத்தில் வந்து சேர்ந்த பெண் என மூன்று வருடங்கள் முன்னர் ஒரு சின்ன கதை சொல்லி இருந்தேன். அந்த கதைக்கு அப்புறம் என்னைப் பற்றி சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏதும் வரவில்லை. ஆனால் இப்போது ஒரே ஒரு தடவை மட்டும் பேசிவிட்டு சென்று விடலாம் என இருக்கிறேன். மீண்டும் எப்போது நான் வருவேன் என எனக்குத் தெரியாது. இனிமேல் இது குறித்து நான் உங்களிடம் சொல்லாமலே போகலாம்.

கல்யாணம் ஆகி நான்கே வருடங்கள் தான் ஆகி இருந்தது. ஒரு மகள் பிறந்து ஓராண்டு முடிந்து இருந்தது. புதிதாக பக்கத்து அலுவலகத்தில் வந்து சேர்ந்த பெண்ணின் மீதான காதல் துளிர் விட்டதும் என்னுடன் வேலை பார்த்த பெண்ணின் காதலை உணர்ந்து இருந்தேன். அன்று இரவு மனைவியிடம் எனக்கு நேர்ந்து இருக்கும் விஷயத்தை சொன்னதும் நீங்கள் நம்பினால் நம்புங்கள், கையில் கிடைத்த பாத்திரத்தை எடுத்து எனது தலையில் ஓங்கி அடித்து விட்டாள். எனக்கு வலி பொறுக்க இயலவில்லை. தலை புடைத்து வீங்கி நின்றது.

'ஏன்டா, கட்டின பொண்டாட்டி நான் இருக்க இன்னொருத்தி மேல காதல்னு சூடு சொரணை இல்லாம அதுவும் என்கிட்டே வந்து சொல்வ' அதுதான் முதல் தடவை என் மனைவி என் மீது இத்தனை அளவுக்கு அதிகமான அகங்காரம் கொண்டது.

அன்று இரவு முழுவதும் விசும்பிக் கொண்டு இருந்தாள். 'எடுபட்ட பயலே, இனிமே எவளைப் பத்தியாவது பேசின உன்னை கொலை பண்ண கூட தயங்கமாட்டேன். உன்னை நம்பி தனிக்குடித்தனம் வந்தேன் பாரு, அது என் தப்பு தான். நானும் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாரிச்சு தனிச்சி வாழுறேன் பாரு' என்று அந்த விசும்பலின் ஊடே சொல்லிக் கொண்டு இருந்தவள் எப்போது தூங்கினாள் எனத் தெரியாது. காலையில் அவளைப் பார்த்தபோது அவளது கண்கள் எல்லாம் வீங்கி இருந்தது. கொஞ்சமும் கோபம் குறையாமல் இருந்தாள். நான் என் தலை வீக்கம் குறையட்டும் என மூன்று நாட்கள் வேலைக்கு விடுப்பு எடுத்தேன். எத்தனையோ சமாதானம் பண்ணிப் பார்த்தேன். ஆனால் அவள் கொஞ்சமும் கேட்பதாக இல்லை.

கொஞ்சம் வீக்கம் அன்றே குறைந்துவிட்டது. கடைக்கு சென்று சாப்பிடலாம்  வா என அழைத்தேன். 'ஏன் அவளுக எவளாச்சும் அங்க வரேன்னு சொல்லி இருக்காளுகளா' என்று அவளே அவர்களை பற்றி பேசினாள். நான் இல்லை என்று சொல்லிவிட்டு அதிகம் பேசவில்லை. இங்க பாரு, நீயில்லாம எனக்கு வேறு யாரும் இல்லை. ஏதோ புத்தி கொஞ்சம் புரண்டு போச்சு, இனிமே இப்படி நடக்கமாட்டேன் என்று இத்தோடு ஆயிரம் தடவை மேல் சொல்லி இருப்பேன்.

'உன்னை நம்பி எப்படி இருக்கிறது, அன்னைக்கே அந்த சிறுக்கி வீட்டுக்கு வந்தப்ப காலை வெட்டி அனுப்பி இருக்கணும். நீ எவளோடையும் போயிர கூடாதேனுதான் நான் உன்னோட உறவு வைக்க சம்மதிச்சேன். ஆனா நீ இப்ப காதல்னு சொல்லிட்டு கண்டவளோட அலைய ஆசைப்படற. உனக்கு இனிமே என்னோட உறவு கிடையாது, ஒட்டும் கிடையாது. அப்படி உனக்கு சுகம் தேவைப்பட்டுச்சினா அதான் இருக்காளுக அந்த ரெண்டு பேரு, அவள்கிட்ட போ' இப்படி எல்லாம் வார்த்தைகளை அவள் உதிர்த்து கொட்டுவாள் என ஒருபோதும் நான் நினைத்ததே இல்லை. அவளின் கோபம் தணியும் என்றே பார்த்தேன். ஆனால் வாரம் ஆகியது. கோபத்தை குறைத்துக் கொள்ளவே இல்லை.

ஒரு சின்ன விசயத்துக்கு இத்தனை தண்டனையா என என்னை நானே நொந்து கொண்டேன். ஒரு மாதம் கடந்து போனது. அவள் சொன்ன வார்த்தையில் உறுதியாக இருந்தாள். அவளை கல்யாணம் கட்டியபோது எப்படி என்னை பிரமச்சரியம் அனுபவிக்க வைத்தாளோ அதைப்போலவே இப்போதும் என்னை அனுபவிக்க வைத்துக் கொண்டிருந்தாள். இந்த சூழல் காரணமாக நான் பக்கத்து அலுவலக பெண்ணை மட்டுமல்ல எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்ப்பதை தவிர்த்து இருந்தேன்.

எனக்கு வேலை கிடைச்சிருக்கு. உன் அம்மாகிட்ட பேசினேன், அவங்க வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க, என்னோட அம்மாவும் அப்பாவும் நம்மளோட தங்கி இருப்பாங்க என சொன்னதும் எனக்கு மறுத்து பேச மனம் வரவில்லை. உன் விருப்பப்படியே செய் என சொல்லிவிட்டு வேலைக்கு செல்வது வீட்டுக்கு வருவது மகளுடன் கொஞ்சி விளையாடுவது என்று இருந்தேன். அவள் முகம் கொடுத்து கூட பேச மறுத்தாள். நம்பிக்கை போய்விட்டது என்றால் அதை திரும்ப பெறுவது மிகவும் கடினம் என்பதை உணர்ந்து கொண்டு இருந்தேன்.

அன்று அலுவலகத்திற்கு என்னுடன் முன்னால் வேலை பார்த்த பெண் வந்து இருந்தாள். வீட்டில் உள்ள பிரச்சினையை சொன்னேன். அவளை விவாகரத்து பண்ணிட்டு என்னோட வந்துரு, எதுக்கு இப்படி உன்னோட இளமை காலத்தை வீண் பண்ற, உன்னை நான் நல்லா பாத்துப்பேன் என்று காதல் மொழி பேசினாள். அதில் நான் கரைந்துவிடாது இருந்தேன். இல்லை இனிமே என்னோட நீ பேசாத, என்னை பார்க்க வராதே அதுதான் உனக்கும் எனக்கும் நல்லது. நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ என சொன்னதும் அலுவலகத்தில் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதை கூட பொருட்படுத்தாமல் அவளது காலில் இருந்த செருப்பை கழட்டி எனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். 'சீ நீயெல்லாம் ஒரு நண்பன்னு பேச வந்தேன் பாரு, உன் பொண்டாட்டிக்கு பதிலா என்னை உன் பொண்டாட்டியாக்க எத்தனை கேவலமா பேசுவ என சொல்லிவிட்டு போய்விட்டாள். நான் குற்றுயிராய் நின்று இருந்தேன். நடந்தது வேறு என அங்கிருப்பவர்களிடம் சொல்லக்கூட என்னால் முடியவில்லை. எல்லோரும் என்னை கேவலமாக பார்ப்பது போன்று தோன்றியது. அடுத்த இரண்டு வாரங்களில் நான் வேறு வேலை மாறி இருந்தேன்.

எனது மனைவியும் வேலைக்கு சேர்ந்து இருந்தாள், என் மாமியார், மாமனார் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் முன்னால் சிரித்து பேசுவது போல நடிப்பாள், ஆனால் தூங்க செல்லும்போது மகளை எங்கள் இருவருக்கும் இடையில் தூங்க வைத்தே தூங்குவாள். தாம்பத்யம் என்பதை மறந்து இரண்டு மாதங்கள் ஆகி இருந்தது. இந்த காம இச்சையை எத்தனை சாதுர்யமாக கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறாள் என என்னால் கொஞ்சம் கூட நம்ப இயலவில்லை. நானும் அவளின் உணர்வுகளை மதித்து அதிகம் தொந்தரவு தராமல் இருந்தேன்.

ஆனால் ஓர் இரவு என்னால் பொறுத்து கொள்ள இயலாமல் அவளிடம் கெஞ்சினேன். இதுவரை என்னால் எந்த பிரச்சினையும் இல்லை என மன்றாடி அவளுடன் உறவு கொண்டேன். அவள் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தாள். விருப்பம் இல்லையா என்றே கேட்டு வைக்க, உனக்கு சுகம் கிடைச்சா போதும்ல என சொல்லிவிட்டு என் வாய் அடைத்தாள். எப்படி இப்படி காம இச்சை இன்றி இவள் போக கூடும்.

ஒரு மருத்துவரை அணுகினேன். மொத்தமாக அனைத்து கதையையும் கூறி முடித்ததும் அடுத்த வாரம் வா  என சொல்லி அனுப்பினார். எனக்கு காம இச்சை தோன்றும்போது அவளை பணிய வைத்தேன். அவளும் எவ்வித உணர்வு இன்றி சரி என்றே இணைந்தாள். எனக்கு இந்த பிரச்சினைக்கு முன்னால் அவள் நடந்து கொண்ட விதமும், இப்போது நடந்து கொண்டு இருக்கும் விதமும் வித்தியாசமாக இருந்தது. அடுத்த வாரம் சென்றபோது என்ன நடந்தது என கேட்டார். சொன்னேன். சில மாதங்கள் பின்னர் அழைத்தார், சென்றேன். ஒருமுறை கூட அவளாக காம இச்சை கொண்டு என்னை அணுகவில்லை என சொன்னேன். உங்ககிட்ட சில விசயங்கள் பேசணும் என மாலை பூங்காவிற்கு வர சொன்னார். சென்றேன்.

'உங்க மேல உங்க மனைவிக்கு நம்பிக்கை இல்லை. அந்த நம்பிக்கை இனிமே வருமான்னு சொல்லவும் முடியாது. அவங்களுக்கு காம இச்சை இருந்தாலும் அதை தீர்த்துக்கொள்ள நீங்கதான் வழி. ஆனாலும் அந்த காம இச்சையை எளிதாக நீங்கள் நடந்து கொண்ட நம்பிக்கை துரோகத்தை நினைச்சி அவங்களால கட்டுபடுத்திக்கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் உங்களை அவங்க இழக்கவும் விரும்பலை, அதனால நீங்க விரும்பற நேரம் எல்லாம் உங்களோட ஆசையை பூர்த்தி செஞ்சா போதும்னு இந்த விசயத்தில நடந்துக்கிறாங்க. நீங்க உங்க காம இச்சையை குறைக்கணும், அவங்களே உங்களை விரும்பி வரணும். அதுக்கு இன்னைக்குல இருந்து அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குங்க. குறைவில்லாத அன்பு, எந்த விசயத்துக்கும் சத்தம் போடாம இருப்பது மாதிரி நீங்க நடந்துக்கோங்க. இதுதான் நீங்க கடைபிடிக்க வேண்டியது. காமம் அல்லாத காதலை நீங்க அவங்ககிட்ட தந்தால் ஒழிய உங்களால உங்க மனைவியை நீங்க திரும்ப பெற இயலாது.

பெரும்பாலான ஆண்கள் தங்களோட காம இச்சை தீர்ந்தா போதும்னு நடந்துக்குவாங்க, மனைவியோட மனசை அவங்க புரிஞ்சிக்கிறதே இல்லை. மனைவி உறவுக்கு சம்மதிக்கிறானு எல்லாம் நல்லா இருக்குணு நம்பி வாழ்க்கையை ஒரு ஏமாத்தமா நடத்துறது இந்த உலகத்தில் வாடிக்கை. ஆனா நீங்க அப்படி வாழ வேண்டாம்னு சொல்றேன். அன்னியோனியம் அப்படிங்கிறது இரண்டு மனசு சேர்ந்து வரது. அந்த காலத்தில் மட்டுமல்ல இந்த காலத்திலும் தாசி முறை, விபச்சாரம் எல்லாம் ஒரு ஆணுக்கு காம இச்சை தீர்க்கும் வழின்னு வைச்சிட்டாங்க. பெண்ணுக்கு காம இச்சை இல்லாமலா இருக்கும். இதுவே நீங்க உங்க மனைவிக்கு முன்னால வேற யாருகிட்டயாவது உறவு வைச்சீங்களா, இல்லையே. எப்படி அப்போ கட்டுபாடா இருக்க முடிஞ்சது.

பாலினத்தை தீர்மானிக்கிற குரோமசோம்கள் முதற்கொண்டு காம இச்சையை தீர்மானிக்கிற ஹார்மோன்கள் இருப்பதாகவே அறிவியல் உலகம் நம்புறது. பாலின ஹார்மோன்கள் பெண்கள் பருவம் அடையறப்ப பிட்யூட்டரி சுரப்பி  மூலம் இந்த இரண்டு Luteinising Hormone (LH) and Follicle Stimulating Hormone (FSH)  சுரக்கிறது.  கருமுட்டை உற்பத்தி பண்ற இடத்தில் இருந்து  oestrogen and progesterone சுரக்கிறது. இந்த நிலையில் தான் ஒரு பெண் என்பவளோட உடலில் எல்லா மாற்றங்களும் உருவாகிறது. மார்பகங்கள் வளர்ச்சி முதற்கொண்டு, மாதவிடாய் காலங்கள் எல்லாம்  இந்த நிலைக்கு அப்புறம்தான். இதே மாதிரி ஆண்களிலும் LH, FSH சுரக்கிறது. ஆனால் விரைப்பையில் இருந்து testosterone சுரப்பதன் மூலம் தான் ஒரு ஆண், ஆண் தன்மையை பெறுகிறான். மீசை வளர்ச்சி முதற்கொண்டு. இந்த testosterone பெண்களிலும் எட்டு மடங்கு ஆணை விட குறைவாகவே சுரக்கிறது.

எல்லா விலங்கினங்களும் தாங்கள் உறவு கொள்ள தயாராக இருக்கிறோம் அப்படின்னு ஒரு குறிப்பு உணர்த்தும். அதைப்போலவே மனிதர்கள் உணர்த்துவாங்க. பொதுவா பெண்கள் மாதவிடாய் தொடங்கிய காலத்தில் இருந்து பதினாலாவது நாள் கருமுட்டை வெளியேறும். அந்த கருமுட்டை வெளியேறும் ஆறு நாட்கள் முன்னர், ஆறு நாட்கள் பின்னர் வரை அவர்களுக்குள் காம இச்சை அதிகமாக இருக்கும். அப்போது அவர்களின் நடவடிக்கை எல்லாம் கவனித்தால் ஒரு மாற்றம் இருக்கும் என்றே சில ஆராய்ச்சி முடிவுகளில் சொல்றாங்க. அதே வேளையில் இப்படி கருமுட்டை வெளியாகும் தருணத்தை வைத்து ஒரு பெண்ணின் காம இச்சையை கணிப்பது தவறுன்னு சொல்றாங்க. இப்படி ஆய்வக முடிவுகள் எல்லாம் வைத்து ஒரு உறவின் காம இச்சையை தீர்மானிக்ககூடாதுன்னு சொல்வாங்க. இப்போ உங்க வாழ்க்கையே ஒரு உதாரணம். உங்க மனைவிக்கு காம இச்சை குறைந்து போனதற்கு காரணம் அவங்களோட ஹார்மோன்கள் பிரச்சினை இல்லை. நீங்கதான்.

இப்படித்தான் 66 தம்பதிகளை தேர்ந்தெடுத்து பெண்களிடம் அவங்க ஆண்கள் கிட்ட என்ன பிடிக்கும்னும் இன்னொருத்தர் கிட்ட என்ன பிடிக்கும்னு கருமுட்டை வெளியாகும் தருணம் , கருமுட்டை வெளியாகாத தருணங்களில் ஒருவரோட அறிவு, புகைப்படம், மேலும் சில உடல் வடிவமைப்புகள் கொடுத்தாங்க. அதாவது ஒரு பெண் 66 ஆண்களை பார்த்து எப்படி நினைக்கிறாங்கன்னு சொல்லணும். நம்ம ஊருனா என்ன பொழப்புன்னு சொல்லிட்டு போயிருவாங்க. ஆனா அந்த ஆராய்ச்சி முடிவு என்ன சொன்னதுன்னா எந்த பெண்ணும் ஒரு ஆணின் அறிவு குறித்து காம இச்சை கொள்வதில்லை. மாறாக ஆணின் தோற்றத்தை கொண்டு காம இச்சை இந்த கருமுட்டை வெளியாகும் தருணத்தில் இருந்ததுன்னு கண்டுபிடிச்சாங்க. இதே மாதிரி வேறொரு ஆராய்ச்சியில் பெண் தான் கருமுட்டை வெளியாகும் தருணத்தில் கொஞ்ச நாள் உறவுக்கு ஏற்ற கொஞ்சம் கரடு முரடான தசைப்பிடிப்புள்ள ஆணையும், கருமுட்டை வெளியாகத தருணத்தில் அன்பு உள்ள ஆணை நெடுநாள் அவர்களுடன்  இருக்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டதா சொல்றாங்க. அதாவது காம இச்சை அற்று.

இப்ப பெண்கள் கரு தடுப்பு மாத்திரைகள் உட்கொண்டால் இந்த கருமுட்டை வெளியாகும் உணர்வுகள் எல்லாம் மறைந்து போனதா சொன்னாங்க. ஆனால் ஆண்களுக்கு இது போன்ற ஹார்மோன்கள் பிரச்சினை இல்லை என்றாலும் வயது ஆக ஆக testosterone அளவு குறைய அவர்களின் காம இச்சை குறையும்னு சொன்னாங்க. காம இச்சை அற்ற ஆண்கள் உண்டு என்பது அவங்களோட எண்ணம்.

இந்த மொத்த ஆராய்ச்சி தப்புன்னு சொல்லி கருமுட்டை உருவாகும் தருணத்தில் பெண்கள் நன்றாக ஆடை உடுத்துவார்கள் என்றெல்லாம் சொன்னாங்க. கிராமப்புறம் எல்லாம் இதை சொன்னா ச்சீ கருமம் என்றே போயிருவாங்க. இதில் கலாச்சாரம் எல்லாம் நிறைய பங்கு பெறுது. தங்களோட ஆசைகளை மனதில் அடக்கி கொள்ளும் பெண்களே அதிகம்.

ஒரு பெண் கோபமாக அழுது கொண்டு தலைவலியுடன் இருக்கும்போது காம இச்சையை நினைத்துக்கூட மாட்டார். பெரும்பாலான பெண்கள் இந்த காம இச்சை குறைவிற்கு அவர்களது ஹார்மோன்கள் என்றே எண்ணுகிறார்கள். ஆனா நிறைய பேருக்கு இந்த ஹார்மோன்கள் பத்தி எல்லாம் தெரியாது கூட.

யாரிடமாவது நீங்க போய் எப்ப காம இச்சையுடன் கவர்ச்சியா உணருறீங்கனு  கேட்டா அவங்களால உறுதியா சொல்ல முடியாது. ஒரு ஆணின் அல்லது பெண்ணின் இன உறுப்பில் ஏற்படும் எழுச்சிக்கும், உச்ச நிலைக்கும் காம இச்சைக்கும் வேறுபாடு உண்டு. அதாவது சுய இன்பம் மூலம் ஒரு பெண்ணோ ஆணோ தனது உச்சத்தை அடைந்து கொள்ளலாம், ஆனால் இன்னொருவருடன் உடல் உறவு கொள்ளும் காம இச்சை என்பது அத்தனை எளிதாக தோன்றுவது இல்லை. காம இச்சையே இல்லாத ஆணோ, பெண்ணோ எப்படி காம இச்சைக்கு உட்படுத்துவது என்பது குறித்து மருத்துவ உலகம் அதிக செலவு செய்யவில்லை. வயாகரா மாத்திரை ஆணின் இன உறுப்பின் எழுச்சிக்காக உருவாக்கப்பட்டது, காம இச்சைக்கு என்று இல்லை.

oestrogen காம இச்சையை அதிகரிக்காது காம இச்சையை ஆண் பெண் இருவருக்கும் அதிகரிக்க செய்வது testosterone என முப்பது ஆண்டுக முன்னர் ஒரு பெண் சொன்னாங்க. கடந்த 40 வருடம் பெண்ணுக்கு testosterone கொடுத்து காம இச்சை அதிகரிக்குமா என பார்த்தபோது அந்த பெண்ணின் இன உறுப்பி மட்டுமே மாற்றம் ஏற்பட்டது. காம இச்சை மாறாது இருந்தது.

இந்த காம இச்சை அதிகரிப்பது நமது எண்ணம் சார்ந்தது என கூறி இருக்காங்க. ஒரு பெண் தாய் ஆனபின்னர் காம இச்சை குறையும், இப்படி நிறைய காரணம்  இருக்கிறது. ஆகவே நான் உங்ககிட்ட் கேட்டுக்கிறது என்னன்னா நீங்க அன்பும் பாசமும் நிறைந்த கணவனாய் உங்க மனைவியின் உணர்வினை புரிந்தவராய் இருக்க வேண்டும்.

டாக்டர் பேசியதை கேட்டபின்னர் நான் வெகுவாக மாறி இருந்தேன். நீங்க நம்பினா நம்புங்க மூன்று மாதம் பின்னர் என் மனைவி என் மீது பிரியம் அதிக காட்டினார். இனி பிரியம் அகன்றுவிடாது இருக்க பாசத்துடன் இருந்தேன்.

முற்றும். 

Monday 3 March 2014

தாலேலோ ஆண்டாள்

அடேங்கப்பா ஆண்டாள் - 5

விஷ்ணுசித்தர் வில்லிபுத்தூரில் முகுந்த பட்டருக்கும், பத்மவல்லி அம்மையாருக்கும் பிறந்த ஐந்தாவது புதல்வர். முகுந்த பட்டரும், பத்மவல்லி அம்மையாரும் வடபெருங்கோவிலுடையானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டு இருந்தார்கள். வேத விற்பன்னராக முகுந்தபட்டார் திகழ்ந்தார்.

விஷ்ணு சித்தரை ஒரு அந்தணர் போலவே வளர்த்தது முகுந்தபட்டர்தான். மற்ற குழந்தைகள் பற்றி எங்கேனும் குறிப்பு இருக்கிறதா, என்ன ஆனார்கள் என்பது குறித்த ஆராய்ச்சி இங்கே அவசியமற்று போகிறது. விஷ்ணுசித்தர் தன்னை ஒரு வைஷ்ணவராய் உருவகித்து பரமனுக்கு கைங்கர்யம் செய்வதில் நாட்டம் கொண்டு வந்தார். எந்தவகையான கைங்கர்யம் சிறப்பு என நினைத்தபோது மாலைகள் அணிவித்து மகிழ்ந்திருப்பது என எண்ணினார் விஷ்ணுசித்தர்.

ஒரு பூந்தோட்டம் அமைத்திட பெரும்பாடுபட்டு குளங்கள் எல்லாம் உருவாக்கி நந்தவனம் உருவாக்கினார். அங்கே எல்லா பூக்களும் பூத்து குலுங்கின. துளசி, தாமரை, முல்லை, மல்லிகை அழகு சேர்த்தன. அம்மலர் வாசனையை தான் நுகரக்கூடாது என நாசிகளை துணிகளால் மூடி மாலையாக்கி வடப்பெருங்கோவிலுடையானுக்கு சமர்ப்பித்து வந்தார்.

பாண்டிய நாட்டின் அரசன் வல்லபதேவன் மறுமையில் பேரின்பம் பெற என்ன வழி என ஒரு அந்தணரை சந்தித்ததால் உண்டான சிந்தனையில் வித்வான்களைத் திரட்டிட பறை அறிவித்து பெரும் பொருளை ஒரு வஸ்திரத்தில் கட்டி பொற்கிழியை ஒரு தோரணத்தில் தொங்கவிடப்பட்டது. எவர் மறுமையில் பேரின்பம் பெற இம்மையில் வழி சொல்கிறார்களோ அவர்கள் பொற்கிழி எடுத்துச் செல்லாமல் என அறிவித்தான்.

அன்றைய காலத்தில் புலவர்களுக்கு வேத விற்பன்னர்களுக்கு எப்போதும் ஒருவித போட்டி இருந்து கொண்டே இருப்பதாகவே வரலாறு குறிக்கிறது. முகுந்தபட்டர் விஷ்ணு சித்தருக்கு வேத சாஸ்திரங்கள் கற்று தந்து இருக்கக்கூடும், ஆனால் வேத சாஸ்திரங்கள் மூலம் இறைவனுக்கு கைங்கர்யம் செய்யாமல் மாலைகள் மூலம் மட்டுமே செய்துவந்தவர் விஷ்ணுசித்தர்.

பாண்டிய மன்னன் அறிவித்தமை கண்டு விஷ்ணுசித்தர் நிச்சயம் நினைத்து இருக்கக்கூடும். தந்தை கற்று தந்த கல்வி மனதில் ஓடியிருக்கும். ஆனால் இறைவனே விஷ்ணுசித்தரின் கனவில் வந்து பொற்கிழி அறுத்து வரும்படி சொல்லப்பட்டு இருக்கிறது. விஷ்ணுசித்தர் இறைவன் தம்மை வைத்து காரியம் நடத்த இருக்கிறார் எனும் உறுதி கொண்டு மதுரைக்கு கிளம்புகிறார்.

விஷ்ணுசித்தர் குறித்து வல்லபதேவன் தனது அவையில் இருந்த அந்தணர் செல்வநம்பிகள் மூலம் அறிந்து  இருந்தான். இப்போது வெறும் மாலைகள் மட்டுமே அணிவித்த ஒரு அந்தணர் ஒரே நாளில் பாண்டித்யம் பெறுவது கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம். சாஸ்திரங்கள் தெரியாத ஒருவரை இந்த அவையில் அனுமதிப்பது தவறு என்றே மற்ற அந்தணர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள். இறைவன் அருளிச்செய்த சாஸ்திரங்களை விஷ்ணுசித்தர் சொல்லி முடிக்கிறார். நாராயணனே பரம்பொருள் என்பதாக அது அமைகிறது.

விஷ்ணுசித்தர் பட்டர்பிரான் என அழைக்கப்பட தருணம் அது. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடிய பட்டர்பிரான் பரம்பொருளால் பெரியாழ்வார் என அழைக்கபட்டார் என்கிறது சேதி. இப்படி வாழ்ந்து வந்த பெரியாழ்வார் கண்ணனை தன்னை ஒரு யசோதாவாக பாவித்து பல பாடல்கள் இயற்றினார்.

தன்னை அன்னையாக வர்ணித்த பெரியாழ்வார் துளசி செடிக்கு அடியில் ஐந்து வயது குழந்தையாய் கண்டெடுக்கப்பட்டவர் ஆண்டாள். கண்ணனை குழந்தையாக, தன்னை தாயாக பாவித்து வர்ணிக்கும் பெரியாழ்வார் கண்டு ஆண்டாள் தனது காதலனாக கண்ணனை சித்தரித்தாள். சின்ன குழந்தையாய் ஆண்டாள். ஆண்டாள் வளர வளர அவள் கண்ணனும் வளர்கிறான் என்றே மனதில் பாடம் கொண்டாள்.

ஆண்டாள் செய்கை கண்டு பெரியாழ்வார் இப்படித்தான் பாடி வைக்கிறார்.

காறை பூணும் கண்ணாடி காணும் தன்
கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறி தேறி நின்று ஆயிரம் பேர்த்
தேவன் திறம் பிதற்றும்
மாறில் மாமணி வண்ணன் மேல் இவள்
மால் உருகின்றாளே

பெரியாழ்வார் போலவே ஆண்டாளும் பாடி முடித்து இருப்பாள். 'வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்' என்பார் பெரியாழ்வார். 'பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலை' 'புதுவையர்கோன் விட்டு சித்தன்கோதை' என்பார் ஆண்டாள்.

தாலேலோ ஆண்டாள், இளம் பிராயத்தில் அப்படியே உள்வாங்கி உன்னையே மாற்றிக் கொண்டாய்

(தொடரும்)

Sunday 2 March 2014

காதல் மட்டும்

                                                  காதல் மட்டும் - சிறுகதை

                                                   வெ.இராதாகிருஷ்ணன்

இந்த வாழ்வு நமக்காக என்ன வைத்து இருக்கிறது எனத் தெரியாது. ஆனால் பல மகிழ்ச்சியானத் தருணங்களும், மறக்க இயலாத நினைவுகளும் நம்முடனே வந்து சேர்கின்றன. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது மனதுக்குப் பிடித்துப் போன சுபாவைப் பற்றி முன்னரே நிறைய அறிந்து வைத்திருந்தேன். சுபாவிடம் காதலைச் சொல்லும் அளவுக்கு அத்தனை தைரியம் அப்போது இருந்தது இல்லை. அவள் வேறு கல்லூரி நான் வேறு கல்லூரி ஆனபிறகும் மனதில் அவளது எண்ணமாகவே இருந்தது. பருவத்தில் வரும் காதல் போல மாறிவிடும் என்று பார்த்தால் அவள் மீதான காதல் தொடர்ந்தபடியே இருந்தது.

ஒருமுறை அவளைச் சந்தித்தபோது நான் என்ன படிக்கிறேன் என்ன செய்கிறேன் என மிகவும் ஆர்வமாகக் கேட்டாள். ஒருவேளை அவளும் என்னைக் காதலித்துக் கொண்டு இருக்கக்கூடும் என மனதில் நினைத்துக் கொண்டேன். அப்போதும் கேட்கவும் இல்லை. அதன் பிறகு கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு வேலைக்குச் சென்றபிறகு ஒருமுறை அவளைப் பார்த்தேன். அப்போதும் அவள் குறித்த எண்ணம் மனதை விட்டு அகலாமல் இருப்பது கண்டு நானே என் மனதை எண்ணி வியந்தேன்.

அப்போது நான் சேர்ந்த வேலை குறித்துச் சொன்னேன். அவளோ தற்போது தான் வேலைக்குச் செல்ல முடியாத சூழல் எனச் சொன்னாள். சூழல் சரியானப்பிறகு வேலைக்குப் போ எனச் சொல்லிவிட்டு வந்தேன். என்றோ பார்க்கிற முறையில் கூட சில சொற்களை மட்டுமே பேசிவிட்டு வந்தது எனக்குப் புரியாமல் இருந்தது. அப்போதுதான் வீட்டில் என் அம்மா என்னிடம் எனக்குப் பெண் பார்ப்பதாகச் சொன்னார். நான் அவசரம் அவசரமாக மறுத்துவிட்டு சுபாவை காதலிப்பதாகச் சொன்னேன். வீட்டில் அன்று பெரியப் பிரச்சினை ஆகிவிட்டது. இனிமேலும் தாமதிக்கக் கூடாது என அடுத்த வாரமே சுபாவைச் சந்தித்தேன்.

''சுபா உன்னை நான் நிறைய வருசமா காதலிக்கிறேன் ஆனா உன்கிட்ட சொல்ல தைரியம் வந்தது இல்லை, என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா''

''தீபக் உன்னை எனக்கும் நிறையப் பிடிக்கும், ஆனால் கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது வேணும்ன்னா காதலிக்கலாம்''

சுபா சொன்னதை நினைத்து நினைத்து எனக்கு அன்று உறக்கமே இல்லை. காதலின் அடுத்த நிலை கல்யாணம் என்றுதானே சொல்லப்பட்டு இருக்கிறது. காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனில் கல்யாணம் பண்ணிக்கொண்டு காதலிக்கலாம் என்று அவளிடம் சொல்ல வேண்டும் என மனம் நினைத்தது. எதற்கு இப்படி சட்டென திருமணமே வேண்டாம் என சொன்னாள் என்பது குழப்பமாக இருந்தது. சில நாட்கள் போகட்டும் என இருந்தேன்.

திடீரென ஒருநாள் சுபாவை பெண் பார்க்க போவோம் அவளுக்குத் தகவல் சொல்லிரு என வீட்டில் சொன்னதும் அவள் சொன்ன விசயத்தைச் சொன்னதும் வீட்டில் கோபம் கொண்டார்கள். நாம போய் பேசுவோம் இல்லைன்னா உனக்கு வேறு பொண்ணுதான் கல்யாணம் பண்ணி வைக்கனும் என உறுதியாகச் சொன்னார்கள்.

சுபாவின் வீட்டிற்கு பெண் பார்க்கச் சென்றோம். சுபா எவ்வித கோபமும் இல்லாமல் மெல்லிய குரலில் சொன்னாள்.

''நானும் தீபக்கும் காதலிக்கிறோம், ஆனா கல்யாணம் பண்ணிக்கிற மாட்டேன், இப்படியே காதலித்தபடியே இருப்பேன்''

அவ்வளவுதான், என் அப்பா கடுமையாகச் சத்தம் போட்டார்.

''அடுத்த சந்ததினு இல்லாம ஆயிரும் இந்தப் புள்ளையை இங்கேயே தலைமுழுகிட்டு வா'' விறுவிறுவென வெளியேறினார்.

''எங்களை மன்னிச்சிருங்க'' என நானே மன்னிப்பு கேட்டேன்.

''நாங்க எவ்வளவு சொன்னாலும் அவ கேட்கமாட்டேங்கிறா. கல்யாணம் பிடிக்காதுனு ஒரேயடியா சொல்றா நாங்க என்ன பண்ணட்டும்'' சுபாவின் தந்தையின் குரல் உடைந்து போயிருந்தது.

வேறு வேலை தேடிக்கொண்டு அதைக் காரணமாக வைத்து வீட்டை விட்டு வெளியேறியபோது சுபாவை சென்று அழைத்தேன். அவள் வர மறுத்தாள். சுபாவுடன் இருந்த தொடர்புக்கு சற்று இடைவெளி ஏற்பட்டது. ஆனால் மனதில் அவளது எண்ணங்களே இருந்தது. வேறொரு பெண்ணை நினைத்துப் பார்ப்பது என்பது அனலில் பட்ட புழு போல மனம் துடித்தது. காலம்தான் எத்தனை வேகமாகச் செல்லக் கூடியது. ஒரு வருடத்திற்குள் தங்கையின் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது. அதற்காகவே ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

சுபாவை சந்தித்து பேசியபோது அவள் மனதில் எவ்வித மாற்றமும் இல்லை.

''சுபா என்னைத்தான் நீ நினைச்சிட்டு இருக்கியா''

''நீ என்னைய நினைச்சிட்டு இருக்கிறப்ப நான் உன்னை நினைச்சிட்டு இருக்க மாட்டேனா''

''கல்யாணம் பண்ணிப்போம் சுபா, என் தங்கை லதாவுக்கு கல்யாணம் பண்ற இடத்தில ஒரு வரன் இருக்கு அதை எனக்கு முடிக்கலாம்னு பார்க்கிறாங்க''

''நல்லபடியா கல்யாணம் பண்ணிக்கோ தீபக், வாய்ப்பைத் தவற விட்டுறாத''

அவளது சொற்கள் என்னைச் சீண்டுவது போல இருந்தது.

''உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் இல்லைன்னா இப்படியே இருக்கிறேன்''

''காதலிச்சிக்கிட்டே''

சிரித்தாள். அவளையும் விட்டு விலக இயலாமல் வேறொன்றை கைப்பற்ற மனம் இல்லாமல் தவித்தேன். அவளது உறுதி என்னை வியப்படையச் செய்தது. மறுபடியும் என்னோடு வருமாறு அழைத்தேன். அதற்கும் சம்மதிக்க மறுத்தாள்.

தங்கையின் வளைகாப்பு வந்தது. அப்போது ஊருக்கு சென்றபோது அவள் ஒரு வேலையில் சேர்ந்து இருப்பதாகச் சொன்னாள்.

''இப்போதாவது சொல் சுபா''

''தெய்வீகம்னா என்ன தீபக்''

''தெரியல, நீயே சொல்''

''சாத்திரம், சடங்கு, வழிபாடு எனும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ளாத தூய்மை, உண்மைதான் என்னைப் பொருத்தவரை தெய்வீகம்''

''அதுக்கென்ன, அதுக்கு ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்லனும்''

''சாத்திரம் சடங்குகளில் விருப்பம் இல்லை''

''சரி சேர்ந்து வாழ்வோம்''

''காதலித்தால் சேர்ந்து வாழனும்னு இருக்கா என்ன''

என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் சென்றுவிட்டேன். வாரம் ஒருமுறை சுபா மறுக்காமல் என்னை அழைத்துவிடுவாள். நானும் அவளை அழைத்துப் பேசுவது உண்டு. கல்யாணம் என்ற பேச்சை நான் பேசுவதை தவிர்த்து இருந்தேன்.

தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தபோது, அவனுக்கு மொட்டை எடுக்கும் போது என ஊருக்கு வந்து போனேன். நான் சுபா என்ன முடிவு எடுக்கிறாளோ அதுவே என் முடிவு எனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டேன். சுபா குறித்து என் பெற்றோர்கள் எதுவும் தவறுதலாகப் பேசாது இருப்பது ஆச்சரியமாக இருந்தது.

சுபாவின் வீட்டிற்குச் சென்று என் தங்கையின் கணவர் வீட்டார் சென்று  மிரட்டவும் அவளது பெற்றோர்களை வேறு வீடு பார்க்கச் சொல்லி வீட்டின் உரிமையாளர் சொன்னதும் எனக்கு சுபா தகவல் சொன்னாள். நான் உடனே அவள் வேலை புரியும் இடத்திற்கு அருகில் ஒரு வீட்டினை வாங்க ஏற்பாடு செய்து அவர்களை அங்கே குடியமர்த்தினேன். அப்போது கூட அவள் வேண்டாம் என எவ்வளவோ மறுத்தும் நான் இந்த உதவியை ஏற்றுக்கொள் உனக்கு யாரும் தொல்லை தரமாட்டார்கள் என உறுதி சொன்னேன். அப்போது கூட என்னைத் திருமணம் பண்ணிக்கொள்ள வேண்டும் எனும் மனமாற்றம் அவளுக்கு ஏற்படவில்லை.

எனது தங்கை கணவர் வீட்டில் இனிமேல் சுபாவிற்குத் தொல்லை தந்தால் நானே காவல் நிலையத்தில் புகார் தருவேன் என மிரட்டி வைத்தேன். இனிமேல் உனக்கும் எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது என தங்கை சொற்களை அள்ளி வீசினாள். எங்களுக்கு வயது முப்பத்தி மூன்று ஆனது. சுபாவின் பெற்றோர்கள் சுபாவை எவ்வித வறுபுறுத்தலும் பண்ணாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அடுத்த வருடமே என் அம்மா நோய்வாய்ப்பட்டது கண்டு ஊருக்கு ஓடோடி வந்தேன்.

''நான் சாகுறதுக்கு முன்னே கல்யாணம் பண்ணிக்கோப்பா, இல்லைன்னாலும் பரவாயில்லை நீங்க மகிழ்ச்சியா இருந்தா போதும்''

அந்தச் சொற்கள் என்னைக் கலங்க வைத்தது. சுபாவின் வீட்டை நோக்கிச் சென்றேன். அவளது தந்தை நோய்வாய்ப்பட்டு இருந்தார்.

''சுபா உன் அப்பா, என் அம்மாவுக்காக கல்யாணம் பண்ணிப்போம்''

''தீபக் காதலிச்சிட்டே இருப்போம், கல்யாணம் மட்டும் வேண்டாம்'' அவளது விழிகளும் கலங்கி இருந்தது.

சுபாவின் அம்மாதான் சொன்னார்.

''தம்பி அவதான் இப்படி இருக்கிறானா நீங்க ஏன் உங்க வாழ்க்கையை வீணாக்கனும் பேசாம ஒரு பொண்ணப் பார்த்து கல்யாணம் பண்ணி மகிழ்ச்சியா இருங்க''

எத்தனை எளிதாகச் சொல்லிவிட முடிகிறது. மனதில் சுபா நிறைந்து இருந்தாள்.

''சுபாதான் என்னுடைய மகிழ்ச்சி'' சொல்லிவிட்டு நடந்தேன். கலங்கிய விழிகளின் ஊடே சுபாவின் இதழ்களில் புன்னகை நிறைந்து இருந்தது. சுபாவுக்கு வீடு வாங்கித் தந்த விசயம் தெரிந்து தங்கை என்னுடன் ஏகத்துக்குச் சண்டை போட்டாள்.

''பெத்த தாய் உசிர விட உன்னோட காதல் பெரிசா ஒரு கல்யாணத்தை பண்ணித்தொலை''

அச்சிறு பெண்ணின் சொற்கள் என்னை அதிர்வுறச் செய்தன.

''அன்னைக்கு உறவு வேணாம்னு சொன்ன, இன்னைக்கு என் வீடு உனக்குச் சொந்தமா''

முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

''அம்மாவின் கைகளைப் பிடித்தபடி என்னை மன்னிச்சிருமா'' என்றேன்.

''நீ என்ன தப்பு பண்ணின, காதலிச்சிட்டுதான இருக்க உன் மேல, அந்தப் பொண்ணு மேல கோபம் எல்லாம் இல்லைப்பா, தங்கமான பொண்ணுப்பா ஏனோ அவளுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை'' அம்மாவின் அந்த மனமாறுதல் என்னை என்னவோ செய்தது. அன்று இரவே அம்மா இறந்து போனார்.

சுபா கதறி அழுத காட்சி என்னை என்னவோ செய்தது. ஈமகாரியங்கள் முடித்த பின்னர் வேலைக்குச்  செல்ல கிளம்பினேன். அப்பா என்னுடன் வர மறுத்தார். தங்கையிடம் அப்பாவை அழைத்து போகச்  சொன்னேன். அங்க என்ன வாழுது என்றாள். அம்மாவின் நகைகள், புடவைகள் எல்லாம் என் தங்கைக்கு என ஆனது. அப்பாவை அழைத்துச் செல்ல தங்கை மறுத்த கணத்தில் அப்பா உடன் செல்ல மறுத்தார். சுபாவும் அங்குதான் நின்று கொண்டு இருந்தாள்.

''டேய் பெத்தது நீங்க உங்க வழினு போயீட்டீங்க, பெறாத மகளா எங்களை கண்ணுக்குள்ள வைச்சி பாத்துக்குச்சி'' சுபாவை கைகாட்டி குலுங்கி குலுங்கி அழுதார். எனக்கு அப்போது சுர் என தைத்தது. வலித்தது.

சுபா வேறொரு அறை சென்று மிச்சம் அழுதாள்.

அவளைத் தேற்றிட நன்றி சொல்லிட எங்கே சொற்கள் தேடுவேன். பார்த்துக்கோ சுபா என வேலைக்குச் சென்றேன். இனம் புரியாத வலி. 

மேலாளரிடம் வேலையை ராஜினாமா செய்வதாக சொன்னேன். அவர் என்னை சத்தம் போட்டதில் மொத்த அலுவல சுவர்களும் விரிபட்டன. முகத்தில் முழிக்காதே என சொன்ன சொற்களில் சட்டென எழுந்தேன். வீடு வந்தேன்.

ஊருக்குத் திரும்பி வந்து அப்பாவுடன் அன்றுதான் மனம்விட்டு பேசினேன். அப்பாவுடன் தங்கி அங்கேயே வேலைப் பார்க்க ஆரம்பித்தேன். அவருக்குப் பணிவிடை செய்வது நிறைவாக இருந்தது. அம்மாவைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்பார் அப்பா. எங்களை விட்டுட்டு நீ அப்படி போயிருக்கக் கூடாதுப்பா எனவும் ஊடே சொல்லிக் கொள்வார். 

பிரம்மச்சரியம் என்பது தவம். 
எவ்வித கறையின்றி 
நான் வாழ்வதற்கு நீ துணை. 
உன்னை முதிர்கன்னி என்றே பிறர் 
சொன்னாலும் காதல் இளமை நீ 

சுபாவை நினைத்து கவிதை என எதையோ மனதில் உளறினேன். 

சுபாவின் அப்பாவின் நிலைமை மோசமாகியது. மருத்துவ பலனின்றி மற்றொரு உயிர் போனது. சுபா மனம் மாறவே இல்லை, நானும் மனம் மாறிக் கொள்ளவில்லை. 

சுபா தனது வேலையை விட்டுவிட்டு அவளது அம்மாவை அழைத்துக் கொண்டு குழந்தைகள் காப்பகம் ஒன்றில் வேலை பார்க்க இருப்பதாகச் சொன்னாள். எனக்கும் சரி என்றானது. அந்த வீட்டை தங்கையின் பெயருக்கு எழுதித் தந்தேன். தங்கை, என்னை மன்னிச்சிருண்ணா என ஏதேதோ சொல்லிக்கொண்டு இருந்தாள். அவளுக்கு வீடு கிடைத்த நிம்மதி. 

சில மாதங்கள் கழித்து சுபாவை குழந்தைகள் காப்பகத்தில் பார்க்கச் சென்றேன். துள்ளித்திரிந்த குழந்தைகள் பார்த்து சொன்னேன். 

''இந்நேரம் நமக்கும் இப்படி குழந்தைகள் இருக்கும்ல சுபா''

''காதல் மட்டும்'' சிரித்தாள். 

''தாய்மை என்பது ஒரு பெண்மையின் அடையாளம். அந்த தாய்மை உணர்வு வேண்டாமா சுபா'' 

சின்னக் குழந்தையை அள்ளியணைத்தாள். நானொரு காதல் அன்னை என்றாள். 

விக்கித்து நின்றேன். மற்றொரு குழந்தையை அள்ளியணைத்தேன் நான். எங்கெங்கோ சென்று நிராதவற்ற  குழந்தைகளை கொண்டு வந்து சேர்த்து இருக்கிறாள். அவளது பணி பெரியது. சில வருடங்களில் அவளது அம்மாவும் இறந்து போனார். வாழ்க்கை வேகமாக நகரத் தொடங்கியது. ஐம்பதைத்  தொட்டு இருந்தோம். அப்பா தள்ளாடியபடி இருந்தார். இன்னும் ஒரு வருசமோ இரண்டு வருசமோ ஆனா ஒன்னு நான் உன் அம்மாவை எப்படி அடம் பிடிச்சி கல்யாணம் பண்ணிகிட்டேனோ அதைப்போல நீயும் அந்தப்பொண்ணைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு அடம்பிடிச்சி நின்னுட்ட என்றார். வலியில் கூட அவருக்குள் ஏதோ ஒருவித மகிழ்ச்சி.

ஒருநாள் குழந்தைகள் காப்பகம் சென்று அவளிடம் அங்கே ஓரிடத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தேன்.

''பிரம்மச்சரிய வாழ்க்கை எதற்கு'' 

''கல்யாணம் பண்ணி குழந்தைகள் பெற்று வாழ்ந்து பின்னர் தனித்து விடப்படுவது கொடுமை தீபக்'' 

எனக்கு அதன் பொருள் புரிந்தது. 

''இது மானுட வாழ்க்கை அல்லவே. காதல் புரிந்து கல்யாணம் பண்ணி இல்லறமே நல்லறம் சுபா'' 

''அது சாதாரண மனிதர்கள் செய்வது. உனக்கு அதில் உடன்பாடு இல்லை'' அழுத்தமாகச்  சொன்னாள். 

''என்ன சுபா, இத்தனை வருடங்கள் காதல் மட்டும் எனச் சொல்லிட்டே இருந்த எதற்கு இத்தனைப் பிடிவாதம் இப்போவாச்சும் சொல்லு''

''மனசுக்குப் பிடிச்சவங்க நிறைய. காதலானது கல்யாணம் எனும் சடங்குக்கு உட்பட்டால் களங்கம் தீபக்.  கலவியில் ஈடுபட்டு சுகித்திருப்பது காதல் இல்லை. இனப்பெருக்கம் செய்யப் பிறந்த பிறவிகள் இல்லை நாம். காதல் மட்டும் புரிந்திடவே நாம்''

''இப்படியே அனைவரும் நினைச்சா இந்த பூமி என்ன ஆகும்'' 

என் கண்களை பார்த்துக் கொண்டே இருந்தாள் . நான் அதில் கலங்கி இருந்தேன். 

''இவ்வுலகம் எப்படி உருவாச்சி தீபக்'' 

அம்மா என ஓடிவந்து ஒரு குழந்தை சுபாவின் கழுத்தை அணைத்து பின்னால் வந்து கட்டிக்கொண்டது. 

அந்தக் குழந்தையை உச்சி முகர்ந்தாள். 

''என்னம்மா''

''சாமி கும்பிட வாம்மா''

நானும் சுபாவுடன் சென்றேன்.

''என்ன கும்பிட்ட சுபா''

''இந்த அண்டப் பெருவெளியில் கடவுள் ஒரு புதிர். உயிர் இன்னொரு புதிர். கும்பிட எதுவும் இல்லை''

''இந்த உலகம் கடவுள் படைத்தது என் புரிதல்''

சிரித்தாள். 

''என்ன''

''என்னை இப்பவும் நீ இரசிக்கிறல'' 

''இத்தனை வருடங்கள் இதேதான்''

அதற்கு பின்னர் சுபா சொன்ன விசயம் கேட்டு அதிர்ந்தேன். அப்படி நடக்க சாத்தியமில்லை என்றுதான் எனக்குத் தோனியது. ஒரு செல் உயிரி சரி. எப்படி இப்படி அவள் சிந்தித்தாள்? பல செல்கள் கொண்ட உயிரி தானாக பல்கி பெருகும் காலநிலை ஒன்று வரும் எனவும் அங்கே காதல் மட்டும் நிறைந்து இருக்கும் எனவும் எப்படி அவளால் யோசிக்க முடிந்தது.

''சுபா புரியலை''

''பல செல்கள் உயிரியில் இருக்கும் ஸ்டெம் செல்கள் பருவகாலத்தில் உடலில் இருந்து உதிர்ந்து புதிய அதேபோல உயிரிகள் தோன்றும் தீபக்''

''விதை இல்லாத மரம் சாத்தியமில்லை'' 

''தண்டு வெட்டி மரம் வளரும்'' 

''நினைச்சேப் பார்க்க முடியலை சுபா''

''இனப்பெருக்கத்தில் இரண்டு வகை எப்போதுமே இருக்கு, எப்போ காதல் மட்டும்னு ஆகுதோ அப்போ நான் சொன்னது நடக்கும், மனுசங்க கல்யாணம் குழந்தைகள்னு விருப்பம் கொள்ளாத காலம்னு ஒன்னு உருவாகும் அப்போ நான் சொன்ன ஸ்டெம் செல்கள் குழந்தைகள் உருவாகும்''

அவளது சிந்தனை என்னவோ செய்தது. சில வருடங்கள் கழித்து அப்பா இறந்து போனார்.  மணமுடிக்காமல் காலம் காதலினால் மட்டுமே கடந்தது.

''ஏதேனும் வருத்தம் இருக்கா தீபக்''

''காதல் மட்டும்''

உடலைவிட்டு உயிர் பிரியும் காலம் நெருங்கியது. சுபா ஆவலோடு தழுதழுத்த குரலில் சொன்னாள். 

''இதோ அறிவியல் கண்டுபிடித்துவிட்டது, பல செல்கள் உயிரி தானாக பல்கும், பரிணாமத்தில் ஒரு மாற்றம் நிகழும். இனப்பெருக்க உறுப்புகளற்ற உயிரிகள் தோன்றும்''

''இல்லை சுபா, அப்படியே நிகழ்வுகள் உண்டானாலும் இந்த உலகம் இப்படியே இருந்தால் தான் நல்லது. காதல் புரிவது அதிசயம். அதிலும் காதலுக்கு மட்டுமே வாழ்வது ஆச்சரியம்''

மலர்ந்த முகத்துடன் கண்கள் மூடினாள். அவளது விழிப்பார்வையில் இனி நான் விழமாட்டேன் என எண்ணியபோது என் கண்கள் மூடியது. காதல் மட்டும்.