Wednesday 31 October 2012

அல்வா கிண்டும்

நடிகையாகும் முன்னரே
நன்மங்கை
அட்டகாசமாய் கிண்டுவார் அல்வா
அல்வாவின் ருசியை
ஆர்ப்பரித்து பேசி செல்வர்

பாதம் அல்வா பாங்குடனே
பிஸ்தா அல்வா பிசகாமல்
கேரட் அல்வா கவனத்துடன்
இனிப்பை அளவுக்கு
சற்று தூக்கலாய்
கிண்டிய அல்வாவுக்கு
கிறங்கித்தான் போவோர் பலர்

நடிகையான பின்னரும்
நன்றாகவே கிண்டுவார் அல்வா
அல்வாவின் பக்குவம்
அவருக்கு மட்டுமே தெரிந்தது போல்
தினமும் கிண்டித்தான் வைப்பார்

அல்வாவை எவருக்கும் 
அவராக சென்று தந்ததில்லை 


அரசியலுக்கு வந்த பின்னர்
அல்வாவின் தேவை
அளவுக்கும் அதிமாகிப் போனது
ஆட்கள் எல்லாம்
வைத்துக் கொள்வதில்லை
அவரேதான் எசமானி
சாமானியனும் மறுக்காமல்
அல்வாவின் பெருமை பேசுவர்

அளவுக்கு அதிகமான அல்வா
கிண்டியவருக்கு ஒருபோதும்
தந்ததில்லை பிரச்சினை
தானாக சென்று
உண்டு களித்து இருந்தோர்க்கு
உள்ளதே எக்கணமும் பிரச்சினை

அல்வாவை எவருக்கும்
அவராக சென்று தந்ததில்லை
சொல்வாக்கு இல்லாது போனாலும்
செல்வாக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை
கிண்டித்தான் மட்டுமே வைக்கிறார் அல்வா


Tuesday 30 October 2012

காதலில் வக்கிரம்

எனக்கு நீ கிடைக்காமல் போனால் 
எவருக்குமே நீ கிடைக்காமல் 
போகக் கடவது என்றே 
சாபம் இட்டதுண்டு 

தினந்தோறும் நீ வரும் பேருந்தில் 
அன்று நீ வராததை கண்டு 
அந்த பேருந்து கவிழட்டும் 
என்றே நினைத்தேன் 

உனது அழகிய முகத்தை 
நான் பார்க்கக் கூடாது 
என்று சொன்ன உன் தந்தைக்கு 
பாடம் புகட்ட 
அமிலத்தை அவரது  முகத்தில் 
தெளித்துவிட துடித்தேன் 

எனது காதலை உன்னிடம் 
சொன்னபோது 
நீ மறுத்து வெறுத்து ஒதுக்கிய 
மறுகணம் 
நான் இறந்துவிடலாம் என்றே 
கலங்கினேன்

காதலும் காதல் சார்ந்த 
இடம் கல்லறை 
என அனைவரும் 
சொல்லிவிடட்டும் என 
உன்னையும் அன்றே 
கொன்று ஓரிடத்தில் நம்மிருவரையும் 
புதைக்க பயணித்தேன் 

உள்ளத்தில் உள்ள காதலை 
தேக்கி வைக்க இயலாமல் 
உள்ளத்தில் உள்ளது எல்லாம் 
உன்னிடத்தில் மீண்டும் சொன்னபோது 
நான் தவிக்க வேண்டும் என்றே 
நீ என்னை தவிர்ப்பதாக சொன்னாய் 

என்னில் மட்டும் இல்லை 
காதலில் வக்கிரம் 
உன்னிடத்திலும் உண்டு 
கண்டுகொள்!

Saturday 27 October 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 11

கர்ம வினை என்று சொன்னபோதே  எனக்குள் ஏற்பட்ட குழப்பம் பெரியதாகவே இருந்தது. இது குறித்து நான் காயத்ரியிடம் மேலும் விவரமாக கேட்க நினைத்தேன். ஆனால் அவளோ மிகவும் அமைதியாக இருந்ததால் எப்படி கேட்பது என்றே நினைத்தேன்.

''அப்படினா நீ என்னை மறந்துடுவியா'' என்றேன். அதாவது மனிதர்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே எல்லாம் இருந்தால் காயத்ரி ஒன்று ஆம், அல்லது இல்லை என்று சொல்லிவிடலாம். பதிலுக்கு காத்து இருந்தேன்.

''அதன் சொன்னேனே கர்ம வினைன்னு'' என்றாள். 'புரியலை கொஞ்சம் விளக்கமா சொல்' என்றேன். 'நீ இந்த காலேஜுக்கு வர முன்னால என்னைப் பார்த்தியா? இதற்கு முன்னால எத்தனை கேர்ல்ஸ் நீ பாத்து இருப்ப. என்கிட்டே வந்து எதுக்கு லவ் சொன்ன'. இதெல்லாம் கர்ம வினை என்றாள்.

ஒன்று நடப்பதும், நடவாமல் இருப்பதும் கர்ம வினை எனில் நமது கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறது என்பதற்கே ஒரு அர்த்தமும் இல்லாமல் போகிறதே என நினைத்து ''நாம நினைச்சா எல்லாத்தையும் ஒரு கட்டுக்குள்ள கொண்டு வந்துராலாமே'' என்றேன். ''கட்டுக்குள்ள கொண்டு வந்துதான் பாரு'' என்றாள்.

அதற்கு மேல் அங்கிருக்க விருப்பமில்லை. வீடு நோக்கி நடந்தோம். அம்மாவிடம் இது குறித்து கேட்க வேண்டும் போலிருந்தது. வழக்கத்திற்கு மாறாக காயத்ரியின் அக்கா வீட்டிற்கு வந்திருந்தார். அம்மாவின் முகம் கவலையில் தோய்ந்திருந்தது.

''என்னம்மா, ஒரு மாதிரியாய் இருக்க'' என்றேன். நான் வந்ததை கூட கவனிக்காதவர் போலே தென்பட்டார். மீண்டும் அம்மாவை உலுக்கினேன். 'வாப்பா' என்றவர் அடுக்களையில் நுழைந்தார். காயத்ரி என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

''அம்மா'' என்றேன்.

''பிரச்சினைக்கு மேல பிரச்சினை வந்தா என்னடா பண்ண முடியும்?'' என்ற அம்மாவின் வார்த்தை சற்றே நடுக்கம் கொண்டிருந்தது. ''விவரமா சொல்லும்மா'' என்றேன்.

''காயத்ரியோட அக்காகிட்ட ஒருத்தன் இன்னைக்கு வம்பு பண்ணியிருக்கான். இவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லிட்டுப் போய்ட்டானாம். அவனை இவளுக்கு தெரியும்னு சொல்றா'' என்றாள். ''பூ இவ்வளவுதானாம்மா, இதுக்கு எல்லாம் நீ எதுக்கு நடுங்குற'' என்றேன். ''டே பெரிய விவகாரமா ஆயிரமாடா'' என்றார் அம்மா.

''எல்லாம் கர்ம வினைம்மா'' என்றேன். ''என்ன சொன்ன நீ, கர்ம வினையா'' என்றார் அம்மா. ''ஆமாம்மா காயத்ரி அப்படித்தான் சொன்னா'' என்றேன். ''ம்ம் நாம வாங்கி வந்த வரம் அப்படி'' என்றார் அம்மா. ''யாரும்மா நாம கேட்காத வரத்தை எல்லாம் கொடுத்தது'' என்றே சொல்லி வைத்தேன். அதற்குள் அம்மா காபி எல்லாம் தயாரித்து முடித்து இருந்தார்.

நாங்கள் அனைவரும் அமர்ந்து முறுக்குதனை கடித்துக் கொண்டு காபிதனை அருந்தி கொண்டிருந்தோம். காயத்ரியின் அக்காவிடம் பையனின் விபரம் வாங்கிக் கொண்டேன். காயத்ரி நீ எதுவும் வம்பு பண்ணாத என என்னை எச்சரித்தாள்.

''பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள்'' என்றேன். இப்போ எதுக்கு சம்பந்தமில்லாம பேசற என்றார் அம்மா. ''தூசி துகளாகி, துகள் ஈறாகி, ஈர் பேனாகி, பேன் பெருமாள் ஆனது, அந்த பெருமாளை ஆக்கியது பெண்கள்'' என்றேன். காயத்ரி என்னை கோபமாகப் பார்த்தாள்.

(தொடரும்)

Tuesday 23 October 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 6

முன்பகுதி 

மாணிக்கவாசகர் முக்காலத்தை அறிந்து இருந்தாரா என்பதற்கான சான்றுகள் கிடைப்பதற்கு அரியதாகவே இருக்கிறது. ஆனால் முனிவர்கள் அனைவரும் முக்காலமும் அறிந்தவர்களாகவே காட்டப்பட்டு வருகின்றனர்.

இதற்காக ஒரு கதை கூட சொல்லப்பட்டு இருக்கிறது. பிருகு முனிவர் மிகவும் ஆணவம் கொண்டவர் என்றே கருதப்படுகிறது. இவ்வுலகை ஆட்டிப்படைக்கும் பிரம்மா, சிவன், விஷ்ணு என மூவரும் இவருக்கும் கீழேதான் எனும் மமதை இவருக்கு மிகவும் அதிகமாகவே உண்டு. முன்னொரு காலத்தில் எல்லாம் கற்றறிந்தவர்கள் பெரும் மதிப்புக்கு உரியவர்களாகவே போற்றப்பட்டு வந்தனர். அதன் காரணத்தில் முனிவர்கள், சித்தர்கள் போன்றோர்கள் எல்லாம் கடவுளர்களால் போற்றப்பட்டு வந்தார்கள்.

புராணங்களில் கூறப்பட்டவை புரட்டுகள் என்றே வைத்துக் கொண்டாலும் எழுதப்பட்ட விசயங்கள் எல்லாம் மிகவும் ஆச்சரியமும், அதே வேளையில் சுவராஸ்யமாகவும் இருப்பதை எவரும் மறுக்க இயலாது. எள்ளலுக்கு உட்படும் புராணங்கள் எனினும் எழுதப்பட்டவைகளை மாற்றி அமைத்தல் என்பதும், திரித்து கூறுதல் என்பதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

மகாபாராதம் என சொல்லப்படும் இதிகாசம் இந்தியாவின் வரலாறு என்றே குறிப்பிடப்படுகிறது. அஸ்தினாபுரம் என்ற ஒரு இடம் இருந்ததாக, இருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இறந்த காலத்தை தோண்டி எடுக்கும் திறன் அகழ்வாரய்ச்சியாலர்களுக்கு நிறையவே உண்டு. படிமங்களை கொண்டு இறந்த காலம் உணரும் திறனை அவர்கள் வளர்த்து கொண்டார்கள் என்பது போல ஒரு தோற்றம் இருக்கத்தான் செய்கிறது.

கடவுளர்களால் போற்றப்பட்ட பிருகு முனிவரின் சாபத்திற்கு ஆளாகிறார்கள் பிரமனும்,சிவனும். இவர்கள் இருவருக்கும் சாபம் இடுகிறார் பிருகு முனிவர். பிரமனுக்கு கோவில்களே இருக்காது எனவும, சிவனுக்கு லிங்க வடிவிலேதான் பூஜை எனவும் சொல்லி செல்கிறார். ஆனாலும் பிரமனுக்கு ஒரு கோவில் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய வழிபாட்டு முறையை கொண்டு அன்று பிருகு முனிவர் சொன்னது போல எழுதி இருக்க வாய்ப்பு இல்லை. அல்லது பிற்காலத்தில் பிருகு முனிவர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அதை பின்பற்றியும் இருந்து இருக்கலாம். ஆனால் இங்கே முக்காலத்தை நிர்ணயிக்கும் வல்லமை கொண்டவராகவே பிருகு முனிவர் போற்றப்படுகிறார்.

இதைவிட விசேசம் என்னவெனில் பிருகு முனிவர் விஷ்ணுவை காலால் எட்டி நெஞ்சில் உதைக்க, விஷ்ணுவோ பணிவுடன் அவருக்கு பணிவிடை செய்ய விஷ்ணுவுக்கு கோவில்கள் என்கிறார் பிருகு முனிவர். ஆனால் விஷ்ணுவின் மனைவி லட்சுமி பிருகு முனிவரின் வம்சமான பிராமணர்கள் வசதி வாய்ப்பு இன்றி போகட்டும் என சாபம் இடுகிறார். இங்கே எவர் பிராமணர் எனும் கேள்வி பெரிய கேள்வி? எவர் அந்தணர்? ஆனால் பின்னர் சற்று பரிவு கருதி முக்காலத்தை குறித்து வைக்கும் ஆற்றல் பெற்று பிராமணர்கள் அதன் மூலம் அவர்களது வாழ்வினை வளப்படுத்தட்டும் என்றே ஒரு வாய்ப்பு தருகிறார்.

அந்த வாய்ப்பை கொண்டு பிருகு முனிவர் ஒரு தனி சூத்திரங்கள் எழுதியதாக வரலாறு சொல்கிறது. பிருகு சம்ஷிடா எனப்படுவது அது. விநாயகரின் துணை கொண்டு எழுதப்பட்டதாக புராணம் சொல்கிறது. விஷ்ணு கூட முனிவர்களில் நான் பிருகு என்கிறார். இப்படி பல விசயங்ககளை தொகுத்து வைக்கிறார் பிருகு. ஆனால் அவை எல்லாம் பிற்காலத்தில் முஸ்லிம்கள் படையெடுப்பால் தொலைந்து போயின என்கிறார்கள். நாலந்தா பல்கலைகழகத்தில் பிருகு முனிவரின் எழுத்துகள் சேர்த்து வைக்கப்பட்டன என்றும் அந்த பல்கலைகழகம் அழிக்கப்பட்டதால் எல்லாம் அழிந்து போயின என்கிறார்கள். பிருகு முனிவரின் சீடர்கள் எல்லாம் சேர்ந்து இன்றைய மரபணுக்கள் எப்படி தொகுக்கப்பட்டதுவோ அது போன்று எல்லா உயிர்னங்களின் முக்காலங்களையும் தொகுத்து வைத்ததாகவே சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் தான் சோதிட கலை உருவானது என்றே சொல்கிறார்கள்.

என்ன இருந்தாலும் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்றே தெரியாமல் இருப்பதால் வாழ்வு சுவாரசியம் என்றும் சொல்வது உண்டு.

(தொடரும்)

Thursday 18 October 2012

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - அஷ்ஷிரியர்கள்

 முன்பகுதி 

அஷ்ஷிரியர்கள் என்பவர்கள் மூலமே ஹிட்டிடேஷ் அழிவுக்கு வந்தது எனினும் ஹிட்டிடேஷ் முழு அழிவுக்கு காரணமானவர்களை வரலாறு அதிகமாக குறித்து வைக்கவில்லை. இந்த அஷ்ஷிரியர்கள் முதன் முதலில் ராணுவ கட்டமைப்பை வரலாற்றில் உருவாக்கியவர்கள் எனலாம். தற்போதைய ஈராக்கிற்கு வடக்கு பகுதியில் இவர்களது அரசமைப்பு இருந்ததாக வரலாறு குறிக்கிறது. இவர்களது இந்த ராணுவ கட்டமைப்பின் மூலம் சுற்றி இருந்த குறும் நாடுகள் எல்லாம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின.

இவைகள் பாபிலோனியன் கலாச்சாரத்தை பெரிதும் பின்பற்றுபவர்களாகவே இருந்து வந்தார்கள். இந்தோ ஆரியன் மற்றும் செமிதீஸ் எனப்படும் மக்கள் இங்கு  வந்தார்கள். அச்சூர் எனப்படும் இடத்தை தலைநகரமாக கொண்டு பல வணிகத்திற்கு வித்திட்ட இடமும் இதுதான். எகிப்து நாட்டுடன் பெரும் வணிக போக்குவரத்து ஏற்பட்டது. தெற்கில் இருந்த பாபிலோனியர்களுடன் பல வேறுபாடுகளுடனே இந்த மக்கள் வளர்ந்து வந்தார்கள். பக்கத்து நாடுகளுடன் போர் புரிவது என தொடங்கி தங்களது எல்கை பரப்பை விரிவாக்கம் செய்யத் தொடங்கினார்கள் இந்த அஷ்ஷிரியர்கள்.

ஒரு எல்கையை பிடித்துவிட்டால் அங்கே இருக்கும் மக்களை தங்கள் பகுதிக்கு கொண்டு சென்று விடுவார்கள். இதன் மூலம் அந்த எல்கை மக்கள் எந்த ஒரு பிரச்சினையும் பண்ண வாய்ப்பிலாமல் செய்து வந்தார்கள். கடல்வாழ் மக்கள், அரமேனியன் எனப்படுபவர்கள் மிகவும் அச்சுறுத்தலாக இருந்தார்கள். மேசபோடோமியா நகரங்களுக்கு இவர்கள் சிம்ம சொப்பனமாக  விளங்கினார்கள். பழைய அஷ்ஷிரியர்கள் இதன் மூலம் சற்று பின் தங்கினார்கள். அதற்கு பின்னர் வந்த அஷ்ஷிரியர்கள் இழந்த இடங்களை மீட்டு மேலும் எல்கையினை விரிவுபடுத்தினார்கள்.

அஷ்ஷிரியர்கள் புயல் போல போரிடுவார்கள். உடைகள் எதுவும் அணியாமல், உடைகள் அணிந்து இருந்தாலும் அதை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு கத்தியை வட்டமாக சுழற்றுவார்கள். அவர்களின் போர் முறை சிங்கம் சினம் கொண்டது போலவே இருக்கும் என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இவர்களின் அரசமைப்பு முறையானது ராஜா, மற்றும் கவர்னர்களை கொண்டது. கவர்னர்கள் சாலை அமைப்பு, ராணுவம், வணிகம் என் எல்லாவற்றையும் மேற்பார்வை செய்வார்கள். ராணுவ அமைப்புக்கு மிகவும் கடுமையான பயிற்சி முறை எல்லாம் தரப்படும். மலைகளில் எல்லாம் சென்று போரிடும் பயிற்சி முறை மேற்கொண்டு இருந்தார்கள். இவர்களுக்கும் கடவுள் உண்டு. பாபிலோனியன், அச்சூர் எனப்படும். ஆனால் மத கட்டுபாடுகளை மக்கள் திணிப்பதை அறவே தவிர்த்தார்கள்.

இவர்கள் போரிட்டதே வணிகத்தை பெருக்கி கொள்ளத்தான் என்பது போல வணிக போக்குவரத்துதனை மிகவும் சிறப்பாக அமைத்து கொண்டார்கள். பல இடங்கள் இவர்களுக்கு கப்பம் கட்டும் இடங்களாக மாறின. வேலைக்காரர்களாக வெற்றி பெற்ற இடங்களில் இருந்து மக்களை இறக்குமதி செய்து கொண்டார்கள். எதிரிகளை மிகவும் துச்சமாகவே மதித்தார்கள். எரிப்பது, வெட்டுவது போன்ற கொடும் தண்டனைகள் வழங்கிய வழக்கம் இவர்களிடம் இருந்தது. இருப்பினும் அஷ்ஷிரியர்கள் மீண்டும் தாழ்வினை அடைந்தார்கள். இவர்களின் கொடுமையான முறை இவர்களுக்கு எதிராக அமைந்தது.

அதற்கு பின்னர் டிக்லாத் பிலேசெர் என்பவர் ராணுவத்தை, அரசு அமைப்பை மிகவும் நெறிபடுத்தினார். உரார்டன்ஸ் எனப்படுபவர்கள் அஷ்ஷிரியர்கள் வணிக போக்குவரத்துக்கு பெரும் தடையாக இருக்க அவர்களை இவர் வென்றது மூலம் மேலும் அஷ்ஷிரியர்கள் தழைக்க ஆரம்பித்தார்கள். இவர் மக்களை பல இடங்களுக்கு இடம் மாற்றம் செய்து ஒரு ஒற்றுமையை உருவாக்கினார் பாபிலோநியர்களையும் இவர் வென்றார். இவருக்கு பின்னர் வந்த சார்கன் என்பவர் எல்கையை மென்மேலும் அதிகரித்தார். இவரின் மகன் தங்களுக்கு எதிராக இருந்த பாபிலோனியாவை முற்றிலுமாகவே அழித்தார். அவருக்கு பின் வந்த இசர்கடன் பாபிலோனியாவை மீண்டும் நிர்மானித்தார்.

இவருக்கு பின்னர் வந்தவர்கள் திறமையற்று போனதால் சைத்தியன்ஸ் மற்றும் சுற்றி இருந்த குறும் நாடுகள் எல்லாம் இந்த அஷ்ஷிரியர்கள் முழுவதுமாக அழிந்து போக காரணமானார்கள். அஷ்ஷிரியர்கள் அற்புதமான நூலகம் ஒன்றை உருவாக்கி இருந்தனர். சுற்றி இருந்த நாடுகள் கொண்ட வெறுப்பு அந்த நூலகத்தையும் அழித்தது. வாழ்க்கையில் சீரழியாமல் இருக்க திறமையானது தொடர்ந்து சந்ததிகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால் போர் மட்டுமே திறமை என்றாகாது. மக்களை தம் வசப்படுத்துவது மூலம் மட்டுமே ஒரு அரசு சாதிக்க முடியாது. மக்களுக்கு வேண்டிய தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

பாபிலோனியர்கள் யார்?

(தொடரும்) 

Wednesday 10 October 2012

அவனுடன் அவள் ஓடிப் போய்விட்டாள்

ரமேஷும், ராதிகாவும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். முதலில் காதல் இனிக்கத்தான் செய்தது. சில வருடங்களில் இனித்த காதல் சில காரணங்களால் புளிக்க ஆரம்பித்தது. அவர்களின் காதலில் கொஞ்சம் இனிப்பை அதிகமாக சேர்த்து இருக்கலாமே என நீங்கள் கேட்கலாம். ஆனால் பழக பழக பாலும் புளிக்கும் என்பது எவரோ எழுதி வைத்தது, எதற்காக எழுதி வைத்தார்கள் என்றெல்லாம் நீங்கள் கேட்க வேண்டியது இல்லை.

திடீரென ஒருநாள், ராதிகா சிவக்குமாருடன் ஓடிப் போய்விட்டாள் எனும் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தான் ரமேஷ். அவன் இந்த விசயத்தை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. சிவக்குமார், ரமேஷிற்கு பழக்கம் தான். ஆனால் ராதிகாவும், சிவக்குமாரும் நெருக்கமாக பழகியதை ரமேஷ் பார்த்தது கூட கிடையாது. இப்படி எனது தலையில் மண்ணை வாரி போட்டு விட்டாளே என கதறினான், புலம்பினான் ரமேஷ். இப்போது கூட எதற்கு இப்படி ஒரு அபசகுனமான ஒரு முடிவு என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நடந்தது அதுதானே, அது இல்லை என்று எப்படி மறுக்க முடியும்?

சில நாட்கள் கழிந்தது. ஒருநாள் வேறொரு ஊரில் பேருந்து நிலையத்தில் மோசமான நிலையில் இருந்த ராதிகாவை சந்தித்தான் ரமேஷ். தன்னை ஏமாற்றிவிட்டு போனவள் தானே எனும் ஆத்திரம் இருந்தாலும் அவள் இருந்த நிலை அவள் மீது பரிதாபம் கொள்ளச் செய்தது. என்ன ஆயிற்று என்றே வினவினான். தன்னை சிவக்குமார் ஏமாற்றிவிட்டதாக ரமேஷின் காலில் விழுந்து புலம்பினாள் ராதிகா.  ரமேஷிற்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. தன்னுடன் அவளை உடன் அழைத்துச் சென்றான். இப்போது கூட நீங்கள் கேட்கலாம், எதுக்கு அவன் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனை ஏமாற்றியவளுக்கு கடவுள் தகுந்த தண்டனை கொடுத்து விட்டார், அப்படியே விட வேண்டியது தானே என. ஆனால் நடந்தது அதுதானே.

ரமேஷின் வீட்டில் ராதிகாவை ஏற்றுக் கொள்ளவில்லை. ராதிகாவை தலைமுழுகி விட்டதாக ராதிகா அப்பா புலம்பித் தள்ளினார். என்ன செய்வது என யோசித்தான் ரமேஷ். ராதிகாவிடம் ஒரு திட்டம் சொன்னான். ராதிகாவும் சம்மதித்தாள். அடுத்த நாள் காலையில் ரமேஷ் கூட ராதிகா ஓடிப்போய்ட்டா என்றே ஊரெல்லாம் பேசிக் கொண்டிருந்தது. இப்போது கூட நீங்கள் நினைக்கலாம். ரமேஷ் தானே ராதிகாவிடம் இதற்கு யோசனை சொன்னான். எதற்கு ரமேஷ் ராதிகாவை கூட்டிட்டு ஓடிப்போய்விட்டான் என ஊர் சொல்லவில்லை என. அதுதான் நமது கட்டுப்பெட்டி கலாச்சாரம்.

இப்படித்தான் நீங்கள் தொலைகாட்சித் தொடர்களிலும், செய்தித் தாள்களிலும், உங்கள் கிராமங்களிலும், நகரங்களிலும், சிலரது வீட்டிலும் கூட நடந்து கொண்டு இருப்பதை கண்டு இருப்பீர்கள். நீங்கள் மிகவும் நல்லவராக இருந்தால் அப்போதெல்லாம் என்ன மனுசங்க என்று கோபம் உங்களுக்குள் கொப்பளிக்கும். இவர்கள் எல்லாம் எதற்கு வாழ்கிறார்கள் என ஆதங்கம் கொள்வீர்கள். அதுவும் கற்பனை பாத்திரங்களை கண்டு வெகுண்டு எழுவீர்கள். அதுவே நீங்கள் செய்ய வேண்டிய வாய்ப்பு வந்தால்  எப்படி அவ்வாறு நடந்தீர்கள் என சிந்தித்து பார்க்க கூட உங்களுக்கு நேரம் இருக்காது. ஓடிப்போவதில் மட்டுமே குறியாக இருப்பீர்கள். எதற்கு இப்படி? கர்ம வினையா? கவனக்குறைவா? ஆசையின் உந்தலா? என்ன காரணம்? இதற்கெல்லாம் மூளையின் செயல்பாடுகள், எண்ணங்கள் என்றே குறிப்பிடுகிறார்கள்.

மெண்டல் சிமுலேசன் அதாவது மூளை பாவனை என்று இதனை குறிப்பிடலாம். அதாவது இந்த மூளை பாவனையில் உண்மையாக நடந்த நிகழ்வையோ, அல்லது கற்பனையாக ஒரு நிகழ்வையோ பாவனை செய்து பார்ப்பது. உதாரணத்திற்கு இன்று என்ன நடக்கும் என யோசனை செய்வது, நடந்த போன நிகழ்வுகளை அசை போடுவது, வினோதமான கற்பனை செய்வது, நடந்த ஒன்றை இப்படி செய்து இருக்கலாமே, அப்படி செய்து இருக்கலாமே என நினைப்பது போன்றவை மூளை பாவனையில் அடங்கும். இப்படிப்பட்ட மூளை பாவனை மூலம் ஒரு காரியத்தை மிகவும் அழகாக சாதிக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.

அதாவது நாம் இந்த விசயம் தான் நடக்கும் என மூளை பாவனையில் நாம் ஒரு சில விசயங்களை அணுகும்போது அந்த நம்பிக்கை தன்மையில் அந்த விசயங்கள் உண்மையிலேயே நடந்துவிடும் எனும் நம்பிக்கை பிறக்கிறது. நான் நினைத்தேன், நடந்துவிட்டது என பலர் குறிப்பிடுவதை பார்க்கலாம். இதன் காரணமாக நாம் மூளை பாவனை செய்வதன் மூலம் ஒரு நிகழ்விற்கு நம்மை தயார் படுத்தி கொள்ளலாம். இப்போது ரமேஷிற்கு, ராதிகா தன்னை விட்டுப் போய்விடுவாள் எனும் ஒரு மூளை பாவனை நடந்து இருந்தால் ராதிகா ஓடிப் போனபோது அவன் அதிர்ச்சி அடைய வாய்ப்பு இல்லை என்றாகிறது. சில விசயங்கள் எ ப்படியும் நடக்கும் எனும் எல்லா வாசல்களையும் திறந்து வைத்தாலும் உயரிய எண்ணங்களே மிகவும் அவசியம் என சொல்லப்படுகிறது.

திட்டமிடலுக்கு மூளை பாவனை மிகவும் அவசியம். ஒரு நிகழ்வை நாம் செய்ய விரும்பும்போது அது குறித்து நாம் ஒத்திகை பார்க்கும் வழக்கம் பல வருடங்களாகவே உண்டு. சில நேரங்களில் அந்த ஒத்திகையை நமது மூளை செய்து பார்க்கும். விளையாட்டு வீரர்கள், தேர்வுக்கு செல்ல இருப்பவர்கள் என எல்லாரும் மூளை பாவனை செய்து பார்ப்பதால் பெரும் வெற்றி கிடைக்கும் என்றே சொல்கிறார்கள். ஒரு விசயத்தை பாவனை அதாவது கற்பனை செய்யும் போது நமது ரத்த வேகம் முதற்கொண்டு பல விசயங்களில்  மாற்றம் ஏற்படுகின்றது. ஊக்குவித்தல் போன்ற செயல்பாடுகள் இந்த பாவனையின் மூலம் செழுமைப்படுத்தபடலாம்.

இந்த மூளை பாவனையின் மூலம் ஒரு எண்ணம், அந்த எண்ணத்தை செயல்முறைக்கு கொண்டு வருதல் என்பதை மிகவும் அருமையாக செய்து முடிக்கலாம் என்றே பல ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. ஒரு இலக்கு நோக்கிய பயணத்திற்கு இந்த மூளை பாவனை மிக மிக அவசியம்.

ரமேஷ் ராதிகாவிடம் நமக்கு ஒரு குழந்தை பிறந்தால் நம்மை நமது பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றே சொல்ல அதை ராதிகா ஏற்றுக்கொள்கிறாள். ரமேஷிற்கும், ராதிகாவிற்கும் குழந்தை ஒன்று பிறக்கிறது. அந்த குழந்தையுடன் ஓரிரு வருடங்களில் அவர்கள் ஊருக்கு வர அவர்களை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ரமேஷிற்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது. அதுபோலவே எப்படி நடந்தது? அதுதான் கட்டுப்பெட்டி கலாச்சாரம்.

மூளை பாவனை இரண்டு வகைப்படும். ஒன்று முடிவை பாவனை செய்வது. மற்றொன்று முடிவை நோக்கிய செயல்பாடுகளை பாவனை செய்வது. குழந்தை பிறந்தால் சேர்ந்து வாழலாம் என்பது முடிவு குறித்த பாவனை. குழந்தை பெற என்ன என்ன செய்ய வேண்டும் என்பது முடிவு குறித்த செயல்பாடுகள் பற்றிய பாவனை.

இப்போது ஒரு இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். அது குறித்து முடிவு பாவனை ஒன்றும், முடிவு நோக்கிய செயல்பாடுகள் குறித்த பாவனை ஒன்றும் தொடங்குங்கள். உங்கள் வாழ்வு வளமாகும்.




Tuesday 9 October 2012

எதற்காக பொய் பேசுகிறோம்?

''நீங்கள் பொய் பேசும் பழக்கம் உடையவரா?''

''ஆமாம், எப்போதாவது பேசுவது உண்டு''

''எதற்காக பொய் பேசுவீர்கள்?''

''தேவை ஏற்படின் அதற்காக பொய் பேசுவேன்''

''எந்த மாதிரியான தேவைகள்?''

''நான் பிறருக்கு நல்லவராக இருக்க வேண்டும் எனும் தேவை ஏற்படும் போதெல்லாம், எனது வாழ்வாதாரத்திற்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் பொய் பேசுவேன்''

''பொய் பேசுவது மிகவும் கடினமான ஒன்றா?''

''அது ஒரு கலை. எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை''

''பொய் பேசுவது ஒரு நோய் என்பது தெரியுமா?''

''இதுவரைக்கும் தெரியாது. அது என்ன நோய்?''

''பொய் ஒரு தொற்று நோய். ஒரு பொய் சொல்லிவிட்டால் அது தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கும். அது அடுத்தவரிடமும் சென்று பரவிக்கொண்டு இருக்கும். 

இதுவரை எத்தனை முறை பொய் சொல்லி இருப்பீர்கள்?''

''கணக்கில் இல்லை''

''அப்படியெனில் நீங்கள் முதலில் சொன்னது பொய்யா?''

''எப்போதாவது பொய் பேசுவேன், ஆனால் அதை கணக்கில் வைத்துக் கொண்டது இல்லை''

''நாம் பொய் பேசுவதன் உண்மையான நோக்கம் என்ன தெரியுமா?''

''பிறரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்கத்தான், இது கூடவா தெரியாது. பிறரை ஏமாற்றவும் பொய் சொல்லலாம்''

''எதற்கு பிறரை ஏமாற்ற வேண்டும்?''

''நாம் நன்றாக வாழ வேண்டுமெனில் பிறரை ஏமாற்றத்தான் வேண்டும். இது இயற்கை விதி''

''இயற்கை விதியா?''

''இல்லாத கடவுளை இருப்பதாக சொன்னது கூட பொய் தான்''

''எவர் சொன்னது?''

''ஒரு சொற்பொழிவு கூட்டத்தில் ஒருவர் சொன்னார்''

''அவர் சொன்னது உண்மை  தான் என்பது தெரியுமா?''

''ஆமாம், இல்லை இல்லை. அவர் சொன்னது பொய்''

''அது எப்படி தெரியும்?''

''எனக்குத் தெரியும்''

''நீ அவர் சொன்னதை நம்பாததால் அவர் சொன்ன விசயம் உனக்கு உண்மையாகத் தெரியவில்லை. நீ ஒப்புக் கொள்கிறாயா?''

''இல்லை, அவர் சொன்னது முழுக்க முழுக்க பொய்''

''உனக்குள் ஏற்படும் பயம் ஒன்றுதான் உன்னை பொய் சொல்ல வைக்கிறது என்பது உனக்கு தெரியுமா?''

''இருக்கலாம்'' 

''பயம் இல்லாத பட்சத்தில் பொய் சொல்ல வாய்ப்பு இல்லாமல் போகும் அல்லவா?''

''அப்படி சொல்ல முடியாது. அப்படியும் சொல்லலாம்''

''சொல்ல முடியுமா, முடியாதா?''

''முடியும், பயம்  இல்லையெனில் பொய் தேவை இல்லை''

''வாழ்வில் எந்தவொரு பயம் இல்லாத பட்சத்தில் உண்மையாக இருக்க இயலும்  என்பது தெரியுமா?''

''இதுவரைக்கும் தெரியாது, ஆனால் இப்போது தெரியும்''

''ஒன்றை தெரியாமல் சொல்வது பொய் இல்லை, தெரிந்து கொண்டே தெரியாத மாதிரி சொல்வதுதான் பொய், அதாவது தெரியுமா?'' 

''புரியலை''

''தெரியாமல் சொல்வது அறிவீனம். அறிவீனத்தை அறிவால் போக்கி கொள்ளலாம். நீ அறிவாளியா?''

''தெரியாது''

''பொய் சொல்லாதே''

''எனக்கு சத்தியமாகத் தெரியாது''

''முட்டாளாக இருப்பது எளிது. முட்டாளாக நடிப்பது கடினம். நீ முட்டாளா?''

''தெரியாது''

''பொய் சொல்லாதே''

''எனக்கு சத்தியமாக தெரியாது''

''இவ்வுலகில் எப்படியாவது வாழ வேண்டும் என்றே உயிரினங்கள் போராடுகின்றன. அதில் மனிதர்கள் விதிவிலக்கல்ல. தனது வாழ்விற்கு பங்கம் ஏற்படும் எனில் அதில் இருந்து தப்பிக்க பொய் சொல்வது மனிதர்களின் இயற்கை குணம். பொய் சொல்கிறோம் என்கிற ஒரு உணர்வு கூட அப்போது இருப்பதில்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் மனிதர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது பொய் இல்லை என்று மேலும் மேலும் பொய் சொல்வார்கள். நீ அறிவாளி இல்லை, முட்டாளும் இல்லை. அப்படியெனில் நீ என்னவாக இருக்க கூடும்?''

''எனக்கு தெரியாது. அதுதான் சொன்னேனே நான் எப்போதாவது பொய் பேசுவேன்''

''பொய் பேசுபவரா நீங்கள்! ஒருநாளைக்கு எத்தனை முறை பொய் பேசுகிறீர்கள் என்பதை குறிப்பில் வைத்து கொள்ளுங்கள். பொய் பல நேரங்களில் உண்மை போன்றே உங்களுக்குத் தோற்றம் அளிக்கும்'' 

''ஆமாம், நீங்க பொய் பேசுவீங்களா''

''பொய், அது என்னனு எனக்கு தெரியாது''

''....''



Friday 5 October 2012

சாட்டை வலிக்கிறது

ஒரு படைப்பாளியின் நோக்கம் என்ன? ஒரு திரைப்படத்தின் நோக்கம் என்ன? சமூக ஆர்வலர்களாக தங்களை காட்டிக் கொள்ள முயற்சிக்கும் படைப்பாளிகள் என்னதான் செய்ய முயற்சி செய்கிறார்கள்? ஒரு திரைப்படத்தின் நோக்கம் வணிக ரீதியாக லாபம் அடைவது ஒன்றுதான். மற்றபடி எல்லாம் சமூகத்திற்கு இதை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம், அதை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம் என சொல்லிக்கொள்வது எல்லாம் வெறும் கண்துடைப்புதான். எந்த ஒரு படைப்பாளியும் வெட்கம் கொள்ள வேண்டியது, வெட்டியாக படம் பிடிப்பதும், வெட்டியாக எழுதுவதும் தான். 

சமூக அவலங்களை தங்களது படைப்புகள் மூலம் துடைத்து எறிந்து விடலாம் என்றோ, சமூக அவலங்களை படம் பிடித்து காட்டுகிறேன் என தங்களது திறமைகளை பறைசாற்றிக் கொள்ள இவர்கள் கையாள்வது ஒரு ஊடகம். அவ்வளவுதான். 

சினிமா என்பது ஒரு தொழில். அதில் சேவை எல்லாம் செய்ய முடியாது. ஆனால் சேவை செய்வது போல நடிக்கலாம். நடித்து மக்களை கண்ணீர் விட வைக்கலாம். 'உச்' கொட்ட வைக்கலாம். படம் பார்த்து கெட்டுப் போனேன் என சொன்னவர்கள் ஏராளம். படம் பார்த்து திருந்தினேன் என சொன்னவர்கள் மிக மிக  குறைவு. ஒரு குடும்பம் திருந்தினாலே போதும் என்கிற முனைப்பு எல்லாம் திரைப்படங்களுக்கு சரிபட்டு வராது. அப்படி என்னதான் இந்த திரைப்படங்கள் சொல்ல வருகின்றன. 

அரசு பள்ளி ஒன்றின் இயலாத தன்மையை, ஒரே ஒரு ஆசிரியர் அடியோடு மாற்றி கட்டுகிறார். இது திரைப்படத்தில் மட்டுமே சாத்தியம் என்பதை எல்லாரும் அறிவார்கள். அதைத்தான் இந்த சாட்டை எனும் திரைப்படம் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் செய்து முடித்து இருக்கிறது. படத்தைப் பார்க்கும் போது ஒரு கற்பனையான உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் அவலக் காதல். இதைத் தாண்டி படிக்க வேண்டும் எனும் வேகம் பள்ளி மாணவர்களிடம் வர வேண்டும் என்பதை இந்த சாட்டை கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லி இருக்கலாம். அது இந்த கற்பனை உலகத்துக்கு இன்னமும் வலிமை சேர்த்து இருக்கும். 

அத்தனை மாணவர்கள் திருந்த ஒரு ஆசிரியர் மட்டும் பொறாமை உணர்வுடன் வலம் வருகிறார். ஆஹா மிகவும் சாமர்த்தியமாக கடைசியில் மனம் மாறுகிறார். படம் ஹீரோயிசம் சொல்லி சென்றதே தவறே அடிப்படை பிரச்சனைகளை தொட்டு செல்லாதது பெரும் குறைதான். 

நான் படித்த பள்ளி அரசு பள்ளிதான். அந்த ஊரில் தனியார் பள்ளி ஒன்றும் உண்டு. இரண்டு பள்ளிக்கும் எப்போதுமே ஒரு போட்டி இருக்கத்தான் செய்யும். தனியார் பள்ளியின் சதவிகிதம் அரசு பள்ளியின் சதவிகிதத்தைவிட கொஞ்சம் கூடத்தான். அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கு மாணவர்களை அடிக்கும் உரிமை இருந்தது. மாணவர்கள் ஆசிரியர்களை எதிர்க்கும் தன்மை அடியோடு குறைவு. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பயப்படத்தான் செய்வார்கள். போராடி படித்தும் அந்த பள்ளியின் முதல் மாணவன் பெற்றது வெறும் எழுபது இரண்டு சதவிகிதமே. இதற்கு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றம் சொல்வது எப்படி சரியாகும் என்றே இன்றும் நினைத்து பார்க்கிறேன். நான் படித்து களைத்ததை விட விளையாடி களைத்த நேரம் அதிகம். 

தன்னார்வம் இல்லாத எவரும் முன்னேறியதாகவோ, தம்மில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவராகவோ இதுவரை எந்த வரலாறும் எழுதி வைத்தது இல்லை.  

இந்த திரைப்படம் பலருக்கு தன்னார்வம் ஏற்பட வைக்க முயற்சி செய்து இருக்கிறது. ஆனால் தன்னில் ஒரு தன்னார்வம் இல்லாமல் போனதுதான் பெரும் குறை. சினிமா எப்போதும் சினிமா என்ற வட்டத்திற்குள்  மட்டுமே இருக்கட்டும். அது சமூகத்தை திருத்திவிடும் எனும் கனவு காண்போர்களுக்கு விழும் சாட்டை அடி பெரிய வலியைத்தான் தரும். 

படம் பார்த்த பின்னரும் திருந்தாத சமூகம் கண்டு இந்த படத்தை இயக்கிய, நடித்த, தயாரித்த இயக்குனர்களுக்கு வலிக்குமா?! 

Thursday 4 October 2012

நட்சத்திர பதிவர் இல்லாமல் தவிக்கும் தமிழ்மணம்

சார், உங்க பிள்ளைகள் மீது எத்தனை அக்கறை வைத்துள்ளீர்கள் என தெரிந்து கொள்ளலாமா? என்றே ராஜ் வீட்டின் உள்ளே வந்தார் ராம்.

அமருங்கள், வந்ததும் வராதுமாக என்ன கேள்வி இது. என்ன விசயம்? என்றே கேட்டார் ராஜ்.

'நேற்று தற்செயலாக உங்களிடம் பேசியபோது, உங்கள் பிள்ளைகள் எப்படி வேண்டுமெனில் இருக்கட்டும் என்று பேசினீர்கள். அது எனக்கு உறுத்தலாக இருந்தது. மேற்கொண்டு அதுகுறித்து நான் பேச வேண்டும் என சொன்ன போது வீட்டிற்கு வாருங்கள் பேசலாம், இப்போது நேரமில்லை என சொல்லிவிட்டு சென்றுவிட்டீர்கள். எனக்கு இரவெல்லாம் தூக்கமே இல்லை. அதுதான் அவசர அவசரமாக உங்களைத் தேடி வந்துவிட்டேன்''

''அவர்களின் சுதந்திரம் தான் நமது சுதந்திரம். அவர்கள் சுயமாக எல்லாம் தெரிந்து கொண்டு போராடி வளரட்டும், அப்போதுதான் வாழ்வின் அர்த்தம் புரியும் என்ற கோணத்தில் தான் நான் அவ்வாறு சொன்னேன்''

''ஒரு நல்ல பாதையை நாம் தான் காட்ட வேண்டும், அந்த பொறுப்பு எல்லா பெற்றோர்களுக்கும் உள்ளது. பிள்ளைகளின் வளர்ப்பில் அக்கறை காட்டாத பெற்றோர்களால்தான் பெரும்பாலான பிள்ளைகள் தடம் மாறி போய்விடுகின்றன''

''அப்படி எப்படி நீங்கள் சொல்லலாம்? எனது பிள்ளைகள் அப்படி எல்லாம் இல்லை. அவர்கள் மிகவும் ஒழுக்கமாகவும், நியாயமாகவும் நடந்து கொள்கிறார்கள். நான் அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன்''

''உங்கள் மனைவி உங்கள் பிள்ளைகளின் விசயத்தில் எப்படி?, ஆமாம் மனைவி, பிள்ளைகள் எங்கே?''

''அவள்  கொஞ்சம் கண்டிப்பாக இருப்பாள் , ஆனால் முழு கண்டிப்பு என்றெல்லாம் சொல்ல இயலாது. மனைவி அவளது தோழி வீட்டிற்கு சென்று இருக்கிறாள். பையனும், பொண்ணும் அவர்கள் நண்பர்களோடு விளையாட சென்று இருப்பார்கள்''

''உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் எல்லாம், அதுவும் பள்ளிகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள் போன்ற விசயங்களில் எல்லாம் நீங்கள் இருவரும் தலையிடுவது உண்டா?''

''அப்படி எல்லாம் இல்லை. எனக்கு நிறைய அலுவல்கள் உண்டு, அவளுக்கும் நிறைய அலுவல்கள் உண்டு''

''இதைத்தான் சொல்கிறேன், பிள்ளைகளின் மீதான அக்கறை என்பது மிகவும் குறைவு. எல்லா பிள்ளைகளும் கேட்டுப் போக வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இப்போதெல்லாம் இ மெயில், பேஸ்புக், டிவிட்டர் என சோசியல் நெட்வொர்க் என பெருகிக் கொண்டே போகிறது. இதில் அவர்கள் ஈடுபாடு கொண்டு தங்களது வாழ்வில் அக்கறை செலுத்தாமல் போகலாம்''

''நீங்கள் எதற்கு இப்படி என்னை பயமுறுத்துகிறீர்கள்? நானோ அவர்கள் மிகவும் நேர்மையாகவும், நல்லவர்களாகவும் இருப்பார்கள் என்றே இருக்கிறேன். இதை எல்லாம் எனக்கு சொல்ல நீங்கள் யார் என்று கேட்க வேண்டும் போல் இருக்கிறது''

''எதிர்கால சந்ததியினர், எதிர்கால சந்ததியினர் என சொல்லி நமது சந்ததியினர் பொறுப்பின்மையுடன்  நடந்து கொண்டால் எப்படி எதிர்கால சந்ததியினர் முன்னேற இயலும். எதற்கும் நான் அடுத்த வாரம் வருகிறேன். உங்கள் பையன், பெண் இருவரது பள்ளி நடவடிக்கைகள், உங்களிடம் உண்மை பேசுகிறார்களா, எப்படி நடந்து கொள்கிறார்கள் என அறிந்து எனக்கு சொல்லுங்கள். நான் இதுகுறித்து கட்டுரை எழுதி தமிழ் திரட்டி ஒன்றில் இணைக்க வேண்டும். அந்த திரட்டி நட்சத்திர பதிவர் இன்றி திணறிக் கொண்டு இருக்கிறது''

'' சரி சொல்கிறேன், வந்த உங்களுக்கு ஒரு காபி கூட தரவில்லை''

''பரவாயில்லை, அடுத்த முறை எனக்கு விருந்து வைத்துவிடுங்கள்''

ஒரு வாரம் ஒரு வினாடியில் கழிந்து போனது. ராம் ராஜுவை ஒரு பூங்காவில் சந்திக்க வேண்டும் என பிரியப்பட்டு அழைக்கிறார். ராஜ் சம்மதம் தெரிவித்து வருகிறார்.

''நீங்கள் சொன்னது சரிதான், என் பிள்ளைகள் என்னிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. அவர்கள் மிகவும் தவறான பாதையில் போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த ஒரு வாரத்தில் ஊர்ஜிதம் செய்து கொண்டேன்''

''இதற்குதான் உங்களை நான் பூங்காவிற்கு வர சொன்னேன். வீட்டில் வைத்து பேச இயலாது. சரி, தெரிந்ததும் என்ன செய்தீர்கள்''

''காட்டு கத்தல் கத்தினேன். இரண்டு அறை கூட அறைந்துவிட்டேன். இனிமேல் இப்படி நடக்கமாட்டோம் என அழுதார்கள்''

''சரியாகி விடும் என நினைக்கிறீர்களா''

''ஆமாம்''

''இதுதான் பொறுப்பின்மை. அது எப்படி ஒரு நாளில் சரியாகும். நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வர வேண்டும். பிள்ளைகள் இனி சாமர்த்தியமாக நடந்து கொள்ளப் பார்ப்பார்கள். உங்களுக்கு இதமான விசயங்களை மட்டுமே சொல்லி உங்களை மேலும் ஏமாற்றப் பார்ப்பார்கள். வயது நிலை அப்படி, அவர்களின் பழக்கங்கள் அப்படி. நிதானமாக மாற்றப் பாருங்கள்''

''கவனமாக இருக்கப் பார்க்கிறேன்''

''நீங்கள் உங்கள் பிள்ளைகளின் குருநாதர். உங்களைப் பார்த்தே உங்கள் பிள்ளைகள் வளரும். சரி போனால் போகட்டும், பாவம் என்றெல்லாம் இருக்காதீர்கள். அதிக கண்டிப்பும் அவசியமற்றது. விசயங்களை மிகவும் தெளிவாக பேசுங்கள். என்ன சொல்கிறீர்களோ அதன்போல நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒன்று சொல்லி, நீங்கள் வேறு விதமாக நடந்தால் உங்கள் பிள்ளைகள் நம்ம பெற்றோர்களே இப்படி என இறுமாப்பு கொள்வார்கள்''

''விருந்து ஒன்று ஏற்பாடு செய்கிறேன்''

''அதெல்லாம் வேண்டாம். ஒரு கட்டுரை எழுத வாய்ப்பு கிடைத்தது அதுவே போதும்''

''எனது கண்களைத் திறந்து விட்டீர்கள்''

''தயவு செய்து ஒருபோதும் மூடிவிடாதீர்கள்''. 

Tuesday 2 October 2012

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்
நீயோ என்னுள் நீயாக இருக்கத் துடிக்கிறாய்
உன்னை நான் புறந்தள்ளிச் செல்கையில்
நீ புறக்கணிக்கப்பட்டதாக புலம்புகிறாய்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

உன்னை என்னுள் சுமக்கத் தொடங்கிவிட்டால்
என்னைத் தொலைத்த நிமிடமும் அதுதான்
நீயும் நானும் ஒன்றென்றே நன்றென்றே
குருட்டு காவியமும் பாடும் நிமிடமும் அதுதான்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

ஒற்றை வரிக் கதை ஒன்று
உனக்காக மட்டும் சொல்கிறேன் இன்று
ஆற்றைக் கடக்க முனிவர் அவரொடு
அங்கே அப்பழுக்கற்ற அழகிய யுவதி
சேற்றை பூசியபடி சாமான்யன் ஒருவன்

யுவதியின் அவதியை கண்டான் சாமான்யன்
தன்தோளில் ஏறியே அமரச் செய்தான்
காற்றை போலவே கடந்தான் முனிவருடன்
மறுகரை தாண்டியதும்  யுவதி நன்றியுடன்
வணக்கம் சொல்லியே போயே போயினள்

பலநேரம் முனிவரும் சாமான்யனும் நடந்தே
வெகுதூரம் அடைந்தனர் காட்டினுள் இருட்டாய்
முனிவரோ யுவதியின் வதனம்பற்றி வினவவே
வேறு தலைதிருப்பி இறக்கியாச்சு அவளை
மனதில் இன்னும் சுமக்கிறீரோ நீர்முனிவரோ

சாமான்யன் வார்த்தை உரைத்தது சுரீரென்றே
தவம் கலைத்தே முடித்தனன் முனிவரும்
வேசம் தரித்து விஷம் கொண்டு
உலவித் திரிவது உலகில் எங்கனம்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

என்னைப் போல இருந்திட நீ நினைக்கையில் 
மண்ணுக்குள் போய்விடவே மனசும் ஏங்கும்
உன்னைப் போல நீயும் இருந்தால்
உலகம் உனக்கென்றதாகவே தினமும் தோன்றும்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

அறிவியல் சொல்லும் ஒரு கதை
சொல்லி முடிக்கிறேன் மனதில் வை
ரெட்ரோ வைரஸ் ரெட்ரோ வைரஸ்
கதையின் நாயகன் கவனமாய் கேள்
ஆர் என் ஏ கொண்ட செல்லின் அமைப்பு

அறிவியல் விதி ஒன்று
டி என் ஏ தான் ஆர் என் ஏ வாக மாறி
புரதம் உண்டாக்கும்

ரெட்ரோ வைரஸ்
உடல் செல்லுக்குள் நுழைந்தே
தன் ஆர் என் ஏவை டி என் ஏவாக்கி
உடல் செல்லை கொல்லும்

உன்னை என்னுள் பரவ விட்டால்
என்னை எனக்கு எனக்கே புரியாது
காதலி என்று சொல்லிக் கொண்டு
மனக் கதவின் ஓரம் நிற்காதே
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

Monday 1 October 2012

மத மாற்றம் மன மாற்றம் தருமா?

எனக்கு இந்த சாமியாரின் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. என்ன செய்வது என்றே யோசித்தேன். வீட்டின் வெளியில் காலாற நடந்தேன். மழை தூறல் மேனி மேல் விழ மனம் மிகவும் லேசாக இருந்தது.

நான் இந்த மதத்துக்காரன் என்றுதானே என்னிடம் இந்த சாமியார் வந்து தொலைக்கிறார். மதம் மாறிவிட்டால் என்ன என்று யோசனை வந்தது? வேறொரு மதம் மாறிவிட்டால் அந்த மதத்து குருமார்கள் வந்து தொலைப்பார்களே என யோசித்து மதமே வேண்டாம் என விட்டுவிட்டால் என யோசித்தேன். அது  வேண்டவே வேண்டாம் தந்தை பெரியார் தாடியோடு வந்து நிற்பாரே என மிகவும் அதிகமாக யோசித்தேன். எப்படியும் புதியவன் என்பதால் வேற மதத்து குருமார்கள் வர தயங்குவார்கள், அதனால் வேறொரு மதம் மாறிவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

எனக்கு எப்படி இந்த மதம் கிடைத்தது? அம்மாவிடமும் அப்பாவிடமும் கேட்டபோது அது அப்படித்தான்டா என்றே சொன்னார்கள். எனக்கு கோபமாக வந்தது. நான் எதற்கு இந்த  மதம் கொண்டவனாக திரிய வேண்டும்? எனக்கு வேறொரு மதம் வேண்டும் என்றேன்? எதற்கு என்றார்கள். என்னை கனவில் தினமும் சாமியார் தொல்லை செய்கிறார், அவரது தொல்லையில் இருந்து நான் விடுபட வேண்டும் என்றேன். கிளுகிளுப்பான சாமியாரா என்றார் அப்பா. அப்பாவை நோக்கி கொழுப்பா உங்களுக்கு என்றார் அம்மா. இனி அவர்கள் சண்டையில் எனது மத மாற்றம் மறந்து போகும் என நினைத்து அங்கிருந்து விலகினேன்.

எனக்குத் தெரிந்த மதம் மாறிய சிலரை சென்று சந்தித்தேன். நான் மதம் மாற வேண்டும் என நினைக்கிறேன், எந்த மதம் நல்லது என சொல்லுங்கள் என்றேன். ஒருவன், நான் அந்த மதத்தில் இருந்தவரை எனது வாழ்க்கை சீரானதாக இல்லை, ஆனால் இந்த மதம் வந்தவுடன் மிகவும் சீரான வாழ்க்கை வாழ்கிறேன் என்றான். என்ன காரணம் என்றேன். எல்லாம் மதம் சொல்லும் போதனை தான் என்றேன். அப்படி என்ன நீ மாறிய மதம் சொல்லிவிட்டது என்றேன். அன்பு, அன்பு அன்பு என்றான். யோசித்தேன். நான் இப்போது இருக்கும் மதமும் அப்படித்தானே சொல்கிறது என நினைத்து கொண்டு, வேறு என்ன சொல்கிறது என்றேன். மனம் நிம்மதியாக இருக்க வழி சொல்கிறது என்றான். என்ன என்ன வழிகள் என்றேன்? எனக்கு நேரமில்லை, நீ இந்த மதத்திற்கு மாறினால் எல்லாம் புரியும், முதலில் எனது மதத்திற்கு மாறு என்றான். வேறொருவனிடம் என்றேன்.

அவன் நான் மதம் மாறியதால் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது என்றான். ஏன்டா குப்பை, மதம் மாறாம இருந்தா கூட வெளிநாடு நீ போயிருக்கலாம் என்றேன். அவனோ அந்த மதத்தில் இருந்தவரை நான் குப்பை, இப்போ இந்த மதத்துக்கு வந்ததால நான் கோபுரம் என்றான். நீ என் மதத்துக்கு மாறு, அப்புறம் உனக்கு ஈசியா வெளிநாடு வாய்ப்பு வாங்கித் தரேன் என்றான். அவன் அவன் மதத்தை அவனது மதம் என சொந்தம் கொண்டாடுகிறார்களே என தோணியது. எனக்கு வெளிநாடு செல்ல வேண்டும் எனும் ஆசை நிறையவே உண்டு. வெளிநாடு செல்வதற்கு  மதம் மாற துணிந்துவிட்டேன். அவனிடம் எப்படி மதம் மாற வேண்டும் என விபரங்கள் கேட்டேன். அவன் சில நடைமுறைகள் சொன்னான். பெயர் மாற்றம், உருவ மாற்றம், பழக்க மாற்றம் என பல விசயங்கள். ஒவ்வொரு மதத்தில் இத்தனை கட்டுபாடுகளா என யோசித்தேன். ஆனால் அடுத்த நாள் அவனை வந்து பார்க்குமாறு சொல்லி சென்றான்.

முதலில் பார்த்தவனிடம் இது குறித்து விபரங்கள் சொன்னதும், அவனுக்கு அளவில்லாத கோபம் வந்துவிட்டது. என்ன காரணத்திற்கு அவனது மதத்திற்கு மாறுகிறாய், அதற்கு பேசாமல் உனது மதத்திலேயே நீ இருக்கலாம், இரண்டும் ஒன்றுதான். எனது மதம் மட்டுமே வேறு. எனது மதத்தில் சேர்வதாக இருந்தால் சொல் என சொல்லிவிட்டு போய்விட்டான். சாமியார் தொல்லை வேண்டாம் என நினைத்து வெளிநாட்டு ஆசை வந்து தொத்திக் கொண்டது. அன்று இரவெல்லாம் தூங்க வேண்டாம் என உறுதியாக இருந்தேன். தூங்கினால் தானே அந்த சாமியார் வந்து தொலைகிறார்.

''நாளைக்கில இருந்து உன் கனவுல நான் வரமாட்டேனு நினைச்சியா'' என்றார் சாமியார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. தூங்காமல் உட்கார்ந்து இருந்தாலும் இந்த சாமியார் வந்து தொலைகிறாரே என்று எரிச்சலுடன் ''ஆமாம், நீ வரக்கூடாது, நாளையில் இருந்து நான் வேறு மதம்'' என்றேன். ''மதம் மாறினால் பெயர் மாற்ற வேண்டுமே'' என்றார் சாமியார். ''நான் நல்ல பெயரை யோசித்து வைக்கிறேன்'' என்றேன். ''நானே சொல்கிறேன், உனது பெயர் மன்சவ்'' என்றார் சாமியார்.

''இதென்ன பெயர், அந்த மதத்தின் வாசனையே இல்லை'' என்றேன் நான். ''வாசனைப் பொருட்களை பெயரில் தூவு, வாசனை வரும்'' என சாமியார் சிரித்தார். ''நான் பெயர் முதற்கொண்டு எல்லாம் எனது நண்பனிடம் கேட்டுக் கொள்வேன், நீங்கள் போகலாம்'' என்று சொன்னேன். ''மதம் மாறுவதன் மூலம் மனம் மாற்றம் வரும் என நினைக்கிறாயா?'' என்றார் சாமியார். ''சாமி, மனமாற்றத்தினால் தானே  மதமே மாறுகிறேன்'' என்றேன் எகத்தாளத்துடன். ''அப்படி என்ன மனம் மாற்றம்'' என்றார் சாமியார். ''எதோ ஒன்று'' என்றேன்.

''வெளிநாடு போனாலும் அங்கேயும் என்னால் வர இயலும், இவ்வுலகம் எனக்கு சொந்தம்'' என்றார் சாமியார். ''நான் வெளிநாடு போக இருக்கிறது, உங்களுக்கு எப்படி'' என்று குழைந்தேன். ''யாம் அறிவோம், விடிந்துவிட்டது நீ உனது நண்பனை கண்டு வா'' என்றார் சாமியார்.

''ஏம்பா , உட்கார்ந்துட்டே இப்படியா  தூங்குவ, ஒழுங்காப் போய் படு. உட்கார்ந்துட்டே கனவு காண்றது. உனக்கு ஒருத்திய கட்டி வைச்சாத்தான் நீ எல்லாம் உருப்படுவ'' என அம்மாவின் சத்தத்தில் அலறிக் கொண்டே எழுந்தேன்.

அப்போது தொலைபேசி ஒலித்தது. அம்மாவே எடுத்தார். ''ரொம்ப சந்தோசம்டி, பையனும், அம்மாவும் நல்லா இருக்காங்களா, நாளைக்கு வந்து பார்க்கிறேன், இன்னைக்கு நேரமாயிருச்சி'' என அம்மாவின் இந்த பக்க குரல் மட்டும் கேட்டது. அம்மா தொலைபேசியை வைத்ததும் கேட்டேன்.

''யாரும்மா போன்ல'' என்றேன்.

''என் பெஸ்ட் பிரண்டோட பொண்ணுக்கு பையன் பிறந்து இருக்கானாம், பேரு கூட முன்னமே செலக்ட் பண்ணிட்டாங்களாம்''

''என்ன பேரு'' என்றேன்.

''மன்சவ்''

''மன்சவ்'' என்னையும் அறியாமல் கத்தினேன்.

''எதுக்கு இப்படி கத்துற'' என அம்மா கத்தினார்.

மதம் மாற்றம் மன மாற்றம் தருமா? மன மாற்றமே மத மாற்றத்திற்கு காரணமா? விடை தெரியாமல் சாமியாரை மனமுருக அன்று வேண்டினேன்.