Friday 28 September 2012

தூக்கம் - வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்

மிகவும் கடுமையான உழைப்பு உழைத்தால் நன்றாக தூக்கம் வந்துவிடுகிறது. இது உடல் அயர்ச்சியை போக்க நமது உடல் தேர்ந்தெடுத்த பாதை என்கிறார்கள். மன அயர்ச்சி இருந்தால் அத்தனை எளிதாக தூக்கம் வந்து தொலைப்பதில்லை. எனக்கு மிகவும் உடல் அயர்ச்சியாக இருக்கவே நன்றாகவே உறங்கிப் போனேன். எனது குறட்டை சத்தம் கேட்டு 'கொடுத்து வைச்ச மகராசன்' என எவரோ சொன்னது காதில் விழுந்தது. உடல் உபாதைகளும், மன அழுத்தமும் இல்லாத பட்சத்தில் மிகவும் ஆழ்ந்த தூக்கம் வருமாம். 'அடிச்சிப் போட்டது போல தூங்குறான் பாரு' என இன்னொரு சத்தமும் எனது காதில் விழுந்தது. நான் தூங்குகிறேனா, அல்லது தூங்குவது போல நடிக்கிறேனா? எனக்கே மிகவும் சந்தேகமாக போய்விட்டது.

ஒருவர் நான் குறட்டை விடுகிறேன் என்கிறார், ஆனால் எனக்கு குறட்டை சத்தம் கேட்கவில்லை. அவர் பேசும் சப்தம் மட்டும் கேட்கிறது. எதைக் கேட்பது, எதை கேட்க கூடாது என்று எனது சிந்தனைகள் வரையறுத்து கொண்டுவிட்டனவா? எவருமே என்னை அடிக்கவில்லை. இன்று மிகவும் கடுமையான உழைப்பு. அந்த அலுப்பில் தூங்கிவிட்டேன். ஆனால் 'இந்த தூக்கம் உடல் அசதியை போக்க வந்தது அல்ல' என்றார் ஒருவர். விழித்து பார்க்கையில் சாமியார் நின்று கொண்டிருந்தார்.

''எதுவெல்லாம் இயற்கை தேர்வு என்று கண்டுபிடித்துவிட்டாயா'' என்றார் சாமியார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ''நான் என்ன டார்வினா? எல்லாம் இயற்கை தேர்வு என பறவைகளின் உடல் அமைப்பு, விலங்குகளின் உடல் அமைப்பு என சிறு வயதிலேயே தீவுகளுக்கு எல்லாம் சென்று ஆராய்ச்சி செய்து சொல்ல. எதற்கு கண்டுபிடிக்க வேண்டும்? எதுவெல்லாம் இயற்கையாக தோற்றம் கொள்கிறதோ அதுவெல்லாம் இயற்கை தேர்வு'' என்று முடித்தேன். ''

நன்றாக தூங்கினாய் போலிருக்கிறது'' என்றார்.

 ''ஆமாம் உடல் அலுப்பு'' என்றேன்.

 ''அது உடல் அலுப்பு மூலம் வருவது அல்ல, அது உனது மூளைக்கு தேவையான ஒரு இளைப்பாறுதல், பசித்தவுடன் சாப்பிடுவது போல அல்ல இந்த உறக்கம். இந்த தூக்கம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதை மிகவும் அதிகமாக கடைப்பிடித்தாலும் ஆபத்து, மிகவும் குறைவாக கடைப்பிடித்தாலும் ஆபத்து. கும்பகுர்ணன் அதிகம் தூங்கியதால் லங்கேஷ்வரம் ராமனால் வெல்லப்பட்டது'' என்றார் சாமியார்.

 ''சாமி இப்போ என்னதான் சொல்ல வரீங்க'' என்றேன் கலையாத தூக்கத்துடன்.

''இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் துயில் கொள்கின்றன. இந்த துயில் மூலம் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்கின்றன. எத்தனை விதமான சோகம் இருந்தாலும் ஒரு கணத்தில் கண்களை சொக்க வைக்கும் தூக்கம்தனை எவரும் என்னிடம் வராதே என வெறுத்து ஒதுக்க இயலாது. தூக்கம் வந்தே இயலும். நாம் கொட்டாவி விடும்போதே நமது மூளை தூங்கிக் கொண்டிருக்க ஆரம்பித்து விட்டது. நமது செயல்பாட்டில் வேகமானது குறைந்து போய்விடக் கூடும். இறைவனுக்கு கூட இந்த இளைப்பாறுதல் தேவைப்படுகிறது. அதனால் தான் அவரை உறங்க வைக்கும் சமய சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சயன நிலையில் இருக்கும் ரங்கநாதர்'' என சொல்லி முடிக்கும் முன்னர் நான் குறுக்கிட்டேன்.

''சாமி, தூக்கம் பத்தி சொன்னீங்க சரி, இப்போ எதுக்கு இறைவன் துயில் கொள்கிறான், சயன நிலை என வம்பு செய்கிறீர்கள்'' என்றேன்.

''இறைவனே துயில் கொள்ளும்போது அவன் படைத்த ஜீவராசிகள் எங்கனம் என்பதை குறிப்பிடவே அவ்வாறு சொன்னேன். அது இருக்கட்டும். இந்த தூக்கத்தின் மூலம் நாம் சாதிப்பது என்ன? இந்த தூக்கத்தினால் நமது உடல் மூலக்கூறுகள் அளவில் என்ன நடக்கிறது என்பதை இதுவரை முழுவதுமாக கண்டு கொள்ள முடிந்தது இல்லை. பகலெல்லாம் இருமல் மூலம் பாதிக்கப்படுவர் தூங்கியபின்னர் இருமலே இல்லாமல் உறங்கிவிடுகிறார். இது போன்ற பல விசயங்கள் புரிபடமாலே இருக்கின்றன என்பதுதான் பரந்தாமனின் விளையாட்டு'' என்றார் சாமியார்.

''பரந்தாமனின் விளையாட்டு என்பதெல்லாம் நீங்கள் ஆடும் விளையாட்டு, தூங்குவதால் அப்படி என்னதான் நமது உடலில் நடக்கிறது. விளையாடாமல் சொல்லுங்கள்'' என்றேன். எனக்கு அதிகம் தூக்கம் வந்து தொலைப்பதால் அதுபற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனும் ஒரு எண்ணம்.

''பரந்தாமனின் விளையாட்டு பற்பல. அதை முழுவதும் கண்டுகொண்டார் எவரும் இல்லை. உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின்போது ஆக்சிஜன்  சூப்பர் ஆக்சைடாக ( O2- )  மாறிவிடுகிறது. இது நமது செல்களை பாதிக்க செய்கிறது. அப்படிப்பட்ட பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்யும் ஜீன்கள் தூங்கும்போது மிகவும் அதிக அளவில் தனது வேலைப்பாடுகளை செய்கின்றன. சதா இறைவன் மீது பக்தி செல்லும் தொண்டர்கள் கூட சிறிது நேரம் இளைப்பாறுதல் அவசியம். மதியம் குட்டித் தூக்கம் போடுகிறேன் என்பது நம்மை சசுறுசுறுப்பாக வைக்கத்தான். அதிகம் சாப்பிடும்போது வளர்சிதை மாற்றம் வெகுவேகமாக நடைபெறும். அப்போது இந்த சூப்பர் ஆக்சைடு அதிக அளவில் உற்பத்தி ஆகும். அதன் மூலம் ஏற்படும் சேதாரம் சரி செய்ய இந்த தூக்கம் தேவை. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பார்கள்'' என்றார் சாமியார்.

''தொண்டர், குண்டர் அப்படி எல்லாம் பேசமா விசயத்தை மட்டும் தெளிவுபடுத்தினால் போதும்'' என்றேன்.

''இதோ உனது பக்கத்தில் உறங்கி கொண்டிருக்கும் இந்த எலி இருபது மணி நேரம் அசராமல் தூங்கும். ஆனால் யானைக்கோ இரண்டு மணி நேர தூக்கம் போதும். ஏனெனில் வளர்சிதை மாற்றம் சிறிய உயிரினங்களில் வெகு வேகமாகவும், பெரிய உயிரினங்களில் மிகவும் மெதுவாகவும் நடைபெறுவதே காரணம். அளவுக்கு அதிகமாக உண்டதால் கும்பகர்ணன் ஆறு மாதம் உறங்க வேண்டியதாகிவிட்டது'' என்றார் சாமியார்.

''கும்பகர்ணன் பக்கத்தில இருந்து பாத்தீங்க'' என நான் சொன்னதும்

''''முக்காலமும், எக்காலமும் யாம் அறிவோம், ஆனாலும் தூக்கத்திற்கான இந்த காரணம் தவறு என்போர் உண்டு. வேறு சில காரணங்கள் என நமது உடல் உணவை செரிக்கும்போது உண்டாகும்  சக்தி மூலக்கூறு அளவு குறைந்துவிடும் பட்சத்தில் நமக்கு தூக்கம் வந்தவிடும். இந்த தூக்கம் மூலம் அடினோசின் ஏஎம்பி உருவாக தயாராக இருக்கும். மேலும் மூளையின் நரம்பு மண்டலமானது ஒரு நாளில் பல புதிய புதிய நரம்பியல் பாதையை உருவாக்கி வைத்து இருக்கும். அதில் எது எது அவசியமற்றதோ அதை எல்லாம் நீக்கி நம்மை புத்துணர்வுடன் வைக்கும். அதோடு மட்டுமல்லாமல் நமது மூளை நமது நினைவுகள், கற்று கொண்டவை போன்ற பல விசயங்களை பரிசீலனைக்கு உட்படுத்தவே இந்த தூக்கம் வருகிறது'' என்றார் சாமியார்.

''நீங்க சொன்னது எல்லாம் இயற்கை தேர்வு. தூக்கம் நமக்கு இயற்கை கொடுத்தது. தூக்கம் கிடக்கட்டும், நாம எதுக்கு முழிச்சிட்டு இருக்கனும்?'' நான் கேட்ட கேள்வியில் சாமியார் நிலைகுலைந்து போயிருப்பார் என்றே கருதினேன்.

''நாம முழிச்சிட்டு இருக்கிறதுக்கு எப்போதும் பரந்தாமன் புகழ் பாடத்தான். நாம சாப்பிட, நம்மை பாதுகாக்க, நமது இனத்தைப் பெருக்க நாம முழிச்சிட்டு இருக்கணும்னு சாதாரண மனுசாள் சொல்வாங்க. ஆனா எப்பவும் அவன் புகழ் பாடத்தான் நாம முழிச்சிட்டு இருக்கணும்'' என்று சாமியார் சொல்லி முடித்ததும் சட்டென விழித்தேன்.

''நல்லா குறட்டை விட்டடா'' என அப்பாவும், ''அடிச்சிப் போட்ட மாதிரி தூங்கினடா'' என அம்மா சொன்னதும் தூக்கத்தில் வரும் இந்த கனவு மூளையின் வேலையோ? என புரியாது களைத்திருந்தேன்.




Wednesday 26 September 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 10

வெகு வேகமாக அருகில் வந்த அந்த ஆசிரியர் அவனது கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டார். எனக்கு திடுக்கென இருந்தது.

''நீங்கள் என்னை அறைந்ததற்கான காரணம் எனக்கு புரிகிறது. ஆனால் நீங்கள் நினைத்து இருந்தால் என்னை அறையாமல் இதே காரணத்திற்காக இருந்து இருக்கலாம் என்றான் எனது அருகில் இருந்தவன்''.  அந்த ஆசிரியர் மறு பேச்சு பேசாமல் அப்படியே நின்றார். 

''என்னை அடித்த குற்றத்திற்காக உங்கள் மீது என்னால் புகார் செய்ய இயலும், ஆனால் நான் அப்படி ஒன்றும் செய்யப் போவதில்லை'' என்றான் அவன் மேலும். சிறிது நேரம் அங்கு நின்றவர் வேறு எதுவும் பேசாமல் அவரது இருக்கைக்கு சென்றார் அந்த ஆசிரியர். 

இருக்கையில் அமர்ந்தவர் வேறு எதுவும் பேசவில்லை. வகுப்பு மிகவும் அமைதியாக இருந்தது. அப்பொழுது முன் வரிசையில் இருந்த ஒருவன் சார், நீங்கள் சொல்ல வந்ததை சொல்லி தொடரலாம் என அவர் சொன்ன வாசகத்தை அப்படியே அச்சு பிறழாமல் சொன்னான். 

''இதோ இவனுக்கு என்னைப் பிடிக்காமல் போவதற்கு சில காரணங்கள் உண்டு. அதைப்போலவே என்னை பிடிக்கும் எனில் அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்த உயிரினங்களின் எண்ணங்கள் விசித்திரமானவை' என அவன் சொல்லி முடிக்க மீண்டும் எனது அருகில் இருந்தவன் எழுந்து 'நீயும் அவரோட சேர்ந்து வெட்டித்தனமா பேசாதடா' என்றான். 

மொத்த வகுப்பும் கொல்லென சிரித்தது. இம்முறை இவனுக்கு எந்த அறையும் விழவில்லை. We always look for the reasons for our actions. For certain kind of actions, we blame it on something rather than own it ourselves. This is an extra-ordinary behaviour by human beings in the world to protect them from criticism and have a security as well. When I questioned our professor, he could not answer my comment, but he tried to distract by acting in another way. Action for a reason, reason for an action, this is not a proper way. 

அருகில் இருந்தவன் மடமடவென பேசி முடித்ததும் எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. நீ தமிழ் மீடியமா என்றேன். ஆமாம் என்றான் அவன். நானும் தான், எனக்கு நீ சொன்னது விளங்கவே இல்லை என்றேன். முறைத்துப் பார்த்தான். இவன் பேசியதை மாணவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தார்கள். 

எதற்கு முறைக்கிற? என்றேன். நான் சொன்னது விளங்கவில்லைன்னு சொன்னியே என்றான். அப்போ முறைக்கிறதுக்கு அது ஒரு காரணம்! என்று நமட்டு சிரிப்பு சிரித்தேன். For an action, there will be a reaction. Action can't be only reason for that reaction. என்றான். எனக்கு ஜிவ்வென கோபம் வந்தது. கோவத்தை அடக்கி வைத்து கொண்ட வேளையில் ஆசிரியர் எழுந்தார். 

''எண்ணங்களை கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தால் காரணமும், காரியமும் அடிபட்டு போகும், அதை எனக்கு மிகவும் அருமையாகவே இந்த மாணவன் விளங்க வைத்துவிட்டான். அவனுக்கு எனது நன்றி'' என அவர் சொல்லி முடிக்க அருகில் இருந்தவன் எழுந்து நீங்க எப்போதான் வெட்டித்தனமா பேசறதை நிறுத்திட்டு பாடம் எடுக்கப் போறீங்களோ தெரியலை என்றான். அனைவருமே மீண்டும் சிரித்தார்கள். ஆசிரியரின் முகத்தில் கோபம் கொப்பளித்தது. 

அவனை வகுப்பறையை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கத்தினார். அவன் போக மறுத்தான். நீங்கள் எங்களுக்கு ஒன்றும் மனோதத்துவ பாடம் எடுக்க வரவில்லை. அதைப்போல தத்துவ இயல் ஒன்றும் சொல்லி தர அனுப்பி வைக்கப்படவில்லை. நீங்கள் எடுக்க வேண்டிய பாடம் மட்டும் எடுத்தால் போதும். இப்போதே அரை மணி நேரம் செலவாகிவிட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் என்ன சொல்லித் தர இயலும்? என அவன் பேசியது கண்டு அவரது கோபம் அதிகம் ஆகியது. 

This is my class. I choose what I teach. என்று அவர் கத்தியதும் I choose what I listen என இவன் இங்கிருந்து சத்தம் போட்டான். எனக்கு அருகில் இருந்தவனை அடிக்க வேண்டும் போலிருந்து. அதனால் அவனது காலை ஓங்கி மிதித்தேன். ஆ எனும் அலறல் சத்தம் கேட்டது. சாரி என்றேன். என்னை மீண்டும் முறைத்துப் பார்த்தான். 

அதற்கடுத்து அந்த ஆசிரியர் பாடம் நடத்தும் மனநிலையில் இருப்பதாகவே தெரியவில்லை. இவனை வகுப்பறையை விட்டு துரத்துவதற்காகவே மனித எண்ணங்கள் குறித்தே பேசினார். எப்போதுதான் வகுப்பு முடியும் என இருந்தது. அருகில் இருந்தவனை பிரின்சிபால் அழைப்பதாக சொன்னார்கள். எங்களுக்கு பயமாக இருந்தது. சிறிது நேரம் கழித்து வந்தவன் அமைதியாக அமர்ந்து இருந்தான். 

மதிய வேளையில் என்ன நடந்தது என கேட்டேன். இனிமே எதிர்த்து பேசினா சஸ்பென்ட் பண்ணிருவேன்னு சொன்னார் என சொல்லி முடித்து கொண்டான். எதிர்த்து பேசறது ஒரு காரணம், உன்னை சஸ்பென்ட் பண்றதுக்கு என சிரித்தேன். நங் என எனது தலையில் கொட்டியவன் சாரி என்றான். காயத்ரியை நோக்கி வந்துவிட்டேன். 

'இன்னைக்கு கிளாஸ் எப்படி?' என்றேன். 'அவன் என்ன லூசா' என்றாள். 'நீதான் கேட்கணும்' என்றேன். 'காரணம், காரியம். நீ என்ன நினைக்கிற' என்றாள். கர்மம் என்றேன். 'என்ன சொல்ற' என்றாள். அதாவது கர்ம வினை. கற்றறிந்த மாந்தர்கள் கூட இந்த கர்ம வினைக்கு தப்பிக்க முடியாது. எல்லோரும் சிக்கி அல்லாடனும் அதுதான் இந்த உலகியல் நியதி'. 

'ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம், காரியம்' என்றாள். 'ம்ம் சில ஏத்துக்க முடியும், சில ஏத்துக்க முடியாது' என்றேன். 'என் அப்பாவை நினைச்சாத்தான் இன்னும் என்னால தாங்கிக்க முடியலை' என்றாள். அவரைப் பத்தி பேச வேணாம்னு சொல்லியாச்சு என்றேன். 'மனசு கேட்கலை' என்றாள். அவளது கைகளை பிடித்தபோது சில்லென இருந்தது. 

'காயத்ரி, இனிமே கவலைப்படாதே. மறந்துரு' என சொன்னதும் சரி என தலையாட்டினாள். மீண்டும் வகுப்பு. எனக்குப்  பிடித்த ஒரு ஆசிரியர் வந்து இருந்தார். அவர் பேசியது தாலாட்டு போன்று இருக்கவே நன்றாக தூங்கிவிட்டேன். என்னை எவரோ தொடுவது போன்றே உணர்ந்து முழித்து பார்த்தேன். அந்த ஆசிரியர் எனது அருகில் சிரித்து கொண்டு இருந்தார். 

நாளைக்கு வரும்போது தலைகாணி, போர்வை எல்லாம் எடுத்துட்டு வா, அதோ அங்க நல்லா படுத்து தூங்கலாம், எதுக்கு சிரமப்படற, அடுத்த வகுப்பு ஆரம்பிக்க போகுது என சொல்லிவிட்டு நான் பதில் ஏதும் பேசும் முன்னர் அவர் வகுப்பை விட்டு வெளியேறினார். வகுப்பே அமைதியாக இருந்தது. பக்கத்தில்  இருந்தவர்கள் என்னை மாட்டிவிட்ட மகிழ்வில் இருந்தார்கள். 'தூங்கு முருகேசு, தூங்கு' என எல்லோரும் ஒரு சேர சத்தமிட்டார்கள். அவர்களது சத்தத்தில் எனது தூக்கம் தொலைந்து இருந்தது. 

அன்று மாலையில் காயத்ரியிடம் எனக்குப் பிடித்த ஆசிரியர் என்ன நடத்தினார் என கேட்டேன். நினைவுகள் பற்றி நடத்தினார் என்றாள். நான் கேட்கும்போது தூக்கம் பற்றித்தானே ஆரம்பித்தார், அதுதான் தூங்கிட்டேன் என்றேன். காயத்ரி சிரித்தது எனக்கு மகிழ்வாக இருந்தது. தூக்கம் பற்றி பேசினவர் நினைவுகள் பற்றி பேசினார். ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது என்றாள். நமக்கு மிகவும் பிடித்தமான்வைகள், பிடிக்காதவைகள், பாதிப்புக்கு உள்ளாக்கினவைகள் என  இவைகளை நாம் அவ்வளவு எளிதா மறக்கவே மாட்டோம்னு சொன்னார். தெரிஞ்சது தானே என்றேன். ஆனா காலையில என்ன சாப்பிட்டோம்னு மறந்திருவோம்னு சொன்னார். 

அப்படின்னா என்னை நீ மறக்கவே மாட்டியா என்றேன் நான். யோசித்தவள் கர்ம வினை என்றாள். எனக்கு  குழப்பமாக இருந்தது. 

(தொடரும்)

Friday 21 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 5

கிராமம் நோக்கிய பயணம். மின்சார தட்டுபாடு பற்றி இதுவரை ஒன்றும் அறிய வாய்ப்பு இல்லை. சென்னையில் கால் வைத்ததில் இருந்து கிராமத்திற்கு வந்த ஒரு நாள் வரை மின்சாரம் நின்றதாக தெரியவே இல்லை. மின்சார வெட்டு என்றெலாம் பேசினார்களே என யோசிக்க தோணியது. ஆனால் அன்று இரவு பன்னிரண்டு மணி இருக்கும். மின்சாரம் வெட்டப்பட்டது. மின்சாரம் மீண்டும் ஒரு மணிக்கு வந்தது. இந்த வேளையில்  யுபிஎஸ் உதவியது. அடுத்தடுத்து மின்சாரத் தட்டுபாடு வெகுபாடு படுத்தியது. ஒருமுறை ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருந்தது. மறுமுறை அதுவும் கும்பாபிஷேக விழா செல்ல காலையில் எழுந்து தயாராக மின்சாரம் இல்லாமல் போனது. யுபிஎஸ் இருந்தும் உபயோகமின்றி இருந்தது. எப்பொழுது மின்சாரம் வரும் என காத்திருந்ததுதான் மிச்சம். 

தினம்தோறும் மதுரை பயணம். துணிக்கடைகள். பாத்திரக்கடைகள். வேறு என்ன சொல்ல. பல வருடங்கள் கழித்து ஒரு நாள் மாலையில் மீனாட்சி அம்மன் ஆலயம் சென்ற திருப்தி. பணம் எதுவும் கொடுக்காமல் சாதாரண வரிசையில் நின்று சென்றபோது அலாதி இன்பம். அப்போது கூட்டம் அவ்வளவாக இல்லை. கோவில் சுற்றி வந்தபோது சரியான கூட்டம். நல்லவேளை முன்னரே சென்று வந்தோம் என நினைத்துக் கொண்டோம். 

மதுரையில் கிளி ஜோசியரை தேடித் தேடி அலைந்ததுதான் மிச்சம். எங்குமே கிளி ஜோசியரை காண இயலவில்லை. கடைசிவரை கிளி ஜோசியமே பார்க்க இயலவில்லை. இந்த ஜோசிய அனுகூலங்கள் எல்லாம் ஒருவகையான பொழுதுபோக்கு. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இந்த ஜோசியம், நட்சத்திரம் எல்லாம் பித்தலாட்டங்கள், இதனால் நான் அடைந்த பாதிப்புகள் நிறைய என இந்த கிளி ஜோசியம் பற்றி பேசியபோது வெகுண்டு எழுந்த ஒரு மாணவியின் வார்த்தையில் எத்தனையோ அர்த்தங்கள் இருக்கத்தான் செய்தது.

இந்தியாவில் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் குறைவு என்று சொல்வார்கள். இதற்கு காரணம், உறவு, பந்தங்கள் எல்லாம் இருப்பதால் ஆறுதலுக்கு என இருப்பார்கள், அதன் காரணமாக மன அழுத்தம் வர வாய்ப்பு குறைவு என்பார்கள். ஆனால் இன்று மன அழுத்தத்திற்கு உள்ளாகி அவதிப்பட்டு கொண்டு இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். 

கேரளாவிற்கு பயணம். எங்கு சென்றாலும் ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் ஆகிவிடுகிறது. படகு வீட்டில் ஒரு நாள் தங்கிய அனுபவம் நன்றாகவே இருந்தது. அதற்கு முன்னர் பதநீர் குடிக்க வேண்டும் என பல நாள் ஆசையை கேரளா செல்லும்போது வழியில் காரை நிறுத்தி குடித்தோம். பதநீர் பதநீர் போன்றே இல்லை. பாட்டில்களில் அடைத்து விற்றார்கள். அளவுக்கு அதிகமாக குடித்ததால் வாந்தி எடுத்து அடுத்த இரண்டு நாட்கள் பெரும் அவஸ்தை தான். அதற்கு பின்னர் ஒரு முறை பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கதை எல்லாம் அப்பப்பா. விமான நிலையம் செல்வோமா, மாட்டோமா என பெங்களூர் நகருக்குள்ளேயே வழி தெரியாமல் இரண்டு மணி நேரம் செலவழித்தது. மதுரை - கோயம்புத்தூர் - பெங்களூர் - மதுரை. இரண்டே தினத்தில் சென்று வந்ததும் மூன்றாம் நாள் எங்கும் செல்ல முடியாத நிலை. 

என்றுமே செல்லாத குற்றாலம் இந்த முறை செல்ல வாய்ப்பு வந்தது. அருவிகளில் தண்ணீர் கொட்டிக் கொண்டு இருந்தது. குற்றாலத்தில் வந்து தங்கி விடலாமா என்கிற சீதோஷ்ண நிலை. ஒரு திருமணத்திற்கு சென்றபோது திருமணம் முடிந்த மறுகணமே மனிதர்கள் பறந்து போயிருந்தார்கள். 

சில நண்பர்கள் கோவித்து கொண்டார்கள். ஒரே ஒரு நண்பர் பல வருடங்கள் கழித்து வந்து பார்த்தார். பழைய கதைகள் பேசிய பொழுது நன்றாகவே இருந்தது. உறவினர்கள் எவரும் பார்க்க வேண்டும் என வரவில்லை. நானாக தேடி சென்று பார்த்த வரை மட்டுமே. 

இந்தியா என்றால் உறவுகள் , விருந்தோம்பல். திருவிழாக்கள். என்ன சொல்லி தந்தது இந்தியா என்று எண்ணி பார்க்கையில் என்ன நான் கற்று கொண்டேன் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. திருவள்ளுவர் சொன்னதுதான். கனியிருப்ப காய் கவர்ந்தற்று. இந்தியா என்றுமே நல்லதை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறது. எடுத்துக் கொள்பவர்கள் மாறிவிட்டார்கள். 

முற்றும்.