Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Wednesday 26 August 2015

தமிழ் மின்னிதழ் - சுதந்திரம் 2015 -1

இம்முறை தமிழ் மின்னிதழ் எழுத்தாளர் திரு. பெருமாள் முருகன் சிறப்பிதழாக வெளிவந்து இருக்கிறது. ஒரு எழுத்தாளருக்கு இதைவிட என்ன பெருமை வேண்டும். அதிலும் எழுத்தாளர் சிறப்பிதழில் எனது எழுத்து வந்தது அதைவிட இரட்டிப்பு சந்தோசம்.

ஆமாம், முதலில் சுயதம்பட்டம் அடித்துக்கொள்வோம்.  சென்ற முறை இங்கே சொன்னது போல ஒரு கதையை தமிழ் மின்னிதழுக்கு எழுதி அனுப்பி அது இடம்பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் மின்னிதழ் ஆசிரியருக்கு கோடானு கோடி நன்றியை சமர்ப்பிக்கிறேன். அதற்காக தொடர்ந்து எனது எழுத்து வரும் என்றெல்லாம் என்னால் சொல்ல இயலாது. ஆசிரியர் மற்றும் இதழின் குழுவைப் பொருத்தது, அதைவிட நான் எழுதி அனுப்புவேனா என்ன எழுதி அனுப்புவேன் என்பதைப் பொருத்தது . ஆசிரியரிடம் இருந்து மின்னஞ்சல் வந்ததும் உள்ளூர அத்தனை சந்தோசம். இந்த தருணத்தில் முதலில் எனது எழுத்துக்கு ஆதரவு தெரிவித்த நமது திண்ணை சிற்றிதழுக்கு எனது நன்றி.  நமது திண்ணை தவிர எனது எழுத்து எந்த ஒரு சிற்றிதழ் இணைய இதழ் என எதிலுமே வந்தது இல்லை. இது என்ன பெரிய விசயமா என்று கேட்டால் என்னைப் பொருத்தவரை பெரிய விசயம் தான்.

எப்படி ஊர் மெச்ச வேண்டி நாம் வாழ நினைக்கிறோமோ அதைப்போலவே ஊர் மெச்ச வேண்டி எழுத்து இருக்க வேண்டும் எனும் எனது எழுத்தின்  தவம் எவருக்கும் தெரியாது, அதன் வலி எவருக்கும் புரியாது. எனது முதல் நாவலை வாசித்துவிட்டு சாகித்ய அகாடெமி விருது கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்னேன் என எனக்கு இப்போது நினைவில் இல்லை.

நான் எழுதி அனுப்பிய கதையின் தலைப்பு எண்ணியாங்கு என்கொலல். நண்பர் ஒருவர் சூப்பர் என்றார், ஆனால் எனது வழக்கமான சிறுபிள்ளைத்தனம் அந்த கதையில் இல்லை என்றார். ஆமாம், இரண்டே வார்த்தைகள். எண்ணியாங்கு, என்கொலல். இந்த இரண்டு வார்த்தைகளுமே திருக்குறளில் இருந்து எடுத்தது. என்கொல் என்ற வார்த்தை என்கொலல் என திரிந்தது.

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

இதில் எண்ணியாங்கு எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. இந்த குறள் சொல்வது என்னவெனில் எண்ணியதை செயல்படுத்த உறுதி இருப்பின் எண்ணியது நடைபெறும். கதையில் இதைத்தான் சொல்ல எண்ணினேன். அப்போது  ஒரு பெரிய கேள்விக்குறி எனக்கு எழுந்தபோது மரம் பற்றி நினைவுக்கு வந்தது. மனிதர்கள் தான் தமது எண்ணங்களுக்கு அது இது என சொல்லித் திரிகிறார்கள், ஆனால் மரம்? மரம் என்ன நினைத்து எதை எண்ணி எதில் உறுதியாக இருந்து நிறைவேற்றி கொள்கிறது என்பதே அது. மற்றொன்று நன்றி நவிலல். நாம் சரி, மரம்?

காலைக்குச் செய்த நன்றி என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர்  எனின்

எழுத ஆரம்பிக்கிறேன். கதை சரளமாகவே வரவில்லை. ஒரு கட்டுப்பாட்டில் பயணிக்கும்போது நமது சிந்தனைகள் தடைபடும் என்பது உறுதி. இந்த கதையில் அடுத்து எடுத்துக்கொண்டது அறிவியல் விஷயத்தை எழுதியே ஆக வேண்டும் எனும் ஒரு எண்ணம். இடைச்செருகல் மாதிரி இருக்கக்கூடாது அதே வேளையில் கதையின் ஓட்டத்தை கெடுத்துத் தொலையக்கூடாது. ஆனால் எனக்கு எழுதி எழுதிப் பார்த்தாலும் திருப்தியே வரவில்லை. கடைசியாக நிலம், வீடு, ஸ்டீரால் விஷயம் சரியெனப் பட்டது. பலமுறை யோசித்து அதிகம் என்னால் திருத்தி வெட்டப்பட்ட கதை இதுவாகவே இருக்கும். இதுக்காக பல ஆராய்ச்சி கட்டுரைகளை வேண்டி புரட்ட வேண்டியதாகிவிட்டது.

ஒருவழியாக கதையை எழுதி முடித்து அனுப்பி விட்டேன். முதலில் தவறுதலாக அதில் இருந்த மூலக்கூறுகள்  இரண்டுமே ஒரே மாதிரி அனுப்பினேன். பின்னர் அதை சரிசெய்து அப்போது சில வரிகள் மாற்றி மீண்டும் அனுப்பி வைத்தேன். ஆசிரியரிடம் இருந்து பதிலே இல்லை. எனக்கும் கேட்கவோ பயம். சரி என்ன ஆனாலும் பரவாயில்லை ஒருவேளை வெளியாகாவிட்டால் இருக்கவே இருக்கிறது இந்த வலைத்தளம் என சமாதானம் பண்ணிக்கொண்டேன். ஆனால் உள்ளூர ஒரு கவலை இருந்தது. அதாவது ஒரு பள்ளியில் அனுமதி கிடைக்காத பிள்ளையின் தந்தையின்  கவலை அது. நல்லவேளை, கதை அனுமதி பெற்றுவிட்டது எனும் ஆசிரியரின் பதில் வந்ததும் மனம் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நீங்கள் வாசிக்கலாம், வாசிக்காமலும் போகலாம். ஆனால் எழுதிவிட்டேன் எனும் திருப்தி எனக்கு இருக்கிறது.

விரைவில் தமிழ் மின்னிதழில் இடம்பெற்றுள்ள பிறரின் எழுத்துக்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறேன்.

(தொடரும்)










Wednesday 3 June 2015

தமிழ் மின்னிதழ் - 2 லீனா மணிமேகலை ஆண்டாளின் தோழிகள்

கவிதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் எனக்குத் தெரியாது. எதற்கும் நீங்கள் இங்கே கவிதை என எழுதப்பட்டு இருக்கும் பகுதியில் சென்று பார்த்தால் நான் சொல்வதன் உண்மை என்னவென அறிந்து கொள்வீர்கள். கவிதை எனக்கு எழுதத் தெரியாது என தமிழ் இலக்கியம் அறிந்த ஒருவர் சொன்னதால் வெறும் வார்த்தைகள் என தலைப்பிட்டே கவிதைத் தொகுப்பு வெளியிட்டேன். அப்படி இருக்கும்பட்சத்தில் கவிதைகளைப் படித்து உள்வாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதா என்றுத் தெரியாமல் பல கவிதைகளைப் போற்றி பாராட்டி வருகிறேன். இந்த தமிழ் மின்னிதழில் லீனா மணிமேகலை கவிதைகள் என சில வாசித்தேன். இவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். கேள்விப்பட்டதோடு அப்படியே இருக்கட்டும். சர்ச்ச்சைக்குரியவர்கள் இவ்வுலகில் அதிகம் கவனம் ஈர்த்துவிடுகிறார்கள். பிறர் சொல்லத் தயங்குவதை சொல்பவர்கள் மக்களால் கவனிக்கப்படுகிறார்கள்.

10. லீனா மணிமேகலை கவிதைகள்

நட்சத்திர தூசி.

நீ எனக்கு யாரடா! இந்த கவிதையை எப்படி வேண்டுமெனினும் சிலாகித்துக் கொள்ளுங்கள். ஒரு அன்னியோன்யமான அன்பை சொல்லிக்கொண்டு இருக்கிறது. திரைச்சீலை அன்பை விலக்குவதில்லை. கவிதைத்துவம் என்பது இதுதான். வார்த்தைகளில் காட்சி அமைப்பு ஏற்படுத்தி விடுவது.

அடுத்து இதுவும் ஒரு நிலை சொல்லிச் செல்கிறது. இடைவெளி குறித்தும் ஆயுள் ஒரு இரண்டக  நிலை. திரையரங்கு இருளில் இருந்து காட்சிப்படுத்தபடுகிறது. பூச்சியின் ரீங்காரம் என திரை இரைச்சல் என நிறைய யோசித்தோ யோசிக்காமலோ கவிதை வரிகள் வந்து விடுகின்றன.

11. குவியொளி - மகி

ஒரு விஷயத்தை ஒரு வார்த்தையில் சொல்ல இயலும். ஒரு வாக்கியமாக சொல்ல இயலும். ஒரு கதையாக சொல்ல இயலும். ஆத்திசூடி எழுதப்பட்ட வரலாறு சுவாரஸ்யம். அதுபோல ஒரு வாக்கியமாக பல குவிந்து இங்கே ஆயிரம் கதைகள் சொல்லிக்கொண்டு இருக்கிறது. உடன்பாடு, உடன்படு.

12. ச. முத்துவேல் கவிதைகள்

இங்கே குறிப்பிடப்பட்டு இருக்கும் கவிதைகள் மிகவும் ஆழ்ந்த விசயங்களைச் சொல்லிச் செல்கின்றன. இரும்புக்கரம் என்பது ஒரு ஆதிக்க சக்தியின் வெறியாட்டத்தை கவிதை விளக்கம் சொல்கிறது. சில வரிகள் அதன் வீரியத்தை உணர்த்தும் வண்ணம் எழுதி இருப்பது சிறப்பு. காதலிப்பது சற்று வித்தியாச கோணம். கலவி உரையாடல்கள் சற்று வித்தியாசம்தான். தலைப்புக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று இருப்பினும் நல்ல கவிதைதான்.

13. மணிவண்ணன் - சமூகப் புரட்சியின் கலைஞன்  முரளிகண்ணன்

ஒருவரைப் பற்றி எப்படி எழுத வேண்டும் எனக்கேட்டால் இப்படித்தான் எழுத வேண்டும் என இந்த கட்டுரையை தைரியமாகக் குறிப்பிடலாம். இத்தனை விரிவாக இத்தனைத் தெளிவாக சொல்லப்பட்டு இருப்பதற்கு நன்றிகள். எனக்கு மணிவண்ணன் அவர்களை மிகவும் பிடிக்கும். அமைதிப்படை படம் பார்த்தபோது வியந்தது உண்டு. எனக்கு ஒரு படைப்பாளியாக அவர் இருந்து இருக்க வேண்டும் என்றே எண்ணியது உண்டு. அவரின் அரசியல் நிலைப்பாடு, எண்ணம் என பல விசயங்கள் அறிய முடிந்தது.

14. நிழலோவியம் - புதியவன்

ரசித்து மகிழலாம். தெளிவாக இருக்கிறது.

15. அப்பா - செந்தில்சிபி

அப்பாவுக்கு நான் எதுவுமே செய்யலை. கொள்ளி  மட்டும் தான் வைச்சேன். அப்பா பற்றி எழுதிக் கொண்டே இருந்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அழகிய உணர்வுகளை அற்புதமாக படம் பிடித்து இருக்கிறார். அவரது வாழ்க்கையை சொன்னதில் இருந்து செந்தில் சார் வாழ்வும் அறிய முடிகிறது. மிகவும் நேசித்த பதிவு.

16. ராஜா சந்திரசேகர் கவிதைகள்.

கவிதை என்றால் இவரது கவிதைதான் அதி அற்புதம் என சொல்லலாம். எழுத்தாளர் நர்சிம் அவர்கள் குறிப்பிட்ட கவிஞர் இவர்தான் என்றே நினைக்கிறேன். இவரது கவிதைகள் பல வாசித்து இருக்கிறேன். தீட்டப்பட்ட வைரம் போல ஜொலி ஜொலிக்கும். முதல் கவிதை ஒரு நிமிடம் நம்மை அப்படியே நிலைகுத்தி இருக்கச் செய்யும். ஏம்மா இப்படி செஞ்சிட்ட? பிரமாதம் குறுங்கவிதைகள்.

17. நா ராஜூ கவிதைகள்

வார்த்தைகளுடன் பயணித்துக் கொண்டே இருக்கலாம். இந்த விளையாட்டு எனக்குப் பிடித்து இருந்தது. சில வார்த்தைகள் இலக்கியத்தன்மையைத் தந்துவிடும் வல்லமை கொண்டவை. தமிழுக்கு உண்டான சிறப்பு. இவரது கவிதைகளில் ஆழமான சிந்தனைகளை கண்டு கொண்டது போல் இருந்தது.

18. ஆண்டாளின் தோழிகள் - சங்கர் கிருஷ்ணன்.

பிரமாதம். திருப்பாவை குறித்து எத்தனை அனுபவித்து எழுதி இருக்கிறார். ஏதோ  பாடல் என்று நான் இருக்க ஒவ்வொரு பாடலுக்கும் இருக்கும் ஒரு கதையை அழகாக சொல்லி இருக்கிறார். நாலாயிர திவ்விய பிரபந்தம் பற்றிய பார்வை வெகு சிறப்பு. நிறைய ரசித்து மீண்டும் மீண்டும் வாசித்த பதிவு இது.

(தொடரும்)

Friday 1 May 2015

நமது திண்ணை மே மாத இணைய சிற்றிதழ்

ஒரு விசயத்தை தனலாபம் இல்லாமல் தொடர்ந்து செய்வதற்கு ஒரு தனித்துவமிக்க ஈடுபாடு மிக மிக அவசியம். அது மட்டுமில்லாமல் மிகச் சிறந்த வரவேற்பும் அதைச் சார்ந்த மக்களிடம் இருந்து தொடர்ந்து இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது ஒரு விஷயம் பெரும் தொய்வினை சந்திக்கும் என்பது வலி தரும் செய்தி. இந்த உலகத்தில் பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் ஆர்வத்தினால் உண்டானவை, அவர்களது வெற்றிக்கு காரணம் அவர்களுக்குத்  தொடர்ந்து பிறரது ஆதரவு இருந்ததுதான். நல்லதொரு ஆதரவை ட்விட்டர் மக்கள் நமது திண்ணை (சிற்றிதழுக்கு இங்கே அழுத்தவும்) இணைய சிற்றிதழுக்கு வழங்கி வருவது இணைய சிற்றிதழின் ஆசிரியர் மற்றும் சிற்றிதழ் வடிவமைப்பாளர் திரு அல்  அமீன் அவர்களின் ஆர்வத்தை மென்மேலும் உற்சாகமாக வைத்து இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஆசிரியரின் கருத்தும் இதையே பிரதிபலிக்கிறது.

ஸ்ரீராமானுஜர். சுசீமா அம்மா அவர்கள் எழுதும் ஒரு புதிய தொடர். இந்த தொடர் மூலம் பல புதிய விசயங்கள் அறிய முடிகிறது. எனக்கு அதிகமாக ஸ்ரீராமானுஜர் பற்றி தெரியாது  என்பதால் இந்த தொடர் எனக்கு பேரானந்தம் தரக்கூடிய ஒன்றாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. இங்கொன்று அங்கொன்று என இவர் குறித்த விசயங்கள் மட்டுமே அறிந்து வைத்து இருக்கிறேன். நாலாயிர திவ்விய பிரபந்தம் தனில் இவரது புகழ் பேசப்பட்டு இருக்கிறது. சமய ஒற்றுமை, மனித ஒற்றுமை குறித்து பாடுபட்ட ஒரு நற்பண்பாளர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அரங்கனின் கண்கள். விசிட்டாத்துவைதம். எனக்கு அத்வைதம், துவைதம் அடிக்கடி குழப்பத்தைத் தரக்கூடிய ஒன்று. விசிட்டாத்துவைதம் பற்றி எனக்குத் தெரியாமல் கல்லுக்கும் உணர்வு உண்டு, உணர்வற்ற நிலையில் உன் உணர்வு உண்டு என நாராயணனை நோக்கி எழுதியவை நினைவுக்கு வருகின்றன. நல்லதொரு அற்புத தொடர் அம்மா. வாழ்த்துக்கள்.

கமலா அம்மா அவர்களின் புற்றுநோய் குறித்த பதிவு அனைவருக்கும் நல்லதொரு விழிப்புணர்வு தரும் பதிவு. சமீபத்தில் நண்பர் புகழ் அவர்கள் ஒரு சாமியார் எனது புற்றுநோயை தீர்த்து வைக்கிறேன் என்று சொன்னால் அந்த சாமியாரை நம்பமாட்டேன், எனக்கு புற்றுநோய் என்று சொன்ன வைத்தியரைத்தான் சந்தேகிப்பேன் என்று எழுத அவருடனான எனது வறட்டுத்தனமான விவாதங்களை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். அதை ஒட்டிய கருத்துடன் இந்த பதிவு. மிக மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா. மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் எப்படி மக்களின்  பலவீனத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள் என தான் கண்ட நண்பரின் நிகழ்வு மூலம் விரிவாக சொல்லி இருக்கிறார். முந்தைய காலத்தில் ஹோமியோபதி, மூலிகை மருத்துவம் பயன்பாட்டில் இருந்து இருக்கிறது, இப்போது தொடர்கிறது ஆனால் அவற்றின் செயல்பாடுகள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி உலகம் எப்போதும் ஒரு சந்தேகப்பார்வை கொண்டு இருக்கிறது என்பது உண்மைதான். இந்த புற்று நோய்க்கு மருந்து எட்டாத கனி போலத்தான். இப்போது மருத்துவ உலகம் கொண்டுள்ள முன்னேற்றம் அம்மா அவர்கள் சொன்னது போல முறையாக பரிசோதனை செய்து கொண்டு வாழ்வதே நல்லது. வாழ்த்துக்கள் அம்மா.

உமாகிருஷ் அவர்களின் பாடல் அலசல். இந்த பாடலை நான் கேட்டது உண்டு. இத்தனை உன்னிப்பாக கேட்டது இல்லை. இத்தனை விசயங்களை இந்த பாடல் சொன்னது என இன்றே இவரது பாடல் அலசல் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இதைத்தான் இலக்கியம் படைத்தல் என்பார்கள். அதாவது எழுதப்படும் வரிகள் அந்த மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். அதை இந்த பாடல் வெகு சிறப்பாக செய்து இருக்கிறது என அறிய முடிந்தது. எத்தனை கிராமத்து வார்த்தைகள். இவர் குறிப்பிட்ட வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பரிச்சயம். வெள்ளாமை, பொட்டக்காடு, கூழ், கஞ்சி என வாழ்ந்த வாழ்க்கையில் இருந்தது இவரது எழுத்தை அதிகம் நேசிக்க செய்தது எனலாம். வாழ்த்துக்கள். நாலு வரி நோட்டு போல இந்த தொடர் உருவாகலாம்.

சாய்சித்ரா அவர்களின் நகைச்சுவை என்றுமே என்னை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும். அவரது பெயர் பார்க்காமல் படித்தும் கூட டிஷ் பற்றிய நகைச்சுவை சிரித்துக் கொண்டே இருக்க வைத்தது. மற்ற நகைச்சுவைகள் இம்முறை சுமார் ரகம் தான். விடுகதை இந்த முறை விடுபட்டு போய்  இருக்கிறது. சோபியா தங்கராஜ் அவர்களின் கவிதை ஒரு காதல் தொலைத்த சோகம் தான். நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு இருக்கிறது. சின்ன சின்ன விசயங்கள் என டிவிட்கள் அனைத்துமே வெகு சிறப்பு. எழுதியவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் என நம்பலாம்.

அக்ஷ்ய திரியதை பற்றி ரவிக்குமார் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். வருடா வருடம் வீட்டில் எனக்கு இந்த நாளை ஞாபகபடுத்தி விடுவார்கள். நானும் இவரைப்போல கதை எல்லாம் சொல்லிப் பார்ப்பேன். ஆனால் வாழ்வில் சந்தோசம் என்பது சில நம்பிக்கைகள் உண்டாக்கி தருவது. எனவே எத்தனை சொன்னாலும் மக்களின் மனதில் சில விசயங்களை அகற்ற இயல்வதில்லை. இந்த வருடம் தான் அப்படி என்ன இந்த நாளுக்கு சிறப்பு எனத் தேடி அறிந்து கொண்டேன். அதைப்போல அனைத்து விசயங்களையும் சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள்.

ஒரு முழு பக்கத்தை நளபாகத்திற்கு ஒதுக்கி இருக்கலாம். நாங்கள் வீட்டில் ரொட்டியை வெட்டி பஜ்ஜி செய்வது வழக்கம். ஆனால்  இத்தனை விசயங்களை கொண்டு செய்வது என்பது இன்றுதான் அறிந்தது. சமையல் கலையை அறிந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். பசித்தால் உடனே விருப்பப்பட்ட ஒன்றை செய்து சாப்பிட்டுவிடலாம். நண்பர் ரவி வீட்டிற்கு விருந்தாளியாக சென்றால் நிச்சயம் வீட்டு சமையல் அதுவும் அவரின் சமையல் இருக்கும் என உறுதியாக நம்பலாம். எங்கள் வீட்டிற்கு வந்தால் ஏதேனும் ஒரு கடை பலகாரம் மட்டுமே.

திருப்பூர். இந்த ஊர் பற்றி மிக சிறப்பாக எழுதி இருக்கிறார் மணி. இவர் ஒரு நல்ல சிந்தனையாளர் கூட. எனக்கு கொடிகாத்த குமரன் மூலமே இந்த ஊர் அறிமுகம் என நினைக்கிறேன். பின்னர் பனியன் பற்றிய அறிமுகம். அடுத்து இந்த ஊரில் இருந்து நிறைய டிவிட்டர்கள் உண்டு என்பது தெரிய வந்தது. கோவை, திருப்பூர் போன்ற ஊர்கள் எல்லாம் தொழில் ஊர்கள் போலத்தான். தென்னிந்திய மான்செஸ்டர், குட்டி ஜப்பான் என பட்டப்பெயர்கள். இந்த ஊருக்கு இதுவரை சென்றது இல்லை. இந்த ஊரை சென்று பார்க்கும் ஆர்வத்தை உண்டுபண்ணி இருக்கிறது எழுத்து. வாழ்த்துக்கள்.

ரீவிஷாலின் ஓவியங்கள் வெகு அருமை. சிறுவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில்  நல்லதொரு தொடக்கத்தை நமது திண்ணை உருவாக்கி இருக்கிறது. சோபியா துரைராஜ் அவர்களின் கவிதை மற்றுமொரு காதல் வலி சொல்லும் கவிதை. நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு மழையில் ஆரம்பித்து மழையில் முடிகிறது.

மழலையர் மன்றம் புகைப்படங்கள் மிகவும் அருமை. அர்விந்த் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. மேடையில் நேரடி நகைச்சுவை சற்று கடினமான ஒன்று. பேசினால் அறுவை ஜோக் என சொல்லும் சமூகத்தில் ஒவ்வொரு வரிக்கும் சிரிப்பு என்பது எத்தனை கஷ்டம் என பல ஆங்கில நிகழ்வுகள் கண்டு எண்ணியது உண்டு.

புத்தகங்கள் குறித்தும் ஒரு எழுத்தாளனின் நிலையை குறித்தும் முத்தலிப் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். பாராட்டுக்குரிய விசயங்கள். புத்தகங்கள் பல வீணர்களை திருத்தி இருக்கிறது என்றே புத்தகத்தின் பெருமையை சொல்லும்போதே சாமி அறையை விட ஒரு நூலக அறையே வீட்டினை அலங்கரிக்க இயலும்.

பாடல் கேட்பது குறித்து ஹேமாமாலினி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். பாடல் பாடி பிறர் கேட்கும் வண்ணம் வைப்பது. அதாவது எல்லோருக்கும் பாடும் திறமை உண்டு. அதை உற்சாகப்படுத்தும் வண்ணம் இது அமையும்.

வாலி குறித்த ஆசிரியர் பார்வை வெகு சிறப்பு. ''ஒரே ஒரு விமர்சனம் மட்டும் தெளிவா வரணும்'' என தனது பணி குறித்து வடிவமைப்பாளர் அல்  அமீன் அவர்கள் கூறி இருப்பதால் அதை தனி பதிவாக வைக்கப் போகிறேன். சற்று பொறுத்துகொள்ளுங்கள் நண்பரே.

நமது திண்ணை நல்ல நல்ல விசயங்களுடன் வெகுசிறப்பாக இருக்கிறது ஆசிரியர் அவர்களே. உங்கள் நமது திண்ணை அனைவரது வீட்டிலும் வெகு விரைவில் கட்டப்பட வேண்டும் எனும் ஆசையை இங்கே எழுதி வைக்கிறேன்.

(தொடரும்)


Friday 10 February 2012

புற்று நோய் பரிசோதனைகள் - நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை

முன்னுரை :

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி, பலரும் மனதில் நிறுத்தி கொள்ள வேண்டிய ஒரு அரிய வாசகம். வாழ்வில் நடந்து கொள்ளும் முறைகள் பொருத்தே இந்த நோய்கள் பெரும்பாலும் மனிதர்களை தாக்குகின்றன. வாழ்க்கை முறையில் உணவு, சுற்றுப்புறம் என பல காரணிகள் சுகாதார வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கின்றன. புற்று நோயானது மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களினால் உருவாகிறது. இந்த மரபணு மாற்றம் ஏற்பட புகையிலை, சிகரெட், கதிரியக்கம், சில வேதி பொருட்கள் சூரிய ஒளி என பல தெரிந்த காரணிகளும், சில தெரியாத காரணிகளும் அடங்கும். வருமுன் காப்போம் என்பதுவும், நோயினை முற்றிலும் குணப்படுத்துவது காட்டிலும் அதனை தடுப்பது  மிக சிறந்தது எனவும் நோய் பற்றிய அறிவு மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. மக்கள் இது குறித்த சிந்தனைகள் அறிந்திருத்தல் மிகவும் அவசியம் ஆகிறது. 

நோய் தீர்க்கும் மருத்துவம்: 

ஒரு நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை ஆய்ந்து அறிந்து அதற்குரிய மருத்துவத்தை செய்ய வேண்டும் எனும் சிந்தனையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்களின் சிந்தனையில் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாகவே தங்களுக்குள் ஏற்படும் மன சோர்வு, உடல் வியாதிகள் என அனைத்திற்கும் மருந்து வகைகளை மூலிகைகள் மூலம் கண்டுபிடித்து தங்களது வியாதிகளை அந்த காலகட்டத்தில் குணப்படுத்தி இருக்கிறார்கள். புற்று நோயிற்கு கூட ஒரு தாவரத்தில் இருந்தே மருந்தனாது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புற்று நோயினை முற்றிலும் தீர்க்க முடியாவிட்டாலும் அதனை தடுக்கும் முறையினை இன்று மருத்துவத்தில் கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார்கள். 

நோய்தனை ஆரம்ப நிலையிலே தடுக்கும் வாய்ப்புகளை இப்போது மருத்துவ உலகம் உருவாக்கி கொண்டு வருகிறது. முறையான பரிசோதனைகள் செய்வதன் மூலம் புற்று நோய் முதலான மிகவும் கடுமையான நோய்களை தடுத்து நிறுத்த இயலும். கவனக்குறைவுடன் செயல்படுவதை தவிர்ப்பதன் மூலம் நோய்களை தடுக்க இயலும். கீமோதெரப்பி எனப்படும் மருத்துவ முறைகள் கொண்டு, எக்ஸ் ரே, காமா கதிர்கள் மூலம் இந்த புற்று நோய்தனை கட்டுபடுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த எக்ஸ் ரே, காமா கதிர்கள் அளவுக்கு அதிகமாக உபயோகம் செய்யப்பட்டால் அவைகளே புற்று நோய் உருவாக்கவல்லவை. 

புற்று நோய்கள் வகைகள்: 

புற்று நோய் தலை முதல் கால் வரை வரக்கூடிய ஒன்றாகும். இந்த புற்று நோயில் இரண்டு பிரிவுகள் உண்டு, ஒன்று ஒரே இடத்தில் இருப்பது, மற்றொன்று உடலெல்லாம் பரவுவது. ஓரிடத்தில் இருக்கும் புற்று நோய்தனை விரைவில் குணப்படுத்திவிடலாம். உதாரணமாக மார்பக புற்று நோய் வந்தால் மார்பகத்தை அகற்றுவதன் மூலம் புற்று நோய் தனை அகற்றலாம். ஆனால் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளை அவ்வாறு பிரித்து விடுவது எளிதானது அல்ல. இதன் காரணமாக இந்த புற்று நோய் தனை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்வதால் தடுக்கலாம். 

ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்பது போல் புற்று நோய்தனை அறுபத்தி நான்கு வகைகளாக பிரித்து உள்ளார்கள், அதில் மூளை புற்று நோய், எலும்பு புற்று நோய், கருப்பை புற்று நோய், ரத்த புற்று நோய், மார்பக புற்று நோய், கருக்குழல் புற்று நோய், ஆண் பெண் பிறப்பு உறுப்பு புற்று நோய், தோல் புற்று நோய், வாய் புற்று நோய், நுரையீரல் புற்று நோய், கல்லீரல் புற்று நோய், ஆண் இனப்பெருக்க சுரப்பி புற்று நோய், கணையம் புற்று நோய், வயிற்று புற்று நோய் மற்றும் மூச்சு குழல் புற்று நோய் என்பவை குறிப்பிடத் தகுந்தவை. 

ஒவ்வொரு புற்று நோயிற்கும் ஒவ்வொரு அறிகுறிகள் தென்படும். இந்த புற்று நோயானது உடனே நாம் உடல் பாகத்தை தடவி பார்த்து ஊர்ஜிதம் செய்து கொள்ள இயலாது. இந்த புற்று நோய் மிகவும் மெதுவாக வளர்ச்சி அடைந்து உடலெல்லாம் பரவி மனிதர்களை கொல்லும் வலிமை உடையது. நமது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியானது பலவீனம் அடையும் பட்சத்தில் இந்த நோயின் தன்மை தீவிரம் அடைகிறது எனலாம். 

பரிசோதனை செய்ய பயம் ஏன்:

மனிதர்களில் பலர் மருத்துவம் பார்க்கவே மிகவும் அச்சப்படுகிறார்கள்.  கிராமங்களில் காவல் நிலையத்திற்கு சென்றாலே கௌரவ குறைச்சல் என்பதை போல மருத்துவமனை பக்கம் செல்வது என்றால் தான் நோயாளி என்பது போன்ற உணர்வுகள் வருவது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். வெளிநாடுகளில் எல்லாம் பெண்களுக்கு கருவாயில் புற்று நோய் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்ள வருமாறு மருத்துவமனைகளில் இருந்து அழைப்பு அனுப்புவார்கள். இந்த பரிசோதனை இலவசமானது, ஆனால் பெரும்பாலான பெண்கள் இது போன்ற அழைப்புகளை அலட்சியபடுத்துவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அலட்சியபடுத்துவதன் மூலம் தங்கள் உயிருக்கு தீங்கிழைக்கிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். 

உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். உடலை பேணி காப்பதில் தான் உயிர் காப்பதின் ரகசியம் இருக்கிறது என்பதை இத்தனை தெளிவாக எவரால் சொல்ல இயலும். மருத்துவ தொழில் நுட்பம் பெருகிய இந்த காலகட்டத்தில் புற்று நோயிற்கான உரிய பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் ஆகிறது. 

பரிசோதனை வகைகள்: 

நமது உடலில் புற்று நோய் உருவானால் அதை எதிர்க்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இந்த புரதமானது ஆன்டிபாடி என சொல்வார்கள். புற்று நோய் எதிர்ப்பு ஆன்டிபாடி உடலில் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து பார்ப்பது மூலம் புற்று நோய் தடுக்கலாம். இந்த பரிசோதனையில் ஒருவேளை இந்த எதிர்ப்பு ஆன்டிபாடிகள் கண்டுபிடிக்க இயலாமல் போக வாய்ப்பும் உண்டு. எனவே வேறு சில பரிசோதனை முறைகளும் உபயோகிக்கலாம். 

நமது உடலில் புற்று நோய் ஏற்பட்டால் சில வேதி பொருட்கள் உடலில் அதிகரிக்கும், இந்த வேதி பொருட்களை பரிசோதனை செய்வதன் மூலம் எந்த வகையான புற்று நோய் வந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதில் ஆல்பா பிட்டபுரதம், புற்றுநோய் ஆண்டிஜென் போன்றவை ஆகும். மேலும் ரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே இருக்கும், ஆனால் புற்று நோய் வந்தால் இந்த பொருட்கள் அளவு மாறுபடும் அதை வைத்து புற்று நோய் கண்டு பிடிக்கலாம். இவை எல்லாம் மிக மிக ஆரம்ப நிலையிலே கண்டுபிடிக்க கூடிய வசதிகளாகும். 

சிறிது பெரிதானாலும் கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் உண்டு. உடலை ஸ்கான் செய்து இந்த புற்று நோய் கண்டுபிடிக்கலாம். பெட் ஸ்கான் என சொல்வார்கள். மேலும் உடலில் ஏதாவது கட்டி இருகிறதா என உறுப்புகளின் அளவினை பார்த்து சொல்வதும் உண்டு. இப்படி பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொண்டபின்னர் உரிய மருத்துவ முறையினை பின்பற்றினால் புற்று நோய்தனை தடுக்கலாம். 

விழித்து கொள்ளுங்கள்: 

புற்று நோய் வந்தால் மரணம் நிச்சயம் எனும் உணர்வை அகற்றிவிட்டு புற்று நோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து கொண்டு அந்த நோயின் தன்மையில் இருந்து காத்து கொள்ளலாம். தற்போது கரு உருவானதும் அந்த கருவில் மார்பக புற்று நோயிற்கான மரபணு இருக்கிறதா எனும் அளவிற்கு கரு பரிசோதனை எல்லாம் தற்போது மருத்துவத்தில் வந்துவிட்டது. இதை எல்லாம் கிராமங்கள், நகரங்கள் என எல்லா இடங்களிலும் ரத்த தான முகாம், கண் பார்வை முகாம் போன்றது போல, புற்று நோய் முகாம் நடத்த வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். 

இதுகுறித்த அறிவினை எங்கும் பரப்பிட பல அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது, அந்த அமைப்புகளுக்கு நம்மால் முடிந்த உதவிகள் செய்து மக்களை அறியாமையில் இருந்து காப்பது அனைவரின் கடமையாகும். 

முடிவுரை:

புற்று நோயிற்கு முற்று புள்ளி வைக்க பரிசோதனை முறைகள் மிகவும் உதவி புரியும் என்றாலும் இது குறித்த அறிவு அனைவருக்கும் அவசியமாகும். அதனை எல்லா இடங்களிலும் கொண்டு சேர்த்திட போராடுவோம். 

Monday 14 September 2009

கருத்துகளும் அதன் சுதந்திரமும்

வலைப்பூக்களில் எழுதுவோர் அனைவருக்கும் கருத்துக்களை வெளியிட சுதந்திரம் உண்டு, அதே வேளையில் கருத்துக்களை எவ்வாறு வெளியிட வேண்டும் என்கிற ஒரு வரைமுறையும் இருக்கிறது? என்பதை அனைவரும் அறிவோம்.

கருத்துக்களைப் பொருத்தவரை கருத்துக்களை வெளியிடுபவரின் மனநிலை, கருத்துக்களைப் படிப்பவரின் மனநிலை என இரண்டு விதமாகப் பிரித்துக் கொள்ளலாம். கருத்துக்களை வெளியிடுபவர் எந்த சூழ்நிலையிலும் சரி, எல்லாச் சூழ்நிலையிலும் சரி தனது கருத்துக்களுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை எவரும் மறுக்க இயலாது.

கருத்துக்களை எடுத்துக்கொள்வது என்பது படிப்பவரின் மனநிலையைப் பொருத்தே அமைகிறது, அதாவது அந்த நேரத்தில் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதைப் பொருத்தும் அமைகிறது. படிப்பவர் ஒவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்ப கருத்துக்கள் எழுதுவது என்பது எளிதான காரியமில்லைதான் ஆனால் கருத்துக்களை திறம்பட எழுதும் விதம் உண்டு.

மேலும் ஒருவரால் வெளியிடப்படும் கருத்துக்களினால் ஏற்படும் மனஸ்தாபங்கள், அதனால் வரக்கூடிய மன உளைச்சல்கள் என கருத்தினை வெளியிடுபவரும், கருத்தினால் பாதிக்கப்படுபவரும் அடைகிறார் என்பதில் இரு கருத்து இல்லை. இதன் விளைவாக அவ்வப்போது தலைகாட்டும் பிரச்சினைகள் பெரிய விவாதங்களை ஏற்படுத்தி வருவது ஒருவரது எழுத்தின் நோக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துவிடுகிறது.

'குழப்பமில்லாது இருப்பின் தெளிவுக்கானத் தேடல் அவசியமில்லை' என்பதை அனைவரும் அறிவோம். பல விசயங்கள் குழப்பம் தரக்கூடியதாக இருக்கும் காரணத்தினாலேயே தெளிவுக்காக விசயங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஒரு மாறுபட்ட எண்ணம் மற்றவர் மனதில் எழுவதற்கு நமது கருத்துக்களும் காரணம் என்பதும் உண்மையே.

பொதுவாக எவரையும் புண்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் எவரும் பதிவுகளை இடுவதில்லை. கருத்துச் சுதந்திரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை பரிசீலனை செய்வோம். 'நமக்குச் சரியெனத் தெரிவது பிறருக்குத் தவறாக இருக்கலாம்' நமக்குத் தவறெனத் தெரிவது பிறருக்குச் சரியாக இருக்கலாம்' எனும் உண்மையை உணர்ந்து கொண்டு விவாதத்தைத் தவிர்த்துவிட்டு கலந்துரையாடினால் அனைவரும் மகிழ்வுடன் இருப்பார்கள், நல்ல நல்ல விசயங்கள் கற்று மகிழலாம்.

எழுத்தின் நோக்கம் வெல்லட்டும், பல சிறந்த எழுத்தாளர்கள் உருவாகட்டும்!

Sunday 16 August 2009

ஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்

முன்னுரை:

பொட்டுக்கடலை வாங்கி நடந்து சென்ற காலம் எல்லாம் தாண்டி இப்பொழுது வாகன வசதிகள் வந்ததைப் பார்த்து நடந்து செல்ல மனமின்றி, வாகனமும் வாங்க வழியின்றி தவிக்கும் மனித வர்க்கம் வருத்தம் அடையச் செய்கிறது. இவர்களின் நிலைக்கு என்னதான் விடிவு எனில் இவர்களும் உழைத்து முன்னேறி வாகனம் வாங்குவதுதான்.

செங்கல் பேருந்து, வரப்பு வாகனம்:

வயதான பலர் தங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் மணலில் செங்கல் வைத்து பேருந்து ஓட்டி விளையாடிய கதையும், வரப்புகளில் வாகனம் ஓட்டுவது போல் ஓட்டி மகிழ்ந்திருந்த காலத்தையும் சொல்வார்கள். இன்றைய சூழலில் சாலையில் ஊர்ந்து செல்லத் தெரியாமல் பறந்து செல்லும் வாகனங்கள் ஆக்கிரமித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டன.

கிராமத்து மனிதர்களின் செங்கல் பேருந்து கனவு எல்லாம் கலைந்து போய்விட்டது. வீட்டிற்கு ஒரு வாகனம் இருக்க வேண்டும் எனும் நினைவு வந்து சேர்ந்துவிட்டது. இதன் காரணமாக வீணான மன உளைச்சலுக்கு இவர்கள் ஆட்படுகிறார்கள்.

உலக சந்தை:

பொருளாதார தாராளமயமாக்குதல் கொள்கையால் இன்று உலகப் பொருளாதாரம் நமது வீட்டின் வாசலில் வந்து நின்று வேடிக்கைப் பார்க்கிறது, வேதனை தருவதாய் இருக்கிறது. உலக நாடுகளில் மட்டும் உற்பத்தியாகிக் கொண்டு இருந்த வாகனங்கள் இன்று நமது உள்ளூரிலேயே உற்பத்தி பண்ணக்கூடிய வாய்ப்பை பெற்றும் அதை வாங்கக்கூடிய மனிதர்கள் எண்ணிக்கையும் வியப்பைத் தருகிறது. எனினும் சாதாரண மனிதர்கள் இந்த வாகனத்தைப் பார்த்து கை அசைத்து செல்லும் மகிழ்ச்சியை மட்டுமே அடைகிறார்கள் என்பது மிகவும் வருத்தம் தரக்கூடியது. நமது பொருளாதாரத்திற்கு ஏற்ப நமது வாழ்க்கைத் தரம் அமைந்து விட்டால் அது சிறப்பாக இருக்கும், இல்லையெனில் வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாக மாறிவிடும். இன்றைய வாகனங்கள் அத்தகைய சூழலைத்தான் இன்று உருவாக்கி வருகிறது.

மிதிவண்டி, மாட்டுவண்டி எல்லாம் மறந்து போய்விட்டது. இன்றைய தேதியில் டாடாவினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய வாகனம் அனைவரது பார்வையையும் வெகுவாக கவர்ந்து இழுத்து இருக்கிறது, கவலையையும் அதிகரித்து இருக்கிறது.

தொழில்நுட்பம்:

வெளிநாட்டு வாகனங்களில் இருக்கும் தொழில்நுட்பங்கள் நமது நாட்டு வாகனங்களில் இல்லாது இருப்பது, வாகனம் வைத்து இருப்பவரையும் யோசிக்க வைக்கிறது. அதே வேளையில் அத்தகைய வாகனங்கள் அதிக மதிப்புள்ளதாக இருப்பதால் வாங்குவது எளிதாக இல்லை. இதனை போக்க அதிக தொழில்நுட்பம் உள்ள வாகனங்களை நாம் குறைந்த விலைக்கு உருவாக்குவதுதான் வழி.

முடிவுரை:

'மனமிருந்தால் மார்க்கமுண்டு' 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என இருப்பதை வைத்து நிம்மதியாக வாழ்வதோடு மட்டுமின்றி மேலும் பல முன்னேற்றத்தை அடைய முயற்சி செய்தால் இன்று இருக்கும் ஆற்றாமை ஓடிவிடும், அருகில் செல்லும் புது ரக வாகனங்களில் அமர்ந்து செல்லலாம்.

Thursday 13 August 2009

அழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்

முன்னுரை:-

'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாதிருத்தல் வேண்டும்'

நல்லதொரு சிந்தனையும் எண்ணமும் உடைய மனிதர்களே நமக்கு எந்த ஒரு தருணத்திலும் துணையாக இருப்பார்கள். எண்ணமும் செயலும் வெவ்வேறாக உடையவர்கள் நமக்கு பெரும் துன்பம் இழைப்பவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை அடையாளங்கண்டு வாழ்க்கையை செம்மையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

இதயமும் இதழும்:

இதயம் ஒன்று எண்ணித் துடிக்க
இதழ் ஒன்றை சொல்லி சிரிக்க
மனிதன் போடும் போர்வையில்
புனிதம் மூச்சிரைத்துப் போனது

என்பான் ஒரு கவிஞன். முதன்முதலில் கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் இதயம் தான் எல்லா விசயத்தையும் நடத்தி வைக்கிறது என சொன்னார். அதன் காரணமாகவே இதயம், மூளையை விட அதிக அந்தஸ்து பெறத் தொடங்கியது. காவியங்களும், காதல் வேள்விகளும் இதயத்தை அடிப்படையாக வைத்தே புனையப்பட்டன. இதயம் நமது உறுப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதில் இதழ்கள் பெறும் பங்கு வகித்தன. இதழ்கள் புன்னகையை வெளிப்படுத்துவதுன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றுக்கொண்டன. இதன் மூலம் இதயத்தை உரசுவது போன்ற உணர்வு, காதலர்கள் தரும் இதழ்கள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் ஏற்படுத்தும் என அறியாமை உணர்வு ஏற்பட்டது.

கருணைக்கும் கொண்ட வெறுப்புக்கும் இதயம் பங்கெடுத்துக்கொண்டது. தான் துடித்துக் கொண்டிருப்பது போதாதென மனிதர்களின் சொல்லாட்சியால் இதயம் மேலும் துடித்து துவண்டது. இதழ்களோ வர்ணம் பூசிக்கொண்டன.

அக முக:

நட்பினை பற்றி குறிப்பிடும்போது முகம் மட்டும் சிரிக்கும் நட்பானது நட்பில்லை, நெஞ்சத்திலிருந்து சிரிப்பதுதான் நட்பு என திருவள்ளுவரின் திருக்குறளிலிருந்தும் நாம் இதயம் பற்றி அறியலாம். மேலும் இதயத்திலிருந்து சொல்கிறேன் என இதயத்தில் கை வைத்து பேசுவதும் வழக்கமாகிவிட்டது. அப்படிப்பட்ட இதயம் எப்படி இருக்க வேண்டும்? மிகவும் சுகாதாரமாக, சுறுசுறுப்பாக, உண்மையின் சொரூபமாக இருக்க வேண்டும். எப்பொழுது அப்படி இருக்கும்? அன்பே உருவாக இருந்தால் இதயம் அந்த நிலையில் இருக்கும்.

இன்றைய நிலை எப்படி இருக்கிறது? எப்பொழுது யாரை வீழ்த்தலாம் எனும் வியாபார நோக்கம். இந்த நிலையில் இதயமானது அழுத்தம் கொள்கிறது என்பதை அறிபவர்கள் குறைவு. அழுத்தம் கொண்டே இதயம் அழுகிப்போய் விடுகிறது. இவர்கள் இதயத்தில் எதிரிகளாக பாவித்துக்கொண்டவர்களை, இதழ்கள் மூலம் நண்பர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால் பெரும்பாலான நல்ல இதயங்கள் இந்த இதழ்களை உண்மையென நம்பிவிடுவது காலத்தின் கொடுமையாகும். இந்த நல்ல இதயங்களின் செயல்பாடுகள் அழுகிப்போன இதயத்தை சீர்திருத்த முயற்சித்தாலும் முடிவதில்லை. மாறாக அந்த இதழ்களை நம்பி உறவு கொண்டது மூலம் இந்த நல்ல இதயங்கள் பாழ்பட்டு போகின்றன.

இதனை தடுப்பது எவ்வாறு? இப்படிப்பட்ட அழுகிய இதயங்களை உடையவர்களை இனம் கண்டு கொள்ள வேண்டும். பிறர் துன்பப்படும்போது இவர்களது செயல்பாடுகளை நாம் கவனித்தால் நாம் இவர்களை இனம் பிரித்துக் கொள்ள முடியும். ''சேரும் இடம் அறிந்து சேர்'' என்பதை நாம் அறிய வேண்டும்.

மகாபாரதமும் இராமாயணமும் சொல்ல வந்தது இந்த அழுகிய இதயங்களையும் நகைக்கும் இதழ்களையும் பற்றித்தான். அத்தனை பெரும் காவியம் சொல்லியும் நம்மிடத்தில் இன்னும் இதுபோன்ற மனநிலை உடையவர்கள் வாழ்வது நமக்கு பெரும் அவமானமாகும். அவர்களிடத்தில் சிக்கிக் கொள்ளாது நாம் அவர்களை திருத்த வழி செய்ய வேண்டும்.

முடிவுரை:

'இன்னா செய்தாரை ஒறுத்தல்' என்பதற்கேற்ப நாம் அனைவரையும் சமமாக பாவித்து தீங்கில் கிடந்து உழல்பவரை காப்பாற்றி இதயமும் இதழ்களும் நகைக்கச் செய்வது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். இதழ்கள் மட்டும் நகைக்கிறது என ஒதுக்கி விடுதல் சமுதாய சீரழிவினை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்.

Wednesday 12 August 2009

வாழ்வைத் தேடும் விழிகள்

முன்னுரை:-

'ஆரம்பத்தைப் பார்க்காதே முடிவினைப் பார்' என்பது சொல் வழக்கு. அதாவது ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரது மரணம் ஒன்றுதான் உண்மையாய் குறித்து வைக்கும். எத்தனையோ மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள், வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், ஒவ்வொருவரிடமும் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ வேண்டும் எனும் ஆர்வமும், தேடலும் இருக்கத்தான் செய்கிறது. வாழ்க்கை ஒன்றாக தெரிந்தால் பிரச்சினை இல்லை, பலருக்கு வாழ்க்கை பலவிதமாக அல்லவா தெரிகிறது. பல வாழ்க்கை சொல்லும் தத்துவம் ஒரு வாழ்க்கை தான் என இந்த விழிகள் வாழ்க்கையை தேடுகிறது.

இயந்திர வாழ்க்கை:

'இப்பொழுதெல்லாம் வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்டது' என குறைப்பட்டு கொள்வோர் பலர் உள்ளனர். அதாவது செய்வதையே செய்து சிந்தனையற்று போய்விடும் தன்மை. ஆனால் செய்யும் முறையில் மாறுபாடு காண இவர்கள் முயல்வதில்லை. இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில் சோகங்கள் மிஞ்சுகிறது. இந்த வாழ்க்கையைப் பார்க்கும் விழிகள் இயந்திர வாழ்க்கையில் அன்பு இணைந்திருக்குமானால் இந்த இயந்திர வாழ்க்கை இனிமையாகிவிடுமே என இதனைத் தேடலில் தேக்கி வைத்துக்கொள்கிறது. ஆக இயந்திர வாழ்க்கையைத் தேடும் விழிகள் இயந்திரத்தனத்தை தொலைக்க தயாராக இருக்க வேண்டும்.

இதில் அன்றாடம் உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட வாழ்க்கையை பெரும்பாலான விழிகள் தேடிக்கொள்கின்றன.

அமைதி வாழ்க்கை:-

''எல்லாம் அவன் அருள்'' என உள்ளமது எதிலும் பற்று கொள்ளாது இறைவனிடம் மட்டும் பற்று கொண்டு வாழ்வதாக சொல்லப்படும் அமைதி வாழ்க்கை. பொதுவாக இந்த அமைதியானது எல்லா வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என விரும்புவோர்கள்தான் அதிகம். இயந்திர வாழ்க்கையிலும் ஒரு அமைதி கிடைத்துவிட்டால் பெரும் மகிழ்வைத் தரும் என்பதில் ஐயமில்லை. எத்தகைய சூழ்நிலையிலும் பதட்டபடாமல், நிதானித்து எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமுடைய மனதினைத் தரும் அந்த அமைதி வாழ்க்கையை இந்த விழிகள் உயர்வாக கருதுகிறது, இதனை தேடலின் முதன்மையாக வைத்துக்கொள்கிறது ஆனால் இந்த அமைதி வாழ்க்கை ஏனோ விழிகளுக்கு எட்டும் விசயமாகவும், நடப்பிற்கு எட்டாத விசயமாகவும் இருப்பது ஆச்சரியம்.

சித்தர்கள், முனிவர்கள் என பலரும், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகாநந்தர், இரமணர் புத்தர் என பலரும் இந்த வாழ்க்கையை அணுகி பெரும் வெற்றியடைந்தவர்கள்.

சாதனை வாழ்க்கை:-

''இவ்வுயிர் மண்ணில் பிறந்தது சாதிக்கத்தான், சாதனையால்தான் ஒரு மனிதர் உலகறியப்படுவார்'' இப்படிப்பட்ட வாழ்க்கையைத் தேடும் விழிகள் வழியில் பல விச்யங்களைத் தொலைத்து விடுகிறது. ஆனால் தேடிக்கொண்ட சாதனை அளவை எட்டிவிடும் என சொல்வதற்கில்லை. வாழ்வில் சாதனையாளர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக பித்தோவன் எனும் மாபெரும் இசை மேதையை சொல்லலாம். இந்த சாதனையாளரை பிள்ளையாய் பெற பல சாதாரண மனிதர்களை இவர்கள் பெற்றோர்கள் பெற வேண்டியிருந்தது.

உலகத்தலைவர்கள் ஒரு சிலரே, ஆனால் அவர்களுக்கு கீழ் இருக்கும் மக்கள் கோடி. இப்படிப்பட்ட சாதனை வாழ்க்கையை தேடும் விழிகள் களைப்படைந்து விடுகின்றன. களைப்பிலும் தெளிவாய் பார்க்கத் தெரிந்த விழிகளுக்கு சாதனை வாழ்க்கை கிட்டிவிடும். இந்த சாதனை வாழ்க்கையில் வரும் சோதனைகளை அமைதியாய் அன்பாய் பார்த்து சென்றால் தான் இந்த சாதனை வாழ்க்கை சாதித்ததாக பொருள்படும்.

சி.வி.இராமன், தாகூர், பாரதியார், காந்தியடிகள், நியூட்டன், கலிலியோ, ஆபிரஹாம் லிங்கன், என பலரை இங்கு குறிப்பிடலாம்.

முடிவுரை:

வாழ்க்கை இதுதான் என முதலில் தேடும் விழிகள் விலகிப்போய் வேறு வாழ்க்கையைத் தேடிக்கொண்ட வரலாறு பல உண்டு. அப்படி வாழ்க்கையில் என்ன வேண்டும் என்பதை முழுவதுமாக உணர்ந்து அந்த வாழ்க்கையைத் தேடி வாழ்வதில்தான் விழிகளுக்கு சந்தோசம் தரும். எந்த ஒரு வாழ்க்கையை எடுத்துக்கொண்டாலும், சாதாரண வாழ்க்கையிலிருந்து சாதனை வாழ்க்கை வரை, அன்பும் அமைதியும் கண்டு கொள்ளும் விழிகள் தான் ஒரு உண்மையான சத்தியமான வாழ்க்கையை வாழ்ந்ததாக கருத முடியும்.

'தேடும் விழிகளே, தேடலில் அன்பையும், அமைதியையும், கருணையையும் தொலைத்து விடாதீர்கள்' என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள்.

பள்ளியின் பாதையில் பள்ளங்கள்

முன்னுரை:-

'கற்றவருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு' இது கல்வியறிவை மட்டும் குறிப்பது அல்ல. கல்வியறிவுடன் விவேகமான அறிவை குறிப்பிடுவதாகும். ஒருவர் எத்துனைதான் கல்வியில் சிறந்த பெயர் பெற்று இருந்தாலும் அவரது செயல்பாடுகள் சரியாக இல்லையெனில் அவர் பெற்ற கல்விக்கு சிறப்பு இல்லை. இங்கு குறிப்பிடும் பள்ளியானது ஒவ்வொருவரும் பெறும் கல்வியுடன் கூடிய அனுபவங்களேயாகும். அப்படி அனுபவங்களை பெறும் போது பள்ளங்கள் எனும் இடர்ப்பாடுகள் வரும் அதை கடந்து அனுபவத்தின் மூலம் வெற்றியாளாரக மாறுவது சிறந்ததாக கருதப்படுகிறது.

அனுபவ அறிவு:-

'ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது' ஒருவர் பெற்ற கல்வியானது எப்படி உபயோகப்படும் எனில் இருவரிடம் சுரைக்காய் ஒன்று பற்றிய விளக்கம் தந்து அதன் கீழ் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என எழுதி வைப்போம். அதில் ஒருவர் விளக்கம் படித்து சுரைக்காயை உண்டு பண்ணி சாப்பிட்டு மகிழ்பவராகவும், மற்றவர் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என சொல்லி திரிபவராகவும் கருதுவோம். அப்படிப்பட்ட சூழலில் ஒருவர் எழுத்துக்களில் மட்டுமே இருந்த விசயத்தை செயல்படுத்தி தனது சாதகமாக்கிக் கொண்டவர், மற்றொருவர் எழுத்துக்களை மட்டுமே பார்த்து அந்த பள்ளத்தில் விழுந்து முன்னேறாமல் போனவர். ஆகவே நாம் பெறும் அனுபவத்தில் நமக்கும் மற்றவருக்கும் உதவியாக இருப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.

வறுமையின் வலி:

வறுமை நிலையில் வாடும் பலர் அவரது திறமைகள் வெளிவர முடியாத சூழ்நிலையில் அகப்பட்டு தவிக்கின்றனர். அவர்கள் கல்வி கற்பதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது. அதன் காரணமாகவே அவரது வாழ்வு பிரகாசமற்று போகிறது, ஆனால் பல சாதனையாளர்கள் வறுமையெனும் பள்ளத்தில் விழுந்துவிடாது அந்த வறுமையை தனக்கு சாதகமாக்கி அதனை விரட்டியடித்த வரலாறு உண்டு.

'வறுமையை பொறுமை இழக்கச் செய்ய துணிவும் தன்னம்பிக்கை எனும் ஊன்றுகோல் வேண்டும்' இந்த வறுமை தந்த அனுபவம் 'தெருவிளக்குகளில் படித்தவர்கள் மாபெரும் மேதைகளானார்கள்' என சொல்லும் அளவிற்கு இருந்து வருகிறது.

அலட்சியபோக்கு:-

வறுமைக்கான முக்கிய காரணம் அலட்சிய போக்கு, இது மாபெரும் பள்ளமாகும். இந்த பள்ளத்தில் விழுந்து எழாதவர்கள் எந்த ஒரு பள்ளியையும் அடைவதில்லை என்பதை அறிந்து கொண்டு அலட்சியபோக்கு தீரும்பட்சத்தில் வெற்றி பெறலாம் என்பதை உணர வேண்டும்.

'எழுமின், விழிமின்' எதிலும் கண்ணும் கருத்துடன் செயல்பட்டால் எந்த ஒரு தடையும் அகன்றுவிடும். நமது முயற்சிக்கு தடையாய் இருக்கும் விசயங்களை ஒதுக்கித் தள்ளிச் செல்வதே அனுபவத்தின் ஆணிவேர்.

சுதந்திரமற்ற தன்மை:-

எந்த ஒரு விசயத்திலும் முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும். வெளிநாடுகளில் வாழும் வெளிநாட்டு மனிதர்களுக்கு அவர்களது நிறம், கலாச்சாரம், பண்பாடு என்பவை அவர்களது வாழ்க்கையில் வெற்றி பெற முடியாமல் தடுக்கி விழ வைக்கும் பள்ளங்களாகும். இவைகளை தகர்த்து எறிந்து வருபவரே பள்ளியினை அடைகிறார்கள்.

கல்வி கற்பதிலும் சுதந்திரம் அவசியமானதாக இருக்கிறது. ''சுதந்திரம் நமது பிறப்புரிமை'' என்பதை உறுதியுடன் கடைபிடித்து வருதல் பள்ளியினை அடைய வழி செய்யும்.

முடிவுரை:-

பல மனிதர்களுக்கு பள்ளிக்கான பாதையே தெரிவதில்லை. பலருக்கு பள்ளியே தெரிவதில்லை. அப்படி பள்ளியும் பாதையும் தெரிந்த சிலருக்கு பள்ளம்தான் பெரிதாக தெரிகிறது, பள்ளம் மூடும் வழி தோன்றுவதில்லை. ஆனால் வெகு சிலரே பள்ளம்தனை தாண்டியதோடு நில்லாமல் பள்ளம்தனை மூடி பாதையை சரியாக்கி பள்ளியை தானும் அடைகின்றனர், மற்றவர்களை அடைய வழி செய்கின்றனர். இவர்களின் வழி நாமும் நடப்போம்.

Tuesday 7 July 2009

வாழ்க்கையில் சீரழிவது எப்படி?

முன்னுரை:-

நாம எல்லோருக்கும் பொதுவா தெரிஞ்சிக்கிறஆசை எப்படி இருக்கும்னு பார்த்தாக்க, எப்படி வாழ்க்கையில முன்னேறுரது, அப்புறம் எப்படி கோடி கோடியா சம்பாதிக்கிறது, எப்படி நூறு வயசுக்கு மேலயும் வாழறதுனு சொல்லிக்கிட்டேப் போகலாம்.

நாம் ஒருத்தருக்கும் வாழ்க்கையில சீரழியறது எப்படினு தெரிஞ்சிக்கனும்னு ஆசை இருக்கிறதுல்ல! ஏன்னா அதுதான் தினமும் நாமப் பாத்துக்கிட்டு இருக்கமேனு ஒரு நினைப்பு நமக்கு.

இருந்தாலும் எப்படி வாழ்க்கையில சீரழியறதுனு ஒரு புத்தகம் போடலாம்னு யோசனை வந்துச்சு, அதனால எழுதப் போறதுதான் இனிமே.

Monday 29 June 2009

கள்ளிப்பாலின் கயமை

முன்னுரை:

கள்ளிப்பால் என சொன்னதும் உசிலம்பட்டி எனும் தமிழக வரைபடத்திலே இல்லாத ஒரு கிராமம் அனைவருக்கும் நினைவில் வந்து செல்லும், அந்த பச்சிளம் குழந்தைகளின் வேதனைகள் மனதை நீங்காமல் வட்டமிட்டு இருக்கும். கள்ளிப்பால் மருந்தாகவும் பயன்படக்கூடியது, மேலும் கள்ளிப்பால் தரும் கள்ளிச்செடி தன்னைக் காத்துக்கொள்ள முட்கள் எல்லாம் வைத்து இருக்கும். இப்படி மருந்தாக பயன்படக்கூடியதை மரணத்திற்காக பயன்படுத்தியது கள்ளிப்பாலின் கயமைத்தனம் என்றால் இல்லை என்று சொல்லலாம். மாறாக இதனை இப்படி உபயோகப்படுத்தலாம் என மனிதர்களின் கயமைத்தனம்தனை வன்மையாக கண்டிக்கலாம்.

இளைஞர்(ஞி)களும் கள்ளிப்பாலும்

'ஆசை ஆசையாய் புள்ளை பிறக்க வேணுமின்னு
அய்யனாருக்கு படையல் வைச்சி வருசம் பல
காத்திருந்து கண் விழிச்சி காத்திருக்கையிலே
பிறந்த புள்ளை பொட்டை புள்ளையாய் போச்சுதுன்னு
இறந்த சேதி சொல்ல கள்ளிப்பாலு கொடுத்தாளே பாட்டி'

எனும் நாட்டுப்புற பாடலில் இருக்கும் அகற்றமுடியாத சோகம் ஒவ்வொரு மனித உயிரையும் உலுக்கி வைக்கும். இந்த கள்ளிப்பால் நிலையில் தான் இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும் இருக்கிறார்கள் என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று.

கண்ணும் கருத்துமாக வளர்க்கப்பட்டு, படித்தபின்னர் இவர்கள் தனது சொந்த சிந்தனையை தொலைத்து போதைப் பொருளுக்கும், சிற்றின்ப விசயத்திற்கும் விலை பேசாமலே இவர்களை தாங்களே விற்றுவிடுகிறார்கள். கள்ளிச்செடியின் முள்ளானது ஓரளவிற்கு எதிர்ப்பு தர முடியும், ஆனால் இந்த இளைஞர்கள் கூட்டம் தகர்க்க முடியாத எதிர்ப்பை தர முடியும். அப்படி இருக்கும் இந்த இளைஞர்கள் இப்படி வீணாகிப்போவது இவர்களது கயமைத்தனத்தையே குறிக்கும். இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இவர்களது திறமையை உலகம் முழுவதும் அறிய வேண்டி செயலாற்றுதல் மிகவும் முக்கியமான செயலாகும்.

தனக்கு தீங்கிழைக்காத செயல்கள் மட்டுமின்றி, பிறருக்கு தீங்கிழைக்காத செயலையும் செய்யாது இருப்பது போற்றத்தக்கது. நல்ல விசயங்களை மட்டுமே நாம் தாங்கிக்கொண்டு வந்து இருந்தால், தீமையைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியிருக்காது. கள்ளிப்பால் நல்ல விசயத்துக்கு மட்டும் என இருந்து இருந்தால் தீமைக்கு துணை போயிருக்க வேண்டியிருக்காது. ஆனால் இப்படி இயற்கையாய் அமைந்து விட்ட விசயம்தனில் 'அல்லவை தேய நல்லவை நாடி வரும்' என போராடி தீய விசயங்களை அகற்றி செயலாற்றுதல் சிறப்பு.

உயிர்களின் சிறப்பு:

'பார்க்கும் பார்வையில்தான் எல்லாம் இருக்கிறது' 'நன்றும் தீதும் பிறர் தர வாரா' என நம்பிக்கையூட்டும் விசயங்கள் இருந்தாலும் எல்லா உயிர்களும் நன்மை தீமை என அனைத்தையும் தன்னுடன் இணைத்தே வைத்திருக்கிறது.

நுண்ணுயிர்கள் நமது உடலுக்கு தீங்கிழைக்க கூடியதுதான், ஆனால் அவை நமது உயிர் காக்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன. இப்படி ஒவ்வொரு உயிரும் கொண்டுள்ள பண்புகளால் அவை கயமைத்தனம் கொண்டவை என கருதமுடியாது. எப்பொழுது ஒரு உயிர் தீயனவாக செயல்படுகிறதோ அப்பொழுதுதான் அந்த உயிர் கயமைத்தனம் உடையதாக கருத முடியும். 'இருந்தும் இல்லாதிருப்பது' என்பது இங்கே சரியாகப் பொருந்தும். தீய விசயங்களுக்கு ஆட்படாமல் உயிர்களின் சிறப்பை நிலை நாட்டும் வண்ணம் நற்பண்புகளுடன் செயல்புரிவது அத்தியாவசியமாகிறது.

முடிவுரை:-

'இவ்வுலக படைப்பில் ஏற்றத் தாழ்வுகள் எதுவுமில்லை, ஏனோ மனிதன் பார்த்த பார்வையில் ஏற்றம் கூட தாழ்வாகிப் போனது'

அனைத்தும் சமமாக இருந்திட இன்னல்கள் இல்லாத சமுதாயம் உருவாக்கிட நமது கயமைத்தனம் அகற்றி நல்ல பார்வையுள்ள மனிதர்களாக வாழ்ந்து சிறப்போம்.

Sunday 28 June 2009

கலையாத கனவும் விளங்காத இயல்பும்

முன்னுரை:

கனவும், இயல்பும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவையாகத் தோன்றும். இயல்பாக நடக்கும் விசயத்தை இது கனவா என எண்ணும் அளவிற்கு ஆச்சரியப்படுத்தும் வலிமை கனவுக்கு உண்டு. கனவு கண்டு கொண்டிருப்பவர் இது இயல்பாகவே நடக்குமா என அவருக்குள் கேள்விக்குறியை ஏற்படுத்திவிட்டுப் போகும் வல்லமையும் கனவுக்கு நிறையவே உண்டு. கனவு சாதாரணமாக கலைந்து போகும் நிலைத்தன்மையற்றது. நடக்கின்ற விசயத்தின் அடிப்படையில், இயல்பு சாதாரணமாக விளங்கிக் கொள்ள முடியும் தன்மை உடையது. ஆனால் அப்படி இல்லாமல் கலையாத கனவாகவும், விளங்காத இயல்பாகவும் இருக்கும் இறைத்தன்மை முரண்பட்ட இரண்டு விசயங்களை ஒன்றாக்கி வைத்து இருக்கிறது, இருந்து கொண்டிருக்கிறது.

கனவுலகில் சஞ்சரிப்பவர்கள்:

இப்பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து இந்நாள்வரை இந்த உலகம் எப்படி தோன்றியது என்பது எவரும் அறியாத நிலையில் 'அவனின்றி ஒரு அணுவும் அசையாது' என சொன்னதின் அர்த்தம், கலையாத கனவின் அடிப்படை, விளங்க முடியாத இயல்பின் துவக்கம் என கொள்ளலாம்.

இருந்ததை எண்ணி, நடக்கின்ற இயல்பின் அடிப்படையை வைத்து 'தகுதியுள்ள இனமே வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ளும்' என சார்லஸ் டார்வினின் விளக்கமும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் மிகவும் பிரபலமான சக்தி, நிறை மற்றும் ஒளி தொடர்பான வாய்ப்பாடும், கிரிகரி மெண்டலினின் மரபியல் தத்துவமும் என ஒவ்வொரு மனிதரும் இருக்கின்ற இயல்பை விளங்கிக் கொண்டனரேயன்றி எவராலும் இதுவரை முதல் கனவை கலைக்க இயலவில்லை எனலாம்.

மொத்த மனித இனமும் விதவிதமாக கண்ட அந்த இறையை பற்றிய கனவு கலைந்து போவதற்கு வழியற்றுப் போனது. உண்மையான கனவு என்பது தானாக வருவது, ஆனால் இந்த கனவு வாழையடி வாழையாய் காணாமலே கண்டது போல் ஆகிப் போனது. விழித்த நிலையில் காணும் கனவு என சொல்வது போல் ஆனது. இப்படி கலையாத கனவுலகில் சஞ்சரிக்கும் மனிதர்களாக நாம் இருப்பது விளங்கிக் கொள்ள முடியாத இயல்பாகிறது.

இதை மாணிக்கவாசகர் அருமையாக தனது திருவாசகத்தில் பாடுகிறார்.

'புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகிப்
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய் தேவராய்ச்
செல்லாய் நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்'

வெடித்துச் சிதறிய வேதாந்தம்:

பூமியும், சூரியனும் மட்டுமே தெரிந்து வைத்திருந்த மனித இனத்திற்கு, எண்ணற்ற நட்சத்திரங்களும், நட்சத்திரங்களுக்கான கோள்களும் கண்டு இது எப்படி சாத்தியமானது என எண்ணிக் கொண்டு இருக்காமல் ஒரு அற்புதமான கனவு காணத் தொடங்கியதன் விளைவாக 'நட்சத்திரம் வெடித்துச் சிதறியது' என கண்ட கனவு ஒரு கலையாத கனவுதான். வெஞ்சினரின் 'எல்லா நிலப்பரப்பும் ஒன்றாக இருந்தது' எனும் கனவும் கலையாத கனவுதான், ஆனால் இவை விளங்க முடியாத இயல்பாக இருக்கின்றன.

இந்த விளங்க முடியாத இயல்பை விளக்கிக் கொள்ள எண்ணற்ற பொருட்செலவில் நடக்கும் ஆய்வுகளும், வெளி கோள்கள் மற்றும் வெளி நட்சத்திரங்கள் நோக்கியப் பார்வைகளும் பெரும் ஆர்வத்தை நம்மிடையே ஏற்படுத்தி இருக்கின்றன. இயல்புநிலை விளங்கிக் கொண்டதன் காரணமாக பல கனவுகள் தகர்ந்து போயின. எழுத்தாளர்களின் அதீத கற்பனை வளமும், கிடைக்கும் சிறு விசயத்தை வைத்து அறிவியலாளர்கள் காணும் கனவும் சாதாரண மனிதனை கனவு காணும்படி வைத்துள்ளது. இந்த கனவுகள் கலையாமல், விளங்கிக் கொள்ள முடியாமல் தொடர்வது ஒரு இலக்கைத் தொட்டுவிட உதவும், அந்த இலக்கோடு நிற்காமல் தொடர்ந்து பயணிக்க கலையாத கனவுகள் மிக அவசியம். வேறு கிரகத்தில் உயிரினங்கள், அதிக அறிவுள்ள உயிரினங்கள் என காணும் இந்த கனவுகள் நனவாக வேண்டும் என்ற எந்த ஒரு அத்தியாவசியமும் இல்லை. அது ஒருவகையில் அநாவசியம் கூட.

'எந்நிலை கொண்டு என்னை விளக்கும் முயற்சியில்
தன்னிலை மறந்து வாழும் மனிதருள்
ஒளியாக கண்டிடும் காணும்
ஒளியால் பிறிதொரு
உலகமது'

இறைவனான என்னை விளங்கிக் கொள்கின்ற இந்த முயற்சியில், ஒளியாய் என்னை உள்ளத்துள் காண்பது போல், ஒளியினை அடிப்படையாக கொண்டு பிறிதொரு உலகத்தை இம்மனிதர்கள் காண்பார்கள் என்பது இக்கவிஞனின் கலையாத கனவு, ஆனால் விளங்க முடியாத இயல்பு.

முடிவுரை:

'கனவுகள் இல்லையேல் வாழ்வு சுகப்படாது' என்பது என் மொழி. கலைந்து போகும் வீணான கனவுகளை கண்டு வேதனைப்படுவதைவிட, இருக்கின்ற இயல்பின் அடிப்படையில் நாம் காணும் கனவு நிச்சயம் நனவாகி மகிழ்வைத் தரும். இறைவன் எனும் கலையாத கனவுடனும், விளங்கிக் கொள்ள முடியாத இயல்புடனும் நாம் வாழும் இந்த வாழ்க்கையில் நமது அன்றாட கனவானது உலகம் செழிப்புற இருக்க வேண்டுமென ஒவ்வொருவரும் நனவாக்க பாடுபட்டு இருப்போமெனில், நமது இயல்பு நிலை விளக்கம் பெறும், அந்த இறைவனும் மகிழ்ச்சி கொள்வான்.

Thursday 16 October 2008

வேர்களை மறந்த விழுதுகள்

முன்னுரை:-
மனித இனத்திற்கென்று தனித்தனி அடையாளங்களை ஏற்படுத்திக் கொண்டு குடும்பம், ஊர், நகரம், நாடு, உலகம், கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள், சமயக் கொள்கைகள் என பிரிந்து வாழும் முறையானது சரியில்லை என்றாலும் தனக்கென இருக்கும் அடையாளங்களை தொலைத்து வாழ்வது என்பது மிகவும் யோசிக்க வேண்டிய விசயம். எந்த ஒரு பிரிவினையும் ஏற்படுத்தாது தமக்குரிய அடையாளங்களை பாதுகாப்பது மட்டுமின்றி, மற்றவர்களுடைய அடையாளங்களுக்கு மதிப்பளித்து வாழ்வது இன்றைய உலகில் இன்றியமையாததாகும்.

உலகம் யாவும் தமிழர்:

உலக நாடுகளில் தமிழர்கள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள். கல்வித்துறை, கணினித்துறை, மருத்துவத் துறை, கட்டிடத் துறை, விஞ்ஞானம் என அனைத்து துறையிலும் சிறப்புடன் செயலாற்றி வருகிறார்கள். அப்படி சிறப்புடன் வாழும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களுக்கு உரிய கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை இழந்து வருவதும், வேண்டுமென்றே தொலைத்து வருவதும் வேதனைக்குரிய விசயம்.

'எலி வளையானாலும் தனிவளை வேண்டும்' இது ஒரு அழகிய பழமொழி. ஆனால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தனிவளையை கொய்துவிட்டு எப்படி தனிவளை ஏற்படுத்திக் கொள்வது எனப் புரியாமல் தவிக்கிறார்கள். இவர்கள் கலாச்சாரம், பண்பாட்டினை கட்டிக் காத்திட வெளிநாட்டை விட்டு வெளியேற அவசியமில்லை, அங்கேயே இருந்து காப்பாற்ற முடியும். அதுமட்டுமின்றி, இது போன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு இருப்பது நமது பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் பெரும் அவலத்தை ஏற்படுத்திக்கொண்டே வருவது நமது எண்ணத்தின் ஓட்டத்தை தடுமாறச் செய்வது தவிர்க்க முடியாதது.

'மெல்ல தமிழ் இனிச் சாகும்' என்றார் மகாகவி பாரதியார். 'தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்ற சொன்ன மகாகவியே இதுபோன்று சொல்ல அன்றே விதை விதைக்கப்பட்டு இருக்கிறது, ஆங்கில தாகம் ஆட்டிப்படைத்திருக்கிறது. ஆனால் சுதந்திரம் அடைந்த பின்னர் அதே நிலை கட்டுக்கடங்காமல் செல்வது கவலைக்குரிய விசயம் அல்லவா!

பிறமொழிகளை கற்றுக் கொள்வதிலும், புலமை பெற்றுக் கொள்வதிலும் எவ்வித இரண்டாம் உணர்வு தேவையில்லை, எனினும் நமது தாய் மொழியை மறந்து வாழ்வது, சந்ததியினருக்கு கற்பிக்காமல் விடுவது நமது தாயை அவமதித்து வாழ்வதற்கு சமம். நாம் தமிழர் என்ற அடையாளம் அழிந்து போகும் நிலை வருத்தத்திற்கு உரியது.

கலாச்சார சீரழிவு, பண்பாடு முறைகேடு:

தமிழனுக்கு என என்ன இருக்கிறது என ஆதங்கப்படும் நிலை இன்று வருவதற்கான காரணமே நல்ல பண்பை, நல்ல செயலை நமது சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லாததுதான். 'அம்மா எங்கே?' என இன்றைய நவநாகரீக தமிழர் குழந்தையிடம் கேட்டால், அக்குழந்தை அம்மாவிடம் சென்று 'அந்த மாமா என்னைத் திட்டுகிறார்' என ஆங்கிலத்தில் சொல்லும் அளவிற்கு நமது நிலை நகைப்புக்குரிய விசயமாகிவிட்டது.

தமிழர் ஒருவரிடம் தமிழ் கலாச்சார பண்பாடு பற்றி விளக்கமாக சொல்லுங்கள் எனக் கேட்டபோது அவர் அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என சொன்ன பதில் எந்த அளவிற்கு கலாச்சார சீரழிவும், பண்பாடு முறைகேடும் நடந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை அறியலாம். 'புலியை முறம் கொண்டு விரட்டிய வீரப் பெண்மணி' என தமிழரின் வீரம் பேசிய நாம் இன்று ஒரு வட்டத்தில் சிக்க வைத்து வழி தெரியாது தவிக்கின்றோம்.

'உடுத்தும் உடையிலும்
உண்ணும் உணவிலும்
பேசும் பேச்சிலும்
பார்க்கும் பார்வையிலும்
பணிவின் பாங்கிலும்
அடக்கத்தின் அறிவிலும்
அறிந்துகொள் மனிதனென்று
அதனினும் அவன் தமிழனென்று' என்பான் ஒரு கவிஞன்.

இன்று உடை பற்றிய சர்ச்சை பெரும் சர்ச்சையாகி வருகிறது. 'ஆடை இல்லாத மேனிஅவன் பெயர் அந்நாளில் ஞானி இன்றோ அது ஒரு பொழுது போக்கு'என்னும் நிலை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. உணவு விசயத்திலும் அதே நிலை தொடர்கிறது. அப்படியெனில் மாற்றங்கள் அவசியமில்லையா என கேட்கலாம். மாற்றங்கள் நிச்சயம் வேண்டும், ஆனால் அந்த மாற்றங்கள் நமது அடையாளங்களை அழிப்பதை சம்மதிக்க நாம் நம்மை மாற்றிக் கொள்வது என்பது நம்மை நாமே அவமானப்படுத்துவதாகும்.

வழிமுறை:

'பழமை பழமையென்றுபாவனை பேசலன்றிபழமை இருந்தநிலை கிளியேபாமரர் ஏதறிவார்'என்பார் பாரதி. நமது கலாச்சாரம், பண்பாட்டினை நாம் முறையாக கற்றுக் கொண்டு பின்பற்றுவதோடு மட்டுமின்றி, நமது சந்ததியினருக்கு முறையாக கற்பிக்க வேண்டும். அச்சத்தில் உழன்று நாம் பின்தங்கி விடுவோமோ என்ற எண்ணம் அகற்றி திறம்பட செயல்புரிய வேண்டும்.

லெமூரியா என்றொரு கண்டம் இருந்ததாகவும், அங்கே தமிழர்கள் கலாச்சாரம் பண்பாட்டில் சிறப்புடன் விளங்கியதாகவும் அதில் இருந்த ஒரு பகுதியினர்தான் நாம் எனவும் கூறுவர். அக்கண்டம்தான் அழிந்துவிட்டது, ஆனால் நாம் இருக்கிறோம், நமது கலாச்சாரம் பண்பாடு அழியவிடாமல் காப்பது நமது கடமையல்லவா.

முடிவுரை:

'நல்லதோர் வீணை செய்தே அதைநலங்கெட புழுதியில் எறிவதுண்டோ'எறிந்துவிட்டோம். நமது வேரினை மறந்து விட்டோம். இனியும் அடையாளம் தெரியாத அளவிற்கு அது சிதைந்து போகும் முன்னர் எடுத்து சுத்தப்படுத்துவோம், பாதுகாத்து பின்வரும் நாளில் போற்றி காத்திடுவோம், தமிழர்களாகிய நாம் இதனை சூளுரையாக எடுத்து தொடர்ந்து செயலாற்றி வெற்றி பெறுவோம்.

Saturday 11 October 2008

குஞ்சுகளை விரட்டும் தாய்பறவை

முன்னுரை:-

தனிமனிதனின் ஆர்வமும், தனிமனித திறமையை அடைத்து வைத்துக் கொள்ளாமல், அத்திறமையானது உலகம் யாவும் பரவி தனி ஒருவருக்கு மட்டுமல்லாது, உலகத்திற்கே பயன்படுமாறு ஒருவர் வாழும் வாழ்க்கை மிகவும் சிறந்த வாழ்க்கையாக கருதப்படுகிறது. குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது மட்டுமின்றி, அக்குழந்தைகள் அத்தகைய சிறப்பு வாழ்க்கை வாழ்வதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

திருவள்ளுவரின் கூற்று:

‘’தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று’’ என்கிறார் திருவள்ளுவர். ஒருவர் பிறந்த பிறப்பின் வெற்றியானது அவர் பெறும் புகழ் மட்டுமல்லாது, அதனை தக்கவைத்துக் கொள்வதிலும் இருக்கிறது. இந்த குறள் திருவள்ளுவருக்கு மிகவும் பொருந்தும்.

‘’ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்’’எனவும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். அன்னையானவர் தனது குழந்தைகளை அடைத்து வைத்தால், உலக அறிவினைப் பெற விடாது ஒடுக்கி வைத்தால் எப்படி அக்குழந்தை சான்றோன் ஆவது?

எந்த ஒரு தாயும் தனது பிள்ளைகளின் மகிழ்ச்சியில் பெரிதும் பூரித்துப் போவாள். பாரெல்லாம் போற்றும்படி தனது பிள்ளை இருக்க வேண்டி, தாயானவள் தனது பிள்ளைகளை தொலைதூர கல்லூரியிலும் படிக்கவும், வேலை பார்க்கவும் அனுப்பி மகிழ்ச்சியில் திளைத்து இருப்பாள். பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது பாசத்தை மனதோடு பூட்டி வைத்து அப்பிள்ளையை அனுப்பும் அன்னையை குறை சொல்ல இயலாது.

பறவைகளின் வாழ்க்கை:

‘’யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ ‘’திரைகடலோடியும் திரவியம் தேடு’’ என நமது முன்னோர்கள் கூறியதன் காரணம், இவ்வுலகத்தில் வந்து பிறந்த மறு கணமே நமக்கு இந்த உலகம் முழுவதும் சொந்தம் என்றாகிவிடுகிறது. எனவே நம்மை சுருக்கிக் கொள்ளாமல், நமது ஆற்றலைப் பெருக்கி, பொருளாதாரத்தில் உயர்வு அடைவது மட்டுமின்றி தன்னைச் சுற்றியுள்ளவர்களின் பொருளாதாரத்தையும் உயர்த்தும்படி செய்வது சிறந்தது. அதற்கு தாயானவர் தனது பிள்ளைகளை சுயமாக வாழும்படி கற்றுக் கொடுத்து திறமையானவர்களாக இருக்க வழி செய்ய வேண்டும்.

பறவைகள் தனது குஞ்சுகளுக்கு இரை தேடி வருவது மட்டுமின்றி, பிற விஷமிகளிடமிருந்து காப்பாற்றியும் வரும். ஒரு காலகட்டம் ஆனதும், அந்த குஞ்சுகளை தனது சொந்தக்காலில் நின்று வெற்றி பெற வழி அனுப்பி வைக்கும். அப்படி அந்த தாய் பறவையானது செய்யாது போனால், பறவை இனம் இன்று அழிந்து போய் இருக்கும் என்பதை கண்கூடாக நாம் அறியலாம்.

‘’இறக்கை முளைத்துவிட்டது, அதனால்தான் பறந்து போய்விட்டது’’ என பறவையினை எடுத்துக்காட்டி பேசுபவரும் உண்டு. பறக்காமல் இருக்க வேண்டுமெனில் இறக்கை எதற்கு? எனவே பறவையின் வாழ்விலிருந்து தனக்கென தொழிலைக் கற்றுக் கொண்டு தனித்துவமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி பறவைகள் போல் விதைக்காமல், அறுவடை செய்யாமல் இருந்தால் நமது மனித இனம் அழிந்து விடும்.

ஒரு உண்மைச் சம்பவம்:

ஒரு தாய் தனது மகனை தன்னுடன் கிராமத்திலேயே இருக்கச் செய்தார். இளநிலை படிப்பு படிக்க வேறு இடம் அனுப்ப அவருக்கு மனமில்லை. இவ்வாறு அனுப்பாமல் அந்த மகனுக்கு உரிய தொழிற்பயிற்சியும், மனவலிமையும் கற்றுத்தராமல் அந்த மகனை தாய் வளர்த்து வந்தார். பெரும் செல்வந்தரான அந்த மகன் தாயின் அரவணைப்பிலே வளர்ந்து எதுவும் கற்றுக் கொள்ளாமல் பின்னாளில் அனைத்து சொத்துக்களையும் இழந்து தனிமைப் படுத்தப்பட்டு அவதிப்பட்டார். அந்த மகனின் இயலாமைக்கு அந்த தாய் பழி சுமத்தப்பட்ட நிகழ்வு அனனவரது மனதிலும் ஒரு ஆதங்கத்தை உருவாக்கும். மேலும் இது போல் வாழ்பவருக்கு இது ஒரு நல்ல படிப்பினையாகும்.

வெளி இடங்களுக்கு பிள்ளைகளை அனுப்புவதால் மட்டும் அப்பிள்ளை சாதித்து விடாது, அதற்குரிய மனவலிமை, பயிற்சி அனைத்தும் தாய் கற்றுத் தர வேண்டும், பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது நினைவில் கொள்வது நல்லது.

முடிவுரை:

‘’பிள்ளையைப் பெத்தா கண்ணீரு’’ ‘’குழந்தையைப் பெத்தா கோமணம் மிச்சம்’’ போன்ற பாடல் வரிகள் இனிமேல் வராமல் இருக்க வேண்டுமெனில் பெற்ற குழந்தைகளை அடைத்து வைக்காமல், உரிய பயிற்சி தந்து அவர்களது முயற்சியில் வெற்றி பெற அவர்களை தனியாய் அனுப்பி அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் மிகுந்த மனமகிழ்ச்சியைத் தரும் என்பதில் ஐயமில்லை.